பண் :இந்தளம்

பாடல் எண் : 12

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.

பொழிப்புரை :

செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின் அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள், வெண்மையான துணியிற் பவளங்கள் பரப்பினாற் போல விளங்கும் திருப்பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் நெருங்கிவந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும் திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம் பிறையை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்திருப்பதிகம் முதலாக நான்கு பதிகத்தில், சிவபெருமானை முன்னிலையிற் பெற்று, வினாவுதலும் விடை கூறியருள வேண்டுதலும் அமையப்பாடியிருத்தல்பற்றி, இவற்றை `வினாவுரை` என்றனர். இத்தலைப்புடைய பிற மூன்றும் காண்க. இதன் ஒவ்வொரு திருப்பாடலிலும் வெவ்வேறு பொருளைக் குறித்து வினாவினார். முதல் வினா இறைவன் திருமுடிச்சார்புடையது. ஈற்று வினா, திருவடிச்சார்புடையது. இடையிலே எருதேற்றம், மாதுபாகம். காமதகனம், கங்கையடக்கம், குழையும் தோடும் குலவும் முகம், இராவணனுக்கு அருளிய ஆக்கம் என்பவை வினாவிற்குரிய பொருளாயுள்ளன. மூன்றாம் அடிகளிலுள்ள விளிகளால் திருவடிப் பெருமையும், அமலமும் (யானையுரித்தவரலாறும்), விருப்பு வெறுப்பில்லாத வித்தகமும் (பிறையும் பாம்பும் சூடிய வரலாறும்), உயிர்களைத் தாங்கியுதவும் அருளுடைமையும் (மானேந்தியதால் விளங்கும் பசுபதித்துவமும்), திருவெண்ணீற்றுத் திருமேனிப் பொலிவும், மால்விடையூரும் மாட்சியும், மறை முதலாகும் இறைமையும், அடியாரைக்காக்கும் அடியும் (காரணமும்) குறிக்கப்பட்டன. இவ்வாறு பதிகந்தோறும் உய்த்துணர்ந்து போற்றிவரின், சிவபிரான் திருவருள் எளிதின் எய்தும். திருமுறையைப் பாராயணம் புரிவோர் அதனால் பெறும் பயன் அவரவர் அநுபவத்தால் அன்றி அறிய ஒண்ணாது. பாக்கள் வெளிப்படையாகத் தோன்றலாம். கருத்து அருள்வெளியைக் கவர்ந்தது, மருளுலகம் இவ்வுண்மையை உணராது. வேதத்தின் இயல்பே இதன் இயல்பு. முதற் பத்துத் திருப்பாடல்களுள்ளும் `சொலீர்` என்று விடையிறுத்தருள வேண்டுவதுணர்க. சடையில் பிறையும் பாம்பும் ஒருசேர வைத்ததற்குக் காரணம் சொல்ல வேண்டுகின்றார்; சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கொள்ளும் ஐதிகத்தைக் கருத்திற் கொண்டு, பகைப்பொருள்கள் இரண்டும் ஓரிடத்தில் இருப்பது குற்றம் என்பார்க்கு, `வேண்டுதல் வேண்டாமை இல்லான்` ஆகிய சிவபிரான் சடையில், பகை நீங்கி உறவுகொள்ளும் நிலையை அவ்விரண்டும் அடைந்துள்ளன என்றார். பிறையைச் சூடிய வரலாறு, சிவாபராதம் புரிந்தாரும் அதனை உணர்ந்து அந்த இறைவனை வணங்குவராயின், அவர்க்குத் திருவருள் கிடைப்பது உறுதி என்னும் உண்மையை உணர்த்துவது. ஐந்தலைப் பாம்பணிந்தது,`பிறவி ஐவாய் அரவம் பொரும் பெருமான்` (திருவாசகம் 139) என்ற கருத்தினது. `தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறியா மதியான் என அமைத்தவாறே` (பட்டினத்தார் ஒருபா ஒருபஃது 6.) `சோழவளநாடு சோறுடைத்து` இதிலுள்ள செந்நெல் அம் கழனிப்பழனம் உடைமை, சீகாழிக்கும் உரித்தாயிற்று. கிழி - துணி. கிழி (துணியும் அறுவையும்) காரணப்பெயர், புரை - ஒத்த. துன்னி-நெருங்கி. துன்னித்தோய்கழல் என்க. பழனத்தின் அயலிடங்களில் புன்னைப் பூக்கள் விழுந்துகிடக்கும் தோற்றம் வெள்ளைத் துணியில் பவளம் கிடக்கும் காட்சியை ஒத்திருந்தது என்க. `புன்னை பொன்தாது உதிர்மல்கும் அந்தண்புகலி` (தி.3.ப.7.பா.9) என்றதால் அதன் பூக்கள் செம்பவளம் போல்வன ஆதல் அறியப்படும். பாண்பு என்பது பாம்பு என்று திரிந்தது. பாண் - பாட்டு. பாட்டைக் கேட்கும் இயல்புடையது பாண்பு. இதில், பிறையும் பாம்பும் சடையில் ஒருங்கு வைத்தவாற்றை வினாவினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொற்கழ லீர்சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.

பொழிப்புரை :

எறிகின்ற தெளிந்த கடல் அலைகளில் ஏறிவந்த சங்குகளும் இப்பிகளும் பொன்போல் விளங்கும் தாமரைகள் மலர்ந்த வயல்களில் வந்து புகும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் சூழ்ந்து தொழும் அழகிய திருவடிகளை உடைய இறைவரே! அயிராவணம் முதலிய ஊர்திகள் இருக்க விடையேறி வருதல் உமக்கு ஏற்ற தன்மைத் தாகுமோ? சொல்வீராக.

குறிப்புரை :

எற்று - எறிந்த. திரை - அலை. இப்பி - சங்கினத்துள் முதலாவது. இடம்புரியும் வலம்புரியும் சலஞ்சலமும் பாஞ்சசன்னியமும் ஆகிய சங்கினம் நான்கும் முறையே இப்பி முதல் சலஞ்சல முடியக்கூறும் நான்காலும் ஆயிரம் ஆயிரமாகச் சூழப்பெற்ற பெருமையின. (நிகண்டு, தொகுதி 3.பா.73) பெற்றம் - எருது. பெற்றிமை - தன்மை, பேறு, உயர்வுடையது. சிறந்த பாக்கியம் என்னுங்கருத்தில் வந்தது. பெருமகன் என்பது பெருமான் என்று மருவிற்று. மகன் - தேவன், (மகள்-தேவி, திருமகள், நாமகள்) பெருமானிர் - விளி, ஏகாரம் ஈற்றசை, சீகாழிக் கழனியிற் சங்கும் இப்பியும் பொன்போல் விளங்கும் தாமரைகளும் மிக்குள்ளன; பெற்றமேறுதல் - `பசு வேறும் பரமன்` விடையேறுதல்; பசுபதி என்பதைக் குறித்தது. இதில் விடை (பசு) ஏறும் உண்மையை வினாவினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

சங்கு செம்பவ ளத்திரண் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.

பொழிப்புரை :

பொங்கி வரும் தெளிந்த கடல் அலைகள் சங்கு செம்பவளம் முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து வீசும் நீர்வளம் சான்ற பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் உயரிய பெரிய களிற்றுயானையை உரித்து அதன் தோலைப் போர்த்து மகிழ்ந்துறையும் இறைவரே! உமது திருமேனியின் இடப்பாகமாக உமையம்மையை ஓருடம்பில் ஒன்றுவித்துள்ள மாண்பு யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

பொங்குதல் - உயர்தல், மிகுதல், புனல் - நீர், துங்கம் - உயர்ச்சி. பவளத்தின் அடைமொழியால் மற்றையிரண்டின் நிறம் வெளிப்படை, திரள் - திரட்சி; தொகுதியுமாம். களிறு - மதக்களிப்புடையது (யானையின் ஆண்). மால் - பெருமை, மயக்கமுமாம். உரி - தோல், உகந்தீர் - உயர்ந்தவரே, பங்கம் - கூறு. (பங்கு+அம்). அங்கம் - உறுப்பு, இங்குத் திருமேனியைக் கொள்க. ஒன்றிய மாண்பு - அர்த்தநாரீச்சுரவடிவின் சிறப்பு, யானையை உரித்தது ஆணவமல நாசம் என்பர், மங்கை பங்கு; போகியா யிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் பற்றியும் உயிர்க்கு இச்சாஞானக் கிரியா பலத்தை மிக விளைத்தல் பற்றியும் ஆயிற்று. ஆற்றலுக்கு அதுவே ஏது. களிற்றையுரித்த போது தேவியார் அஞ்சியதாகச் சொல்வது, ஞானமும் அஞ்சத் தக்க அத்துணைக் கொடியது இருண்மலம் என்பதுணர்த்த. இதில் மெய்ப்பாதியில் மாதிருக்கும் உண்மையை வினாவினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.

பொழிப்புரை :

பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும் பொன்னால் அழகுறுத்தப்பெற்ற அழகிய மாளிகைகளும், மிக உயர்ந்து மலர்மணம் கமழும் சோலைகளும் சூழ்ந்துள்ள பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், திங்களும் பாம்பும் தங்கிய செஞ்சடையுடையவராய் எழுந்தருளிய இறைவரே! உயிர்கட்குப் போகத்தின் மேல் அவாவினை விளைக்கும் மன்மதன் வெண்பொடியாகுமாறு அவனைக் கடைக்கண் சிவந்து அழித்தது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

சேமம் - காவல், சேண் உயர்தல் - விண்ணில் மிக வோங்குதல், பொழில் - சோலை, சோமன் - பிறை, அரவு - பாம்பு, காமன் - மன்மதன். வெண்பொடி - (எரிந்த)சாம்பல். சிவத்தல் - கோபக்குறிப்பு,`கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்` (தொல், சொல், உரிச்சொல்.76) மன்மத தகனம், யோகியாய், யோகமுத்தி உதவுதற் பொருட்டு நிகழ்கின்ற இயற்கை. (சித்தியார்.70) இதில் காமனை எரித்தவாற்றை வினாவினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளு நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளு மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.

பொழிப்புரை :

நீர்ப் பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து கொள்ளுதற்குத் திரியும் பிளந்த வாயை உடைய நாரைப் பறவைகள், நாள்தோறும், பல இடங்களிலிருந்தும் வந்து தங்கும் பொழில்கள் சூழ்ந்த பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், துள்ளுகின்ற மான் கன்றை ஏந்திய செங்கையை உடைய சிவபிரானே! பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சிவந்த சடையில் தடுத்து நிறுத்தித் தாங்கிய வியத்தகு செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

நீர்ப் பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து அலையும் நாரைகள் நாள்தொறும் சோலையில் தங்கும் வளமுடையது சீகாழி. நாரை பகுந்த (பிளந்த)வாய் உடைமையால் பகுவாயன புள்ளு என்றார். `வெண் குருகும் பகுவாயன நாரையும் திரைவாய் இரைதேரும் வலஞ்சுழி` (தி.2.ப.2.பா.2) என்றது காண்க. உணவும் இரையும் ஒன்றல்ல என்பதை `இழிவறிந்துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்` (குறள். 946) என்றதனால் அறிக. செஞ்சடைமேல் நீர்ப்பெருக்கை வைத்த வியப்பைச் சொல்வீர் என்று துள்ளுகின்ற மான்கன்றை ஏந்திய செங்கையையுடைய சிவபெருமானை நோக்கி வேண்டுகின்றார். காட்டில் இருக்கத்தக்க மானைக் கையிலும் கையில் இருக்கத்தக்க (கமண்டல) நீரைச் சடைக் காட்டிலும் ஏந்தியது வியப்பு. இதில் கங்கையைத் தாங்கிய ஆற்றலை வினாவினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மாதி லங்கிய மங்கைய ராட மருங்கெலாம்
போதி லங்கம லம்மது வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் டோடுடன் வைத்ததே.

பொழிப்புரை :

அழகிய பெண்கள் ஆங்காங்கே நடனம் ஆடுவதும், ஊர் மருங்கெலாம் பூத்துள்ள அழகிய தாமரை மலர்கள் தம்மிடம் நிறைந்துள்ள தேனை ஒழுக விடுவதும் ஆகிய நீர்வளம் மிக்க பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், ஒளி மிக்க அழகிய தமது திருமேனியில் வெண்ணீறு அணிந்து எழுந்தருளிய இறைவரே! காதுகள் இரண்டனுள் ஒன்றில் குழையையும் ஒரு காதில் சங்கத்தோட்டையும் அணிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

மாது - அழகு, இலங்குதல் - விளங்குதல், மருங்கு - பக்கம், போது - மலரும் பருவத்து அரும்பு, கமலம் - தாமரை, மது - கள், குழையும் தோடும் காதணிகள், சீகாழியில் அழகிய மங்கையர் ஆடுதற்குப் பரிசாகத் தாமரை, மலர்கள் தேனை ஒழுக்குகின்றன என்று நீர் நில வளம் உணர்த்தப்பட்டது. செம்மேனியில் வெண்ணீற்றை அணிவீர் என்று அழைத்து, திருக்காதில் குழையும் தோடும் உடன் வைத்த புதுமையை வினாவினார். `தோடுடையான் குழையுடையான்` (தி.1 ப.61 பா.8) `தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் ..... உடைத்தொன்மைக் கோலம்` என்பது திருவாசகம் (232).

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

பொழிப்புரை :

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

குறிப்புரை :

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே.

பொழிப்புரை :

இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள், பெண் குரங்குகளோடு கூடி, மரங்கள் நிறைந்துள்ள சோலைகள் தரும் கனிகளை வயிறார உண்டு மகிழும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் எழுந்தருளியிருந்து, செலுத்தத்தக்க மாலாகிய இடபத்தின் மேல் காட்சிதரும் அடிகளே! இராவணனின் தருக்கினை அழித்து உடன் அவனுக்கு அருள் வழங்கிய ஆக்கத்திற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

வருக்கம் - இனம், கடுவன் - ஆண் குரங்கு, மந்தி - பெண் குரங்கு, தரு - மரம், மாந்திய - தின்ற, துரக்கும் - துரத்தும். (பிறவினை) துரந்த, துரந்து எனல் தன்வினையாட்சி. அருகிய வழக்கு. வருவீராகிய அடிகேள் என்று விளித்து, இராவணனது ஆற்றலை அழித்து அருள்கொடுத்த ஆக்கத்தைப் பற்றி இதில் வினாவினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடநி லாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மால்அயன் நேடிஉ மைக்கண்டி லாமையே.

பொழிப்புரை :

மருங்கெலாம் வரிகளைக் கொண்டுள்ள செவ்விய கயல்மீன்கள் பாயும் நீர் நிலை சூழ்ந்ததும், மதில்கள் சூழ்ந்து நீண்டு உயர்ந்த மாடமாளிகைகள் விளங்குவதுமான பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், வேதங்களைப் பாடியும், இசைப் பாடல் போன்ற இனிய மொழிகளைப் பேசியும் எழுந்தருளிவிளங்கும் இறைவரே! கரிய திருமாலும் பிரமனும் உம்மைத் தேடிக் காண இயலாமைக்குரிய காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

சீகாழியில் உள்ள மாடமாளிகைகளின் உயர்வும் நீள்வும், புரிசையும், நீர்வளமும், அந்நீரிற் பாயும் மீன்களின் செழுமையும் குறிக்கப்பட்டன. வேதாகமங்கள் சிவபெருமான் திருவாக்காதலின், சுருதி பாடிய பாண் இயல் தூமொழியீர் என்று விளித்தார். இதில், அரியும் அயனும் அடிமுடி தேடிக் காணாமையை வினாவினார். பாடிய பாண் (பாட்டு) இயலும் மொழி. தூமொழி. சுருதி - கேள்வி, எழுதாக்கிளவியாதலின் கேள்வியால் தொன்று தொட்டுணர நின்றன. நேடி - தேடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரீகம லர்ந்தும துத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.

பொழிப்புரை :

வளம்மிக்க வண்டல் மண்ணை உடைய வயல்களின் மடைகளில் வாளை மீன்கள் பாயும் நீர் நிலைகளில் தாமரைமலர்கள் மலர்ந்து தேனைத் தரும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், தொண்டர்கள் வந்து வணங்கும் கழல் அணிந்த பழமையான திருவடிகளை உடைய இறைவரே! சமணர்களும் சாக்கியர்களும் உம்மைக் கூறும் பொருளற்ற பழிமொழிகட்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

வண்டல் - வெள்ளத்தால் அடித்துக்கொண்டு வரப்பட்ட உரம்மிக்க மணல். மடை - நீர்மடை. புண்டரிகம் - தாமரை. தொல் கழல் - திருவடியின் தொன்மை. ஆதியும் மத்தியும் அந்தமும் இல்லாதது. கழல் என்பது எருதினது கொம்புபோல் அமைந்தது. பகைவர் உடம்பில் ஊறுபடுத்த, வலக்காலில் தரிக்கப்படுவது. `தாள், களங்கொளக் கழல்ப றைந்தன கொலல் லேற்றின் மருப்புப் போன்றன` (புறநானூறு.4.3-4) என்னும் அடிகளால் அறிக. தேய்ந்த பின் மழமழவென்றாகி எருதின் கொம்பையொத்தது. வடிவில் முழுதும் ஒப்பது. குண்டர் - சமணர். குறியின்மை - பிழையாதகுறி இல்லாமை. (தி.2 ப.82 பா. 10) இதில் புறப் புறச்சமயத்தார் செய்யும் நிந்தையின் பொருளின்மையை வினாவினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே.

பொழிப்புரை :

சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர் வந்து சேரும் மணல் நிறைந்த கடற்கரைச் சோலைகளைக் கொண்டுள்ள புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், அழகு மிக்க பூந்தராயில் எழுந்தருளிய இறைவரைப் பரவிப் பாடிய இப்பதிகப் பாடல் பத்தையும் ஓதவல்லவர் தீவினை அகல்வர். அவர்கள் நல்வினை உடையவர் ஆவர்.

குறிப்புரை :

மகரம் - சுறாமீன், அணவும் - பொருந்தும். கானல் - கடற்கரைச் சோலை. புகலி - சீகாழி. எல்லாவுயிர்க்கும் புகலிடமானது. பகவனார் - திரு, ஞானம் முதலிய ஆறு குணங்களும் உடையவர். பரவுதல் - வாழ்த்தல். தீவினையை அகல்வர் - நல்வினையை அகலாது உடனாவார். ஓடு உடன் இரண்டும் இணைந்து வந்தவாறு அறியத்தக்கது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யால்இசை பாடும்வ லஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போல்ஒளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல்ப யின்றதே.

பொழிப்புரை :

மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம் மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

விண்டு - திறந்து, எல்லாம் - போதுகள் யாவும், விண்டு மலர என்க. விரை - மணம். நசை - விருப்பம். தொண்டு - தொண்டர்.(ஆகுபெயர்). சுடர் - செஞ்சுடர். ஒலிபாடல் - வினைத்தொகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை தேரும்வ லஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.

பொழிப்புரை :

நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும், பிளந்த வாயை உடைய நாரைகளும், ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில் புன்னகையோடு வெள்ளிய பற்கள் விளங்க, செறிந்த ஒளிப்பிழம்பி னராய் எழுந்தருளிய இறைவரே! முடியில் வெண்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுதும் சென்று திரிந்து பலி ஏற்கக்காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

பாரல் - நீளல், அல் விகுதி. வாரல் - வார்தல், ஒழுகுதல். திரைவாய் இரைதேரும் - அலை நீரிலுள்ள மீன் உணவு ஆராயும், குருகு - கொக்கு, மூரல் - புன்னகை, முறுவல் - பல், நகு - விளங்கும், ஊரல் - ஊர்தல், பாரல் - நீளல், நீண்டவாய், பிளத்தல் - பிளந்தவாய் எனில் `பகுவாய்` கூறியது கூறலாகும். `பாரல் வாய்ச்சிறுகுருகு`( தி.3.ப.63.பா.5.) பார்க்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணன் மேலனம் வைகும்வ லஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவல் லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.

பொழிப்புரை :

கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுகளை அளாவி அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அன்னங்கள் வைகும் திருவலஞ்சுழியில், உடலிற்பூசும் சுண்ணமாகத் திருநீற்றுப் பொடியை மேனிமேற் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே! தேவர்கள் எல்லாம் உம்மை வந்து வணங்கும் தலைமைத்தன்மை உடையவராயிருந்தும் வெள்ளிய தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

தாமரைகள் கிண்ணத்தின் உருவம்போல மலர்தலை உணர்த்தினார். கிளர் - விளங்குகின்ற. அளாய் - அளாவி, கலந்து. வண்ணம் - நிறம், அழகு. அன்னம் தாமரைப்பூந்தாதுக்களைப் பொருந்திய அழகுடன் பொடிமணலில் வைகும் வளத்தது வலஞ்சுழி, பொடிக்கொண்டு பூசுதலின் வன்மை சர்வ சங்கார கர்த்திருத்துவத்தைக் குறித்தது. வைகல் - தங்குதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கோடெ லாநிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண நாறும்வ லஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யில்நற வேற்றதே.

பொழிப்புரை :

கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருத்தலால் அங்குள்ள தண்ணீர், குவளை மலரின் மணத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல் வீராக.

குறிப்புரை :

கோடு - கரைகள், குழி - அக்கரைகளுக்கு நடுவிலுள்ள பள்ளம், மாடு - பக்கம், கரைகளில் பூத்த குவளைமலரின் மணம் பள்ளத்திலுள்ள நீரில் நாறும். சேடு - பெருமை, தலை - பிரமகபாலம், நறவு - ஈண்டுப் பிச்சையேற்ற உணவு குறித்து நின்றது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணன் மேலனம் வைகும்வ லஞ்சுழி
முல்லை வெண்முறு வன்னகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.

பொழிப்புரை :

முல்லை நிலத்தைப் போன்ற காடுகளில் கிடைக்கும் நிறம் பொருந்திய மணிகளை எடுத்துச்சென்று விரைவில் அன்னங்கள் நுண்ணிய மணற் பரப்பின்மேல் தங்கி வாழும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிய, முல்லை அரும்பு போன்ற வெண்மையான முறுவலோடு புன்சிரிப்பையுடைய உமாதேவியை ஆளும் ஒளி வடிவுடையவரே! சிறுமையைத்தரும் வெண்டலையோட்டில் பலிகொண்டுழல்வதைச் செல்வமாகக் கருதுதல் ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

குரு - நிறம், வல்லை - விரைவு. முல்லைப்பூ வெண் முறுவலை உடைய நகை (பற்)களுக்கு ஒப்பு. சில்லை - சிறுமை. முல்லை வெண்முறுவல் நகை - பார்வதி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே.

பொழிப்புரை :

நீர் பெருகி வரும் காவிரியில் பூசநன்னாளில் பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்துவரும் நீரில் மூழ்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித்தேசரே! அழகிய சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவரே! பலரும் இகழ வெண்டலையில் நீர் பலிகொள்வது செல்வம் இல்லாமையினாலோ? சொல்வீராக.

குறிப்புரை :

பூசம் - தை முதலிய பன்னிரு திங்களிலும் வரும் நன்னாள், பூசநட்சத்திரம். \\\\\\\"பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ\\\\\\\"(தி.1 ப.32பா.5) என்றருளியதுணர்க. குடைவார் - முழுகுவார். தேசமும் திருவும் நீவிரே. பலி கொள்வதாகிய இல்லாமை என விரிக்க, இல்லாமை - வறுமை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி
அந்த நீர்முத னீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன மரங்களையும், கரிய அகில் மரங்களையும் தாங்கிவந்த காவிரிநீரில் குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே! உலகிற்பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல் பலிகொள்வது ஏனோ! சொல்வீராக.

குறிப்புரை :

கந்தம் - மணம், சந்து - சந்தனவிருட்சம், கார்அகில் - கரிய அகில், அந்தமும் ஆதியும் நடுவும் நீவிரே. `அடிகள்` விளியாங்கால் அடிகேள் என்றும் ஆகும், பந்தம் கருதாமை; பிச்சையேற்றலில் உயிர்க்கு ஆகும் பந்தம் இறைவனுக்கு இன்மையை உணர்த்திநின்றது. பந்தமென்று கருதாமல் என்னும் உரைசிறவாது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும்வ லஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்கவு ழன்றதே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய பெரிய மலர்ச்சோலையில் வண்டுகள் தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிக் கொல்லவந்த காட்டுயானையின் தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே! ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

நசை - விருப்பம், களிறு - ஆண்யானை, மதக்களிப்பையுடையது என்னுங் காரணப்பொருளது. கான் - காடு. உலகு - ஒக்க;- உலகெல்லாம் என்றவாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும்வ லஞ்சுழி
ஆர்த்து வந்தவ ரக்கனை அன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.

பொழிப்புரை :

புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றில் பன் மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்குவோரது இடர்களைப் போக்கியருள்பவராய்த் திருவலஞ்சுழியில் மேவி, தன் வலிமையைப் பெரிது எனக்கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில் அடர்த்தவரே! சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்றுண்பது உம் பெருமைக்கு அழகோ? சொல்வீராக.

குறிப்புரை :

தீர்த்தநீர் - பரிசுத்தம் புரியும் ஆற்றலுடைய நீர், காவிரி முதலிய யாறுகள் புண்ணிய நதிகள் ஆம். தீர்த்தமாகா நதிகளும் உள. பொன்னி - காவிரி, ஆர்த்து - ஆரவாரம்செய்து. சீர்த்த - சீருடைய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவது மெந்தைவ லஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும ளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே! நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே! பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே, நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

உரம் - பெருமை, (சிவபிரானுக்குச் சடையும் ஞானமாதலின்) அறிவுமாம். பலியேற்கும் பாத்திரம் பிரமகபாலமாதலின் \\\\\\\"சிரமெனுங்கலம்\\\\\\\" என்றார். பா.5,10 இல் செல்வம் என்றது குறிப்பு. வரம்பெறலாவதும் மன்னும் என மாற்றலுமாகும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடின் ஞானமென் னாவது மெந்தைவ லஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடும் ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே.

பொழிப்புரை :

வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞானசம்பந்தர் ஓதியருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும்.

குறிப்புரை :

வீடும் அதற்கு ஏதுவான ஞானமும் வேண்டுவீரெனில், விரதங்களால் உடல்மெலிந்தால் ஞானம் ஆவதும் என்? என்று வினாவுக. விரதங்களால் உடல்வாட்டம் அன்றி உண்மை ஞானப்பேறு வாயாது என்றவாறு. எந்தையாகிய சிவபிரானது திருவலஞ்சுழியை (மனத்தால்) நாடி,(வாக்கால்) ஞானசம்பந்தருடைய செந்தமிழ் கொண்டு இசைபாடும் ஞானம் வல்லவர் திருவடி சேர்வது ஒன்றே ஞானமாகும் என்று பொருள்கொள்க. இத்திருமுறை பாடுவாரடிமலர் சேர்வதே வீடுதரும் ஞானமாகும் என்பது கருத்து. `சைவமும் தமிழும் தழைத்தினி தோங்குக` என்று இக்காலத்தில் வழங்கும் தொடரில், `தமிழ்` என்றது திருமுறைகளையே குறிக்கும். பழந்தமிழ் நூல்களையும் தமிழ் மொழியையும் குறித்ததன்று. அவை வேறு பல சமயக் குறிப்புக்களையும் கொண்டிருத்தலாலும், சைவத்தொடு நெருங்கிய தொடர்பில்லாமையாலும், தமிழில் பிறசமய நூல்கள் பல உள்ளமையாலும் அவற்றை ஈண்டுச் சைவத்தொடு சேர்த்து வாழ்த்தினார் என்றல் பொருந்தாது. பிற்காலப் பதிப்புக்களில் `வாடி` என்ற பாடமே உளது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே.

பொழிப்புரை :

அலர்ந்தனவாய பூக்களைக் கொண்டு மூன்று வேளைகளிலும் அருச்சித்துத் தேவர்கள் வந்து வழிபடும் புகழ்மிக்க திருத்தெளிச்சேரியில் விளங்கும் இறைவரே! யாவராலும் செய்தற்கரிய செயல்களைப்புரியும் உமையம்மையோடு பன்றியின் பின் வேடனாகப் பொய் வேடந்தரித்து நின்றது உம் பெருமைக்கு ஏற்ற செயல்போலும்!

குறிப்புரை :

தெளிச்சேரியில் மூன்றுவேளையிலும் தேவர்கள் பூக்களைக் கொண்டுவந்து சிவபூசைசெய்த வரலாறு உணர்த்தப்பட்டது. மேவரும்தொழில், சிவசத்தியின் கிருத்தியம் ஏனையோரெவராலும் அடைதற்கரியவை. கேழல் - பன்றி. சிவனும் உமையும், வேடனும் வேட்டுவிச்சியுமானதை உணர்த்திற்று. பாவகம் - மெய்யல்லாமை குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே
திளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர்
வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்து
களிக்குங் காமனை யெங்ஙன நீர்கண்ணிற் காய்ந்ததே.

பொழிப்புரை :

பக்தியை விளைத்தலால் விண்ணவரும் மண்ண வரும் உம்மை வழிபடற்பொருட்டு, திளைத்து முழுகும் தீர்த்தம் விளங்கும் திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! உம்மீது வளைந்த வலிய வில்லில் ஐந்து மலர்களைப் பாணமாக எய்து களிப்புற்ற மன்மதனை, நீர் நெற்றிக் கண்ணினால் காய்ந்தது எங்ஙனம்?

குறிப்புரை :

சிவபத்தியை விளைத்தலால் தெளிச்சேரி தீர்த்தத்தில் விண்ணோரும், மண்ணோரும், திளைப்பர். அத்தகைய தீர்த்தம் இடையறாத சீர்த்தியை, அத்தலம் உடையது. சிலை -(கரும்பு) வில். ஐந்து (மலர்க்)கணை, எய்து களித்த மன்மதனை நெற்றிக் கண் நெருப்பைப் பெய்தெரித்தது எங்ஙனம் என வினாவினார். காய்தல் - எரித்தல். காம தகனம் புரிந்ததைக் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்ப டுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர்
கொம்ப டுத்ததொர் கோல விடைமிசைக் கூர்மையோ
டம்ப டுத்தகண் ணாளொடு மேவ லழகிதே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய மலர்களை உடைய பொழில்களால் சூழப் பெற்றதும், செம்பினை உருக்கி வார்த்துச் செய்த மதில்கள் சூழ்ந்து விளங்குவதுமான திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! கொம்புகளை உடைய அழகிய விடைமீது கூரிய அம்பு போன்ற கண்களை உடைய உமையம்மையோடு மேவி வருவது அழகுதரும் செயலோ?

குறிப்புரை :

வம்பு - மணம். மதி - சந்திரன். செம்பு - உலோகம். புரிசை - மதில். செம்புமதில். கொம்பு - எருதின்கோடு, கோலம் - அழகு. கண்ணாள் - பார்வதிதேவியார், மேவல் - எழுந்தருளியிருக்குங் காட்சி. இடபாரூடரானதை உணர்த்திற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

காரு லாங்கட லிப்பிகண் முத்தங் கரைப்பெயும்
தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்
ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே.

பொழிப்புரை :

நீர் முகந்து செல்லும் மேகங்கள் உலாவும் கடல், முத்துச்சிப்பிகளையும், முத்துக்களையும் அலைகளால் கரையில் கொண்டுவந்து பெய்வதும் தேர் உலாவும் நீண்ட வீதிகளை உடையதுமான திருத்தெளிச்சேரியில் விளங்கும் இறைவரே! எழுச்சி மிக்கவராய்ப் பலியேற்கச் செல்கின்ற நீர் கச்சணிந்த தனபாரங்களையுடைய உமையம்மையைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லுதற்கு இடமின்றியோ உமது திருமேனியின் ஒரு பாகமாக வைத்துக் கொண்டுள்ளீர்!

குறிப்புரை :

கார் - மேகம். இப்பி - (முத்துப் பிறக்குமிடங்களுள் ஒன்றாய) சங்கினத்தின் முதற்பிறப்பு. முதற்பதிகம் இரண்டாவது பாட்டின் குறிப்பிற்காண்க. தேருலாவும் பெருந்தெரு, ஏர் - எழுச்சி, அழகு. வார் - கச்சு, அர்த்தநாரீச்சுர வடிவமானதை உணர்த்திற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்கும்
செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே.

பொழிப்புரை :

ஒரு பாகமாக உள்ள பார்வதிதேவி உம்மைத் துதித்து, தன் உள்ளத்தே பாவித்து வழிபடுகின்ற, செம்மதிசேரும், மதில் சூழும் திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! ஆடையின்றிப் பல இடங்களுக்கும் நடந்து சென்று பலியேற்றற்குக் காரணம் மைபூசப் பெற்ற இளம் பெண்களை மயக்கி அவர்களின் கைவளையல்களைக் கவர்தற்குத்தானோ? சொல்லீர்.

குறிப்புரை :

முதற்பாட்டிலும் எட்டாவது பாட்டிலும் உள்ளவாறே இதிலும் முன்னிலை (`உம்`, `நும்`) நின்றவாறுணர்க. பார்ப்பதி - பருவதபுத்திரி. செக்கர் - செவ்வானம். மாமதி - பூரணசந்திரன், தேவி பூசித்த திருத்தலம் ஆதலை முன் ஈரடியில் உணர்த்தினார். கண்ணியர் - தாருகாரணியத்து மாதர். வளை - வளையல். மால் - காமமயக்கம். வௌவல் - கவர்தல். நக்கர் -(நக்நர்) ஆடையில்லாதவர், `இக்கலிங்கம்போனால் என் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டேதுணை` என்று நக்நனாதலாலும் கூறினார் இரட்டைப் புலவருள் ஒருவர். பலியேற்றதைச் சொல்லிற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙன நீர்கையிற் காய்ந்ததே.

பொழிப்புரை :

வெண்மையான பிறைதோயும் தழைகள் தாழ்ந்த பொழில் சூழ்ந்ததும், அசைகின்ற அழகிய ஒளியினையுடைய மணிகள் இழைக்கப்பட்ட மாடவீடுகள் திகழ்வதுமான திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவரே! குவளை மலர் போன்ற கண்களை உடைய உமையம்மை நடுங்குமாறு உம்மைக்கொல்ல வந்து அடைந்த கவளம் கொள்ளும் பெரிய யானையை எவ்வாறு நீர் கைகளால் சினந்தழித்தீர்?.

குறிப்புரை :

தவளம் - வெண்மை. அழகுமாம். வெண்பிறை என்றது. அடையின் பொருளின்றிப்பெயரளவாய்நின்றதுபோலும், திவள் அம் எனப்பிரித்து, திவள்கின்ற அழகிய எனப்பொருள் கொள்க. திவளல் - அசைதல், திகழ்தல் - விளங்குதல். `குவளைக் கண்ணி கூறன் காண்க`. துண்ணெனல் விரைவுக் குறிப்பு. கவளம் - யானைகொள்ளும் உணவுத் திரட்சி, மால்கரி - மதமயக்கமும் துதிக்கையும் உடையயானை. கரத்தை உடையது கரி. யானையுரித்ததை உணர்த்திற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும்
சேட டுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர்
மாட டுத்தமலர்க் கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே.

பொழிப்புரை :

மரக்கோடுகள் நிறைந்த பொழிலின்கண் இசைபாடும் குயில்கள் இருந்து கூவுவதும், பெருமைமிக்க தொழிலின்கண் ஈடுபட்டோர் மிகுதியாக வாழ்வதுமான திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! செல்வம் நிறைந்தவளும் மலர்போலும் கண்ணினளும் ஆகிய கங்கை நங்கையை இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் அணிந்த சடையின்கண் சூடியது ஏனோ? கூறுவீர்.

குறிப்புரை :

கோடு - கொம்பு. பொழில் - சோலை, சேடு - பெருமை. மாடு - பொன், செல்வம். கண்ணினாளும் கங்கையுமாகிய நங்கை. தோடு - இதழ், கங்கை சூடியதைக் கூறிற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர்
வித்த கப்படை வல்ல வரக்கன் விறற்றலை
பத்தி ரட்டிக் கரநெரித் திட்டதும் பாதமே.

பொழிப்புரை :

வண்டுகள் விரிந்த மலர்க் கொத்துக்களைச் சூடிய கூந்தலினள் ஆகிய பார்வதிதேவி குயில் வடிவு கொண்டு வழிபட்டதும், ஓவியம் எழுதப்பட்ட கொடிகள் கட்டப்பட்ட மாளிகைகள் சூழ்ந்ததும் ஆகிய திருத்தெளிச்சேரியில் வாழும் இறைவரே! தவத்தால் பெற்ற வாட்போரில் வல்லவனும் வலிய தலைகள் பத்து, கைகள் இருபது ஆகியவற்றைக் கொண்டவனுமாகிய இராவணனைக் கால்விரலால் நெரித்தது உம்பாதம் அன்றோ? சொல்வீராக.

குறிப்புரை :

தெளிச்சேரியில், தேவியார் குயிலுருவுற்றிருக்கின்றார் போலும்! மலர்க்கொத்து -(வண்டுகள்) இரைத்த மலர். குழல் - கூந்தல். அத்தலத்து மாளிகையின் மேலுள்ள கொடியின் சித்திரம் எனலாம். சித்திரம் - அழகுமாம். வித்தகப்படை - சிவன் தந்தவாள். அரக்கன் - இராவணன், விறல் - வலிமை, தலைபத்து, கரம் - கை, இரட்டி:- இருபது. `பத்துமோ ரிரட்டி தோளான்`(தி.4 ப.70 பா.10) இராவணனை அடக்கிய திறம் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமல ரான்முடி தேடியே
ஓல மிட்டிட வெங்ஙன மோருருக் கொண்டதே.

பொழிப்புரை :

காற்றால் எடுத்துக்கொணரப்பெறும் கடலின் திரைகளாகிய கைகள் கரையின்கண் வீசப் பெறுவதும், கடற்கரைச் சோலைகள் சூழ்ந்ததும், சேல் மீன்கள் தவழும் வயல்களை உடைய மருதநிலம் பொருந்தியதும் ஆகிய திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவரே! திருமால் அடியையும், தாமரை மலரில் உறையும் நான்முகன் முடியையும் தேடமுற்பட்டுக் காணாது ஓலம் இட, நீர் எவ்வாறு ஒப்பற்ற பேருருக் கொண்டீர்? உரைப்பீராக.

குறிப்புரை :

கால் - காற்று. திரை - அலை. சேல் - மீன்வகையுள் ஒன்று. திருவடியைத் திருமாலும் திருமுடியைப் பிரமனும் தேடிக்காணாத அருமையைத் தெரிவித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர்
வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே.

பொழிப்புரை :

மந்திரங்கள் ஓதும் மறையோர்களும் தவத்தை உடையவர்களும், செந்து என்ற பண் போன்று இனிய மொழிபேசும் மகளிரும், வாழும் திருத்தெளிச்சேரியில் உறையும் ஒப்பற்ற சதுரரே! கருநிறங்கொண்ட சாக்கியர்களும் சமணர்களும் பேசும் சமய சிந்தனைகளை எவ்வாறு நீக்கியருளினீர்?.

குறிப்புரை :

மறையோர்கள், தவத்தவர் (- தவத்தையுடையவர்) என்று பிரிக்க, செந்து - ஒரு பெரும் பண், `செந்தினத் திசையறுபத முரல்` (தி.2 ப.82 பா.9) நல்ல செந்திசைபாடல். (தி.1 ப.114 பா.11) செந்துநேர் மொழியார். (தி.2 ப.51 பா.11) மொழியவர் - சொல்லுடைய மகளிர், வெந்தல் - எரிந்தகட்டை. நிறம்பற்றிய உவமை. ஆகிய - உவம உருபு. அது சமணர்க்கும் அடையாகும். `காரமணர்` என்ற வழக்குணர்க. சினமுமாம். திறத்தன - வகையின. நீக்குவித்தீர் - நீங்கச்செய்தீர். சதிரர் - மேம்பட்டவர். சாமர்த்தியர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும்வல் லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ விருப்பவர் சொல்லிலே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளிலும் பொழில் சூழ்ந்து இலங்கும் திருத்தெளிச்சேரியில் உறையும் எம் செல்வன்மீது புகழ்மிக்க காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய தக்க பாடல்கள் பத்தையும் வேதமுறைப்படி ஓத வல்லவர்கள் அடையும் பயனைக் கூறின், பெரிய முடிகளைச் சூடிய வானவர்கள் சூழ அவர்கள் இருப்பர் எனலாம்.

குறிப்புரை :

திக்கு - எட்டுத் திக்குகளிலும், மிக்க - எல்லா உலகிலும் மேம்பட்ட. தட - பெரிய. தொக்க - ஒன்றுகூடிய. வல்லார்கள் எழுவாய். இருப்பவர் - பயனிலை. சொல்லில் என்பது சொல்லுங்கால் என்றவாறு. சொல்லில், பத்தும் வல்லவர் வானவர்சூழ இருப்பவர் ஆவர் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
றிரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.

பொழிப்புரை :

கடலின்கண் விளங்கும் சங்குகளும் வெண்ணிறமான இப்பிகளும் கரையில் வந்துலாவுமாறு அலைகள் வீசுவதும், அவ்வலைகளை உடைய கழிகளில் மீன்கள் பிறழ்வதுமான திருவான்மியூரில், எல்லோராலும் புகழப்படும் பொருளாய் உலகனைத்தையும் ஆட்சிபுரிபவராய் விளங்கும் இறைவரே! மலைமாது எனப்படும் உமையம்மையை ஓருடம்பில் உடனாகக்கொண்டுள்ள மாண்பிற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

கடலில் விளங்கும் சங்குகளும் வெள்ளையிப்பிகளும் கரையில்வந்து உலாவும்படி வலியனவாக அலைகள் வீசுகின்றன. அவ்வலைகளையுடைய கழிகளில் மீன்கள் பிறழ்கின்றன. உகளல் - பிறழ்தல். அத்தகைய வளமுடைய திருவான்மியூரிலெழுந்தருளிய சிவபிரானை முன்னிலையாக்கி வினாவியருளினார். `சொற்பொருளாயும் எல்லா உலகங்களையும் ஆளுபவராயும் இருக்கும் சுவாமீ! மலைமங்கையுடனாகிய மாட்சியை மொழிவீர்` என்றார். மாதியலும் பாதியனான உண்மையை வினாவிற்று இத்திருப்பாடல். சொல் - உமை. பொருள் - சிவம். உரையுலாம் பொருள்:- மங்கைபங்கன்; அம்மையப்பன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல்கொண்டுதம்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்
சுந்த ரக்கழன் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.

பொழிப்புரை :

அடியவர்கள் சந்தனம், உயர்ந்து வளர்ந்த கரிய அகில், குளிர்ந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஆட்டித் தமது சிந்தையால் நினைந்து பரவும் திருவான்மியூரில் வலக்காலில் விளங்கும் அழகிய கழல், இடக்காலில் விளங்கும் சிலம்பு ஆகியன ஆரவாரிக்கும் திருவடிகளை உடையவரே! மாலையந்தியின் ஒளி போன்ற செவ்வண்ணத்தை உம் நிறமாகக் கொண்ட காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

திருவான்மியூரில் அடியார், சந்தனமும், அகிலும், அபிடேக தீர்த்தமும் கொண்டு, தியானம்புரிந்து வழிபடுஞ்சிறப்பும், அழகிய திருவடியில் சிலம்பும் கழலும் கட்டவல்லராதலும், அந்தி வண்ணராதலும் இதிற் குறிக்கப்பட்டன. சந்து - சந்தனம். கார் அகில் - கரிய அகிற்கட்டை, (புகைத்தற் குரியது.) கழல் - வெற்றிகுறித்து வலக்காலில் அணிவதொரு படை. எருதின் கொம்புபோன்ற வடிவுங் கூர்மையும் அன்றி அருப்புத் தொழிலும் அமைந்தது. `தாள் களங் கொளக் கழல் பறைந்தன`, கொல்லேற்றின் மருப்புப்போன்றன, சுந்தரம் - அழகு. அந்தி - மாலையந்தி. வண்ணம் - அழகு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறம்
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.

பொழிப்புரை :

காடு, பள்ளமான கழி ஆகியன சூழ்ந்த கடலின் புறத்தே தேன் சொரியும் பசுமையான பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருவான்மியூரில், புலித்தோலை ஆடையாகக் கொண்டு எழுந்தருளிய அடிகளே, நீர், யானையின் தோலை உரித்துப் போர்த்தி அனலாடலை விரும்பியது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

கான் - காட்டில். அயங்கியகழி - பள்ளமானகழி, அசங்குதல் என்பதன் மரூஉவாக் கொண்டுரைத்தலுமாம். கான், கழி, கடல் ஆம் மூன்றன் வேறுபாடும் ஈண்டு உணர்க. தேன் அயங்கிய - தேன்சொரிந்த. பொழில் - சோலை, தோல் + நயங்கு + அமர் + ஆடை. நயங்கு அமர் தோலாடையினீர் என்றலுமாம். ஆடையினீர் - உடையை அணிந்தவரே, நயங்க - நசங்க முன்னைய நிலைமை குலைய (பதி 162.11.;211:.4) அடிகேள் - அடிகளென்பதன் விளியுருவம். அங்கம் உரி என்பது அங்கவ்வுரி என்று விகாரமாயிற்று. அங்கம் - உடம்பு. உரி - தோல், தீயாடியதை வினாவினார். ஆடல் என்றிருந்ததோ? `தோனயங்கம ராடையினீர்` என்பதற்குச் செம்பொருள் கொள்ளல் எளிதன்று. தோல் ஆடை இரண்டற்கும் இடையில் உள்ளதைப் பிரித்தல் எவ்வாறு? நயம் கமர் என்னின் `கமர்` என்பதன் பொருள்யாது? நயங்கு அமர் என்னின் `நயங்கு` என்பது தமிழில் இல்லை. தோன் எனப்பிரித்தல் ஒவ்வாது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மஞ்சு லாவிய மாடம திற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்த்
துஞ்சு வஞ்சிரு ளாட லுகக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.

பொழிப்புரை :

மேகங்கள் உலாவும் மாடங்களையும் மதில்களையும் அழகிய மாளிகைகளையும் உடையதால், இனிய சொற்களைப் பேசுவோர் வாழ்வதாய் விளங்கும் திருவான்மியூரில், எல்லோரும் உறங்கும் கரிய இருட்போதில் ஆடலை விரும்பி மேற்கொள்ளும் வன்மையை உடையவராய் இலங்கும் இறைவரே!, கரியவிடத்தை நீர் உண்டு தேவர்களுக்கு இனிய அருள் வழங்கியது ஏனோ? சொல்வீர்.

குறிப்புரை :

திருவான்மியூரில் உள்ள மாடமாளிகைகளின் உயர்வு மேகங்கள் தங்குமளவினதாயிருந்தது. பொருண்மொழி வல்லார் வாழ்ந்தவூர். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதர், நஞ்சுண்டு வானோரைக் காத்தருளிய திறத்தை வினாவினார். மஞ்சு - மேகம். செஞ்சொல் - பொருள் பொருந்திய செவ்விய சொல். துஞ்சுதல் - துயிலுதல். இருள் தூங்கும்பொழுது ஆடல். வஞ்சு - வஞ்சம், கறுப்பு. வஞ்சிருள் - காரிருள். வஞ்சநஞ்சு - கருவிடம். பயிலும் - பெருகியிருக்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.

பொழிப்புரை :

உலகோரால் புகழப்பெறும் குணநலங்களை உடைய மகளிரையும், உறுதியான வேலைப்பாடுகள் பொருந்திய மதில்களையும் உடைய திருவான்மியூரில் எல்லோரும் வியப்படையும் வண்ணம் பலியேற்கும் தொழிலை மேற்கொண்டு உறைபவரே, நீர் வானத்தில் விளங்கும் வெண்பிறையை உம் செஞ்சடை மேல் வைத்துள்ள வியப்புடைச் செயலை ஏன் செய்தீர்? சொல்வீராக.

குறிப்புரை :

திருவான்மியூர் மங்கையர் கற்பு முதலியவற்றாலும் சிவபத்தியாலும் உலகம் புகழப்பெற்றிருந்தனர். அவ்வூர் மதில் உறுதியும் வேலைப்பாடும் நிறைந்தது. திண்ணெனல் - உறுதிப்பாடு. புரிசை - மதில், தொழில் - வேலைப்பாடு. ஆர்தல் - நிறைதல். துண்ணெனல் - குறிப்புமொழி. திரியுஞ்சரிதைத் தொழில் - பிக்ஷை யேற்கச் செல்லுந்தொழில்.(சிந்தாமணி .3072.3.உரை) இதில் பா.9 - இன் வினாக்காண்க . பிறை - பிறத்தலுடையது. பிறைசூடியதை வினாவினார். செஞ்சடை என்றதால் வெண்பிறை எனக்கொள்ள வைத்தார். விண்பிறையைச் செஞ்சடையில் வைத்தது வியப்பாதல் அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறம்
தீதி லந்தண ரோத்தொழி யாத்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.

பொழிப்புரை :

மலர்கள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததும், மதில்களைப் புறத்தே உடையதும், குற்றமற்ற அந்தணர்கள் வேதம் ஓதுதலை இடையறாது உடையதுமாகிய திருவான்மியூரில் சூதாடு கருவி போன்ற வடிவுடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவரே! பழமையான முப்புரங்களை எரிசெய்து அழித்த உமது வீரச்செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீர்.

குறிப்புரை :

போது - பூக்கும் பருவத்தது. பொழில் - சோலை. புரிசைப்புறம் - மதிற்புறத்தில் உள்ள வேதபாடசாலை, வீடு, சத்திரம் முதலியவற்றில், மாசற்ற அந்தணர் வேதாத்திய நயம் ஒழியாச் சிறப்புடையது திருவான்மியூர். சூது - சூதாடுதற்கருவியாகிய வல்லுக்கு ஆகுபெயர். கொங்கைக்கு உவமை. கொங்கை - உமாதேவி. ஆகு பெயர். முதுமை + எயில் = மூதெயில். மொய்ம்பு - வலிமை. திரிபுர சங்காரத்தை வினாவினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.

பொழிப்புரை :

வண்டுகள் ஒலிக்கும் பெரிய சோலைகளின் நிழலிலும் கானலிலும் தெளிந்த அலைகளை உடைய திருவான்மியூரில் அடியவர்கள் சிவநாமங்களைச் சொல்லித் துதிக்கும், பழமையான கழல்களை அணிந்துள்ள இறைவரே! முற்காலத்தே நீர் சிவஞானத்தைச் சனகாதியர் நால்வர்க்கு மட்டும் உபதேசித்தது ஏனோ? கூறுவீர்.

குறிப்புரை :

இரைத்தல் - ஒலித்தல். திரை - அலை. ஓதம் - நீர். தொண்டு - தொண்டர். இரைத்து - சிவநாம தோத்திரஞ்செய்து. பண்டு - கல்லாலின் நிழற்கீழ் உபதேசித்த அன்று. இருக்கு - சிவஞானோபதேசம். வேதமுமாம். நால்வர் - சனகாதியர். தக்ஷிணாமூர்த்தியாயிருந்து உபதேசித்ததை வினாவினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.

பொழிப்புரை :

தகுதியற்ற நெறியில் வந்த இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டுத் தன் தலைகள் பத்தும் பல திசைகளிலும் வெளிப்பட்டு அவன் அலறுமாறு அவனை அடர்த்தவரே! திருவான்மியூரில் தன் திருமேனியோடு இணைந்த உமையம்மை யாரோடும் வீற்றிருந்தருளியவரே! பல பூதகணங்களும், பேய்க்கணங்களும் உம்மைச் சூழ்ந்து பயிலக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

தகு இல் - தகுதியில்லாத நெறியினில், தசக்கிரீவன் - பத்துத்தலை இராவணன். கிரீவம் - கழுத்து. திருக்கயிலையை எடுத்தபோது அடர்த்த வரலாறு. இதில் இரண்டுமுறை விளித்ததை அறிக. பலபாரிடம் - பூதகணம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்ச்
சுருதி யாரிரு வர்க்கு மறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன்றுகந் தில்பலி யேற்றதே.

பொழிப்புரை :

பெரிய கடல் அலைகள் எட்டுத் திசைகளிலிருந்தும் கொண்டு வந்து தரும் முத்து பவளம் முதலிய வளங்களால் பரவிய புகழ், செல்வம் ஆகியன நிறைந்த திருவான்மியூரில் வேதங்களை ஓதி மகிழும் திருமால், பிரமன் ஆகிய இருவர்க்கும் அறிதற் கரியவராய் விளங்கும் இறைவரே! எருதின்மேல் ஏறி உழன்று பல இடங்கட்கும் மகிழ்வோடு சென்று பலியேற்றற்குரிய காரணத்தைக் கூறுவீராக.

குறிப்புரை :

பொருது - அலைகள்மோதி, வார் - நீளும். வாரி - வருவாய், புகழ் செல்வம் - வினைத் தொகையும் உம்மைத் தொகையும் ஆக நின்றது அறிக. சுருதியார் - வேதங்களில் கூறப்பட்ட அயனும் அரியும், சிவபரத்துவங்கேட்டவர் எனலுமாம். ஆனேறிச் சில்பலிக்குத் திரிந்த வரலாறுணர்த்தினார். இதனை, 5இல் விளியாற் குறித்தது உணர்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினம்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.

பொழிப்புரை :

கருநிறம் மிக்குத்தோன்றும் சோலையின்கண் மாலைக்காலத்தில் வண்டுகள் குழுமித் தவஞ்செய்யும் தொழிலையுடைய அந்தணர் ஓதும் வேதாகமம் போல் இசைபாடிச் சேர்கின்ற திருவான்மியூரில், மேனிமீது மிகுதியாக வெண்பொடியணிந்த திருமேனியை உடையவரே! வஞ்சனையை உடைய சமணர் சாக்கியர் உம்மீது பொய்யுரை கூறிப்பழித்துரைக்கக் காரணம் யாதோ? கூறீர்.

குறிப்புரை :

மை - மேகம், கரியது என்னும் பொருள்தரும் மைப்பு என்ற பெயரின் மரூஉவாகிய மப்பு என்னும் வழக்குமொழியை உணர்க. மாலை - ஈண்டுப்பொழுது, செய்தவம் ஆகிய தொழிலுடைய அந்தணர், முனிவர். இசை - வேதாகம முழக்கம். புகழெனல் பொருந்தாது. மெய்தவப் பொடிபூசல் - பால்வண்ண நாதர் என்னும் பெயர்க்கொப்பத் திருமேனியில் தவக்கோலத்தின் குறியாகிய திருநீற்றைப் பூசுதல். வழிபடுவார் உடம்பு (பிறவி) ஒழிய வெண்பொடி பூசுதல் எனினுமாம். கைதவம் - வஞ்சகம். சமண் - சமணர். கட்டுரைத்தல் - கட்டிச்சொல்லும் பொய்யுரை. புறப்புறச்சமயத்தார் பொருளில்லாத மொழியைக் குறித்த வினா இது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
நீதி யானினை வார்நெடு வானுல காள்வரே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒரு கூறாக உடைய நல்ல தவத்தின் வடிவாய் திருவான்மியூரில் உறையும் ஆதியாகிய எம் பெருமான் அருள் செய்தற்பொருட்டு வினாவிய இதனை ஓதி, ஊழி முடிவாகிய அக்காலத்தே மிதந்து எழுந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன்தன் சொல்லால் எழுந்த இப்பதிகத்தை முறையோடு நினைபவர் நீண்ட வானுலகை ஆள்வர்.

குறிப்புரை :

நல்தவன் - நல்ல தவத்தன். செய்ய - செய்யற் பொருட்டு. வினாவுரை - இறந்தகால வினைத்தொகை, உரையை ஓதி என்க. நீதி - சைவாசாரத்தில் விதித்த ஒழுங்கு. நெடுவானுலகு - திருவடி நீழல். அருள் செய்த என்ற பாடம் பின்னோர் படைத்தது. அது பொருந்தாது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நீடன் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை
சூடன் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
ஆடன் மேவுமவர் மேயவ னேகதங் காவதம்
பாடன் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

பொழிப்புரை :

நீண்டுயர்ந்த சடைமுடிமீது பிறைமதியைச் சூடியவராய் வேதவிதிப்படி வளர்க்கப்பெற்றுச் சுழன்றெரியும் தீயில் ஆடுதலை விரும்பும் இறைவர் உறையும் அனேகதங்காவதம் என்னும் தலத்தைப் பாடுதலை விரும்பும் மனத்தினராய பக்தர்கள் வினைகளையும் அவற்றால் விளையும் பற்றுக்களையும் அறுப்பர்.

குறிப்புரை :

நீடல் - (நீள் + தல்) நீளல், நீடுமாம். நிமிர்தல் - உயர்தல். புன்மை - மென்மை, பொன்மையுமாம். நிலாமுளை - பிறையாகிய முளை. சூடல் - சூடுதல். மறையின்முறை - வேதவிதி. சுலாவு அழல் - சுழன்றெரியுந்தீ. அழலாடல் - தீயிலாடுதல். அநேகதங்காபதம் - வடநாட்டிலுள்ளதொருமலை, பாடல் - பாடுதலை. மேவும் - விரும்பும். வினைபற்று - வினையும் அதனால் வரும் பற்றும். உம்மைத்தொகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்ற னனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாக நிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே.

பொழிப்புரை :

சூலத்தையும் மழுவையும் படைக்கலங்களாகக் கொண்டு, உலகைச் சூழ்ந்துள்ள ஆழமான கடலில் தோன்றிய விடத்தை உண்டு உலகைக் காத்தருளிய பெருமான், அனேகதங்காவதத்தில் நீலநிறம் பொருந்திய பெரிய கண்களையுடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்கும் அழகினராய், அவ்வம்மையோடு குலாவும் செயல்களுக்கு அளவில்லை.

குறிப்புரை :

உண்டு என்னும் இரண்டும் வினைமுற்று. அவர் தொல்படையாகச் சூலமும் மழுவும் உள என்க. ஆலம் - நஞ்சு; நீலம் - நீலநிறம். நீலோற்பலமுமாம், கோலம் - திருக்கோலம். நிலாவுதல் - பிரகாசமாயிருத்தல். குலாவுதல் - பொருந்துதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

செம்பி னாருமதின் மூன்றெரி யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதம்
கொம்பி னேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை
நம்ப னாமநவி லாதன நாவென லாகுமே.

பொழிப்புரை :

செம்பினால் இயன்ற ஒப்பற்ற மும்மதில்களும் எரியச் சினத்தை முனையிலே உடைய ஓர் அம்பினால் எய்து தேவர்கட்கு அருள்புரிந்த வில்லாளியும், அனேகதங்காவதத்தில் பூங்கொம்பு போன்ற இடையினை உடைய உமையம்மையோடு கூடிக் கொல்லேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட நம்பனுமாகிய பெருமான் திருப்பெயரைச் சொல்லாதவை நாக்கள் எனல் ஆகுமோ?

குறிப்புரை :

மதில் மூன்று - திரிபுரம். சினம் வாயது - எரிதலையுடைய முனையுடையது. விண்டுவாகிய பாணத்தின் முனையில் அக்கினியிருப்பதுபற்றிச் சினவாய் எனப்பட்டது. கொம்பின் நேர் இடையாள் - கொம்புபோன்ற இடையினையுடைய அம்பிகை. நம்பன் - எல்லா உயிர்களாலும் விரும்புதற்கு உரியவன், சிவநாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகாத நாக்கள் நாவாகா. (தி.3 ப .4. பா.6,9) நவிலல் - நாவாற்சொல்லி அடிப்படல். `மறை நவில் அந்தணர்`(புறநானூறு, கடவுள் வாழ்த்து)

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல வனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.

பொழிப்புரை :

`தந்தத் திந்தத் தடம்` என்ற ஒலிக்குறிப்போடு அருவிகள் பாய்ந்து சென்று ஒழுக, வெம்மையான கதிர்களை உடைய கதிரவன் ஒளியும், குற்றமற்ற திங்களின் ஒளியும் பரவ, முடிவு அற்ற அளவுபடுத்த முடியாத அனேகதங்காவதம், எந்தையாகிய, திருநீற்றைப் பூசி மகிழும் சிவபெருமானுக்கு இடமாக உள்ளது.

குறிப்புரை :

அருவிக்கூட்டம் பாயும்போது உண்டாகும் ஒலிக் குறிப்பு, `தந்தத் திந்தத் தடம்` என்றுள்ளதாம். பாய்தலால் சிந்துகின்றன. வெந்த - சுடர்ந்த, கதிரோன் - கதிர்களையுடைய சூரியன். வெந்தகதிர்:- வெங்கதிர். மாசு - குற்றம். திங்கள் - சந்திரன். அந்தம் - முடிவு. அளவு - எல்லை. நாசமுமில்லை அளவுமில்லை என்றபடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய்
உறையுங் கோயில் பசும்பொன் னணியா ரசும்பார்புனல்
அறையு மோசை பறைபோலு மனேகதங் காவதம்
இறையெம் மீச னெம்மா னிடமாக வுகந்ததே.

பொழிப்புரை :

திங்களும் ஞாயிறும் உயர்ச்சியை அறிய முடியாது, பக்கத்தே விலகிச் சென்று உறையும் வானளாவிய கோயிலை உடைய தாய்ப், பசும்பொன் போன்ற அழகிய நீர்த்துளிகளை உடையவாய்ப் பறை போன்று ஒலித்து ஒழுகும் அருவிகளை அடுத்துள்ளது ஆகிய அனேகதங்காவதத்தை, எம் ஈசனாகிய இறைவன் தனது இடமாகக் கொண்டு உகந்தருளுகின்றான்.

குறிப்புரை :

பிறையும் - சந்திரனும், மாசு - குற்றம், கதிரோன் - சூரியனும். அறியாமை - அறியாமல். கோயிலின் உயர்ச்சியை அறியமாட்டாமல், பெயர்ந்து - அப்பால் விலகி, சூரிய சந்திரர் திருக்கோபுரத்தைத் தாண்டற்கு உயர்ந்து செல்ல மாட்டாமல் பக்கத்திற் பெயர்ந்துபோவர் என்றது. அசும்பு - நீர்த்துளி, துளித்தல் பொருந்திய புனல். புனல் - நீர். அறையும் - ஒலிக்கும். பறை - வாத்திய வோசையை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சார லனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே.

பொழிப்புரை :

தேனை மிகுதியாகப் பெற்ற மணம் கமழும் சிறந்த மலர்களைப் பறித்து இறைவன் திருவடிகளில் சேர்ப்பிக்கும் அடியவர்களே! வீடுபேறு அடைதற்குப் பின்பற்றும் சரியை, கிரியை முதலான நெறிகளில் நின்று அவனை உணர நீவிர் வல்லீராயின் யானைகள் ஏறி உலாவும் அழகிய சாரலை உடைய அனேகதங்காவதத்துள் விளங்கும் ஆன் ஐந்தாடும் முடியானாகிய சிவபிரான் உங்கட்கு அவ்வானுலகப் பேற்றினை வழங்கியருளுவான்.

குறிப்புரை :

தேனையேறும் - தேனை மிகுதியாகப்பெற்ற. அடி - திருவடியில். சேர்த்துவீர் - (தூவித்) தொழுபவர்களே என்று விளித்தார். ஆனை - யானை. வானை - பேரின்ப வீட்டுலகை. நெறி - சரியை முதலிய நான்குநெறி. உணருந்தனை - உணரும் அளவை. ஆன்ஐ - பசுவினிடத்துண்டாகும் பால் தயிர் நெய் முதலிய ஐந்து. ஆனிலங்கிளர் ஐந்தும் அவிர்முடியாடி, வானை ஏறு நெறியுணர வல்லீரேல் ஆனையேறுமுடியவன் அருள்வதும் வானையே (தி .2 ப .10.பா .5) என்று ஐயந்தீர்த்தருளினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வெருவி வேழமிரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்
குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள்
அருவி பாயுமணி சாரல னேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே.

பொழிப்புரை :

யானைகள் அஞ்சி ஓடுமாறு ஒலித்துப்பாய்வனவும், ஒளிபொருந்திய முத்துக்கள், வெண்பளிங்கு ஆகியன நீரை ஊடுருவி வீழ்வனவும், வயிரங்களைக் கொழித்து அகில்மரங்களை உந்திக்கொண்டு வருவனவும் ஆகிய வெண்மையான அருவிகள் பாயும் அழகியசாரலை உடைய அனேகதங்காவதத்தை அடைந்து அங்கு வாழும் பெருமான் திருவடிகளை அடைவதே மெய்ந்நெறியாகும்.

குறிப்புரை :

அநேகதங்காவதம் என்னும் மலையின்மேலிருந்து பாயும் வெள்ளருவியொலியால் யானைகள் அஞ்சி ஓடும். அவ்வருவி முத்துக்களையும் பளிங்குகளையும் வயிரங்களையும் அகில் (முதலிய மரங்) களையும் அடித்து வருகின்றது. அத்தகைய அழகிய சாரல் உடைய மலை; அம்மலைமேல் எழுந்தருளிய இறைவன் திருவடி சேர்வது மெய்ந்நெறி. வெருவி - அஞ்சி. வேழம் - யானை. இரிய - ஓட. உருவி - ஊடுருவி. வயிரம் - வச்சிரமணி. கொழியா - கொழித்து. அகில் - மணமுள்ளதொருமரம். வாய்மை - மெய்ந்நெறிக்குப் பண்பாகுபெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

ஈர மேதுமில னாகி யெழுந்த விராவணன்
வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்ப தணிவான்ற னனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே.

பொழிப்புரை :

அன்பு ஒருசிறிதும் இன்றித் தன் வலிமையைப் பெரிது என எண்ணி எழுந்த இராவணனை வீரம் அற்றவனாகச் செய்தருளிய, கயிலை மலைக்குரியவனும், ஆரமாகப் பாம்பை அணி பவனும் ஆகிய சிவபிரானின் அனேகதங்காவதத்தை அன்போடு நினைபவர் வினைகள் மாயும்.

குறிப்புரை :

ஈரம் - அன்பு. ஏதும் - யாதும், சிறிதும். விலங்கல் -(கயிலை) மலை. ஆரம் - மாலை. வாரம் - அன்பு. பக்தியின்றி வீரம் ஒன்றே கொண்டு கயிலையைத்தூக்கிய இராவணனுக்கு அவ்வீரம் சிறிதும் இல்லாதவனாக்கினார். விலங்கலான் - கயிலையான், சிவபிரான்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் கையமாய்
எண்ணும் வண்ணமறி யாமை யெழுந்ததோ ராரழல்
அண்ண னண்ணுமணி சாரல னேகதங் காவதம்
நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே.

பொழிப்புரை :

திருமால் நான்முகனோடு கூடி அடிமுடி அறிய முற்பட்டபோது அவர்கள் அறிய முடியுமா என எண்ணி ஐயுறும் வண்ணம் அவர்கட்கு இடையே எழுந்ததோர் அழற்பிழம்பாகிய சிவபெருமான் எழுந்தருளிய அழகிய சாரலை உடைய அனேகதங்காவதத்தை நண்ணும் இயல்புடையார் வினைகள் நாசமாகும்.

குறிப்புரை :

கண்ணன் - கிருட்டிணனாக அவதரித்த திருமால். வண்ணமலர் - தாமரை. வண்ணம் - அழகு. ஐயம் - சந்தேகம். அறியாமை - அறியாமல். ஆர் அழல் - நிறைந்த பெரியதீப்பிழம்பு (அக்கினிமலை வடிவம்) அண்ணல் - சிவபிரான். நண்ணும் - சேர்ந்து வழிபடும். வண்ணம் - வகை கூட்டியோர்க்கு ஐயமாய் எனப்பொருள் காண்க. மதுரைத் திருஞானசம்பந்தப் பிள்ளைப் பதிப்பில் `கையமாய்` என்ற பாடமுளது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்
ஆப தம்மறி வீருளி ராகில னேகதங்
காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே.

பொழிப்புரை :

சிறந்த சிவபதத்தை அறியாதவராகிய சமண புத்தர்கள் `ஏ ஏ` என இகழத்தக்கவர்களாய் இறுமாப்புடையவர்களாய் உழல்கின்றவர் ஆவர். நாம் அடையத்தக்கது ஆகிய சிவபதத்தை அறியும் அவா உடையீராயின் அனேகதங்காவதத்துள் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை ஆராய்ந்துணர்தலே நீவிர் செய்யத்தக்க கருமம் ஆகும்.

குறிப்புரை :

மாபதம் - பெரிய பதவி. ஏ பதம் - ஏ ஏ என்னும் இகழ்கின்ற சொல்; `ஏ ஏ இவள் ஒருத்தி பேடியோ என்றார்` (சீவக சிந்தாமணி. பா. 652.) அறிவீருளிர் - அறிவீராயிருப்பீர் (ஆகில்). கருமம் - இன்றியமையாது செயற்பாலதொருகடன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

தொல்லையூ ழிப்பெயர் தோன்றிய தோணிபு ரத்திறை
நல்லகேள் வித்தமிழ் ஞானசம் பந்தனல் லார்கண்முன்
அல்லல் தீரவுரை செய்த வனேகதங் காவதம்
சொல்ல நல்லவடை யும்மடை யாசுடு துன்பமே.

பொழிப்புரை :

பழமையான ஊழிக்காலத்தே தோணியாய் மிதந்த காரணத்தால் அப்பெயர் பெற்ற தோணிபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனும், நல்ல நூற்கேள்வியை உடையவனும் ஆகிய தமிழ் ஞானசம்பந்தன் நல்லோர்கள் திருமுன்னர், அல்லல்தீர உரைத்தருளிய அனேகதங்காவதத்தைப் புகழ்ந்து போற்றின், நல்லன வந்துறும். நம்மைச் சுடும் துன்பங்கள் நம்மை அடைய மாட்டா.

குறிப்புரை :

தோணிபுரம் - சீகாழி. இறை - தலைவர். தமிழ் - சைவத்தமிழ் நூல்களை அருளும். கேள்வி - சுருதி. ஒவ்வொரு பதிகமும் ஒவ்வொருநூலாதல் ஆசிரியர் திருவாக்காலறியலாம். `கழுமலத்தின் பெயரை நாளும் பரவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையால் பனுவல்மாலை.`(தி .2 ப.70 பா.12) `வன்றொண்டன் பன்னு தமிழ் நூல் வல்லார்`(தி.7 ப.41 பா.10) நல்லார்கள் - சிவனடியார்கள். நல்ல - நல்லன. நல்ல அடையும், சுடுதுன்பம் அடையா என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

கோடல்கோங் கங்குளிர் கூவிள மாலை குலாயசீர்
ஓடுகங் கையொளி வெண்பிறை சூடு மொருவனார்
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

வெண்காந்தள், கோங்கம் குளிர்ந்த வில்வ மாலை சீர்மிகு கங்கை, ஒளி வெண்பிறை ஆகியனவற்றை முடியிற் சூடிய ஒருவனும் பாடற்குரிய வீணை, முழவம், குழல், மொந்தை ஆகியன தாளத்தோடு ஒலிக்க ஆடுதலில் வல்லவனும் ஆகிய இறைவன் ஐயாறுடைய ஐயனாவான்.

குறிப்புரை :

கோடல் - வெண்காந்தள். கோங்கம் - கோங்குமரம். இதைக் கன்னிகாரம் துருமோற்பலம் என்பர். கூவிளம் - வில்வம். இதன் முன்னீரடியிற் சிவபெருமான் சூடுவனவற்றுள் ஐந்தும் பின்னீரடியில் அவனது திருக்கூத்து வன்மையும், இசைக்கருவிகளும் கூறப்பட்டன. எல்லாத்தலங்களிலும் பரமேசுவரனது நடனம் வணங்கப் பெறும் உண்மை சாத்திரமுணர்ந்தோர்க்கே விளங்கும். ஆடல் அமர்ந்துறைகின்ற ஐயாறு என்ற அப்பர் அருண்மொழியும் அறிக. பாடல் - இசைப்பாட்டு. முழவம் - தண்ணுமை, மத்தளம், குடமுழா. குழல் - வேய்ங்குழல், மொந்தை - ஒருகட்பறை, பண்ணாக ஆடல் - பண்ணோடு பொருந்த ஆடுதல். ஐயாறு:- பஞ்சநதம் என்பது வடமொழிப் பெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

தன்மை யாருமறி வாரிலை தாம்பிற ரெள்கவே
பின்னு முன்னுஞ்சில பேய்க்கணஞ் சூழத் திரிதர்வர்
துன்ன வாடை யுடுப்பர் சுடலைப்பொடி பூசுவர்
அன்னமா லுந்துறை யானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

அன்னங்கள் ஒலிக்கும் ஐயாறுடைய ஐயனின் தன்மையை அறிபவர் எவரும் இல்லை. அத்தகைய இறைவர் பிறர் எள்ளுமாறு சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத்திரிவார். கந்தலான ஆடையை இடையிலே கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை மேனிமேல் பூசுவார்.

குறிப்புரை :

எள்க - இகழ. திரிதர்வர் - திரிதருவார், திரிவார். துன்னம் - துளைத்தல், தைத்தல். துன்னவாடை - கந்தை. `துன்னங் கொண்ட உடையான்` (தி .2 ப .76. பா .2) `துன்னலினாடையுடுத்து` ( ப .1 ப .41 பா .3) எனப்பிற பதிகங்களிலும் காணலாம். சிவபிரானியல்பை அறிபவர் எவரும் இல்லை. அவர் பின்னும் முன்னும் சில பேய்க்கூட்டம்சூழத் திரிவதைக் கண்டு பிறர் இகழ்தலுங்கூடும். கந்தலணிவார். சுடுகாட்டுப் பொடி பூசுவார். அவற்றால் அவனை அளந்தறியலாகாது. அன்னப்புட்கள் ஆலும் (- ஒலிக்கும், ஆடும்) துறை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கூறு பெண்ணுடை கோவண முண்பது வெண்டலை
மாறி லாருங்கொள் வாரிலை மார்பில் அணிகலம்
ஏறு மேறித் திரி வ ரிமை யோர்தொழு தேத்தவே
ஆறு நான்குஞ்சொன் னானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக் கொண்டவர்: கோவண ஆடை உடுத்தவர்: வெள்ளிய தலையோட்டில் பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள அணிகலன்களோ பண்டமாற்றாகப் பிறகொள்வார் இல்லாத ஆமையோடு, பன்றிக்கொம்பு, பாம்பு முதலானவை. இடபத்தில் ஏறித்திரிபவர். தேவர் பலரும் வணங்க நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர்.

குறிப்புரை :

கூறு - இடப்பால், பெண் - உமாதேவியார், உடை கோவணம், உண்பதும் வெண்டலையில். மார்பிலணிந்தன முற்றலாமையிளநாகமொடு ஏனமுளைக் கொம்பு, பரிவர்த்தனஞ் செய்து கொள்ளுமுறையில், ஏனைப் பொற்கலம் மணிக்கலம்போலக் கொள்வார் எவருமில்லை. மாறில் - பரிவர்த்தனஞ் செய்யவேண்டின். இப்பொருளில் உலக வழக்குமுண்டு. ஏறு - எருது. ஆறும் - சிக்கை, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் அங்கம் ஆறும்; நான்கும் - வேதம் நான்கும், (தி .2 ப .84 பா .11) சொன்னான் - சிவபிரான். `மிக்க வேத மெய்ந்நூல் சொன்னவனே` திருவாசகம் 147.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

பண்ணி னல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்
எண்ணி னல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந் தானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

பண்ணிசையினும் இனிய மொழி பேசுபவரும், பவளம் போன்று சிவந்த வாயினை உடையவரும், எண்ணற்ற நல்ல குணங்களை உடையவரும், வேல் இணை போன்ற விழியினரும் ஆகிய இளமகளிர், தம் தன்மைகளையும், வலிய வீரச் செயல்களையும் தம் வாய் மொழியால் பாடி வணங்க அவற்றைக் கேட்டு உகந்தருளுபவர், ஐயாறுடைய ஐயன்.

குறிப்புரை :

பண்ணின் - பண்ணிசைபோல, பண்ணிசையிலும், நல்ல - இனிய, பவளம்போன்ற துவர் வாயினார்; துவர் - செந்நிறம். எண் இல் - கணக்கில்லாத, எண்ணில் என்பது வினையெச்சமாக்கோடலமையாது. கண் இரண்டாதலின், வேலிணை (இரண்டு) ஒப்பாக்கப்பட்டன. வண்ணம் - அவனருளே கண்ணாகக் காணும் வண்ணம். தன்மை. வலி - மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருளும் வன்மை. தம் வாய் மொழி - சிவநாமமே பாடும் நல்ல வாயின் மொழியுந் தோத்திரங்களை. மொழி - ஆகு பெயர். அண்ணல் - சிவபெருமான், அக்காலத்தில் திருவையாற்றில் இளமகளிர் சிவபத்தியிற் சிறந்திருந்தனர் என்று கருத இடனுண்டு, `காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாட ... சேயிழையார் நடமாடுந்திருவையாறு` என்று வருந்தேவாரமும் (தி .1 ப .130 பா .6) ஈண்டுக் கருதுக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்
தேனெய் பாறயிர் தெங்கிள நீர்கரும் பின்றெளி
ஆனஞ் சாடுமுடி யானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

கொடிய யானையைப் பலரும் வெருவுமாறும் உமையம்மை அஞ்சுமாறும் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்தவரும், வானத்தைக் கிழித்துச் செல்லும் மதியை முடியில் சூடிய வலியரும், தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் சாறு, ஆனைந்து ஆகியவற்றை ஆடும் முடியினரும் ஆகிய பெருமைகட்கு உரியவர் ஐயாறுடைய ஐயன் ஆவார்.

குறிப்புரை :

வேனல் - வெம்மை. `கெடிலக்கரை வேனலானையுரித்த வீரட்டர்` (தி .5 ப .54 பா .5). வானையூடறுக்கும் மதி - விண்ணூடு அறுத்துச்செல்லும் பிறை. தேன் முதலிய ஏழும் அபிடேக திரவியங்கள், நெய் பால் தயிர் என்னும் மூன்றும் தனித்தனி ஆட்டற்குரியன. இம்மூன்றையும் `ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்` என்று தனித்தும், `ஆனிலங்கிளரைந்தும் அவிர் முடியாடி` என்று ஐந்தாகச் சேர்த்தும் கூறுதல் திருமுறை வழக்கு. `ஆனஞ்சு` பஞ்ச கௌவியம்,(ஞானபூசாவிதி. 14. உரை பார்க்க) தெளி - தெளிந்த சாறு. (ஆகு பெயர்) தெங்கு - தென்னை. தென்கு என்பதன் மரூஉ.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

எங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா
மங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

எங்கும் நிறைந்தவனும் பிறர் அறியவாராத இயல் பினனும், உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் மதி சூடிய மைந்தனும் குற்றமற்ற பதினெண்புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை அறிதற்குதவும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத்தருளியவனும் ஆய பெருமான், ஐயாறுடைய ஐயனாவான்.

குறிப்புரை :

எங்குமாகி நின்றான் - அகண்ட வியாபகன். இயல்பு அறியப்படாமங்கை. சிவனுக்கும் ஏற்றிக்கூறலாம். பங்கம் - இழிவு, பதினெட்டு - பதினெண்புராணம் `சூதன் ஒலிமாலை` (தி.3 ப.54 பா.8 பெரிய புராணம், திருஞான.840.) நான்கு - நாலு வேதம். உணர்வு - மலம் அகற்றற் பொருட்டு, உயிரினிடத்து நிலை பெற்றுள்ள பர (சிவ) ஞானமாகிய திருவருளும், அத்திருவருளைத் தெளியவோதுகின்ற அபரஞானமாகிய சிவாகமங்களும், அங்கம் - வேதாங்கங்கள். (பார்க்க: பா.3 உரை)

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாம்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
ஆதி யாகிநின் றானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

யாவராலும் ஓதி அறிதற்கு அரியவனும், உயிர்கள் தாமே அறிதற்கு இயலாதவனாயினும் அவனே ஓதுவித்தும் உணர்வித்தும் சோதியாக நிறைந்துள்ளவனும், சுடர்ச்சோதியுட் சோதியாக விளங்குபவனும், வேதவடிவினனும் விண், மண், எரி, காற்று ஆகி உலகின் முதல்வனாய் விளங்குபவனும் ஆகிய பெருமான் ஐயாறுடைய ஐயனாவான்.

குறிப்புரை :

வேதி - வேதசொரூபன். விண் - ஆகாயம், எரி - தீக் கடவுள். ஆதி - முதற்பொருள். ஓதியறிவார்யாரும் இல்லை. உயிர்கள் ஓதியறிதலில்லையேனும், சிவபிரான் தானே தன்னை உயிர்க்கு ஓதுவித்தும் உணர்வித்தும், சேதனாசேதனப் பிரபஞ்சம் எல்லாம் சோதி (ஒளி) யாய் நிறைந்துள்ளான். சுடரையுடைய சோதிகளாகிய சூரிய சந்திராக்கினிக்குள் சோதியாய் உறைபவன். (திருவிசைப்பா.2) வேதியாகி - சேதன சொரூபியாகி, விண் ... ஆகி - அசேதனரூபமாகி, (தடத்த வடிவத்தைச் சார்ந்தது). பழம் பதிப்பிலுள்ள `எரிகாற்றுமாய்` என்ற பாடமே சிறந்தது. எரி - தீ. எறியுங்காற்று எனின், காற்று என்பதில் உள்ள பொருளே எறிதலுமாதலின் சிறப்பில்லை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்
விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே
பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்
அரவ மார்த்துகந் தானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

ஐயாறுடைய ஐயன் அடியவர் அன்றலர்ந்த குராமலர்களைக் கொண்டு வழிபடவும், திருநீற்றை மேனியெங்கும் விரவிப்பூசிய தொண்டர்கள் வியந்து போற்றவும், அரவாபரணனாய் எழுந்தருளியுள்ளான். நம் பாவங்கள் அவனை வழிபட நீங்குவதால், நாமும் நாளும் அவனைப் பரவி ஏத்துவோம்.

குறிப்புரை :

குரவம் - குராமரம். நாள் மலர் - காலையிற் பூத்த பூ. வியப்ப - புகழ்ந்துரைக்க. பரவி - வாழ்த்தி. பறைதல் - நீங்குதல். அரவம் - பாம்பு, ஆர்த்து - கட்டி, (அணிந்து) உகந்தான் - உயர்ந்தவன். `விரவி` என்றது புதிய பாடம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

உரைசெய் தொல்வழி செய்தறி யாவிலங் கைக்குமன்
வரைசெய் தோளடர்த் துமதி சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்
அரைசெய் மேகலை யானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

வேதங்கள் உரைத்த பழமையான நெறியை மேற்கொள்ளாத இலங்கைமன்னன் இராவணனைக் கயிலைமலைக்கீழ் அகப்படுத்தி அவனது தோள் வலிமையை அடர்த்தவரும், மதி சூடிய மைந்தரும் காவிரி வடகரையில் விளங்கும் ஐயாற்றில் மகிழ்வோடு இடையில் மேகலாபரணம் புனைந்து உறைபவரும் ஆகிய பெருமானார், ஐயாறுடைய ஐயன் ஆவார்.

குறிப்புரை :

இராவணன் மிக்க சிவபக்தனாகித் திரிலோகாதி பத்தியம் முதலிய பெருவரங்களைப் பெற்றவன். அதற்குரிய வேதாகமவழி அவனுக்குப் புதுவழியன்று. தொல் (பழைய) வழியே. அறியாமை மேலிட்டபோது, அத்தொல் வழிமறந்து திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயன்றான். அதனால், அவனுடைய மலைகளைப் போன்ற தோள்களை நசுக்கப் பெருவிரல் நுனியை மட்டும் ஊன்றியருளினார், சந்திரசேகரரான வீரனார். மதி - வளராததும் தேயாததும் ஆன திங்கட்பிறை. மைந்தனார் - வீரனார். திருவையாறு காவிரியின் வடகரைக் கண் உள்ளது. காதல் - அத்தலத்தில் எழுந்தருளியிருக்க விரும்புதல். அரைசெய் மேகலையான் - மேகலாபரணம் இடுப்பிற் கொண்டவன். மேகலை - பொன்னாடை விசேடம். `எண்கோவை மேகலை`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மாலுஞ் சோதி மலரானு மறிகிலா வாய்மையான்
காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர்
ஆல நீழலு ளானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

ஐயாறுடைய ஐயன் திருமாலும் நான்முகனும் அறிய இயலாத சத்திய வடிவானவன். அவனது கால்போலத் திரண்ட அழகிய காம்பினையும் கழல்போன்ற கொழுந்தினையும் பவளம் போன்ற பழங்களையும் ஈன்ற திரண்ட கல்லால மரநிழலில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

மால் - (மயக்கம்) விண்டு. சோதிமலர் - தாமரைப்பூ. வாய்மையான் - சத்தியசொரூபி. காலம் காம்பு வயிரம் கடிகையன் என்பதன் பொருள் புலப்பட்டிலது. ஆயினும் ஒருவாறு எழுதலாம். கால் - திருவடி, அம் காம்பு - அழகிய காண்பு. வயிரம் - வைரரத்னம், கடிகை - துண்டு, கால்போலக் காம்பு. கழல்போலக் கொழுந்து. கடிகையம் பொற்கழல் என்றிருந்தது போலும். ஆலமரம் இறைவனது பொற்கழல்போலப் பொன்மையும் மென்மையும் ஒளியும் அழகும் உடைய கோலமாய்க் கொழுந்தீன்று என்க. ஈன்று - தோன்றி. ஆலம்பழம் செந்நிறமுடையது ஆதலின், பவளம் திரண்டதோர் ஆலம் என்றார். பவளம்போன்ற செந்நிறம் உடைய பழங்களைப் பவளமென்றது உவமையாகு பெயர். கல்லாலுக்குச் சாதியடை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையான்
மெய்யைப் போர்த்துழல் வாரு முரைப்பன மெய்யல
மைகொள் கண்டத்தெண்டோண்முக்க ணான்கழல் வாழ்த்தவே
ஐயந் தேர்ந்தளிப் பானுமை யாறுடை யையனே.

பொழிப்புரை :

கையில் உணவை வாங்கி உண்டு உழலும் சமணரும், நாற்றம் அடிக்கும் துவராடையால் உடலைப் போர்த்துத் திரியும் புத்தரும் கூறும் உரைகள் மெய்யல்ல என்பதை அறிந்து, நீலகண்டமும் எண் தோளும் மூன்று கண்களும் உடைய சிவனே பரம் பொருள் எனத்தேர்ந்து வாழ்த்த, ஐயந்தேரும் ஐயாறுடைய ஐயன் நம்மைக் காத்தருளுவான்.

குறிப்புரை :

கையில் உண்டு உழல்வார் - கையில் உணவை ஏந்தி உண்டு திரியுஞ்சமணர். கமழ் ... உழல்வார் - நாற்றம் வீசும் பழுப்பேறிய ஆடையால் உடம்பைப் போர்த்துத் திரியும் புத்தர். மைகொள் கண்டம் - நீலகண்டம். முக்கண் - சோம சூரியாக்கினி. ஐயம் - பிச்சை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 12

பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயவை யாற்றினைக்
கலிக டிந்தகை யான்கடற் காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்த னொண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே.

பொழிப்புரை :

பலி ஏற்று உழல்பவனாய், பாண்டரங்கக் கூத்தாடும் பெருமான் எழுந்தருளிய திருவையாற்றினை உலகில் கலிவாராமல் கடியும் வேள்வி செய்தற்கு உரிமை பூண்ட திருக்கரங்களை உடைய, கடலை அடுத்துள்ள காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் இசையொலி கூடிய சிறந்த தமிழால் பாடிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் புகழ் மலிந்த வானுலகில் நிலையான சிறப்பைப் பெறுவார்கள்.

குறிப்புரை :

பண்டங்கன் - பாண்டரங்கம் என்னுந்திருக்கூத்தை ஆடுபவன். கலி - வறுமை, கலிகடிந்தகையான் என்றது திருஞானசம்பந்தர் எரி ஓம்பும் திருக்கையால் அளவற்றோர் வறுமை நீக்கிய உண்மையை உணர்த்திநின்றது. கடிந்த - நீக்கிய, `உரவார் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளுங் கரவாவண்கைக் கற்றவர் சேருங்கலிக்காழி` (தி.1 ப.102. பா.1) யில், திருஞானவேந்தர் திருக்கைகள் உலகவர் கலி (வறுமை) முதலிய துன்பங்களைக் கடிதலில் ஐயமின்று. கடந்த என்றது புதியது. காழியர் காவலன் என்றதால், பாலறாவாயரான காரணம் பற்றி, அக்காழியில் இருந்த அந்தணர் எல்லோரும் அப்பெருமான் திருவடித் தொண்டர் ஆயினர் என்பதும், காழிவேந்தர் தலைவரானார் என்பதும், சிவனருள் பெற்றவரையே, நல்லோர், தமக்குக் காவலராக் கொள்ளும் வழக்கம் உடையவராயிருந்தனர் என்பதும் புலப்படும். `ஒலிகொள் சம்பந்தன்`:- பரநாதத்தைக்கொண்டு பாட்டாக அருளும் சிவஞானசம்பந்தர். கொள் தமிழ் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

வன்னி கொன்றைமத மத்த மெருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை யிற்பொலி வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாக வுகந்ததே.

பொழிப்புரை :

வன்னியிலை கொன்றைமலர் ஊமத்தம் மலர் வில்வம் ஆகியவற்றைப் பொன்போன்ற தம் சடையில் சூடிய பழமையாளரும், என்னை அடிமையாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பிய ஊர், வரிவண்டுகள் `தென்ன` என்ற ஒலிக் குறிப்போடு இசைபாடும் திருவாஞ்சியமாகும்.

குறிப்புரை :

வன்னி - வன்னிமரத்திலை. கொன்றைப்பூ, ஊமத்தம் மலர், எருக்கம்பூ. கூவிளம் - வில்வம். பொன் இயன்ற - பொன்போன்ற. சடையில் வன்னி முதலிய வற்றைப் பொலிவு பெறச்சூடிய புராணனார். புராணன் - முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருளாயுள்ளவன். தென்ன என்று இசை செய்வன வரிவண்டுகள். உகந்தது - விரும்பியது (வினையாலணையும் பெயர்), மேலும் இவ்வாறாதல் அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப்பொலி கோயில் நயந்ததே.

பொழிப்புரை :

காலனுக்குக் காலர்; கரிந்த இடுகாட்டில் சிறந்த நடனம் புரிபவர்; எப்பொருட்கும் எல்லா உயிர்கட்கும் மேலானவர்; கடலிடைத்தோன்றிய நஞ்சினை உண்டு இருள்கின்ற கண்டத்தை உடையவர்; அச்சிவபிரான், மாலைக்காலத்தே தோன்றும் அழகிய மதி உச்சியில் பொருந்தும் மாடவீடுகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் உள்ள அழகிய கோயிலை, உலகோர் வந்து தம்மைப் பணிந்து அருள் பெறுமாறு விரும்பி வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

காலகாலர் - இயமனுக்குங் காலமுடிவைச் செய்பவர். இயமனுக்கியமன் என்பாருமுளர். கரிகான் - கரிந்தகாடு, மேலர் - எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் எத்தேவர்க்கும் மேலாயுள்ள முழுமுதல்வர். வேலை - கடல். மிடறு - கழுத்து. நஞ்சுண்டிருண்ட கண்டத்தர். `இருள்கின்ற` என நிகழ்வாற் கூறியதால், இன்னும் இருளும்படி செய்யுங்கொடிய நஞ்சையுண்டு வாழ்வித்த கருணைத்திறத்தை அறியலாம். திருவாஞ்சியத்து மாடங்கள் சந்திரமண்டலத்தின் அளவும் ஓங்கியவை என்று உயர்த்துக்கூறினார். மதிமண்டலத்தை அளாவிய மாடம். மாலைமதி, கோலமதி, மாலைப்பொழுதும் அழகும் மதிக்கு அடை, ஞாலம் - உலகத்துயிர்கள், இடவாகுபெயர், ஞாலம் - தொங்குவது என்னுங்காரணப் பொருளதாய், முன்னோரது பூகோள ககோள ஞானத்தை உணர்த்துவது அறிக. நயந்தது - விரும்பியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

மேவி லொன்றர் விரிவுற்ற விரண்டினர் மூன்றுமாய்
நாவி னாலருட லஞ்சின ராறரே ழோசையர்
தேவி லெட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.

பொழிப்புரை :

விரும்பி வழிபடின் நீ நான் என்ற வேற்றுமையின்றி அந்நியம் ஆவர். ஒன்றாய் அரும்பிய அவர் பலவாய் விரியுமிடத்து, சிவம் சத்தி என இரண்டாவர். ஒன்றாய் வேறாய் உடனாய் மூன்றாவர். நாவினால் நான்கு வேதங்களை அருளியவர். பரை ஆதி இச்சை ஞானம் கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய திருவுருவை உடையவர். ஆறுகுணங்களை உடையவர். ஏழு ஓசை வடிவினர். அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர். இத்தகையவராய்த் திருவாஞ்சியத்தில் எழுந்தருளியுள்ள செல்வனார் தம் அடியவர்களின் பாவங்களைத் தீர்ப்பர். அவர் அடியவர்கட்கு வரும் பழியைப் போக்குபவர்.

குறிப்புரை :

இதனுள் ஒன்று முதல் எட்டீறாகிய எண்ணுப்பெயர் அமைந்த அழகு உணரத்தக்கது. 79,380- ஆம் (திருக்கழுமலம், திருவோமமாம்புலியூர்த்)திருப்பதிகங்களுள்வரும் `எண்ணிடை யொன்றினர்` `மணந்திகழ் திசைகளெட்டும்` எனத்தொடங்குந் திருப்பாடல்களை இங்கு நோக்கின், இவ்வாசிரியர்க்கு இவ்வாறு பாடியருளும் எளிமை இனிது விளங்கும். மேவில் ஒன்றர் - விரும்பி வழிபட்டால் அநந்நியமாதலையுடையவர், `அறிபவன் அருளினாலே அநந்நியமாகக் காண்பன்` என்பதும்`அறிய வல்லான் ஒருவனுக்கு அச்சிவப்பொருள் அதனோடு ஒற்றித்து நின்று அவ்வருளானே அறியற்பாலதாம் என்னும் அதன் உரையும் (சித்தியார் .245), சைவ உப நிடதங்களினும் சைவாகமங்களினும் அந்நியமின்றி நின்றுணரும் அநுபவ மாத்திரையிற் கோசரிப்பது என்று ஓதப்படுஞ் சிவனருளாம் மெய்ப்பொருள்` என்னும் சிவஞான பாடிய வசனமும் (சூ .6.) ஈண்டுணரத் தக்கன. ஒன்றர் - ஒருபொருளாயிருப்பவர் எனலுமாம். விரிவுற்ற இரண்டினர் - விரிதலடைந்த ஞானமும் கிரியையும் உடையவர். சிவமும் சத்தியுமானவர் எனலுமாம். `சிவசத்தி மூன்றனுள் யாண்டும் ஒரு பெற்றித் தாய் வியாபரிக்கும் இச்சையை ஒழித்து, ஒழிந்த ஞானக் கிரியைகள் இரண்டும் தனித்தனி வியாபரித்தலானும் ஒத்து வியாபரித்தலானும் தம்முள் ஏறிக்குறைந்து வியாபரித்தலானும்`(சித்தியார் உரை.85) விரிவுற்றன. இரண்டு - சொரூபம் தடத்தம் எனலுமாம். விரி வுற்ற இரண்டு - போகமும் முத்தியும் ஆதலும் பொருந்தும். மூன்றுமாய் - இச்சா ஞானக் கிரியையாய். `ஒன்றதாய் இச்சா ஞானக்கிரியை என்று ஒருமூன்றாகி`(சித்தியார் .83). அவை முறையே உயிர்கட்கு மலந்தீர்த்துச் சிவங்கொடுக்கும் கருணையும், அதற்கான உபாயங்களை அறியும் அறிவும், அவற்றை அவ்வாறே கொண்டு செய்யும் சங்கற்பமும் ஆகும். இலயம் போகம் அதிகாரமாய், ஒன்றாய் வேறாய் உடனாய், மூன்று தீயுமாய், முச்சுடருமாய் எனினும் பொருந்தும். மூன்றும் ஆய் நாவின் நாலர் என்று கொண்டு பதி, பசு, பாசம் என்னும் மூன்று பொருளையும் ஆய்ந்துணர்த்தும் நான்மறை நாவர் எனலுமாம். உடல் அஞ்சினர் - பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய திருமேனியையுடையவர், பஞ்சப்பிரம மந்திர தேகமும் ஆம். அருவம் இரண்டு, அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்து உடலும் சொரூபமல்லவாயினும் உபசாரத்திருமேனியாகும். `அநாதி முத்த சித்துருவாகிய முதல்வனுக்குத் தன்னுருவமாகிய உலகத்தைத் தொழிற்படுத்தற் பொருட்டும் வேறோருருவம் வேண்டப்படுவ தன்றாயினும் ... உயிர் வர்க்கங்கள் பொருளியல்பு உணர்ந்து வீடுபெறுமாறு வேதாகமங்களைக் கோவைப்படச் செய்தற் பொருட்டும் அதனைக் குருபரம்பரையின்கண் வைத்தற்பொருட்டும் திருமேனி ஒருதலையான் வேண்டப்படும்`(சித்தியார் .66 உரை) ஆறர் - அறுகுணத்தர், (ஷாட்குண்யர்) முற்றறிவு முதலியவை. பகவர் எனலுமாம். உடலஞ்சினர். ஆறர் - பிறவியையஞ்சிய நல்லோர் வழியில் விளங்குபவர், உடலஞ்சு:- பஞ்சகோசம், ஆறர் - கங்கையாற்றினர் எனினுமாம். `நன்மூவிருதொன்னூலர்` `முத்தீயர்` `நால் வேதத்தர்` `வீழிமிழலையார்`(தி.3 ப.9 பா.7) என்றதில் வருமாறுங்கொள்ளலாம். `திருவெழுகூற்றிருக்கை`யும் நோக்குக. ஏழ் ஒசையர் - `ஏழிசையாய்`(இசைப்பயனாய்) இருப்பவர். தேவில் - தெய்வத்தன்மையில். எட்டர் - அட்டமூர்த்தி, எண்குணத்தர் எனின் ஆறர் என்பதற்கு ஷாட்குண்யர் என்னாது வேறுரைக்க. பாவம் - தீவினை. பழி - தீச்சொல். முறையே செயலும் மொழியுமாய்த் தன் திரிகரணத்தாலும் பிறர் வாயாலும் நிகழ்வன. அடியார்கட்கே பாவந்தீர்ப்பர் பழி போக்குவர் எனவே அல்லார்க்கு இல்லை என்றதாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
ஆல முண்டவடி கள்ளிடம் ஆக வமர்ந்ததே.

பொழிப்புரை :

சூலம் ஏந்திய நீண்ட கையினை உடையவர்; தம் திருமேனிக்குப் பொருத்தமாக நல்ல திருநீற்றை மிகுதியாகப் பூசுபவர்; சிறந்த வேதவசனங்களைப் பேசுபவர். ஆலகாலம் உண்டருளிய அவ்விறைவர், ஒழுக்கத்தால் சிறந்தோர் வாழ்வதால் புகழ்பெற்ற திருவாஞ்சியத்தை இடமாகக் கொண்டு அமர்ந்துள்ளார்.

குறிப்புரை :

சுவண்டு - பொருத்தம், சால - மிக, பொடி - திருநீறு, மறைபேசுவர் எனமாற்றுக. சீலம் - பெருந்தகைமையுள் ஒன்று, ஒழுக்கமுமாம். ஆலம் - நஞ்சு. ஒற்று (ள்) மிகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யமிடற் றார்திரு வாஞ்சியத்
தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.

பொழிப்புரை :

கையின்கண், விளங்கும் மான்கன்றை ஏந்தியவர்; காந்தள் இதழ் போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதிதேவியைத் தமது பாகமாகக் கொண்டவர்; பகைவராகிய திரிபுரத்து அசுரரின் முப்புரங்களை அழித்தவர்; சிவந்த திருமேனியையும் கரியமிடற்றையும் உடையவர்; இத்தகையோராய்த் திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய தலைவராகிய சிவபிரான் திருவடிகளை அடைபவர்களைப் போக்கற்கு அரிய நோய்கள் எவையும் அடையா.

குறிப்புரை :

மறி - மான்கன்று. காந்தட்பூ கைவிரல்கட்குவமை. தையல் - கட்டழகுடைமையாற் பெண்ணைக் குறிக்கும் பெயர், இங்குப்பார்வதிதேவியாரை உணர்த்திற்று; தையல் எல்லார்க்கும் நாயகியாதலின். அடையார் - பகைவர். புரம் செற்றவர் - திரிபுரதகனம் செய்தவர். `முப்புரமாவது மும்மலகாரியம்` என்பது திருமந்திரம். மிடறு - கழுத்து. செய்ய, கரிய முரண். ஐயர் - முதல்வர், அருநோய் அடையா - நீங்கற்கரிய பிறவிநோய் முதலியயாவும், திருவடியடையும் அன்பர்க்கு இல்லை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க வகந்தொறும்
இரவி னல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.

பொழிப்புரை :

அரவை அணிகலனாகப் பூண்பவர்; காலில் அணியும் சிலம்பு ஆரவாரிக்க வீடுகள் தோறும் நாணிலராய் இரவிற் சென்று நல்ல பலியைப் பெறுபவர்; தம் திருப்பெயர்களைக் கூறிப் பரவுவார் வினைகளைத் தீர்க்கத் திருவாஞ்சியத்துள் நாம் சென்று வழிபடுமாறு உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

அரவம் - பாம்பு, பூண்பர் - சூடுவர். அணியுஞ்சிலம்பு - அலங்காரமாகப்பூணும் வேதச்சிலம்பு. ஆர்க்க - ஒலிக்க. அகம் - வீடு. பேணுவர் - விரும்புவர். நாமமே பரவுவார் - திருநாமஜபமே செய்பவர். வினை - கர்மம். மடமாது - உமாதேவியார். மைந்தர் - வீரர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
கண்ணி னாலநங் கன்னுட லம்பொடி யாக்கினார்
பண்ணி லானவிசை பாடன்மல் குந்திரு வாஞ்சியத்
தண்ணலார் தம்மடி போற்றவல் லார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

வானகத்தே தோன்றிய பிறைமதியைத் தம் திரு முடியில் தங்கி விளங்குமாறு சூடியவர்; நெற்றிக் கண்ணால் மன்மதனின் உடலை நீறாக்கியவர். பண்களில் பொருந்திய இசையோடு பாடும் புகழ்பொருந்திய திருவாஞ்சியத்துள் விளங்கும் அவ்வண்ணலாரின் திருவடியைப் போற்றவல்லார்க்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

பிறை - பிறத்தலுடையது என்னுங்காரணப் பொருட்டான பெயர். `திங்கட்டுண்டம்`. அநங்கன் - அங்கமில்லான். உருவிலி, மன்மதன். பண்ணும் இசையும் முறையே ஆதாரமும் ஆதேயமுமாதலின் பண்ணில் ஆன இசை என்றார். போற்ற வல்லார் - போற்றுதலில் வேதாகம ஞானவல்லபம் உடையவர், நிஷ்டாநுபூதிமான்கள். அல்லல் - துன்பம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
வாடியூ டவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சிய மேவிய வேந்தரைப்
பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

பொழிப்புரை :

நீண்ட கொடிகள் நிலைத்துள்ள மாடவீடுகளைக் கொண்ட தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணன் வாடிவருந்தக் கயிலை மலையால் அவனை அடர்த்துப்பின் அருள்செய்தவர்; அருச்சுனன் பொருட்டு வேட்டுவக் கோலம் தாங்கியவர். திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய வேந்தர். அவ்விறைவரைப்பாட எண்ணுவார், வினை, பற்று ஆகியன நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

மாடம் - உயரிய வீடுகள். கொடி - துகிற்கொடிகள். மன்னிய - நிலைத்த. மன் - அரசன். இராவணன். வரை - கைலாசகிரி. வேடவேடர் - வேட்டுவக்கோலத்தர். வினை பற்று உம்மைத்தொகை. வினை - கர்மம். பற்று - மூலகர்மம். `இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில்வீழ் மாக்கள்`(பெரிய. அப்பர்.129) என்புழியறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

செடிகொ ணோயினடை யார்திறம் பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடய னேத்தநின் றார்திரு வாஞ்சியத்
தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.

பொழிப்புரை :

நீண்டுயர்ந்த திருமாலும் பிரமனும் தம்மை வணங்குமாறு ஓங்கிநின்ற திருவாஞ்சியத்து அடிகளாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்த அடியவர்களின் திருவடிகளை அடைந்தவர்கள், துன்பம் தரும் நோய்களை அடையார். துன்புறுத்தும் தீவினைகளால் மாறுபடார். கொடிய கூற்றுவனும் அவர்களைக்கண்டு அஞ்சி அகல்வான். சிவகதி அவர்களைத் தேடிவரும்.

குறிப்புரை :

செடி - துன்பம், பாவமுமாம். திருவாஞ்சியத்துப் பெருமான் திருவடியை அடைந்தவருடைய அடியார்க்கு அடியார் ஆனவர்க்கு நோயின்மையும், தீவினை நீக்கமும், இறவாமையும், சிவகதியும் உண்டு என்றது. இத்திருப்பதிகத்துள் (3,5,6,7,8,10,11.) அடியார் சிறப்புணர்த்திய உண்மையை உணர்க. கூற்றம் - இயமன். புகல் - சிவகதி. `தன்னைச் சரணென்று தாளடை` (தி.4 ப.105 பா.1) வதே புகலாகும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்
தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

பிறர் திரட்டித்தந்த சோற்றை உண்டு திரியும் சமணரும், செந்நிற ஆடையைப் போர்த்துழலும், அவரின் வேறுபட்ட புத்தரும் ஆகிய மிண்டர்கள் வலிந்துகூறும் உரைகள் மெய்யல்ல. பொய்யிலியாகிய எம் இறைவன் வண்டுகள் கிளறி உண்ணும் தேன் நிறைந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்துள் எழுந்தருளியுள்ளான். அண்டம் முழுவதும் வாழும் அவன் திருவடிகளைக் கைகளால் தொழுது வணங்குவார்க்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

பிண்டம் - பிண்டித்த சோறு. மிண்டர் - வலியர். கெண்டி - கிளறி. பொழில் - சோலை. அண்டவாணன் - அண்ட முழுதும் வாழ்நன். வாணன் மரூஉமொழி, பாவாணன், அம்பலவாணன், மன்ற வாணன், அண்டவாணன் என்னும் வழக்கால் இறைவனியல்பு உணர்தல் கூடும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
தென்று நின்றவிறை யானை யுணர்ந்தடி யேத்தலால்
நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.

பொழிப்புரை :

தென்றல், பொழிலைப் பொருந்தி அதன் மணத்துடன் சென்று வீசும் திருவாஞ்சியத்துள் என்றும் நீங்கா துறையும், இறைவனியல்பை உணர்ந்து அவனடிகளை ஏத்தித் துதித்தலால், நன்மை தரும் காழிப்பதியுள் மறைவல்லவனாய்த் தோன்றிய ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பாடல்களில் ஈடுபடும் மனம் உடையவர்கள், உயரிய வீடுபேற்றை அடைவர்.

குறிப்புரை :

என்றும் நின்ற இறையான் - நித்தியகர்த்தா. செந்தமிழ் - திருப்பதிகம். ஒன்றும் உள்ளம் - ஒன்றியிருந்து நினைக்கும் உள்ளம். `இப்பதிகம் ஒன்றும் மனம்` என்பதே ஆசிரியர் உட்கோள். வானம் - வீடு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

வானு லாவுமதி வந்துல வும்மதின் மாளிகை
தேனு லாவுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
வேனல் வேளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி
ஞான மாகநினை வார்வினை யாயின நையுமே.

பொழிப்புரை :

வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள் சூழ்ந்த மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும் நிறைந்து விளங்கும் திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற்காலத்துக்குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பதி ஞானத்தாலே நினைபவர் வினைகள் நைந்துஅறும்.

குறிப்புரை :

வான் உலாவும் மதி - தன்மேல் வந்துலாவும் அளவு உயரிய மாளிகை. `வண்கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்` என்றார் கம்பர். வேனல் - சினம். வேள் - மன்மதன். விழித்திட்ட - நெற்றிக் கண்ணைத்திறந்து எரித்த, எரித்தவன் வெண்ணெய்ப் பெருமான் என்ற நயம் உணர்க. ஞானமாக நினைவார் - `பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாதநீழற்கீழ் நீங்காதே` (சித்தியார் 292.) நினைந்து நிற்பவர். நையும் - நைந்தொழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

மடங்கொள் வாளைகுதி கொள்ளு மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொண் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்துவெண் ணெய்ப்பெரு மானடி மேவியே
அடைந்து வாழும்மடி யாரவ ரல்ல லறுப்பரே.

பொழிப்புரை :

இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக்களிக்கும் மணம் பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும் மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான சிக்கலில் எழுந்தருளிய, விடம்தங்கிய கண்டத்தினை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய் அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.

குறிப்புரை :

மடம் - மடப்பம். குதி - குதித்தல். முதனிலைத் தொழிற் பெயர். பொய்கை - இயற்கை நீர்நிலை. திடம் - சிவபெருமானே மெய்ப்பொருட்கடவுள் என்னும் வேதாகம பரத்துவ நிச்சயம். மல்கிய - நிறைந்த. மேவி - விரும்பி. அல்லல் அறுத்தல் - பிறவித் துன்பந்தீர்த்தல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நீல நெய்தனில விம்மல ருஞ்சுனை நீடிய
சேலுமா லுங்கழ னிவ்வளம் மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம் பறையுமே.

பொழிப்புரை :

நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல் வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஓரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளை ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும்.

குறிப்புரை :

நெய்தல் - நெய்தல் மலர். நிலவி - விளங்கி. ஆலும் - அசையும், துள்ளும். மாலும் என்றுகொண்டு மயங்குமெனலுமாம். வேல் - வேல்போன்ற, வேலவொண் கண்ணியினாள் என்றது புதியது. வேல் நெடுங்கண்ணி என்னும் அத்தலத்தின் திருநாமத்தைக் குறித்தது. இவ்வாறு பல திருப்பதிகங்களுட் காணலாம். பிற்காலத்தில் வடமொழிப் பெயராக மாறிய காரணத்தால் சிற்சில பதிகங்களுள் அம்முறை விளங்கவில்லை. பாலவண்ணன் - பால்போலும் வெண்ணிறத்தன். பாலனாந்தன்மையனுமாம். பறையும் - நீங்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கந்த முந்தக் கைதைபூத்துக் கமழ்ந்துசே ரும்பொழிற்
செந்துவண் டின்னிசைப் பாடன்மல் குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணைய்ப் பிரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.

பொழிப்புரை :

மணம் முற்பட்டுச் சென்று பரவுமாறு தாழைகள் பூத்துக் கமழும் பொழில்களில் வண்டுகள் செந்து என்னும் ஒருவகைப் பண்ணோடு பாடும் பாடல்களைக் கொண்டு விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில், கற்பம் செய்தமைத்த திருவெண்ணீற்றை அணிந்த தலைமையாளனாகிய வெண்ணெய்ப்பிரானின் மணம் பொருந்திய திருவடிகளை நினைபவர் வினைகள் தேய்வது திண்ணம்.

குறிப்புரை :

கந்தம் - மணம். முந்த - முற்பட்டுச் சென்று வீசிப்பரவ. கைதை - தாழை. கமழ்ந்து - மணந்து, செந்து - ஒரு பெரும் பண். தி .2 பா .3 ப .10. குறிப்பைப்பார்க்க. இசை. ஐந்து என்பது சந்து என்றாகிச் செந்து என்று மருவிற்று எனலுமாம். ஜயம் - சயம், செயம். கஜம் -(கசம்) கெசம் என்பன போலப்பலவுள. வெந்தவெண்ணீறு - விதிப்படி கற்பஞ்செய்யப்பெற்ற திருவெண்பொடி. திண்ணம் - உறுதி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

மங்குல்தங் கும்மறை யோர்கண்மா டத்தய லேமிகு
தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்
வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே
தங்கு மேற்சர தந்திரு நாளுந் தகையுமே.

பொழிப்புரை :

மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும் கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில் சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.

குறிப்புரை :

மங்குல் - மேகம். தங்கும் மாடம் என்று சேர்க்க. மறையோர்களது மாடம் என்க. தெங்கு - தென்கு தென்னை என்பதால் அதன் தொல்லுரு விளங்கும். துங்கம் - உயர்ச்சி. ஏறு - விடை. மேல் - மேலானகதி. சரதம் - உண்மை. திரு - இலக்குமி. தகையும் - பொருந்தும். அழகு பெற்றிருக்கும், வீற்றிருக்கும். `பூவீற்றிருந்த திருமாமகள்`(சிந்தாமணி 30)`மேன்மை` புதியது. மேற்கதி என்றிருந்ததோ?

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

வண்டி ரைத்துமது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்
தெண்டி ரைக்கொள்புனல் வந்தொழு கும்வயற் சிக்கலுள்
விண்டி ரைத்தமல ராற்றிகழ் வெண்ணெய்ப் பிரானடி
கண்டி ரைத்துமன மேமதி யாய்கதி யாகவே.

பொழிப்புரை :

வண்டுகள் ஒலிசெய்து சூழத் தேனை மிகுதியாகச் சொரியும் பெரிய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகள் சூழ்ந்ததும் தண்ணீர் பெருகி ஓடும் வயல்களை உடையதுமான சிக்கற்பதியில், திருமால் பூசித்த மலர்களால் திகழும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைத் தரிசித்துத் துதிசெய்து நற்கதிபெற `மனமே மதித்துப் போற்றுவாயாக`.

குறிப்புரை :

இரைத்த - ஒலித்து, விம்மிய - மிக்குச்சொரிந்த. மாமலர் - தாமரைப்பூ. திரை - அலை. விண்டு இரைத்து மலர் - திருமால் அருச்சனைசெய்த (பத்திர) புட்பங்கள். இரைத்து - துதிசெய்து. மதியாய் - தியானிப்பாய். கதி - சிவகதி. ஆக - எய்தலாக ஆக மதியாய் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

முன்னுமா டம்மதின் மூன்றுட னேயெரி யாய்விழத்
துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்
செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை யோயவே.

பொழிப்புரை :

மனமே! வானவெளியில் முற்பட்டுச் செல்லும் பெரிய அரக்கர்களின் கோட்டைகள், எரியில் அழிந்து விழுமாறு விரைந்து செல்வதும் நீண்டதும் கொடியதுமான கணை ஒன்றைச் செலுத்தி அழித்த ஒளிவடிவினனாகிய செந்நெல்பொருந்திய வயல்கள் சூழ்ந்த சிக்கல் என்னும் பதியில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் பலகாலும் எண்ணி அழுந்தி நம் வினைகள் தேய்ந்தொழிய நினைவாயாக.

குறிப்புரை :

துன்னுகணை, வார்கணை, வெங்கணை என்க. உன்னிநீட - தியானித்து அழியாது வாழ. ஒய்தல் - தேய்ந்தொழிதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கணெ ரியவே
செற்ற தேவனஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை யாயின வோயவே.

பொழிப்புரை :

தெளிந்த அறிவினை உடைய தென்இலங்கைக்கு இறைவனாகிய இராவணன் ஈசன் எழுந்தருளிய கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டுப் பற்றிய அளவில் அவன் முடிகள் பத்தோடு இருபது தோள்களும் நெரியுமாறு செற்ற தேவனாகிய நம் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, மனமே! வினைகள்யாவும் தேய்ந்தொழிய நீ உற்று நினைவாயாக.

குறிப்புரை :

தெற்றல் - அறிவில் தெள்ளியவன். `நடைகற்ற தெற்றல்`.(திவ். பெரியதி.11.4.9.) மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறிய புதுப்பொருள். அதற்கு ஆதாரமில்லை. இராவணன் ஒழுக்கத்திற் பிழைத்தவனேயாயினும் அறிவிற் சிறந்தவன். செற்ற -(வலியை) அழித்த.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாலி னோடரு மாமறை வல்ல முனிவனும்
கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியும்
சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப் பறையுநம் பாவமே.

பொழிப்புரை :

திருமாலும் அரியமறை வல்ல நான்முகனும் சிவ பிரானின் அடிமுடிகளைக் காண ஏனமும் அன்னமுமாய வடிவெடுத்து முயன்றனர். முயன்றும் அப்பெருமானின் உண்மைத்தன்மையை உணராராயினர். அவ்விறைவன் சிக்கலில் வெண்ணெய்ப் பிரான் என்ற திருப்பெயரோடு வீற்றிருந்தருளுகின்றான். அவனைப் பாலபிடேகம்புரிந்து பல மலர்களைத்தூவி வழிபடின் நம் பாவங்கள் நீங்கும்.

குறிப்புரை :

மால் - திருமால். முனிவன் - பிரமன், சிவன்சேவடி குறுகக் கோலினார். கோலியும் அறியார் என்க. கோலுதல் - வழிவகுத்தல், அடிமுடிதேட மாறிமுயலுதல்; இங்குக்கோலுதலாம். சீலம் - பரமசிவன் மெய்த்தன்மை. பால் - பக்கம் - பசுப்பாலும், மலரும் என்று உம்மை கூட்டிப் பாலும் மலரும் என்க. பாலபிடேகம் புரிய. பறையும் - நீங்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக்
கட்ட மண்கழுக் கள்சொல் லினைக்கரு தாதுநீர்
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப்
பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே.

பொழிப்புரை :

நல்ல மருதந்துவர்ப்பட்டையின் சாறுஊட்டப்பட்ட ஆடையை அணிந்த சாக்கியரும், முறையற்ற பண்புகளைக் கொண்ட உடற்கட்டுடைய கழுவேறுதற்குரிய சமணர்களும் சொல்லும் பொய்யுரைகளைக் கருதாது நீர் மேலானவனும் சிக்கலில் வெண்ணெய்ப் பெருமானாக விளங்குபவனும் ஆகிய செழுமையான சிறந்த வேதங்களில் வல்ல புலவனாகிய சிவபிரான் சேவடிகளையே பிணிகள் தீரப்பணிவீர்களாக.

