திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

பொழிப்புரை :

இயற்கையான ஒளி நாளும் வளருகின்ற விளக்கு ஆனவனே! என்றும் அழிதல் இல்லாத ஒப்பற்ற பொருளே! உயிரினது அறிவைக் கடந்த ஒப்பற்ற ஞான வடிவினனே! தூய்மை மிக்க பளிங்கின் குவியலாகிய அழகிய மலையே! அடியவர் உள்ளத்தில் இனிமைதரும் தேனே! பொதுவான எல்லையைக் கடந்து இறைவனிடம் ஈடுபட்டு இருக்கும் உள்ளத்தில் பேரின்பம் நல்கும் கனியாக உள்ளவனே! பொன்னம்பலத்தைத் தன் கூத்தினை நிகழ்த்தும் அரங்கமாகக் கொண்டு அடியவருடைய காட்சிக்குப் புலனாகும் அருள் நடனத்தை விரும்பி நிகழ்த்தும் உன்னை, உன் தொண்டனாகிய நான் புகழுமாறு நீ திருஉள்ளம்பற்றிச் செயற்படுவாயாக./n

குறிப்புரை :

இதனுள், `விளக்கு` முதலியனவாகக் கூறப்பட்டவை உவமையாகுபெயர்கள். ஒளிவளர் விளக்கு என்றதில், வளர்தல், முடிவின்றி விளங்குதல். எனவே, `நெய், திரி, அகல் என்பவற்றைக் கொண்டு ஏற்றப்பட்ட செயற்கை விளக்காகாது இயற்கையில் விளங்கும் விளக்கு` என்றதாயிற்று. இதனையே, `நந்தா விளக்கு` எனவும், `தூண்டா விளக்கு` எனவும் கூறுவர். மாணிக்கமும், வயிரமும் போன்ற மணிவிளக்குக்கள் இங்ஙனம் அமைவனவாம். எனினும், `அவற்றினும் மேம்பட்ட விளக்கு` என்பதையே, `உலப்பிலா ஒன்றே` என்பதனாலும், `அவ்வாறாதல் அறிவே உருவாய் நிற்றலாலாம்` என்பதை, உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே என்பதனாலும் குறித்தருளினார்./n உணர்வு இரண்டனுள் முன்னையது உயிரினது அறிவு. சூழ் - எல்லை. இறைவன் உயிர்கள் அனைத்தையும் தனது வியாபகத்துள் அடக்கி நிற்பவன் ஆதலின், அவனை `அவற்றது அறிவின் எல்லையைக் கடந்தவன்` என்றார். `கடவுள்` என்னும் சொற்கும் இதுவே பொருளாதல் அறிக. தெளிவளர் - தூய்மை மிக்க. `பளிங்கின் திரளாகிய அழகிய குன்றே` என உரைக்க. மணி - அழகு. சிவபெருமான் பளிங்குமலைபோல விளங்குதல், திருநீற்று ஒளியினாலாம். அளி - அன்பு. ஆனந்தக் கனி - இன்பமாகிய சாற்றை யுடைய பழம். `இன்பம்` என்பது, தலைமை பற்றி, வரம்பில் இன்பமாகிய பேரின்பத்தையே குறித்தது. முன்னர், `சித்தத்துள் தித்திக்கும் தேன்` என்றது துரியநிலைக்கண் நிகழும் அனுபவத்தை யும், பின்னர், அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனி என்றது, அதீத நிலைக்கண் நிகழும் அனுபவத்தையும் குறித்தனவாம். வெளிவளர் கூத்து - காட்சிப் புலனாய், முடிவின்றி நிகழும் நடனம். `வெளியாகி` என ஆக்கம் வருவிக்க. தெய்வக் கூத்து - அருள் நடனம். அஃதாவது உயிர் கட்கு `பெத்தம்`, `முத்தி` என்னும் இருநிலைகளிலும் ஏற்ற பெற்றியால் அருள்புரியும் நடனம். அவ்விருவகை நடனங்களின் இயல்பையும், தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்/n சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா/n ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோ தம்முத்தி/n நான்ற மலர்ப்பதத்தே நாடு./n (உண்மை விளக்கம் - 36)/n எனவும்,/n மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு,மலம்/n சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயத்தால்/n ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்/n தான்எந்தை யார்பரதந் தான்./n (உண்மை விளக்கம் - 37)/n எனவும் போந்த வெண்பாக்களால் முறையே உணர்க./n விளம்புதல் - துதித்தல். விளம்புமா விளம்பு என்பதற்கு, `யான் விளம்புதற்பொருட்டு, நீ விளம்புவாயாக` எனவும், இதனுள் இனி வரும் திருப்பாட்டுக்களிலும், `பணியுமா பணியே, கருதுமா கருதே` முதலியவற்றிற்கும் இவ்வாறேயாகவும் உரைக்க. இவற்றால், இறைவனது காணும் உபகாரத்தின் இன்றியமையாமை விளக்கப் படுகின்றது. `காட்டும் உபகாரம், காணும் உபகாரம்` என்பவை பற்றி இங்குச் சிறிது கூறற்பாற்று./n அறிவிக்க அன்றி அறியா உளங்கள் (சிவஞானபோதம் சூ. 8, அதி. 2) என்றபடி, உயிர்களின் அறிவு, அறிவிக்கும் பொருளின்றி ஒன்றை அறியும் தன்மையைப் பெறாது. ஆகவே, உயிரினது அறிவு, பிறிதோர் ஒளியின்றித் தானே உருவத்தைக் காணமாட்டாத கண்ணின் ஒளிபோன்றதாம். அதனால், கதிரவன் ஒளி கண்ணொளியிற் கலந்து உருவத்தைக் காணச்செய்யும் முறைபோல, இறைவன் உயிரறிவிற் கலந்து பொருள்களை அறியச் செய்வான். இவ்வாறு செய்வதே, `காட்டும் உபகாரம்` எனப்படும்./n இனிக் கதிரவன் ஒளி கலந்தமையால் விளக்கம் பெற்ற பின்னும் கண்ணொளிதானே சென்று உருவத்தைக் காணமாட்டாது அதனோடு ஆன்மாவினது அறிவும் உடன்சென்று அறிந்தால்தான், கண் உருவத்தைக் காணும் அதுபோல, இறைவனது கலப்பால் விளக்கம் பெற்ற பின்பும் உயிரினது அறிவு, தானே சென்று ஒன்றை அறியமாட்டாது அதனோடு இறைவனும் உடன்சென்று அறிந்தால் தான் உயிர், பொருளை அறியும். ஆகவே, உயிர்கள் அங்ஙனம் அறிதற் பொருட்டு அவற்றோடு தானும் உடன்நின்று அறிதலே, `காணும் உபகாரம்` எனப்படும். இவற்றின் இயல்பெல்லாம் சிவஞானபோதம் முதலிய சித்தாந்த நூல்களாலும், உரைகளாலும் இனிது உணரற்பாலன./n

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
இருட்பிழம் பறஎறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதீ
அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா
அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே.

பொழிப்புரை :

என்னுடைய துயரங்களைப் போக்கி என்னை அடியவனாக ஏற்றுக்கொண்டு, என் உள்ளத்தில் உள்ள அறியாமையைச் செய்யும் ஆணவமலத்தை அடியோடு போக்குதலால் வெளிப்பட்டு விளங்கும் தூய்மையான அழகிய விளக்குப் போன்ற ஆன்ம அறிவினுள் ஒளிமயமாகக் காட்சி வழங்கும் மேம்பட்ட சோதியே! பகைவர்களை அழிக்கும் காளையை வாகனமாக உடையவனே! பொன்னம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! பிரமனும் திருமாலும் உன் உண்மை உருவத்தை அறியமுடியாதபடி எங்கும் பரவும் ஒளியைப் பரவச்செய்து எல்லா இடங்களிலும் வியாபித்து நிற்கும் உன்னை உன் அடியவனாகிய நான் வணங்கும்படியாக நீ திருவுள்ளம் கொண்டு செயற்படுவாயாக./n

