திருக்கோவையார்-வரைபொருட்பிரிதல்


பண் :

பாடல் எண் : 1

குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும்
நின்குலத் திற்கும்வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண்
தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை
யோமெய்ம்மை யோதுநர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
குறைவிற்கும் வரைவுவேண்டி நீயெம் மாட்டுக் குறை யுடையையாய் நிற்குமதனானும்; கல்விக்கும் கல்வி மிகுதியானும்; செல்விற்கும் செல்வானும்; நின் குலத்திற்கும் தங்குலத்திற்கேற்ற நின்குலத்தானும்; வந்தோர் நிறைவிற்கும் நீ விடுக்க வந்த சான்றோரது நிறைவானும்; மேதகு நீதிக்கும் மேவுதற்குத் தகு நீதியானும்; ஏற்பின் அல்லால் நின்வரவை யெமரேற்றுக்கொளி னல்லது விலை கூறுவராயின்; நினையின் மெய்ம்மை ஓதுநர்க்கு ஆராயுமிடத்து மெய்ம்மை சொல்லு வார்க்கு; உறை வில் குலா நுதலாள் ஏழ்பொழிலும் விலையோ விற்போல வளைந்த நுதலை யுடையாட்கு ஏழுலகும் விலையாமோ! விலைக் குறையாம் எ-று.
இறை எல்லாப் பொருட்கு மிறைவன்; வில் குலா வரை ஏந்தி வில்லாகிய வளைதலையுடைய வரையை யேந்துவான்; வண் தில்லையன் வளவிய தில்லைக்கண்ணான்; ஏழ்பொழிலும் அவனுடைய ஏழ்பொழிலுமெனக் கூட்டுக.
செல்வு இருமுதுகுரவராற் கொண்டாடப்படுதல். நிறைவு அறிவோடுகூடிய வொழுக்கம். நீதி உள்ளப்பொருத்த முள்வழி மறாது கொடுத்தல். உறைவிலென்பதற்கு உறையையுடைய வில்லெனினுமமையும். 266

குறிப்புரை :

18.1 முலைவிலை கூறல் முலைவிலை கூறல் என்பது வரைவு முடுக்கப்பட்ட தலைமகன், யான் வரைவொடு வருதற்கு நீ சென்று அவளையன் மாரை முலைவிலை கேட்பாயாகவென, எல்லாவற்றானு நின்வரவை எமரேற்றுக்கொளினல்லது விலை கூறுவராயின் அவளுக்கேழுலகும் விலைபோதாதெனத் தோழி முலைவிலை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.1. 9; கொலைவேற் கண்ணிக்கு
விலையிலை யென்றது.

பண் :

பாடல் எண் : 2

வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண்
ணித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத்
துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழ லீசர்சிற்
றம்பலந் தாம்பணியார்க்
கடுத்தன தாம்வரிற் பொல்லா
திரவின்நின் னாரருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
என்னைத் தன் தொழும்பிற் படுத்த நல்நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் என்னைத் தன்னடிமைக்கட்படுவித்த நல்ல நீண்ட கழலையுடைய வீசரது சிற்றம்பலத்தை; தாம் பணியார்க்கு அடுத்தன தாம் வரின் தாம் பணியாதார்க்குத் தக்கனவாகிய தீதுகள் உனக்கு வரக்கூடு மாயின்; இரவின் நின் ஆர் அருள் பொல்லாது இரவின் கணுண்டாகிய நின்னாரருள் எமக்குப் பொல்லாது; அதனான், வடுத்தன நீள் வகிர்க் கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு வடுவனவாகிய நீண்ட வகிர்போலுங் கண்ணையுடை யாளது தூய முத்துப் போலு மொளியை யுடைய முறுவலுக்கு; தொடுத்தன நீ விடுத்து எய்தத் துணி எமராற் றொடுக்கப்பட்டன வாகிய பொருள்களை நீ வரவிட்டு வரைந்தெய்தத் துணிவாயாக எ - று.
நீள்வகிர்க் கண்ணியாகிய வெண்ணித்தில வாணகைக் கென்றுரைப்பினு மமையும். தொடுத்தன பலவாக வகுக்கப்பட்டன. படுத்தன நீள்கழலென்பதூஉம் பாடம். சிற்றம்பலந்தாம் பணியார்க் கடுத்தன தாம் வருகையாவது கெர்ப்பம் வருகை. அடுத்தன தாம் வரினென்பதற்கு நீ வரினெமக்கடுத்தனதா முளவா மென்று பொருளுரைப்பாருமுளர். அடுத்தனதான் வரினென்பது பாட மாயின், தானென்பது அசைநிலை. இவை இரண்டிற்கும் மெய்ப் பாடு: பெருமிதம். பயன்: அது. 267

குறிப்புரை :

18.2 வருமதுகூறி வரைவுடம்படுத்தல் வருமது கூறி வரைவுடம்படுத்தல் என்பது முலைவிலை கூறிய தோழி, நீ வரைவொடு வாராது இரவருள் செய்யாநின்ற விதுகெர்ப்பத்துக் கேதுவானால் நம்மெல்லார்க்கும் பொல்லா தாம்; அது படாமல் எமராற் றொடுக்கப்பட்ட அருங்கலங்களை விரைய வரவிட்டு அவளை வரைந்தெய்துவாயாகவென மேல் வருமிடுக்கண் கூறித் தலைமகனை வரைவுடம்படுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.2. தொடுத்தன விடுத்துத் தோகைதோளெய்
திடுக்கண்பெரி திரவரினென்றது.

பண் :

பாடல் எண் : 3

குன்றங் கிடையுங் கடந்துமர்
கூறும் நிதிகொணர்ந்து
மின்றங் கிடைநும் மையும்வந்து
மேவுவன் அம்பலஞ்சேர்
மன்றங் கிடைமரு தேகம்பம்
வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடா
வகைசெப்பு தேமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மின் தங்கு இடை மின்போலுமிடையை யுடையாய்; குன்றங் கிடையும் கடந்து இனிக் குன்றக்கிடப்புக்களை யுடைய சுரத்தையுங் கடந்துபோய்; உமர் கூறும் நிதி கொணர்ந்து நுமர்சொல்லு நிதியத்தைத் தேடிக்கொணர்ந்து; நும்மையும் வந்து மேவுவன் நும்மையும் வந்து மேவுவேன்; தேமொழியே தேமொழியினையுடையாய்; சென்று நீ சென்று; அம்பலம் சேர் மன் தங்கு அம்பலத்தைச் சேர்ந்த மன்னன்றங்கும்; இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன பொன்னை இடைமருது ஏகம்பம் வாஞ்சிய மாகிய இவற்றை யொக்கும் பொன்னை; இடை கொண்டு வாடா வகை இடைகொண்டு வாடாத வண்ணம்; அங்குச் செப்பு அவ் விடத்துச் சொல்ல வேண்டுவன சொல்லுவாயாக எ - று.
குன்றக்கிடையென்பது மெலிந்து நின்றதெனினுமமையும். நும்வயி னென்பதூஉம் பாடம். எண்ணப்பட்டவற்றோடு படாது அம்பலஞ் சேர் மன்னனெனக் கறியவதனால், அம்பலமே யவர்க்கிட மாதல் கூறினார். இடைகொண் டென்புழி இடை காலம். மெய்ப்பாடு: அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன்: வரைபொருட் பிரியுந் தலைமகன் ஆற்றுவித்தல். 268

குறிப்புரை :

18.3 வரைபொருட்பிரிவை யுரையெனக் கூறல் வரைபொருட்பிரிவை யுரையெனக் கூறல் என்பது மேல்வருமது கூறி வரைவுடம்படுத்தின தோழிக்கு, யான் போய் நுமர் கூறு நிதியமுந் தேடிக்கொண்டு நும்மையும் வந்து மேவுவேன்; நீ சென்று அவள் வாடாத வண்ணம் யான் பிரிந்தமை கூறி ஆற்றுவித்துக்கொண்டிருப்பாயாகவெனத் தலைமகன் றான் வரைபொருட்குப் பிரிகின்றமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.3. ஆங்க வள்வயின் நீங்க லுற்றவன்
இன்னுயிர்த் தோழிக்கு முன்னி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 4

கேழே வரையுமில் லோன்புலி
யூர்ப்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியா ளிரவரி
னும்பகற் சேறியென்று
வாழே னெனவிருக் கும்வரிக்
கண்ணியை நீ வருட்டித்
தாழே னெனவிடைக் கட்சொல்லி
யேகு தனிவள்ளலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தனி வள்ளலே ஒப்பில்லாத வள்ளலே; கேழ் ஏவரையும் இல்லோன் புலியூர்ப் பயில் கிள்ளை அன்ன யாழ் ஏர் மொழியாள் தனக்குவமையாக யாவரையுமுடையனல்லாதவனது புலியூர்க்கட்பயிலுங் கிளியையொக்கும் யாழோசைபோலு மொழியையுடையாள்; இரவரினும் பகல் சேறி என்று இரவினீவரினும் பகற்பிரிந்து செல்வையென்று அதனையே யுட்கொண்டு; வாழேன் என இருக்கும் வரிக் கண்ணியை நின்னோடுகூடிய வப்பொழுதும் யானுயிர்வாழேனென்று நினைந் திருக்கும் வரிக்கண்ணினை யுடையாளை; வருட்டி இடைக்கண் தாழேன் என நீ சொல்லி ஏகு வசமாக்கிப் பெற்றதோர் செவ்வியில் தாழேனென்னும் உரை முன்னாக நின்பிரிவை நீயே சொல்லி யேகுவாயாக எ - று.
கிளி மென்மையும் மென்மொழியுடைமையும்பற்றி, மென் மொழியையுடையாட் குவமையாய் வந்தது. யாழோசை செவிக் கினிதாதல் பற்றி மொழிக்குவமையாய் வந்தது. புலியூர்ப் பயிலுமொழியாளெனவியையும். வாழேனென விருக்கு மென்ப தனை முற்றாக்கி மொழியாளிவ்வாறு செய்யும். அவ்வரிக் கண்ணியை யென ஒரு சுட்டு வருவித்துரைப்பினுமமையும். வருடி வருட்டியென மிக்கு நின்றது. வாழேனெனவிருக்கு மென்றதனான், இத்தன்மைத்தாகிய விவளது பிரிவாற்றாமையை மறவாதொழிய வேண்டு மென்றாளாம். இடைக்கணென்றது இவ்வொழுக்கத்தால் நினக்கு வருமேத நினைந்து ஆற்றாளாஞ் செவ்விபெற்றென்றவாறு. வடிக்கண்ணியை யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அச்சம். பயன்: தலைமகள தாற்றாமை யுணர்த்துதல்.269

குறிப்புரை :

18.4 நீயே கூறென்றல் நீயே கூறென்றல் என்பது பிரிவறிவிப்பக் கூறின தலைமகனுக்கு, நீ யிரவுவரினும் பகற்பிரிந்து செல்வையென வுட்கொண்டு நின்னொடு கூடிய வப்பொழுதும் யானுயிர்வாழே னென்று நினைந்திருப்பாளுக்குத் தாழேனென்னு முரைமுன்னாக நின்பிரிவை நீயே சொல்லிப் போவாயாகவென அவன் விரையவருவது காரணமாகத் தோழி தலைமகளது பிரிவாற்றாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.4. காய்கதிர்வேலோய் கனங்குழையவட்கு
நீயேயுரை நின்செலவென்றது.