குறிப்புரை :

பட்டை நற்றுவராடையினார் - சாக்கியர். துவர் - செந்நிறம். காவியேறியது. பட்டை என்பது துவர்ப்பட்டை. நிறம் துணிக்கு ஊட்டும் வழக்கை நினைவூட்டும். பாங்கிலாமை - முறையற்றபண்பு. கட்டு - உடற்கட்டு. கழுக்கள், கழுவேறுதற்குற்ற அபசாரம் செய்தவர்கள். அமண் - சமண்; க்ஷமண் என்பதன் திரிபு. சிட்டன் - வேதாகமம் வல்ல பெருமான். `சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலம்`.(தி.1 ப.80. பா.10) பட்டன் - புலவன். தன்னைத்தானே அருச்சித்தானாதலின் அருச்சகன் எனினும் பொருந்தும். `ஆலநிழற் பட்டன்`(திருப்பல்லாண்டு) என்ற தால் ஆசாரியனுமாம். ஏகாரம் - பிரிநிலை. பிணி - பிறவிப் பெரும் பிணி முதலிய பலவுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கந்த மார்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்நல்
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச்
சந்த மாச்சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறணியும்பெரு மானடி மேவரே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய பொழில்கள் சூழ்ந்த சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் போற்றி இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர் சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர்.

குறிப்புரை :

சந்தம் - இசை. செந்தமிழ் - இத்திருப்பதிகத்தை உணர்த்திற்று. வான் - பேரின்பவீட்டுலகு, தேவாரத்தில் `வான்` என்று வரும் இடங்களிற் பெரும்பாலும் இப்பொருளே கொள்ளல் வேண்டும். `வானிடை` அடிமேவர்` என்றதால் துறக்கம் ஈண்டுப் பொருந்தாமை அறிக. `கேடிலா வானுலகம், `தூயவிண்` `வானசம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வாரே` என்ற திருமுறை வசனங்களை நோக்குக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

களையும் வல்வினை யஞ்சனெஞ் சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியு ளண்ணலே.

பொழிப்புரை :

உயர்ந்ததும் பெரியதுமான மேருமலையை நல்ல உயர்ந்த வில்லாக வளைத்து அசுரர்களின் திரிபுரங்களை அவ்வசுரர் வருந்துமாறு போர்செய்தவனாய், வண்டினங்கள் தேனை உண்ணத் துழாவுகின்ற கொன்றை மலர்மாலை அணிந்த மழபாடியுள் விளங்கும் அண்ணல், நம் வல்வினைகளைக்களைவான். நெஞ்சே! அஞ்ச வேண்டா.

குறிப்புரை :

நெஞ்சே, அஞ்சல்; வல்வினையை மழபாடி அண்ணல்களைவான் என்க. விற்பூட்டுப் பொருள்கோள். கருதார் - பகைவர் (திரிபுரத்து அசுரர்). உளையும் - வருந்தும். பூசல் - போர். வரை - மேருமலையாகிய வில். சரம் - பாணம்.(திருமாலாகிய கணை). மது - கள். தும்பி வண்டு - வண்டினங்கள். அளையும் - துழாவும். தார் - மாலை. மழபாடி - மழுவாடி என்பதன் மரூஉ என்பர். அண்ணல் - பெருமான்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

காச்சி லாதபொன் னோக்குங் கனவயி ரத்திரள்
ஆச்சி லாதப ளிங்கின னஞ்சுமு னாடினான்
பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே.

பொழிப்புரை :

அறிவற்றவர்களே! அவப்பேச்சால் உமக்கு விளையும் பயன்யாது? காய்ச்சப் பெறாமலே இயற்கையாக ஒளி விடும் பொன்போன்றவளாகிய, உமையம்மையால் நோக்கப்பெறும் வயிரம் போன்ற திரண்ட பெரிய தோள்களை உடையவனும், தன்பாற்பட்டதை நுணுக்காது அப்படியே காட்டும் பளிங்கு போன்ற ஒளியினனும், முற்காலத்தே நஞ்சை உண்டவனும் ஆகிய பெருமானைப் பேணுங்கள். இலக்கணம் அமைந்த மாளிகைகளால் சூழப்பட்ட மழபாடியை வாழ்த்துங்கள்.

குறிப்புரை :

பேதைகாள் - அறிவிலிகளே. பேச்சினால் - சிவசம்பந்தமில்லாத அவப்பேச்சால். உமக்கு ஆவதென் - உமக்கு ஆவது யாது? மழ பாடியைப் பேணுங்கள். வாழ்த்துங்கள் என்க. காய்ச்சு - தீயிலிட்டுச் சுடல். காய்ச்சிலாத - காய்த்தல் இல்லாத, காய்ச்சு - காச்சு, முதனிலைத் தொழிற்பெயர். பிள்ளைத்தாய்ச்சி - பிள்ளைத்தாச்சி என்பது போலமருவிற்று. காய்ச்சப்பெறாத இயற்கையிலொளிரும் பொன் என்றபடி. பொன் - தேவியார். நோக்கும் - பார்க்கும். கன வயிரத்திரள் - இறைவன் திருத்தோள்களைக் குறித்த உவமையாகு பெயர். இறைவன் திருநாமம் வச்சிரத்தம்பநாதர் என்பதாகும். மகளிர்க்கு ஆடவர் தோள்நோக்கலும், ஆடவர்க்கு மகளிர் கொங்கை நோக்கலும் இயல்பு.(பார்க்க: கம்பர், மிதிலைக் காட்சிப் . பா.36). ஆய்தல் - நுணுக்கம். ஆய்த்தல் - நுணுக்கம்புரிதல். பளிங்கு, தன்பாற்பட்டதை நுணுக்கஞ்செய்யாது புறத்தே விளங்கச்செய்வது. அதனால் ஆச்சிலாத பளிங்கு என்றனர். சிவபெருமானைத் `தெளிவளர் பளிங்கின்திரள்மணிக்குன்றே` என்றார் திருமாளிகைத்தேவர். அஞ்சு - ஆனைந்து. ஆடினானது மழபாடியை என்க. வாச்ச - (இலக்கணமெல்லாம்) வாய்க்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

உரங்கெ டுப்பவ னும்பர்க ளாயவர் தங்களைப்
பரங்கெ டுப்பவ னஞ்சையுண் டுபக லோன்றனை
முரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன்
வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே.

பொழிப்புரை :

சிறந்த மழபாடியுள் எழுந்தருளிய வள்ளலாகிய பெருமான் தக்கன் வேள்வியில் அவியுண்ணச் சென்ற தேவர்களின் வலிமையை அழித்ததோடு அவர்களது தெய்வத்தன்மையையும் போக்கியவன். கடலிடை எழுந்த நஞ்சினை உண்டவன். மாறுபட்ட கதிரவனின் பற்களைத் தகர்த்து, பின் அருள் புரிந்தவன். முப்புரங் களையும் தீயெழச்செய்து அழித்தவன்.

குறிப்புரை :

உரம் - வலிமை. உம்பர்கள் - தக்கன் வேள்வியிற் கலந்த தேவர்கள். பரம் - தேவத்தன்மை; திவ்வியம். பகலோன் முரண் கெடுப்பவன் - சூரியன் பல்லைத் தகர்த்தவன். வரம் - மூவர்க்குத்தந்த வரம். வள்ளல் - எவ்வுயிர்க்கும் எப்பொருளும் எப்பொழுதும் அருள்வோன். மழபாடிப்பெருமானது திருநாமம் வள்ளல் என்பதும் (தி.2 ப.9 பா.4,8,11) வயிரத்திரள் (தி.2 ப.9 பா.2) என்பதும் ஆதலறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்
வெள்ள மாதரித் தான்விடை யேறிய வேதியன்
வள்ளன் மாமழ பாடியுண் மேய மருந்தினை
உள்ள மாதரி மின்வினை யாயின வோயவே.

பொழிப்புரை :

நடுவே பள்ளம் அமைந்த சடைமுடியில் வந்துதங்குமாறு கங்கை வெள்ளத்தைத் தரித்தவனும், விடை ஏறிவரும் வேதியனும் வள்ளலும் ஆகிய சிறந்த மழபாடியில் விளங்கும் அரிய மருந்து போல்வானை, வினைகள் நீங்குமாறு உள்ளத்தால் நினைந்து அன்பு செய்யுங்கள்.

குறிப்புரை :

பள்ளம் - சடைமுடி நடுவிற்பொருந்திய குழிவு. பள்ள மார்புனல் வெள்ளம் (கங்கைப் பெருக்கம்) எனலுமாம். மேய - மேவி, விரும்பிய. மருந்து - பிறவிப் பிணிக்கொரு பெருமருந்து. உள்ளம் - மனம். ஆதரிமின் - விரும்புங்கள். வாயாலுண்ணும் மருந்தன்று. `உன்னுமுள தைய மிலதுணர்வாய் ஓவாது மன்னுபவம் தீர்க்கும் மருந்து `( திருவருட்பயன் .10) என்றபடி நினைக்கும் மருந்து.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள்
பானெ யஞ்சுட னாட்டமுன் னாடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்
கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே.

பொழிப்புரை :

மெய்த்தேவர்களும் சித்தர்களும் தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு அர்ச்சித்துப் பால், நெய் முதலிய ஆனைந்து ஆட்ட, அவற்றுள் மூழ்கித்திளைக்கும் பால் வண்ணனும், வானவர்கள் கைகளால் தொழுது வணங்கும் மழபாடியில் விளங்கும் எம் தலைவனும் ஆகிய சிவபிரானை நாள்தோறும் வணங்கிவரின், அவன் நம்மோடு கூடுவான்.

குறிப்புரை :

மெய்த்தேவர்களும் சித்தர்களும் தேன்சொரியும் பூக்களைக்கொண்டு பாலும் நெய்யும் தயிருமாகிய ஆனைந்தும் அபிடேகிக்க ஆடிய பால்வண்ணன். ஆடிய - அபிடேகிக்கப்பெற்ற. நடனமாடிய. வானநாடர்கள் - துறக்கத்தில் வாழ்பவர்கள். அம்மெய்த்தேவர் வேறு, இவர் வேறு. கோன் - தேவாதிதேவேசன். குறிகூடல் - `அறிவ தொரு குறி குருவினருளினாலறிந்து மன்னு சிவன்றனை யடைந்து` நிற்றலும், `குறியொடு தாம் அழியும் நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுத` லும் பின்பு வாய்ப்பன, `குறியதனால் இதயத்தே அரனைக்கூடு` தலே ஈண்டுக் குறித்தது. `அருள் ஞானக்குறியில் நின்று கும்பிட்டுத் தட்டம் இட்டுக் கூத்தாடித்திரி` என்று விதித்தமையுணர்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தெரிந்த வன்புர மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்
புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே.

பொழிப்புரை :

எல்லாம் அறிந்தவனும், வலிய முப்புரங்களையும் அழித்த வீரனும், அன்போடு தன்னை வழிபடுபவரின் மனத்தில் பரவிவிளங்குபவனும், வரிந்து கட்டப்பட்ட வலியவில்லை ஏந்தியவனும் ஆகிய மழபாடி இறைவனை விரும்பிக் கைதொழுபவர்களின் வினைகள் போகும்.

குறிப்புரை :

தெரிந்தவன் - சருவஞ்ஞன், முற்றுணர்வுடையவன். தெரிந்தவன்மை, புரம் என்றல் அமையாது. மாட்டிய - மாள்வித்த, தீயைமாட்டிய எனலுமாம். சேவகன் - வீரன். பரிந்து - அன்பு கொண்டு, பாவினான் - பரவியவன். வரிந்த - கட்டிய. சிலை - மேருவில். புரிந்து - விரும்பி. வினையாயின - பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்னும் மூன்றும், அவற்றின் உட்பட்ட பல்வகையும் ஆகிய கர்மங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை
எந்தை யானிமை யாதமுக் கண்ணின னெம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்
சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே.

பொழிப்புரை :

அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையைத் தன் திருமேனியில் ஒருகூறாக உடைய எந்தையும், இமையாத மூன்று கண்களை உடையவனும், எம் தலைவனும், பெருவீரனும் ஆகிய, நீண்ட பொழில் சூழ்ந்த மழபாடியுள் விளங்கும் அரிய மருந்து போல்வானைச் சித்திப்பவர்களின் வினைகள் தேய்ந்து கெடும்.

குறிப்புரை :

சந்தம் - அழகு. வார் - நீளம், ஒழுகுதல், கூறு - இடப் பால். எந்தையான் - எம் அப்பன். முக்கண்ணினன் - சோம சூரியாக் கினி நேத்திரங்களையுடையவன். மழபாடி மருந்து - திருமழபாடியிலுள்ள பவரோக வைத்தியநாதன். இம்மருந்து உடற்கின்றி உயிர்க்காதலின், உண்ணலின்றி உன்ன நினைத்தலுக்குரியதால் எழுவார் என்றார். சிந்தியா - சிந்தித்து, நினைத்து, செய்யா என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம். வடசொற் பகுதியடியாகப் பிறந்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இரக்க மொன்று மிலானிறை யான்றிரு மாமலை
உரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற
விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்
வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே.

பொழிப்புரை :

நெஞ்சில் இரக்கம் ஒருசிறிதும் இல்லாத இராவணன், திருக்கயிலை மலையை, தனது வலிய கைகளால் பெயர்க்க முற்பட்டபோது அவன் ஒளிபொருந்திய தலைகள் பத்தும் நெரியுமாறு கால் விரலின் நுனியை ஊன்றி, உமையவளோடு மகிழ்ந்து வீற்றிருக்கும் சிவபிரான், மழபாடியில் வரத்தைக் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருந்தருளுகின்றான்.

குறிப்புரை :

இரக்கம் - பக்தி. இறையான் - சிவபிரான். மலை - கயிலாயம். உரம் - வலிமை. இலான், எடுத்தான், மேயவன் மூன்றும் வினையாலணையும் பெயர்கள். ஒள் முடி - ஒளியுடைய முடிகள். இற - இற்றொழிய. விரல் - ஈண்டு, காற்பெருவிரல் மட்டும். நிறுவி - ஊன்றி, ஊன்றியதும் கருணைப் பொருட்டாதலை வரத்தையே கொடுக்கும் என்றதாலறிக. (தி .2 ப .9 பா .3,4,8,11) வள்ளல் என்றதும் `வரங்கொடுப்பவன்` `வரத்தையே கொடுப்பான்` என்றதும் அறியின், சிவதலயாத்திரைக் கருத்தும் பயனும் விளங்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

ஆல முண்டமு தம்மம ரர்க்கரு ளண்ணலார்
கால னாருயிர் வீட்டிய மாமணி கண்டனார்
சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விட
மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே.

பொழிப்புரை :

நஞ்சினைத் தாம் உண்டு அமுதத்தை, தேவர்க்கு அளித்த தலைமையாளரும், காலன் உயிரை அழித்த நீலமணி போன்ற கண்டத்தினரும், திருமாலும் பிரமனும் வணங்கும் மழபாடியில் எழுந்தருளிய வீரரும் ஆகிய சிவபிரான் மிகுதியான அடியவர்களும் தவத்தவர்களும் தம்மைச்சாரும் புகலிடமாய் விளங்குபவர்.

குறிப்புரை :

தான் உண்டது நஞ்சு, அமரர் (தேவர்)க்கு அருளியது அமுதம் ஆயினும் நஞ்சின் பயனாம் இறப்புத் தனக்கில்லை. அமுதத்தின் பயனாம்வாழ்வு அத்தேவர்க்கிருக்கின்றது. இதனால்உயிர்களின் வாழ்முதல் இறைவன் என்னும் சிவபரத்துவம் இனிது விளங்கும். தன்னைப் புகலடைந்தவர்க்கு மரணபயம் போக்கும் ஆற்றலுடையவன் என்னும் வாய்மைக்குக் `கால காலன்` `நீலகண்டன்` என்ற திருநாமமே சான்றாம் என்பார், `காலனாருயிர் வீட்டிய மாமணிகண்டனார்` என்றார். அடியவர்க்குளதாகும் நலத்தை அளவிடலரிதென்பதை, `சால நல்லடியார்` என்று விளக்கினார். தவத்தார்களும் என்றதால் அடியார்களும் என்க. சார்விடம் - புகலிடம் (சரணாகதி ஸ்தானம்). மைந்தனே - சிவபெருமானே. அடியார் - திருவடியடைந்தவர். தவத்தார் - அடி அடையத்தவஞ்செய்பவர். தவம் - சரியை, கிரியை, யோகம், அடி - ஞானம், மால் - திருமால். அயன் - பிரமன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும்
நலியு நாள்கெடுத் தாண்டவென் னாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்
மலியு மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே.

பொழிப்புரை :

துன்பம் தரும் வலிய சமணர்களும், கரிய சாக்கியப் பேய்களும் உலகை நலிவு செய்யும் நாளில் அதனைத் தடுத்துச் சைவத்தை மீண்டும் நிலைபெறச் செய்யுமாறு என்னை ஆண்டருளிய என் நாதனார் வாழும்பதி, உணவிடுதலும், பாட்டும், தாளத்தொடு, கூடிய முழவொலியும் பிற மங்கல ஓசைகளும் நிறைந்து சிறந்த மழபாடி. அதனை வாழ்த்திவணங்குவோம்.

குறிப்புரை :

கலி - துன்பம், இங்குத் துன்பஞ்செய்தலைக் குறித்தது. அமண் - சமணர். நலியும் நாள் - தமிழ் நாட்டு மக்களை வருத்திய காலத்தில். கெடுத்து - அவ்வருத்தத்தைப் போக்கி, ஆண்ட - சைவத்தை நிலைநாட்டிப் பரவச்செய்து சிவநெறியிற் புகுத்திய, `என் நாதனார்` என்றது இங்கு மிக்க பொருத்தமாகி இவர் திருவருளை முன்னிட்டுப் பரசமய நிராகரணம் புரிந்த உண்மையை விளக்குகின்றது. திருமழபாடியில் பலி, பாட்டு, பண், முழவு, பலவோசை எல்லாம் மலிந்திருந்தன என்பதால் அக்காலத்துச் சிவாலயபரிபாலன மகிமையை அறியலாம், வாழ்த்தி வணங்கும் என்றது முன்னிலைப் பன்மை ஏவல்வினை. (பார்க்க: தி .2 ப .9 பா . 2,4,6)

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

மலியு மாளிகை சூழ்மழ பாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன்
* * * * *

பொழிப்புரை :

(இப்பாடலின் பின் இரண்டு அடிகள் கிடைத்தில) மாளிகைகள் பலவும் சூழ்ந்த மழபாடியுள் விளங்கும் வள்ளலை, வலியவாகச் செய்யப் பெற்ற மதில்கள் சூழ்ந்த, கடற்கரையை அடுத்துள்ள காழிப்பதியுள் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் ...

குறிப்புரை :

மழபாடி, மாளிகைச் சிறப்புடையதென்று இரண்டாவது திருப்பாடலிலும் கூறினார். கலி - வலிமை, எழுச்சி. கவுணியன் - கௌண்டின்ய கோத்திரத்தான்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங் கலக்குடி
நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித் தாட்டியர்ச் சிக்க விருந்த புராணனே.

பொழிப்புரை :

மலையிலிருந்து புகழ்மிக்க மணிகள், அகில், சந்தனம் ஆகியனவற்றை வாரிக்கொண்டுவரும் நீரை உடைய பொன்னி நதியின் வடபால் விளங்கும் திருமங்கலக்குடியில், அக்காவிரி நீரினைப் பெருமைமிக்க முனிவர் ஒருவர், தமது வலிமை மிக்க நீண்டகையால் கோயிலில் இருந்தவாறே நீட்டி எடுத்து நிறைத்து இறைவனுக்கு அபிடேகம் புரிந்து அர்ச்சிக்க பழையவனாகிய பெருமான் மகிழ்ந்து அதனை ஏற்று வீற்றிருந்தருள்கின்றான்.

குறிப்புரை :

சீர் - கனம், புகழ், மணியும் அகிலும் சந்தனமும் மிக்குள்ள மலை. சந்து - சந்தனம். வரை - மலை. வாரி - வெள்ளம். பொன்னி - காவிரி. பொன்னி வடமங்கலக்குடி - ஆற்றின் வடகரையிலுள்ள தலம். இத்தலத்தில் வாழ்ந்த முனிவர் ஒருவர் சிவபூஜைக்குரிய திருமஞ்சனநீரை அமர்ந்தவண்ணமே திருக்கைகளை நீட்டி, ஆற்றுநீரை முகந்து அபிடேகம் புரிந்தார் என்பது வரலாறு. அவ்வுண்மையை முதற்றிருப்பாட்டில் உணர்த்தியருளியதால் ஆசிரியர் திருவுள்ளக் கிடக்கையில் அது முந்தி நின்றவாறறியலாம். ஆற்றினளவும் நீண்டதால் `நெடுங்கை` என்றார். பூரித்து - நிறைத்து. ஆட்டி - அபிடேகித்து. அர்ச்சிக்க - அருச்சனைபுரிய. புராணன் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள், பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன் என்னும் இருபொருளும் தருமாறு பிரிக்கப்படும் வடசொல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பணங்கொ ளாடர வல்குனல் லார்பயின் றேத்தவே
மணங்கொண் மாமயி லாலும் பொழின்மங் கலக்குடி
இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட
அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே.

பொழிப்புரை :

ஆடும் அரவினது படம் போன்ற அல்குலை உடைய மகளிர் பலகாலும் சொல்லி ஏத்த, மணம் பொருந்தியனவும் பெரிய மயில்கள் ஆடுவனவுமான பொழில்கள் சூழ்ந்த மங்கலக்குடியில் தம்முள் மாறுபடும் செய்திகளைக் கூறும் வேதங்களை வல்ல அந்தணர்களும் இமையவர்களும் வணங்கிப்போற்ற உமையம்மையாரோடு எழுந்தருளியிருக்கும் பெருமான் திருவடிகளே நமக்குப் புகலிடமாகும்.

குறிப்புரை :

பணம் - அரவின் படம். நல்லார் - பெண்டிர். மணம் கொள் பொழில் - வாசனை கொண்ட சோலை. ஆலும் - ஆடும். இணங்கிலாமறையோர் என்பதிலும், இணங்கிலாமை மறைகட்குரிய அடைமொழியேயாகும். மறைகள் மெய்ப்பொருளை அறிந்து இணங்காதன. ஆரணம் அறியா அரும்பெருங்கடவுள் பரமசிவன் என்பதும் அவன் `இணங்கிலி` (திருவாசகம். 389.) என்பதும் பிரசித்தம். இமையோர் - இமைகொட்டாத வானோர். விழித்தகண் குருடாய்த் திரிவீரராகியயோகியருமாம். அணங்கு - உமையம்மையார், சரண் - கதி, புகல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கருங்கை யானையி னீருரி போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாமண மார்பொழில் சூழ்மங் கலக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே.

பொழிப்புரை :

கரிய துதிக்கையை உடைய யானையை உரித்த தோலைப் போர்த்த கள்வரும், அயலிடமெல்லாம் மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்த மங்கலக்குடியில் அரும்புகளோடு கூடிய கொன்றை மலர் மாலையை அணிந்தவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளை அன்போடு விரும்பி ஏத்த வல்லவர் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

கருங்கை - பெரிய துதிக்கை. கருமையை யானைக்குச் சேர்த்து நிறத்தைக் கொள்ளலும் ஆம். ஈர் உரி - ஈர்ந்த தோல். வினைத்தொகை. இத்தொடரின் உண்மைக் கருத்து ஆணவ மலத்துட்படும் உயிரின் உள்ளொளி வடிவுடையன் மெய்ப்பொருள் என்பதாம். `ஒளிக்கும் இருட்கும் ஒன்றே இடம்` எனத்தொடங்கும் கொடிப்பாட்டின் உட்கிடக்கையை இங்கு உணர்க. மருங்கு - பக்கம். அன்பு - பக்தி, விருப்பம் - ஆர்வம். வீடும் - அழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

பறையி னோடொலி பாடலு மாடலும் பாரிடம்
மறையி னோடியன் மல்கிடு வார்மங் கலக்குடிக்
குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று
முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே.

பொழிப்புரை :

பறையொலியோடு பாடல் ஆடல்புரியும் பூதகணங்கள் சூழ, வேத ஒழுக்கத்தோடு நிறைந்து வாழும் அந்தணர் வாழும் திருமங்கலக்குடியில் விளங்கும் இறைவனை, குறைவிலா நிறைவே என்றும், பிறர்க்கு இல்லாத எண்குணங்களை உடையவனே என்றும் முறையோடு வணங்குவோர், முதன்மையான சிவநெறியை அறிவார்கள்.

குறிப்புரை :

பறை - வாத்தியம். பாரிடம் - பூதகணம். மறையினோடு இயல் மல்கிடுவார் - வேதஞானமும் வேதவொழுக்கமும் மிக்கவர் அந்தணர். குறைவிலா நிறைவே என்றது பரிபூரணன் பரசிவனன்றி வேறில்லாமை உணர்த்திற்று, ஏனைய நிறைவெல்லாம் அதனிற் பெரிய பிறிதொரு நிறைவைநோக்கின் குறைவுடையதாகும், ஏரி நீர் நிறைவைநோக்கி வாவி நீர் நிறைவு குறைவுடையதாதல் போல; பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம் ஒன்றே குறைவிலா நிறைவு என்க. `குறைவிலா நிறைவே கோதிலா அமுதே` `குறைவிலா நிறைவே குணக்குன்றே` என்ற ஆசிரிய வசனங்களும் அறிக. குணம் இல் குணம் - எண்குணத்தவன். முறை - சிவாகம விதிமுறை. முன்னெறி - சமயநெறி எல்லாவற்றிற்கும் முதன்மையுடைய சிவநெறி. நெறி என்பது அந்நெறியொழுகிப் பெறும் பேரின்பப்பயனை உணர்த்தும் ஆகுபெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

ஆனி லங்கிள ரைந்தும விர்முடி யாடியோர்
மானி லங்கையி னான்மண மார்மங் கலக்குடி
ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே
ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே.

பொழிப்புரை :

பசுவிடம் விளங்கும் பால், தயிர் முதலான ஐந்து தூயபொருள்களிலும் மூழ்கி, மானை ஏந்திய அழகிய கையினராய், மணம் பொருந்திய மங்கலக்குடியில், தசைவற்றிய வெள்ளிய பிரமகபாலத்தைக் கையின்கண் உடையவராய் விளங்கும் பெருமானார் திருவடி அடைதலே ஞானத்தின் பயனாவது என்பதை அறிந்து அவற்றை ஏத்த வல்லவர் வினைகள் நாசமாகும்.

குறிப்புரை :

ஆனில் அம் கிளர் ஐந்தும் - கோ (பசு) வினிடத்து உண்டாகிய பால், தயிர், நெய், கோமயம், கோமூத்திரம் என்னும் ஐந்தும்; ஆயினும் முதன் மூன்றே சைவாசாரியர் கொண்டாடியன. `ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்.` மான் நில் அம்கை - மான் நிற்கும் அழகியகை. மான் நிலம் கை என்பதில் நடுமொழியீறு குறைந்ததெனினும் பொருந்தும். மானுக்கு இல்லமாகிய கையுமாம். ஊன் இல் வெள்தலை - தசையற்ற வெள்ளைத்தலை, பிரமகபாலம். உயர்பாதம் - திருவடி. இதில் திருவடிஞானம் ஒன்றே வீடுபேறளிக்கும் உண்மை உணர்த்தினார். முன்னர் `வெண்ணெய்ப் பெரு மானடி ஞானமாக நினைவார் வினையாயின நையுமே` என்றதும் அறிக. `அவனடி அவ்வொளி ஞானம்` அடி ஞானம் ஆன்மாவிற்றோன்றும்` இறைவனடி ஞானமே ஞானம் என்பர்` `ஆசான் அருளால் அடிசேர் ஞானம் வந்திடும் மற்றொன்றாலும் வாராதாகும்` (சித்தியார்.)

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்
வானு மாய்மதி சூடவல் லான்மங் கலக்குடி
கோனை நாடொறு மேத்திக் குணங்கொடு கூறுவார்
ஊன மானவை போயறு முய்யும் வகையதே.

பொழிப்புரை :

தேனும் அமுதமும் போல இனியவனும், தெளிந்த சிந்தையில் ஞானவெளியாக நிற்பவனும், பிறைமதியை முடியிற் சூட வல்லவனும் ஆகிய திருமங்கலக்குடிக்கோனை நாள்தோறும் வணங்கி, அவன் குணங்களைப் புகழ்பவர்களின் குறைகள் நீங்கும். உய்யும் வழி அதுவேயாகும்.

குறிப்புரை :

தேனுமானான். அமுதும் ஆனான், தெளிந்த சிந்தை என இறந்தகாலப் பெயரெச்சமாக விரிக்க. தெளியாத சிந்தையுள் ஞானாகாசம் எய்தாது. வான் - ஞானவெளி. மதி - பிறை. கோன் - முதல்வன். கூறுவார் - தோத்திரஞ்செய்வார். ஊனமானவை - பிறவிக்கேதுவான மும்மல காரியங்கள். உய்யும்வகை - பாசம் நீங்கிச் சிவம் பிரகாசிக்கும் திறம். இஃது ஆன்மாக்கள் `உய்யுமாறு ஒன்று அருளிச்செய்` தது. இந்த `உய்வினை நாடாதிருப்பது ... ஊனம்`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வேள்ப டுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
வாள ரக்கர் புரமெரித் தான்மங் கலக்குடி
ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே
கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே.

பொழிப்புரை :

மன்மதனை அழித்த நுதல் விழியினனும், மேரு மலையை வில்லாகக் கொண்டு வாட்படை உடைய அரக்கர்களின் முப்புரங்களை எரித்தவனும் ஆகிய, திருமங்கலக்குடியை ஆளும் முதற்பிரானாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்து, அவனை ஏத்துவார் நாள், கோள் ஆகியவற்றால் வரும் தீமைகள் அகல்வர். குற்றங்கள் இலராவர்.

குறிப்புரை :

வேள் - கருவேள், மன்மதன், படுத்திடுகண் - அழித்த நெற்றித் தீ விழி. கண்ணினன் - கண்ணுடையவன். வாள் - கொடுமை, வாட்படையுமாம். அரக்கர் - பிறர் தீமை செய்யாதிருப்பவும் தீங்கிழைப்பவர்.(அசுரர் - தீங்கிழைத்தவர்க்கு அது செய்பவர்). ஆளும் - ஆட்கொள்ளும். ஆதிப்பிரான் - முதற்கடவுள். அடிகள் - பாசநீக்கமும் சிவப்பேறுமாகிய இரண்டு திருவடிகள். `யான்` `எனது` என்னும் இருசெருக்கும் அறுதலாகிய இரண்டெனலும் சாத்திர சம்மதம், `பரை உயிரில்யான் எனதென்றறநின்றதடியாம்` (உண்மை நெறிவிளக்கம்)`யான் எனதென்றற்ற இடமே திருவடி`. ஏத்த - வழிபட, துதிக்க. எடுத்தல் என்பதன் மரூஉ. ஏத்தல் - இறைவன் புகழை எடுத்தோதுதல், எடுத்தலோசையே தோத்திரங்கட்கு உரியது. கோள் - கிரகங்கள். நாள் - மீன்கள். குற்றம் - ஆணவம் முதலிய முக்குற்றம்`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பொலியு மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட
வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங் கலக்குடிப்
புலியி னாடையி னானடி யேத்திடும் புண்ணியர்
மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே.

பொழிப்புரை :

விளங்கித் தோன்றும் பெரிய கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனை முதலில் அடர்த்துப் பின் அவன் புகழ்ந்து ஏத்திய அளவில் அவனுக்கு வலிமை, வாள், நீண்ட ஆயுள் முதலியனவற்றைக் கொடுத்தருளியவனும், புலித்தோல் ஆடை உடுத்தவனும் ஆகிய மங்கலக்குடிப் பெருமானை வணங்கி, அவன் திருவடிகளை ஏத்தும் புண்ணியர் இன்பம் மிகப்பெறுவர். சிவலோகம் சேரவல்லவர் ஆவர். காண்மின்.

குறிப்புரை :

பொலியும் - விளங்கும். வரை - கயிலைமலை. வலி - பலம். வாளும் நாளும்:- வாட்படையும் ஆயுளும் அருளிய இவ்உண்மை பயின்று வருதல் காணலாம். புலியினாடையினான் - புலித்தோலுடை தரித்தவன். புண்ணியர் - சிவபுண்ணியத்தவர். மலியும் - இன்பம் மிகும். வானுலகம் - வீட்டுலகு. வல்லவர் - வன்மையுடையவர். காண்மின் என்றது ஆசிரியர் திருமுன் அந்நாளில் இருந்தவரை நோக்கி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

ஞால முன்படைத் தானளிர் மாமலர் மேலயன்
மாலுங் காணவொ ணாவெரி யான்மங் கலக்குடி
ஏல வார்குழ லாளொரு பாக மிடங்கொடு
கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே.

பொழிப்புரை :

உலகைப் படைத்தவனாகிய குளிர்ந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் அறிதற்கரிய நிலையில் எரி உருவானவனும், திருமங்கலக்குடியில் மண மயிர்ச்சாந்தணிந்த குழலினளாய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்ட அழகிய வடிவினனுமாகிய சிவபிரானின் குணத்தைக் கூறுங்கள். அதுவே உங்களைக் குணமுடையவராக்கும்.

குறிப்புரை :

ஞாலம் - பூமி. நளிர் - குளிர்ச்சி, படைத்தானாகிய அயன் (பிரமன்). மாமலர் - தாமரை. எரியான் - தீப்பிழம்பானவன். ஏலம் - மயிர்ச்சாந்து. `ஏலவார் குழலாள்` என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. இது திருமுறையுட்பயின்றது. கோலம் - அழகு. குணத்தைக் கூறுங்கள். அதுவே குணமாகும். மற்றவை குணமாகா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங் கலக்குடிச்
செய்ய மேனிச் செழும்புனற் கங்கை செறிசடை
ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே.

பொழிப்புரை :

அழுக்கேறிய மேனியராகிய சமணர்கள், மேனி மீது விரித்துப் போர்த்த துவராடையராகிய சாக்கியர் ஆகியோர்களின் பொய்யுரைகளை விட்டுச் சைவசமய உண்மைகளை உணரும் புண்ணியர்கள் வாழும் திருமங்கலக்குடியில், சிவந்த திருமேனியனாய்ச் செழுமையான கங்கை நதி செறிந்த சடையினனாய் விளங்கும் தலைவன் சேவடிகளை ஏத்த வல்லார்க்கு, அழகிய பேரின்ப வாழ்வு அமையும்.

குறிப்புரை :

மெய்யின் மாசு - உடலழுக்கு. சமணர் சாக்கியர் ஆகிய பரசமயத்தவர் பொய்யுரைகளை விட்டுச் சைவ உண்மையை உணர்ந்தொழுகுவோர் புண்ணியர். அத்தகையவர் சேர்ந்துறையும் புகழ்மங்கலக்குடிக்குள்ளது. செய்யமேனி - `சிவனெனும் நாமம் தனக்கே யுடைய செம் மேனி எம்மான்` புனல் - வெள்ளம். ஐயன் - பரத்துவக் கடவுள். சேவடி - சிவந்த திருவடி. சிவஞானப் பிரகாசம். அழகு - பேரின்ப வாழ்வு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

மந்த மாம்பொழில் சூழ்மங் கலக்குடி மன்னிய
எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே.

பொழிப்புரை :

தென்றற் காற்றைத்தரும் பொழில்கள் சூழ்ந்த திரு மங்கலக்குடியில் நிலைபெற்றுள்ள எம் தந்தையாகிய சிவபிரானை அழகிய பொழில் சூழ்ந்த காழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன், சிந்தித்து அவன் திருவடிகளைச் சேர்க்கவல்லதாகப் பாடிய இத்திருப்பதிக வாய்மொழியை அன்புருக ஏத்த வல்லவர், இமையோர் தலைவர் ஆவர்.

குறிப்புரை :

மந்தம் - தென்றல் (வீசுதல்). மன்னிய - நிலைபெற்ற. எழில் - அழகு. இத்திருப்பதிகம் திருவடியிற்சேர்க்க வல்லது, சிந்தை செய்தல் சேர்த்திடற்கும் ஏத்தற்கும் பொருந்துதலறிக, இமையோர் முதல் - தேவர் கோமகன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே. 

பொழிப்புரை :

நன்மையே வடிவானவன். நான்கு மறைகள், அவற்றோடு இயலும் ஆறு அங்கங்கள் ஆகியனவற்றில் வல்லவன். அவற்றைக் கற்றுணர்ந்த அந்தணர்பால் நிறைந்து அவர்கள் ஓதும் துதிகளைத் தன் வடிவாகக் கொண்டவன். பழமையான மதில்கள் சூழ்ந்த காழிப்பதியில் விளங்கும் கோயிலைத் தனது வீடாகக் கொண்டவன். அத்தகையோனை ஏத்துவோர்க்கு இன்பம் உண்டாம்.

குறிப்புரை :

நல்லான் - மங்களவடிவினன், சிவன். நான்மறை - சைவத்திற்கு உரியனவாயிருந்த பழைய நான்கு மறைகள். 'தத்து வாதீதமெனச் சாற்றுங்காண் சைவமறை அத்துவா எல்லாம் அற' (துக ளறுபோதம். 20) ஆறு அங்கம் - சிக்ஷை. வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம், கற்பம் என்பன. இவை சைவமறைக்கும் உரியன. `மறைகள் - வேதம்`. (தி.2 ப.12 பா.7) வல்லான் - வன்மையுடைய சிவபிரான், வல்லவர் - வன்மையுடைய அந்தணர். பால் - ஏழனுருபு. மலிந்து - நிறைந்து. சொல்லான் - துதிவடிவானவன். கோயிலாம் இல்லான் - கோயில் என்னும் பெயரினதாய வீட்டினன். நின்றார் - நிலைத்தவர். இன்பம் உளது; உளது - அழியாது என்றும் இருப்பது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

நம்மான மாற்றிந மக்கரு ளாய்நின்ற
பெம்மானைப் பேயுட னாடல்பு ரிந்தானை
அம்மானை யந்தணர் சேரும ணிகாழி
எம்மானை யேத்தவல் லார்க்கிட ரில்லையே. 

பொழிப்புரை :

நம் குற்றங்களைத் தீர்த்து நமக்குக் கருணை காட்டும் தலைவன். பேய்களோடு ஆடல் புரிபவன். அரிய வீரன். அந்தணர்கள் வாழும் அழகிய காழிப்பதியில் விளங்கும் எம் கடவுள். அத்தகையோனை ஏத்துவார்க்கு இடர் இல்லை.

குறிப்புரை :

நம் மானம் - நம் குற்றங்களாகிய ஆணவம், மாயை, கன்மம் (மூன்றும்). மாற்றி - தீர்த்து, மாறச்செய்து, வீடுற்ற உயிர்களின் நீங்கி ஏனையுயிர்களையுற்று. அருளாய் - சிவஞானமாகி. `மருமகன்` மருமான் என்றானதுபோலப் `பெருமகன்` பெருமான் என மருவிற்று. பேயோடு கூத்தாடிய வரலாறு.
புரிதல் - செய்தல். அருமகன் என்பது அம்மான் என்று மருவி அருமைக்கடவுள் என்றதாம். எம்மான் - எம் கடவுள். மகன், மைந்தன் என்பவை வீரன், ஆடவன், கடவுள் என்னும் பொருளில் ஆளப்பட்டன. இடர் - கேவலாவத்தையும் சகலாவத்தையும் அவற்றுட்பட்டதுயரும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பாற்
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
இருந்தானை யேத்துமி னும்வினை யேகவே. 

பொழிப்புரை :

தன்னிடம் அன்பு செய்து ஏத்தாதார் அளிக்கும் படையலை உண்ணாதவன். பொய்யாக அடிமை செய்வாரிடம் பொருந்தாதவன். புதுமைக்கும் புதியவன். நான்குவேதங்களை ஓதும் வேதியர் நிறைந்த காழிப்பதியில் இருப்பவன். அத்தகையோனை நும் இடர்போக ஏத்துவீராக.

குறிப்புரை :

அருந்தானை - உண்ணலாகாதென்ற நோன்பியை, `தன் உடம்பின் ஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க` (நாலடி.80) அன்பு - பக்தி. ஏத்தகில்லார் - ஏத்தமாட்டாதவர். அன்பு செய்து ஏத்தமாட்டாதவரிடத்தில் யாதும் அருந்தாத (உண்ணாத)வனை. பொய்யடிமைத் தொழில் செய்பவருள் பொருந்தாதவனை.
விருந்தானை - புதியனை. வேதியர் - மறையோர். ஓதி - வேதம் ஓதி. நும் வினைபோக ஏத்துமின்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை யந்தணர் காழிய மர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

புற்று வடிவானவன். புற்றில் வாழும் பாம்பினைத் தன் அரைமீது சுற்றியவன். தனக்குத் தொண்டு செய்பவர்களோடு தன் பெருமைகளை விடுத்துப் பழகியருள்பவன். அந்தணர்கள் நிறைந்த காழிப்பதி மீது பற்றுடையவன். அவனைப் பற்றி நிற்பவர்கட்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

புற்றான் - புற்றானவன் (வன்மீகநாதன், புற்றிடங் கொண்டான் என்பன திருவாரூர்ப் பெருமான் திருநாமங்கள். பந்தணைநல்லூர் முதலிய வேறு தலங்களிலும் புற்றிடத்தில் இறைவன் எழுந்தருளிய உண்மையை அறியலாம்). புற்று அரவம் - புற்றில் வாழும் பாம்பு. அரை - இடை. சுற்றான் - சுற்றுதலுடையவன். பாம்பை இடுப்பிற்சுற்றியவன். தொண்டு செய்வார் அவர் தம்மொடும் - தொண்டுகளைச் செய்பவராகிய அவரொடும். அற்றானை - அற்றவர்க்கு அற்ற சிவனை. `அற்றவர்க்கு அற்ற சிவன்` என்பதன் தாற்பரியம் ஆராய்ந்து உணரத்தக்கது. எல்லாப்பற்றும் அற்றவர்க்கே சிவபிரான் `பற்றற்றான்` எனல் விளங்கும். \\\\\\\"புற்றில் வாளரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன், கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும் ஓர் தெய்வந்தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம்அஞ்சுமாறே\\\\\\\" என்னுந் திருவாசகத்தின் கருத்தே ஈண்டுக் கொள்ளல் வேண்டும். `அற்றவர்கள் நற்றுணைவன்` (சம்பந்தர் திருக்கயிலாயம் 2). `பாவம் அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே` (திருச்சாத்த மங்கை.6), `நெஞ்சு அற்றவர் அருவினையிலரே. (திருச்சிறு குடி.5), `உறவும் ஆகி அற்றவர்களுக்கு மாநெதிகொடுத்து நீள்புவி இலங்கு சீர்ப்புறவ மாநகர்க்கிறைவனே எனத் தெறகிலாவினையே` (திருப்பிரமபுரம்.8), `உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே`(2). `தம் வினையான எலாம் அற அற்றவர் ஆரூர் அரனெறி` (அப்பர்.5). `அற்றவர்க்கு அன்பர்` `அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு உற்ற நற்றுணையாவான்` (திருவாஞ்சியம்,6) அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய்போற்றி` `அற்றார்க் கருள்செய்யும் ஐயாறன்னே`, `அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்`, `அற்றவர்க்கு அருள் செய்பாச்சிலாச் சிராமத்து அடிகள்` `அற்றவனார் அடியார் தமக்கு`... நின்றியூரே` `பங்கயச் சேவடிக்கே செல்ல அற்றனன் அற்றனன்` `சோற்றுத்துறையுள்... முதல்வன் பாதத்து அற்றார் அடியார் அடிநாயூரன்` `ஒன்றுமிலாதவரைக் கழற்போதிறைஞ்சி` (திருவாசகம், 524), `அற்றவர்க்கு அற்றசிவன்` (பொன்வண்ணத்தந்தாதி, 74. இருபா இருபஃது 20.) எனத் தோத்திரமும் சாத்திரமும் இதனைப் பலமுறை குறித்தல் அறிதற்பாலது. `ஒருபற்றிலாமையும் கண்டிரங்காய்` என்றதாலும் இதனை இனிதுணரலாம். இன்னும் பல இடங்களில் இதனைத் திருமுறைகள் வற்புறுத்துகின்றன. பற்றான் - பற்று உடையவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நெதியானை நெஞ்சிடங் கொள்ளநி னைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமி னும்வினை பாறவே. 

பொழிப்புரை :

நமக்கு நிதியாக விளங்குவோன். தம் நெஞ்சில் அவன் எழுந்தருளுமாறு நினைப்பவர்க்கு நன்னெறி காட்டுபவன். மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சீகாழியைத்தன் ஊராகக் கொண்டவன். அத்தகையோனை நும் வினை நீங்கப் பாடுவீராக.

குறிப்புரை :

நெதி - நிதி என்பதன் மரூஉ. இவ்வாறாள்வது பயின்றுள்ளது. விதி - கட்டளை. கதி - நெறி. கார் - மேகம். பொழில் - சோலை. பதி - நகர். பாற - அழிய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

செப்பான மென்முலை யாளைத்தி கழ்மேனி
வைப்பானை வார்கழ லேத்திநி னைவார்தம்
ஒப்பானை யோதமு லாவுக டற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர்வி யந்தாரே.

பொழிப்புரை :

செப்புப் போன்ற மென்மையான தனங்களைக் கொண்ட உமையம்மை திருமேனியின் இடப்பாகமாக வைத்துள்ளவன். தன் திருவடிகளை நினைபவர்களிடம் ஒப்பப் பழகுபவன். கடல் நீர் உலாவுவதும், கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியில் மெய்ப்பொருளாக விளங்குபவன். அத்தகையோனை விரும்பி வழிபட்ட மக்கள் பிறரால் வியந்துபோற்றப்படும் புகழ் உடையோர் ஆவர்.

குறிப்புரை :

செப்பு ஆன - செப்பை ஒத்த. மேனி - திருமேனியின் இடப்பாதியில்.வைப்பானை -வைத்தலுடையவனை. `வைப்பவனை` எனின் முக்காலத்தும் ஒத்தியல்வதாகாது. தொல்காப்பியம் `செய்யும்` என்னும் வாய்பாட்டு நிகழ்காலத்து வினையாற் சொல்க என்றது. (வினையியல். 43) `முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம் முறைச் சொல்லும் நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்`. (பெயரியல், 19:) `நிகழூஉ நின்ற பால் வரை கிளவி` (வினையியல்.30:) பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங்காலத்துச் செய்யும் என்னுங்கிளவியொடு கொள்ளா`. என்பவற்றை நோக்குக. ஒப்பானை - ஒப்புதலுடைய வனை.`பராவுசிவர்` (தி.3 ப.67 பா.6, சித்தியார்.287) என்ற உண்மையை நோக்குக. ஓதம் - கடலின் அலை, குளிர்ச்சி. மெய்ப்பான் - மெய்யாதலையுடையவன். அவனே மெய்ப்பொருள். மேவிய - விரும்பி வழிபட்ட, மாந்தர் - மனிதரிற் சிறந்தவர். வியந்தார் - பிறரால் பேசப்படும் புகழ்க்குரியவர். பிறரை ஏவியாட்கொள்ளும் மேன்மையர் எனலும் பொருந்தும். மெய்ப்பானை வியந்தாரெனலும் ஆம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

துன்பானைத் துன்பம ழித்தரு ளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை யணிபொழிற் காழிந கர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.

பொழிப்புரை :

நம்மைத் திருத்துமாறு துன்பங்களைத் தருபவன். நாம் துயர் உறும் போது, அத்துன்பங்களைத் தீர்த்து அருளைப், புரியும் இன்ப வடிவாய் இருப்பவன். ஏழிசையின் கூறுகளை அறிந்து பாடிப் போற்றுவாரிடம் அன்பு செய்பவன். அழகிய பொழில் சூழ்ந்த காழிநகரில் நம்மால் விரும்பப்படுபவனாய் எழுந்தருளியிருப்பவன். அத்தகையோனை அடைந்து போற்ற வல்லாரின் வினைகள் அழியும்.

குறிப்புரை :

துன்பானை - துன்ப வடிவாயிருப்பவனை. அருள் ஆகிய இன்பானை - சிவஞானந்தந்தபேரின்ப வடிவினனை, `இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே`, `பந்தமுமாய் வீடும் ஆயினார்`, `அருள் நிதிதர வரும் ஆனந்தமலையே` என்ற திருவாசகக் கருத்து இங்குக் கொள்ளற்பாலது. `இன்பமும் நீயே துன்பமும் நீயே` (பெருந்தேவபாணி. 59). ஏழிசையின் நிலை பேணுவார் - ஏழிசையின் நிலையை விரும்புவார். `ஏழிசையாய் இசைப்பயனாய்` `இன்னிசை வீணையில் இசைந்தோன்` `ஏழிசையோன் கொச்சையை மெச்சினை` எழுவகை யோசையும் ... ... ஆகிய பரமனை` `ஏழிலின்னரம் பிசைத்தனை`.
அன்பான் - அன்பு வடிவானவன் `அன்பேசிவம் ஆவது.` அணி - அழகு. நம்பான் - உயிர்களால் விரும்பப்படுபவன். `நம்பும் மேவும் நசையாகும்மே` (தொல்காப்பியம்). நண்ண - விரும்ப, அடைய, செறிய. நாசம் - அழிவு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

குன்றானைக் குன்றெடுத் தான்புய நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
நன்றானை நம்பெரு மானைந ணுகுமே. 

பொழிப்புரை :

மலைகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். தான் எழுந்தருளிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் இருபது தோள்களையும் வென்றவன். மெல்லிய தாமரை மலரில் வாழும் நான்முகனும் மாலும் தேட ஓங்கி நின்றவன். உமையம்மையோடு காழிப்பதியுள் நன்மைகளைச் செய்பவனாய் வீற்றிருப்பவன். அத்தகைய நம் பெருமானை அடைந்து வழிபடுவீர்களாக.

குறிப்புரை :

குன்றான் - கயிலை முதலிய குன்றுகளையுடையவன். குன்றெடுத்தான் - கயிலையைத் தூக்கிய இராவணன். வென்றான் - நொறுக்கியவன். மலரான் - பிரமன். மால் - விண்டு. நேர் இழையாள்- திருநிலைநாயகி. இழை - ஆபரணம். நன்றான் - பெரியவன், நல்லதுடையான், சிவன். `குறைவிலா மங்கலக் குணத்தன்.` `நணுகும்` முன்னிலை ஏவல் வினை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டுவெகு ளேன்மின்
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னானடி கூறுமே. 

பொழிப்புரை :

தம் கொள்கைக்கு அழிவு வந்தபோதும் விடாது வாது செய்யும் சமணர் சாக்கியர்களின் பொருந்தாத உரைகளைக் கேட்டு அவர்களையோ சைவத்தையோ, வெகுளாது கொன்றைப்பூவணிந்தவனும், புனல் சூழ்ந்த காழிநகரின் தலைவனாய் மேலான சிவநெறிக்கு உரியவனும் ஆகிய சிவபெருமான் திருவடிகளைப் புகழ்ந்து போற்றுவீர்களாக.

குறிப்புரை :

சாவாயும் வாதுசெய்தல் - தம்கட்சி அழிந்தபோதும் வாதம்புரிதல். சாவு ஆயும் எனலுமாம். மேவாத - செல்லாத. வெகுளேன்மின் - கோபிக்காதீர்கள், (ஏவல்வினை) பகைவனை வெறுத்தல் வேண்டா என்றேனும், பகைவர் தீயுரைகேட்டுச் சைவத்தை வெறுத்தல் வேண்டா என்றேனும் கருத்துக் கொள்ளலாம்.
அடிகூறும் - திருவடியைத் துதிசெய்யுங்கள். கோஆய கொள்கையினான் - பரத்துவக்கடவுளாகிய கொள்கைக்குரியவன்; பரமசிவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானையு கந்துள்கித்
தழியார்சொன் ஞானசம் பந்தன்ற மிழார
மொழிவார்கண் மூவுல கும்பெறு வார்களே. 

பொழிப்புரை :

கழிகளின் வழியே வரும் மிக்க கடல்நீர் நிறைந்ததும் கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியுள் கோயில் கொண்டு நீங்காது உறையும் இறைவனை, நினைந்து மகிழ்ந்து அவனைப் பொருந்தியவனாய், ஞானசம்பந்தன் பாடிய தமிழை மனம் பொருந்த மொழிந்து போற்றுபவர்கள் மூவுலகையும் பெறுவார்கள்.

குறிப்புரை :

கழி - கழிகள், ஆர் - பொருந்திய, சீர் ஓதம் - மிக்க கடல் நீர். உகந்து - விரும்பி. உள்கி - நினைந்து, தழி - தழுவி. ஆர் - பொருந்திய. ஆர - நிறைய. மொழிவார் - பாடுவார். கள் விகுதி பிற்கால வழக்கில் வழங்குவது. மூவுலகும் - மண், விண், பாதலம் மூன்றும். தழியார் - தழுவிய சிவஞானியர், சொல் - புகழ்ந்து போற்றுகின்ற எனலும் பொருந்தும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.

பொழிப்புரை :

வேதவடிவினன், குற்றமற்ற சிவந்த சடையிற் பொருந்திய வெண்பிறையினன். பெண்ணும் ஆணுமாகிய பெருமான் எல்லாப் பொருள்களிலும் உறைபவன். அழகிய கச்சிப்பதியில் திருஏகம்பம் என்னும் கோயிலில் உறைபவன். அத்தகையோனை அல்லது என் உள்ளம் பிறவற்றை நினையாது.

குறிப்புரை :

மறையான் - வேதசொரூபன், வேதங்களை அருளியவன் எனலுமாம். மாசு - குற்றம். புன்சடை - மென்மையையுடைய சடை. புன்மை, பொன்மையுமாம். பிறையான் - பிறையை அணிந்தவன். பெண்ணும் ஆணும் ஆகிய பெருமான். இறையான் - எப்பொருளினும் உறைவான். ஏர் - எழுச்சி. அழகும் ஆம். கச்சி - சிவதலம், காஞ்சிபுரம். திருவேகம்பம் - அங்குள்ள பெரிய சிவாலயம். திருவேகம்பத்து உறைவான் - திருவேகம்பம் எனப்பெயரிய திருக்கோயிலுள் வாழ்பவன். உள்காது - எண்ணாது. ஏகம்பம் - ஏகாம்ரம். ஏகாம்பரம். ஏகம் - ஒன்று. ஆம்ரம் - மாமரம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை
நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.

பொழிப்புரை :

நொச்சியிலை, வன்னிஇலை, கொன்றை மலர் பிறைமதி, வில்வம் ஆகியவற்றை முடியிற்புனைந்துள்ளமை அவன் அடையாளமாகும். விடைஊர்தியை உடையவன் அவன். கச்சியில் திருவேகம்பத்தில் எழுந்தருளிய அக்கறைக்கண்டனை விரும்பித் தொழுவீர்களாக. உம்மேல் வரும் வினைகள் மெலியும்.

குறிப்புரை :

நொச்சியிலை. வன்னிபத்திரம், கொன்றைப்பூ, பிறை, கூவிளம் (- வில்வம்) ஆகியவற்றைச் சிவபெருமான் முடியிற் புனைவது அவனது திருவேடமாகும். ஊர்தி - வாகனம். எருது வாகனத்தன். கறை - (நஞ்சுண்டதன் காரணமாகப் பொருந்திய அதன்) கறுப்பு. கண்டன் - திருக்கழுத்தினன். நச்சி - விரும்பி. பக்தி கொண்டு. தொழுமின் - வழிபடுங்கள். நையும் - அழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி
சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்
சேராதா ரின்பமா யந்நெறி சேராரே.

பொழிப்புரை :

உலகிற் பொருந்திய முழவம், மொந்தை, குழல், யாழ் ஆகியவற்றின் ஒலியோடு முறையான பாடலும் ஆடலும் குறையாத அழகிய கச்சி ஏகம்பத்து எம்மானைச் சேராதவர் இன்பமான நெறிகளைச் சேராதவர் ஆவர். நும் வினை - உங்கள் கர்மம், மேல்வினை - ஆகாமியம்.

குறிப்புரை :

பார் - நிலம். ஆரும் - நிறைந்து முழங்கும். முழவம், மொந்தை, குழல், யாழ் என்னும் இசைக்கருவிகளின் ஒலியும், சீரும், பாடலும், ஆடலும் கச்சியுள் அக்காலத்தில் மிக்கிருந்த உண்மை புலனாகும். சிதைவு - கேடு. ஏர் - எழுச்சி, அழகு. சேராதார் - இடைவிடாது நினையாதவர். இன்பமாய நெறி - பேரின்பத்தை எய்துவதற்குரிய நன்னெறியை (சன்மார்க்கத்தை). நகரமெய் விரித்தல். சேரார் - அடையார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பம்
சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.

பொழிப்புரை :

குன்றுகள் போன்று உயர்ந்த சுதைமாடங்களில் கட்டிய கொடிகள் கூடிச் சென்று மின்னல்கள் உராயும் முகில்களைத் தோயும் விரிந்த கச்சிப்பதியில் பலவாறு மன்றுகளில் புகழப்படும் சீர்மையை உடையவன் எழுந்தருளிய திருஏகம்பத்தை அடைந்து மனம் பொருந்த வழிபாடு செய்யும் அடியவர்கள்மேல் வினைகள் சேரா.

குறிப்புரை :

குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடம்:- நெடிய (உயரிய) சுதையால் தீற்றப்பட்ட மாடங்கள் மலைகளைப்போல் விளங்குகின்றன. கொடி கூடிப்போய் மின்தேய்க்கும் முகில்கள் தோயும் அம் மாடங்களின்மேல் கட்டிப் பறக்கவிட்ட துணிக்கொடிகள் எல்லாம் ஒருங்குசேர்ந்து சென்று மின்னல்கள் ஒன்றோடொன்று உராயும் மேகமண்டலத்தை அளாவிப்படியும். மன்று - பிருதிவியம்பலத்தை. மிகுதியாப்பரவித் தேய்க்கும் சீரால் எனலுமாம். மல்குசீரான் - மிக்க சிறப்புடைய சிவபிரான். ஏய்க்கும் - பொருந்தச்செய்யும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தம்
கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்
புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.

பொழிப்புரை :

சடைமுடியை உடையவனும், தலையோட்டைக் கையில் ஏந்திப் பலியிடுவார் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் உடல் பொருள் ஆவி ஆகியவற்றைக் கொண்டவனும் ஆகிய ஆரவாரம் நிறைந்த கச்சிப் பதியில் பொன்னிறமலர்கள் மலரும் கம்பை நதிக்கரையில் விளங்கும் திருஏகம்பம் உடையானை அல்லது பிறரை எனது உள்ளம் விரும்பாது.

குறிப்புரை :

தலை ஏந்தி - தலையை (பிரமகபாலத்தை)க் கையில் தாங்கி, தருவார்:- தாருகாவனத்துப் பெண்டிர், கடை - வாயிற் கடை, மூன்றும் - உடல் பொருள் ஆவி எல்லாம். உயிர், நாண். கற்பு என்றலுமாம். புடை - நகரின் பக்கங்களில். பொன் மலரும் - பொன் (போற் கொன்றைகள்) பூக்கும். பொன்விளையும் எனல் பொருந்தாது. கம்பை - கம்பாநதி. உடையான் - சுவாமி. உள்காது - நினையாது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.

பொழிப்புரை :

மழுவாள் அழகிய சூலம் ஆகிய படைகளை ஏந்தி யவர். தம்மிடம் பொருந்திய ஒளியுடையவர். இமயமலையின் உச்சியில் உறைபவர். உமையம்மை கங்கை ஆகியோருடன் கூடி அவர் எழுந்தருளிய பெருகும் புகழ் பொருந்திய ஏகம்பத்தைத் தொழுபவரே விழுமியோர் ஆவர். அவரை வினைகள் அணுகா.

குறிப்புரை :

மழு, வாள், சூலம் என்னும் படைகள் ஏந்தவல்லவர். வாள் - கட்கம், எழில் - அழகு, வல்லார்தம் ஏகம்பம், கெழுவாள், உமையாள், வாளோர் இமையர் (- இமயமலையர்). வாளோர் - ஒளியுடையவர். உச்சி, பொது. உமையாளும் கங்கையும் மல்குசீர். வழுவாமே - தவறாமல். தொழுவாரே - வணங்குவாரே. விழுமியார் - சிறந்தவர். துன்னா - நெருங்கா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்
தண்ணலா ராடுகின் றவலங் காரம்மே.

பொழிப்புரை :

வானகத்தில் உறைபவர். மறைகளாகிய வேதங்களை விரித்து ஓதுபவர்களின் கண்களின் ஒளிர்பவர். கருநிறம் உடைய காலனை வீரக்கழல் அணிந்த திருவடியால் உதைத்து வென்றவர். தம்மைச் சரணாக அடைபவர்களின் எழிலைக் கொள்ளும், கச்சி நகரில் விளங்கும் திருஏகம்பத்துத்தலைவர் ஆடுகின்ற ஆடல் மிக்க அழகுடையது.

குறிப்புரை :

விண்ணிலும் வேதங்களை விரித்துப் பொருள்கூறும் அறிஞர் கண்ணிலும் இருப்பவர். கரி(ந்த) காலன் - யமதர்மன். கழல் - திருவடிக்கு ஆகுபெயர். யமனைக் காலால் உதைத்து வென்றவர். வெல்வார். நண்ணுவார் - அடைவார், விரும்புவார். எழில் கொள்ளல் - வண்ணம்பெறல். நண்ணுவாரெழில் கொள்ளல் - இறைவன் தன்னைச் சேர்ந்தவர் வண்ணத்தைத் தான் கொள்ளுதல். `பொன்னிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் -(திருக்களிறு .79) என்றும் (ஈறாகி... முதலொன்றாய்... எண் வகையாய்...வேறாய்...உருவுடைமை... இருக்கின்றான்` (? 86) என்றும்) உள்ள சிவாகம வசனத்தை நோக்குக. `தந்தது உன்றன்னைக் கொண்டது என்றன்னை` என்றதும் உணர்க. நண்ணுவார் எழில்கொள்ள நகர் கொடுக்கும் என்ற கருத்தும் பொருந்தும். எழில் - சிவப்பொலிவு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.

பொழிப்புரை :

தூயவன். தூயனவாகிய மறைகளை ஒதிய வாயினன். ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த, தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன். அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர்.

குறிப்புரை :

தூயவனும், தூயனவாகிய மறைகளை ஓதியருளிய வாயவனும், வாளேந்திய அரக்கனாகிய இராவணனது வலியை வாடச்செய்த தீயவனும், தீயது இல்லாத திருக்கச்சியேகம்பத்தில் மேவியவனும் ஆகிய சிவபெருமானை விரும்பித்தொழுவார் என் தலைமேல் இருப்பவர். இத்திருப்பாட்டின் ஈற்றடிப் பொருளால், திருஞானசம்பந்தர்க்குச் சிவனடியாரிடத்திலுள்ள பத்திச் சிறப்பு விளங்கு கின்றது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நாகம்பூ ணேறதே றல்நறுங் கொன்றைதார்
பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
ஏகம்ப மேவியா டுமிறை யிருவர்க்கும்
மாகம்ப மறியும்வண் ணத்தவ னல்லனே.

பொழிப்புரை :

நாகம் அவனது அணிகலன். அவனது ஊர்தி விடை. மணம் கமழும் கொன்றை அவனதுமாலை. ஒருபாகத்தில் பெண்ணைக் கொண்டவன். பிச்சையும் ஏற்பவன். மறைகளைப்பாடுபவன். கச்சித்திருஏகம்பத்தில் எழுந்தருளி மகிழ்வோடு ஆடும் இறைவன். திருமால் பிரமர்க்குப் பெரிய நடுக்கத்தைத் தருவதோடு அவர்களால் அறியத்தக்க வண்ணத்தவன் அல்லன்.

குறிப்புரை :

பூண்நாகம், ஏறல்ஏறது, தார் நறுங்கொன்றை, பாகம் பெண் என்று இயைத்து, சர்ப்பாபரணம், இடபவாகனம், கொன்றை மாலை, மாதியலும் பாதியைக் கொண்டுரைக்க. பலியும் ஏற்பர் - பிச்சை கொள்வர். உம்மை பலியின் இழிவை மிகுத்து நின்றது. மறை - வேதம். ஏகம்பம் மேவிஆடும் இறை - திருவேகம்பத்தில் (பிருதிவியம் பலத்தில்) எழுந்தருளிய கடவுள், ஆட்டம்:-காமாட்சியம்மையாரைத் தன்பால் ஒடுக்கிய இடமாதலின், வகாரத்தைத் தன்பால் அடக்கிய சிகாரத்தின் நிலையாகிய சிவாநந்தத் தாண்டவம். இருவர் - பிரம விட்டுணு. மாகம்பம் - அறியும் வண்ணத்தவன் அல்லன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே.

பொழிப்புரை :

போதிமரநிழலில் அமர்ந்த புத்தனை வணங்கு வோரும், அசோகமர நிழலில் அமர்ந்த அருகனை வணங்குவோரும் ஆகிய புத்தசமண மதத்தினரின் பொய்ந்நூல்களை ஆராய்வதை விடுத்து, வாருங்கள். அழகிய மாமர நீழலில் விளங்கும் தலைவனாகிய சிவபிரான் ஆடும் கச்சியுள் விளங்கும் திருஏகம்பத்தை விதிப்படி வழிபடுங்கள். நும் மேல் வரும் வினைகள் நில்லா.

குறிப்புரை :

போதியார் - போதிமரத்தின் கீழமர்ந்த புத்தனை வணங்குவோர். பிண்டியார் - பிண்டி (அசோக) மரத்தின் கீழமர்ந்த அருகனை வணங்குவோர். பொய்ந்நூல் - மெய்ப்பொருளை அறிந்தெழுதப்படாத புத்தகம். வாதியா - வாதிக்காமல். வம்மின் - வாருங்கள். அம் - அழகிய. மா - மாமரம். ஏகாம்பரம். மா எனும் கச்சி:- திருவேகம்பம் எனப்படும் கச்சி. ஆதியார் - முதல்வர். நீதியால் - சிவாகமமுறைப்படி. தொழுமின் - வழிபடுங்கள். நும்மேல் - உங்கள்பால், வினை நில்லா - கர்மம்பற்றா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்
கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால்
சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே.

பொழிப்புரை :

அழகும் தண்மையும் பொலிவும் உடைய கச்சி ஏகம்பத்தில் விளங்கும் தலைவனைப்பற்றி, நீர் வளமும் தண்மையும் அழகும் உடைய சீகாழிப்பதியுள் தோன்றியவனாய் ஒலிமாலை எனப்படும் திருப்பதிகங்களால் இசைத்தமிழில் பாடவல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆடிப் போற்றப் பாவம் கெடும்.

குறிப்புரை :

அம்தண்பூ - அழகும் குளிர்ச்சியும் பொலிவும் பொருந்திய, கந்தண்பூங்காழியூர் - நீரும் குளிர்ச்சியும் அழகும் உடைய சீகாழிப்பதி. கலிக்கோவை - ஒலிமாலை. `பூத முதல்வன் முதலே முதலாகப் பொலிந்த சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே` (தி.3 ப.54 பா.8) என்று திருப்பாசுரத்தில் அருளியது அறிக. சந்தம் - இசைப்பாடல். சொல் - சொல்மாலை. பாடி ஆடப்பாவம்கெடும். காழியூரனாகிய தமிழ் ஞானசம்பந்தன்; கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல ஞானசம்பந்தன்; `ஒண்கலியைப் பொன்றும் கவுணியன்` அருளியகோவை ஆதலின், கலியைத் தீர்க்கும் கோவை எனலும் ஆம். கலியுகத்துக்கோவை, கலிவிருத்தக்கோவை எனல் பொருந்து மேற்கொள்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நீற்றானை நீள்சடை மேனிறை வுள்ளதோர்
ஆற்றானை யழகமர் மென்முலை யாளையோர்
கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்ப மேவிய
ஏற்றானை யேத்துமின் நும்மிட ரேகவே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்தவன். நீண்ட சடைமுடி மீது பெருகி வந்த கங்கை ஆற்றைத் தாங்கியவன். அழகமைந்த மெல்லிய தனங்களைக் கொண்ட உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவன். அத்தகையோன் பொழில் சூழ்ந்த கோழம்பம் என்னும் தலத்தில் விடையூர்தியனாய் உள்ளான். `நும் துன்பங்கள் நீங்க வேண்டுமாயின் அவனை ஏத்துங்கள்`.

குறிப்புரை :

நீற்றானை - திருநீற்றை அணிந்தவனை. நிறைவு - பூரணம். ஆற்றானை - கங்கையாற்றை அணிந்தவனை. மென் முலை யாள் - உமாதேவியார். ஓர் கூற்றானை ஒரு (வாம) பாகத்தையுடையவனை. பொழில் - சோலை. ஏற்றான் - எருது வாகனத்தன். இடர் ஏக ஏத்துமின் - துன்பம் தொலையத் தொழுங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

மையான கண்டனை மான்மறி யேந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
செய்யானைத் தேனெய்பா லுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே.

பொழிப்புரை :

கருமைநிறம் பொருந்திய கண்டத்தினன். மான் கன்றை ஏந்திய கையினன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த கோழம்பத்தில் விளங்கும் செம்மையன். தேன், நெய், பால் முதலியவற்றை ஆடிய மெய்யினன். அவனை இடைவிடாது நினைப்பவர் மேல் வினைகள் மேவா.

குறிப்புரை :

மை - கருமை, மேகமும் ஆம். ஆன - ஆகிய, ஒத்த. கண்டனை - திருக்கழுத்துடையவனை. மறி - கன்று. கடி - மணம் பொழில் - சோலை. செய்யான் - செந்நிறமுடையவன், செம்மையுடையவன், (தி.195. ப .59 பா -5.)`திருநின்ற செம்மை` `செம்மையுள் நின்றவன்`(சுந்தரர்)`செம்பொருள்` தேன், நெய், பால் என்பன அபிடேகப் பொருள்களுள் அடங்கியவை, திகழ்ந்து - விளங்கி. ஆடிய - அபிடேகிக்கப்பெற்ற. மெய் - திருமேனி, சத்தியமுமாம். மேவுவார் - இடைவிடாது தியானிப்பவர். மேவா - அடையமாட்டா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

ஏதனை யேதமி லாவிமை யோர்தொழும்
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
காதனைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
நாதனை யேத்துமின் நும்வினை நையவே.

பொழிப்புரை :

நாம் செய்யும் குற்றங்கட்குக் காரணமானவன். குற்றம் அற்ற இமையாநாட்டமுடைய யோகியர்களால் வழிபடப் பெறும் வேதவடிவினன். வெண்குழையும் தோடும் அணிந்த செவிகளை உடையவன். விளக்கமான பொழில்கள் சூழ்ந்த கோழம்பம் மேவிய தலைவன். அவனை உம் வினைகள் நைந்து கெடுமாறு ஏத்துமின்.

குறிப்புரை :

ஏதன் - குற்றமுடையவன். `குற்றம்நீ குணங்கள்நீ கூடலால வாயிலாய்,(தி.3 ப.52 பா.3) என்று இவ்வாசிரியர் திருவாக்கேயிருத்தல் அறிக. ஏதம் - குற்றம். காரணனுமாம். இமையோர் என்பதற்குத் தேவர் என்று பொருள்கூறுவர். இது சைவநூல்கட்கு ஒவ்வாது. இமைத்தலில்லாதவர் - இமையோர் என்னும் சாமான்யம் பற்றி இவ்வாறு கூறுவர். `இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த் தோன்றாத் துணையாயிருந்தனன்` என்பதில் தேவர்க்கு அன்பன் எனல்பொருந்துமோ? கண்ணிமைத்துக் காணாதயோகியர், விழித்தகண் குருடாத்திரி வீரர் என்பதே உண்மைப் பொருள். வேதன் - மறைகளை அருளியவன். வெண்குழை தோடு - சங்கத்தோடுங்குழையும். நைய - வருந்த (நீங்க).

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய
விடையானை வேதமும் வேள்வியு மாயநன்
குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்
உடையானை யுள்குமின் உள்ளங் குளிரவே.

பொழிப்புரை :

சடைமுடியை உடையவன். குளிர்ந்த தாமரை மலரில் விளங்கும் பிரமனின் தலையோட்டைக் கையில் ஏந்திய விடை ஊர்தியன். வேதமும் வேள்வியுமாய நன்மைகளை உடையவன். குளிர்ந்த பொழில்சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தனக்கு ஊராக உடையவன். உள்ளங்குளிர அவனை நினைவீர்களாக.

குறிப்புரை :

தண்மலரான்சிரம் - பிரமகபாலம், `வேத வேள்வி யை`(நிந்தனை செய்துழல் ஆதமில்லி) (தி.3 ப. 108.பா.1) என்றதறிக. நன்கு - நன்மை. உடையான் - உடையவன், சுவாமியும் ஆம். உள்கு மின் - தியானம் புரியுங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத் தையலொர் பான்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற் கோழம்ப மேவிய
ஊரானை யேத்துமின் நும்மிட ரொல்கவே.

பொழிப்புரை :

மேகமாக இருந்து மழை பொழிபவன். மணம் கமழும் கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவன். உமையம்மையை ஒருபாலாகக் கொண்டு மகிழ்ச்சிமிக்கவனாய் விளங்கும் புகழினன். செறிந்த பொழில்கள் சூழ்ந்த திருக்கோழம் பத்தைத்தன் ஊராகக் கொண்டு அதன்கண் உறைபவன். நும் இடர்கள் நீங்க அவனை ஏத்துங்கள்.

குறிப்புரை :

காரான் - மேகமாயிருப்பவன். `கனத்தகத்தான் கயிலாயத்துச்சியுள்ளான்` போது - பூ. தார் -(மாலை, கண்ணி) தார். தையல் - பாலாம்பிகை. சீரான் - கனவான். ஒல்க - சுருங்க. கோழம்பம் மேவிய ஊர் என்றதால் திருக்கோயிலின் திருநாமம் கோழம்பம் என்க. கோழம்பங்கோயிலாக் கொண்டான்` என மேல்வருதலும் காண்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பண்டாலின் னீழலா னைப்பரஞ் சோதியை
விண்டார்கள் தம்புர மூன்றுட னேவேவக்
கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக்
கொண்டானைக் கூறுமி னுள்ளங் குளிரவே.

பொழிப்புரை :

முற்காலத்தே ஆலின் நிழலில் இருந்து அறம் உரைத் தவன். மேலான ஒளிவடிவினன். பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களும் ஒருசேர வெந்தழியுமாறு செய்தவன். மணம் கமழும் திருக்கோழம்பத்தைக் கோயிலாகக் கொண்டவன். உள்ளம் குளிர அவன் புகழைக் கூறுங்கள்.

குறிப்புரை :

ஆல் - கல்லாலமரம். பரஞ்சோதி - மெய்யொளி. விண்டார்கள் - பகைவராகிய திரிபுரத்தசுரர்கள். புரம் மூன்று - முப்புரம். கண்டான் - கண்டவன்; வினையாலணையும் பெயர். கூறுமின் - புகழுங்கள். கடவுள் புகழை வாயாற் கூறுதல் உள்ளக் குளிர்ச்சிக்குக் காரணம் என்றவாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சொல்லானைச் சுடுகணை யாற்புர மூன்றெய்த
வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்
கொல்லானை உரியானைக் கோழம்ப மேவிய
நல்லானை யேத்துமி னும்மிடர் நையவே.

பொழிப்புரை :

எல்லோராலும் புகழப்படுபவன். அனல் வடிவான கணையைத் தொடுத்து முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவன். வேதமும் வேள்வியும் ஆனவன். தன்னைக் கொல்ல வந்த யானையை உரித்து அதன் தோலைப்போர்த்தவன். திருக்கோழம் பத்தில் எழுந்தருளிய மங்கலவடிவினன். நும் இடர் கெட அவனை ஏத்துவீராக.

குறிப்புரை :

சொல்லான் - சொல்வடிவாகிய அம்பிகையை உடைய வன். சொல்லாயிருப்பவன் எனலும் பொருந்தும். கணை - திருமாலாகிய அம்பு, வில் - மேருவில். வேத வேள்வி, (தி .2 ப .13. பா .4) கொல் லானை - கொல்லும் யானை வினைத்தொகை. (உரி - தோல்) உரியான் - தோலைப் போர்த்துக் கொண்டவன். நல்லான் - சிவன், மங்கலவடிவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக்
குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச்
செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம்
பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே.

பொழிப்புரை :

விற்படையை உடைய வலிய இராக்கதர்களின் வலிய வேந்தனாகிய இராவணனைத் தன் அழகிய கால் விரலால் நசுக்கியவன். கொடிய காலனைச் செற்றவன். புகழ் விளங்கும் திருக்கோழம்பத்திற் பற்றுதல் உடையவன். அவன்மீது பற்றுக் கொள்வாரை வினைகள் பற்றா.

குறிப்புரை :

வில்தானை - விற்படை. வல் அரக்கர் - வலிய இராக்கதர். அசுரர் காரணம்பற்றி வருத்துபவர். இராக்கதர். ஒரு காரணமும் பற்றாது வருத்துபவன். அரக்கர் வேந்தன் - இராவணன். குற்றான் - சிறுமைப் படுத்தியவன், நசுக்கியவன் விரலாற் குற்றான் என்று கொள்க. காலனைச்செற்றான் - காலசங்காரக் கடவுள். பற்றான் - பற்றுதலுடையவன். பற்றுவார் - அடியர். பற்றா - தொடரா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்
படியானைப் பண்டங்க வேடம் பயின்றானைக்
கடியாருங் கோழம்ப மேவிய வெள்ளேற்றின்
கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.

பொழிப்புரை :

நீண்ட வடிவெடுத்த திருமாலும் பிரமனும் அறிய முடியாத வகையில் ஓங்கி நின்ற உருவத்தை உடையவன். பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடும் கோலம் பூண்டவன். மணம் கமழும் திருக்கோழம்பம் மேவிய இடபக்கொடியினன். உள்ளம் குளிர அவன் புகழைக் கூறுங்கள்.

குறிப்புரை :

நெடியான் - விக்கிரமன், திருமால். அயன் - அஜன், பிரமன். படியான் - உருவத்தையுடையவன் (படியனார். தி .2 ப .79 பா . 10) பண்டங்கவேடம் - பாண்டரங்கம் என்னும் கூத்துக்காகக் கொண்ட திருவேடம். வெள்ளேற்றின் கொடி - இடபத்துவசம். எருதின்கொடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்
கொத்தலர் தண்பொழிற் கோழம்ப மேவிய
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.

பொழிப்புரை :

புத்த சமயத்தினரும், மயில் தோகையாலாகிய பீலியைக் கையில் கொண்டுள்ள பொய்ம்மொழி பேசும் பித்தர்களாகிய சமணர்களும் பேசுவன பயன்தரும் உண்மையான அறவுரைகளாகா. பெருமை பொருந்திய பூங்கொத்துக்கள் அலரும் குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோழம்பம் மேவிய அத்தனை அல்லல்கள் அகலப் போற்றுங்கள்.

குறிப்புரை :

தோகையம்பீலி - மயிற்பீலியாலாகியவார்கோல். பொய்மொழிப்பித்தர் - மெய்யுரையாத மயக்கவுணர்வினராய சமணர். பீடு - பெருமை. அத்தன் - பிதா. அல்லல் - பிறவிப்பிணி முதலிய துன்பங்கள். அறுக்க - அறச்செய்ய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம் பந்தனம் பானுறை
விண்பொழிற் கோழம்ப மேவிய பத்திவை
பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீர் மிகுந்த தண்ணிதான அழகிய தராய் என்னும் மாநகரில் தோன்றிய, எல்லோரிடமும் நட்புக்கொண்டு ஒழுகும் ஞானசம்பந்தன் சிவபிரான் உறையும் வானளாவிய பொழில் சூழ்ந்த கோழம்பத்தைப் புகழ்ந்து போற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் இசைபொருந்தப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

தராய் - சீகாழியின் பெயர். நம்பான் - சிவபிரான். விண் பொழில் - வானை அளாவிய சோலை. பத்தும் இவை - இப்பதிகத்தை. பண்கொளப் பாடவல்லார் - பண்ணிசையுடன் பாடும் வன்மையுடையவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.

பொழிப்புரை :

சடையின்மேல் சந்திரனையும் சிவந்த கண்களை உடைய பாம்பையும் உடையவன். உடைந்த தலையோட்டில் பலிஏற்று, ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவன். தேவர்களால் வணங்கப்படும் திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவன். அவனையன்றிப் பிறரை நினையாது என் உள்ளம்.

குறிப்புரை :

சடையானை என்றதன் பின் கூறியதால், சந்திரனையும் சிவந்த கண்களையுடைய பாம்பையும் அச்சடைமேல் உடையான் என்க. அரா - பாம்பு. உடைதலை - உடைந்ததலை, பிரமகபாலம். ஊரும்விடை - ஏறிச்செலுத்தப்படும் எருது. விண்ணவர் - தேவர். வெண்ணி:- வென்றி என்பதன் மரூஉ. நன்றி - நண்ணி. பன்றி - பண்ணி, மன்று - மண்ணு, கன்று - கண்ணு என்பனவற்றிலுள்ள னகரமும் றகரமும் உற்ற திரிபைநோக்குக. உள்காது - நினையாது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
ஆதியை யாதியு மந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.

பொழிப்புரை :

ஒளி வடிவினன் வெண்ணீற்றைச் சுண்ணமாக அணிந்த எம் தலைவன். முதலும் முடிவும் இல்லாத மறையோன். வேதியர்களால் வணங்கப்பெறும் திருவெண்ணியில் விளங்கும் நீதி வடிவினன். அவனை நினைய வல்லவர்களின் வினைகள் நில்லாது அகலும்.

குறிப்புரை :

சுண்ணம் - பொடி. ஆதியும் அந்தமும் இல்லாத வேதியை - முதலும் முடிவுமில்லாத மறையோனை, வேதத்தை அருளியதால் வேதியானான். நீதியை - தருமசொரூபியை. நினைதல் எளிதன்று. அரிதாகப் பெறத்தக்கது ஆதலின் `வல்லார்` என்றார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.

பொழிப்புரை :

கனியாய் இனிப்பவன். மனம் கனிந்து வழிபடுவோரைக் கலந்து ஆட்கொள்ளும் முனிவன். மூவுலகங்கட்கும் தானேதலைவன் ஆனவன். மேம்பட்டவன். நல்லவர்களால் வணங்கப் பெறும் வெண்ணியில் எழுந்தருளிய இன்ப உருவினன். அவனை ஏத்துவார் குற்றம் இலராவர்.

குறிப்புரை :

கனிதனை - பழத்தை, கனிந்தவர் - மனங்கனிந்துருகி வழிபடுபவர். முனிதனை - மனனசீலனை, நனிதனை - மேம்பட்டவனை. நனி - மிகுதி, உரிச்சொல்லடியாக நின்ற பெயர். நல்லவர் - சரியை, கிரியை, யோகங்களில் முதிர்ந்த ஞானிகள், சைவநலமுடையவரெனப் பொதுப் பெயருமாம். இனிதனை -(இனிது + அன் + ஐ) இன் புருவானவனை. ஏதம் - இருவினைக் குற்றம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்
காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக
ஆர்த்தானை யழகமர் வெண்ணியம் மான்றன்னை
ஏத்தாதா ரென்செய்வா ரேழையப் பேய்களே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்கட்கும் முன்னே தோன்றிய பழையோன். மூவுலகங்கட்கும் தலைவனாய் விளங்கிக்காப்பவன். தன்னை வழிபட்டு நெகிழ்ந்தவர்களோடு கலந்து அவர்களைப் பிணிப்பவன். அழகிய வெண்ணி நகரில் விளங்கும் தலைவன். அவனை ஏத்தாதவர் என்ன பயனைக் காணவல்லார்? அவர்கள் மனிதரே ஆயினும் பேய்களையே ஒப்பர்.

குறிப்புரை :

மூத்தான் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாயிருப்பவன். மூவுலகுக்கு ஒரு மூர்த்தி:- சிவபரத்துவம் கூறியவாறு, முற்பாட்டினிலும் காண்க. காத்தான் - மூவுலகையும் காத்தவன், காக்கின்றவன், காப்பவன். கனிந்தவரைக்கலந்தாட் கொள்ளல் மேலும் கூறப்பட்டது. அழகமர் வெண்ணி என்றதால் தலச்சிறப்பு விளங்கும். அம்மான் - அரியமகன். மகன் - கடவுள். மகள் - திருமகள், நாமகள். ஏத்தாதார் - துதித்து வணங்காதார். ஏத்துதல் - தோத்திரத்தால் வழிபடல். சிவபிரானை ஏத்தாதவர் மக்கட்பிறப்பினராயினும் பேய் போன்றவரேயாவர். `மனத்துன்னை நினைப்பின்றிப் பேயாய்த் திரிந்தெய்த்தேன்` என்னும் அருள்மொழிப் பகுதியைக் காண்க, திருவள்ளுவரும் `வையத்தலகை` என்றார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத் தையலொர் பாகமு டையானைச்
சீரானைத் திகழ்தரு வெண்ணி யமர்ந்துறை
ஊரானை யுள்கவல் லார்வினை யோயுமே.

பொழிப்புரை :

நிறைந்த நீரைக் கொண்ட கங்கையை முடிமிசைத்தரித்தவன். அதனைச் சூழக் கொன்றை மாலையைப் புனைந்துள்ளவன். உமையம்மையை ஓர்பாகமாக உடையவன். புகழ் பொருந்தியவன். விளங்கும் வெண்ணியை விரும்பி உகந்த ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவன். அவனை நினைவார் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

நிறைபுனல் - கங்கைநீர். தலையிற் கங்கையைச் சூழக் கொன்றைமாலையணிந்தான். திருவெண்ணியூர் அமர்ந்து உறைவான் என்று இயைத்துக்கொள்க. தோத்திரம் புறப்பூசையினும் சிறந்தது. அகத்தில் செய்யும் தியானம் அவ்விரண்டினும் பெரும்பயன் அளிப்பது. திரிகரணங்களாலும் ஆகும் வினைகளை அத்திரி கரணங்களாலும் தீர்க்கும் வழிகள் தியானம், தோத்திரம், நமஸ்காரம், பூஜை முதலியவை. அவற்றுள் தியானமே உத்தமம் ஆதலின், உள்க வல்லார் வினை ஓயும் என்று அருளினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

முத்தினை முழுவயி ரத்திரண் மாணிக்கத்
தொத்தினைத் துளக்கமி லாதவி ளக்காய
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனை யடையவல் லார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

முத்துப் போன்றவன். முழுமையான வயிரத்திரள் போன்றவன். மாணிக்கக் கொத்துப் போன்றவன். அசைவற்ற சுடராய் உலகத்தோற்றத்துக்கு வித்தாய் விளங்குபவன். தேவர்களால் தொழுது வணங்கப்பெறும் வெண்ணியில் விளங்கும் தலைவனாவான். அவனை அடைய வல்லவர்கட்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

முத்து, முழுவயிரத்திரள், மாணிக்கத்தொத்து, முதலி யவை, ஒப்பில்லாத கடவுளுக்கு அன்பின் மேலீட்டால், ஒப்புறுத்திச் சொல்லும் உபசாரவழக்கு.`பொருள்சேர் புகழ்` என்ற வள்ளுவர் கருத்தும் ஈண்டு நினைக்கத்தக்கது. தொத்து - கொத்து. துளக்கம் - அசைவு. இங்கு அணைதலைக் குறித்தது. அணையாவிளக்கு என்க. நமக்கு அல்லல் இல்லையாம்படி சிவனை அடையும் வன்மையைப் பெறத்தவஞ்செய்தல் வேண்டும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்
பாய்ந்தானைப் பரியகை மாவுரித் தோன்மெய்யில்
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.

பொழிப்புரை :

மன்மதனை எரித்தவன். கொல்லும் தொழிலுடைய எமனைச் சினந்து உதைத்தவன். பெரிய கையை உடைய யானையை உரித்து அதன் தோலை மேனிமீது போர்த்தவன். தேவர்கள் வந்து வணங்கும் திருவெண்ணியில் விளங்கும் அக்கடவுளை நினைப்பவர்களின் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

காமன் - பெண்ணாசையை வளர்ப்பவன், மன்மதன், காமத்திற்கு அதிதேவதை. காலன் - இயமன். காய்ந்தான் - கோபித்து எரித்தான். பாய்ந்தான் - பாய்ந்து உதைத்தான். பரிய - பருமையுடைய, பருத்த. கை - துதிக்கை. மா - யானை. உரி - உரித்ததோல். உரித்தோல் - உரியாகிய தோல். உரி:-முதனிலைத் தொழிற்பெயர். அஃது ஆகுபெயராய்த் தோலை உணர்த்துமிடமும் உண்டு. இங்குத் `தோல்` என்று அடுத்திருப்பதால் தொழிற்பெயராய் மட்டும் கொள்ளப்பட்டது. மெய் - திருமேனி. மேய்ந்தான் - வேய்ந்தான், அணிந்தான். நீந்தான் - கடவுள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்
செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோண்முடி
இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்
பொறுத்தானைப் போற்றுவா ராற்றலு டையாரே.

பொழிப்புரை :

பகைமை பூண்டவனாய்ப் பெருமை மிக்க கயிலை மலையைப் பொருட்படுத்தாது விரைந்து அதனைச் சினந்து சென்று எடுத்த இராவணனது பெருமை அழியுமாறு அவனுடைய விளங்கும் தோள்கள் முடிகள் ஆகியனவற்றை முரித்தவன். அழகமைந்த வெண்ணியில் உறையும் எம்தலைவன் என வழிபடுபவர் குற்றங்களைப் பொறுப்பவன். அவனைப் போற்றுவார் ஆற்றல் உடையவர் ஆவர்.

குறிப்புரை :

மறுத்தானை - பகைவனை. ஒன்றார் பொருந்தாதார் மறுத்தார் என்பவைபோலப் பகைவரைக் குறித்தற்கு ஆளும் பெயர்களை அறிந்து கொள்ளலாம். `மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக் கறுத்த வன்`(தி .1 ப .109 பா .8) செறுத்தான் - கோபித்தவனை. மறுத்தல், செறுத்தல் இரண்டும் இராவணன் தொழில். இறுத்தல் - முரித்தல். இறுத்தவனும் பொறுத்தவனும் சிவபிரான். ஆற்றல் - ஞானபலம் முதலியயாவும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மண்ணினை வானவ ரோடும னிதர்க்கும்
கண்ணினைக் கண்ணனும் நான்முக னுங்காணா
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை யடையவல் லார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

ஐம்பூதங்களில் மண் வடிவாக விளங்குபவன். வானவர்க்கும் மக்களுக்கும் கண் போன்றவன். திருமால் பிரமன் காண இயலாத விண் வடிவானவன். தேவர்களால் வழிபடப் பெறும் திருவெண்ணியில் விளங்கும் தலைமையாளன். அவனை அடைய வல்லவர்கட்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

மண்ணினை - அஷ்டமூர்த்தத்துள் பிருதுவிரூபமாக இருக்கின்ற சிவனை. `உலகுக்கெல்லாம் ஒருகண்` `உயிர்க்கெல்லாம் கண்` என்பதனால், `வானவர்க்கும் மனிதர்க்கும் கண்ணினை` என்றார். `பெண்ணவன்காண் .... எல்லாம் காணும் கண்ணவன்காண்` (தி .6 ப .48 பா .7)`கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான்கண்டாய்` (தி .6 ப .73 பா .2) விண் - திருச்சிற்றம்பலம். அண்ணல் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள். அல்லல் - பிறவித்துன்பம், இம்மையில் உறும் துயரம் எல்லாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
மிண்டர்கண் மிண்டவை கேட்டுவெகு ளன்மின்
விண்டவர் தம்புர மெய்தவன் வெண்ணியில்
தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே.

பொழிப்புரை :

குண்டர்களாகிய சமண புத்த மதத்தைச் சேர்ந்த மிடுக்குடையோரின் மிடுக்கான உரைகளைக்கேட்டு நம் சமயநெறிகளை வெறாதீர்கள். பகைவர் முப்புரங்களை எய்தவனாகிய திருவெண்ணியில் உறையும் இறைவனுக்குத் தொண்டு பூண்டு அவனை அடைய வல்லார்க்குத் துயர்கள் தோன்றா.

குறிப்புரை :

குண்டர் - கற்குண்டுபோலக் கட்டமைந்த உடம்பினர், சமணர், சாக்கியர். மிண்டர் - மிடுக்குடையவர். மிண்டவை - அதிக பிரசங்கம். வெகுளேல்மின் - சைவாகமப்பொருள் உண்மைகளைக் கோபித்து அலட்சியம் செய்யாதீர்கள். எதிர்மறைப் பன்மையேவல். `மின்` பன்மை விகுதி, அது நீங்கின் ஒருமையாதல் தெரியும். விண்டவர் - பகைவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருவாருந் திகழ்தரு வெண்ணிய மர்ந்தானை
உருவாரு மொண்டமிழ் மாலையி வைவல்லார்
பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.

பொழிப்புரை :

மணம் பொருந்தியதும் பெரியோர் நிறைந்ததுமான காழிப்பதியில் தோன்றி விளங்கும் ஞானசம்பந்தன், செல்வம் நிறைந்து திகழும் திருவெண்ணியில் அமர்ந்த இறைவனைப் போற்றிப்பாடிய ஞானவடிவாக விளங்கும் இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் மண்ணுலகினும் மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர்.

குறிப்புரை :

மருவாரும் - மணம் நிறையும்; பொருந்தாதவரும் காழியைப் பொருந்தி வழிபடு சிறப்புணர்த்தியதுமாம். மல்கு - நிறையும். திரு - நீர்வளம் முதலிய எல்லாச் செல்வங்களும். ஆரும் - நிறைந்துள்ள. திகழ்தரு - விளங்குகின்ற. (பிரசித்தி குறித்தது). அமர்ந்தான் - திருக்கோயில் கொண்டிருக்கின்றவன். உரு ஆரும் - ஞானவடிவம் பூரணமாயிருக்கும். பொரு - (உறழ்பொரு) சிறப்பு. பூலோகத்தினும் மேலானது புவலோகம். அஃது இங்குச் சிவலோகத்தை உணர்த்திற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நீரானே நீள்சடை மேலொர்நி ரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் றான்றொழும்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே யென்பவ ரூனமி லாதாரே.

பொழிப்புரை :

நீண்ட சடைமுடிமீது ஒப்பற்ற கங்கையை அணிந்தவன். வரிசையாகத் தொடுக்கப்பட்ட கொன்றை மாலையைச் சூடியவன். தாமரைமலரில் எழுந்தருளிய பிரமனால் வணங்கப்படும் புகழாளன். சீர்விளங்கும் திருக்காறாயில் எனப்படும் ஊரினன். இவ்வாறு அவனைப் போற்றிக் கூறுவார் குற்றம் இலராவர்.

குறிப்புரை :

நீள்சடைமேல் நீரான் - நீண்ட சடையின்மேல் கங்கை நீரையுடையவன், நிரை - வரிசை. தார் - மாலை. தாமரைமேல் அயன் - செந்தாமரையில் அமர்ந்திருக்கும் பிரமன். அயன் அஜன், தோன்றாதவன் என்பது அடிச்சொற்பொருள். சீரான் - மேன்மையை உடையவன். ஊனம் - பிறவி முதலிய குறைகள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்
பதியானே யென்பவர் பாவமிலாதாரே.

பொழிப்புரை :

பிறைமதியைச் சூடியவன். வரிகளை உடைய பாம்போடு ஊமத்தம் மலர் முதலியவற்றை அணிந்து நமக்கு ஊழை அமைப்பவன். விதிமுறைகளைப் பின்பற்றும் வேதியர்கள் வணங்கும் நிதியானவன். நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட திருக்காறாயில் எனப்படும் ஊரினன் என்று அவனைப் போற்றுவார் பாவம் இலராவர்.

குறிப்புரை :

மதி - பிறைச்சந்திரன். அரவு - பாம்பு. மத்தம் - ஊமத்தம்பூ. விதியான் - ஊழானவன், பாக்கியமானவன், விதிக்குங்கர்த்தா. விதித்தலையுடையவன். விதி உடை வேதியர் - வேதத்தில் விதித்தவை செய்தலும் விலக்கியவை செய்யாமையுமாகிய விதியை உடைய மறையவர். நெதி - நிதி, செல்வம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாம்
கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்
எண்ணானே யென்பவ ரேதமி லாதாரே.

பொழிப்புரை :

வீட்டுலகுக்கு உரியவன். தேவர்களாலும் போற்றி விரும்பப் பெறுமாறு மண்ணுலகில் வாழ்பவன். நிலவுலகில் வாழ்வோர்க்குக் கண் போன்றவன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருக்காறாயிலில் நாம் எண்ணுதற்கு ஏற்றவாறு எளிவந்திருப்பவன். இவ்வாறு அவன்புகழ் கூறுவோர் ஏதம் இலராவர்.

குறிப்புரை :

விண் - வீட்டுலகம், உயிர்க்கெல்லாம் கண். (தி. 2 ப.14 பா.9) எண் - எண்ணம். எண்ணான் - உள்ளத்திலிருப்பவன். எண்ணப்படாதவன், எண்ணுதற்குப் பொருளாயிருப்பவன், அளக்கும் அளவாயுள்ளவன். ஏதம் - குற்றம், கேடு, துன்பம் (எல்லாம்).

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே யாயநல் லன்பர்க் கணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.

பொழிப்புரை :

நமக்குத் தாயும் தந்தையும் ஆகி அவ்விருவர் செய்யும் கடமைகளையும் புரிபவன். தன்மீது நல்லன்பு செலுத்துவோர்க்கு மிக அணிமையில் இருந்து அருள்பவன். அல்லாதவர்க்குச் சேய்மையில் இருப்பவன். புகழ் விளங்கும் திருக்காறாயில் என்னும் தலத்தில் மேவி இருப்பவன் என இவ்வாறு போற்றுபவர் மீது வினைகள் மேவா.

குறிப்புரை :

தாயான் + தந்தை ... ஆயான் - `அம்மையப்பர்`. மெய்யுணர்வும் அன்பும் உடைய இருதிறத்தாரையும் நல்லன்பர் என்பது வழக்கம். கண்ணப்பர் நல்லன்பர்; மெய்கண்டார் மெய்யுணர்வினர்; இருவரும் அன்பிற் சிறிதும் வேறுபடார். சேயான் - செந்நிறத்தன் எனப் பொருள் கூறலாம். ஆயினும் முன் அணியான் என்றதனால் சேய்மை (தூரம்) இடத்தினன் என்பதே பொருத்தம். மேயான்- மேவியவன். மேவா - பொருந்தா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதின் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே

பொழிப்புரை :

எண்ணெண் கலைகளின் வடிவாய் விளங்குபவன். கலைகளின் பயனாய்ச் சிறந்த சிவந்த பொன்மயமான கயிலாய மலைக்கு உரியவன். தன்னோடு மலைந்த அசுரர்களின் முப்புரங்களைமாய்த்த வில்லை உடையவன். புகழ்மிகுந்த திருக்காறாயில் என்னும் தலத்தை நிலையாகக் கொண்டவன் என்று இவ்வாறு போற்றுபவர் மேல் வினைகள் நில்லா.

குறிப்புரை :

கலையான் - கலைகளாயும் அவற்றின் ஞானமாயும் உள்ளவன். செம்பொற் கயிலாயமலை:- வெண்மைநிறமுடையது. வெண்கயிலை என்றதற்கு முரணன்று. இமயத்தை மேரு என்றும் மேருவை இமயம் என்றும் நூல்களிற் கூறுவதுபோல் கூறப்பட்டது. பனிமலையில் தவளகிரியும் காஞ்சனசிருங்கமும் உண்டு. மலைபவர் - போர்செய்பவர், திரிபுரத்தசுரர். சிலை - மேருவில். நிலை - உறையுள்; திருக்கோயில். நிலையானவனுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

ஆற்றானே யாறணி செஞ்சடை யாடர
வேற்றானே யேழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே யென்பவர் மேல்வினை மேவாவே.

பொழிப்புரை :

`நெறிகளின் வடிவாய் விளங்குபவன். கங்கையை அணிந்த செஞ்சடைமீது ஆடும் பாம்பு ஒன்றை ஏற்றவன். ஏழுலகில் வாழ்வோராலும் தேவர்களாலும் போற்றப்படுபவன். பொழில் விளங்கும் திருகாறாயிலில் நீறுபூசிய கோலத்தோடு விளங்குபவன்`, என்று இவ்வாறு கூறிப்போற்றுபவர்மேல் வினைகள் நில்லா.

குறிப்புரை :

ஆற்றான் - ஆறுடையவன், வேதாகம வழியினன். ஆடரவு - ஆடும் பாம்பு. ஏற்றான் - தாங்கியவன். போற்று - துதி. பொழில் - சோலை. நீற்றான் - திருநீற்றையணிந்தவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.

பொழிப்புரை :

தீவினைகள் தேய்ந்து அறுமாறு செய்து நம்மை அவனோடு சேர்ப்பவன். தேவர்களால் போற்றப்படுபவன். நன்மாமுனிவர்கட்கு இடர் வாராது காப்பவன். மழைநீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்காறாயிலில் நிறைந்தவன். இவ்வாறு அவனைப் போற்றுவாரை வினைகள் வெல்லா.

குறிப்புரை :

ஏத்தான் - புகழ்களை எடுத்துச் சொல்லுதலைப் பெற்றவன். காத்தான் - தடுத்தவன். கார் - மேகம். வானோக்கும் பயிர்க்கிடம் ஆதலின் கார்வயல் என்றார். விளைபயிர்த் தோற்றம் பற்றியதுமாம். ஆர்த்தான் - நிறைந்தவன்; ஊட்டியவன். ஆடா - வெல்லா. `அட ராவே` என்பது பின்னோர் பதிப்பின் பாடம். அடரா - தாக்கா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்
எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.

பொழிப்புரை :

காலனைக் காலால் கடிந்தவன். கயிலாயத்தைப் பெயர்த்த இராவணனுக்கு ஏதம் வருமாறும், முனிவர்கட்கு இடர் கெடுமாறும் செய்தவன். விளக்கமான திருக்காறாயிலில் எழுந்தருளியிருப்பவன் என இவ்வாறு போற்றுவாரை வினைகள் வெல்லா.

குறிப்புரை :

கடுத்தான் - கோபித்(து உதைத்)தான். ஆக + முனிவர் என்புழி மகரம் இசைபற்றி நின்றது. இராவணனுக்கு - ஏதம் (துன்பம்) ஆகுமாறும் முனிவர்களுக்கு இடர்கெடுமாறும் செய்தவன். கேழ் -(ஒளிரும்) நிறம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பிறையானே பேணிய பாடலொ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்
உறைவானே யென்பவர் மேல்வினை யோடுமே.

பொழிப்புரை :

இளம் பிறையைச் சூடியவன். தன்னை விரும்பிப் பாடப் பெறும் இன்னிசைப் பாடல் வடிவில் அமைந்த சாமகானமாகிய மறை மொழியை ஏற்றருள்பவன். திருமாலும் நான்முகனும் தேடி அறிய முடியாத இறைவன். அழகிய திருக்காறாயிலில் உறைபவன் என்று போற்றுபவர் மேல் வரும் வினைகள் ஓடும்.

குறிப்புரை :

இசை மறையான் - சாமவேதத்தவன். இறையான் - இறைவன், எங்கும் தங்கியவன். எழில் - அழகு. உறைவான் - திருக்கோயில் கொண்டவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.

பொழிப்புரை :

உலகில் வாழும் முடைநாற்றம் வீசும் சமணரும், சீவரம் என்னும் துவர் ஊட்டிய ஆடையை அணிந்த புல்லிய புத்தர் என்ற பாவிகளும் கூறும் பேச்சுக்களைக் கேட்பதால் விளையும் பயன் ஏதும் இல்லை. மணம் கமழும் திருக்காறாயில் என்னும் தலத்தைக் குடியாகக் கொண்டு அங்கு எழுந்தருளிய இறைவனை வழிபட்டு வாழ்வோர்க்குக் குற்றம் ஏதும் இல்லை.

குறிப்புரை :

செடி - தீநாற்றம். சீவரத்தார்கள் - அழுக்குடையதும் பிறர்பால் காணாததும் அவர்க்கே வழக்கத்தால் உரியதுமான துவரூட்டிய உடையினை உடுத்தவர்கள் (சமணர் முதலோர்). படி - நிலம். கடி - மணம். குடியாருங்கொள்கை - தலவாசம் புரியும் விரதம். `அடியார் குடியாவர்` (தி .6 ப .17 பா .6)`அடியார்கள் குடியாக (தி .2 ப . 43 பா . 5), என் புழிப்படும் பொருளை உணர்க. குற்றம்:- ஆணவம் முதலியன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்திய ருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுண் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.

பொழிப்புரை :

புகழ் பொருந்தியதும் அழகு நிறைந்ததுமான திருக்காறாயிலில் எழுந்தருளிய, ஆராய்ந்து கூறப்படும் புகழ் மொழிக்குப் பொருளான இறைவன் திருவடிகளை ஏத்தி, அவன் அருள்பெற்ற, நீர் பாய்ந்து வளம் செய்யும் காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை இயன்ற அளவில் இசையோடு பாடி ஏத்துவார் வானுலகு ஆள்வர்.

குறிப்புரை :

ஏய்ந்த - பொருந்திய. ஆய்ந்தசீர் - வேதாகமங்களுள் ஆராயப்பட்ட (பொருள் சேர்) புகழ். பாய்ந்த நீர்க்காழி:- வெள்ளப் பெருக்கில் அழியாத உண்மை குறித்ததும் வளமுரைத்ததுமாம். `வந்தவணம் ஏத்துமவர் வானமடைவாரே` என்றது உணர்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து, குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

அயில் - கூர்மை. அம்பு - திருமாலாகிய கணை. `குயில் வாய்மொழியம்மை` என்பது அம்பிகை திருநாமம். பயில்வான் - கோயில்கொண்டு பயில்பவன். பற்றி நிற்றல் - பற்று விடுமாறு பற்றி வழிபடல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேனிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.

பொழிப்புரை :

நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித் தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச் சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.

குறிப்புரை :

விதியானை - வேதாகமவிதியானவனை, படைப்பவனாகியவனை; `கரியானை நான்முகனை`(தி .6 ப .1 பா .1) `நாரணன் காண்` `நான்முகன்காண்` (தி .6 ப .8 பா .3) நெதி - செல்வம். `நிதி`யின் மரூஉ மொழி முதல் இகாரம் எகாரமாயொலிக்கும், `விலை - வெலை` போல. வான் மதி - வெண்பிறை, `வானூர்மதி`யுமாம். பாறும் - அழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையு மாள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.

பொழிப்புரை :

வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி வழிபடுவார் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

எய்ப்பு - இளைப்பு, மெய்ப்பான் - பொய்யாதல் இல்லாதவன்; உண்மைப்பொருள். வீடும் - அழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்
உடையானை யூழிதோ றூழி யுளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன். பல்லூழிக்காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர் பண்ணிசைபாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன். அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

விடையான் - எருதேறி. படையான் - படைகளையுடையவன். ஊழிதோறும் உள்ளபடை ஞானவாட்படை, `ஞான வாளேந்தும் ஐயர்` (திருவாசகம். 613). மணஞ்சேரியில், ஆசிரியர் சென்றருளிய காலத்தில் பண்ணிசை பாடுதல் சிறந்திருந்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

எறியார்பூங் கொன்றையி னோடு மிளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.

பொழிப்புரை :

ஒளிபொருந்திய கொன்றைமலர்களோடு புதிய ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன். மான்கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.

குறிப்புரை :

எறிஆர் - ஒளிபொருந்திய (எறித்தல் - ஒளிவிடல்) வெறி - மணம். ஆர - நிறைய, மிலைத்தான் - சூடினான். மறி - மான் கன்று. கொன்றையினோடும் மத்தம், சடை ஆரமிலைத்தானும் மறிக்கையுடையானும் செறிவானும் ஆகிய சிவனைச் செப்பவல்லார் என முடிக்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல் லார்க்கெய்து மின்பமே.

பொழிப்புரை :

முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள் வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.

குறிப்புரை :

`எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும் ஈசன் என்னத்தக்க முதல் பரப்பிரமம் சதாசிவன் ஓம் என வேதம் சாற்றும்`. (காஞ்சிப். குமர .16), `சொல்லும் பொருளெலாம் ஆனாய் நீயே` (தி .6 ப .78 பா .5) `இமையோர் ஏத்தும் சொல்தான்காண்` (தி .6 ப .8 பா .4) என்பன வேதவுண்மையாதலின் மொழியான் என்றார், `சொல்லானை` (தி .2. ப .16 பா .9) எனப்பின் வருதலும் அறிக. நான்மறையும் அம்மறைப் பொருளுணர்ச்சிக்குக் கருவியாகிய ஆறு அங்கங்களும் மொழிந்தவன் சிவனே ஆதலால், அவற்றைப் பழியாதவாறு காத்தல் அவன் கடனாகும். `தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம், வகுத்தவன்` `விரித்தவன் அருமறை`. (தி .3 ப .23 பா .,6,7) `மருவினிய மறைப்பொருளை` `விரித்தானை நான்மறையோடங்கம் ஆறும்` (தி .6 ப .80 பா .,6,10) `வேதத்தை வேதவித்தை` (தி .6 ப .79 பா .3) அதுபற்றிப் பண்ணிசைகளையும் அளித்தருளினான். அஸ்ய மஹதோ பூதஸ்ய நிவ்வஸித மேத த்ருக் வேதோ யஜீர் வேதஸ் ஸாமவேத: இருக்குவேதம், யஜுர்வேதம், சாமவேதம் (முதலியவை) இம் மெய்ப்பொருளின் உயிர்ப்பு) என்று பிருகதாரண்யோபநிடதம் (4,4,10,6,5,11) கூறுகின்றது. பகர்தல் - சொல்லுதல், ஆன - ஆனவை, வினையாலணையும் பெயர். வழியான் - வேதாகம வழி, திருவருள்நெறி, ஒளிசேர்நெறி. இழியாமை - இகழாமல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.

பொழிப்புரை :

யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவன். தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகட்குக் கண்போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண் வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப்பேசுவோர் பெரியோர் ஆவர்.

குறிப்புரை :

எண்ணானை - யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவனை, மனாதீதனை. எண் - அளவு, பெண்ணான் - மங்கைபங்கன், கங்கைச்சடையன். பெரியோர்க்கு உரிய இலக்கணத்துள், சிவகீர்த்தனம் பாடுதலும் ஒன்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

எடுத்தானை யெழின்முடி யெட்டு மிரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகியபத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன். மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.

குறிப்புரை :

இராவணன் முடிபத்தும் தோள் (இருபதும்) கெடுத்தசிவனை, கேடிலாச்செம்மை - அழிவில்லாத `திருநின்ற செம்மை` எனப்படும் பேரின்பம். வண்டுகள் மடுத்து (உண்டு) ஆர - நிறைய. பிடித்துஆர - சிக்கெனப்பற்றிப் பூரணமாக, பேண - பத்திசெய்ய, பெரியோர்க்கு இதுவும் இலக்கணம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

சொல்லானைத் தோற்றங்கண் டானு நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
எல்லாமா மெம்பெரு மான்கழ லேத்துமே.

பொழிப்புரை :

வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப்படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம் அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில் உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப்பெருமான் திருவடிகளை ஏத்துவோம்.

குறிப்புரை :

சொல்லானை, (பார்க்க: தி .2 ப .2 பா .6) தோற்றம் - படைப்பு, சிருட்டி. கண்டான் - பிரமன். கல்லானை - கற்றுணரப்படாத பெருமையுடைய சிவனை, கற்றன - கற்றறிந்த சிவகீர்த்தனங்களை, ஓங்க வல்லார் - திருவருளுயர்ச்சியை அடையவல்லவர். `ஓங் குணர்வு` (திருவருட்பயன்,91) `எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி` `ஒருவனே எல்லாம் ஆகி அல்லானாயுடனுமாவன்`(சித்தியார், 47) ஏத்தும் - ஏத்துங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.

பொழிப்புரை :

சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர் நிலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.

குறிப்புரை :

சற்று - சிறிது. சொல்தேயும்வண்ணம் - பிதற்றுரைகள் பொருளுறாதனவாய் ஒழியும்வகை, `செம்மை உடையானை` (பா .8. பார்), வாவி - குளம். பற்று ஆக - உண்மையன்பிற்குரிய தலமாக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம் பந்தன் றமிழ்மாலை
மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க் கில்லை பாவமே.

பொழிப்புரை :

கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப்பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ்பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

காழியர்கோன் - தோணியப்பர். கருத்து - திருவுள்ளம். ஆர்வித்த - நிறைவித்த, ஒவ்வொரு திருப்பதிகமும் ஒவ்வொரு `தமிழ்மாலை` என்னும் உண்மையை இதில் அறியலாம். பண்ணாரப்பாடுதல் வல்லார்க்குப் பாவம் இல்லை. `கண் ... ... சீர்` என்றது ஆசிரியர் சிறப்பை உணர்த்துகின்றது. கண் - வேணுவனம், கண் - மூங்கில், `கண்ணார் கமழ்காழியர்` (தி .2. ப .23 பா .11.) என்றது காண்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமா மெழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.

பொழிப்புரை :

பிறை, கங்கை, மிகக் கொடிய நாகம் ஆகியன விளங்கும் சடையினை உடைய சிவபெருமானுக்கு இடம், அழகிய மகளிர் உலாவுவதும், ஒளிபொருந்திய முத்துக்கள் வயல்களில் விளங்குவதும், விலகி உள்ள கடற்கரையை அடுத்துள்ளதுமான வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

நிலவு - பிறை, ஆகுபெயர். புனல் - கங்கை. நிறைவாள் - நிறைந்தகொடுமையையுடைய; சாதி அடை. இலகும் - விளங்கும். எழிலார் - அழகுடையமகளிர். எழுச்சி உடைய உழத்தியருமாம். கடல் முத்துக்கள் வயலை அடைகின்றன. வெள்ளத்தில் மிதந்த வரலாறு பற்றி, `கடலார் வேணுபுரம்\\\\\\\' என்றார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

அரவார் கரவன் னமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே.

பொழிப்புரை :

பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்தவனும், மூங்கில் போன்று திரண்ட தோளினையும் குராமலர் அணிந்த கூந்தலினையும் உடைய உமையம்மையை ஒருகூறாக உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு இடம், மறையாதகொடையாளரும், தம்மோடு பழகியவர்களை நட்புக்கொண்டு ஒழுகுபவர்களும் ஆகிய நல்லோர் வாழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

அரவு ஆர்கரவன் - பாம்பைக் கங்கணமாக அணிந்த கையினன். அமை - மூங்கிற்கணுக்களின் இடைப்பகுதியை. ஆர் - ஒத்த. திரள் - திரண்ட. குரவு - குராமலர்மாலை. `கரவாது உவந் தீயுங் கண்அன்னார்\\\\\\\\\\\\\\\' (குறள் 1061). குழலாள் - கூந்தலையுடைய அம்பிகை. கூறன் - பாகத்தையுடையவன். கரவாத - மறைக்காத. கலந்தார் அவர்க்கு - கூடியவராகிய அவர்க்கு. விரவு ஆகவல்லார் - நட்பாக வல்லவர்கள் (வல்லவர்கள் வாழும் வேணுபுரம் என்க.)

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் முரிபோர்த் தவன்நண் ணுமிடம்
போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கண்
மேகந் தவழும் வேணு புரமே.

பொழிப்புரை :

அழகிய மேனியை உடைய உமையம்மை வெருவுமாறு யானையை உரித்துப் போர்த்த சிவபிரான் உறையும் இடம், மக்கட்கு விளைபொருள்களாகிய பயனைத்தரும் வயல்கள் சூழ்ந்துள்ள உயரிய பொழில்களில் மேகங்கள் தவழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

ஆகம் அழகு ஆயவள் - அழகிய திருமேனியை உடைய அம்பிகை. ஆகம் - உடம்பு. வெருவ - அஞ்ச. நாகம் - யானை. உரி- தோல். இரண்டடியிலும் வந்த மகர ஒற்றுக்கள் இசை பற்றி வந்த விகாரம். போகம் - வயல்விளைவாகக் கிடைக்கும் உணவுப்பொருள்கள். முதல் போகம் இரண்டாம் போகம் என்னும் வழக்கு உணர்க. பொழில்கண் மேகம் என்பதில் கண் உருபும், கள் விகுதியும் ஆகப்பிரித்துப் பொருள் கூறலாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

காசக் கடலில் விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா வதுவின் னறவ
வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும் வேணு புரமே. 

பொழிப்புரை :

முத்து பவளம் ஆகிய மணிகளை உடைய கடலில் எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடைய ஈசனுக்கு இடமாவது; இனிய தேன் நிறைந்ததும் மணம் நிறைந்ததுமான தாமரை மலரில் அன்னம் அலைகள் காற்று வீசத் துயில் கொள்ளும் வளம் நிறைந்த வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

காசு அக்கடல் - மணிகளையுடைய அழகிய பாற்கடல். இன் நறவவாசக் கமலம் - இனிய தேனையும் மணத்தையும் உடைய கமலம். அனம் - அன்னப்பறவை, இடைக்குறை. அன்னம் கமலத்தில் வலியஅலைகள் வீசுதலால் சிறுதுயில் கொள்ளும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

அரையார் கலைசே ரனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் மிடமாம
நிரையார் கமுகின் னிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே. 

பொழிப்புரை :

இடையில் மேகலை அணிந்தவளும், அன்னம் போன்ற நடையினளும் ஆகிய உமையம்மையைப் புகழ்ந்து உரைத்து, சிவபிரான் மகிழ்வுடன் உறையும் இடம், வரிசையாக வளர்ந்துள்ள கமுக மரங்களின் பாளைகள் உடைதலால் மணம் பொருந்தித் தோன்றும் பொழில்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

அரை ஆர் கலைசேர் அனம் மெல் நடையை - திரு விடையில் உடுத்தல் பொருந்திய மேகலை முதலிய திருப்புடைவை சேர்ந்த அன்னத்தினது மெல் நடைபோலும் நடை உடைய திருநிலை நாயகியை. உரையா - (புகழ்ந்து) உரைத்து. உகந்தான் - உயர்ந்தவன், மகிழ்ந்தவன் எனலுமாம். நிரை - வரிசை; நிகழ் - விளங்கிய; உடை விரை - உடைதலால் பரவும் மணம். உடைய பொழில் என்றும் இயையும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
றளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் நலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.