குறிப்புரை :

இருட்பிழம்பு என்றது, அறியாமையைச் செய்யும் ஆணவ மலத்தை. சுடர்மணி விளக்கு என்றது, அம்மலத்தின் நீங்கி விளங்கும் ஆன்ம அறிவினை. தூயநற் சோதி எனப்பட்டதும் அதுவே. `ஒளியாய்` என ஆக்கம் வருவிக்க. சோதியுட் சோதி என்றது, வாளா பெயராய் நின்றது. எனவே, `சுடர்மணி விளக்கினுள் ஒளி விளங்கும்` என்றது, இப்பெயர்ப் பொருளை விரித்தவாறாம். பரஞ்சுடர்ச் - சோதியுட் சோதி யாய்நின்ற சோதியே (தி.5. ப.97. பா.3) என்றும், சோதியாய் எழும் சோதியுட் சோதிய (தி.12. தடுத் - 192) என்றும் வருவனவற்றால், இறைவன், `சோதியுட் சோதி` எனப்படுதல் அறிக. `எறிந்து விளங்கும் சோதி` என முடிக்க. அடல் - வலிமை. பாகன் - நடத்துபவன்./n அறியாமை - அறியாதபடி. `அறியாமை நின்றாயை` என இயையும்./n

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

தற்பரம் பொருளே சசிகண்ட சிகண்டா
சாமகண் டா அண்ட வாணா
நற்பெரும் பொருளாய் உரைகலந் துன்னை
என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத் தளவிலா உன்னைத்
தந்தபொன் னம்பலத் தரசே
கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத்
தொண்டனேன் கருதுமா கருதே.

பொழிப்புரை :

`தத்` என்ற சொல்லால் குறிக்கப்படும் மேம்பட்ட பொருளே! சந்திரனைச் சூடிய முடியினை உடையவனே! சாமவேதம் பாடும் குரல்வளையை உடையவனே! சிதாகாசத்தில் வாழ்கின்ற வனே! அங்கு மேம்பட்ட பரம்பொருளாய் இருப்பவனே! எனக்குத் தெரிந்த சொற்களைக்கொண்டு உன்னை என் நாவினால் புகழும்படி என் சிறிய உள்ளத்தில் எல்லை காணமுடியாத உன்னைத் தங்கச் செய் துள்ள பொன்னம்பலத்துக் கூத்தாடும் அரசே! ஊழிக் காலங்களாக வும், அந்தக் கால எல்லைக்குள் தோன்றி மறையும் பொருள்களாக வும், அவற்றின் வேறுபட்டவனாகவும் உள்ள உன்னைத் தொண்ட னாகிய நான் தியானிக்குமாறு என்திறத்து நீ செயற் படுவாயாக!/n

குறிப்புரை :

தத் பரம்பொருள் - வேதத்துள், `தத்` என்னும் சொல்லால் குறிக்கப்படும் பரம்பொருள். `தன் பரம்` எனப் பிரித்து, தனக்கு மேலான - உணர்கின்ற பொருட்கு (உயிர்கட்கு) மேலாய பொருள் என உரைத்தலும் உண்டு. சசிகண்டன் - நிலாத் துண்டத்தை யணிந்தவன். இப்பெயர் விளியேற்றது - சீகண்டன் என்பது முதல்குறுகி, விளியேற்றது. சிகண்டம், முடி என்பாரும் உளர். சாமகண்டன் - கருமையான கழுத்தை உடையவன் `சாமவேதம் முழங்கும் குரலை உடையவன்` என்றலும் உண்டு. அண்டம் என்றது, சிதாகாசத்தை. நற்பெரும்பொருள் என்றதில், பொருள், சொற்பொருள். உரைகலந்து - எனது சொல்லிற்சேர்த்து. அற்பன் - சிறியன். கற்பம் - ஊழிக்காலம். உலகு - அக்கால எல்லைக்குள் தோன்றி நின்று ஒடுங்கும் பொருள்கள்./n

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
பிறப்பிறப் பறுத்தபே ரொளியே
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
மகள்உமை யவள்களை கண்ணே
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
அப்பனே அம்பலத் தமுதே
ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்
தொண்டனேன் உரைக்குமா றுரையே.

