திருப்பழனம்


பண் :

பாடல் எண் : 1

ஆடினா ரொருவர் போலு மலர்கமழ் குழலி னாளைக்
கூடினா ரொருவர் போலுங் குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினா ரொருவர் போலுந் தூயநன் மறைக ணான்கும்
பாடினா ரொருவர் போலும் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

திருப்பழனத்து எம்பெருமான் திருக்கூத்தாடுபவரும் , மலர் நறுமணம் வீசும் கூந்தலாளாகிய பார்வதியின் பாகரும் , கங்கையும் பிறையும் சூடிய ஒப்பற்றவரும் தூயமறைகள் நான்கினையும் பாடுபவரும் ஆவார் .

குறிப்புரை :

திருப்பழனத்திலே திருக்கோயில் கொண்டெழுந்தருளிய எம்முதல்வனார் திருக்கூத்தாடியவரும் , அலர்கள் மணம் வீசும் கூந்தலையுடைய மங்கையைக் கூடியவரும் , தண் ( கங்கை வெண் ) ணீரையும் வளைந்த பிறையையும் சூடியவரும் , தூயனவும் நல்லனவும் ஆகிய நான்கு வேதங்களையும் பாடியவரும் ஆன ஒருவர் போலும் . தூய்மை - பொருட்குற்றம் இல்லாமை . நன்மை - சொற்குற்றம் ஓசைக்கேடு முதலிய தீமையில்லாமை . ` வேதங்கள் நான்கும் ... பண்ணினார் `. ( தி .4 ப .36 பா .1.)

பண் :

பாடல் எண் : 2

போவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தா னவர்கள் கேளார் குணமிலா வைவர் செய்யும்
பாவமே தூர நின்றார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

பழனத்து எம்பெருமான் உயிர் செல்வதற்குரிய வழியாக ஆனவரும் , முறுக்குண்ட சடையை உடைய தூயவருமாவார் . அடியேன் பலகாலும் கூறுவனவற்றை என் ஐம்பொறிகளும் ஏற்பதில்லை . ஆதலால் துன்புறுத்தும் வினையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை நீக்கமுடியாதேனாய் உள்ளேன் . நற்பண்பு இல்லாத ஐம்பொறிகளும் செய்யும் தீய வினைகளைப் பழனத்துப் பெருமானாரே தீர்ப்பவராய் இருக்கின்றார் .

குறிப்புரை :

பரமனார் ஆனார் ; புநிதனார் ; நின்றார் . போவது :- உயிரின் கதி . நெறி :- அக் கதிக்கு உரிய வழி . புரி ( சடை ) - புரித்த ; முறுக்குண்ட . சடையையுடைய தூயனார் வேவது - உள்ளம் வெம்மையுறுவது . வினையிற் படுதல் - வினைத்துடக் குறுதல் . வெம்மை - வெய்ய துயரம் , கில்லேன் - மாட்டேன் . கூவல் - கூவுதல் . அவர்கள் :- ஐவர் . செய்யுளாதலின் சுட்டு முன் வந்தது , இயற்பெயர் வழியவாம் சுட்டுப் பெயரை ` முற்படக் கிளத்தல் செய்யுளில் உரித்தே ` ( தொல் . சொல் . 39 ). தி .4 திருப்பதிகம் 54 பார்க்க . ஐவரை அடக்கிச் செய்வது புண்ணியம் , அவர்க்கு அடங்கிச் செய்யும் யாவும் பாவமே . அவை தீர நின்றார் பரமனார் .

பண் :

பாடல் எண் : 3

கண்டராய் முண்ட ராகிக் கையிலோர் கபால மேந்தித்
தொண்டர்கள் பாடி யாடித் தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைக டீர்ப்பார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

வீரராய் , மழித்த தலையினராய் அல்லது திரிபுண்டரமாய்த் திருநீறு அணிந்தவராய்க் கையில் ஒரு மண்டை யோட்டை ஏந்தி , அடியார்கள் பாடி ஆடித் தொழும் திருவடிகளை உடையவராய் , பகைவருடைய மும்மதில்களையும அம்பு எய்து அழித்த வேதியராய் , வேதம் ஓதும் நாவினராய் என்னுடைய பழைய வினைகளைத் தீர்ப்பவராய்த் திருப்பழனத்து எம்பெருமான் அமைந்து உள்ளார் .