பொழிப்புரை :

ஒளிதரும் பிறையையும், வில்வத்தளிர்களையும் சடைமிசை உடையவனாகிய சிவபெருமானுக்குரிய இடம், குளிர்ந்த நீரில் நல்ல செங்கயல்மீன்கள் விளங்கும் வயல்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

பிறையும் தளிரும் உடையான். கூவிளம் - வில்வம். நளிரும் - குளிரும். மிளிரும் - விட்டு விட்டு விளங்கும், கண் மிளிரும் - கண்போல் விளங்கும் என்பதுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

ஏவும் படைவேந் தனிரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே. 

பொழிப்புரை :

இலக்குத் தவறாது செல்லும் கணைகளொடுகூடிய விற்படையை உடைய இராவணனை `ஆ' என்று அலறுமாறு அடர்த்தருளிய சிவபிரானுக்குரிய இடம், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

ஏவும்படை - குறிதவறாது வினையாற்றும் ஆயுதம். ஆ என்று அலற - அலறுவோர் ஒலிக் குறிப்புக்களுள் `ஆ' என்பது தலைமையானது. அஃது ஆஆ என அடுக்கியும் பின்`ஆவா' என்று உடம்படுமெய் பெற்றும் வரும். அதனைத் திருமுறைகளில் பல இடங்களில் காணலாம். அடர்த்தான் - தாக்கியவன். மறிமான் - மான்கன்று; மறிகளும் மான்களும் ஆம். பொழிலின் உள்ளே மானும் மேலே மதியமும் மேவும் என்க; மதியின் களங்கமுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
அண்ணல் லிருவர் அறியா இறையூர்
வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணில் திகழும் வேணு புரமே.

பொழிப்புரை :

திருமாலும், மணம் பொருந்திய சிறந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருவரும் அறியாதவாறு உயர்ந்து நின்ற இறைவனது இடம், அழகிய சுதை தீட்டப்பட்ட மாளிகைகளின்மேல் கட்டப்பட்ட கொடிகள் வானத்தில் திகழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

கண்ணன் - (திருமால்) கரியவன். கடி - மணம். மலர் - தாமரை. அண்ணல் - பிரமன். இறை - இறைவன். (சிவன்) வண்ணம்- அழகு. சுதை - சுண்ணம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

போகம் அறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் அறியா அடியார் இறையூர்
மூகம் அறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம் அறிவார் வேணு புரமே. 

பொழிப்புரை :

சிவபோகத்தின் சிறப்பை அறியாதவர்களும், துவராடை போர்த்துத்திரிபவர்களும் ஆகிய சமண புத்தர்களின் உடலை ஏறெடுத்தும் பாராத சிவனடியார்களுக்குத் தலைவனாகிய சிவபிரானது ஊர், மௌனத்தின் சிறப்பை அறிந்தவர்களும், கலைகளையும் முத்தமிழ் நூல்களையும் கற்றமேலான அறிவுடையவர்களும் வாழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

போகம் - சிவானந்த போகத்தை. துவர் - பழுப்பு ஏறிய ஆடைக்கு ஆகுபெயர். உழல்வார் - திரிவார் (சமணர்சாக்கியர்) ஆகம் அறியா அடியார் - சிவநிந்தைசெய்யும் பிறமதத்தரை ஏறெடுத்தும் பார்க்காத சிவனடியார். ஆகம் - உடம்பு. மூகம் - மௌனம். மீகம் - வானோர்க்குயர்ந்த உலகம். (கம் - வான். மீ - மேல்.) மூகம் அறிவாரும் கலை முத்தமிழ் நூலால் மீகம் அறிவாரும் வாழ்கின்ற வேணுபுரம். அறிவார் - ஞானியர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுரத் திறையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர் கூர் மையரே. 

பொழிப்புரை :

மரக்கலங்களையுடைய கடல் போல் பரவிய வளங்களை உடையதும், நன்செய்நிலங்கள் நிறைந்ததும் ஆகிய வேணுபுரத்து இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன மேன்மைமிக்க இத்தமிழ் மாலையை அன்போடு பாராயணம் புரிவோர் மதிநுட்பமும் திருவருட்பெருக்கமும் உடையவர் ஆவர்.

குறிப்புரை :

கலம் - மரக்கலம். ஆர்தல் - நிறைதல், பொருந்துதல். நற்புலம் - (நல் புலம்) நன்செய். நலம் - சிவம், சிவத்தைச் சார்வித்தற்குரிய ஞானத்தின் தொடர்பு. குலம் - மேன்மை. தமிழ் - இத்திருப்பதிகத்தை. கூறுவர் - அன்பொடு பாராயணம் செய்வோர். கூர்மையர் - திருவருட்பெருக்கம் அடைபவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால்வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே.

பொழிப்புரை :

நீர்நிலைகளில் குவளை மலர்கள் மலர்ந்து மணம் செய்யும் திருமருகலைத் தனக்குரிய ஊராக உடைய பெருமானே! இப்பெண், சடையாய் என்றும் விடையாய் என்றும் நீயே எனக்குப் புகலிடம் என்றும் கூறி அஞ்சி மயங்கிவிழுகின்றாள். உன்னையே நினைந்து புலம்பும் இவள் மனவருத்தத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத்தக்கதோ?

குறிப்புரை :

`எனும்` `விழும்` செய்யுமென்னும் வாய்பாட்டு முற்று வினை; ஈண்டுப் பெண்பாற்குவந்தது. `ஆல்` என்பன அசைகள். சரண் நீ - நீயே அடைக்கலம். வெருவா - வெருவி, `அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக்கம்பனை` (சுந்தரர், கச்சியேகம்பம்) அஞ்சுதல் உள்ள நிகழ்ச்சி. வெருவுதல் வாயொலி. மடை - நீர் மடையில். மருகல் - ஒருவகை வாழை மரத்தாற்பெற்ற தலப்பெயர். உடையாய் - சுவாமீ. உள் மெலிவு - மனநோய்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் குவளை மலர் ஆகியன மலர்ந்து மணம் பரப்பும் திருமருகலில் எழுந்தருளிய எம் தந்தையே! இவள் உன்னை நினைந்து, `சிந்தையில் நிறைந்துள்ளவனே! என்றும் சிவனே என்றும், எல்லோர்க்கும் முற்பட்டவனே என்றும், முதல்வனே` என்றும் புலம்பி நைகின்றாள். இவள் துன்பத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத் தக்கதோ?

குறிப்புரை :

சிந்தாய் - சிந்தையே; அழியாதவனே எனலுமாம். முந்தாய் - முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருளே. முதல்வா - ஆதியனே. கொந்து - பூங்கொத்து. எந்தாய் - எம் அப்பனே, எம் அன்னையே. ஏசறவு - மெய்ம்மறத்தல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

அறையார் கழலும் அழல்வா யரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற வீரக்கழலையும், கொடிய விடம் பொருந்திய வாயினை உடைய பாம்பையும் பிறையணிந்த சடையினையும் உடையவனே! பெருமைக்குரிய வேதங்களைக் கற்றுணர்ந்த மறையவர் வாழும் திருமருகலில் மகிழ்ந்து உறைபவனே! இப்பெண்ணை அவள் முன்கையில் அணிந்திருந்த வளையல்களைக் கவர்ந்ததோடு அழகையும் கவர்ந்தாயே! இதுதகுமோ?

குறிப்புரை :

அறை - ஒலி, அழல் வாய் அரவு - (நஞ்சு) வெப்பம் பொருந்திய வாயுடைய பாம்பு. மறையார் மருகல் - வேதங்களை உணர்ந்தவர் வாழ்கின்ற திருமருகல். இறை - கைச்சந்து. எழில் - அழகு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.

பொழிப்புரை :

முழங்கிவந்த கங்கையைத் தன் சடைமிசை மறைத்தவனே! உலகெங்கணும் சென்று பலியேற்றுத் திரிபவனே! குற்றம் அற்ற புகழாளனே! நீர் நிறைந்த திருமருகலைத் தனது இடமாகக் கொண்டு மகிழ்பவனே! இப்பெண்ணை மெலியும் நீர்மையள் ஆக்கவும் விரும்பினையோ?

குறிப்புரை :

ஒலிநீர் - முழங்குங்கங்கை. கரந்தாய் - மறைத்தாய். பலி - பிச்சை. நீர்மலி மருகல் என்றும் மாற்றலாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்டம் உடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.

பொழிப்புரை :

தெளிந்த நீல நிறம் பொருந்திய மேகம் தோன்றினாற் போன்ற அழகிய நீலகண்டத்தை உடையவனே! திருமருகலை வந்தடைந்த, நீலவண்டுகளின் தொகுதியோ எனக்கருதக் கூடிய கூந்தலை உடைய இளைய இப்பெண்ணின் ஒளிபொருந்திய கண்கள் கலங்குமாறு இவளுக்கு அயர்வை உண்டாக்கி விட்டாயே. இது தகுமோ?

குறிப்புரை :

துணி நீல ... ... கண்டம் - தெளிந்த நீலநிறம் உடைய மேகம் தோன்றினாற்போன்ற அழகிய நஞ்சாற் கறுத்த திருக்கழுத்தை. கணி - கருதுகின்ற. அயர்வு - சோர்வு, மறதி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே.

பொழிப்புரை :

பலராலும் பரவிப் போற்றப் படுபவனே! சடையின் மேல் விளங்கித் தோன்றும் பிறை ஒன்றை உடையவனே! திருமருகலை வந்தடைந்த இப்பெண் விடியும் அளவும் துயிலாதவளாய்த் துயருறு கிறாள். அடியவளாகிய இவள்மீது பழிமொழி வருவது தக்கதோ?

குறிப்புரை :

பரவ - துதிக்க. மலரும் - பரவும். புலரும்தனை - விடியு மளவும். துயிலாள் - தூங்காதவள், புடை - பக்கம், வெளி. அலர் - பழிச்சொல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே.

பொழிப்புரை :

மழுப்படையை உடையவனே! மருகற் பெருமானே! தவறாமல் `பெருமான் திருவடிகள் வாழ்க` என்று கூறிக் கொண்டே துயில் எழுந்து இரவும் பகலும் உன்னையே நினைந்து தொழுபவளாகிய இவளைத் துயருக்குரியவள் ஆக்கினையே! இது தகுமோ?

குறிப்புரை :

பெருமான் கழல் வாழ்க எனா வழுவாள் எழுவாள் என மாற்றுக. எனா - என்று. வழுவாள் - தவறாதவளாய். எழுவாள் - உறங்கிவிழித் தெழுவாள், இரவும் பகலும் நினைவாள். மழுவாள் - மழுவாகிய படை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் இவளை அலராக் கினையே.

பொழிப்புரை :

இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது, அவனது ஆற்றல் அழியுமாறு, விளங்கும் தனது காற்பெருவிரலை ஊன்றிய அளவில் அவன் செய்வதறியாது இடர்ப்பட்டு மீண்டு, வலமாக வந்து பணிந்து வரம் கொண்ட மருகற்பெருமானே! மாலைசூடி மணம் கொள்ள இருந்த இவளுக்குத் துன்பம் வரச்செய்தனையே! இது தக்கதோ?

குறிப்புரை :

இறைவன் - அரசன். (இராவணன்). விலங்கல் - மலை (கயிலை) துலங்கு - விளங்கிய. ஊன்றலும் - அழுத்தியதும். தோன்றலனாய் - செய்வது இன்னதென்று தோன்றப்பெறாதவனாய். வலம்கொள் - வலமாக வந்து பணிந்து வேண்டி வரம் கொண்ட, தோன்றலனாய் என்பது, வலங்கொள் என்பதொடு இயையும்; இன்றேல், முடிபில்லாதொழியும். அலங்கல் - மாலை. அசைந்திடுதலும் ஆம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியா ததொர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே.

பொழிப்புரை :

நெருப்புப் போலச் சிவந்த சடையையும், அடியையும் திருமால் பிரமன் ஆகிய இருவர் அறியமுடியாதவாறு ஒளிப்பிழம்பாய் உயர்ந்து தோன்றியவனே! பிறவி நீங்கிய முக்தர்கள் வாழும் திருமருகலில் விளங்கும் பெருமானே! அரியவளாக இத்தலத்துக்குவந்த இவளைத் துன்புறச்செய்தாயே! இது தக்கதோ?

குறிப்புரை :

எரி ஆர் சடை - நெருப்பைப்போலும் சிவந்த சடை. தீத் திரள் - ஒளிப்பிழம்பு, இலிங்கபுராணவரலாறு. மரியார் - திருவடி வழிபாட்டால் பிறவி நீங்கியவர்.(ஜீவன் முக்தர்) அரியாள் - அரியவள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

அறிவில் சமணும் அலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே.

பொழிப்புரை :

அறிவற்ற சமணர்களும் எங்கும் பரவி வாழும் சாக்கியர்களும் நெறியல்லனவற்றைச் செய்து நின்று உழல்பவராவர். மான்கன்றை ஏந்திய கையை உடையவனே! மருகற் பெருமானே! உன்னை நினையும் அடர்ந்த கூந்தலினளாய இப்பெண்ணின் மனத்தைச் சிதறுண்ணச்செய்தீரே, இது தகுமோ?

குறிப்புரை :

அறிவு இல் சமண் - மெய்ப்பொருள் உணர்வில்லாத சமணர். அலர் - பலராகப் பரவிய. நெறி அல்லன - சைவநெறி அல்லாத புன்னெறிகள். மறி - மான்கன்று, நெறி - நெறித்தல், அடர்ந்திருத்தல். நிறை - நெஞ்சைக் கற்புநெறியில் நிறுத்தல். (குறள் -57 உரை) `நிறை எனப்படுவது மறை பிறரறியாமை` (கலித்தொகை .136) என்ற தன் கருத்தும் அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.

பொழிப்புரை :

தன்மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார் வாழும் மருகற் பெருமான் திருவடிகளை உயர்ஞானம் உணர்ந்து நினைதலால் பதி இயல்புற்ற ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களைப் பாடவல்லார் புகழ், அகன்ற இவ்வுலக மெல்லாம் விளங்கித்தோன்றும்.

குறிப்புரை :

வயஞானம் - தன்வயமாக்கிய திருவருண்ஞானம். அருள்வயமான நல்லோர் வாழும் மருகல் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி
மறத்தான் மதின்மூன் றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்திங்கள்
நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் விளங்கும் இறைவன், உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற்கொண்டருளி, அறநெறிக்கு மாறாக நடந்த அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்ததிறத்தால் பலராலும் நன்கறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய அழல் போலும் வண்ணனாய் விளங்குபவன்.

குறிப்புரை :

அறத்தால் - தருமத்தை நிலை நிறுத்தவேண்டி, உயிர் காவல் - உயிர்களைக் காத்தல். மறம் - அதர்மம். மாண்பு - மாட்சி. தெரிவு - விளக்கம். தீ நிறத்தான் - அழல் வண்ணன். வெண்டிங்கள் நிறத்தான் - பவளம்போன்ற திருமேனியில் பால் போலும் திருவெண்ணீற்றைப் பூசிய திருக்கோலத்தால், வெண்டிங்கள் போலும் தண்ணொளியுடையவனான பரமசிவன், நிலாயவன் - நிலவி நின்றவன். நிலாயவனே நிறத்தான் என்றும் இயையும். `தான்` அசையுமாம். மேலும் இவ்வாறே அசையாதலாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவன், மதிசூடிய வீரன். விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன்.

குறிப்புரை :

பதி இடுகாடு. தொங்கல் - (மாலை) கொன்றை. மதி - பிறை. மைந்தன் - வலியன். வீரன். விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை என்றபடி. விழுப்பம் - மேன்மை. திருவருளே தனக்கு மேலொன்றில்லாச் செல்வமாதலின் `விழுப்பம் பயக்கும் நெதி` எனப்பட்டது. `செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே` `சிவமேபெறும் திரு` `சென்றடையாத திரு` `சென்றடையாச் செல்வன்` என்பன காண்க. நிலாயவன் பதி இடுகாடு; தொங்கல் கொன்றை என்றும் நிலாயவனே மைந்தனும் விதியும் வினையும் நெதியும் என்றும் கொள்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நலந்தா னவன்நான் முகன்தன் தலையைக்
கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், நன்மைகளைத் தருபவன். நான்முகனின் தலையை உண்கலனாகக் கொண்டு கபாலி எனப்பெயர் பெற்றவன். ஞானமே வடிவமானவன். புகழால் விளங்கும் வானோர் போற்றும் வீட்டுலகாக விளங்குபவன்.

குறிப்புரை :

நலம் தான் அவன் - அவனே நலம், மங்கலம். சிவம் அல்லாது வேறு நலம் உயிர்கட்கு இல்லை. `குறைவிலாமங்கல குணத்தன்` (காஞ்சிப் புராணம் திருநெறிக் 23) `நகராநலம்`(தி .2 ப .19 பா .11) பிரமனது தலையைக்கிள்ளிக் கையிற்கொண்ட வரலாறு முற்பகுதியிற் கூறப்பட்டது. கபாலி - பிரமகபாலத்தைத் தாங்கியவன். புலம் - சிவஞான சொரூபம். புகழால் எரிவிண் - கீர்த்தியால் விளங்கும் வானம். விண்புகழும் நிலம் - வானோர் துதிக்கும் சிவதலம் (திருநெல்லிக்கா). நலம்தான் கபாலியும்தான், புலம்தான், நிலம்தான் என்று கொள்ளின், நிலம் என்பது மிசை நிலம், வீட்டுலகு ஆம். `நிலமிசை நீடுவாழ்வார்` (குறள் 3) `மீதானம்.` (திருக்களிறு).

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

தலைதா னதுஏந் தியதம் மடிகள்
கலைதான் திரிகா டிடம்நா டிடமா
மலைதா னெடுத்தான் மதின்மூன் றுடைய
நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நிலையாக நெல்லிக்காவுள் எழுந்தருளிய சிவபெருமான், பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்திய தலைவன், தான் விரும்பும் இடமாக மான்கள் திரியும் காட்டைக் கொண்டவன், முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக எடுத்தவன்.

குறிப்புரை :

தலை - பிரமகபாலம். கலை - மான். ஏந்தியதுதலை, காடிடம் நாடிடமாம். காடாகிய இடம் நாடுகின்ற இடம், நாடாகிய இடமுமாம். மதில் மூன்றுடைய மலை தான் எடுத்தான் - முப்புரமும் உடைந்தழிய மேருமலை வில்லை எடுத்தவன் நிலை - உறையுள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
உவந்தான் சுறவேந் தனுரு வழியச்
சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்
நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் விளங்கும் சிவபெருமான், நாம் செய்யத்தக்க தவமாகவும், அடையத்தக்க கதியாகவும் விளங்குபவன். நீண்ட சடைமுடி மீது பிறைமதியை உவந்து சூடியவன். மீனக் கொடியை உடைய மன்மதனைச் சினந்தழித்தவன். உலக மக்கள் செயற்படத்தான் ஐந்தொழில்களைச் செய்து அனைத்தையும் அழித்து வீடருள்பவனாய் உயர்ந்து தோன்றுபவன்.

குறிப்புரை :

தவமும் அத்தவத்தின்பயனாக எய்தும் கதியும் தானே (சிவனே) ஆவான். வார்சடைமேல் மதியை உவந்தான். உவத்தல் - மகிழ்தல். சுறவேந்தன் - மீனக்கொடியுடைய மன்மதன். உரு அழிய - (உருவிலியாக) வடிவம் எரிந்து சாம்பலாக. சிவந்தான். கோபித்தான். சிவந்தான் (ஆகச்) செய்யச் செய்து. செறுத்து - அழித்து, நிவந்தான் - ஓங்கினான். செயற்செய்து என்னும் பாடத்திற்குச் சிவந்தானது செயலைச் செய்து என்று கொள்க. செய (ஜெய) - வெற்றி எனலுமாம். செயம் என்றதன் விகாரமாகக் கொள்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி
மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்
குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் நிலவும் இறைவன், மணம் கமழும் கொன்றைமாலையை விரும்புபவன். மான்கள் விளையாடும் மலையினிடம் தோன்றிய உமையம்மையை மணங்கொண்டு மகிழ்ந்தவன். குரு ஆனவர் காட்டும் குறியைத் தியானித்து நாம் போய் அடையும் வீட்டுநெறியை உடையவன்.

குறிப்புரை :

வெறி - மணம். தார் - மாலை. மறி - மான். மலைமங்கை இமாசலகுமரி. குறியால் குறிகொண்டவர் போய்க் குறுகும் நெறியான் - குரு உபதேசித்தகுறியினால் தியானித்துணர்ந்து கொண்டவர் சென்று அடையும் ஒளி நெறியுடையவன். `அறிவதொருகுறி குருவினருளினால் அறிந்து மன்னு சிவன்றனையடைந்து நின்று` அருள் ஞானக்குறியில் நின்று கும்பிட்டுத் தட்டம் இட்டுக் கூத்தாடித்திரி (சித்தியார் 286, 323) `குறியொடுதாம் அழியும் நெறி` (சித்தியார் 324) அதனின்மேலாயது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான்
இறைதான் இறவாக் கயிலைம் மலையான்
மறைதான் புனலொண் மதிமல் குசென்னி
நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் நிலாவிய இறைவன், சடையின் கண் இளம்பிறையை அணிந்து எம் தந்தையாக விளங்கும் பெருமான் சிறிதும் அழிவற்ற கயிலை மலையில் உறைபவன். மறைந்துறையும் கங்கையோடு ஒளி பொருந்திய மதி நிறைந்த சென்னியை உடைய பூரணன்.

குறிப்புரை :

சடைச்சேர்த்திய - சடைமேல் சேரச்செய்த. ஏழன் தொகை, இறவாக்கயிலைமலை - என்றதால் அழிவில்லாத சிறப்புணர்க, புனல் - கங்கை, முதலடியிற் பிறையும் சடையும், மூன்றாவதடியில் மதியும், சென்னியும் என ஓரிடமும் நோக்கின் இப்பதிகத்தைப் பற்றி ஒரு சிந்தனை தோன்றும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக்
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் நிலாவிய சிவபெருமான் உமையம்மையை ஒருபாகமாகப் பிணித்துத் தன்னோடு இணைத்துக் கொண்டவன். இராவணன் கயிலை மலைமீது பறந்து சென்ற குற்றத்திற்காக அக்கயிலை மலையைக் கொண்டே வருத்தி அவன் வலிமையைக் குறைத்தவன். குளிர்ந்த திரண்ட வளையல்களை அணிந்த கங்கையைச் சடைமேல் அடக்கியவன்.

குறிப்புரை :

ஒரு பாகத்தில் மாதினைப் பிணித்து மறைத்தான். பிணி மறைத்தான் - வரிப்புனைபந்து என்புழிப்போலும். மிறைத்தான் - வருத்தினான், மிகை - மீச்செலவை, குறைத்தான் - அடக்கினான். கோல்வளையை - கங்கையை - அன்மொழித்தொகை, கோல் - திரட்சி, வளை - வளையலையுடைவள், நிறைத்தான் - நிறைய அடக்கிக் கொண்டான்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

தழல்தா மரையான் வையந்தா யவனும்
கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் தழல் போலச் சிவந்த தாமரைமலர் மேல் உறையும் பிரமனும், உலகனைத்தையும் அளந்த திருமாலும் திருவடி திருமுடி ஆகியவற்றைக் காண முயன்று நாண, ஒளிரும் அழல் வடிவாய் நின்றவன். அடியவர்கட்கு அருளைத்தரும் ஒளிவடிவினன்.

குறிப்புரை :

தழல் தாமரையான் - தீயைஒக்கும் செந்தாமரையில் வாழும் பிரமன். வையம் தாயவன் - உலகம் அளந்த திருமால், கழல் முடி - காலும் தலையும். காணிய - காண்பதற்கு. அழல் - தீப்பிழம்பு. அடியாருக்கு - யான் எனது என்னும் செருக்கற்றுத் திருவடிஞானம் பெற்றார்க்கு, அருளாய்ப் பரக்கும் நிழல் - திருஞானமாய்ப் பரவியுள்ளபேரொளி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை
எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய
நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், மேகங்களால் உண்ணப்படும் அலைகளோடு கூடிய பெரிய கடலில் பெருகி எழுந்து அழலை உமிழ்ந்த நஞ்சைக் கண்டு அஞ்சிய தேவர்கள் `என் அத்தனே காப்பாற்று` என வேண்ட, அந்நஞ்சினை எடுத்து வரச்செய்து அதனை வாங்கி உண்ட கண்டத்தினன். சமணபுத்தர்களின் செல்வாக்கு நாட்டில் அழியுமாறு மனத்தால் நினைத்தவன்.

குறிப்புரை :

கனத்து ஆர் திரை - மேகத்தால் உண்ணப்படுங்கடல், ஈண்டுப் பாற்கடல் என்க, திரை - அலை, ஆகுபெயர். மாண்டு - பெருகி, அழல் - வெப்பம், கான்ற - வீசிய, உமிழ்ந்த. `என் அத்தா` என்று தேவர்வேண்ட, வாங்கி அது உண்ட கண்டன் என்க. மாண்பு - மாட்சி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

புகரே துமிலா தபுத்தே ளுலகில்
நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை
நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன
பகர்வா ரவர்பா வமிலா தவரே.

பொழிப்புரை :

குற்றமற்ற தேவர்கள் உலகில் யாவரும் தனக்கு ஒப்பாகாதவனாய் விளங்கி, இம்மண்ணுலகை வாழ்விக்க நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவனைப் பற்றி அழிவற்ற நன்மைகளைக் கொண்ட ஞானசம்பந்தன் அருளிய இப்பாமாலையைப்பாடித் தொழுபவர் பாவம் அற்றவர் ஆவர்.

குறிப்புரை :

புகர் - குற்றம். புத்தேள் உலகு - தேவருலகம். நிகரா - ஒப்பாகாத. நகராநலம் - அழியாத நன்மை, சிவம், சொன்ன - சொல்லிய. இப்பாமாலையை. பகர்வார் - பாடித்தொழுவார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்
தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.

பொழிப்புரை :

தொழும் வகையிலும், பிறவித்துயர்தீர நினைந்தெழும் வகையிலும், பிறர் இசைபாட விம்மி அழும் வகையிலும் வல்லவராய மறையவர் வழிபாடு செய்ய, `பெருமானே நீ அழுந்தையில் சிறந்துள்ள மடம் எனப்பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்`.

குறிப்புரை :

திருவழுந்தூரிலுள்ள வேதியர் (கட்டி) வழிபாடு செய்யும் பெரியமடத்தில் (பா.3) சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அவ்வேதியர்கள் சிவபிரானைத் தொழும் வகையிலும், பிறவித்துன்பம் போயொழிய நினைந்தெழும் வகையிலும், இசைபாடிட விம்மி அழும் வகையிலும் வன்மையுற்ற பயிற்சியுடையவர்கள், அழுந்தை என்பது அழுந்தூர் என்பதன் மரூஉ. இது புலவர் செய்து கொள்ளும் மரூஉச் சொற்களுள் ஒன்று. புலியூர் - புலிசை, மறைக் காடு - மறைசை, ஆவடுதுறை - துறைசை முதலிய அறிக. தொட்டிக் கலை - கலைசை, திருவோத்தூர் (வேதபுரி, மறைநகர்) - மறைசை என்பவை வழங்கி மருவாதன ஆயினும் புலவர் வழக்கில் உள.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே யெழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடமே வினையே.

பொழிப்புரை :

`கடலின்கண் எழுந்த நஞ்சை அமுதாக உண்டவனே! உடல், உயிர், உணர்வாக இருப்பவனே! அழகனே! வலிமை பொருந்திய ஆனேற்றை உடையவனே! அழுந்தையில் வாழும் மறையவர் தலைவனே`! எனத்தொழ, `பெருமானே! நீ சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்`.

குறிப்புரை :

பாற்கடல், உடலும், உயிரும், உணர்வும், எழிலும் ஆக இருப்பவன் சிவபிரான், அடல் - வலிமை, கொலையுமாம். `கொல்லேறு`. விடலே - தலைவனே.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கழிகா டலனே கனலா டலினாய்
பழிபா டிலனே யவையே பயிலும்
அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடமன் னினையே.

பொழிப்புரை :

`பலரும் வெறுக்கும் சுடுகாட்டில் உறைபவனே! கனலில் நின்று ஆடுபவனே! பிறரால் பழிக்கப்படும் இயல்புகள் இல்லாதவனே`! எனப்பலவாறு உன்புகழையே பலகாலும் சொல்லும் அழிவுபாடற்ற அந்தணர் வழிபாடு செய்யும் அழுந்தை என்னும் தலத்தில், பெருமானே! நீ எழுந்தருளியுள்ளாய்.

குறிப்புரை :

கழிகாடலனே - சுடுகாட்டில் (இரவில்) ஆடுபவனே,` கரிகாடலினாய்` (தி .2 ப .21 பா .8)`சுடலையாடி`. கனல் ஆடலினாய் - தீயில் ஆடுதலையுடையவனே. பழிபாடு இலனே - பழிக்கப்படுதல் இல்லாதவனே. அழிபாடு - அழிவுபடுதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

வானே மலையே யெனமன் னுயிரே
தானே தொழுவார் தொழுதாள் மணியே
ஆனே சிவனே அழுந்தை யவரெம்
மானே யெனமா மடமன் னினையே.

பொழிப்புரை :

அன்பர்கள் `வானே! மலையே!` என்று கூற மன்னிய உயிரே! தாமே வணங்குவார் வணங்குதற்குரிய திருவடிகளை உடைய மணியே! ஆன் (பசு) வடிவாக விளங்குபவனே! சிவனே! அழுந்தை என்னும் பதியில் வாழும் மறையவர் எம் தலைவனே` எனப்போற்றப், `பெருமானே! நீ மடம் எனப் பெயரிய கோயிலுள் விளங்குகின்றாய்`.

குறிப்புரை :

வான் - வானம். வானம் மலை என்று தொழமன்னிய உயிரே. வானே என மலையே என மன்னும் உயிர், தொழுவார் தொழு - வணங்குவார் வணங்குதற்குரிய. தாள் - திருவடி. ஆனே:- பசுபதி என்னும் பொருட்டு. ஆன் - பசு. அழுந்தையவர் - திருவழுந்தூர் மறையோர். எம்மானே - எம்பெருமானே. என - என்று கூவித்தொழ.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியுந் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் மிவையேந் துசெல்வ
நிலையா வதுகொள் கெனநீ நினையே.

பொழிப்புரை :

அலைகள் வீசும் ஆறுகள் சூழ்ந்த அழுந்தைப் பதியில் உறையும் பெருமானை அவன் கையில் ஏந்திய நிலையான மான், கையில் ஏந்திய வெண்மையான மழு, இலைவடிவமான சூலம் ஆகியவற்றோடு, உள்ளத்தில் ஏந்துதலே நிலையான செல்வம் எனக் கொள்க. அவனையே நீ நினைக.

குறிப்புரை :

இலையார் படை - திரிசூலாயுதம். இவையே நிலையான செல்வம். ஏனைய அழியும் என்றவாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

நறவார் தலையின் நயவா வுலகில்
பிறவா தவனே பிணியில் லவனே
அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
மறவா தெழமா மடமன் னினையே.

பொழிப்புரை :

அடியவர் கட்டிய மலர்களால் தலையில் தேன் பொருந்திய நயம் உடையவனே! உலகில் பிறவாதவனே! நோயற்றவனே! ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவனே! அழுந்தையில் வாழும் மறையவர் மறவாது எழுந்து தொழ, அங்குள்ள சிறந்த மடம் எனப்பெயரிய கோயிலில் உள்ளாய்.

குறிப்புரை :

நறவு - தேன், நயவா - நயமுடையவன். நயம் - மகிழ்ச்சி, இன்பம், நன்மை, நீதி. உலகில் பிறவாதவன் - `பிறவா யாக்கைப் பெரியோன்` `பிறப்பிலி இறப்பிலி`(பாரதம்). பிணி இல்லவன் - நோயில்லான். அறை - ஒலி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

தடுமாறு வல்லாய் தலைவா மதியம்
சுடுமாறு வல்லாய் சுடரார் சடையில்
அடுமாறு வல்லாய் அழுந்தை மறையோர்
நெடுமா நகர்கை தொழநின் றனையே.

பொழிப்புரை :

உன்னை உணர்வதில் தடுமாற்றத்தை விளைப்பவனே! தலைவனே! காதல் வயப்பட்ட மகளிரை நீ சூடிய மதியால் சுடும்படி செய்பவனே! ஒளிபொருந்திய சடையின்மேல் உலகை அட வந்த கங்கையாற்றைச் சூடியவனே! அழுந்தையில் மறையவர் கைகளால் தொழ நீண்டுயர்ந்த பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்.

குறிப்புரை :

தடுமாறுவல்லாய் - உயிர்கள் உன்னை உணர்வதில் தடுமாறுதலைச் செய்யவல்லவனே. `உணர்ந்தார்க்கு உணர்வரியோன்`. என்றது இத்தடுமாற்றத்தை வலியுறுத்தும். தடுமாறுதல் - தட்டுமாறுதல் என்பதன் மரூஉவாகக் கொண்டு அஃது ஈண்டுத் திருக்கூத்தைக் குறித்து நின்றது எனலுமாம். `ஆடவல்லாய்` `ஆடுமாறு வல்லானும் ஐயாறுடை ஐயனே` எனவரும் தேவாரங்களால் உணர்க. மதியம் சுடும் ஆறு - பிறையால் (காதல்கொண்ட) மகளிரைச் சுடும்வகை. சூடுமாறு என்பதன் முதற் குறுக்கமுமாம். அடும் ஆறு - கங்கைப்பெருக்கு, நெடு மாநகர் - நீள்பெருங்கோயில்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறு
கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழமா மடம்மே வினையே.

பொழிப்புரை :

பெரியவனே! நுண்ணியனே! பிறை சூடியவனே! கண்டம் கரியவனே! சுடுகாட்டை உயர்ந்த வீடாகக் கொண்டவனே! அறிதற்கு அரியவனே! அன்பர்க்கு எளியவனே! அழுந்தையில் பழிபாவங்கட்கு அஞ்சும் மறையவர் வணங்க நீ சிறந்த மடம் என்னும் கோயிலில் விளங்குகின்றாய்.

குறிப்புரை :

கரியமிடறாய் - நீலகண்டனே. சர்வசங்கார காலத்தில் எல்லாம் அழியுமாதலின், `கரிகாடு` என்றும் அதுவே முதல்வனுக்குக் கோயிலாதலின் `உயர்வீடு` என்றும் அருளினார். `கோயில் சுடுகாடு` பெருமை, சிறுமை, அருமை, எளிமை எல்லாம் ஆண்டவனுக்குள. `வெரியார்` - பழிபாவங்களை அஞ்சுதலுடைய அம்மறையோர். வேரியார் (தேன்போலும் இனியர்,) என்பதன் முதற்குறுக்கம் எனல் அமைவுடையதன்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மணிநீள் முடியான் மலையை அரக்கன்
தணியா தெடுத்தான் உடலம் நெரித்த
அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
பணிமா மடம்மன் னியிருந் தனையே.

பொழிப்புரை :

மணிகள் இழைத்த நீண்ட மகுடம் சூடியமுடியனாகிய இராவணன் கயிலைமலையைப் பொறுமையின்றி எடுத்தபோது, அவனது உடலை நெரித்த அழகிய கால் விரலை உடையவனே! அழுந்தைப் பதியில் மறையவர் போற்ற அழகிய மடம் என்னும் கோயிலில் நீ நிலையாக எழுந்தருளியுள்ளாய்.

குறிப்புரை :

மணிமுடி - ரத்நகிரீடம். அரக்கன் - இராவணன், நெரித்த - நொறுங்கிய, அணி - அழகு. பணி - பணிகின்ற.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

முடியார் சடையாய் முனம்நா ளிருவர்
நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
அடிமே லறியார் அழுந்தை மறையோர்
படியால் தொழமா மடம்பற் றினையே.

பொழிப்புரை :

சடைமுடியை உடையவனே! முற்காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் தம்முள் செருக்கி உன் அடிமுடிகளை அறிய முற்பட்டு அறியாதவர் ஆயினர். அழுந்தைப்பதியுள் மறையவர் விதிமுறைப்படி வழிபட வணங்கிப் போற்ற, சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் நீ விளங்குகின்றாய்.

குறிப்புரை :

முடியார் சடையாய் - சடைமுடியுடையாய், நெடியான் - திரிவிக்கிரமனாகிய மாயோன். அடிமேல் - அடிமுடி, படியால் - விதிப்படி. பற்றினை - பற்றாகக் கொண்டாய்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
பெருஞா னமுடைப் பெருமா னவனைத்
திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்
உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே.

பொழிப்புரை :

எய்தற்கரிய திருவருள் ஞானம் பெற்றவர்களாகிய மறையவர் வணங்கிப் போற்ற அழுந்தைப் பதியில் விளங்கும் பெரிய ஞானமே வடிவாக உடைய பெருமானை, திருஞானசம்பந்தன் போற்றிப் பாடியதான இத்திருப்பதிகத்தை ஓதி உணர்ந்தவர்க்கு உண்மை உணர்வு உண்டாகும்.

குறிப்புரை :

அருஞானம் - எய்தற்கு அரிய திருவருண்ஞானம். திருஞானசம்பந்தன் - திருஞானசம்பந்தனுடைய, அ:- ஆறனுருபு, பன்மை, செந்தமிழ்கள் - செந்தமிழ்ப்பாக்கள், உரு ஞானம் - சொரூப ஞானம், உண்மையுணர்வு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

புனலா டியபுன் சடையா யரணம்
அனலா கவிழித் தவனே யழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.

பொழிப்புரை :

கங்கை நீரில் மூழ்கிய சடையை உடையவனே! முப்புரங்களையும் அழலெழுமாறு விழித்து எரித்தவனே! அழகிய நெருப்பில் நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலையுள் எழுந்தருளியவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம்.

குறிப்புரை :

புன்சடையாய் - பொன்போலும் சடையுடையாய், அரணம் - திரிபுரக்கோட்டை, திரிபுரத்தை விழித்தெரித்தான் என்றும் வரலாறுண்டு. கனல் - தீ, உன வார்கழல் - உன்னுடைய நீள்கழலடிகள்.(பார்க்க: தி .2 ப .2 பா .9) உள்குதும் - தியானம் செய்வோம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

துணையா கவொர்தூ வளமா தினையும்
இணையா கவுகந் தவனே யிறைவா
கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
இணையார் கழலேத் தஇடர் கெடுமே.

பொழிப்புரை :

தனக்குத் துணையாகுமாறு தூய அழகிய உமையம்மையையும் உன்திருமேனியின் ஒருபாகமாக இணைத்துக் கொண்டு மகிழ்ந்தவனே! இறைவனே! முப்புரங்களைக் கணையால் எய்து கழிப்பாலையில் மேவி இருப்பவனே! உன் இரண்டு திருவடிகளை ஏத்த இடர் கெடும்.

குறிப்புரை :

இறைவா! கழிப்பாலை உள்ளாய்! (உன்) கழல் ஏத்த (எம்) இடர் கெடும் என்று இயைத்துக் கொள்க. தூ - தூய்மை. எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடு. `பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினுங்கரக்கும்`(புறம் - கடவுள் வாழ்த்து) என்றதன் உரையைக் காண்க. துணை - துணைவி. இணை - இருவரென்னாதவாறு இணைதல், எயில் - திரிபுரம், எய் - எய்த, எய் கழிப்பாலை உள்ளாய் - வினைத்தொகை. `கழிப்பாலையுள்ளாய்` என்பது சிவனென்னும் பொருட்டாய் எய்யென்னும் பகுதியொடு தொக்கு வினைத் தொகையாயிற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார்க் கடையா அவலம் அவையே.

பொழிப்புரை :

மிகவும் பெரியவனே! நுண்ணியனே! நிமிர்த்துக் கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே! திருநீற்றைத் திருமேனி முழுதும் அணிந்தவனே! மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியிருப்பவனே! உன் அடியவர்களை அவலங்கள் அடையமாட்டா.

குறிப்புரை :

நெடியாய் - நீண்டவனே; குறியாய் - குறியவனே, புன் சடைமுடி - பொன்போலும் செஞ்சடைமுடி, சுடுவெண் பொடி - திருநீறு. முற்று அணிவாய் - முழுதும் அணிவாய். கடி - மணம். அடியார் - யான் எனதென்னும் செருக்கற்றவர். அவலம் அடையா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
வளிகா யமென வெளிமன் னியதூ
ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.

பொழிப்புரை :

அன்பர்க்கு எளியவனே! அல்லாதார்க்கு அரியவனே! நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களில் வெளிப்படையாக விளங்கும் தூய ஒளியோனே! உன்னையே வணங்கி நினைப்பவர்பால் அன்பு செய்பவனே! கழிப்பாலையில் விளங்கு பவனே!

குறிப்புரை :

அன்பர்க்கு எளியாய். அல்லாதார்க்கு அரியாய், `காண்டற்கு அரிய கடவுள் கண்டாய். கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் (தி.6 ப .23 பா .1)`நிலம் ......... காயம்` - மண் முதலிய ஐம்பெரும் பூதங்கள். இறைவன் அட்டமூர்த்தியாய் விளங்குதல் பற்றி `நிலம் ..... . வெளிமன்னிய தூ ஒளியாய்` என்றருளினார். உனையே தொழுது உன்னுமவர்க்கு அளியாய் - `ஆமாத்தூரம்மான்றன் சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே`- (தி .2 ப .44 பா .3) என்றருளியவாறு சிவனையே தொழுது தியானிப்பவர்க்கு திருவருட்பேறு எய்தும் என்பது தாற்பரியம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நடநண் ணியொர்நா கமசைத் தவனே
விடநண் ணியதூ மிடறா விகிர்தா
கடல்நண் ணுகழிப் பதிகா வலனே
உடல்நண் ணிவணங் குவனுன் னடியே.

பொழிப்புரை :

நடனத்தை விரும்பி ஒப்பற்ற பாம்பைக் கச்சாகக் கட்டியவனே! விடம் பொருந்திய தூயமிடற்றினனே! வேறுபட்ட பல வடிவங்களைக் கொண்டவனே! கடலை அடுத்துள்ள கழியில் விளங்கும் தலத்தில் விளங்குபவனே! என்உடல் உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்குவது உன் திருவடிகளையாகும்.

குறிப்புரை :

அசைத்தவன் - கட்டியவன். நண்ணி அசைத்தவன் என்க. நடம் - திருக்கூத்து. விடம்... மிடறா - திருநீலகண்டனே, விகிர்தன் - விரூபாக்கன் முதலிய நிலைமையன். `விளையாடவல்ல விகிர் தத்துருக் கொள் விமலன்` (தி .2 ப .83 பா .10) கடல் நண்ணு கழிப்பதி - கடற்கரைக் கழியிலுள்ள தலம். உடல் நண்ணி வணங்குவன் - அஷ்டாங்க நமஸ்காரம் செய்வேன். உன் அடியே - ஏகாரம் பிரிநிலை. `தோற்றிய திதியே என்புழி` ஏகாரம் இயைபின்மை நீக்குதற்கும், பிறி தினியைபு நீக்குதற்கும் பொதுவாய் நின்ற பிரிநிலை` என்ற சிவஞானபோதச் சிற்றுரைப் பகுதியைக்காண்க. உடன் எனப்பிரித்தல் பொருந்தாது. நண்ணுதற்குச் செயப்படுபொருள் நிலமும் திருவடியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பிறையார் சடையாய் பெரியாய் பெரிய
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலேத் தஇடர் கெடுமே.

பொழிப்புரை :

பிறையணிந்த சடையினனே! பெரியோனே! பெருமை பொருந்திய வேதங்கள் கூறும் உண்மைப் பொருளாய் உள்ளவனே! மண்ணுலகில் கருநிறம் பொருந்திய பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியவனே! எங்கும் தங்கும் உன் திருவடிகளை ஏத்த இடர்கெடும்.

குறிப்புரை :

ஆர் - பொருந்திய. பெரியாய் - முழு முதல்வனே. பெருமை - பரத்துவம். பெரியமறை ஆர்தரு வாய்மையினாய் - வேதத்திற் சொல்லப்பட்ட உண்மைப் பொருளானவனே. மகர மெய் விரித்தல் விகாரம். இறை ஆர் கழல் - (எங்கும்) தங்குதலுடைய திருவருளாகிய கழல். இறை - இறைமையும் ஆம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
கதிரும் வினையா யினஆ சறுமே.

பொழிப்புரை :

முதிர்ந்த சடை முடியின்மேல் விளங்கும் வெண்மையான ஒளிக்கதிர்களை உடைய பிறையைச் சூடியவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முன்னிலைப்பரவல் என்னும் வகையில் எதிர்நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு நடுக்கத் தைத்தரும் வினைகளாகிய குற்றங்கள் அகலும்.

குறிப்புரை :

கதிர் வெண்பிறை:- வெண்மை கதிர்க்கும் பிறைக்கும் உரியது. எதிர்கொள்மொழி - முன்னிலை மொழியாகிய துதிகள். அதிரும் நடுக்கத்தை விளைக்கும். ஆயின ஆசு - ஆனவையாகிய குற்றங்கள், பெயரெச்சமும் ஆம். `அரன்பணியில் நின்றிடவும் அகலுங்குற்றம்` `ஆசுபடுமல மாயை அருங்கன்மம் அனைத்தும் அகலும்`. (சித்தியார் பா.304 291.)

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

எரியார் கணையால் எயிலெய் தவனே
விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
உரிதா கிவணங் குவனுன் னடியே.

பொழிப்புரை :

தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக்கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே! உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன்.

குறிப்புரை :

எரிஆர்கணை - அக்கினியை நுனியிற் பெற்ற திருமாலாகிய பாணம். எயில் - (முப்புரம்) மும்மதில். கரிகாடல் - கரிந்த காடு. காழிகாடலனே (பதி . 156, பா .3) கழிகாடு ஆடலனே என்பதன் விகாரம் என்றாருமுளர். உரிது - உரியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
கனலா னவனே கழிப்பா லையுளாய்
உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே.

பொழிப்புரை :

நன்மைகளைப் புரியும் திருமால், நான்முகன் இருவரும் அடிமுடி காண்போம் என்று உன்னை நண்ணியபோது கனல்வடிவோடு ஓங்கி நின்றவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முப்புரங்களை எய்து எரித்தவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளையே தொழுது நினைவார்க்கு வினைகள் இல்லையாகும்.

குறிப்புரை :

நலம் - காத்தற்றொழிலாகிய நன்மை, அழகும் ஆம். உன - உன்னுடைய. (ஆறனுருபு பன்மை பார்க்க: தி .2 ப .2 பா .1). உன்னுமவர் - தியானம் புரிபவர். எயில் எய்தவன் - திரிபுராரி, முப்புரமெரித்த முதல்வன். வினைதான் இலதாம் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்
துவர்கொண் டனர்நுண் துகிலா டையரும்
அவர்கொண் டனவிட் டடிகள் உறையும்
உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.

பொழிப்புரை :

தவத்தினராகிய வேடங்கொண்டு திரிவதைத் தொழிலாகக் கொண்ட போலியான சமண்துறவி வேடத்தினரும் பழுப்பு நிறம் ஏற்றிய நுண்ணிய ஆடையைப் போர்த்துத்திரியும் புத்தர்களும் ஆகிய அவர்கள் கொண்ட கொள்கைகள் உண்மையானவை அல்ல எனவிடுத்துத் தலைமைக்கடவுளாக விளங்கும் சிவபிரான் உறைவதும், உவர் நீரையுடைய உப்பங்கழிகளை உடையதும் ஆகிய கழிப்பாலையை நாம் நினைத்துப் போற்றுவோம்.

குறிப்புரை :

சமண் வேடர்க்குரிய தொழிலன்று. தவர் (தவத்தோர்) க்குரிய தொழிலை (ப்போலியா)க் கொண்டவர். துவர் - பழுப்பு நிறம். நுண்துகில் - மெல்லிய துகில். துகில் - ஆடை; ஈண்டு இருபெயரொட்டு, அவர் - அப்புறப்புறச்சமயத்தார். கொண்டன - கொண்ட கொள்கைகள், வினையாலணையும் பெயர். அடிகள் - பரமேசுவரன். உவர் கொண்ட கழிப்பதி - உவர் நீர் கொண்ட கடற்கழியிலுள்ள பாலைப்பதி. `உள்குதும்` என முதற்பாட்டிற் கூறியதே முடிவிலுங் கூறியதால் சிறப்பாகத் தியானம் புரிதற்குரிய தலமென்றுணர்க. மூவர் திருப்பதிகங்களும் இத்தலத்தின் தனிச்சிறப்பை விளக்குகின்றன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கழியார் பதிகா வலனைப் புகலிப்
பழியா மறைஞா னசம்பந் தனசொல்
வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
கெழியா ரிமையோ ரொடுகே டிலரே.

பொழிப்புரை :

உப்பங்கழிகள் பொருந்திய தலமாகிய கழிப்பாலைத்தலைவனாகிய சிவபிரானை, புகலிப்பதிக்குரியவனாய் மறை நெறிவளரத் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்திருப்பதிகத்தை ஓதுவதையே வழிபாடாகக் கொண்டு போற்றவல்லவர் வானோர்களோடு பொருந்தி விளங்குவர். கேடு முதலியன இல்லாதவர் ஆவர்.

குறிப்புரை :

காவலன் - சிவபிரான்., `மறைஞானசம்பந்தன்` என்ற திருப்பெயர் `வேதநெறி தழைத்தோங்கப் புனிதவாய் மலர்ந்தழுத சிறப்பிற்பெற்றது, அகரம் - ஆறனுருபு பன்மை. வழிபாடு இவை - இத்திருப்பதிகப்பாடல் வழிபாடு. இமையோரொடு கெழியார் - வானோரொடு பொருந்தி விளங்குவார். கேடு இலர் - பிறவி முதலாய கேடு இல்லாதவராவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

திகழுந் திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவாயின் மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயில் என்னும் தலத்தில் நிலைபெற்று விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், எல்லோராலும் அறியப்பெறும் திருமால், பிரமன் ஆகியோரால் புகழ்ந்து போற்றப்படும் தலைவனும், அடியவர்கள் தன்னைத் துதித்துப் போற்ற மகிழும் பெருமானும் ஆவான்.

குறிப்புரை :

திகழும் - அவர் அவர்க்குள்ள புவனங்களில் விளக்கம் பெறும். புகல - விரும்பித்துதிக்க. நிகழும் - பிரசித்தி பெற்றுள்ள. (பா . 11 இல்) `பெருங்கோயில்` என்று உணர்த்தியதால் ஆசிரியர் திருவுள்ளம் அதனது பெருமையில் ஈடுபட்டமை புலனாகும். வேறு சில தலங்களிலும் கோயிற்பெருமை கூறப்பட்டுள்ளது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

ஓடுந் நதியும் மதியோ டுரகம்
சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
கூடுங் குழகன் குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் நீடி விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான் பெருகி ஓடி வந்த கங்கையையும், பிறை மதியையும், பாம்பையும் சூடிய சடையை உடையவன். பழமையான தனது கொடியில் விடை இலச்சினை பொருந்தியவன். இளமைத் தோற்றம் உடையவன்.

குறிப்புரை :

நதி - கங்கை. மதி - பிறை. உரகம் - பாம்பு, மார்பால் நகர்வது. உரம் - மார்பு. கம் - செலவு. தொல்கொடி - பழங்கொடி,`கொடிமேல் விடைகூடும்` என்றியைக்க. குடவாயில்தனில் நீடும் பெருங்கோயில் என்றதால், அதன் பழமையும் பெருமையும் விளங்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கலையான் மறையான் கனலேந் துகையான்
மலையா ளவள்பா கம்மகிழ்ந்த பிரான்
கொலையார் சிலையான் குடவா யில்தனில்
நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயில் என்னும் தலத்தில் நிலைத்து விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், பீதாம்பர ஆடையணிந்த திருமால், வேதங்களை ஓதும் நான்முகன் என்பவராகவும், கனலைக் கையில் ஏந்திய உருத்திரனாகவும், அறக்கருணைபுரியும் மலைமகள் பாகனாகவும் மறக்கருணைபுரிய, கொலைத்தொழிலுக்குரிய வில்லை ஏந்தியவனாகவும் விளங்குபவன்.

குறிப்புரை :

கலையான் - பீதாம்பரதாரி, திருமால். மறையான் - வேதா ஆன பிரமன். கனல் - நெருப்பு. மலையாள் - இமாசலகுமாரி. கொலை ஆர்சிலை - மேருமலையாகிய வில்லுக்குக் கொலை திரி புரசங்கார கிருத்தியம். நிலை - திருக்கோபுரநிலை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடம்
குலவுங் குழகன் குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், சுற்றிய சடைக் கற்றையை உடைய முடியன், அழகிய தனபாரங்களை உடைய உமையம்மை கண்டு மகிழச் சுடுகாட்டை ஆடுகளமாகக்கொண்டு நடம்புரியும் இளையோன்.

குறிப்புரை :

சுலவும் - சுற்றும். நலம் - அழகு. நகைசெய்ய - மகிழ, சிரிக்க என்றுமாம். குழகன் - இளைஞன். நிலவும் - ஒளிவிடும். நிலா, நிலவு என்பன வெள்ளொளியைக் குறித்தல் அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

என்றன் உளமே வியிருந் தபிரான்
கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
குன்றன் குழகன் குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் பலரும் அறியப்படுவதாய் நிற்கும் பெருங்கோயிலில் நிலவும் பெருமான், என் உள்ளத்தில் விரும்பி உறையும் தலைவன் ஆவான். ஒளி குன்றிய நீலமணி போன்ற மிடற்றினன். கயிலாய மலையில் உறைபவன்.

குறிப்புரை :

`என்றன் உளம் மேவி இருந்த பிரான்` என்று சிவஞான முண்டார் அன்றி மற்று எவர் சொல்லத்தக்கார்? கன்றல்மணி - கன்றிய நீலமணி. கன்றன் - இளைஞன், மான் கன்றுடையவன் எனலுமாம். மிடறன் - திருக்கழுத்தினன். மிடற்றன் என்னற்பாலது ஒற்றிரட்டாது நின்றது. எயிறன், வயிறன், கயிறன் எனல்போல. (தி .2. பா .23 ப .1) பார்க்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

அலைசேர் புனலன் அனலன் அமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிரும்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவன்: அலைகள் வீசும் கங்கையை அணிந்தவன்: அனல் ஏந்தியவன்: தலையோட்டில் பலி பெறுபவன்: சதுரப்பாடு உடையவன்: நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய சூலத்தை ஏந்தியவன்.

குறிப்புரை :

புனல் - கங்கை. அனல் - தீ. அமலன் - மும்மலமில்லாதவன். (எண்குணத்துள் ஒன்று) தலைசேர் பலியன் - பிரமகபாலத்திற் பலி பெறுபவன். சதுரன் - மூவர்க்கும் முதல்வன். விதிரும் - நடுங்கும். படை - திரிசூலம். மழுவாயுதம் முதலியன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

அறையார் கழலன் அழலன் இயலின்
பறையாழ் முழவும் மறைபா டநடம்
குறையா அழகன் குடவா யில்தனில்
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் நிறைவாக அமைந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவன், ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவன்: அழல் ஏந்தியவன்: இசைமரபுடன் கூடிய பறை, யாழ் முழவுடன் வேதங்கள் பாட நடனமாடும் அழகன்.

குறிப்புரை :

அறை - ஒலி. இயலின் பறை - இசையியலின் கண் அமைந்த வாத்தியம். நடம் - திருக்கூத்து. குறையா அழகன் - பூரணாலங்காரன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

பொழிப்புரை :

மலை போன்றுயர்ந்த மதில்கள் சூழ்ந்த குடவாயிலில் நிலைபெற்ற கயிலைமலை போன்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் இறைவன், மலை போன்று திரண்ட தோள்களை உடைய இராவணன் மடியுமாறு அவன் பெயர்த்த கயிலைமலை அவன்மீது அழுந்திப் பொருந்தத் தன் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவான்.

குறிப்புரை :

வரைஆர் - மலையை ஒத்த. வரை - கயிலை. ஆர - சுமை (யாக அழுந்திப்) பொருந்த. வகரமெய்விரித்தல் விகாரம். வரை ஆர்மதில் - மலைகளைப்போல உயரிய மதில்கள்; பெருங்கோயிலும் அத்தகையதே. வரையார் - வழிபாட்டை ஒழியாத அடியார் என்றும் உரைத்தல் கூடும். அரக்கன் - இராவணன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பொன்னொப் பவனும் புயலொப் பவனும்
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவா யில்தனில்
மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் நிலை பெற்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் பெருமான், பொன்னிறத்தினனாகிய பிரமனும், புயல் நிறத்தினனாகிய திருமாலும் தனக்கு உவமையாகாதவனாய்த் தழலுருவில் உயர்ந்து தோன்றியவன், கொல்லும் தொழில் புரியும் நல்ல படைக்கலன்களை ஏந்தியவன்.

குறிப்புரை :

பொன் ஒப்பவன் - பிரமன், புயல் ஒப்பவன் - கார் வண்ணன், மால். தன்ஒப்பு அறியாத் தழல் ஆய் நிமிர்ந்தான் - தனக்குவமையில்லாதவனாகிச் சோதிப் பிழம்பாய் ஓங்கிப் பெருகிய பரசிவன். கொல்நல்படை:- பா . 6. பார்க்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
பயிலும் முரையே பகர்பா விகள்பால்
குயிலன் குழகன் குடவா யில்தனில்
உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே.

பொழிப்புரை :

குடவாயிலில் உயர்ந்துள்ள பெருங்கோயிலில் உயர்ந்தோனாய் விளங்கும் இறைவன், வெயிலில் காய்பவராகிய சமணர்கள், விரித்துப் போர்த்த போர்வையினராகிய புத்தர்கள் ஆகிய சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறும் பாவிகள்பால் பதியாதவன்; இளமையான தோற்றத்தை உடையவன்.

குறிப்புரை :

நிலையார் - நிற்றலை உடையவர், வெயில் காய்பவர் என்றபடி. உரை - பிறமதபோதனை. குயிலன் - குயிலாதவன். பதியாதவன். குயிலல் - பதிதல், செய்தல், சொல்லல் எனல் இங்குப் பொருந்தாது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத்
தடமார் புகலித் தமிழார் விரகன்
வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே.

பொழிப்புரை :

வேகம் வாய்ந்த ஆற்றுநீரின் வளம் உடைய குட வாயில் நகரில் விளங்கும் நீண்டுயர்ந்த சிறந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவனை , நீர் நிலைகளோடு கூடிய புகலிப் பதியினனாகிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் அருளிய மாலையாக அமைந்த இப்பதிகத்தை ஓதவல்லவர் நன்மைகளை அடைவர் .

குறிப்புரை :

கடுவாய் - வேகம் வாய்ந்த . நீர்மலி குடவாயில் என்று அதன் வளம் உணர்த்தியபடி . ` நெடுமாபெருங்கோயில் ` என்றது இப் பதிகம் முழுதும் கூறியவற்றால் உறுதிப் படுகின்றது . திருமுறைகளுள் பெருங்கோயிலையும் சிறுகோயிலையும் பிரித்துணர்த்துங் குறிப்பு மிகுதியாயுளது . ` அதிகைமாநகர் ` என்பது முதலியவற்றை உணர்க . மா நகர் - பெருங்கோயில் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மழையார் மிடறா மழுவா ளுடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவா ரும்வெண்நா வலின்மே வியஎம்
அழகா எனும்ஆ யிழையாள் அவளே.

பொழிப்புரை :

நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் பூண்ட என் மகள், \\\\\\\"மேகம் போன்ற கரிய மிடற்றினனே, மழுவாகிய படைக்கலனை உடையவனே, மான் ஏந்திய கரத்தினனே, உமையாள் கணவனே, விழாக்கள் பல நிகழும் வெண்ணாவல் ஈச்சுரம் என்னும் திருவானைக்காவில் மேவிய எம் அழகனே! அருள்புரி\\\\\\\", என்று உன்னையே நினைந்து கூறுகின்றாள்.

குறிப்புரை :

மழை ஆர் மிடறா - மேகம்போலக் கறுத்த திருக்கழுத்தினனே! உழை - மான், புல்வாய், மரை, கவரிவேறு, உழை வேறு.
கரவா- திருக்கையினனே.
விழவு - திருவிழாக்கள்.
வெண்நாவல் - ஜம்புகேச்சுரம்.
எம் அழகா என்னும் ஆயிழையாள் என்க.
எனும் - என்று அழைப்பாள்.
ஆய் இழையாள் - நுண்ணிய வேலைப்பாடமைந்த ஆபரணத்தை அணிந்தவள்.
ஆராய்ந்திழைத்த இழையாள் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கொலையார் கரியின் உரிமூ டியனே
மலையார் சிலையா வளைவித் தவனே
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
நிலையா அருளா யெனுநே ரிழையே.

பொழிப்புரை :

அவயவங்கட்கு ஏற்ற அணிகலன்கள் பூண்ட என் மகள், `கொல்ல வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவனே, மலையை வில்லாக வளைத்தவனே, தன்னைத்தந்து என்னைக் கொள்ளும் விலையால் என்னை அடிமையாக ஆளும் வெண்ணாவல் என்னும் தலத்தில் விளங்குபவனே! நிலையாக என்னை ஆண்டருள்` எனக் கூறுகின்றாள்.

குறிப்புரை :

கரி - யானை; கரத்தை உடையது என்னுங்காரணத்தால் பெற்ற பெயர்.
உரி - தோல்.
மூடியன் - போர்வையன்.
மலை - மேரு கிரி.
சிலை - வில்.
விலையால் - விலைக்குப் பெறும் அடிமைத்தன்மையால்.
(பா.
8) நேரிழை - அன்மொழித் தொகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

காலா லுயிர்கா லனைவீ டுசெய்தாய்
பாலோ டுநெய் யாடிய பால்வணனே
வேலா டுகையா யெம்வெணா வலுளாய்
ஆலார் நிழலா யெனுமா யிழையே.

பொழிப்புரை :

என் ஆயிழையாள், `காலால் காலன் உயிரைப் போக்கியவனே, பால், நெய் முதலியவற்றை ஆடும் பால்வண்ணனே, வேல்ஏந்திய கையனே, வெண்ணாவலின் கீழ் விளங்குபவனே கல்லால மரநிழலின் கீழ் வீற்றிருந்து அறம் அருளியவனே!` என்று பலவாறு கூறுகின்றாள்.
அருள்புரி.

குறிப்புரை :

காலனைக் காலால் உயிர்வீடு செய்தாய் - யமனைத் திருவடியால் உதைத்து உயிரைப் போக்கியவனே.
பால், நெய், தயிர் மூன்றும் சொல்லி நிறுத்தி, `ஆனைந்து` என்பது சைவ சம்பிரதாயம்.
கோமயம், கோசலம் இரண்டும் திருமுறையுட் கூறப்படாமை அறிக.
பால்வண்ணன்:- இறைவனுக்கு இத்தலத்தில் வழங்கிய திருப்பெயர்.
வேல் - திரிசூலம்.
ஆல் ஆர் நிழலாய் - கல்லால மரத்தின் நிழலின்கண் வீற்றிருந்து அறம் உரைத்தவனே.
ஆயிழை - அன்மொழித்தொகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்
உறநெற் றிவிழித் தஎம் உத் தமனே
விறன்மிக் ககரிக் கருள்செய் தவனே
அறமிக் கதுவென் னுமென் ஆயிழையே. 

பொழிப்புரை :

என் ஆயிழையாள், `மீன் கொடியை உடைய மன் மதன் எரிந்து நீறாகுமாறு நுதல் விழியைத் திறந்த எங்கள் உத்தமனே, வலிமைமிக்க யானைக்கு அருள் செய்தவனே, நீ அருள் செயாதிருப்பதைக் கண்டு அறம் தவறுடையது` என்று கூறுவாள்.

குறிப்புரை :

சுறவக்கொடி கொண்டவன் - மீன் கொடி உடைய மன் மதன்.
நீறு - சாம்பல்.
அது - பகுதிப் பொருள் அன்றி வேறு குறியாது, விகுதிபோல் நிற்பது.
அவர் முதலியன அங்ஙனம் நில்லா என்பது தமிழ் மரபு.
நீறாய் உறவிழித்த உத்தமன் என்க.
நெற்றி விழித்த - நெற்றிக்கண்ணால் விழித்த.
நெற்றி - நெற்றிக்கண்; இடவாகுபெயர்.
உத்த மன் - மேலவர்க்கும் மேலானவன்.
விறல் - வலிமை.
கரி - யானை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.

பொழிப்புரை :

ஆராய்ந்து எடுத்த அணிகலன்களைப் பூண்ட என் மகள், `செங்கண்ணான் எனப் பெயர் பூண்ட சோழமன்னனுக்கு அழகிய கண்களால் கருணை பெரிதாகப் புரிந்தருளியவனே, கொடிய கண்களை உடைய விடையூர்தியை உடையவனே, எமது வெண்ணாவல் என்னும் பெயரிய திருஆனைக்காக் கோயிலில் உறைபவனே!` என்று பலவாறு நைந்து கூறி உடல் சோர்வுற்றாள்.

குறிப்புரை :

செங்கட் பெயர் - கோச் செங்கட் சோழன் என்னும் திருப்பெயர்.
செம்பியர்கோன் - சோழன்.
அம்கண் கருணை பெரிது ஆயவன் - கண்ணிற்கு அழகாகிய கருணையில் மிக்குள்ளவன் என்றவாறு.
வெம்கண்:- கண்ணில் விளங்கும் சினக்குறிப்பை உணர்த்துவது.
சாதியடை.
அங்கம் - உடம்பு, அவயவம் எனலுமாம்.
அயர்வு - சோர்வு, காதலால் நேர்ந்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
தன்தோ லுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளாய்
நின்றா யருளா யெனும்நே ரிழையே.

பொழிப்புரை :

தன் உடல் உறுப்பிற்கு ஏற்ற அணிகலன்களைப் பூண்ட என் மகள், \\\\\\\"கயிலைமலையில் வீற்றிருப்பவனே, கொல்லும் தொழில் வல்ல புலியினது தோலை உடுத்தவனே, சடைமுடியினனே, பிறை சூடியவனே, முப்புரங்களை அழித்து அவற்றின் தலைவர்களை வென்றவனே, வெண்ணாவல் என்னும் தலத்துள் எழுந்தருளியவனே! அருளாய்!\\\\\\\" என்று அரற்றுகின்றாள்.

குறிப்புரை :

குன்று - கயிலை, `புலியின் தன் தோல்` என்றும் `புரம் மூன்றை வென்றாய்` என்றும் கொள்க.
நின்றாய் - திருக்கோயில் கொண்டு வீற்றிருப்பவனே என்று எதிர்காலத்திற் கொள்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

மலையன் றெடுத்த அரக்கன் முடிதோள்
தொலையவ் விரலூன் றியதூ மழுவா
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே.

பொழிப்புரை :

ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள், `கயிலைமலையை அன்று எடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியன அழியுமாறு கால் விரலை ஊன்றிய தூய மழுவாளனே! என்னைக் கொண்டு தன்னைத்தரும் விலையால் என்னை ஆண்டருளும் வெண்ணாவல் தலத்தில் வீற்றிருப்பவனே! என்னை அலைக்காமல் அருள்புரிவாய்` என்று கூறுகிறாள்.

குறிப்புரை :

அரக்கன் - இராவணன்.
தொலைய - நொறுங்க.
என்னும் பொருட்டாய் நின்றது.
வகரமெய் விரித்தல் விகாரம்.
(பார்க்க:பா.2).
அலசாமல் - அலைக்காமல், வருத்தாமல்.
நல்காய் - வந்து அணைந்து இன்பங்கொடுப்பாய்.
எனும் - என்பாள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

திருவார் தருநா ரணன்நான் முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
அரவா எனும்ஆ யிழையா ளவளே.

பொழிப்புரை :

ஆராய்ந்தெடுத்த அணிகளைப் பூண்ட என் மகள், `திருமகள் மார்பிடை மருவிய திருமாலும், நான்முகனும் அடிமுடி காண மருவி வெருவுமாறு அழலுருவாய் நிமிர்ந்தவனே, மணம் கமழும் வெண்ணாவலுள் மேவிய எம் அரவாபரணனே!` என்று கூறுகின்றாள்.

குறிப்புரை :

திரு - இலக்குமி.
மருவா - மருவி.
வெருவா - அச்சத்தால் வாயால் அரற்றி (நிற்க) என்று ஒருசொல் வருவித்து முடிக்க.
வெருவி (நிற்க) அழலாய் நிமிர்ந்தாய் என்றபடி.
விரை - மணம்.
அரவா - பாம்பணிந்தவனே.
ஹர! வா எனலும் பொருந்தும்.
`எம் அரனேயோ என்றென்று`

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்
ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
அத்தா அருளாய் எனும் ஆயிழையே.

பொழிப்புரை :

ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள் `புத்தர்கள் பலரோடு, பொய்யான தவத்தைப் புரியும் சமணர்கள், தமக்குள் ஒத்த உரைகளைக்கூறி உன்னை அறியாதவராயினர்.
உண்மைத் தேவர்கள் வந்து வணங்கும் வெண்ணாவலுள் வீற்றிருக்கும் இறைவனே, அத்தனே, அருளாய்`! என்று கூறுவாள்.

குறிப்புரை :

அமண் - சமணர்.
பொய்த்தவர்கள் - மெய்த்தவரல்லாதவர்கள்; பொய்த்தவத்தையுடையவர்கள் என்று ஒரு மொழியும் தொடர்மொழியுமாக்கொள்ளலாம்.
ஒத்தவ்வுரை:- வகரம் விரித்தல் விகாரம்.
ஓரகிலார் - உணரமாட்டார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

வெண்நா வலமர்ந் துறைவே தியனைக்
கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்
பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்
விண்ணோ ரவரேத் தவிரும் புவரே.

பொழிப்புரை :

வெண்ணாவலின் கீழ் அமர்ந்துறையும் வேதங்களை அருளிய இறைவனை, கண்களில் நிலைத்து நிற்பதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன், பண்ணோடு பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லார் விண்ணோர்களால் ஏத்தி விரும்பப்படுபவர் ஆவர்.

குறிப்புரை :

வேதியன் - வேதத்தைப்படைத்த பரசிவன்.
வல்லவரை விண்ணோர் ஏத்த விரும்புவர் என்றபடி.
`கண்ணாருங் காழியர்` (தி.
2 ப.
16 பா.
11) என்றது காண்க.
கண் - மூங்கில்; `வேணு வனம்`.
ஞானக்கண் என்றுகொண்டு.
அதையுடையார்க்கு ஆகுபெயராக்கலுமாகும்.
திருஞானசம்பந்த சுவாமிகள் பண்ணோடு பாடிய உண்மை ஈண்டும் புலனாகின்றது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

பொன்நேர் தருமே னியனே புரியும்
மின்நேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயல்நா கேச்சுர நகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.

பொழிப்புரை :

பொன்னையொத்த மேனியனே, வளைத்துக் கட்டப்பட்ட மின்னல் போன்ற சடையினை உடையவனே, மணத்துடன் வரும் காவிரி நதியின் நல்ல நீரால் வளம் பெறும் வயல்களை உடைய நாகேச்சுரத் திருக்கோயிலில் விளங்கும் மன்னவனே என்று ஏத்த, வலிய வினைகள் அழிந்து கெடும்.

குறிப்புரை :

பொன் ஏர் தரு மேனியன் - பொன்னைப்போல ஒளிரும் திருமேனியுடையவன்.
ஏர் - உவமவுருபு.
விரை (காவிரி) நீர் - விரைந்தோடும் (காவிரி) நீர்.
நீர்வயல் - நீர் நிலவளம் உணர்த்தியவாறு.
மன்னே - இறைவனே.
வல்வினை மாய்ந்து அறும் என்றதுபோல இத்திருப்பதிகம் முழுதும் பாடியருளியதால் இத்தலவழிபாடு நம் பழவினைப் பற்றறுக்கும் என்பது உறுதியாதலறிக.
என - என்று துதிக்க.
மேலும் இவ்வாறே கொள்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த் தவனே உயரும்
நறவார் பொழில்நா கேச்சுர நகருள்
அறவா எனவல் வினையா சறுமே.

பொழிப்புரை :

சிறவாதவராகிய அசுரர்களின் முப்புரங்கள் எரியுமாறு வில்லிற் பொருந்திய நீண்ட கணையைச் செலுத்தியவனே, உயர்ந்த தேன் பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சுரக் கோயிலில் விளங்கும் அறவடிவினனே! என்று கூறி ஏத்த, வலிய வினைக்குற்றங்கள் அழிந்து கெடும்.

குறிப்புரை :

சிறவார் - சிறக்காதவர் (திரிபுரத்தசுரர்).
சிலையில் உற - மேருவில்லிற் பொருந்த.
வார்கணை - நீண்ட அம்பு.
உய்த்தவன் - செலுத்தியவன்.
உயரும் பொழில்.
நறவு ஆர் பொழில்.
நறவு.
கள், தேன்.
நகர் - திருக்கோயில்.
அறவா - தருமசொரூபி! ஆசு - குற்றம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சுர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே.
 

பொழிப்புரை :

கல்லால மரநிழலில் எழுந்தருளியவனே, கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் அழகிய உடல் வேகுமாறு விழித்தவனே, நல்லவர்களால் வணங்கப்பெறும் நாகேச்சுரத்திருக்கோயிலில் விளங்கும் செல்வனே என்று கூறி ஏத்த வலிய வினைகள் தேய்ந்து கெடும்.

குறிப்புரை :

கல் ஆல் நிழல் மேயவன் - கல்லாலின் நிழலில் வீற்றிருந்தவன்.
கரும்பின் வில்லான் - கரும்பை வில்லாகவுடைய மன்மதன்.
எழில் - அழகு.
ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது.
விழித்தவன் - தீ விழிதிறந்து எரித்தவன்.
நல்லார் - நன்னெறியாகிய சிவஞானத்தை உடையார், நற்பண்புடையாருமாம்.
செல்வா - சென்றடையாத திருவுடையானே.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

நகுவான் மதியோ டரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா கேச்சுர நகருள்
பகவா எனவல் வினைபற் றறுமே.
 

பொழிப்புரை :

விளங்குகின்ற வானத்தில் ஊரும் திங்கள், பாம்பு, கங்கை ஆகியன பொருந்திய தக்க நீண்ட சடையை உடையவனே, முல்லை மலர்கள் விளங்கும் நீண்ட பொழில்கள் சூழ்ந்த நாகேச்சுரத் திருக்கோயிலில் விளங்கும் பெருமானே என்று கூறி ஏத்த வலிய வினைகளின் தொடக்கு அறும்.

குறிப்புரை :

நகு - விளங்குகின்ற.
வான்மதி - விண்ணிலூரும் திங்கள்; வெண்டிங்களுமாம்.
அரவு - பாம்பு.
புனல் - கங்கை.
தகு - தக்க.
வார் - நீண்ட.
தளவம் - முல்லை.
நகுவார் - பல்லைக் காட்டிச் சிரிப்பார் (போலப்பூக்கும் பொழில்) தளவம் நகும்வார் பொழில் எனல் வெளிப்படை.
பகவா - கடவுளே; ஷாட்குண்யனே.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

கலைமான் மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சுர நகருள்
தலைவா எனவல் வினை தா னறுமே.
 

பொழிப்புரை :

மான்கன்று, அழல், மழு ஆகியன நிலையாக விளங்கும் கைகளை உடையவனே, நன்மை விளையும் தலமாகிய நாகேச்சுரக்கோயிலில் விளங்கும் தலைவனே! என்று கூறி ஏத்த வலிய வினைகள் கெடும்.

குறிப்புரை :

கலைமான்மறி - ஆண் மான்கன்று.
கனல் - தீ.
மழு - மழுவாயுதம்.
நிலை - நிற்றல்.
நிகழும் நலம் - உலகப் பிரசித்தி பெற்ற வினை தீர்தலாகிய நன்மை.
நகர் - திருக்கோயில்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

குரையார் கழலா டநடங் குலவி
வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே
நரையார் விடையே றுநாகேச் சுரத்தெம்
அரைசே யெனநீங் குமருந் துயரே.
 

பொழிப்புரை :

மலைமகளாகிய பார்வதிதேவி கண்டு மகிழ, கால்களில் ஒலிக்கின்ற வீரக்கழல்கள் ஆட நடனம் ஆடி மகிழ்பவனே, வெண்ணிறமான விடையின்மீது ஏறி நாகேச்சுரத்துள் விளங்கும் அரசனே! என்று கூறி ஏத்த, நீங்குதற்கு அரியவாய் வரும் துன்பங்கள் கெடும்.

குறிப்புரை :

குரை - ஒலி.
நடம் - நிருத்தம்.
வரையான் - இமாசலராசன்.
நரை - வெண்மை.
ஆர் - பொருந்திய.
விடையேறு: (தொல்காப்பியம், மரபியல்.
சூ 37,38, ) அரைசு - மொழியிடை நின்ற ஐகாரம் போலி.
அரசனே என்று விளித்தது.
நீங்குதற்கு அரிய துயரமும் நீங்கும் என்றவாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
கடையார் பலி கொண் டுழல்கா ரணனே
நடையார் தருநா கேச்சுர நகருள்
சடையாவென வல்வினை தானறுமே.
 

பொழிப்புரை :

முடை நாற்றம் பொருந்திய வெள்ளிய தலையோட்டை ஏந்தி உலகில் பலர் வீட்டு வாயில்களிலும் பலி கொண்டு உழலும் உலகக்காரணனே, நாகேச்சுரக் கோயிலுள் எழுந்தருளிய சடையனே! என்று கூறி ஏத்த, வலிய வினைகள் கெடும்.

குறிப்புரை :

முடை - புலால், நாற்றமுமாம்.
கடை - கடை வாயில்.
காரணன் - முதல்வன்.
நடை - ஒழுக்கம்.
சடையா - (ஞானமான) சடையனே.
`நுண்சிகை ஞானமாம்`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

ஓயா தவரக் கனொடிந் தலற
நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத் துவர்நா கேச்சுரத்
தாயே யெனவல் வினைதா னறுமே.
 

பொழிப்புரை :

தன் வலிமையால் இடைவிடாது போர்புரியும் இராவணன் மனம் உடைந்து அலற நீ அவனுக்கு அரிய அருளைச் செய்து மனம் இளகுதலாகிய உன் நடை முறையைக் காட்டியவன், என்று உன்னைப் பலரும் வாயாரவாழ்த்துவர்.
நாகேச்சுரத்தில் எழுந்தருளிய இறைவனே! என உன்னை நினைந்து போற்றுவார் வலிய வினைகள் கெடும்.

குறிப்புரை :

ஓயாத - (தான் செய்யும் குற்றத்தை உணர்தற்கு உணர்வில்) நுணுகாத, இடைவிடாத என்றலுமாம்.
நீ - தேவரீர்.
ஆரருள் - பூரணகருணை.
வாயார வழுத்துவர் - \\\\\\\"வாயாரப்பாடுந் தொண்டர்\\\\\\\".
தாயே - `தாயாய் முலையைத் தருவானே` (முத்திநிச்சயப்பேருரை பக்கம் 78-9-, 192-3இல் உள்ள விளக்கம் பார்க்க).
(தி.
2 ப.
86 பா.
4 குறிப்புரை காண்க).

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நெடியா னொடுநான் முகன்நே டலுறச்
சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
நடுமா வயல்நா கேச்சுர நகரே
இடமா வுறைவா யெனஇன் புறுமே.

பொழிப்புரை :

திருமாலும், பிரமனும் அடிமுடி தேடலை மேற் கொள்ளச் சுடுகின்ற பெரிய தீப்பிழம்பாய் எழுந்து நின்ற ஒளி வடிவினனே, நாற்று நடத்தக்க பெரிய வயல்களைக் கொண்டுள்ள நாகேச்சுரத்துக் கோயிலை உனக்குரிய கோயிலாகக் கொண்டு உறைபவனே என்று போற்ற அவன் இன்புறுவான்.

குறிப்புரை :

நெடியான் - விக்கிரமன்; திருமால்.
நேடல் - அடி முடி தேடுதல்.
மால் - பெரிய.
சோதியன் - தீப்பிழம்பானவன்.
நடு - நாற்று நடுகின்ற.
மாவயல் - நீள் கழனி.
நகரே இடமா உறைவாய் - திருக்கோயிலே உறையுளாக எழுந்தருளியவனே.
இன்பு - இம்மை மறுமை வீட்டின்பம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மலம்பா வியகை யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
நலம்பா வியநா கேச்சுர நகருள்
சிலம்பா வெனத்தீ வினைதேய்ந் தறுமே.
 

பொழிப்புரை :

அழுக்கேறிய கையினராய் உணவுகொள்ள மண்டை முதலான உண்கலங்களைப் பயன்படுத்தும் சமண, புத்தர்களின் பொய்மொழிகளை விடுத்து, உலகின்கண் நன்மைகள் வளர நாகேச்சுரக்கோயிலுள் எழுந்தருளிய கயிலை மலையானே! எனப் போற்றுவார் தீவினைகள் தேய்ந்து கெடும்.

குறிப்புரை :

மலம் - அழுக்கு.
பாவிய - பரவிய.
மண்டை - உணவு கொள்ளும் பொருட்டு, விரிந்த பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்டது.
உண்கலம் - உண்ணும் பாத்திரம்.
பாவியர் - தீவினையுடையவர்.
கட்டுரை - கட்டிச்செல்லும் பொய்ம்மொழி.
சிலம்பா - சிலம்பணிந்தவனே, கயிலை மலையானே.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
தலமார் தருசெந் தமிழின் விரகன்
நலமார் தருநா கேச்சுரத் தரனைச்
சொலமா லைகள்சொல் லநிலா வினையே.

பொழிப்புரை :

மரக்கலங்கள் பல நிறைந்த கடல் சூழ்ந்த தலங்களில் சிறந்த காழிப்பதிக்குத் தலைவனும் செந்தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தன் நன்மைகள் நிறைந்த நாகேச்சுரத்து அரனைப் போற்றிச் சொன்ன பாமாலைகளாகிய இப்பதிகத்தை இசையுடன் ஓத வினைகள் நில்லா.

குறிப்புரை :

கலம் - மரக்கலம்.
தலம் - சிவதலம்.
விரகன் - வல்லவன், அறிஞன்.
சொலல் - சொல்லுதலையுடைய, புகழுடைய.
சொல்- புகழ்.
சொல்ல - இசையுடன் பாட, வினை நில்லா என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.

பொழிப்புரை :

`தாவிச்செல்லும் அலைகளை உடைய ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட உலகின்கண் வாழ்பவர்களே, தன்னோடு மாறுபட்ட அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சிவபிரான் உறையும் புகலி எனப்பெயர் பெற்ற சீகாழிப்பதியைப் போற்றி வழிபடுங்கள்`. வினைகள் பெருகாமல் ஒழியும். அல்லல் போகும்.

குறிப்புரை :

உகலி - தாவி.(உகளிஎன்பதன்போலி) உகுதலையுடைய எனலுமாம். ஆழ் - ஆழ்ந்த. பார் - பூமி. உளீர் - உள்ளவர்களே!. வினை அகலியா - வினைகள் பெருகாமல் ஒழியும். அல்லல் போய் அறும். இகலியார் - பகைவர். புகலியாம் நகர் - சீகாழித் திருக்கோயிலை. போற்றி - வழிபட்டு. வாழ்மின் - இன்பவாழ்க்கை எய்துங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பண்ணி யாள்வதோ ரேற்றர் பான்மதிக்
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை யும்பு கலியை
நண்ணு மின்னல மான வேண்டிலே.

பொழிப்புரை :

நன்மைகள் பலவும் உங்களை அடைய வேண்டுமாயின், அலங்கரித்து ஊர்ந்து ஆளும் விடையை உடையவனும், பால் போன்ற வெண்மையான பிறைமதியைக் கண்ணியாகப் புனைந்தவனும், மணம் கமழும் கொன்றை மாலைசேர்ந்த முடியினனும் ஆகிய புண்ணிய மூர்த்தியாகிய சிவபிரான் உறையும் புகலியை அடைந்து வழிபடுங்கள்.

குறிப்புரை :

பண்ணி - அலங்காரம் செய்து. ஏறி ஊர்வது இங்கு ஆள்வதாயிற்று. ஏற்றர் - எருதுடையவர். மதிக்கண்ணி - பிறையாகிய கண்ணி. தலையிற் சூடுவதும் காம்புகளை ஒருபால் வைத்துக் கட்டுவதுமாகிய பூங்கண்ணியாகப் பிறையைக் கொண்டவன் சிவன். நலம் ஆன - நலங்களானவை. வேண்டில் - விரும்பினால்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

வீசு மின்புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
பேசு மின்பெரி தின்ப மாகவே.

பொழிப்புரை :

இன்பம் பெரிதாக விளையவேண்டின், ஒளிவீசும் மின்னல் போன்ற அணிபூண்ட காதினனும், பற்றுக்கள், வலிய வினைகள் ஆகியவற்றைப் போக்கிய மேதகு பண்பினனும், திருநீறு பூசியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய புகலிப்பதியை அடைந்து அவனைப்புகழ்ந்து பேசுங்கள்.

குறிப்புரை :

வீசும் மின் புரை - வீசுகின்ற மின்னலை ஒத்த, பெரிது ஆகப் பேசுமின் என்க. பெரிது இன்பம் - பேரின்பம் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
அடிக ளையடைந் தன்பு செய்யுமே.

பொழிப்புரை :

மணம் கமழும் வில்வம், ஊமத்தைமலர் ஆகியவற்றை முடிமிசைச் சூடியவனும், பெரிதான இவ்வுலகில் உள்ளோர் புகழ்ந்து போற்றும் தன்மையாளனும், திருநீற்றுப்பொடி பூசிய மேனியனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய அழகிய புகலிப்பதியை அடைந்து அங்கு மேவிய பெருமானிடம் அன்பு செய்யுங்கள்.

குறிப்புரை :

கடி - மணம், கூவிளம் - வில்வம், மத்தம் - ஊமத்தம் பூ. படி - உருவம். (நாற்றம் உடைமை ஆகிய) பண்புமாம். பாரிடம் - பூமி, படிகொள்பாரிடம் - பெரிய உருவங்கொண்ட பூதகணங்கள் என்பதும் பொருந்தும், பொடி - திருநீற்றுப் பொடி. அன்பு - பக்தி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பாதத் தாரொலி பல்சி லம்பினன்
ஓதத் தார்விட முண்ட வன்படைப்
பூதத் தான்புக லிந்ந கர்தொழ
ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.

பொழிப்புரை :

பாதங்களில் பொருந்தி ஒலிக்கும் பல சிலம்புகளை அணிந்தவனும், பாற்கடலிற் பொருந்தி எழுந்த விடத்தை உண்டவனும், பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது புகலிப்பதியை அடைந்து தொழ, துன்பங்கள் வருதற்கு இடம் இல்லையாகும்.

குறிப்புரை :

பாதத்து - திருவடிகளில், ஆர் - பொருந்திய. ஒலி - ஒலிக்கின்ற. ஓதத்து - பாற்கடலில். படைப்பூதத்தான் - பூதப்படை உடையவன். ஏதத்தார்க்கு - துன்பத்திற்கு. ஏதம் - துன்பம், இங்கு ஆர் விகுதி இழிவு பற்றியது. `பசியார்` என்பது போன்றதொரு வழக்கு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மறையி னான்ஒலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
பொறை யினானுறை யும்பு கலியை
நிறையி னால்தொழ நேச மாகுமே.

பொழிப்புரை :

வேதங்களை அருளியவனும், ஒலி நிறைந்த வீணையை உடையவனும், பூரணனாய் நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனும், எமது பொறுமையை மலராகக் கொள்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் புகலியையே குறிக்கொண்டு தொழ, அதுவே அன்பு வழிபாடாக அமையும்.

குறிப்புரை :

மறையினான் - வேதகர்த்தா. வீணையன் - `மிக நல்ல வீணைதடவி`. நிறை - நிறைவு. பொறை - பொறுமை. எட்டுப் பூக்களுள் ஒன்று. ஞானபூஜைக்குரியது. நிறை - சிவனையன்றி வேறு ஒன்றும் வழிபாட்டிற்குக் குறிக்கோளாக் கொள்ளாத கற்பு. நேசம் - அன்பு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
பொருவி டையுயர்த் தான்பு கலியைப்
பரவி டப்பயில் பாவம் பாறுமே.

பொழிப்புரை :

வஞ்சகம் பொருந்திய மனத்தாரைக் காண விரும்பாதவனும், இரவில் பலியேற்கும் இயல்பினனும், எம் இறைவனும், போர் வல்ல விடைபொறித்த கொடியினனும் ஆகிய சிவபிரானது புகலியைப் பரவ நாம் செய்த பாவங்கள் அழியும்.

குறிப்புரை :

கரவு - வஞ்சகம். பொருவிடை - இடபக்கொடி. உயர்த்தவன் - எடுத்துப் பிடித்தவன். பரவிட - வாழ்த்த. பாறும் - அழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.

பொழிப்புரை :

தாமரை அரும்பை ஒத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், தன்மீது விருப்பினன் ஆயினும் செருக்குற்ற காரணத்தால் இராவணனது வலிமையை அடர்த்த கயிலைமலையினனும், பொழில் சூழ்ந்த புகலியூரைத்தன் இருப்பிடமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானுடைய திருவடிகளை ஏத்தி வாழ்த்துங்கள்.

குறிப்புரை :

அருப்பு - அரும்பு. ஆர் - ஒத்த. விருப்பினான் - பக்தன். உரம் - வலிமை. செகும் - அழிக்கும். பொருப்பு - மலை. இருப்பு - வாசம். விருப்பு, பொருப்பு இருப்பு மூன்றும் இன்சாரியையும் ஆன் விகுதியும் பெற்றுப், பெயரடியாகப் பிறந்த பெயராயின. விருப்பும் இருப்பும் தொழிற்பெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே.

பொழிப்புரை :

திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

குறிப்புரை :

கழல்சீலம் - திருவடிப்பான்மை. `சீலமோ உலகம் போலத் தெரிப்பரிது` (சித்தியார்.50). முடியும் என்று உம்மை கூட்டிக் கொள்க. எரிபோலும் மேனியன் - தீ வண்ணன். பாலது ஆடிய - பாலால் அபிடேகம் செய்யப்பெற்ற. நல்லன் - சிவன். அல்லனே என வினாவாக் கொள்ளலும் அமையும். புகலி உட்பாலது ஆடிய என்பதற்குத் திருப்புகலியின் உட்பக்கத்திலுள்ள திருக்கோயிலில் திருக்கூத்தியற்றிய எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்ற தாகவை யாஉ ணர்வினுள்
நின்ற வன்நிக ழும்பு கலியைச்
சென்று கைதொழச் செல்வ மாகுமே.

பொழிப்புரை :

நின்று உண்பவராகிய இழிந்த சமணர்கள், தேரர்களாகிய பௌத்தர்கள் உரைகளை ஒருபொருளாகக் கொள்ளாத அன்பர்களின் உணர்வினுள் நிற்கும் சிவபிரான் எழுந்தருளிய புகலியைச் சென்று கைதொழச் செல்வங்கள் உளவாம்.

குறிப்புரை :

துய்ப்பவர் - உண்பவர். `நின்றுண்போர்` எனப்பிற இடங்களில் வருதலும் காண்க. (பதிகம் . 38.95). `நின்றுண் சமணர் இருந்துண்தேரர்` (பதிகம் . 71). ஒன்று - ஒருபொருள், வையா - வைத்து மதிக்காத. செல்வம் - இம்மை, மறுமை. வீட்டுக்குரிய செல்வங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

புல்லம் மேறிதன் பூம்பு கலியை
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
சொல்லு மாலையீ ரைந்தும் வல்லவர்க்
கில்லை யாம்வினை யிருநி லத்துளே.

பொழிப்புரை :

விடைமீது ஏறி வருபவனாகிய சிவபிரானது அழகிய புகலியை நன்மை செய்யும் ஞானசம்பந்தன் தன் நாவினால் போற்றிச் சொல்லிய தமிழ் மாலையாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர்க்கு அகன்ற இந்நிலவுலகத்தில் வினைகள் இல்லை.

குறிப்புரை :

புல்லம் - எருது. `புல்வாய்` போன்றதொரு காரணப் பெயர். ஏறி - ஏறுகின்றவன். இகர விகுதியுடைய பெயர்ச்சொல். மாலை ஈர் ஐந்து - இப்பத்துப்பாக்களாலாகிய மாலையை. இருநிலம் - `மாநிலம் ` `பெரும்பூமி`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
நடையி னால்விரற் கோவ ணந்நயந்
துடையி னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

வயற்பக்கங்களில் நண்டுகளை உடையதும், வாய்க்கால்களை அடுத்துள்ள நீர்மடையில் நீலமணி போன்று தெளிந்தநீரை உடையதுமான நெல்வாயில் இறைவர் ஒழுக்கத்திற்குக்காட்டாக நால் விரல் அளவுள்ள கோவண ஆடையை உடையவர். அவர் எம் முடி மேல் திகழும் மாண்பினர்.

குறிப்புரை :

புடையின் - வயற்பக்கத்தில். ஆர் - பொருந்திய புள்ளி - நண்டு. கால் - வாய்க்கால். மடையின் - நீர் மடையில். ஊர்ப்பெயர்க் கேற்பவளம் கூறப்பட்டிருக்கின்றது. நடை - ஒழுக்கம். நால்விரற் கோவணம் ஐவிரற்கோவணம் `உடைதனில் நால்விரற்கோவண வாடை` (தி .1 ப .39 பா .2) `ஐவிரற் கோவணவாடை பாறருமேனியர்` (தி .1ப .44 பா .6) இரண்டும் இவர் திருமுறையுட் கூறப்பட்டன. நயந்து - விரும்பி. உடையினார் - உடை உடுத்தவர். உச்சியார் என்பது இத்தலத்து இறைவர் திருப்பெயர், நெல் வாயிலார், உடையினார் என்பன இறைவரைக் குறிப்பன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

வாங்கி னார்மதிண் மேற்க ணைவெள்ளந்
தாங்கி னார்தலை யாய தன்மையர்
நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
ஓங்கி னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

முப்புரங்கள் மீது கணை தொடுக்க வில்லினை வளைத்தவர். பெருகிவந்த கங்கைநீரைச் சடைமிசைத் தாங்கியவர். மேலான தன்மைகளை உடையவர். ஓடும் நீரினைஉடைய நெல் வாயில் என்னும் தலத்தினர். நாம் தொழுமாறு புகழால் ஓங்கி விளங்குபவர். அவர் எம்முடிமேல் விளங்கும் மாண்பினர்.

குறிப்புரை :

மதில்மேல் - திரிபுரத்து மதிலின்மீது. கணை - பாணம். வாங்கினார் - (வில்லை) வளைத் (துஎய்) தார். வெள்ளம் - கங்கைப் பெருக்கு. தலையாயதன்மையர் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளாந்தன்மை முதலிய ஆறும் உடையவர் . ... ஷாட்குண்யர். எண்குணமுமாம். நீங்கும் நீர - ஓடும் `நீர்ப் பெருக்காகிய வளமுடைய. நீள்கு என்பதன் மரூஉவே நீங்கு என்பது. `நீங்கிற் றெறூஉம் குறுகுங்கால் தண் என்னுந் தீ`(குறள் 1104) என்னுங் குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையை நுணுகி நோக்கின் இது விளங்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நிச்ச லேத்துநெல் வாயி லார்தொழ
இச்சை யாலுறை வாரெம் ஈசனார்
கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
இச்சை யாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

நாள்தோறும் நாம் ஏத்தவும் தொழவும் நெல் வாயிலில் இச்சையோடு விளங்குபவர். எம் ஈசர். பாம்பைக் கச்சையாக அணிந்தவர். உயிர்கட்கு இச்சை உண்டாதற் பொருட்டு, தான் இச்சா சக்தியோடு விளங்குபவர். அவர் எம் உச்சியில் விளங்கும் மாண்பினர்.

குறிப்புரை :

நிச்சல் - நித்தல், நாடோறும். கச்சை - அரையிற் கட்டும் கயிறு. வடம். அரவக்கச்சு. கவின் - அழகு. இச்சையார் - உயிரின் இச்சைக்குக் காரணமான இச்சா சத்தியை உடையவர். `இச்சை உயிர்க்கு அருள்நேசம் ஆகும்` (சிவஞானசித்தியார், 83).

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மறையி னார்மழு வாளி னார்மல்கு
பிறையி னார்பிறை யோடி லங்கிய
நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
இறைவ னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

வேதங்களை அருளியவர். மழுவாகிய வாளினை உடையவர். சடைமுடியில் பொருந்திய பிறையினை உடையவர். வானளாவ வளர்ந்து, நிறைந்து விளங்கும் நெற்பயிர் விளையும் வயல்களை வாயிலில் உடையதால், நெல்வாயில் எனப்பெற்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவர். நம்மால் தொழத்தகும் இறைவர். அவர் எமது முடிமிசைத் திகழ்பவர்.

குறிப்புரை :

மறையினார் - வேதகர்த்தா. மழுவாளினார் - மழுப்படையுடையவர். `பிறையோடு இலங்கிய நிறையின் ஆர் அம் நெல்` என்பது வானளாவ வளர்ந்து நிறைய விளங்கிய அழகிய நெற்பயிர் என்று குறித்தது. `விண்தயங்கு நெல்` என (பா . 10) வருதல் காண்க. நிறையினார் - கற்புடைய கங்காதேவியை உடையவர் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

விருத்த னாகிவெண் ணீறு பூசிய
கருத்த னார்கன லாட்டு கந்தவர்
நிருத்த னாரநெல் வாயின் மேவிய
ஒருத்த னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

முதியவராய்த் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவர். தீயில் ஆடுதலை உகந்தவர். நடனம் புரிபவர். நெல்வாயில் என்னும் தலத்தில் விளங்கும் ஒருவர் என்னும் பெயருக்கு உரியவர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.

குறிப்புரை :

விருத்தன் - முதியவன். கருத்தன் - தலைவன். கனலாட்டு - தீயில் ஆடல். உகந்தவர் - விரும்பியவர். நிருத்தனார் - கூத்தர். ஒருத்தனார் - தனிமுதல்வர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
பேரி னார்பிறை யோடி லங்கிய
நீரி னாரநெல் வாயி லார்தொழும்
ஏரி னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

கார்காலத்தில் மலரும் கொன்றைமலரால் இயன்ற கண்ணியைச் சூடியவர். நிறைந்த புகழை உடையவர். பிறைசூடி விளங்கும் இயல்பினர். நெல் வாயிலில் உறைபவர். நாம் தொழத்தகும் அழகர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.

குறிப்புரை :

காரின் ஆர் கொன்றை - கார்காலத்தில் மலரும் கொன்றைமலர். `கார்நறுங் கொன்றை`(புறம் - கடவுள் வாழ்த்து) மல்குபேரினார் - நிறைந்த பெயர் (புகழ்) உடையார். நீரினார் - கங்கை (ச்சடை) யர். இலங்கிய - விளங்கிய, பிறைக்கும், நீர்க்கும் பொது அடைமொழியாகக் கொள்ளலும் ஆம். ஏரினார் - அழகர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஆதி யாரந்த மாயி னார்வினை
கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
நீதி யாரநெல் வாயி லார்மறை
ஓதி யாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

உலகிற்கு ஆதிஅந்தமாக விளங்குபவர். குரோதமான செயல்களைப் புரிந்த அசுரர்களின் மதில் கூட்டங்களை அழித்தவர். நீதியை உடையவர். நெல் வாயிலில் எழுந்தருளியிருப்பவர். மறைகளை ஓதியவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.

குறிப்புரை :

ஆதியார் - முதல்வர், அந்தமாயினார் - (சங்கார காரணர்) முடிவுமானார். வினை கோதியார் - குரோத வினையுடையார். திரிபுரத்தசுரர். குரோதி என்பதன் திரிபு கோதி என்பது. `கோதித்த நெஞ்சன்` (பாரதம்). மறையோதியார் - வேதங்களை ஓதியருளியவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பற்றி னானரக் கன்க யிலையை
ஒற்றி னாரொரு கால்வி ரலுற
நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
பெற்றி யாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பற்றி எடுத்த இராவணனை ஒருகால் விரலைப் பொருத்தி அவன் தலைகள் முழுவதும் அடர ஒற்றியவர். நெல்வாயிலில் விளங்குபவர். நாம் தொழும் தன்மையர். அவர் எமது உச்சியில் உறைபவர்.

குறிப்புரை :

நெற்றி - இராவணனது உச்சி. ஆர் - பொருந்த. பெற்றியார் - தன்மையையுடையவர். ஒரு கால்விரல் உறநெற்றி ஆர ஒற்றினார் என்று இயைக்க. `திருவொற்றாடை`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நாடி னார்மணி வண்ண னான்முகன்
கூடி னார்குறு காத கொள்கையர்
நீடி னாரநெல் வாயி லார்தலை
ஓடி னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

நீலமணி போன்ற நிறத்தினனாகிய திருமாலும், நான்முகனும் கூடித் தேடிக்குறுக முடியாத இயல்பினராய் எரி உருவொடு நீடியவர். நெல்வாயிலில் எழுந்தருளியிருப்பவர். தலை ஓட்டைக்கையில் உடையவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.

குறிப்புரை :

நாடினார் - விரும்பினவர், தேடினவர். மணி வண்ணன் - திருமால், கூடினார் - கூடி, முற்றெச்சம், குறுகாத - (கண்டு) நெருங்காத. நீடினார் - சோதிப்பிழம்பாக நீண்டார். தலை ஓடினார் - பிரமகபாலத்தை உடையவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

குண்ட மண்டுவர்க் கூறை மூடர்சொற்
பண்ட மாகவை யாத பண்பினர்
விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
உண்ட கண்டரெம் முச்சி யாரே.

பொழிப்புரை :

குண்டர்களாகிய சமணர்களும், துவர் ஏற்றிய ஆடையை அணிந்த மூடர்களாகிய புத்தர்களும் கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாத பண்பினர். வானளாவ உயர்ந்துள்ள நெற்பயிர்கள் நிறைந்த நெல் வாயில் என்னும் தலத்தில் விளங்குபவர். அவர் எமது உச்சியார்.

குறிப்புரை :

குண்டு அமண் - குண்டராகிய அமணர். துவர்க் கூறை - துவர்ப்பேறிய ஆடை. பண்டம் - பொருள். விண் தயங்கு - வான் (அளாவி) விளங்கிய, நஞ்சு - விடம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

நெண்ப யங்குநெல் வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம் பந்தன்சொல் லிவை
பண்ப யன்கொளப் பாட வல்லவர்
விண்ப யன்கொளும் வேட்கை யாளரே.

பொழிப்புரை :

நெல்வாயில் என்னும் தலத்தில் நட்புக்கொண்டு விளங்கும் ஈசனை, சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைப் பண்ணின்பயன் கொள்ளுமாறு பாடி வழிபட வல்லவர், வீட்டுலக இன்பத்தை அடையும் வேட்கையினர் ஆவர்.

குறிப்புரை :

நெண்பு - நண்பு. அயங்கு - அசங்கிய. (பதி .140.) சண்பை - சீகாழி, `பண்பயன்கொளப் பாடவல்லவர்` என்றதால் தேவாரம் பாடும்முறையை அறியும் இன்றியமையாமை புலனாகின்றது. விண் - வீட்டுலகம். பயன் - பேரின்பம், இம்மை மறுமைப் பயனுமாம். வேட்கையாளர் - விருப்பத்தை ஆள்பவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்
திலகு மான்மழு வேந்து மங்கையன்
நிலவு மிந்திர நீலப் பர்ப்பதத்
துலவி னானடி யுள்க நல்குமே.

பொழிப்புரை :

விளங்கும் மான் மழுஏந்திய அகங்கையாளனாய்த் தன்னிடம் அன்பு செய்யும் பூதகணங்கள் போற்ற, விளங்கித் தோன்றும் இந்திர நீலப்பர்வதத்து வீற்றிருந்து உலாவுகின்ற சிவபிரான் தன் திருவடிகளை நினைவார்க்கு அருள் புரிவான்.

குறிப்புரை :

பாரிடம் - பூதகணம். அங்கையன் - அகங்கையுடையவன். பர்ப்பதத்து - மலைமேல். உலவினான் - உலாவியவன். உள்க - தியானம்செய்ய. நல்கும். அருள்செய்யும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

குறைவி லார்மதி சூடி யாடல்வண்
டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர்
இறைவ னிந்திர நீலப் பர்ப்பதத்
துறைவி னான்றனை யோதி யுய்ம்மினே.

பொழிப்புரை :

மேலும் குறைதல் இன்றி என்றும் ஒரு கலையாய் நிறைவுபெறும் பிறையை, வண்டுகள் இசைக்கும் சிறந்த கொன்றை மலர் சூடிய சென்னியில் சேர்த்துள்ள இறைவனும், இந்திரநீலப் பருவதத்து உறைபவனுமாகிய சிவபிரானைப் போற்றி உய்யுங்கள்.

குறிப்புரை :

குறைவு இல் ஆர் மதி - குறைதல் இன்றி நிறைவு பொருந்திய பிறை. கடவுள் சடைமேல் உள்ள பிறைக்குக் குறைவும் அழிவும் இல்லை. உறைவினான் - வாழ்தலை உடையவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

என்பொ னென்மணி யென்ன வேத்துவார்
நம்ப னான்மறை பாடு நாவினான்
இன்ப னிந்திர நீலப் பர்ப்பதத்
தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே.

பொழிப்புரை :

என் பொன்னே என்மணியே என்று புகழ்ந்து போற்றுவாரை விரும்புபவன், நான்கு மறைகளையும் பாடும் நாவினை உடையவன், இன்பவடிவினன், இந்திரநீலப் பர்வதத்து அன்பு உடையவன் ஆகிய சிவபிரான் திருவடிகளையே சரணாக அடைந்து வாழுங்கள்.

குறிப்புரை :

என்பொன், என்மணி என்ன ஏத்துவார் நம்பன் - என் பொன்னே என்மணியே என்று எடுத்துப் புகழ்ந்து போற்றுவாரை விரும்பியருள்பவன், `நம்பும் மேவும் நசையா கும்மே` என்றார் தொல் காப்பியர். `பாதமே` என்றதில் ஏகாரம் பிரிநிலை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

நாச மாம்வினை நன்மை தான்வரும்
தேச மார்புக ழாய செம்மையெம்
ஈச னிந்திர நீலப் பர்ப்பதம்
கூசி வாழ்த்துதுங் குணம தாகவே.

பொழிப்புரை :

நம் வினைகள் நாசமாகவும், நன்மைகளே வந்தெய்தவும், உலகளாவிய புகழுடைய செம்மையாளனாகிய எம் ஈசனும் இந்திரநீலப் பருவதத்து உறைவோனுமாகிய சிவபிரானை, நும் சிறுமையையும் அவன் பெருமையையும் எண்ணி நற்குணங்கள் பலவும் அமைய வாழ்த்துங்கள்.

குறிப்புரை :

வினை நாசம் ஆம் என்க. நன்மைவரும். கூசிவாழ்த்து தும் - இறைவன் பெருமையையும் நம் சிறுமையையும் எண்ணிக்கூசி, வாழ்த்துவோம். `நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்தம்மைக் கூசன் காண் கூசாதார் நெஞ்சுதஞ்சே குடிகொண்ட குழகன்காண்` என்ற அப்பர் திருவாக்கில் வந்த கூசுதல் வேறு. இது வேறு. தேசம் ஆர் - தேசம் (முழுதும்) நிறைந்த.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்
பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
இரவ னிந்திர நீலப் பர்ப்பதத்
தருவி சூடிடு மடிகள் வண்ணமே.

பொழிப்புரை :

இந்திர நீலப்பருவதத்து இறைவனது இயல்பு அருவிகளை மாலையாகச் சூடி மகிழ்வதோடு தன்னைமருவிய மான் போன்ற கண்ணளாகிய உமையம்மை ஒருபாகமாக விளங்க, தன்னைப் பரவுவார் வினைகளைப் போக்குவதாகும்.

குறிப்புரை :

மருவு ... பண்பினான் - அம்மையப்பராகத் தொழுத அன்பர் கன்மத்தைத்தீர்த்த குணமுடையவன். இரவன் - இரத்தலைச் செய்தவன், இரவாகியவன். அன்பர் இரத்தற்குரிய வள்ளல். அருவி - மலையருவி, கங்கையுமாம். வண்ணம் - இயல்பு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

வெண்ணி லாமதி சூடும் வேணியன்
எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
அண்ண லிந்திர நீலப் பர்ப்பதத்
துண்ணி லாவுறு மொருவ னல்லனே.

பொழிப்புரை :

வெண்மையான நிலவைத் தரும் மதியைச் சூடும் சடையினனும் பகைவரின் திரிபுரங்களை அழித்த வில்லினனும், தலைமையாளனும் ஆகிய இறைவன், இந்திரநீலப்பருவதத்துள் விளங்கும் ஒருவன் அல்லனோ?.

குறிப்புரை :

வேணி - சடை. எண்ணிலார் - நினையாத பகைவர். வில் - மேருவில். `அல்லனே` ஏகாரம் வினா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்
அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம்
உடைய வாண ருகந்த கொள்கையே.

பொழிப்புரை :

கொடியில் கொண்ட விடையை உடையவர். எமனை உதைத்தவர். பொடியணிந்த மேனியில் பாம்பினை அணிந்தவர், தலைவர். இந்திரநீலப் பருவதத்துள் வாழும் இறைவனின் இயல்புகள் இவையாகும்.

குறிப்புரை :

ஏற்றினர் - விடையுடையவர். கூற்று - யமன். உயிர் வேறு உடல் வேறாகக் கூறுபடுத்துவோன் கூற்றுவன். பொடி - திருநீறு. வாணர் - வாழ்நர். உகந்த - உயர்ந்த, விரும்பிய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

எடுத்த வல்லரக் கன்க ரம்புயம்
அடர்த்த தோர்விர லானவ னையாட்
படுத்த னிந்திர நீலப் பர்ப்பதம்
முடித்த லம்முற முயலு மின்பமே.

பொழிப்புரை :

கயிலை மலையை எடுத்த இராவணனின் கைகள் தோள்கள் ஆகியவற்றை அடர்த்த விரலால் அவ்விராவணனை ஆட்படுத்தியவன் உறையும் இந்திர நீலப்பருவதத்தை முடிகளால் வணங்க இன்பம் எளிதின் வாய்க்கும்.

குறிப்புரை :

கரம் - கை. புயம் - தோள். அடர்த்து - நெருங்கியது. விரலான் - விரலால். படுத்தன் - படுத்தியவன். முடித்தலம் - உச்சியிடம். உச்சியிலுள்ள ஸ்தலமுமாம். உற - அடைந்து வழிபட. முயலும் இன்பம் - நாம் அடைய முயலும் இன்பமே எளிதின் வாய்க்கும் என்ற படி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பூவி னானொடு மாலும் போற்றுறும்
தேவ னிந்திர நீலப் பர்ப் பதம்
பாவி யாவெழு வாரைத் தம்வினை
கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே.

பொழிப்புரை :

தாமரை மலரில் எழுந்தருளிய பிரமனோடு திருமால் போற்றி வணங்கும் தேவனாகிய இந்திரநீலப் பருவதத்துள் உறையும் இறைவனை நினையாதவரை வினைகள் சினக்கும். கூற்றம் கொல்லும்.

குறிப்புரை :

பூவினான் - செந்தாமரை மலரிலுள்ள பிரமன். போற்று - துதி, உறும் - அடையும். பாவியாது - தியானம் பண்ணாமல், கோவியா - கோபித்து, கூற்றம் வரும் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கட்டர் குண்டமண் டேரர் சீரிலர்
விட்ட ரிந்திர நீலப் பர்ப்பதம்
எட்ட னைநினை யாத தென்கொலோ
சிட்ட தாயுறை யாதி சீர்களே.

பொழிப்புரை :

கட்டானவும் பருமையானவுமான உடலினராகிய சமணபுத்தர்கள் சிறப்பற்றவர். நம்மால் விட்டொழியத் தக்கவர். அவர்களை விடுத்து இந்திரநீலப் பருவதத்து உறையும் மேலான ஆதியின் சீர்களை எள்ளளவும் நினையாதிருப்பது ஏனோ?.

குறிப்புரை :

கட்டர் - உடற்கட்டுடையவர், சீர் - சிறப்பு. விட்டர் - விட்டொழிய நின்றவர், `விட்டல் - வீடுதல்` திருவிளையாடல். எள்தனை - எள்ளளவும். சிட்டதாய் - நல்லறிவுமயமாய். உறை - வாழும். ஆதி - முதல்வன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
இந்தி ரன்றொழு நீலப் பர்ப்பதத்
தந்த மில்லியை யேத்து ஞானசம்
பந்தன் பாடல்கொண் டோதி வாழ்மினே.

பொழிப்புரை :

மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் இந்திரனால் வழிபடப் பெற்ற நீலமலையில் விளங்கும் அந்தம் இல்லாத பெருமானை ஏத்திய பாடல்களை ஓதி வழிபட்டு வாழுங்கள்.

குறிப்புரை :

கந்தம் - மணம். அந்தம் இல்லி - முடிவில்லாதவன் - அநந்தன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயு மன்பரே.

பொழிப்புரை :

தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நஞ்சினை உண்ட வரும் , அரிய உயிர் போன்றவரும் , கற்கண்டு போல் இனிப்பவருமாய இறைவர் , கருவூர் ஆனிலையில் விளங்கும் தேவராவார் . அருள் வழங்கும் அன்புடையவர் அவர் .

குறிப்புரை :

தொண்டு எலாம் - தொண்டர் எல்லாரும் . உண்டல் - உண்ணல் , உண்டலாருமாம் . ஆருயிர் - அரியவுயிர் , உயிர்க்குயிர் . கண்டு அனார் - கண்டுபோலினிப்பவர் . திருக்கருவூரில் உள்ள திருக் கோயில் ஆநிலை , ஆன்நிலை எனப்படும் , பசுபதி என்னுந் திருப்பெய ருண்மை உணர்க . அண்டனார் - தேவர் . அன்பர் - அன்பையுடையர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

நீதி யார்நினைந் தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
காதி னார்கரு வூரு ளானிலை
ஆதி யாரடி யார்த மன்பரே.

பொழிப்புரை :

நீதியின் வடிவானவர். நினைந்து ஆராயத்தக்கதாய நான்கு மறைகளை ஓதும் அந்தணர்களோடு கூடியவர். குழை அணிந்த திருச்செவியர். கருவூர் ஆனிலையில் விளங்கும் முதல்வர். அடியார்களுக்கு அன்பர்.

குறிப்புரை :

நீதியார் - நீதியே வடிவான சிவபெருமான். நினைந்து ஆய நான்மறை ஓதியார் - எண்ணி ஆராய்ந்த நான்கு மறைகளை ஓதுவார், கூடலார் - கூடுவார். குழைக்காதினார் - குழையணிந்த திருச்செவியை உடையவர். குழை தோட்டின் வேறானது; இதனைக் `குழையும் சுருள்தோடும்` என்ற திருவாசகத்தானறிக. ஆதியார் - முதல்வர். அடியார்தம் அன்பர் - அடியார்களுக்கு அன்பராயிருப்பர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.

பொழிப்புரை :

வானத்தில் உலாவும் மதியைச் சூடியவர். வேத இசையாக விளங்குபவர். மேலான பண்பினர். கூத்தர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அடியவர்கட்கு நல்லவர்.

குறிப்புரை :

விண் - ஆகாயம். சூடி - வினையெச்சம். வேதமே பண் உளார் - வேதத்தில் சுரரூபமாக இருப்பவர். பரம் ஆய பண்பினர் - மேலாகிய பண்பை உடையவர். பண்பு - எண்குணம். கண்ணுள் - கூத்து. கண்ணுளார் - கூத்தர். கண் - உளார். உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவர். பண்பினர்கண் உளாருமாம். அண்ணலார் - தலைவர், பெரியர். அடியார்க்கு நல்லார் என்பது இறைவன் திருப்பெயர்களுள் ஒன்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

முடியர் மும்மத யானை யீருரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியுளார் கரு வூரு ளானிலை
அடிகள் யாவையு மாய ஈசரே.

பொழிப்புரை :

சடைமுடியை உடையவர். மும்மதங்களை உடைய யானையை உரித்தவர். வெண்பொடி பூசியவர். மன்மதனைச் செற்றவர். சிறப்புடையவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அவர் எல்லாமாய் விளங்கும் ஈசராவார்.

குறிப்புரை :

முடியர் - சடைமுடிஉடையவர். வணங்குவோர் உச்சியருமாம் (பதி.162 `உச்சியார்`) மும்மதம் - கன்னம், கோசம், கை என்னும் மூன்றிடத்தும் ஒழுகும் மதநீர், `கன்னமும் கோசமும் கையும் என்னும், இன்னமுத்தானத்து இழிவன மும்மதம்`-(பொருட்டொகை நிகண்டு) ஈர்த்தல் - உரித்தல். ஈர் உரி - உரித்த தோல். உரியென்பது முதனிலைத் தொழிலாகு பெயர். பொடியர் - திருவெண்பொடியை உடையவர். உரியை அணிந்த பொடியர். வேளை - மன்மதனை, கருவேளை. செற்றவர் - அழித்தவர். கடி - சிறப்பு, அதிசயம். யாவையும் ஆய ஈசர் - `ஒருவனே எல்லாமாகி அல்லனாய் உடனுமாவான்`(சித்தி . 46)`முழுதுமாகிய மூர்த்தி`(பா .9).

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யார்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே

பொழிப்புரை :

தாமரை போன்ற திருவடியர் . தம் திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர் . நீல மணி போன்ற கண்டத் தினர் . ஆகாய கங்கையைத் தாங்கியவர் . அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடையவர் , அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார் .

குறிப்புரை :

பங்கயம் - ( சேற்றில் முளைப்பது ) தாமரை . மலர்ப் பாதர் - மலர் போன்ற திருவடியை உடையவர் . பாதி ஓர் மங்கையர் - அர்த்தநாரீச்சுரர் . மணி - அழகிய . வான் கங்கையர் - ஆகாச கங்கையை அணிந்தவர் . அம் - அழகு . ஆடு அரவத்து - ஆடுகின்ற பாம்பை உடைய .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியின்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வூரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.

பொழிப்புரை :

தேவர்கட்கு எல்லாம் தேவர். திங்கள், பாம்பு ஆகியவற்றை முடிமேல் சூடியவர். மும்மதில்களை எய்தவில்லை உடையவர். எல்லோரையும் காப்பவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் இவர் அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சக்தி வழங்கியவர் அல்லரோ?.