பொழிப்புரை :

பெருமையாய் உள்ள நிலையிலேயே சிறுமையாக வும், பெண்ணாய் இருக்கும் நிலையிலேயே ஆணாகவும் இவ்வாறு உலகியலுக்கு வேறுபட்டவனாய் இருந்து என்னுடைய பிறப்பு இறப்புக்களைப் போக்கிய பெரிய ஞானவடிவினனே! கருமையாய் இருக்கும் நிலையிலேயே வெண்மையாய் இருப்பவனே! கயல்மீன் போன்ற கண்களையுடையவளாய், இமயமலைத் தலைவனான இம வானுடைய மகளான உமாதேவிக்குப் பற்றுக்கோடாக உள்ளவனே! மேம்பட்டனவாகிய நான்கு வேதங்களும் உன்னை உள்ளவாறு அறியமுடியாமல் பேரொலி செய்து புகழும் தலைவனே! அம்பலத்தில் காட்சி வழங்கும் அமுதே!நீ ஒருவனாகவே இருந்து எல்லாப் பொருள் களிலும் அந்தர்யாமியாய் ஊடுருவி நிற்கும் உன்னை அடியவனாகிய யான் பலவாறு என்சொற்களால் புகழுமாறு நீ என்னுள் இருந்து செயற்படுவாயாக.

குறிப்புரை :

பெருமையின் - பெருமையாய் உள்ளநிலையிற்றானே. கருமையின் ஒருமையின் என்பவற்றிற்கும் இவ்வாறு உரைக்க. ஆய் என்றதனை, `சிறுமை` என்றதற்கும் கூட்டுக. வெளி - வெண்மை. களைகண்ணே என்பதில் ணகர ஒற்று விரித்தல். களை கண் - பற்றுக்கோடு `கொழுநன்` என்பதும் இப்பொருட்டு. மறை என்றது பெயராகலின், சாரியை உள்வழித் தன்னுருபு கெட்டது. (தொல். எழுத்து 157) எனவே, `அருமையையுடைய மறை` என்பது பொருளாயிற்று.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

கோலமே மேலை வானவர் கோவே
குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
தொண்டனேன் நணுகுமா நணுகே.

பொழிப்புரை :

அடியவர்களுக்காக அவர்கள் விரும்பிய வடிவம் கொள்பவனே! மேம்பட்ட தேவர்களின் தலைவனே! பண்புகளும் வடிவங்களும் இல்லாமையையே பண்பாக உடையவனே! காலத்தை உன் வயத்தில் அடக்கி இருப்பவனே! கங்கையின் தலைவனே! எங்களுக்குத் தலைவனாக அமைந்தவனாய்க் காலனுக்குக் காலனாக இருப்பவனே! மன்மதனை அழித்தவனே! விடத்தையே அமுதம் போல உண்டு, கூத்தாடும் இடத்தைப் பொன்மயமான கோயிலாகக் கொண்டு கூத்தாடுதலில் வல்லவனே! உலகமே வடிவானவனே! தன்னுணர்வு இல்லாத அடியேன் பெரிய தவத்தை உடைய உனக்குத் தொண்டனாகி உன்னை அணுகுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

கோலம் - உருவம். குணம் குறி இறந்ததோர் என்பது, தாப்பிசையாய் இதனோடும் இயையும். குணம் குறிகள், ஆண்மை பெண்மைகளை அறிய நிற்பவனவாம். உருவமும், குணமும் உடைய வனை அவையேயாகவும், காலத்தின்கண் ஒற்றித்து நிற்பவனை, `காலம்` எனவும் கூறியவை, பான்மை வழக்கு. கோலமே முதலிய மூன்றாலும் உலகின் வேறுபட்ட தன்மையைக் கூறியவாற்றால், அத்தன்மையானே யாவர்க்கும் முதல்வனாதலைக் குறிக்க, மேலை வானவர் கோவே என்றார். இது, காலமே என்றதன் பின்னர்க் கூட்டியுரைக்கற்பாலது. `அமுதாக` எனவும், `கோயிலாக` எனவும் ஆக்கச்சொற்கள் வருவிக்க. ஞாலமே - உலகத்தில் அதுவாய்க்கலந்து நிற்பவனே. `தமியேன் தவம்` என இயையும். நற்றவம், சரியை, கிரியா யோகங்கள். தவத்தாயை - தவத்தின் பயனாய்க் கிடைத்த உன்னை. நணுகுதல் - சார்தல்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் அம்பலத் தரசே
ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்
தொண்டனேன் இசையுமா றிசையே.