பண் :

பாடல் எண் : 5

வருட்டின் திகைக்கும் வசிக்கின்
துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வருட்டின் திகைக்கும் நுதலுந் தோளு முதலாயினவற்றைத் தைவந்து ஒன்று சொல்லக் குறிப்பேனாயின் இஃதென் கருதிச் செய்கின்றானென்று மயங்காநிற்கும்; வசிக்கின் துளங்கும் இன்சொல்லின் வசித்து ஒன்று சொல்லலுறுவேனாயின் அக்குறிப் பறிந்து உண்ணடுங்காநிற்கும்; தெருட்டின் மன மகிழ்ந்து தெளியலள் இனி வெளிப்படப் பிரிவுணர்த்திப் பொருண்முடித்துக் கடிதின் வருவலென்று சூளுற்றுத் தெளிவிப்பேனாயின் மன மகிழ்ந்து அதனைத் தேறாள்; செப்பும் வகை இல்லை இவ்வாறொழிய அறிவிக்கும் வகை வேறில்லை; அதனான், புரி குழலாட்கு எங்ஙன் சொல்லி ஏகுவன் சுருண்ட குழலை யுடையாட்குப் பிரிவை எவ் வண்ணஞ் சொல்லிப் போவேன்! ஒருவாற்றானுமரிது எ - று.
சீர் அருக்கன் குருட்டின் புகச் செற்ற கோன் புலியூர் பெருமையையுடைய அருக்கன் குருடாகிய இழிபிறப்பிற் புகும் வண்ணம் அவனை வெகுண்ட தலைவனது புலியூரை; குறுகார் மனம் போன்று இருட்டின் புரிகுழல் அணுகாதார் மனம் போன்று இருட்டுதலையுடைய புரிகுழலெனக் கூட்டுக.
வருடினென்பது வருட்டினென நின்றது. ஏகுவதே யென்பதூ உம் பாடம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: வரைவு மாட்சிமைப் படுத்துதற்குப் பிரிதல். 270

குறிப்புரை :

18.5 சொல்லாதேகல் சொல்லாதேகல் என்பது நீயேகூறென்ற தோழிக்கு, யானெவ்வாறு கூறினும் அவள் பிரிவுடம்படாளாதலின் ஒருகாலும் வரைந்துகொள்கையில்லை; யான் விரைய வரு வேன்; அவ்வளவும் நீயாற்றுவித்துக் கொண்டிருப்பாயாகவெனக் கூறித் தலைமகன் றலைமகளுக்குச் சொல்லாது பிரியாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.5. நிரைவளை வாட
உரையா தகன்றது.

பண் :

பாடல் எண் : 6

நல்லாய் நமக்குற்ற தென்னென்
றுரைக்கேன் நமர்தொடுத்த
வெல்லா நிதியு முடன்விடுப்
பான்இமை யோரிறைஞ்சும்
மல்லார் கழலழல் வண்ணர்வண்
தில்லை தொழார்களல்லாற்
செல்லா அழற்கட மின்றுசென்
றார்நம் சிறந்தவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நம் சிறந்தவர் நமக்குச் சிறந்த அவர்; நமர் தொடுத்த எல்லா நிதியும் உடன் விடுப்பான் நமராற் றொடுக்கப்பட்ட வெல்லா நிதியத்தையும் ஒருங்கே வரவிடுவான் வேண்டி; இமை யோர் இறைஞ்சும் மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை இமையோர் சென்று வணங்கும் வளமார்ந்த கழலையுடைய அழல் வண்ணரது வளவிய தில்லையை; தொழார்கள் அல்லால் செல்லா அழல் கடம் இன்று சென்றார் தொழாதாரல்லது நம்போல்வார் செல்லாத அழலையுடைய சுரத்தை இன்று சென்றார்; அதனான், நல்லாய் நல்லாய்; நமக்கு உற்றது என்னென்று உரைக்கேன் நமக்கு வந்ததனை யாதென்று சொல்லுவேன்! எ-று.
என்னென் றுரைக்கேனென்றதனான், தொடுத்தது விடுப்பச் சென்றாராகலின் இன்பமென்பேனோ? அழற்கடஞ் சென்றமையாற் றுன்பமென் பேனோவெனப் பொதுப்படக் கூறுவாள் போன்று, வரைவு காரணமாகப் பிரிந்தாராகலின் இது நமக்கின்பமே யென்றாற்று வித்தாளாம். தொழார்களல்லார் செல்லா வென்று பாட மோதுவாரு முளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: வரைவு நீட்டியாமை யுணர்த்துதல். 271

குறிப்புரை :

18.6 பிரிந்தமை கூறல் பிரிந்தமை கூறல் என்பது தலைமகன், முன்னின்று பிரிவுணர்த்த மாட்டாமையிற் சொல்லாது பிரியாநிற்ப, தோழி சென்று, நமராற் றொடுக்கப்பட்ட வெல்லா நிதியத்தையும் ஒருங்கு வரவிட்டு நின்னை வரைந்துகொள்வானாக அழற்கட நெறியே பொருள் தேடப் போனான்; அப்போக்கு, அழற்கடஞ் சென்றமையான் நமக்குத் துன்பமென்பேனோ? வரைவு காரணமாகப் பிரிந்தானாதலின் நமக்கின்பமென்பேனோவெனப் பொதுப் படக் கூறி, வரைவு காரணமாகப் பிரிந்தானாதலின், இது நமக்கின்பமே யெனத் தலைமகள் வருந்தாமல் அவன் பிரிந்தமை கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
18.6. தேங்கமழ் குழலிக்குப்
பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 7

அருந்தும் விடமணி யாம்மணி
கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்து மமிர்தமு மாகுமுன்
னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்துங் கடன்நெறி செல்லுமிவ்
வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
யாமினி வாழ்வகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் உண்ணப்பட்ட நஞ்சநின்று அலங்காரமாய நீலமணிபோலுங் கண்டத்தை யுடையவன்; அண்டர்க்கு எல்லாம் மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தேவர்க்கெல்லா முறுதிபயக்கு மருந்தும் இன்சுவையையுடைய வமிர்தமு மாகாநிற்கும் முன்னோன்; தில்லை வாழ்த்தும்வள்ளல் அவனது தில்லையை வாழ்த்தும் நம்வள்ளல்; திருந்தும் கடன் நெறி செல்லும் இவ்வாறு சிதைக்கும் என்றால் நமக்கேதம் பயக்கு மொழுக்க மொழிந்து குற்றந்தீர்ந் திருக்கு முறைமையாகிய இந்நெறியைச் செல்கின்ற இந்நீதி நம்மைக் கெடுக்குமென்று நீகருதின்; வருந்தும் மட நெஞ்சமே வருந்துகின்ற வறிவில்லாத நெஞ்சமே; யாம் இனி வாழ் வகை என்ன யாமின்புற்று வாழுமுபாயம் வேறியாது! எ - று.
அருந்துமென்பது காலமயக்கம்; அருந்துதற்றொழின் முடிவதன் முன் நஞ்சங்கண்டத்து நிறுத்தப்பட் டணியாயிற்றாகலின், நிகழ்காலத்தாற் கூறப்பட்டதெனினு மமையும். மற்று: அசைநிலை. திருந்துங் கடனெறியென்பது தித்திக்குந் தேனென்பதுபோல இத்தன்மைத்தென்னு நிகழ்காலம்பட நின்றது. திருந்துங் கடனெறியைச் செல்லுமென்றும், களவாகிய விவ்வாற்றைச் சிதைக்கு மென்றும் முற்றாக அறுத்துரைப்பாருமுளர். 272

குறிப்புரை :

18.7 நெஞ்சொடு கூறல் நெஞ்சொடு கூறல் என்பது பிரிந்தமை கூறக் கேட்டு வருந்தா நின்ற நெஞ்சிற்கு, நமக்கேதம் பயக்கு மொழுக்க மொழிந்து குற்றந் தீர்ந்த முறைமையாகிய வொழுக்கத்துப் பிரிந்தவிது நம்மைக் கெடுக்குமென்று நீ கருதின், இது வொழிய நமக்கின்புற்று வாழு முபாயம் வேறுளதோ வெனத் தலைமகள் நெஞ்சினது வருத்தந் தீரக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.7. கல்வரை நாடன் சொல்லா தகல
மின்னொளி மருங்குல் தன்னொளி தளர்ந்தது.

பண் :

பாடல் எண் : 8

ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
ஏத்த எழில்திகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
மணலிற் கலந்தகன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென்
கொலாமின்று செய்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஏர்ப் பின்னை தோள் முன் மணந்தவன் ஏத்த அழகையுடைய பின்னையென்கின்ற தேவியுடைய தோள்களை முற்காலத்துக் கலந்த மாயோன் நின்றுபரவ; எழில் திகழும் சீர்ப் பொன்னை வென்ற செறி கழலோன் தில்லைச் சூழ்பொழில் வாய் எழில்விளங்குஞ் செம்பொன்னை வென்ற திருவடிகளையுடைய வனது தில்லைக்கட் சூழ்ந்த பொழிலிடத்து; கார்ப் புன்னை பொன் அவிழ் முத்த மணலில் கரியபுன்னை பொன் போல மலராநின்ற முத்துப்போலு மணலையுடைய தோரிடத்து; கலந்து அகன்றார் கூடி நீங்கினவரது; தேர்ப்பின்னைச் சென்றஎன் நெஞ்சு இன்று செய்கின்றது என்கொலாம் தேர்ப்பின் சென்றான் என்னெஞ்சம் இவ்விடத்தின்று செய்கின்றதென்னோ! அறிகின்றிலேன்! எ - று.
ஏத்தவெழிறிகழுமெனவியையும். என்னோடு நில்லாது அவர் தேர்ப்பின்போன நெஞ்சம் இன்றென்னை வருத்துகின்ற விஃதென்னென்று நெஞ்சொடு நொந்து கூறினாளாக வுரைப்பினு மமையும். செறிகழலும் முத்தமணலும்: அன்மொழித்தொகை. தேய்கின்ற தேயென்பது பாடமாயின், அன்றவரை விடாது சென்ற நெஞ்சம், செல்லாது ஈண்டிருக்கு மென்னைப்போல், இன்று தேய்கின்ற தென்னென்று கூறினாளாகவுரைக்க. இவை யிரண்டற்கும் மெய்ப் பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 273

குறிப்புரை :

18.8 நெஞ்சொடுவருந்தல் நெஞ்சொடுவருந்தல் என்பது பிரிந்தமை கூறக்கேட்ட தலைமகள், அன்றவரை விடாது என்னைவிட்டு அவரது தேர்ப்பின் சென்றநெஞ்சம் இன்றுமவ்வாறு செய்யாது என்னை வருத்தா நின்றதெனத் தன்னெஞ்சொடு வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.8. வெற்பன் நீங்கப்
பொற்பு வாடியது.