குறிப்புரை :

சென்னி - தலை. மேவர் - பொருந்துதலை உடையவர். வில்லியர் - மேருவாகிய வில்லை உடையவர். மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே - அயன் முதலிய மூவருமாகிய சக்தியை உடையவர் அல்லரோ. மொய்ம்பு - சக்தி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வூரு ளானிலை
நண்ணி னார்நமை யாளு நாதரே.

பொழிப்புரை :

பண்களின் வடிவாய் இருப்பவர். படிந்து ஏறுதற்கு உரிய விடையூர்தியர். நீறணிந்தவர். திருமேனியில் உமைஅம்மையைக் கொண்டுள்ளவர். பிறை சூடிய திருமுடியர். நெற்றியில் கண்ணுடையவர். கருவூர் ஆனிலையில் எழந்தருளியிருப்பவர். நம்மை ஆளும் நாதர் அவர்.

குறிப்புரை :

பண்ணினார் - பண்ணாயிருப்பவர். படி ஏற்றார் - படி (ந்து அமர்)தற்குரிய விடையை உடையவர். மெய்ப்பெண்ணினார் - பெண்ணை ஒருபாற் கொண்ட மெய்யார். மெய் - உடம்பு. நெற்றியர் - உச்சியர். கண்ணினார் - உலகுக்கொரு கண்ணாயிருப்பவர், ஞானக்கண்ணருமாம். நண்ணினார் - சேர்ந்தார். நமை - நம்மை. நாதர் - தலைவர், உடையவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே.

பொழிப்புரை :

வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த இராவணனின் தலை தோள் ஆகியவற்றைத் தாளினால் அடர்த்தவன். பின் அவனுக்கு அருள் கொடுத்தவன். கூத்தன். அவன் கருவூர் ஆனிலையில் விளங்கும் பெரியவன்.

குறிப்புரை :

கடுத்த - கோபித்த. தலை தோளும் - தலைகளும் தோள்களும். தாள் - திருவடி. அருள்கொடுத்தவன் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

உழுது மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே.

பொழிப்புரை :

எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப் பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று முயன்ற திருமால், பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர். அத்தகைய பெருமான் கருவூர் ஆனிலையில் நாம் எளிதின் வணங்க எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

ஏனம் - பன்றி. கழுதினான் - பேயன். முழுதும் ஆகிய மூர்த்தி - `யாவையும் ஆய ஈசர்` (பா .4).

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
அத்தர் பாத மடைந்து வாழ்மினே.

பொழிப்புரை :

புத்தர்களும் புன்மையான அறிவற்ற பொய்யுரைகளைக் கூறும் பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும் மேலான இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள்.

குறிப்புரை :

ஆதர் - அறிவிலார். மெய்ப்பத்தர் - உண்மை அன்பர். அத்தர் - இறைவர், உயர்ந்தவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யிற்றுய ராய தீர்வரே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து எம் தந்தையாகிய இறைவன் மேல் பாடிய இப்பதிகப்பாடல் பத்தையும் ஓத வல்லவர் மனத்துயர் தீர்வர்.

குறிப்புரை :

கந்தம் - வாசனை. துயர் ஆய - துன்பமானவை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
துன்னியிமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

பொருந்திய கலைகளின் பொருளையும் மூவுலக வாழ்வையும் உயிர்கட்கு ஆராய்ந்து அளித்துக் காக்கும் ஒருவராக விளங்கும் சிவபிரானின் பழமையான ஊர்யாதென வினவின், தேவர்கள் மண்ணுலகை அடைந்து துதி செய்து வணங்கும் சென்னியில் உள்ளவராகும் இறைவர் எழுந்தருளிய திருப்புகலி என்னும் தலமாகும்.

குறிப்புரை :

முன்னிய - பொருந்திய, முந்திய, நினைக்க. கலை - அறுபத்து நான்கு கலைகள்; `உவமையிலாக் கலைஞானம்` எனலுமாம். மூவுலக வாழ்வு - மூன்று உலகத்திலும் வாழும் வாழ்க்கை. பன்னிய - ஆராய்ந்த, ஒருத்தர் - தனிமுதல்வர், வினவின் - கேட்டால்; ஞாலம் - பூமி. துன்னி - நெருங்கி, இமையோர்கள் - தேவர்கள். துதி - தோத்திரம், சென்னியர் ஆரம்போல மேம்பட்டவர், சென்னியிலுள்ளவர் என்றுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

வண்டிரை மதிச்சடை மிலைத்தபுனல் சூடிப்
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே

பொழிப்புரை :

வளமையான அலைகளோடு கூடிய கங்கையை மதி சூடிய சடையின்மேல் தாங்கிப் பழமையான தீயைக் கையின்கண் ஏந்தி ஆடும் பரமனது பதி தாமரை மலரின் மணம் வீசப் பெறுவதும் சோலைகள் சூழ்ந்ததும் , தெளிந்த அலைகளை உடைய கடலில் தோணியாக மிதந்து பொலிந்ததும் ஆகிய திருப்புகலியாகும் .

குறிப்புரை :

வண்டு இரை என்றால் புனலில் உள்ள மணம்பற்றிய தாகும் . வண்திரை என்றால் புனல் ( நீர் ) அலையின் வளம் உரைத்த தாகும் . மதிச்சடை - பிறைசூடிய சடைமேல் , மிலைத்த - சூடிய . புனல் - கங்கை நீர் . எரி - தீ . ஆடுபரமன் - ஆடும் கடவுள் , தீயில் ஆடும் , தீ ஏந்தி ஆடும் என்றிரண்டும் ஆகும் . பதியது - தலம் , அது - பகுதிப் பொருள் விகுதி . புண்டரிகம் - தாமரை , வாசம் - மணம் , கடல் பொலி - கடலில் மிதந்து விளங்கிய காழி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
பூவணவு சோலையிருண் மாலையெதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

இறைவன் புகழான பாடல்கள் பாடும் சிந்தையை உடையவர்கள், பத்தர்களோடு கூடிப்பரவ, அவர்தம் நாவில் உறையும் அந்தணனாக விளங்கும் பெருமானுக்கு விருப்பமான இடம், பூக்கள் நிறைந்த சோலையில் இருளைத்தரும் மாலைப்போதுவர தெய்வத் தொடர்பான விழாக்கள் நிகழும் திருப்புகலி எனக்கூறுவர்.

குறிப்புரை :

பா - பாடல். அணவு - கிட்டும், சிந்தையவர் - சித்தத்தையுடையவர். பத்தர் - அன்பர். நா அணவும் - நாக்கில் (புகழ் வடிவாகப்) பொருந்திய. அந்தணன் - சிவன், அம் + தண் + அன் - அழகும் குளிர்ச்சியும் உடையவன். அந்தத்தை அண்ணுதலை, உடையவன் என்றாருமுளர். `அந்தத்தை அணவுவார்` என்றார் நச்சினார்க்கினியர். கூர - மிக. தேவணவிழா - தெய்வவடிவான திருவிழா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மைதவழு மாமிடறன் மாநடம தாடி
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழு முருத்திரர்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

கருமை நிறம் பொருந்தியமிடற்றினை உடைய சிவபிரான் மகிழ்ச்சியால் சிறந்த நடனங்கள் ஆடி, கைகளில் வளையல் அணிந்த உமையம்மையோடு கலந்துறையும் பதி, உருத்திரர்கள் பெரிதான இறைத்தொண்டுகளைப்புரிந்து பெருமானோடு இணங்கி நிற்கும் திருப்புகலியாகும்.

குறிப்புரை :

மை - நஞ்சின் கறுப்பு. மை தவழும் - மேகம் போலும் கருநிறம் பரவிய, மா - கரிய. மிடறன் - திருக்கழுத்தை உடையவன். மாநடம் - மகாதாண்டவம். பணி - தொண்டு. இணக்கு உறு - இணங்குதல் உற்ற.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்க ளக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

முன்னமே அறுவகைச் சமயங்களாய் விளங்கி அவரவரும் மேற்கொண்ட கொள்கைகளுக்கு ஏற்ப அருள் செய்த பிறையாளன் உறையும் கோயில், சங்குகள் ஒளிவிடும் புன்னைமலர்ச் சோலைகளை உடையதும் செந்நெல்விளையும் வயல்கள் பொருந்தியதுமான திருப்புகலியாகும்.

குறிப்புரை :

இரு மூன்றுசமயங்கள், `அறுவகைச் சமயம்` அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்`(சித்தியார் . 2) அக்கு - உருத்திராக்க மாலை, சங்குமணியுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

வங்கமலி யுங்கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கண னருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

மரக்கலங்கள் நிறைந்து தோன்றும் திருப்பாற் கடலில் தோன்றிய விடத்தினை உண்ட அழகிய கருணையாளன் ஆகிய சிவபிரான் மிகவிரும்பி இருக்கும் இடம், மணம் நிறையுமாறு பனிபடர்ந்த மாசுடன் விளங்கும் பொழில்களை உடையதும் இனிய தென்னைமரங்கள் சூழ்ந்ததுமான திருப்புகலியாகும்.

குறிப்புரை :

வங்கம் - மரக்கலம், கடலுக்குச் சாதியடை. அங்கணன் - கருணைக்கண்ணன். அருத்தி - விருப்பம், கொங்கு - மணம், தேன், பூந்தாது. அண - அண்ண, வியன் (வியல்) - அகலம், தெங்கு - தென்னை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

நல்குரவு மின்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளு மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரவிசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

வறுமை இன்பவாழ்வு நலங்கள் ஆகியனவற்றைத் தருபவராய்த் தம்மை வழிபடுவாரின் வலிய வினைகளைத் தீர்த்தருளும் பெருவீரராய் விளங்கும் பெருமானாருடைய இடம், பெருகிய அடியார்கள் நிலமிசை இசைபாடி வாழ்த்துவதும், செல்வம் நிரம்பிய மறையவர்கள் நிறைந்துள்ளதுமான திருப்புகலியாகும்.

குறிப்புரை :

நல்குரவு - வறுமை, நல்க ஊர்தல் என்னுந் தொடர் நல் கூர்தல் என்று மருவிற்று. பிறர் நல்க - வீடு வீடாக ஊர்ந்து சென்று வேண்டி நிற்றல் பற்றிய காரணப்பெயர். இன்பம் - இன்பந்தரும் பொருள். மைந்தன் - வலிமையுடைய வீரன். படி - நிலம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளு மண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

பரவியபுகழாளரும், கயிலைமலையால் இராவணனை அடர்த்தருளிய தலைவருமான சிவபெருமானது இடம், நெருங்கிவரும் கடல் அலைகள் முத்துக்களையும் மணிகளையும் சிந்துதலால் பெருமை பெற்ற பொழில்கள் பொலியும் திருப்புகலிப் பதியாகும்.

குறிப்புரை :

பரப்பு - பரவுதல். பெருமை புகழ் ஆளன் - பெரும் புகழை ஆள்பவன், புகழினது பெருமையை ஆள்பவன் எனக்கிடந்தவாறுங்கொள்ளலாம், வரை - கயிலை மலை. திரை - அலை. முத்தம்மணி -முத்துக்களையும், மணிகளையும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளு மப்பனிரு வர்க்கும்
நேடவெரி யாகியிரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

காந்தள் மலர்களோடு வளைந்த பிறைமதி குலாவும் சடையின்மேல் ஆடும் பாம்பினையும் வைத்தருளிய தலைவரும், திருமால், பிரமர் தேட எரியுருவமாய்த் தோன்றி அவர்கள் கீழும், மேலும் அடி முடிகளைத் தேட நின்ற வருமான சிவபிரான் உறையும் நகர் திருப்புகலியாகும்.

குறிப்புரை :

கோடல் - வெண்காந்தள், குலாய - குலவிய, நேட - தேட. பேணி - விரும்பி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற் றொடிமடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

கல்வி கற்ற அமணர்களும், நூலறிவில் தேர்ந்துலவும் புத்தர்களும் மெய்ப்பொருள் அறியாது கூறும் குற்றம் பொருந்திய கொள்கைகளை ஏலாதவனது ஊர், பொன்னால் இயன்ற வளையல்களை அணிந்த மகளிரும் மைந்தர்களும், ஐம்புலன்களையும் வென்றஞானியரும் விரும்பும் திருப்புகலியாகும்.

குறிப்புரை :

கற்ற அமணர் - அவைதிகநூல்களைப்படித்த சமணர். குற்றம் மொழி - குற்றங்களையுடையவார்த்தைகளை, கொள்கையது - கொள்ளுவது. தொடி - வளையல். மடந்தையர் - மகளிர். மைந்தர் - ஆடவர். புலன் ஐந்தும் செற்றவர் - ஐம்புலத்தாசையையும் அகற்றிய ஞானியர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செய்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.

பொழிப்புரை :

செந்தமிழ் மொழிபரவி வளரும் திருப்புகலியில் எழுந்தருளிய ஆதி, அந்தம், நடு எனப்படும் மூவகையாகவும் விளங்கும் பெருமான்மீது, ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு இசையோடு இயலும் வகையில் பாடிப்பரவுவார், வீடுபேற்றுக்கு உரியவர் ஆவர்.

குறிப்புரை :

`செந்தமிழ் பரப்பு உறு திருப்புகலி` என்றதால், பண்டு சீர்காழியின் கண் இருந்த தமிழ் வளர்ச்சி புலனாகும். முதல் அந்தம் ஆகி எனமாற்றுக. பந்தன் - சம்பந்தர். தமிழ்கள் - தமிழ்ப்பாடல்கள், இசைகூர - பண்ணிசைமிக. வந்தவணம் - வந்தவாறு. (பார்க்க: 170:112 .).

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை
நிறம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
திறம்பய னுறும்பொரு டெரிந்துணரு நால்வர்க்
கறம்பய னுரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்தவனே! வீரமும் பயமும் கொண்டு தன்னோடு போர்மலைந்த அசுரர்களின் முப்புரங்களின் வலிமையை அறுத்தாய். உனது தன்மை பசுமை நிறமும் செம்மையும் கலந்தது. ஆகமங்களின் பயனாகச் சொல்லத்தக்க பொருளைத் தெரிந்துணர விரும்பிய முனிவர் நால்வர்க்கு அறமாகிய பயனை உணர்த்தியருளினாய்.

குறிப்புரை :

மறம் - வீரம், பாவமுமாம். பயம் - அச்சம், மறத்தையும் அச்சம் விளைவிப்பதையும் உடைய. மலைந்தவர் - (பகைவர்) போராடியவர்; திரிபுரத்தசுரர். பரிசு - (பெயர்ந்து சென்று அழிக்குந்) தன்மை.
அறுத்தனை - அறுத்தாய். செம்மை நிறம் அப்பனது. பசுமை நிறம் அம்மையினது, அம்மையப்பர் நிறம் இரண்டும் கூறப்பட்டன, பயன் உறும் பொருள் - உயிர்க்குறுதியை அடைவிக்கும் ஆகமாந்தப் பொருள். நால்வர்க்கு - சநகாதியர்க்கு. அறம்பயன் - அறமாகிய பயன். அமர்ந்தோய் - வீற்றிருந்தருளியவனே. அறுத்தனை உரைத்தனை என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளம்
தரித்தனை யதன்றியு மிகப்பெரிய காலன்
எருத்திற வுதைத்தனை யிலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயத்தில் எழுந்தருளியவனே! சடையை விரித்து பெருகி வந்த கங்கை வெள்ளத்தைத் தாங்கினாய்: அஃதன்றியும் மிகப்பெரிய காலனின் பிடரி வருந்துமாறு உதைத்தாய். விளங்கும் அணிகலன் பூண்ட உமையம்மையை மேனியின் ஒரு பாகமாகப் பொருத்தியுள்ளாய்.

குறிப்புரை :

சடை விரித்தனை; வெள்ளம் தரித்தனை. எருத்து - கழுத்து, பிடர். இலங்கிழை - விளங்கிய பூண் உடைய உமாதேவியார். கருத்தினை - கருத்தை உடையாய்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்: நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்: ஊழிக்காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்: உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய். குருந்தொசித்த திருமால் மோகினியாகவர அவரோடு கூடிப்பிரிந்தும் புணர்ந்தும் விளையாடினாய்: பிணம்புகும் சுடுகாட்டை விரும்பிமகிழ்ந்தாய்.

குறிப்புரை :

விழுங்கு உயிர் உமிழ்ந்தனை - இளைப்பாற்றற் பொருட்டு உடலினின்றும் பிரிக்கப்பட்ட உயிர்களை மீண்டும் அவற்றின் வினைகளைக் கழித்தற்பொருட்டு உடம்பிற்புகுத்தினாய். குருந்து ஒசி பெருந்தகை - குருந்த மரத்தை வளைத்த பெரிய தகைமையை உடையமாயன்; திருமால். மோகினி வடிவங்கொண்டு மனைவியாகிய வரலாறு காண்க. மயானம் புரிந்தனை - சுடுகாட்டை விரும்பினாய்,`கள்ளி முதுகாட்டிலாடி` `கோயில் சுடுகாடு`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

வளங்கெழு கடும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்த பெருமானே! வளமை பொருந்தியதாய்க் கடுமையாகப் பெருகிவந்த கங்கையொடு கூடிய சடையசைய விளங்கும் இளம்பிறையை கலங்கத்தாங்கி மனம் நெகிழ்ந்து வணங்கும் அடியவர்க்குச் சுடுகாட்டில் விளைந்த நீற்றொடு தோன்றும் உன் கோலத்தை அறிவிற் காட்டி விளங்குகின்றாய்.

குறிப்புரை :

புனல் - கங்கை. துளங்கு - அசைவு, முதனிலைத் தொழிற்பெயர். அளைந்தவர் - கலந்தவர், குழைந்தவருமாம். புலம் - புளம். லகரளகரப்போலி, அளமரு - அலமரு என்பது போல. மெய்யினிடம் என்றபடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகம்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண வரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்தவிறை யோனே.

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்த இறைவனே! நீ பெரிதாகப் பற்றிய நோய், பிறப்பு இறப்பு, இல்லாதவன். கரும்படு சொல்லி என்னும் பெயருடைய உமையம்மையுடன் மகிழ்ந்தவன். வண்டுகள் தேனுண்ண அதனால் அழகுற அவிழும் கொன்றைமலர்களை விரும்பியவன்.

குறிப்புரை :

பிணியும் பிறப்பும் இறப்பும் இல்லாய் என்றபடி. கரும்பொடு படுஞ்சொலின் மடந்தை - `கரும்பன்ன சொல்லம்மை` என்னும் அம்பிகையின் திருப்பெயர். பல திருப்பதிகங்களுள் இறைவனுக்கும் இறைவிக்கும் அக்காலத்தில் வழங்கிய திருப்பெயர்களைக் குறித்தல் மூவர் இடத்தும் உண்டு. சுரும்பு - வண்டு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே
தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்த பெருமானே! தீ வளர்க்கும் நீண்டகையை உடைய அந்தணர்கள் உன்னை நினையும் மனத்தவராயின் அவர் எத்தொழிலை மேற்கொண்டவர் ஆயினும் அவர்தம் தீவினைகட்குப் பகையாயிருந்து தீர்ப்பவன் நீ. தீக்கொழுந்து போன்ற ஒளி பொருந்திய சடையில் தனித்த பிறையோடு பொருந்தக் கங்கை கிடக்குமாறு செய்துள்ளவன், நீ.

குறிப்புரை :

அனல்படு தடக்கையவர் - செந்தீவளர்க்கும் கையுடைய அந்தணர். `எரியோம்புஞ் சிறப்பர்` (தி.1 ப.80 பா.2.) வினைப் பகை - வினைக்குப் பகைவன். தனல் - தணல். புனல் - கங்கை. கிடக்கையை - கிடத்தலை உடையாய்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்
அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்
திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்தோய்! பாவமான செயல்களை விரும்பாத தவத்தைப்புரியும் அடியவர் உள்ளங்களில் அறநெறிப் பயனையும் அடைய விரும்பாதவாறு அதனைக்கடிந்து, உன் அருள் உரிமையைப் பெற்றோர் திறத்தினுக்கு ஏற்ப அருள் வழங்கும் தன்மையனாய் வேறாய் நின்றும் அருள் புரிபவன் நீ.

குறிப்புரை :

மறத்துறை - பாபமார்க்கம். மறுத்தவர் - வேண்டாதார். தவத்து அடியர் - தவத்தையுடைய அடியவர். அறத்துறை ஒறுத்து - புண்ணிய மார்க்கத்தையும் கடிந்து. இருவினையொப்புடைமை குறித்த படி. அருட்கிழமை - சிவஞானத்திற்கு உரியராந்தன்மை. திறம் - சரியை முதலிய நான்கு திறங்கள். சரியையாளர் திறத்திற்குத் தக்கவாறு அருள்செய்யும் இறைவனது திறத்தைக் குறித்தபடி. மதித்து அகல நின்றும் புறத்துஉள திறத்தினை என்பது இறைவனது ஒன்றாய் வேறாய் உடனாயிருக்கும் மூன்று இயல்புகளுள் வேறாய் நிற்பதைக் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
வலங்கொள வெழுந்தவ னலங்கவின வஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்தவனே! இலங்கை மக்கள் வணங்கும் தலைவனாகிய இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு முழங்க அவன் வலிய தலைகளோடு கைகளை அடர்த்து அவன் அஞ்சிப் போற்ற வாளும், நாளும் அளித்து அவனுக்கு வெற்றி உண்டாக அருள் புரிந்தவன் நீ. நன்மைகள் உண்டாக ஐந்து புலன்களை வென்றவன் நீ.

குறிப்புரை :

இலங்கையர் - இலங்கையில் வாழ்ந்தவர்கள், இறைஞ்சு இறை - வணங்கும் அரசனாகிய இராவணன். விலங்கலில் - கயிலையை எடுக்குந்திறத்தில். உலம் - திரண்டகல்லை. கெழு - ஒத்த. கவின - அழகுசெய்ய. அஞ்சு - அஞ்சுகின்ற, ஐம்புலன் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

வடங்கெட நுடங்குண விடந்தவிடை யல்லிக்
கிடந்தவ னிருந்தவ னளந்துணர லாகார்
தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள்செய் தொன்றினை புறம்பயம மர்ந்தோய்.

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்தவனே! ஆல் இலையில் துயின்ற திருமாலும் அவனது கொப்பூழாகிய தாமரையில் இருந்துதோன்றிய பிரமனும் உன்னை அளந்தறிய இயலாதவரா(யி)னார். பின் அவர்கள் தொடர்ந்து பழைய உருவோடு வணங்க அவர்கட்கு கருடப்புள், அன்னப்புள் ஆகியவற்றை ஊர்தியாகக் கொண்டு படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களைச் செய்யுமாறு அருள்புரிந்தாய்.

குறிப்புரை :

வடம் - ஆலமரம்.
இங்கு ஆலிலையை உணர்த்திற்று. நுடங்கு உள - அசைவுள்ள, தூங்க என்றபடி. இடந்த - பெயர்ந்த. இடை அல்லி - கொப்பூழிடையில். பூத்த - (அகவிதழையுடைய) தாமரையொடு, கிடந்தவன் - திருமால். இருந்தவன் - அம்மலர்மேல் இருந்த பிரமன். புடம் - மறைப்பு. கருள் - இருள். இருள் மறைக்கப்பட்டாற்போல (ஒளிப்பிழம்பாய் இருந்தும் இருவரும் அடிமுடி காணாது) அறியாமையான் மறைக்கப்பட்டார்கள். \\\\\\\"கருள்தரு கண்டத்து எம் கயிலையார்\\\\\\\" (தி.3 பதி. 109 பா. 4). புடங்கருள் செய்து - புள்தங்க அருள் செய்து எனப்பிரித்துக் கருடப்புள், அன்னப்புள் இரண்டின் மேலும் தங்க அருள்செய்து எனலும் ஆம். பெயரெச்சத்து அகரம் தொக்கது. புள்தங்கு - புட்டங்கு என இரட்டிக்காதது, எதுகை நோக்கிற்றாம். தி.2 பதி.92 பா.1 காண்க. `புட்டன் பேடையொடாடும் பூம்புகலூர்த் தொண்டர் போற்றி வட்டஞ்சூழ்ந்தடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே` (தி.2 பதி.92 பா.21), என்பதில், புள் + தன் = புட்டன் என்று புணர்ந்தமையால், இங்கும் புள்தங்கு என்பனவற்றின் புணர்ச்சி எனக்கொள்வதில் தடைஇராது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமை யொர்பாகம்
அடக்கினைபுறம்பய மமர்ந்தவுர வோனே.
 

பொழிப்புரை :

புறம்பயம் அமர்ந்த வலியவனே! ஊன் உண்டல் நன்றென்று கூறும் தேரர்கள், தீதென்று கூறும் சமணர்கள், உடலில் உடையின்றித்திரியும் திகம்பரர்கள் உடலைப் போர்த்தித்திரியும் புத்தர்கள் ஆகியோர் கூறும் பிடகநூல் முதலியவற்றின் உரைகளைக் கொள்ளாது உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குகின்றாய்.

குறிப்புரை :

விடக்கு - ஊன். ஒருவர் நன்றென்னும் - தேரரையும், தீ தென்னும் சமணரையும் குறித்ததாகும். (உடற்கு உடைகளைந்தவர், திகம்பரசைனர்.) படக்கர்கள் - உடையுடுத்தோர். படக்கு - உடை. பிடக்கு உரை - பிடக நூல்மொழி \\\\\\\"பிடக்கே உரைசெய்வார்\\\\\\\" (தி.1பதி.13 பா.19). புத்தர்களுடைய திரிபிடகம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தம்
தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
சுரும்பவிழ் புறம்பய மமர்ந்ததமிழ் வல்லார்
பெரும்பிணி மருங்கற வொருங்குவர் பிறப்பே.
 

பொழிப்புரை :

கரிய உப்பங்கழிகள், பெரிய அலைகளால், விளங்கும் முத்துக்களைத்தந்து உலவும் கழுமலத்தார்க்குத் தலைவனும் தமிழுக்கு உரிமை பூண்டவனுமாகிய ஞானசம்பந்தன், வண்டுகள் ஒலி செய்யும் புறம்பயம் அமர்ந்தபிரானை விரும்பிப் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்கள் காலங்காலமாக வரும் பெரும் பிணியாகிய பிறப்பு நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

கழி - உப்பளம்.
கரைக்குலவு முத்தம் - கரைமேல் விளங்கும் முத்து.
கழுமலத்து இறை - காழிவேந்தர்.
அமர்ந்த தமிழ் - விரும்பிப் பாடிய இப்பதிகம்.
மருங்கு அற - இருந்த இடமும் தெரியாது ஒழிய.
பிறப்பு ஒருங்குவர் - பிறப்பு ஒழியப் பெறுவர்.
ஒருங்குவது பிறப்பில் வினை.
பிறவி ஒருங்கப் பெறுவது இத்தமிழ் வல்லார் வினை.
அப்பிறப்பு ஒருங்கப்பெறுவர் எனற்பாலது பிறவி ஒருங்குவர் எனப்பட்டது.
நோயொழிவர், காலொடிவர் என்பவை போல்வது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

சுற்றம், பற்று ஆகியவற்றை முற்றிலும் அறுத்துக் குற்றமற்ற நல்ல குணங்களோடு கூடி விளங்கும் அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான் இருக்குமிடம் கருப்பறியலூர்.

குறிப்புரை :

சுற்றமொடு பற்று அவை - (துணையும்) சுற்றமும் பற்றும் ஆகியவற்றை. இவ்வாறு கருமூலத்தைப் பறிப்பதால் கருப்பறியலூர் என்றாயிற்று. கலந்தவர் கருப்பறியல் என ஆசிரியரே இப்பதிக முடிவில் ஊர்ப்பெயர்ப் பொருளை உணர்த்தியது உணர்க. துயக்கு - அறிவு வேறுபடல். சிவபிரானையே அறியும் அறிவு வேறுபடாதவாறு சுற்றம் முதலியவற்றை அறுத்து என்றபடி. மற்று அசை. அடியார்களாகிய அவரை என்க. வானுலகம் - வீட்டுலகு. கற்றவன் - இயல்பாகவே உணர்ந்த சிவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

வண்டணைசெய் கொன்றையது வார்சடைகண்மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால்
கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே,

பொழிப்புரை :

வண்டுகள் அணைதலைச் செய்கின்ற கொன்றை மலர்மாலையை நீண்ட சடைமுடிமீது அணிந்து, துன்பம் செய்யும் பாம்பு அணைதலைச் செய்யும் கோலம் பூண்டவராய், மும்மதில்களும் உடைந்து நிலத்தினை அடையுமாறு ஓரம்பால் எய்தழித்தவர் இருப்பது கருப்பறியலூர்.

குறிப்புரை :

வண்டு அணைசெய் - வண்டுகள் அணைதலைச்செய்கின்ற. கோலம் - திருக்கோலம், அழகு. கோள் - துன்பம், வலிமையுமாம். விண்டு -(இடம்) விண்டு, நீங்கி, விள்ளல் உற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
நாதனென நள்ளிருண்மு னாடுகுழை தாழும்
காதவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

வேதியர்கள் வேதங்களை ஓதுவதோடு வேள்வி முதலியனவற்றைச் செய்து, காலம் பெற அரும்புகளையும் மலர்களையும் சாத்தி வழிபடும் தலைவராக நள்ளிருளில் அசைகின்ற குழைதாழ ஆடும் காதினை உடையவராகிய சிவபிரான் இருப்பது கருப்பறியலூர்.

குறிப்புரை :

முதலாக - முதலிய பல நற்செயல்களிலும். போதினொடு - (காலம்பெறப்) பொழுதொடு. போது - மலரும் பருவத்தது. மலர் - பூ. குழைதாழும் காதவன் - `குழைக்காதன்` என்னும் திருப்பெயரைக் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

மலையரசனின் மகளாகிய மடப்பம் பொருந்திய உமையொருபாகனும், உடலைவிட்டு உயிர் செல்லும் காலம் வருவதை அறிந்து தொழுது நின்ற மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த காலனின் உயிர் நீங்குமாறு தனது ஒரு காலினால் உதைத்தவனும் ஆகிய பெருமான் வீற்றிருக்கும் தலம் கருப்பறியலூர்.

குறிப்புரை :

மடம் - அழகு. துறவிகள் உறையும் இடம் பல உடையதால் மடம் படுமலை என்று இமயத்தினைக் குறித்தல் பொருந்தும். இறைவன் - அரசன். மறையோன் - மார்க்கண்டேய முனிவன். அணவு - கிட்டிய. காலன் - யமன். கால - கக்க. கடந்தவன் - கடக்கவுதைத்தவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
நிருத்தனவ னீதியவ னித்தனெறி யாய
விருத்தனவன் வேதமென வங்கமவை யோதும்
கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

ஒருபாகமாக ஒப்பற்றவளாகிய உமையம்மையோடு கூடி விளங்கும் கூத்தனும், நீதியின் வடிவானவனும் அழியாதவனும், நெறிகாட்டும் முதியோனும், வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை ஓதும் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவது கருப்பறியலூர்.

குறிப்புரை :

நிருத்தன் - கூத்தன். நித்தன் - அழியாதவன். விருத்தன் - முதியோன். வேதம் அங்கம் - நான் மறையும் ஆறங்கமும். கருத்தவன் - தலைவன், கருத்துள் இருப்பவன். (தி .6 பதி . 83. பா . 5)

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகண் மெய்த்தேன்
பண்ணமரு மென்மொழியி னாளையணை விப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவவெரி காலும்
கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

இமவான் பெற்ற மகளும், தேன்சுவை, பண்ணிசை ஆகியன போன்ற மொழியினாளும் ஆகிய உமையம்மையை, சிவபிரானது திருமேனியோடு சேர்ப்பிக்குமாறு விண்ணவர்கள் ஏவவந்த காமனது உடல் வெந்தழியுமாறு எரிகாலும் நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.

குறிப்புரை :

விண்ணவர்களுக்கு, வெற்புக்கு அரசு எனக்கூட்டுக. எரிகாலும் கண் - நெருப்பைக்கக்கும் கண்; இது பெருமானது வெகுண்ட நிலையைக் குறித்தது, அணைதல் அம்பிகையது. அணைவித்தல் ஆண்டவனது. தேன்மொழி, பண்மொழி என்றவாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஆதியடி யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக்
காதின னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

உலகின் ஆதியாய் விளங்கும் தன்னை வழிபட நீர், மலர், ஒளிதரும் விளக்கு, நறுமணப்புகை ஆகியவற்றுடன் கட்டு மலையாய் உயரமாக அமைந்த ஆலயத்தை அடைந்து வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்தணைந்த காலன் அழியுமாறு உதைத்த சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.

குறிப்புரை :

அப்பு - சலம். சோதி ஒளி - தீபம். நற்புகை - தூமம். வளர்க் குவடு புக்கு - வளர்தலையுடைய கருப்பறியலூர்க் கோயில் கட்டுமலை மேலுள்ளதாதலின் அதனுள் புகுந்து. அரங்க - புடைபெயர, அழியவுமாம். காதினன் - ஈண்டு உதைத்தவன் என்னும் பொருட்டு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

வாய்ந்தபுகழ் விண்ணவரு மண்ணவரு மஞ்சப்
பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்
கேய்ந்தபுய மத்தனையு மிற்றுவிழ மேனாள்
காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

புகழ் வாய்ந்த தேவர்களும் மக்களும் அஞ்சுமாறு ஓடிச் சென்று போர் உடற்றும் தொழிலினை உடைய இலங்கை மன்னனுக்கு அமைந்த இருபது தோள்களும் ஒடிந்து விழுமாறு முன்னாளில் சினந்தவனாகிய சிவபிரான் வீற்றிருப்பது கருப்பறியலூர்.

குறிப்புரை :

வாய்ந்த புகழை உடைய விண்ணவர் என்றும் மாறிக்கூட்டிப் புகழ் வாய்ந்த என்றும் கொள்ளலாம். இற்றுவிழ - ஒடிந்து விழ. காய்ந்தவன் - சினந்தவன். ஏய்ந்த - பொருந்திய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
நிரந்தர நிரந்திருவர் நேடியறி யாமல்
கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

வரிசையாகப் பரவிப் பெருகி வந்த அலைவீசும் கங்கை சுவறுமாறு ஒருசடைமேல் ஏற்று அந்நதித் தெய்வமாகிய கங்கையை மகிழ்வுடன் முடிமிசை வைத்து, திருமால் பிரமர் தேடி அறியாதவாறு எப்போதும் அவர்களால் அறியப்பெறாதவனாய் ஒளித்திருக்கும் சிவபிரான் எழுந்தருளியிருக்கும் ஊர் கருப்பறியலூர்.

குறிப்புரை :

நிரந்து - வரிசையாக. பரந்து - பரவி. சடைமேல் மிசை - சடையினது மேலிடத்தில். நிரந்தரம் - எப்போதும். நேடி - தேடி. கரந்தவன் - ஒளித்தவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றென விருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

மறைக்கவேண்டிய உறுப்பை மறையாது ஆடையின்றித் திரியும் சமணர்களும், அறிவற்ற புத்தர்களும் சொல்லும் திறன் அறியாதவர்கள். அவர்கள் சொல்லை விடுத்துக் குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயிலையே உறுதியானதாகக் கருதி எழுந்தருளிய ஊர் கருப்பறியலூர்.

குறிப்புரை :

அற்றம் மறையா அமணர் - மறைக்கவேண்டிய உறுப்புக்களை மறைக்காத சமணர். `அற்றம் மறைப்பதுமுன் பணியே` என்ற துணர்க. சொற்றம் - சொல்லும் சொற்கள். சொல் + து + அம். கொகுடி - ஒருவகை முல்லை. குற்றமறியாத பெருமான் - இத்தலத்துப் பெருமான் திருப்பெயர். கற்றென - நிலையாக. கல் + து - கற்று. கல்லைப்போன்று உறுதியானது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.

பொழிப்புரை :

நன்மைகளைத்தரும் நீர் வளம் மிக்க புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், தன்னோடு உடன் கலந்தவனாய கருப்பறியலில் மேவிய கடவுளைப்பாடிய பயன்தரும் தமிழ்ச் செய்யுளாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் கற்று வன்மை உற்றோர்க்கு வினைகள் வாடுதல் எளிதாம்.

குறிப்புரை :

கடவுள்ளை - கடவுளை (விரித்தல் விகாரம்). பலம் - பலன். வலந்தருதல் - உயிர்க்கு வன்மையை அளித்தல், திருக்கோயிலை வலம்வருதலுமாம். வினை வாடல் - கருப்பறிதல், `கலந்தவர்கருப்பறியல்` என்ற தொடர் இத்திருத்தலத்தின் பெயர்ப் பொருளைக் குறித்தது. பறியல்மேய - பறியலில் மேவிய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
உருத்திக ழெழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
விருப்புடைய வற்புதரி ருக்குமிட மேரார்
மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

அழகிய மலைமகளோடு மிக்க ஒளிவடிவினராய சிவபிரான் வெண்மை உருவுடைய அழகிய கயிலைமலையில் உறைவதற்கு விருப்புடைய மேன்மையர். அவர் இருக்குமிடம் மணம் கமழும் பொழில் சூழ்ந்ததும் வண்மையாளர் வாழ்வதுமாய திருவையாறாகும்.

குறிப்புரை :

திரு - அழகு. திகழ் - விளங்குகின்ற. மலைச்சிறுமி - இமாசலகுமாரியாகிய பார்வதி தேவியார். தேசர் - ஒளிவடிவினர். உரு - வெண்மையுருவம். எழில் - அழகு. வெற்பு - மலை. உயர்ச்சியிற் பிற எல்லாவற்றையும் வெல்லுங்காரணத்தாற் பெற்ற பெயர். ஏர் - அழகு. மரு - மணம். அற்புதர் இருக்குமிடம் திருவையாறு எனக்கூட்டுக. 7,8 பாக்களில் கூறியபடி. வண்மை - கொடையாளர்; ஈகையை உணர்த்தும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
இந்திரனு ணர்ந்துபணி யெந்தையிட மெங்கும்
சந்தமலி யுந்தருமி டைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

பற்றுக் கோடாக விளங்கும் சிவபிரானைப் பொருந்துமாறு புகை இல்லாத விளக்கொளி போன்ற அச்செம்பொற்சோதியை இந்திரன் உணர்ந்து வழிபடும் இடம் எங்கும் அழகு விளங்கும் மரம் நிறைந்த பொழிலைச் சார்ந்து வரும் குளிர்ந்த காற்று தங்கிக் கலந்துள்ளதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

கந்து - பற்றுக்கோடு. அமர - பொருந்த. உந்தல் - தூண்டல், செலுத்துதல். இல் - இல்லாத. விளக்கு ஏர் - விளக்கினது அழகை. பணி - பணிகின்ற. இந்திரனுணர்ந்தது செம்பொற்சோதியைப் போலும். இதன் முதலடியிற் குறித்த `விளக்கேர்` என்பதன் உண்மை புலப்பட்டிலது. திருவையாற்றுப்புராணம் :- பஞ்சநதிச் சருக்கம். பா .15, ல் உணர்த்தும் வரலாறு காண்க. சந்தம் - அழகு, சந்தனமுமாம். தரு - மரங்கள். வளி - காற்று. நந்து - நந்தவனம். அணவு - கிட்டும், பொருந்தும். எந்தையிடம் திருவையாறு எனக்கூட்டுக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்
கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

எட்டு வடங்களால் கட்டப்பட்ட வட்டமான முழவத்தை நந்திதேவர் தம் கரங்களால் கொட்ட, அம்முழவொலிக்கும தாளச்சதிக்கும் ஏற்ப அவர்க்குப் பெருவிருப்பம் உண்டாகுமாறு நடனமாடிய சிவபிரானது இடம், அழகிய வட்டமான மதில்களுள் விளங்குவதும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

முழவம் எட்டு வடத்தைக் கொண்டு கட்டப்பட்டது. வட்டமானது. நந்திதேவரால் கொட்டப்படுவது. கரம் - கை. இடம் - விருப்பம். நட்டம் அவை இட்டவர் - திருக்கூத்து வகைகளை ஆடியவர் (சிவபெருமான்) இட்டவர் இடம் திருவையாறு என்க. சீர் வட்டம் இரண்டும் மதிலைவிசேடித்தன, மதிலுள் திகழும் திருவையாறு. வண்மை - வளத்தைக் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
றெண்ணிலி மறைப்பொருள்வி ரித்தவ ரிடஞ்சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

கல்லால மரநிழலை அடைந்து சனகாதியர் நால்வருக்கு அக்காலத்தில் வேதப்பொருளை விரித்துரைத்த சிவபிரானது இடம்; குளிர்ந்த சந்தனம், அகில் ஆகிய மரங்களை அடித்து வருகின்ற பொன்னியாற்றின் கரையின்மேல் வந்து பொருந்தியதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

வடத்தின் நிழல் - கல்லாலமரத்தின் நிழல். நால்வர் - சனகாதியர். விரித்தவர் - விரித்துரைத்தவர்; (சின்முத்திரைக் குறிப்பால்) சீர் - சிறப்பு, கனமுமாம். தண்ணின் மலி - குளிர்ச்சியில் மிக்க. சந்துஅகில் - சந்தனமும் அகிலுமாகிய மரங்கள். பொன்னி - காவிரி, விரித்தவர் இடம் திருவையாறு என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
மன்றன்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

வெற்றிகள் பல பெற்ற தாருகன் உயிர் போகுமாறு சினந்து அவனை அழித்த கோபம்மிக்க காளிதேவியின் சினம் அடங்க அவளோடு நடனமாடிய சிவபிரானது இடம், பெரிய மலர்மணம் நிறையும் பொழில்களைக் கொண்டுள்ளதும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

வென்றி - வெற்றி. தாருகன் - ஓர் அசுரன். ஆருயிர் மடங்க - அரியவுயிர் மடிய. கன்றி - மனங்கன்றி. கதம் - கோபாவேசம். ஓவ - நீங்க. நடமாடி - பெயர்ச்சொல், நடராசப்பெருமான். மன்றல் - மணம். மேலால் பொலியும் பொழில் என்றும் நடமாடி இடம் திருவையாறு என்றும் கூட்டுக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

பூதங்களும் பேய்களும் பாட நடனமாடி அடிமுதல் முடிவரை பாம்புகளை அழகுடன் பூண்டு மகளிர் இடும் பலியைக் கொள்ளும் சிவபிரானது இடம், குருக்கத்திச் செடிகளின் மணம் கமழ்வதும் வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

பூதமொடு பேய்கள் பல பாட இறைவன் நடமாடினான். பை - படம். சர்ப்பாபரணத்தைப் பாதாதிகேசாந்தம் அழகுபெறக் கொண்டவன். கோதையர் - தாருகாவனத்து ரிஷிபத்தினிகள். பரன் - மேலானவன், மாதவி - குருக்கத்தி, பரன் இடம் திருவையாறு என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

துன்னுகுழன் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்
பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
என்னசதி யென்றுரைசெ யங்கணனி டஞ்சீர்
மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

செறிந்த கூந்தலையுடைய உமைமங்கை சினம் கொள்ளுமாறு பின்னும் ஒரு தவத்தைச் செய்ய, `உமையே! நீ சினம் கொள்ளக்காரணம் யாதென` வினவி, அவளை மணந்துறையும் கருணை நிரம்பிய கண்களை உடைய சிவபிரானது இடம், வள்ளன்மை நிரம்பிய கொடையாளர் வாழும் திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

துன்னு - நெருங்கிய. குழல் - கூந்தல். மங்கையுமை நங்கை - உமாதேவியார். சுளிவு எய்த - கோபம் அடைய. பின் ஒரு தவம் செய்து - பின்னரும் ஒரு தவத்தைச் செய்து. உழல் - உழலுதற்குக் காரணமான. பிஞ்ஞகன் - சடைமுடி உடையவன். அங்கே - தவஞ்செய்த இமயமலைச்சாரலில். என்ன சதி என்று உரைசெய் அங்கணன் - சதி என்ன காரணத்தால் நீ தவம் செய்கின்றாய் என்று வினாவியவன். சதி - பதிவிரதை. அங்கணன் - கருணைக்கண்ணன். சீர் மன்னு கொடையாளர் - சிறப்பு நிலை பெற்ற கொடையை ஆள்பவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இரக்கமில்கு ணத்தொடுல கெங்குநலி வெம்போர்
அரக்கன்முடி யத்தலை புயத்தொடும டங்கத்
துரக்கவிர லிற்சிறிது வைத்தவரி டஞ்சீர்
வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

இரக்கமற்ற குணத்தோடு உலகெங்கும் வாழ்வோரை நலிவு செய்யும் கொடிய போரைச் செய்துவந்த இராவணனின் தலைகள், தோள்கள் ஆகியன அழியுமாறு கால்விரலால் செற்ற சிவபிரானது இடம் புகழ் உண்டாகுமாறு பொருள் வழங்கும் கருணையாளர் வாழும் திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

இல் - இல்லாத. நலி - வருந்துகின்ற. அரக்கன் - இராவணன். முடியத்தலை புயத்தொடும் அடங்க - இருபது தோள்களொடும் பத்துத் தலைகளும் நெரிந்தழிய. துரக்க - செலுத்த. (அழுத்த என்றவாறு) சீரும் வரமும் கருணையும் ஆள்பவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பருத்துருவ தாகிவிண் அடைந்தவனொர் பன்றிப்
பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றும்
கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவனி டங்கார்
வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

பருந்து உருவமாய் விண்ணிற்சென்று தேடிய பிரமன், பெரிய பன்றி உருவமாய் நிலத்தை அகழ்ந்து சென்று அடிமுடி தேடிய திருமால் ஆகியோர் மனங்கட்கு எட்டாதவாறு ஓங்கி உயர்ந்து நின்ற சிவபிரானது இடம், வெம்மையைப் போக்கும் பொழில்கள் சூழ்ந்ததும் வள்ளன்மை உடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

பருத்து உரு அது - பருந்து உருவம். வலித்தல் விகாரம். விண்ணடைந்தவன் - பிரமதேவன். பெருத்த பன்றி உருவதாய் - பெரிய பன்றி வடிவமாய். பெயரெச்சத்து அகரம், தொக்கது. உலகிடந்தவன் - உலகங்களைப் பேர்த்தவன். திருமால், பிரமன் ஒரு கற்பத்தில் கழுகாகி முடிதேடினான் என்னும் உண்மை இதில் குறிக்கப்பட்டது. `பூவார் பொற்றவிசின் மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும், ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணாத், தேவாரும் திருவுருவன்`(தி .1, பதி .131, பா .9) என்று முன்னும் அருளியது உணர்க. `ஏனங்கழுகானவருன்னை முனென் கொல் வானந்தலமண்டியும் கண்டிலாவாறே` என்றது காண்க. (தி .2. பதி .37. பா .9) `புண்டரிகத்துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய், அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப், பண்டொருநாள், காணான் இழியக் கனக முடிகவித்துக் கோணாது நின்ற குறி போற்றி` (தி .11, நக்கீரர் போற்றித்திருக்கலி வெண்பா 4,5 கண்ணிகள்) கருத்து உரு ஒணாவகை - அவர்கள் கருத்தில் இறைவன் உருவம் (அடிமுடி) ஒன்றாவகை, ஒன்றாமை - ஒண்ணாமை மருஉ. கார்வருத்து வகை தீர்கொள் பொழில் - வானோங்கி வளர்தலால் ஆங்குச் செல்லும் முகிலைத் தடுத்து வருத்தும் வகையால், வெயிலால் காய்ந்த வெப்பத்தை மழையால் தீர்தலைக்கொள்ளும் சோலை. காரை வருவித்தலால் எனலுமாம். வருத்தல் (- வருவித்தல்) என்பது வழக்கிலும் உண்டு. நிமிர்ந்தவன் இடம் திருவையாறு எனக்கூட்டுக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

நல்லூழ் இல்லாத சமண் பாதகர்கள், புத்தராகிய, சாக்கியர்கள் என்று உடலைப் போர்த்தித் திரிவோரின் பார்வைக்கு அகப்படாத மெய்ப்பொருளாகிய சிவபிரானது இடம் உலகில் நீண்டு வளர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

பாக்கியம் - நல்வினை. இல் - இல்லாத. ஒன்றும் - சிறிதும். பதகர் - பாதகர். பொதிந்து - மறைந்து, மூடி. நோக்கு அரிய தத்துவன் - நோக்கிற்கு அரிய மெய்ப்பொருளானவன். படி - பூமி. நீடு - வளர்ந்த. மாக்கம் - விண். மாகம் மாக்கமென விரித்தல் விகாரம், தத்துவனிடம் திருவையாறு என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
பூசுரன் உரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மலன் அடிக்கே.

பொழிப்புரை :

மணம் நிறைந்த பொழில்களைக் கொண்டுள்ள வளமான திருவையாற்றுள் எழுந்தருளிய சிவபிரானை, அழகிய புகலி மன்னனும், உண்மை ஞானம் பெற்ற அந்தணனும் ஆகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர், சிவபிரான் திருவடிக்கண் மிக்க அன்புடையவராவர்.

குறிப்புரை :

வாசம் - மணம். புகலிமன்னவன் - காழிவேந்தன். மெய்ஞ்ஞானப் பூசுரன் - திருஞானசம்பந்தன். பூசுரர் - பூ தேவர். நேசம் - அன்பு. பத்தர் - பக்தர். நின்மலன் - அழுக்கில்லாதவன். மலரகிதன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி
மாடவல செஞ்சடையெ மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.

பொழிப்புரை :

இதழ்கள் நிறைந்த கொன்றைமலர், பாம்பு, திங்கள், வன்னிஇலை ஆகியவற்றை அணிந்த செஞ்சடையை உடைய சிவபிரானது இடம் கிளைகளோடு கூடிய ஞாழல், குரவு, சுரபுன்னை முதலிய மரங்களின் மணம் வீசும் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

ஏடு - இதழ். இந்து - பிறை. வன்னி - வன்னிப் பத்திரம். மாடு அவலசெஞ்சடை - பொன்னை ஒவ்வாதென்று அவலம் உறுத்தும் செஞ்சடை. கோடு - கொம்புகள். ஞாழல் - புலிநகக் கொன்றை, கோங்கெனலுமாம். குரவு - குராமரம். வாசம் - மணம், நள்ளாறே மைந்தனிடம் என்பர்; இவ்வாறே ஏனையவும் ஒட்டுக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

விண்ணியல் பிறைப்பிள வறைப்புனன் முடித்த
புண்ணிய னிருக்குமிட மென்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே.

பொழிப்புரை :

வானில் இயங்கும் பிறைமதியோடு கங்கையையும் முடியில் சூடிய புண்ணியனாகிய சிவபிரான் இருக்குமிடம், உலகில் ஆடிப்பாடி அடியவர்கள் மனம் பொருந்த வழிபாடு செய்யும் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

விண் இயல் பிறை பிளவு - வானூர் பிறைத்துண்டம். அறைப்புனல் - ஒலிநீர்கங்கை. புவி - பூமி. பண்ணிய - செய்த, பண்ணோடு கூடிய எனலுமாம். நண்ணிய - விரும்பிய. வழிபாடு - அருள்வழி உயிர்க்குப் படுதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்
துளங்கொள விருத்திய வொருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.

பொழிப்புரை :

விளங்கும் அணிகலன்களைப் பூண்டுள்ள மலை மங்கையை மேனியின் ஒருபாகமாக இருத்தியுள்ள ஒப்பற்றவனாகிய சிவபிரான் இருக்கும் இடம், நளன் வந்து தங்கி நாள்தோறும் தூபதீபங்களுடன் மலர்தூவி வழிபட்டுக் கலி நீங்கப்பெற்ற திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

இழை - ஆபரணம், முதல்நிலைத் தொழிலாகுபெயர். உளங்கொள - திருஉள்ளங்கொள்ள, விரும்ப. இருத்திய:- பிறவினை, ஒருத்தன் - தனிமுதல்வன், நளன் வழிபட்ட வரலாறு உணர்த்தப்பட்டது. பூசிக்கும் முறையும் கூறப்பட்டது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்
செக்கரவர் சேருமிட மென்பர்தட மூழ்கிப்
புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரு நண்ணி
நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.

பொழிப்புரை :

திருக்குளத்தில் மூழ்கி நாகலோகத்தவரும், வித்யாதரர்களும், தேவர்களும், திகம்பரராய சிவபெருமான் திருவைந்தெழுத்தை நினைந்து வழிபடும் திருநள்ளாறு, கொக்கிறகு அணிந்தவர். வளைந்த பிறைமதியைச் சூடியவர், கோபம் உடையவர், சிவந்த திருமேனியர் ஆகிய சிவபெருமான் சேரும் இடம், என்பர்.

குறிப்புரை :

கொக்கு - கொக்கிறகு. `கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய்` (தி. 6 பதி .3 9 பா. 2) அரவர் - பாம்பணிந்தவர். கூன் மதியர் - இளம் பிறைசூடி. கோபர் - கோபத்தை உடையவர். செக்கர் திருமேனியர் - செவ்வானம் போலும் வண்ணத்தை உடைய திருமேனியர். அந்தி வண்ணர். புக்கு - புகுந்து. அரவர் - நாகலோகத்தவர். விஞ்சையர் - வித்யாதரர். நக்கர் - நக்நர். திகம்பரர். நாமம் - திருப்பெயர், திருவைந்தெழுத்துமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
வஞ்சம தறுத்தருளு மற்றவனை வானோர்
அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
நஞ்சமுது செய்தவனி ருப்பிடநள் ளாறே.

பொழிப்புரை :

மனமே! இதுவே நீ உய்தற்குரிய நெறி எனத்தம் மனத்துக்கு அறிவுறுத்தி நினைந்தவர்களின் குற்றங்களைப் போக்கியருள்பவரும், தேவர்கள் கடலிடைத் தோன்றிய நஞ்சைக் கண்டு அஞ்சி, புறமுதுகிட்டு ஓடிவந்து, தன்னை வந்து கைதொழுத அளவில், அந்நஞ்சினை அமுதாக உண்டவரும் ஆகிய சிவபிரானது இருப்பிடம் திருநள்ளாறு.

குறிப்புரை :

நினைந்தார் - நினைந்தவரது, வஞ்சம் அது - வஞ்சத்தை, பொய்யை, பாற்கடலினின்றெழுந்த விஷத்தை அஞ்சிப்புறங்காட்டி ஓடிய வானவர் கைதொழ, அந்நஞ்சை அமுதாகக் கொண்டு அவர்களைக்காத்த சிவபெருமான்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
காலனுடன் மாளமு னுதைத்தவர னூராம்
கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயர் தம் திருவடிகளை வணங்கும் வேளையில் அவர் உயிரைக் கவர்தற்கு வந்த காலன் உடனே மாளுமாறு உதைத்தருளிய சிவபிரானது ஊர். மறையவர் அழகிய மலர்கள், நீர் நிரம்பிய குடங்கள் ஆகியவற்றை எடுத்து வந்து நால்வேத நெறி நின்று நீராட்டி அருச்சித்து வழிபடும் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

பாலன் - மார்க்கண்டேய முனிவர். பேண - விரும்பித் தொழ. காலன் உடல் - எமனுடைய தேகம். உடன்மாள - உடனே அழிய என்றுமாம். அரன் - சிவபெருமான். கோலமலர் - அழகிய பூக்கள். நீர்க்குடம் - அபிஷேக ஜலபாத்திரம். நாலின்வழி - நால்வேத நெறி. தொழில் - அருச்சனைத் தொழில்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

நீதியர் நெடுந்தகையர் நீண்மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
ஓதியர னாமமு முணர்த்திடுநள் ளாறே.

பொழிப்புரை :

நீதி வடிவினர். மேலான குணங்களை உடையவர். புகழ் விரிந்த கயிலைமலைக்கு உரியவர். உமையொரு கூறர். மேலானவர். அவரது இருப்பிடம் அந்தணர்கள் நாள்தோறும் வேள்வி செய்து வேதங்களை ஓதித் திருவைந்தெழுத்தின் சிறப்பை உணர்த்தி வரும் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

நீதியர் - நீதிவடிவாய் விளங்குபவர். நெடுந்தகையர் - பெருங்குணங்களுக்கு உறைவிடமானவர். நீள்மலையார் - நீண்ட திருக்கயிலை மலையை உடையவர். பாவை பாதியர் - அர்த்தநாரீசுரர். பராபரர் - மேலவர்க்கும் மேலவர், `பராபரன் என்பது தமது பேராக் கொண்டார்` (அப்பர் பதி .310 பா .11) பரமும் அபரமும் ஆயவர் எனலும் பொருந்தும். `பின்தானும் முன்தானும் ஆனான்` (தி.6 பதி.11 பா. 2) `முன்னவன்காண் பின்னவன்காண்` (தி.6. பதி. 48 பா ..8) `முன்பனை உலகுக் கெல்லாம்`(தி .4. பதி.74. பா. 2) `முன்னவன் உலகுக்கு` (தி.5 பதி.60 பா .8)`முன்பாகி நின்ற முதலே போற்றி` (தி . 4. பதி. 56 பா. 2) `முன் பின் முதல்வன்` (தி.4 பதி. 90 பா 3)`முன்னியா நின்ற முதல்வா போற்றி`(தி .6 பதி. 57 பா .5) `முன்னையார் ... பின்னையார்` (தி.5 பதி.16. பா .7) வேள்வி - யாகம். நாளும் - நாள்தோறும், காலைதோறும் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கடுத்துவ லரக்கன்மு னெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்துமிகு தோளும்
அடர்த்தவர் தமக்கிடம தென்பர்அளி பாட
நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.

பொழிப்புரை :

சினந்து வந்த கயிலைமலையை அடைந்து அதனை எடுத்தவனாகிய வலிய இராவணனின் முடியணிந்த தலைகள் பத்தையும், வலிமிகுந்த இருபது தோள்களையும் அடர்த்தவனாகிய சிவபிரானது இடம். வண்டுகள் இசைபாட மக்கள் நடைமுறையில் பயன்படுத்தும் மணப் பொருள்களின் மணம் நிறைந்த திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

வரை - மலை. அளி - வண்டு. கலவத்திரள்கள் - வாசனைக் கலப்புடைய பொருள்களின் கூட்டம். கலவத்திரள் - ஆண் மயில் கூட்டம் எனினும் ஆம். நடத்த - பெயரெச்சம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்
பயந்தவ னினைப்பரிய பண்பனிட மென்பர்
வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.

பொழிப்புரை :

உயர்ந்த உருவம் கொண்டு திரிந்த திருமால், உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரமன் ஆகியோர் நினைப்பதற்கும் அரிய பண்புகளை உடைய சிவபிரானது இடம் தேவர்கள் வியந்து போற்ற மலர்கள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்து விளங்குவதும் எல்லா இடங்களிலும் அறநெறியின் வடிவான வேதங்களின் ஒலி நிறைந்துள்ளதுமான திருநள்ளாறு என்பர்.

குறிப்புரை :

உயர்ந்தவன் - திருவிக்கிரமன், திருமால். பயந்தன் - பெற்றவன். பிரமன், அமரர் வியந்து மெச்ச. நயம் தருமம் - நயத்தையுடைய தருமம். தருமவேதம்:- `வேதத்தைவிட்ட அறமில்லை` (திருமந்திரம்) நயம் தரும் அவ்வேதவொலி எனலுமாம். ஆர் - நிறைந்த. நயந்தமரு என்றது பிழை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
பந்தனை யறுத்தருள நின்றபர மன்னூர்
மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
சந்தம்விர விப்பொழின் முழங்கியநள் ளாறே.

பொழிப்புரை :

மனம் மாறுபட்ட சமணர் தேரர்கள் செய்யும் தவம் என்னும் கட்டுப்பாடுகளை விலக்கி, தன்னை வழிபடும் அன்பர்க்கு அருள்புரிய நின்ற பரமனது ஊர், மந்த இசையொடு முழவம் முழங்கும் விழாக்களின் ஒலியும், வேதவொலியும் கலந்து நிறைந்து பொழிலில் முழங்கும் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

திருகல் - மாறுபாடு. வேதச்சந்தம் - வேதத்தை ஓதும் சந்தையொலி, பொழிலில் விரவி முழங்கிய நள்ளாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

ஆடலர வார்சடைய னாயிழைதன் னோடும்
நாடுமலி வெய்திட விருந்தவனள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே.

பொழிப்புரை :

ஆடுகின்ற அரவினை அணிந்த சடையினனாகிய சிவபிரான் உமையம்மையோடு உலகம் மகிழ்ச்சியால் நிறையுமாறு எழுந்தருளியுள்ள திருநள்ளாற்றை, மாடவீடுகள் நிறைந்த சீகாழியில் வாழும் ஞானசம்பந்தன் பாடிய செஞ்சொற்களாலியன்ற இப்பதிகப் பாடல்களைப் பாடி வழிபடுபவரைப் பழிகளும் நோய்களும் அடையா.

குறிப்புரை :

ஆர் - பொருந்திய. ஆய் இழை - உமாதேவியார் `போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்பாகம் ஆர்த்த ... அண்ணல்` என்றதை நினைப்பிக்கும் இடம் இது. காழிச்சிறப்புணர்த்திற்று. பந்தன் - திருப்பெயர்ச் சுருக்கம். பாடலுடையாரைப் பழிகளும் நோய்களும் அடையா என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தனெமை யாளுடைய வண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.

பொழிப்புரை :

இயல்பாகவே பாசங்களில் நீங்கியவன், மூவிலை வடிவானவேலை உடையவன், விரிந்த வேதங்களை அருளியவன், தலைவன். எம்மை ஆளாக உடைய முதல்வன். அவனது இடம் கரிய தழைகளை உடைய பெரிய பொழிலின் மணம் கமழ்வதும், பத்தர் சித்தர் பயில்வதுமான பழுவூர் என்பர்.

குறிப்புரை :

முத்தன் - இயல்பாகவே பாசம் இல்லாதவன். நல்மூவிலை வேலன் - அழகிய திரிசூலப்படையினன். விரிநூலன் - விரிந்து பெருகிய மறை (நூல்களை அருளிய) முதல்வன். அத்தன் - தலைவன். மை - மேகம். தழை - தழைக்கின்ற. (பொழில்). வாசம் - மணம். பத்தர் - பத்துடையர். பத்து - பற்று, அன்பு. பக்தி என்னும் வடசொற்றிரிபுமாம். சித்தர் - சித்துடையர். சித்தத்தார் என்பதுசித்தம் அடியாகத் தோன்றும் பெயர். பயில்கின்ற பழுவூர் என்றதால், நம் ஆசிரியர் காலத்து இருந்த அத்திருத்தலத்தின் சிறப்பு விளங்குகின்றது. பழுவூரே இடமென்பர் என்று பாடல்தோறும் இயைத்துக்கொள்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே.

பொழிப்புரை :

வெண்காந்தள் மலரும் கோங்கமலரும் சூடிய, முடி மேல் ஆடும் அரவினையும் அணிந்துள்ள, பெருமானின் இடம், பெண்கள் மாடங்களின் உச்சியில் ஏறிப்பாடும் ஒலி நிறைந்துள்ள பழுவூர் என்பர்.

குறிப்புரை :

கோடல் - வெண்காந்தள் மலர். கோங்கு - கோங்க மலர். மாடம் - உயரிய வீடு. சூளிகை - வீட்டின் உச்சி. மலிதல் இரண்டும் தலத்தின் செல்வச் சிறப்பைக் குறித்தன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
பாலென மிழற்றிநட மாடுபழு வூரே.

பொழிப்புரை :

பெரிய முப்புரங்களைத் தமது இல்லமாகக் கொண்ட அவுணர் வெந்தழியுமாறு கண் விழித்த கோலத்தைக் கொண்ட ஒப்பற்றவரும்,முப்புரி நூலணிந்தவருமான சிவபெருமானது இடம், வயல்களில் முளைத்த தாமரைமலர் போன்ற முகத்தினராய மகளிர் பால் போல இனிய சொற்களால் பாடல்பாடி நடம் புரியும் பழுவூர் என்பர்.

குறிப்புரை :

வாலிய - பெரிய. புரத்திலவர் - முப்புரத்தை இல்லமாக உடையவர். புரத்தில் அவர் எனலுமாம். அவர் - பண்டறிசுட்டு. வேவ விழிசெய்த - திரிபுரத்தைச் சிரித்தெரித்ததுமன்றி விழித் தெரித்ததும் ஒருகற்பத்தில் நிகழ்ந்தது என்பர். `அரணம் அனலாகவிழித்தவனே` (பதி .157 பா .1)`பார்த்ததுவும் அரணம்படர் எரிமூழ்கவே` (பதி. 212.பா .5) `கடை நவில் மும்மதிலும் எரி ஊட்டிய கண்ணுதலான்` (பதி .319. பா .3) `முதுமதிள் வெவ்வழல் கொளநனி முனிபவர்`(பதி .342. பா .4) `நெடுமதில் ஒருமூன்றும் கொலையிடைச் செந்தீ வெந்தறக்கண்ட குழகனார்`(பதி .376 பா .7) என்று பிறாண்டும் ஆசிரியர் அருளியவாறறிக. `மதில் மூன்றுடைய அறவைத் தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப் பறவைப்புரம்`(தி .4 பதி . 111. பா .7) என்னும் திரிபுரத்தின் இயல்பையுணர்க. போலிய - போன்ற; தடத்தமென்றபடி. வேலி - வயலிலுள்ள, விரை - மணம். கமலம் - தாமரை. அன்ன - போன்ற. பால் என - பால்போல இனியது என்ன. மிழற்றி - பாடி (க் கொண்டு) பாடி ஆடும் (வளமுடைய) பழுவூர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலிகொண்டுபயில் கின்ற பழுவூரே.

பொழிப்புரை :

எண், எழுத்து, இசை இவற்றை ஆராய்வார் கருதும் முதற்பொருளாய கடவுளின் இடம், மலையாள அந்தணர் உலகில் பாடியாடித் தொழுது ஏத்திப்பாடி வழிபடும் பழுவூர் என்பர்.

குறிப்புரை :

எண்ணும் எழுத்தும் இசையின் கிளவி (யும்) தேர்வார் கண்ணும் முதல் ஆய கடவுள் - எண்ணையும் எழுத்தையும் இசையொடுகூடிய இனிய கிளவியையும் ஆராய்வார் கருதும் முதற்பொருளாகிய கடவுள். `எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்` `எண்ணென்ப ஏனை எழுத்தென்ப` என்புழிப் போல ஈண்டும் இருபொருள் கொள்ளல் பொருந்தும். `எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாமொழியப் பண்ணின் இசைமொழிபாடியவானவர் தாம்பணிவார் திண்ணென் வினைகளைத்தீர்க்கும் பிரான்` (தி .4 ப .90 பா .6). மலையாளர் ஆடியும் தொழுதும் ஏத்தியும் பாடியும் பயில்கின்ற பழுவூர் என்றதால், அத்தலத்தில் `அந்தணர்களான மலையாளர்` வந்து செய்யுந்திருத்தொண்டு, ஆசிரியர் கண்கூடாக் கண்டவுண்மையாதல் விளங்கும். இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பிற் காண்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதனமை யாளுடைய நம்பனிட மென்பர்
வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
பாதமவை யோதநிகழ் கின்றபழு வூரே.

பொழிப்புரை :

இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் நடனமாடும் நாதனும் நம்மை ஆளாக உடைய நம்பனும் ஆகிய சிவபெருமானது இடம் மறையாளர் வேதங்களை ஓதி இறைவனின் திருவடிப் பெருமைகளைப் பாடும் பழுவூர் என்பர்.

குறிப்புரை :

`கோயில் சுடுகாடு` என்றது, திருவாசகம். மறையாளர் - (மலையாளத்து) வேதியர். `ஏத்த` பின்னோர் பாடம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே.

பொழிப்புரை :

தங்கள் மீது மேவுதலால் துயர் செய்வனவாகிய மும்மதில்களையும் வெந்தழலால் அழித்தும், யானையை அயருமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தும் வீரம் விளைவித்த சிவபிரானது இடம், நாகணவாய்ப் பறவைக்கு இறைவன் புகழைக் கற்பித்துப் பேசவைக்கும் பெண்கள் கற்பொடு விளங்கும் பழுவூர் என்பர்.

குறிப்புரை :

மேவு அயரும் - பொருந்துவதால் துயர் உறுத்தும், மேவ அயரும் எனலுமாம். தழல் - தீ. விளைத்து - தோற்றி. மா - யானை. உரிசெய் - உரித்தலைச் செய்த. மைந்தன் - வீரன். பூவை - நாகணவாய்ப் பறவை. `பொற்பில் நின்றன பொலிவு` அப்பொற்பு, கற்பால் நீடுநிற்கும். கற்பிலார்பொற்புக் கடிதில் அழிவது கண்கூடு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
அந்தணர்க ளாகுதியி லிட்டவகின் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே.

பொழிப்புரை :

இரகசிய ஆலோசனைகளுடன் மாமனாகிய தக்கன் செய்த வேள்வி அழியுமாறு செய்த சிவபெருமானது இடம், அந்தணர்கள்செய்த வேள்விகளால் அகிலின் மணம் கமழ்வதும் அணிகலன்கள் அணிந்த அழகிய பெண்களின் காலடிச் சுவடுகள் உடையதுமான பழுவூர் என்பர்.

குறிப்புரை :

மந்தணம் - இரகசியம். மாமடி - மாமன்; தக்கன். வேள்வி - யாகம். சிந்த - அழிய. விளையாடு - வீரபத்திராய்ச் சென்று போர்விளையாட்டைச் செய்த. யாகத்தைப் போராக்கொள்ளாது விளையாட்டாக் கொண்டழித்த என்றபடி. `சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு பரிதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்` (தி.3.ப .376.பா.5) என்று பின்னும், ஆசிரியர் அவ்விளையாட்டைக் குறித்தருளுமாறறிக. ஆர் - பொருந்துகின்ற (மாதர்). சுவடு - அடிச்சுவடு. அகில் தூபவர்க்கங்களுள் ஒன்று. மட்டு - தேன். ஆர் - ஆர்கின்ற, உண்ணுகின்ற. `கருப்பு மட்டு வாய்மடுத்து` திருவாசகம் (பதி .80 பா.5)

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
றரக்கனை யடர்த்தருளு மப்பனிட மென்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
பரக்குறு புனற்செய்விளை யாடுபழு வூரே.

பொழிப்புரை :

வலிய கடலிடை எழுந்த நஞ்சினை மிடற்றிடை வைத்துள்ளவனும், அக்காலத்தில் இராவணனை அடர்த்து அருள் செய்ததந்தையும் ஆகிய சிவபிரானது இடம், குரங்குகள் மணமுடைய பொழிலின் மீது ஏறிக்கனிவகைகளை உண்டு நீர் பரவிய வயல்களில் விளையாடும் பழுவூர் என்பர்.

குறிப்புரை :

உரம் - வலிமை. மிடற்றில் - கழுத்தில். குரங்கு இனம் - குரக்கினம். (வலித்தல் விகாரம்). விரை - மணம். பரக்கு - பரத்தல். புனல் செய் - நீர்வளமிக்க வயல். குரங்கினம் கனியுண்டு செய்யில் விளையாடும் ஊர் என்க. `புணர்ச்செய்` என்ற பழைய பாடத்திற்குக் கலவி பொருளாகும். புணர்தலைச் செய்யும் விளையாட்டு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரு மாதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.

பொழிப்புரை :

உயர்ந்து நின்ற திருமாலும் நான்முகனும் தேடுமாறு அன்று அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த தலைவனது இடம், சிவபரம் பொருளாகிய ஒருவனையும், நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் உணர்ந்தவர்கள் பொது இடங்களிலிருந்து மகிழ்ந்துறையும் ஊராகிய பழுவூர் என்பர்.

குறிப்புரை :

ஒன்றும் - தனிமுதலாகிய சிவபெருமானையும். இரு மூன்றும் - ஆறு அங்கங்களாய் வேதார்த்த சாதகமாயுள்ளவற்றையும். ஒருநாலும் - நாலு வேதங்களையும், உணர்வார்கள் - உணரும் அந்தணர். மன்று - அம்பலம், சபை, (பெரிய, திருநீலகண்ட) `அருமறையோடாறங்கம் ஆய்ந்துகொண்டு பாடினார் நால்வேதம்`(தி . 6 பதி.83 பா. 5) என்பதில் மறையும் வேதமும் வெவ்வேறு ஆதல் அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மொட்டையம ணாதர்துகின் மூடுவிரி தேரர்
முட்டைகண் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழையிள நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே.

பொழிப்புரை :

முண்டிதமான தலையை உடைய அமணர்களாகிய அறிவிலிகளும் ஆடையைவிரித்து உடலைப் போர்த்த தேரர்களும் ஆகிய குற்றமுடையோர் கூறுவனவற்றை ஏலாத இறைவனது இடம், மட்டைகள் நிறைந்த தென்னையினது இளநீர்களும் கமுகமரங்களின் பாக்குப் பட்டைகளோடு கூடிய பாக்குக் குலைகளும் நிறைந்த பழுவூர் என்பர்.

குறிப்புரை :

அமண் ஆதர் - சமணராகிய அறிவிலிகள். ஆதம் - அறிவின்மை. மொட்டை - தலைமயிர் பறித்தலால் ஆனது. முட்டைகள் - வழுவினர், குறைவினர், வறியர், பதர்கள் எனப் பல பொருளும் பொருந்தும். மொழிந்த - சொல்லியவை. முனிவான் - வெறுப்பவன். இளநீரது என்க. இசை - இசைந்த. பூகம் - பாக்குமரம். தாறு - குலை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.

பொழிப்புரை :

மலையாள அந்தணர்கள் ஏத்தும் அருளுறவு நிறைந்த பழுவூர் இறைவனை ஞானசம்பந்தன் மனம் ஆரச்சந்த இசையால் பாடிய இப்பாடல்களை விரும்பித்தமக்கு இயன்ற இசையோடு ஏத்தித் தொழுபவர் சிவலோகம் பெறுவர்.

குறிப்புரை :

முன் உள்ள பாக்கள் 4,5,7,9 காண்க. ஏத்தும் பந்தம் - வழிபட்டு நிற்கும் அருளுறவு. ஆர - நிறைய. ஞானம் உணர்பந்தன் என்று திருப்பெயர் பொருள் விளக்குமாறுணர்க. பேணி - விரும்பி. பதிகம் 165 முடிவிலும் இவ்வடி அமைந்தமை காண்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மே யவழகார்
குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

பூதகணங்கள் சூழ இரவில் சுடுகாட்டில் நின்று எரி ஆடுபவனும் , அரவணிந்த சடையினை உடைய அந்தணனும் ஆகிய சிவபிரானது குராமரப் பொழில் சூழ்ந்த குரங்காடுதுறையைப் பரவ வலிய வினைகள் கெட்டொழியும் .

குறிப்புரை :

குரங்காடுதுறை பரவ வல்வினை கெடும் என்றியைக்க . பாரிடம் - பூதகணம் . ஆடி - பெயர்ச்சொல் . அந்தணன் - ` அறவாழி யந்தணன் `. மேய - எழுந்தருளிய . ( மேவிய - விரும்பிய ) குரவம் - குராமரம் . பரவுதல் முன் நின்று துதித்தல் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

தன்னோடு பகை பூண்டவராகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த விமலனும், இண்டங்கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கும் மெல்லிய கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.

குறிப்புரை :

விண்டார் - பகைவர்; விமலன் - மலமில்லாதவன். இண்டு - புலிதொடக்கிக்கொடி. மென்குழல் மங்கை - இத்தலத்தின் அம்பிகையின் திருப்பெயராயிருக்கலாம். கொண்டான் - கொண்ட சிவபிரான். வினையாலணையும் பெயர். கொண்டானது நகர் போலுமென்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்
இறைவில் லெரியான் மழுவேந் திநின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்தும்
குறைவில் லவனூர் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

நிறைதல் இல்லாத சுடுகாட்டுள் நின்று அழிவற்ற எரியைக் கையில் உடையவனாய் மழு ஏந்தி உமையம்மையோடு ஆடுபவனும், வேத ஒலியால் தேவர், அசுரர் ஆகியோரால் தொழப்படும் குறைவற்றவனும் ஆகிய சிவபிரானது ஊர், குரங்காடுதுறை.

குறிப்புரை :

நிறைவு இல் புறங்காடு - `எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து மன்பதைக்கெல்லாம் தானாய்த் தன்புறங்காண்போர்க் காண்பறியாது`(புறம் -356) என்று கூறப்பட்ட புறங்காடு `இனிவரும் பிணத்திற்கு இங்கு இடமில்லை` என்று நிறைதல் என்றும் இல்லாதது. இறைவு - இறைதல் (அழிதல்). இல் - இல்லாத. எரியான் - தீயுடையவன். சிவபிரான் ஏந்திய தீக்கு என்றும் அழிவில்லை. ஆடி - பெயர்ச் சொல். தானவர் - அசுரர். குறைவு இல்லான் - குறைவிலா நிறைவினன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

விழிக்குந் நுதன்மே லொருவெண் பிறைசூடித்
தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

விழியை உடைய நெற்றியின்மேல் தலையின் முன் பாகத்தில் பிறைசூடி, ஒலிக்கும் சுடுகாட்டை அடைந்து எரியாடி, எல்லோரும் பழித்துரைக்கப் பலியேற்றுத்திரியும் சிவபிரானது ஊர் பொன் கொழிக்கும் காவிரி நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறையாகும்.

குறிப்புரை :

விழிக்கும் நுதல் மேல் - தீக்கண் திறக்கும் திருநுதலின் மேலிடத்தில் (சென்னியின் முற்பக்கத்தில் என்றபடி) `பிறை நுதல் வண்ணம் ஆகின்று` (புறம் - கடவுள்) சூடி, ஆடித்தேர்ந்தவன் ஊர் குரங்காடுதுறை என்க. தெழிக்கும் - ஒலிக்கும். பழிக்கும் பரிசே - பலியேற்கின்றானென்று பழிக்குந்தன்மையிலே. பொன் கொழிக்கும் புனல் - பொன்னியாகிய காவிரிநீர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நீறார் தருமே னியனெற் றியொர்கண்ணன்
ஏறார் கொடியெம் மிறையீண் டெரியாடி
ஆறார் சடையந் தணனா யிழையாளோர்
கூறா னகர்போல் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

நீறு பூசிய மேனியன். நெற்றிக்கண்ணன். விடைக் கொடியை உடைய எம் தலைவன் மிகுதியான தீயில் நின்று ஆடுபவன். கங்கை சூடிய சடையினை உடைய கருணையாளன். உமையொருபாகன். அவனது நகர் குரங்காடுதுறை.

குறிப்புரை :

நீறு ஆர்தரு மேனியன் - திருவெண்ணீற்றினை நிறையப் பூசிய திருமேனியன்; ஏறு ஆர் கொடி - (பா .9) விடைக் கொடி. (ஆர்தல் - பொருந்துதல்) ஈண்டு எரி - வினைத்தொகை; திரண்ட தீ. ஆறு - கங்கை. ஆயிழையாள் ஓர் கூறான் - மங்கை பங்கன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

நளிரும் மலர்க்கொன் றையுநா றுகரந்தைத்
துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி
மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்
குளிரும் புனல்சூழ் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

குளிர்ந்த கொன்றைமலர், மணம் வீசும் சிவகரந்தைத்தளிர் ஆகியவற்றைக் கலந்தணிந்து சுடுகாட்டில் எரியில் நின்றாடும் அழகனாய், விளங்கும் பாம்பை இடையில் கட்டியவன் ஆகிய சிவபிரான் மேவிய கோயிலைக் கொண்டது குளிர்ந்த நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறை.

குறிப்புரை :

நளிரும் - குளிரும். கரந்தைத்துளிர் - கரந்தை என்னும் மரத்தின் தளிர். சுலவி - சுற்றி. மிளிரும் - விளங்கும், கீழ் மேலாகும் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
முழவங் குழன்மொந் தைமுழங் கெரியாடும்
அழகன் னயின்மூ விலைவேல் வலனேந்தும்
குழகன் னகர்போல் குரங்காடு துறையே.

பொழிப்புரை :

பிறவிதோறும் பழகிய வினைகளைத் தீர்ப்பவன். பார்வதிதேவியோடு முழவு, குழல், மொந்தை ஒலிக்க இடுகாட்டுள் முழங்கும் தீயில் நின்று எரியாடும் அழகன். கூரிய மூவிலைவேலை வெற்றிக்கு அடையாளமாக ஏந்தும் இளையோன் ஆகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.

குறிப்புரை :

பழகும் வினை - பிறவிதொறும் உயிரை இடைவிடாது தொடர்ந்து பழகும் பழவினை. பார்ப்பதி - பார்வதிதேவியார். முழவம், குழல், மொந்தை என்னும் இசைக்கருவிகள் முழங்க எரியில் ஆடும் அழகன் என்க. முழங்கு எரி - வினைத் தொகையுமாம். அயில் - கூர்மை. மூவிலைவேல் - திரிசூலம். வலன் - வலக்கையில். குழகன் - இளைஞன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
நிரையார் விரலா னெரித்திட் டவனூராம்
கரையார்ந் திழிகா விரிக்கோ லக்கரைமேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.

பொழிப்புரை :

கயிலைமலையை ஆரவாரித்துப் பெயர்த்த இராவணனின் வலிமை கெடுமாறு காலிலமைந்த விரலால் நெரித்தவனாகிய சிவபிரானது ஊர், கரையைப் பொருந்தி ஓடிவரும் காவிரியாற்றின் அழகிய கரைமேல் ஒலி பொருந்திய பொழில் சூழ்ந்திலங்கும் குரங்காடு துறையாகும்.

குறிப்புரை :

ஒல்க - தளர, சுருங்க. கோலம் - அழகு. நெரித்திட்டவன் - நெரியச் செய்தவன். குரை - ஒலி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்
படியா கியபண் டங்கனின் றெரியாடி
செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியா னகர்போல் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

திருமால், பிரமர்கள் நினையவும் ஒண்ணாத இயல்பினன். பாண்டரங்கக் கூத்தை ஆடியவன். எரியில் நின்று ஆடுபவன். முடை நாற்றம் வீசும் தலையோட்டை ஏந்தியவன். சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெள்விடையைக் கொடியாக உடையவன். அவனது நகர் குரங்காடுதுறை.

குறிப்புரை :

படி - தன்மை, உருவம். பண்டங்கன் - பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடுபவன். `பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே` (தி.6 பதி.37 பா.63) செடியார்தலை - பிரமகபாலம். செங்கண் வெள்ளேற்றின் கொடியான் - சினக்குறிப்பை உணர்த்தும் சிவந்த கண்ணை உடைய வெள்ளை விடையை எழுதிய கொடியை உடையவன் (பா .5).

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

துவரா டையர்வே டமலாச் சமண்கையர்
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

துவராடை அணிந்த புத்தர்களும், வேடமல்லாத வேடம் பூண்ட சமணர்களாகிய கீழோரும் பேசும் ஐயஉரைகளை விரும்பாத சிவபிரானது ஊர், மலைகளிலிருந்து சிதைந்து வந்த மணிகள், பொன், அகில், சந்தனம் ஆகியவற்றை உந்திவந்து குவியலாகக்கரையில் சேர்க்கும் காவிரியின் கரையில் உள்ள குரங்காடுதுறையாம்.

குறிப்புரை :

கையர் - கீழ்மக்கள். கவர்வாய்மொழி - கவர்த்த (ஐயத்தை விளைக்கும்) வாய்ப்பேச்சு. நவை - சிதைவு என்னும் பொருட்டாய் நின்றது. குவை - குவியல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

நல்லார் பயில்காழி யுண்ஞான சம்பந்தன்
கொல்லே றுடையான் குரங்கா டுதுறைமேல்
சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே.

பொழிப்புரை :

நல்லவர்கள் வாழும் காழியுள் தோன்றிய ஞானசம்பந்தன் கொல்லேற்றை ஊர்தியாக உடைய சிவபிரான் எழுந்தருளிய குரங்காடுதுறைமேல் பாடிய தமிழ்மாலை பத்தையும் பாடித்தொழ வல்லவர், வானவரோடு உறைவர்.

குறிப்புரை :

நல்லார் - ஞானியர். `கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள்ளீசன்றன் கழல் மேல் நல்லோர் நற்றுணையாம் பெருந்தன்மை`(129-11). வானவர் - வீட்டுலகடைந்தோர். உறைவார் - வாழ்வார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங் கையொடும் முடனாகி
ஏராரி ரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காரார் கடனஞ் சமுதுண் டகருத்தே.
 

பொழிப்புரை :

சீர் பொருந்திய இறைவன் திருவடிகளையே பணியும் அடியவர்களே! கச்சணிந்த தனங்களைக் கொண்ட உமையம்மையோடும் உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் கரிய கடலில் எழுந்த நஞ்சினை அமுதாக உண்டதற்குக் காரணம் யாதோ? இதனைச் சொல்வீராக.

குறிப்புரை :

சீர் ஆர் கழலே - எல்லா உலகங்களையும் அளித்த சீர் நிறைந்த திருவருளையே. தொழுவீர் - தொழுகின்றவரே! கருத்தாகிய இது செப்பீர் என்க. மேலும் இவ்வாறே இயைத்துப் பொருள்கொள்க. ஏர் - அழகு. கார் - கருமை. மேகமுமாம். கடல் - பாற்கடல். நஞ்சு அமுது - நஞ்சமாகிய அமுதம், நஞ்சத்தை அமுதாக என்று ஆக்கச் சொல்வருவித்தும் முடிக்கலாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

தொழலார் கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
எழிலா ரிரும்பூ ளைஇடங் கொண்டவீசன்
கழல்தான் கரிகா னிடையா டுகருத்தே.
 

பொழிப்புரை :

வணங்குதற்குரிய திருவடிகளையே தொழும் தொண்டர்களே! வேய்ங்குழல் போன்ற இனிய மொழியையும் திரண்ட வளையல்களையும் உடைய அம்மையோடு உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தன் திருவடிகளால் கரிந்த சுடுகாட்டில் ஆடுதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

தொழல் ஆர்கழலே - தொழுதற்குப் பொருந்திய திருவடி. தலைவைத்தது திருவடியை வணங்கற்கேயாதலின், அத்தலை தாழ்த்துதல் முதலிய தொழலுக்குப் பொருந்தியதும் திருவடி அல்லாது வேறில்லை. தொழு தொண்டர்கள் - வினைத் தொகை. குழல் ஆர் - மொழி நமக்கு வேய்ங் குழலிசையின்பம் போல இறைவனது செவிக்கு இன்பஞ்செய்யும் மொழி. `குழல் வாய்மொழியம்மை` என்பது அம்பிகையின் திருப்பெயர்களுள் ஒன்று. கோல் - திரட்சி. வளை - வளையல். மொழியும் வளையும் உடையாள் என்க. எழில் - அழகு. கழல் - திருவடிக்கு ஆகு பெயர். தொண்டர்கள் (விளி) கருத்து சொல்லீர் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
மின்போன் மருங்குன் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.
 

பொழிப்புரை :

அன்பால் இறைவன் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர்களே! மின்னல் போன்ற இடையினை உடைய உமைமடவாளோடு கூடி மகிழ்வாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் பொன் போன்ற தன் சடைமீது கங்கையை வைத்துள்ளதன் கருத்து யாது? அறிவீர்களோ!

குறிப்புரை :

அன்பு - பத்தி. அடி - திருவடி. தொழுவீர் - விளி. அறியீரே - அறிவீர்களோ? அறிவீர் என்று முன்பின் உள்ளவாறுங் கொள்ளலாம். மின்போல் மருங்குல் - மின்னிடை. புனல் - கங்கைநீர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

நச்சித் தொழுவீர் கணமக் கிதுசொல்லீர்
கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி
இச்சித் திரும்பூ ளையிடங் கொண்டவீசன்
உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.
 

பொழிப்புரை :

சிவபிரானை விரும்பித்தொழும் அடியவர்களே! காஞ்சிமாநகரில் கோயில் கொண்டு விளங்கும் காமாட்சியாகிய வல்லிக்கொடியுடன் கூடி இச்சை கொண்டு இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தலையோட்டில் பலியேற்று உணவின் பொருட்டு உழலக் காரணம் யாதோ? நமக்குக் கூறுவீராக.

குறிப்புரை :

நச்சி - விரும்பி. தொழுவீர்கள் (விளி). கச்சி - காஞ்சிபுரம். திருக்கச்சி. பொலி - திருக்கோயில்கொண்டு விளங்குகின்ற. காமக்கொடி - காமாட்சி தேவியாராகிய வல்லி, இச்சித்து - விரும்பி, ஊண்பொருட்டுப் பலிகொண்டு உழல்வது ஏன் சொல்லீர் என்றபடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
நற்றாழ் குழனங் கையொடும் முடனாகி
எற்றே யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
புற்றா டரவோ டென்புபூண் டபொருளே.
 

பொழிப்புரை :

சூழ்ந்தும், நிறைந்தும், சிவபிரான் திருவடிகளையே தொழும் அன்பர்களே! அழகியதாய்த் தொங்குகின்ற கூந்தலை உடைய உமையம்மையோடும் உடனாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் புற்றில் வாழும் ஆடுகின்ற பாம்பையும் எலும்பையும் அணிகலனாகப் பூண்டுள்ளதன் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

சுற்று ஆர்ந்து - சூழ்ந்து நிறைந்து. அடியார் சுற்றம் நிறைந்து என்றுமாம். நல்தாழ்குழல் - அழகிய தொங்குகின்ற கூந்தலையுடைய. நங்கை - தேவியார்க்கெல்லாந்தலைவி. புற்று - ஆடு அரவு - புற்றிலுறைவதும் ஆடுவதும் ஆகிய பாம்பு என்றவாறு. முறையே இடமும் தொழிலும்பற்றிய அடைமொழிகள். என்பு - எலும்புமாலை. பொருள் - பயன். பொருள் என்றே சொல்லீர் என்று இயைத்துரைக்க. எற்றே - எத்தன்மையதோ? எல் (இகழ்ச்சி) தேய - தேய்ந்த, இல்லாத எனலும் ஆம். எல்து - ஒளியுடையது. ஏய் - பொருந்திய எனலும் அமையும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தோடார் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடாய் இரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காடார் கடுவே டுவனா னகருத்தே.
 

பொழிப்புரை :

இதழ் நிறைந்த மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும் செவ்விய அணிகலன்களையும் கொண்டுள்ள அம்மையோடும் உடனாய், பெருமையோடு இரும்பூளையில் உறையும் ஈசன் காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

தோடு - இதழ், தொகுதியுமாம். தூய் - தூவி. சேடு - திரட்சி. சேயிழை - செய்ய பூண்களையுடைய அம்பிகை. (அன் மொழித்தொகை) ஈடு - பெருமை, சமமுமாம். காடு ஆர் - காட்டில் பொருந்திய. வேடுவன் - (அருச்சுனனோடு போர்செய்த) வேடன். `ஏவார்சிலை எயினன் உருவாகி எழில்விசயற்கு ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவன்` (தி. 1 பதி. 12 பா. 6)

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

ஒருக்கும் மனத்தன் பருள்ளீ ரிதுசொல்லீர்
பருக்கை மதவே ழமுரித் துமையோடும்
இருக்கை இரும்பூ ளையிடங் கொண்டவீசன்
அரக்கன் னுரந்தீர்த் தருளாக் கியவாறே.
 

பொழிப்புரை :

ஒருமைப்பாடு கொண்ட மனத்தினராகிய அன்பர் கூட்டத்தைச் சார்ந்த அடியவர்களே! நீண்ட கையையும் மதத்தையும் உடைய யானையை உரித்து உமையம்மையோடு இரும்பூளையை இடமாகக் கொண்ட ஈசன் இராவணனின் வலிமையை அழித்துப் பின் அருள் செய்தது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

ஒருக்கும் மனத்து - இறைவன் திருவடியே, ஒன்றியிருந்து உணர்ந்து உணர்ந்து, மற்றெல்லாப் பற்றுக்களும் ஒருங்கச் செய்த மனத்தினையுடைய. அன்பர் உள்ளீர் - அன்பர் கூட்டத்தைச் சார்ந்தவரே! பருக்கை - பரியதாகிய துதிக்கையையுடைய. உமையோடும் இருக்கையை உடைய என்க. உரம் - வலிமை. அருள் - நாளும் வாளும் பிறவும் நல்கிய கருணை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

துயரா யினநீங் கித்தொழுந் தொண்டர்சொல்லீர்
கயலார் கருங்கண் ணியொடும் முடனாகி
இயல்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.
 

பொழிப்புரை :

துன்பம் நீங்கித் தொழும் தொண்டர்களே! கயல் போன்ற கரிய கண்ணினளாகிய அம்மையோடும் உடனாய் இயல்பான இடமாக இரும்பூளையைக் கொண்டுறையும் ஈசன் காணமுயன்ற திருமால், பிரமர்க்கு அரியனாய் எரியுருவில் நின்ற ஆற்றல் எத்தகையதோ? சொல்வீராக.

குறிப்புரை :

ஆயின - வினையாலணையும் பெயர். துயர் - பிறவி, மறதி முதலியவை. கயல் - மீன்விசேடம். `அங்கயற்கண்ணியார்` இருவர் - அரி அயன். மொய்ம்பு - வன்மை, ஆற்றல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண் டர்கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.
 

பொழிப்புரை :

திருவடிக்கு ஒப்புடைய மலர்களைத்தூவித் தொழும் தொண்டர்களே! பருத்த தனபாரங்களைக் கொண்டுள்ள பார்வதிதேவியோடு உடனாய் இணையற்ற தலமான இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன், அணைந்து வழிபடுதல் இல்லாத சமண பௌத்த மதங்களைப் படைத்தது ஏனோ? கூறுவீராக.

குறிப்புரை :

துணை - ஒப்பு. பணை - பருமை. இணை - ஈடு, ஒப்பு. அணைவு இல் - அணை(ந்து வழிபடு)தல் இல்லாத. சமண் சாக்கியம்- சமணரும் சாக்கியரும் (ஆகிய புறப்புறச் சமயம்) உம்மைத்தொகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

எந்தை யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
சந்தம் பயில்சண் பையுண்ஞா னசம்பந்தன்
செந்தண் டமிழ்செப் பியபத் திவைவல்லார்
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.
 

பொழிப்புரை :

எம் தந்தையும் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசனும் ஆகிய பெருமானை வேதங்களை உணர்ந்த சண்பைப் பதிக்குரிய ஞானசம்பந்தன் செவ்விய தண்டமிழால் செப்பிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் மலபந்தம் நீங்கி உயர்ந்த தன்மையைப் பெறுவர்.

குறிப்புரை :

சந்தம் பயில் - வேதம் ஓதாது ஓதியுணர்ந்த. சந்தக்கவி பாடிப்பயின்ற எனலும் ஆம். பந்தம் - (மும்மலக்) கட்டு. ஈசனது சண்பையை உள்குகின்ற ஞானசம்பந்தன். செப்பிய - பாடிய. பான்மை-தன்மை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.

பொழிப்புரை :

இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே! உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக் கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு நல்ல வண்ணம் விடை அருள்வாயாக.

குறிப்புரை :

சதுரம் மறை - நால்வேதம். (மகரவொற்று விரித்தல்) மதுரம் - தேனினிமை. இறை - விடை. மறை துதிசெய்து வணங்கும் காரணத்தால் மறைக்காடு என்றான உண்மையை உணர்த்தியருளியவாறறிக. பின்வருவன வினாக்களாதலின், அவற்றிற்குச் `செவ்வனிறையோ இறைபயத்தலோ செய்க` என்பார், `இறைவைத்தருள் செய்க` என்றருளினார். `எனக்கு அருள்செய்க` என்று இவ்வாறு வேண்டுவது ஆசிரியர் திருவாக்கில் வேறு எங்கும் காண்டல் அரிதாகும். இதற்குப் பிறர் உரைத்தது பொருந்துமோ?

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
மங்கை யுமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித் தகருத்தே.

பொழிப்புரை :

சங்குகளையும் முத்துக்களையும் அலைக்கரங்களால் கரையில் எறியும் மரக்கலங்களை உடைய கடல் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உமைமங்கை ஒருபாகமாக இருக்க நீ கங்கையைச் சடைமீது கொண்டுள்ள கருத்தின் காரணம் யாதோ?

குறிப்புரை :

சங்கம் - சங்குகள். தரளம் - முத்துக்கள். எற்றும் -(அலைகள்) எறியும். வங்கம் - மரக்கலம். உமையோடு கூடியிருந்தும் கங்கையைச் சடைமேல் அடையச் செய்ததன் கருத்தை வினாவியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

குரவங் குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக் காட் டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித் தலழகே.

பொழிப்புரை :

குரா, குருக்கத்தி, புன்னை, புலிநகக்கொன்றை ஆகியன மருவிய பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! தலைமாலையும் மலர்மாலையும் திகழும் உன் செஞ்சடைமேல் தம்முள்பகை உடைய பாம்பையும் மதியையும் உடன் வைத்துள்ளதற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

குரவம் - குராமரம். குருக்கத்தி - மாதவி. ஞாழல் - புலிநகக்கொன்றை, கோங்குமாம். சிரம் - தலை, தலைமாலை. `தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந்தலைவன்` இது பாம்பைப் பிறையொடு சூடிய அழகை வினாவியது. வினாச்சொல்லை வருவித்துரைக்க. திங்களை விழுங்கும் பகைமை கருதி `அழகு` என்று குறித்தருளினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

படர்செம் பவளத் தொடுபன் மலர்முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங் கமதாகியு மென்கொல்
கடனஞ் சமுதா வதுவுண் டகருத்தே.

பொழிப்புரை :

படர்ந்த செம்பவளக் கொடிகள், பல்வகையான மலர்கள், முத்துக்கள், மடல்கள் அவிழ்ந்த மலர்ப் பொழில்கள் ஆகியன சூழ்ந்து விளங்கும் மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உன் திருமேனியில் ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டவனாயிருந்தும் கடலில் எழுந்த நஞ்சினை அமுதம்போல உண்டதன் கருத்து யாதோ?

குறிப்புரை :

மடல் - மரத்தில் உள்ள மடல்கள். பூவிதழுமாம். பங்க மது - பாகத்தையுடையது. பாற்கடலினின்று எழுந்த நஞ்சினை உண்ட கருத்தை வினாவியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத் தவிருந் தநீயென்கொல்
கானார் கடுவே டுவனா னகருத்தே.

பொழிப்புரை :

தேவர்கள், வேதங்களை உணர்ந்த பெரிய தவத்தினர் ஆகியோர் வழிபட்ட தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருமறைக் காட்டில் உறையும் செல்வனே! தன்னையல்லாத ஏனையோர் அனைவராலும் தொழுது போற்றப்பெறும் பெருமையோடு இருந்த நீ காட்டுள் வாழும் வேடுவனாய் உருக்கொண்ட காரணம் யாதோ?

குறிப்புரை :

வானோர் - தேவர்கள். மறை மா தவத்தோர் - வேதியரும் பெருந்தவத்தருமாகிய பெரியோர். ஏனோர் - தானல்லாத பிறர். தன்னையேதான் பூசித்தவுண்மையும் அறிக. கான் - காடு. ஆர் - பொருந்துகின்ற. கடு வேடுவன் - கொடிய வேடன்.(தி .2 ப .3 பா.1)`குழலியொடு வேடுவனாய் .... விசயன் போரில் மிகு பொறையளந்து பாசுபதம் அளித்த` கருத்தை வினாவியது. (தி .1 ப .131 பா .2)

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பலகா லங்கள்வே தங்கள்பா தங்கள்போற்றி
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.

பொழிப்புரை :

பலகாலங்கள் வேதங்கள் பாதங்களைப் போற்றி மலரால் வழிபாடு செய்யும் மறைக்காட்டுள் எழுந்தருளி விளங்கும் இறைவனே! ஏழுலகங்களையும் தன் உடைமையாகக் கொண்டுள்ள வனே! நீ பலர் வீடுகளுக்கும் சென்று தலையோட்டில் பலியேற்று அதில் உண்டருளியதற்குக் காரணம் யாதோ! சொல்வாயாக.

குறிப்புரை :

இத்தலத்தில் நான்கு வேதங்களும் பலகாலம் பூசித்த உண்மையை முதல் இரண்டடியிலும் உணர்த்தியருளினார். உலகு ஏழ் உடையாய் - ஏழுலகுக்கும் சுவாமியே. ஜகதீசா! முன் கடைதோறும் தலைசேர் பலிகொண்டு அதில் உண்டதுதான் ஏன்? என்று இறைவன் பலியேற்ற வரலாற்றின் கருத்தை வினாவியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வேலா வலயத் தயலே மிளிர்வெய்தும்
சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
மாலோ டயனிந் திரனஞ் சமுனென்கொல்
காலார் சிலைக்கா மனைக்காய்ந் தகருத்தே.

பொழிப்புரை :

விளங்கும் சேல்மீன்களைக் கொண்டுள்ள கடலின் அயலே உள்ள திருமாமறைக்காட்டில் உறையும் செல்வனே! முற்காலத்தில் திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் அஞ்சுமாறு காலில் வைத்து மிதித்துக் கணை பூட்டும் வில்லை ஏந்திய காமனை எரித்ததன் கருத்து யாதோ?

குறிப்புரை :

வேலாவலயத்து அயல் - கடலின் பக்கத்தில். மிளிர்வு - விளங்குதல். சேல் - மீன். முன் மாலும் அயனும் இந்திரனும் அஞ்சும்படி மன்மதனை எரித்ததன் கருத்து என்னை என்று வினாவியது. கால் ஆர் சிலை - வலக்காலால் மிதித்தல் பொருந்திய வில். `அறனிலாதான் வெஞ்சினக்கோலின் நோன்றாள் மிதித்து மெய்குழைய வாங்கிச் செஞ்சிலை நெடுநாண்பூட்டித் திருவிரல் தெறித்துத்தாக்கி` (திருவிளையாடல் - கூடற் - யானை எய்த. 29) சிலை எனப்படும் மரத்தாற் செய்யப்படுதலின், `சிலை` (கலி . 15-1. உரை) எனப்பட்டது. `சிலைவிற்கானவன்` (குறுந் .385)

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கலங்கொள் கடலோ தமுலாவு கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையா னடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன் றியருள் செய்தவாறே.

பொழிப்புரை :

மரக்கலங்களைக் கொண்டுள்ள கடலின் ஓதம் உலாவுகின்ற கரைமீது வலம்வருபவர் வாழ்த்தி இசைத்துப் போற்றுமாறு விளங்கும் மறைக்காட்டில் விளங்கும் பெருமானே! இலங்கை மன்னன் இராவணன் அடர்க்கப்பட்டு இடர் எய்துமாறு அசையும் உன் திருவடி விரலால் ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்த காரணம் யாதோ?

குறிப்புரை :

கலம் - மரக்கலம். ஓதம் - நீர். கரைமேல் வலங்கொள்பவர் - திருமறைக்காட்டில் வலம்வரும் முறைமை ஏனைய சிவதலங்களில் வலம் வருதலினும் விசேடம் உடையது. திருக்கோயில் வலம்மட்டும் பிறதலங்களில் நிகழும். இங்குத் திருமறைக்காட்டையே வலம் வருதல் வேண்டும். இதனை ஆளுடைய அரசரும் `மண்ணினார் வலம்செய் மறைக்காடார்` என்று குறித்தருளியது உணர்க. உடையான் - இராவணன். அடர் - முதல் நிலைத் தொழிற்பெயர். அலங்கல் - அசைதல். அன்பர்கள் திருவடிக்கண் சார்த்திய மாலையுமாம். `ஆர் மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில், தாள் தளையிடு மின்` (திருவாசகம் திருவண்டப்பகுதி. 142-143) இராவணன் கயிலையை எடுத்தபோது அடர்த்து அருள்செய்ததன் கருத்தை வினாவியது. வினாச் சொல் வருவித்துரைக்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

கோனென் றுபல்கோ டியுருத் திரர்போற்றும்
தேனம் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனங் கழுகா னவருன் னைமுனென்கொல்
வானந் தலமண் டியுங்கண் டிலாவாறே.

பொழிப்புரை :

பலகோடி உருத்திரர்கள் தலைவன் என்று போற்றும், தேன் பொருந்திய அழகிய பொழில்கள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் செல்வனே! பன்றியும் கழுகும் ஆன திருமால், பிரமர் உன்னை முற்காலத்தே நிலத்தை அகழ்ந்து சென்றும், வானத்தில் பறந்து சென்றும் கண்டிலர். அதற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

பல்கோடி உருத்திரர்கோன் என்று போற்றும் செல்வா என்று இயைக்க. `நீலத்தார் கரியமிடற்றார் நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார் பற்று, சூலத்தார் சுடலைப்பொடி நீறணிவார் சடையார், சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம்` (தி .3 பதி .1 பா .3) எனத்தில்லையிற்கண்ட உருத்திரகண தரிசனத்தை உணர்த்தியவாறறிக. ஏனம் - பன்றி. கழுகானவர் - பிரமனார்.(தி .2 ,168. பா .9) வானத்தில் கழுகும் தலத்தில் ஏனமும் என இயைக்க, எதிர்நிரல்நிறை. அரியும் அயனும் அடிமுடி தேடியதன் கருத்தை வினாவியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

வேதம் பலவோ மம்வியந் தடிபோற்ற
ஓதம் முலவும் மறைக்காட் டிலுறைவாய்
ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.

பொழிப்புரை :

வேதங்கள் பலவும் வேள்விகள் செய்து வியந்து உன் திருவடிகளைப் போற்ற, கடல்நீர் உலவும் மறைக்காட்டில் உறைகின்ற பெருமானே! வைதிக நெறியினர்க்கு அயலவராகிய சமணர் சாக்கியர்களாகிய அறிவற்றவர்கள் உரைகளால் உம்மை அலர் தூற்றுதற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

ஓமம் - யாகம். மறைக்காடு என்றதன் பெயர்க்காரணம் ஈண்டும் விளக்கியருளினார். ஓதம் - கடல். ஏதில் - அயல். `ஏதிலார் குற்றம்` `ஏதிலார் ஆர`(திருக்குறள்) ஈண்டுச் சமயத்தால் அயலவராயினார். ஆதர் - அறிவின்மையுடையவர். அலர் - பழிச்சொல். அவைதிக மதத்தினர் அழியாத வைதிக சைவ சமயத்தைப் பழித்துரைத்ததன் கருத்தை வினாவியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர் தொழவா னடைவாரே.

பொழிப்புரை :

காழி நகரில் தோன்றிய கலைகளில் வல்ல ஞானசம்பந்தன் வாழ்த்துதற்குரிய மறைக்காட்டில் உறையும் ஈசனைத் தரிசிக்கும் பேறு வாய்த்து அறிவித்த ஏழிசை பொருந்திய இப்பதிகப் பாமாலையை ஓதி வழிபட வல்லவர், வாழும் இவ்வுலகோர்தொழ வான்அடைவர்.

குறிப்புரை :

காழிந்நகரான் - விரித்தல் விகாரம். கலை - சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாக்கலை ஞானம். ஞானம் - பவமதனை அறமாற்றும் பாங்கினிலோங்கிய ஞானமாகிய உணர்வரிய மெய்ஞ்ஞானம். சம்பந்தன் - அவ்விரண்டு ஞானங்களின் சம்பந்தத்தை உடையவன். வாழி - வாழ்ச்சியை உடைய. வாய்ந்து:- திறக்கப்படாத கதவு திறக்கப்பெற்றுத் தரிசிக்க வாய்ந்து என்றவாறு. அறிவித்த இது நன்கு இறைவைத்தருள் செய்க (பா .1) என்று பல வினாக்களை அறிவித்த. இம்மாலை வல்லார் உலகோர்தொழ வான்அடைவார் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே.

பொழிப்புரை :

நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள்புரியும் சிவபிரான் உறையும் கோயில், மதயானைகளின் தந்தங்களையும், மயிலினது வளமான பீலிகளையும் வாரித்தவழ்ந்துவரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும் இடத்தே அமைந்துள்ளதிருச்சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

நித்தலும் - நாள்தோறும். நியமம் - தின நியமம் ஆகக் கொண்டொழுகும் வழிபாடுகள் (ஆன்மார்த்தம்). கடன்களுமாம். நீர் மலர் தூவல் - புறப்பூசை. சித்த மொன்றல் - அகப்பூசை, தியானம் முதலியன. பீலி - மயிற்பீலி. சாகரம் - கடல். சிவன்கோயில் - சாய்க்காடே என்க. மேலும் இவ்வாறே கொள்க. காவிரி நீர் நாட்டு வளத்திற்கே பெரிதும் பயன்பட்டுக் கடலில் சேர்வது மிகச் சிறிதேயாதலின், பாயும் என்னாது `மேவும்` என்றார். (விடையின் மேல் வருவார் அமுதுசெய அஞ்சாதே விடம் அளித்ததெனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே கடல் வயிறு நிறையாத காவிரி) என்றருளினார் சேக்கிழார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.

பொழிப்புரை :

பண்ணிசையோடு பூதங்கள் பாட நின்று ஆடுகின்றவனும் வெண்மையான தலையோடுகளை உடைய கரிய காட்டில் உறைபவனும் ஆகிய வேதியன் கோயில், மேகங்களைப் போலப் பேரிகைகள் முழங்கச் சோலைகளில் பெரிய மயில்கள் குலாவிஆடும் திருச்சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

பண் - பண்ணிசை, தலைக்கொண்டு - மேற்கொண்டு பண்பாட ஆடும் வேதியன் என்க. காட்டின் கருமையும் அங்குள்ள தலைகளின் வெண்மையும் முரண்டொடை அமைய நின்றன. கொண்டல் - (குணக்கிலிருந்து வீசுங்காற்றால் உந்தப்பட்ட) மேகம். ஏனை முத்திசைக்காற்றும் முறையே தென்றல் கோடை வாடை எனப்படும். பேரி - பேரிகை. தண் தலைதடம் - குளிர்ந்த இடப்பரப்பையுடைய சோலை (க்குக் காரண) ப் பெயர். தட - வளைவு எனலுமாம். `தட வென்கிளவி கோட்டமும் செய்யும்`. (தொல். உரி)

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
டாறு சூடு மமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலைத்
தாறு தண்கத லிப்புதன் மேவுசாய்க் காடே.

பொழிப்புரை :

மணம்வீசும் வில்வம், மிக இளையபிறை ஆகியவற்றோடு கங்கையையும் முடியில் சூடும் அமரர்தலைவனாகிய சிவபிரான் உறையும் கோயில், சுவை ஊறுகின்ற தெங்கின் காய் மாங்கனி ஆகியன ஒங்கிய சோலைகளும், குளிர்ந்த பழத்தாறுகளை உடைய வாழைப்புதர்களும் பொருந்திய சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

நாறு - மணம் வீசும். கூவிளம் - வில்வம். நாகு இள மதியம் - மிக்க இளையதாகிய பிறை. அமரர் பிரான் - தேவர்கட்குப் பிரியத்தைச் செய்பவன். ஊறு - (சுவை) ஊறுகின்ற. தேங்கனி - `தெங்கங்காய்`, `தெங்கம் பழம்` என்பவைபோல் இதுவும் அரியதொரு பிரயோகம். தாறு - குலை. கதலி - வாழை விசேடம். புதல் - புதர். திருச்சாய்க்காட்டின் இயற்கைவளம் உணர்த்தப்பட்டது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

வரங்கள் வண்புகழ் மன்னிய வெந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட வெய்தவன் கோயில்
இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்
தரங்க நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.

பொழிப்புரை :

வரங்கள் பலவும் தரும் வளமையான புகழ் பொருந்திய எந்தையும், பகைவரின் முப்புரங்கள் பொடியாகுமாறு கணைஎய்து அழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில், நெய்தல் நிலத்துக்குரிய இரங்கல் ஓசையைக் கொண்டதும் வணிகர்கள் சேர்த்த சரக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதும் ஆகிய கடலினது நீண்ட கழியின் குளிர்ந்த கரையில் அமைந்த திருச்சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

வரங்களை அருளும் வண்மையால் எய்தும் புகழ் அழியாமல் நிலைபெற்ற என் அப்பன். மருவார் - பகைவர். இரங்கல் ஒசை - நெய்தற்றிணையுரிப்பொருளை நினைவூட்டுவது. சரக்கொடும் என்னும் பாடமே சிறந்தது. ஈட்டிய - (பொருள் தேடிச்) சேர்த்த (சரக்கு). ஈண்டி - கூடி, நெருங்கி. தரங்கம் - அலைகள். நீள்தண் கழிக்கரை என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று
கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
தாழை வெண்மடற் கொய்துகொண் டாடுசாய்க் காடே.

பொழிப்புரை :

மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் இடும் பலிக்காகக் கூழையான ஒளிபொருந்திய பாம்பை ஆடச் செய்து மகிழ்விக்கும் பரமன் உறையும் கோயில், பொன் போன்ற ஒண்கண்ணையும், வளையணிந்த கையையும உடைய நுளைச்சியர் வளமையான தாழை மரத்தில் பூத்துள்ள மலரின் வெண்மடல்களைக் கொய்து மகிழும் திருச்சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

ஏழைமார் - மகளிர். `ஏழைபங்காளனையே பாடேலோ ரெம்பாவாய்` என்னுந் திருவாசகத்திற்கு வறியர் பங்கை ஆள்பவன் என்று பொருள் கூறுதல் மாபாதகம். கடை - கடைவாயில். கூழை - கடை குறைந்தது. (தோற்றம்) மாழை - பொன். மேலும் இவ்வாறு நெய் தற்றிணைக் கருப்பொருள் சில கூறல் அறிக. கண்ணையும் கையையும் உடைய நுளைச்சியர் கொய்து கொண்டாடும் சாய்க்காடு எம்மான் உறையும் கோயில் என்க. பாம்பின் உருவத்தைத் தலை முதலாக நோக்கின், கடை குறைந்திருத்தல் ஆகிய கூழைமை புலப்படும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
அங்கொர் நீழ லளித்தவெம் மானுறை கோயில்
வங்க மங்கொளி ரிப்பியு முத்து மணியுஞ்
சங்கும் வாரித் தடங்கட லுந்துசாய்க் காடே.

பொழிப்புரை :

உயர்வுடைய தேவர்கள், உலகைச் சூழ்ந்துள்ள கடலைத்தாங்கள் கடையும் பொழுது எழுந்த நஞ்சினை உண்டு அவர்கட்கு அருள் நிழல் தந்த எம்தலைவன் உறையும் கோயில், பெரிதான கடல், மரக்கலங்களையும், அதன்கண் ஒளிர்கின்ற இப்பி, முத்து, மணி, சங்கு ஆகியவற்றையும் வாரி வந்து சேர்க்கும் திருச்சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

துங்கம் - உயர்ச்சி. கடல் தாம் கடை (யும்) போதில் என்க. பொழுது - போழ்து - போது என மருவிற்று. நீழல் - நஞ்சின் வெப்பம் தணித்தற்கு அளித்த அருணிழல். வங்கம் - மரக்கலம். இப்பி - சிப்பி, கடல் வங்கத்தையும் அங்கு ஒளிர்கின்ற இப்பியையும் முத்தினையும் மணியினையும் சங்கினையும் வாரி உந்தும் என்க. அங்கு வங்கம் வாரி உந்து மெனல் பொருந்தாது. ஒளிர்தல் முத்து முதலியவற்றிற்கும் உரியது. `சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி, வங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும் மறைக்காடே` (சுந்தரர் - 721)

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்ட ருகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்
தாது கண்டு பொழின்மறைந் தூடுசாய்க் காடே.

பொழிப்புரை :

வேதங்களை அருளிய நாவினர். வெண்மையான பளிங்கால் இயன்ற குழையணிந்த காதினர். கடலிடை எழுந்த நஞ்சினை நிறுத்திய கண்டத்தை உடையவர். அத்தகைய சிவபிரானார் எழுந்தருளிய கோயில், பெண் வண்டு தன்மீது காதல் உடைய ஆண் வண்டோடு புன்னைமலர்த்தாதில் ஆடி மகிழ்ந்து பின் பொழிலிடை மறைந்து ஊடும் சாய்க்காடாகும்.

குறிப்புரை :

சிவபிரான் வேதத்தை முதன் முதலாகச் சொல்லியருளிய திருநாவுடையார். பளிங்காலான குழை அணிந்த திருச்செவியார். ஓதம் நஞ்சு - பாற்கடலில் எழுந்தவிடம். அணி கண்டர் - அழகு செய்யும் திருநீலகண்டர். அணிந்த எனலுமாம். உகந்து - உயர்ந்து, விரும்பி. மாதர் - அழகு, இச்சையுமாம். மாதர் வண்டு - பெண், காதல் வண்டு - ஆண். ஆடுதலும் ஊடுதலும் உணர்த்தப்பட்டமை அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக்கு லாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக்கு லாவிய தண்பொழி னீடுசாய்க் காடே.

பொழிப்புரை :

தான்வீற்றிருக்கும் நீண்ட கயிலைமலையைப் பற்றிப் பெயர்த்து எடுத்த இராவணனின் உடலை நெரித்துப் பின் அருள்செய்த சிவபிரானது கோயில், மணம் பொருந்திய மல்லிகை, சண்பகம் ஆகிய வளமான பூக்களைக்கொண்ட மரங்கள் விளங்கும் தண்பொழில்களை உடைய சாய்க்காடாகும்.

குறிப்புரை :

இருக்கும் நீள்வரை - வீற்றிருக்கும் உயர்ந்த கயிலை மலையை. ஆகம் - உடம்பு. மரு - மணம். தரு - மரம். நீடுதல் - ஒங்கிப் பரந்து அழியாமை குறித்தது. இருக்கும் வரையை எடுத்த அரக்கன், தூண் துரும்பாகும் இழிநிலையை எய்தி, அஞ்சி இறைவனை இன்புறுத்த இன்னிசைபாடி மகிழ்வித்து, நாளும் பெற்றான் வாளும் பெற்றான் என்பது குறித்தே, `நெரித்து` என்பதை அடுத்து `அருள் செய்தவன்` என்றருளினார் ஆசிரியர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
சேலி னேர்விழி யார்மயி லாலச் செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.

பொழிப்புரை :

திருமால் பிரமர்களால் காணுதற்கு அரியவனும் பொருந்திய கடலிடை எழுந்த விடத்தை உண்டவனும், ஆகிய சிவபெருமான் உறையும் கோயில், சேல்மீன் போன்றகண்களைக் கொண்ட மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் ஆடுவதும் செருந்திமரங்கள் செம்பொன் போலக் காலையில் மலர்ந்து மணம் பரப்புவதுமான சாய்க்காடு ஆகும்.

குறிப்புரை :

வேலை - கடல். நேர் - ஒத்த. செருந்தி - கனகம் (பொன்) போலப் பூப்பது. ஆறு சாமத்திலும் பூக்கும் வெவ்வேறு இனங்களுள் காலையிற் பூப்பது செருந்தி, `நாண்மலர்` (நாள் - காலை) என்னும் தொல் வழக்குணர்க. `அல்லி` அல்லிற்பூப்பது பற்றிய காரணப்பெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
ஆத்த மாக வறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.

