திருநெல்வேலி


பண் :சாதாரி

பாடல் எண் : 1

மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.

பொழிப்புரை :

நல்ல நெஞ்சமே ! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக . அத்திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும் . மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும் . மறுமையில் நற்கதி தரும் . மற்றும் உயிர்கள் அடைதற்கேற்ற பயன்கள் யாவும் தரும் . போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும் . அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்க , நெருங்கியுள்ள , பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருள்கிற அருட்செல்வர் ஆவார் .

குறிப்புரை :

முல்லை நிலத்தில்கொன்றை மரங்கள் பூத்தமலர்களையுதிர்க்க அருகிலேயுள்ள செருந்தி மரங்கள் பொன் போன்று மலர்கள் விரிக்கும் திருநெல்வேலி என்றது , ` செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் ` மாந்தருறைவது எனக்குறித்தவாறு . திருநெல்வேலி யுறைவர் செல்வர் , அவர் நாமமாகிய திரு ஐந்தெழுத்துக்கள் , மருந்து , மந்திரம் , மறுமைக்கண் நன்மை விளைக்கும் நெறிகள் , மற்றும் எல்லா நன்மைகளும் ஆகும் . அன்றியும் தீர்த்தற்கரிய துயரங்களும் கெடும் . பொருந்துதண் - குறிப்பு ( பா .8.) காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளு மியல்பதுவே
துன்றுதண் பொழினுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.

பொழிப்புரை :

நெருங்கிய குளிர்ந்த சோலையில் நுழைந்து , செழித்து வளர்ந்துள்ள தாழம்பூவில் படிந்து தென்றல் காற்று வந்து வீசுகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் எப்போதும் ஒரே தன்மையுடையவர் என்று நினைப்பதற்கு முடியாதவர் ஆவர் . அவர் இடபவாகனத்திலேறிச் செடிச்சியர் போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும் சென்று பிச்சை ஏற்கும் இயல்பும் உடையவர் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

நெருங்கிய குளிர்ந்த சோலைகளிற் புகுந்து , தழைத்து எழுந்த தாழம்பூமடல் பொடிகளைத் திமிர்ந்து கொண்டு தென்றல் வந்துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாம் , என்றும் ஓரியல்பினரென நினைக்க முடியாதவர் . ( சில சமயம் ) காளையில் ஏறிச்சென்று செடிச்சியர் ( வேடர் ) போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும் பிச்சையேற்கும் தன்மையும் அவருக்கு உண்டு .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

பொறிகிள ரரவமும் போழிள மதியமுங்கங் கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலும்
செறிபொழி றழுவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.

பொழிப்புரை :

புள்ளிகளையுடைய பாம்பையும் , ஒரு கூறாகிய இளம்பிறைச் சந்திரனையும் கங்கை என்ற சுருண்ட கூந்தலை யுடையவளையும் சடைமீது சுற்றி அணிந்து , வெண்மையான திருநீற்றைப் பூசி , பிறர் மயங்கும் வண்ணம் நடந்து , நல்ல கிளி போலும் இனிமையான சொற்களைப் பேசும் தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளின் மனத்தை வசப்படுத்தும் சிவபெருமான் , நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட் செல்வர் ஆவார் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

நெறிபடு - தழைத்த . குழலியையும் , என உம்மையை விரிக்க . சுலவி - கலந்தணிந்து ; ( சுலவி ) இகரம் வினையெச்சவிகுதி , கிறி - விளையாட்டு , பட - பொருந்த , நடந்து - பிச்சைக்குச் சென்று , கிளிமொழியவர் - தாருகாவனத்து முனிபத்தினியர் முதலியோர் , மனம் கவர்வர் போலும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை மீதெழு கொடிமதியம்
தீண்டிவந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.