பொழிப்புரை :

திருநீற்றை அணிந்த செந்நிறமான பவளமலை போல்பவனே! நிலைபெற்ற நெற்றிக்கண்ணை உடைய, நெருப்பின் நிறத்தினனே! பல்வேறுவகைப்பட்டனவாய் வரிசையாக அமைந்த இவ்வுலக இன்பங்களே வடிவானவனே! முத்தி இன்பம் தரும் வெள்ளம் போல்பவனே! மேருமலையை வில்லாக வளைத்த வீரனே! கங்கையை அணிந்த சடையை உடைய, எங்களுடைய வியக்கத்தக்க கூத்து நிகழ்த்துபவனே! அழகிய பொன்னம் பலத்து அரசே! காளையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உயர்த்திய, எம்மை அடக்கி ஆள்பவனே! உன்னை, அடியவனாகிய நான் கூடுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

நீறு அணி பவளக்குன்றம், நெற்றிக்கண் உடையதோர் நெருப்பு என்ற இரண்டும் இல்பொருள் உவமைகள். நின்ற - நிலை பெற்ற. `நின்ற நெருப்பு` என இயையும். நெருப்பு என்றது, அஞ் ஞானத்தால் அணுகலாகாமைபற்றி, வேறு அணி புவனபோகம் - வேறு பட்ட நிரையாகிய உலகங்களில் உள்ள நுகர்ச்சிகள். யோகம் என்றது, `முத்தி` என்னும் பொருட்டாய் அந்நிலையில் விளையும் இன்பத்தைக் குறித்தது; எனவே, இவ்விரண்டாலும், இறைவன் பந்தமும், வீடுமாய் நிற்றலைக் குறித்தவாறாதல் அறிக. அற்புதம் - வியப்பு; புதுமை. `அம் பொன்னால் செய்த` என மூன்றாவது விரிக்க; தூயசெம் பொன்னினால் - எழுதி மேய்ந்த சிற்றம்பலம் என்று அப்பரும் அருளிச்செய்தார். இசைதல் - கூடுதல்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

தனதன்நற் றோழா சங்கரா சூல
பாணியே தாணுவே சிவனே
கனகநற் றூணே கற்பகக் கொழுந்தே
கண்கள்மூன் றுடையதோர் கரும்பே
அனகனே குமர விநாயக சனக
அம்பலத் தமரர்சே கரனே
நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே.

பொழிப்புரை :

குபேரனுடைய நண்பனே! எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனே! சூலத்தைக் கையில் ஏந்தியவனே! என்றும் நிலை பெற்றிருப்பவனே! மங்களமான வடிவினனே! பொன் மயமான பெரிய தூண் போல்பவனே! கற்பக மரத்தின் கொழுந்தினை ஒப்பவனே! மூன்று கண்களை உடைய கரும்பு போன்ற இனியனே! பாவம் இல்லாதவனே! முருகனுக்கும் விநாயகனுக்கும் தந்தையே! பொன்னம்பலத்தில் தேவர்கள் தலைவனாக உள்ளவனே! உன் திருவடிகளை என் உள்ளத்தில் இனிமையாக அடியேன் அநுபவிக்குமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

