திருவொற்றியூர்


பண் :

பாடல் எண் : 1

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

கங்கையைச் சடையில் வைத்தவனாய் வேதம் பாடும் பெருமானுடைய பாதங்களை மெதுவாக வழுவின்றிப் பெற விரும்பினால் , மெய்ப்பொருளை வழங்கும் ஞானமாகிய தீயினால் கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டினை எரித்தொழித்துச் செப்பஞ் செய்த அடியவர்களுடைய உள்ளத்திலே ஒற்றியூர் உடைய பெருமான் சிவப்பிரகாசமாக விளங்குவான் .

குறிப்புரை :

கங்கை நீர்ப்பெருக்கை , அதன் வேகத்தை அடக்கிச் சடைமிசை வைத்தவனாகிய தொடுக்குங்கடவுட் பழம் பாடலான் திருவடியை விரையாது வழுவின்றிப் பெற விரும்பினால் ; அது பெறத்தக்க உபாயத்தைக் கேண்மின் . ஒற்றியூருடைய கோவாகிய மெய்ப்பொருளை அளிக்கும் உணர்வாகிய தீயால் ( தி .4 ப .75 பா .4) கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டை எரித்தொழித்துச் செப்பஞ் செய்து நின்றவரது ஊன் உடலாகிய திருக்கோயிலுள்ளே விளங்கும் உள்ளமாகிய பெருங் கோயிலில் ( மூலட்டானத்தில் ) எழுந்தருளிக் கலந்து நின்று சிவப்பிரகாசம் புரிவார் அத்திருவொற்றியூருடையார் . இது திருவடி யடையும் வழி . கலந்து நிற்றல் - அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நிற்றல் என்க .

பண் :

பாடல் எண் : 2

வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா வானவ ரிறைவ னின்று
புசிப்பதோர் பொள்ள லாக்கை யதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனு மருந்த வத்தா லான்மாவி னிடம தாகி
உசிர்ப்பெனு முணர்வு முள்ளா ரொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

ஒரு குறுகிய காலத்து உயிர் வாழ்வதாகிய வாழ்க்கையை வாழ விரும்பாது , உணவு உண்பதனாலேயே செயற்படும் ஒன்பது துளைகளை உடைய இவ்வுடம்பில் , தேவர்தலைவனாகிய எம் பெருமான் கூடி நிற்றலை விரும்புவீராயின் , நீர் உடம்பு இளைக்க நோற்கும் அரிய தவத்தின் பயனாய் உம் ஆன்மாவில் இடம் பெற்று , உம் மூச்சுக்காற்றிலும் உணர்விலும் கலந்து உறைவான் திருவொற்றியூரை இடமாகக் கொண்ட எம்பெருமான் .

குறிப்புரை :

வசிப்பெனும் வாழ்க்கை :- ` வசித்திட வரும் வியாபியெனும் வழக்குடையனாகி ` ( சித்தியார் சுபக்கம் சூ . 4; 20). வாழும் வாழ்க்கை . கட்டு நெறியில் ( பெத்தத்தில் ) உடலில் உலகில் காலதேச வரையறைக்குட்பட்டு வசித்தல் என்னும் குறை வாழ்க்கை வேண்டா . புசித்தலின்றேல் அழியத் தக்க பொத்தலுடம்பொடும் தேவாதி தேவன் நின்று பொருந்தவேண்டினால் , உள்ளுருகிச் செய்வதாகிய , செய்தற்கரிய தவத்தால் , ஆன்மாவினிடத்ததாய் உயிர்ப்புடன் கூடிய தெனப்படும் உணர்வும் உடையவர் திருவொற்றியூருடையார் . அசிர்ப்பு - கண்ணீர்ப் பெருக்கம் . அயர்ப்பு என்பதன் மரூஉவாகக்கொளின் , இளைப்பு ஆம் . தவம் மெய் இளைத்தற் பொருட்டுச் செய்யப்படுவது . ஆன்மாவினிடம் ... உசிர்ப்பு ... உள்ளார் :- ` என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்கென்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே ` ( தி .5 ப .21 பா .1). ` ஆவியுள் நீங்கலன் ` ` உள்ளத்தின் உள்ளே நின்ற கரு ` ` ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி ` என்புழி , ஊன் ( பாசம் ) உயிர் ( பசு ) உணர்வு ( பதி ) என்னும் முப்பொருளும் உணர்த்தப்பட்டன . வசிப்பு - அதுவதுவாய வசிப்பு . ( தணிகைப் . 816). ` உண்டவூண் உனக்கு ஆம் வகை ` ( தி .9 திருவிசைப்பா ).

