சங்கச் செய்யுட்களில் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படையை, `அதன் ஆசிரியர் நக்கீரர்` என்னும் பெயர் ஒற்றுமை பற்றிப் பிற்காலத் தார் மேற்கூறிய நக்கீர தேவ நாயனார் பிரபந்தத்துடன் சேர்த்தனர்
இதற்குப்பல உரைகள் உண்டு . அவற்றுள் சங்க இலக்கிய உரை வரிசையில் உள்ளது நச்சினார்க்கினியரது உரை. அதனை ஒட்டியே இங்கு ஓர் உரை தரப்படுகின்றது.
ஆற்றுப்படையின் இலக்கணம் தொல்காப்பியத்துட் சொல்லப்பட்டது. பலவகை ஆற்றுப்படைகளில் `புலவர் ஆற்றுப் படை` - என்பது ஒன்று. `அது கடவுட் பாட்டாகவே வரும்` என்பது தொல்காப்பிய உரையாசிரியராகிய இளம்பூரணரது கருத்து. அதற்கு மேற்கோளாகப் புறப்பொருள் வெண்பா மாலை, `புலவாராற்றுப் படையாவது, இறைவனது திருவருளைப் பெற்ற ஒரு புலவன் அதனைப் பெற விரும்பிய மற்றொரு புலவனை இறைவனிடத்தில் ஆற்றுப்படுத்துவது` என்றே இலக்கணம் கூறிற்று. அதுபோல இவ் ஆற்றுப்படையும் முருகனது திருவருளைப் பெற்ற புலவன் ஒருவன் அதனைப் பெற விரும்பிய புலவனை ஆற்றுப்படுத்தியதேயாம்.
இங்ஙனமாயினும் புறநானூற்றுப் பாடல்களில் புலவாராற்றுப் படை மக்களைப் பாடிய பாட்டாயும் உள்ளது.
இம்முருகாற்றுப்படையில் முன்பு ஒருவரும் காணாத ஒரு பாட வேற்றுமை செய்ய வேண்டியுள்ளது. அஃதாவது எல்லா ஆற்றுப் படைகளிலும் பரிசில் பெற்று மீள்கின்றவன் பரிசில் பெறச் செல்வானை வழியிலே கண்டு அவனை எவ்வகையிலேனும் விளிப்பதாக ஒரு தொடர் கூறப்படும். அஃது இவ் ஆற்றுப்படையுள் காணப்படவில்லை. `அவ்வாறு நக்கீரர் செய்திருப்பாரா` என எண்ண வேண்டியுள்ளது. அதனால் இதன் அடி - 64-இல் ``செலவு`` என வந்துள்ள பாடம், ``செலவ`` எனக் கொள்ளப்படுகின்றது. புலவராற்றுப் படையும் பரிசில் பெறச் செல்லும் புலவனை, `முதுவாய் இரவல` என விளித்தல் மரபு என்பது புறநானூற்று 180 ஆம் பாட்டால் விளங்கும் ``முதுவாய் இரவலன்`` என்பது இவ்ஆற்றுப்படை அடி - 284 - இல் படர்க்கையாக வந்துள்ளது.