பொது


பண் :

பாடல் எண் : 1

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

பொழிப்புரை :

இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .

குறிப்புரை :

மாசில் - சுர இலக்கணங்களில் சிறிதும் வழுவாது இலக்கணம் முழுதும் நிரம்பச் சொல்லைமிழற்றும் இயல்புடைய . மாலைமதியம் - மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி . பௌர்ணிமை மதியைக் குறித்தது . வீசுதென்றல் - மெல்லிதாய் வீசுகின்றதென்றல் ; வீங்கு - பெருகிய . இளவேனில் - சித்திரை , வைகாசி மாதங்கள் . மூசு வண்டு - ( மாலைநேரத்தே மலரும் நீர்ப்பூக்களிடத்தே மொய்க்கின்ற ) வண்டுகள் . அறை - ஒலிக்கின்ற . பொய்கை - அகழ்வாரின்றித் தானே தோன்றிய நீர்நிலை . ஈசன் எந்தை , இருபெயரொட்டு . தலைவனாகிய என் தந்தை . இணையடி - இரண்டு திருவடிகள் . திருவடிநீழல் ஐம்புலன்களுக்கும் விருந்துதரும் இயற்கையின்பத்தை ஒத்தது என்றார் ; வீணை , செவி . மதியம் , கண்கள் . தென்றல் , மூக்கு . வண்டு அறை பொய்கை , வாய் . வேனில் மெய் . இவ்வாறு முறையே ஐந்து புலன்களுக்கும் இன்பந்தருவனவாய இயற்கைச் சூழலை ஒத்து நீற்றறையில் திருவடி நீழலை எண்ணிய அப்பர்சுவாமிகளுக்குத் தண்மையைத் தந்தது ஆதலின் திருவடிநீழல் அளிக்கும் இன்பத்தோடு ஒப்பிட்டார் .

பண் :

பாடல் எண் : 2

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

பொழிப்புரை :

ஞானமும் , கல்வியும் , நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே ; நா கூறி வழிபடுவதும் அதனையே ; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும் .

குறிப்புரை :

ஞானமும் - பரஞானம் . கல்வி - அபரஞானம் . ஞானமும் கல்வியும் - கல்வியால் விளையும் அறிவும் கல்வியும் . நானறிவிச்சை - நான் அறிந்தனவாய மந்திரம் அல்லது கலையுணர்வு . நன்னெறி - ஞானம் , வீடுபேறடையும் வழி .

பண் :

பாடல் எண் : 3

ஆளா காரா ளானாரை யடைந் துய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.

பொழிப்புரை :

இறைவனுக்கு ஆளாகமாட்டார் ; அவ்வாறு ஆளாகிய மெய்யடியார்களைச் சார்ந்து உய்யவும் மாட்டார் . மீளா ஆளாய் மெய்ம்மையுள் நிற்கும் ஆற்றல் இல்லார் ; அத்தகைய இழிந்தவர் செவிகள் துளையிட்டுப் பயன்படுத்தவியலாத செவியோ ? அந்தோ ! வீணே இறந்து மண்ணாகி ஒழிவர் !

குறிப்புரை :

ஆளாகார் - தாம் அடியவராக மாட்டார் .` ஆளா னார்க்கு . எனவும் பாடம் . ஆளானாரை - இறைவன் திருவடிகளுக்கு அடிமை பூண்டாரை . அடைந்துய்யார் - அடியார்க்கு அடியராய் இருந்து உய்நெறிகாணார் . மீளா ஆள் - என்றும் மாறாத அடிமைத் திறம் . மெய்மையுள் - சத்தாகிய இறைவனது தன்மையின்கண் , பிறழாது நிற்கும் இயல்பிலார் . நில்லாத தொழும்பர் எனக்கூட்டுக . தோளாத சுரையோ - துளையிடப்படாத உட்குழியோ . தொழும்பர் - குற்றேவல் செய்வார் . வாளா - பயன் அற்று . கழிவர் - கழிந்தொழிவர் . தொழும்பர் - பெத்தம் முத்திநிலைகளிலும் அடிமையாகியே இருக்கும் உயிர் .