பண் :

பாடல் எண் : 3

தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்றீர்
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள் வல்லீ ராகில்
ஞானத்தை விளக்கை யேற்றி நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை யொழிப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

பல கொடைகளைத் தக்கவருக்கு வழங்கி வாழும் பொருட்டுப் பலவித சஞ்சலங்களிலே அழுந்தி மன அலைதலைவுற்று நிற்கின்ற நீங்கள் , சஞ்சலமற்ற வாழ்வு தரும் அருள் வெளியை வணங்குதற்கு ஆற்றல் உடையிராயின் வாருங்கள் . சிவஞானமாகிய தீபத்தை ஏற்றி ஆராய்ந்து அநுபூதியில் கண்டு சிவனாந்தம் நுகரவல்ல அடியார்களுடைய பிறவிப் பிணியை அடியோடு கழித்து வீடுபேறு நல்குவான் ஒற்றியூர்ப் பெருமான் .

குறிப்புரை :

தானம் - கொடை , சலம் - சஞ்சலம் ; அசைவு ; வருத்தம் விளைக்கும் உலக வாழ்க்கை . வானத்தை - அருள் வெளியை ; இன்ப வெளியை , வல்லீராகில் வம்மின்கள் . ஞானத்தை - சிவ ஞானத்தை , விளக்கை - சிவஞான தீபத்தை , நாடி - ஆகம வளவையாலும் அநுமான அளவையாலும் ஆராய்ந்து , ` நாடி ` எனவே அநுமான அளவையான் என்பதூஉம் ` கண்டு ` எனவே அநுபூதியில் என்பதூஉம் தாமே போதரும் , ( சிவ . போ . பாயிரம் ). உள்விரவ வல்லார் - அநுபூதியிற் கண்டு கலந்து சிவாநந்தம் நுகர வல்லவர் , ஊனத்தை - பிறவியை ; உடலெடுத்தலை ; ஊனுடம்பினை ; குறையை . ( தி .4 ப .80 பா .6.)

பண் :

பாடல் எண் : 4

காமத்து ளழுந்தி நின்று கண்டரா லொறுப்புண் ணாதே
சாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னை
ஏமத்து மிடையி ராவு மேகாந்த மியம்பு வார்க்கு
ஓமத்து ளொளிய தாகு மொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

உலக வாழ்வில் பலபற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப்பெறாமல் சாமவேத கீதனாகிய தான்தோன்றி நாதனைப் பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்திருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத்தீயாகக் காட்சி வழங்குவான் .

குறிப்புரை :

காமத்துள் - ஆசையுள் ; பெண்ணாசை , மண்ணாசை , பொன்னாசையுள் . அழுந்திநிற்றல் - அநுபவித்தல் . கண்டர் - காலன் , அவன் தூதர் முதலியோர் . ஒறுப்பு - தண்டனை . சாமத்து வேதம் - சாம வேதம் . சயம்பு - தான் தோன்றி , ( சுயம்பு ). ஏமத்தும் - பகற்பொழுதின் நான்கு யாமங்களிலும் இராப்பொழுதின் நள்ளிரவொழிந்த யாமங்களிலும் . ஏகாந்தம் - ஒரு முடிவு . ` வெருவந்த செய்தொழுகும் வெங்கோலனாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் ` ( தி .4 ப .58 பா .6) ` ஒருவந்தம் ஒருதலை ஏகாந்தம் என்பன ஒரு பொருட்கிளவி `. ( பரிமேலழகருரை ). ` ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத் துடையார் ` ஒருவந்தம் ஊக்கம் - ஒருவந்தமாய வூக்கம் . நிலைபெற்ற ஊக்கம் . ( பரிமேலழகருரை ) ஏகம் - ஒன்று . அந்தம் - முடிபு . ஏகாந்தம் - ஒருதலை . அநேகம் + அந்தம் = அநேகாந்தம் - பலதலை . பரிமேலழகருரையின் வாய்மையை உணரமாட்டாமல் , பொருத்தம் இன்றி எழுதியதோர் உரையைப் பொருளாகக்கொண்டு ` செல்வம் ` என்றுரைப்பது பொருந்தாது . இறைவனை இயம்புவார்க்கு ஏகாந்தம் அன்றி அநேகாந்தம் ஒவ்வாது . ஓமம் - தீயோம்பும் புறவேள்வி , சுகவேள்வியில் ஞானத்தீ . ஈரிடத்தும் ஒளி வடிவாயிருந்தருள்பவன் திருவொற்றியூருடையான் . ` ஒன்றாகக் காண்பதே காட்சி `.