குறிப்புரை :

கண்டர் - வீரர் . ` தெவ்வர்புரம் எரிகண்டர் ` ( கோயிற் புராணம் நடராசச் சருக்கம் 26 ) முண்டர் - மழித் தலையர் , மிண்டரென்பதன் மரூஉ அன்று . ஏந்தி என்னும் வினையெச்சம் ` கழற் பரமனார் ` என்னும் தொகைக்கண் விரியும் உடைய என்னும் வினைக்குறிப்பொடு முடியும் . தொண்டர்கள் பாடியும் ஆடியும் தொழுங் கழலையுடைய பரமனார் . பரமனார்தாம் வேதியர் . வேத நாவர் ; தீர்ப்பார் ; பழனத்தெம் பரமனார் என்று கொள்க . விண்டவர் - பகைவர் ; திரிபுரத்தசுரர் . பிறப்பால் வேதியர் பலரும் வேதநாவர் ஆகார் . வேதநாவர் பலரும் வேதியர் ஆகார் . வேதியரும் வேத நாவரும் ஆதல் அரிது . பரமனார் அறவாழியந்தணர் . ` மறையுங் கொப்பளித்தவராவர் ` ( தி .4 ப .24 பா .4). பண்டைவினை :- சஞ்சிதம் , பிராரத்தம் . தொழுகழல் :- தொழப்படுங் கழலடி . செயப்படு பொருளில் நின்ற வினைத்தொகை . ` அறு கயிறு ` செய்பொருள் வினைத்தொகை . மறைகள் நிறைநாவர் ( தி .1 ப .71 பா .5).

பண் :

பாடல் எண் : 4

நீரவன் றீயி னோடு நிழலவ னெழில தாய
பாரவன் விண்ணின் மிக்க பரமவன் பரம யோகி
ஆரவ னண்ட மிக்க திசையினோ டொளிக ளாகிப்
பாரகத் தமிழ்த மானார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

பழனத்து எம்பெருமான் நீராய்த் தீயாய் ஒளியாய் அழகிய நிலவுலகாய்த் தேவருலகிலும் மேம்பட்ட தெய்வமாய் மேலான சிவயோகியாராய் எங்கும் நிறைந்தவராய் அண்டங்களும் மிக்க திசைகளும் முச்சுடர்களுமாகி மண்ணுலக உயிர்களுக்குக் கிட்டிய விண்ணுலக அமுதமாக உள்ளார் .

குறிப்புரை :

நீரும் நெருப்பும் ஒளியும் அழகியதான பாரும் ( மண்ணுலகும் ) விண்ணுலகின் மிகுந்த மேன்மையும் உடையவன் ; மேலான சிவயோகி ; ஆரவன் - எங்கும் நிறைந்தவன் . அண்டங்களும் மிக்க திசைகளும் முச்சுடர்களும் ஆகி மண்ணுலகத்துயிர்களுக்குக் கிடைத்த விண்ணமுதமானார் . ஈண்டும் ஒருமை பன்மை மயக்கமன்று . தி .6 ப .15 பா .5. பார்க்க .

