பொது


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும் , நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும் , அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் .

குறிப்புரை :

காதல் - அன்பு . மல்கி - மிக்கு . ஓதுதல் - சொல்லுதல் . இங்கே செபித்தல் என்னும் பொருளில் வந்தது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால் , நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது , எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தே ஆகும் .

குறிப்புரை :

நம்புவார் - விரும்புவார் . ` நம்பும் மேவும் நசை யாகும்மே ` என்பது தொல்காப்பியம் ( சொல் . உரி .) வம்புநாண் மலர்வார் மது - வாசனையுடைய புதிய மலரில் சொரிகின்ற தேன் . இம் மந்திரம் எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது . நம்பன் சிவபெருமானுக்கு ஒரு பெயர் . ` நம்பனே எங்கள் கோவே ` என்ற அப்பர் வாக்கால் அறிக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவபெருமானைச் சிந்தித்து , தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

உள் நெக்கு - உள்ளம் நெகிழ்ந்து . ஆர்வம் - ஆசை . அங்கையில் - அழகிய கையிலே . அக்குமாலை கொடு - உருத்திராக்கச் செபமாலை கொண்டும் . ( அங்கையில் - விரல் இடையினாலும் ). எண்ணுவார் - செபிக்கிறவர்களை . ( தகுதியற்றவர்கள் ஆயினும் ) தக்க - தகுதிவாய்ந்த . வானவராய் - தேவர்களாய் . தகுவிப்பது - தகுதிபெறச் செய்வது . நக்கன் - ஆடையிலியாகிய சிவபெருமான் . நாமம் நமச்சிவாயவே .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தானினை வார்க்கினி யானெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும் , நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் . இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால் , அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான் .

குறிப்புரை :

நியமம்தான் நினைவார்க்கு - தன்னை நாடோறும் தியானிப்பதையே நியமமாகக்கொண்டு வழிபடும் அடியவர்கட்கு . இனியான் - என்றும் நன்மை செய்பவனும் . நெற்றி நயனன் - நெற்றிக் கண்ணை உடையவனாகிய சிவபெருமானின் . நாமம் - திருப்பெயர் ஆகிய . நமச்சிவாயவே - ஸ்ரீ பஞ்சாட்சரத்தை . இதனை ` திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் ` என்ற அப்பர் வாக்காலுமறிக . இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார் தமை நண்ணினால் - இனிய சொல்லோடு நட்புக்கொண்டு பிறர் , ஸ்ரீ பஞ்சாட்சரத்தைச் செபிக்கும் பெரியோரைச் சேர்வரேல் அப்பிறர் ( செபிக்காதவர் ) பக்கலில் சேர , இயமன் தூதரும் அஞ்சுவர் , என்பது அஞ்செழுத்தைச் செபிப்போர்க்கே அன்றி அவரைச் சார்ந்த பிறருக்கும் எமவாதை இல்லை என்பதாம் . ` கொண்டதொண்டரைத்துன்னிலும் சூழலே ` என்ற காலபாசத் திருக்குறுந்தொகையில் துன்னிலும் என்பதால் குறித்த பொருளது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும் , நற்குணமும் , பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர் . அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

குணம் - நற்குணமும் . பல நன்மைகள் - பல நல்ல ஒழுக்கங்களும் . இல்லாரேனும் - இல்லாதவராயினும் . நல்லான் - சிவபெருமானுக்கொரு பெயர் . ` நல்லானை நல்லான நான் மறையொடு ஆறங்கம் வல்லானை ` என்ற அப்பர் வாக்காலும் அறிக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

மந்த ரம்மன பாவங்கண் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும் , திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும் . அவர்கட்குச் செல்வமும் பெருகும் . அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்பதாகும் .

குறிப்புரை :

மந்தரம் அன - மந்தர மலைபோன்ற ( பாவங்கள் ). மன்னிய - நிலை பெற்ற . பந்தனையவர் - பாசங்களால் கட்டுண்டவர் . அவர் தாமும் - அத்தகையோரும் . பகர்வரேல் - உச்சரிப்பார்களானால் . வல்வினை சிந்தும் செல்வமும் மல்கும் ( பெருகும் ) நந்தி - சிவபெருமான் . ` பேர்நந்தி உந்தியின் மேலசைத்த கச்சின் அழகு ` என்றார் அப்பர் . முதலிரண்டடிக்குப் பாவங்கள் பந்தனை இவையுடைய அத்தகையோரும் எனப் பொருள்கோடலன்றிப் பாவங்கள் மன்னிய பாசங்களாற் கட்டுண்டவர்களும் என ஓரிடத்திற்கு ஆக்குதலுமாம் . மந்தரம் - பாற்கடல் கடைந்த மலை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால் , உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர் . அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமும் திருவைந்தெழுத்தே ஆகும் .

குறிப்புரை :

வரதன் - கேட்ட வரம் அனைத்தும் தருவோன் . உருத்திரர் ... புகுவித்தாரும் என்ற கருத்து உருத்திர பல்கணத்தாருடன் கலந்து புகச் செய்யும் . என்பர் - என்று மெய்ஞ்ஞானிகள் கூறுவர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல , சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும் , கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி , நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் .

குறிப்புரை :

அடுக்கல் - மலை . மலங்கி - திகைத்து ; ` மலங்கினேன் கண்ணின் நீரைமாற்றி ` என்பது திருவாசகம் . வாய்மொழி செய்தவன் - வாயால் உச்சரித்தவன் . உய்வகை - பிழைக்கும்படியான வகை . நலம் கொள் - அத்தகைய நன்மையைத் தன்கட் கொண்டதான .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

போதன் போதன கண்ணனு மண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயன்று காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது `நமச்சிவாய` என்ற திருவைந்தெழுத்தேயாகும்.

குறிப்புரை :

போதன் - தாமரைப் பூவிலிருப்பவனாகிய பிரமனும். போது அன கண்ணனும் - ( தாமரைப் ) பூப்போன்ற கண்களையுடைய திருமாலும். நேடிய - தேடிய. யாதும் - பற்றுக்கோடு எதுவும். காண்பு - காண்டல். அரிதாகி - இல்லையாகி. அரிது - இல்லை என்னும் பொருளில் இங்கு வந்தது. `மனக்கவலை மாற்றலரிது` என்புழிப்போல் ஆகும்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை , மண்டை என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும் , கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர் .

குறிப்புரை :

கஞ்சி மண்டையர் - கஞ்சி குடிக்கும் பாத்திரத்தைக் கைக்கொண்டவர் . மண்டை - ஒருவகைப் பாத்திரம் ( புத்தர் ). கையில் உண்கையர்கள் - கையே பாத்திரமாக உண்ணுகின்ற கீழோர் . ( சமணர் ) மிண்டர் - மண்டையரும் கையருமாகிய மிண்டர் என்க . விஞ்சை - அறிவு . வித்தை - விச்சை எனப் போலியாய் , அது மெலித்தல் விகாரம் பெற்று விஞ்சை என்றாயிற்று . நஞ்சு - விடக்கறை . உள் கண்டன் - உள்ள கண்டத்தையுடையவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.

பொழிப்புரை :

நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப் பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர் .

குறிப்புரை :

சந்தையால் - இசையோடு, பாடிய என ஒரு சொல் வருவிக்க.
சிற்பி