திருத்துறையூர்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மலையாரரு வித்திரள்
மாமணி யுந்திக்
குலையாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கலையார் அல்குற் கன்னியர்
ஆடுந் துறையூர்த்
தலைவாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

மலையிற் பொருந்திய அருவிக் கூட்டம் , பெரிய மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரை நிறைய எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண் , நல்லஆடையை அணிந்த அல்குலையுடைய கன்னிப்பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` வேறொன்றையும் வேண்டேன் ` என்பது , பிரிநிலை எச்சம் , குலை - கரை , துறையூர் என்றதன் காரணம் விரிப்பார் , பல விடத்து இவ்வாறு ஓதினார் . ` எற்றி ` என்றது , ` எற்றுதலையுடையது ` என்னும் பொருளது . அன்றி , எற்றிய என்பதன் அகரந்தொகுத்தலாயிற்று எனலுமாம் . இது , மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் ஒக்கும் . இள மகளிர்தாமும் நீராட்டு நெறியிற் பிறழாமையுணர்த்துவார் . ` கலை யாரல்குற் கன்னியர் ` என்று அருளிச்செய்தார் . அதனால் , இது , பின்னர்க் கூறப்படும் மகளிர்க்கும் பொருந்துவதாயிற்று . ` உன்னை ` என்றது , வேற்றுமை மயக்கம் . ` கொள் ` என்பது , தற்பொருட்டுப் பொருண்மை விகுதி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

மத்தம்மத யானையின்
வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப்
பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

மயக்கங்கொண்ட மதயானைகளின் கொம்புகளைத் தள்ளிக்கொண்டுவந்து அவற்றில் உள்ள முத்துக்களைக் கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ள , அடியவர் பலகாலும் வந்து ஏத்தி வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

மத்தம் , உன்மத்தம் . இது மதத்தால் ஆயது . மதம் , மதநீர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கந்தங்கமழ் காரகில்
சந்தன முந்திச்
செந்தண்புனல் வந்திழி
பெண்ணை வடபால்
மந்தீபல மாநடம்
ஆடுந் துறையூர்
எந்தாய் உனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

நறுமணம் கமழ்கின்ற கரிய அகில்மரங்களையும் , சந்தன மரங்களையும் தள்ளிக்கொண்டு , சிவந்த குளிர்ந்த நீர் இடையறாது வந்து பாய்கின்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண்ணுள்ள , பெண் குரங்குகள் பல வகையான நடனங்களை ஆடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள எம்தந்தையே , உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

நீர்க்குச் செந்நிறம் நிலத்தியல்பால் ஆயிற்று என்க . ` ஆடல் மகளிர் போல ஆடும் ` என்பார் , ` மந்தி ஆடும் ` என்று அருளிச் செய்தார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

அரும்பார்ந்தன மல்லிகை
சண்பகஞ் சாடிச்
சுரும்பாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கரும்பார்மொழிக் கன்னியர்
ஆடுந் துறையூர்
விரும்பாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

அரும்புகள் நிறைந்தனவாகிய ` மல்லிகை , சண்பகம் ` என்னும் மரங்களை முரித்து , அவற்றில் உள்ள வண்டுகள் நிறையக்கிடக்கக் கொணர்ந்து கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண் , கரும்புபோலும் மொழியினையுடைய கன்னிப் பெண்கள் மூழ்கி விளையாடும் ஒருதுறையைச் சார்ந்த திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள என் விருப்பத்திற்குரியவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` மல்லிகை ` என்றது மரமல்லிகையை , முரிக்கப்படுவது அதுவே யாகலின் , ` நம்பன் ` என்பதனை , ` விரும்பன் ` என்றருளினார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பாடார்ந்தன மாவும்
பலாக்களுஞ் சாடி
நாடாரவந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
மாடார்ந்தன மாளிகை
சூழுந் துறையூர்
வேடாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

பக்கங்களில் நிறைந்துள்ளனவாகிய மா மரங்களையும் , பலா மரங்களையும் முரித்துக் கொணர்ந்து நாடெங்கும் நிறையும் படி எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் உள்ள , செல்வம் நிறைந்தனவாகிய மாளிகைகள் சூழ்ந்த துறையூரில் எழுந்தருளியுள்ள , பல அருட்கோலங்களை யுடையவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

காலத்தை யுடையவனை , ` காலன் ` என்றல்போல , வேடத்தை யுடைவனை , ` வேடன் ` என்று அருளினார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மட்டார்மலர்க் கொன்றையும்
வன்னியுஞ் சாடி
மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி
ஓவாத் துறையூர்ச்
சிட்டாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

தேன் நிறைந்த மலர்களை யுடையகொன்றை மரம் , வன்னி மரம் இவைகளை முரித்து , அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் , வாச்சிய முழக்கமும் , ஆடலும் , பாடலும் நீங்காது கொண்டு விளங்குகின்ற திருத் துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே , உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` கொட்டு ` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் , அதன் காரியமாகிய ஓசையின் மேல் நின்றது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

