திருமருகல்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால்வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே.

பொழிப்புரை :

நீர்நிலைகளில் குவளை மலர்கள் மலர்ந்து மணம் செய்யும் திருமருகலைத் தனக்குரிய ஊராக உடைய பெருமானே! இப்பெண், சடையாய் என்றும் விடையாய் என்றும் நீயே எனக்குப் புகலிடம் என்றும் கூறி அஞ்சி மயங்கிவிழுகின்றாள். உன்னையே நினைந்து புலம்பும் இவள் மனவருத்தத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத்தக்கதோ?

குறிப்புரை :

`எனும்` `விழும்` செய்யுமென்னும் வாய்பாட்டு முற்று வினை; ஈண்டுப் பெண்பாற்குவந்தது. `ஆல்` என்பன அசைகள். சரண் நீ - நீயே அடைக்கலம். வெருவா - வெருவி, `அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக்கம்பனை` (சுந்தரர், கச்சியேகம்பம்) அஞ்சுதல் உள்ள நிகழ்ச்சி. வெருவுதல் வாயொலி. மடை - நீர் மடையில். மருகல் - ஒருவகை வாழை மரத்தாற்பெற்ற தலப்பெயர். உடையாய் - சுவாமீ. உள் மெலிவு - மனநோய்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் குவளை மலர் ஆகியன மலர்ந்து மணம் பரப்பும் திருமருகலில் எழுந்தருளிய எம் தந்தையே! இவள் உன்னை நினைந்து, `சிந்தையில் நிறைந்துள்ளவனே! என்றும் சிவனே என்றும், எல்லோர்க்கும் முற்பட்டவனே என்றும், முதல்வனே` என்றும் புலம்பி நைகின்றாள். இவள் துன்பத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத் தக்கதோ?

குறிப்புரை :

சிந்தாய் - சிந்தையே; அழியாதவனே எனலுமாம். முந்தாய் - முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருளே. முதல்வா - ஆதியனே. கொந்து - பூங்கொத்து. எந்தாய் - எம் அப்பனே, எம் அன்னையே. ஏசறவு - மெய்ம்மறத்தல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

அறையார் கழலும் அழல்வா யரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற வீரக்கழலையும், கொடிய விடம் பொருந்திய வாயினை உடைய பாம்பையும் பிறையணிந்த சடையினையும் உடையவனே! பெருமைக்குரிய வேதங்களைக் கற்றுணர்ந்த மறையவர் வாழும் திருமருகலில் மகிழ்ந்து உறைபவனே! இப்பெண்ணை அவள் முன்கையில் அணிந்திருந்த வளையல்களைக் கவர்ந்ததோடு அழகையும் கவர்ந்தாயே! இதுதகுமோ?

குறிப்புரை :

அறை - ஒலி, அழல் வாய் அரவு - (நஞ்சு) வெப்பம் பொருந்திய வாயுடைய பாம்பு. மறையார் மருகல் - வேதங்களை உணர்ந்தவர் வாழ்கின்ற திருமருகல். இறை - கைச்சந்து. எழில் - அழகு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.

பொழிப்புரை :

முழங்கிவந்த கங்கையைத் தன் சடைமிசை மறைத்தவனே! உலகெங்கணும் சென்று பலியேற்றுத் திரிபவனே! குற்றம் அற்ற புகழாளனே! நீர் நிறைந்த திருமருகலைத் தனது இடமாகக் கொண்டு மகிழ்பவனே! இப்பெண்ணை மெலியும் நீர்மையள் ஆக்கவும் விரும்பினையோ?

குறிப்புரை :

ஒலிநீர் - முழங்குங்கங்கை. கரந்தாய் - மறைத்தாய். பலி - பிச்சை. நீர்மலி மருகல் என்றும் மாற்றலாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்டம் உடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.

பொழிப்புரை :

தெளிந்த நீல நிறம் பொருந்திய மேகம் தோன்றினாற் போன்ற அழகிய நீலகண்டத்தை உடையவனே! திருமருகலை வந்தடைந்த, நீலவண்டுகளின் தொகுதியோ எனக்கருதக் கூடிய கூந்தலை உடைய இளைய இப்பெண்ணின் ஒளிபொருந்திய கண்கள் கலங்குமாறு இவளுக்கு அயர்வை உண்டாக்கி விட்டாயே. இது தகுமோ?

குறிப்புரை :

துணி நீல ... ... கண்டம் - தெளிந்த நீலநிறம் உடைய மேகம் தோன்றினாற்போன்ற அழகிய நஞ்சாற் கறுத்த திருக்கழுத்தை. கணி - கருதுகின்ற. அயர்வு - சோர்வு, மறதி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே.

பொழிப்புரை :

பலராலும் பரவிப் போற்றப் படுபவனே! சடையின் மேல் விளங்கித் தோன்றும் பிறை ஒன்றை உடையவனே! திருமருகலை வந்தடைந்த இப்பெண் விடியும் அளவும் துயிலாதவளாய்த் துயருறு கிறாள். அடியவளாகிய இவள்மீது பழிமொழி வருவது தக்கதோ?