தனதன் - குபேரன். தாணு - நிலைபெற்றிருப்பவன். கனகநற் றூணே என்றதை, மாசொன்றில்லாப் - பொற்றூண்காண் (தி. 6. ப.8. பா.1) என்றதனோடு வைத்துக் காண்க. கொழுந்து - தளிர்; இஃது அழகு மிக்கதாய் இன்பம் தருவது. கண்கள் - கணுக்களைக் குறித்த சிலேடை. அனகன் - பாவம் இல்லாதவன்; என்றது. `வினைத் தொடக்கு இல்லாதவன்` என்றதாம். குமரன் - முருகன். `குமர விநாயகர்` என்னும் உயர்திணை உம்மைத் தொகை ஒரு சொல் லாய்ப்பின், சனகன் என்பதனோடு, நான்காவதன் தொகைபடத் தொக்கது. சனகன் - தந்தை. அமரர் சேகரன் - தேவர் கூட்டத்திற்கு மகுடம்போல விளங்குபவன். இஃது ஒருசொல் தன்மைப்பட்டு, `அம்பலத்து` என்றதனோடு தொகைச் சொல்லாயிற்று. `அமரசேகரன்` எனவும் பாடம் ஓதுப. `நின்` என்பது, திருமுறைகளில், `நுன்` என வருதலை அறிந்துகொள்க. நுகருமா நுகரே என்றது நுன என்றதற்குரிய மோனை நோக்கியாகலின், `உன கழலிணை` என்பது பாடம் ஆகாமை அறிக. இணை என்றமையின். இனிதா என ஒருமையாகக் கூறினார். நுகர்தல் - அநுபவித்தல்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
திகைக்கின்றேன் றனைத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
நிகழ்வித்த நிகரிலா மணியே
அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய்
ஆலின்கீழ் இருந்தஅம் பலவா
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
தொண்டனேன் புணருமா புணரே

பொழிப்புரை :

மாறி வருகின்ற பிறவிகளில் அகப்படும் சில தெய்வங்களைப் பரம்பொருளாகக் கருதி அவற்றை அடைவதற்குரிய வழிகளிலே உள்ளம் மயங்கும் அடியேனை, மயங்காதவாறு நல்ல நிறத்தை உடைய பொன் போலவும் மின்னல் போலவும் ஒளி நிறைந்த உன் திருவடிகளின் கீழே ஈடுபடச்செய்த ஒப்பில்லாத மணி போல்பவனே! அறத்தின் பல கூறுபாடுகளையும் ஆராய்ந்த சனகர் முதலிய மேம்பட்ட தவத்தோர்கள் தலைவனாய் ஆலமரத்தின்கீழ்க் குருமூர்த்தியாய் அமர்ந்த பொன்னம்பலவனே! வைதிக சமயத்துக்குப் புறம்பான சமணர், புத்தர் என்பவர்களுடைய மயக்க நெறிகளையும் உண்டாக்கிய உன்னை அடியனேன் அடையுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