பண் :

பாடல் எண் : 9

கானமர் குன்றர் செவியுற
வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென
மான்நல் தொடைமடக்கும்
வானமர் வெற்பர்வண் தில்லையின்
மன்னை வணங்கலர்போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல்
செல்லல் திருநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தேன் அமர் சொல்லி தேனைப்பொருந்துஞ் சொல்லையுடையாய்; கான் அமர் குன்றர் செவி உற வாங்குகணை கானின்க ணமருங் குன்றவர் செவியுறுவண்ணம் வலித்த கணையை; துணையாம் மான் அமர் நோக்கியர் நோக்கென மான் நல்தொடை மடக்கும் தாமெய்யக் குறித்தவற்றினோக்குந் தந்துணைவியராகிய மானைப்பொருந்திய நோக்கத்தையுடையவரது நோக்கோடொக்கு மென்று கருதி அம்மானைக் குறித்த நல்ல தொடையை மடக்கும்; வான் அமர் வெற்பர் செல்லார் முகி றங்கும் வெற்பர் செல்கின்றாரல்லர்; வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல் வளவிய தில்லையின் மன்னனை வணங்காதாரைப் போல; திருநுதல் திருநுதால்; செல்லல் செல்லல் இன்னாமையையடையாதொழிவாய் எ - று.
தொடைமடக்குமென்னுஞ் சொற்கள் இயைந்து ஒரு சொல்லாய்க் குன்றவ ரென்னு மெழுவாய்க்குங் கணையையென்னு மிரண்டாவதற்கும் முடிபாயின. துணையாமென்பது ``ஏவலிளையர் தாய்`` என்பதுபோல மயக்கமாய் நின்றது. மானமர் நோக்கியர் நோக்கென்பதனை உறழ்வா லுவமைப்பாற்படுக்க. கொலைத் தொழிலாளருந் தந்துணைவியரோ டொப்பனவற்றிற்கு மிடர் செய்யாத வெற்பராதலின், நீ யிவ்வாறு வருந்த நீட்டியாரென்பது கருத்து. 274

குறிப்புரை :

18.9 வருத்தங்கண்டுரைத்தல் வருத்தங்கண்டுரைத்தல் என்பது தலைமகள் தன்னெஞ் சொடுவருந்தாநிற்பக் கண்ட தோழி, இத் தன்மைத்தாகிய வெற்பராகலிற் றாழாது விரைய வரைவொடுவருவர்; ஆதலால் நீ யின்னாமையையடையாதொழிவாயாக வென்று அவள் வருத்தந் தீரக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.9. அழலுறு கோதையின் விழுமுறு பேதையை
நீங்கல ரென்னப் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 10

மதுமலர்ச் சோலையும் வாய்மையும்
அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை
யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
வாறென்ப ரேந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மது மலர்ச்சோலையும் அவரைப் புதுவது கண்ணுற்ற மதுமலரையுடைய சோலையையும்; வாய்மையும் அன்று நின்னிற்பிரியேன் பிரியினாற்றேனென்று கூறிய வஞ்சினத்தினது மெய்ம்மையையும்; அன்பும் வழிமுறைபெருகிய வன்பையும்; மருவி வெங்கான் கதுமெனப் போக்கும் நம்மோடு மருவி வைத்துப் பின் கதுமென வெங்கானிற்போகிய போக்கையும்; நிதியின் அருக்கும்- போய்த்தேடு நிதியினது செய்தற்கருமையையும்; முன்னிக் கலுழ்ந்தால் நினைந்து நீ கலுழ்ந்தால்; ஏந்திழை ஏந்திழாய்; நொதுமலர் ஏதிலர்; மலர்ப்பாவைக்கு இது வந்தவாறு என்னோ என்பர் மலர்ப்பாவையன்னாட்கு இவ்வேறுபாடு வந்தவாறென்னோ வென்றையுவறுவர்; அதனானீயாற்றுவாயாக எ - று.
நோக்கம் ஓர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல் வந்தவாறு என்னோ கண்களொருமூன்றையுடையவனது தில்லையைக் கருதாதார்போல வந்தாவாறென்னோவெனக் கூட்டுக.
அன்பு வழிமுறையாற் சுருங்காது கடிது சுருங்கிற்றென்னுங் கருத்தாற் கதுமெனப் போக்கு மென்றாள். அருக்குமென்றதனால் நீட்டித்தல் கருதினாளாம். வழி யொழுகி யாற்றுவிக்கவேண்டு மளவாகலின், ஆற்றாமைக்கு காரணமாகியவற்றை மிகுத்துக் கூறினாளாம். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல். 275

குறிப்புரை :

18.10 வழியொழுகிவற்புறுத்தல் வழியொழுகி வற்புறுத்தல் என்பது தலைமகளது வருத்தங் கண்ட தோழி, அவளை வழியொழுகியாற்றுவிக்கவேண்டு மளவாகலின், ஆற்றாமைக்குக் காரணமாகியவற்றைக் கூறித் தானும் அவளோடு வருத்தமுற்று, அதுகிடக்க, இம்மலர்ப்பாவை யை யன்னாட்கு இவ்வேறுபாடு வந்தாவாறென்னோவென்று அயலவர் ஐயுறாநிற்ப ராதலான் நீ யாற்றவேண்டு மென்று அவள்வழி யொழுகி வற்புறுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.10. சூழிருங் கூந்தலைத்
தோழி தெருட்டியது.

பண் :

பாடல் எண் : 11

வந்தாய் பவரையில் லாமயில்
முட்டை இளையமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை
நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென்
தில்லை தொழார்குழுப்போற்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
நையுந் திருவினர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கொந்தார் நறுங் கொன்றைக் கூத்தன் தென் தில்லை தொழார் குழுப்போல் கொத்தார்ந்த நறிய கொன்றையை யணிந்த கூத்தனது தெற்கின்கணுண்டாகிய தில்லையை வணங்காதாரது திரள்போல; சிந்தாகுலம் உற்றுப் பற்று இன்றி நையும் திருவினர்க்கு மனக்கலக்கத்தையுற்றுத் தமக்கோர் பற்றுக்கோடின்றி வருந்துந் திருவினையுடையவர்க்கு; வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை சென்றாராய்வாரை யுடைத்தல்லாத மயிலின் முட்டையை; இளைய மந்தி பந்தாடு இரும் பொழில் பல்வரை நாடன் பண்போ இளைய மந்தி பந்தாடிவிளையாடும் பெரிய பொழிலையுடைய பலவாகிய வரைகளை யுடைய நாட்டை யுடையவன தியல்போ; இனிது இனிது எ - று.
நையுந்திருவினர்க்கென்றது நையுந்துணையா யிறந்துபடா திருந்து அவனளிபெற்ற ஞான்று இன்புறவெய்தும் நல்வினை யாட்டியர்க் கென்றவாறு. எனவே, யானது பெறுமாறில்லை யென்றாளாம். உற்றதாராய்ந் தோம்புவாரில்லாத மயிலினது முட்டையால் ஈன்ற வருத்தமறியாத விளமந்தி, மயிலின் வருத்தமும் முட்டையின் மென்மையும் பாராது பந்தாடுகின்றாற்போலக் காதலரான் வினவப்படாத என் காமத்தை நீ யிஃதுற்றறியாமையான் எனது வருத்தமும் காமத்தினது மென்மையும் பாராது, இவ்வா றுரைக்கின்றாயென உள்ளுறை வகையாற் றோழியை நெருங்கி வன்புறை யெதிரழிந்தவாறு கண்டுகொள்க. அல்லதூஉம், வந்தாய்பவர் தோழியாகவும், இளமந்தி தலைமகனாகவும், பந்தாடுதல் தலைமகளது வருத்தம் பாராது தான் வேண்டியவா றொழுகு மவனதொழுக்கமாகவும் உரைப்பினு மமையும். திருவி னெற்கே யென்பது பாடமாயின், இவ்வாறு வன்கண்மை யேனாய் வாழுந் திருவையுடையேற்கென வுரைக்க. இதற்குத் திரு: ஆகுபெயர். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: அது. 276

குறிப்புரை :

18.11 வன்புறையெதிரழிந்திரங்கல் வன்புறையெதிரழிந்திரங்கல் என்பது, வழியொழுகி வற்புறுத்தின தோழியோடு, தலைமகன் வரைவு நீடுதலாற் றமக்கோர் பற்றுக்கோடின்றி வருந்துந் திருவினையுடையார்க்கு அவன் வரைவு மிகவுமினிது; யானாற்றேனெனத் தலைமகள் வன்புறை யெதிரழிந் திரங்காநிற்றல். அதற்கு செய்யுள்
18.11. வன்கறை வேலோன் வரைவு நீட
வன்புறை யழிந்தவள் மனமழுங் கியது.

பண் :

பாடல் எண் : 12

மொய்யென் பதேஇழை கொண்டவ
னென்னைத்தன் மொய்கழற்காட்
செய்யென் பதேசெய் தவன்தில்லைச்
சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்யென்ப தேகருத் தாயிற்
புரிகுழற் பொற்றொடியாய்
மெய்யென்ப தேதுமற் றில்லைகொ
லாமிவ் வியலிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மொய் என்பதே இழை கொண்டவன் வலிமையை யுடைய என்புதனையே தனக்கணியாகக் கொண்டவன்; என்னைத் தன் மொய் கழற்கு ஆள் செய் என்பதே செய்தவன் என்னைத் தன்னுடைய வலிய திருவடிக் காட்செய்யென்று வெளிப் பட்டுநின்று சொல்லுதலையே செய்தவன்; தில்லைச் சூழ்கடல் சேர்ப்பர் சொல்லும் அவனது தில்லைவரைப்பினுண்டாகிய சூழ்ந்த கடலை யுடைத்தாகிய சேர்ப்பையுடையவரது சொல்லும்; பொய் என்பதே கருத்து ஆயின் பொய்யென்பதே நினக்குக் கருத்தாயின்; புரிகுழல் பொற்றொடியாய் சுருண்டகுழலை யுடைய பொற்றொடியாய்; இவ் வியல் இடத்து மெய் என்பது ஏதும் இல்லை கொலாம் இவ்வுலகத்து மெய்யென்பது சிறிது மில்லைபோலும்! எ-று.
அரிமுதலாயினாரென்பாகலின், மொய்யென்பென்றார். இழிந்தன கைக்கொள்வானாகலின், என்பை யணியாகவும் என்னை யடிமையாகவுங் கொண்டானென்பது கருத்து. மெய்ப்பாடும் பயனும் அவை. 277

குறிப்புரை :

18.12 வாய்மை கூறி வருத்தந் தணித்தல் வாய்மை கூறி வருத்தந் தணித்தல் என்பது வரைவு நீடு தலான் வன்புறை யெதிரழிந்து வருந்தாநின்ற தலைமகளுக்கு, அவர் சொன்ன வார்த்தை நினக்குப் பொய் யென்பதே கருத்தாயின் இவ் வுலகத்து மெய்யென்பது சிறிதுமில்லையெனத் தோழி தலைமகனது வாய்மை கூறி, அவள் வருத்தந் தணியாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.12. வேற்றடங் கண்ணியை
ஆற்று வித்தது.

பண் :

பாடல் எண் : 13

மன்செய்த முன்னாள் மொழிவழியே
அன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில்
லாவென தின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை
யுறாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
நீர்மைகொல் மொய்குழலே.