பொழிப்புரை :

அழுக்கேறிய வாயினை உடைய சமணர்களாகிய கீழ் மக்களுக்கும் சாக்கியர்களுக்கும் எக்காலத்தும் அன்புடையனாதலின்றி அறிதற்கும் அரிதாயிருப்பவனது கோயில், ஏற்புடைய மாளிகைகள் சூழ்ந்த புகார் நகரின் அருகே பூத்துள்ள மலர் வாவிகள் சூழ்ந்து பொலியும் சாய்க்காடாகும்.

குறிப்புரை :

ஆத்தம் - ஆப்தம், உண்மை. அறிவு அரிது ஆயவன் - அறிவதற்கு அரிய உண்மைப் பொருளாயுள்ளவன். புகார்க்கு அருகில் சாய்க்காடு இருத்தல் கூறப்பட்டதறிக. புகார்க்கு மாளிகையும் காட்டுக்கு வாவிகளும் விசேடம். புகாஆறு என்றதன் மரூஉவே புகார் என்பது. இதன் முதற்பாட்டில் `பொன்னி சாகரம் மேவு` என்றதற்கு எழுதிய குறிப்பைக்காண்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

ஏனை யோர்புகழ்ந் தேத்திய வெந்தைசாய்க் காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோனவில் பத்தும்
ஊன மின்றி யுரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடினி தாள்வரிம் மானிலத் தோரே.

பொழிப்புரை :

சமண பௌத்தர்கள் அன்றி ஏனையோர்புகழ்ந்து ஏத்தும் எம்தந்தையாகிய இறைவர் விளங்கும் சாய்க்காட்டை, காழியர் கோனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் குற்றமற்றவகையில் உரைசெய்து வழிபட வல்ல இம் மாநிலத்தோர் வான நாடு சென்று இனிதாக அரசாளுவர்.

குறிப்புரை :

ஏனையோர் - உபமன்யு முனிவர், இயற்பகை நாயனார், ஆதிசேடன் முதலியோர் (தி. 4 பதி.56 .பா.5). ஊனம் - சொற் குற்றம், பொருட்குற்றம், அநாசாரம், அன்பின்மை முதலியவை பாராயணத்துக்கு ஊனங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

ஆரூர்தில்லை யம்பலம் வல்லந்நல்லம் வடகச்சியு மச்சிறு பாக்கநல்ல
கூரூர்குட வாயில் குடந்தைவெண்ணி கடல்சூழ்கழிப் பாலைதென் கோடிபீடார்
நீரூர்வய னின்றியூர் குன்றியூருங் குருகாவையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர்நன் னீள்வய னெய்த்தானமும் பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே.

பொழிப்புரை :

பிறைசூடிய பெருமானின் பெருந்தலங்களாய ஆரூர்தில்லையம்பலம் முதலானதலங்களின் பெயர்களைப் பலகாலும் சொல்லிக்கொண்டிரு. உனக்குப் பெரும்பயன் விளையும்.

குறிப்புரை :

பீடு - பெருமை. நீர் ஊர் வயல் - நீர் பரவிய கழனி. பிதற்றாய் - இத்தலங்களின் திருநாமங்களை மீண்டும் மீண்டும் பிதற்றிக் கொண்டிருப்பாய். பிதற்றுதலாலேயே பெரும்பயன் எய்துவாய் என்ற படி. பிறைசூடி - சந்திரசேகரன். பேரிடம் - பெருந்தலங்கள். குடந்தை, குடந்தைக்கீழ்க்கோட்டம், குடமூக்கு, குடந்தைக் காரோணம் நான்கும் இப்போது கும்பகோணம் என்னும் நகரில் உள்ள வெவ்வேறு சிவத்தலங்கள். இதில் குடவாயில் குடந்தை என்றும், பா .9- இல் குடமூக்கென்றும் வெவ்வேறு கூறப்படுதல் காண்க. இப்பதிகத்துள் அடங்கிய வைப்புத்தலங்கள் தனியாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

அண்ணாமலை யீங்கோயு மத்திமுத்தா றகலாமுது குன்றங் கொடுங்குன்றமுங்
கண்ணார்கழுக் குன்றங் கயிலை கோணம் பயில்கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே
எண்ணாயிர வும்பகலு மிடும்பைக்கட னீந்தலாங் காரணமே.

பொழிப்புரை :

அண்ணாமலை ஈங்கோய்மலை முதலான தலங்களை விரும்பி இரவும் பகலும் எண்ணின் துன்பக்கடலை நீந்தற்குக் காரணமாய் அமையும்.

குறிப்புரை :

முத்தாறு - விருத்தாசலத்தின் அருகே ஓடும் ஆற்றின் பெயர். வாட்போக்கி - ரத்நகிரி. வாள் - ஒளி. போக்கி - போகச் செய்வது. ஒளிவீசும் அரதனகிரி என்க. ஈற்றடி கிடைத்திலது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

அட்டானமென் றோதிய நாலிரண்டு மழகன்னுறை காவனைத் துந்துறைகள்
எட்டாந்திரு மூர்த்தியின் காடொன்பதுங் குளமூன்றுங் களமஞ்சும் பாடிநான்கும்
மட்டார்குழ லாண்மலை மங்கைபங்கன் மதிக்கும்மிட மாகிய பாழிமூன்றும்
சிட்டானவன் பாசூரென் றேவிரும்பா யரும்பாவங்க ளாயின தேய்ந்தறவே.

பொழிப்புரை :

இறைவனின் எட்டு வீரட்டங்களையும் அழகனாகிய அப்பெருமானுறையும் காடு, துறை, நாடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அரிய பாவங்கள் தேய்ந்தொழிதற் பொருட்டு விரும்புவாயாக.

குறிப்புரை :

அட்டானம் என்று ஓதிய நாலிரண்டும் - எட்டு வீரட்டங்களும். அட்டானம் - அஷ்டஸ்தாநம் என்பதன் திரிபு. கா, துறை, காடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அவற்றுள் கா அல்லாதவற்றின் தொகையையும் குறித்தமை காண்க. சிட்டன் - சிஷ்டன். காடொன்பது - திருமறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு, கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு, வேற்காடு, கோட்டுக்காடு, நிறைக்காடு, மிறைக்காடு, இறைக்காடு என்பவும் உள. (சுந்தரர் ஊர்த்தொகை. 3) குளமூன்றும் களம் அஞ்சும் - திருக்குளம், இடைக்குளம், பாற்குளம், வளைகுளம், கடிக்குளம், தஞ்சைத் தளிக்குளம் என்பவற்றுள் எம்மூன்றோ? `வளைகுளமும் தளிக்குளமும் நல்லிடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம் விள்ளாத நெடுங்களம் வேட்களம்` (அப்பர். அடைவு திருத்தாண்டகம்). வேறு இரண்டு களம் யாவையோ? பாடி நான்கு - எதிர் கொள்பாடி, மழபாடி, பிற எவையோ? வலிதாயம் (பாடி) சேரின் மூன்றாம். பாழி மூன்று - திருவரதைப் பெரும்பாழி, களப்பாழி பிறிதொன்று யாதோ?

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

அறப்பள்ளி யகத்தியான் பள்ளிவெள்ளைப் பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான் விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால்
உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே.

பொழிப்புரை :

நெஞ்சமே! கோயில் எனப்பொருள் தரும் பள்ளி என முடிவன வாய கொல்லி அறைப்பள்ளி அகத்தியான் பள்ளி முதலான தலங்களை உன்னி உணர்வாயாக, உனக்குப் பயன்பலவிளையும்.

குறிப்புரை :

பிறப்பில்லவன் - `பிஞ்ஞகா பிறப்பிலி` பிறப்பிற்குக் காரணமாகிய பேதைமை இயல்பாகவே இல்லாதவன். உறைப்பு - திருவருள் உறைப்பு, அன்பின் அழுத்தம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

* * * * * * *
ஆறைவட மாகற லம்பரையா றணியார்பெரு வேளுர் விளமர்தெங்கூர்
சேறைதுலை புகலூ ரகலா திவைகாதலித் தானவன் சேர்பதியே

பொழிப்புரை :

சிவபிரான் காதலித்து உறையும் பதிகள் பழை யாறை மாகறல் முதலான தலங்களாகும் . அவற்றைச் சென்று தொழு வீர்களாக .

குறிப்புரை :

மாகறல் , அம்பர் , ஐயாறு , அணி - அழகு . துலைபுகலூர் - என்ற குறிப்பால் , பெயர்க்காரணம் ஒருவாறு ஊகிக்கப்படுகின்றது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரு மதிகூர் திருக்கூடலி லாலவாயும்
இனவஞ்சொ லிலாவிடை மாமருது மிரும்பைப்பதி மாகாளம் வெற்றியூரும்
கனமஞ்சின மால்விடை யான்விரும்புங் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென்சொலிற் றஞ்சமென் றேநினைமின் றவமாமல மாயின தானறுமே.

பொழிப்புரை :

வஞ்சமனத்தவர் போயகல மதிகூர் மாதர்கள் வாழும் ஆலவாய் இடைமருது முதலான தலங்கள் நமக்குப் புகலிடமாவன எனநினைமின். அதுவே தவமாகும். மும்மலங்களும் அற்று ஒழியும்.

குறிப்புரை :

மனவஞ்சர் - வஞ்சமனத்தர். மற்றோட என்பது இங்குப் பொருந்துமாறு புலப்பட்டிலது. திருக்கூடலில் ஆலவாய் - திருக்கூடலில் உள்ள ஆலவாயென்னும் திருக்கோயில். இனவஞ்சொல் இலா - வன்சொல் இனம் இல்லாத. கனம் அம்சினம் மால்விடை - மேன்மையும் அழகும் கோபமும் உடைய திருமாலாகிய விடை. தஞ்சம் - அடைக்கலம். (தண் + து + அம்). தவமாம் - தவமாகும். மலம் ஆயினதான் அறுமே - மும்மலமும் தானே அற்றொழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

மாட்டூர்மடப் பாச்சி லாச்சிராம மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர்கடம் பூர்படம் பக்கங்கொட்டுங் கடலொற்றியூர் மற்றுறை யூரவையும்
கோட்டூர்திரு வாமாத்தூர் கோழம்பமுங் கொடுங்கோ வலூர்திருக் குணவாயில்
********

பொழிப்புரை :

மாட்டூர் பாச்சில் ஆச்சிராமம் முதலியன இறைவன் உறையும் சிறந்த தலங்கள்.

குறிப்புரை :

மற்று உறையூர். இப்பாடலின் முழுப்பகுதி கிடைத்திலது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

* * குலாவுதிங்கட்சடையான் குளிரும் பரிதிநியமம்
போற்றூரடி யார்வழி பாடொழியாத்தென் புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்றூர்வரை யன்றெடுத் தான்முடிதோ ணெரித்தானுறை கோயிலென்றென் றுநீகருதே.

பொழிப்புரை :

திருப்பரிதிநியமம், திருப்புறம்பயம் முதலான தலங்கள் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியவற்றை நெரித்த சிவபிரான் உறையும் கோயில்கள் என நீ கருதுக.

குறிப்புரை :

என்று - என்றும் நீ கருது என்க. இதன் முழுப் பகுதியும் கிடைத்திலது. `பருத்தி நியமத்துறைவாய்`(சுந்தரர். ஊர்த்தொகை . 8.) என்று வேறொன்றுமுண்டு. அதனை வைப்புத் தலத்தில் அடக்கினர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நெற்குன்றமோத் தூர்நிறை நீர்மருக னெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரந் நாகேச்சுர நளிர்சோலையுஞ் சேனைமா காளம்வாய்மூர்
கற்குன்றமொன் றேந்தி மழைதடுத்த கடல்வண்ணனு மாமல ரோனுங்காணாச்
சொற்கென்றுந் தொலைவிலா தானுறையுங் குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.

பொழிப்புரை :

நெற்குன்றம், ஓத்தூர் முதலியதலங்களை எண்ணி மகிழ்வாயாக.

குறிப்புரை :

குறும்பலா - திருக்குற்றாலத் தலவிருட்சம். கற்குன்றம் - கோவர்த்தனகிரி. காணாச்சொற்கு - காணாதபுகழ்க்கு. தொலைவு - அழிவு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

குத்தங்குடி வேதி குடிபுனல்சூழ் குருந்தங்குடி தேவன் குடிமருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியு மலம்புஞ்சலந் தன்சடை வைத்துகந்த
நித்தன்னிம லனுமை யோடுங்கூட நெடுங்கால முறைவிட மென்று சொல்லாப்
புத்தர்புறங் கூறிய புன்சமணர் நெடும்பொய் களைவிட்டு நினைந்துய்மினே.

பொழிப்புரை :

குத்தங்குடி, வேதிகுடி முதலான குடிஎன முடியும் தலங்கள் சிவபிரான் உமையம்மையாருடன் கூடி நெடுங்காலம் வீற்றிருப்பன என்று எண்ணி வழிபடாப் பௌத்தர் சமணர்கூறும் பொய்மொழிகளை விட்டு அத்தலங்களை நினைந்துய்மின்.

குறிப்புரை :

அலம்பும் சலம் - அலையாய்ப் பெருகுங்கங்கைநீர். சொல்லா - புகழ்ந்து போற்றாத.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

அம்மானை யருந்தவ மாகிநின்ற வமரர்பெரு மான்பதியான வுன்னிக்
கொய்ம்மாமலர்ச் சோலை குலாவுகொச்சைக் கிறைவன் சிவஞானசம் பந்தன் சொன்ன
இம்மாலையீ ரைந்து மிருநிலத்தி லிரவும்பக லுந்நினைந் தேத்திநின்று
விம்மாவெரு வாவிரும்பும் மடியார் விதியார் பிரியார் சிவன்சேவடிக்கே.

பொழிப்புரை :

தலைவனும் அரிய தவவடிவாக விளங்கும் தேவர் முதல்வனும் ஆகிய சிவபெருமான் உறையும் திருத்தலங்களை நினைந்து கொய்யத் தக்கனவான நறுமண மலர்களைக் கொண்டுள்ள சோலைகள் செறிந்த கொச்சையம் பதிக்குத் தலைவனாகிய சிவஞான சம்பந்தன் பாடிய இப்பதிகப்பாமாலையை நிலவுலகில் இரவும் பகலும் நினைந்து விம்மியும் அஞ்சியும் விரும்பிப் போற்றும் அடியவர், நிறைந்த நல்லூழ் உடையவராவர். மறுமையில் சிவன் சேவடிகளைப் பிரியாதவராவர்.

குறிப்புரை :

பதியான - தலமானவற்றை. விம்மா - விம்மி. வெருவா - வெருவி. விதியார் - செல்வமுடையவர். சேவடிக்குப் பிரியார்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

எம்பிரா னெனக்கமுதம் ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரா னாவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.

பொழிப்புரை :

எமக்குத் தலைவன், எனக்கு அமுதம் போல இனிப்பவன், தன்னை அடைபவர்களுக்குத் தம்பிரான், தழல்ஏந்திய கையான், அசையும் இயல்புடைய பெரிய யானையை உரித்துப் போர்த்த கபாலி, இத்தகையோன் மணம் உலாவும் பொழில் சூழ்ந்த பிரமபுரத்தில் உறையும் வானவனேயாவான்.

குறிப்புரை :

எம்பிரான் ஆவானும், தன்னை அடைந்தவர் தம்பிரான் ஆவானும், தழல் ஏந்திய கையானும், காபாலியும், கறைக்கண்டனும் வானவனே என்று முடிக்க. தம் - ஆன்மாக்கட்கு. பிரான் - இனியன். பிரியமானவன் என்றும் ஆன்மாக்கள் அநேகமாதலின் `தம்` என்றும், ஆண்டவன் ஏகனாதலின் தன் என்றும் குறித்தனர் முன்னோர். தன்னானந்தக் கொடி - `சிவகாமவல்லி` என்புழிக்காண்க. கம்பம் - அசைவு. கட்டுந்தூண். கரி - கரத்தையுடையது. யானை. காபாலி - பிரமகபாலத்தை ஏந்தியவன். கறை - நஞ்சு. வம்பு - மணம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

தாமென்றும் மனந்தளராத் தகுதியரா யுலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.

பொழிப்புரை :

உலகில் வாழ்வோர்க்கு அடைக்கலம் தருபவன் இவனேயாம் என்று எக்காலத்தும் மனம் தளராத தன்மையராய்த் தன்னைச் சரண் அடைந்தவர்களைக் காக்கும் கருணையாளன்யாவன் எனில் ஓம் எனக்கூறி நான் மறைகளைப் பயிலும் அந்தணர் வாழும் பிரமபுரத்தில் விளங்குகின்ற காமனின் உடலை எரியச்செய்த கண்ணுதலோனே யாவான்.

குறிப்புரை :

உலகத்துக்கு அடைக்கலம் சருவேசுவரன் ஒருவனே ஆவான் என்று, என்றும் மனம்தளராத தகுதியை உடையவராகி, அச்சிவபிரானையே சரணம் அடைந்தவர்களைக் காக்கும் கிருபாகரன். ஓம் என்று - ஓம் என்று பிரணவமந்திரத்தை ஓதி. உறைகின்ற கண்ணான்; எரியச் சேர்ந்த கண் என்க. மன்மத தகனம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் றிருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை யெப்போதும்
பன்னஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.

பொழிப்புரை :

நல்ல நெஞ்சே! உன்னை இரந்து வேண்டுகின்றேன். நீ கடைத்தேற நினைவாயானால் நமது தலைவனாகிய சிவபிரான் திருவடிகளையே எக்காலத்தும் சிந்தித்திரு. வாயே! அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே! அவன் நம்மேல் பரிவு கொண்டு அருள்செய்ய அவனையே பார்.

குறிப்புரை :

நல்ல நெஞ்சமே! நீ உய்தி வேண்டுவாயானால் உன்னை இரந்தேன். இரந்தது என்ன என்றால், நம்பெருமான் திருவடிகளையே சதாகாலமும் நினைவுசெய்திரு. அன்னம் ஆசிரியர் காலத்திலிருந்தமை புலப்பட்டது. வாயதுவே - வாயே! எப்போதும் ஆரமுதைப்பன். அம்சீர்பன் - அழகிய கீர்த்தியைப் பன்னுக. கண்ணே! பரிந்திடப்பார். பரிந்திட - சிவபிரான் இரங்கி அருள்செய்ய. பார் - கேசாதிபாதம் + பாதாதிகேசம் தரிசித்துக்குளிர்வாய்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
நாநாளு நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.

பொழிப்புரை :

மனமே! சாகும் நாள் இன்றி, இனிது வாழவும் மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கவும் வல்லனாய தலைவனின் திருவடிகளிலேயே நாள்தோறும் நல்ல மலர்களை எவ்வளவிலேனும் தூவிவருவாயாக. நாவே, தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த பிரமபுரத்துறையும் தீவண்ணனை நல்ல நியமத்துடன் இருந்து அவன் புகழை நவின்று ஏத்துவாயாக.

குறிப்புரை :

சாம்நாள் இன்றி, இகரத்தைச்சுட்டாக்குதல் பொருந்தாது. சங்கை - சாகும் நாள் உண்டோ இன்றோ என்னும் சந்தேகம். தவிர்ப்பிக்கும் - தவிரப்போக்கும். கோன் - தலைவன் (சிவபிரான்) மேல் `திருவடியே` என்றும் இங்கு, `திருவடிக்கே` என்றும் அருளியதை உணர்ந்து, மறந்து மற்றொன்றை எண்ணாமைவேண்டும். தீவணன் - அழல் வண்ணத்தவன். நா - நாவே! நல்ல நியமம் செய்து அவன் சீரை நவின்று ஏத்து. நல்நியமம் - தோத்திரம் புரிதற்கு முன் செய்யற்பாலன ஆகிய பூஜாங்கங்களைத் தவறாமல் செய்யும் நியமம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமா முருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை யியல்பாக வறிந்தோமே.

பொழிப்புரை :

நுதல் விழியனும், வெண்ணீறு அணிந்தவனும் மணம் கமழும் சடையினனும், விடையேறி வருபவனும், இனிய பெண்ணொடு கூடிய உருவத்தினனும், பிஞ்ஞகனும், பேர்பல உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய விண்ணோரால் கருதப்படுமாறு தோன்றியபுகழ் உடைய பிரமபுரத்தைத் தொழவிரும்பும் நாம் இயல்பாக அறிந்துள்ள புண்ணியம் பெற்றுள்ளோம்.

குறிப்புரை :

கண்நுதலான் - நுதலிற்கண்ணை உடையவன், கண்ணையுடைய நுதலினன். நுதலும் (கருதும்) இடமாதலின், `நுதல்` எனப்பட்டது; கண்ணுதல் என்றதும் அதுபற்றியே. செந்தீயான் (கண்ணுதலான்) என்று கருதின் வெண்ணீற்றான் முரண்டொடையாம். ஏறி - பெயர்ச்சொல். இதம் - நன்மை. பிஞ்ஞகன் - தலைக் கோலத்தன். பேர்பல - `பேராயிரம் (பரவிவானோர் ஏத்தும் பெம்மான்`) விண் - விண்ணோர்க்கு இடவாகுபெயர். நுதலா - கருதுதலாக. எண்ணுதலாம் செல்வத்தை - தியானிக்கும் ஐசுவரியத்தை. இயல்பாக - உள்ளவாறு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமா னெருதேறிக்
கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் றன்மைகளே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலர்ச்சோலை சூழ்ந்து தண்ணிதாக விளங்கும் பிரமபுரத்துள் சங்குபோன்ற வெண்ணிற மேனியனாய் விளங்கும் சங்கரன்தன் தன்மைகள், தன் அடியவர் அவ்விடத்து எப்பிறப்பை எய்தினாலும் எம்பெருமானாகிய அவ்விறைவன் எருதேறிச்சென்று அவற்றுக்கு ஏற்ற வகையில் அங்கங்கே தோன்றி இங்கே என அருள் புரியும் செயல்களாகும்.

குறிப்புரை :

எங்கு யாது பிறந்திடினும் என்பதும், எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் என்பதும் பொருள் வேறுபாடுடையன. இடமும் பிறப்பும் வேறுபட்டாலும் அடியார்க்கு ஆண்டவனருள் கிடைப்பது திண்ணம். `எங்கேனும் இருந்து, எங்கே போவேனாயிடினும்,` `எங்கேனும் போகினும்` என்னுந் தொடக்கத்துத் திருப்பாட்டுக்களை (திருமுறை 7) அறிக. `இங்கே` என்றது பிறந்த இடத்தையும் அப்பிறவியையும் குறித்து நின்றது. கொங்கு - மணம். ஏயும் - பொருந்தும். பவளம்போலும் மேனியிற்பால் வெண்ணீறு சண்ணித்த திருமேனிக்குச் சங்கு ஒப்பு. எம்பெருமான் சங்கரன்றன் தன்மைகள் இங்கே என்று அருள்புரியும் என்றியைக்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை யடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.

பொழிப்புரை :

மேருமலையைக் கொடிய வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்து அழித்தவனும், மூவிலை வடிவாகக் கூரிய முனையோடு அமைந்த வேல் ஏந்திய நீண்ட கையினனும், உமையொரு பாகனும் ஆகிய கடல் சூழ்ந்திலங்கும் பிரமபுரத்துள் அரிய மணி போல்வானாய் விளங்கும் சிவபிரான் திருவடிகளை வணங்கினால் வானோர்க்குயர்ந்த உலகில் வீடுபேறாகிய பெருஞ்செல்வம் எய்தலாம்.

குறிப்புரை :

சிலை அது - மேருமலையானது. (அது; பகுதிப் பொருள் விகுதி) சிலை - வில் (பதிகம் 173: பா 7. குறிப்புணர்க) திரிபுரம் - வினைத்தொகை. `திரிதருபுரம் எரிசெய்த சேவகன்` (தி. 3. ப. 23 பா 9.) `திரியும் மூவெயில்` (தி .4 ப .20 பா .7. தி .5 ப .25 பா .4) `திரியும் மும்மதில்` (தி .5 பதி .36 பா .10) `திரியும் முப்புரம்` (சுந்தரர் பா. 626,685, 809) இலை - உவமை. நிலையுடைய பெருஞ்செல்வம் - சிவாநந்தாநுபவம். நீடுலகு - வானோர்க்குயர்ந்த உலகம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமன மெப்போதும் பெறுவார்தாந் தக்காரே.

பொழிப்புரை :

எரிபோலும் தலைமயிரை உடைய, வாள் ஏந்திய அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, அவன் தோளையும் தாளையும் நெரித்தருளிய சிவமூர்த்தியும், நீறணிந்த மேனியனும், யானையை உரித்து அதன் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது பிரமபுரத்தை எண்ணுவார் எப்போதும் தக்கார் என்னும் பெயரைப் பெறுவர்.

குறிப்புரை :

சிவமூர்த்தி - சிவமாகிய மூர்த்தி. தக்கார் - பெருந்தகையுடையார். மாணடிசேர்தல் தக்காரிலக்கணம் எனப்பட்டது. கற்றதனாலாய பயன் அதுவே. பார்க்க: பா. 10. `தோளொடு தாள்` என்புழித்தோளொடு தாளையும் தாளொடு தோளையும் சேர்த்து நெரித்து என்று கொள்ளலாகாது. தோளையும் தாளையும் நெரித்து எனல் வேண்டும். `சிவமூர்த்தி` என்பதில், மூர்த்தியும் மூர்த்திமானும் ஆக வெவ்வேறாக கொள்ளாமல் அபேதபுத்தியொடு தியானம் பண்ணுக.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
றெரியாதா னிருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தா மேழுலகும் உடனாள வுரியாரே.

பொழிப்புரை :

திருமால் பிரமர் காணாதவாறு எரிஉருவாய் நீண்டு அவர்க்கு அரியன் ஆனவனும், மேலான நிலையினனும், பாம்பணிந்த மார்பினனும், காணுதற்குத் தெரியாதவனும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள பிரமபுரத்தைச் சேர்ந்தார் ஏழு உலகங்களையும் அரசாளுதற்கு உரிமை உடையோராவர்.

குறிப்புரை :

பரமேட்டி - தன்னின்மேலதில்லாத உயரிய நிலையினன். அரவம் - பாம்பு. அகலம் - மார்பு. தெரியாதவன் - சிந்தையும் மொழியுஞ் சென்று தெரிதற்கு அரியவன். `போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும்` (ப . 177 பா . 2) ஆம். பிரமபுரத்தை இடைவிடாது சேர்ந்து தியானம் புரியும் உரிமையடைவார்க்கு ஏழுலகாட்சியுரிமை உண்டு. உலகாட்சி ஆண்டவனை வழிபட்டால்தான் எய்தும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

உடையிலார் சீவரத்தார் தன்பெருமை யுணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.

பொழிப்புரை :

உடையற்றவர்களும் சீவரம் அணிந்தவர்களுமாய சமணர் புத்தர்களால் தன்பெருமைகள் உணர இயலாதவனும், நாற்றம் பொருந்திய வெண்ணிறத் தலையோட்டைக் கையில் ஏந்திய மூர்த்தி எனப்பெறும் திருவுருவினனும், சடையில் பிறையணிந்தவனும் ஆகிய பெண்வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி விளையாடும் பொழில்சூழ்ந்த பிரமபுரத்துப் பெருமானின் திருவடிகளைப் பணிவோர் தக்கோர் எனப் பெயர் பெறுவர்.

குறிப்புரை :

உடையிலார் - திகம்பரர். சீவரத்தார் - புத்தர். முடையில் - சுடுநாற்றத்தில். ஆர் - பொருந்திய. மூர்த்தியாந் திருவுருவு - ஞானமூர்த்தி மந்திரமூர்த்தி, அத்துவாமூர்த்தி முதலியன. உருவன் - மூர்த்திமான், உருவை உடையவன் தக்காரிலக்கணம். பார்க்க: பா. 8

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.

பொழிப்புரை :

தன்னை அடைந்த அன்பர்க்கு இன்பங்கள் தருபவனும் மெய்ப்பொருளாக விளங்குவோனும், கல்லாலியன்ற மதில் சூழ்ந்த பிரமபுரத்துள் விளங்கிக் காப்பவனும் ஆகிய பெருமானின் அருளை மிக இளைய காலத்திலேயே பெற்ற ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள், பொன்னையும் போகங்கள் பலவற்றையும் அடைந்த புண்ணியர் ஆவர்.

குறிப்புரை :

தன் அடைந்தார்க்கு - தன்னை அடைந்த அன்பர்க்கும் அறிவர்க்கும். இன்பங்கள் - பெத்தத்திலுள்ள சிற்றின்பங்களும் முத்திப் பேரின்பமும். தத்துவன் - மெய்ப்பொருள். கன் - கல் (அடைந்த மதில்). முன் - முற்பிறப்பு, இளமை, சந்நிதி, தந்தைமுதலியோர் எதிர் என்றபொருளும் குறித்து நிற்றலறிக. வல்லார் எழுவாய். அடைந்தார் இரண்டும் வினைப்பயனிலை, புண்ணியர் பெயர்ப்பயனிலை உம்மை கொடுத்து ஆக்கம் (ஆவர்) வருவித்து முடித்தலுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.

பொழிப்புரை :

வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மையான புகாரில் விளங்கும் சாய்க்காட்டுள் மேவிய எம் தலைவன் தாளைச்சார்ந்து அவன் புகழைக்கற்றவரும் கேட்டவரும் நில உலகில் பிறவார், பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வாலும் பசியாலும் இடுக்கண் அடையார். நோய் உறார்.

குறிப்புரை :

மண் புகார் - பிறவார் என்றவாறு. வான்புகுவர் - பேரின்பம் அடைவார் என்றவாறு. மனம் இளையார் முதலிய மூன்றும் இம்மை நலம் குறித்தவை. கண்புகார் - இடுக்கண் உறார் (இடுங்குகண்) கற்றவரும் கேட்டவரும் என்பது இடை நிலை விளக்கா நின்று முன்னும் பின்னும் உள்ள பயனிலைகட்கு எழுவாயாயின. விண்ணிற் புகமாட்டார் எனல் வேண்டா, அதனினும் உயர்ந்த சிவலோகம் சேர்ந்து, திருவடியைச் சார்ந்தாரே. வீதிக்கு வெண்மாடம் விசேடம். புகார் - காவிரிப்பூம் பட்டினம். (பா .4)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக வுடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே யிடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.

பொழிப்புரை :

இடுகாட்டுள் மறைந்து உறைதலை விரும்புபவனும், பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காட்டைப் பதியாக உடையவனும், விடையூர்தியனும், காட்டில் உள்ள முதிய ஆலமரத்தை இடமாகக்கொண்ட பேயின் பாடலுக்கு ஏற்ப ஆடுபவனும் ஆகிய சிவபிரான் பெரியோர்களின் தலைவன் ஆவான்.

குறிப்புரை :

காடே போய் மறைந்து உறைதல் புரிந்தான் - காட்டிலே சென்று ஒளிந்து வாழ்தலை விரும்பினவன். புகாரும் சாய்க்காடும் நெருங்கியிருத்தலால். `புகார்ச்சாய்க்காடு` என்றார். பதி - வாழுமிடம். வாய்க்காடு, காட்டுவாய் என மாற்றிக் காட்டின்கண் என்று உரைத்துக் கொள்க. வாய் - இடம், (அகன்ற) காடு என்றுமாம். முதுமரம் - ஆலமரம். பேய்க்கு ஆடல் - பேயின் பாடலுக்குத்தக ஆடுதலை. `பேயடைந்த காடிடமாப் பேணுவது` `பேயாயினபாடப் பெரு நடமாடிய பெருமான்` (தி .1 பதி .48 பா -5. தி .1 பதி .15 பா .3.). புரிந்தானும் முதலிய நான்கும் கூட்டிப்பெருமானே என்பதொடு முடிக்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.

பொழிப்புரை :

நல்லநெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள். ஆதலின் சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும் செவிகளால் அவன் புகழ் மொழிகளைக்கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப்பயன் பெறலாம்.

குறிப்புரை :

நல்நெஞ்சே! நீ நாளும் நினை. சாம்நாளும் வாழ்நாளும் அறிவார் ஆர்? எம்பெருமானுக்கே நாளும் தலை பூக்களைச் சுமக்கவும் செவிகள் அவன் திருப்புகழ்களையும் அவற்றைக் குறிக்கும். திருப்பெயர்களையும் கேட்கவும், நாக்கு அவற்றை நாளும் நவின்று ஏத்தவும் (செய்யும்) நல்வினையைப் பெறலாம், நல் வினையாற் பெறலாம் என்றுமாம். நவின்று - நாவால் சொல்லி அடிப்பட்டு, `மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே`. (புறம், கடவுள் வாழ்த்து) இறப்பும் இருப்பும் அறியாமையால். இருக்கும்போதே முன்னை நல்வினைப் பயனாக நாடோறும் திருவடி நினைவு, பூச்சுமை, புகழ்க் கேள்வி, நாநவிற்சி ஆகிய சிவபுண்ணியங்களைத் தேடிக்கொள்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.

பொழிப்புரை :

பொன்தட்டுப் போல மலர்ந்த செருந்தி, கோங்கு முதலிய மரங்கள் பொருந்திய தாழ்ந்த பொழிலிடத்துத் தாழைமலர்கள் மொட்டுக்களை விரித்து மணம் பரப்பும் காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காட்டுப் பரமேட்டியின் பாதங்களை வண்டுகளால் கட்ட விழ்க்கப்பட்ட மலர்களைத்தூவிக் கைகூப்பி வணங்குமின்.

குறிப்புரை :

கட்டு - (கள் + து) கள்ளுடைய அரும்புகளின் உறுதி நிலை, பிணிப்புமாம். அலர்ந்த - அலரச்செய்த, பிறவினை. சிவபூஜை செய்க என்று ஏவியருளியவாறு, பொன் இயன்ற தட்டு அலர்த்தபூ - பொன்னால் ஆகிய தட்டுப்போலும் பூத்த பூ, கோங்கு அமரும் பொழில். மொட்டு - அரும்புகள். முருகு - மணம், உயிர்க்கும் - (வெளி) விடும். பரமேட்டி - தனக்கு மேலில்லாத உயர்ந்த இடத்தினையுடையவன். பாதமே கைதொழுமின் என்று விற்பூட்டாக்கொள்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பான்மதியந்
தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினா ரோங்கினா ரெனவுரைக்கு முலகமே.

பொழிப்புரை :

கோங்கரும்பு போன்ற தனங்களையும், செழுமையான மூங்கில் போன்ற தோள்களையும் கொடிபோன்ற இடையினையும் உடைய உமையம்மையைத் தன் பாகமாக வைத்து மகிழ்பவனும், தன் திருமுடிமேல் பால்போன்ற வெள்ளிய மதியைச்சூடியவனுமான பூம்புகார்ச் சாய்க்காட்டு இறைவனின் திருவடி நீழலில் ஓங்கி நின்றவரே ஓங்கினார் எனப்படுவார்.

குறிப்புரை :

கோங்கு - கோங்கினரும்பு. அன்ன - ஒத்த, பணை - மூங்கில். பாங்கு - (பால் + கு) இடப்பால், பால் மதியம் - பால் போலும் வெண்டிங்கள். தாள் நிழல் கீழ் ஓங்கினார் - `ஓங்குணர்வின் உள் அடங்கி உள்ளத்துள் இன்பு ஒடுங்கத்தூங்குவர்` ( திருவருட்பயன் . 91) திருவடிக்கீழ் ஓங்கினவரே ஓங்கினவர், மற்று எங்கு ஓங்கினும் அஃது ஓங்குதலாகாது; தாழ்தலேயாகும். என உலகம் உரைக்கும் என்று மாற்றுக.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாக மெரிகொளுவச் செற்றுகந்தான் றிருமுடிமேல்
ஓய்ந்தார மதிசூடி யொளிதிகழு மலைமகடோள்
தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.

பொழிப்புரை :

சந்தனம் போலத்திருநீற்றை உடல் முழுவதும் அணிந்தவன். சாய்க்காட்டில் உறைபவன். காமனின் உடல் தீயுமாறு எரிகொளுவச் செய்தவன். திருமுடியில் நுணுகிய மதியைச் சூடியவன். ஒளிதிகழும் மலைமகள் தோளைத் தோய்ந்து அவளைப் பாகமாகக் கொண்டவன். விடையூர்தியன்.

குறிப்புரை :

சாந்து - சந்தனம். சாந்தாக நீறணிந்தான் - `சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்தநீறு` (தி . 1 பதி .52 பா 7.) தீந்து - தீய்ந்து, எரிந்து. ஆகம் - உடம்பு. ஆகத்தைத் தீய்ந்து எரிகொளுவச் செற்று உகந்தான் என்க. கொள்ள - தன்வினை. கொளுவ:- பிறவினை. கொளுத்த; பொருத்த. ஓய்ந்து ஆர - நுணுகிப்பொருந்த. ஓய்தலுற்றுத்தங்க எனலுமாம். மலை மகள் (உமாதேவியார்). தோய்ந்து - தழுவி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மங்குல்தோய் மணிமாட மதிதவழு நெடுவீதிச்
சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டின் னிசைபாடு மலர்கொன்றைத்
தொங்கலா னடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.

பொழிப்புரை :

மேகங்களைத் தோயுமாறு உயர்ந்து விளங்கும் அழகியமாட வீடுகளின் வெண்ணிற ஒளியை உடைய வீதிகளைக் கொண்டதும், சங்குகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் அலைகளின் ஆரவாரம் கேட்பதுமாய சாய்க்காட்டு இறைவன், தேன் உண்ணவந்த வரிவண்டுகள் இன்னிசைபாடும் மலர் மாலைகளை அணிந்தவன். அப்பெருமானை அடைந்த அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருள் எனத்தோன்றா.

குறிப்புரை :

மங்குல் - மேகம். புலம்பும் - ஒலிக்கும். கொங்கு - மணம். தேன் உலாமலர். கொங்கிற்கு உலா வண்டு எனலுமாம். தொங்கலான் - மாலையினன். சுவர்க்கங்கள் - தேவலோகங்கள். வானோர்க்கும் உயர்ந்த உலகத்தை அடையத்தக்க சிவனடியார்க்கு வானோருலகம் பொருளாகா.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

தொடலரிய தொருகணையாற் புரமூன்று மெரியுண்ணப்
படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்
தடவரையாற் றடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை
இடவகையா வடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.

பொழிப்புரை :

தொடற்கரிய வெம்மையையுடைய ஒருகணையால் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவனும் படப்பாம்பை அணிகலனாகப் பூண்டவனும், முற்காலத்தே இராவணனைக் கயிலை மலையால் பெரிய தோள்களை ஊன்றி நெரித்தவனும் ஆகிய சிவபிரானது சாய்க்காட்டைச் சிறந்த ஒரு தலம் எனக்கருதி அடைவோர்க்கு இடர் இல்லை.

குறிப்புரை :

தொடல் - (தொடு + அல்) தொடுத்தல், தொடுதல் என்னும் இருபொருளும் அமையும்; தீக்கணையாதலின். படஅரவத்து எழில் ஆரம் - படத்தையுடைய அழகிய மாலை. தடவரை ... ஊன்றினான், இராவணனது பெரிய மலைபோலும் தோள்களை விசாலமான கயிலை மலையால் அழுத்திய பரமசிவன். இடர் - பிறவித்துன்பம் முதலிய எல்லாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

வையநீ ரேற்றானு மலருறையு நான்முகனும்
ஐயன்மா ரிருவர்க்கு மளப்பரிதா லவன்பெருமை
தையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.

பொழிப்புரை :

இவ்வுலகை நீர்வார்த்துத்தர ஏற்ற திருமாலும், தாமரைமலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருதலைமைத் தேவர்க்கும் அவன் பெருமை அளந்து காணுதற்கு அரியதாகும். மகளிர்பாடும் இசைப்பாடல் ஓவாதே கேட்கும் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாக விரும்பாதார் ஞானம்பெறார்.

குறிப்புரை :

வையம் - பூமி. மூவடிமண். நீர் - தத்தஞ் செய்நீர். ஏற்றான் - மாவலிபால் இரந்த திருமால். ஐயன்மார் இருவர் - அயனும் அரியுமாகிய துவி கர்த்தர்கள். அளப்பு - அளவிடுதல். தையலார் - பெண்டிர். ஓவா - இடைவிடாத. பேணாதார் - விரும்பிவழிபடாதவர். தெளிவு - ஞானத்தேற்றம்.
`சீலத்தால் ஞானத்தால் தேற்றத்தால் சென்றகன்ற
காலத்தால் ஆராத காதலால் - ஞாலத்தார்
இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாம்
கச்சிக்கச் சாலைக் கனி `.
எனப் பின்வந்த ஞானப்பாடலை அறிக. தேறோம் - அதை ஒரு தெளிவாகக் கொள்ளோம், மதியோம் என்றபடி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

குறங்காட்டு நால்விரலிற் கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணருஞ் சாக்கியரு மலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டி லாடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.

பொழிப்புரை :

தொடைகளில் அடையும் நால்விரல் கோவண ஆடையோடு உலாவித்திரிந்து அறம் போலக்கூறும் சமண் சாக்கியர்கள் பழித்துரை கூறும் திறங்களைக் கேளாது, சுடுகாட்டில் நடனம் ஆடும் பூம்புகார்ச்சாய்க்காட்டு இறைவன் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.

குறிப்புரை :

முதலீரடியும் புறப்புறச்சமயத்தார் நிலையும் செயலும் உணர்த்துகின்றன. குறங்கு ஆட்டும் - துடையில் அசைக்கும். உலோவி - சிக்கனம்; கொண்டாடி. மெய்யொழுக்கத்தால் உண்டெனத் தோற்றுதல் இன்றித்தம் பொய்யொழுக்கத்தை நூலாலும் பேச்சாலும் மறைத்து, தம்மிடத்தில் அறம் உள்ளது போலக் காட்டுதலால் `அறம் காட்டும்` என்றார். அலர் - பழி. காட்டல் - காட்டுவதை. கேளாதே - பொருட்படுத்தாமல் `தம்மிற்புணராமை கேளாம்புறன்`(சிவஞான போத வெண்பா . 1. உரை) தெளிவுடையீர் கேளாதே சாய்க்காடே சென்று அடைமின் என்க./n `கோலோவிப்போய்` என்ற தொடருக்குப் பழையபதிப்பாசிரியர் பாடபேதம்: `ஓலோவிப்போய்`. சுவாமிநாத பண்டிதர் தரும் பாடபேதம்: `உலாவிப்போய்`. புதுச்சேரிப் பதிப்புத் தரும் பாடபேதம்: `உலோவிப்போய்`.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலு மரவஞ்செய் பூங்காழிச்
சம்பந்தன் றமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்த மெனக்கருதி யேத்துவார்க் கிடர்கெடுமே.

பொழிப்புரை :

பந்து நோகுமாறு அதனைப் புடைத்துக்கொண்டு பாதங்களில் அணிந்த நூபுரம் ஒலிக்க அழகிய பந்துகளும் கழற்சிக்காய்களும் கொண்டு விளையாடி மகளிர் ஆரவாரிக்கும் அழகிய காழிப்பதியுள்தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப்பாடல்கள் பத்தையும் எமக்குப் பற்றுக்கோடு எனக்கருதிச் சாய்க்காட்டு இறைவனை ஏத்துவார்க்கு இடர்கள் கெடும்.

குறிப்புரை :

நொம் - நோகும். பைந்து - பந்து. `தண்மலர் நறும் பைந்து ஊழ் அறிந்து உருட்டா` (பெருங் . மகத 8-64) புடைத்து - (பந்து) அடித்து. ஒல்கு - தளரும். நூபுரம் - (பாதக்) கிண்கிணி, சிலம்பு. அம்பந்து - அழகிய பந்து. கழல் - பெண்கள் விளையாடும் கழற்காய். அரவம் - ஓசை. எம்பந்தம் - எம்முடைய பற்று (க் கோடு). ஏத்துவார்- பாராயணம் புரிபவர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

அக்கிருந்த வாரமும் ஆடரவும் ஆமையும்
தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

என்புமாலை, ஆடும் பாம்பு, ஆமைஒடு, ஆகியனவற்றை ஒருசேரஅணிந்த மார்பினனும், திருவெண்ணீறு அணிந்தவனும், ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பழமையான கோயில், பொய்யில்லாத மெய்ந்நெறியாகிய சைவசமயத்தைச் சார்ந்தொழுகுவார் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.

குறிப்புரை :

அக்கு - உருத்திராக்கம். எலும்பும் ஆம். ஆரம் - மாலை, என்புமாலை, தலைமாலை. கொன்றைமாலை, உருத்திராக்கமாலை முதலியவற்றுள் முதலும் முடிவும் இங்குப் பொருந்தும். அரவு - பாம்பு, `முற்றல் ஆமை இளநாகமொடு ஏனமுளைக் கொம்பவை பூண்டு` (ப .1. பா .2) தோலுடையான் - யானைத்தோலும் புலித்தோலுமாகிய உடையினன். உடையவனுமாம். சைவநெறி பசுபாசக் கலப்பாகிய பொய்யில்லாதது மட்டுமன்று, சிவத்துவமாகிய மெய்யேயாய் நிற்பது. கேவலம் சகலம் - பொய். சுத்தம் - மெய், அந்நெறிக்கே தக்கிருந்தார் - ஆக்கூர்ச் சைவர்கள். (பா .3. வேளாளராகிய தாளாளர் முதலியோர்) இப்பதிகத்துள் முதற்பத்திலும் ஆக்கூர்ச் சைவர் சிறப்பு உணர்த்துதல் அறிக. இது தொல்கோயில் என ஆசிரியர் காலத்தே விளங்கியது. அவ்வாறே இன்றும் எண்ணக்கிடக்கின்றது. `தான்றோன்றி மாடமே வெண்ணீற்றான் புக்கு இருந்த தொல்கோயில்` என்று கூட்டுக. `பூங்கோயில்` (4) என்றும் சொல்லப்படும். இதைத் தரிசித்தவரே இதன் பெருமை, தொன்மை முதலியவற்றை நன்கு உணர்வர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

நீரார வார்சடையான் நீறுடையா னேறுடையான்
காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்தில்
தாராமல் காக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

கங்கை தங்கிய நீண்ட சடையினனும், திருநீறு அணிந்தவனும் விடையேற்றை ஊர்தியாகக் கொண்டவனும், கார்காலத்தே மலரும் கொன்றை மலரைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் விரும்பிய பழமையான கோயில் நாரைப் பறவைகள் மிகுதியான ஆரல்மீன்களை வாய் நிறைய எடுத்துக்கொண்டு நீர்க்கரைகளில் மிகுதியாக வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடமாகும்.

குறிப்புரை :

நீர் - கங்கை. ஆர - பொருந்த, நிறைய. வார் - நீண்ட. கார் ஆர் பூங்கொன்றை - `கண்ணி கார்நறுங் கொன்றை`. ஆரல் - ஆரல் மீன்களை. தாரா - நாரையினம். வாய் நிறைய ஆரலைக் கொண்டு அயலே கோட்டகத்தில் தாராமல்கும் ஆக்கூர் என்று இயைக்க. கோடகம் - நீர்நிலை, நீர்க்கரை, தான்தோன்றி - சுயம்பு. ஊர்க்கும் திருக்கோயிற்கும் வெவ்வேறு பெயர் வழங்கிய பழைய மரபை ஈண்டும் காணலாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தை
தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம் போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.

குறிப்புரை :

வாள் ஆர் - வாள்போன்ற ஒளிபொருந்திய. துவர் - பவளம். துவர்வாய் - உவமைத்தொகை. மடந்தை - உமாதேவியார். தோள் ஆகம்பாகமா, (பார்க்க: ப .177 பா .6.). புல்கினான் - புணர்ந்தான். வள்ளன்மை - வள்ளலாந்தன்மை. கொடைமை. தாள் - முயற்சி. தாளாளர் - ஆக்கம் அதர் வினாய்ச் சாரத்தக்க ஊக்கமுடையர். வேளாளர் - அவ்வாக்கத்தைப் பிறர்க்கு உபகரிக்கும் வண்மையாளர். வேள் - மண் என்று கொண்டு உழவர் எனலும் உண்டு. வேளாண்மை - உபகாரம். `வேளாண்சிறுபதம்` (புறம் . 74. உரை,) கொன்றையினான் காதலித்த கோயில் என்றதனால், வேண்டுதல் வேண்டாமை இல்லாத கடவுளுக்குக் காதல் உண்டென்ற குற்றம் தோன்றும் எனலாம். ஆயினும் அது பொருந்தாது. அன்பர்க்கு அன்பன், அல்லாதார்க்கு அல்லன் என் புழிப் பக்குவாபக்குவங்களைக் காரணமாக் கொள்ளல் போற்கொள்க. ஆண்டவனுக்கு வேறுபாடில்லை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கமா றோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடியவனும் இயமனை வருத்தச் சினந்தவனும் ஒளிமிக்க திருவெண்ணீற்றை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானது அழகிய கோயில், அரிய நான்கு வேதங்களோடு ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்து ஐவகை வேள்விகளையும்புரியும் அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடமாகும்.

குறிப்புரை :

கொங்கு - தேன், மணம், தாது. கூற்று அடர - இயமனை வருத்த. பொங்கினான் - கோபம் மிகுந்தான். ஆறு அங்கம் - வேதாங்கம் ஆறும். ஐவேள்வி தங்கினார் - பஞ்ச மகாயக்ஞம் புரிவோர். வேள்வி - யாகம், பூஜை. தேவயாகம். பூதயாகம் முதலியன.(பா -7. பார்க்க.)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

வீக்கினா னாடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்
பாக்கினான் பலகலன்கள் ஆதரித்துப் பாகம்பெண்
ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடை
தாக்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

ஆடுகின்ற பாம்பைக் கச்சாகக்கட்டியவரும், இறந்து அழிந்தவருடைய வெண்டலைகளையும், என்புகளையும் பல அணிகலன்களாக அணிந்தவரும், விரும்பி ஒருபாகமாகப் பெண்ணைக் கொண்டவரும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில் ஆம்பல் பூக்கள் மலரும் அழகிய பொய்கைக்கரையை உயர்த்திக் கட்டிய உழவர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை :

வீக்கினான் - (அரவக்கச்சு) கட்டினான், வீந்து - மாண்டு. அழிந்தார் - அழிந்தவரது. தலை என்பு - தலையும் எலும்பும். கலன்கள் - ஆபரணங்கள். ஆதரித்து - விரும்பி. பாகம் - இடப்பால். பெண் - உமாதேவியார். ஆம்பல் அம்பூம் பொய்கை - ஆம்பல் மலரும் அழகிய பூங்குளம். பூ - பொலிவு. ஆம்பற்பூவுமாம். பொய்கையைப் புடையில் (எதிர்ப்பக்கத்தில்) தாக்கினார் (-வெட்டினார்) வாழும் ஆக்கூர் என்க. ஆதரித்து ஆக்கினான் என முன்னும் பின்னும் கூட்டுக.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ணொளிசேர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

பண்ணமைதியும், அறிவொளியும் அமைந்த நான்கு வேதங்களையும் அருளியவனும், பாடலிலும் ஆடலிலும் வல்லவனும், ஒளிசெறிந்த கண்பொருந்திய நெற்றியினனும் ஆகிய சிவபெருமான் காதலித்த பழமையான கோயில், வானவெளியில் உலாவும் பெரிய மதியொளி சேர்தலால் வெண்மையான மாடவீடுகள் குளிர்ந்த ஒளியைப் பெறும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை :

ஒளி - அறிவினொளி. கண்ணொளி - நெருப்புக் கண்ணொளி. தண் ஒளி - குளிர்ச்சி ஆக்கும் ஒளி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

பெருமை மிக்கவரும், மும்மதில்களையும் வெந்து அழியுமாறு மலைவில்லை வளைத்தவரும், தேவர்களால் வந்து வணங்கப்படுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய பழமையான கோயில், பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும ஆறு அங்கங்களையும் பலகலைகளையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடமாகும்.

குறிப்புரை :

வீங்கினார் - பெருமையுடைய சிவபிரான், திரிபுரத் தசுரரையுங் குறிக்கும். செலவில் மிக்கார் - மீச்செலவினார். (பகைவர்) வில்வரை - மேருவில், வில்லாகியவரை. மறை + அங்கம் + பல கலைகள். தாங்கினார் - கற்றுணர்ந்து கொண்டவர். அந்தணர். (பா .4. பார்க்க).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி
இன்னருளா லாட்கொண்ட வெம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர்சுமக்கும்
தன்னடியார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

கற்கள் நிரம்பிய நீண்ட கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்கள் நெரியுமாறு கால் விரலை ஊன்றிப் பின் அவன் வருந்தி வேண்ட அவனுக்கு இனிய கருணைகாட்டி ஆட்கொண்ட எம்பெருமானின் பழமையான கோயில், சிவபிரானின் பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கும் சிவனடியார்கள் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை :

கல்நெடிய குன்று - திருக்கயிலைமலை, பொன்..... அடியார் - `பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும் நின் அடியார்` (தி. 1 பதி . 52 பா .3)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

நன்மையா னாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை :

தொன்மையான் - `தொல்லோன்` தோற்றம் கேடு - பிறப்பும் இறப்பும். இன்மை - வறுமை. ஈந்துவக்கும் தன்மையார் - `ஈத்துவக்கும் இன்பம்` அறிந்தவராய், தம் உடைமை வைத்திழவாத தண்ணளியர், (சிறப்புலி நாயனார் புராணம் .1.)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

நாமருவு புன்மை நவிற்றச் சமண்டேரர்
பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்
சேன்மருவு பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
தாமருவு மாக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொழிப்புரை :

சமணபௌத்தர்கள் நாவிற் பொருந்திய புன்மை மொழிகளால் அறியாது பிதற்றித்திரிய, கொன்றைப் பூக்கள் பொருந்திய சடையினனாகிய சிவபிரான் எழுந்தருளி அமரும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய நீர்நிலைகளில் செங்கழுநீர் பசுமையான குவளை மலர்கள் ஆகியன வளரும் வளமையைக் கொண்ட ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை :

புன்மை - அற்பக் கொள்கைகள் `புன்பேச்சு`(ப .182 பா .10)ம் ஆம். நவிற்ற - பிதற்ற. சமண்தேரர் - சமணரும் தேரரும். சேல் - மீன். பைங்கயம் - பசியநீர்நிலை. தாம் - கழுநீர் குவளைகளைக் குறித்த பன்மைப்பெயர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

ஆட லமர்ந்தானை யாக்கூரிற் றான்றோன்றி
மாட மமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

திருக்கூத்து ஆடுவதை விரும்புபவனாய், ஆக்கூரில் தான்தோன்றிமாடத்து எழுந்தருளிய சிவபிரானை ஏத்தி மாடவீடுகள் நிரம்பிய சீகாழிப்பதியில் தோன்றிய அறிதற்கரிய புகழினனாகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப்பாடல்கள் வல்லவர்கட்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

ஆடலமர்ந்தான் - திருக்கூத்தை விரும்பியாடியவனை. அமர்ந்தான் - விரும்பியவன். தங்கியவன். நாடற்கு - ஆராய்தற்கு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

தேன்நிறைந்த அழகிய கொன்றைமலர், கடுநாற்றத்தை உடைய ஊமத்தைமலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்கு வேளூர்.

குறிப்புரை :

கள் - தேன், ஆர்ந்த - நிறைந்த. மதமத்தம் - கடு நாற்றத்தையுடைய ஊமத்தம், முடியையுடைய பெருமானார் என்க. தள்ளா - தாழ்ந்த பறவைகள் எனக்கருதித் தள்ளிவிடத்தகாத உயிர்களாகிய சம்பாதி சடாயு என்பர்தாம்; இருவர் புள் ஆனார். சம்பாதியும் சடாயுவும் பறவைப் பிறப்பை அடைந்து வழிபட்ட வரலாறு. அரையன் - வைத்தியநாதர். இதில் இருவரையும் உணர்த்தினார். `மேல்` 2, 4, 6, 8, 9, 10 சடாயுவையும் 3, 5, 7 சம்பாதியையும் ஒருமையாகக் குறித்தனர் எனலாம். புள்ளிருக்கு வேளூர் என்றதன் பெயர்க்காரணத்துள் ஒருபகுதி கூறப்பட்டது. சேக்கிழார்பெருமான் `புள்ளிருக்கும் திருவேளூர்` எனப்பாடுதலால்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

தையலா ளொருபாகஞ் சடைமேலா ளவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோ ரந்தணனா ருறையுமிடம்
மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனுக்கு நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.

குறிப்புரை :

தையலாள் - தலத்தின் அம்பிகை திருநாமம். சடை மேலாள் - கங்காதேவி, மேல் ஓடி - வானிற்பறந்து. ஈடு - (இராவணனது) வலியை. இராவணன் மெய்சொல்லாதவன்; சடாயு பொய் சொல்லாதவன் என்று குறித்த திறம் உணர்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

வாசநலஞ் செய்திமையோர் நாடோறு மலர்தூவ
ஈசனெம் பெருமானார் இனிதாக வுறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளு மொழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறுமலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும் யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

வாசம் - தலவாசம். நலம் - தீர்த்தஸ்நானம், மூர்த்தி தரிசனம் முதலியன. இமையோர் - தேவர், சூரியன், செவ்வாய். முதலோர். மலர் தூவ - அர்ச்சித்துவழிபட. யோசனை - நான்கு கூப்பீடு. கொணர்ந்து - கொண்டுவந்து. ஒழியாமே - தவறாமல். பூசனை - சிவார்ச்சனை. இருந்தான் - சம்பாதி. இவன் காவிரிப் பூம்பட்டினத்தில் பூங்காவைத்து நாள்தோறும் அங்கிருந்து மலர் கொண்டுவந்து வழிப்பட்ட வரலாற்றைக் குறித்தது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த வெரியாடி யுறையுமிடம்
ஆகாயந் தேரோடு மிராவணனை யமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை உரித்து அதன்தோலை உடைவகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில் தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப் போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

காயம் - திருமேனி, ஏகாயம் - (ஏகாசம்) உத்தரீயம். ஆகாயத்தில் ஓடுந்தேர்; புட்பகவிமானம். அமர் - போர். பொருது - தாக்கி. அழித்தான் - சடாயு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கீதத்தை மிகப்பாடு மடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

வேதகீதங்களை மிகுதியாகப் பாடும் அடியார்கள் கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளிவடிவினனும், வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

கீதம் - பாட்டு. மணம் ஒன்றி உரை ஆர்கீதம் பாட நல்ல உலப்புஇல் அருள் செய்தார். (தி .1. ப .71. பா .8) அடியார்கட்குப் பாதமே குடி. குடியாகத் தொழ நின்ற சோதி என்க. பரஞ்சாதி - மெய்யொளி. மணலைச் சிவமாகப் போதத்தால் பாவித்து வேத மந்திரத்தால் வழிபட்டவன் சம்பாதி. போதம் - ஞானம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

திறங்கொண்ட வடியார்மேற் றீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்ம முரைத்தபிரா னமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

சைவத்திறம் மேற்கொண்ட அடியவர்மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும், சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் அமரும் இடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

திறம் - `சைவத்திறம்`. அறம் - அன்று `ஆலின்கீழ் இருந்து உரைத்த அறம்`. சிவதன்மம் - சரியையும், கிரியையும் `சிவ தன்மம்` என்பது சைவ சம்பிரதாயம் ஆயினும், இங்கு நான்கிற்கும் பொதுவாய் நின்றது. (இது தலவரலாற்றுக் குறிப்பு) மறம் - வீரம். தன் வலி - தனது பலத்தை. வந்தானை - வந்த (இரா) வ (ண) னை. புறம் கண்ட - முதுகுபார்த்த, வென்ற என்றபடி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

அத்தியினீ ருரிமூடி யழகாக வனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

யானையை உரித்த தோலால் உடலை மூடிக் கொண்டு அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப்பலியேற்றுத் திரியும் பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சம்பாதியால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

அத்தி - யானை. மூடி - போர்த்து. பித்தரைப் போல் என்றதால், இறைவனைப் பித்தனெனல் ஏலாது. பத்தி - பக்தி. திருவடிக்கு அன்பு. புத்தி - ஞானம். ஒன்ற - சிவத்தொடு பொருந்த, `ஒன்றி இருந்து நினைமின்கள்`. உகந்தான் - விரும்பினான், உயர்ந்தவன். (சம்பாதி).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ்நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.

குறிப்புரை :

ஒன்ற - பொருந்த. `பண்பொருந்த இசைபாடும் பழனம் சேர் அப்பன்` (தி .4 ப .12 பா .5) குடியாகக் கொடுக்கும் மணிகண்டன் என்க. மண் இன்றி என்றது, பிறவாமைக்கும், விண்கொடுக்கும் என்றது, வீடு பேற்றிற்கும் எனக்கொள்க. எண் - கணக்கு. வாணாள் - வாழ்நாள் என்பதன் மருஉ. அழித்தான்:- சடாயு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன வகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின் முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும், கருணைக்கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக மக்களோடு பறவைவடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் சாரும்இடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

வேதித்தார் - பேதித்தவர், பகைவர். சாதித்த - கொன்ற. வில்லாளி - (மேரு) வில்லை ஆள்பவன். கண் ஆளன் - ஞானக்கண்ணாயிருந்து எல்லாவுயிர்களையும் ஆள்பவன், அடையாதார்க்குச் செய்யும் மறக்கருணையின் வேறாய், அடைந்தார்க்கு நல்கும் அறக்கருணையைக் காட்டுங்கண்ணை ஆள்பவன் எனலும் பொருந்தும். ஆதித்தன் - சூரியன். இதிற் குறித்த வரலாறு:- சூரியனுக்குச் சம்பாதி சடாயு இருவரும் மக்கள் என்றும், ஞாயிற்று மண்டலம் வரை பறந்து சென்று சிறகுகள் கரிந்து தலத்தில் வீழ்ந்து வழிபட்டுச் சிறகும் வரமும் பெற்றனரென்றும் புராணம் உள்ளது. இச்செய்தி இராமாயணத்தில் முறையே ஆரண்ய காண்டத்திலும், கிஷ்கிந்தா காண்டத்திலும் கூறப்பெற்றுள்ளன. அகல் - அகலிய, பரந்த. ஞாலத்தவர் - உலகத்தவர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரு மிலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

பொழிப்புரை :

சினந்து வேகமாக வருகின்ற கங்கையைத்தனது மணம்கமழும் சடை ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம் தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக அவனைப்புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால் வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.

குறிப்புரை :

கடுத்து - கோபித்து. சடைமேல் கங்கையைத் தடுத்தவர். ஒன்று - சிறிதும். ஆடாமே - முழுகாமல். விடைத்து - சீறி, வேறுபடுத்து. மலங்க - அலைய. இராமற்கு - இராமபிரானுக்கு, புடைத்து - அடித்து, அலைத்து. அவனை - அவ்விராவணனை. பொருது - அழித்து. அழித்தான்: சடாயு. அழிக்கப்பட்டது வலி (கம்பர். சடாயுவுயிர்நீத்த 118). அவனைப் புடைத்து அழித்தான் என்று கூட்டுக. `எறிந்தான் அதுநோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல் அறிந்தான் முனிந்து ஆண்டதோர் ஆடகத்தண்டு வாங்கிப் பொறிந்தாங் கெரியின் சிகை பொங்கியெழப் புடைத்தான் மறிந்தான் எருவைக்கிறை மால்வரை போல மண்மேல்`. (பா .121). என்றதை நோக்கிப், புடைத்தவன் என்று கொண்டே இராவணன் என்று கூறலும் நன்றாகும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.

பொழிப்புரை :

குணமில்லாத இவ்வுடலொடு பிறக்கும் பிறப்பை நீக்கியருளுவானும், தீவினை காரணமாகவரும் நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்பவனும், மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித்தொண்டு பூண்ட மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய கவுணியர்கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் சொல்மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபடவல்லவர்கட்கு மறு பிறப்பு இல்லை.

குறிப்புரை :

செடி - குணமில்லாமை. ஆய - ஆகிய. உடல் தீர்ப்பான் - பிறப்பில்லாமலருள்பவன். `தீவினைக்கு ஓர்மருந்து ஆவான்` `வரும் பிறவி நோய் தீர்ப்பான்காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்` (தி .6 ப .64 பா .4)`உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே` (தி .5 ப .79 ப . 8-9)`மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருளவல்லான்`( தி .6 ப .54 பா .8). இத்தலத்தில் நோய் நீங்கும் பொருட்டு மக்கள் திரள் திரளாக வந்து வழிபடுதலை இன்றும் காணலாம். பொடியாடிக்கு - திருநீற்றில் மூழ்கிய சிவபிரானுக்கு. அடிமை - அடித்தொண்டு, கடி - மணம், காவல். மடியாது - சோம்பியிராமல், வாளாபிறந்திறவாது எனலுமாம். இத்தலத்தை வழிபட்டவர்க்கு மேற்கூறியவாறு, தீராத பிறவி நோயையும் தீர்த்தருள் வான் சர்வலோகங்கட்கும் ஏகவைத்தியனான நாதன் என்னும் உண்மையை விளக்க `இல்லையாம் மறு பிறப்பே` என்றருளினார். இத்திருப்பதிகத்தை மட்டும் நாடோறும் பாராயணஞ் செய்வோர்க்குப் பிறவிஒழியும் என்பது உறுதி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கான லாமாத்தூ ரம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.

பொழிப்புரை :

தைத்தல் அமைந்த கோவணத்தை உடையாகவும், யானைத் தோலைமேல் ஆடையாகவும் கொண்டு பின்னிய சடைமீது இளம்பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?

குறிப்புரை :

துன்னம் - தைத்தல். பெய் - செறிந்த, இட்ட பெய் கோவணம்; வினைத்தொகை. பின் - பின்னிய. அம் - அழகிய. பொக்கம் - பொலிவு. பொலிவும் ஒரு பொலிவோ? பொலிவு அன்று என்க. பா. 5, 9, 10, பார்க்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

கைம்மாவின் றோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை யாமாத்தூ ரம்மானெம்
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.

பொழிப்புரை :

யானைத் தோலைப் போர்த்துள்ள காபாலியும், வானுலகில் திரிந்து இடர் விளைத்த முப்புரங்களை எய்தழித்தவனும், முக்கண்ணனும் ஆகிய சிவபிரானின் புகழைப்பாடி அழகிய பெரிய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானே எம் தலைவன் என்று ஏத்தாதார் பேயர்களினும் பேயராவர்.

குறிப்புரை :

கைம்மா - துதிக்கையையுடைய யானை. மும்மா மதில் - மூன்று பெரியபுரம். பேர் - திருநாமம். அம்மான், பெம்மான் என்பவை, அருமகன் பெருமகன் என்பவற்றின் மரூஉ. கோமகன் என்பது கோமான் என்று மருவியதுபோல. (பா. 81) ஏத்தாதார் - (உயர்த்துப்) புகழாதார். பேயரிற் பேயர் - கடவுளைப் புகழ்ந்து போற்றி வழிபடாதவர் மக்கள் வடிவினராயினும் பேயரே என்பது பெரியோர் முடிவு. `நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் பேயாய்த் திரிந்தெய்த்தேன்` என்பது நம்பியாரூரர் திருவாக்கு. `வையத் தலகை` என்றார் நாத்திகரை வள்ளுவர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
தேம்ப லிளமதியஞ் சூடிய சென்னியான்
ஆம்பலம்பூம் பொய்கை யாமாத்தூ ரம்மான்றன்
சாம்ப லகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.

பொழிப்புரை :

பாம்பை இடையில் கட்டியவன். ஒப்பற்ற பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவன். வாய்பிளந்து மெலிந்ததோர் இளமதியைச் சூடிய சென்னியன். ஆம்பல் பூக்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய ஆமாத்தூரில் எழுந்தருளியவன். சாம்பல் பூசிய மார்பினனாய அப்பெருமானின் அடியவர்களின் சார்பு அல்லால் பிறிதொரு சார்பு நமக்கு இல்லை.

குறிப்புரை :

அரை - இடுப்பில். பண்டரங்கன் - பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவன். விண்டது - பிளந்தது. தேம்பல் - மெலிதல், வாடுதல். `மதிப்பிளவு` `தேய்பிறை` என்னும் வழக்குணர்க. சென்னியான் - தலையன். சாம்பல் - திருநீறு. அகலத்தார் - மார்பினர் (அடியார்) திருஞானசம்பந்தர்க்குச் சிவனடியாரிணக்கத்திலுள்ள பேரன்பும் உறுதியும் விளங்கும். `நக்கனாரவர் சார்வலானல்கு சார் விலோம் நாங்களே` `சைவனாரவர் சார்வலால் யாதுஞ் சார்விலோம் நாங்களே` (தி .2 ப .77 பா .8) `சாதுக்கண் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே` (தி .3 ப . 54 பா . 5) `கங்கை தரித்தானைச் சாராதார் சார் வென்னே` (தி .7 பா .872)`சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்` (தி .6 ப .98 பா .5.)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூ ரம்மானைக்
காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே.

பொழிப்புரை :

வலிய நாகத்தின் படம் போன்ற பெரிய அல்குலையும், திரண்ட வளையல்கள் அணிந்த கைகளையும் உடைய பார்வதிதேவியின் அணிகலன்கள் அணிந்த திருமேனியைத் தனது இடப்பாகமாகக் கொண்டு அவ்வம்மையோடு ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து மகிழும் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும்.

குறிப்புரை :

கோலி - வலிமை. கொலையுமாம். நாகம் - பாம்பு `பையரவல்குல்`. கோல் - திரட்சி. ஆகம் - உடம்பு. மார்புமாம். புல்கி - தழுவி, புல்கியவள் என்றுமாம். ஆண் ஆகம் - ஆணுடம்பு. ஆள் நாகம் - ஆளுகின்ற (மலை போன்ற) கொங்கை எனலுமாம். நாகம் - உவமையாகுபெயர். காணாத கண்களே - குருட்டுக் கண்களே.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

பாட னெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
சூட னெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
ஆட னெறிநின்றா னாமாத்தூ ரம்மான்றன்
வேட நெறிநில்லா வேடமும் வேடமே.

பொழிப்புரை :

பாடும் நெறி நிற்பவனும், பசிய தண்மையான கொன்றை மாலையைச் சூடும் இயல்பினனும், சூலம் பொருந்திய கையினனும் ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான் கொண்டருளிய மெய்வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார் மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும்.

குறிப்புரை :

பாடல் நெறி - பாடுதலாகிய வழியில். சூடுதல் - அணிதல். வேட நெறி - உணர்ந்தறிந்தோர்க்கு உய்வேடமாகும்படி பயன் செய்யும் மெய்வேடமார்க்கம். (திருமந்திரம் - 1660) வேடமும் - மெய் வேடம் போலவே பூண்ட பொய் வேடமும், வேடமே, ஒரு வேடமாக மதிக்கப்படுமோ? படாது. `வேடநெறி நில்லார் வேடம் பூண்டு என்ன பயன்? (திருமந்திரம் 240) சிவவேடமே மெய்ப்பொருள் எனத்தொழுது கொண்டொழுகுதலே வேட நெறி. `மாலறநேய மலிந்தவர் வேடமும் ... ... அரன்` என்பது சிவஞானபோதம்.(சூ . 12).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையால்
காவன் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
யாவருஞ் சென்றேத்து மாமாத்தூ ரம்மானத்
தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே.

பொழிப்புரை :

பொன்மயமான மேருமலையை வில்லாகக் கொண்டு அதன்கண் பொருந்திய கொடியகணையால் காவலை உடைய மும்மதில்களை எய்து அழித்தவனும், நெற்றிக்கண்ணனும் எல்லோரும் சென்று வணங்கிப் போற்றும் ஆமாத்தூர் அம்மானும் ஆகிய சிவபிரான் தேவர்கள் தலைவணங்கும் இந்திரனுக்கும் தேவன் ஆவன்.

குறிப்புரை :

சாமவரை என்பது மதில்; திரிபுரம். யாவரும் - சாவாதவர், பிறவாதவர், தவமே மிக உடையார் மூவாதபல் முனிவர் எல்லோரும். (தி .1 ப . 12 பா .6.) அகரச்சுட்டு - உலகறிசுட்டு. பண்டறி சுட்டுமாம். தேவர் தலைவணங்கும் தேவர் - இந்திரன், பிரமன், மால் முதலியோர். தேவர்க்கும் தேவன் - தேவதேவேசனாகிய சிவபிரான். `தேவர்கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை மூவர்கோனாய் நின்ற முதல்வன்` (திருவாசகம்) அம்மான் - தேவனே என்று முடிக்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி யாமாத்தூ ரம்மானைக்
கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே.

பொழிப்புரை :

யாவராலும் ஒழிக்கப்படாத கூற்றுவனை ஒழித்து, மலைமகளைத் தனித்து வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு பாதியை அளித்து மாதொருபாகன் என்ற வடிவத்தைக் காட்டியவனும், ஆறாத தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக் கூறாத நாக்குடையவர் நாவிருந்தும் ஊமையர் எனக்கருதப்படுவர்.

குறிப்புரை :

மாறாத கூற்றைமாற்றி - ஒழியாத இயமனை ஒழித்து `மலைமகள் - இமாசல குமாரி (அம்பிகை) வேறாக நில்லாத வேடம் - அர்த்தநாரீசுவரவடிவம். ஆறாத - தணியாத. கூறாத - புகழ்ந்து வாழ்த்தாத கூறாத நாக்களே: ஊமைகளே என்றபடி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

தாளா லரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
நாளா திரையென்றே நம்பன்ற னாமத்தால்
ஆளானார் சென்றேத்து மாமாத்தூ ரம்மானைக்
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே.

பொழிப்புரை :

தோல்வி உறாத இராவணனின் தோள் வலிமையை அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு உகந்தநாள் திருவாதிரையாகும் எனக்கருதித் தங்கள் விருப்புக்கு உரியவனாகிய, அடியவர் சென்று வழிபடும் ஆமாத்தூர் அம்மான் புகழைக் கேளாச்செவிகள் எல்லாம் செவிட்டுச் செவிகள் ஆகும்.

குறிப்புரை :

தாள் - திருவடி. தலைமகன் - கோமகன்.(பா .2.) நாள் ஆதிரை - திருவாதிரை நாள். நம்பன் - விருப்பிற்குரியவன் (சிவன்) ஆள் - அடிமை. நாமத்தால் - திருவைந்தெழுத்தால்; திருப்பெயர்களாலுமாம். நாமத்தால் ஏத்தும் ஊர் என்க. கேளாச்செவிகளே - செவிட்டுக்காதுகளே என்றபடி. கேளாமை - சிவபுராணம், சிவகீர்த்தி, சிவநாமம் முதலியவற்றைக் கேட்டல் இல்லாமை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளு மவன்பெருமை யொப்பளக்குந் தன்மையதே
அள்ளல் விளைகழனி யாமாத்தூ ரம்மானெம்
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.

பொழிப்புரை :

கருடப்பறவை தாமரை ஆகியவற்றை இடமாகக் கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால் தியானிக்கப்படும் சிவபிரானது பெருமை அளவிடற்கு உரியதோ? சேறாக இருந்து நெற்பயிர் விளைக்கும் கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானாகிய எம் வள்ளலின் திருவடிகளை வணங்காத வாழ்க்கையும் வாழ்க்கையாமோ?

குறிப்புரை :

புள் - கருடப் பறவை, கமலம் - தாமரை. கைக்கொண்டார் - ஊர்தியாக் கொண்டமால், ஆசனமாகக் கொண்ட அயன், உள்ளும் அவன் - தியானிக்கப்படும் அப்பரமசிவனது. ஒப்பு அளக்கும் தன்மையதே - ஒப்பாக அளவிடப்பெறும் தன்மையை உடையதோ! இல்லை என்றபடி. அள்ளல் - சேறு. வள்ளல் - எல்லாம் அருளும் பரம் பொருளினும் வேறு வள்ளல் உண்டோ? கழல் - (தானியாகு பெயர்) திருவடி. பரவா - வாழ்த்தாத. வாழ்க்கையோ - ஒரு வாழ்வா (மதிக்கப் படு)மோ? வாழ்வன்று என்றபடி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை புலானாற வீருரிவை போர்த்துகந்தான்
அச்சந்தன் மாதேவிக் கீந்தான்ற னாமாத்தூர்
நிச்ச னினையாதார் நெஞ்சமு நெஞ்சமே.

பொழிப்புரை :

மகளிர் பிச்சையிட்டுப் பின்னே வர, தன் தலைமைத்தன்மை கெடாதபடி, உமையம்மை அஞ்ச இழிவான புலால் மணம் வீசும் யானைத்தோலைப் போர்த்து அழியாது மகிழ்ந்தவனாகிய சிவபிரானது ஆமாத்தூரை நாள்தோறும் நினையாதார் நெஞ்சம் நெஞ்சாகுமா?.

குறிப்புரை :

கோ - தலைமை. சார -(தன்னையே) பொருந்த. கொச்சை - இகழ்வு. உரிவை தோல் - யானைத்தோல் போர்த்தும். மாயாதிருத்தல்பற்றிக் `கோசார` என்றார் (சிந்தாமணி . 2787 உரை பார்க்க) `யானையின் பசுந்தோல் பிறர் உடம்பிற்பட்டால் கொல்லும் என்றுணர்க` என்றார் நச்சினார்க்கினியர், பின்சாரப் போர்த்துகந்தான், கோசாரப் போர்த்துகந்தான் என்றியைத்துப் பொருள் உணர்க. `கோசாரங்` என்று பாடபேதம் உண்டு என்று காட்டியுள்ளார் மதுரை ஞானசம்பந்தப்பிள்ளை. கோ - மலை. யானைக்கு உவமையாகு பெயராக்கொண்டு. யானைசார எனவும் பொருந்தும். தன் மாதேவிக்கு அச்சம் ஈந்தான் என்றது யானையை உரித்த வரலாறுபற்றியது.(பார்க்க: தி .1 ப .75 பா .7.) `மலைக்கு மகள் அஞ்சமதகரியை உரித்தீர்` (தி .7 ப .9 பா .1.).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

ஆட லரவசைத்த வாமாத்தூ ரம்மானைக்
கோட லிரும்புறவிற் கொச்சை வயத்தலைவன்
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

படம் விரித்து ஆடும் பாம்பை இடையில் கட்டிய ஆமாத்தூர் அம்மானைக் காந்தள் மலரும் கரிய காடுகளைக் கொண்ட கொச்சைவயம் என்னும் சீகாழிப்பதிக்குத் தலைவனாகிய நாடற்கு அரிய புகழை உடைய ஞானசம்பந்தன் பாடியருளிய இப்பாடல்களை வல்லவர்க்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

ஆடல் அரவம் - படம் விரித்து ஆடுதலையுடைய பாம்பு. அசைத்த - கச்சாகக்கட்டிய. கோடல் - வெண்காந்தள். இரும் புறவு - பெரியகாடு. முல்லை நிலம். புறவு, கொச்சை வயம் காழியின் வேறு பெயர்கள். பாவம் இல்லை ஆகும் என்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றான் மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவேல் ஏந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

மாதொருபாகனும், குளிர்ந்த பிறைமதி சூடிய செஞ்சடையினனும் கருமை விரவிய நீலமணி மிடற்றானும், வேதப்பாடல்களைப் பாடுவோனும், நெய்பூசப் பெற்ற மூவிலை வடிவமான சூலத்தை ஏந்திப் பெருகி ஒளிர்கின்ற கையை உடையோனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினமாகும்.

குறிப்புரை :

தையல் - உமாதேவியார். கூறு - இடப்பாகம். மை - மேகம். உலாம் - ஒத்த. நிவந்து - மேலோங்கி. ஒளி - தீ. கைச்சினம் - இந்திரனது கைச்சின்னம் (குறி). சிவபிரான் திருமேனியில்பட்டது பற்றிய காரணப்பெயர். 1.2.3.6. ஆம் பாடல்களில் உணர்த்திய மறைப்பாடல் இத்தலத்தின் விசேடமாதலறியலாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கு மாடலினான் நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.

பொழிப்புரை :

விடம் பொருந்திய கண்டத்தினனும், வெண்மையான வளையல்களை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவனும், படம் எடுத்தாடும் பாம்பினை அரையில் கட்டியவனும், பகைவரின் முப்புரங்களை எரித்தவனும், நடனம் ஆடுபவனும், நான்மறைகளைப் பாடுபவனும், மதயானையை உரித்ததோலினனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

விடம் - நஞ்சு. மல்கு - நிறைந்த. கண்டத்தான் - கழுத்தினன். பற்றாதார் - பகைவர். (தாரகாட்சன் முதலிய மூவர்). நடம் - தாண்டவத்தின் வகை. ஆடல் - ஆடுதல். `நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்` (திருவாசகம்). கடம் - மதநீர்; காடுமாம். உரியான் - தோலுடையான்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும்
ஆடலா னங்கை யனலேந்தி யாடரவக்
காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

பாடல்களோடு கூடிய நான்மறைகளை அருளியவனும், பசிய கொன்றையைப் பாம்போடு சூடியவனும், வெண்மையான பிறைமதி, செறிந்த கரந்தைத்தளிர் ஆகியன சூடி ஆடுபவனும், அழகிய கையில் அனல் ஏந்தி, ஆடும் அரவுடன் இடுகாட்டில் உறைபவனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

சூடல் - சூடுதல். துன்று - நெருங்கிய. கரந்தை - பூ. காடலான் - காட்டினன். `அரவக்காடலான் - சடைக்காடு தாமரைக் காடு, வெள்ளக்காடு` போல மிகுதியை உணர்த்தியது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்
சுண்டபிரா னென்றிறைஞ்சி யும்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொன்னகர மூன்றுடனே வெந்தவியக்
கண்டபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

பொழிப்புரை :

முற்காலத்தே தேவர்கள் கூடித்திருப்பாற் கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்ட தலைவன் என்ற நன்றி உணர்வோடு தேவர்கள் தொழுது ஏத்தப், பகைவருடைய பழமையான முப்புரங்களையும் வெந்தழியுமாறு செய்தவனாகிய சிவபிரான் மேவிஉறையும் கோவில் கைச்சினம்.

குறிப்புரை :

பண்டு - முன்பு. அமரர் - தேவர். படுகடல் - ஆழ்கடல். விண்டவர்கள் தொல்நகரம் - பகைவர்களின் பழைய திரிபுரம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினான்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்
சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடனஞ்சுண்டநங்கைக்
காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

தேய்ந்து வளரும் வெண்பிறையை அணிந்தவனும், சிவந்ததிருமேனியினனும், பொருந்த விளங்கும் வெண்ணீற்றினனும், மாதொருகூறனும், வருந்தி அமரர் வேண்டப்பெரிய கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனும், மன்மதனை எரித்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

தேய்ந்து மலி - குறைந்து வளரும். திங்களுக்கு இயல்பு அடைமொழி. இது சிவபெருமான் திருமுடிமேற் பிறைக்கு அன்று. இலங்கு - விளங்கும். மாது - உமாதேவியார். சாய்ந்து - மெலிந்து, ஓடியெனலுமாம். அநங்கை - அநங்கனை. உருவிலியாகிய மன்மதனை, `பெருந்திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்\\\\\\\" (ப.349 பா.9) `மாய்ந்தன தீவினை.... அநங்கைக் காய்ந்தபிரான் கண்டியூர் எம்பிரான்`(தி.4 பா.93 ப.9). அநங்கனை என்பது அநங்கை எனக்குறைந்தது போலும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்டலையா னாடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேல்
கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

மாதொரு கூறனும், நிலையான வேதங்களை ஓதுபவனும், அழகிய கையில் வெள்ளியதொரு தலையோட்டை ஏந்தியவனும், ஆடும் பாம்பினைப் பூண்டு மகிழ்ந்தவனும், முடியில் திங்கள், பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

அங்கையோர் வெண்டலையான் - பிரமகபாலத்தை ஏந்திய கையன். பூண்ட அரவம் - அணிந்த பாம்பு. முறையே திருமேனியிலும் திருமுடியிலும் இருத்தல்பற்றி ஆதலின் கூறியது கூறலன்று. (ப. 155 பா.7 பார்க்க).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
எரிகணையான் முப்புரங்க ளெய்துகந்த வெம்பெருமான்
பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்
கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

வரிகளை உடைய பாம்பினை நாணாகவும், பெரிய மலையை வில்லாகவும் கொண்டு எரிபொருந்திய கணையால் முப்புரங்களை எய்து அழித்து மகிழ்ந்த எமது பெருமானும், நெற்பொறியைத்தூவும் சுடலையாகிய ஈமப்புறங்காட்டில் ஆடுபவனும், கரியுரி போர்த்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

வரி அரவு - வாசுகியென்னும் பாம்பு. நாண் - வில்லின் நாண் (கயிறு). மால்வரை - பெரிய மேருமலை. எரி கணை - அக்கினியை நுனியிலுடைய பாணம். சுடலை - சுடுதலைக்கொண்ட. ஈமப் புறங்காடு - புறத்தேயுள்ள ஈமக்காடு. கரி உரி - யானைத்தோல். போது - மலரும் பருவத்தது. நீதியினால் ஏத்த - முறைப்படித் துதிக்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

போதுலவு கொன்றை புனைந்தான் றிருமுடிமேல்
மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடும்
காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே .

பொழிப்புரை :

உமைமாது அஞ்சக் கயிலை மலையைப் பெயர்த்த வாளரக்கனாகிய இராவணன் முறையோடு துதிக்க அவனை முன் போல விளங்கச் செய்து திருமுடிமேல் கொன்றைமலர் மாலையைப் புனைந்தவனும், இடுகாட்டில் நின்று ஆடுவதில் விருப்புடையவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறை கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

திருமுடிமேல் கொன்றை மாலையை அணிந்தான்.
முடி போதுகள் பொருந்திய கொன்றை, உலவு கொன்றை - வினைத் தொகை.
உமையாள் அஞ்ச மலையை எடுத்தான் அரக்கன்.
நிகழ் வித்து - (பண்டுபோல்) விளங்கச்செய்து.
புனைந்தானும் காதலி னானும் ஆகிய சிவபெருமான் கைச்சினம் என்றியைக்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும்
எண்ணறியா வண்ண  மெரியுருவ மாயபிரான்
பண்ணிசையா லேத்தப் படுவான்றன் னெற்றியின்மேல்
கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.
 

பொழிப்புரை :

மாவலியிடம் மூன்றடி மண் இரந்த திருமாலும், தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் எண்ணவும் இயலாதவாறு எரியுருவாய் நீண்ட பிரானும், அடியவர்களால் பண்ணிசையோடு ஏத்தப்படுபவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.

குறிப்புரை :

இரந்த - மாவலியினிடத்து யாசித்த. எண் - எண்ணம். பண்ணிசையால் ஏத்தப்படுவான், `ஏழிசையாய் இசைப் பயனாய்` விளங்குதல்பற்றியது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையா லேத்திப் பயின்ற விவைவல்லார்
விண்ணவரா யோங்கி வியனுலகம் ஆள்வாரே.
 

பொழிப்புரை :

குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட காழிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நுதல் விழிநாட்டத்து இறையோன் மேவி உறையும் கோயிலைக் கொண்டுள்ள கைச்சினத்தைப் பண்ணிசையோடு ஏத்திப்பாடிய இப்பதிகத்தை ஓதவல்லவர் விண்ணவராய் உயர்ந்து அகன்ற அவ்வுலகை ஆட்சிபுரிவர்.

குறிப்புரை :

பண்ணிசையால் ஏத்திப்பயின்ற இவை என்றதால்; ஆசிரியருடைய இசை உணர்வின் மிகுதியையும் இப்பதிகத்தைப் பலமுறைபாடி மகிழ்ந்ததையும் உணரலாகும். வியனுலகம் - சொர்க்கம், வீடுமாம். வியல் (வியன்) - அகலம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.

பொழிப்புரை :

பக்கத்தே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு, குளிர்ந்த மதி, ஊமத்தை மலர் ஆகியனமேலே பொருந்தப்பெற்ற செஞ்சடையினனும், வெண்மையான பூணநூல் சேர்ந்த மார்பினனும் ஆகிய நாலூர் மயானத்து இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும் மனமுடையார்க்கு மறுபிறப்பு வந்து பொருந்தாது.

குறிப்புரை :

பால் - பக்கத்தில். ஊரும் - ஊர்ந்து செல்லும். மத்தம் - ஊமத்தை. நம்பான் - சிவன். மால் - அன்பு சிவபத்தி, (பதி -191: பா -6) `மாலுங்காட்டி வழிகாட்டி வாராவுலக நெறியேறக் கோலங்காட்டி யாண்டான்` (திருவாசகம் ஆனந்த மாலை.3) `மால் கொடுத்து ஆவி வைத்தார் மாமறைக் காடனாரே` (தி .4 ப .33 பா .4) `மாலொடுந் தொழுவார் வினை வாடுமே` (தி .5 ப .34 பா .9) `என்னிடைமாலும் உண்டு இறை என்றன் மனத்துளே` (தி .5 ப .35 பா .5) மறுபிறப்பு வந்து ஊரா - மறுபிறவிகள் வந்து பரவாவாம். ஊரா - செலுத்தா எனலுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

சூடும் பிறைச்சென்னிச் சூழ்கா டிடமாக
ஆடும் பறைசங் கொலியோ டழகாக
நாடுஞ் சிறப்போவா நாலூர் மயானத்தைப்
பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே.

பொழிப்புரை :

பிறை சூடிய சென்னியுடன், காடு சூழ்ந்த சுடுகாட்டில் பறை சங்கு ஒலிகளுடன் அழகாக ஆடுபவன் எழுந்தருளிய, பலராலும் நாடும் சிறப்புக்குன்றாத நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்புடையோரைப் பாவம் பற்றா.

குறிப்புரை :

அழகாக ஆடும் என்க. ஓவா - ஒழியாத. சிறப்போர் பால் - சிறப்புடையோரிடத்தில். பாவம் பற்றாவாம் - பாவங்கள் பற்றமாட்டாதொழிவனவாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

கல்லா னிழன்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்
றெல்லா வறனுரையும் இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்
சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே.

பொழிப்புரை :

கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து, விரும்பி வந்த புகழ் உடையவராகிய சனகாதி நால்வர்க்கு அன்று எல்லா அறவுரைகளையும் இன்னருளால் சொன்னவனாய் எழுந்தருளிய நல்லவர் தொழுது ஏத்தும் நாலூர் மயானத்து இறைவன் புகழைச் சொல்லாதவர் சைவநெறிக்கண் செல்லாதவர் ஆவர்.

குறிப்புரை :

காம் உறு - காமம் (அன்பு) உற்ற. எல்லா அறன் உரையும் - சகல தர்மோபதேசங்களும். சொல்லாதவர் - துதிக்காதவர். தொல்நெறி - அனாதியான சைவமார்க்கம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே.

பொழிப்புரை :

அழகால் நிறைந்த கொன்றைமாலையைச் சூடியவன், கொல்லும் புலியினது தோலை ஆடையாக உடுத்தவன், நீலநிறம் பொருந்திய கண்டத்தினன். நெற்றிக்கண்ணன், உலகோர் சென்று பரவிப்புகழும் நாலூர்மயானத்தில் விளங்கும் சூலத்தினன் என்பாரைத் தொல்வினை சூழா.

குறிப்புரை :

கோலத்து ஆர் - அழகால் நிறைந்த. நீலத்து ஆர் - நீலத்தைப் பொருந்திய. தொல்வினை - சஞ்சிதம். வினைசூழாவாம் என்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்
பிறையார் வளர்சடையான் பெண்பாக னண்பாய
நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
இறையானென் றேத்துவார்க் கெய்துமா மின்பமே.

பொழிப்புரை :

விடக்கறை பொருந்திய நீலமணி போன்ற மிடற்றினன். கையில் கபாலம் ஏந்தியவன். மழுஏந்தியவன். பிறை வளரும் சடைமுடியினன். தன்பால் நட்புக்கொண்ட பெண்பாகன். தேன் பொருந்திய பொழில்கள் புடையே சூழ்ந்துள்ள நாலூர் மயானத்து இறைவன் என்று அவனை ஏத்துபவர்க்கு இன்பம் வந்துறும்.

குறிப்புரை :

கறை - விஷக்கறை. மணி - நீலமணியை ஒக்கும். மிடறு - திருக்கழுத்து. கட்டங்கன் - மழுவேந்தியவர். பெண்பாகன் - மங்கை பங்கன். `ஏழைபங்காளன்`(திருவெம்பாவை) நறை - தேன். இறையான் - இறைவன். இன்பம் எய்துமாமென்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்
பண்ணார் மறைபாடி ஆடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே.

பொழிப்புரை :

கண்பொருந்திய நுதலினனும், கனலை ஆடும் களமாகக் கொண்டவனும் பண்ணமைதியுடைய வேதங்களைப் பாடுவோனும், நடனம் ஆடும் பரஞ்சோதியும், பகைவருடைய முப்புரங்களை எய்தவனும் ஆகிய சிவபெருமான் உறையும் நாலூர் மயானத்தை நண்ணாதவர் எல்லாம் நன்னெறியைச் சாரார்.

குறிப்புரை :

ஆடு இடம் கனல் ஆக - ஆடுகின்ற இடம் நெருப்பாக. `தீயாடி`, அனலாடி; இறைவன் ஆடலுக்குப் பாடல் பண்ணார் மறை. நண்ணார் - பகைவர். நண்ணாதவர் - அடையாதவர், அணுகாதவர். நன்னெறி - சரியை, கிரியை யோகமென்னும் அழிவில்லாத தவத்தால் வரும் ஞானம். (சிவஞான -சூ -8- உரை).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்
பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்
நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார்க் கேலா விடர்தானே.

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணிலிருந்து பரவிய வெம்மை வேகத்தால் மன்மதனைக் காய்ந்து உகந்தவனும், மாதொருபாகனும் யானைத்தோல் போர்த்த மார்பினனும் ஆகிய சிவபெருமான் உறைவதும் நட்புக்குணம் அமைந்தோர் வாழ்வதுமான நாலூர் மயானத்தைத் தியானிக்கும் சிந்தையை உடையார்க்கு இடர் வாரா.

குறிப்புரை :

பாவுதல் - பரவுதல். நாகம் - யானை. நண் - (நள்) நண்ணுதல், நள்ளுதலுமாகும். எண் - தியானம். இடர் ஏலா.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்
வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
நத்தி னொலியோவா நாலூர் மயானத்தென்
அத்த னடிநினைவார்க் கல்ல லடையாவே.

பொழிப்புரை :

பத்துத்தலைகளை உடைய இராவணனைப் பாதத்து ஒரு விரலால் மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்து, பின் அவனுக்கு வாளும் நாளும் கொடுத்தவனும், சங்கொலி முழங்கும் நாலூர் மயானத்தில் விளங்கும் என் தலைவனுமான சிவபெருமான் திருவடிகளை நினைவாரை அல்லல்கள் அடையா.

குறிப்புரை :

வாளோடு நாள் - வாளும், ஆயுளும். நத்து - சங்கு. அத்தன் - பிதா. அத்தன் - அத்தை. ஆத்தன் - ஆத்தான் என்பவை தந்தை தாயரைக் குறித்த பழைய வழக்கு. `ஆத்தானை அடியேன் தனக்கு என்றும்` (தி .7 பா .680)`அத்தை` என்பது தாயைக் குறித்து இன்றும் வழங்குகிறது. அல்லல் - துன்பங்கள்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடு மாறங்கம் நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் தேடிமேலொடு கீழ் காணாவகையில் வளர் எரியாய் நின்ற மேன்மையாளனும் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவனும் நாலூர் மயானத்துப் பாலும் நெய்யும் ஆடி மகிழ்பவனும் ஆய எம்பெருமானின் பாதங்களைப் பணிவோம்.

குறிப்புரை :

நேட - தேட. நாலுவேதம் ஆறு அங்கம். பாலோடு நெய் - பாலும் நெய்யும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

துன்பாய மாசார் துவராய போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே.

பொழிப்புரை :

துன்பமாகிய அழுக்குடையவர்களும், பழுப்பாகிய போர்வையை அணிந்தவர்களுமான சமணபௌத்தர்களின் பொருளற்ற பேச்சுக்களைக் கேளாது புண்ணியத்தின் வடிவாய் விளங்கும் பெருமானை நட்போடு `சிவாய` என்னும் மந்திரத்தைக் கூறிக் கொண்டு நண்ணுங்கள். அப்பெருமான் நாலூர் மயானத்தில் இன்ப வடிவினனாய் இருந்தருளுகின்றான். அவனை ஏத்துவார்க்கு இன்பம் விளையும்.

குறிப்புரை :

துன்பு ஆய - துன்பமாகிய. மாசு - அழுக்கு. ஆர் - நிறைந்த. துவர் ஆய - பழுப்பாகிய. புன் பேச்சு - பொருளின்மையால் புல்லிய பிதற்றுரைகள். புண்ணியனை - சிவபுண்ணிய சொரூபனை, `புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே`( சிவஞானசித்தியார் . சூ -8) நண்பு - செறிவு. யோகம் - நட்பும் ஆம். இதிற்குறித்த திருவைந்தெழுத்து அதிசூக்கும (காரண) பஞ்சாட்சரம். `விண்ணினார் பணிந்தேத்த வியப்புறும், மண்ணினார் மறவாது சிவாயவென்று, எண்ணினார்க்கு இடமா எழில்வானகம், பண்ணினாவர் பாலைத்துறையரே`(தி . 5 ப . 51 பா .6) இன்பு - பேரின்பம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்
நாலு மறையோதும் நாலூர் மயானத்தைச்
சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக்
கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே.

பொழிப்புரை :

உலகம்புகழும் காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், நான்மறைகளை அந்தணர் ஓதும் நாலூர் மயானத்தில் விளங்கும் பெருமானின் சீலத்தையும் புகழையும் போற்றிப்பாடிய இப்பதிகத்தைச் சிறந்தமுறையில் ஓதிவழிபட வல்லவர்க்கு உயரிய புகழ் கூடும். வான் உலகில் இன்பம் ஆர்ந்து இருத்தல் இயலும்.

குறிப்புரை :

ஞாலம் - உலகம். சீலம் - சிவபெருமானுடைய சீலத்தை. ஒழுக்கத்தாலும் புகழாலும் எனலும் பொருந்தும், ஏலும் - இயலும். ஏற்குமெனலுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

மட்டு - கள். கானல் - கடற்கரைச்சோலை. மட மயிலைக் கட்டு - இளமயில்கள் ஆர்ப்புமிக்க ஊரில் உள்ள திருக்கோயில். மயிலார்ப்பூர் என்பதன் மரூஉ மயிலாப்பூர். இட்டம் - திருவுள்ளத்தன்பு.(இஷ்டம்) ஊர் மயிலை, மயிலாப்பூர், கோயில் கபாலீச்சரம். ஒட்டிட்ட பண்பு - அத்துவிதக்கலப்பு. `உணரப்படுவாரோடு ஒட்டிவாழ்தி` `ஒட்டியவனுளமாகில்லான்`. உருத்திர பல்கணத்தார் - மாகேசுரர்; அடியவர். மதிசூடும் அண்ணலாரடியார்தமை அமுது செய்வித்தல், கண்ணினால் அவர் `நல்விழாப்பொலிவு கண்டார்தல்`. அட்டு - திருவமுது அமைத்து. இட்டல் - இடுதல்.(நட்டல் - நடுதல் போல) இதிற் குறித்த திருவிழா. பூரட்டாதியில் நிகழ்வது. இத்திங்கள் முதலாக ஒவ்வொன்றிலும் நிகழ்த்தும் திருவிழாச் சிறப்பு மேல் வரும் பாக்களிற் குறிக்கப்பட்டமை உணர்க. போதியோ - போவாயோ? வருவாய் என்றவாறு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன்தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவமுனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

மை - கண்ணிற்கிடும்மை, கைப்பயந்த நீறு - கைமேற் பயன்தந்த திருநீறு. வழிபடுவார் கையில் அர்ச்சகர் வடிவாயிருந்து கொடுத்த திருநீற்றினன். திருநீறு வடிவாயுள்ளானெனலும் சிறந்ததே, `கைப்பூசு நீற்றான்`, (பா .5) ஐப்பசித்திருவோண விழாச் சிறப்பும் அரியதவத்தோர்களாகிய அடியார்கள் திருவமுது செய்த காட்சியும் குறிக்கப்பட்டன. ஓணத்திற் கொடியேற்றம். கிருத்திகையில் தீர்த்தவாரி. தலவரலாறு காண்க. இராமர் வழிபாடு, ஓணம் திருமாலின் நாள்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

வளை - வளையல். மறுகு - தெரு. வண்மை - தெருவினர் கொடைவளம். துளக்கு - அசைவு. தளர்வு, வருத்தம். இல் - இல்லாத. இறைவனைக் குறித்தால் வருத்தமில்லாதவன் என்க. கபாலீச்சரத்தைக் குறித்தால் அசைவில்லாத, தளர்வில்லாத என்க. தளத்து - சாந்தினை. கார்த்திகை விளக்கீடு இளமகளிர் கொண்டாடும் திருவிழா. கார்த்திகைத் திருவிளக்கீட்டு விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும் சிவாகம புராணங்களிலும் உணர்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

ஊர் திரை வேலை - ஊருந்திரையுடைய கடல். ஊர்தல் - மேற்படுதல். பரத்தல். வல்லார் -(நெய்தல் நிலமாக்கள்) வேலால் கடல் மீன்களைக் கொல்லவல்லவர்கள். கொற்றம் - கொன்று அடையும் வெற்றி. கார் - மேகம். ஆர்திரைநாள் - திருவாதிரை என்னும் மீன். எதுகை நோக்கின், `ஆர்திரை` என்றதே உண்மைப் பாடம் ஆகும். `ஆர்திரையான், ஆர்திரையான் என்றென்றயருமால் ஊர்திரை வேலியுலகு` என்னும் முத்தொள்ளாயிர முதற்செய்யுளமைதியை உணர்க. இது மார்கழித் திருவாதிரை விழாச்சிறப்புணர்த்திற்று.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

`மைப்பயந்த வொண்கண்` கைப்பயந்தநீற்றான். (பா - 2) நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் - நெய்யால் மறைக்கப்பட்ட ஒள்ளிய சோறு. அடியார், வறியர் முதலோர்க்கு அளிக்கும் தைப்பூசவிழாச் சிறப்பு இதில் குறிக்கப்பட்டது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமகநாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

தென்னையின் மடல் நீட்சியுடைமைபற்றி, `மடல் ஆர்ந்த தெங்கு` எனப்பட்டது. மாசிமகநாளன்று கடலாட்டு விழா நிகழ்ந்தவுண்மை குறிக்கப்பட்டது. அடல் - வலிமை. ஆனேறு - விடை. நடம் ஆடல் - கூத்தாடுதல்; உலாவுதலுமாம். பரவி - வாழ்த்தி, மாசிக் கடலாட்டுச் சிறப்புணர்த்தியது. `சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறு`. `பண்ணினேர் மொழி மங்கைமார் பலர் பாடியாடிய வோசை ... பொலியும் ... காழி`. `பாலினேர் மொழி மங்கைமார் நடமாடி இன்னிசைபாட`. எனப்பின் வருதல் அறிக. (ப .185-186)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக்காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

மலிவிழா வீதி - விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதி. `வீதிகள் விழவின் ஆர்ப்பும்`. கலிவிழா - திருவருள் எழுச்சியை விளைக்கும் திருக்கோயில் விழாக்கள். முன்னவை பல்வகைக்களிவிழாக்கள். பலி - உருத்திரபலி; திசைதோறும் இடுவது. ஒலி - விழாவின் ஆரவாரம். பங்குனி உத்தர விழாச்சிறப்புணர்த்திற்று.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு பாடும் பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது முறையோ?

குறிப்புரை :

தண்ணா:- வெம்மையைச் செய்யும் என்ற குறிப்பு. சாய்தல்; தோள்கட்கும் உகத்தல்; (உயர்தல்) தாள்கட்கும் கூறிய திறம் கருதத்தக்கது. இது சித்திரையில் நிகழ்ந்தது எனக்கொள்ள இடனுண்டு. அட்டமிநாள்விழா முற்காலத்தது. இக்காலத்தார் சித்திரைப் பௌர்ணமி கொண்டனர். பதினெண்கணங்களுக்கும் அட்டமிநாள் விழாவிற்கும் உள்ள தொடர்பு புலப்பட்டிலது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும்
முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! நல்ல தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓங்கிய, மூர்த்தி தன் திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ?

குறிப்புரை :

நல் + தாமரை. முற்றாங்கு - முழுதும் உள்ளபடி. இது பட்டாங்கு, நல்லாங்கு, பொல்லாங்கு என்பன போல்வது. கற்றார்கள் - `கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்` (தி .3 ப .40 பா .3) என்று மேல் ஆசிரியர் அருள்வதுணர்க. `கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன்` (தி .1. ப .129 பா .11) `கற்றல் கேட்டல் உடையார்` என்றதால் நிட்டை முடிய உடையாரை உபலட்சணத்தாற் கொள்க. பொன்தாம்பு (பொற்றாப்பு) பொன்னூசல். (நன் .411. சங்கர) தாம்பு - கயிறு. ஊஞ்சலுக்குத் தாம்பு கருவி. தாப்பிசை. வைகாசியில் ஊஞ்சலாடுந் திருவிழாக்குறித்தவாறு, இப்பாட்டில் `உற்றாங்கு` எனப்பிரித்தது பொருந்தாது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

உரிஞ்சு ஆயவாழ்க்கை அமண் - உடை ஒழிந்த காரணத்தால் உரிந்தது போன்று ஆகிய திகம்பரவாழ்வுடைய சமணர். உடையைப் போர்க்கும் சாக்கியர் என்றதால், சமணர்க்கு அஃதின்மை குறித்தாரெனல் பொருந்துமாறறிக. கருஞ்சோலை - பெரிய சோலை. இருளால்கரிய எனலுமாம். எடுத்து உரைப்ப - (தூற்றுமாறு) கொண்டாட. பெருஞ்சாந்தி - பவித்திரோற்சவம். கும்பாபிடேகம் என்பாரு முளர். ஆண்டுதோறும் கும்பாபிடேகம் புரிவது எளிதன்று. அதற்கீடாகப் பவித்திரோற்சவமே நிகழ்த்துவதுண்டு. இவ்விழா ஆனி முதலிய மூன்று திங்களிலும் நிகழும். நிகழவே ஆண்டுமுழுதும் மயிலைக் கபாலீச்சரத்தில் திருவிழா உண்டு என்றவாறு. பவித்திரோற்சவம் ஆடி முற்பக்கத்துச் சதுர்த்தசியிலும், ஆவணி புரட்டாதிகளில் இருபக்கத்திலும் வரும் எட்டு பன்னான்கிரண்டு நாள்களிலும் பவித்திரம் சாத்தல் வேண்டும்.(சோமசம்புபத்ததி)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

கானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த மயிலையில் விளங்கும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய இறைவன்மீது, தேன் பொருந்திய பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச் செந்தமிழால் ஞானசம்பந்தன் இறைவனது நலம்புகழ்ந்து பாடிய இப்பத்துப்பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர்.

குறிப்புரை :

`தேன்அமர் பூம்பாவைப் பாட்டு` என்பதிலுள்ள பூவிற்குத் `தேன் அமர்` என்று அடை இயல்பாம். வானசம்பந்தத்தவர்- வீடு பெற்ற வித்தகர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
 

பொழிப்புரை :

வெண்காட்டில் உறையும் பெருமான், நுதலிடைக் கண் கொண்டவன்: கையில் கனல் ஏந்தியவன்: உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன்: பிறையணிந்த சடைமுடியினன்: பண்ணில் இசைவடிவானவன்: பயிரை வளர்க்கும் மேகமானவன்: விடைஏந்திய கொடியை உடையவன்.

குறிப்புரை :

கண்காட்டும் - நெருப்புக்கண்ணைக்காட்டும். இவ்வாறே காட்டும் என்பதற்கு முன்னே இரண்டனுருபு (ஐ) விரித்துக் கொள்க. நுதலான், கையான், உருவான், சடையான், உறைவான் என்பன நுதல் முதலியவற்றை முறையே உடைமையால் வந்தது. உறைவானென்பது வினையாலணையும் பெயருமாம். இசையான், புயலான் என்பவற்று இசைவடிவாயும் புயல் (மேகம்) வடிவாயும் விளங்குகின்றான் என்று கொள்க. `ஏழிசையாய் இசைப்பயனாய்`, `ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே` என்பவை காண்க. விடை - எருது. கொடியான் - கொடியை உடையான். உம்மை ஏற்ற பெயர்கள் எழுவாய். கொடியானென்பது பெயர்ப்பயனிலை. (அற்புதத் திருவந்தாதி.98.)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
 

பொழிப்புரை :

மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குளநீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள் சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும். மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர். சிறிதும் சந்தேகம் வேண்டா.

குறிப்புரை :

பேய் - பேய்கள். அடையா - சாரா. பிரிவு எய்தும் - சார்ந்த பேய்களும் இத்தலத்தை வழிபட்டால் நீக்கமுறும். பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர் - பிள்ளை வரங்கேட்டலொடு மற்றைய வரங்களையும் மனத்தில் நினைத்தவாறே அடைவர். ஆயின - வினையாலணையும் பெயர். ஒன்றும் - சிறிதும். ஐயுற - ஐயம் அடைய. வேய் - மூங்கில். அன்ன - ஒத்த, இடைக்குறை. முக்குளம் - சோம சூரிய அக்கினி தீர்த்தங்கள். தோய்வினையார் - முழுகும் செயலுடைய அடியார் முதலியோர். தீவினை தோயாவாம் என்க. தோய்தல் - பீடித்தல், மெய்கண்டதேவநாயனார் தோற்றத்துக்கு இத்திருப்பாடல் திருவருட்குறிப்பாயிருந்தது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

மண்ணொடுநீ ரனல்காலோ டாகாய மதியிரவி
எண்ணில்வரு மியமான னிகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.
 

பொழிப்புரை :

மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி, எண்ணற்றனவாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை எண்திசை, பெண் ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை, சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகழாளனாகிய சிவபிரான், இந்திரன் வழிபடத்திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டு எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

`மண்...இயமானன்` - எட்டுருவம் (அஷ்டமூர்த்தி) `எட்டுக்கொண்டார்`.(திருவுந்தியார்) இகபரம் - இம்மை மறுமை, விண்ணவர்கோன் - இந்திரன். அவனும் வெள்ளானையும் வழிபட்டமை தலபுராணத்திற்காண்க (பா.7.9.) இதில் சிவபிரான் `உலகினை இறந்து நின்றது அரன் உரு.......மூடரெல்லாம்` - (சிவஞான சித்தியார்) என்பதில் குறித்த விஸ்வரூபி விஸ்வாந்தர்யாமி என்னும் இரண்டுநிலைகளை உணர்த்தியவாறு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.
 

பொழிப்புரை :

நஞ்சுண்ட கண்டனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெண்காட்டை அடுத்துள்ள தண்காட்டில் மடல்விரிந்த வளைந்த தாழைமலர் நிழலைக் குருகு என்றெண்ணி நீர்நிலையில் வாழும் கெண்டைமீன்கள் தாமரைப்பூவின் அடியில் மறைய அதனைக்கண்ட கடல்முத்துக்கள் நகைப்பது போல ஒளி விடும் காட்சியால் புலப்படுகிறது.

குறிப்புரை :

மிடற்று அண்ணல் - திருநீலகண்டப் பெருமான். தண் புறவில் - குளிர்ந்த முல்லை நிலத்தில். குருகு - குருகு என்னும் புள். தடம் - குளம். கெண்டை - மீன். பூ - பூவின் பால், விண்ட - விள்ளுதல் உற்ற. முத்தம் - முத்துக்கள். நகை - பல், சிரிப்புமாம். கெண்டையின் அறியாமைச்செயலைக் கண்டு கடல் நகைத்தது என்றது தற்குறிப்பேற்றம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே.

பொழிப்புரை :

கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர்.

குறிப்புரை :

வேலை - கடல். கானல் - கடற்கரைச்சோலை. காலன் மாய்ந்ததால், தூதர் சிவனடியாரிடத்தில் அச்சமுற்றனர். இதிற்குறித்தது திருவெண்காட்டுத் தலத்தில் நிகழ்ந்த சுவேதகேது முனிவர் வரலாறு, (தி.2 ப.61 பா.7) இதனை மார்க்கண்டேய முனிவர் வரலாறு என்றும் கூறுகின்றனர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தா னுறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
 

பொழிப்புரை :

தனது சடைமுடியோடு தண்மதியையும் வெய்ய அரவையும் தாங்கியவனும் ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான், உறையும் கோயில், பசிய கிளிகள் இனிய குரலால் இறைவன் திருப்பெயர்களை ஓதிக்கொண்டு வெண்முகில் சேரும் உயரிய கரியபனை மீது வீற்றிருக்கும் வெண்காடாகும்.

குறிப்புரை :

தண்மை; வெம்மை இரண்டும் முறையே மதியின் நிலவும் பாம்பின் நஞ்சும் குறித்தன. ஒள்மதியம் நுதல் உமை - ஒளி பொருந்திய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியார். கூறு - இடப்பால். பெணை - பெண்ணை, பனை, கிள்ளை நாமம் ஓதவீற்றிருக் கும் காடு என்க. `பாரிசையும் பண்டிதர்கள் பல்நாளும் பயின்றோதும் ஓசை கேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலையாமே` (தி.1 ப.132 பா.1) `வேதத்தொலியாற் கிளிசொற்பயிலும் வெண்காடே` (ப.197 பா.2).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.
 

பொழிப்புரை :

திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவனும், சலந்தராசுரனைப் பிளந்து அழித்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், வினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய இறையவனே ஆவான்.

குறிப்புரை :

மாற்கு - விஷ்ணுவுக்கு, அக்கு - எலும்புமாலை. அயிராவதம் - வெள்ளானை (பா.9). அதனுக்கு - அவ்வெள்ளானைக்கு அருள்மிக்குச்சுரக்கும் என்க. காடும் குளமும் உடையான் என்றும், காடும் முக்குளம் உடையானும் இறையவன்; பிளந்தானும் அசைத்தானும் உடையானும் இறையவனே என்றும் கொள்ளலாம். `வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே` (பா.19,6).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா னுறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
 

பொழிப்புரை :

பண்ணிசை போலும் இனிய மொழியினளாகிய பார்வதிதேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவபிரான் உறையும் கோயில், கண்கள் பொருந்திய தோகையைக் கொண்ட நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வானளாவிய பொழிலில் வரிவண்டுகள் இசைபாடவும் விளங்கும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

மொழியாள் - சொல்லியள் (தேவியார்). பயம் - அச்சம். உன்மத்தன் - பித்துக்கொளி. உரம் - மார்பு. கண் - தோகைக் கண்கள். கருமஞ்ஞை - நீலமயில். மயில் ஆட்டத்திற்கு முடிவு, கடல், இசைவண்டினொலி, `விண்மொய்த்த பொழில்` என்ற தலத்தின் சோலைவளம் இன்றும் உளது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

கள்ளார்செங் கமலத்தான் கடற்கிடந்தா னெனவிவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி யுருகாதா ருணர்வுடைமை யுணரோமே.
 

பொழிப்புரை :

தேன் பொருந்திய செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிகஉயர்ந்தும் ஆழ்ந்தும் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபிரான் வெள்ளானை தவஞ்செய்து வழிபடும் நிலையில் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று மனங்கசிந்து உருகாதவரின் ஞானத்தை மதியோம்.

குறிப்புரை :

கள் - தேன். கமலத்தான் - தாமரை மேலுள்ள பிரமன். கடல் - பாற்கடலில். கிடந்தான் - அறிதுயில் செய்யும் திருமால். `தேசங்கள் தொழநின்ற திருமால்` (தி. 4 ப.7 பா.6). ஆண்மை - ஆளாந்தன்மை, அடிமைத் திறம். கொளற்கு - கொள்ளவேண்டி. உயர்ந்து - மேல் பறந்தும் ஆழ்ந்தும், கீழ்தோண்டிச் சென்றும். உணர்வு அரியான் - உணர்வதற்கு அரியவன்.`வெள்ளானை....வெண்காடு` (பா.7) வெள்ளானைக்காடு என்பது வெண்காடு என்று சுருங்கிற்று எனக்கருத இடமுண்டு. உள் ஆடி - உள்ளம் கசிந்து, உள்ளம் நடுங்கி. உருகாதவரது ஞானப் பேற்றை. உணரோம் - மதியோம். உருக்கம் சிவஞானத்தை எய்துவிக்கும். உருகாமை தற்போதத்தை ஒழிக்காது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.
 

பொழிப்புரை :

போதிமரத்தின் அடியில் தவம் செய்யும் புத்தர்கள், அசோகமரநிழலில் தவம் செய்யும் சமணர்கள் கூறும் வன்புரைகளைப்பொருளாகக் கருதும் பேதையர்களைப் பிரிவீர்களாக. அறிவுடையவரே! இதனைக் கேளுங்கள். வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் பெயர்களை ஓதியவர் ஒரு தீங்கும் இலராவர் என்று உணருமின்.

குறிப்புரை :

போதியர்கள் - சாக்கியர்கள். போதி - அரசமரம். புத்தன் போதி விருட்சத்தின் கீழினன்; போதி வேந்தன், பிண்டியர்கள்- சமணர்கள். பிண்டி - அசோகமரம் `பூமலி அசோகின் புனை நிழல மர்ந்த நான்முகன்` மிண்டு மொழி - வன்புரை. பேதையர்களாகிய அவரைப் பிரிந்து சென்மின். அறிவுடையீர் இதைக் கேண்மின். `மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்` (திருப்பல்லாண்டு) எனல் போல அவர் `சென்மின்` எனலுமாம். ஓதினவர் ஒருதீதும் இலர் என்று உணருமின் என்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் றமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.
 

பொழிப்புரை :

குளிர்ந்த பொழிலால் சூழப்பட்ட சண்பை நகர்த்தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தன், விண்ணிற் பொலியும் பிறைமதி சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப் பண்ணிசை பொலியப்பாடிய இச்செந்தமிழ் மாலைபத்தையும் வல்லவர், மண்பொலிய வாழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர்.

குறிப்புரை :

விண்பொலி வெண்பிறை - ஆகாயத்தில் விளங்குகின்ற வெள்ளைப் பிறை. பண்பொலி செந்தமிழ்மாலை மண் பொலிய வாழ்ந்தவர் விண் பொலியப் புகுவர் என்க. வாழ்ந்தவர் எழுவாய், புகுவார் - பயனிலை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

பண்ணி னேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறுங்
கண்ணி னேரயலே பொலியுங் கடற்காழிப்
பெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.

