திருவாலவாய்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

குறிப்புரை :

திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும். வானவர் - சிவலோகத்திலுள்ளவர். சிவமானவர். மேலது - திருமேனியில் பூசப்பட்டது. சுந்தரம் - அழகு; சிவப்பொலிவு. துதிக்கப்படுவது என்பதற்கு இத்திருப்பதிகமே சான்று. தந்திரம் - ஆகமம். சிவாகமத்தில் சிறப்பாகச் சொல்லப்படுவது. சமயத்திலுள்ளது - சிவசமயத்தில் அழியாத பொருளாவது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள். பாசம் - பசுவின் கண் இருந்து பதியால் நீறாக்கப்பட்ட உண்மையை உணர்த்துவது. உள்ளது - சிவம். `ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்` - ( திருக்குறள்) திருநீறே சிவம். துவர் - பவளம். பங்கன் - பாகன். திரு ஆலவாயான் - மதுரைத்தலத்தில் திருவாலவாய்க்கோயிலுள் எழுந்தருளியிருப்பவன். திருவாலவாயான் திருநீறு என்பது ஆறன்தொகையாதல் அறிவார்க்குத் திருநீறே சிவகதி தரும் என்னும் உண்மை இனிது புலப்படும். `கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை ... பூசி மகிழ்வாரே யாமாகில் ... சாரும் சிவகதி ...` (திருமந்திரம்)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.

குறிப்புரை :

திருநீறு வேதத்தில் சிறக்க எடுத்தோதப் பெற்றது. கொடிய பிறவித்துயரம் முதலியவற்றைத் தீர்ப்பது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலிய புன்மைகளை நீக்குவது. ஆசிரியர் மாணாக்கர்க்கு ஓதத்தகும் அளவு பெருமை உடையது. ஓதும்போது அணியத் தகுதியுடையது. உண்மையில் நிலைபெற்றிருப்பது. உண்மை - மெய்ப்பொருளுமாம். சீதம் - குளிர்ச்சி. புனல் - நீர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.

குறிப்புரை :

வீட்டை அளிப்பது; எல்லாச் செல்வங்களையும் வெறுத்தவர் முனிவர். முனிவு - வெறுப்பு; கோபம். முனிவர் (முநிவர்) - மனனசீலர் எனலுமாம். அணிவது - அழகு செய்வது, பூண்பதுமாம். சத்திய - எப்பொழுதும் உள்ளது. தக்கோர் - சிவனடியார். பத்தி - திருவடிக்கன்பு. பரவ - வாழ்த்த. சித்தி - எண்வகைச் சித்தி. அணிமா முதலியன.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.

குறிப்புரை :

பால் வெண்ணீறாய், தன்னை அணிந்தோரைப் பிறர் கண்ணுக்கு அழகராயளித்துக் கருத்திற்கு இனிமை விளைப்பது. கவினைத் தருவது - அணிவோர்க்குச் சிவப்பொலிவு தருவது. பேணி - விரும்பி. பெருமை - திருவருட்சிறப்பு. மாணம் - இறப்பு. நீள் என்னும் பகுதி அம் என்னும் விகுதியோடு சேர்ந்து நீளம் என்று ஆகின்றது. நிகள் என்பதன் முதல் நீட்சியே நீள் என்பது. துகள் தூள் என்பது போல. அதுபோல; மாள் + அம். மாளம். ளகரம் ணகரமாதல் இயல்பு; `நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான்` (தி .1 ப .1 பா .9) என்பதில் னகரம் ணகரமானதைக் காண்க. பெள் - பெண். எள் - எண். தகைவது - தடுப்பது. மதி - இயல்பான அறிவு. `மதிநுட்பம் நூலோடு உடையார்` (திருக்குறள் 636). சேணம் - உயர்வு. பாசத்தார்க்குத் தூரத்ததாகிய வீடுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.

குறிப்புரை :

பூசப்பூச இனிமையாக்குவது, சிவபுண்ணியத்தை வளர்ப்பது. பெருமையைப் பேசப் பேச இனிமை உண்டாக்குவது. பெரிய தவத்தோரெல்லார்க்கும் பற்றொழிப்பது. முடிவான பேரின்பநிலையைத் தருவது. அந்தம் - அழகுமாம். தேசங்களெல்லாம் புகழப் பெறுவது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.