பொழிப்புரை :

இதன் பொருள்: மொய் குழலே மொய்த்த குழலை யுடையாய்; முன் நாள் மன் செய்த மொழி வழியே அன்ன வாய்மை கண்டும் முற்காலத்து மன்னன் நமக்குதவிய மொழியின்படியே அத்தன்மைத் தாகிய மெய்ம்மையைக் கண்டுவைத்தும்; நெஞ்சும் நிறையும் நில்லா- என்னெஞ்சமுநிறையு மென்வரையவாய் நிற்கின்றில; என் செய்த இவையென்செய்தன; எனது இன் உயிரும் அதுவேயுமன்றி எனதினிய வுயிரும்; பொன் செய்த மேனியன் தில்லை உறாரின் பொறை அரிதாம் பொன்னையொத்த மேனியை யுடையவனது தில்லையை யுறாதாரைப்போல வருத்தம் பொறுத்த லரிதாகா நின்றது; முன் செய்த தீங்கு கொல் இவை யிவ்வாறாதற்குக் காரணம் யான் முன்செய்த தீவினையோ; காலத்து நீர்மை கொல் அன்றிப் பிரியுங் காலமல்லாத விக்காலத்தி னியல்போ? அறிகின்றிலன் எ-று.
மொழிவழியே கண்டுமெனவியையும். நெஞ்சநில்லாமை யாவது நம்மாட்டு அவரதன்பு எத்தன்மைத்தோவென் றையப்படுதல். நிறை நில்லாமையாவது பொறுத்தலருமையான் அந்நோய் புறத் தார்க்குப் புலனாதல். நில்லாதென்பது பாடமாயிற் றனித்தனி கூட்டுக.
பொன்செய்த வென்புழிச் செய்தவென்பது உவமச் சொல். உயிர் துன்ப முழத்தற்குக் காரணமாதலின், அதனையுந் துன்பமாக நினைந்து இன்னுயிரும் பொறையரிதாமென்றாள். மெய்ப்பாடு: மருட்கை. பயன்: ஆற்றுவித்தல். 278

குறிப்புரை :

18.13 தேறாது புலம்பல் தேறாதுபுலம்பல் என்பது தலைமகனது வாய்மைகூறி வருத்தந் தணியாநின்ற தோழிக்கு, யானவர் கூறிய மொழியின்படியே மெய்ம்மையைக்கண்டு வைத்தும், என்னெஞ்சமு நிறையும் என்வயமாய் நிற்கின்றன வில்லை; அதுவேயு மன்றி, என்னுயிரும் பொறுத்தற்கரிதாகாநின்றது. இவை யிவ்வாறாதற்குக் காரணம் யாதென்றறிகின்றிலேனெனத் தான் றேறாமைகூறிப் புலம்பாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.13. தீதறு கண்ணி தேற்றத் தேறாது
போதுறு குழலி புலம் பியது.

பண் :

பாடல் எண் : 14

கருந்தினை யோம்பக் கடவுட்
பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
தான்பரங் குன்றிற்றுன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
காரென வெள்வளையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வெள் வளை வெள்வளையையுடையாய்; கருந்தினை ஓம்பக் கடவுட் பராவி நமர் கலிப்ப கரியதினையை யோம்பவேண்டிக் கடவுளைப்பராவி நமராரவாரிப்ப; கொண்மூச் சொரிந்தன அக்கடவுளாணையாற் கொண்மூக்கள் காலமன்றியு நீரைச் சொரிந்தன; காரென அதனைக்காரென்று கருதி; பரங் குன்றின் காந்தள் துன்றி விரிந்தன இப்பரங்குன்றின்கட் காந்த ணெருங்கி யலர்ந்தன; அதனான் நீ காரென் றஞ்சவேண்டா எ - று.
சுரந்ததன் பேரருளான் பொறுத்தற்கரிதாகச் சுரந்த தனது பெரிய வருளான்; தொழும்பில் பரிந்து எனை ஆண்ட சிற்றம்பலத்தான் பரங்குன்றின் அடிமைக்குத் தகாதவென்னைத் தன்னடிமைக்கண்ணே கூட்டி நடுவுநிலைமையின்றிப் பரிந்தாண்ட சிற்றம்பலத் தானது பரங்குன்றினெனக் கூட்டுக.
கடவுண்மழை கடவுளாற் றரப்பட்ட மழை. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஆற்றுவித்தல். 279

குறிப்புரை :

18.14 காலமறைத்துரைத்தல் காலமறைத்துரைத்தல் என்பது தேறாமைகூறிப் புலம்பா நின்ற தலைமகள், காந்தள் கருவுறக்கண்டு, இஃதவர் வரவுகுறித்த காலமென்று கலங்காநிற்ப, நம்முடைய வையன்மார் தினைக்கதிர் காரணமாகக் கடவுளைப்பராவ, அக்கடவுளதாணையாற் கால மன்றியுங் கார் நீரைச்சொரிய, அதனையறியாது, காலமென்று இக்காந்தண் மலர்ந்தன; நீயதனைக் காலமென்று கலங்கவேண்டா வெனத் தோழி, அவளை யாற்றுவித்தற்குக் கால மறைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.14. காந்தள் கருவுறக் கடவுண் மழைக்கென்
றேந்திழைப் பாங்கி இனிதியம் பியது.

பண் :

பாடல் எண் : 15

வென்றவர் முப்புரஞ் சிற்றம்
பலத்துள்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக்
கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந்
தேமையுஞ் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து
தோன்றும் நிரைவளையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நிரை வளை நிரைவளையையுடையாய்; வந்து தோன்றும் ஒரு தூதுவந்து தோன்றாநின்றது; குன்றா அருள் தரக் கூடினர் நம் அகன்று சென்றவர் தூது கொல்லோ இது குன்றாத அருள்கொணர்ந்துதர வந்துகூடிப் பின் னம்மைப் பிரிந்துசென்றவர் தூதோ; இருந்தேமையும் செல்லல் செப்பா நின்றவர் தூது கொல்லோ அன்றி அவர் பிரியவிருந்தோமிடத்தும் இன்னாமையைச் சொல்லா நின்ற வேதிலார்தூதோ? அறியேன் எ-று.
முப்புரம் வென்றவர் முப்புரத்தை வென்றவர்; சிற்றம்பலத்துள் நின்று ஆடும் வெள்ளிக் குன்றவர் சிற்றம்பலத்தின்கணின்றாடும் வெள்ளிக்குன்றை யுடையவர்; குன்றா அருள் அவரது குன்றாத வருளெனக் கூட்டுக.
கூடினரென்பது பெயர்படநின்றதெனினு மமையும். இருந் தேமையென்னு மிரண்டாவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. இரண்டாவதாயேநின்று இன்னாமையைச் சொல்லாநின்றவரென்னுந் தொழிற்பெயரோடு முடிந்ததென்பாரு முளர். ஆங்கொரு தூது ஏதிலார் தூது. மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த மருட்கை. பயன்: ஐயந்தீர்தல். 280

குறிப்புரை :

18.15 தூதுவரவுரைத்தல் தூதுவர வுரைத்தல் என்பது காலமறைத்த தோழி, ஒரு தூது வந்து தோன்றாநின்றது; அஃதின்னார் தூதென்று தெரியாதெனத் தானின்புறவோடு நின்று அவள் மனமகிழும்படி தலைமகளுக்குத் தூதுவரவுரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.15. ஆங்கொரு தூதுவரப்
பாங்கிகண் டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 16

வருவன செல்வன தூதுகள்
ஏதில வான்புலியூர்
ஒருவன தன்பரின் இன்பக்
கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
டேகியென் நெஞ்சிற்றம்மை
இருவின காதல ரேதுசெய்
வானின் றிருக்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஏதில தூதுகள் வருவன செல்வன ஏதிலவாகிய தூதுகள் வருவன போவனவா யிராநின்றன; வான் புலியூர் ஒருவனது அன்பரின் வாலிய புலியூர்க்கணுளனாகிய ஒப்பில்லா தானது அன்பையுடையவரைப்போல; உள் உருகத் தருவன இன்பக் கலவிகள் செய்து யானின்புற வுள்ளுருகும் வண்ணந் தரப்படுவன வாகிய இன்பக்கலவிகளைமுன்செய்து; எனது ஆவி கொண்டு ஏகி பின்னெனதாவியைத் தாங்கொண்டுபோய்; என் நெஞ்சில் தம்மை இருவின காதலர் என்னெஞ்சத்தின் கட்டம்மையிருத்தின காதலர்; இன்று இருக்கின்றது ஏது செய்வேன் இன்றுவாளாவிருக்கின்றது ஏதுசெய்யக்கருதி? எ-று.
ஒருவனதன்பு ஒருவன்கணன்பு. உள்ளுருகத் தருவன வென்பதற்கு உள்ளுருகும் வண்ணஞ் சிலவற்றைத் தருவனவாகிய கலவியென்றுரைப்பினு மமையும். தன்மெய்யன்பர் போல யானுமின்புற வுள்ளுருகுங் கலவிகளை முன்செய்து பின்னென தாவி போயினாற்போலத் தாம் பிரிந்துபோய் ஒருஞான்றுங் கட்புலனாகாது யானினைந்து வருந்தச் செய்த காதலர் இன்று ஏது செய்ய விருக்கின்றாரென வேறுமொரு பொருடோன்றிய வாறு கண்டு கொள்க. அயல் - அயன்மை. மெய்ப்பாடும் பயனும் அவை. 281

குறிப்புரை :

18.16 தூதுகண்டழுங்கல் தூதுகண்டழுங்கல் என்பது தூதுவரவுரைப்பக் கேட்ட தலைமகள் மனமகிழ்வோடு நின்று, இஃதயலார் தூதாகலான் இவை வருவன செல்வன வாகாநின்றன; காதலர்தூது இன்று வாராதிருக்கின்றது என்செய்யக்கருதி யென்றறிகின்றிலே னென்று ஏதிலார் தூதுகண் டழுங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
18.16. அயலுற்ற தூதுவரக்
கயலுற்றகண்ணி மயலுற்றது.

பண் :

பாடல் எண் : 17

வேயின மென்தோள் மெலிந்தொளி
வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள்
அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்
கமரன்சிற் றம்பலத்தான்
சேயின தாட்சியிற் பட்டன
ளாம்இத் திருந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வேய் இன மென்றோள் மெலிந்து வேய்க் கினமாகிய மென்றோண்மெலிந்து; ஒளி வாடி கதிர்ப்புவாடி; விழி பிறிதாய் விழி தன்னியல்பிழந்து வேறாய் பாயின மேகலை பண்டைய ளல்லள்; பரந்த மேகலையையுடையாள் பண்டைத் தன்மையளல்லாளாயினாள், அதனால், இத் திருந்திழை இத்திருந் திழை; சேயினது ஆட்சியின் பட்டனளாம் சேயினதாட்சி யாகிய விடத்துப் பட்டாள் போலும் எ - று.
பவளச் செவ்வி ஆயின ஈசன் திருமேனி பவளத்தினது செவ்வியாகிய வீசன்; அமரர்க்கு அமரன் தேவர்க்குத் தேவன்; சிற்றம்பலத்தான் சிற்றம்பலத்தின் கண்ணான்; சேய் அவனுடைய சேயெனக்கூட்டுக.
ஒளிவாடி யென்பதூஉம், விழிபிறிதாயென்பதூஉம் சினை வினைப்பாற்படும். பாயினமேகலை யென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீர்மைப்படுதலின், ஆகுபெயரெனப்படும். செவ்வி கருகுதலும் வெளுக்குதலுமில்லாத நிறம். ஆட்சி அவன தாணை யான் மக்களுக் கணையலாகாத விடம். 282

குறிப்புரை :

18.17 மெலிவுகண்டு செவிலிகூறல் மெலிவுகண்டு செவிலிகூறல் என்பது ஏதிலார் தூதுகண் டழுங்காநின்ற தலைமகளைச் செவிலி யெதிர்ப்பட்டு, அடியிற் கொண்டு முடிகாறுநோக்கி, இவள் பண்டைத் தன்மையளல்லள்; இவ்வாறு மெலிதற்குச் சேயினதாட்சியிற் பட்டனள் போலுமென்றறிகின்றிலே னென்று அவளது மெலிவுகண்டு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.17. வண்டமர் புரிகுழ லொண்டொடி மெலிய
வாடா நின்ற கோடாய் கூறியது.