பொழிப்புரை :

நெருங்கிய பெரிய மாடங்களிலும் , மாளிகைகளிலும் , மேலே கட்டப்பட்ட கொடிகள் சந்திரமண்டலத்தைத் தொட்டு அசைகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வரான சிவபெருமான் , தரிசிப்பதற்கு இனிய மலை மகளான உமாதேவி ஒளிவிடும் பற்களால் புன்முறுவல் செய்து அருகிலிருந்தருளவும் , பாம்பை ஆபரணமாக அணிந்து ஊருக்குப் புறம்பேயுள்ள சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு நடனமாடுதலை விரும்புபவர் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

அழகுபொருந்திய உமாதேவியார் ஒளியையுடைய வரிசையான பற்களால் சிரிப்புடையவராய் அருகிலிருந்தருளவும் , அதற்கேற்ற வண்ணம் நடந்து கொள்ளாமல் பாம்பை அணிந்த . ஊருக்குப் புறம்பே உள்ளதாகிய சுடுகாடு , நாடகமேடையாகக் கூத்து ஆடுதலைப் பேணியவராய் இருப்பர் , திருநெல்வேலியுறை செல்வர் . மாடங்களிலும் , மாளிகைகளிலும் கட்டியுள்ள கொடி , சந்திரமண்டலம் வரை உயர்ந்து சந்திரனைமோதி உலாவும் திருநெல்வேலி உறை செல்வன் இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா இயல்பினன் என்பது முதலிரண்டடிகளின் கருத்து . பேணி - குறிப்பு வினைமுற்று முற்றெச்சமாயிற்று . ` புறங்காடரங்கா நடம் ஆட வல்லாய் ` என ( தி .4. ப .1. பா .10.) இத்தொடர் வாகீசர் வாய்மையிலும் வழங்கியுள்ளது .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

ஏனவெண் கொம்பொடு மெழில்திகழ் மத்தமு மிளவரவும்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனினல் ஐந்துகந் தாடுவர் பாடுவ ரருமறைகள்
தேனில்வண் டமர்பொழிற் றிருநெல்வேலி யுறைசெல்வர் தாமே.

பொழிப்புரை :

தேன்பருக வண்டுகள் அமர்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான் பன்றியின் கொம்புடன் , அழகிய ஊமத்த மலரையும் , இளம் பாம்பையும் , வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் , அணிந்த சடைமுடி உடையவர் . கொல்லும் தன்மையுடைய புலித்தோலை ஆடையாக உடுத்தவர் . பசுவிலிருந்து பெறப்படும் பால் , தயிர் , நெய் , கோசலம் , கோமயம் , ஆகிய பஞ்சகவ்வியத்தால் திருமுழுக்காட்டப்படுபவர் . அரிய வேதங்களை அருளியவர் .

குறிப்புரை :

ஏனம் - பன்றி , எழில் திகழ் - அழகு விளங்குகின்ற , மத்தம் - பொன்னூமத்தை , கூன் , நல் , வெண்பிறை , ஆனின் - பசுவிற் கிடைப்பதாகிய . நல் - நல்ல . ஐந்து - பஞ்சகவ்வியத்தை , உகந்து ஆடுவார் , அரு மறைகள் பாடுவார் , திருநெல்வேலியுறை செல்வர்தாம் , நல் - தூயன ஆகிய , ` ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர் ` ( ப .1. பா .1.) என்புழியும் காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியத ளாடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.

பொழிப்புரை :

புதர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான் , மண்டையோட்டை மாலையாக உடையவர் . சினமிகு வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர் . விரிந்த சடையுடையவர் . திருவெண்ணீறு அணிந்த மார்பினர் . புலித்தோலாடை அணிந்தவர் . கோபம் பொங்கும் பாம்பை அணிந்தவர் , அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர் . தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளை மயங்கும்படி செய்தவர் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

வெடிதரு - வெடித்த . தலை - மண்டையோடு . ( பிரம கபாலத்தை ) தீயில் வெடித்த தலைபோன்றது என்க . வேனல் - வெப்பம் . இங்குச் சினத்தைக் குறித்தது . வெள் ஏற்றினர் - வெண்மையையுடைய ஏற்றினர் . வெடிதருதலை என்பதை , ` குணந்தான் வெளிப்பட்ட ... கொடியிடை ` என்னும் திருக்கோவையார் போலக் கொள்க . செடி - புதர்கள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

அக்குலா மரையினர் திரையுலா முடியின ரடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.