பண் :

பாடல் எண் : 4

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

பொழிப்புரை :

நாணமற்றவர்களே ! துன்பம் மிக்க வாழ்வினைக் கொண்டு என்ன செய்வீர் ? நீர் இறுதியில் சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு ஆன்றோர் சொற்களே சான்று . திருப்பாற்கடலினின்றெழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால் , உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிவிடும் .

குறிப்புரை :

நடலை - துன்பம் . என்செய்திர் - உயிர்கட்குப் பயன் தரும் செயல்கள் என்செய்தீர்கள் . நாணிலீர் - வெட்கம் இல்லாதவர்களே . சுடலை - இடுகாடு . சேர்வது - அடைவது , சொல் பிரமாணம் - சத்தப்பிரமாணத்தாலறிவதொன்றேயன்றி காட்சி அநுபவத்தாலும் அறிவதாம் . உடலினார் - உடல் . இழித்தற் பொருளில் வந்தது ஆர் விகுதி . ஊர்முனிபண்டம் - பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருளாகும் . கைவிட்டால் - காத்தலை நீங்கினால் .

பண் :

பாடல் எண் : 5

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

பொழிப்புரை :

பூக்களைக் கையிற்கொண்டு சிவபிரானின் பொன்னார் திருவடிகளைப் போற்றுதலில்லாதவர்களும் , நாவினைக் கொண்டு இறைவன் திருநாமத்தை நவிலாதவர்களும் தத்தம் உடலுக்கே உணவுதேடிச் சுழன்று இறுதியில் காக்கைக்கே தாம் இரையாகி ஒழிவர் .

குறிப்புரை :

பூக்கைக்கொண்டு என்க . பொன்னடி - பொன்னைப் போலப் பொதிதற்குரிய திருவடி . நாக்கைக்கொண்டு - நாவைக் கொண்டு என்க . நாமம் - இறைவன் திருப்பெயர் . நவில்கிலார் - கூறாதவர்கள் . ஆக்கைக்கே - உடலுக்கே . இரை - உணவு . அலமந்து - வருந்தி . காக்கைக்கு - காகங்களுக்கே . இரையாகி - உணவாகி . கழிவர் - அழிந்தொழிவர் .

பண் :

பாடல் எண் : 6

குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்
நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.

பொழிப்புரை :

விதியற்றவர்களே ! குறிகளும் , அடையாளமும் , கோயிலும் , நெறிகளும் , அவ்விறைவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் வேதங்கள் கூறினும் உம் மனம் அவற்றுட் புகாதது என்னையோ ?

குறிப்புரை :

குறிகளும் - கடவுள் திருவுருவங்களும் , அடையாளம் - விடை கொடி முதலிய சின்னங்கள் , விபூதி உருத்திராக்க சாதனங்கள் . கோயிலும் - திருக்கோயில்களும் , நெறிகளும் - சமய நெறிகளும் . அல்லது சரியை கிரியை யோக ஞான நெறிகளும் என்க . அவர் நின்றதோர் நேர்மையும் - அப்பெருமான் இவற்றை நாம் உய்யும் நெறிகளாகக் காட்டி நின்றதொரு நடுநிலையையும் . நேர்மை நுண்மை எனலுமாம் . அறிய - எல்லாரும் அறிய . ஆயிரம் - பலவான . ஆரணம் - வேதங்களில் கூறிய உபதேசங்கள் . ஓதிலும் - கூறினாலும் . பொறியிலீர் - ஞானப்பொறி இல்லாதவர்களே . ஊழ் எனவுமாம் . மனம் புகாதது என்கொல் - உங்கள் மனம் ஈடுபடாததற்குக் காரணம் என்ன .

பண் :

பாடல் எண் : 7

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

பொழிப்புரை :

தன்னை வாழ்த்துதற்கு வாயும் , தன்னை நினைக்க அறிவற்ற நெஞ்சும் , தன்னை வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித்துதிக்காமல் , வினையேன் நெடுங்காலம் வீழ்த்தியவாறு என்னே ?.

குறிப்புரை :

மடநெஞ்சு - அறியாமையின் பாற்பட்ட மனம் . தாழ்த்த - வணங்க . சென்னி - தலை . சூழ்த்த மாமலர் - ஆராய்ந்து எடுத்த சிறந்த மலர் . சூழ்ந்த - சூழ்த்த வலித்தல் விகாரம் . துதியாதே - போற்றி வணங்காமல் . வினையேன் - தீவினையேனாகிய நான் . நெடுங்காலம் - பலகாலம் . வீழ்த்தவா - கழித்தேன் . ஆ அது வருந்தத் தக்கது .