பண் :

பாடல் எண் : 18

சுணங்குற்ற கொங்கைகள் சூதுற்
றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றங் கொள்ளும் பருவமு
றாள்குறு காவசுரர்
நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம்
பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோயறி வுற்றுரை
யாடுமின் அன்னையரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சுணங்கைப் பொருந்திய கொங்கைகள் சூதின்றன்மையையுற்றன வில்லை; சொல் தெளிவு உற்றில சொற்கள் குதலைமை நீங்கி விளங்குதலையுற்றனவில்லை; குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் நன்மையுந் தீமையு மறியும் பெதும்பைப் பருவத்தை யிப்பொழுதைக்குறாள்; இவளிளமை இதுவாயிருந்தது அன்னையரே; அன்னைமீர் அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடுமின்; இவ்வணங்குற்ற நோயைத் தெளியவறிந்து சொல்லுவீராமின் எ - று.
குறுகா அசுரர் நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் அணங்குற்ற சென்று சேராத வசுரருடைய நிணத்தைக் குற்ற சூலவேலையுடைய சிவனது சிற்றம்பலத்தை நெஞ்சாலுறாதாரைப் போல அணங்குற்றவெனக் கூட்டுக.
இளமைகூறிய வதனாற் பிறிதொன்று சிந்திக்கப்பட்டா ளென்பது கூறினாளாம். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: மருட்கை. பயன்: தலைமகட்குற்ற துணர்த்தல். 283

குறிப்புரை :

18.18 கட்டுவைப்பித்தல் கட்டுவைப்பித்தல் என்பது மெலிவுகண்ட செவிலி, அவளது பருவங்கூறி, இவ்வணங்குற்ற நோயைத் தெரியவறிந்து சொல்லுமி னெனக் கட்டுவித்திக் குரைத்துக் கட்டுவைப்பியா நிற்றல் அதற்குச் செய்யுள்
18.18. மால்கொண்ட கட்டுக்
கால் கொண்டது.

பண் :

பாடல் எண் : 19

மாட்டியன் றேயெம் வயிற்பெரு
நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப தோடிய
வாறிவ ளுள்ளமெல்லாங்
காட்டியன் றேநின்ற தில்லைத்தொல்
லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன் றேர்குழ லார்மொழி
யாதன வாய்திறந்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இவள் உள்ளம் ஓடியவாறு எல்லாம் காட்டி இவளுள்ளமோடியவாறு முழுதையும் புலப்படுத்தி; அன்றே நின்ற தில்லைத் தொல்லோனைக் கல்லாதவர் போல் வாட்டி அன்று தொட்டு நின்ற தில்லைக்க ணுளனாகிய பழையோனைக் குருமுகத்தா லறியாதாரைப்போல வருந்த நம்மை வாட்டி; ஏர் குழலார் அன்று மொழியாதன வாய் திறந்து அலர்தூற்றி அவ்வேர்குழலாராகிய வயலார் அன்று மொழியாத பழியையும் வெளிப்படச்சொல்லி; இனி எம் வயின் பெரு நாண் மாட்டி அன்றே இப்பொழு தெம்மிடத் துண்டாகிய பெரு நாணினை மாள்வித்தல்லவே; மாக் குடிமாசு ஊட்டி அன்றே நிற்பது எம்பெருங்குடியைக் குற்றப்படுத்தியல்லவே இக்கட்டுவித்தி நிற்பது! இனியென்செய்தும்! எ - று.
மூள்வித்தற்கண் மூட்டியென நின்றவாறுபோல மாள்வித்தற் கண் மாட்டியென நின்றது. தள்ளியென்னும் பொருள்பட நின்றதென்பாருமுளர். நிற்ப தென்றதனை முன்னையதனோடுங் கூட்டுக. இவளென்றது கட்டுவித்தியை யென்று, இவணிற்ப தெனக் கூட்டித் தலைமகள் கூற்றாக வுரைப்பினுமமையும். தில்லைக்கணின்ற நாள் இந்நாளென்றுணரலாகாமையின், அன்றே நின்றவென்றார். தெய்வம் - கட்டுக்குரிய தெய்வம். மெய்ப் பாடு: இளிவரல். பயன்: அறத்தொடு நிற்றற் கொருப்படுத்தல். 284

குறிப்புரை :

18.19 கலக்கமுற்றுநிற்றல் கலக்கமுற்று நிற்றல் என்பது செவிலி கட்டுவைப்பியா நிற்ப, இவளுள்ள மோடியவாறு முழுதையும் புலப்படுத்தி, நம்மை வருத்தி, அயலார் அன்று மொழியாத பழியையும் வெளிப்படச் சொல்லி, எம்மிடத்துண்டாகிய நாணினையுந்தள்ளி, எங்குடியி னையுங் குற்றப்படுத்தியல்லவே இக்கட்டுவித்தி நிற்கப் புகுகின்ற தெனத் தோழி கலக்கமுற்று நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.19. தெய்வத்தில் தெரியுமென
எவ்வத்தின் மெலிவுற்றது.

பண் :

பாடல் எண் : 20

குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி
கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா
இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங்
காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்
றோன்று மவன்வடிவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இது குயில் அன்றே என்னலாம் சொல்லி கூறன் இது குயிலோசையாமென்று சொல்லலாகுஞ் சொல்லை யுடையாளது கூற்றையுடையான்; சிற்றம்பலத்தான் சிற்றம்பலத்தின் கண்ணான்; இயல் இது அன்றே என்னல் ஆகா இறை அவனது தன்மை யிதுவாமென்று கூறமுடியாத விறைவன்; விறல் சேய் கடவும் மயில் இது அன்றே அவனுடைய விறலையுடைய சேயூரு மயிலிது வல்லவே; கொடி வாரணம் காண்க அதுவேயுமன்றி, அவன் கொடிக்கணுளதாகிய கோழியையும் எல்லீருங் காண்க; வன் சூர் தடிந்த அயில் இது அன்றே அதுவேயுமன்றி, வலியனாகிய சூரைக்குறைத்த அயில்தானிது வல்லவே? இவையெல்லாஞ் சொல்லுகின்றதென்; நெல்லில் தோன்றும் அவன் வடிவு இப்பரப்பிய நெல்லிக்கண்வந்து தோன்றுகின்றது அவனதுருவமாம்; இது அன்றே இதுவல்லவே? காண்மின் எ - று.
முருகனெனவே, முருகணங்கினாளென்று கூறினாளாம். சூர் மாமரமாய் நின்றமையாற் றடிந்தவென்றாள். மெய்ப்பாடு: பெருமிதம். பயன் தன் கரும முற்றுதல். கட்டுவித்தியை வினவ, அவளறியாதாள் போல இக்கருமமுடித்தற் பொருட்டிவ்வகை சொன்னாள். என்னை? வரைபொருட்குத் தலைமகன் போக, அவன் வரவு நீட்டித்தலான், இவளதாற்றாமையானுண்டாகிய நோயை முருகனால் வந்த தென்றிவள் கூறலாமோ? இஃதங்ஙனமாயிற் குறியென்பதனைத்தும் பொய்யேயாமென்பது கடா. அதற்கு விடை: குறியும் பொய்யன்று: இவளும் பொய் கூறினாளல்லள்: அஃதெங்ஙனமெனின்:- குறிபார்க்கச் சென்றிருக்கும்போழுதே தெய்வ முன்னிலையாகக் கொண்டிருத்தலான், அத்தெய்வத்தின் வெளிப் பாட்டானே தலைமகனுடன் புணர்ச்சியுண்மையை யறிந்தாள்.
இவளிங்ஙன மறிந்தாளென்பதனை நாமறிந்த வாறியாதினா லெனின், இக்கள வொழுக்கந் தெய்வமிடைநிற்பப் பான்மை வழியோடி நடக்கு மொழுக்கமாதலானும், சிற்றம்பலத்தானியல்பு தெரிந்திராதே யென்றிவள் சொல்லுதலானும் அறிந்தாம், இப்படி வருமொழுக்கம் அகத்தமிழொழுக்கமென்பதனை முதுபெண்டீரு மறிந்துபோதுகையானும், இவளுரைக்கின்றுழி முதுபெண்டீரை முகநோக்கியே சிற்றம்பலத்தானியல்பு தெரியாதென வுரைத்தாள், அவரு மக்கருத்தே பற்றியும் அதனையுணர்ந்தார், இக்கருத்தினாலு நாமறியப்பட்டது, இனியயலாரையுஞ் சுற்றத்தாரையும் நீக்கவேண்டுகையாலும், இக்களவொழுக்க முடியுமிடத்து வேலனைக் கூவுகையும், வெறித்தொழில் கொள்கையும், அவ்வெறித்தொழிலை யறத்தொடு நின்று விலக்குகை யும், அகத்தமிழிலக்கண மாகையின், முருகணங் கென்றே கூறப்பட் டது. கூறியவாறாவது: குறிக்கிலக்கணம் நென் மூன்று மிரண்டு மொன்றும் படுகை. அஃதாவது அடியுங் கொடியு முவகையும். இதனில், அடியாவது மயில், கொடியாவது கோழி, உவகையாவது வேல். ஆதலான் முருகணங்கெனவே கூறப் பட்டதெனவறிக. 285

குறிப்புரை :

18.20 கட்டுவித்திகூறல் கட்டுவித்தி கூறல் என்பது தோழி கலக்கமுற்று நில்லா நிற்ப, இருவரையு நன்மையாகக் கூட்டுவித்த தெய்வம் புறத்தார்க் கிவ் வொழுக்கம் புலப்படாமல் தானிட்ட நெல்லின்கண் முருகணங்கு காட்ட, இதனை யெல்லீருங் காண்மின்; இவளுக்கு முருகணங் கொழியப் பிறிதொன்று மில்லையெனக் கட்டுவித்தி நெற்குறி காட்டிக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.20. கட்டு வித்தி
விட்டு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 21

வேலன் புகுந்து வெறியா
டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல்
வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றா
னிருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின்
நிற்பித்த பண்பினுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
காலன் புகுந்து அவிய கழல் வைத்து எழில் தில்லைநின்ற மேலன் தன்னையடைந்த அந்தணனை ஏதஞ் செய்யக்குறித்து அவ்விடத்துப் புகுந்த காலன் வலிகெட ஒரு கழலை வைத்து எழிலை யுடைய தில்லைக்க ணின்ற எல்லாப் பொருட்கு மேலாயுள்ளான்; புகுந்து என்கண் நின்றான் புகுந் தணியனா யென்னிடத்து நின்றவன்; இருந்த வெண்காடு அனைய பாலன் புகுந்து- அவனிருந்த வெண்காட்டை யொக்கும் இப்பிள்ளை இக்குடியிற் பிறந்து; இப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கு வெறியாடு வித்தலாகிய இம்முறைமைக்கணெம்மை நிற்பித்த பண்பால்; வேலன் புகுந்து வெறி ஆடுக வேலனீண்டுப் புகுந்து வெறியாடுவானாக; வெண்மறி அறுக்க பலியாக வெள்ளிய மறியையு மறுக்க எ - று.
வெறியாடுதலேயன்றி இதுவுந் தகாதென்னுங் கருத்தால், மறியறுக்க வெனப் பிரித்துக் கூறினாளாம். கழல் வைத்தென்றாள், எளிதாகச் செய்தலான். பாலனென்னும் பான்மயக்கம் அதிகாரப் புறனடையாற் கொள்க. பரிசினி னிற்பித்தவென்புழி ஐந்தாவது ஏழாவதன் பொருட் கண் வந்து, சிறுபான்மை இன்சாரியை பெற்று நின்றது. ஏழாவதற்கு இன்னென்பதோருருபு புறனடையாற் கொள்ளினுமமையும். மெய்ப் பாடு: இளி வரல். பயன்: தலைமகளது வேறுபாடு நீக்குதல். 286

குறிப்புரை :

18.21 வேலனையழைத்தல் வேலனை யழைத்தல் என்பது கட்டுவித்தி முருகணங்கென்று கூறக்கேட்டு, இப்பால னிக்குடியின்கட்பிறந்து நம்மையிவ்வாறு நிற்பித்த பண்பினுக்கு வேலன் புகுந்து வெறியு மாடுக; அதன்மேன் மறியு மறுக்கவெனத் தாயர் வேலனை யழையா நிற்றல். அதற்குச் செய்யுள்
18.21. வெறியாடிய வேலனைக்கூஉய்
நெறியார்குழலி தாயர்நின்றது.