பண் :

பாடல் எண் : 5

ஊழியா ரூழி தோறு முலகினுக் கொருவ ராகிப்
பாழியார் பாவந் தீர்க்கும் பராபரர் பரம தாய
ஆழியா னன்னத் தானு மன்றவர்க் களப் பரிய
பாழியார் பரவி யேத்தும் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

எல்லோரும் முன்நின்று புகழ்ந்து வழிபடும் திருப்பழனத்து எம்பெருமான் , ஊழிகளாய் , ஊழிதோறும் உலகிற்கு ஒப்பற்ற தலைவராய்ப் பாழாதலை உற்ற மக்களுடைய பாவங்களைப் போக்கும் மேம்பட்டவர்களுக்கும் மேம்பட்டவராய்த் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய , சக்கரத்தை ஏந்திய திருமாலும் அன்ன வாகனனான பிரமனும் தாம் தீப்பிழம்பாகக் காட்சி வழங்கிய காலத்தில் அடிமுடி அளக்க முடியாத வலிமை உடையவராக விளங்கியவராவார் .

குறிப்புரை :

ஊழி முதல்வர் , ` ஊழிமுதல்வனாய் நின்றவொருவன் ` ( தி .8 திருவா . 162) உலகினுக்கு ஒருவர் :- ` எல்லா வுலகமும் ஆனாய் நீயே ` பாழியார் - பாழாதலையுற்றவர் . பாவம் - அப்பாழாக்கிய பாவங்களை . ( தி .4 ப .32 பா .7) பராபரர் - ` முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள் ( தி .8 திருவா .163) பரம் அது - முதற் பொருளை ; பரத்துவத்தை , ஆய - ஆராய , ஆழியான் - சக்கிரத்தவன் ; பாற்கடலான் . ` ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ ?` ( தி .8 திருவா .162) திருமால் . அன்னத்தான் - அன்னப்புள்ளூர்தியான் ; நான்முகன் . ` அன்றவர்க்கு அளப்பரிய பாழியார் ` ( தி .8 திருவாச . 352) பாழி :- அகலம் . வலி , நகரம் , பெருமை , வீடு , பாழ் என்பவற்றுள் எதுவும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 6

ஆலின்கீ ழறங்க ளெல்லா மன்றவர்க் கருளிச் செய்து
நூலின்கீ ழவர்கட் கெல்லா நுண்பொரு ளாகி நின்று
காலின்கீழ்க் காலன் றன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

பழனத்து எம்பெருமான் கல்லால மரத்தின் கீழிருந்து அறங்களை எல்லாம் ஒரு காலத்தில் நால்வருக்கு அருளிச்செய்து நூல்களை ஓதி வீடுபேற்றை விரும்பும் வைநயிகர்களுக்கு நுட்பமான பொருளாய் அமைந்து , காலனைத் தம் காலின் கீழ்க்கிடக்குமாறு விரைந்து பாய்ந்து உதைத்துப்பின் , பாலில் உள்ள நெய்போல எங்கும் பரவியிருப்பவராவார் .

குறிப்புரை :

ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அவர்க்கு அன்று அருளிச்செய்து . அவர் - சாமுசித்தர் ; சனகாதியர் ; அகத்தியர் ; புலத்தியர் ; திருநந்திதேவர் . ஆல் - கல்லால் , கீழ் என்றது கல்லால் நிழலை , நூலின் கீழவர்கள் - மார்க்கர்கண்ட நூலோதி வீடு காதலிப்பவர் ஆகிய வைநயிகர் . நுண்பொருள் . ` அருளால் உணர்வார்க்கு அகலாத செம்மைப் பொருள் `. ( வினா வெண்பா 13 ). ( தி .4 ப .36 பா .8) ` காலனைக் காலாற் காய்ந்த கடவுள் ` ( தி .4 ப .22 பா .10). கடுக - விரைய , ` பாலின்கீழ் நெய்யும் ` ( தி .4 ப .64 பா .5). பாலிற்படு நெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் ` ( தி .5 ப .90 பா .10.)