பொழிப்புரை :

வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசைக்கின்ற சோலைகளையுடைய , எல்லாத் திசைகளிலும் புகழ் பரவிய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வராகிய சிவபெருமான் , சங்குமணிகளைக் கட்டிவிளங்கும் இடையினையுடையவர் . அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய தலைவர் . அவரை மதியாது தக்கன் செய்த யாகத்தை அழித்த திறமையையுடையவர் . செவ்வொளி படரும் சடையினர் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

அக்கு - அக்குப்பாசி . உலாம் - அசைகின்ற . அரையினர் - இடுப்பையுடையவர் . திரை - ( கங்கை ) அலைகள் . உலாம் - உலாவும் . முடியினராகிய அடிகள் . தக்கனார் - உயர் சொற்றானே குறிப்பு நிலையால் இழிபு விளக்கிற்று என்பர் சேனா வரையர் . ( தொல் , சொல் 27 சூ . உரை .) சாடிய - அழித்த . சதுரனார் - திறமையையுடையவர் . கதிர்கொள் செம்மை புக்கது . ஓர் புரிவினர் - செவ்வொளி பொருந்திய சடையை யுடையவர் , புரிவு - முறுக்குதலை உடைய சடைக்கு ஆயினமையின் தொழிலாகுபெயர் , புரிசடை என வருதலுங் காண்க . வரிதரு - கீற்றுக்களையுடைய வண்டு , முரலுதல் - மூக்கால் ஒலித்தல் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகடோ ணெரிதரவே
உந்திமா மலரடி யொருவிர லுகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழின் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்ற , பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான் , பெருமை மிகுந்த கயிலை மலையை அந்நாளில் பெயர்த்தெடுத்த இராவணனின் தலைகளும் , தோள்களும் நெரியும் வண்ணம் , சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நக நுனியை ஊன்றி வருத்தினார் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

மாவிலங்கல் - பெருமையையுடைய , கயிலை மலையை , அன்று - முந்தி . எடுத்தவன் முடிகளோடு தோள்நெரிய . உந்தி - அமிழ்த்தி . ஒரு விரலின் நகத்தின் நுனியால் அடர்த்தார் . கந்தம் ஆர்தரு - வாசனை நிறைந்த சோலைகளில் குரங்குகள் பாய்வதால் மலர்களிலுள்ள தேன்துளிகள் சிந்து பூந்துறையின்கண் மணக்கின்ற திருநெல்வேலி . குறிப்பு : இங்குச் சிந்துபூந்துறையைக் குறித்ததுபோலவே இப்பதிகம் முதற்பாடலில் பொருந்துதண் - என்பது கண்ணுதல் என்பதுபோல முன் பின்னாகத் தொக்க தொகையெனக் கொண்டு தண் பொருந்தம் எனத் தாமிரபரணி நதியைக் குறிப்பித்தனர் எனலும் ஆம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பைங்கண்வா ளரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
தங்கணா வருளென வவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர வரிவைய ராடல்பேணத்
திங்கணாள் விழமல்கு திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.

பொழிப்புரை :

பசுமையான , வாள்போன்ற ஒளிபொருந்திய கூரிய கண்களையுடைய ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமாலுடன் , குளிர்ந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பிரமனும் முழுமுதற்பொருளான இறைவனைக் காணமுடியாமல் , அழகிய கண்களையுடைய பெருமானே அருள்புரிக என்று அவரவர் தாம்தாம் அறிந்த முறையில் வணங்கும் வண்ணம் விளங்கும் சிவ பெருமானே , அந்தணர்கள் ஒன்றுகூடி நால் வேதங்களைப் பாடவும் , பெண்கள் நடனமாடவும் , மாத விழாக்களும் , நாள் விழாக்களும் நிறைந்துள்ள திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராவார் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