பண் :

பாடல் எண் : 22

அயர்ந்தும் வெறிமறி ஆவி
செகுத்தும் விளர்ப்பயலார்
பெயர்ந்தும் ஒழியா விடினென்னை
பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான
தம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதி னொழியினென்
ஆதுந் துறைவனுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வெறி அயர்ந்தும் மறி ஆவி செகுத்தும் பெயர்ந்தும் விளர்ப்பு ஒழியாவிடின் வெறியை விரும்பியாடியும் மறியின தாவியைக்கெடுத்தும் பின்னு நிறவேறுபா டொழியா தாயின்; அயலார் பேசுவ என்னை அயலார் கூறுவனவென்னாம்; பிறிதின் ஒழியின் வெறியாட்டாகிய பிறிதினால் இவ்விளர்ப் பொழியுமாயின்; துயர்ந்தும் துறைவனுக்கு என் ஆதும் துயர முற்றும் அத்துறைவனுக்கு நாமென்னாதும்! இருவாற்றானு முயிர்வாழ்த லரிது எ-று.
இருவர் பேர்ந்து உயர்ந்தும் பணிந்தும் உணரானது அம்பலம் உன்னலரின் துயர்ந்தும் யான்றலைவன் யான்றலைவனென்று தம்முண் மாறுபட்ட பிரமனு மாலுமாகிய விருவர் அந்நிலைமை யினின்றும் பெயர்ந்து தழற் பிழம்பாகிய தன்வடிவை யறியலுற்று ஆகாயத்தின் மேற் சென்றுயர்ந்தும் நிலத்தின்கீழ்ப்புக்குத் தாழ்ந்தும் அறியப்படாதவன தம்பலத்தை நினையாதாரைப்போலத் துயரமுற்று மெனக்கூட்டுக.
மறியறுத்தற்கு முன்னுரைத்ததுரைக்க. பெயர்ந்து மென மெலிந்து நின்றது. உணரானென்றது செயப்படுபொருட்கண் வந்தது. தன்னைப்பிரிதல், துன்பமாய் இன்றியமையாத யாம் இத்தன்மைய மாகவும், அளிக்கின்றிலனெனவுட்கொண்டு, அவனை நாம் முன்னம் நெருங்கமுயங்கு மன்பாமாறெல்லாம் இன்றென்னா மென்னுங் கருத்தால், என்னாது மென்றாள். பிறிதுமொழியினென்பது பாட மாயின், வெறியினாற்றணி யாதாதலின் இந்நோய் பிறிதென்று பிறர் மொழியினென்றுரைக்க. மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த மருட்கை. பயன்: தலைமகள் தன்னெஞ்சொடு சொல்லி யாற்றுதல்.287

குறிப்புரை :

18.22 இன்னலெய்தல் இன்னலெய்தல் என்பது வெறியாடுதற்குத் தாயர் வேலனை யழைப்பக் கேட்ட தலைமகள், இருவாற்றானும் நமக்குயிர்வாழு நெறியில்லையெனத் தன்னுள்ளே கூறி, இன்ன லெய்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.22. ஆடிய வெறியிற் கூடுவ தறியாது
நன்னறுங் கோதை இன்ன லெய்தியது.

பண் :

பாடல் எண் : 23

சென்றார் திருத்திய செல்லல்நின்
றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா வழகிதன் றேயிறை
தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றா மிவட்கு மொழிதல்கில்
லேன்மொழி யாதுமுய்யேன்
குன்றார் துறைவர்க் குறுவேன்
உரைப்பனிக் கூர்மறையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இறை தில்லை தொழாரின் நைந்தும் - இறைவனது தில்லையைத் தொழாதாரைப்போல வருந்தியும்; ஒன்றாம் இவட்கும் மொழிதல்கில்லேன் நாணினா லென்னோ டொன்றாயிருக்கும் என்றோழியாகிய விவட்கு மொழிய மாட்டுகிலேன்; மொழியாதும் உய்யேன் மொழியாதொழிந்தாலும் வேறோராற்றா னுயிர்வாழேன், ஆயினும், குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் இனி மணற்குன்றுகளார்ந்த துறையையுடையவர்க்குச் சிறந்தயான்; இக்கூர் மறை உரைப்பன் இம்மிக்க மறையை யிவட்குரைப்பேன்; சென்றார் திருத்திய செல்லல் சிதைப்பர் நின்றார் கள் என்றால் புணர்ந்துபோயினார் மிகவுமுண்டாக்கிய இந் நோயைத்தீர்ப்பர் முருகனாகப் பிறராக இதற்கியாது மியைபிலாதார் சிலராயின்; நன்றா அழகிது அன்றே இது பெரிது மழகிது எ-று.
நன்றாவழகிதன்றேயென்பது குறிப்புநிலை. குன்றார் துறைவர்க் குறுவேனென்றவதனால், நாண்டுறந்தும் மறையுரைத் தற்குக் காரணங் கூறினாளாம். இந்நோயை யேதிலார் சிதைப்ப விடேன், மறையுரைத்தாயினும் வெறிவிலக்குவேனென்னுங் கருத்தால், நன்றா வழகிதன்றே யென்றாள். மயறருமென - வருத்த நமக்குண்டாமென. மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த நகை. பயன்: வெறிவிலக்குதற் கொருப்படுதல். 288

குறிப்புரை :

18.23 வெறிவிலக்குவிக்க நினைதல் வெறிவிலக்குவிக்க நினைதல் என்பது இருவாற்றானு நமக்குயிர்வாழு நெறியில்லை யாதலாற் றுறைவற்குற்ற நோயைப் பிறர் சிதைக்கப்படின், நாண்டுறந்தும் வெறிவிலக்குவிப்ப னெனத் தலைமகள் தோழியைக்கொண்டு வெறிவிலக்குவிக்க நினையாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.23. அயறருவெறியின் மயறருமென
விலக்கலுற்ற குலக்கொடிநினைந்தது.

பண் :

பாடல் எண் : 24

யாயுந் தெறுக அயலவ
ரேசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது
கூறுவ லென்னுடைய
வாயும் மனமும் பிரியா
இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள்
தருவன் சுடர்க்குழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுடர்க் குழை சுடர்க்குழையையுடையாய்; என்னுடைய வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல் தூயன் எனதுவாயையு மனத்தையும் பிரியாத விறைவனது தில்லையை வாழ்த்துவாரைப்போலத் தூயேன்; நினக்குக் கடுஞ் சூள் தருவன் நீதேறாயாயின் நினக்குக்கடிய குளுறவையுந் தருவேன்; அயலவர் ஏசுக அயலாரேசுக; ஊர் நகுக ஊர் நகுவதாக; யாயுந் தெறுக அவற்றின்மேலே யாயும் வெகுள்வாளாக; நீயும்முனிக அதுவேயுமன்றி நீயுமென்னை முனிவாயாக; நிகழ்ந்தது கூறுவல் புகுந்ததனை யான் கூறுவேன்; கேட்பாயாக எ-று.
தூயேனென்றது தீங்குகரந்த வுள்ளத்தேனல்லேனென்றவாறு. தூயனெனக் கென்பது பாடமாயின், எனக்கியான்றூயே னென்றுரைக்க. அறத்தொடுநின்ற - அறத்தொடுகூடிநின்ற. வெரீஇ யுரைத்ததென வியையும். அலங்காரம்: பரியாயம்; பொருண்முரணு மாம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: அறத்தொடு நிற்றல். 289

குறிப்புரை :

18.24 அறத்தொடுநிற்றலையுரைத்தல் அறத்தொடு நிற்றலையுரைத்தல் என்பது நாண்டுறந்தும் மறையுரைத்தும் வெறிவிலக்குவிக்க நினையாநின்ற தலைமகள், மேலறத்தொடு நிற்பாளாக, அயலாரேசுக; ஊர்நகுக; அதுவேயு மன்றி, யாயும்வெகுள்வளாக, அதன்மேல் நீயுமென்னை முனிவாயாக; நீ தேறாயாகிற் சூளுற்றுத்தருவேன்; யான் சொல்லு கின்ற விதனைக் கேட்பாயாக எனத் தோழிக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.24. வெறித்தலை வெரீஇ வெருவரு தோழிக்
கறத்தொடு நின்ற ஆயிழை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 25

வண்டலுற் றேமெங்கண் வந்தொரு
தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதொர்
போழ்துடை யான்புலியூர்க்
கொண்டலுற் றேறுங் கடல்வர
எம்முயிர் கொண்டுதந்து
கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
றானொர் கழலவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வண்டல் உற்றேம் எங்கண் விளையாட்டைப் பொருந்தினேமாகிய வெம்மிடத்து; ஒரு தோன்றல் ஒருதோன்றல்; வரி வளையீர் உண்டல் உற்றேம் என்று வந்து நின்றது ஓர் போழ்து வரிவளையை யுடையீர் நும்வண்டல் மனைக்கு விருந்தாய் நாமுண்ணத் கருதினோமென்று சொல்லிவந்து நின்றதோர் பொழுதின்கண்; உடையான் புலியூர்க் கொண்டல் உற்று ஏறும் கடல் வர உடையானது புலியூர்வரைப்பிற் கீழ்காற்று மிகுதலாற் கரை மேலேவந்தேறுங் கடல் எம்மேல்வர; எம் உயிர் கொண்டு தந்து அதன்கணழுந்தாமல் எம்முயிரைக் கைக்கொண்டு எமக்குத்தந்து; ஒர் கழலவன் கண்டல் உற்று ஏர் நின்ற சேரிச் சென்றான் அவ்வொரு கழலவன் கண்டலாகிய மரமிக்கு அழகுநின்ற அச்சேரியின்கட் சென்றான்; இனித் தக்கது செய்வாயாக எ - று.
வண்டலுற்றேமங்கணென்பது பாடமாயின், அங்க ணென்பதனை ஏழாம் வேற்றுமைப் பொருள்பட நின்றதோ ரிடைச்சொல்லாக வுரைக்க. புலியூர்க் கடலென வியையும். தேரிற் சென்றானென்பது பாடமாயின், நம்மைக் காண்டல் விரும்பித் தேர்மேலேறிச் சென்றானென்றுரைக்க. தேரினென்பது கருவிப் பொருட்கண் வந்த வைந்தாமுருபெனினு மமையும். இதற்குக் காண்ட லுற்றென்பது குறுகி நின்றது. தோன்றல் கழலவன் என்றதனால், அவனது பெருமையும், எம்முயிர் கொண்டு தந்தென்றதனால் மெய்யுறவுங் கூறினாளாம். மெய்ப்பாடும் பயனும் அவை. 290

குறிப்புரை :

18.25 அறத்தொடு நிற்றல் அறத்தொடு நிற்றல் என்பது அறத்தொடு நிற்பாளாக முன்றோற்றுவாய் செய்து, எம்பெருமாற்குப் பழி வருங்கொல் லோவென்னுமையத்தோடு நின்று, யாமுன்பொருநாள் கடற்கரை யிடத்தே வண்டல்செய்து விளையாடாநின்றே மாக அந்நேரத் தொருதோன்றல், நும் வண்டல் மனைக்கு யாம் விருந்தென்று வந்து நின்றபொழுது, நீ பூக்கொய்யச் சிறிது புடைபெயர்ந்தாய்; அந்நிலைமைக்கட் கீழ்காற்று மிகுதலாற் கரைமேலேறுங்கடல் மேல்வந்துற்றது; உற, யான் றோழியோ தோழியோ வென்று நின்னை விளித்தேன்; அதுகண்டிரங்கி, அவனருளொடுவந்து தன் கையைத் தந்தான்; யானு மயக்கத்தாலே யதனை நின்கையென்று தொட்டேன்; அவனும் பிறிதொன்றுஞ் சிந்தியாது, என்னுயிர் கொண்டுதந்து, என்னைக் கரைக்கணுய்த்துப் போயினான்; அன்று என்னாணினால் நினக்கதனைச் சொல்லமாட்டிற்றிலேன்; இன்றிவ்வாறாயினபின் இது கூறினேன்; இனி நினக்கடுப்பது செய்வாயாகவெனத் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நில்லா நிற்றல். அதற்குச் செய்யுள்
18.25. செய்த வெறியி னெய்துவ தறியாது
நிறத்தொடித் தோழிக் கறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 26