பண் :

பாடல் எண் : 7

ஆதித்த னங்கி சோம னயனொடு மால்பு த ( ன் ) னும்
போதித்து நின்று லகிற் போற்றிசைத் தாரி வர்கள்
சோதித்தா ரேழுல குஞ் சோதியுட் சோதி யாகிப்
பாதிப்பெண் ணுருவ மானார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

சூரியன் , அக்கினி , சந்திரன் , பிரமன் , திருமால் , புதன் ஆகியோர் உலகவருக்கு அறிவுறுத்தி நின்று தாமும் சிவபெருமானைப் போற்றி வாழ்பவர்கள் . இவர்கள் தம் முயற்சியால் சிவபெருமானைக் கண்ணால் காணலாம் என்று ஏழுலகும் தேடினார்கள் . பழனத்து எம் பெருமான் இவர்களுக்கு எட்டாத வண்ணம் சோதிகளுள் மேம்பட்ட சோதியாகிப் பார்வதி பாகராக உள்ளார் .

குறிப்புரை :

ஆதித்தன் - சூரியன் , அங்கி - அக்கினி , சோமன் - சந்திரன் , அயன் - பிரமன் , மால் - விட்டுணு . புதன் - பண்டிதன் , புலவன் , சூரியனை அடுத்துலவுமவன் புதன் . இவர்கள் உலகோர்க்குப் போதித்து நின்று சிவபிரானைப் போற்றிசைத்து வாழ்பவர்கள் . ஏழுலகும் தேடினார்கள் , இவர்களுக்கு எட்டாதவண்ணம் சோதியுட் சோதியாகி மாதியலும் பாதியரானார் பரமனார் .

பண் :

பாடல் எண் : 8

காற்றனாற் காலற் காய்ந்து காருரி போர்த்த வீசர்
தோற்றனார் கடலு ணஞ்சைத் தோடுடைக் காதர் சோதி
ஏற்றினா ரிளவெண் டிங்க ளிரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

காலினாலே கூற்றுவனை உதைத்து , யானைத்தோலைப் போர்த்தியவராய் , அனைவரையும் அடக்கி ஆள்பவர் ஆகிய பழனத்து எம் பெருமான் , கடலில் தோன்றிய விடத்தைத் தம் மிடற்றுள் அடக்கி என்றும் உலகிற்குத் தோற்றமளிக்கும்படி செய்தவராய் , தோடு அணிந்த காதினராய் , வெண்ணிறமுடைய காளையினராய் , பெரிய உலகத்தை எல்லாம் சூழ்ந்த ஆகாயத்தில் வெள்ளிய சந்திரனில் இளைய ஒளியை அமைத்து ஒளிவிடச் செய்தவராய் அடியார்களுடைய வினைகளை எல்லாம் போக்கியவர் ஆவார் .

குறிப்புரை :

கால்தனால் - காலால் . காலனைக் காய்ந்து காலனை என்னற்கியலாத இடத்து , செயப்படுபொருண்மைபடப் பாவலர் செய்துகொண்ட தொகை ` காலற்காய்ந்து ` என்பது போல்வன . கார் உரி - கரிய யானைத்தோல் . ஈசர் - உடையவர் . பாற்கடலுள் நஞ்சைத் தோற்றுதலும் , அதனை உண்டு சாவாது நின்று , அதன் வலி தொலை வித்தலும் உடையவர் . இது தோற்றினார் என்று இருந்தததோ ? தோற்று - தோற்றுதல் ; தோற்றல் , தோடு உடைக் காதர் :- ` தோடுடைய செவியன் `. ` குழையும் சுருள்தோடும் `. ` விண்ணென வரூஉம் காயப்பெயர் `. ( தொல்காப்பியம் . 305 ) என்றதில் , வெயிலும் நிலவும் காய்தல் பற்றி விண்ணைக் காயம் என்னும் தமிழ் வழக்குண்மை யுணர்க . ஆகாசம் என்னும் வடசொல் முதற் குறையாய்க் காசம் என வாராது . வரின் , அது காயம் என மருவலாம் . இளவெண்டிங்கள் சோதி ஏற்றினார் என்றும் இரும்பொழில் சூழ்ந்த காயம் இள வெண்டிங்கள் சோதி ஏற்றினார் என்றும் மாற்றி உரைக்கலாம் . பெரியவுலகமெல்லாம் சூழ்ந்த ஆகாயத்தில் இளவெண்டிங்கட் சோதியை ஏற்றினார் . ` சோதி ஏற்றினார் `:- ` அடரொளி விடையொன்றேற வல்லவர் , ( தி .4 ப .75 பா .7). வினைகள் எல்லாவற்றையும் நீக்கினார் . பாற்றுதல் - நீக்குதல் , ஓட்டுதல் .