குறிப்புரை :

பரவ - துதிக்க. மலரும் - பரவும். புலரும்தனை - விடியு மளவும். துயிலாள் - தூங்காதவள், புடை - பக்கம், வெளி. அலர் - பழிச்சொல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே.

பொழிப்புரை :

மழுப்படையை உடையவனே! மருகற் பெருமானே! தவறாமல் `பெருமான் திருவடிகள் வாழ்க` என்று கூறிக் கொண்டே துயில் எழுந்து இரவும் பகலும் உன்னையே நினைந்து தொழுபவளாகிய இவளைத் துயருக்குரியவள் ஆக்கினையே! இது தகுமோ?

குறிப்புரை :

பெருமான் கழல் வாழ்க எனா வழுவாள் எழுவாள் என மாற்றுக. எனா - என்று. வழுவாள் - தவறாதவளாய். எழுவாள் - உறங்கிவிழித் தெழுவாள், இரவும் பகலும் நினைவாள். மழுவாள் - மழுவாகிய படை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் இவளை அலராக் கினையே.

பொழிப்புரை :

இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது, அவனது ஆற்றல் அழியுமாறு, விளங்கும் தனது காற்பெருவிரலை ஊன்றிய அளவில் அவன் செய்வதறியாது இடர்ப்பட்டு மீண்டு, வலமாக வந்து பணிந்து வரம் கொண்ட மருகற்பெருமானே! மாலைசூடி மணம் கொள்ள இருந்த இவளுக்குத் துன்பம் வரச்செய்தனையே! இது தக்கதோ?

குறிப்புரை :

இறைவன் - அரசன். (இராவணன்). விலங்கல் - மலை (கயிலை) துலங்கு - விளங்கிய. ஊன்றலும் - அழுத்தியதும். தோன்றலனாய் - செய்வது இன்னதென்று தோன்றப்பெறாதவனாய். வலம்கொள் - வலமாக வந்து பணிந்து வேண்டி வரம் கொண்ட, தோன்றலனாய் என்பது, வலங்கொள் என்பதொடு இயையும்; இன்றேல், முடிபில்லாதொழியும். அலங்கல் - மாலை. அசைந்திடுதலும் ஆம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியா ததொர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே.

பொழிப்புரை :

நெருப்புப் போலச் சிவந்த சடையையும், அடியையும் திருமால் பிரமன் ஆகிய இருவர் அறியமுடியாதவாறு ஒளிப்பிழம்பாய் உயர்ந்து தோன்றியவனே! பிறவி நீங்கிய முக்தர்கள் வாழும் திருமருகலில் விளங்கும் பெருமானே! அரியவளாக இத்தலத்துக்குவந்த இவளைத் துன்புறச்செய்தாயே! இது தக்கதோ?

குறிப்புரை :

எரி ஆர் சடை - நெருப்பைப்போலும் சிவந்த சடை. தீத் திரள் - ஒளிப்பிழம்பு, இலிங்கபுராணவரலாறு. மரியார் - திருவடி வழிபாட்டால் பிறவி நீங்கியவர்.(ஜீவன் முக்தர்) அரியாள் - அரியவள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

அறிவில் சமணும் அலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே.

பொழிப்புரை :

அறிவற்ற சமணர்களும் எங்கும் பரவி வாழும் சாக்கியர்களும் நெறியல்லனவற்றைச் செய்து நின்று உழல்பவராவர். மான்கன்றை ஏந்திய கையை உடையவனே! மருகற் பெருமானே! உன்னை நினையும் அடர்ந்த கூந்தலினளாய இப்பெண்ணின் மனத்தைச் சிதறுண்ணச்செய்தீரே, இது தகுமோ?

குறிப்புரை :

அறிவு இல் சமண் - மெய்ப்பொருள் உணர்வில்லாத சமணர். அலர் - பலராகப் பரவிய. நெறி அல்லன - சைவநெறி அல்லாத புன்னெறிகள். மறி - மான்கன்று, நெறி - நெறித்தல், அடர்ந்திருத்தல். நிறை - நெஞ்சைக் கற்புநெறியில் நிறுத்தல். (குறள் -57 உரை) `நிறை எனப்படுவது மறை பிறரறியாமை` (கலித்தொகை .136) என்ற தன் கருத்தும் அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.

பொழிப்புரை :

தன்மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார் வாழும் மருகற் பெருமான் திருவடிகளை உயர்ஞானம் உணர்ந்து நினைதலால் பதி இயல்புற்ற ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களைப் பாடவல்லார் புகழ், அகன்ற இவ்வுலக மெல்லாம் விளங்கித்தோன்றும்.

குறிப்புரை :

வயஞானம் - தன்வயமாக்கிய திருவருண்ஞானம். அருள்வயமான நல்லோர் வாழும் மருகல் என்க.
சிற்பி