பொழிப்புரை :

பண்ணிசை போலும் மொழிபேசும் மங்கையர் பலர் பாடி ஆடிய ஓசை கண்ணெதிரே அமைந்து விளங்கும் கடலை அடுத்துள்ள காழிப்பதியில் பெண்பாகனாக விளங்கும் பெருமானையே எம் தலைவன் என்று பலகாலும் கூறும் சிவனடியார்கள் பொருளோடு அருளாலும் குறைவிலர்.

குறிப்புரை :

பண்ணின் - பண்ணிசையின்பத்தை. நேர் - ஒத்த. கண்ணின் நேர் - கண்ணெதிரில். பெண்....... பங்கு - மாதியலும்பாதி, உன்னும் - தியானம் புரியும். `அருளாலும்` என்ற உம்மை இம்மைக்குரிய பொருளாலும் அன்றி என்று இறந்தது தழீஇயிற்று.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்க வங்கமுங்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்ட லங்கெளிதாம் அதுநல் விதியாமே.

பொழிப்புரை :

நீரை முகந்து ஒலித்து வரும் நீண்ட திரைகள் மரக்கலங்களை மோதிக் கடலிலிருந்து எறியும் சங்குகள் தாழைமரங்கள் சூழ்ந்த வயல்களைச் சென்றடையும் பெருமைமிக்க காழிப்பகுதியில் வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலை சூடிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தித் துதிக்கும் மக்களின் வினைகள் நீங்குதல் எளிதாம். அதுவே நல்லூழையும் தருவதாகும்.

குறிப்புரை :

திரை - அலை. வங்கம் - மரக்கலம். கண்டல் - தாழை. புடை - பக்கம். அலம்பிய - ஒலித்த. விண்டல் - நீங்குதல். விதி - பாக்கியம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

நாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழித்
தோடு லாவிய காது ளாய்சுரி சங்க வெண்குழை யானென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே.

பொழிப்புரை :

நாடுமுழுவதும் சிறக்க வேண்டுமென்று நல்லவர்கள் நன்முறையில் ஏத்தி வணங்குவதும், நீண்ட சோலைகளில் எல்லாம் மலர்கள் தேன் துளித்து விளங்குவதுமான கடற்காழியுள் தோடணிந்த காதினர், வளைந்த சங்கவெண்குழைக்காதினர் என்று பலகாலும் சொல்லி நினையும் சிவவேடம் தரித்தவர்கள் வினை நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

ஒளி - புகழ், விளக்கமுமாம், பொழிற்காடு - சோலைக் காடு. தேனை மலர் துளிக்கும் காடு. அக்காட்டையுடைய கடற்காழி. சங்கக்குழை - சங்கினாலாகிய குண்டலம். வேடம் - சிவவேடம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறும்
கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.

பொழிப்புரை :

கரிய பொழில் சூழ்ந்ததும், நிழலில் மணம் கமழும் தேன் ஒழுகி நிறைவதும், அடியவர்கைகள் நிரம்ப மலர் பறித்துக் கொண்டு எழுவதுமான பெருமையால் மிக்க காழிப்பதியை அடைந்து ஐயனே `அரனே` என்று ஆதரித்து முறையாக நினைப்பவர் உலகில் உயர்ந்தாரில் உள்ளவராவர்.

குறிப்புரை :

மை - மேகம். வாசம் - மணம். ஆர் - நிறைந்த. மது - தேன். மல்க - நிறைய. எழுவார் - எழுந்து பூசனை செய்யும் சிவபத்தர்கள். கலி - ஓசை. ஆதரித்து - விரும்பி. உய்யும் ஆறு - பிறவித் துன்புறாது தப்பும்வழி. உயர்ந்தாரின் - உயர்ந்த ஞானியரினத்துள். உள்ளார் - இருப்பவராவர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

மலிக டுந்திரை மேனி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்திலம் விழக்
கலிக டிந்தகையார் மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன் இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியுந் தீவினைநோய் அவைமேவுவார் வீடே.

பொழிப்புரை :

நிறைந்து விரைந்து வரும் அலைகளில் எதிர்வந்து வந்து ஒளிரும் முத்துக்கள் விழுந்து நிறைவதும், வறுமை நீங்கப் பொருள் பொழியும் கையினராகிய வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான காழியில் வலியகாலனை அழித்து மார்க்கண்டேயர்க்கு இன்னுயிர் அளித்த இறைவனை வாழ்த்தத் தீவினைகள் மெலியும். வீட்டின்பம் வந்துறும்.

குறிப்புரை :

மலி - மிக்க. கடு - விரையும். நித்திலம் - முத்துக்கள். அலைமேல் நிமிர்ந்து எதிர் வந்து வந்து ஒளிரும். கலி - வறுமையை. கடிந்த - நீக்கிய. கையார் - கொடைக்கையினர். மருவும் - பொருந்திவாழும். மாணி - பிரமசாரி, மார்க்கண்டேய முனிவர். தீவினை நோயவை மெலியும். வீடு மேவுவர். நோய்கட்குக் காரணம் தீவினை. `நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம். நோய்செய்யார் நோயின்மை வேண்டுபவர்` (குறள்).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

மற்று மிவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தையராய்க் கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானை நினைந்தி ருந்திசை பாடு வார்வினை
செற்றமாந் தரெனத் தெளிமின்கள் சிந்தையுளே.

பொழிப்புரை :

இவ்வுலகில் உள்ளோரும் வானுலகில் வாழ்வோரும் வைகலும் வந்து கற்றறிந்த மனம் உடையவராய்க் கருதி வழிபடும் காழிப்பதியில் நெற்றிக் கண்ணனாகிய பெருமானை நினைந்து இருந்து இசைபாடுவோர் வினைகளைப் போக்கிக்கொண்ட மாந்தர் ஆவர் எனச் சிந்தையில் தெளிவீர்களாக.

குறிப்புரை :

கற்ற - சிவபிரான் திருவடியை வழிபடக் கற்றறிந்த. இசைபாடுவாரை வினையைத் தீர்த்தமாந்தர் (ஞானியர்) என்று சிந்தையுள்ளே தெளிந்துகொள்மின்கள்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

தான லம்புரை வேதிய ரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கானலின் விரைசேர விம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பார் அருள்வேந்த ராவாரே.

பொழிப்புரை :

நன்மையும் பெருமையும் அமைந்த வேதியர்களோடு தக்க மாதவர்களும் தொழுது வணங்க, சோலைகளின் மணம் சேர்ந்து விம்மும் காழிப்பதியுள் ஊனுடம்புடையோர் உயிர்வாழ்தற்குப் பயனாய் அவர்க்கு உறவாகிநின்ற ஒருவனே என்று வாழ்த்தினால் நலம் கொடுக்கும் பெருமான் விளங்குகின்றான். அவனைத் தொழுவோர் அருள் வேந்தர் ஆவர்.

குறிப்புரை :

தான் தொழ என்று கூட்டித் தானே தொழ என்க, பாட்டின் முதலில் அசையாக்குதல் பொருந்தாது. நலம் - நன்மை. புரை - பெருமை. வேதியர்க்கு அடை. வேதியரோடு மாதவர் - மறையுணர்ந்தவரும் பெருந்தவத்தோரும். விரை - மணம். ஊனுள் - உடம்பினுள். ஆர் - பொருந்திய. ஆருயிர் எனலுமாம். உயிர்வாழ்க்கையாய் - உடம்பில் உயிர்வாழ்வது போல, உயிருள் வாழ்கின்ற பெற்றியாகி, `இருள் அடராது உள் உயிர்க்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது` (கொடிக்கவி,) ஆன்நலம் - ஆக்கள் (பசுக்கள்) இடத்திலிருந்து பெறும் பால், தயிர், நெய் ஆகிய நலங்களை. கொடு - கொண்டு உய்ப்பார் - அபிடேகம்புரியப் பயன்படுத்தும் அன்பர், அருள் வேந்தர் - ஞான நாயகர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

மைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங்
கத்து வார்கடல் சென் றுலவுங் கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை யன்ற டர்த்துகந் தாயு னகழல்
பத்தராய்ப் பரவும் பயனீங்கு நல்காயே.

பொழிப்புரை :

வண்டுகள் இசைக்கும் கரிய சோலைகள், கரும்பு ஆலைகள் நெற்பயிர் வளரும் வயல்முதலியன நிறையுமாறு வைகலும் ஒலிக்கும் கடல் நீர் சென்றுலவும் காழிப்பதியுள் விளங்கும் தலைவனே அரனே இராவணனை அன்று அடர்த்து உகந்தவனே உன் திருவடிகளைப் பத்தராய்ப்பரவும் பயனை எங்கட்கு இம்மையிலேயே அருள்வாயாக.

குறிப்புரை :

மைத்த - கருமையுடைய. ஆலைகள் - கரும்பாலைகள் கரும்புகளுமாம். சாலி - நெல். ஆர - நிறைய. வைகலும் - நாள் தோறும். கத்து - ஒலிக்கின்ற. அரக்கன் - இராவணன். அடர்த்து - நெருக்கி. உன - உன்னுடைய. கழல் பரவும் பயன் - பத்தராய்ப் பரவும் பயன். ஈங்கு - இம்மையிலேயே. நல்காய் - அருள்வாய்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

பரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழித்
திருவி னாயக னாய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே.

பொழிப்புரை :

பருத்த கடப்ப மரங்களோடு தென்னை ஆகியன செறிந்தனவும் பசிய வாழையினது பெரிய கனிகளைக் குரங்குகள் உண்பனவுமான சோலைகளும், கரிய வரால் மீன்கள் துள்ளும் வயல்களும் சூழ்ந்துள்ள காழிப்பதியுள் விளங்கும் இறைவனைத் திருமகள் நாயகனான திருமால் செந்தாமரை மலரோனாகிய நான்முகன் ஆகிய இருவரும் காண்பரியானாய் விளங்குவோன் என ஏத்துதல் இன்பம் தரும்.

குறிப்புரை :

பரு - பருத்த. மராம் - வெண்கடம்பு. கதலி - வாழை. திரு - இலக்குமி. ஆய - ஆகிய. செய்ய மாமலர்ச் செல்வன் - செந்தாமரையில் வீற்றிருக்கும் மறையவன் (பிரமன்), காண்பு அரியான் - காண்பதற்கு அருமையுடையவன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்டுகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலார் அழகார் கலிக்காழித்
தொண்டை வாயுமை யோடு கூடிய வேட னேசுட லைப்பொ டியணி
அண்டவா ணனென்பார்க் கடையா வல்லல்தானே.

பொழிப்புரை :

சோற்றுத்திரளை உண்டு திரிபவர்களும், சற்றும் நீங்காது வளவிய நூலாடையைப் போர்த்துழல்பவரும் ஆகிய புறச்சமயத்தினர், கண்டு சேரும் நல்லூழ் அற்றவர். `அழகிய பெருமிதத்துடன் விளங்கும் காழிப்பதியில் கோவைக்கனி போலச் சிவந்த வாயினை உடைய உமையம்மையோடு கூடியவனே, வேட்டுவக் கோலம்கொண்டவனே சுடலைப் பொடிபூசி உலகெங்கும் நிறைந்தவனே` என்பாரை அல்லல்கள் அடையா.

குறிப்புரை :

பிண்டம் - சோற்றுத்திரளை, (நின்றுண்போர்)`நின்று கவளம்பலகொள்கையரொடு மெய்யிலிடு போர்வை யவரும்` (தி .3 ப .69 பா .10) சேரகிலார் - சேரும் அறிவாற்றல் இல்லாதவர். தொண்டை - கோவை (ப்பழம்போற் சிவந்த). வேடன் - வேடுவனான சிவபிரான். அண்டவாணன் - அண்டங்களில் வாழ்பவன்; (வாழ்நன் - வாணன்) `மன்றவாணன்` `அம்பலவாணன்`. அல்லல்தான் அடையா என்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

பெயரெ னும்மிவை பன்னி ரண்டினு முண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
கயலுலாம் வயல்சூழ்ந் தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய ஞான சம்பந்தன் செந்த மிழுரை
உயருமா மொழிவார் உலகத் துயர்ந்தாரே.

பொழிப்புரை :

பன்னிரண்டு பெயர்களை உடைய ஊர் எனப்புகழ் பெற்றதும், கயல்மீன்கள் உலாவும் வயல்சூழ்ந்து அழகு பெற்றதும் ஆகிய காழிப்பதியில் அழகிய நடனம்புரிந்து உறைவோனாகிய பெருமானின் திருவடிகளைப் போற்றி வாழ்த்திய ஞானசம்பந்தனின் இவ்வுரைமாலையை உயர்வு பெறுமாறு கருதி ஓதியவர் உலகத்தில் உயர்ந்தோர் ஆவர்.

குறிப்புரை :

பன்னிருபெயர்களையுடைய (சீகாழிச்) சிறப்புணர்த் திற்று. பெயர் - புகழ். நயன் - நீதி சொரூபன். நயன் - அருள் (கலி .8). நடன் - கூத்தன். அருட்கூத்தன், `ஞானக்கூத்தன்` (சிவப்.பொது.37)`நம்பனே நடனே` (ப.188 பா.4). உயருமா - உயர்ந்து அடையும் முறைமையில்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை சூளி கைக்கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

தென்றல் ஆர்கின்ற அழகிய மாடமாளிகைகளின் சூளிகைக்கு மேலாக நீண்டுயர்ந்த பனைமரத்தில் அன்றில் பறவை வந்து தங்கி மகிழும் ஆமாத்தூர் இறைவனே! விடைமீது ஏறிவரும் வேதியனே! மேருமலையை நீண்ட வில்லாகவும் வரிகளைஉடைய பாம்பை நாணாகவும், மிக்க எரியை அம்பாகவும், காற்றை ஈர்க்காகவும் கொண்டு முப்புரங்களை வென்றது எவ்வாறு?.

குறிப்புரை :

குன்றம் - மேருமலை. சிலை - வில். அரா - பாம்பு. அரி - திருமால். வாளி - அம்பு. கூர் - நுனி. எரி - அக்கினிதேவன். காற்று - ஈர்க்காகிய வாயுதேவன். காற்று ஈர்க்கு (தி .1 ப . 11 பா .6) இவற்றின் உதவியால் மும்மதிலை வென்றவாறு எவ்வாறு? தென்றல் ஆர்கின்ற மாடம் என்க. சூளிகை - வீட்டினுச்சி. பெண்ணை - பனை. அன்றில் - ஒரு பறவை. அம்மான் - அருமகன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

பரவி வானவர் தான வர்பல ருங்க லங்கிட வந்த கார்விடம்
வெருவ வுண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
கரவின் மாமணி பொன்கொ ழித்திழி சந்து காரகி றந்து பம்பைநீர்
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

மறைவில்லாமல் சிறந்த மணிகளையும் பொன்னையும் கொழித்துக் கொண்டு, தன்பால் வீழ்ந்த சந்தனம் கரிய அகில் ஆகியவற்றை அடித்துக்கொண்டு வரும் பம்பையாற்று நீர் ஒழுக்கு வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே! விண்ணவனே! தேவர்களும் அசுரர்களும் கலங்கும்படித் தோன்றிய கரியவிடத்தைக் கண்டு வெருவிப்பரவ அவ்விடத்தை நீர் உண்டு மகிழ்ந்த கருணைக்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

தானவர் - அசுரர். வெருவ - (அஞ்சி) அலறிப்பிதற்ற. விடம் உண்டு உகந்த அருள் என்?. கரவு இல் - மறைவில்லா. சந்து - சந்தன மரம். கார் அகில் - கரிய அகில் மரம். தந்து - அடித்துவந்து. பம்பை, திருக்கோவலூரின் கிழக்கில், அண்மையில், பெண்ணையாற்றினின்றும் பிரியும் ஆறு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

நீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடு மாண்பதுவென்
பூண்ட கேழன் மருப்ப ராவிரி கொன்றை வாள்வரி யாமை பூணென
ஆண்ட நாயகனே ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

பன்றிக் கொம்பு, பாம்பு, விரிந்த கொன்றை மலர் மாலை, ஒளியும் வரியும் பொருந்திய ஆமை ஓடு ஆகியவற்றை அணிகலனாகப் பூண்டு ஆட்கொள்ளும் தலைவனே! ஆமாத்தூர் இறைவனே! நீண்ட சடை அவிழ்ந்து தொங்க, உமையம்மை பாட, திருநீற்றை மெய்யில்பூசித் திருமால் பிரமன் முதலானோர் மாண்ட கடைஊழியில் நீண்ட சுடலையில் நடமாடும் மாட்சிக்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

நேரிழை - உமாதேவியார். `தளரிளவளரெனவுமை பாடத்தாளமிட` (பதி. 247-) மால் அயன்மாண்டவார் சுடலை - ஆறுகோடி நாராயணரும் நூறுகோடி பிரமர்களும் இறந்த நீண்ட சுடு காட்டில். மாண்பு - மாட்சி. என்? கேழல் மருப்பு - பன்றிக்கொம்பு. அரா - பாம்பு. `முற்றலாமை இளநாகமொடு ஏனமுளைக்கொம்பவை பூண்டு` (தி .1 ப .1 பா .2).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்வி ழித்திரு மாதைப் பாகம்வைத்
தேல மாதவ நீமுயல்கின்ற வேடமிதென்
பாலி னேர் மொழி மங்கை மார்நட மாடி யின்னிசை பாட நீள்பதி
ஆலை சூழ்கழனி ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

பாலையொத்த இனிய மொழிபேசும் மங்கையர் நடனம் ஆடி இன்னிசைபாட, கரும்பு ஆலைகள் சூழ்ந்த வயல் வளம் உடைய நீண்ட பதியான ஆமாத்தூர் அம்மானே! சேல்போன்ற கண்ணையும் வெண்ணகையையும் மான்போன்ற விழியையும் உடைய அழகிய உமையவளைப் பாகமாக வைத்துக் கொண்டு இயன்ற பெரியதவத்தை மேற்கொண்டுள்ள உன் வேடம் பொருந்துமாறு எங்ஙனம்?

குறிப்புரை :

நேர்அன - நேரொத்த. கண்ணி - கண்ணையுடையவள். வெள் நகை - வெண்மையுடையவாகிய பற்களையும். மான் விழி - மான்களைப்போல மருண்ட கண்களையும் உடைய. திருமாதை - அழகிய உமாதேவியாரை. ஏல - பொருந்த. தவம் புரிவார்க்கு, மங்கை பங்குடைமை முரண்பட்டசெயல் என்றவாறு. `பால் இன் நேர்மொழி` - பால்போலும் இன்சொல்லையுடைய. ஆலை - கரும்பாலை, கரும்புமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

தொண்டர் வந்து வணங்கி மாமலர் தூவி நின்கழ லேத்து வாரவர்
உண்டியால் வருந்த விரங்காத தென்னைகொலாம்
வண்ட லார்கழ னிக்க லந்தும லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

வண்டல்மண் பொருந்திய வயல்களில் நெற்பயிரோடு கலந்து மலர்ந்துள்ள தாமரைகள் மாதர்களின் ஒளிபொருந்திய முகத்தைப்போலப் பூக்கும் ஆமாத்தூரில் அண்டங்களில் வாழும் தேவர் முதலியோரால் வணங்கப்பெறும் இறைவனே! மாமலர்தூவி நின் திருவடிகளை வணங்கிப் போற்றும் தொண்டர்கள் உணவின்மையால் வருந்தவும், அதற்கு இரங்காததற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

தொண்டர் பூசித்தும் உணவின்றி வருந்துகின்றனர். அது கண்டு இரங்காதது ஏன்? ஆமாத்தூரில் அன்றிருந்த இந்நிலைமையை ஆசிரியர் அறிந்துபாடியருளினார். வண்டல் - நீர் ஒதுக்கிவிட்டமண். ஆர் - நிறைந்த. கழனி :- கழனியில் கலந்து மலர்ந்த தாமரைப் பூக்கள் ஆமாத்தூரிலுள்ள மாதர்களுடைய ஒளி பொருந்திய முகம்போல இருக்கின்றன. தாமரைகள் முகம் போலப் பூக்கும் ஆமாத்தூர் என்று பொருத்திக்கொள்க. அண்ட வாணர் - அண்டங்களில் வாழும் தேவர்கள் முதலியோர். (பதி. 185. பா. 10. இல் உள்ள `அண்டவாணன்` என்பதன் பொருள் வேறு).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

ஓதி யாரண மாயநுண் பொருள் அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
நீதி யாலநீழல் உரைக்கின்ற நீர்மையதென்
சோதி யேசுட ரேசு ரும்பமர் கொன்றை யாய்திரு நின்றி யூருறை
ஆதியே யரனே ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

சோதியே! சுடரே! வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் விளங்கும் முதல்வனே! அரனே! ஆமாத்தூர் இறைவனே! வேதங்களை ஓதி அவற்றின் நுண் பொருள் அறியாது மயங்கிய சனகாதியர் அன்று ஐயம் கேட்க அவர்கட்கு ஞானமார்க்கத்தை முறையோடு ஆல் நிழலிலிருந்து உரைத்தருளிய உன் தகைமைக்குக் காரணம்யாதோ?

குறிப்புரை :

ஆரணம் - வேதம். நால்வர் - சநகாதி முனிவர். நன்னெறி - ஞானமார்க்கம். ஆலநிழல் - `கல்லால் நிழல்`. சுரும்பு - வண்டு. ஆதி - முதல்வன். அரன் - பிறப்பிறப்பை அழிப்பவன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மங்கை வாணுதன் மான்ம னத்திடை வாடி யூடம ணங்க மழ்சடைக்
கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
பங்க யமது வுண்டு வண்டிசை பாட மாமயி லாட விண்முழ
வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

தாமரை மலரிலுள்ள தேனை உண்டு வண்டுகள் இசைபாடப் பெரிய மயில்கள் நடனம் ஆட, விண் மேகங்களாகிய முழவை அழகிய கையால் ஒலிக்கும் இயற்கை அழகுடைய ஆமாத்தூர் அம்மானே! மங்கையாகிய ஒளிநுதலை உடைய மான்போன்ற பார்வதிதேவி வாடி ஊட மணம் கமழும் சடையில் கங்கையாளை வைத்துள்ளதன் காரணம் யாதோ?

குறிப்புரை :

வாள் - ஒளி. நுதல் - நெற்றி. மங்கையாகிய வாணுதன் மான் என்பது உமாதேவியாரைக் குறித்தது. வாடி ஊடுதற்கு ஏது, சடை மேல் கங்கையாள் இருப்பது. பங்கயம் - தாமரை. மது - தேன். விண் முழவு - விண்ணிலுள்ள மேகமாகிய மத்தளத்தை. அம் - அழகிய. அதிர்க்கும் - ஒலிக்கும், கையால் அதிர்க்கும் என்றது பொருந்துமாறு புலப்பட்டிலது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

நின்ற டர்த்திடு மைம்பு லன்னிலை யாத வண்ண நினைந்து ளத்திடை
வென்றடர்த் தொருபான் மடமாதை விரும்புதலென்
குன்றெ டுத்தநி சாச ரன்திரள் தோளி ருபது தானெ ரிதர
அன்றடர்த் துகந்தார் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

அன்று கயிலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் திரண்ட இருபதுதோள்களும் நெரியுமாறு அடர்த்துப் பின் அவன்பால் கருணை காட்டியவனே! ஆமாத்தூர் இறைவனே! மாறிநின்று மயக்கும் ஐம்புலன்களை மனத்தால் வென்று அவித்தும் ஒருபாகத்தே இளம்பெண்ணை விரும்பி ஏற்றுள்ளதுயாது காரணத்தாலோ?

குறிப்புரை :

அடர்த்திடும் - வருத்திடும். `நின்று....... அடர்த்து` என்ற பகுதி சிவபிரானது யோக நிலையைக் குறிப்பது. அதற்கு ஒவ்வாதபடி இடப்பால் அம்பிகையை விரும்பிக் கொண்டது ஏன் என்று வினவினார். நிசாசரன் - இரவில் சஞ்சரிப்பவன், இராவணன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

செய்ய தாமரை மேலி ருந்தவ னோடு மாலடி தேட நீண்முடி
வெய்ய வாரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
தைய லாளொடு பிச்சைக் கிச்சை தயங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
டைய மேற்றுகந்தார் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

உமையம்மையோடு பிச்சையேற்பதற்கு இச்சையுடையராய் விளங்கும், தோலாடையை இடையில் கட்டிய வேடம் மேற்கொண்டு மாதரார் இல்லங்களில் ஐயம் ஏற்று உகந்தவனே! ஆமாத்தூர் இறைவனே! செந்தாமரைமலர்மேல் வீற்றிருக்கும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் தேட அவர்கட்கு ஒளிக்கும் வகையில் கொடிய அழலுருவாய் நிமிர்ந்த வெற்றிக்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

வெற்றிமை - வென்றதன்மை. (பதி.188 பா.8) (ஐயம்). தையலாள் - உமாதேவியார். இச்சை தயங்கு - விருப்பம் விளங்குகின்ற. தயங்குதோல் - அசைகின்ற தோலுமாம். அரை - திருவரையில். ஆர்த்த - கட்டிய. ஐயம் - பிச்சையுண்டி.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
முத்தை வென்ற முறுவ லாளுமை பங்க னென்றிமை யோர்ப ரவிடும்
அத்தனே யரியாய் ஆமாத்தூ ரம்மானே.

பொழிப்புரை :

முத்தைவென்ற முறுவலை உடைய உமையம்மை பங்கனே! என்று தேவர்கள் பரவிப் போற்றும் தலைவனே! காண்டற்கு அரியவனே! ஆமாத்தூர் இறைவனே! புத்தர்களும் புல்லிய சமணர்களாகிய அறிவிலிகளும் பொய்ம் மொழியும் நூல்களைப் பிடித்துக் கொண்டு பழிக்கவும், அவற்றைப் பொருட்படுத்தாது பத்தர்களால் விரும்பப்படும் மேலாந்தன்மை உடையன் ஆதற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

நூல் - பிடகம் முதலியன. அலர் - பழி. பத்தர் - அன்பர். பேண - விரும்ப. பரம் ஆய பான்மையது - மேலவர்க்கும் மேலாந்தன்மையுடையது, (முழு முதன்மை). முறுவல் - பல். அரியாய் - அரியவனே (எளியானல்லன் அன்பர் அல்லார்க்கு). `அரியதில் அரிய அரியோன். (திருவாசகம்: 3-47).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

வாடல் வெண்டலை மாலை யார்த்தும யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
ஆடன் மேயதென்னென்று ஆமாத்தூ ரம்மானைக்
கோட னாக மரும்பு பைம்பொழிற் கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.

பொழிப்புரை :

தசைவாடிய வெண்டலை மாலையைக் கட்டிக் கொண்டு நள்ளிருளில் எரிஏந்தி ஆடுவதன் காரணம் யாதோ என்று ஆமாத்தூர் இறைவனைக் காந்தள் நாகம் போல அலரும் பசிய பொழில் சூழ்ந்த கொச்சை வயத்தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் மேலான வீட்டுலகம் அடைவர்.

குறிப்புரை :

வாடல் - வாடுதலையடைந்த. (பதி.196-5 பார்க்க). ஆர்த்து - கட்டி. ஆடல் - கூத்து. மேயது - விரும்பியது. கோடல் - வெண்காந்தள். நாகம் அரும்பு - பாம்புபோல அரும்புகின்ற. நாகம்; புன்னை மரமுமாம். கொச்சையார் இறை - காழியர் கோன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

நீரு ளார்கயல் வாவி சூழ்பொழில் நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும் ஒருவ னேயொளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும் வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும் தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களரில் ஊரவர் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவனாய் விளங்கும் இறைவனே! ஒளிபொருந்திய பிறைமதியைச் செஞ்சடை மீது பொருந்த அணிந்து நிற்பவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

நீருள் ஆர் கயல் வாவி - என்பது குளங்களின் நீர் மிகுதியையும் அதிலுள்ள மீன்களின் பெருக்கத்தையும் குறித்தது. திருக்களர் நீர்வளம், சோலைச்சூழல், வயல் வளம், மதிற்சுற்று, தேர்வீதி, விழாமலிவும் உடையது. சடையில் மதி ஆர (- நிறைய, பொருந்த) நின்றவனே. அடைந்த அன்பர்க்கு அருள்வாய் என்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்
வேளி னேர்விச யற்க ருள்புரி வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

தோளின்மேல் ஒளிநீறு பூசிய தொண்டர்கள் அடி போற்றப் பெருமிதம் கொண்ட திருவடி உடையவனாய்த் திருக்களருள் எழுந்தருளியவனே! முருகவேட்கு நிகரான அருச்சுனனுக்கு அருள் புரிந்த வித்தகனே! தன்னை விரும்பும் அடியவரை ஆளாகக் கொண்டு உகந்தவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

தோளின் ..... நீறு - `திரள் தோள்மேல் நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை`(திருவாசகம், திருச்சதகம்,33) அங்குச் சிவபிரான் தோள். இங்குச் சிவதொண்டர் தோள், `சாந்தம் ஈதென்று எம்பெருமான் அணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களமேயவனே` என்றதால், உடையானுக்கு ஏற்றது அடியார்க்கும் ஆதல் அறிக. மிண்டிய - நெருங்கிய. தாளினார் - திருவடியுடைய சிவபிரான். வேளின் நேர் - முருகனைப் போன்ற. விசயன் - அருச்சுனன். சிவவேடனிடம் தோற்றுச் சயம் நீங்கியவன். விசயன் - மேலான வெற்றியன் என்பது, அவன்பெற்ற பிறவெற்றிகளைக் குறித்தது. வித்தகா - ஞான வடிவா! ஆள் - அடிமையாக. உகந்தவனே - விரும்பிக்கொண்ட (ஆண்ட)வனே!

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

பாட வல்லநன் மைந்த ரோடு பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர்வாழ் பொழில்சூழ் செழுமாடத் திருக்களருள்
நீட வல்ல நிமல னேயடி நிரைக ழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

பாடவல்ல நன்மக்களோடு நறுமலர்கொண்டு போற்றும் உயர்ந்தோர் வாழும் பொழில் சூழ்ந்த செழுமையான மாடவீடுகளைக் கொண்டுள்ள திருக்களருள் பலகாலமாக எழுந்தருளியுள்ள நிமலனே! கழலும் சிலம்பும் ஆரவாரிக்க நடம் புரியவல்ல பெருமானே! உன்னைச் சரணாக அடைந்தவர்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

மைந்தர் - மக்கள். சேடர் - பெரியோர். நிமலன் - மலமில்லாதவன். அடி நிரைகழல் சிலம்பு ஆர்க்க மாநடம் ஆடவல்லவனே - திருவடிகளில் வரிசையாகக் கழலும் சிலம்பும் ஒலிக்க மகா தாண்டவம் ஆடவல்ல பெருமானே!

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

அம்பி னேர்தடங் கண்ணி னாருடன் ஆட வர்பயில் மாட மாளிகை
செம்பொ னார் பொழில் சூழ்ந்தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறைவா விணையடி போற்றி நின்றவர்க்
கன்பு செய்தவனே அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

வாள் போன்று கூரிய விசாலமான கண்களை உடைய மகளிரோடு ஆடவர் மகிழும் செம்பொன் நிறைந்த மாடமாளிகைகளோடு பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களருள் என்புமாலை பூண்ட மேனியை உடைய எம் இறைவனே! உன் திருவடிகளைப் போற்றி நிற்பாரிடம் அன்பு செய்பவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

அம்பு - வாள். தடங்கண் - விசாலாட்சம். திருக்களரிலுள்ள ஆடவர் மகளிர் பன்மையும், மாளிகைச் சிறப்பும், செல்வப் பெருக்கும், வளமிகுதியும் குறித்தார். `எம் இறைவா` என்று வாயாரப்பாடி, இணையடிபோற்றி நின்றவர்கண் இறைவன் அன்பு செய்தருள்வான் என்ற உண்மையை அறிவித்தவாறு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங் கெண்டி மாமது வுண்டி சைசெயத்
தெங்கு பைங்கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண வாள னேபிணை கொண்டொர் கைத்தலத்
தங்கை யிற்படையாய் அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

தேன்நிறைந்த மலர்ச்சோலைகளில் வண்டினங்கள் மகரந்தங்களைக் கெண்டி மதுஉண்டு இசைபாட, தென்னை பசிய கமுகுகள் புடைசூழ்ந்து விளங்கும் திருக்களருள் எழுந்தருளிய மங்கையொடும் கூடிய மணவாளனே! மானையும் மழுவையும் அழகிய கைகளில் கொண்டுள்ளவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

கொங்கு - மணம், பூந்தாதுக்களுமாம், கெண்டி - கிளறி, மாமது - மிக்க தேன். கமுகம் - பாக்கு. மங்கை ... மணவாளனே - பார்வதிமணாளனே! ஒருகைத்தலத்தில் பிணை (மான்) கொண்டு அழகிய (மற்றொரு) கையில்(மழுப்) படை உடையவனே!

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
நீலம் மேவிய கண்ட னேநிமிர் புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
ஆல நீழலுளாய் அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

அழகிய மயில்கள் ஆட மேகங்கள் தங்கிய பொழில் சூழ்ந்து விளங்குவதும் வயல்களில் சேலும் கயலும் சேர்ந்த நீர் சூழ்ந்ததும் ஆன திருக்களருள் எழுந்தருளிய நீலகண்டனே! நிமிர்ந்த சடையை உடைய பெருமானே! என்று அடியவர் போற்ற ஆல நீழலில் எழுந்தருளியவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

கோலம் - அழகு. ஆல - தோகைவிரித்து ஆடி அசைய. கொண்டல்கள் - மேகங்கள். சேல், கயல் இரண்டும் மீன்வகை. நீலம் - நீலநிறத்தை. மேவிய - பொருந்திய. நஞ்சாலானநிறம். பொலி - விளங்குகின்ற. ஆல நீழலுளாய் - தக்ஷிணாமூர்த்தியாகிய குருநாதரை விளித்தது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

தம்ப லம்மறி யாத வர்மதில் தாங்கு மால்வரை யாலழ லெழத்
திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்
வம்ப லர்மலர் தூவி நின்னடி வானவர் தொழக் கூத்து கந்துபேர்
அம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

தங்கள் பலத்தை அறியாத அசுரர்களின் முப்புரங்களை, உலகைத் தாங்கும் மேருமலையாகிய வில்லால் அழல் எழுமாறு செய்து அப்புரங்களின் திண்ணிய பலத்தைக் கெடுத்தவனே! திகழ்கின்ற திருக்களருள் புதிய மலர்களைத்தூவி வானவர் நின் திருவடிகளைப் போற்றப் பேரம்பலத்தில் உறையும் பெருமானாய் விளங்குபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

தம் பலம் - தமது வலிமையை. அறியாதவர் - தெரிந்துணராத அசுரர். தாங்கும் மால்வரை - உலகத்தை அச்சாக நின்று தாங்கும் பெரிய மேருமலை. திண்பலம் - திண்ணிதாகிய வலிமையை. பலம் - பயனுமாம். வம்பு - மணம். அலர் - பரந்த. பேரம்பலத்து உறைவாய் - பேரம்பலத்தில் (கூத்து உகந்து) உறைபவரே! சிற்றம்பலம் பேரம்பலம் என்பவை இரண்டும் சித்சபையே ஆகும்; சிதம்பரம், சிதாகாசம் என்பவற்றின் பொருள் ஞானவெளி என்பது. ஞானவெளி, ஞானசபை இரண்டும் பொருளால் ஒன்றே. அம்பலத்தின் அடை மொழியாகிய சிறுமை பெருமைகளை நோக்கின், சிற்றம்பலம் என்பது வடசொற்றொடரின் திரிபாகாது எனல் புலப்படும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

குன்ற டுத்தநன் மாளி கைக்கொடி மாட நீடுயர் கோபு ரங்கண் மேல்
சென்ற டுத்துயர்வான் மதிதோயுந் திருக்களருள்
நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள் தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

மலைபோன்றுயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட கொடிகள் மாடங்களினும் நீண்டுயர்ந்த கோபுரங்களையும் கடந்து மேற்சென்றுயர்ந்து வானிலுள்ள மதியைப் பொருந்தும் திருக்களருள், நிலையாக நின்று பொருந்தி உயர்ந்த பெரிய கயிலை மலையைத் திரண்ட தோள்வலியால் எடுத்த இராவணனின் நீண்ட முடிகளை அன்று அடர்த்துப் பின் அவனை உகந்து விளங்கும் பெருமானே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

தம்மேலுள்ள கொடிகள், கோபுரங்களின் மேற்போய், சந்திரனைத் தோயும் அளவு, மாளிகைகள் உயர்ந்துள்ளன. `வண் கொண்டல் விட்டு மதிமுட்டு வனமாடம்`. வரை - கயிலை மலையை. எடுத்தான்தன் - எடுத்த இராவணனுடைய. அன்று - எடுத்த அந்நாளில்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர் பாட லாடலொ டார வாழ்பதி
தெண்ணி லாமதியம் பொழில்சேருந் திருக்களருள்
உண்ணி லாவிய வொருவ னேயிரு வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
அண்ண லாயவெம்மான் அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

யாழில் இசைகூட்டிப் பயில்கின்ற மங்கையர் பாடியும் ஆடியும் மகிழ்கின்ற பதியாய்த், தெளிந்த நிலவைத் தரும் மதியைத் தோயுமாறு உயர்ந்த பொழில் சூழ்ந்த திருக்களருள் விளங்கும் ஆலயத்துள் எழுந்தருளிய ஒப்பற்றவனே! திருமால், பிரமர் நீண்ட திருவடி, திருமுடி தேடுமாறு அரிய அழலாய் நின்ற எம்மானே! அடைந்தவர்க்கு நின் திருவடித் தொண்டினை அருள் புரிவாயாக.

குறிப்புரை :

பண் + யாழ் = பண்ணியாழ். யாழைத்திருந்திய சுரம் அமையப்பண்ணி எனலுமாம். ஆர - நிறைய. பதியாகிய திருக்களருள். உள் திருக்கோயிலின் மூலத்தானத்தில், அன்பர் உள்ளத்தில். கழல் காட்சி - சீபாதசேவையை (அருளாய்).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

பாக்கி யம்பல செய்த பத்தர்கள் பாட்டொ டும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்
வாக்கின் நான்மறை யோதி னாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
ஆக்கி நின்றவனே யடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

நல்வினைகள் பல செய்த பத்தர்கள் பாடல்கள் பலபாடுவதோடு பணிகள் பலவற்றை விரும்பிச் செய்யவும், எரியோம்பும் இயல்பிரான அந்தணருட் சிறந்தார் வாழவும் விளங்கும் திருக்களருள் வாக்கினால் வேதங்களை அருளியவனே! சமணர் புத்தர் சொல்லும் உரைகளைப் பொய்யாக்கி எழுந்தருளி விளங்குபவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

பாக்கியம் - நல்வினைகள். பத்தர்கள் - அன்பர்கள். பணிகள் - திருப்பணிகள். தீக்கு இயல் - அக்கிநிகாரியத்துக்கு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

இந்து வந்தெழு மாட வீதியெ ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
செந்து நேர்மொழியார் அவர்சேருந் திருக்களருள்
அந்தி யன்னதொர் மேனி யானை அமரர் தம்பெரு மானை ஞானசம்
பந்தன் சொல்லிவை பத்தும்பாடத் தவமாமே.

பொழிப்புரை :

திங்களைத் தோய்ந்தெழும் மாடங்களைக் கொண்ட வீதியினை உடைய அழகிய காழி நகரில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன், செந்து என்ற பண்ணை ஒத்த மொழி பேசும் மகளிர் பலர் வாழும் திருக்களருள் அந்தி வானம் போன்ற செம்மேனியனை, அமரர் தலைவனைப்பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடத்தவம் சித்திக்கும்.

குறிப்புரை :

இந்து - சந்திரன். எழில் - அழகு. செந்து - முன் பதிகம் மூன்றில் உள்ள விளக்கம் காண்க. `அந்தி வண்ணன்`.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

கருந்த டங்கண்ணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி இணைய டிதொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே.

பொழிப்புரை :

கரிய பெரிய கண்களை உடைய மகளிர் இசை பாடவும், அதற்கேற்ப மேகங்கள் முழவொலிபோல ஒலிக்கவும், அழகிய பொழிலிலுள்ள குருந்தம் மாதவி ஆகியவற்றின் மணம் நிறையவும் விளங்கும் கோட்டாற்றில் வீற்றிருந்த பெருமானை நினைந்து அவருடைய இணையடி தொழுதேத்தும் மாந்தர்கள் வருந்தார். விண் வழியாக வீட்டுநெறியை எய்துவர்.

குறிப்புரை :

கண்ணின் - கண்ணையுடைய. இசைசெய்ய - (இனிய) இசைப் (பாக்களைப் பாடலும் ஆடலும்) செய்ய. கார் - மேகம். அதிர்கின்ற - முழங்குகின்ற. குருந்தம் :- மரம். மாதவி - குருக்கத்திக் கொடி, `மாடுலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் ஊடுலவு புன்னை விரைதாதுமலி சேருதவி மாணிகுழியே` (தி .3 ப .77 பா .9) விரை - மணம். மல்கு - நிறைந்த. உள்கி - நினைந்து. வருந்தும் ஆறு - துன்பம் அடையும் வழியை. வான்ஊடு - விண்வழியாகச் செல்லும். நெறி - வீட்டு நெறியை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
குன்றி னேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பி ரான்கழல் ஏத்தி வானர சாள வல்லவர்
பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.

பொழிப்புரை :

பெரியயானை நின்று மேய்ந்து நினைந்து நீர் மலர் வேண்டி வான்மழை பெறுதற் பொருட்டு மலைபோல எழுந்து, மேகங்களைக்குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள் என்றும் நிலை பெற்றிருக்கும் எம்பிரான் திருவடிகளை ஏத்தி வானுலகை அரசாளவல்லவர் அழியார். அவர்புகழ் வாய்ந்த புண்ணியர் ஆவார்.

குறிப்புரை :

மாகரி - பெரியயானை, கரத்தையுடையது கரி. வான் மழை - மேகத்திலுள்ள மழைநீரை, நேர்ந்து - நேர்பட்டு. உகுத்தி - உகச்செய்து. (அபிடேகித்து). ஏர்ந்து - எழுந்து, குத்தி எனலுமாம். பணி - தொண்டு. மன்னிய - நிலைபெற்றுள்ள. வான் - தேவருலகம். பொன்றும் ஆறு - சாமாறு, (பிறந்திறந்துழலும் துன்பவழி). `சாமாறே விரைகின்றேன்` (திருவாசகம், திருச்சதகம். 14) ஆர்ந்த - நிறைந்த.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

விரவி நாளும் விழா விடைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக்
குரவ மாரு நீழற்பொழின்மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடை யானை யுள்கிநின் றாத ரித்துமுன் அன்பு செய்தடி
பரவு மாறுவல் லார்பழிபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

நாள்தோறும் நடைபெறும் விழாக்களில் கலந்து கொண்டு பொலிவு எய்தும் தொண்டர் புகழ்ந்து பாட, குரா மரங்களின் பொழில் நீழலில் அமைந்த கோட்டாற்றில் விளங்கும் பாம்பு அணிந்த நீண்ட சடையுடையவனை நினைந்து, ஆதரவுடன் அன்பு செய்து பரவுவார், பழியும் பற்றும் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

வியந்து - நன்குமதித்து, புகழ்ந்து. குரவம் - குராமரம். `நிழல்` என்ற பாடமே சந்தத்திற்குப் பொருந்துவது. (பதி .186 பா .6) அரவம் - பாம்பு. பரவும் ஆறு - வாழ்த்து முறைமை. பழி பற்று - பழியும் பற்றும், பழிக்கும் பற்று எனலுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

அம்பி னேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறு மாட மாளிகைக்
கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்
நம் பனேநட னேந லந்திகழ் நாதனே யென்று காதல் செய்தவர்
தம்பி னேர்ந்தறி யார்தடுமாற் றவல்வினையே.

பொழிப்புரை :

அம்புபோன்ற விழியை உடைய மங்கையர் ஆடுமிடமாகக் கொண்ட மாடமாளிகைகளில் கொம்பிற் கோத்து உயர்த்திய துகிற்கொடிகள் ஆடும் கோட்டாற்றில் விளங்கும் நம்பனே! நடனம் புரிபவனே! நன்மைகள் பலவும் வாய்ந்த நாதனே! என்று அன்பு செய்தவர், தமக்குப் பின் தடுமாற்றம் வல்வினைகள் வருவதை அறியார்.

குறிப்புரை :

அம்பு - வேல்.(முற்பதிகம். பா .4) ஆடு அகம் - ஆடுகின்ற இடம். கொம்பின் ஏர் துகிலின் கொடி - கொம்பிற்கோத்து எழுகின்ற துணிக்கொடி. நேர் என்றும் பிரிக்கலாம். நடனே - கூத்தனே. (பதி .185 பா .11. ` நயன் நடன்`) நலம் - பேரின்பம். தம்பின் தடுமாற்ற வல்வினையே நேர்ந்து அறியார் என்றியைக்க. செய்தவர் எழுவாய், அறியார் பயனிலை. நேர்தல் வினையின் செயலாகும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

பழைய தம்மடி யார்து திசெயப் பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்
குழலு மொந்தை விழாவொலி செய்யுங்கோட்டாற்றில்
கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் கானி டைக்கண மேத்த வாடிய
அழக னென்றெழுவார் அணியாவர் வானவர்க்கே.

பொழிப்புரை :

பழமையான தம் அடியவர் துதிசெய்யவும், மண்ணுளோர், விண்ணுளோர் தொழவும் குழல் மொந்தை முதலியன விழாஒலி செய்யவும் விளங்கும் கோட்டாற்றில் கழலும் வளமான சிலம்பும் ஒலிக்கக் கானகத்தே பேய்க்கணம் ஏத்த ஆடிய அழகன் என்று சிவபெருமானை வணங்கப் போதுவார், வானவர்க்கு அணியாவர்.

குறிப்புரை :

பழைய அடியார். `பழவடியீர்` `பண்டைப்பரிசே பழவடியார்க்கு ஈந்தருளும் அண்டம்`. பழவடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன். `பழிப்பு இல் நின்பாதப் பழந்தொழும்பு`. (திருவாசகம் 157, 183, 424, 151) பார் - மண். குழல் - வேய்ங்குழல். மொந்தை - இசைக்கருவியுள் ஒன்று. கழலும் சிலம்பும் ஒலி செய்ய என்க. கான் - காடு. கணம் - பூதகணம், பேய்க்கணம். எழுவார் - நடு நாடியில், சிவபீஜத்தொடும் சிந்தித்து எழுகின்ற யோகியர். `சித்தம் ஆரத் திருவடியே நினைந்து உள்கி எழுவார் உள்ளம் ஏயவன் காண்`(தி .6 பதி .64 பா .4.). இவ்வுண்மையை ஒட்டித் `தொழுதெழுவார்` `தொழு தெழுவாள்` என்னுந் தொடர்கட்குப் பொருள் கொள்ளல் நன்று. `கொழு நற்றொழுதெழுவாள்` - படுக்கையின் நின்று தொழுது கொண்டே எழுதல் செய்வாள். தொழுதல் என்றதற்கு விழுந்து வணங்குதல் என்னும் பொருளே உரியது என்பார், பிறவாறெல்லாம் உரைப்பர். வானவர்க்கு அணி (பூஷணம்) ஆவர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

பஞ்சின் மெல்லடி மாத ராடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்
கொஞ்சி யின்மொழியால் தொழின்மல்கு கோட்டாற்றில்
மஞ்ச னேமணி யேம ணிமிடற் றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்
துஞ்சு மாறறியார் பிறவாரித் தொன்னிலத்தே.

பொழிப்புரை :

பஞ்சு போன்ற மெல்லிய அடிகளை உடைய மாதர்கள், ஆடவர்கள், பத்தர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனுடைய பண்புகளை நாள்தோறும் இன்மொழியால் தொழுகின்ற கோட்டாற்றில் மைந்தனே! மணியே! மணிமிடற்று அண்ணலே என்று உள்நெகிழ்ந்து வணங்குவோர் இனி இறத்தல் பிறத்தல் இலராவர்.

குறிப்புரை :

பஞ்சின் = பஞ்சுபோல. இன் - ஐந்தாவதனுருபு உவமப் பொருள். பன் + து என்றதன் மரூஉ. பனுவல் என்பதற்கும் அதுவே பகுதி, பஞ்சினைப்பன்னுதல் இன்றும் உண்டு. `பஞ்சி தன் சொல்லே பனுவல் இழையாக`(நன்னூற்பாயிரம்) `பருத்திப்பெண்டின் பனுவலன்ன` (புறம் -125). `நுணங்கு - நுண்பனுவல்` (நற்றிணை - 353).(தொல் - எழுத்து - நச்சர்: இறை - சூ 1 - உரை). பத்தர் - அன்பர். சித்தர் - அட்டமாசித்து வல்லவர். வைகலும் - நாள்தோறும். பண்பு - அவர்களுடைய குணங்களை. இன்மொழியால் கொஞ்சித் தொழுதல் நிறைந்த கோட்டாறு. தொழில் - தொழுதல். மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ. `கிஞ்சுகவாயஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் மஞ்சன்` (திருவாசகம் -362) `மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்ப தொன்றேயன்றோ` (கம்பர் - பால - கோலங் - 19). மணிமிடற் றண்ணலே - திருநீலகண்டப்பெருமானே. துஞ்சும் ஆறு அறியார் - இனி இறக்கும் வகையை அறியார். இத் தொல் நிலத்தே பிறவார் என்பதும், துஞ்சு மாறறியாமை வலியுறுத்தி வீடுபெறுவரென்று விளக்கிற்று. நெகிழ்ந்தவர் - எழுவாய்; அறியார் பிறவார் இரண்டும் பயனிலை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவு மாமதி சேர்ச டையுடை நின்ம லாவென வுன்னு வாரவர்
உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.

பொழிப்புரை :

தோகையை உடைய மயில் போன்றவளாகிய பார்வதிதேவியின் பங்கனைக் கண்டு கண்ணீர் நெகிழ்ந்து இசையோடு தோத்திரம் சொல்லுவார் குடிகொண்டுள்ள கோட்டாற்றில், நிலாவொளி வீசும் பிறைமதிபோன்ற சடையை உடைய நின்மலனே! என அவனை நினைவார் வானில் உலவுகின்ற வானவர்களினும் உயர்வாகுவது உண்மை.

குறிப்புரை :

கலவம் - தோகை: மயிலாள் - மயில்போலும் சாயலுடைய உமாதேவியார். கண்மிசை நீர் நெகிழ்த்து - கண்ணீர் உகுத்து. நிலவம் - நிலாவைத்தரும். உன்னுவார் - தியானம் செய்பவர். வானவரின் - தேவரினும். உண்மையது - சத்தியமானது. ஆசிரியர் ஆணையிட்டுக் கூறுதலை நோக்கின், உயிர்களைச் சிவவழிபாட்டில் ஈடுபடுத்தக்கொண்டிருக்கும் பேரன்பு விளங்கும். (பதி. 220 பா. 11, பதி. 221 பா. 11, தி. 3 பதி. 118.பா.11).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெ லாந்துதி செய்ய நின்ற தொழில னேகழ லால ரக்கனை
மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.

பொழிப்புரை :

வண்டல் மண் பொருந்திய நெல்வயல்களும் கரும் பாலைகளும் வளம் பொலிய மிக்க தண்ணீரை மேகங்கள் கொண்டு வந்து தரும் கோட்டாற்றில் தொண்டர்களெல்லாம் துதிக்க ஐந்தொழில் புரிபவனே! திருவடியால் இராவணனின் வலிமையைக் கெடுத்துப்பின் அவனை உகந்திட்ட வெற்றிமை யாதோ?

குறிப்புரை :

வண்டல் - நீர் ஒதுக்கிய மண். சாலி - நெல். ஆலை - கரும்பாலை கரும்பு. கொண்டலார் - `தென்றலார்` போல். `தென்றலார் புகுந்துலவும் திருத்தோணிபுரத்து` (தி .1 ப .60 பா .7). தொண்டு - தொண்டர்கள்; சொல்லால் அஃறிணை; பொருளால் உயர்திணை; வேந்து அரசு ஒற்று முதலியனபோல. ஆகுபெயருமாம். துதி - தோத்திரம். மிண்டு - திண்மை. `மிண்டனுக்கு இரண்டாள்` என்பது வழக்கு. தவிர்த்து - நீங்குதல். வெற்றிமை - வென்ற தன்மை. (பதி .186 பா. 9).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

கருதி வந்தடி யார்தொ ழுதெழக் கண்ண னோடயன் றேடவானையின்
குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
விருதி னான்மட மாது நீயும்வி யப்பொ டுமுயர் கோயில் மேவிவெள்
எருதுகந் தவனே யிரங்காயுன தின்னருளே.

பொழிப்புரை :

அடியவர் கருதி வந்து தொழுது எழவும், கண்ணனோடு பிரமன் தேடவும், ஆனையின் குருதி மெய்யில் கலக்குமாறு அதன் தோலைப் போர்த்துக் கோட்டாற்றில் உயரிய புகழுரைகளோடு உமையம்மையும் நீயும் வியப்போடு உயரிய கோயிலில் எழுந்தருளி வெள்ளிய எருதை வாகனமாக உகந்த பெருமானே! உனது இனிய அருளை வழங்க இரங்குவாயாக.

குறிப்புரை :

அடியார் கருதி வந்து தொழுது எழ என மாற்றுக. கண்ணன் - கிருஷ்ணன் என்னும் வடசொல்லின் திரிபாக்கொள்ளின் கறுப்பன் என்னும் பொருளாம்; தமிழாக்கொள்ளின் சினைப்பெயரடியாப் பிறந்த பெயராம். கருதுபவனுமாம்` ஆனையின் ... கொண்டு` - யானை உரித்த வரலாறு. குருதி - இரத்தம். விருதினான் - விருதுகளால். மடமாது - உமாதேவி. வெள்எருது - நரைவெள்ளேறு. உகந்தவன் - விரும்பியவன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

உடையி லாதுழல் கின்ற குண்டரும் ஊண ருந்தவத் தாய சாக்கியர்
கொடையி லாமனத்தார் குறையாருங் கோட்டாற்றில்
படையி லார்மழு வேந்தி யாடிய பண்ப னேயிவ ரென்கொ லோநுனை
அடைகி லாதவண்ணம் அருளாயுன் னடியவர்க்கே.

பொழிப்புரை :

உடை உடுத்தாது திரியும் சமணரும், ஊண் அருந்தாத தவத்தைப் புரியும் புத்தரும் உலோபியின் மனம் போன்றவர். அவர்கள் கூறும் குறை உரைபொருந்தக் கோட்டாற்றில் படைக்கலமாக மழுவை ஏந்தி ஆடிய பண்பனே! சமண பௌத்தர்கள் உன்னை அடையாமைக்குரிய காரணம் யாது? அதனை அடியவர்க்குக் கூறியருளுக.

குறிப்புரை :

குண்டர் - சமணர். ஊணருந்தவம் - உண்ணுதலில்லாத தவம். அருமை - இன்மை; `அருங்கேடன்` (குறள்) குறை - குறை கூறுதல். இவர் - குண்டர் முதலிய இவர்கள். நுனை - உன்னை. அடைகிலாத வண்ணம் என்கொலோ - அடைந்து தொழுது உய்யாதவாறு என்னோ?. உன் அடியவர்க்கு அருளாய் - உன்னடியவர்களுக்கு அக்காரணத்தை உணர்த்தியருளாய். ஆசிரியரும் தம்மை அப்படர்க்கையில் அடக்கிக் கொண்டார்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

கால னைக்கழ லாலு தைத்தொரு காம னைக்கன லாகச் சீறிமெய்
கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
மூல னைமுடி வொன்றி லாதவெம் முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும்வல்லார்க் கெளிதாகும் வானகமே.

பொழிப்புரை :

காலனைக் கழலணிந்த காலால் உதைத்தும், காமனை நெற்றிக் கண்ணால் கனலாகுமாறு சீறியும், மேனியின் ஒரு பாதியில் அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு கூடிக்குடிகொண்டுள்ள கோட்டாற்றில், எல்லாப் பொருள்கட்கும் மூலகாரணனை முடிவில்லாத முத்தனை ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய இத்தமிழ் மாலைபத்தையும் வல்லவர்க்கு வானகம் எளிதாகும்.

குறிப்புரை :

கழலால் - கழலணிந்த திருவடியால். தானியாகு பெயர். கனலாகச் சீறி - தீயாகி வேவக்கோபித்து. கோலவார் குழலாள் மெய்குடிகொண்ட; என்று கூட்டி மாதியலும் பாதியன் என்க. (ப .189. பா . 11). மெய் - பெருமான் திருமேனி. மூலன் - அநாதிகாரணன். `படைப்போற் படைக்கும் பழையோன்`. முத்தன் - இயல்பாகவே பாசங்களில்லாதவன். வானகம் - வீடு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

வானில் உலவும் வன்மை உடைய முப்புரங்களைக் கொடிய கணையால் எய்து வீழ்த்தினாய். இசைபாடுவோரின் விரிந்த பண்ணிசையொலி சேர்ந்துள்ள புறவார்பனங்காட்டூரில் உமையொருபாகனாக வீற்றிருக்கும் பிஞ்ஞகா! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே! உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக.

குறிப்புரை :

விண் அமர்ந்தன - ஆகாயத்தில் பொருந்தியனவாகிய. பிஞ்ஞகா - சடைமுடியனே. பிறைசேர் நுதலிடைக்கண் - `பிறைநுதல் வண்ணம் ஆகின்று` (புறம், கடவுள் வாழ்த்து.) நுதல்; நெற்றி + சென்னி இரண்டையும் குறித்து ஆளப்படும். யோகமார்க்கத்தில் பிறை விளங்கும் இடம் நுதல் ஆதலைக் குறித்ததுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
தோடி லங்கிய காத யன்மின் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

நீண்ட காந்தள் மலரவும், வெண்முல்லை நீர்மலர் ஆகியனவற்றிலுள்ள மகரந்தங்களை வரிசையாகச் சென்று உண்ணும் மலர்களின் மகரந்தங்களை அளம் போலக் குவித்து வண்டுகள் இசைபாடும் புறவார்பனங்காட்டூரில், தோடணிந்த காதின் அயலே மின்னொளிதரும் வெண்குழை ஒளிவிட நள்ளிருளில் ஆடும் சங்கரனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

நீடல் - (நீள் + தல்), நீட்சியை உடைய. கோடல் -வெண் காந்தள். நிரை - வரிசை. தாது - முல்லைப்பூந்தாதுக்கள். அளம்செய - உப்பளம்போலக்குவிக்க. இலங்கிய - விளங்கிய, அயல் - பக்கத்தில். மின் - ஒளி. நள்இருள் - செறிந்த இருளில். `நள்ளிருளில் நட்டம் பயின் றாடும்`. சங்கரன் - சுகத்தைச் செய்பவன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

வாளையும் கயலும் மிளிரும் பொய்கைகளையும் நீண்ட வயல்களின் நீர்க்கரைகளிலெல்லாம் பாளைகளை உடைய சிறந்த கமுக மரங்களையும் கொண்டுள்ள புறவார் பனங்காட்டூரில், பூளைப்பூ, நறுங்கொன்றை, ஊமத்தம் மலர் ஆகியவற்றை அணிந்து உறைபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

மிளிர்தல் - ஒளிர்தல். கமுகம் - பாக்கு. பூளை - ஒரு செடி. இது சிறுமை பெருமையால் இருவகைப்படும். `இரும்பூளை` (பதிகம் .172) `மாருதம் அறைந்த பூளைப்பூ`. என்று உவமை கூறலாவதும் இதனையே. மதமத்தம் - உக்கிரகந்தத்தையுடைய ஊமத்தை, புனைவாய் - அணிபவனே. கழல் - கழல்களை அணிந்த. இணைத்தாள் - இரண்டு திருவடிகள். ஏகாரம் பிரிநிலை, `சாம்பகல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே` (ப .180. பா ,3.)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந் தவத்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

வைகறைப் போதில் எருமைகள் இளஞ்செந்நெல் மென்கதிர்களை மேய்ந்து வயிறுநிறைதலால் தண்ணிய நீர்நிலைகளில் சென்றுகுளிக்கும் புறவார் பனங்காட்டூரில் ஆராய்ந்து கூறிய நான்மறைகளைப் பாடி ஆடும் அடிகளே! என்று பலமுறை சொல்லி நல்ல மலர்களைத்தூவி வீழ்ந்து அடிபரவும் தவத்தினர்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

மேதி - எருமை, வைகறை - விடியற்பொழுது. பழனம் - வயல். அடிகள் - சுவாமி, கடவுள். சிவபெருமானை `அடி` என்றும், கள்விகுதிசேர்த்து உயர்வு குறித்து `அடிகள்` என்றும் வழங்குதல் மரபு, `திருவடி சேர்ந்தார்`, `அடிசேர் ஞானம்` என்பவற்றால் அவ்வுண்மை புலப்படும். `இறைவனடி அடைவிக்கும் எழில் ஞானபூசை` என்பது முதலிய இடங்களில் சிவஞானத்தைக் குறித்தல் உணர்க. சிவனையும் சிவஞானத்தையும் அடைந்தவர் அடியார் என்பர். எல்லாவற்றிற்கும் அடி (மூலம்) சிவஞானமும், சிவமும் அன்றி வேறில்லை. `அடியார் சிவஞானமானது பெற்றோர்` (திருமந்திரம்.1672.) `முதல்வனது திருவடியாகிய சிவானந்தத்தை` (சிவஞான பாடியம். சூ .10.அதி .1. ஏதுவின் விளக்கம்)`முதல்வன் திருவடியாகிய சிவானந்தாநுபூதி`(ஷெ. 11. உரை)`முதல்வனொருவனே ஞாயிறும் ஒளியும் போலச் சிவனும் சத்தியும் எனத்தாதான்மியத்தான் இருதிறப்பட்டுச் சருவவியாபியாய்ப் பொதுமையில் நிற்பன்`(ஷெ. சூ.2. அதி.4.) ஆதலின், `அடி` என்று சிவத்தையும் சிவஞானத்தையும் உணர்த்தலாயிற்று. உயிர்கள் அதை அடையுங்காலம்; `யான் எனப்படும் ஞாதாவும், எனதெனப்படும் ஞானமும், அதற்கு விடயமாய் எனதெனப்படும் ஞேயமும் எனப் பகுத்துக்காணும் மயக்கவுணர்விற்கு ஏதுவாகிய மலவாசனை` நீங்குங்காலம் ஆதலின், `பரை உயிரில் யான் எனது என்று அற நின்றது அடியாம் என்றது உண்மை நெறி விளக்கம். பின் வந்த குமரகுருபர முனிவரரும் `யான் எனது என்பது அற்ற இடமே திருவடி` என்றருளினார். கடவுளைச் சிவாகம விதிப்படி உருவுடையவராகக் கற்பித்துக் கொண்டு வழிபடுவார் அதன் திருவடிகளைக் குறிக்கும் உண்மையும் ஆய்ந்துணர்க,`உருவினதடிமுடி` (தி .1 ப .126 பா.9) `ஆரொருவருள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்` (தி.6 பா .18 ப .11). யேன யேன ஹி ரூபேண ஸாதக: ஸம்ஸ் மரேத ததாதஸ்ய தந்மயதாம் யாதி சிந்தாமணி: இவ ஈஷ்வர: என்ற சர்வசுரோத சங் கிரகம் கூறும் ஆற்றாலும் உருவ வழிபாட்டின் சிறப்பை உணர்க. என்று என்று:- அடுக்கு. பலகாலும் அரற்றல் வேண்டுமென்றது குறித்து நின்றது. மலர் சாய்ந்த அடி - பூக்கள் வீழ்ந்த திருப்பாதங்களை. தாமரை தோற்றதிருத்தாள் எனலுமாம். சாய்ந்த - அகரம் தொகுத்தல். மலரால், அடிகளைச் சாய்ந்து (விழுந்து) பரவும் (வாழ்த்தும்) எனலுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.

பொழிப்புரை :

செங்கயல் சேல் இரண்டும் போரிட, சீறியாழ் போல ஒலிசெயும் வண்டுகளோடு தாமரை மலரும் புறவார்பனங்காட்டூரில் கங்கையும் மதியும் கமழ்கின்ற சடையினனாய் உமையம்மையோடு கூடி மான்கன்றைக்கையில் ஏந்திய அழகிய கையோடு ஆடுபவனே! என்று போற்றும் அடியார்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

செங்கயல் சேல் இரண்டும் போர்செய்ய மலரும், தேனினத்தொடு மலரும் என்றியைக்க. சிறுமை + யாழ் - சீறியாழ். பேரி யாழ் வேறுண்டு. இப்பிரிவால் பாணரும் சிறுபாணர் பெரும்பாணர் என்றிருவகைப்படுவர். தேன் - வண்டு, யாழ்முரல் - யாழின் ஒலி போல முரலு (ஒலித்)தல். கேண்மையாள் - உமாதேவியார். கேள் + மை - கேளாந்தன்மை. உரிமை, `உன் பெருந்தேவி என்னும் உரிமை`, மறி - கன்று. ஆடல் (ஆள் + தல்) ஆளுதல், ஆடலன் - ஆளுதலையுடையவனே. மான்கன்றேந்திய அழகியகையன் என்றவாறு. அகங்கையுமாம். `அங்கையிற்படையாய்` (ப .187.பா .5)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்
சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

பெரிய கடலை எல்லையாகக்கோலி நீண்ட பொழில் சூழ்ந்து விளங்கும் இவ்வுலகில் விளங்கும் அடியவர் நாள் தோறும் பிரியாது வணங்கும் புறவார் பனங்காட்டூரில் கார்காலத்தே மலரும் கொன்றையை அணிந்தகடவுளே! என்று கை குவித்து நாள் தோறும் சிறப்பொடு வழிபடும் அடியவர்கட்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் - நீரால் (அரணாகப்) பொருந்திய எல்லையை வகுத்துப், பெரிய கடல் நெடுகப்பரவிய சோலை, சூழ்ந்து பிரியா ஊர் என்க. சூழ்தல் சோலையின் வினை. பிரியாமை பாரினாரது. பாரினார் - மண்ணுலகத்தார். வைகலும் பிரியா - நாடோறும் நீங்காது வழிபடும். காரின் ஆர்மலர்க் கொன்றை :- `கண்ணிகார்நறுங் கொன்றை` என்றவாறு, கார்காலத்தில் கொன்றை மிகுதியாகப் பூப்பதுணர்த்திற்று. கூப்பி - குவித்து. கூம்பி - தன்வினை, கூப்பி - பிறவினை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
மெய்ய ரிவையொர் பாக மாகவும் மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
பொய்யிலா வடிமை புரிந்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

மகளிரின் மெல்லிய கைவிரல்களைக் காட்டிப் படம் பொருந்திய பாம்பு போல் காந்தள் செடி விரிந்து மலரும் புறவார் பனங்காட்டூரில் உமையம்மையைத் தனது மெய்யில் ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனே! எனக்கூறித் திருவடிகளைப் பரவி நாள்தோறும் மெய்த்தொண்டு புரியும் அடியவர்க்கு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

அரிவையர் - மகளிர். கைமெல்விரலவை - கையிலுள்ள மெல்லிய விரல்கள். அவை ஈண்டுச்சுட்டல்ல, நிலமது பொருளது என்பவற்றில் அது என்னும் ஒருமை சுட்டாதவாறு போல இதிற் பன்மை சுட்டாது நின்றது. நிலம் பொருள் என்றல்லாத வேறு பொருளில்லை, ஈண்டு விரலல்லாத வேறு பொருள் `அவை` என்றதற்கு இல்லை. பை - படம். அரா - பாம்பு. அராவிரியும் = அராவைப்போல மலரும். காட்டி விரியும். அரிவை - உமாதேவியார். மெய் - திருமேனியில், ஓர் பாகமாகவும் மேவியவனே! (ப .188.பா . 11). பொய்யிலா அடிமை - மெய்யடிமை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

தூவி யஞ்சிறை மெல்ந டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவியெம் பெருமான் என்பவர்க் கருளாயே.

பொழிப்புரை :

அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் செறிந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெயும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக மேவியவனாய் இராவணனின் தோள்களை அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே! எனப்போற்றும் அடியவர்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

தூவி - இறகினடிப்பாகம். அனம் - அன்னப்பறவை, பாவில் - பரப்பில். ஏவிய - ஏவல் செய்ய, ஆக்ஞை செய்த.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.

பொழிப்புரை :

அழகும் தண்மையும் உடைய மாதவி, புன்னை, நல்ல அசோகு, தாமரை, மல்லிகை, பசுமையும் தண்மையும் கொண்ட ஞாழல் ஆகியன சூழ்ந்த புறவார் பனங்காட்டூரில் இளமையை ஏந்திய முகில்வண்ணன் நான்முகன் என்ற இருவரும் அறிய இயலாதவனாய் அழகிய உருக்கொண்டு நிமிர்ந்து நின்றவனே! தவத்தினராய அடியவர்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

அம்தண் - அழகும் குளிர்ச்சியும் உடைய. அரவிந்தம் - தாமரை. தண் + ஞாழல்கள் - தணாழல்கள். ஞாழல்மரம். எந்து - எமது!. முகில் - மேகம். என்ற இவர்க்கு அகரம் தொகுத்தல். சந்தம் - அழகு, கருத்து, ஆயவன் - ஆனவன்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.

பொழிப்புரை :

வண்டுகள்,பெருகி நிரம்பிய தேனை உண்டு நீலமலரைக் கவ்வி நேரிசைப்பண்ணில் யாழிசைபோல முரலும் புறவார்பனங்காட்டூரில், நாணமின்றித் திரியும் சமணர்களும் அன்பற்ற புத்தர்களும் நகுமாறு, தலையோட்டில் ஊணைக் கொள்ளுதற்கு உரிய வனே! உன்னைக் கண்டு மகிழ்வார்க்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

நீணம் - நீளம். `நீணுதல்` (தி.1 ப. 1 பா.9) முருகு - தேன். பாண் - பாட்டு. நக - சிரிக்க. தலையூண் உரியவனே - பிரமகபாலத்தில் வாங்கி உணவு கொள்ளுதற்கு உரியவனே.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

பொழிப்புரை :

கருநிறம் பொருந்திய நீலமணி போன்ற மிடற்றனை, குற்றமற்ற திருவெண்ணீற்றைப் பூசும் மார்பினனை, தேன் நிறைந்த பசுமையான பொழில்களால் சூழப்பட்ட புறவார் பனங் காட்டூர் ஐயனை, காழியுள் தோன்றிய நான்மறை வல்ல ஞானசம் பந்தன் பாடிய இப்பதிகச் செய்யுளைப் பாடவல்லவர் சிவலோகம் சேர்வர்.

குறிப்புரை :

மையின் - மேகத்தைப்போல. மாசு - குற்றம். பைய - பசுமையுடைய. ஆய்ந்த - (முற்பிறவியில்) ஆராய்ந்த. செய்யுள் - இத்திருப்பதிகத்தை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீர் அடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.

பொழிப்புரை :

அழகிய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவரே! தம்மை அடைவோர்க்கு அருள்நிறைந்த வானுலகை வழங்கும் கருத்தால் நீர் கரையோடு பொரும் தெண்கடற்சங்கம் வந்து மகிழும் பூம்புகலியில் உள்ள அழகிய கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டீர் போலும்.

குறிப்புரை :

உரு - திருமேனிப்பொலிவு. மெல்லியல் - உமாதேவியார். கரு - `உருவமைந்த மாநகர்க்குக் கருவமைந்த மாடம்போல` என்றதில் உள்ள பொருளே ஈண்டுங் கொள்ளப்படினும், அங்குப் பொருட்கருவும் இங்கு அருட்கருவும் என்று வேறுபட்டு நிற்கும். பொருஆர்ந்த - மோதுதல் நிறைந்த. புகலி - சீகாழி. கோயிலாக - தலைமையில்லமாக. கோ - தலைவன், தலைமை தலைவனில்லம் இரண்டன் வேறுபாடு உணர்க.

பண் :

பாடல் எண் : 2

நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீ ருழைமானுரிதோ லாடையீர்
போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானற் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

பொழிப்புரை :

கங்கை சூடிய செஞ்சடையீர்! வரிசையாய் அமைந்த கழல்களை அணிந்த பாதத்தை உடையவரே! ஊர்தோறும் சிலவாக இடும் பலியை ஏற்பவரே! உழையாகிய மான் தோலை ஆடையாகப் பூண்டவரே! போர் போன்றுயர்ந்து வரும் அலைகள் சென்றணையும் கடற்சோலைகளைக் கொண்ட அழகிய புகலியில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டு விளங்குகின்றீர்.

குறிப்புரை :

நீர் - கங்கை நீர். உழைமான் - உழையாகியமான் `புல்வாய்(புலி) உழை மரையே கவரி`, `நவ்வியும் உழையும்` என்னும் மரபியற் சூத்திரப்பகுதிகளால் மானின் பேதம் புலப்படும்.

பண் :

பாடல் எண் : 3

அழிமல்கு பூம்புனலு மரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்டோளீர்
பொழின்மல்கு வண்டினங்க ளறையுங்கானற் பூம்புகலி
எழின்மல்கு கோயிலே கோயிலாக விருந்தீரே.

பொழிப்புரை :

மிகுதியாக நிறைந்துள்ள அழகிய கங்கையும் பாம்பும் சடைமீது பொருந்தச் சொற்கள் மிகுந்த நான்மறைகளை ஓதியவரே! கறைக்கண்டமும் எண்தோளும் உடையவரே! பொழில்களில் நிறைந்த வண்டுகள் இன்னிசைபாடும் பூம்புகலியுள் எழில் விளங்கும் கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

அழி - மிகுதி. `அற்றார் அழிபசி`. அடைவு - சார்வு. இறை - நஞ்சின் கறுப்பு. எழில் - அழகு.

பண் :

பாடல் எண் : 4

கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்றோல்
மயிலார்ந்த சாயன்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே கோயிலாக விசைந்தீரே.

பொழிப்புரை :

கையில் வெண்மழு ஒன்றை உடையவரே! மயில் போன்ற சாயலை உடைய உமையம்மை அஞ்ச யானையின் தோலை மெய்யில் போர்த்தவரே! மறை பயின்ற வேதியர்களின் பதியாய் விளங்கும் அழகிய புகலியுள் மதில்களால் சூழப்பட்ட கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

கையில் என்பதில் ஐகாரம் ஒருமாத்திரையொலிப்பது `சங்கக் கயனும்` (தி. ப .36 பா .9). கரி - யானை, ஆர்ந்த - ஒத்த, வெருவ - (அஞ்சிவாய்) வெருவுதலடைய, தோல் போர்த்தீர் என்க. பயில் - (மறைப்) பயிற்சி, முதனிலைத் தொழிற்பெயர். எயில் - மதில்.

பண் :

பாடல் எண் : 5

நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீ ரயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலித்
தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.

பொழிப்புரை :

நாவிற்பொருந்திய, பாடலைப் பாடுகின்றவரே! ஆடும்பாம்பை இடையிற்கட்டியவரே! பாடலில் பொருந்திய பொருளும் பயனும் ஆனவரே! நான்முகனால் விரும்பப்பெறும் பூக்கள் நிறைந்த பொய்கைகளும் வயல்களும் சூழ்ந்துள்ள பொழில் சூழ்ந்த புகலியில் தெய்வத்தன்மை பொருந்திய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு திகழ்கின்றீர்.

குறிப்புரை :

பாடல் - வேதகீதம். அரைக்கு - திருவிடையில். ஆர்த்தீர் - கட்டினீர். பாவும் அதன் பொருளும் அதன் பயனும் ஆயினீர். அயன் பேணும் புகலி - பிரமன் பூசித்த சீகாழி; பிரமபுரம். பூ - தாமரை மலர். `பூவினுக்கருங்கலம்`, `பொங்கு தாமரை` பூவிற்குத் தாமரையே. தே - பிரளயகாலத்திலும் அழியாத தெய்வத்தன்மை.

பண் :

பாடல் எண் : 6

மண்ணார்ந்த மண்முழவந் ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

பொழிப்புரை :

மார்ச்சனை ஊட்டப்பட்ட (முகப்பு - வலந்தரை) மண்ணாலான (கொட்டு என்பவற்றோடு கூடிய) முழவம் (மிருதங்கம்) ஒலிக்க, இமவான் மகளாகிய பார்வதிதேவி திருமேனியிற் பொருந்தி விளங்க, விரும்பிக்கையில் அனல் கொண்டு ஆடுபவரே! வானத்திற் பொருந்திய மதிமிடையும் மாடங்களைக் கொண்டுள்ள விரிந்த புகலியில் கண்களுக்கு மகிழ்வு தரும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு கலந்துள்ளீர்.

குறிப்புரை :

மண் - மார்ச்சனை. முழவம் - மத்தளம். (மிருதங்கம்) ததும்ப மகிழ ஆடினீர் என்க. மலையான் மகள் என்னும் பெண் - இமாசலராசன் குமாரி எனப்படும் உமாதேவியார், `நாமகள்` `திருமகள்` `மலைமகள்` `மலைப்பெண்` என்புழிப்போலத் தேவி என்ற பொருளைக் குறித்தலறிக. மெய் - திருமேனி. மகிழ - பூரிக்க. `மெய் மகிழ` என்றது அரிய பிரயோகம். மிடை - நெருங்கிய. சந்திர மண்டலம் அளவும் ஓங்கிய மாடம் என்றவாறு, `வண்கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்`. வியன் - அகலம். புகலிக்கண் ஆர்ந்த சீகாழியில் பொருந்திய.

பண் :

பாடல் எண் : 7

களிபுல்கு வல்லவுண ரூர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த வருள்செய்தீர்
தெளிபுல்கு தேனினமு மலருள்விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே கோயிலாக வுகந்தீரே.

பொழிப்புரை :

களிப்புமிக்க வலிய அவுணர்களின் மூன்று ஊர்கள் எரியுமாறு கணை எய்தவரே! வண்டுகள் சூழும் மலர்முடியை உடையவரே! தேவர்கள் வழிபட அருள் புரிந்தவரே! வண்டுகள் சூழும் தெளிந்ததேன் நிறைந்த மலருட் பொருந்திய மணம் கமழும் புகலியில் உள்ள ஒளி பொருந்திய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

களி - களிப்பு. முதனிலைத் தொழிற்பெயர். புல்கு - பொருந்திய. மூன்று ஊர் - முப்புரம். அளி - வண்டுகள். அமரர் - தேவர். மரணமில்லாதவர் - நெடிது வாழ்பவர். ஏத்த - துதிக்க. தெளி - தெளிவு. கலங்கலின்மை - கலங்கல் நீக்கம். விரை மணம். ஒளி - சிவப்பிரகாசம். சுடரொளியுமாம். உகந்தீர் - விரும்பினீர்.

பண் :

பாடல் எண் : 8

பரந்தோங்கு பல்புகழ்சே ரரக்கர்கோனை வரைக்கீழிட்
டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீ ருகவாதார்
புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

பொழிப்புரை :

பரவிய பல்புகழை உடைய இராவணனைக் கயிலை மலைக்கீழ் அகப்படுத்திப் பொருள்நிறைந்த அவன் பாடலைக் கேட்டு மகிழ்ந்து வாழ்நாள் அருளியவரே! தம்மோடு மகிழ்வில்லாத அசுரர்களின் மும்மதில்களையும் எரியச்செய்தவரே! அழகிய புகலியில் அருள் நலம் தோன்றும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

பரந்து ஓங்குபல் புகழ் - உலகம் எங்கும் பரவி ஓங்கிய பெருங்கீர்த்தி, இராவணன் திரிலோக சஞ்சாரியாதலின் அத்தகு புகழ் பெற்றனன். உரம் - அறிவு, `கைத்தலங்கள்.... பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமதத்துவனை .. ச் சாராதே சாலநாள்போக்கினேனே` (தி .6 ப .79 பா .10)`எறியுமா கடல் இலங்கையர்கோனை... அடர்ந்திட்டுக் குறிகொள்பாடலின் இன்னிசை கேட்டுக் கோலவாளொடு நாளது கொடுத்த செறிவு கண்டு நின் திருவடியடைந்தேன் செழும்பொழிற்றிருப்புன் கூருளானே` (தி .7 ப .55 பா. 9). `அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை` (தி .7 ப.62 பா .9).(ஸாமபி: விவிதை: ஸ்தோத்ரை ப்ரணம்ய ஸ த ? நந:) என்று வான்மீகிராமாயணம் உணர்த்து மாற்றால் அச்சாம வேதத்தையே உரந்தோன்றும் பாடல் என்றார். புரம் .. மும்மதில் - முப்புரமாகத் தோன்றிய மதில். வரம் தோன்று கோவில் - `வரபுரம் ஒன்றுணர் சிரபுரத்துறைந்தனை` (தி.1- பதி .128, அடி .31)

பண் :

பாடல் எண் : 9

சலந்தாங்கு தாமரைமே லயனுந்தரணி யளந்தானுங்
கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்
புலந்தாங்கி யைம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே.

பொழிப்புரை :

நீரிற்பொருந்திய தாமரை மேல் உறையும் பிரமனும், உலகை அளந்த திருமாலும் கூடி உயர்ந்து சென்றும் அகழ்ந்து சென்றும் காண இயலாதவாறு கனல் உருவம் கொண்டவரே! மெய்யுணர்வு பெற்று ஐம்புலன்களையும் செற்றவர் வாழும் அழகிய புகலியுள் நன்மைகளைக் கொண்ட கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

சலம் - நீர். அயன் - பிரமன். தரணி - பூமி. அளந்தான் - திருமால். மாவலியிடம் மூவடி மண் பெற்ற வரலாறு. ஓங்கியவன் அயன், இழிந்தவன் அரி. கனல் - தீ. புலம் - மெய்யுணர்வு. செற்றார் - அழித்த ஞானியார், அடியார். நலம் - அழகு, நன்மை. நயந்தீர் - விரும்பினீர்.

பண் :

பாடல் எண் : 10

நெடிதாய வன்சமணு நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர்
பொடியாரு மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த
வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

பொழிப்புரை :

காலம் நீட்டித்துச் சொல்லும் வலிய சமணர்களும், நிறைவாக ஒன்றைக் கூறாத சாக்கியரும் கடுமையான சொற்களால் பழித்துப்பேச, மேலானதொரு மெய்ப்பொருளாக விளங்குபவரே! பொடி பூசியவரே! புகலிப்பதியுள் மறையவர் விரும்பி ஏத்த அங்குள்ள அழகிய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்.

குறிப்புரை :

நிறைவு - சமயக்கொள்கையின் நிறைவு அறிவின் நிறைவுமாம். கடிது - கடுமையுடையது. கழற - பழித்துப்பேச. மேல் ஓர் பொருள் - மேலாக ஒரு மெய்ப்பொருள். பொடி - திருநீறு. புரிந்து - இடைவிடாது நினைந்து. வடிவு ஆகும் - அழகு நிறைந்த தோற்றமும் ஆம்.

பண் :

பாடல் எண் : 11

ஒப்பரிய பூம்புகலி யோங்குகோயின் மேயானை
அப்பரிசிற் பதியான அணிகொண்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழாற் றெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசி லிடர்நீங்கி யிமையோருலகத் திருப்பாரே.

பொழிப்புரை :

ஒப்பில்லாத அழகிய புகலிப்பதியுள் ஓங்கிய கோயிலுள் மேவிய இறைவனை மேலாம் தகைமை உடைய புகலியுள் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லுதற்கு அருமையாக விளங்கும் தண்டமிழால் ஆராய்ந்துரைத்த பாடல்களாகிய இவற்றை ஓதவல்லவர் எவ்வகையிலும் இடர்கள் நீங்கி இமையோருலகில் நிலைத்து இருப்பார்கள்.

குறிப்புரை :

மேயான் - மேவியவன். பரிசு - தகைமை. செப்ப அரிய- அருள்பெறாதவர் சொல்லுதற்கு அருமையவாகிய. தெரிந்த - ஆராய்ந்த.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதம்
சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.

பொழிப்புரை :

அழகிய சங்கவெண்குழையையும் தோட்டையும் அணிந்து ஒப்பற்ற நால்வேதங்களை ஐயம் இன்றி அருளியவரே! சுடுகாடல்லாமல் வேறோர் இடத்தைத் தாம் ஆடுதற்கு இடமாகக் கருதாதவரே! நீர்க்குலைகளாகக் காய்த்துள்ள சிவந்த காய்களை உடைய பசுமையான கமுக மரச்சோலைகளில் குயில்கள் ஆலும் சிறப்புடைய தலைச்சங்கைக் கோயிலை நீர் இருக்கும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

நலம் - அழகையுடைய, சங்கவெண்குழை - சங்காலான வெளியகுண்டலம். சங்கை - ஐயம். கமுகின் குலைக்காய் செந்நிறத்ததாதல் கூறப்பட்டது. தாழ்ந்தீர் - எழுந்தருளியுள்ளீர். தலைச் சங்கை - தலைச்சங்காடு என்பதன் மரூஉப்போலும்.

பண் :

பாடல் எண் : 2

துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர்
மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லா மாண்பானீர்
பிணிமல்கு நூன்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

பொழிப்புரை :

துணியால் இயன்ற கோவணத்தையும் தோல் ஆடையையும் உடுத்த கோலம் காட்டி ஆட்கொண்டவரே! நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே! தேவர்களுள் மாட்சிமை உடையவரே! நீர், முறுக்கிய பூணூல் மார்பினராகிய அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டு அமர்ந்துள்ளீர்.

குறிப்புரை :

மணி - நீலமணிபோலும் நிறம், அண்டர் - தேவர். மாண்பு - மாட்சி, பெருமை. பிணி - பிணித்தல். அணி - அழகு. நான்கு அடியிலும் மல்குதல் என்றதற்கு நிறைதல் என்ற பொருளுறப் பொருத்திக் கூறிக்கொள்க.

பண் :

பாடல் எண் : 3

சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளே றூர்தியீர்
நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத்
தார்கொண்ட நூன்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே கோயிலாக விருந்தீரே.

பொழிப்புரை :

சிறப்புமிக்க பாடல்களைப் பாடுபவரே! சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய வெள்ளேற்றை ஊர்தியாகக் கொண்டவரே! நீரையும் பூவையும் கொண்டு உம்மை நீங்காத தொண்டர் நின்று வழிபட மாலையையும் பூணூலையும் அணிந்த மார்பினை உடையவரே! நீர், தக்கோர் வாழும் தலைச்சங்கையிலுள்ள அழகிய கோயிலை இடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

சீர் - கனம், மேன்மை. பாடல் - வேதப்பாடல், சாமகானம். ஏறு - எருது. ஊர்தி - வாகனம். சிவபூசை செய்வார்க்கு இன்றியமையாத பொருள் நீரும் பூவும் என்பது குறிக்கப்பட்டது. தார் - மாலை, தார்கொண்ட மார்பர். நூல் (பூணு நூல்) அணிந்த மார்பர் என்க. தக்கோர் - `அந்தணாளர்`. (பா. 8) ஏர் - அழகு.

பண் :

பாடல் எண் : 4

வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
ஓடஞ்சூழ் கங்கையு ம் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசற் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

பொழிப்புரை :

தாமே விரும்பிப் பற்பல வடிவங்களோடு வரும் இயல்பினரே! நீண்ட வெண்டிங்களாகிய ஓடம் செல்லும் கங்கையாற்றை உச்சியில் வைத்துள்ளவரே! நீர், தலைச்சங்கையில் கூடம், மண்டபம் வாயிலில் கொடிதோன்றும் மாடம் ஆகிய வீடுகள் சூழ்ந்த கோயிலை இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

வேடம் - `பலபல வேடம் ஆகும் பரன்`, உச்சியிலுள்ள கங்கையில் திங்கள் ஓடம்போல் உளது. கூடம், மண்டபம், மாடம் என்பன இட விசேடங்கள், வாசலில் கொடி தோன்றும் மாடம் என்க.

பண் :

பாடல் எண் : 5

சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமே னீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கான லன்னமன்னுந் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.

பொழிப்புரை :

சூலம் ஏந்திய கையை உடையவரே! பொடியாகிய வெண்ணீற்றைப்பூசி ஆடுபவரே! நீலகண்டரே! நீண்ட சடைமேல் கங்கையை ஏற்றுள்ளவரே! நீர், வளம் சேர்ந்த குளிர்ந்த சோலைகளில் அன்னங்கள் பொருந்தி வாழும் தலைச்சங்கையில் உள்ள அழகிய கோயிலை உமது கோயிலாக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

சூலம் - `மூவிலைவேல்`. சுண்ணம் - பொடியாகிய. ஆடலீர் - மூழ்குதலுடையீர். நீராடல் போல் நீறாடல். நீர் - கங்கை. ஆலம் - நீர். மன்னும் - பொருந்தும். கோலம் - அழகு; வடிவமுமாம்.

பண் :

பாடல் எண் : 6

நிலநீரொ டாகாச மனல்காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.

பொழிப்புரை :

நிலம், நீர், ஆகாயம், அனல், காற்று ஆகிய ஐம்பூதவடிவாய் நின்று ஐம்புலன்களை வென்று நிற்பவரே! பொய்யிலாரது வழிபாட்டை ஏற்பவரே! நீர், வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாததக்கோர் வாழும் தலைச்சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

நிலம் முதலிய ஐம்பெரும்பூதங்களாகி நின்றவன் இறைவன். அட்டமூர்த்தங்களுள் முதலைந்தும் இவையே. ஐந்துபுல நீர்மைபுறம் கண்டார் - ஐம்புலன்களை வென்றவர். பொக்கம் - பொய். போற்று - துதி. ஓவார் - நீங்கார். சலம் - மாறுபாடு; வஞ்சகம். நீதம் - இழிஞர். `தக்கார்` (ப .176, பா .10) நலநீர - அழகிய தன்மையுடைய.

பண் :

பாடல் எண் : 7

அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
கொடிபுல்கு மென்சாயல் உமையோர் பாகங்கூடினீர்
பொடிபுல்கு நூன்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்
கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

பொழிப்புரை :

திருவடியிற் பொருந்திய கழல் ஆர்க்க அனல் ஏந்தி நடனம் ஆடி, கொடிபோன்ற மென்மையான சாயலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ளவரே! நீர், வெண்பொடிபூசிப் பூணநூல் அணிந்த மார்பினராய் முப்புரிநூலணிந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் மணம் கமழும் கோயிலையே உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

புல்கு - சார்ந்த; கூடிய. ஆர்ப்ப - ஒலிக்க. பேர்ந்து - நட்டம் ஆடி. `கொடி புல்கு மென்சாயல் உமை` என்றது தேவியார் திருநாமம் ஆகிய சௌந்தரியம்மை என்பதைத் தோற்றியது. பொடி - திருநீறு. புரிநூல் ஆளர் - விரும்புகின்ற வேதநூல்களை ஆள்பவர். `நூன் மார்பர்` என்று முன் உள்ளதன் பொருளே கூறல் நன்றன்று. `மறையாளர்` (பா . 9). கடி - காவல்.

பண் :

பாடல் எண் : 8

திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை
வரையார்ந்த தோளடர விரலாலூன்று மாண்பினீர்
அரையார்ந்த மேகலையீ ரந்தணாளர் தலைச்சங்கை
நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே.

பொழிப்புரை :

திரைகளோடு கூடிய பெரிய கடல்சூழ்ந்த இலங்கை மன்னனை, அவனுடைய மலைபோன்ற தோள்கள் நெரியுமாறு கால் விரலால் ஊன்றும் பெருவீரம் உடையவரே! இடையில் மேகலையை உடுத்த அம்மையின் பாகத்தைக் கொண்டவரே! நீர் அந்தணாளர் பல்கிவாழும் தலைச்சங்கையில் முறையாக அமைந்த கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

திரை - அலை. மா - பெரியது. வரை - மலை. அரை - இடை. நிரை - வரிசை. மேகலை - அணிவிசேடம். அரை ஆர்ந்த மேகலையீர், என்பது, பாதி மாதை உடையீர் என்றவாறு. `ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர்` (பதி .192 பா .2)

பண் :

பாடல் எண் : 9

பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்
போயோங்கிக் காண்கிலார் புறநின்றோரார் போற்றோவார்
தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்
சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

பொழிப்புரை :

பாயாக அமைந்த பாம்பணைமேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பசிய தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் சென்று காணஇயலாதவரே! புறச்சமயங்களில் நில்லாத அகச்சமயிகளால் அறிந்து போற்றப்படுபவரே! முத்தீவளர்க்கும் நான்மறையாளர் வாழும் செல்வச் செழிப்புள்ள தலைச்சங்கையில் உயர்ந்து திகழும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

பாய் - பரந்து. போய் - கீழிடந்துபோய். ஓங்கி -மேற்பறந்துயர்ந்து. புறம் நின்று ஓரார் - புறச்சமயக் கொள்கைகளில் நின்று ஆராயாதவர். அகச்சமயக் கொள்கை வழி ஆராய்பவர் என்றவாறு. புறம் வெளியுமாம். போற்று - துதி. ஓவார் - நீங்காதவர். தீ - வேள்வித் தீ. சேய் - உயர்வின் நீட்சி.

பண் :

பாடல் எண் : 10

அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்
தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே.

பொழிப்புரை :

அலைகளை உடைய நீரில் குளியாத அமணர், குண்டர், சாக்கியர் இடைவிடாது அலர்தூற்ற, தம்மை வழிபடுவார்க்குக் காட்சி தந்து ஆட்கொள்பவரே! நீர், நிலையான நால்வேதங்களை ஓதி உணர்ந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் நிலையாக உள்ள கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

புனல் துறந்த - குளித்தல் இல்லாத என்றவாறு. சாக்கியர் என்பது புதிய பாடம். தொலையாது - இடையில் ஒழியாமல். அலர் - பழி. நிலை - கோபுரநிலை.

பண் :

பாடல் எண் : 11

நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்
குளிருந் தலைச்சங்கை யோங்குகோயின் மேயானை
ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்
மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீரால் வளம் பெறும் காழியில் தோன்றிய நன்மை கருதும் ஞானசம்பந்தன், தண்மையான தலைச்சங்கையில் ஓங்கிய கோயிலில் விளங்கும் இறைவனை, ஒளிரும் பிறையை அணிந்தவனை, போற்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் விளங்கும் கடலால் சூழப்பட்ட மண் உலகினர்க்கு மேலான விண் உலகத்தினராவர்.

குறிப்புரை :

நளிரும் - குளிரும். மேயானை - மேவிய பெருமானை. மிளிரும் திரை - விளங்கும் கடல். வையத்தார் - மண்ணுலகோர். மேலார் - வானுலகோராவர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர் சாமவேத மோதினீர்
எங்குமெழிலார் மறையோர்கண் முறையாலேத்த விடைமருதில்
மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

பொழிப்புரை :

திருமேனியில் விளங்கித் தோன்றும் பூணூல் அணிந்தமார்பினரே! பூதப்படைகளை உடையவரே! அழகிய கங்கை தங்கும் செஞ்சடையை உடையவரே! சாமவேதத்தைப் பாடுபவரே! நீர் அழகிய மறைகளைக் கற்றுணர்ந்த மறையவர்; எல்லா இடங்களிலும் முறையால் ஏத்த இடைமருதூரில் வானளாவிய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்.

குறிப்புரை :

படை - கணம். எழில் - அழகு. எங்கும் ஏத்த மகிழ்ந்தீர் என்க. மேலும் இவ்வாறே கூட்டுக. முறையால் - வேதாகம விதிப்படி. மங்குல் - மேகம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்
ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீ ரிடைமருதில்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

பொழிப்புரை :

கங்கை ஆர்ந்த செஞ்சடையை உடையவரே! நெற்றியில் அழகிய கண்ணைக் கொண்டுள்ளவரே! போர்க்கருவியாகிய வெண்மழு ஒன்றை ஏந்தியவரே! பூதங்கள் பாடுதலை உடையவரே! அழகிய மேகலை அணிந்த பார்வதிதேவியைப் பாகமாகக் கொண்டவரே! நீர், இடைமருதில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உம் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர்.

குறிப்புரை :

நிகழ்வித்தீர் - விளங்கச் செய்தீர். பூதம் பாடலீர் - பூதங்கள் பாடுதலை உடையீர். ஏர் - அழகு. சீர் சிறப்பு, மேன்மை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

அழன்மல்கு மங்கையில் ஏந்திப்பூத மவைபாடச்
சுழன்மல்கு மாடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
எழின்மல்கு நான்மறையோர் முறையாலேத்த விடைமருதில்
பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

பொழிப்புரை :

நிறைந்த தீயை, அழகிய கையில் ஏந்திப் பூதங்கள் பாடச் சுழன்று ஆடுபவரே! சுடுகாடல்லால் பிறவிடத்தை நினையாதவரே! நீர், அழகிய நான் மறையோர் முறையால் ஏத்தி வழிபட இடை மருதில் உள்ள சோலைகள் சூழ்ந்த கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டு பொலிந்துள்ளீர்.

குறிப்புரை :

அழல் - தீ. சுழல் மல்கும் ஆடலீர் - சூழ்தல் நிறைந்த திருக்கூத்தை உடையீர். பொழில் - பூஞ்சோலை. பொலிந்தீர் - பொன்போல் விளங்கினீர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர்
வில்லாற் புரமூன்றும் எரித்தீர் விடையார் கொடியினீர்
எல்லாக் கணங்களும் முறையாலேத்த விடைமருதில்
செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

பொழிப்புரை :

பொலிவற்ற, தசைவற்றிய தலையோட்டை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவரே! வில்லால் முப்புரங்களை எரித்தவரே! விடைக்கொடி உடையவரே! நீர், எல்லாக்கணத்தினரும் முறையால் போற்ற இடைமருதில் உள்ள செல்வம் ஆன கோயிலையே உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

பொல்லா - பொலிவில்லாத. விடையார் கொடி - எரு துருவெழுதியகொடி. `ஏர்காட்டும் கோதிலா ஏறாங்கொடி` (திருவா - திருத்தசா - 10). எல்லாக் கணங்களும் - சிவகணம் முதலிய எல்லாமும். செல்வு ஆய - செல்வமாகிய, அம்விகுதி கெட்டது. `செல்வாய செல்வம் தருவாய் போற்றி`, (அப்பர்) `செல்வாய்த் திருவானாய் நீயே` (அப்பர் பதி.255. பா. 3).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த விடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.

பொழிப்புரை :

பெருமானே! நீர், விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித்தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

வருந்திய - தவத்தால் மெய்வருந்திய. ஏனோர் - மண்ணோர், பாதலத்தோர் முதலியோர். ஈண்டி - கூடி. இத்தலத்தில் தைப்பூசத்தில் தீர்த்தமாடி வழிபடுதல் தொன்று தொட்டு நிகழும் வழக்கு. `தேசம்புகுந்தீண்டி ஓர் செம்மை உடைத்தாய், பூசம் புகுந்தாடி` `பூசம் நாம் புகுதும் புனலாடவே` (அப்பர்). பொலிவு - சிவப்பொலிவு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்
வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர்
இலமல்கு நான்மறையோ ரினிதாவேத்த விடைமருதில்
புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

பொழிப்புரை :

பெருமானே! கங்கை தங்கிய செஞ்சடையீரே! சாந்தமும் நீறும் பூசியவரே! வெற்றி பொருந்திய வெண்மழு ஒன்றை ஏந்தி மயானத்தில் ஆடுபவரே! இல்லங்களில் தங்கியுள்ள நான் மறையோர் வழிபாட்டுக் காலங்களில் வந்து இனிதாகப் போற்ற இடைமருதில் ஞானமயமான கோயிலை நீர் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

சலம் - கங்கை நீர். வலம் - வெற்றி, வலப்பக்கமும் ஆம். இலம் - இல்லம்; வீடு. பற்றின்மையும் ஆகும். புலம் - அறிவு, இடமுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

புனமல்கு கொன்றையீர் புலியினதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்
இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொ ளிடைமருதில்
கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

பொழிப்புரை :

காடுகளில் வளரும் கொன்றையினது மலர்களைச் சூடியவரே! புலித்தோலை உடுத்தியவரே! அழகிய சினம்மிக்க வெள்விடையை உடையவரே! சிவந்த மேனியரே! கரிய கண்டத்தைக் கொண்டவரே! நீர், திரளாகப் பொருந்திய நான்மறையோர் ஏத்தும் சிறப்பு மிக்க இடைமருதில் மேகங்கள் தவழும் உயரிய கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

புனம் - கொல்லை. அதள் - தோல். மால் விடை - திருமாலாகிய எருது; அறவிடை, உயிர் விடை என்பவை வேறு. இம் மூன்றும் சிவபிரானுக்கு ஊர்தி, செய்யீர் - செந்நிறத்தை உடையீர். `செம்மேனியெம்மான்`. இனம் - கூட்டம். மறைக்கும், மறையோர்க்கும் பொது. கனம் - மேகம், கோயிலின் உயர்ச்சி குறித்தது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
தலைபத்துந் திண்டோளு நெரித்தீர் தையல்பாகத்தீர்
இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த விடைமருதில்
நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே.

பொழிப்புரை :

மேருமலையாகிய வில்லில் செலுத்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தவரே! வலிமை பொருந்திய இராவணனின் பத்துத்தலைகளையும் தோள்களையும் நெரித்தவரே! மாதொரு கூறரே! இலைகள் அடர்ந்த பொழில்களும் வயல்களும் சூழ்ந்த இடைமருதில் உள்ள அழகு நிறைந்த கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

உய்த்த - செலுத்திய. திறல் - வலிமை. தையல் - உமாதேவியார். நலம் - அழகு. நயந்தீர் - விரும்பினீர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

மறைமல்கு நான்முகனு மாலுமறியா வண்ணத்தீர்
கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்
அறைமல்கு வண்டினங்க ளாலுஞ்சோலை யிடைமருதில்
நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதும் நான்முகனும் திருமாலும் அறிய இயலாத தன்மையீர்! கறைக் கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினை உடையீர்! இசைமிழற்று வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த இடைமருதில் உள்ள நிறைவான கோயிலை நும் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

கறை - நஞ்சின் கறுப்பு. அறை - ஓசை. கபாலம் - பிரம்மகபாலம். ஆலும் - ஒலிக்கும். நிறை - `நிறையால் நினைபவர்`. நிகழ்ந்தீர் - விளங்கினீர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணரும்
துன்பாய கட்டுரைகள் சொல்லி யல்லல்தூற்றவே
இன்பாய வந்தணர்க ளேத்துமேர்கொ ளிடைமருதில்
அன்பாய கோயிலே கோயிலாக வமர்ந்தீரே.

பொழிப்புரை :

பெருமானே! நீர், அற்பமான போர்வை அணிந்த சாக்கியரும், அழுக்கு ஏறிய உடலினராகிய சமணரும் துன்பமயமான கட்டுரைகள் சொல்லித்தூற்ற, இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும் அழகிய இடைமருதில் அன்புவடிவான கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

சின் (போர்வை) - சின்மை, அற்பம். திரிபு, `நன் பொருள்` என்பதிற் போல லகரம் னகரமாகத் திரிந்தது. துன்பு ஆய கட்டுரைகள் - துன்பந்தருவனவாய கட்டிச் சொல்லியவை. அல்லல் - துன்பம். இன்பு - இன்பம். அன்பு ஆயகோ `அன்பே சிவம்` அன்பிற்குரியதாகிய கோயிலுமாம். அமர்தல் - விரும்பியிருத்தல்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான் நற்றமிழ் ஞானசம்பந்தன்
எல்லி யிடைமருதில் ஏத்துபாட லிவைபத்தும்
சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரம்இல்லையே.

பொழிப்புரை :

கல்லால் இயன்ற அழகிய மாடவீடுகளைக் கொண்ட கழுமலத்தார் தலைவனாகிய நன்மைதரும் அருமறைவல்ல நற்றமிழ் ஞானசம்பந்தன் இராப்போதில் இடைமருதை அடைந்து ஏத்திய பாடல் இவை பத்தையும் சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லை.

குறிப்புரை :

கல்லின் மணிமாடம் - கல்லாற் கட்டப்பட்ட அழகிய மாடங்களையுடைய (கழுமலம்). கழுமலத்தார் - சீகாழியில் உறையும் சிவமறையோர். காவலவன் - அரசன்; வேந்தன். `சண்பையர் வேந்தன்`. எல்லி - இரவு. துயரம் - பிறப்பு இறப்புக்கள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பெண்ணமருந் திருமேனி யுடையீர் பிறங்குசடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

உமையம்மை பொருந்திய திருமேனியை உடையவரே! விளங்கும் சடைகள் தாழ்ந்து தொங்க இசை அமைதி உடைய நான்மறைகளைப்பாடி ஆடல்புரிகின்றவரே! நீர் உறுதியான பசிய பொழில்களும் வயல்களும் சூழ்ந்த திருநல்லூரில் மண்ணுலக மக்களால் விரும்பப்படும் கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

பெண்ணமருந்திருமேனி உடையீர் - மங்கை பங்கரே. பிறங்கு - விளங்குகின்ற. பண் - இசை. திண் - உறுதி. மண் அமரு - மண்ணோர் விரும்பும். நிலத்தில் பொருந்தும் என்பது சிறந்ததன்று, `வானமருங்கோயில்` (பா.4) `வான்தோயுங்கோயில் (பா.7).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி யங்கையில்
கொலைமல்கு வெண்மழுவு மனலுமேந்துங் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கையையும், பிறையையும் முடியிற்சூடி அழகிய கைகளில் கொல்லும் தன்மை வாய்ந்த வெண்மழு அனல் ஆகியவற்றை ஏந்திய தன்மையீர்! வில்லிற் பொருந்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தீர்! நீர் திருநல்லூரில் மலையமைப்புடைய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

தண்புனல் - குளிர்நீர்; கங்கை. அனல் - தீ. கொள்கை - விரதம்; மேற்கோளும் ஆம். சிலை - மேருமலையாகிய வில். வெங்கணை - திருமாலாகிய அம்பில் தீயாகியமுனை உடைமையால் வெம்மை கூறப்பட்டது, கணையின் கொடுமை குறித்தலுமாம். மலைமல்கு கோயில் - மலைபோலத் தோற்றம் நிறைந்த கோயில். `வெள்ளிமால் வரையை - நேர் விரிசுடர்க் கோயில்` (பெரி. திருஞா- 368. பா - 10 பார்க்க).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

என்றும் குறைநிரம்பாத வெண்மதியத்தைச்சூடி, குளிர்ந்த மென்மையான சடைகள் தாழப் பறைகள் ஒலிக்கப் பாடலோடு ஆடலை விரும்பிப் பழகும் இயல்பினரே! மடையில் நிரம்பிய குளிர்ந்த புனலோடு கூடிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வேதங்கள் ஒலிக்கும் கோயிலையே நும் கோயிலாக விரும்பி மகிழ்ந்து உறைகின்றீர்.

குறிப்புரை :

குறைமதியம்; நிரம்பாமதியம்; வெண்மதியம் என்க. குறை நிரம்பாத மதியமென்றுகொளின் இறைவன் திருமுடி மேற்பிறை என்றும் பிறையாகவே இருப்பதாம். தேய்தலுங் குறைதலுமில்லை என்று கொள்ளலும் ஆம். பறை - வாத்தியங்கள். நவின்ற - மிக்கொலித்த. சிறை - அணை. நவின்ற - செய்த. மறை நவின்ற - வேதங்களைப் பயிலுதற்கு இடமான.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர்
மானமரு மென்விழியாள் பாகமாகு மாண்பினீர்
தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

வளைந்த வெண்பிறையையும் கங்கையையும் முடியிற்சூடுபவரே! மான் போன்ற மென்மையான விழியினை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! தேன் நிறைந்த பசிய பொழிலில் வண்டுபாடும் திருநல்லூரில் விளங்கும் வானளாவிய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

கூன் - வளைவு. மான் அமரும் விழி - மான் மருண்டு நோக்குவது போல நோக்கும் விழிகள். கண் வேறு விழிவேறு ஆயினும் இரண்டும் ஒன்றாகக் கொண்டு இருவகை வழக்கிலும் ஆள்வர். மாண்பு - பெருமை. வான் - வானோர். அமரும் - விரும்பித்தொழும். வானளாவிய எனலுமாம். `மண்ணமருங் கோயில்`(பா.1)`வான்தோயுங்கோயில்`(பா.7).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

நிணங்கவரு மூவிலையு மனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோ டாடன்மேவு மழகினீர்
திணங்கவரு மாடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்
மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

பொழிப்புரை :

நிணம் பொருந்திய மூவிலைவேலையும், அனலையும் கைகளில் ஏந்தி நெறிப்புடைய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிப் பாடல் ஆடல் விரும்பும் அழகுடையவரே! உறுதியாகப் பிற உயிர் கவரும் பாம்பையும் பிறையையும் சூடித் திருநல்லூரில் மணங்கமழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

நிணம் - கொழுப்பு. நெறிகுழலாள் - நெறித்த கூந்தலையுடைய உமாதேவியார். அணங்கு - தெய்வம். குழலாளாகிய அணங்கு என்றேனும் தெய்வத்தன்மை பொருந்திய பாடல் என்றேனும் கொள்ளலாம். திணம் (திண்ணம்) - உறுதியாக. கவரும் - (நஞ்சால் உயிரைக்) கவரும். அரவு - பாம்பு. பிறையைத் திண்ணங்கவரும் அரவு எனலும் பொருந்தும். `சொலீர் ....... செஞ்சடையிற் பிறை பாம்புடன் வைத்ததே` (பதி.137 பா.1) மணம் - சிவமணம். கமழும் - மணக்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள் பாகமாகு மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயிலாக விருந்தீரே.
 

பொழிப்புரை :

கார்காலத்தைப் பொருந்திமலரும் கொன்றைப் பூவைச் சூடி மணம் கமழும் புன்சடை தாழக் கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! கொடிகள் அசைந்தாடும் தேர் ஓடும் நீண்ட வீதியினை உடைய திருநல்லூரில் அழகு விளங்கும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றீர்.

குறிப்புரை :

கார் - கார்காலம். `காரார் கொன்றை` (தி.1.ப.56 பா.1) `கார்மலி கொன்றை`(தி.3 ப.60 பா.6) `காரினார் மலர்க்கொன்றை தாங்கு கடவுள்` (பதி.186 பா.6) `கார்க்கொன்றை மாலை கலந்ததுண்டோ` `காரினார் கொன்றைக் கண்ணியார்`(தி.2 ப. 162. பா.6) வார் - கச்சு. `தேர்மருவு நெடுவீதிக் கொடிகள் ஆடும்` என்றதால், திருநல்லூரின் பிரமோற்சவமும் மாடவீதிகளின் சிறப்பும் குறித்தவாறு. ஏர் - அழகு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

ஊன்றோயும் வெண்மழுவு மனலுமேந்தி யுமைகாண
மீன்றோயுந் திசைநிறைய வோங்கியாடும் வேடத்தீர்
தேன்றோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வான்றோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

ஊன்தோயும் வெண்மழுவையும் அனலையும் கையில் ஏந்தி உமையம்மை காண விண்மீன்கள் பொருந்திய வானத்தைத் தொடும் எல்லாத்திசைகளும் நிறையும்படி ஓங்கி ஆடும் நடனக் கோலத்தைக் கொண்டவரே! தேன் பொருந்திய அழகிய பொழிலின் கண் வண்டுகள் இசைபாடும் திருநல்லூரில் உள்ள வானளாவிய கோயிலையே நும் கோயிலாக மகிழ்ந்து உறைகின்றீர்.

குறிப்புரை :

ஊன் - தசை. மீன் தோயும் திசை - நட்சத்திரங்கள் பொருந்திய வானம். இது பத்துத் திக்குகளுள் மேலிடம். வேடம் - நடனக்கோலம். வான் தோயும் கோயில்:- `வான் அமரும் கோயில்` (பா.4).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப
மாதமரு மென்மொழியாண் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
தீதமரா வந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்
மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

காதில் பொருந்திய வெண்குழையை உடையவரே! சினந்து வந்த இராவணன் கயிலையைப் பெயர்க்கக் காதல் விளைக்கும் மெல்லிய மொழியினை உடையாளாகிய உமையம்மை கலங்க, அதனைக் கண்டு உகந்தவரே! தீயசெயல்களை விரும்பாத அந்தணர்கள் பரவிப் போற்றும் திருநல்லூரில் உள்ள பெருமை பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

காது - காதில். கறுத்த - கோபித்த. கருநிறமுடைய `நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்கவாலினால் கட்டிய வாலியார்` (தி.3 ப.91 பா.8). மாது - காதல். மறுகும் வண்ணம்- கலங்கும்படி. கண்டு உகத்தல்:- மகிழ் விளையாட்டு. தீது அமரா - தீ வினையை வெறுத்த. மாது - பெருமை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

போதின்மே லயன்றிருமால் போற்றியும்மைக் காணாது
நாதனே யிவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர்
மாதரா ளவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் போற்றியும் உம்மைக்காணாது பின் இவனே பரம்பொருள் என்று விரும்பி ஏத்த மகிழ்ந்து, அவர்கட்கு அருள் செய்தவரே! தீதில்லாத அந்தணர்கள் முத்தீயோம்பும் திருநல்லூரில் மன்னும் கோயிலில் உமையம்மையாரோடு மகிழ்ந்து உறைகின்றீர்.

குறிப்புரை :

போது - செந்தாமரைப்பூ. அயன் - பிரமன். \\\\\\\'நாதனே இவன்\\\\\\\' என்று ஏத்தமகிழ்ந்து அளித்தீர். நயந்து - விரும்பி, பக்தி கொண்டுமாம். தீ மூன்று - ஆகவநீயம், காருக பத்தியம், தாட்சிணாக்கினி. மாதராள் - அழகுடையாராகிய உமாதேவியார். மன்னு - நிலையுற்ற.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்
றல்லாதா ரறவுரைவிட் டடியார்கள் போற்றோவா
நல்லார்க ளந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

பொல்லாத சமணர்களோடு புறங்கூறும் சாக்கியர் என்ற ஒன்றிலும் சேராதார் கூறும் அறவுரைகளை விட்டு அடியவர்கள் வந்து வழிபடுதல் நீங்காததும், நல்லவர்களாகிய அந்தணர்கள் நாளும் வந்து வழிபடுவதும் ஆகிய திருநல்லூரில் மலையில் விளங்கும் கோயிலையே தன் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

பொல்லாத - தீய. அறவுரை - இகழ்ச்சிக் குறிப்பு. போற்று - துதி. ஓவா - நீங்காத. மல் - மலை. `மற்பகமலர்ந்த திண்டோள் வானவர்`(கம்பர், பால: உரைக்காட்சிப். 52). `மல்லினும் உயர் தோளாய் மலரடிபிரியாதேன்` (கங்கைப்-66).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்
சிந்தனையா லுரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.
 

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் செறிந்த பொழில்புடை சூழ்ந்த கொச்சைவயம் என்னும் சீகாழியில் உயர் குலத்தில் தோன்றிய தலைவனாகிய செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் மடையில் சிறைப்படுத்திய வண்புனல் சூழ்ந்த திருநல்லூரில் பந்து பொருந்தும் மெல்விரலாள் பங்கனைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்களைச் சிந்தையோடு ஒன்றி உரைப்பவர் சிவலோகம் சேர்ந்து இனிதிருப்பர்.

குறிப்புரை :

கொந்து - பூங்கொத்து. புடை - பக்கம். கொச்சை - சீகாழி. செந்தமிழில் மறைப்பொருளை அருளியதால் `செந்தமிழின் சம்பந்தன்` என்னும் உரிமை உண்டாயிற்று. சிறை - அணை. `பந்தார் விரலி` என்னும் அம்பிகையின் திருப்பெயரை நினைக்க. சிந்தனையால் - தியானத்தோடு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

கலைவாழு மங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்
அலைவாழுஞ் செஞ்சடையி லரவும்பிறையு மமர்வித்தீர்
குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில்
நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே.

பொழிப்புரை :

மான் வாழும் கையினை உடையவரே! மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய கங்கை தங்கிய செஞ்சடையில் பாம்பையும் பிறையையும் அணிந்தவரே! வாழை, குலைகளைத் தந்தும், கமுகு பொன்னையும் பவளத்தையும் போலப் பழுத்தும் பயன் தந்தும் வளம் செய்யும் குடவாயிலில் நிலைத்து விளங்கும் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

கலை - ஆண் மான். புல்வாய்க்கே அன்றிக் `கலையென் காட்சி உழைக்கும் உரித்து` (தொல், மரபியல். 42-3). கொங்கு - மணம், பூந்தாது, தேன். கூந்தல் அலை - கூந்தலை உடைய அலைமகளாகிய கங்கை. கமுகம் - பாக்கு. பொன் பவளம் பழுக்கும் - பொன்னையும் பவளத்தையும்போலப் பழுக்கும். நிலை - குடவாயில் நிலை. குட வாயிலாகிய நிலையில்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப வங்கையில்
செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயில்
படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.
 

பொழிப்புரை :

திருவடிகளில் கட்டிய புதிய கழலும் சிலம்பும், ஆர்ப்ப, அகங்கையில் முடைநாற்றம் பொருந்திய வெண்டலை ஒன்றையேந்தி உலகம் முழுதும் திரிந்து பலிஏற்பவரே! குடியாக உள்ள சிறந்த மறையோர் கொண்டாடி ஏத்தும் குடவாயிலில் படிகள் அமைந்த உயர்ந்த மாடக் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

கழலும் சிலம்பும் காலணி விசேடம். செடி - குண மின்மை. நாற்றமுமாம். தேர்வீர் - தெரிவீர். குலாவி - கொண்டாடி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கழலார்பூம் பாதத்தீ ரோதக்கடலில் விடமுண்டன்
றழலாருங் கண்டத்தீ ரண்டர்போற்று மளவினீர்
குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்
நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

கழல் அணிந்த அழகிய திருவடியை உடையவரே! முற்காலத்தே நீர் பெருகிய கடலில் தோன்றிய விடத்தை உண்டு அவ்விடத்தை அழல்போன்று வெம்மை செய்யும் நிலையில் கண்டத்தில் நிறுத்தியவரே! தேவர்களால் போற்றப்பெறும் தன்மையினரே! மகளிர் கூந்தலில் பொருந்தி வண்டுகள் இசைஒலி செய்யும் குடவாயிலில் ஒளிபொருந்திய கோயிலை நுமது இடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

ஓதம் - அலையை உடைய. விடம் உண்டு அன்று அழல் ஆரும் கண்டத்தீர் என்க. அழல் - நஞ்சினது வெப்பம். அண்டர்- தேவர். போற்றும் அளவினீர் - வழிபடும் அளவிற்கேற்ற அருள் செய்வீர். குழல் - மகளிர் கூந்தல், குழலில் உள்ள மாலையிற் படிந்த வண்டு எனலுமாம். ஆர - நிறைய. குழலார - வேய்ங்குழலொலி நிறைய எனலும் பொருந்தும். நிழல் - ஒளி, அருள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந்
தெறியாரு மாமழுவு மெரியுமேந்துங் கொள்கையீர்
குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில்
நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

பொழிப்புரை :

மான் பொருந்திய கையினரே! உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவராய் நெருப்பின் தன்மை கொண்ட மழுவையும் அனலையும் ஏந்தும் இயல்பினரே! வண்டினங்கள் மலர்களை அலர்த்தித் தேன் உண்ணும் குறிப்போடு இசை மிழற்றும் குடவாயிலில் உள்ள, முறையாக அமைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு வாழ்கின்றீர்.