பண் :

பாடல் எண் : 8

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.

பொழிப்புரை :

எழுதிய பாவைச் சித்திரம் போன்ற அழகுடைய பெண்கள் திறத்தின் நீங்கி நான்தொழுது போற்றி நிற்க . என்னையும் ஆராய்ந்து கொண்டு உழுத சால் வழியே பின்னும் உழுவதன் பொருட்டு மிக்க இழிவுடைய நெஞ்சம் செய்கின்றது தானா என்னை ?.

குறிப்புரை :

எழுது - நன்றாகத் தீட்டப்பட்ட . பாவை - பதுமை போன்றவர்களாகிய . நல்லார் - பெண்கள் . திறம் - தொடர்பின் தன்மையை . விட்டு - கைவிட்டு . தொழுது - வணங்கி . போற்றி நின்றேனையும் - தோத்திரம் சொல்லி நின்றவனாகிய என்னையும் . சூழ்ந்து கொண்டு - வளைத்துக்கொண்டு நின்று . உழுத சால்வழியே உழுவான் பொருட்டு - மீண்டும் மீண்டும் பொருள் தேடும் முயற்சிகளிலே பல காலும் ஈடுபடும் பொருட்டு . இழுதை - அறியாமை . என்படுகின்றது - என்ன துன்பத்தை அடைகிறது . உழுத சால்வழி உழுதல் நல்ல பயன் தருதல் இல்லை ; அதுபோல வெறுக்கப்பட்டவர்களாகிய பாவை நல்லார் திறத்தில் மீளவும் மனம் செலுத்துலால் பயனில்லை என்பதாம் .

பண் :

பாடல் எண் : 9

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

பொழிப்புரை :

நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைபவர் நெஞ்சுளே புகுந்து நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் , பொய்ம்மையாளர் பூசையிற் பூவையும் நீரையும் கண்டு அவர் தம்மை நாணிச் சிரித்து நிற்பன் .

குறிப்புரை :

நெக்கு நெக்கு - மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து . உருகி உருகி என்க . நெஞ்சுள் - மனத்தினுள்ளே . புக்கு நிற்கும் - புகுந்து எழுந்தருளியிருக்கின்ற . பொன்னார்சடை - அழகு பொருந்திய சடை , பொக்கம் - பொய் . அவர்தம்மை - அவரை நாணி - வெட்கமடைந்து . நக்குநிற்பர் - ஏளனநகை புரிந்திருப்பர் .

பண் :

பாடல் எண் : 10

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

பொழிப்புரை :

விறகில் தீப்போலவும் . பாலிற்பொருந்திய நெய்போலவும் , மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான் .

குறிப்புரை :

விறகில் தீயின் - விறகின்கண் மறைந்திருக்கும் நெருப்பைப் போல . நன்பாலில்படு - நல்ல பாலில் மறைந்திருந்து பின்னர்த் தோன்றும் . மாமணிச் சோதியான் - சிறந்த மணியின் கண் ஒளி மறைந்திருந்து சாணை பிடித்த பின்னர் வெளிப்படல் போல உள்ளத்துள்ளே மறைந்து நிற்பவன் . உறவு - அறிவு , உணர்வு , அன்பு , மாறிக்கூறுவாருமுளர் . அறிவாகிய கயிற்றினாலே . முறுகவாங்கிக் கடைய - நன்றாக இழுத்துக்கடைய . முன்னிற்கும் - நம்முன் தோன்றி அருளுவான் . விறகு . பால் , மணி இவற்றுள் மறைந்து நிற்கும் தீ முதலானவற்றை முறையே முறுகக் கடைதல் , வாங்கிக் கடைதல் , கடைதல் என்பனவற்றால் வெளிப்படுத்தலாம் . அதுபோலப் பக்குவம் இல்லாதோர் பக்குவான்மா இவர்களுக்குக் கடவுள் தோன்றியருளும் வழி கூறப்பட்டது . கயிற்றினால் வாங்கிக் கடைதல் முன் இரண்டற்கும் பொது .
சிற்பி