குடிக்கலர் கூறினுங் கூறா
வியன்தில்லைக் கூத்தனதாள்
முடிக்கல ராக்குமொய் பூந்துறை
வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
சென்றுநம் யாயறியும்
படிக்கல ராமிவை யென்நாம்
மறைக்கும் பரிசுகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முரி புருவ வடிக்கு அலர் வேல் கண்ணி முரிந்த புருவத்தை யுடைய வடுவகிரிற் பரந்த வேல்போலுங் கண்ணை யுடையாய்; கூறா வியன் தில்லைக் கூத்தன தாள் கூறலாகாத அகன்ற தில்லையிற் கூத்தனுடைய தாள்களை; முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூந் துறைவற்கு வந்தன தன்முடிக்குப் பூவாக்கும் மொய்த்த பூவையுடைய துறையை யுடையவனுக்கு வந்த பழிகளை; சென்று நம் யாய் அறியும் அவைபோய்ப் பரத்தலான் நம்முடைய யாயுமறியும்; படிக்கு அலர் ஆம் அதுவேயு மன்றி, உலகத்திற் கெல்லா மலராம்; அதனான், குடிக்கு அலர் கூறினும் நங்குடிக் கலர் கூறினேமாயினும்; இவை நாம் மறைக்கும் பரிசுகள் என் இவற்றை நாம் மறைத்துச் சொல்லும் பரிசுகளென்னோ! எ - று.
கூறாத்தாளெனவியையும். வடுவகிரோடு பிறபண்பாலொக்கு மாயினும், பெருமையானொவ்வாதென்னுங் கருத்தான், வடிக்கலர் கண்ணென்றாள். வடிக்கென்னு நான்காவது ஐந்தாவதன் பொருட் கண் வந்தது. வடித்தலான் விளங்கும் வேலெனினுமமையும். அறத்தொடு நிற்குமிடத்து எம்பெருமாற்குப் பழிபடக் கூறுமோ வென்றையுறுந் தலைமகட்கு, நங்குடிக்கலர் கூறினுந் துறைவற்குப் பழிபடக் கூறே னென்பதுபடக் கூறித்தோழியறத்தொடு நிற்றலை யுடம்படுவித்த வாறு. கூறாவென்பதற்குக் கூத்தனதாள் தனக்குக் கூறாகவென்றும், யாயறியும்படிக்கலராமென்பதற்கு யாயுமறியும் படியாகச் சென்றலரா மென்று முரைப்பாருமுளர்.மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலை மகளை யாற்றுவித்தல்.291

குறிப்புரை :

18.26 ஐயந்தீரக்கூறல் ஐயந்தீரக்கூறல் என்பது எம்பெருமாற்குப் பழிவருங் கொல்லோவென் றையுற்று அறத்தொடு நின்ற தலைமகளது குறிப்பறிந்த தோழி, அவளையந்தீர, நங்குடிக்குப் பழிவரினும், அவற்குப் பழிவாராமல் மறைத்துக்கூறுமா றென்னோவெனத் தான் றலைமகளைப் பாதுகாத்தல் தோன்றக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.26. விலங்குதல் விரும்பு மேதகு தோழி
அலங்கற் குழலிக் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 27

விதியுடை யாருண்க வேரி
விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினிற்
பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
வேறு கருதுநின்னின்
மதியுடை யார்தெய்வ மேயில்லை
கொல்இனி வையகத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விதியுடையார் உண்க வேரி இவ்வெறியாட்டு விழவின் வேரியுண்ண விதியுடையவர்கள் வேரியுண்ணவமையும்; விலக்கலம் யாமதனைவிலக்கேம், அதுகிடக்க, அம்பலத்துப் பதி உடையான் பரங்குன்றினின் பாய் புனல் யாம் ஒழுக அம்பலமாகிய விருப்பிடத்தையுடையானது பரங்குன்றி னிடத்துப் பரந்த புனலோடே யாமொழுக; கதி உடையான் கதிர்த் தோள் நிற்க எடுத்தற்பொருட்டு ஆண்டுவரவையுடையவனாயவனுடைய ஒளியையுடைய தோள் கணிற்க; வேறு கருது நின்னின் மதி உடையார் இந்நோய் தீர்த்தற்கு வேறோருபாயத்தைக் கருது நின்னைப் போல் அறிவுடையார்; தெய்வமே தெய்வமே; வையகத்து இனி இல்லை கொல் இவ் வுலக்துஇப்போழ் தில்லை போலும் எ - று.
இவ்வாறு கூறவே, நீ கூறியதென்னென்று கேட்ப அறத்தொடு நிற்பாளாவது பயன். அம்பலத்தென அத்துச்சாரியை அல்வழிக்கண் வந்தது. ஓரிடத்தா னொதுக்கப்படாமையிற் பதியுடையவனென்று சொல்லப்படாதவன் அம்பலத்தின்கண் வந்து பதியுடையனாயினா னென்பதுபட வுரைப்பினுமமையும். பாங்குன்றினினென்பதற்குப் `பாலன் புகுந்திப் பரிசினி னிற்பித்த` (தி.8 கோவை பா.286) என்றதற் குரைத்ததுரைக்க. ஒழுக வென்னும் வினையெச்சம் கதியையுடையா னென்னு மாக்கத்தையுட்கொண்ட வினைக்குறிப்புப் பெயரோடு முடியும். கதி ஆண்டுச்சென்ற செலவு. கதிர்த் தோணிற்கவென்பதற்கு எடுத்தற் பொருட்டு அவன்றோள் வந்து நிற்க வென்று பொருளுரைத்து, அவ்வெச்சத்திற்கு முடிபாக்கினுமமையும். மதியுடையாரில்லைகொல் லென்பது குறிப்பு நிலை, அறத்தொடு நின்ற திறத்தினில் அறத்தோடு நின்ற தன்மைத்தாக. பிறிது புனலிடையவன் வந்துதவினவுதவி. மெய்ப்பாடு: பெருமிதத்தைச் சார்ந்த நகை. பயன்: குறிப்பினால் வெறிவிலக்குதல். 292

குறிப்புரை :

18.27 வெறிவிலக்கல் வெறிவிலக்கல் என்பது தலைமகளை ஐயந்தீர்த்து வெறிக் களத்தே சென்று, வேலனை நோக்கி, புனலிடைவீழ்ந்து கெடப் புக வந்தெடுத்துய்த்த கதிர்த்தோணிற்க, இந்நோய் தீர்த்தற்குப் பிறிதோருபாயத்தைக் கருது நின்னைப்போல, இவ்வுலகத்தின் கண் அறிவுடையாரில்லையென, மேலறத்தொடு நிற்பாளாகத் தோழி வெறி விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
18.27. அறத்தொடு நின்ற திறத்தினிற் பாங்கி
வெறிவி லக்கிப் பிறிது ரைத்தது.

பண் :

பாடல் எண் : 28

மனக்களி யாய்இன் றியான்மகிழ்
தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத்
தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தா
ரொருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச்
சாரற் பொருப்பிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மனக் களியாய் இன்று யான் மகிழ் தூங்க உள்ளக்களிப்புண்டாய் இன்றியான் மகிழ்தூங்கும் வண்ணம்; தன் வார்கழல்கள் எனக்கு அளியாநிற்கும் அம்பலத்தோன் இருந் தண்கயிலை எனக்குத் தன்னுடைய நீண்டகழலையுடைய திருவடிகளை யளியாநிற்கும் அம்பலத்தானது பெரிதாகிய குளிர்ந்த கயிலைக்கண்; புனச் செவ் வாய்ப் பசிய கிளி யாம் கடியும் வரைச் சாரல் பொருப்பிடத்து எம்புனத்தின்கண்வருஞ் செவ்வாயை யுடைய பசியகிளிகளை யாங்கடியும் வரையடியினுண்டாகிய பொருப் பிடத்தின்கண்வந்து; ஒருவர் ஒருவர்; சினக்களி யானை கடிந்தார் எம்மேல்வருஞ் சினத்தையுடைய களியானையை மாற்றி ளார்; இனியடுப்பது செய்வாயாக எ - று.
கயிலையென்றது கயிலையையணைந்த விடத்தை. கடியும் பொருப்பென வியையும். வரை உயர்ந்தவரை. பொருப்பு பக்க மலை. கிளிகடியும் பருவமென்ற தனாற் கற்பினோடு மாறு கொள்ளாமை முதலாயின கூறினாளாம். மெய்ப்பாடு: அது. பயன்: வெளிப்படையாலறத்தொடு நிற்றல். 293

குறிப்புரை :

18.28 செவிலிக்குத் தோழி யறத்தொடுநிற்றல் செவிலிக்குத் தோழி யறத்தொடு நிற்றல் என்பது வெறிவிலக்கி நிற்ப, நீ வெறிவிலக்குதற்குக் காரணமென் னோவென்று கேட்ட செவிலிக்கு, நீ போய்ப் புனங்காக்கச் சொல்ல, யாங்கள் போய்த்தினைக்கிளி கடியாநின்றோம்; அவ்விடத்தொரு யானைவந்து நின்மகளை யேதஞ்செய்யப் புக்கது; அதுகண்டு அருளுடையானொருவன் ஓடி வந்தணைத்துப் பிறிதொன்றும் சிந்தியாமல் யானையைக் கடிந்து அவளதுயிர்கொடுத்துப் போயினான்; அறியாப்பருவத்து நிகழ்ந்ததனை இன்றறியும் பருவ மாதலான். ``உற்றார்க்கு குரியர் பொற்றொடி மகளிர்`` என்பதனை யுட்கொண்டு, இவ்வாறுண் மெலியாநின்றாள்; இனியடுப்பது செய்வாயாகவெனத் தோழி அறத்தொடு நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.28. சிறப்புடைச் செவிலிக்
கறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 29

இளையா ளிவளையென் சொல்லிப்
பரவுது மீரெயிறு
முளையா அளவின் முதுக்குறைந்
தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச்
சிற்றம் பலத்துமன்னன்
திளையா வருமரு விக்கயி
லைப்பயில் செல்வியையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இமையோர் முடி சாய்த்து இமையோர் தம்முடியைச் சாய்த்து; வளையா வழுத்தாவரு திருச்சிற்றம்பலத்து மன்னன் வணங்கியும் வாழ்த்தியும் வருந் திருச்சிற்றம்பலத்தின்கண் உளனாகிய மன்னனது; திளையாவரும் அருவிக்கயிலைப் பயில் செல்வியை திளைத்துவரு மருவியையுடைய கயிலைக்கட் பயிலுந் திருவாட்டியை; இளையாள் இவளை இளையாளாகிய விவளை; என் சொல்லிப் பரவுதும் என்சொல்லிப் புகழ்வோம்; ஈர் எயிறு முளையா அளவின் முதுக்குறைந்தாள் முன்னெழு மிரண்டெயிறு முளையாத விளமைக்கண் அறிவுமுதிர்ந்தாள் எ - று.
திளைத்தல் ஈண்டிடைவிடாது அவ்விடத்தோடு பயிறல். கற்பினின்வழாமை நிற்பித் தெடுத்தோள் கற்பினின் வழுவாமலறிவு கொளுத்தி வளர்த்தவள். மெய்ப்பாடு: உவகை. பயன்: நற்றாய்க்கறத்தொடு நிற்றல். 294