பைங்கண்வாள் அரவு - பசிய கண்களையும் ஒளியையும் உடைய அரவு ; அணையான் காணா - ( அடியையும் முடியையும் ) காணாமல் . அங்கணா - சிவபெருமானே . அங்கணன் - சிவபெரு மானுக்கு ஒருபெயர் . திங்கள் விழா - நாள் விழா . மல்கு - மாதோற்சவங்களும் , நித்தியோற்சவங்களும் பொருந்திய திருநெல்வேலி . கூட்டம் ஆகிய அந்தணர் வேதங்கள் பாடிவரவும் , பெண்கள் நாட்டியம் ஆடவும் நடக்கும் திருவிழாக்கள் நான்மறையவர் - நால்வேதங்களையும் பாடி வருபவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

துவருறு விரிதுகி லாடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் மண்ணலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்
திவருறு மதிதவழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.

பொழிப்புரை :

மருதந்துவரில் தோய்த்த மஞ்சட் காவிஆடை அணியும் புத்தர்களும் , வேடநெறி நில்லாத சமணர்களும் கூறுகின்ற புன்மொழிகளைப் பயனற்றன என்று நினையுங்கள் . எம் தலைவராகிய சிவபெருமான் , கண்டார் மனங்களைக் கவர்கின்ற , கொடி விளங்கும் மாளிகையின் நிலா முற்றத்தில் மயில்கள் நடமாட , அதனைக் காணத் தேவர்களும் வருகின்ற , சந்திரன் தவழ்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வர் ஆவார் . அவரை வழிபடுங்கள் .

குறிப்புரை :

துவர் உறு - மருதந்துவரில் தோய்த்த , துகில் ஆடை - துகிலாகிய ஆடை . ( இருபெயரொட்டுப்பண்புத்தொகை ) ஆடையர் - புத்தர் . வேடம் இல் - வேடநெறி நிற்றல் இல்லாத ; சமணம் . சிறு சொ ( ல் ) லை - புன்மொழிகளை , அவம் - பயனற்றது , நினையும் - ( நினையுங்கள் ) ஏவற்பன்மை , எம் அண்ணலார் தாம் திருநெல்வேலியுறை செல்வராவார் . அவரையடைந்து உய்யுங்கள் என்பது குறிப்பெச்சத்தாற் பெறவைத்தார் . கவர்உறு - கண்டார் மனங்களைக் கவர்கின்ற மாளிகை சூளிகை , மேல் வீட்டில் ஓர் உறுப்பு , மயில்கள் ஆட - அதனைக் காண்பதற்கு , திவர் - தேவர்கள் , ( திவ் - தேவலோகம் ) உறு - அடையும் ( திருநெல்வேலி ) மாளிகைகளில் மதி தவழும் ( திருநெல்வேலி ).

பண் :சாதாரி

பாடல் எண் : 11

பெருந்தண்மா மலர்மிசை யயனவ னனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வேலி யுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுண் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடு மருவினையே.

பொழிப்புரை :

பெரிய , குளிர்ந்த , சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனைப் போன்றவர்களான தாம் விரும்பும் கல்வியினால் மனம் பண்பட்ட , சிறந்த வேதங்களை உணர்ந்த அந்தணர்களை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமானைப் போற்றி , பொருந்திய நீர்நிலைகள் நிரம்பிய சீகாழி ஞானசம்பந்தன் பாடிய பாமாலைகளைப் பாடிப் பரவசத்துடன் ஆட , போக்க முடியாத வினைகளெல்லாம் அழிந்து போகும் .

குறிப்புரை :

பேணு - பாராட்டத்தக்க , கல்வித்திருந்தும் - கல்வியால் நிரம்பிய மறையவர் , அதனால் அயனையனையவர் பாடி , ஆட திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் முத்தமிழ்விரகர் ஆகையால் அவர் தமிழ்ப் பாடல்கள் இயற்றமிழ்ப் பாடல்களேயன்றிப் பாடுதற்குரிய இசைப் பாடல்களாகவும் ஆடுதற்குரிய பாடல்களாகவும் உள்ளன என்பது இங்குக் குறித்தவாறு .
சிற்பி