பண் :

பாடல் எண் : 5

சமையமே லாறு மாகித் தானொரு சயம்பு வாகி
இமையவர் பரவி யேத்த வினிதினங் கிருந்த வீசன்
கமையினை யுடைய ராகிக் கழலடி பரவு வார்க்கு
உமையொரு பாகர் போலு மொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

அறுவகை வைதிகச் சமயங்களாகித் தான்தோன்றி நாதராய்த் தேவர்கள் முன்நின்று புகழ்ந்து துதிக்க , அவர்களிடையே மகிழ்வுடன் இருக்கும் , எல்லோரையும் அடக்கியாளும் பெருமானாய் , பகைவர் செய்யும் தீங்குகளையும் பொறுக்கும் பொறுமை உடையவர் ஆகித் தம் திருவடிகளை முன் நின்று வழிபடுபவர்களுக்கு பார்வதி பாகராய்க் காட்சி வழங்குவார் ஒற்றியூர்ப்பெருமான் .

குறிப்புரை :

( தி .4 ப .100 பா .4) ` புறப்புறம் புறம் அகப்புறம் அகம் என்னும் நான்கனுள் அகச் சமயம் ஒழித்து ஒழிந்த முக்கூற்றுப் புறங்களில் தனித்தனி அறுவகைப்பட்ட சமயங்களில் நின்று கொண்டு அவற்றுள்ளும் பலவேறு வகைப்பட ஓர்த்து உணர்கின்ற அவரவர் கொண்ட முதற்பொருளாய் , அவரின் வேறாகிய பாடாணவாதம் முதலிய அகச் சமயத்தார்க்கு இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று அவத்தையின் முறையே சத்தியும் உத்தியோகமும் பிரவிருத்தியும் என்னும் தொழில் வேறுபாடுபற்றிச் சிவன் சதாசிவன் மகேசன் என்னும் பெயருடைய அருவம் அருவுருவம் உருவம் என்னும் தடத்தக் குறியே குறியாக உடைத்தாய்ச் , சித்தாந்த சைவர்க்கு அத் தடத்தக்குறியே அன்றி வேதாகமங்களின் கருத்திற்கு அதீதமாய் உயிர்க்குயிராய் , உயிர்கட்கெல்லாம் அறிவைப் பிறப்பிக்கும் அம்மை யப்பனுமாகி , எங்கணும் எக்காலமும் செறிந்து வியாபகமாய் ` ( சிவ ஞான சித்தியார் . சுபக்கம் . 1. உரை ) நிற்பவன் சிவன் என்னும் உண்மையால் , சமய மேலாறுமாதல் விளங்கும் . சயம்பு ( தி .4 ப .45 பா .4). இமையவர் - கண்ணிமை யாது கடவுளையுணர்பவர் . கமை - பொறுமை . க்ஷமா என்னும் வட சொல்லின் தற்பவம் .

பண் :

பாடல் எண் : 6

ஒருத்திதன் றலைச்சென் றாளைக் கரந்திட்டா னுலக மேத்த
ஒருத்திக்கு நல்ல னாகி மறுப்படுத் தொளித்து மீண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தா னுணர்வினா லைய முண்ணி
ஒருத்திக்கு நல்ல னல்ல னொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

ஒற்றியூர்ப்பெருமான் . தன் தலையை அடைந்த கங்கையைச் சடையில் மறைத்து அக்கங்கைக்கு இனியவன் போன்று அவளைச் சிறை செய்து மறைத்து , மீண்டும் பார்வதியாகிய ஒருத்தியை உடம்பின் ஒருபாகமாகக்கொண்டு , தன் விருப்பத்தோடு பிச்சை எடுத்து உண்ணும் அப்பெருமான் கங்கை உமை என்ற இருவருள் ஒருவருக்கும் நல்லவன் அல்லன் .