குறிப்புரை :

18.29 நற்றாய்க்குச் செவிலி யறத்தொடு நிற்றல் நற்றாய்க்குச் செவிலி யறத்தொடு நிற்றல் என்பது தோழி யறத்தொடு நிற்பக்கேட்ட செவிலி, இளையளாகிய இல்வாழ்க் கைச் செல்வத்தையுடைய விவளை என்சொல்லிப் புகழுவோம்? முன்னெழுமிரண்டெயிறு முளையாத விளமைப்பருவத்தே அறிவு முதிர்ந்தாளெனத் தலைமகளது கற்புமிகுதி தோன்ற நற்றாய்க் கறத்தொடு நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.29. கற்பினின் வழாமை நிற்பித் தெடுத்தோள்
குலக்கொடி தாயர்க் கறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 30

கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை
யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளின மார்ப்பப் பொருதிரை
யார்ப்பப் புலவர்கடம்
வள்ளின மார்ப்ப மதுகர
மார்ப்ப வலம்புரியின்
வெள்ளின மார்ப்ப வரும்பெருந்
தேரின்று மெல்லியலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மெல்லியல் மெல்லியால்; கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லைக் கார்க் கடல் வாய் கள்ளை வண்டினங்களார்த்துண்ணும் வளவிய கொன்றைப் பூவையுடையவனது தில்லையை யணைந்த கரியகட லிடத்து; புள் இனம் ஆர்ப்ப ஆண்டுப் படியும் புள்ளினங்களார்ப்ப; பொருதிரை ஆர்ப்ப கரையைப்பொருந் திரைகளார்ப்ப; புலவர்கள் தம் வள் இனம் ஆர்ப்ப அவ்வாரவாரத்தோடு மங்கலங்கூறும் புலவர்க டமது வள்ளிய வினமார்ப்ப; மதுகரம் ஆர்ப்ப நறுவிரையால் வண்டுக ளார்ப்ப; வலம்புரியின் வெள் இனம் ஆர்ப்ப வலம்புரியினது வெள்ளிய வினமார்ப்ப; இன்று பெருந்தேர் வரும் இன்று நங்காதலர் பெருந்தேர் வாராநின்றது எ - று.
கரந்தவொழுக்கத்து மணியொலியவித்து வந்ததேர், வரைந் தெய்த இவ்வரவத்தோடு வருமென மகிழ்ந்து கூறியவாறு. கள் என்பது வண்டினுளொரு சாதியென்பாரு முளர். புள்ளினத்தையும் பொருதிரையையும் அவன் வரவிற்கு உவந்தார்ப்பனபோலக் கூறினாள். இதனை மிகைமொழிப்பாற் படுத்திக் கொள்க. முன்னர்த் தலைமகன் பிரிந்தகாலத்துத் தலைமகளதாற்றாமையைத் தாமாற்றுவிக்க மாட்டாது பொறுத்துக் கண்டிருந்த புள்ளினமுங் கடலும் அவனது தேர்வரவுகண்டு, இனிப்பிரிவும் பிரிவாற்றாமையு மில்லையென்று மகிழ்வுற்றார்த்தனவென்றறிக. அணிதினின் வரும் - அணித்தாகவரும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல்; வரைவுமலிந்தமை யுணர்த்தலுமாம்.295

குறிப்புரை :

18.30 தேர்வரவுகூறல் தேர்வரவு கூறல் என்பது நற்றாய்க்குச் செவிலி யறத்தொடு நில்லாநிற்ப, அந்நிலைமைக்கட் டலைமகனது தேரொலி கேட்ட தோழி, உவகையோடு சென்று, தலைமகளுக்கு அதன் வரவெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.30. மணிநெடுந் தேரோன் அணிதினின் வருமென
யாழியன் மொழிக்குத் தோழி சொல்லியது

பண் :

பாடல் எண் : 31

பூரண பொற்குடம் வைக்க
மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
றேங்கும் மணமுரசே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தொல் மால் அயற்குங் காரணன் பழையராகிய அரியயனுக்குங் காரணனாயுள்ளான்; ஏர் அணி கண் நுதலோன் அழகுண்டாகிய கண்ணையுடைய நுதலையுடையான்; கடல் தில்லை அன்ன அவனது கடலையடைந்த தில்லையை யொக்கும்; வார் அணவும் முலை மன்றல் என்று மணமுரசு ஏங்கும் வாராற்கட்டப்படு மளவைச் சென்றணவும் முலையையுடையாளது மணமென்று மணமுர சேங்காநின்றது. அதனால், பூரண பொற் குடம் வைக்க வாயில்கடோறும் நீரானிறைக்கப்பட்ட பொற்குடத்தை வைக்க; மணி முத்தம் பொன் பொதிந்த தோரணம் நீடுக மணியு முத்தும் பொன்னின்கணழுத்திய தோரணம் எங்குமோங்குவதாக; தூரியம் ஆர்க்க தூரியங்கணின் றார்ப்பனவாக எ-று.
வாரணவுமுலை யென்பதற்கு வாரைப்பொருந்து முலை யெனினுமமையும். மெய்ப் பாடு: உவகை. பயன்: நகரி யலங்கரித்தல்.296

குறிப்புரை :

18.31 மணமுரசுகேட்டு மகிழ்ந்துரைத்தல் மணமுரசுகேட்டு மகிழ்ந்துரைத்தல் என்பது தோழி தலைமகளுக்குத் தேர்வரவு கூறாநின்ற அந்நிலைமைக்கண் மணமுரசு கேட்டு மனையிலுள்ளார், இஃதிவளை நோக்கி யொலியாநின்றது மணமுரசென வுட்கொண்டு யாம் பூரண பொற்குடந் தோரண முதலாயினவற்றான் மனையை யலங்கரிப் போமென மகிழ்வொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.31. நிலங்காவலர் நீண்மணத்தின்
நலங்கண்டவர் நயந்துரைத்தது.

பண் :

பாடல் எண் : 32

அடற்களி யாவர்க்கு மன்பர்க்
களிப்பவன் துன்பவின்பம்
படக்களி யாவண் டறைபொழிற்
றில்லைப் பரமன்வெற்பிற்
கடக்களி யானை கடிந்தவர்க்
கோவன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநக
ரார்க்கும் வியன்முரசே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விடக் களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசு மிகவுங் களிப்புண்டாய நமது சிறந்த வில்லின்கண் முழங்காநின்ற இப்பெரியமுரசம்; வெற்பின் கடக் களியானை கடிந்தவர்க்கோ வெற்பின்கண் மதத்தையுடைய களியானையை நம்மேல் வராமல் மாற்றினவர்க்கோ; அன்றி நின்றவர்க்கோ அன்றியாது மியைபில்லாதவர்க்கோ? அறிகின்றிலேன் எ - று.
துன்ப இன்பம் பட அடல் களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன் பிறவியான் வருந் துன்பமுமின்பமுங் கெட இயல்பாகிய பேரின்பத்தை யாவராயினு மன்பராயினார்க்கு வரையாது கொடுப்போன்; களியா வண்டு அறை பொழில் தில்லைப் பரமன் களித்து வண்டுக ளொலிக்கும் பொழிலையுடைய தில்லைக்கணுளனாகிய பரமன்; வெற்பின் அவனது வெற்பினெனக் கூட்டுக.
அடற்களி அடுதல் செய்யாத பேரின்பம். அடக்களி யென்பது பாடமாயின், பேரின்பம் யானென்னு முணர்வினைக் கெடுப்ப வென்றுரைக்க. மெய்ப்பாடு: அச்சத்தைச்சார்ந்த மருட்கை. பயன்: ஐயந்தீர்தல். 297

குறிப்புரை :

18.32 ஐயுற்றுக்கலங்கல் ஐயுற்றுக் கலங்கல் என்பது மணமுரசு கேட்டவள் மகிழ் வொடு நின்று மனையை யலங்கரியா நிற்ப, மிகவுங் களிப்பை யுடைத்தாய நமது சிறந்த நகரின்கண் முழங்காநின்ற இப்பெரிய முரசம், யான் எவற்கோ அறிகின்றிலேனெனத் தலைமகள் கலக்க முற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
18.32. நல்லவர்முரசுமற் றல்லவர்முரசெனத்
தெரிவரிதென அரிவைகலங்கியது.

பண் :

பாடல் எண் : 33

என்கடைக் கண்ணினும் யான்பிற
வேத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை
கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து
தோன்றும் முழுநிதியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கடை என் கண்ணினும் கடையாகிய வென்னிடத்தும்; யான் பிற ஏத்தா வகை இரங்கித் தன் கடைக்கண் வைத்த யான் பிறதெய்வங்களை யேத்தாதவண்ண மிரங்கித் தனது கடைக்கண்ணைவைத்த; தண் தில்லைச் சங்கரன் தாழ்கயிலை குளிர்ந்த தில்லைக்கணுளனாகிய சங்கரன் மேவுங்கயிலை யிடத்து; கொன்கடைக்கண் தரும் யானை கடிந்தார் தமக்கொரு பயன் கருதாது நமக்கிறுதியைப்பயக்கும் யானையை யன்றுகடிந்தவர்; கொணர்ந்து இறுத்தார் கொணர்ந்து விட்டார் விட; கடைக்கண் முன்வந்து தோன்றும் முழுநிதி நங்கடைமுன் வந்து தோன்றும் குறைவில்லாத நிதி; இது காண் இதனைக்காண்பாயாக எ - று.
என்கடைக்கண்ணினு மென்பதற்கு மொழிமாற்றாது எனது கடையாகிய நிலைமைக்கண்ணுமென் றுரைப்பினுமமையும். கண்ணகன்ஞாலமென்புழிப்போலக் கண்ணென்பது ஈண்டுப் பெயராகலின் ஏழனுருபு விரித்துரைக்க. கடைக்கண்ணினு மென்னும் வேற்றுமைச்சொல்லும், ஏத்தாவகையென்னும் வினையெச்சமுங் கடைக்கண் வைத்த வென்னும் வினைகொண்டன. கடைக்க ணென்பதனை முடிவாக்கி, என் முடிவுகாலத்தும் பிறவேத்தா வகையென்றுரைப்பாருமுளர். கொன்கடைக் கண்டரும்யானை யென்பதற்கு, அச்சத்தைக் கடைக்கண்டரும் யானையென்றுரைப்பாரு முளர். வண்புகழ் அறத்தொடுநின்று கற்புக்காத்தலான் வந்த புகழ். மெய்ப்பாடு: உவகை. பயன்: ஐயந்தீர்தல். 298

குறிப்புரை :

18.33 நிதிவரவு கூறாநிற்றல் நிதிவரவு கூறாநிற்றல் என்பது முரசொலிகேட்டு ஐயுற்றுக் கலங்காநின்ற தலைமகளுக்கு, நமர் வேண்டினபடியே அருங்கலங் கொடுத்து நின்னை வரைந்துகொள்வாராக, யானைகடிந்தார் நமது கடைமுன் கொணர்ந்திறுத்தார் குறைவில்லாத நிதி; இதனை நீ காண்பாயாகவெனத் தோழி மகிழ்தருமனத்தொடு நின்று நிதி வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.33. மகிழ்தரு மனத்தொடு வண்புகழ்த் தோழி
திகழ்நிதி மடந்தைக்குத் தெரிய வுரைத்தது.
சிற்பி