பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.
குறிப்புரை :
இத்திருப்பதிகத்துள் முதல் திருத்தாண்டகமாகிய இதனுள் முதற்கண்ணே இறைவனது எட்டுரு ( அட்டமூர்த்த ) நிலை அருளிச்செய்யப்பட்டது. அஃது ஏனைய எல்லாவற்றினும் சிறப்புடையது ஆகலின், அட்ட மூர்த்தத்தை, ` நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம், ஞாயிறு, திங்கள், இயமானன் ` எனக் கூறுதலே முறை யாயினும், அவற்றைச் செய்யுளுக்கேற்ப வைத்து அருளினார் என்க.
இருநிலம் - பெரிய பூமி. ` இயமானன் ` என்பது, ` யஜமானன் ` என்னும் வடசொல் திரிபு ; இஃது உயிரைக் குறிப்பது ; திருக் கோவையார் உரைத் தொடக்கத்தில், வேட்போன் ` என மொழி பெயர்த்துக் கூறினார் பேராசிரியர். எறியும் காற்று - வீசுகின்ற காற்று. அருநிலைய - அழிவில்லாத நிலையை உடைய ; திங்கள் - சந்திரன். சந்திரனை இவ்வாறு சிறப்பித்தது, தக்கனது சாபத்தால் அழிவெய்தாது நின்ற நிலையைக் கருதி. ஞாயிறு - சூரியன். அட்டமூர்த்தி - எட்டுரு உடையவன். ` நிலம் முதலியனவாகியதனால் எட்டுருவாகி ` என்க. பெருநலம் - பெருமையை உடையதாகிய நன்மை. நலத்தை ` பெருமையை உடையது ` என்றதனால், ` குற்றம் சிறுமையை உடையது ` என்பது பெறப்படும். ` இப்பெருமை சிறுமை ` என்பன இயைபின்மை நீக்கிய விசேடணங்கள் என்க. பிறர் உரு - ஏனையதேவரது வடிவங்கள். ` தம் உரு ` என்றது, சிவபிரானது ` அருவம், உருவம், அருவுருவம் ` என்னும் மூவகைத் திருமேனிகளையும். ` சிவதன்மம், சிவயோகம், சிவஞானம் ` என்பவற்றால் எய்திநின்றோரது உருவங்களை. நெருநல் - நேற்று ; ஐகாரம் சாரியை. நிமிர் - நீண்ட. சடையை, ` புன்சடை ` என்றல், உலகியலுக்கு ஒவ்வாமைபற்றி. ` நின்றவாறு ` என்பதனை எழுவாயாகவும், ` ஆகி ` என்பனவற்றை அதன் பயனிலைகளாகவும் கொண்டு ` நின்றவாறு ஆகி ` எனத் தனித்தனி எண்ணி முடிக்க. ` நின்றவாறு ` என்பதில், நிற்றலையே, ` ஆறு ` என்றாராகலின், அத்தொடர், ` நின்றமை, என்னும் ` தொழிற்பெயர்ப் பொருட்டாய் ஒரு சொற்றன்மை எய்தி நின்றது. தொழிற்பெயர் எழுவாயாய் நிற்குமிடத்து, வினையெச்சமும், இரண்டாவது முதல் ஏழாவது ஈறாக உள்ள வேற்றுமைகளும் பயனிலையாய் நிற்கும் என்பது, ` அவன் வந்தது நடந்து ; சென்றது விரைந்து ; உண்டது சோற்றை ; போழ்ந்தது வாளால் ` என்றாற்போல்வனவற்றால் அறியப்படும். இத்தொடர்களில் பயனிலைகளாய் நிற்கும் வினையெச்சத்திற்குப் பின்னும், வேற்றுமைகட்குப் பின்னும் எழுவாய்க்கண் உள்ள தொழிற்பெயர்களே மீளச் சொல்லத்தக்க சொல்லெச்சங்களாய் எஞ்சி நிற்கும் ; அத்தொழிற் பெயர்கள், ` இம்மகன் நேற்று யான்கண்ட மகன் ` என்றல்போல எழுவாய்க்கண்பொதுவாயும், பயனிலைக்கண் சிறப்பாயும் நிற்கும் ; ஆயினும், அவ்வெச்சத்தை வெளிப்படக் கூறின் அத் தொடர்கள் இனியவாய்த் தோன்றா என்னுங் கருத்தான் அவை எஞ்சி நிற்கவைத்தே வழங்குவர் என அறிக. இவற்றுள் , வினையெச்சம் பயனிலையாய் நிற்றலை, ` அவற்றுள், நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே ` ( தொல். அகத்திணை யியல். சூத். 2) என்பதின் உரையுள், இளம்பூரணரும் சிறிது உரைத்தார். இனி, ` எம் அடிகள் நின்றவாறு வியக்கத்தக்கது ` என ஒருசொல் எஞ்சி நின்றதென, அதனை வருவித்து முடித்தலும் ஆம்.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
తెలుగు / தெலுங்கு
ಕನ್ನಡ / கன்னடம்
മലയാളം / மலையாளம்
චිඞංකළමං / சிங்களம்
मराठी / மராத்தி
हिन्दी / இந்தி
संस्कृत / வடமொழி
Deutsch / யேர்மன்
français / பிரஞ்சு
English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
94. मिश्रित-निन्ऱ तिरुत्ताण्डकम्
प्रभु क्षिति, अग्नि, जल, वायु, सूर्य, आकाष नक्ष़त्र आदि अष्ट मूर्ति स्वरूप हैं।
महिमामय सुहृद, दुःखप्रद दोष-गुण दोनों की सृष्टिकरता हैं।
वे स्त्री भी हैं, पुरुष भी हैं, नपुंसक भी हैं।
प्राकृतिक ज्योति स्वरूप व स्वयं भूमूर्ति हैं।
गत कल, आज, आगामी कल ये त्रिकाल स्वरूप हैं।
प्रभु जटा जूट स्वरूप में षाष्वत मूर्ति हैं।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Thaandakam of Siva`s standing Abidance
As vast earth and as fire and water,
As life and blowing wind,
As deathless moon and sun, as ether, and Ashtamoorti,
As great weal and blemish, as man and woman, As Himself in other forms
And in His own form, as yesterday, to-day and tomorrow
The great God of ruddy matted crown abides for ever.