குறிப்புரை :

சென்ற ஒருத்தியைத் தலையிற் கரந்திட்டான் . கங்கையைச் சடையுள் மறைத்தான் என்றதாம் . ஒருத்திக்கு - அக் கங்கைக்கு . நல்லன் - இனியன் . ஆகி - போன்று . ` ஆள்வாரிலி மாடாவேனோ ` மறுப்படுத்து - மாசுண்டாக்கி . ஒளித்து - உமைநங்கை அறியாது அப்புனற்கங்கையைச் சடையுள்ளே மறைத்து . சுட்டு வருவித்துறைக்க . ஒழுக்கம் விழுப்பம் தரலான் உயிரினும் ஓம்பப்படும் என்றலே அமைவதாயிருக்க , மற்றும் ஒழுக்கம் என்றது மிகை என்பார்க்கு விடையாகப் பரிமேலழகர் ` அவ்வொழுக்கம் ` எனச் சுட்டு வருவித்துரைத்து நூலின் குற்றமின்மை ஓம்பினார் . வருவித்த சுட்டால் ` அங்ஙனம் விழுப்பந்தருவதாயவொழுக்கம் ` எனப் பெறலுணர்த்தினார் . அவ்வாறே ஈண்டும் பொருத்தமுற உரைத்துக்கொள்க . ஒருத்தியை - உமைநங்கையாரை . பாகம் - இடப்பால் . ஐயம் - பிச்சை . உண்ணி - உண்பவன் . உணர்வினால் உண்ணி என்றதால் வாயால் உண்ணும் மற்றைப் பிச்சை போல்வது அன்று . ஒருத்திக்கும் - கங்கை உமைநங்கையென்னும் இருவருள் ஒருத்திக்கும் . ` கங்கை சடையுட் கரந்தாய் அக்கள்ளத்தை மெள்ள வுமைநங்கை அறியின் , பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே ` ( தி .4 ப .103 பா .8).

பண் :

பாடல் எண் : 7

பிணமுடை யுடலுக் காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளா னினைக்குமா நினைக்கின் றாருக்கு
உணர்வினோ டிருப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

பிணமாதலும் முடை நாற்றமும் உடைய இவ்வுடம்பைப் பேணிப் பாதுகாப்பதற்காக அதனிடத்து விருப்பினிராய்த் திரிந்து சிற்றின்ப வேட்கையை நீவிர்கொள்ளற்க . போக்குவதற்கு உரியதாகும் பொய்யான இப்பிறவிப்பிணியைப் போக்க , கொழுப்பினை உடைய இவ்வுடலின் நெஞ்சினுள் கரந்து உறையும் இறைவரைத் தியானிக்கும் முறையாலே தியானிக்கும் அடியவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வாய்த்த சிவஞானத்தோடு குணியாய் இருந்து விளங்குவார் .

குறிப்புரை :

பிணம் முடை உடல் என்றும் பிணம் உடை உடல் என்றும் பிரிக்கலாம் . பிணமாதலும் முடைநாற்றமும் உடைய உடல் . பிணமாதலை உடைய உடல் . உடலுக்காகப் பித்தாய்த் திரிதல் :- உடற்பற்றுடையவராய் , அதைப் போற்றிக்காக்க , உணவுக்கும் , பொருளுக்கும் , மழை குளிர் வெயில் தாக்காது தடுத்துக் காத்தற்கும் , சிற்றின்பம் விளைக்கும் உடற் சேர்க்கைக்கும் அலைதல் . புணர்வு எனும் போகம் வேண்டா என்றது சிற்றின்ப வேட்கையைக் கொள்ளற்க என்றதாம் . போக்கலாம் பொய்யை - போக்குதற்கு உரியதாகும் பொய்ப்பிறவியை . நீங்க - பிறவிக்கு ஏதுவான வினையின் நீங்க . நிணம் - கொழுப்பு , நெஞ்சினுள்ளிடத்து . நினைக்குமா நினைக்கின்றார்க்கு - உள்ளிருக்கும் இறைவனை நினைக்கும் ஆறு நினைக்கின்ற அடியவர்க்கு . உணர்வினோடு - அவர்க்கு வாய்த்த குணமான சிவ ஞானத்தொடு ( பசுஞானத் தோடிரான் ). இருப்பர் - குணியாய் இருந்து விளங்குவார் . நினைக்குமா நினைக்கின்றார் :- ` நிறைதரு கருணா நிலயமே உன்னைத் தொண்டனேன் நினையுமா நினையே ` ( தி .9 திரு விசைப்பா . 11) ` நினைப்பறநினைந்தேன் ` ` நினையாமல் நினைந்து ` என்ற கருத்தும் பொருந்தும் . சீவபோதமாக நினையாது சிவபோதமாக நினைதலே எல்லாவற்றிற்கும் உரிய உண்மையாகும் .