குறிப்புரை :

மறி - மான்கன்று.\\\\\\\"யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே\\\\\\\". (தொல்.மரபியல். சூ.12) கைத்தலத்தீர்- கையிடத்தையுடையவரே! எறி (எறிதல்) - வீசுதல். எரி- தீ. குறி - போதுகளை மலர்த்தும் குறிப்பு. ஆர - பொருந்த. தேன் உண்ணும் பொருட்டு. மிழற்றும் - பாடும். நெறி - வேதாகம வழி. ஆரும் - பொருந்தும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

இழையார்ந்த கோவணமுங் கீளுமெழிலா ருடையாகப்
பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர்
குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே.
 

பொழிப்புரை :

நூலிழையால் இயன்ற கோவணம் கீள் ஆகியவற்றை அழகிய உடைகளாகப் பூண்டு, கையில் தப்பாத சூலம் ஏந்தி ஆடல் பாடல்களை விரும்புபவரே! தளிர்கள் நிறைந்த பசிய பொழில்களும் வயலும் சூழ்ந்த குடவாயிலில் விழாக்கள் பலநிகழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு பெருமிதம் உற்றீர்.

குறிப்புரை :

இழை - நூலிழை. கீள் - கிழி, கீழ், கீள் என மருவிற்று. `மடையில் ...... சாம்பற்பூச்சும் கீள் உடையும் கொண்ட உருவம்`, (பதி.23 பா.1 ). `கீளார் கோவணமும் திருநீறும் மெய்பூசி`(தி. 7 பதி. 240). `கீளலால் உடையுமில்லை` (தி.4 ப.40 பா.7). குழை - தளிர், விழவு - திருவிழாக்கள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர்
இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர்
குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயில்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

பாம்புகளைப் பூண்டுள்ள திருமேனியில் நன்கு அமைந்த திருநீற்றை அபிடேகமாகக் கொண்டவரே! இரத்தலை மேற்கொண்டு பிறர் இடும்பிச்சை ஏற்று இமையோர் பரவ நஞ்சுண்டவரே! குராமரங்கள் நிறைந்துள்ள பூஞ்சோலையின் மணம் வீசும் குடவாயிலில் உள்ள அழகு பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.

குறிப்புரை :

அரவு- பாம்பு. வெண்ணீறாடினீர் - திருவெண்ணீற்றில் மூழ்குதலுடையீர். இரவு - இரத்தல். குரவு - குராமரம். வாசம் - மணம். திரு - அழகு; `சென்றடையாத்திரு`.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர்
ஆடலார் மாநடத்தீ ரரிவைபோற்று மாற்றலீர்
கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில்
நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

வேதப் பாடல்களில் அமைந்த உண்மை வாசகங்களாக விளங்குபவரே! பசிய கண்களைக் கொண்ட வெள்ளேற்றை ஊர்தியாக உடையவரே!ஆடலாக அமைந்த சிறந்த நடனத்தைப் புரிபவரே! உமையம்மை போற்றும் ஆற்றலை உடையவரே! காந்தள் மலரிற் பொருந்திய வண்டுகள் முரன்று இசைபாடும் குடவாயிலில் நீண்டுயர்ந்த கோயிலை நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.

குறிப்புரை :

பாடல் - வேதப்பாடலில். ஆர் - பொருந்திய. வாய் மொழியீர் - சத்தியவார்த்தையாக விளங்குபவரே. வேதப்பாடல் பொருந்திய திருவாய்ச் சொல்உடையீர் எனலுமாம். ஏறு - ரிஷபம். ஊர்தி - வாகனம். மாநடத்தீர் - மகா தாண்டவம் செய்தீர். அரிவை - உமாதேவியார். ஆற்றல் - வலிமை. கோடல் - வெண்காந்தள். தும்பி - வண்டு. முரன்று - ஒலித்து. மிழற்றும் -இசைபாடும். நீடல் - நீளுதல்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட வழலாய் நிமிர்ந்தீ ரிலங்கைக்கோன்
தங்காதன் மாமுடியுந் தாளுமடர்த்தீர் குடவாயில்
பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே.
 

பொழிப்புரை :

தேன் பொருந்திய பசிய தாமரையில் மேவும் பிரமனும், குறள் வடிவாய்ச் சென்றிருந்து பின் உயர்ந்த திருமாலும் வாய் திறந்து தளர்ச்சியுற அழலுருவாய் நிமிர்ந்தவரே! இராவணனின் பெரிய முடிகளையும் அடிகளையும் அடர்த்தவரே! குடவாயிலின் ஒரு பகுதியாக விளங்கும் கோயிலை நும் கோயிலாகக் கொண்டு அறம் உரைத்தீர்.

குறிப்புரை :

கொங்கு - தேன், மணம், கமலத்து அயனும். தாமரை மீதுள்ள பிரமனும். குறளாய் - வாமனமூர்த்தியாய். நிமிர்ந்தானும் - விக்கிரமனும். அங்காந்து - வாய்திறந்து. தள்ளாட - அசைய. தம் காதல் - தம்முடைய காதலை விளக்கக்கூடிய. மா - பெரிய. தாளும் - அடியும். பங்கு - கூறு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும்
ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொண்மாடக் குடவாயில்
ஆசாரஞ் செய்மறையோ ரளவிற்குன்றா தடிபோற்றத்
தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
 

பொழிப்புரை :

அழுக்கேறிய உடையினராகிய சாக்கியரும் தூய்மையில்லாத சமணர்களும் கூறும் ஏசுதல் நிறைந்த புன்மொழிகளை வெறுத்து அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள குடவாயிலில், தூய்மையாளர்களாகிய அந்தணர் நல்லொழுக்கமாகிய அளவில் குறையாதவராய் அடியிணைகளை ஏத்த, ஒளிநிறைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு சேர்ந்துள்ளீர்.

குறிப்புரை :

தூசு - துரிசு ஏறிய உடை. தூய்மை - பரிசுத்தம். ஏசு - இகழ்ச்சி. புன்மொழி - புல்லிய சொற்கள். நீத்து - நீக்கி. எழில் - அழகு. மாடம் - மாடக்கோயில்; மாடங்களையுடைய எனினுமாம். ஆசாரம்- நல்லொழுக்கம்.(வைதிக மார்க்கம்). குன்றாது - குறையாது. தேசு - ஒளி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்
குளிர்பூங் குடவாயிற் கோயின்மேய கோமானை
ஒளிர்பூந் தமிழ்மாலை யுரைத்தபாட லிவைவல்லார்
தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே.
 

பொழிப்புரை :

தண்மையான நீரால் சூழப்பட்ட காழிப்பதியினனாகிய ஞானசம்பந்தன் குளிர்ந்த அழகிய குடவாயிற் கோயிலில் மேவிய இறைவனை, விளங்கும் தமிழ்மாலையாக உரைத்த பாடல்களாகிய இவற்றை வல்லவர் தளர்ச்சிகள் தாமே நீங்கத் தக்க புகழுடைய வானுலகில் இருப்பர்.

குறிப்புரை :

நளிர் - குளிர். திரை - அலை. மல்கு - மிக்க. மேய - மேவிய. கோமானை - கோமகனை. ஒளிர் - விளங்கும். தமிழ்ப் பூ மாலை என மாற்றுக. தளர்வு ஆன - தளர்வாகிய துன்பங்கள். தான் - தானே. தகுசீர் - தக்கசீர். (வினைத் தொகை).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

நலங்கொண் முத்து மணியும் அணியுந் திரளோதங்
கலங்கள் தன்னிற் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொண் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.

பொழிப்புரை :

அழகிய முத்துக்கள், மணிகள் அணிகலன்கள் ஆகியவற்றை நீர்ப் பெருக்குடைய கடலின் மரக்கலங்கள் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் ஆரவாரமுடைய காழிப்பதியில் வெற்றி விளைக்கும் மழு ஒன்றை ஏந்தியவனே! விடையூர்தியனே! என ஏத்தி மலர்மாலை முதலியன சூட்டி வழிபட வல்லாரைத் தீர்தற்கரிய நோய்கள் அடையா.

குறிப்புரை :

நலம் - அழகு. முத்தும் மணியும் அணியும் தலங்களில் ஓதம்கொண்டு சேர்காழி என்க. ஓதம் - அலைகளையுடைய கடல். கலங்கள் - மரக்கப்பல். தன் - சாரியை. கலி - ஓசையையுடைய, செழிப்புமாம். வலம் - வெற்றிக்குரிய வலிமை. விடையாய் - எருது வாகனனே!. அலங்கல் - பூமாலை. அருநோய் - தீர்தற்கு அருமையதான பிறவி நோய் முதலியவை. ஏத்திச் சூட்டவல்லார்க்கு நோய் அடையா என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

ஊரா ருவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து
காரா ரோதங் கரைமே லுயர்த்துங் கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா வென்றென்று
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.

பொழிப்புரை :

ஊர்தலை உடைய கடற் சங்குகளை மரக்கலங்கள் கடல் ஓதநீர் வழியே கொண்டு வந்து கரையில் சேர்க்கும் கலிக்காழியில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையனே! நெற்றிக்கண்ணா! என்று பல முறையும் அவனது பேர் ஆயிரமும் பிதற்றப் பிணிகள் தீரும்.

குறிப்புரை :

ஊர் ஆர் சங்கம் - ஊர்தல் பொருந்திய சங்குகளையும். உவரி - உப்பையுடைய கடலில் (உள்ள சங்குகளை). வங்கம் - கப்பல். கொடு - கொண்டு. கார் ஆர் ஓதம் - மேகம் உண்ணும் கடலின் அலைகள். வங்கம் கரைமேல் உயர்த்தப்படல் இல்லையாதலின், வங்கம் செயப்படுபொருளாகாது. வங்கம் சங்கத்தைக் கொண்டுவந்து ஓதம் கரைமேல் உயர்த்தும் என்க. கொடுவரல் வங்கத்தின் வினை. உயர்த்துதல் ஓதத்தின் வினை. என்று என்று:- அடுக்கு இடைவிடாது சொல்லற் பொருட்டாய் நின்ற குறிப்பு. ஆயிரம் பேரும் - அநேக நாமங்களையும். பிணிதீரும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

வடிகொள் பொழிலின் மழலை வரிவண் டிசைசெய்யக்
கடிகொள் போதிற் றென்ற லணையுங் கலிக்காழி
முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
அடிகை தொழுவார்க் கில்லை யல்ல லவலமே.

பொழிப்புரை :

திருத்தமான சோலைகளில் மழலையாய் வரிவண்டுகள் இசைபாட மணம் கமழும் மலர்களில் படிந்து தென்றல் வீதிகளை அடைந்து மணம் பரப்பி இதம் செய்யும் கலிக்காழியில் எழுந்தருளிய முடிகொள் சடையாய்! முதல்வா என்று தவம் முயன்று ஏத்தி அவன் அடிகளைத் தொழுவார்க்கு அல்லல் அவலம் ஆகியன இல்லை.

குறிப்புரை :

வடி - திருத்தம், `வடிநீள்மதில்`(புறம் 18.) மாம்பிஞ்சு என்றுமாம். மழலை - நிரம்பா மொழிபோலும் இனிமை செய்யும் வண்டின் ஓசை. கடி - மணம். போதின் தென்றல் - மலரும் பருவத்தையுடைய போதுகளிற்பட்டு அவற்றின் மணத்தைக் கொண்டு எறியும் (மந்தமாருதம்) தென்காற்று. சடைமுடி. முயன்று - `தவமுயன்று`. அடி - திருவடிகளை. கைதொழுவார்க்கு அல்லலும் அவலமும் இல்லை என்க. அல்லலால் வரும் அவலம் எனலுமாம். அல்லல் - துன்பம். அவலம் - அழுகை, சோர்வு, வறுமை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
கனைக்குங் கடலு ளோத மேறுங் கலிக்காழிப்
பனைக்கைப் பகட்டீ ருரியாய் பெரியா யெனப்பேணி
நினைக்க வல்ல வடியார் நெஞ்சி னல்லாரே.

பொழிப்புரை :

ஆரவாரிக்கும் கடலின் ஓதம் பவளங்களையும் முத்துக்களையும் வீடுகளில் கொண்டு வந்து சேர்த்து வளம் செய்யும் கலிக்காழிப்பதியுள் எழுந்தருளிய, பனைபோன்ற கையை உடைய யானையை ஈர்ந்து அதன் தோலைப் போர்த்தவனே! பெரியாய் என விரும்பிப் பேணி நினைக்க வல்ல நெஞ்சினை உடையார் நன்னெஞ்சுடையார் ஆவர்.

குறிப்புரை :

மனை - வீடு. கனைக்கும் - ஒலிக்கும். ஓதம் - அலை. பனைகைபகடு ஈர் உரியாய் - பனைமரம் போலும் பருத்த துதிக்கையையுடைய யானையின் ஈர்த்ததோலைப் போர்த்தவரே!. ஈர் - ஈர்த்த, உரித்த, ஈர் உரி - (ஈர்மை - குளிர்ச்சி) ஈரியதாய உரி எனப் பண்புத் தொகையுமாம். பேணி - விரும்பி. நெஞ்சின் நல்லார் - நெஞ்சின் நன்மையையுடையார். நல்ல நெஞ்சத்தார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பரிதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்
சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்
கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே.

பொழிப்புரை :

கதிரவன் உலாவரும் உலகின்கண், சிறப்புமிக்க தொண்டுகளோடு சுருதிகளை அறிந்த விண்ணோரும் மண்ணோரும் விரும்பி வழிபடும் கலிக்காழியுள் மேவிய செவிவழியாகக் கேட்டு ஓதப்பெறும் நான்கு வேதங்களான செம்மையைத் தருபவனை நினைந்து, அவனை வழிபட, எழுந்தால் தவறாது உங்கள் துன்பங்கள் தீரும்.

குறிப்புரை :

பரிதி - சூரியன். இதைப் பருதி என்றெழுதுவது குரிசில் என்பதைக் குருசில் என்றெழுதுவது போலும் பிழை. (இலக்கியச் சொல்லகராதியின் உபக்கிரமணிகையில் பக்கம் 15, பார்க்க) அடிசில், பரிசில் முதலியவற்றுள் இரண்டாவதெழுத்து உகரமாய் நிற்றலில்லாமையே அதற்குச் சான்று. `பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில் வலியவாகும் நின்தாள்தோய் தடக்கை` (புறம் 14.) `பரிசில் நல்குவையாயிற் குரிசில் நீ` (புறம் .146) பரிசில் மன்னும் குரிசில் கொண்டதுவே` (புறம் .333) என எதுகையில் நின்றதறிக. ஏனையிடங்களுள், குருசில் என்றிருத்தல் பொருந்தாமை. இவ்விரன்டு காரணங்களால் புலப்படும். சுருதி - கேள்வி. நான்மறைக் கேள்வியான செம்மை தருவானை வழுவாவண்ணம் கருதி எழுமின் துயர்போம் என்க. ஆசிரியர், நான்மறைகளையும் ஆறங்கங்களையும் நினைவூட்டும் இடங்களை நோக்கின் `வேதநெறி தழைத்தோங்க ... அழுத` உண்மை தெளிவாகும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

மந்த மருவும் பொழிலி லெழிலார் மதுவுண்டு
கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்
பந்த நீங்க வருளும் பரனே யெனவேத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே.

பொழிப்புரை :

தென்றல் தவழும் பொழிலின்கண் எழுச்சியோடு தேனை உண்டு மணம் பொருந்தியனவாய் வரிவண்டுகள் இசை செய்யும் கலிக்காழியில் விளங்கும், பந்தங்கள் நீங்க அருளும் பரனே! என ஏத்தி அவனைச் சிந்தையில் நினைவார், செம்மை நீங்காதிருப்பர்.

குறிப்புரை :

மந்தம் - தென்றல் காற்று. மருவும் - பொருந்தும். எழில் - எழுச்சி. மது - தேன். கந்தம் - மணம். பந்தம் பசு பாசப்பற்று. `பற்றற பற்றற என்பதெல்லாம் பசுபாசம் விடல் மற்றொரு பற்றறல் இல்லை என்றான், மன்னும் வெங்கலியைச், செற்றருள் சிற்றம்பலநாடி வண்மைச் சிரபுரத்தோன் உற்றதபோதனரே ஒழிந்தே இரும் உம்மையுமே` எனும் சிற்றம்பலநாடிகள் சாத்திரக்கொத்துள் வருங்கட்டளைக் கலித்துறையை அறிக. `பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனை` அப்பசு பாசம் ஆகிய பந்தம் நீங்காமல் பார்த்தல் கூடாது. `பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்திச் சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பார்` என்பது அதை இனிது விளக்கிற்று. செம்மை `திருநின்ற செம்மை`. (தி .4 ப .8 பா .1; தி .7 பதி .396)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

புயலார் பூமி நாம மோதிப் புகழ்மல்கக்
கயலார் கண்ணார் பண்ணா ரொலிசெய் கலிக்காழிப்
பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.

பொழிப்புரை :

மேகங்களால் வளம் பெறும் மண்ணுலகில் வாழும் கயல் போலும் விழிகளை உடைய பெண்கள் இறைவன் திருப்பெயர்களைப் புகழ் பொருந்த இசையோடு ஓதிஒலி செய்யும் கலிக்காழியுள் விளங்கும் அப்பெருமானை அன்பு மேலிடத் தொழுது ஏத்த முயல்வார் மேல் கொடிய கூற்றுவன் வந்தடையான்.

குறிப்புரை :

புயல் - மேகம். பெருங்காற்று எப்போதும் உள்ள தன்மையின்மையின் பொருந்தாது. பூமி - மண்ணிடத்துள்ளோர். நாமம் - `சிவனெனும் நாமம்` `நந்திநாமம் நமச்சிவாயவே` `நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன்` `நாமம்பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் ... உரைக்கத் தருதி` `திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்` `பராபரன் என்பது பேராக்கொண்டார்` (அப்பர். 310. பொது . 11.). கயல் ஆர் கண்ணார் - மீனோக்கியர். கயற்கண்ணியர். பண் ஆர் ஒலி - பண்ணொடு பொருந்திய இசை. பயில்வான்தன்னை - பயின்ற தொல்லோனை (சிவபிரானை) `பழையோன்`. பத்தி - பக்தி. அன்பு ஆர நிறைய. முயல்வார்மீதே முடுகாது கூற்று என்றால், முயன்றார் மீது முடுகாமை கூறல்வேண்டா. `விண்ணிடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்? பண்ணிடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீரட் டனாரே` (பதி .31 பா .2) கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்கு` (தி .7 பதி .281).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

அரக்கன் முடிதோள் நெரிய வடர்த்தா னடியார்க்குக்
கரக்க கில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்
பரக்கும் புகழான் றன்னை யேத்திப் பணிவார்மேற்
பெருக்கு மின்பந் துன்ப மான பிணிபோமே.

பொழிப்புரை :

இராவணனின் முடி, தோள் ஆகியன நெரிய அடர்த்தருளிய, தன் அடியவர்கட்கு மறைக்காமல் அருளைச் செய்யும் பெருமான் எழுந்தருளிய கலிக்காழியை அடைந்து உலகம் முழுதும் பரவிய அப்புகழாளனை ஏத்திப் பணிவார்க்கு இன்பங்கள் பெருகும், துன்பந்தரும் பிணிகள் போம்.

குறிப்புரை :

அரக்கன் - இராவணன். அடியார்க்குக் கரக்ககில்லாது - அடியவர்க்கு (அருளை) மறைக்கமாட்டாமல். கில் - ஆற்றலை உணர்த்துவது. சிவபெருமான் தன் அடியவர்க்கு அருளை மறைக்கும் ஆற்றல் இல்லாதவன் என்பதுணர்க. `குறைவிலா நிறைவு` எனப்படும் பரமேச்சுவரனுக்கும், தன் அடியார்க்கு இன்பங்கள் தருவதை மறைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாத ஒரு குறை உண்டு என்று உணர்த்திய நயம் போற்றத்தக்கது. பணிவார்மேல் இன்பம் பெருக்கும், துன்பமானபிணிபோம். கில்லாமை:- `கிற்றிலேன், கிற்பன் உண்ணவே` (திருவாசகம் 45).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

மாணா யுலகங் கொண்ட மாலு மலரோனுங்
காணா வண்ண மெரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
கோணா நெஞ்ச முடையார்க் கில்லைக் குற்றமே.

பொழிப்புரை :

பிரமசாரி வடிவினனாகி உலகை அளந்து கொண்ட திருமாலும் நான்முகனும் காணா வண்ணம் எரியுருவாய் நிமிர்ந்தான் உறையும் கலிக்காழியை அடைந்து அணிகலன்பூண்ட தனங்களைக் கொண்ட அம்பிகை பாகனைப் புகழ்ந்து போற்றித் திருகல் இல்லாத மனமுடைய அடியவர்க்குக் குற்றம் இல்லை.

குறிப்புரை :

மாணாய் - பிரமசாரியாய். மாண் - மாணி. `குறுமாண் உருவன் தற்குறியாக` (தி .1 ப .101 பா .5) `மாணாகி வையம் அளந்ததுவும்` என்று திருமங்கைமன்னன் பாடியதிலும் மாண் என்பது இப்பொருளில் வந்திருத்தல் அறிக. பூண் - ஆபரணம், பங்கத்தானை - (வாம) பாகத்தையுடைய சிவபெருமானை. கோணா நெஞ்சம் - திருகலில்லாத உள்ளத்தை. கோணல் - `சிந்தைத்திருகு` `மலக்கோண்` `யான் செய் தேன் பிறர்செய்தார் என்னது யான் என்னும் இக்கோணை ஞான வெரியால் வெதுப்பி நிமிர்த்துத் தான் செவ்வே நின்றிட` (சிவஞான சித்தியார் . கடவுள் வாழ்த்துரை + சூ. 10. திருவிருத்தம் . 2.) லுடை யார்க்குக் குற்றம் இல்லை என்க. `இல்லைக்குற்றம்` என்று மிக்குப் புணர்ந்ததற்கு `இல் என் கிளவி இன்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலும் ஐயிடை வருதலும் ... ஆகிடன் உடைத்தே` என்ற தொல்காப்பியச் சூத்திர (372) விதி காண்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

அஞ்சி யல்லல் மொழிந்து திரிவா ரமணாதர்
கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்
தஞ்ச மாய தலைவன் றன்னை நினைவார்கள்
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.

பொழிப்புரை :

அச்சத்துடன் துன்பம் தரும் பேச்சுக்களை மொழிந்து திரியும் சமணர்களாகிய அறிவிலிகளுக்கும் காலையில் கஞ்சியையுண்டு திரியும் தேரர்களுக்கும் அறிதற்கு அரியவன் உறையும் கலிக்காழியை அடைந்து தஞ்சமாக அடைதற்குரிய அத்தலைவனை நினைபவர்கள் இறப்பும் பிறப்பும் வாராத பேரின்ப உலகம் பெறுவர்.

குறிப்புரை :

அல்லல் - துன்பம் தரும் பேச்சுக்களை. ஆதர் - அறிவில்லார். காலையிற் கஞ்சி உண்ணும் தேரர் என்று கொள்க. அமணரை முற்கூறியதால், உண்பார் என்றது தேரரை என்க. தஞ்சம் - அடைக்கலம். `தஞ்சம்` (தி .3 ப .78 பா .10) `தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேன்` (தி .3 ப . 51 பா .6) (தண் + து + அம்) துன்ப வெம்மையால் வந்து அடைந்தவர்க்குத் தண்மையுடையவரே, அடைக்கலமென்றபோது அபயம் அளிப்பர். அதனால் தஞ்சம் அடைதல் எனப்பட்டது. `தஞ்சேகண்டேன்` (தி .5 ப .50 பா .3) என்று (தண் + து) அம்முப்பெறாது வருதலும் அறிக. `தஞ்ச வண்ணத்தர்`. (தி .4 ப . 17 பா .3) `அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத ... உன் திருவடி அடைந்தேன்` (தி .7) `தஞ்சமென்று தன் தாளது அடைந்த பாலன்மேல் வந்த காலனை உருள நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை` (தி .7 ப .96 பா .1). துஞ்சல் - சாதல். நல்லவுலகம் - பேரின்பவுலகு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஊழி யாய பாரி லோங்கு முயர்செல்வக்
காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
றாழு மனத்தா லுரைத்த தமிழ்க ளிவைவல்லார்
வாழி நீங்கா வானோ ருலகின் மகிழ்வாரே.

பொழிப்புரை :

உலக முடிவில் அழிவதான இம்மண்ணுலகில் அழியாது மிதந்த உயர் செல்வம் உடைய காழியில் எழுந்தருளிய ஈசனின் திருவடிகளைப் பேணும் ஞானசம்பந்தன் பணிவான உள்ளத்தோடு உரைத்த தமிழ் மாலையாகிய இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் நிலையான வாழ்வுடைய வானோர் உலகில் மகிழ்ந்துறைவர்.

குறிப்புரை :

ஊழி ஆய பாரில் - உக முடிவு ஆன மண்ணுலகில், ஓங்கும் காழி - பிரளய வெள்ளத்தால் அழியாமல் மேல் மிதந்த தோணிபுரம். உயர் செல்வம் - அழியாமல் உயர்ந்த செல்வத்தை உடைய. `கழலே பேணும் சம்பந்தன்` என்ற பிரிநிலை ஏகாரம், உண்மைச் சைவர்க்குச் சிவபக்தியில் ஓர் உறைப்பை விளைக்கும். தாழும் மனத்தால் - பணியும் உள்ளத்தால். `வேற்காடு தாழ்வுடை மனத்தால் பணிந்தேத்திடப் பாழ்படும் அவர் பாவமே` (பதி . 157 பா .4) தாழும் மனமுடையவரே, `கோழம்பத்துறை கூத்தன் குரைகழல் தாழும் பத்தர்கள்` ஆவர். `தாழ்வெனுந் தன்மைவிட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து வாழ்வதே கருதித்தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்` (தி .7 பதி .79) `வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித் தாழ்வெனுந் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறலரிது` (சிவ ஞான சித்தியார் -181) வாழி - வாழ்ச்சி. இகரம் தொழிற் பெயர் விகுதி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாளா வென்ன மகிழ்வா ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

பொழிப்புரை :

மனத்திலும், தலையின்மேலும் வாக்கிலும் உறைபவர், மாலைக்காலம் வரும்போது வந்து என் மனத்தில் விளங்குபவர், மைந்தா! மணாளா! என்று அழைக்க மகிழ்பவர். அவரது ஊர் பசுமையான மாதவி படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.

குறிப்புரை :

சிந்தை, தலை, சொல் என மனம், காயம், வாக்கு ஆகிய திரிகரணங்களையும் உணர்த்தி அம் மூன்றிலும் சிவபெருமான் இருத்தலை மூவேறு சிறு வாக்கியங்களாக அருளிய திறம் அன்பரெல்லாராலும் அறியத்தக்கது. சிவபூஜையில் அந்தரியாகத்தாலும், தோத்திரத்தாலும் இந்நிலையை அநுபவித்து உணர்ந்து போற்றுதல் இன்றியமையாதது. (பதி .61 பா .6.) `சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான்` (தி .1 ப .73 பா .9)- சிந்தையிடையார் - `மனத்தகத்தான்`. தலையின் மிசையார். `தலைமேலான்`. செஞ்சொல்லார் - `வாக்கினுள்ளான்`. `மூவாத சிந்தையே மனமே வாக்கே தன் ஆனையாப் பண்ணியேறினான்` (அப்பர் -227.) `வாயானை - மனத்தானை` என்பது இதனின் வேறு. மாலை - மாலைப் பொழுது. (வந்து) வைகும் போழ்து - தங்கும்வேளையில். மைந்தரென்றும் மணவாளரென்றும் துதிக்க மகிழ்பவர் (சிவபெருமான்). பாசூர் மகிழ்வார் ஊர்போலு மென்று கூட்டுக. பைந்தண் மாதவி - பசுமையும் தண்மையுமுடைய குருக்கத்தி. பாசூர் - (பசுமை + ஊர்) இன்றும் பசுமைமிக்கதாகவே விளங்குகிறது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்
றாருந் தனையு மடியா ரேத்த வருள்செய்வார்
ஊரு மரவ முடையார் வாழு மூர்போலும்
பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே.

பொழிப்புரை :

இடம் விட்டுச்செல்லும்போதும், வரும் போதும் பெம்மானே என்று மனம் நிறைவுறும் அளவும் அடியவர் ஏத்த அருள் செய்பவர். ஊர்ந்து செல்லும் படப்பாம்பை அணிந்தவர். அவர் வாழும் ஊர் உலக மக்களின் பாடல்கள் ஓவாது கேட்கும் பாசூர் ஆகும்.

குறிப்புரை :

பெயர்தல் - பேர்தல் என மருவும். ஆயினும் இங்கு இரண்டும் வேறுபட்டனவாகத் தோற்றுதலால் பொருளிலும் ஏதேனுமொரு வேறுபாட்டைக் கொள்ளுதல் வேண்டும். பேர்தல் முதன் முதலாக இடம் விட்டு அசைதல். பெயர்தல் - மீண்டும் வருதல். இவ்விரண்டு காலத்தும் இறைவனை மனம் நிறைவுறுமளவும் அடியார் ஏத்த அருள் செய்வான். தனை - அளவு. ஊரும் அரவம் - நகரும் பாம்பு. பாரின்மிசையார் - மண்ணுலகத்தார். பாடல் - தோத்திரப் பாடல்கள். ஓவா - ஒழியாத. பாசூரே அருள் செய்வார் ஊர்போலும். `பண்ணின் மொழியார் பாடல் ஓவாப்பாசூரே` (பா -7). இவ்வாறே மேலும் கொள்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கண்
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விகிர்தனார்
நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவு மூர்போலும்
பைவாய் நாகங் கோடலீனும் பாசூரே.

பொழிப்புரை :

கைகளால் தொழுதும், தலையைத்தாழ்த்தியும், உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் உடற்குறைகளையும் துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன். நெய் முதலிய ஆனைந்தும் ஆடுதல் உடையவன், அவன் எழுந்தருளிய ஊர், பாம்பின் படம் போலக்காந்தள் பூக்கள் மலர்ந்துள்ள பாசூராகும்.

குறிப்புரை :

கைகளைப் பெற்றதன் பயனாகப் பாசூரீசன் பைங்கழலைத் தொழுதும், தலை உடையதன் பயனாக வணங்கியும், உள்ளம் வாய்ந்ததன் பயனாக உருகியும் வழிபடும் அடியார்களுடைய மெய்யிற்பொருந்தியகுறைகளையும் துயரங்களையும் ஒழிக்கும் அநாதி மலமுத்தர். நெய் முதலிய அஞ்சும் (ஆனைந்தும்) ஆடுதலுடையார். திருமுறைகளுள் `ஆனைந்து` எனப்படினும் ஜலமும் மயமும் விட்டுப் பால் முதலிய மூன்றுமே கூறப்படும் உண்மையை ஆங்காங்குணர்க. `ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்` பால் நறு நெய் தயிர் ஐந்தாடு பரம்பரன்` (தி .7 ப .84 பா .9) நிலாவுதல் - நிலவுதல். பை வாய் நாகம் - படம் வாய்ந்த நாகம்; படத்தொடு கூடியவாய் எனினும் ஆம். நாகம் கோடல் ஈனும் - பாம்பைப்போல வெண்காந்தள் மலரைத் தோற்றும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற் பொலிவெய்தக்
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்
தங்கா தலியுந் தாமும் வாழு மூர்போலும்
பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.

பொழிப்புரை :

சினந்து படம் எடுத்தாடும் பாம்பும், கங்கையும் சடையின் மேல் விளங்கித்தோன்ற, தேன் நிறைந்த கொன்றை மலரைச் சூடி என் உள்ளம் குளிர் வித்தவர். அவர் தம் காதலியாரோடு தாமும் வாழும் ஊர் பசிய காலோடு கூடிய முல்லைக் கொடிகள் பற்கள் போல அரும்புகள் ஈனும் பாசூராகும்.

குறிப்புரை :

`கொன்றை சூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோமே` என்று அருளிய உண்மையை உணர்ந்து நம்பியாரூரரும், `வம்பறாவரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நற்கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தனடியார்க்கு மடியேன்` என்றருளினார். அதனை ஈண்டும் உணர்வாம். `கொன்றைமாலை கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே` என்று ஆளுடை அரசரும் அருளியதை நினைக்க (தி .6 ப .99 பா .8). சிவபூஜை செய்வோருக்குக் கொன்றைப் பூக்களால் வழிபடும் பேரன்பு உண்டு. பொலிவு - விளக்கம். எய்த - அடைய. கொங்கு - மணம். குளிர்வித்தாராகிய தாமும் தம் காதலியும் வாழும் ஊர் என்க. காதலி - உமாதேவியார். பைங்கான் - பசிய மணம் ;- கால் கொடியையும் காட்டையும் கொடியேற நட்டகாலையும் குறித்ததாக்கோடலும் பொருந்தும். பல்லரும்பு - பல்போலும் அரும்பு: பல அரும்பு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

ஆடற் புரியு மைவா யரவொன் றரைச்சாத்தும்
சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்
வாடற் றலையிற் பலிதேர் கையா ரூர்போலும்
பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

பொழிப்புரை :

ஆடும் ஐந்து தலைப்பாம்பை இடையிலே கட்டிக் கொண்டுள்ள மேலான செல்வர். நினைப்பவர் சிந்தையினின்றும் பிரியாதவர். ஊன்வாடியதலையோட்டில் பலிதேரும் கையினர். அவரது ஊர், பாடும் குயில்கள் வாழும் பூஞ்சோலைகளை உடைய பாசூர் ஆகும்.

குறிப்புரை :

ஆடல் புரியும் - (படமெடுத்து) ஆடுதலைச்செய்யும். ஐவாய் அரவு - ஐந்தலைப் பாம்பு. அரை - திருவரை. சாத்தும் - சார்த்தும். சேடச் செல்வர் - சேடராகிய செல்வர் (தி .1 ப .5 பா .2) உடையவர். `சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன்`. `சேடர் விண்ணோர்கட்குத் தேவர்` (தி .3 ப .9 பா .7) `சேடர் தேவன் குடித் தேவர் தேவன்` (தி .3 ப .25 பா .11) என் புழிப்போலப் பெரியோருமாம். (தி .1 ப .52 பா .11). வாடல் தலை - வாடுதலை அடைந்த பிரமகபாலம். `வாடல் வெண்தலை சூடினர்` (தி .1 ப .56 பா .7) வாடல் வெண்டலை மாலை (தி .2 ப .50 பா .11). `வாடற்றலை மாலை` (தி .2 ப .71 பா .3) `வாடல்வெண்தலை` (தி .2 ப .112 பா .2) பாடல் குயில்கள் - பாடுதலையுடைய குயில்கள். பயில் - பயின்ற. பூஞ்சோலை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கானின் றதிரக் கனல்வாய் நாகங் கச்சாகத்
தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்
மால்கொண் டோட மையல் தீர்ப்பா ரூர்போலும்
பால்வெண் மதிதோய் மாடஞ் சூழ்ந்த பாசூரே.

பொழிப்புரை :

திருவடி ஊன்றித் தாளம் இட நாகத்தைக் கச்சாக இடையில் கட்டிக்கொண்டு தோலை ஆடையாக உடுத்தவர். விடை ஊர்தியர். தம்மைத் தொழுபவர்கள் அன்பு கொண்டு தம்மைத் தொழ அவர்களின் மயக்கங்களைத் தீர்ப்பவர். அவரது ஊர் பால் போன்ற வெண்மதிதோயும் மாட வீடுகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.

குறிப்புரை :

கால் நின்று அதிர - திருவடி ஊன்றி நடஞ்செய்ய. கனல் - நஞ்சின் வெம்மை. கச்சு அரைக்கு அசைக்கும் கச்சு. விடையார் - இடபவாகனத்தார். மால் - அன்பு.(ப . 182 பா .1). மையல் - மயக்கம். மதிதோய் மாடம் - சந்திரமண்டலத்தை அளாவிய உயரியமாடம். பால் வெண்மதி - பால்போலும் வெண்ணிறத்தை உடைய திங்கள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கண்ணி னயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி
எண்ணுந் தனையு மடியா ரேத்த வருள்செய்வார்
உண்ணின் றுருக வுகவை தருவா ரூர்போலும்
பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.

பொழிப்புரை :

இரு கண்களுக்கு அயலே நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண்ணை உடையவர். தம் திருவடிகளை நினைந்து எண்ணும் போதெல்லாம் உவகைகள் தருபவர். அவரது ஊர் பண்ணிசை போல மொழிகள் பேசும் பெண்கள் பாடும் ஓசை நீங்காத பாசூராகும்.

குறிப்புரை :

கண்ணின் அயலே - வலக்கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் அயலாகும் மேற்பக்கத்தில். கண் ஒன்று - நெற்றிக் (தீக்) கண்ணொன்றை. கழல் - திருவடி. உன்னி - நினைந்து. எண்ணும் தனையும் - அத்திருவடிச் சிறப்பைக் கருதுமளவும். உவகை - உவப்பிற்குரிய வரங்களும் முத்தி இன்பமும். `உகவை` என்று கழகப்பதிப்பில் இருப்பது `தான்நினைத்தைம் புலனும் அழிந்தசிந்தையந்தணாளர்` (தி .1 ப .53 பா .6) என்பதில் புலனும் என்று புள்ளிமாறியது போல் இதிலும் புள்ளிமாறி நின்றவாறறிக. (பார்க்க: பதி .19. பா .3.) உவகை தருவான்:- மதுரை ஞானசம்பந்தப்பிள்ளை பதிப்பில் `உவகை` என்றே உளது. அடங்கன் முறைப்பதிப்புகளில் அப்பதிப்பே மிகமேலானது என்பது அறிஞர் முடிபு. `உரந்தோன்றும் பாடல் கேட்டு உகவையளித்தீர்`. `உகவாதார் புரந்தோன்றும் மும்மதிலும் எரியச் செய்தீர்` (தி .2 ப .54 பா .8) பண்ணின் - பண்ணைப்போன்ற. மொழியார் - மொழிகளை உடைய மகளிர். ஓவா - ஒழியாத. `பாரின் மிசையார் பாடல் ஓவா` (பா .2.)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே.

பொழிப்புரை :

புகழ்குன்றாத தெளிந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை மனம் கூசுமாறு அடர்த்துக் கூரிய வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மையே பலகாலம் பேசிப்பிதற்றும் அடியவர்கட்குப் பெருமை தருபவர். அவரது ஊர் பசுமையான நீர் நிலைகளும், வயல்களும் சூழ்ந்த பாசூராகும்.

குறிப்புரை :

தேசு - சூரியன் தன்மேல் செல்லாதிருப்பினும் சிவபக்தியின் முதிர்ச்சியையுடைய அரசனது ஆட்சியாதலின் வையங்காக்கும் ஒளி. குன்றா - குறையாத. தெள்நீர் இலங்கை - தெளிந்த நீரையுடைய கடல் நடுவிலே உள்ள இலங்கை. கூச - மனம் கூசுதலடைய. வீரத்தால் நாண என்பதும் பொருந்தும். வாள் கொடுத்த வரலாறு முன்னும் பின்னும் பலமுறை கூறப் பெற்றுள்ளது. `கொடுப்பார் தம்மையே பேசி` என்ற ஏகாரத்தை ஊன்றி நோக்குதல் நன்று. பெருமை - இம்மை மறுமை நலங்களும் வீட்டின்பமும். பாசி - நீர்ப்பாசி. தடமும் வயலும் நீர்வளத்தால் பசுமை உடையவாதலை உணர்த்தியது. இதனால் ஈண்டுப் பாசூரென்ற பெயர்க்காரணமும் நன்கு விளங்குகின்றது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

நகுவாய் மலர்மே லயனு நாகத் தணையானும்
புகுவா யறியார் புறநின் றோரார் போற்றோவார்
செகுவா யுகுபற் றலைசேர் கையா ரூர்போலும்
பகுவாய் நாரை யாரல் வாரும் பாசூரே.

பொழிப்புரை :

விரிந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முக னும், நாகணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் புகுமிடம் அறியாதவராகவும் புறம்பே நின்று அறிய இயலாதவராகவும் போற்றுதலை ஓவாதவராகவும் நிற்க அழிந்தவாயிற் பல்லுடைய தலையோடு சேர்ந்த கையினை உடையவர். சிவபெருமான். அவரது ஊர் பிளந்தவாயினை உடைய நாரைகள் ஆரல் மீன்களை வௌவி உண்ணும் பாசூராகும்.

குறிப்புரை :

நகு வாய் மலர் - திறந்த வாயையுடைய தாமரை, நாகத்து அணையான் - பாம்பணை மேலுறங்குபவன். புகுவாய் - சிவபெருமானைக் காணப்புகும் இடம். ஓரார் - உணரார். போற்று - துதி. ஓவார் - ஒழியார். செகு - அழிந்த. வாய் - வாயிலிருந்து. பல் உக்க தலை - பல் சிந்திய தலை. `பல் இல் ஓடு கையேந்தி` (தி .1 ப .51 பா .4) (தி .2 ப .91 பா.6) (தி .3 ப .45 பா .4) `பல்லார் தலைசேர் மாலை` (தி .2 ப .63 பா .3) `வெண் பற்றலை கலனா` (தி .7 பா .506) `பல் இல் வெள்ளைத்தலையன்` (தி .7 பா .831). பகு வாய் நாரை - பிளந்த வாயையுடைய நாரை, ஆரல் மீன்களை வாரும் பாசூர். வாடும் - வௌவும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

தூய வெயினின் றுழல்வார் துவர்தோ யாடையார்
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்
காவல் வேவக் கணையொன் றெய்தா ரூர்போலும்
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

பொழிப்புரை :

நல்ல வெயிலில் நின்று உழல்பவரும், துவர் தோய்ந்த ஆடையை அணிந்தவருமாகிய சமண புத்தர்கள் நாவினால் வெய்ய சொற்களைச் சொல்லித்திரியும் நீதி அற்றவர்கள் காவல் புரியும் முப்புரங்களும்வெந்தழியுமாறு கணை ஒன்றை எய்த சிவபிரானது ஊர் பாவை போல மலரும் குராமரங்கள் செறிந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.

குறிப்புரை :

தூய வெயில் - நல்லவெயில். தூய்மை - கலப்பின்மை உணர்த்திற்று. `சுத்தப்பொய்` என்பதுபோல. வெய்ய - கொடிய சொற்களை. நயம் - நீதி. காவல் - மும்மதில்: திரிபுரம் தொழிலாகுபெயர். பாவைக்குரவம் - பாவைபோலும் பூத்தலையுடைய குரவமரம். `அரவின்வாயின் முள்ளெயிறு ஏய்ப்ப அரும்பு ஈன்று குரவம்பாவை முருகமர் சோலைக் குற்றாலம்` (தி .1 ப .99 பா .9).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஞான முணர்வான் காழி ஞான சம்பந்தன்
தேனும் வண்டு மின்னிசை பாடுந் திருப்பாசூர்க்
கானம் முறைவார் கழல்சேர் பாட லிவைவல்லார்
ஊன மிலரா யும்பர் வானத் துறைவாரே.

பொழிப்புரை :

கலைஞானம் சிவஞானம் ஆகியவற்றை உணர்ந்தவனாகிய காழி ஞானசம்பந்தன் தேனும், வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர் என்னும் காடுகள் நிறைந்த ஊரில் உறையும் இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்கும் பாடல்களாகிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் குற்றம் அற்றவராய் வானுலகில் உறைவர்.

குறிப்புரை :

ஞானம் - சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாக்கலை ஞானமும், பவமதனை அறமாற்றும் பாங்கினிலோங்கிய ஞானமாகிய உணர்வரிய மெய்ஞ்ஞானமும். உணர்வான் - திருவருண்ஞானம் குழைத்து அளித்த அம்பிகையின் திருமுலைப்பால் குடித்த அந்நிலையில் (ஓதாது) உணர்ந்தவர். தேன் - நால்வகை வண்டுள் ஒன்று. திருப்பாசூர்க் கானம் - என்பதை நோக்கின் `பைங்கான்` (பா .4) என்புழிக் காடென்னும் பொருள் ஏற்றதாதலறிக. ஊனம் - பிறப்பிறப்பாகிய குறைகள். உம்பர் வானத்து - வானோர்க்குயர்ந்த உலகத்தில்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

உண்டாய் நஞ்சை யுமையோர் பங்கா வென்றுள்கித்
தொண்டாய்த் திரியு மடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ண மறுப்பா னெந்தை யூர்போலும்
வெண்டா மரைமேற் கருவண் டியாழ்செய் வெண்காடே.

பொழிப்புரை :

நஞ்சை உண்டவனே! உமைபங்கா! என்று கூறி மனத்தில் தியானித்துத் தொண்டராகிப் பணிகள் புரியும் அடியவர்களைத் துயரங்கள் நெருங்காவண்ணம் அவற்றை அறத்தீர்த்தருளும் எந்தையினது ஊர், வெண்டாமரை மலர்களில் கருவண்டுகள் யாழ் போல ஒலித்துத் தேனுண்ணும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

நஞ்சை உண்டாய் உமையோர்பாங்கா என்று உள்கி - நஞ்சினை அமுதாக உண்டு தேவர் முதலியோரைக்காத்த தலைவரே! அம்மையப்பரே! என்று உள்ளத்தில் தியானம் புரிந்து. தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் - தொண்டராகி உலவும் அடியவர்களுடைய. அண்டாவண்ணம் அறுப்பான் - மீண்டும் அண்டாதவாறு அறத்தீர்த்தருள்பவன். வெண்டாமரை மலர்மேல் கருவண்டுகள் யாழ் (ஒலியைச்) செய்யும் வளத்தையுடைய திருவெண்காடு எந்தை ஊர் போலும். மேலும் இவ்வாறே கொள்க. (பா -2,4,5,6,8,9, நோக்குக).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

நாத னம்மை யாள்வா னென்று நவின்றேத்திப்
பாதம் பன்னாள் பணியு மடியார் தங்கண்மேல்
ஏதந் தீர விருந்தான் வாழு மூர்போலும்
வேதத் தொலியாற் கிளிசொற் பயிலும் வெண்காடே.

பொழிப்புரை :

நாதனாகிய பெருமான் நம்மை ஆள்வான் என்று அவன்பெயரைப் பல முறையும் கூறி ஏத்திப் பல நாள்கள் திருவடிகளைப் பரவும் அடியவர்க்கு வரும் குற்றங்களைத் தீர்த்தருள எழுந்தருளியிருப்பவனது ஊர், வேதஒலிகளைக் கிளிகள் பேசும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

நம்மை நாதன் ஆள்வான் என்று நவின்று ஏத்திப் பல்நாள் பாதம்பணியும் அடியார் தங்கள்மேல் ஏதம்தீர இருந்தான் - நம்மை நம்பெருமான் ஆளாக்கொண்டு காப்பான் என்று கருத்திற் கொண்டு, வாயால் பயின்று துதித்துப் பலநாளும் வணங்குகின்ற அடியவர்களிடத்தில் (அணுகும்) துன்பங்கள் தீர்ந்தொழியும் பொருட்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான். `பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசைகேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலை` (தி .1 ப .132 பா .1) கிளிகள் வேதத்தின் ஒலியாற் சொற்பயிலும். `பண்மொழியால் அவன் நாமம் பலவோதப் பசுங்கிள்ளை வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே` (பதி .184. பா .6).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக்
கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள்
உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும்
வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே.

பொழிப்புரை :

குளிர்ந்த முத்துக்கள் அரும்பும் முக்குளங்களைத் தீர்த்தங்களாகக் கொண்டுள்ளவனை நினைந்து கண்களில் முத்துக்கள் போல நீர் அரும்ப அவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைதொழுவார்களின் உள்ளங்களில் முத்துக்கள் போன்று தூய நன்மை தோன்ற உவகைதரும் இறைவனது ஊர் வெண்மையான முத்துக்கள் போன்ற அருவியின் புனல் வந்து அலைக்கும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

தண் முத்து - தண்ணிதாகிய முத்துக்கள். அரும்ப - அரும்பு போலத்தோன்ற. தடம் மூன்று - மூன்று திருக்குளங்களை; `முக்குளம்`. உன்னி - தியாநம் புரிந்து. கண்முத்து அரும்ப - கண்களில் ஆனந்த பாஷ்பம் முத்துக்களைப் போலச்சொட்ட. கழல் சே அடி - கழலைப் பூண்ட செய்ய திருவடிகளை. உள் - உள்ளத்தே. முத்து அரும்ப - முத்துப் போலும் வெளிதான நிலை (அகளங்கம் ஆன தூய தன்மை) தோன்ற. உவகை தருவான் - இம்மை மறுமை இன்பங்களும் பேரின்பமும் அருள்பவர். வெண்முத்து அருவி - வெளிய முத்தினை ஒத்த அருவி. புனல் - நீர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா வுள்கு வார்கள் உள்ளத்தே
கரையா வண்ணங் கண்டான்மேவு மூர்போலும்
விரையார் கமலத் தன்ன மருவும் வெண்காடே.

பொழிப்புரை :

தலையில் நரை வந்து உடல் நாளுக்கு நாள் குறுகி மூப்பு நணுகுதற்குமுன், உரை வேறாகாது நினைபவர் உள்ளத்தே மெலிந்து கரைந்து ஒழியாதவாறு தன்னைத் தோற்றுவிப்பவனது ஊர், மணம் கமழும் தாமரை மலரில் அன்னங்கள் தங்கிமகிழும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

நரையார் - வெளுத்த மயிர். `தென்றலால் புகுந்துலவும் திருத்தோணி புரத்துறையுங் கொன்றைவார் சடையார்` (தி .1 ப .60 பா .7) `கொண்டலார்` கொணர்ந்து அங்கு உலவுந்திகழ் கோட்டாற்றில் தொண்டெலாம் துதிசெய்ய` (பதி .188 பா .8). நரையார் - (தி .1 ப .7 பா .91) நாளும் குறுகி - உயிர் உடம்பின் நீங்கும் நாளும் நெருங்கி, இனி வாழ்நாளும் சுருங்கி எனலுமாம். நணுகுதல் - நாளின் வினை. உரையால் வேறா - வாயுரையால் வேறுபடாத படி. உள்குவார்கள் - தியானிப்பவர்களது. கரையாவண்ணம் - கரைந்து ஒழியாதவாறு நிலைத்து நிற்கும் வகை. இறக்கும் முன் இறைவனை அகத்தில் நினைந்தும், வாயால் வழுத்தியும் வழிபடுவார் உள்ளத்தில் அவனது திருவருளுருவம் கரையாது நிற்கும் என்றவாறு. விரை - மணம். கமலத்து - தாமரை மலரில். அன்னம் - அன்னப்பறவை மருவும் - பொருந்தி வாழும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்
றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்க ளுறுநோய்கள்
தள்ளிப்போக வருளுந் தலைவ னூர்போலும்
வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே.

பொழிப்புரை :

இளம்பிறையையும் கங்கையையும் முடியிற் சூடிய பெருமான் என்று மனத்தில் நினைந்து தொழுபவர்களின் பெருகிய நோய்களைத் தள்ளிப் போகுமாறு செய்தருளும் தலைவனது ஊர், வெண்ணிறமான உள்கோடுகளை உடைய சங்குகள் உலவித்திரியும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

பிள்ளைப்பிறை - இளம்பிறை. புனல் - கங்கை நீர். பெம்மான் - பெருமகனென்பதன் மரூஉ. உள்ளத்து உள்ளி தொழுவார் தங்கள் - மனத்தில் நினைந்து வழிபடும் அடியார்களுடைய. உறு நோய்கள் - மிக்க நோய்களை. தள்ளி - உந்தி. போக - போயொழிய. போகத்தள்ளியருளும் எனலுமாம். வெள்ளைச்சுரி சங்கு உலவித் திரியும் - வெண்ணிறமுடைய சுரிந்த சங்குகள் உலாவித்திரியும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

பொழிப்புரை :

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

குறிப்புரை :

ஒளி கொள் மேனி உடையாய்! உம்பராளீ என்று - ஞானப்பிரகாசத்தைக் கொண்ட திருமேனி உடையவரே, தேவர்களை ஆள்பவரே என்று துதித்து. அளியர் ஆகி - அன்பின் முதிர்ச்சியை உடையராகி. அழுது உற்று ஊறும் அடியார்கட்கு எளியான் - உள்ளுருகியும், கண்ணீர் சொரிந்தும், (மெய்யன்பு) மிக்குத்திருவருளில் ஊறிய அடியவர்கட்கு எளியவன். அமரர்க்கு அரியான் - அழியும் இன்பத்தை விரும்பும் தேவர்கட்கு அரியவன். வெளிய உருவத்து ஆனை - வெண்ணிறத்தைப்பெற்ற வடிவத்தை உடைய யானை. `அடைந்து அயிராவதம் பணிய மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடு` `வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான்` (தி .2 ப .184 பா .7,9).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினான்
மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்
ஆள்வித் தமர ருலக மளிப்பா னூர்போலும்
வேள்விப் புகையால் வான மிருள்கூர் வெண்காடே.

பொழிப்புரை :

உயிர்கவர்வதில் வித்துப் போல்பவனாகிய கூற்றுவனை, சிவபிரானை நினையும் குறிப்பினால் மாள்வித்து அச்சிவபிரானை மகிழ்வொடு ஏத்திய சுவேதகேது முனிவரை அமருலகம் ஆளச்செய்து அணிசெய்தவனது ஊர் வேள்விப்புகையால் வானம் இருள்கூர்கின்ற திருவெண்காடு ஆகும்.

குறிப்புரை :

கோள் - கொலை. கோள் வித்து - கொலைக்கு விதை. அனைய - போன்ற. கூற்றம்தன்னை - கூற்றுவனை, எமனை. குறிப்பினால் - சிவத்தியாநத்தால்; `மறிதிகழ் கையினன் வானவர்கோனை மன மகிழ்ந்து குறித்தெழு மாணி` (தி .4 ப .107 பா .4). மாள் வித்து - மாளச்செய்து. அவனை - அச்சிவபெருமானை. மாணி - பிரமசாரி. சுவேதகேது முனிவர் (பார்க்க: தி .2 ப .48 பா .5). அமரர் உலகம் ஆள்வித்து அளிப்பான் - தேவலோகத்தை ஆளச்செய்து அருள் செய்வான், அளித்தல் அன்பின் முதிர்தல். வேள்விப்புகை - யாகத்தீயிலிருந்து எழும்புகை. இருள் கூர் - இருள் மிகும். `முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவிக்குனிமதி மூடி நீடும் உயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே` (தி .2 ப .83 பா .5).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியஞ் சூடி யென்று முப்போதும்
இளையா தேத்த விருந்தா னெந்தை யூர்போலும்
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே.

பொழிப்புரை :

வளையலணிந்த முன்கையை உடைய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்தகயிலை மலையைக் கால்விரல் ஊன்றி நெரித்து, முளைமதிசூடிய இறைவனே என அடியவர் முப்போதும் தளராது ஏத்துமாறு எழுந்தருளிய எந்தையாகிய சிவபெருமானது ஊர், விளைவைக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்.

குறிப்புரை :

வளை ஆர் முன்கை - வளையல் பொருந்திய முன் கையை உடைய. மலையாள் - இமாசலகுமாரி. வெருவ - அலற. வரை - கயிலைமலை. முளையார் மதியம் - முளைத்தல் பொருந்திய இளம்பிறை. முப்போது - காலை, பகல், மாலை. `வானோர்கள் முப்போது முடிசாய்த்துத் தொழ நின்ற முதல்வனை` (தி .4 ப .7 பா .3). இளையாது - (மனம்) இளைப்புறாமல். விளை - விளைவு. ஆர் - நிறைந்த. கழனி - வயல். பழனம் - நீர் நிலம். `செந்நெலங் கழனிப்பழனத்து அயல்` (தி .2 ப .1 பா .1).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

கரியா னோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த வெங்கள் பெருமா னென்பார்கட்
குரியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.

பொழிப்புரை :

கரிய திருமாலும் கமலமலரில் உறையும் நான் முகனும் அடி முடி காண இயலாதவாறு எரியுருவாய் நிமிர்ந்த எங்கள் பெருமானே! என்பார்கட்கு உரியவனும் அமரர்க்கு அரியவனுமான சிவபிரானது ஊர், வண்டுகள் பாடும் விரிந்த பொழில்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்.

குறிப்புரை :

கரியான் - மாயன். கமல மலரான் - தாமரையில் வாழும் பிரமன். காணாமை - காணமாட்டாத வகை. எரி - தீப்பிழம்பு. என்பார்கட்கு - என்று துதிக்கும் அடியவர்களுக்கு. உரியான் - அருளும் உரிமை உடையவன். `அமரர்க்கு அரியான்` (பா .6). விரி - விரிவு. பொழிலின் - சோலைக்கண்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

பாடு மடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த
ஆடு மரவம சைத்த பெருமா னறிவின்றி
மூட முடைய சமண்சாக் கியர்க ளுணராத
வேட முடைய பெருமான் பதியாம் வெண்காடே.

பொழிப்புரை :

பாடுகின்ற அடியவர் பலரும் கூடிப்பரிவுடன் ஏத்த ஆடும் பாம்பை இடையிற்கட்டியுள்ளவனாகி, அறிவற்ற மூடர்களாகிய சமண் சாக்கியர்கள் உணர இயலாத வேடம் கொண்ட பெருமானது பதி வெண்காடாகும்.

குறிப்புரை :

பாடும் அடியார் - பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள். அரவம் - பாம்பு. அசைத்த - கட்டிய. உணராத வேடம் - உணரமாட்டாத சிவஞான வேடம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

பொழிப்புரை :

விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.

குறிப்புரை :

விடை ஆர்கொடியான் - எருது எழுதிய கொடியை உடையவன். மேவி - விரும்பி. உறையும் - எழுந்தருளியிருக்கும். கடை ஆர் மாடம் - கடைவாயில் பொருந்திய மாடம். இது காழிக்கு அடை. நடை - ஒழுக்கம். ஞானசம்பந்தன் வெண்காட்டைத் `தொழுத` தமிழ் என்று ஒரு சொல்வருவித்தியைக்க. வல்லார்க்கு வினைகள் அடையா. வல்லார் அமரலோகம் ஆள்வார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன் றாதைதன்
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.

பொழிப்புரை :

அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து, கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும் சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள்.

குறிப்புரை :

காயம் - உடம்பு. செவ்வி - அழகு. காமன் - மன்மதன் (உடலழகையுடைய மன்மதன்). காமற்காய்ந்து - காமனைக் கோபித்து. இரண்டன்தொகை. படர் புன் சடையில் பாயக்கங்கையைப் பதித்த பர மேட்டி - படர்ந்த பொன்போலுஞ் செஞ்சடைமேல் விரைந்து பாயும் வண்ணம் கங்கையாற்றைப் பதியச்செய்த பரமேட்டி. பரமேட்டி - தனக்குமேல் ஒன்றில்லாத உயர்ந்த இடத்திலிருப்பவன். மாயச்சூர் - வஞ்சத்தையுடைய சூரபதுமனை. சூர்மாய என்று மாற்றிச் சூரபத்மன் மாயும்படி என்றலும் பொருந்தும். மைந்தன் - முருகப்பிரான். தாதை - தந்தை (சிவபிரான்). வீட்டும் - அழிமின். சிவபிரானுடைய மீயச்சூர் என்னும் சிவதலத்தை வழிபட்டுப் பிறவிக்கு ஏதுவாகிய வினையைத் தீர்த்தொழியுங்கள் என்று உபதேசித்தருளியவாறு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

பூவார் சடையின் முடிமேற் புனல ரனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி
மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இறைவர் மலர் அணிந்துள்ள சடை முடியில் கங்கையைச் சூடியவர். கையில் அனலைக் கொண்டவர். நாவால் வேதங்களை அருளியவர். பிறைசூடியவர். நாற்றமுடைய வெள்ளிய தலையோட்டை ஏந்தியவர். பெருமை பொருந்திய மேருமலையாகிய வில்லில் திருமாலைக் கழியம்பாகவும் அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு வில்லை வளைத்துப் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.

குறிப்புரை :

பூ - கொன்றைப்பூ. அன்பர் அர்ச்சிக்கும் பல்வேறு மலர்களும் ஆம். புனலர் - கங்கையை அணிந்தவர். அனல் கொள்வர் - தீயேந்துபவர். நா ஆர் மறையார் - வேதங்களை அருளிய நாவினர். பிறையர் - பிறைசூடியவர். நற வெண்தலை - நாற்றத்தையுடைய வெளிய பிரமகபாலத்தை. ஏ - பெருமை. மலை - மேருமலை. சிலையா - வில்லாக. கழியம்பு - கோல் அம்பு. எரி - அக்கினி. திருமால் அம்பாகவும் அக்கினி அவ்வம்பின் நுனியாகவும் கொண்ட வரலாற்றை நினைக்க. `எரிகாற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல் வில்` (தி .1)மேவார் - பகைவரது. புரம்மூன்று - திரிபுரத்தை, புனலரும், கொள்வரும், மறையரும், பிறையரும், ஏந்தி வாங்கி எரித்தாரும் ஆகிய சிவபிரானார். மீயச்சூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

பொன்னேர் கொன்றை மாலை புரளு மகலத்தான்
மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத்
தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்
அந்நே ரிமையோ ருலக மெய்தற் கரிதன்றே.

பொழிப்புரை :

பொன்போன்ற கொன்றை மாலைபுரளும் மார்பினனும், மின்னல் போன்ற சடைகளை உடையவனும் தனக்கு ஒப்பார் பிறர் இல்லாதவனும் ஆகிய மீயச்சூர் இறைவனைத் தலையால் வணங்குவார் அழகும் நேர்மையும் உடைய தேவர் உலகத்தை எய்துதல் அரி தன்று.

குறிப்புரை :

பொன் ஏர் கொன்றை - பொன்போலும் அழகிய கொன்றை. கொன்றையைப் பலபட அருளிய வகையெல்லாம் ஆசிரியரது திருமுறையுள் ஆங்காங்கு நோக்கி உணர்தல் நன்று. `வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்` என்றதில் கொன்றையான் என்று சிவபிரானைக் குறித்ததன் கருத்து அறியத்தக்கது. அதற்கு ஆதாரமானது இத்திருப்பாடல்:- `கொன்றை சூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோம்` இதனை ஆசிரியரே அருளியதால் அவரது குறிக்கோளை நன்கு அறிந்து கொள்ளலாம். அகலத்தான் - திருமார்புடையவன். மின் ஏர் சடைகள் - மின்போலும் ஒளிர்கின்ற சடைகளை. தன் நேர் பிறர் இல்லானை - தனக்குவமையாகப் பிறர் இல்லாத தலைவனை. அவனுக்கு அவனே ஒப்பாம் என்று, அநந்நிய உவமை உணர்த்தியவாறு. தலையால் வணங்குவார் (க்கு) இமையோருலகம் எய்தல் (ஆனது) அரிதன்று, மிக எளிது என்றவாறு. அ + நேர் + இமையோர். உலகம் - அந்த நேர்மையுடைய தேவருலகத்தை. `எய்தலரிதன்றே` என்ற பாடமும் உண்டு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப்
பாக முமையோ டாகப் படிதம் பலபாட
நாக மரைமே லசைத்து நடமா டியநம்பன்
மேக முரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.

பொழிப்புரை :

வேகமும் மதமும் உடைய நல்லயானையை வெருவுமாறு கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்து உமைபாகராக அவ்வம்மையார் பாடப் பாம்பை இடையின் மேல் கச்சாகக் கட்டிக் கொண்டு நடனமாடிய பெருமான் மேகந்தோயும் பொழில்சூழ்ந்த மீயச்சூர் இறைவன் ஆவான்.

குறிப்புரை :

வேகம் - விரைவுடைய நடை. மதவேகமுமாம். நல்லி யானை (நன்மை + யானை):- .... உயர்திணை அஃறிணை ஆயிருமருங்கின், ஐம்பால் அறியும் பண்புதொகு மொழியும் ... மருவின் பாத்திய புணரியல் நிலையிடை உணரத்தோன்றா (தொல்காப்பியம் .482.) என்றவாறு, நல்லதாகிய யானை என்று விரித்துரைத்தற்பாலது. நன்னூற் சூத்திரப்படி, பண்பைவிளக்கும் மொழி தொக்கதாகக் கொண்டு, விரித்துரைத்தல் குணகுணிபேதம் அறியாக் குற்றமுடையதாகும். உரி - தோல். பாகம் - இடப்பாகம். படிதம் - வல்லபை. துதி என்றாரும் உளர். அவர், சந்தர்ப்பத்திற்கேற்பத் தாமே கருதி எழுதியது அப்பொருள் என்று தோன்றுகின்றது. நாகம் - பாம்பு. அரை - திரு அரை. அசைத்து - கட்டி. நடம் - திருக்கூத்து. நம்பன் - சிவபிரான். நம்பு - நசை. எல்லா உயிர்களும் விரும்புதற்குரியவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாட லாடலார்
பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இறைவர், விடைக்கொடியை உடையார். சடைமேல் விளங்கும் பிறைவேடத்தை உடையவர். படைகளாக அமைந்த பூதங்கள் சூழப்பாடியும் ஆடியும் மகிழ்பவர். பெடைகளோடு கூடி ஆண் வண்டுகள் அணையும் கொன்றைமாலையை அணிந்தவர். காளைபோன்ற நடையை உடையவர்.

குறிப்புரை :

விடை ஆர் கொடியார் (பார்க்க : பதி .197 பா .11.). பிறை வேடம் - பிறையை அணிந்த வேடம். சடைமேல் பிறைவேடம் விளங்கும். படை ஆர் பூதம் - படையாகப் பொருந்திய பூதங்கள். பாடல் ஆடலார் - பாடுதலும் ஆடுதலும் உடையார். பெடை - பெண் வண்டு. பிணை - மாலை. பிணையல் - கொன்றைப்பிணை. விடை ஆர் நடை - `ஏறுபோல் பீடுநடை` (குறள்).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

குளிருஞ் சடைகொண் முடிமேற் கோல மார்கொன்றை
ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்ட நவினம்பன்
மிளிரும் மரவ முடையான் மீயச் சூரானே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இறைவன் குளிர்ந்த சடைகளைக் கொண்டுள்ள முடிமீது அழகிய கொன்றைமாலை, விளங்கும் பிறை ஆகியவற்றைச் சூடியவன். ஒப்பற்றவன். மணிகள் அமைந்த மாலையுடன் கைகளைவளைத்து நடனம் புரிபவன்: விளங்கும் அரவினை அணிந்தவன்.

குறிப்புரை :

கோலம் - அழகு. ஒளிரும் - விளங்கும். சடைமுடி மேல் கொன்றையும் பிறையும் உடையான் என்க. கைகோடி - கையை வளைத்து. நட்டம் நவில் நம்பன் - திருக்கூத்தாடும் சிவபெருமான். நளிரும் - குளிரும். மிளிரும் - விளங்கும். அரவம் - பாம்பு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார்
காலர் கழலர் கரியி னுரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இறைவர் நீலகண்டர். நீண்டவர். ஒப்பில்லாதவர். அழகிய பலபல வடிவங்கள் தம்முடையனவாகக் கொண்டு அறிதற்கு அரியராயிருப்பவர். காலிற் கழல் அணிந்தவர். யானையின்தோலைப் போர்த்தவர். மழுவேந்தியவர். மேன்மையானவர். மதியை அணிந்தவர். உலகைப்படைப்பவர்.

குறிப்புரை :

நீலவடிவர் மிடறு - திருநீலகண்டர். நெடியர் - நீண்டவர். (உயர்ந்தோங்கிய நிலையின் எல்லையில்லாதவர்). `உம்பராலும் உலகின்னவராலும் தம்பெருமை அளத்தற்கரியான்` (தி .1 ப .29 பா .5). `நுண்ணியான் மிகப்பெரியான்` (தி .1 ப . 61 பா .6). நிகரில்லார் - (அதுலர்) ஒப்பிலியப்பன் கோலவடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார். பல உருவன் (தி .1 ப .13 பா .2). `நானாவித உருவாய் நமை யாள் வான்` பலபல வேடமாகும் பரன் தன்மையாரும் அறிவாரில்லை (தி .2 ப .6 பா .2.). ஓதியாரும் அறிவார் இல்லை - ஆர்க்கும் அறிவரியான். காலர் கழலர் - கழலணிந்த திருவடி உடையார். காலர் - காலரூபர், வாயுரூபர் எனலும். கூற்றை உதைத்தவரெனலும் ஆம். கரியின் உரியர் - யானைத் தோல் உடையவர். மழுவாளர் - மழுவை ஆள்பவர், மழுவாளை உடையவர். மேலர் மதியர் - பிறையைச் சடைமேல் அணிந்தவர். மேலானவரும் ஞானசொரூபரும் ஆம். காலர் கழலர் மேலர் மதியர் :- வடநூலார் மதம்பற்றி அடைமொழிக்கும் அடைகொளியின் விகுதி கொடுத்துக் கூறியனவாக் கொள்ளலும் ஆம். `நுண்ணறிவால் வழிபாடுசெய்யுங் காலுடையான்` (தி .1 ப .5 பா .4). `காலனுயிர் செற்றகாலன்` (தி .1 ப .45 பா .4) எனலும் அமையும். பவமலி தொழிலது நினை விதியர் :- படைப்பவரானவர். `அரியானை ... கரியானை நான்முகனை ... பிறவாநாளே` (தி .6 ப .1 பா .1). `படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திகளாயினை` (தி .1 ப .128 பா .4). `அயன வனாய்` (தி .1 ப .13 பா .5). `வேதவிதியானை` (தி .1 ப .128. பா .4). `எனதுள்ளம் விடகிலா விதியே` (தி .7 பா .385). `பவமலி தொழிலது நினைவொடு பதுமன் நன் மலரது மருவிய சிவன்` (தி .1 ப .2 பா .1) என்பதில், பிரமனது இதய கமலத்திலிருந்து சிவபிரான் படைப்பித்தருள்வதாகக் குறித்த உண்மை உணர்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

புலியி னுரிதோ லாடை பூசும் பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தா ருமையஞ்ச
வலிய திரடோள் வன்க ணரக்கர் கோன்றன்னை
மெலிய வரைக்கீ ழடர்த்தார் மீயச் சூராரே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இறைவர் புலியின் தோலாகிய ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் அணிந்தவர். ஆரவாரித்து வந்த கங்கையை ஓர் சடைமேற் கரந்தவர். உமையம்மை அஞ்ச வலிமையான திரண்ட தோள்களையும் வன்கண்மையையும் உடைய அரக்கர்கோனை மெலியுமாறு மலையின் கீழ் அடர்த்தவர்.

குறிப்புரை :

உரிதோலாடை நீற்றார் - உரித்த தோலாகிய ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் உடையவர். ஒலிகொள்புனல் - முழக்கத்தைக் கொண்ட கங்கை வெள்ளத்தை. ஓர்சடை - ஒப்பற்ற சடை. ஓர்தற்குரிய ஞானமாகிய சடை எனலுமாம். `பொன்றயங் கிலங் கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை பின்றயங்க ஆடு வாய்` (பதி .310 பா .6). `நுண்சிகை ஞானமாம்` (திருமந்திரம்) கரந்தார் - மறைத்தவர். உமை - உமாதேவியார். திரள் தோள் - திரண்ட புயங்களையும். வன்கண் - அகத்திலுள்ள வலிமையைப் புறத்தே காட்டும் கண்களையும் உடைய, அரக்கர்கோன் - அரக்கர்க்குக் கோமகன். அவனை அடர்த்தார் - வரையின் கீழ் மெலிய அடர்த்தார். அடைத்தவர் மீயச்சூரிலுள்ளார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
போதி லவனு மாலுந் தொழப்பொங் கெரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.

பொழிப்புரை :

வரிவண்டுகள் மலர்களைக் கோதி ஒலிசெய்யும் பூம்பொய்கைப் புனலில் எருமைகள் மூழ்கி வயல் கரைகளில் சென்று படுக்கும் திருமீயச்சூரில் மேவும் இறைவர், காதில் விளங்கும் குழையை அணிந்தவர்: கரிய கண்டத்தினர்: தாமரையோனாகிய பிரமனும் திருமாலும் தொழப் பொங்கிய எரிவடிவாய் நின்றவர்.

குறிப்புரை :

மிளிரும் - விளங்கும். குழையார் - குழையை அணிந்தவர். குழை - தழை, ஓலை, குழை என்பன பண்டைய வழக்கத்திற் காரணப்பெயராயிருந்தன; `மரக்கால்` போல. பொற்கலனானபின்னும் குழை என்ற பெயராலே வழங்கப்படுகின்றது. இருப்புத்தகட்டாலான பின்னும் `மரக்கால்` என வழங்கப்படுவதுபோல, `பத்திரம் எழுதி னான்` என்பது முதலியவற்றையும் நோக்குக. கரியகண்டத்தார் - திருநீலகண்டர். போது - பூ. போது இ(ல்)லவனும் - தாமரைப் பூவை இல்லமாக உடைய பிரமனும். பொங்கும் எரி - மிக்க தீ. வண்டு கோதி அறை பூ என்க. பொய்கை - குளம். மேதி - எருமை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார்
பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லா
விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.

பொழிப்புரை :

கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர் கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர் இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.

குறிப்புரை :

கண்டார் நாணும்படியார் - திகம்பரசைனர். ஆடையில்லாதவர். கலிங்கம்... கொண்டார் - ஆடை உடைய தேரர். முடை என்று கொண்டு நாற்றம் எனலுமாம். கலிங்கமாகிய பட்டுடையை என்றலே பொருத்தம். உயர்ந்த கொள்கையார் (சைவர்) அவ்விருதிறத்தவர் சொல்லைக் குறுகார் என்க. பெண்தான்பாகம் - மங்கைபங்கு. விண்டார் - பகைவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

வேட முடைய பெருமா னுறையு மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
பாட லாய தமிழீ ரைந்து மொழிந்துள்கி
ஆடு மடியா ரகல்வா னுலகம் அடைவாரே.

பொழிப்புரை :

பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான் உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன் அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும் அடியவர் அகன்றவானுலகை அடைவர்.

குறிப்புரை :

வேடம் - `பலபல வேடம்` `ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர்` (தி .1 ப .68 பா .5)(ஞானவேடம்). மீயச்சூர் நாடும் புகழ் ஆர் - திருமீயச்சூரை விரும்பும் புகழ் நிறைந்த (ஞானசம்பந்தர்). `புகழார்` சிவபிரானாகக் கொண்டு, அவரது புகலி எனலும் பொருந்தும். பாடல் ஆய தமிழ் ஈரைந்தும் என்றது இத்தமிழ்த் திருப்பதிகத்தை உணர்த்திற்று. உள்கி - நினைத்து. அடியவர், உள்ளம் உரை உடல் மூன்றாலும் முறையே முறையே மொழிந்தும் உள்கியும் ஆடியும் இத்தமிழால் சிவபிரானை வழிபட்டால் வீடு பெறுதல் திண்ணம் என்றவாறு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மின்னுஞ் சடைமே லிளவெண் டிங்கள் விளங்கவே
துன்னுங் கடனஞ் சிருடோய் கண்டர் தொன்மூதூர்
அன்னம் படியும் புனலா ரரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே.

பொழிப்புரை :

மின்னல் போல ஒளிரும் சடைமேல் இளம்பிறை விளங்கக் கடலில் பொருந்திய நஞ்சினது கருமை தோய்ந்த கண்டத் தராய் விளங்கும் பெருமானது பழமையான ஊர் அன்னங்கள் படிந்து ஆடும் நீரை உடைய அரிசிலாற்றின் அலை பொன்னையும் மணியை யும் கொண்டு வீசும் தென்கரையின் மேல் விளங்கும் புத்தூராகும் .

குறிப்புரை :

சடைமேல் திங்கள் விளங்க ( இருள் ) தோய்கண்டர் என்று இயைக்க . சடைமேல் வெள்ளொளியும் கழுத்தில் காரிருளும் ஆக உள்ள முரணும் புலப்படக்கூறியவாறு . விளங்கத்துன்னும் என்றி யையாது . துன்னுதல் - ( நெருங்குதல் ) கடலின் வினை . தோய்தல் - இருளின் வினை . திங்கள் விளங்க இருள் தோய்ந்தது . திங்கள் பகலின் விளங்காதன்றோ ? இருளின் தோய்வு திங்களின் விளக்கத்திற்கு இன்றி யமையாதது . கழுத்திலுள்ள காரிருள் சடைமேலுள்ள திங்கள் விளக்கம் நன்கு தோன்றத் துணையாயிற்று . கடல் நஞ்சு இருள் - பாற்கடலின் எழுந்த நஞ்சினாலான கறுப்பு . அன்னம் - பறவை . ஆர் - நிறைந்த . அரிசில் - அரிசிலாறு . பொரு - மோதுகின்ற . தென்கரைமேல் உள்ள புத்தூர் . தொன்மூதூர் புத்தூர் என்க . தொன்மை , முதுமை இரண்டும் ஒருங்குவரல் அறியத்தக்கது . தொன்மை காலத்தைப்பற்றியது . முதுமை அக்காலத்தோடு அதில் நிகழும் வளர்ச்சியையும் பற்றியது . தோன்றி நெடிது நிலை பெற்றுவருவது தொன்மைக்கும் முதுமைக்கும் உரியதாகும் . முன்னொருகால் தோன்றியிருந்து அழிந்த பொருளை நெடுங்காலங் கழிந்த பின்னர்த் தொல்பொருள் எனலாம் . முது பொருள் எனலாகாது . காலத்தின் நெடுமையும் இடத்தின் நீட்சியும் தொன்மை எனும் வழக்கிற்கொவ்வும் . தொல்லோன் , தொலைந்தான் , ` ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத் தியற்கை ` ( புறம் -86). தொலைவு , தோல்வி , தொல்லை என்பவற்றை ஆராய்க . முன்னொருகால் தோன்றியிருந்த குழந்தையைப் பின்னொரு கால் தொல்குழந்தை எனலாம் . முது குழந்தை எனலாகாது . கிழவ னேல் ` தொல்லோன் ` ` முதியோன் ` எனலாம் . ` பல நீர்மை குன்றிச் செவி ... நரை தோன்றும் காலம் ` ( தி .1 ப .59 பா 6) என்றதிற் குறித்த முதுமை , நெடுங்காலமாக உள்ளனவும் காலம் அல்லாதனவும் ஆன பிற பொருள் இடம் முதலியவற்றில் இல்லை . அவற்றில் தொன் மையே உண்டு . திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தொல்லோர் ஆவ ரேயன்றி , முதியோராகார் . திருநாவுக்கரசரோ தொல்லோரு மாவர் ; முதியோருமாவர் . தொன்மையைப் புராதனம் புராணம் முதலியவற் றாலும் முதுமையை வார்தக்யம் , விருத்தாப்பியம் முதலியவற்றா லும் வடமொழியிற் குறிப்பர் . புராதனமும் விருத்தாப்பியமும் ஒன்றாகா . ` தொன்மூதாலத்துப் பொதியில் ` என்ற குறுந்தொகை 15 உம் ` தொன் மூதாலம் ` என்ற நெடுந்தொகை 70, 251 உம் இக்கருத்தில் உரைக்கப் பட்டனவோ ? அவற்றின் உரைகளைக் காண்க . யாண்டு முதுமை ஆண்டுத் தொன்மை எனலாம் . யாண்டுத்தொன்மை ஆண்டு முதுமை எனல் ஒவ்வாது . இப்பாட்டில் , ` தொன்மூதூர் ... புத்தூரே ` என்று முரண் டொடையாய் அமைந்த நயம் அறிந்து மகிழ்தற்பாலது . புதுமையும் தொன் ( பழ ) மையும் ஒன்றற்கு ஒன்று மறுதலை , இளமையும் முதுமை யும் ஒன்றற்கொன்று மறுதலை . தொன்மைக்கு இளமையும் முதுமைக்குப் புதுமையும் மறுதலையாகா . நெடுங்காலமாக உள்ள வெற்றிடத்தைத் தொன்மையது எனலாம் . அங்குத் தோன்றி நெடுங் காலமாகவே இருக்கும் ஒன்றனை முதுமையதெனலுமாம் . ஆகவே , தொல்மூதூர் என்றதற்கு மிகப் பழைய ஊர் என்று பொருள் கோடல் குற்றமாம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

மேவா வசுரர் மேவெயில் வேவ மலைவில்லால்
ஏவா ரெரிவெங் கணையா லெய்தா னெய்துமூர்
நாவா னாத னாம மோதி நாடோறும்
பூவா னீராற் பூசுரர் போற்றும் புத்தூரே.

பொழிப்புரை :

பொருந்தாத அசுரர் வாழும் மூன்று கோட்டைகளும் வெந்து அழியுமாறு மலைவில்லால் அம்பாகப் பொருந்திய எரியாகிய கொடிய கணையால் எய்தவனது ஊர், பூசுரர்கள் நாவினால் நாதன் நாமங்களை நாடொறும் ஓதிப்பூவாலும் நீராலும் போற்றி வழிபடும் புத்தூர் ஆகும்.

குறிப்புரை :

மேவா அசுரர் - விரும்பாத (பகைமையுடைய) திரிபுரத்தசுரர். மேவு எயில் - மேவிய மதில். வேவ - தீய. மலைவில் - மேருவில். ஏ - உணர்ச்சி. கணை எனப்பின் உள்ளதால் அம்பு எனப்பொருள்படாது. எரிகணை - அக்கினியை முனையிலுடையது. வெம்மை - தீ வெப்பம். எய்தான் - எய்த சிவபிரான். எய்தும் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும். ஊர் - புத்தூர் என்க. நாவால் நாதன் நாமம் ஓதி நாள்தோறும் பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூர் என்றது ஆசிரியர் அங்கு அடைந்த காலத்தில், அவ்வூர்ச் சிவவேதியர்கள் ஒரு நாளும் தவறாமல் சிவநாமங்களை நாவாரச் சொல்லி நீரால் ஆட்டிப் பூவால் போற்றி வழிபட்ட உண்மை உணர்த்தியவாறு. `நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்று ஏத்த வல்லவாறே வந்து நல்காய்` (தி .1 ப .50 பா .1). `உன்றன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்.`(ஷெ 4)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

பல்லார் தலைசேர் மாலை சூடிப் பாம்பும்பூண்
டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக்
கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால்
பொல்லா ரல்ல ரழகியர் புத்தூர்ப் புனிதரே.

பொழிப்புரை :

புத்தூர்ப்புனிதர், பற்களோடு கூடிய தலை மாலையைச் சூடிப் பாம்பையும் அணிந்து உடல் முழுதும் வெண்ணீறு அணிந்து ஒப்பற்ற விடைமீது ஏறி இமவான் மகளாகிய பார்வதி பங்கராக இருப்பவர். ஆராயுமிடத்து அவர் பொல்லாதவர் அல்லர். அழகியவர்.

குறிப்புரை :

தலைமாலையைத் தலையிற் சூடியுள்ளார் இறைவர். அத்தலைகளில் பற்களின் வரிசை கெடாது இருக்கின்றன என்பார் `பல் ஆர்தலை` என்றார். `தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலி தேருந்தலைவன்`. எல்லா இடமும் வெண்ணீறு அணிந்து - `மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியன்` (தி .4 ப .5 பா .1) `நீற்றினை நிறையப்பூசி` (தி .4 ப .49 பா .2, தி. 4 ப .64 பா .8) `நீரலைத்த திருஉரு` (தி .6 ப .75 பா .3) ஓர் ஏறு ஏறிக்கல்லார் மங்கை பங்கர் - ஒப்பற்ற எருதேறியூர்ந்து அம்பிகையை இடப்பங்கில் உடையவர். ஏறி என்னும் வினையெச்சம் `பங்கர்` என்னும் வினைக்குறிப்பைக் கொண்டது. பொல்லார் - பொலிவில்லாதவர், அழகியவர். கல்லார் மங்கை:- கல் - இமயமலை. செழுங்கல் வேந்தன் செல்வி (தி .1 ப .53 பா .5). இமாசல குமாரி. மங்கையென்பது இத்தலத்தின் அம்பிகைக்குரிய திருப்பெயராகிய `அழகம்மை` என்பதைக் குறித்ததுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

வரியேர் வளையா ளரிவை யஞ்ச வருகின்ற
கரியே ருரிவை போர்த்த கடவுள் கருதுமூர்
அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே.

பொழிப்புரை :

வரிகளும் அழகும் பொருந்திய வளையல்களை அணிந்த அம்பிகை அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்த கடவுள் கருதும் ஊர், நெல்லரிகளைக் கொண்ட வயல்கள் சூழ்ந்து அழகிய நெற்பொரிகள் போல புன்கமரங்கள் பூக்களைச் சொரியும் சோலைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும்.

குறிப்புரை :

வரி - நிறம். ஏர் - எழுச்சி (யை உடைய). வளையாள் - வளையலை அணிந்த அம்பிகை. கரி - கரத்தையுடைய யானை. ஏர் - அழகு. உரிவை - தோல். அரி - தவளை, வண்டு, நெல்லரி எனலுமாம். பழனம் - மருதநிலம். புன்கு சொரி பொரி ஏர் பூஞ்சோலை - புன்க மரங்கள் சொரிகின்ற பொரி போன்ற அழகிய பூக்களையுடைய சோலை. சோலை சூழ்ந்த புத்தூர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

என்போ டரவ மேனத் தெயிறோ டெழிலாமை
மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர்
அன்போ டுருகு மடியார்க் கன்ப ரமருமூர்
பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே.

பொழிப்புரை :

எலும்பு, பாம்பு, பன்றிப்பல், அழகிய ஆமை ஓடு ஆகியவற்றை மின்னல் போன்ற பூணநூலோடு மாலையாகக் கலந்தணிந்த அழகிய மார்பினர். அன்போடு உருகி வழிபடும் அடியவர்கட்கு அன்பர். அவர் எழுந்தருளிய ஊர் பொன் போல மலரும் கோங்கமலர்கள் ஓங்கிய சோலைகளை உடைய புத்தூர் ஆகும்.

குறிப்புரை :

என்பு - எலும்பு. அரவம் - பாம்பு. ஏனத்து எயிறு - பன்றிக்கொம்பு. எழில் - அழகு. மின்னைப்போலும் முப்புரிநூல். விரவி - கலந்து. மணி - அழகிய ரத்னமாலை எனலுமாம். சிவபிரானை, அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் என்றது எல்லாருள்ளத்திலும் பதியத்தக்கது. `தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி` (திருவாசகம் - திருச்சதகம் -73). `நேசன் காண் நேசர்க்கு`(தி .6 ப .65 பா .2) `அன்பின் நிலையே அது` ( திருவருட்பயன் . 8.10). `அன்பே சிவம்` (திருமந்திரம்). பொன் போது - பொன்னைப் போல அலரும் பூக்கள். அலர்கோங்கு - பூக்கும் கோங்கமரம். கோங்கு ஓங்கு சோலைகளையுடைய புத்தூர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

வள்ளி முலைதோய் குமரன் றாதை வான்றோயும்
வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர்
தெள்ளி வருநீ ரரிசிற் றென்பால் சிறைவண்டும்
புள்ளு மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.

பொழிப்புரை :

வள்ளி மணாளனாகிய முருகனின் தந்தையாய் வான்தோயும் கயிலைமலை போன்ற வெள்விடையை உடையவன் எழுந்தருளிய ஊர், தெளிவாக வரும் நீரை உடைய அரிசிலாற்றின் தென்கரையில் சிறைவண்டும் பறவைகளும் நிறைந்து வாழும் அழகிய பொய்கைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும்.

குறிப்புரை :

வள்ளி முலை தோய் குமரன் :- `குறவி தோள் மணந்த செல்வக்குமரவேள்` (தி .4 ப .60 பா .3). `வள்ளிவளைத்தோள் முதல்வன்` (தி .6 ப .3 பா .2). `நம் செந்தில் மேய வள்ளி மணாளற்குத்தாதை` (தி .6 ப .23 பா .4). வான் - விண்ணிடம். வான்றோயும் மலை. விடை - எருது. வெண்ணிறத்தால் ஒப்புணர்த்த வெள்ளிமலை எனப்பட்டது. தெள்ளி - தெளிந்து. தென்கரை (பா .1). `வண்டும் புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூர்` (பா .6) என்று வளங்கூறிய சிறப்புணர்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

நிலந்த ணீரோ டனல்கால் விசும்பி னீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர்
அலந்த வடியா னற்றைக் கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.

பொழிப்புரை :

நிலம், தண்ணீர், அனல், காற்று விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் இயல்பை உடையவன். சிலந்தியைக் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கச் செய்தவன். அவனது ஊர் வறுமையுற்ற புகழ்த் துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப் பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும்.

குறிப்புரை :

நிலம், தண் (குளிர்ந்த) நீர், அனல் (- தீ), கால் (- காற்று) விசும்பு (- ஆகாயம்) என்னும் ஐம்பெருங்காரண பூதங்களின் இயல்பையுடையவன். நீர்மை - இயல்பு. சிலந்திப் பூச்சி, சிவபூஜைப் பயனாகக் கோச்செங்கட் சோழநாயனாராகிய வரலாறு உணர்க. அலந்த - சிவபூஜை முட்டுப்படத்துயருற்ற, அன்றைக்கு - அன்று. அந்நாட்கு - அந்நாள். அன்றாடம் ஒருகாசு எய்தி, பொழுது புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றும் புத்தூர். செய்தான் ஊர் புத்தூர் என்க. `அடியான்` என்றது `செருவில்லிபுத்தூர் மன்னுஞ் சிவமறை யோராகிய ... நிகரில்லா (ப்) புகழ் நீடு புகழ்த்துணையார்`. (பெரிய புராணம் ஷெ நாயனார்.1)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

இத்தே ரேக விம்மலை பேர்ப்ப னென்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீ ழலறப் பாதந்தான்
வைத்தா ரருள்செய் வரதன் மருவும் மூரான
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.

பொழிப்புரை :

இந்தத் தேர் செல்லுதற்குத் தடையாக உள்ள இந்த மலையைப் பெயர்ப்பேன் என்று கூறிச் சிவபிரான் எழுந்தருளிய திருக்கயிலையைப் பெயர்த்து ஏந்திய பத்து வாய்களை உடைய இராவணன் மலைக்கீழ் அகப்பட்டு அலறுமாறு தம் பாதத்தைச் சிறிது ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள் செய்யும் வரதனாகிய சிவபிரான் மருவும் ஊரான புத்தூரைத் தரிசிக்கச் செல்வார் வினைகள் போகும்.

குறிப்புரை :

தேர் ஏக - தேர் தடையின்றிச் செல்லற்பொருட்டு. இம் மலை - இக்கயிலைமலையை. பேர்ப்பன் - பெயர்த்திடுவேன். ஓர் பத்து வாயான் - ஒரு பத்துவாயுடையவன். அக்கயிலைமலையின் கீழ், பத்து வாயாலும் அலறினான். அதனால் இரங்கி முன்வைத்த பாதம் வாங்கியருளினான். வரதன் - வரத்தைக் கொடுப்பவன். நாளும் வாளும் பெருந்தேரும் கொடுத்தவரம் ஆங்காங்குணர்க. மருவும் ஊர் ஆனபுத்தூர் - எழுந்தருளிய நகராகிய புத்தூர். புத்தூர் காணப்புகுவார் வினை - தலதரிசனம் செய்ய நுழையும் அடியார்களுடைய வினைகள் (ஆகாமியம்).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

முள்ளார் கமலத் தயன்மான் முடியோடு அடிதேட
ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியா னூர்போலும்
கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள்
புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.

பொழிப்புரை :

முட்கள் பொருந்திய தண்டினை உடைய தாமரை மலரின் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியோடு அடிதேட, ஒளி பொருந்திய எரி உருவினனாய், உணர்தற்கு அரியவனாய் விளங்கிய சிவபிரானது ஊர், தேன் பொருந்திய நெய்தல், கழு நீர், ஆம்பல், தாமரை ஆகியவற்றை உடைய பறவைகள் நிறைந்த பொய்கைகளில் பூக்கள் நிறைந்து தோன்றும் புத்தூர் ஆகும்.

குறிப்புரை :

முள் ஆர் கமலத்து - (`முட்டாட்டாமரை`) முட்கள் நிறைந்த தாமரையில் வாழும். அயன்மால் முடி அடி: முறை நிரல் நிறை. ஒள் - ஒண்மை, ஒளி, எரி - தீப்பிழம்பு, அயன்மால் உணர்தற்கு அரியான். உணர்தற்கே அரியவன் என்றால் ஓதற்கும் எளியன் அல்லன் என்பது சொல்லல்வேண்டா. `உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்` (பெரியபுராணம், மங்கலம்). `அன்பராகி மற்றருந்தவமுயல்வார் அயனுமாலும் மற்றழலுருமெழுகாம் என்பராய் நினைவார்` (திருவாசகம் செத்திலாப் பத்து 4). கள் - தேன், நெய்தல், ஆம்பல், கழுநீர், கமலங்கள். புள் - பறவைகள். பூக்களும் புட்களும் பொருந்திய பொய்கை (- குளம்).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட
மெய்யார் போர்வை மண்டையர் சொல்லு மெய்யல்ல
பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா வென்பார்க் கையுறவின்றி யழகாமே.

பொழிப்புரை :

கையில் வாங்கிச் சோற்றை உண்ணும் குண்டர்களும், துவர்நிறம் ஊட்டிய ஆடையை மெய்யிற் போர்த்தி மண்டையில் உணவு வாங்கி உண்ணும் தேரர்களும் கூறும் சொற்கள் உண்மையல்லாதவை. மெய்ம்மொழியால் அந்தணர்கள் போற்றும் புத்தூரில் எழுந்தருளிய தலைவனே! என்று போற்றுவார்க்கு ஐயுறவு இன்றி அழகு உண்டாம்.

குறிப்புரை :

கை ஆர் சோறு - கையில் நிறைந்த சோறு. `கையிலுண் ணுங்கையர்` (தி .3 ப .53 பா .1). மெய் ஆர் போர்வை - உடம்பைப் பொருந்தப் போர்த்த போர்வை; துவர் உண்ட போர்வை. மண்டையர் - பனங்குடையில் உண்ணுமவர். சொல்லு - சொற்கள். மெய்யல்ல - பொய். பொய்யாமொழியால் - மெய்யாகிய வேதவாக்குகளால். ஐயா :- `வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே` (திருவா. சிவபுரா. அடி. 35). ஐயுறவு - சந்தேகம். அழகு - சிவப்பொலிவு. இம்மை மறுமைக்கான அழகுகளும் கொள்ளலாம். சொல் + து = சோறு. சொல் - நெல். `சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந்தீன்று மேலலார் செல்வமே போல் தலைநிறுவித்தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே` என்னும் (சிந்தாமணி .53) செய்யுளில், சொல் என்றது நெல் என்று நச்சினார்க்கினியர் எழுதிய பொருளையும் அறிக. சோறு என்பதன் பொருள் சொல்லால் ஆனது என்பதாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன்
பொறிகொ ளரவம் பூண்டா னாண்ட புத்தூர்மேல்
செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல்சேர்ந் தன்போ டின்ப மடைவாரே.

பொழிப்புரை :

தேன் மணம் கமழும் அழகிய காழிநகரில் தோன்றிய ஞானசம்பந்தன், புள்ளிகளைக்கொண்ட பாம்பினைப் பூண்ட சிவபிரான் ஆட்சிபுரியும் புத்தூர்மேல் வளமை செறிந்த தமிழால் செய்த இம்மாலையைச் செப்பவல்லவர்கள் அறவடிவினனான சிவபிரான் திருவடிகளை அடைந்து அன்பும் இன்பமும் அடைவார்கள்.

குறிப்புரை :

நறவம் - தேன், மணம். பொறி - புள்ளிகள். பூண்டான் - பூண்ட சிவபிரான். செறி - சொல்லும் பொருளும் செறிந்த. வண்தமிழ் செய்மாலை - வளவிய தமிழாற்செய்த இப்பாமாலையை, அறவன் - `அறவாழியந்தணன்` `அறத்தானை அறவோனை` (தி .6 ப .80 பா .7). `தருமா போற்றி` (தி .6 ப .5 பா .10). `தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று ... நலம் கொடுக்கும் நம்பி`, `தயா மூலதன்மவழி எனக்கு நல்கி` (தி .6 ப .20 பா .6). அன்போடு இன்பம் - அன்பும் இன்பும்: `அன்பெனும் பாசம் வைத்தார்` (தி .4 ப .30 பா .3). `அன்பலால் பொருளும் இல்லை` (தி .4 ப .40 பா .6). `அன்பினில் விளைந்த ஆரமுது` `அன்பினால் இன்பம் ஆர்வர்` `இன்ப அன்பு`.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றே.

பொழிப்புரை :

அழிவற்ற முனிவர்கள், தேவனே! பெரியோனே! சிறியோமாகிய எங்கள் பிழையைப் பொறுத்தருளுவாயாக. அடியவர் துன்புற நேரின், ஆ! ஆ! எனக்கூறி இரங்கி அவர்கட்கு அருள்புரிபவனே! ஒழியாது கடல் பெருகி உலகைக் கொள்ள முற்பட்டபோது உயர்ந்தவனே! என்று ஏத்தி வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.

குறிப்புரை :

தேவா! பெரியோனே! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! அடியார் தங்கட்கு ஆ! ஆ! என்று அங்கு அருள் செய்வாய்! ஓவா உவரிகொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி வணங்கும் கோயில் முதுகுன்றே என முடிக்க. தேவா - சிவமாந்தன்மைப் பெருவாழ்வினனே. `அயன் திருமால் செல்வமும் ஒன்றோ என்னத் தேவு செய்யும். `எனக் கொண்டு கூட்டி, தேவு என்பதற்கு ஆசிரியர் மாதவச் சிவஞானயோகிகள் `சிவமாந்தன்மைப் பெருவாழ்வு` எனப்பொருள் உரைத்தருளியதறிக. சிறியோம் என்று மூவாமுனிவர்கள் சொல்லிக் கொள்வாராயின், அடியோம் அதனினும் இழிந்த சொல் பெற வழியில்லை. `நின்னையான் அகன்று ஆற்றுவனோ` (திருக்கோவையார் . 12.) என்புழி, அதன் உரையாசிரியர் கூறிய கருத்து ஈண்டுச் சிறுமை பெருமைகட்குங் கொள்க. ஆவா என்று:- `ஆவா என அரக்கன் அலற அடர்த்திட்டுத், தேவா என அருளார் செல்வம் கொடுத்திட்ட கோவே` (தி.1 ப.89 பா.8)`ஆவா` என்றதன் பின், `என்` எனும் பகுதியடியாத் தோன்றிய வினைச்சொல் வருதல் உண்டு. `ஆவா என்று எனக்கு அருளாய்` என்ற பொருளது கொம்பொடிந்து பிழைத்தது (திருவாசகம் போற்றித் திருவகவல், 99)`ஆஆ செத்தேன்` (தி.1, 3:165)என்பது போலும் இடத்தில் அவ்வினைச் சொல் தொடர்தல் வேண்டா, `ஆவா என்ன ஆசைப்பட்டேன்` (திருவாசகம்-420)`ஆவா என்ற நீர்மையெல்லாம்` (தி.1.3.442) `ஆவா என்றருளிச் செடிசேருடலைச் சிதையாதது எத்துக்கு எங்கள் சிவலோகா` (தி.1.3.497) `ஆவா என்னப்பட்டு` (தி.1.3.605) `ஆவ என்றருளி` (தி.1.3.407), ஓவா உவரி - ஒழியாத கடல். தலவரலாறு காண்க. மூவா - மூத்தலில்லாத, (அழியாத என்றவாறு) `மூவாமுதலா` என்றதறிக. `கோயில் முதுகுன்று` என்றதால், மலையே சிவபிரான் என்றுணர்க; திருவண்ணாமலையே சிவபிரானாகும் அச்சிறப்பு இத்தலத்துக்கும் உண்டு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

எந்தை யிவனென் றிரவி முதலா விறைஞ்சுவார்
சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை
மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு
முந்தித் தொழுது வணங்குங் கோயின் முதுகுன்றே.

பொழிப்புரை :

எமக்குத் தந்தையாவான் இவனே என்று, சூரிய பூசையை முதலிற்கொண்டு சிவபூசை செய்து வழிபடும் அடியவர்களின் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு அதன் உள்ளே திகழ்பவனைக் குரங்குகள் கூட்டமாய் மரங்களில் ஏறிப் பல மலர்களைக் கொண்டு முற்பட்டுத் தொழுது வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.

குறிப்புரை :

எந்தை - என் அப்பன், (தந்தை - தன் அப்பன், நுந்தை - நுன் அப்பன் என்பது பழைய வழக்கு). இவன் எந்தை - இவனே (சிவபிரானே) என் அப்பன், என்று இறைஞ்சுவார் சிந்தையுள்ளே திகழ்வானை மந்தி மலர் கொண்டு வணங்குங் கோயில் என்க. கிரியா விதிப்படி சிவபூஜை செய்வோர் முதலில் சூரிய பூஜை செய்வாராதலின் `இரவிமுதலா இறைஞ்சுவார்` என்றார். இறைஞ்சுவார் - வினையாலணையும் பெயர். இரவி - சூரியன். திகழ்வான் - `ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி`. மந்தி - குரங்கு. ஈண்டு இனத்தைக் குறித்தது. குரங்குகளும் மலரினம் பல கொண்டு மக்கள் தொழுவதற்கு முந்தி வழிபடும் சிறப்பு உணர்த்தப்பட்டது. இது சிவபூஜை செய்யாத மாக்களை நாணுறுத்தும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரம்
தேடு மடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப்
பாடுங் குயிலி னயலே கிள்ளை பயின்றேத்த
மூடுஞ் சோலை முகிறோய் கோயின் முதுகுன்றே.

பொழிப்புரை :

மிகுதியான மலர்களையும் தண்ணீரையும் கொண்டு எப்பொழுதும் பூசித்துத் தேடும் அடியவர் சிந்தையுள்ளே விளங்கும் இறைவனை, பாடும் குயில்களும் அயலே கிள்ளைகளும் பழகி ஏத்தச் சோலைகளும் முகில்களும் தோய்ந்து மூடும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.

குறிப்புரை :

நீடு - மிகுதி. நிரந்தரம் - எப்பொழுதும். தேடும் - ஆராயும். \\\\\\\"தேடிக்கண்டு கொண்டேன்\\\\\\\" (தி.4 ப.20 பா.10) \\\\\\\" திருமாலொடு நான்முகனும் தேடித்தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்\\\\\\\". (தி.4 ப.5 பா.12) \\\\\\\"ஓட்டற்று நின்ற உணர்வு பதி முட்டித் தேட்டற்று நின்ற இடம் சிவமாம் - நாட்டற்று. நாடும் பொருளனைத்தும் நானாவிதமாகத் தேடுமிடமன்று சிவம்\\\\\\\" (திருக்களிற்றுப்படியார். 5.29) கிள்ளை - கிளி. பயின்று - பழகி. `மூடும்...... குன்று` - மலையைச் சோலையும் முகிலும் மூடியிருக்கின்றன. மூடுதல் - பொதுவினை. தோய்தல் - முகிலின் (சிறப்பு) வினை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

தெரிந்த வடியார் சிவனே யென்று திசைதோறும்
குருந்த மலருங் குரவி னலருங் கொண்டேந்தி
இருந்து நின்று மிரவும் பகலு மேத்துஞ்சீர்
முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே.

பொழிப்புரை :

அறிந்த அடியவர்கள் சிவனே என்று திசைதோறும் நின்று குருந்த மலர்களையும் குரா மலர்களையும் கொண்டு பூசித்து ஏத்தி அமர்ந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீரையுடையதும், விட்டு விட்டு மேகங்கள் தவழும் உயர்ந்த கோயிலை உடையதும் முதுகுன்றாகும்.

குறிப்புரை :

தெரிந்த - சிவபிரானே வழிபாட்டிற்குரியவனாகி வீடு பேறளிக்க வல்லவன் என்று ஆராய்ந்து அறிந்த. குருந்தம் என்னும் மரங்களின் மலர்களைக் கொண்டு நின்றும் இருந்தும் இரவும் பகலும் ஏத்தி வழிபடும் சீரையுடைய முதுகுன்று. முரிந்து - மேகங்கள் வளைந்து. மேகம் முரிந்து தவழும் சோலையையுடைய முதுகுன்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தம்
சித்த நைந்து சிவனே யென்பார் சிந்தையார்
கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்து
முத்தா றுடைய முதல்வர் கோயின் முதுகுன்றே.

பொழிப்புரை :

சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே! மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம் சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர் சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களையும் வாரிக் கொணர்ந்து கரையில் சேர்ப்பிக்கும் மணிமுத்தாற்றை உடைய அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும்.

குறிப்புரை :

வைத்தநிதி - சேமவைப்பாகவைக்கப்பெற்ற செல்வம். `வைச்சபொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய அச்சம் ஒழிந்தேன்` (தி.1 ப.80.பா4) `வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச் சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்றிருக்கின்.... அத்தன் அருள் பெறலாம்......நெஞ்சே\\\\\\\\\\\\\\\' (தி.1 ப.94 பா.5) `வைத்த மாடு` (தி.2 ப.72 பா.1 ப.77 பா.7). மணி - மாணிக்கம். வருந்தி - வழிபடாது கழிந்த காலத்தை எண்ணி வருந்தி. கட்டு வீடு இரண்டிலும் உபகரித்துவரும் பரசிவனை மறவாது வழிபட முயன்று. சித்தம் - சிந்திக்கும் மனம். நைந்து - மெலிந்து. சிவனே என்பார் சிந்தையார் - சிவசிவா என்று திரி கரண சுத்தியுடன் அழைத்திடும் அடியவர் சித்தத்தில் வாழ்பவர். சந்து- சந்தனமரம். குரவு - குராமரம். உந்தும் முத்தாறு - தள்ளுகின்ற (மணி) முத்த நதி. மணியாலும் முத்தாலும் கலந்து ஓடும் ஆறு மணிமுத்தாறு. திருமுதுகுன்றத்தருகில் ஓடும் ஆற்றின் பெயர் குறிக்கப்பட்டது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி
நம்பா வென்ன நல்கும் பெருமா னுறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே.

பொழிப்புரை :

மணமுடைய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்த மலர் ஆகியவற்றைத்தூவி நம்பனே! என்று அழைக்க அருள் நல்கும் பெருமான் உறைகோயில், கொம்புகளை உடைய குராமரம், கொகுடி வகை முல்லை ஆகிய மரம் கொடி முதலியவை செறிந்து மொய்ம்புடையவாய் விளங்கும் சோலைகளை உடைய முதுகுன்றாகும்.

குறிப்புரை :

வம்பு - மணம். வன்னி - சிறந்த பத்திரம் ஆகக் கொள்ளப்பட்ட வன்னிமரத்திலை. மத்தம் - ஊமத்தை. தூவி - அருச்சித்து. நம்பா என்று - நம்பனே என்று பூரண பக்தியுடன் அழைக்க. நல்கும் - வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும். கொகுடிமுல்லை என்பது விசேடம். `கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில்` (தி.7 ப.30 பா1) எனத் திருக்கருப்பறியலூர் திருப்பதிகத்தில், நம்பியாரூரார் அருளியதுணர்க. மொய்ம்பு - வன்மை. மரச்செறிவு, உயர்ச்சி, உறுதி முதலியவற்றால் சோலைக்கு வன்மை கொள்ளப்படும். மொய்ப்பு (-நெருக்கம்) என்றதன் மெலித்தல் எனல் சிறந்ததன்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

பொழிப்புரை :

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

குறிப்புரை :

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே.

பொழிப்புரை :

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்.

குறிப்புரை :

வாசம் - மணம். வேந்தை - அரசனாகிய இராவணனை. வேந்து - சொல்லால் அஃறிணை, பொருளால் உயர்திணை ஒற்று முதலியனவும் அன்னவையே. பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த வண்டுமூசிப்பாடுஞ் சோலையை உடைய முதுகுன்று என்க. செய்த அடியார் என்று இறந்த காலத்தாற் கூறியதால், செய்யாதிருந்த காலமும் உண்டோ என்று ஐயுறலாகாது. அடியவர்கள் சிவபெருமானைப் பூசை செய்ததும் எழுந்து நின்று திருமுன் மலர்களைத் தூவி, துதிபாடியேத்தி, வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்து வழிபடும் கடமையுடையவர்கள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

அல்லி மலர்மே லயனு மரவின் அணையானும்
சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.

பொழிப்புரை :

அக இதழ்களை உடைய தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், பாம்பணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் தோத்திரம் சொல்லி வாழ்த்தித் தொடர, அவர்களால் அறிய ஒண்ணாத சோதியாய் நின்றவனது ஊர், முல்லை நிலத்தில் வேடர்கள் கூடிநின்று கும்பிட அதனைக் கண்டு முல்லைக் கொடிகள் அருகில் இருந்து கண்டு, அரும்புகளால் முறுவல் செய்யும் முதுகுன்றாகும்.

குறிப்புரை :

அல்லி - அகவிதழ்கள். அரவின் அணை - பாம்பாகிய படுக்கை. பிரமனும் விண்டுவும் என்றவாறு, சொல்லி - தோத்திரம் புரிந்து. பரவி - வாழ்த்தி. தொழ - வழிபட. ஒண்ணா - ஒன்றாத, பொருந்தப் புண்ணியஞ் செய்யாதவராயினர் என்றவாறு. சோதி - தீப்பிழம்பாய்த் தோற்றிய சிவபிரான் சோதியினது ஊர் முதுகுன்று என்க. முல்லை - (குறிஞ்சியை அடுத்த) முல்லைத்திணை. அயல் - பக்கம். முறுவல் - புன்னகை. முதுகுன்று - குறிஞ்சி, அதனை அடுத்துள்ளமுல்லை, தன்பால் பூத்த முல்லைப் பூக்கள் ஆகிய பற்களைக் காட்டிப் புன்சிரிப்புச் செய்யுந் தோற்றத்தையுடையது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

கருகு முடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க்கயலா னுறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.

பொழிப்புரை :

கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய் விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள் சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின் மேல் நின்று நடனம்புரியும் முதுகுன்றமாகும்.

குறிப்புரை :

கருகும் உடலார் - கரிய உடம்பினர், `காரமண் கலிங்கத்துவராடையர்`(தி.1 ப.54 பா.10) கடு - கடுக்காய். உருகு சிந்தை இல்லார் - இரங்கும் உள்ளம் வாய்க்காதவர், வன்னெஞ்சரென்றபடி.(அஃது) இல்லார்க்கு அயலான் என்றது அக்கனியும் மனம் இல்லாத சமணர் கொள்கைகளுக்கு எட்டாமல் வேறாய் வேதாகமக் கொள்கைக்கு எட்டுமவன் பரமேச்சுவரன் என்றவாறு. திருகல் - கோணல். வேய்கள் - மூங்கில்கள். முருகு - அகில் மரம். பணை - கிளை. சிறிய மந்திகள் அகில் மரக்கிளை மேலிருந்து சிறிது வளைந்த வேய்களில் தாவிக்குதித்து ஆடும் என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

அறையார் கடல்சூ ழந்தண் காழிச் சம்பந்தன்
முறையான் முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்
பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அழகும் தண்மையும் வாய்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் முனிவர்கள் முறையால் வணங்கும் திருமுதுகுன்றத்துக் கோயிலை நிறைவாகப் பாடிய இப்பனுவலைக் கூடிப்பாட வல்லவர்கள் பிறை பொருந்திய சடையினை உடைய எம்பெருமானின் திருவடிகளைப் பிரியார்.

குறிப்புரை :

அறை - முழக்கம். அம்தண் காழி - அழகும் குளிர்ச்சியுமுடைய சீகாழி. முறையான் - வேதாகம முறைப்படி. குறையாப்பனுவல் - நிறைவுறப் பாடிய இத்திருப்பதிகத்தை கூடிப்பாட வல்லவர்கள் சந்திரசேகரனாகிய எம்பெருமானுடைய திருவடி நிழலைப் பிரியாதிருந்து பேரின்பம் நுகர்வர் என்றவாறு, அப்பேரின்பமே கொடுத்தலால், உலகின்பம் வேண்டுவார்க்கும் அதைக் கொடுத்தல் இப்பனுவலுக்கு மிக எளிதின் இயலுவதொன்று எனக் கொள்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும்
மறையு நவின்றிலர் போலு மாசுண மார்த்திலர் போலும்
பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும்
பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிரமபுரம் அமர்ந்த பெருமான் சொரூபநிலையில் எல்லாம் அற்றவராக இருப்பினும், தடத்த நிலையில் கறை பொருந்திய வேலை உடையவர். கபாலம் தரித்தவர். வேதங்களை அருளியவர். பாம்புகளை இடையில் கட்டியவர் உடுக்கைப்பறை ஏந்திய கரத்தினர். கயிற்றைக்கையில் பிடித்தவர். பிறையணிந்த சடைமுடியினர். போலும் என்பதனை வினாப்பொருளதாகக் கொண்டு இங்குக் கூறிய செய்திகள்யாவும் உறுதிப்படுமாற்றை உணரலாம்.

குறிப்புரை :

கறை - குருதிபட்டுலர்ந்த கறுப்பு. வேல்; பகைவர் உடம்பிற்பாய்ந்து உற்ற ரத்தம் உலர்ந்து கறுப்பாகும், வேலுக்குச் சாதியடை. கபாலம் - பிரமகபாலம். தரித்திலர் - தாங்கிலர். மறை - வேதம். மாசுணம் - பாம்பு. பறை - உடுக்கை. (டமருகம்). பாசம் - கயிறு. முதற் பத்துப் பாக்களிலும் வரும் இலர்போலும் என்பது ஈற்றுப்பாட்டில் `அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகை வகையாலே ... நவின்றன `என்ற கருத்திற்கேற்றவாறு பொருள் கொளற்பாலது பரமசிவன் உண்மை (சொரூபநிலை) யில் இவை ஒன்றும் இல்லாத சச்சிதாநந்த சொரூபியாதலின் `செய்யாதன` என்று எதிர்மறையில் கூறப்பட்டன. தடத்த நிலையாகிய பொதுவில், உயிர்களுக்கு ஐந்தொழிலும், அருட்டொழிலேயாகச் செய்யும் பொருட்டு, இவையெல்லாம் இறைவனுக்கு உள்ளன ஆதலின் `இலர்` என உடையான் வினையாக்கியும் `போலும்` என ஐயப்பொருட்டாக்கியும் உரைத்தருளினார். `இலர் போலும்` என்பது உள்ளவர் என்னும் குறிப்புணர்த்துவது, இஃது இன்றும் உலக வழக்கில் இருக்கின்றது. செல்வரை, `வறியர்போலும்` எனக் குறிப்புப் பொருள் உணர்த்தக் கூறுதல் முதலியன `வேலிலர்` `தரித்திலர்` சடைக்கிலர்`என்ற மூன்றுவகை வாய்பாட்டில் அடங்குமாறும் அறிக. சிவபிரான் செய்தனவாக உள்ள அத்தனையும் உண்மை ஞானம் பெற்றார்க்குச் செய்யாதனவாய்த் தோற்றும். அவற்றைச் செய்தனவாகக் கொண்டு வழிபடுவார்க்கே உண்மை ஞானம் உண்டாகும். ஆதலின் அவற்றைப் பொய்யெனலாகாது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

கூரம் பதுவிலர் போலுங் கொக்கி னிறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலு மாமை யணிந்திலர் போலுந்
தாருஞ் சடைக்கிலர் போலுஞ் சண்டிக் கருளிலர் போலும்
பேரும் பலவிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிரமபுரம் அமர்ந்த பெருமான் கூரிய அம்பினை உடையவர். கொக்கின் இறகை அணிந்தவர். ஆரங்கள் பூண்டவர். ஆமையோட்டைத் தரித்தவர். சடைமுடியில் மாலை அணிந்தவர். சண்டேசுரருக்கு அருள்புரிந்தவர். பலபெயர்களை உடையவர்.

குறிப்புரை :

கூர் அம்பு - கூரியபாணம். கொக்கினது இறகு. ஆரம் - மணிமாலை. ஆமை - `முற்றலாமை` (தி .1 ப .1 பா .2) தார் - கொன்றை) மாலை. சண்டி - சண்டேசுரர். பேர் - திருநாமம்; பெயர் என்பதன் மரூஉவாகும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங்
கத்தி வருங்கடுங் காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்
மெய்த்த நயன மிடந்தார்க் காழி யளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிரமபுரம் அமர்ந்த பெருமான், சித்தர் வடிவம் போன்ற உருவினர், பலதேசங்களுக்கும் சென்று திரிந்தவர், சத்தமிட்டு வந்த காளியின் கோபாவேசத்தைத் தவிர்த்தவர், தன் உடம்பிலுள்ள கண்களில் ஒன்றைப் பெயர்த்தணிவித்த திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். பித்தர் வடிவம் போன்ற வடிவினர்.