பண் :

பாடல் எண் : 9

கண்ணனும் பிரம னோடு காண்கில ராகி வந்தே
எண்ணியுந் துதித்து மேத்த வெரியுரு வாகி நின்று
வண்ணநன் மலர்க டூவி வாழ்த்துவார் வாழ்த்தி யேத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

பழனத்து எம் பெருமான் திருமாலும் பிரமனும் தம் முயற்சியால் காண இயலாதவராகி வந்து தியானித்தும் துதித்தும் புகழுமாறு தீப்பிழம்பின் உருவமாகக் காட்சியளித்து , தம்மை வாழ்த்தும் அடியவர்கள் நல்ல நிறத்தை உடைய மலர்களால் அருச்சித்து வாழ்த்தித் துதிக்க அவர்களுடைய பண்ணோடு கூடிய பாடல்களைக் கேட்டு மகிழ்பவராவார் .

குறிப்புரை :

கண்ணன் - ஈண்டுத் திருமால் , பிரமன் - மலரவன் . ( தி .4 ப .33 பா .3 பார்க்க .) காண்கிலர் - அடிமுடி தேடி அறிகிலர் . எண்ணியும் - மனத்தால் ( அகத்தே ) நினைந்தும் . துதித்தும் - வாயால் ( புறத்தே ) புகழ்ந்து பாடியும் . ஏத்த - எடுத்தோத . எரியுரு - ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதிவடிவம் . வண்ணம் - நிறம் ; அழகு . நன்மலர்கள் - மணமிக்க பூக்கள் . தூவி வாழ்த்துவார் - பூசனை புரிந்து போற்றுமவர் . பண்ணுலாவும் பாடல்களால் வாழ்த்தி ஏத்தக்கேட்டு அருள்கள் செய்தார் பரமனார் .

பண் :

பாடல் எண் : 10

குடையுடை யரக்கன் சென்று குளிர்கயி லாயவெற் பின்
இடைமட வரலை யஞ்ச வெடுத்தலு மிறைவ னோக்கி
விடையுடை விகிர்தன் றானும் விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை யடிகள் போலும் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

அரசனுக்குரிய வெண் கொற்றக் குடையை உடைய இராவணன் சென்று குளிர்ந்த கயிலாய மலையை , அங்கிருந்த இளையளாகிய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் , காளையை வாகனமாக உடைய , உலகப் பொருள்களிலிருந்து வேறுபட்ட தலைவராகிய பழனத்து எம் பெருமான் , தம் விரலினால் அழுத்தி ஊன்றி அவனை நெரித்துப் பின் அவன் பாடலைக் கேட்டு வெகுளி நீங்கி அவனுக்கு வாட்படையை வழங்கியருளியவராவர் .

குறிப்புரை :

குடை அரசர்க்குரிய கொற்றக்குடை . குளிர் கயிலாய வெற்பு :- பேரின்பக் குளிர்ச்சி . மலைக்குக் குளிர்ச்சி சாதியடை . வெற்பினிடை .- மலை யிடையில் , எடுத்த வேளையில் மடவரலை - உமாதேவியாரை , மடவரலை நோக்கி , அரக்கனை நோக்கி எனின் , ` அஞ்ச` - அஞ்சுவித்து . பிறவினைப் பொருட்டாம் . விடை - எருது , விகிர்தன் - சிவன் ; பசுபாசங்களின் வேறுபட்டவன் . படை - வாள் . கொடை - நல்கலையுடைய . அடிகள் - கடவுள் .
சிற்பி