குறிப்புரை :

செல்வமாவது துன்பம் போக்குவது, வருத்தம் ஒழிப்பது. வானம் - துறக்கம்; சிவலோகம். அளிப்பது - கொடுப்பது. சிறப்பாகச் சைவ சமயத்தார்க்கும் பொதுவாக எல்லாச் சமயத்தார்க்கும் பொருத்தமாயிருப்பது திருநீறு. சிவபுண்ணியத்தை உடையவரும் பசு புண்ணியத்தை உடையவரும் ஆகிய சைவர் பூசுகின்ற வெண்ணீறு. திருத்தகு மாளிகை - அழகு தக்க மாளிகைகள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.

குறிப்புரை :

எயில் - திரிபுரம். அட்டது - எரித்தது. அது என்பது பகுதிப்பொருள் விகுதி. இருமை - இம்மை மறுமை. பயிலப்படுவது - திருநீற்றை அணிந்து அணிந்து பழகினாலன்றி அதன் பயனை எய்துவதரிது. பாக்கியம் - செல்வம், அருள். துயிலை - கேவலத்தையும் சகலத்தையும். சுத்தமதாவது - சுத்தாவத்தையாய் விளங்குவது. அயில் - கூர்மை. பொலிதரு - விளக்கம் செய்கின்ற.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.

பொழிப்புரை :

பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.

குறிப்புரை :

இராவணன் மேலது - திரிலோக சஞ்சாரியாகிய இராவணன் தனக்கு வாய்த்த செல்வப்பெருக்கத்தை மதித்துத் திருநீற்றையவமதிக்காமல் அணிந்து சிவபிரானருளைப் பெற்றான் என்னும் உண்மை எல்லா நன்மக்களாலும் எண்ணத்தக்கது. திருநீறே வீடு பேறளிக்கும் என்னும் உண்மை எண்ணத்தக்கது. பராவண்ணம் ஆவது - பராசக்தி சொரூபமானது. அதனால் உயிர்களின் பாவம் போக்குவதாகின்றது. தராவண்ணம் - தத்துவம்; மெய்ப்பொருள். அரா - பாம்பு. வணங்கும் - வளையும்; தாழும். அணங்கும் எனின் அழகுசெய்யும் என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.

பொழிப்புரை :

நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.

குறிப்புரை :

மேல் - விண்ணுலகம். உறை - வாழ்கின்ற தேவர்கள். தங்கள் மெய்யது - தேவர்களுடைய உடம்பிற் பூசப்பட்டது. பொடி - நீறு. ஒரு பொருட் பல்பெயர். உடம்பு இடர் ஏலத்தீர்க்கும் இன்பம் - உடம்பெடுக்கும் துன்பத்தைப் பொருந்தப் போக்கும் இன்பம். உடம்பிலுள்ள இடருமாம். ஆலமது - நஞ்சு. மிடறு - திருக்கழுத்து.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.

பொழிப்புரை :

மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.

குறிப்புரை :

குண்டிகை - கமண்டலத்தை ஏந்திய. கையர்கள் - கீழ் மக்கள். கண் திகைப்பிப்பது - கண் திகைக்கச்செய்வது. கருத - தியானிக்க. எண் திசைப்பட்ட பொருளார் - எட்டுத்திசையிலும் பொருந்திய சிவமாகிய மெய்ப்பொருளை அடைந்தவரும், விரும்பினவரும், வழிபடுபவருமாகிய சைவர். அவர் ஏத்தும் தன்மையுடையது. அண்டத்தவர் - மேலுலகத்தவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

பொழிப்புரை :

ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.

குறிப்புரை :

ஆற்றல் - வலிமை. அடல் - கொலை. இரண்டும் உடையது விடை. ஆலவாயான் திருநீற்றைப் போற்றி - முதற் பத்துப் பாக்களால் திருவாலவாய்ச் சிவனுடைய திருநீற்றைத் துதித்து. புகலி - சீகாழி. பூசுரன் - பூமியிலுள்ள தேவர். தேற்றி - சைவத்தின் மாண்பைத் தெரிவித்து. தென்னன் - கூன்பாண்டியன். தீ பிணி - தீமையை விளைவிக்கும் நோய்கள். வல்லவர் எழுவாய்; நல்லவர் பயனிலை.
சிற்பி