பண் :

பாடல் எண் : 8

பின்னுவார் சடையான் றன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுட் டொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

முறுக்கேறிய நீண்ட சடையை உடைய ஒற்றியூர்ப் பெருமானுடைய திருநாமங்களை அடைவு கேடாகப் பலகாலும் வாய்விட்டு உரைக்காத அறிவிலிகளே ! நீர் இனி அடையப்போகும் நரகத்தில் அனுபவிக்கக் கூடிய பழைய வினைகள் நீங்கவேண்டும் என்று நீர் கருதினால் நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி மனத்தினுள்ளே ஞானச் சுடர்விளக்கை ஏற்றித் தியானிப்பவர் உள்ளத்தில் அவர் உள்ளார் என்பதனை உணர்ந்து செயற்படுவீராக .

குறிப்புரை :

பின்னுசடை , வார்சடை , பின்னியவார்ந்த சடை . பின்னுதல் - முறுக்குண்ணல் . வார்தல் - நீண்டொழுகுதல் . ` பின்னிய தாழ் சடையார் ` ( தி .1 ப .8 பா .10). பிதற்று - முதனிலைத் தொழிற் பெயர் , பிதற்றுதல் , இல்லாப் பேதைமார்கள் . மகன் மகள் ஒருமை , மகவர் பன்மை , அதன் மரூஉவே 1, மகார் 2, மார் . ` மகார்கள் ` - ` மார்கள் ` என மருவிற்று . இது பெயர்ச் சொல்லின் மரூஉவாதலின் வினை கொள்ளலாயிற்று . இதனை இலக்கண நூலார் விகுதி எனக் கொண்டனர் . கோமகன் - கோமான் , சேரன்மகன் - சேரமான் , மலையன் மகன் - மலையமான் , வேள்மகன் - வேண்மான் , இருங்கோ வேண்மாள் என்பவற்றில் மான் , மாள் ( ஒருமை ) 1 மகார் - மார் ( பன்மை ) என்று மருவியவாறறிக . ` சடையவனே விடையவனே உடையவனே கடையவனேனைத் தாங்கிக்கொள் என்று பிதற்றாத பேதை மகார்கள் நரகத்துள் துன்னித் துன்புறுவார்கள் . அத்துன்பத்திற்கு ஏதுவான தொல்லைவல்வினைத் தொந்தம் தீரவேண்டினால் , நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி உள்ளத்துள் விளக்கு ஒன்று ஏற்றி உன்னுகின்றவர் உள்ளத்தில் உள்ளவர் ஒற்றியூருடையார் . ( தி .4 ப .75 பா .4) மன்னுதல் - அழியாது நிலைத்தல் . வான் - பெருமை , வால் தூய்மை , மனவிளக்கு :- ` மனமணிவிளக்கு ` உன்னுதல் - கருதுதல் , உள்ளத் துள்ளார் - மனத்துள் உயிர்க்குயிராயிருப்பவர் .

பண் :

பாடல் எண் : 9

முள்குவார் போகம் வேண்டின் முயற்றியா லிடர்கள் வந்தால்
எள்குவா ரெள்கி நின்றங் கிதுவொரு மாய மென்பார்
பள்குவார் பத்த ராகிப் பாடியு மாடி நின்றும்
உள்குவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! உன்னால் தழுவப்படும் மகளிருடைய இன்பத்தை நீ விரும்பினால் அதனை அடையப்பலகாலும் முயல்கின்றாய் , அவர்கள் உனக்கு ஒரு துயரம் வந்தால் அதனைத் தீர்க்க முற்படாமல் உன்னைப் பரிகசிப்பர் . உன்னுடைய இந்த நிலை புதுமையாய் இருக்கிறது என்று இகழ்வார்கள் . அம்மகளிர் மோகத்தை அச்சத்தால் விடுத்தவராய் ஒற்றியூர்ப் பெருமானுக்கு அடியவராய்ப் பாடியும் ஆடியும் நின்று தியானிப்பவர் உள்ளத்தில் அவர் நிலை பெற்றிருப்பவராய்த் துன்பம் வரும்போது அதனைத் துடைப்பவர் ஆவார் என்பதனை உணர்ந்து வாழ் .

