திருஞானசம்பந்த சுவாமிகள் திருநாவுக்கரசு நாயனா ரோடு திருவீழிமிழலையில் வீற்றிருந்தபோது பெரும்பஞ்சம் உண்டாக , அப்பசியால் உயிர்கள் வாடின . அடியார்களும் வருந்தினர் . அதுகண்ட நாயன்மார்கள் ` கண்ணுதலான் திருநீற்றுச் சார்பினோர்க்கும் கவலை வருமோ ` எனத் திருவுளத்து எண்ணித் துயின்றனர் . அன்று இரவு இறைவன் கனவில் தோன்றி , ` கால மாறுதலினால் நீங்கள் கவல்வீரல்லீர் ; எனினும் உங்கள் அடியார் களின் வாட்டத்தைத் தீர்க்கும் பொருட்டுப் பஞ்சம் நீங்கும்வரை பீடத்தின் கிழக்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலுமாகப் படிக்காசு ஒவ்வொன்று அளிக்கின்றோம் ` என்று அருள் செய்தனர் . விடியலில் இருவரும் சென்று அவ்வாறே இருக்கக் கண்டு எடுத்து வந்து அடியார்கட்கு அமுதளித்தனர் . வாகீசர் திருமடத்தில் காலம் தாழ்க்காது அமுதூட்டப் பெறுதலையும் தமதுகாசு வட்டம் கொடுத்து மாற்றப் பெறுதலையும் அறிந்த சிவஞானப்பிள்ளையார் திருக்கோயிலுக்குச் சென்று ` வாசி தீரவே ` என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்து வாசியில்லாக் காசு பெற்று , சிவனடியார்களுக்கு நேரத்தோடு திருவமுதளித்து எழுந்தருளியிருந்தனர் . சில நாள்களில் பஞ்சம் நீங்கிற்று .