திறம்பிய - மாறி வருகின்ற. சில என்றது, இழிபு கருதி. `நெறிக்கண்ணே` என்பது `நெறிக்கே` என வந்தது உருபு மயக்கம். `நெறிக்கே நின்று` என்றுஒருசொல் வருவிக்க./n பிறவியுடைய தெய்வங்களைப் பிறவி இல்லாத கடவுளாகக் கருதுதல் மயக்க உணர்வாதலின், திகைக்கின்றேன் என்றார். நிறைந்த என்றதற்கு நிறைந்தாற்போன்ற என உரைக்க. நிகழ்வித்த - வாழச் செய்த. திறம்-வகை. `திறமாக, புறமாக` என ஆக்கம் வருவிக்க. கண்டு - வகுத்து. `அருந்தவர், நால்வர்` என்க. என்னை?/n நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடி/n (தி.8. திருச்சாழல் - 16) என்பது முதலாக அருளிச் செய்யப்படுதலின். அருந்தவர்க்கு அரசு, ஆசான் மூர்த்தி. புறம் - வேதாகமங்கட்குப் புறமாம்படி. சமண் என்றது, குழூஉப் பெயர். பொய்கள் - மயக்க நெறிகள். கண்டாயை - உளவாக்கிய உன்னை. சமண புத்த மதங்களையும் சிவபெருமானே உண்டாக்கினான் என்பதை, துணைநன்மலர் தூய்த்தொழுந் தொண்டர்கள் சொல்லீர் பணைமென்முலைப் பார்ப்பதி யோடுட னாகி இணையில்இரும் பூளை இடங்கொண்ட ஈசன் அணைவில்சமண் சாக்கியம் ஆக்கிய வாறே. (தி. 2 ப.36 பா.9)/n என ஞானசம்பந்தர் அருளிச்செய்தமையான் அறிக. `தெய்வக் கொள்கையற்ற சமயங்களையும் உன்னை அடைதற்குப் படிவழியாக அமைத்த நீ, சில தெய்வக்கொள்கையுடைய பிற நெறியில் நின்ற என்னை உன்னை அடையுமாறு செய்தல் கூடாதோ` என்பது கருத்து. இத்திருப்பாட்டு, `இவ்வாசிரியர் முதற்கண் மாயோன் நெறியில் நின்று, பின்னர்ச் சிவநெறியை எய்தினார்` எனக் கூறுவாரது கூற்றிற்குத் துணைசெய்யும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும்
தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம்
நெறித்தரு ளியஉருத் திரனே
அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட
ஆடப்பொன் னம்பலத் தாடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்
தொண்டனேன் தொடருமா தொடரே.

பொழிப்புரை :

தக்கனுடைய மேம்பட்ட மனிதத் தலையும், வேள்வித்தலைவனுடைய வலிய தலையும், தாமரை மலரில் உள்ள நான்கு முகத்தவனாகிய பிரமனுடைய ஐந்தாம் தலையும், ஒரு சேரத் துண்டமாகி உருளுமாறு ஒளி பொருந்திய அழகிய புருவத்தை நெறித்து வெகுண்ட, அழித்தற்றொழில் உடையவனே! சங்குமணிகள் மேலே அணியப்பெற்ற புலித்தோலை ஆடையாக அணிந்து, அம்மணிகளும் தோலாடையும் பலபடியாக அசையுமாறு பொன்னம்பலத்தில் ஆடும் அழகனே! எத்தகைய தவ வலிமை உடையவரும் தம் முயற்சியால் அணுகமுடியாதபடி உள்ள உன்னை உன் அடியவனாகிய நான் தொடர்ந்து வருமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டின் முதல் இரண்டடிகளுட் போந்த பொருளை, தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ/n (தி.8 திருச்சாழல் - 5)/n எனவும்,/n நாமகள் நாசி சிரம்பிர மன்பட (தி.8 திருவுந்தியார் - 13)/n எனவும் திருவாசகத்துள்ளும் போந்தமை காண்க. `எச்ச வன்தலை` எனவும் பாடம் ஓதுப. புருவம் நெறித்தருளிய என்றது, `வெகுண்ட` என்றவாறு. `புலித்தோல் ஆடைமேல் அக்குஅணி ஆடஆட ஆடும் சொக்கன்` என்க. அக்கு அணி - எலும்பு மாலை. சொக்கன் - அழகன். தொடர்தல் - இடை விடாது பற்றுதல்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்
கருள்புரி வள்ளலே மருளார்
இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர்
ஏறிய ஏறுசே வகனே
அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ்
அடர்த்தபொன் னம்பலத் தரசே
விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத்
தொண்டனேன் விரும்புமா விரும்பே.?

பொழிப்புரை :

நரசிம்ம மூர்த்தியாய் இரணியகசிபுவினுடைய மார்பை நகத்தால் பிளந்த திருமாலுக்கு அருள் செய்த வள்ளன்மையை உடையவனே! மயக்கமாகிய அஞ்ஞானத்தை உடைய அசுரர்கள்தம் இருப்பிடமாகக் கொண்ட மூன்று மதில்களும் வெந்து சாம்பலாகுமாறு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இவர்ந்த, காளையை வாகனமாக உடைய வீரனே! வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனுடைய செருக்கு அழியுமாறு மேம்பட்ட கயிலைமலைக்கீழ் அவனை வருத்திய பொன்னம்பலத்து அரசனே! விடம் தங்கிய நீலகண்டத்தையுடைய எங்கள் அழகனே! உன்னைத் தொண்டனாகிய அடியேன் விரும்புமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

