திருமாந்துறை


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே.

பொழிப்புரை :

வேங்கை , ஞாழல் , செருந்தி , செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும் , சந்தனமரம் , மாதவி மலர் , சுரபுன்னை மலர் , குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம் .

குறிப்புரை :

வேங்கை பொன்போல் பூக்கும் . வேங்கை முதலியவை காவிரி வெள்ளத்தால் உந்தப்பட்டுவருவன . ஆரம் - சந்தனம் . பொன் நேர்வருகாவிரி :- ` பொன்னி `.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானத்
துளவ மான்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே.

பொழிப்புரை :

விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் , மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை , அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம் .

குறிப்புரை :

விளவு - விளா . வேய்மணி - மூங்கில்முத்து . துளவ மால் மகன் - துழாய் அணிந்த திருமாலுக்கு மகனான . அளகம் - கூந்தல் . ஈற்றடியைச் சைவர் மறத்தல் கூடாது . ( பா . 3, 4 பார்க்க ).

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே.

பொழிப்புரை :

தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில் மாந் துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம் .

குறிப்புரை :

வாடினார்தலை :- பிரம கபாலம் . கேடிலாமணி - இத் தலத்து இறைவர் திருப்பெயர் . மாந்துறைமணி என்பன முன் வழங்கி யவை . கெழுமுதல் - நிறைவு , பொருத்தம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை யிளமரு திலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே.

பொழிப்புரை :

இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை , பிறை , அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம் .

குறிப்புரை :

இலவம் முதலியவை மரங்கள் . ஈஞ்சு - ஈந்து ; போலி . கண்டன் - தலைவன் . புனல் - கங்கை . அம்புலி - பிறை . மலை .- ` அருள் நிதிதரவரும் ஆனந்த மலையே ` திருப்பள்ளியெழுச்சி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படுந் தவத்தோரே.

பொழிப்புரை :

கோங்கு , செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை , தூபம் தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர் .

குறிப்புரை :

குரவு - குராமரம் . பாங்கு - சிவாகம விதி . பாட்டு - தோத்திரம் . அவி - நிவேதனம் . தாங்குவார் - சிவபூஜாதுரந்தரர் . தலைப்படல் - சேர்தல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பெருகு சந்தனங் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே.

பொழிப்புரை :

சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி , மதி , மன்னர்கள் , மருத்துக்கள் அன்போடுவழிபடும் திருவடிகளை வணங்குவோம் .

குறிப்புரை :

பரிவு - பக்தி . இரவி - சூரியன் . மருதவானவர் - மருத்துக்கள் . இதில் , இத்தலத்தை வழிபட்டவர்களை உணர்த்தி யருளினார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறையன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே.

பொழிப்புரை :

மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந் தவனும் , மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம் .

குறிப்புரை :

நறவம் - தேன் , மணம் , மௌவல் - காட்டு மல்லிகை . இறவில் - மிகுதியில் . அறவணாகிய கூற்று - தருமராசன் . வரைவில் - மேருவாகியவில் , வாங்கி - வளைத்து . எயில் - திரிபுரம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

மந்த மார்பொழின் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை
நிந்தி யாஎடுத் தார்த்தவல் லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே.

பொழிப்புரை :

மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை , நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால் விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர் .

குறிப்புரை :

மந்தம் - தென்றல் . நிந்தியா - நிந்தித்து . சிந்தியா மனத் தார் - சிந்திக்காத மனமுடையவர் . தீநெறி - நரகிற் செலுத்தும் தீயகதி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை
மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளும்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.

பொழிப்புரை :

நீல மணிகளையும் , முத்துக்களையும் , மலர்களை யும் அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள் . நம்மைக் கூற்றுவன் நலியான் .

குறிப்புரை :

நித்திலத்தொத்து - முத்துக்கொத்து . ஆலியா - துளித்து . இணை - இரண்டு . நாளும் - நாடோறும் . கோலம் - சிவக் கோலம் . நலியான் - வருத்தமாட்டான் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களு நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது அதுவவர்க் கிடமாமே.

பொழிப்புரை :

சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர் . நீண்ட மூங்கில் , தேன் பொருந்திய வேலமரம் , மாங்கனி , வாழைக் கனி , நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ளதிருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த நிலையே மேலானது .

குறிப்புரை :

கழை - மூங்கில் . கரும்பு . நறவு - மணம் , கதலி - வாழை . பலம் - பழம் . ஒருகாலம் அன்றி :- எக்காலத்தும் . உள் அழிந்து எழும் பரிசு - நெஞ்சுருகி எழுகின்ற தன்மை . அது - அப்பரமானந்தநிலை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தன்அன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே.

பொழிப்புரை :

மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத் தனாய் , சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத் தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப் பெறுவர் .

குறிப்புரை :

வரைவளம் - மலைவளங்களை , மறை நிறைநாவன் - வேதங்கள் நிறைந்த நாவினர் . அர :- அரகர என்னும் முழக்கம் . இப்பணியில் வல்லமை நல்லுயிர்க்கே உண்டாகும் .
சிற்பி