குறிப்புரை :

நெஞ்சறிவுறூஉ :- முள்குவார் - முயங்கும் மகளிர் , ` இளமுலை முகிழ்செய முள்கிய , ( கலித் . 125). ` அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது ` ( நற்றிணை 105). ` ஆய்கதிர் முடி நிழல் முனிவர் சரணம் முள்குமே ` ( சூளாமணி . 55). ` நெடுங்கணார்தம் குவிமுலைத் தடத்து முள்கி ` ( சூளாமணி 69). முள்கு என்பது நீண்டு ( மூள்கு ) மூழ்கு என்றாதலுமுண்டு , ` சுற்றுவார் குழலார்தம் துகிற்றடம் முற்று மூழ்கும் பொழுது ` ( சூளாமணி 616), முள்கு + ஆர்ந்து + இருப்பர் = முள்கார்ந்திருப்பர் , இது மருவி உட்கார்ந்திருப்பர் என்றாயிற்று , முழங்காலைக் கையால் தழுவிக் கட்டிக்கொண்டு , ஈரடியும் நிலந்தோய முழங்கால் இரண்டும் நெட்டங்காலிட்டிருத்தலை முள்காந்திருத்தல் என்பர் . ` பசுப்போல்வர் முற்பட்டாற் பாற்பட்ட சான்றோர் முசுப்போல முள்காந்திருப்பர் ` ( நன்னூல் . 96. சங்கர நமச்சிவாயருரை ). சிந்தாமணி முதலியவற்றில் ` முள்குதல் ` என்னுஞ் சொல்லாட்சி பயின்றுளது . முயற்றி - முயல்கின்றாய் , முன்னிலை வினை , வேண்டி முயற்றி என்றதால் , வேண்டில் என்பது பிழையெனல் புலப்புடும் . எள்குவார் - இகழ்வார் . மாயம் - புதுமை , எள்கல் முதலிய மூன்றும் முள்குவார் ( மகளிர் ) வினை . பள்குவார் - அச்சத்தில் ஆழ்பவர் , பதுங்கி என்றாருமுளர் , ( சூளாமணி 1585). உள்குவார் - நினைப்பவர் .

பண் :

பாடல் எண் : 10

வெறுத்துகப் புலன்க ளைந்தும் வேண்டிற்று வேண்டு நெஞ்சே
மறுத்துக வார்வச் செற்றக் குரோதங்க ளான மாயப்
பொறுத்துகப் புட்ப கத்தே ருடையானை யடர வூன்றி
ஒறுத்துகந் தருள்கள் செய்தா ரொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

நெஞ்சே ! புலன்கள் ஐந்தனையும் நுகரச் செய்யும் பொறிகள் ஐந்தும் நீ வெறுத்து அழியுமாறு தாம் முன்பு வேண்டியவற்றையே பலகாலும் வேண்டி நிற்கும் . பொறிகளுக்கு இரை வழங்குதலை மறுத்து ஆர்வம் பகை கோபம் எனும் இவை அழியுமாறு மற்றவரால் வரக்கூடிய துன்பங்களைப் பொறுத்து மகிழ்வோடிருப்பாயாக . புட்பகவிமானத்தை உடைய இராவணனை முதலில் ஒறுத்துப் பின் உகந்து அருள் செய்தவர் ஒற்றியூர்ப் பெருமான் .

குறிப்புரை :

நெஞ்சே , ஐந்து புலன்களும் நீ வெறுத்து அழியுமாறு முன் வேண்டியதையே பின்னும் வேண்டி நிற்கும் ; அப்புலன்களின் வழியே நீ செல்லின் , ` காமக் குரோத லோப மோக மத மாற் சரியங்களானவை மாயா . அவை மாய்ந்தொழியவேண்டி அப்புலன்களின் வழியிற் செல்லுஞ் செலவை வெறுத்து , அவற்றை ( க் காமாதிகளை , புலனெறி வேட்கைகளை ) அழிப்பாயாக . காமாதி மாய மறுத்து உகப்பாயாக எனலுமாம் , நெஞ்சே என்று விளித்து உக என்று ஏவியதாகக் கொள்க . ` உக ` வியங்கோளுமாம் . ` ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்கும் ஆதலின் , அது நீக்குதற்கு ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி யுச்சரிக்க ` ( சிவ . போதம் . சூ . 9. அதி . 3 ).
சிற்பி