தொகை
`கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்'
(தி.7 ப.39 பா.6)
வகை
மன்னர்பிரான் எதிர் வண்ணான் உடல்உவ ரூறியநீர்
தன்னர் பிரான்தமர் போல வருதலுந் தாள்வணங்க
என்ன பிரான்அடி வண்ணான்என அடிச்சேர னென்னுந்
தென்னர் பிரான்கழ றிற்றறி வானெனுஞ் சேரலனே.'
சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவனளித்த
வீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்த
வீரர்க்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாயின் தொண்டுபட்டே.
தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி பா.44, 45
விரி
தொகை, பொ-ரை: மேகம் போலக் கொடைத் தன்மை உடைய கழறிற்று அறிவார் நாயனார்க்கும் அடியேன்.
வகை, பொ-ரை: அரசராக முடிசூடி வருபவர் எதிரில், வண்ணான் உவர்மண் உடலில் ஊறிய தன்மையுடன், நீறு பூசிய சிவனடியார் போல வருதலும், அவனை அடி வணங்க, அவன் `எனது அரசே! அடியேன் அடி வண்ணான்' என்றுரைக்க, அதற்கு விடையாக `அடி யேன் அடிச் சேரன்' எனச் சொல்லும் அழகிய சேர மன்னர் கழறிற் றறிவார் என வழங்கப் பெறும் சேரமான் பெருமாள் நாயனார் ஆவர்.
வகை, பொ-ரை: நாவலூரராகிய சுந்தரருக்குச் சிவபெருமான் அருளிய பெரிய மதமுடைய யானையின் முன்னே செல்லுமாறு தம் பந்தியில் உள்ள ஒரு குதிரையைச் செலுத்திய வீரரும், கரும்பு வில்லை உடைய வீரனாகிய மன்மதனை வென்ற பெருவிறலினரும் ஆகிய சேர மன்னருக்குத் தொண்டு பூண்ட அதனால் என் உள்ளமே! நீ நல்ல தொரு செயலைச் செய்தாய்.