மாதார்மயிற் பீலியும்
வெண்ணுரை யுந்தித்
தாதாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
போதார்ந்தன பொய்கைகள்
சூழுந் துறையூர்
நாதாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

அழகு நிறைந்தனவான மயிற்பீலியையும் , வெள்ளிய நுரைகளையும் தள்ளி , பல மலர்களை மகரந்தத்தோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் , மலர்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழப் பெற்று விளங்கும் திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` மாது ஆர் ` என்றதற்கு , ` விருப்பம் நிரம்ப உண்டாதற்கு உரிய ` என்று உரைத்தலும் ஆம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கொய்யார்மலர்க் கோங்கொடு
வேங்கையுஞ் சாடிச்
செய்யாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
மையார்தடங் கண்ணியர்
ஆடுந் துறையூர்
ஐயாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

கொய்தல் பொருந்திய மலரையுடைய கோங்க மரம் , வேங்கை மரம் இவைகளை முரித்துக் கொணர்ந்து , வயல் நிறைய எறிவதாகிய , ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் , மை பொருந்திய கண்களையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` கொய்யா மலர் ` எனவும் பாடம் ஓதுவர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

விண்ணார்ந்தன மேகங்கள்
நின்று பொழிய
மண்ணாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
பண்ணார்மொழிப் பாவையர்
ஆடுந் துறையூர்
அண்ணாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

வானத்தில் நிறைந்தனவாகிய மேகங்கள் நிலைத்து நின்று பொழிவதனால் , மலைக்கண் உள்ள பொருள்களை வாரிக் கொணர்ந்து நிலம் நிறைய எறிவதாகிய , ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் , பண்போலும் மொழியினையுடைய மகளிர் மூழ்கி யாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

மேகம் நின்று பொழிதல் மலையிடத்தாகலின் , அந் நீரால் கொணரப்படுவன மலைபடு பொருள்களாயின . அதனைச் சொல்லெச்சமாக வருவிக்க . ` அண்ணல் ` என்பதன் விளியாகிய ` அண்ணால் ` என்பது , ` அண்ணா ` என மருவிற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மாவாய்ப்பிளந் தானும்
மலர்மிசை யானும்
ஆவாஅவர் தேடித்
திரிந்தல மந்தார்
பூவார்ந்தன பொய்கைகள்
சூழுந் துறையூர்த்
தேவாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

பூக்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழ்ந்துள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள பெருமானே . ` கேசி ` என்னும் அசுரன் கொண்ட வஞ்சனை உருவமாகிய குதிரையின் வாயைக் கிழித்த திருமாலும் , மலர்மிசையோனாகிய பிரமனும் ஆகிய அவ்விருவரும் உன்னை வழிபட்டுத் தவநெறியை வேண்டிக் கொள்ள மாட்டாது , அந்தோ ! உன் அளவினை ஆராய்ந்து தேடியலைந்தனர் ; ஆயினும் , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` அலமந்தார் ` என்பதன் பின் , ` ஆயினும் ` என்பது எஞ்சி நின்றது . ` தவநெறியை உன்பால் வேண்டிக் கொள்ளுந் தவமுடை யனாயினேன் ` என்னும் மகிழ்ச்சி மீதூர்வால் , காரணக் கடவுளரும் , அது பெற்றிலாமையை எடுத்தோதியருளினார் . ` அவர் ` என்றது , உம்மை யெண்ணின் தொகைப் பொருட்டாய் நின்றது . ` மாவாய் பிளந்துகந்த மாலும் ` ( தி . 6 ப .82 பா .6.) என , அப்பர் சுவாமிகளும் மாவாய் பிளந்தமையை அருளினமை காண்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

செய்யார்கம லம்மலர்
நாவலூர் மன்னன்
கையால்தொழு தேத்தப்
படுந்துறை யூர்மேல்
பொய்யாத்தமிழ் ஊரன்
உரைத்தன வல்லார்
மெய்யேபெறு வார்கள்
தவநெறி தானே.

பொழிப்புரை :

வயல்கள் நிறையத் தாமரை மலரும் திரு நாவலூருக்குத் தலைவனும் , மெய்ம்மையையே கூறும் தமிழ்ப் பாடலைப் பாடுபவனும் ஆகிய நம்பியாரூரன் , யாவராலும் கையால் கும்பிட்டுத் துதிக்கப்படும் திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது பாடியனவாகிய இப் பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர் .

குறிப்புரை :

` ஆர் ` என்னும் முதனிலை , ` ஆர ` என வினையெச்சப் பொருள் பயந்தது . ` செய்தக்கவல்ல செயக்கெடும் ` என்பதிற் போல ( குறள் -466.).
சிற்பி