மடங்கல் - சிங்கம்; நரசிங்கம். கனகன் - `இரணிய கசிபு` என்னும் அசுரன். இவ்வடி, சரப வரலாற்றைக் குறித்தல் கூடும். மருளார் - மருட்சியையுடையவரது. திரிபுரத்தசுரர் துர்போதனையால் மயங்கிச் சிவநெறியைக் கைவிட்டவராதல் அறிக. வைதிகத் தேர் - வேதத்தைக் குதிரையாகக் கொண்ட தேர். ஏறு சேவகன் - மிக்க வீரத்தை யுடையவன். அரக்கன் - இராவணன். அரட்டு - செருக்கு. இரு வரை - பெரிய மலை. `அருட்டிரு வரைக்கீழ்` எனவும் பாடம் ஓதுவர். விடங்கன் - அழகன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா
தயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட் டோர்வரி யாயை
மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
சிறுமையிற் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே உன்னைத்
தொண்டனேன் நினையுமா நினையே.?

பொழிப்புரை :

வேதங்களும், தேவர்கள் குழாமும், பிரமனும், திருமாலோடு உள்ளம் மயங்கித் தம் முயற்சியால் உன்னை அறிய இயலாமல் தாம் உன்னை வழிபடும் முறையாலே பலவாறு வேண்டி யும் உன்னை உள்ளவாறு அறியமாட்டதவராய் இருப்பவும், அறிவற்ற வனாகிய அடியேன் சொல்லிய இந்த அற்பமான சொற்களை, வீரக்கழல்கள் ஒலிக்கும் திருவடிகளை உடைய உன் சிறப்புக்களைச் சிறிதும் அறியாது இகழ்ந்து உரைக்கின்ற கொடிய சொற்களைப் பொறுக்கும் உனக்கு, பொறுத்துக்கொள்ளுதல் இயல்பாக உள்ளது. அத்தகைய, அம்பலத்துள் நிறைந்து காணப்படும் கருணைக்கு இருப்பிடமானவனே! உன்னை உன் தொண்டனாகிய அடியேன் விருப்புற்று நினைக்குமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

ஓர்வரியாய் எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, மாட்டாது என்றார். முறை முறை என்ற அடுக்கு, பன்மை பற்றி வந்தது. முறையிட்டும் என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலா யிற்று. `ஓர்ப்பரியாயை` என்பதும் பாடம். அரன் என முன்னிலையிற் படர்க்கை வந்தது. அரன்சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையிற் பொறுக்கும் என்றது, `உனது பெருமையைச் சிறிதும் அறியாது இகழும் அறிவிலிகளது இகழுரையைப் பொறுத்துக் கொள்ளுதல் போலப் பொறுத்துக் கொள்கின்ற` என்றபடி. வெறுமை- அறிவின்மை. சிறுமை - இகழ்ச்சி. இவ்விரண்டும் ஆகுபெயர்களாய் அவற்றை உடைய மக்கள்மேலும், சொற்கள்மேலும் நின்றன. `சிறிதும் அறியாது இகழ்ந்துரைக்கின்ற வன் சொற்களைப் பொறுப்பவனுக்குச் சிறிது அறிந்து புகழ்கின்ற புன் சொல்லைப் பொறுத்தல் இயல்பே என்றற்கு அவ்வன்சொற் பொறுத்தலை உவமையாக்கினார். `பொறுக்கும் கருணாநிலயமே` என இயையும். நிலயம் - இருப்பிடம். இறுதித் திருப்பாட்டுக்களில் தம்மைப்பற்றிக் குறிக்கின்ற இவ்வாசிரியர், அவற்றைத் திருக்கடைக்காப்பாக அருளாது, தமது பாடலை இறைவன் ஏற்றருள வேண்டிக் கூறுகின்றார்.
சிற்பி