குறிப்புரை :

சித்தவடிவு - சித்தருருவம் போலும் உருவம். சித்துக்களில் வல்லவரென்பதை உணர்த்தும் திருமேனி. தேசம் - நாடு. கதங்கள் - கோப (?வேச) ம். தவிர்த்திலர் - நீக்கிலர். மெய்த்த - மெய்யில் (உடம்பி) லுள்ள. எய்த்த எனப் பிரித்துப் பொருள் கொள்ளல் சிறந்தது. நயனம் - கண். இடந்தார்க்கு - போர்த் (து ஆயிரம் பூவென நிறைத்) த திருமாலுக்கு. ஆழி -சக்கராயுதம். பித்தர் வடிவுபோலும் வடிவாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நச்சர வாட்டிலர் போலு நஞ்ச மிடற்றிலர் போலுங்
கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலு
மொய்ச்சவன் பேயிலர் போலு முப்புர மெய்திலர் போலும்
பிச்சை யிரந்திலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிரமபுரம் அமர்ந்த பெருமான் நஞ்சினை உடைய பாம்பைப் பிடித்து ஆடச்செய்பவர். நஞ்சினை மிடற்றில் உடையவர். பாம்பைக் கச்சாக அணிந்தவர். கங்கையை முடியில் தரித்தவர். சூழ்ந்துள்ள வலியபேய்க் கணங்களை உடையவர். முப்புரங்களை எய்து எரித்தவர். பிச்சை இரப்பவர்.

குறிப்புரை :

நச்சு அரவு - நஞ்சமுடைய பாம்பு (நஞ்சு - நச்சு, விஷம்). கச்சு - அரையிற்கட்டும் கச்சு, மொய்ச்ச - மொய்த்த. வன்பேய் - வலியபேய்கள். பிச்சை இரத்தல் - பிச்சையிடுக என்று யாசித்தல்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய யானை யுரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலு மொள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பீடுமிகுந்த செல்வப் பிரமபுரம் அமர்ந்த பெருமான் ஒருசெவியில் தோடணிந்தவர். கையில்சூலம் பிடித்தவர். அசைகின்ற நீண்ட கையை உடைய யானையை உரித்தவர். தலையோட்டைக் கையில் ஏந்தியவர். ஒளிபொருந்திய அழலைக் கையில் உடையவர்.

குறிப்புரை :

செவிக்குத் தோடு இலர்போலும் என்க. ஆடுகை. தடக்கை. துதிக்கை ஆடுதலும் பரியதாதலும் வெளிப்படை. வலிய ஆனையை உரித்தல் செய்யாதவர் போலும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும்
அண்ண லயன்றலை வீழ வன்று மறுத்திலர் போலும்
வண்ண வெலும்பினொ டக்கு வடங்க டரித்திலர் போலும்
பெண்ணின மொய்த்தெழு செல்வப் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

மகளிர் கூட்டம் சூழ்ந்து போற்றும் பிரமபுரம் அமர்ந்த பெருமான், தேவர்களால் அறியப்பெறாதவர். தக்கன் செய்த வேள்வியை அழித்தவர். தலைமைத் தன்மையுடைய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்தவர். அழகிய எலும்புகளோடு உருத்திராக்க வடங்கள் தரித்தவர்.

குறிப்புரை :

விண்ணவர் - விண்ணிடத்திலுள்ள தேவர். வேள்வி - தக்கன் யாகம். அண்ணல் - படைத்தற் கடவுள்; பெருமையுமாம். அயன் - பிரமன். வண்ணம் - அழகு. அக்கு - உருத்திராக்கம். பெண்ணினம் - மகளிர்கூட்டம். ஈண்டுப் பெண்ணென்னும் அஃறிணைப் பெயர் பெண்டிர் என்னும் உயர்திணைப் பொருட்டாய் நின்றது. பெண்கள், ஆண்கள் என்னும் பிழை வழக்குப் பயிற்சியை நோக்குக. `சோர்விலாள் பெண்` என்ற வள்ளுவர் காலத்துக்கு முன்னேயே இவ்வாறு வழங்கியது போலும். மொய்த்து - (கூடி) நெருங்கி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங்
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந்
துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிற்காலத்தும் பெருமைகள் பெருகும் பிரமபுரம் அமர்ந்த பெருமான், பன்றியின் கொம்பைத் தரித்தவர். பார்த்தனுக்குப் பாசுபதம் அளித்து அருள் புரிந்தவர். சினந்துவந்த காலன் வீழுமாறு கால்கொடு பாய்ந்தவர். பிணங்கள் செறிந்த சுடுகாட்டில் ஆடித் திளைப்பவர்.

குறிப்புரை :

பன்றியின் கொம்பு - ஏனக்கொம்பு. `ஏனமுளைக் கொம்பு` (தி .1 ப .1 பா .2). பார்த்தற்கு - அருச்சுனனுக்கு. கன்றிய - கோபித்த. காலன் - எமன். காலனைக் கால்கொடுபாய்ந்திலர், வீழப் பாய்ந்திலர் என்க. துன்று - நெருங்கிய. துதைந்திலர் -நெருங்கிலர். பின்றி - பிந்தி. `பின்றா நேசத்தால்` (திருவாசகம்). பீடு - பெருமை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்
அரச னிலங்கையர் கோனை யன்று மடர்த்திலர் போலும்
புரைசெய் புனத்திள மானும் புலியி னதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலர்கள் செறிந்த பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்த பெருமான், கையில் மழுவைத் தரித்தவர். வீழ்ந்து பட்ட பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தியவர். இலங்கையர் தலைவனாக விளங்கிய இராவணனை அக்காலத்தே அடர்த்தவர். பரண் அமைத்துக் காக்கும் புனத்தில் வரும் இளமான் புலி ஆகியவற்றின் தோல்களை உடுத்தவர்.

குறிப்புரை :

பரசு - மழு. படுதலை - கபாலம். கோன் - இராவணன். அடர்த்திலர் - தாக்கிலர். புரை - பன்னசாலை. அதள் - தோல். பிரசம் - தேன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

அடிமுடி மாலயன் றேட வன்று மளப்பிலர் போலுங்
கடிமல ரைங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கட லீந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பெண்யானை போன்ற நடையினை உடைய மாதர்கள் பெருகிய பிரமபுரம் அமர்ந்த பெருமான், அன்று திருமால் பிரமர்கள் அடிமுடிதேடி அளக்கலாகாத திருவுருவம் கொண்டவர். மணம் கமழும் மலர்கள் ஐந்தினைக் கணைகளாகக் கொண்ட மன்மதன் எரியுமாறு விழித்தவர். மண்ணுலகில் தந்தையிடம் பால்கேட்ட மலர்போன்ற மென்மையான இளம் பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தவர்.

குறிப்புரை :

கடி - மணம். மலர் ஐங்கணை - ஐந்து பூங்கணை. வேள் - (கரு) வேள்; மன்மதன். கனல - தீப்பொறி பறக்க. பாலன் - உபமன்யு முனிவர். `பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடலீந்த பிரான்`. பிடி - பெண்யானை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவ ரானிழ னால்வர்க் கறங்க ளுரைத்திலர் போலும்
உற்றல ரொன்றிலர் போலு மோடு முடிக்கிலர் போலும்
பெற்றமு மூர்ந்திலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிரமபுரம் அமர்ந்த பெருமான், வெற்றுடலோடும், சீவரம் அணிந்தும் திரியும் சமண புத்தர்கட்குப் புலனாகாதவர். ஆல் நிழற் கீழ்ப்பற்றற்றவர்களாகிய சனகாதிமுனிவர் நால்வர்க்கு அறங்கள் உரைத்தவர். எதனையும் சார்ந்து நில்லாதவர். ஒன்றுமில்லாதாரைப் போலத்தோன்றுபவர். தலையோட்டை முடியில் தரித்தவர். விடை ஊர்ந்துவருபவர்.

குறிப்புரை :

வெறுமை அரைசீவரத்தார் - ஆடையில்லாச்சமணர். சீவரம் - பழுப்பேறிய ஆடை. `துவர் ஊட்டின சீலை` யும் ஆம், `சீவரம் போர்த்தல் மத்திம தேசத்தார் ஆசாரம் அன்றோ மூத்தோர் முன் இளையார் போர்வை வாங்குவது போல` (நீலகேசி 3:13, உரை). அற்றவர் - பற்று ஒன்றுமில்லாதவர். `அற்றவர்க்கு அற்ற சிவன்` பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே` (திருவா -514). நால்வர் - சனகாதியர். அலர் - பழி. முடிக்கு - சடைமுடிக்கு. ஓடு - தலையோடு. `தலைமாலை தலைக்கணிந்து`. பெற்றம் - எருது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

பெண்ணுரு வாணுரு வல்லாப் பிரம புரநகர் மேய
அண்ணல்செய் யாதன வெல்லா மறிந்து வகைவகை யாலே
நண்ணிய ஞானசம் பந்த னவின்றன பத்தும்வல் லார்கள்
விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே.

பொழிப்புரை :

பெண்ணுருவமும் ஆணுருவமும் அல்லாத (மாதொருபாகராக) பிரமபுரநகரில் உகந்தருளிய தலைமையை உடைய சிவபிரான் செய்யாத செயல்களைச் செய்தனபோலக் கூறும் இயல்புகளையெல்லாம் அறிந்து வகை வகையாக விரும்பிய ஞானசம்பந்தன் நவின்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் விண்ணவர்களோடு இனிதாக வீற்றிருப்பர்.

குறிப்புரை :

`பெண்ணுரு ...... அண்ணல்` பெண்ணுருவமும் ஆணுருவமும் அல்லாத அண்ணல். `ஆணலார் பெண்ணும் அல்லார் அதிகை வீரட்டனாரே` (தி .4 ப .27 பா .8). `பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை` (தி .6 ப .45 பா .9). பிரமபுரநகர் மேய அண்ணல் - பிரமபுரத்தில் எழுந்தருளிய தலைவர். `செய்யாதன எல்லாம்` என்றதால் முற்பாக்களில் உரைத்தவை சிவபிரான் செய்யாதவை என்றும்; பொருள்சேர் புகழ் என்றும் உணர்த்தினார். வல்லவர்களாகிய அவர் வீற்றிருப்பார் என்று இயைக்க. நண்ணிய - விரும்பிய.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

குறிப்புரை :

திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும். வானவர் - சிவலோகத்திலுள்ளவர். சிவமானவர். மேலது - திருமேனியில் பூசப்பட்டது. சுந்தரம் - அழகு; சிவப்பொலிவு. துதிக்கப்படுவது என்பதற்கு இத்திருப்பதிகமே சான்று. தந்திரம் - ஆகமம். சிவாகமத்தில் சிறப்பாகச் சொல்லப்படுவது. சமயத்திலுள்ளது - சிவசமயத்தில் அழியாத பொருளாவது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள். பாசம் - பசுவின் கண் இருந்து பதியால் நீறாக்கப்பட்ட உண்மையை உணர்த்துவது. உள்ளது - சிவம். `ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்` - ( திருக்குறள்) திருநீறே சிவம். துவர் - பவளம். பங்கன் - பாகன். திரு ஆலவாயான் - மதுரைத்தலத்தில் திருவாலவாய்க்கோயிலுள் எழுந்தருளியிருப்பவன். திருவாலவாயான் திருநீறு என்பது ஆறன்தொகையாதல் அறிவார்க்குத் திருநீறே சிவகதி தரும் என்னும் உண்மை இனிது புலப்படும். `கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை ... பூசி மகிழ்வாரே யாமாகில் ... சாரும் சிவகதி ...` (திருமந்திரம்)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.

குறிப்புரை :

திருநீறு வேதத்தில் சிறக்க எடுத்தோதப் பெற்றது. கொடிய பிறவித்துயரம் முதலியவற்றைத் தீர்ப்பது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலிய புன்மைகளை நீக்குவது. ஆசிரியர் மாணாக்கர்க்கு ஓதத்தகும் அளவு பெருமை உடையது. ஓதும்போது அணியத் தகுதியுடையது. உண்மையில் நிலைபெற்றிருப்பது. உண்மை - மெய்ப்பொருளுமாம். சீதம் - குளிர்ச்சி. புனல் - நீர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.

குறிப்புரை :

வீட்டை அளிப்பது; எல்லாச் செல்வங்களையும் வெறுத்தவர் முனிவர். முனிவு - வெறுப்பு; கோபம். முனிவர் (முநிவர்) - மனனசீலர் எனலுமாம். அணிவது - அழகு செய்வது, பூண்பதுமாம். சத்திய - எப்பொழுதும் உள்ளது. தக்கோர் - சிவனடியார். பத்தி - திருவடிக்கன்பு. பரவ - வாழ்த்த. சித்தி - எண்வகைச் சித்தி. அணிமா முதலியன.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.

குறிப்புரை :

பால் வெண்ணீறாய், தன்னை அணிந்தோரைப் பிறர் கண்ணுக்கு அழகராயளித்துக் கருத்திற்கு இனிமை விளைப்பது. கவினைத் தருவது - அணிவோர்க்குச் சிவப்பொலிவு தருவது. பேணி - விரும்பி. பெருமை - திருவருட்சிறப்பு. மாணம் - இறப்பு. நீள் என்னும் பகுதி அம் என்னும் விகுதியோடு சேர்ந்து நீளம் என்று ஆகின்றது. நிகள் என்பதன் முதல் நீட்சியே நீள் என்பது. துகள் தூள் என்பது போல. அதுபோல; மாள் + அம். மாளம். ளகரம் ணகரமாதல் இயல்பு; `நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான்` (தி .1 ப .1 பா .9) என்பதில் னகரம் ணகரமானதைக் காண்க. பெள் - பெண். எள் - எண். தகைவது - தடுப்பது. மதி - இயல்பான அறிவு. `மதிநுட்பம் நூலோடு உடையார்` (திருக்குறள் 636). சேணம் - உயர்வு. பாசத்தார்க்குத் தூரத்ததாகிய வீடுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.

குறிப்புரை :

பூசப்பூச இனிமையாக்குவது, சிவபுண்ணியத்தை வளர்ப்பது. பெருமையைப் பேசப் பேச இனிமை உண்டாக்குவது. பெரிய தவத்தோரெல்லார்க்கும் பற்றொழிப்பது. முடிவான பேரின்பநிலையைத் தருவது. அந்தம் - அழகுமாம். தேசங்களெல்லாம் புகழப் பெறுவது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.

குறிப்புரை :

செல்வமாவது துன்பம் போக்குவது, வருத்தம் ஒழிப்பது. வானம் - துறக்கம்; சிவலோகம். அளிப்பது - கொடுப்பது. சிறப்பாகச் சைவ சமயத்தார்க்கும் பொதுவாக எல்லாச் சமயத்தார்க்கும் பொருத்தமாயிருப்பது திருநீறு. சிவபுண்ணியத்தை உடையவரும் பசு புண்ணியத்தை உடையவரும் ஆகிய சைவர் பூசுகின்ற வெண்ணீறு. திருத்தகு மாளிகை - அழகு தக்க மாளிகைகள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.

பொழிப்புரை :

கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.

குறிப்புரை :

எயில் - திரிபுரம். அட்டது - எரித்தது. அது என்பது பகுதிப்பொருள் விகுதி. இருமை - இம்மை மறுமை. பயிலப்படுவது - திருநீற்றை அணிந்து அணிந்து பழகினாலன்றி அதன் பயனை எய்துவதரிது. பாக்கியம் - செல்வம், அருள். துயிலை - கேவலத்தையும் சகலத்தையும். சுத்தமதாவது - சுத்தாவத்தையாய் விளங்குவது. அயில் - கூர்மை. பொலிதரு - விளக்கம் செய்கின்ற.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.

பொழிப்புரை :

பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.

குறிப்புரை :

இராவணன் மேலது - திரிலோக சஞ்சாரியாகிய இராவணன் தனக்கு வாய்த்த செல்வப்பெருக்கத்தை மதித்துத் திருநீற்றையவமதிக்காமல் அணிந்து சிவபிரானருளைப் பெற்றான் என்னும் உண்மை எல்லா நன்மக்களாலும் எண்ணத்தக்கது. திருநீறே வீடு பேறளிக்கும் என்னும் உண்மை எண்ணத்தக்கது. பராவண்ணம் ஆவது - பராசக்தி சொரூபமானது. அதனால் உயிர்களின் பாவம் போக்குவதாகின்றது. தராவண்ணம் - தத்துவம்; மெய்ப்பொருள். அரா - பாம்பு. வணங்கும் - வளையும்; தாழும். அணங்கும் எனின் அழகுசெய்யும் என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.

பொழிப்புரை :

நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.

குறிப்புரை :

மேல் - விண்ணுலகம். உறை - வாழ்கின்ற தேவர்கள். தங்கள் மெய்யது - தேவர்களுடைய உடம்பிற் பூசப்பட்டது. பொடி - நீறு. ஒரு பொருட் பல்பெயர். உடம்பு இடர் ஏலத்தீர்க்கும் இன்பம் - உடம்பெடுக்கும் துன்பத்தைப் பொருந்தப் போக்கும் இன்பம். உடம்பிலுள்ள இடருமாம். ஆலமது - நஞ்சு. மிடறு - திருக்கழுத்து.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.

பொழிப்புரை :

மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.

குறிப்புரை :

குண்டிகை - கமண்டலத்தை ஏந்திய. கையர்கள் - கீழ் மக்கள். கண் திகைப்பிப்பது - கண் திகைக்கச்செய்வது. கருத - தியானிக்க. எண் திசைப்பட்ட பொருளார் - எட்டுத்திசையிலும் பொருந்திய சிவமாகிய மெய்ப்பொருளை அடைந்தவரும், விரும்பினவரும், வழிபடுபவருமாகிய சைவர். அவர் ஏத்தும் தன்மையுடையது. அண்டத்தவர் - மேலுலகத்தவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

பொழிப்புரை :

ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.

குறிப்புரை :

ஆற்றல் - வலிமை. அடல் - கொலை. இரண்டும் உடையது விடை. ஆலவாயான் திருநீற்றைப் போற்றி - முதற் பத்துப் பாக்களால் திருவாலவாய்ச் சிவனுடைய திருநீற்றைத் துதித்து. புகலி - சீகாழி. பூசுரன் - பூமியிலுள்ள தேவர். தேற்றி - சைவத்தின் மாண்பைத் தெரிவித்து. தென்னன் - கூன்பாண்டியன். தீ பிணி - தீமையை விளைவிக்கும் நோய்கள். வல்லவர் எழுவாய்; நல்லவர் பயனிலை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.

பொழிப்புரை :

திருப்பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர், தாம் கொண்டருளிய பேருருவில் மண்விண் ஆகிய உலகங்களை ஒவ்வொரு பாகமாகக் கொண்டவர். திருமாலை ஒருபாகமாக ஏற்றவர். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர். வேதங்களை உடையவர். விமலர். உமையம்மைக்குத் தம்முடலில் ஒருபாகத்தை அளித்ததால் கண்களிலும் ஒருபாதியையே பெற்றவர். கங்கையைச் சடையில் கரந்தவர்.

குறிப்புரை :

சிவபெருமானது விசுவரூபத்தில் ஒவ்வொரு பாகம் மண்ணும், அம்மண்ணைப் படைக்கும் பிரமனும், காக்கும் மாலும், விண்ணும், கண்ணும், பெண்ணும் உடையவர். வேதத்தை (ச் செய்யுட் கிழமையாக) உடைய நிமலர். கங்கையைச் சடையில் ஒளித்தவர். உடையாரும், விமலரும், கரந்தாருமாகிய சிவபெருமான் புலியூர் பிரியார் என்க. உடையார் எழுவாய், பிரியார் பயனிலை. பெரும்புலியூர் செயப்படுபொருள். மேலும் இங்ஙனமே கொள்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு கங்கைக்
கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 

பொழிப்புரை :

கடலில் பொருந்திய பவளம் போன்ற தூயனவாகிய நீண்ட தோள்களையும், மின்னுகின்ற ஒளி பொருந்திய கொடிபோன்ற மேனியையும் உடைய கங்கையைப், பிற நதிக்கன்னியரின் நீரோடு, கலை வளரும் மாலைபோன்ற பிறைமதியைப் புனைந்த பின்னிய சடையை உடைய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

துன்னு - நெருங்கிய. பவளம் சேர் தோள்கள் - கடலிலுள்ள பவளத்தை ஒத்த தோள்கள். தூயன தோள்கள். நீண்ட தோள்கள். திண்மை - உறுதி. சுடர்க்கொடி போலும் மேனியினாள் - சோதிக்கொடிபோன்ற திருமேனியுடையவள். கங்கைக் கன்னிகள் புனையோடு - கங்கை நதியின் கிளைகளின் நீரொடு. நதிகளைப் பெண்பாலாக் கொள்ளுதல் மரபு. நதிபதி எனக் கடலைக் கொள்ளுதலால் கன்னி என்பது பெண்ணென்னும் பொருட்டு. புனை - நீர். `அனைவரு கானகத்து அமுதளாவிய புனை வர உயிர் வரும் உலவை\\\\\\\' (கம்பர். அகத்தியப் -4) கலைமதிமாலை - பதினாறு கலைகளுடைய திங்கட் கண்ணி, சிவபெருமான் சடைமேலுள்ளது பிறையேயாயினும் மதிக்குரிய அடை கொடுத்துக் கூறுதல் உண்டு. சாதியடை. திருமுறையுள் ஆண்டாண்டுக் காண்க. புனையோடுமாலை கலந்த சடை. பின்னு சடை. சடையையுடைய பெருமானார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக வேந்தித்
துள்ள மிதித்துநின் றாடுந் தொழில ரெழின்மிகு செல்வர்
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேன்மிளிர் கின்ற
பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.

பொழிப்புரை :

கள்ளங்கருதிய பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தித்துள்ளி மிதித்து நின்றாடும் தொழிலராகிய அழகிய செல்வரும், கங்கை சிரிக்கும் தலைமாலை ஆகியன மிளிர்கின்ற விரிசடைமேல் பிள்ளைமதியையும் புனைந்துள்ளவரும் ஆகிய பெருமான் பெரும் புலியூரில் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

கள்ள மதித்த கபாலம் - கள்ளத்தைக் கருதிய பிரமனது கபாலம். முதல் வினை சினைமேல் ஏற்றப்பட்டது. அதைக் கையில் ஏந்தித் துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலுடையவர் என்று சிவபெருமான் நடனமாடுங்காலத்துக் கபாலத்தைத் தாங்கியிருந்த உண்மை கூறப்பட்டது. எழில்மிகு செல்வர் - சென்று அடையாமையாகிய அழகுமிக்க செல்வத்தை உடையவர். வெள்ளம் - கங்கை. நகு தலை மாலை - சிரிக்கின்ற தலைகளின் வரிசை. பிள்ளைமதி - இளம் பிறை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

ஆட லிலைய முடையார் அருமறை தாங்கியா றங்கம்
பாட லிலைய முடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்
ஊட லிலைய முடையார் யோகெனும் பேரொளி தாங்கிப்
பீட லிலைய முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. 

பொழிப்புரை :

நடனலயம் உடையவர். அரிய நான்கு மறைகளைத் தாங்கிப் போற்றும் ஆறு அங்கங்களாகிய இலயம் உள்ள பாடல்களைப் பாடுபவர். பன்மையும் ஒருமையுமாகிய கோலத்தைச் செய்து, ஐம்புலனடக்கம் இன்மையால் நாம் ஐயுறுமாறு இருப்பவர். யோகம் என்னும் ஒளிநெறியை மேற்கொண்டு பெருமை பொருந்திய நள்இரவில் நடனம் புரிபவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

ஆடல் இலையம் - நடனலயம். ஆறுஅங்கம் - சிக்கை, கற்ப சூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்பன. பாடல் இலயம் - சங்கீதலயம். பன்மை ஒருமை செய்து - அநேகம் ஏகம் என்னும் நிலைமைகளைத் தோற்றி. அஞ்சும் - ஐம்பொறிகளும். ஊடலில் - ஊடுதலாலே. (ஐம்பொறி அடக்கம் இல்லாமையால்) ஐயம் உடையார் - மெய்ப்பொருள் நிச்சயமின்றி ஐயப்படுதலுக்குரியார். யோகு - யோகம். யோகநெறி; ஒளிநெறியாதலின் யோகெனும் பேரொளி என்றார். பீடு அல் - பெருமையுடைய நள்ளிரவில். இலயமுடையார் - நட்டம் பயிலுதலுடையார். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் ஆற்றல் யோகெனும் பேரொளி தாங்கியிருத்தல் கொண்டே `உறைந்ததோர் ஒளியதாக்கி ஒடுங்கிடின் யோகபூசை\\\\\\\\\\\\\\\' (ஞானபூசாகாரணம்-14) என்பதும், ஞானி யோகி கிரியாவான் முறையே அறிவிற்கறிவாகவும் அறிவில் ஒளியாகவும் அறிவில் மூர்த்தியாகவும் தியானிப்பர் என்பதும், `மூன்றும் பெறின்புறப் பூசையாமே\\\\\\\\\\\\\\\' (ஞான-14) என்பதும் `மூன்றும் உணர்வும் ஒளியும் மூர்த்தியும்\\\\\\\\\\\\\\\' என்பதும் தருமையாதீனத்து முனிவருள் ஒருவராகிய ஸ்ரீமத்சட்டைநாதத்தம்பிரான் சுவாமிகள் குறிப்புரையால் உணரத்தக்கன. இதனால் யோகியர் யோகெனும் பேரொளி தாங்கும் உண்மை புலப்படும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக்
காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த
நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த
பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.

பொழிப்புரை :

பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர், ஒரு காதில் தோட்டையும் ஒருகாதில் குழையையும் உடையவர். சாம்பலைப் பூசியவர். அனலில் நின்று ஆடுதற்கு இடுகாட்டை இடமாக உடையவர். எரிவீசும் கையுடையார். கடலால் சூழப்பட்ட நாடுகள் அனைத்தையும் உடையவர். பொருள் இன்பம் ஆகிய நல்லனவற்றை நாள்தோறும் விரும்பிய பெருமை உடையவர். எல்லோர்க்கும் தலைவராயிருப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகிறார்.

குறிப்புரை :

குழையணிந்ததொரு காதில். தோடணிந்ததொரு காதில். காதில் திருநீறணிதல் உணர்த்தப்பட்டது. காட்டில் தீயில் ஆடுபவர். கையில் எரி ஏந்தியவர். கடல் சூழ்ந்த நாடெல்லாம் உடையவர். பொருள் இன்பம் ஆகிய நல்லவற்றை நாள்தோறும் விரும்பி, அடியார்க்கருளும் பெருமை உடையார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண்
முற்றி தறிதுமென் பார்கண் முதலியர் வேதபு ராணர்
மற்றி தறிதுமென் பார்கண் மனத்திடை யார்பணி செய்யப்
பெற்றி பெரிது முகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே. 

பொழிப்புரை :

கல்வி கற்றதன் பயனை அறிந்து பணி செய்து கடவுளைக் காண்போம் என்பார்க்குக் கண்ணாயிருப்பவர். இதனை முற்றும் அறிவோம் என்பார்க்கு முதல்வராய் இருப்பவர். வேத புராணங்களாய் விளங்குபவர். இதனைப் பின் அறிவோம் என்பார் மனத்தில் இருப்பவர். தொண்டர்களைப் பெரிதும் உகப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

கற்றது உறப் பணி செய்து காண்டும் என்பார் அவர் தம் கண் - கற்றதனாலாய பயன் தம்மைப் பொருந்தத் திருப்பணி செய்து கடவுளைக் காண்போம் என்பார்க்கு அவர் தம் கண்ணாயுள்ளார். முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் - இதனை முற்றும் அறிவோம் என்பவர்களுக்கு முதல்வராயிருப்பவர். வேதபுராணர் - வேதமும் புராணமுமாயிருப்பவர். வேதத்தால் உணர்த்தப்படும் பழையோர். மற்று இது அறிதும் என்பார்கண் மனத்திடையார் - இதைப் பின்னே அறிவோம் என்பாருடைய மனத்தில் இருப்பவர். பணி செய்யப் பெற்றி பெரிதும் உகப்பார் - திருத்தொண்டு செய்துவரின் அத்தொண்டின் தன்மையையும் தொண்டர் தன்மையையும் மிகவிரும்பி அருள் செய்வார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

மறையுடை யாரொலி பாடன் மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழக ரழகர்நஞ் செல்வர்
கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே.

பொழிப்புரை :

வேதம் ஓதுகின்றவர்கள், ஒலிக்கின்ற பாடல்களால் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர், மனக்குறை உடையவர் ஆகியோர் குறைகளைத் தீர்ப்பவர். இளமைத்தன்மையர், அழகர். நம் செல்வராயிருப்பவர். கண்டத்தில் விடக்கறை உடையவர். கங்கையைச் சடையில் கரந்தவர். சென்னியின்மேல் பிறை உடையவர்.

குறிப்புரை :

வேதங்களுடையவரும், ஒலிக்கின்ற பாடல்களாலே அழகிய தாமரை மலர்போலும் சிவந்த திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களும், மனக்குறை உடையவர்களும் ஆகிய எத்திறத்தாருடைய குறைகளையும் தீர்ப்பார். இளைஞர். சொக்கர். நம் செல்வர். நீலகண்டர். கங்கைச் சடையர். சந்திரசேகரர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

உறவியு மின்புறு சீரு மோங்குதல் வீடெளி தாகித்
துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமு மின்பமுந் தோற்றி
மறவியஞ் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும்
பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 

பொழிப்புரை :

உறவும் இன்பமும் ஓங்குமாறு செய்து வீட்டின்பத்தை எளிதாகத்தந்துதுறவுள்ளமும் பற்றுள்ளமும் காட்டித்துன்ப இன்பங்களைத் தந்து மறத்தலுடைய சிந்தனையை மாற்றி மறவாமையுடன் வாழவல்லார்; பிறவியைப் போக்கும் பிரானார் பெரும்புலியூரை பிரியாதுறைகின்றார்.

குறிப்புரை :

உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் - உறவும் இன்பம் மிக்க சிறப்பும் உயர்தல். எளிதாகி - வீடு எளிதாகி. பற்றற்றொழிதல் எளிதாகி. துறவியும் கூட்டமும் காட்டி - முத்தியும் பந்தமும் காட்டி. துன்பமும் இன்பமும் தோற்றி - துக்கமும் சுகமும் ஆக்கி. மறவி அம் சிந்தனை மாற்றி - மறத்தல் உடைய கருத்தை ஒழித்து. வாழவல்லவர் தமக்குப் பிறத்தல் என்றும் இல்லாமல் போக்கும் பிரானார். இத்திருப்பாடல் எல்லாருள்ளத்தும் என்றும் நிற்கத்தக்கது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.

பொழிப்புரை :

புகழுடைய அடியவர்களுக்குப் பெரியோரைப் போல்பவர். சடையில் கங்கையை உடையவர். திருநீறுபூசும் நினைவுடையவர். விரிந்த கொன்றைமாலையைச் சூடியவர். விடையை ஊர்ந்து வருபவர். தலைமைத்தன்மை உடையவர். அழகிய ஆயிரம் பெயருடையவர். பெருமானாக விளங்குபவர். அவ்விறைவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

சீர் - கனம். உடையார் - சுவாமி. அடியார்கள் சேடர் ஒப்பார் - அடியார்களுக்கெல்லாம் பெரியோரைப் போல்வார். சடை சேரும் கங்கை உடையார். திருநீறு பூசும் திருவுள்ளம் உடையார். விரிந்த கொன்றைமாலை அணிந்தவர். எருது ஊர்வார். எவ்வுலகிற்கும் எவ்வுயிர்க்கும் தலைவர். ஐயாயிரம் பேர் உடையார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட்
கருமை யுடையன காட்டி யருள்செயு மாதி முதல்வர்
கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப்
பெருமை யுடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 

பொழிப்புரை :

உரிமையுடைய அடியவர்கட்கும், மனம் பொருந்த நினைப்பவர்கட்கும் காண இயலாதனவற்றைக் காட்டி அருள் செய்யும், ஆதிக்கும் ஆதியாய முதல்வர். கரியதிருமாலும் மணமுடைய தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் காணாப் பெருமையுடைய பெருமான். அவ்விறைவர் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

உரிமை உடைய...முதல்வர் - திருவருள் உரிமை உடைய அடியவர்களின் உள்ளத்தில் மிக நினைக்க வல்லவர்கட்குக் காண்டற்கருமையுடையனவற்றைக் காட்டி அருள் செய்யும் அநாதி முதல்வன். ஆதிமுதல்வன் என்பது ஆதிக்கும் ஆதியாய அநாதி முதல்வரை உணர்த்திற்று. மாயோனும் மலரவனும் காணாத தீப்பிழம்பாகிய பெருமை உடைய பெருமான்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை
நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே. 

பொழிப்புரை :

பிறைவளரும் முடியினை உடைய சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை, தேன் பெருகும் பொழில் சூழ்ந்தகாழிப்பதியில் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய வேதமாக வளரும் இத்தமிழ்மாலையால் பரவவல்லவர்கட்குத் துயர் நீக்கமும் நெஞ்சு வளர் நிறையும் உளவாம். அவர்கள் நீடிய பேரின்ப உலகில் வாழ்வார்கள்.

குறிப்புரை :

பிறை தளர்தலின்றி வளர்ந்து கொண்டேயிருக்கும் சடைமுடியைக் கொண்ட தலையையுடைய பெருமான். நறை - தேன். பொழில் - சோலை. நற்றமிழ் - திருப்பதிகங்கள். மறை வளரும் தமிழ் மாலை - இத்திருப்பதிகம். வல்லவர் எழுவாய். இருப்பார் - பயனிலை. அவர்க்குத் துயர் நீக்கமும், நெஞ்சுவளர் நிறையும் உளவாகும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

வானமர் திங்களு நீரு மருவிய வார்சடை யானைத்
தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக்
கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில்
தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே.

பொழிப்புரை :

வானிற் பொருந்திய திங்களும் கங்கையும் மருவிய நீண்ட சடையை உடையவனும், தேன்பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவனும், தேவர்களால் தொழப்படுபவனும், காடுகளில் பெண்மானைத் தழுவி ஆண்மான்கள் மகிழும் கடம்பூரில் எழுந்தருளிய இயல்பினனும் ஆகிய பெருமான் திருவடிகளைத் தொழின் வீடு எளிதாகும்.

குறிப்புரை :

வான் - ஆகாயத்தில். அமர் - பொருந்திய. திங்களும் - பிறையும். நீரும் - கங்கையும். மருவிய - கலந்த. வார் - நீண்ட. தேவர் தொழப்படுவானை:- `தொழப்படுந் தேவர் தொழப்படுவானைத் தொழுதபின்னைத் தொழப்படுந் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே`(தி .4 ப .112 பா .5). என்றவாறு, தன் அடியாரையும் தேவர் தொழுவர் எனின், தன் (பரமசிவ) னைத் தொழுதலில் ஐய முண்டோ?. கான் - காடு. பிணை - பெண் மான். கலை - ஆண்மான். கடம்பூர் - கடம்பு மரம் உள்ளவூர்; தலவிருட்சம். `கானமரும் பிணை புல்கிக் கலைபயிலுங் கடம்பூர்`. என்றதால் கடப்பங்காடும் ஆகும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

அரவினொ டாமையும் பூண்டு வந்துகில் வேங்கை யதளும்
விரவுந் திருமுடி தன்மேல் வெண்டிங்கள் சூடி விரும்பிப்
பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய வின்ப நமக்கது வாமே.

பொழிப்புரை :

பாம்பு, ஆமையோடு, ஆகியவற்றைப் பூண்டு, அழகிய ஆடையாகப் புலித்தோலை உடுத்து அழகிய முடிமீது பொருந்திய வெண்பிறையைச்சூடிப் பலராலும் விரும்பிப்பரவப் பெறும் சிறந்த கடம்பூரில் எழுந்தருளிய பசிய கண்களை உடைய வெள்ளேற்று அண்ணலின் திருவடிகளை இரவும் பகலும் பணிய நமக்கு இன்பம் உளதாம்.

குறிப்புரை :

அரவு - பாம்பு. ஆமை:- `முற்றலாமை இளநாகமோடு ஏனமுளைக் கொம்பவைபூண்டு`. அம் துகில் வேங்கை அதள் - அழகிய புலித்தோலாகிய ஆடை. முடிமேல் திங்கள் சூடி விரும்பிப்பரவுங் கடம்பூர் என்க. அம்பிகைக்குரிய துகிலும், அரனுக்குரிய அதளும் விரவும் (- கலக்கும்.) எனலுமாம். பரவும் - எழுந்தருளிய. சூடி விரும்பி எழுந்தருளிய கடம்பூர் என்று கொள்ளாக்கால், வினைமுடிபு பொருந்தாது. பரவுதல் - வாழ்த்துதல், துதித்தல் என்று பொருள்படுதல் ஈண்டுப் பொருந்தாது. இதில், சூடுதலும், விரும்புதலும், பரவுதலும் இறைவன் வினையாதல் வேண்டும். சூடி என்பதைப் பெயராகக் கொண்டு கூறலாம் எனினும், பூண்டு சூடி விரும்பிப் பரவும் என்று தொடர்தலால் இடையில் ஒரு வினையெச்சத்தைமட்டும் பெயராக் கோடல் யாங்ஙனம்? அதளும் விரவும் முடி எனல் விளங்கிற்றிலது. பைங்கண் வெள்ளேறு - பசிய கண்களையுடைய வெள்விடை. ஏற்றண்ணல் - எருதூரும் பெருமானார். இரவும் பகலும் பாதம் பணிய நமக்கு இன்பமது ஆம் என்க. விரும்பிச்சூடி - அதளும் விரும்பி என்று பொருத்தினும் பொருந்தல் இல்லை. அதளும் விரவும் திருமுடி என்று கொண்டு அரையில் உடுத்த புலித்தோல் முடியையும் மறைத்துச் சுற்றியிருந்ததோ என்று எண்ணுவாரும் உளர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

இளிபடு மின்சொலி னார்க ளிருங்குழன் மேலிசைந் தேறத்
தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப்
புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுது நாமே.

பொழிப்புரை :

இளி என்னும் இசை இனிமையும் சொல்லினிமையும் உடைய மகளிர் தம் கரிய கூந்தலில் புகை படியுமாறு அந்தணர் ஆகுதி வேட்கும் கடம்பூரில் ஒளிபொருந்திய வெண்பிறைசூடி உமையம்மையோடு உடனாய்ப் புலித்தோலுடுத்து எழுந்தருளியுள்ள இறைவனின் பொற்கழலை நாம்போற்றுவோம்.

குறிப்புரை :

இளி - (யாழின் நரம்புகளுள் ஒன்று.) ஏழிசையுள் ஒன்று. சொல்லினிமையும் இளி என்னும் இசையினிமையும் வேறுபடாது இருக்கும் என்றபடி. (சொல்லினிமைக்கு ஒவ்வாது இளியும் படும் எனலும் ஆம்). குழல் - கூந்தல். குழல்மேல் புகை இசைந்து ஏறத் தீத்தொழில் ஆர்கடம்பூர் எனலுமாம். ஏற என்னும் வினையெச்சம். ஆர் என்னும் வினைப்பகுதியொடு முடிந்தது. கலந்த என்பதனொடு முடித்தலும் கூடும். ஏறக் கொள்(ளும்) கை எனல் வலிந்து பொருள் கொள்வதாகும். ஏறத் தெளி (த்தல்) என்று பொருத்தலுங்கூடும். யாகத்தில் இருபத்தேழு நட்சத்திரப் பெண்டிர்க்கும் தீவழி உதவும் வேதவுண்மை குறிக்கப்பட்டது. தெளிபடு கொள்கை - தெளிவு பொருந்திய கோட்பாடு; வேதக்கொள்கை. தீத்தொழில் - வேள்வி. ஆர் - பொருந்திய. தீத்தொழிலார் - வேள்வியாளர் எனலுமாம். ஒளி தருபிறை - வெண்பிறை. ஒள் நுதல் - ஒளியதாகிய நெற்றியை உடைய உமாதேவியார். பண்புத்தொகை நிலைக்களத்துப்பிறந்த அன்மொழித் தொகை. `பண்பு தொகவரூஉம் கிளவியானும் ... ஈற்று நின்றியலும் அன்மொழித் தொகையே` (தொல், சொல்,902). `பண்புத்தொகை படவும் ... அச்சொற் றொக்கபின் அத்தொகை அன்மொழித் தொகை யாகாமையின், தொகுவதன்முன் அவற்றிற்கு நிலைக்களமாகிய சொற் பற்றிவரும்`(பிரயோக விவேகம் :- 24.உரை). ஓடு உடன் இரண்டனுள் ஒன்று மூன்றனுருபின் நீட்சி. (தொல்காப்பியர் `ஒடு` என்றே கூறினார்). மற்றொன்று உடனாதல் (ஒருசேர இருத்தல்) குறித்தது. `எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி` (தி .7 பா.230) என்புழிக் காண்க. ஓடுடன் கூடி என்றலும் உண்டு. சூடிஉடனாகிப் புனைந்தான் என்றியைக்க. புலி அதள் ஆடை - புலித்தோலுடையை. புனைந்தான் - அணிந்த சிவபிரான். பொன் கழல் - பொன்போலுஞ் சேவடி. கழல் - ஆகுபெயர். நாம் கழலைப் போற்றுதும் (- போற்றுவோம்). `கள்` வண்டு என்பாருமுளர். இதன் பொருளமைதி புலப்பட்டிலது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பறையொடு சங்க மியம்பப் பல்கொடி சேர்நெடு மாடம்
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில்
மறையொலி கூடிய பாடன் மருவிநின் றாடன் மகிழும்
பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே.

பொழிப்புரை :

பறை சங்கம் முதலியன ஒலிக்கப் பலவகையான கொடிகள் கட்டிய மாட வீடுகளில் மகளிர் ஆடும் ஒலி நிறைந்த கடம்பூரில் வேதஒலியோடு கூடிய பாடல்கள் பாடி ஆடி மகிழும் பிறைசூடிய நீண்ட சடையை உடைய பெருமானைப் பேணவல்லவர் பெரியோர் ஆவர்.

குறிப்புரை :

பறை - வாத்தியம். சங்கம் - சங்குகள். இயம்ப - ஒலிக்க. கறை - குருதிக் கறை. கறுப்பு. வேல். பிறருடம்பிற்பட்டு, இரத்தம் தோய்ந்து உலர்ந்து கறுப்புறுதல் கூறப்பட்டது. சாதியடை, கண்ணுக்குச் செவ்வேல், அதன் கொடுமையும் கூர்மையும் செம்மையும் பற்றி ஒப்பாகும். கலை - மேகலை; மாடங்களில் மகளிர் ஆடுதலால் உண்டாகும் ஒலி. மறை ஒலி - வேத முழக்கம். பாடல் - வேத கீதம்; ஆடல் மகிழும் சடையான். வார் - நீண்ட. பேணவல்லார் - விரும்பி வழிபடவல்லார்:- பெரியோர் - திருவருட்பெருமையுடையோர். பேணவல்லார்:- `வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம், வித்தும் அதன் அங்குரமும் மெய் உணரில் - வித்ததனிற் காணாமையால், அதனைக் கைவிடுவர். கண்டவர்கள், பேணாமையால் அற்றார் பேறு`. (திருக்களிற்றுப்படியார். 57.) என்னும் உண்மைநூலின்கண் பேணாமையாலாம். பெறாமை கூறுமுகத்தான் பேண வல்லார் பெருமை உணர்த்தப்பட்டமை விளங்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில்
நாவிரி கூந்தனற் பேய்கள் நகைசெய்ய நட்ட நவின்றோன்
காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில்
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே.

பொழிப்புரை :

தீப்போலும் சடைவிரியக் கழல்கள் ஆர்க்கக் கையில் அனல் ஏந்திச் சுடுகாட்டில் பேய்க்கணம் நகைக்க நடனம் ஆடுபவனும் கொன்றைமாலை அணிந்த நுதல்விழியானும் ஆகிய சிவபெருமானது கடம்பூரை அடைந்து ஓசையின்பம் உடைய பாடல்களைப் பாடிப் போற்றுவார் பழிபாவங்கள் இலராவர்.

குறிப்புரை :

தீவிரியக் கழல் ஆர்ப்பச் சேய் எரி கொண்டு இடு காட்டில் நட்டம் நவின்றோன் - தீப்போலும் சடை விரியவும் கழல் ஒலிக்கவும் செந்தீயைக் கையில் கொண்டு, உலகனைத்தும் கற்பொடியென அழியுஞ் சருவசங்காரகாலத்தில், அகண்டாகாரப் பெருவெளியில், தான் தனியனாகி இலங்கித், திருநடம் பயிலுஞ் சிவபெருமான், நாவிரிகூந்தல் நல்பேய்கள் நகைசெய்ய - நீட்டிய நாக்கையும் பரந்த கூந்தலையும் உடைய நல்ல பேய்கள் நகுதலைச் செய்ய (நட்டம் நவின் றோன்). காவிரி கொன்றை - சோலைகளில் மலர்ந்த கொன்றை மலர்கள். கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன். பாவிரிபாடல் - ஓசை (யின்பம்) பெருகிய பாட்டு. பா - பரந்து செல்வதோரோசை. (தொல்.). பயில்வார் - பயிற்சிசெய்வார். பழியொடு பாவம் இலார் - (புகழும் புண்ணியமும் உள்ளவராய்ப்) பழியும் பாவமும் இல்லாதவராவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

தண்புன னீள்வய றோறுந் தாமரை மேலனம் வைகக்
கண்புணர் காவில்வண் டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில்
பெண்புனை கூறுடை யானைப் பின்னு சடைப்பெரு மானைப்
பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீர்நிறைந்த வயல்களில் முளைத்த தாமரைகள் தோறும் அன்னங்கள் வைகிமகிழவும், கண்கவரும் சோலைகளில் வண்டுகள் மொய்க்க மலர்கள் தேன்பிலிற்றவும் அமைந்த கடம்பூரில் மாதொருபாகனாய்ப் பின்னிய சடையினனாய் விளங்கும் பெருமானைப் பண்ணமைந்த பாடல்கள் பாடிப்பரவுவார் பாவம் இல்லாதவராவர்.

குறிப்புரை :

தண்புனல் - குளிர்ந்ததாகிய நீர். அனம் - அன்னப்புள். கண்புணர்கா - கண்கள் தாமே சென்று புணர்தற்குத்தக்க அழகுமிக்க சோலை. கள் - தேன். அவிழும் - அலரும். வண்டுகள் ஏறுதலால் மலர்கள் தேன்நெகிழ அலரும் என்றபடி, பெண்புனை கூறு உடையான் - `மாதியலும் பாதியன்` அர்த்தநாரீச்சுவரன். பின்னுசடை - பின்னிய சடை. பண்புனை பாடல் - பண்களால் அழகு செய்யப்பெற்ற பாடல்கள். `பண்ணின் பயனாம் நல்லிசை` (பெரிய . சண்டேசுர .9). கலந்த பாடல் என்றவாறு. `பாவம் இலாதவர்` - என்றதற்கு மேற்பாட்டில் உரைத்தாங்கு உரைத்துக்கொள்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத
கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில்
ஒலிதிகழ் கங்கை கரந்தா னொண்ணுத லாளுமை கேள்வன்
புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே.

பொழிப்புரை :

சிவபூசகர்கள் பூசைக்கு வேண்டும் செம்மையான மலர்களைக் கொய்து, பாடியும் ஆடியும் மகிழும் ஒலிநிறைந்த வீதிகளையும் நீர் நிரம்பிய வயல்களையும் உடைய கடம்பூரில் கங்கையை முடியில் மறைத்தவனாய், உமைபாகனாய், புலித்தோல் உடுத்தவனாய் விளங்கும் பெருமான் புகழைப் போற்றுதலே பொருள் உடைய செயலாகும்.

குறிப்புரை :

பலி - பூஜை. (சேது புராணம்). செம்மலர் - செய்ய பூக்கள். பலிகெழுமலர் - பூஜைக்குப் பொருந்திய பூக்கள். சார - அடைய. பாடலொடு ஆடல் - பாட்டும் ஆட்டும். அறாத - நீங்காத. கலி - ஒலி. கடம்பூர் வீதியிலுள்ளார் சிவபூஜைக்குப் பொருந்திய பூக்கள் கொண்டுவந்து பூசித்துப் பாடுதலும் ஆடுதலும் செய்வர் என்றவாறு, செம்மலர் என்பதற்குப் பெருமையிற் சிறந்தோர் எனலுமாம். பாடலாடலறாத கலிகெழு வீதி கலந்தகடம்பூர். வயல்சூழ்கடம்பூர். செம்மல்லர் என்று பொருள் கொள்ளின். பலி என்பது (அம்மல்லரது மெய்வலிமை குறிக்க) மாமிசம் என்றாகும். புலி அதள் ஆடை:- (பார்க்க : பா.3) புனை - அழகுறுத்தப்பட்ட. கழல் - கழலணிந்த திருவடிகளை. போற்றல் - துதித்தல், பொருள் - உடம்பின் பயன். போற்றாமை - உடம்பெடுத்ததன் பயனின்மை என்றவாறு. பிறவிப் பயன் ஆகமங்களை உணர்ந்து, சிவபிரான் திருவடி மலர்களை எப்பொழுதும் இடைவிடாமல் போற்றுதலேயன்றிப் பிறிதில்லை. `எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே`.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி யப்புறங் காட்டில்
காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில்
மேம்படு தேவியொர் பாக மேவியெம் மானென வாழ்த்தித்
தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே.

பொழிப்புரை :

அழகிய நீர் நிலைகளில் கயல்கள் பாய, அதனால் பறவை இரிந்தோட விளங்கும் கடம்பூரில் மூங்கில் போன்ற தோள்களை உடைய மகளிர் மனங்கவரும் இயல்பினனாய் விளங்குவோனும் புறங்காட்டில் ஆடுபவனுமாகிய பெருமானது கடம்பூரை அடைந்து மாதொருபாகனே! எம்மானே! எனக்கூறி மலர்தூவித்தொழத் தீயனகெடும்.

குறிப்புரை :

படுகு - படுகர், நீர்நிலை. வண்டு - வண்டர். சிறகு - சிறகர், சுரும்பு - சுரும்பர் எனவருதல் போல்வது இது. பூம்படுகரில் கயல்மீன்கள் பாயவும் புட் (பறவை) கள் இரிய (ஓட) வும் புறங்காட்டில் தோளியர் கண்கவரும் என்க. காம்பு அடுதோள் - மூங்கிலை நீ எனக்கு ஒப்பாகாய் என்று கொல்லும் தோள். அடுதல் - கொல்லுதல். கண்களை ஒவ்வாது தோற்றோடிக் கயல் படுகரிற்பாய்தலும் புள் (வண்டு) இரிதலும் கூறப்பட்டன, `கயலஞ்சப் பிறழ்கண்ணாள்`(கம்பர் . மிதிலைக் . 26) `புள்ளுறைகமலவாவிப் பொருகயல் வெருவியோட வள்ளுறை கழிந்த வாள்போல் வரியுற வயங்கு கண்ணாள்` (? உண்டாட்டு 20). `நறைபாய் வனமலர்வாய் அளிபடரச் சேல்பாய்வனகயல் பாய்வன செங்கால் மடவன்னம், போல்பாய் புனல்மடவார் படிநெடுநாடு`(? . கங்கைப் .8). இதன் பொருளமைதி புலப்பட்டிலது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும்
இருவரு மாயறி வொண்ணா வெரியுரு வாகிய வீசன்
கருவரை காலி லடர்த்த கண்ணுத லான்கடம் பூரில்
மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே.

பொழிப்புரை :

திருமகள் மருவிய மார்பினனாகிய திருமாலும், தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் ஆகிய இருவரும் அறிய முடியாதவாறு எரியுருவான ஈசனும் கரியமலைபோன்ற இராவணனைக் காலால் அடர்த்தவனும் ஆகிய பெருமானது கடம்பூரை அடைந்து, பொருந்திய பாடல்களைப் பாடிப்போற்றுவார் வானுலகம் பெறுவர்.

குறிப்புரை :

திருமார்பிலவனும் - திருமகள் மருவிய மார்பினையுடைய திருமாலும். திருமறுமார்பன் என்பது வேறு. அதில் ஸ்ரீவத்ஸம் என்பது திருமறு எனப்பட்டது. மாமலரோன் - செந்தாமரை மலரில் வாழ்கின்ற பிரமன். ஆகிய இருவரும் என்று ஒரு சொல்வருவிக்க. அறிவொண்ணா - அறிதற்கு ஒன்றாத. எரி உரு - தீப்பிழம்பு வடிவம். கருவரை - கரிய மலை போலும் இராவணனை. காலில் அடர்த்த கயிலையை எடுத்தபோது திருவடிப் பெருவிரலூன்றி நெருக்கிய. காலனைக்காலாற் கடிந்த கண்ணுதலான் எனலுமாம். பிற திருப்பதிகங்களுள், ஒன்பதாவது பாட்டில், அடிமுடி தேடிய வரலாற்றையொட்டி இராவணன் கயிலையெடுத்த வரலாற்றைக் கூறக்காணோம். சில பதிகங்களுள் இரண்டுங்கூறப் பட்டில ஆயினும், இவ்வாறு வரலாற்றை முன்பின் ஆகக்கூறவில்லை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களு மந்துவ ராடைச்
சோடைக ணன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தனம் வேத முதல்வன்
காட தனினட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே.

பொழிப்புரை :

ஆடையின்றி அறங்கூறும் அமணர்களும், துவராடை உடுத்து அறநெறிபோதிக்கும் பதர்களாகிய புத்தர்களும் நன்னெறிகூறிச் சொன்னாலும் அவை மெய்ச்சொற்களல்ல. பலவேறு வடிவங்களைக் கொண்டருளும் சிவபிரானும், நம் வேதமுதல்வனும் சுடுகாட்டுள் நடனமாடும் கண்ணுதலோனுமாகிய பெருமான் எழுந்தருளியிருப்பது கடம்பூராகும்.

குறிப்புரை :

ஆடை தவிர்த்து அறம்காட்டுமவர்களும் - ஆடை உடுக்காமல் தர்மோபதேசம் செய்யும் அமணர்களும். அம்துவர் ஆடைச்சோடைகள்:- சிவப்பு ஊட்டிய உடைகளைத் தரித்த வறட்சியர் (பொருளில்லாத பேச்சுடையார் என்றவாறு). நல்நெறி - நல்லவழி (ஞானமார்க்கம்). சொல்லினும் சொல் அல - சொல்லினாலும் அவை மெய்ச்சொற்கள் அல்ல. வேடம் பலபல காட்டும் விகிர்தன்:- பல வேடமாகும் பரன் நம் வேத முதல்வன். காடதனில் - காட்டில். `கள்ளி முதுகாட்டில் ஆடிகண்டாய்` (தி .6 ப .23.பா .4).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடம்
கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி
நடைநவின் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும்
படைநவில் பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே.

பொழிப்புரை :

விடைச்சின்னத்தை அறிவிக்கும் கொடியை உடையவனை, வெண்கொடிகள் சேர்ந்த உயரிய வாயில்களைக் கொண்ட மாடவீடுகளை உடைய கடம்பூரில் விருப்புடையவனை, கடலை அடுத்துள்ள காழிமாநகரில் தோன்றிய நன்னடை உடைய ஞானசம்பந்தன் நன்மை அருளுமாறு வேண்டிப்பாடிய சாதனமாகிய பாடல்களை ஓதுவார் பழிபாவம் இலாராவர்.

குறிப்புரை :

விடை நவிலும் கொடியானை - எருது பயின்ற கொடியை உடையவனை. வெண்கொடி - வெள்ளைத் துணிக்கொடி. கடை - வாயில், இடமும், அங்காடியுமாம். காதலன் - உயிர்கட்கு அருட்காதல் விளைப்பவன், அன்புருவானவன் எனலுமாம். `அன்பே சிவம்`. நடை - ஞானாசாரம். நன்மை - மங்களம். படைநவில் பாடல் - திருவருட்சாதனமாக நவின்ற பாடல்கள். படை - சாதனம். அல்லற் பட்டு...செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் .555). படை - நிவேதனமுமாம். இறைவன் புகழொடு படுக்கும் பாடல் என்றார் கோவை சிவக்கவிமணி முதலியாரவர்கள். பழியொடுபாவம் இலர் (பா.5இல்) உரைத்தாங்கு உரைத்துக்கொள்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரு மிமையவ ரேத்தநின் றாரும்
பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர் மாதொருகூறர். பிறைசூடிய சடையார். கண் பொலிந்த நெற்றியர். காதில் குழை அணிந்தவர். எண்குணத்தவர். இமையவர் போற்ற நிற்பவர். இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவர்.

குறிப்புரை :

பெண் அமர் மேனியினார் - அர்த்தநாரீச்சுவரர். பிறை புல்கு செஞ்சடையார் - சந்திரசேகரர். கண்ணமர் நெற்றியினார் - பாலநேத்திரர். காது அமரும் குழையார் - குழைக்காதனார். எண் அமரும் குணத்தார் - எண்குணத்தார். இமையவர் ஏத்த நின்றார் - தேவர் தொழப்படுவார். பண் அமர் பாடலினார்:- `பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி` (தி .6 ப .5 பா .57) `பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி` (தி .6 ப .5 பா .7). `பண்ணினார் பாடலாகிப் பழத் தினில் இரத மாகி ... அனைத்தும் ஆகி` (தி .4. ப .70. பா .4). இத்தலத்தின் தேவியார் திருநாமம் `பண்மொழியம்மை`. `வேதமே பண்ணுளார்` என (தி .2. ப .28. பா .3). முற் போந்ததும் ஈண்டறியத்தக்கது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், தம்மைக் கொன்றை மலர் கொண்டு பூசித்து வணங்குபவர்களின் பகையாய்த் துயர் செய்யும் வினைகளைத் தீர்த்தருளும் மேலானவர். ஞானவடிவினர். நெஞ்சில் நினைத்து வணங்க எழும் அன்பர்களின் துயரங்களைத் தீர்ப்பவர். உமையம்மை அஞ்சப் பனை போன்ற கையை உடைய யானையை உரித்துப் போர்த்தவர்.

குறிப்புரை :

கணி - கொன்றை. விண்ணவர் - சிவபெருமான். தன்னைக் கொன்றையின் சிறந்த அழகிய மலர்கொண்டு திருவடிப் பூஜை புரிவார்களுடைய வினையாகிய (வீட்டுப்) பகையைத் தீர்க்கும் விண்ணவன் என்றவாறு. விண்ணவர் என்றதற்கு ஏற்பத் தமை என்று இருத்தல் வேண்டுமாயினும், ஒருமைக்கும் பன்மைக்கும் உரிய கடவுளைக் கூறலின் குற்றமாகாது. `கொன்றைசூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோம்` என்ற ஆசிரியர், நமக்கும் அதையே உபதேசித்தருள்வதுணர்க. விஞ்சையர் - நெஞ்சில் நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார். விஞ்சையர் - வித்தியாதரர். சிவபெருமானைக் குறித்ததாகக்கொண்டு ஞானசொரூபர் எனலும் ஆம். விஞ்சை - வித்தை, ஞானம். நிரைவளை மங்கை - வரிசையுற்ற வளையல் அணிந்த உமாதேவியார். பனை கை பகடு - பனை போலும் துதிக்கையை உடையயானை. உரி - தோல்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், சடையில் கொன்றை தரித்தவர். சந்தனமாக வெண்ணீற்றை அணிந்தவர். பூதப்படைகளை உடையவர். புள்ளிகளைக் கொண்ட பாம்பை இடையில் கட்டியவர். விடைக்கொடி உடையவர். வெண்மழு, மூவிலைச் சூலம் ஆகியவற்றைப் படைக்கலன்களாக உடையவர்.

குறிப்புரை :

சாந்தம் வெண்நீறு - `சாந்தமென நீறணிந்த சைவர்`(தி .2 ப .71 பா .8) புடை - பக்கம். பூதத்தினார் - பூதகணங்களை உடையவர். பொறி - புள்ளிகள். கிளர் - விளங்குகின்ற. அசைத்தார் - கட்டியவர். விடை - எருது. கொடியார் - துவசம் ஏந்தியவர். இடபத்து வசம் உயர்த்தியவர். மழுவும் மூவிலைச் சூலப்படையும். அமர் கொள்கையினார் - விரும்புங் கோட்பாடுடையவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நறைவளர் கொன்றையி னாரு ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழன் மொந்தை
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், தேன் பொருந்திய கொன்றைமலர் மாலையை அணிந்தவர். உலகமெல்லாம் வணங்க நஞ்சுண்டு கறுத்த கண்டத்தை உடையவர். இடுகாட்டை அரங்கமாகக் கொண்டு கையில் கனலேந்தி வேதப்பாடல்களோடு முழவம், குழல், மொந்தை, பறை ஒலிக்கப்பாடி ஆடுபவர்.

குறிப்புரை :

நறை - தேன். ஞாலம் - பூமி. கறை = நச்சுக்கறுப்பு. மா - கரிய; அழகுமாம். மிடற்றார் - கண்டத்தையுடையவர். அரங்கு ஆ - நாடகசபையாக. கனல் - தீ. மறைவளர் பாடல் - வேதப்பாடல். மண் முழவம் - மார்ச்சனையையுடைய முழா. குழல் - வேய்ங்குழல். மொந்தை - ஒரு கட்பறை. பறை - வாத்தியம். சொல் எனலுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள்
ஆகமு றைவிட மாக வமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதன் மங்கைதன் மேனிப்
பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், போகமும் அதனால் எய்தும் இன்பமும் ஆனவர். போற்றி என்று கூறுவார் உடலை உறைவிடமாகக்கொண்டு அமர்பவர். கொன்றை, பாம்பு, திங்கள் ஆகியனவற்றை முடியில் சூடி உமைபாகம் உகந்தவர்.

குறிப்புரை :

போகமும் இன்பமும் ஆகி - பெத்தத்தில், தநுகரண புவனங்களொடு சேர்த்து நான்காவதாக எண்ணப்படும் போகமும், அப்போகாநுபவம் பற்றி உயிர்க்கு எய்தும் சிற்றின்பமும், முத்தியில் சிவபோகமாம் சிவாநந்தமும் ஆகி. ஆகம் - சுத்தியால் ஓங்கிய தேகம். உறைவு இடம் - வாழ்தலையுடைய இடம், கோயில். `ஊன் உடம்பு ஆலயம்` (திருமந்திரம்). `ஓங்குடலம் திருக்கோயில்` (ஞான பூஜா விதி .9). நாகம் - பாம்பு. நல்நுதல் மங்கை - அழகிய நெற்றியையுடைய உமாதேவியார். மேனிப்பாகம் - திருமேனியிற்பாதி. உகந்தவர் - விரும்பியவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கடிபடு கூவிள மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், மணம் பொருந்திய வில்வம், ஊமத்தை ஆகியவற்றைச் சடையின்மேல் உடையவர். முப்புரங்களைப் பொடிபடுமாறு செய்த வில்லினை உடையவர். அழகிய பார்வதி தேவியாரை மணம் புரிந்தவர். உலக உயிர்கள் வடிவம் கொள்ளுதற்கு முன்படிவமாக விளங்குபவர்.

குறிப்புரை :

கடி - மணம். கூவிளம் - வில்வம். மத்தம் - ஊமத்தை. கமழ் - மணக்கின்ற. செற்ற - அழித்த. பொருசிலை - போர்வில். `வடிவுடைமங்கை`. படிபடுகோலத்தினார் - படியாகப் பொருந்திய கோலம். எல்லாவுருவங்களுக்கும் காரணவுருவம் இறைவனுடையதே. `யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும் மாதேயும் பாகம் இலச்சினையே ஆதலினால்`, (திருக்களிறு .82). காரியமான எல்லாப் படிக்கும் இறைவனது கோலமே காரணப் படியாயிற்று. படி - ஒப்பு; பிரதிச்சந்தம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

ஊனமர் வெண்டலை யேந்தி யுண்பலிக் கென்றுழல் வாரும்
தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாரும்
கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், ஊன் பொருந்திய வெண்தலையை ஏந்திப்பலியேற்கத் திரிபவர். தேன்மொழி மாதாகிய பார்வதியம்மை சேர்ந்த திருமேனியர். காடுகளில்வாழும் மயில்கள் ஆடும் காவிரியின் அழகிய கரைமேல் பால் போன்ற திருநீறு அணிந்து திகழ்பவர்.

குறிப்புரை :

ஊன் - மாமிசம். தலை - பிரமகபாலம். பலி - பிச்சை. உழல்வார் - திரிவார். தேன் அமரும் மொழிமாது:- `பண்மொழியம்மை` இத்தலத்துத் தேவியின் திருநாமம். தேன் ... திருமேனியினார் - அர்த்தநாரீச்சுரவடிவுடையவர். கான் - காடு. மஞ்ஞைகள் - மயில்கள். கோலம் - அழகு. பால் நலம் நீறு - பால்போலும் நன்மைகளையுடைய நீறு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

புரந்தரன் றன்னொடு வானோர் போற்றியென் றேத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாரும்
கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

பாண்டிக்கொடுமுடி இறைவர், இந்திரனோடு ஏனைய தேவர் பலரும் போற்றி என்று ஏத்த நிற்பவர். மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் அடர்த்துப் பின் அருள் செய்தவர். கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினர். கரிய அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை அடித்துக்கொண்டு பரந்து கிழிந்து வரும் காவிரியின் அருகில் உறைபவர்.

குறிப்புரை :

புரந்தரன் - இந்திரன். வானோர் - தேவர். இந்திரனோடு தேவர்கள் சிவபிரானைப் போற்றி போற்றி என்று ஏத்தும் முதன்மை உணர்த்தப்பட்டது. பெருந்திறல் - மிக்கவலிமை. வாள் - கொடுமை. வாளை ஏந்திய அரக்கன் (-இராவணன்) எனலுமாம். பேர் இடர் - மலையைப் பேர்க்கும் துன்பம், பெரிய துன்பம். கருந்திரை - கரிய கடல் நஞ்சு, திரை என்பது கடலுக்குச் சினையாகு பெயர். கடல் என்பது நஞ்சுக்கு இடவாகு பெயர். திரை இருமடியாகு பெயர். மா - கரிய, அழகிய. மிடற்றார் - கண்டத்தினார். கார் அகில் - கரிய அகில் மரத்தினையும். பல்மணி - பல மணிகளையும். உந்தி - செலுத்தி. பரந்து - பரவி. இழி - ஒழுகும். பாங்கர் - பக்கம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

திருமகள் கேள்வனும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் காணாதாவாறு பேரழற்பிழம்பாய் எழுந்து நின்ற பெருமானார், மணம் கமழும் மென்மலர்கள், சந்தனம் ஆகியவற்றுடன் வரும் காவிரித்துறையில் விளங்கும் பாண்டிக்கொடுமுடி இறைவராவார்.

குறிப்புரை :

திருமகள் காதலினான் - இலக்குமி காதலரான திருமால். திகழ்தரு - விளங்குகின்ற. மாமலர் - தாமரைப்பூ. மேலை - மேலிருத்தலையுடைய. பெருமகன் - பிதாமகன் (பிரமன்). அழல் - தீ. மரு - மணம். மலி - மிக்க. சந்து - சந்தனமரம். மாடு - பக்கம். பரு - பருத்த. மணித்துறை - நீர்த்துறை. துறைமணி உம் என்றும் துறை ஆரும் என்றும் கொள்ளலாம். பெம்மான் கொடுமுடியாரே என்க. துறை ஆரும் பாண்டிக்கொடுமுடி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லான்
மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்
சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.

பொழிப்புரை :

புத்தர் சமணர் ஆகியோர் பொய்மொழியல்லால் உண்மைத்தவநெறிகளைப் பேசிடமாட்டார். அவருடைய பலப்பல திருவடிவங்களைச் சித்தர் தேவர் முதலியோருடன் பத்தர்கள் நல்ல செழுமையான மலர் கொண்டு பணிந்தேத்த விளங்குபவர் பாண்டிக்கொடுமுடி இறைவர்.

குறிப்புரை :

புந்தி - அறிவு. மாட்டார் - வன்மையில்லாதவர். வேடம்பலபலவற்றால் - சிவமூர்த்தம், மகேசுரமூர்த்தம் எனப் பற்பலவற்றால். சித்தர் - சித்துக்களில் வல்லவர். செழுமையுடைய நல்ல மலர்களைக் கொண்டு பத்தர் (அன்பர்), சித்தர், தேவர் எல்லோரும் ஏத்தும் தலம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்தி பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்லவல் லார்துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.

பொழிப்புரை :

மரக்கலங்களைக் கொண்டுள்ள குளிர்ந்த கடல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், உயிர்கட்குப் பயன் நல்க வெண்தலையைக் கையில் ஏந்தி விளங்கும் இறைவனின் கொடுமுடிநகரைப் பரவிய பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், துயர் தீர்ந்து நன்மை நிரம்பிய சிந்தையராய் நன்னெறி எய்துவர்.

குறிப்புரை :

கலம் - மரக்கலம். கடலில் தோணியாக மிதந்த காழியாதலின் `கடல் சூழ்ந்தகாழி` என்றார். பலம் - பயன், வலிமையுமாம். தலை - பிரமகபாலம். சொல - சொல்ல, பாட. சொல்லச் சொல்ல மல்கும் பாடல்கள். நலம் - பேரின்பம். நன்னெறி - ஞானமார்க்கம்.

பண் :காந்தாரம

பாடல் எண் : 1

பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங் காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலநாம் பரவு மூரே.
 

பொழிப்புரை :

இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப்பெயர்களைத் தனித்தனியே முதலிற் கொண்டு பன்னிரு பாடல்களாக அமைந்துள்ளது. கழுமலத்தின் பெயரை மட்டும் பெரும்பாலும் முடிவாகக் கொண்டுள்ளது. நாம் பரவும் ஊர் பிரமனூர் முதலாகக் கொச்சைவயம் உள்ளிட்ட பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய கழுமலமாகும்.

குறிப்புரை :

1.பிரமபுரம், 2.வேணுபுரம், 3.புகலி, 4.வெங்குரு, 5.தோணிபுரம், 6.பூந்தராய், 7.சிரபுரம், 8.புறவம், 9.சண்பை, 10.காழி, 11.கொச்சைவயம், 12.கழுமலம் ஆகிய திருப்பெயர்களை இம்முறையே தனித்தனி முதலிற்கொண்டு தொடங்கும் திருப்பாடல் இப்பதிகத்திற் காணப்படுகின்றன. ஈற்றுப்பாடல் மட்டும், `கழுமலத்தின் பெயரை` என்றுரைக்கும் காரணம் பற்றியும் ஒவ்வொரு பாட்டிலும் `கழுமலம்` என்று வருதல் பற்றியும் கழுமலம் என்று தொடங்கிற்றிலது. இம்முறையே, சேக்கிழார் சுவாமிகளும்,
\\\\\\\\\\\\\\\"பிரமபுரம் வேணுபுரம் பெருபுகலி வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டுதிருப்பெயர்த்தால்\\\\\\\\\\\\\\\".
பெரிய.திருஞான.14) என அருளியிருக்கின்றார்.(பார்க்க: தி.2 ப. 109, 110.) மன்னு - நிலைபெற்ற. பொன் அம் - பொன்னையும் அழகையும் உடைய. அரன் மன்னு தண்காழி - சிவபிரான் எழுந்தருளிய குளிர்ந்த காளீச்சரம். உள்ளிட்டு - உட்பட்டு. அங்கு ஆதி ஆயபரமன் ஊர், பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலம் நாம் பரவும் ஊர். ஊர் பன்னிரண்டே அன்றி ஓர் ஊர்க்குப் பேர் பன்னிரண்டல்ல. இவ்வுண்மை அறியாதார் ஒரே ஊர்க்குப் பன்னிரண்டு பெயர் உள்ளன என்று எழுதியும் பேசியும் தொன்மையை அழித்தனர். தலபுராணத்திலும் தொன்மை மாறாத உண்மை உணர்த்தப்பட்டது.

பண் :காந்தாரம

பாடல் எண் : 2

வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலநாங் கருது மூரே.
 

பொழிப்புரை :

நாம் கருதும் ஊர் வேணுபுரம் முதலாக சண்பைச் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு செல்வம் கருதிய வையகத்தார் ஏத்தும் கழுமலமாகும்.

குறிப்புரை :

வெள்ளத்து ஓங்கும் தோணிபுரம் - பிரளய வெள்ளத்துள் மேல் ஓங்கி மிதந்து விளங்கிய தோணிபுரம். தூநீர் - பரிசுத்த ஜலத்தையுடைய. கோணிய - வளைந்த. கோட்டாறு - இன்றும் உளது. `கோட்டாறு சூழ் கொச்சை` (தி.3 ப.89 பா.1) கூரும் - மிகும். காணிய - காண. வையகத்தார் - (வையாலாகிய வீடு என்னும் பொருள்படும் வையகம் பெருகிய உலகிற்கு ஆகுபெயர்) உலகர். (தி.2-பதி.102- பா.5. கோட்டாறு).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி
நிகரில் பிரமபுரங் கொச்சைவய நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோ டந்தண் டராயமரர் பெருமாற் கின்பம்
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே.
 

பொழிப்புரை :

நாம் கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட, சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும்.

குறிப்புரை :

நிகர் - ஒப்பு. இல் - இல்லாத. நீர் மேல் நின்ற மூதூர் - தோணிபுரம். அகலிய - அகன்ற இடத்தையுடைய. அம் தண்தராய் - பூந்தருவராய். அமரர் பெருமாற்கு - தேவர்பிரானுக்கு. பகரும் - கூறும். `நாம் கைதொழுது பாடும் ஊர்` என்றதால், நாம் பாடும்போதும் கைதொழுதல் இன்றியமையாதது என்பது விளங்கும். இத் தமிழ் மறையைப் போற்றும் அருளொழுக்கம் புலப்படும். பா.6 குறிப்புரை பார்க்க.

பண் :காந்தாரம

பாடல் எண் : 4

வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.
 

பொழிப்புரை :

நாம் கருதும் ஊர் வெங்குரு முதலாக சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடையதும், கங்கையணிந்த சடை முடியினை உடைய சிவபிரான் எழுந்தருளியதும் ஆகிய கழுமலமாகும்.

குறிப்புரை :

தண் - குளிர்ந்ததாகிய. வெள்ளம் கொள்ளத் தொங்கிய தோணிபுரம் என்றதால், தோணி தொங்குதல் உணர்த்தப்பட்டது. தொகு - கூடிய. தொல் - பழைய. பொழில் - சோலை. தலைபண்டு ஆண்ட மூதூர் - சிரபுரம். ஏற்றான் - ஏற்ற சிவபிரான்.

பண் :காந்தாரம

பாடல் எண் : 5

தொன்னீரிற் றோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்பன் நகரா நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலநாம் புகழு மூரே.

பொழிப்புரை :

நாம் புகழும் ஊர், கடல்மேல் மிதந்த தோணிபுரம் முதலாகச் சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும், நல்ல பொன் போன்ற சடையினை உடையான் எழுந்தருளியதுமான பொலிவுடைய கழுமலமாகும்.

குறிப்புரை :

தொல் நீர் - பழைய பிரளய வெள்ளம். துயர் - பிறவித்துயர் (பிறதுயர்கள் இதனுள் அடக்கம்). இன்நீர் - இனிய நீரினையுடைய. எழில் - அழகு. நல்நீர, - நல்ல நீரினையுடைய. சிலம்பன் நகர் - சிரபுரம்.

பண் :காந்தாரம

பாடல் எண் : 6

தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமு னாண்ட
வண்ண னகர்கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுர மேலா லேந்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலநாங் கைதொழுது கருது மூரே.

பொழிப்புரை :

நாம் கைதொழுது கருதும் ஊர், தண்மையான பூந்தராய் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடைய இருகண்களுக்கு மேல் நெற்றியில் நிமிர்ந்துள்ள கண்ணை உடையோனாகிய சிவபிரான் மேவிய கழுமலமாகும்.

குறிப்புரை :

தண் அம்தராய் - பூந்தராய். தாமரையான் ஊர் - பிரமபுரம். தலைமுன் ஆண்ட அண்ணல் நகர் - சிரபுரம். விண் - ஆகாயம். இயல் - செல்லும். சீர் - கனம், புகழ். மேலார் - தேவர், மேன்மையுடைய ஞானியர் முதலோர். மேவிய - விரும்பி எழுந்தருளியுள்ள. தியானம் புரியும்போது கை தொழுத வண்ணம் இருத்தல் வேண்டும். `அஞ்சலி செய்திருந்து` (ஞான பூசா விதி - 8). பா.3 குறிப்புரை பார்க்க.

பண் :காந்தாரம

பாடல் எண் : 7

சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல
ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவொ டந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கிப்
பேரா னெடியவனு நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.
 

பொழிப்புரை :

சீர் பொருந்திய சிரபுரம் முதலாகத் தோணிபுரம் நிறைவாய்ப் பன்னிரு திருப்பெயர்களை நினைந்து இவ்வூரைப் பிரியாதவனாய், திருமாலும் பிரமனும் வழிபட்டும் காண்பரிய பெருமானாய் உள்ள சிவபிரானது ஊர் கழுமலம்.

குறிப்புரை :

சீர் ஆர் - புகழ் நிறைந்த. கனம் மிக்க எனலுமாம். நல்ல ஆராத்தராய் - நல்ல தெவிட்டாத பூந்தராய். ஏர் - அழகு. என்று என்று:- அடுக்கு இடைவிடாமை மேலது. உள்கி - நினைத்து. பேரான் - பெயராதவனாய். பேரான் என்பது இருவர்க்கும் பொதுவாய்த் தனித்தனி அமையும். பேரானாய்க் காண்பு என்க.

பண் :காந்தாரம

பாடல் எண் : 8

புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து
திறலா லரக்கனைச் செற்றான்றன் கழுமலநாஞ் சேரு மூரே.

பொழிப்புரை :

நாம் சேர்வதற்குரிய ஊர் புறவம் முதலாக வேணுபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டது. அது அருச்சுனனோடு விற்போர் செய்தவனும் இராவணனை அடர்த்தவனும் ஆகிய சிவபிரானது கழுமலமாகும்.

குறிப்புரை :

நறவம் - தேன். நான்முகன்றன் ஊர் - பிரமபுரம். விறல் -பெருமை. விசயன் - அருச்சுனன். திறல் - திறன். அரக்கன் - இராவணன். செற்றான் - அழித்தான்.

பண் :காந்தாரம

பாடல் எண் : 9

சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப்
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுர நாணி லாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.
 

பொழிப்புரை :

நாணமற்ற வெண்பற்களைக்கொண்ட சமணர்கள், சாக்கியர்கள் ஆகியோரின் பெருமைகளை அழித்த விமலனது ஊர், சண்பை முதலாகத் தோணிபுரம் ஈறாகப் பன்னிரு பெயர்களைக் கொண்ட ஊராகும்.

குறிப்புரை :

சாயாப் பண்பு - அழியாக்குணம். பண்பார் - குணத்தார் எனினுமாம். நாண் - நாணம். வியப்பு - பெருமை. விமலன் - அநாதி மலமுத்தன்.

பண் :காந்தாரம

பாடல் எண் : 10

செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய
கொழுமலரா னன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய
விழுமியசீர் வெங்குருவொ டோங்குதராய் வேணுபுர மிகுநன் மாடக்
கழுமலமென் றின்னபெயர்பன்னிரண்டுங் [கண்ணுதலான் கருது மூரே.
 

பொழிப்புரை :

செழுமையான அழகிய காழி முதலாக வேணுபுரம் ஈறாகப் பன்னிருபெயர்களைக் கொண்டது கண்ணுதலான் கருதும் ஊராகும்.

குறிப்புரை :

செழுமலிய - செழிப்பு மலிதலையுடைய. செய்ய கொழுமலரான் நன்னகரம் - பிரமபுரம். விழுமிய சீர் - மிக்க புகழ். பன்னிரண்டும் ஊர் என்றது ஈண்டும் காண்க.

பண் :காந்தாரம

பாடல் எண் : 11

கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குருப் புறவங் காழி
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரநீள் சண்பை மூதூர்
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளு மம்மான் கழுமலநாம் அமரு மூரே.

பொழிப்புரை :

நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும் நம்மேல் வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும்.

குறிப்புரை :

நிச்சல் - நாடோறும். விழவு - திருவிழாக்கள். ஓவா - ஒழியாத. நீடு ஆர் - காலத்தாலும் இடத்தாலும் நெடுமை பொருந்திய. நச்ச இனிய - விரும்புதற்கு இனிய. அச்சங்கள் - பிறப்பச்சம் முதலியவை. அம்மான் - அருமகன் என்பதன் மரூஉ. பெருமகன் என்பது பெம்மான் என்று வருதல்போல.

பண் :காந்தாரம

பாடல் எண் : 12

காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப் பத்திமையாற் பனுவன் மாலை
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
மேவியிசை மொழிவார் விண்ணவரி லெண்ணுதலை விருப்பு ளாரே.
 

பொழிப்புரை :

குவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய இப்பனுவல்மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர்.

குறிப்புரை :

காவி - நீலோற்பலம், கருங்காவி. புரையும் - ஒக்கும். பாவிய - பரவிய. பத்திமை - அன்பு, மை விகுதி தமிழ் `பத்திமையாற் பணிந்து`. (தி.6 பதி.54 பா.3) தலைவிருப்பு - தலையன்பு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்தசெல்வர்
இருந்த விடம்வினவி லேலங்கமழ் சோலையின வண்டியாழ்செய்
குருந்த மணநாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே.

பொழிப்புரை :

பிறைமதியை அழகுறப் புனைந்து, கங்கையைச் சடையில் கரந்து உமாதேவியை இடப்பாகமாக கொண்டு, பொருந்தாத வேடத்தோடு இடுகாட்டில் உறைதலை விரும்பிய செல்வர் எழுந்தருளியுள்ள இடம் யாதெனவினவில், ஏல மணம் கமழ்வதும், சோலைகளில் வண்டுகள் யாழிசை போல ஒலிக்கக் குருந்தமரம் மணம் வீசும், குன்றுகள் அருகே சூழ்ந்துள்ளதுமான குளிர்ந்த சாரலை உடைய குறும் பலாவாகும்.

குறிப்புரை :

திருந்தச் சூடிக்கரந்து பொருந்திப் பொருந்தாத வேடத்தால் உறைதல்புரிந்த செல்வர் என்று இயைக்க. மதி - பிறை. தெள்நீர் - தெளிந்த கங்கைநீர். சடைக்கரந்து - சடையில் மறைத்து. தேவிபாகம் பொருந்தி - தேவியினது பாகத்தைத் தான் பொருந்தி. பொருந்தாத வேடத்தால் - காட்டில் உறைவதற்கு ஒவ்வாத கோலத்தால். புரிந்த - விரும்பிய. ஏலம் - வாசனைப் பொருள்களுள் ஒன்று. `தக்கோலம் தீம் பூத் தகைசால் இலவங்கம் .... கப்பூரம் சாதியோடு ஐந்து`. யாழ்செய் - யாழோசைபோலும் இன்னோசை செய்கின்ற. குருந்தம் - குருந்தமரம். குறும்பலா என்பது பலா வகைகளுள் ஒன்று. குற்றாலம், குறும்பலா இரண்டும் திருக்குற்றால மலையிலுள்ள தலவிருட்சம். `வம்பார் குன்றம் .... குற்றாலம்` என்றும் `குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலா` என்றும் இருவேறு திருப்பதிகம் அருளியவாறு உணர்தற்பாலது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பானம்மை
ஆட்பலவுந் தானுடைய வம்மா னிடம்போலும் அந்தண்சாரல்
கீட்பலவுங் கீண்டுகிளை கிளையன் மந்திபாய்ந் துண்டுவிண்ட
கோட்பலவின் றீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்பலாவே.

பொழிப்புரை :

பதினாறுகலைகளும் வளர்தற்குரிய பிறைமதியை முடியில் சூடித் திருநீற்றுப் பொடியணிந்த நம்மேல் விருப்புடைய இறைவன், நம்பால் வந்து நம்மை அடிமையாகக் கொண்டருளும் அம்மான். அவனது இடம், அழகிய குளிர்ந்த மலைச்சாரலில் கீளத்தக்க பல வின்கனிகளை மந்திகள் கீறித்தம் கிளைகள் பலவற்றோடு உண்டு வீழ்த்திய சுவையான பலவின் இனிய சுளைகளை ஆண்குரங்குகள் உண்டு மகிழும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

நாள்பலவும் சேர்மதியம் - பூரண சந்திரன், `பிள்ளை மதியும் புனலும்சூடி` எனப் (பா .7) பின்வருதலறிக. நம்பான் - சிவபெருமான். `நம்பான் மேய நன்னகர்`(தி .1 ப .99 பா .1). `நடம் பயிலும் நம்பானே`, `நல்லூர்ப் பெருமணம்மேய நம்பானே`. (தி .3 ப .125 பா .1). ஆட்பலவும் - ஆலாகும் பலவகையும். கீள்பல - பிளத்தற்குரிய பலா. கீண்டு - பிளந்து, (கிழி - கீழ் - கீள், கிழிந்து - கீழ்ந்து - கீண்டு). கிளை கிளையல் - கிளை கிளையாக. கிளையின் என்றிருந்ததோ? மந்தி - பெண்குரங்கு. விண்ட - (நீங்கிய) பிளந்த. கோள் - குலை. கடுவன் - ஆண்குரங்கு. உகளும் - துள்ளும். இது பலாவிற்கேற்ற வருணனை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

வாடற் றலைமாலை சூடிப் புலித்தோல் வலித்துவீக்கி
ஆட லரவசைத்த வம்மா னிடம்போலும் அந்தண்சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்தத் தாதவிழ்ந்து பசும்பொனுந்திக்
கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே.

பொழிப்புரை :

ஊன் வாடிய தலைமாலையைச் சூடிப் புலித்தோலை உடுத்து ஆடும் பாம்பை அறையில் கட்டிய அம்மானது இடம், அழகிய குளிர்ந்த சாரலில் பாடும் பெண்வண்டுகள் அரும்புகளைப் போதாக அலர்த்த மகரந்தப் பொடிகள் பசும்பொன் போல உதிரக்காந்தள் மலர்ந்து மணம் பரப்பும் குன்றுகள் சூழ்ந்த குறும்பலாவாகும்.

குறிப்புரை :

வாடல் - வற்றுதல். வலித்து வீக்கி - உறுதியாகக் கட்டி. அசைத்த - கட்டிய, ஆட்டிய எனலுமாம். போது - மலரும் பருவத்தது. அலர்த்த - அலரச்செய்ய. கோடல் - வெண்காந்தள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடியாடிக்
கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ்வெற்பில்
நீல மலர்க்குவளை கண்டிறக்க வண்டரற்றும் நெடுந்தண்சாரல்
கோல மடமஞ்ஞை பேடையொ டாட்டயருங் குறும்பலாவே.

பொழிப்புரை :

பால் போன்ற வெண்மையான மதியை முடியிற் சூடி, ஒருபாகத்தே உமையம்மையைக் கூடிநின்று ஆடிப்பாடி, மார்க்கண்டேயர் பொருட்டுக் காலனின் உடல் கிழியும்படி அவனைச் சினந்த பெருமானது இடம், கற்கள் சூழ்ந்த வெற்பிலுள்ள சுனைகளில் கருங்குவளைகள் கண் போல மலரவும், வண்டுகள் இசைபாடவும் நெடிய குளிர்ந்த சாரலில் அழகிய மயில்கள் பெண் மயில்களோடு ஆடி மகிழும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

பிறை சூடியும், உமைமங்கையை இடப்பால் கொண்டும் பாடியும் ஆடியும் எமனை உதைத்தும் நின்ற சிவபெருமான் இடம். கல் ஆம் வெற்பு - கற்கள் சூழ்ந்த மலை. குவளைகள் கண்போல் திறக்க. அரற்றும் - ஒலிக்கும். கோலம் - அழகு. மடம் - அழகு; மென்மை, மஞ்ஞை - மயில். பேடை - பெண்மயில். ஆட்டு - ஆட்டம். அயரும் - செய்யும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித்தேவி
முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய்சூழ்ந்த
மலைவா யசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்குசாரல்
குலைவாழைத் தீங்கனியு மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்பலாவே.

பொழிப்புரை :

தலையில் ஒளிவிரியும் வெண்மையான பிறையையும் கங்கையையும் தாங்கி, உமாதேவியைக் காதலித்து ஒரு பாகமாகக் கொண்டுள்ள சிவமூர்த்தியின் இடம், முதிய மூங்கில் சூழ்ந்துள்ள மலையிடத்து நீர்க்கசிவுகள் பேரருவியாகப் பொன் கொழித்து ஒழுகுவதும் பொருந்திய சாரலகத்தே வாழைக்குலையும் மாங்கனிகளும் தேன் பிலிற்றுவதுமான குறும்பலா என்னும் கோயிலாகும்.

குறிப்புரை :

தலைமதியம், வான்மதியம். வான் - ஒளி. தலையில் மதியம் கதிர்விரிய புனலைத்தாங்கி, பாகங்காதலித்த மூர்த்தி என்க. முதுவேய் - முதிய மூங்கில். அசும்பு - பொசியுநீர். பிலிற்றும் - துளிக்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக்கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ்வெற்பில்
ஏற்றேன மேன மிவையோ டவைவிரவி யிழிபூஞ்சாரற்
கோற்றே னிசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்பலாவே.

பொழிப்புரை :

திருநீற்றைப் பொருந்தி விளங்கும் முப்புரிநூலை அணிந்தவரும் தண்மதியரும் நெற்றிக்கண்ணரும் காலனைக் கடிந்தவரும் ஆகிய சிவபிரானது இடம், குளிர்ந்த மலையின்கண் ஆண் பன்றி, பெண்பன்றியோடு கலந்து கீழிறங்கும் சாரலின்கண் கொம்புத்தேன் சேகரிக்கும் வண்டுகள் இசைபாட அதனைக் கேட்டுக் குயில் கூவும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

நீற்றே - திருநீற்றிலே. வெள்நூல் - வெளிய முப்புரிநூல். கூற்று - எமன். ஏர் - எழுச்சி. சிதைய - கெட, ஏர் சிதைய - அழகு கெட எனலுமாம். ஏறு + ஏனம். ஏற்றேனம் - ஆண்பன்றி. ஏனம் - (பெண்) பன்றி, இவையோடு அவை விரவி - இவ்விலங்கு முதலியவற்றினினத்தொடு அவ்விலங்கு முதலியவற்றினினம் கலந்து. இழி - கீழிறங்குகின்ற. கோல்தேன் - கொம்புத்தேன். கேளா - கேட்டு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ்சூடிப்
பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந்தாங்கி
மன்றத்து மண்முழவ மோங்கி மணிகொழித்து வயிரமுந்திக்
குன்றத் தருவி யயலே புனறதும்புங் குறும்பலாவே.

பொழிப்புரை :

பொன் போன்ற கொன்றை மலர்க் கொத்துக்களையும் இளமதியையும் கங்கையையும் சூடி, பின்னே கொத்தாக அமைந்த நீண்ட சடையை உடைய எம்பெருமானது இடம், பிரளய வெள்ளம் போலப் பெருகி மன்றத்தே அடிக்கப்படும் முழவம் போல ஒலித்து, மணி, வயிரம் முதலியவற்றுடன் சொரியும் அருவியின் புனல்ததும்பும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

பொன் தொத்த - பொன்போலும் பூங்கொத்துக்களையுடைய. பிள்ளைமதி - இளம்பிறை. புனல் - கங்கை. பின்தொத்த - பின் கூடிய. பிலயம் - பிரளயம். `கற்பமுறுபிரளயம் வந்து உலக மூன்றையும் அழிக்குங்காலமேனும் தற்பரரின் திரிகூடம்போல் எனக்கும் அழியாமை தருதல்வேண்டும்` (திருக்குற்றாலத் தலபுராணம், குறும்பலாச்சருக்கம் .17). திருக்குற்றாலத்தின் வீழும் அருவிகள் பிரளய வெள்ளம் போல்கின்ற பெருக்கைத் தாங்குவன. மன்றத்தில் (மண் -) மார்ச்சனையை உடைய முழவம்போல்கின்ற ஓசை மிக்கன. மணிகளைக் கொழிப்பன. வயிரமணிகளை உந்தி (- செலுத்தித் தள்ளி) வருவன. அவ்வருவிநீர், அயலிலுள்ள குறும் பலாவின்பால் ததும்பும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

ஏந்து திணிதிண்டோ ளிராவணனை மால்வரைக்கீழ் அடரவூன்றிச்
சாந்தமென நீறணிந்த சைவ ரிடம்போலுஞ் சாரற்சாரல்
பூந்தணறு வேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற் பொலியவேந்திக்
கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்பலாவே.

பொழிப்புரை :

உயர்ந்த திண்ணிய தோள்களை உடைய இராவணனைக் கயிலைமலையின் கீழ் அடர்த்தவரும், சாந்தமெனத் திருநீற்றை விரவப்பூசியவருமாகிய சைவரது இடம், மழைச்சாரலை உடைய மலைச்சாரலில் வேங்கைப்பூங்கொத்துக்களை ஒடித்து மத்தகத்தே அழகுற ஏந்திப் பெண்யானையோடு ஆண் யானைகள் சேர்ந்து வணங்கும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

திணி - நெருங்கிய. திண் - திண்ணிய, உறுதியுடைய, மால்வரை - பெரிய கயிலைமலை. சாந்தம் என நீறு அணிந்த :- `சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு` (தி .1 ப .52 பா .7). சாரல் சாரல் - மழைச்சாரலையுடைய மலைச்சாரலில். சாரல் தோறும் எனல் சிறவாது. வேங்கைப் பூக்கள் தண்மை (குளிர்ச்சி) யும் நறுமை (நன்மை) யும் உடையன.(நறுநாற்றம் - நன்னாற்றம்). இறுத்து - முறித்து. பிடி - பெண்யானைக்குக் கூந்தல் உண்டென்பது மரபு. `கூந்தல் மாலைக் குமரிக் பிடிக்குழாம்` - (சிந்தா. 858). `கூந்தற்பிடிக்குழாம்` (பா .11). `நறைக்கூந்தற்பிடி` எனக் குமரகுருபர முனிவர் (பா .45, 464) காலத்திலும் இவ்வழக்கம் இருந்தது. களிறு (ஆண்யானையு) ம், பிடியும் வேங்கைப் பூக்களைப் பறித்து, சிவபூஜைக்குரிய நெறியில் மத்தகத்தில் ஏந்திக்குறும்பலா நாதரை வழிபடுகின்றன. அவ்விலங்குகட்குள்ள சிவபத்தி மக்கட் பிறப்பெய்தியும் அடியேற்கு இல்லை. எப்பிறப்பில் உறுமோ?

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

அரவி னணையானு நான்முகனுங் காண்பரிய அண்ணல்சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ்சாரல்
மரவ மிருகரையு மல்லிகையுஞ் சண்பகமு மலர்ந்துமாந்தக்
குரவ முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே.

பொழிப்புரை :

பாம்பணையானாகிய திருமாலும், நான்முகனும் காணுதற்கு அரியவராக விளங்கிய தலைவரும், முடியில் பொருந்த இளம் பிறையைச் சூடியவரும் ஆகிய விகிர்தருக்கு உரிய இடம், விரிந்த பூக்களை உடைய மலைச்சாரலில் மரவம், மல்லிகை, சண்பகம் ஆகியன மலர்ந்து நிற்க அவற்றின் தேனை உண்ணக் குரவமலர்ப் பாவை முறுவல் செய்வது போல மலரும் குன்றினை அடுத்துள்ள குறும் பலாவாகும்.

குறிப்புரை :

அரவின் அணையான் - பாம்பின் படுக்கையையுடைய திருமால். காண்பு அரிய - காண்டற்கு அருமையாயுடைய. அண்ணல் - சிவபெருமான். சென்னி - தலை. விரவி - கலந்து. மரவம் - குங்கும மரம். மாந்த - உண்ண, குடிக்க. குரவம் - குராமரம். முறுவல் செய்ய - பற்களைப்போலப் பூக்க. (சிரிக்க என்ற பொருளும் தொனித்தல் அறிக).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூறுண்டு
காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ்வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவ னீள்கழைமேல் நிருத்தஞ்செய்யக்
கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்குங் குறும்பலாவே.

பொழிப்புரை :

உடலைமூடிய சீவரம் என்னும் ஆடையை அணிந்தவர்களும் முன்னால் அறுசுவை உணவுண்டு பின்னால் காடியைக் கூறாக்கி உண்போரும் ஆகிய சமணர்களை வெறுத்த சைவராகிய சிவபிரானது இடம் கற்கள் நிறைந்த மலையகத்தே நீண்ட மூங்கில்கள் வளைந்து நிற்க, அவற்றில் குரங்குகள் நின்றுஆட, வேடர்கள் குய் என்ற ஒலிக்குறிப்போடு கூவிக் கை கவிக்கும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

சீவரத்தார் - துவர் ஊட்டின சீலையை உடுத்தவர். உண்டு - உட்கொண்டு. முன்கூறி பின்கூறி :- `அறுசுவையுண்டி, அமர்ந்து இல்லாள் ஊட்ட மறுசிகை நீக்கி உண்டார்` என்றது சைனர் கூற்று. காடி - காடிநீர். சமண் - சமணர். வேய் - மூங்கில். குனிய - வளைய. கடுவன் - ஆண்குரங்கு. கழை - மூங்கிலின் கழை. நிருத்தம் - கூத்து. கூவி - அழைத்து. `குய்விளியாக்` `கூய் விளியாக்` என்று பாடாந்தரம் உண்டு. (சுவாமிநாத பண்டிதர் தலமுறைப் பதிப்பு. பக்கம் .911 பார்க்க). வேடர்கள் `குய்` என விளித்தல் உண்டு. கை மறிக்கும் :- கைகவிக்கும் `தக்கார் போற் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே` (சிந்தா .1227).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற்றண்ணல்
நம்பா னடிபரவு நான்மறையான் ஞானசம் பந்தன்சொன்ன
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக்கேட்பார்
தம்பால தீவினைகள் போயகல நல்வினைகள் தளராவன்றே.

பொழிப்புரை :

பூங்கொம்புகளைக் கொண்ட மலர்ச்சோலைகளைக் கொண்ட குறும்பலாவில் மேவிய கொல்லேற்றுத் தலைவனும், நம்மால் விரும்பப்படுபவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளைப் பரவும் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இன்பம் தரும் இப்பதிகப் பாடல்களை ஒதவல்லவரும் விரும்பிக்கேட்பவரும் தம்பால் உள்ள தீவினைகள் நீங்கப் பெற்று நல்வினைப் பயன்களைத் தளராது பெறுவர்.

குறிப்புரை :

`கொம்பார் சோலை` (திருக்குற்றாலப் பதிகம் . 1. பார்க்க). ஏற்றண்ணல் - எருதூரும் பெருமான். நம்பான்:- (பா.2. பார்க்க). நம்பன் - உயிர்களின் நசைக்கு உரியவன். `நம்பும் மேவும் நசையாகும்மே` (தொல். சொல்.உரிச் . 33). இன்பு ஆய பாடல் - பேரின்பமயமான திருப்பாக்கள். தம்பால - தம் இடத்திலுள்ள. தளரா - தளராமல் வளரும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி
அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்
செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந் திருநணாவே.

பொழிப்புரை :

பந்தாடும் விரலைஉடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, பாம்பை அணிகலனாகப் பூண்டு, எருதேறி, அழகிய மாலையாக அரவத்தைப் பூண்டுள்ள சிவபிரானது இடம், அழகிய குளிர்ந்த மலைச்சாரலின் அருகே மந்திகள் நடனமாடவும் பூம் பொழிலில் வண்டுகள் பாடவும் செந்தேனின் தெளிவில் தோய்ந்த மாங்கனிகள் உதிரும் வளமுடைய திருநணாவாகும்.

குறிப்புரை :

பந்து ஆர் விரல் மடவாள் - `பந்தார் விரலி` `பந்தமரும் விரல் மங்கைநல்லாள்` `பந்தார் விரலுமையாள்` `பந்துலாவிரற் பவள வாய்த் தேன்மொழிப் பாவை` `பந்துசேர் விரலாள்` எனப்பிற இடத்திலும் அருளியிருத்தலறிக. பாகம் - இடப்பக்கம். நாகம் - பாம்பு. ஏறது - இடபவாகனம். அம்தார் அரவு அணிந்த - அழகிய பாம்புகளை மாலைபோல் அணிந்த. அம்மான் - அருமகன் என்பதன்மரூஉ. அம் மஹாந் என்பதன் திரிபெனல் பிழை. பெம்மான் என்பது பெருமகாந் என்பதன் திரிபெனல் இல்லை. `எம்மான்`, `தம்மான்`, `கோமான்` என்பவற்றில் மகன் என்பதே திரிந்தது. வந்து - காற்று. மந்தி - குரங்கு. தெளி - தெளிவு. தேமா - தித்திக்கும் மா:- எழுவாய். கனி :- செயப்படு பொருள். உதிர்க்கும் :- பயனிலை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணையேந்தி
ஈட்டுந் துயரறுக்கு மெம்மா னிடம்போலும் இலைசூழ்கானில்
ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூழோசைச்
சேட்டார் மணிக ளணியுந் திரைசேர்க்குந் திருநணாவே.

பொழிப்புரை :

அழகியதொரு கண் பொலிந்து விளங்கும் நெற்றியினரும், ஒருகையில் வீணை ஏந்தியவரும், பழவினைத் தொகுப்பினைத் தீர்த்தருள்பவரும் ஆகிய எம் இறைவனது இடம், இலைகள் அடர்ந்த காட்டில் மலை அருவி இசைகாட்ட, மூங்கில்கள் உராய்ந்து ஓசை எடுப்ப உயர்ந்த மணிகளைவாரி அலைகள் கரைகளில் சேர்க்கும் திருநணாவாகும்.

குறிப்புரை :

நாட்டம் - கண், தீவிழி. வீணையேந்தி :- `மிக நல்ல வீணைதடவி` (பதி .221:- 1). ஈட்டும் துயர் - ஆகாமியகன்மம் (சஞ்சிதமாய்ப் பிராரப்தம்) ஆகுந்துயரம். கான் - காடு. விசை - வேகம். முந்தூழ் - மூங்கில். சேடு ஆர் - (மலையின்) உயரத்தில் பொருந்திய. திரை - அருவியின் அலைகள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலமேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிர்தர்க் கிடம்போலும் விரைசூழ்வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகண் மோத மயிலாலுஞ் சாரற்செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி யடிபணியுந் திருநணாவே.

பொழிப்புரை :

திருத்தமான இசையுடன் வேதங்களை அருளி, உமையொரு பாகராய் மின்னல் போன்ற செஞ்சடையினராய் விளங்கும் சிவபிரான் உலகம் ஏத்த விளங்கும் இடம், மணம் கமழும் மலையகத்தே குன்றுகள் போல அருவியின் திரைகள் எழுந்து மோத மயில்கள் ஆட வானவர்கள் சாரலை அடைந்து ஏத்தி வணங்கும் சிறப்பினதாகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

நன்று ஆங்கு இசைமொழிந்து - நன்றாக இசையுடைய சாமவேதத்தைப் பாடியருளி. வேதங்களைத் தோற்றுவித்தருளி எனலும், இசையைத் தோற்றியருளி எனலும் ஆம். மொழிந்து ஆய் ஏத்தத் தாங்கு செஞ்சடை விகிர்தர் என்று இயைக்க. நன்னுதலாள் - உமாதேவியார். ஞாலம் - பூமியிலுள்ளோர். உலகோர் எனலுமாம். மின் - ஒளி. விரை - மணம். வெற்பு - மலை. குன்று ஓங்கி வல்திரை (அலை) கள் மோத மயில் ஆலும் சாரல். செவ்வி - அழகு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

கையின் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து கரித்தோல்கொண்டு
மெய்யின் முழுதணிந்த விகிர்தர்க்கிடம்போலு மிடைந்துவானோர்
ஐய வரனே பெருமா னருளென்றென் றாதரிக்கச்
செய்ய கமலம் பொழிதே னளித்தியலுந் திருநணாவே.

பொழிப்புரை :

கையின் மழுவை ஏந்தி, காலில் சிலம்பை அணிந்து, யானையின் தோலைப் போர்த்து விளங்கும் விகிர்தனுக்குரிய இடம், தேவர்கள் கூடிநின்று `ஐயனே! அரனே! பெருமானே! அருள்புரிக` என்று விரும்பிப் போற்றுவதும், செந்தாமரை மலர்கள் தேனைத் தருவதுமாகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

கரி - கரத்தையுடையது, யானை. யானைத்தோலை உடம்பு முழுதும் மறையப் போர்த்தார் என்றவாறு. கைம் மழு, காற் சிலம்பு, மெய்ப்போர்வை. மிடைந்து - நெருங்கி. `ஐயனே`. அரனே! பெருமானே! அருள் என்று வானோர் விரும்பிப் போற்ற. செய்ய கமலம் - செந்தாமரை. பொழி -வெளிப்படுத்தும் தேன்தரும் என்றபடி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

முத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில் வெண்ணூல்பூண்டு
தொத்தேர் மலர்சடையில் வைத்தா ரிடம்போலுஞ் சோலைசூழ்ந்த
அத்தே னளியுண் களியா லிசைமுரல ஆலத்தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருநணாவே.

பொழிப்புரை :

முத்துப் போன்ற பற்களை உடைய உமையம்மை ஒருபாகமாக விளங்கத் தம் மார்பில் வெண்ணூல் பூண்டு பூங்கொத்துக்களைச் சடைமிசைச்சூடியுள்ள சிவபிரானது இடம், சோலைகளில் சூழ்ந்த வண்டுகள் தேனுண்ணும் விருப்பினால் இசைபாடி ஆட, தும்பிகள் `தெத்தே` என்ற ஒலிக்குறிப்போடு முரல விளங்கும் அழகுடையதும் பெயர் சொல்லக் கேட்டார் வினைகளைக் கெடுப்பதும் ஆகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

முத்து ஏர் நகையாள் - முத்தினைப்போலும் பற்களையுடைய உமாதேவியார். திருமார்பிற் பூணுநூல் பூண்டிருப்பது முன்னும் பின்னும் சிற்சில பதிகங்களிற் கூறப்படுகின்றது. தொத்து - (பூங்) கொத்து. ஏர் - அழகு. மலர் - கொன்றை (யும் பிறவும்). `சடையமர் கொன்றையினார்` (தி .2 ப .205. பா .3). `கடிபடு கூவிளமத்தங் கமழ்சடை மேலுடையார்` (? .6). அளி - வண்டுகள். களி - கள்ளுண்ட (மயக்கம்) களிப்பு. ஆல - ஒலிக்க. `தெத்தே` என்பது அநுகரணம். கேட்டார் வினைகெடுக்கும் - செவிமடுத்த நல்வினையாளரது தீவினையைப் போக்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

வில்லார் வரையாக மாநாக நாணாக வேடங்கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியுமானும்
அல்லாத சாதிகளு மங்கழன்மேற் கைகூப்ப அடியார்கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல வருள்புரியுந் திருநணாவே.

பொழிப்புரை :

மேருமலை வில்லாகப் பொருந்த, வாசுகி என்னும் பெரிய பாம்பு நாணாக அமைய, தான் பெருவீரனாக வேடம்புனைந்து அவுணர்தம் முப்புரங்களையும் எரித்தவனது இடம், புலி மான் இவையும் அல்லாத பிறவிலங்கினங்கள் யாவும் திருவடிகளைக் கைகூப்பி வணங்க, அடியவர்கூடி வழிபடுவதும், யாரும் செல்ல இயலாத வீட்டு நெறிக்குக் செல்ல இறைவன் அருள் புரிவதும் ஆகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

வில் ஆர் வரை ஆக - மேருமலை வில்லாகப் பொருந்த. மாநாகம் நாண் ஆக - பெரிய பாம்பு விற்கயிறாக. புல்லார் - தழுவாத (பகை)வர். புலி, மான் இரண்டும் பகை நீங்கி நட்புற்று வழிபடுதல் போல, அவை அல்லாத விலங்கினங்களும் திருவடியைக் கைகுவித்து வழிபடுகின்றன. அதுவே அன்றி, அடியார்கட்கு அச்சம் முதலியன உளவாகா வண்ணம், அவர்கள் போகாத வழியிலே போகின்றன. சிவபக்தியும் உடைய விலங்கினங்கட்குள்ள நல்வினை அடியேனுக்கில்லையே; இவ்வுயரிய மக்கட் பிறப்பை எய்தியும், அவனருளாலே அவன் தாள் வணங்க அவனருள் செய்தல் வேண்டும். அதற்கு நாம் பெருந்தவம் புரிதல் வேண்டும். கழல் - திருவடிக்கு ஆகுபெயர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கானார் களிற்றுரிவை மேன்மூடி யாடரவொன் றரைமேற்சாத்தி
ஊனார் தலையோட்டி லூணுகந்தான் றானுகந்த கோயிலெங்கும்
நானா விதத்தால் விரதிகணன் னாமமே யேத்திவாழ்த்தத்
தேனார் மலர்கொண்டடியா ரடிவணங்குந் திருநணாவே.

பொழிப்புரை :

காட்டில் வாழும் யானையின் தோலால் உடலை மூடி, ஆடும்பாம்பினை அரைமேல் கட்டி, ஊன் பொருந்திய தலையோட்டில் பலி ஏற்று உகப்பவராகிய சிவபிரான் உவப்புடன் மேவும் கோயில் தவவிரதிகள் எங்கும் பல்வேறு வகைகளில் திருப்பெயர்களைச் சொல்லி வாழ்த்த அடியவர் தேன்சிறந்த மலர்களைக் கொண்டு மகிழ்ந்து அடி வணங்குவதாகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

கான் - காடு. ஆர் - பொருந்திய, நிறைந்த. களிறு உரிவை - யானைத்தோல். மேல்மூடி - உடம்பின்மேல் போர்த்து மறைத்து ஆடு அரவு - ஆடும் பாம்பு. சாத்தி - சார்த்தி (கட்டி). ஊன் ஆர் தலை ஓட்டில் - மாமிசத்தொடு கூடிய பிரமகபாலத்தில். ஊண் - உண்ணுதலை. உகந்தான் - விரும்பினவன். உகந்த - விரும்பி எழுந்தருளியுள்ள. நானா விதத்தால் - பலவகையால் . விரதிகள் - தவத்தோர்கள் , யாகத்தோர்கள். நல்நாமமே - பிறவிப்பிணிக்கு மருந்தாகிய திருவைந்தெழுத்தையே, அடியார் அடி:- எழுவாய்த் தொடரும் ஆறன்றொகை நிலைத்தொடரும் ஆம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி
முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே.

பொழிப்புரை :

பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்தவரும், கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய இடம், மலைக்குகையில் வாழும் சிங்கம் தன் தன்மைகுன்றி அழல் பொழியும் தன் விழி குறைய அதனோடு போரிட்டு முன்றிலில் படிந்த அதனது குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை சென்று மறையும் திருநணாவாகும்.

குறிப்புரை :

மன்நீர் - மிக்க நீர். நிலைபெற்ற நீர் (கடல்). முனை - பகை. சீயம் - சிங்கம். அல் - இரவு. நீர்மை - தன்மை. குன்றி - குறைந்து. அழல் - நெருப்பு. முன்றில் - முற்றம். செந்நீர் - இரத்தம். கரி - யானை, சிங்கத்தின் தொலைவும் யானையின் வெற்றியும் குறிக்கப்பட்டன.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகடோறும்
கையார் பலியேற்ற கள்வ னிடம்போலுங் கழல்கணேடிப்
பொய்யா மறையானும் பூமிய ளந்தானும் போற்றமன்னிச்
செய்யா ரெரியா முருவ முறவணங்குந் திருநணாவே.

பொழிப்புரை :

கரிய நீலமணிபோன்ற மிடற்றினனும், உமைபாகனும் வீடுகள் தோறும் பலியேற்றுப் பலியிடுவார் உள்ளங்களைக் கவரும் கள்வனும் ஆகிய சிவபெருமானது இடம் திருமுடி திருவடிகளைத் தேடி வேதங்களை ஓதும் நான்முகனும் நிலம் அளந்த திருமாலும் போற்ற நிலைபேறுடைய செந்தீயுருவாய் உருவம் பெற அவர்கள் இருவரும் அப்பெருமானது அடிமுடி காணல் ஆற்றாது வந்து வழிபடும் திருநணாவாகும்.

குறிப்புரை :

மை ஆர் மணிமிடறன் - கருமை நிறைந்த நீலமணி போலும் திருக்கழுத்துடைய சிவபிரான். மேகத்தைப்போலும் அழகிய கண்டன் எனலுமாம். நேடி - தேடி. பொய்யாமறை - வேதம். மன்னி - நிலைத்து. செய் - செம்மை. எரியாம் உருவம் - தீப்பிழம்பு வடிவம். விடமுண்ட ஆற்றலுடையவன் பலியேற்று உண்ணல் வேண்டா. மங்கைபங்கன், தன்பால் இரப்பவர்க்கு ஈதல் வேண்டும். அவன், மனைகள் தோறும் சென்று இரப்பது, மங்கையுடைமைக்கு ஏலாது. தன் கோலத்திற்கு ஒவ்வாத செயலை மேற்கொண்டதால் அதற்கு ஓர் ஏது வெளிப்படாதிருத்தலைக் குறிக்கக் கள்வன் என்றார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

ஆடை யொழித்தங் கமணே திரிந்துண்பார் அல்லல்பேசி
மூடும் உருவ முகந்தா ருரையகற்று மூர்த்திகோயில்
ஓடு நதிசேரு நித்திலமு மொய்த்தகிலுங் கரையிற்சாரச்
சேடர் சிறந்தேத்தத் தோன்றி யொளிபெருகுந் திருநணாவே.

பொழிப்புரை :

ஆடையின்றி அம்மணமாகத் திரிந்து இரந்து உண்பவரும் துன்பமான செய்திகளைப் பேசி உடலைப் போர்த்தித் திரிபவரும் ஆகிய அமணர், பத்தர்களின் உரைகளைச் செவிமடுக்காத சிவமூர்த்தியின் கோயில், பெருகி ஓடும் நதி, முத்து, அகில் முதலியவற்றைக் கரையில் சேர்ப்பதும், பெரியோர் சிறப்புடன் வந்து வழிபடுவதும், கட்புலனாய் ஒளிபெருகி விளங்குவதுமாகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

`ஆடை ... உண்பார் என்பது திகம்பர சைனரையும் மூடும் உருவம் உகந்தார்` என்பது சுவேதாம்பர சைனரையும் தேரரையும் குறித்தன. நித்திலம் - முத்து. அகில் - அகில் மரம். சேடர் - பெரியோர். தோன்றி - செங்காந்தள். `கொய்ம்மலர தோன்றி போற்சூட்டுடைய சேவலும்` (சீவகசிந்தாமணி .73).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கல்வித் தகத்தாற் றிரைசூழ் கடற்காழிக் கவுணிசீரார்
நல்வித் தகத்தா லினிதுணரு ஞானசம் பந்தனெண்ணும்
சொல்வித் தகத்தா லிறைவன் றிருநணா வேத்துபாடல்
வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின்மேலே.

பொழிப்புரை :

கரையை அகழும் வித்தகத்தோடு அலைகள் சூழும் கடலைஅடுத்துள்ள காழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றி நல்ல ஞானத்தால் எல்லாவற்றையும் இனிதுணரும் ஞானசம்பந்தன் கருதிச் சொல் வித்தகத்துடன் இறைவனது திருநணாவை ஏத்திய இப்பதிகப்பாடல்களை மேம்பட்ட இசைத் திறமையால் பாடிப் போற்றுவார் இவ்வுலகில் பழியிலராவர்.

குறிப்புரை :

கல் வித்தகத்தால் - `கல்லயங்குதிரை சூழநீள்கலிக் காழி` (தி .2 ப .211 பா .4). கற்சாதுரியத்தால் என்பது பொருளாயினும் ஈண்டுப் பொருந்தாது. வித்தகம் - பெருமை; சிற்பம் முதலிய சிறந்த தொழில், அதிசயம் என்னும் பொருள்களுள் ஏதேனும் பொருந்தும், காழிச்சிறப்பாகும். `திரைசூழ்கடல்` என்பது காழிக்கு அடையாதல் கடலில் மிதந்ததும் கடலருகிலிருந்ததும் பற்றி. நல்வித்தகத்தால் - நல்ல ஞானத்தால். எண்ணும் சொல்வித்தகத்தால் - கருதிய சொற்சாதுரியத்தால். வல்வித்தகத்தால் - இசையில், பொருளில், அன்பில் வலிய சாதுரியத்தால். இம்மண்மேல் பழி இல்லாதவர் ஆவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலிவெங் குருமேற்சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்வண் புறவமண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் கொச்சைகழு மலமென்றின்ன
விளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் பகையெறிவித் திறைவனூரே.

பொழிப்புரை :

இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப்பெயர்களை மாறிமாறிவரப் பாடியருளியது. இளங்குமரனாகிய முருகக்கடவுளைப் பெற்றுத் தேவர்களின் பகைவர்களாகிய சூரபன்மன் முதலானோரை அழியச் செய்தருளிய சிவபிரானது ஊர், விளங்கிய புகழை உடைய பிரமனூர் வேணுபுரம் முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

இப்பதிகத்திலும் அடுத்த பதிகத்திலும் 206 - ஆவது பதிகத்தின் முதற்பாட்டிலுள்ள முறையே பன்னிரு திருப்பெயரும் அமைந்திருத்தல் அறிதற்பாலது. மேற்சோலை வளம் கவரும் தோணிபுரம் என்றது. உயர்ந்தோங்கிய சோலைகளினும் மேலோங்கி விளங்குவதால், சோலை வளத்தைத் தோணிமலை கவர்ந்து திகழ்வதாயிற்றென்றபடி. இளங்குமரன் - முருகக் கடவுள், பாலசுப்பிரமணியர். பெற்று - ஐந்து முகத்தோடு அதோமுகமும் கொண்டு. சேந்தனை முன் பயந்துலகில் தேவர்கள் தம்பகை கெடுத்தோன் திகழுமூரே. (தி.2.ப.210.பா.6) பகை - பகையாய அசுரர்களை. எறிவித்த - எறியச் செய்த. பெயரெச்சத்தகரம் தொக்கது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

திருவளருங் கழுமலமே கொச்சை தேவேந்திரனூர் அயனூர்தெய்வத்
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர் காழிதகு சண்பையொண்பா
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய் தோணிபுர முயர்ந்ததேவர்
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் கண்டத்தோன் விரும்புமூரே.

பொழிப்புரை :

பாற்கடலைக் கடையும்காலத்து உயர்ந்த தேவர்கள் அஞ்சப் பெருகி எழுந்த நஞ்சினை உண்டு அழகிய கண்டத்தோனாகிய சிவபிரான் விரும்பும் ஊர், திருமகள் வளரும் கழுமலம் முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

அயனூர் - பிரமபுரம். தெய்வத்தரு - கல்பக விருக்ஷாதி. சிலம்பனூர் - சிரபுரம். நாகநாதசுவாமியைச் சிலம்பன் என்றருளினார் போலும். நாகம் - மலை. ஒள்பா உருவளர் - அறிவொளியுடைய அருட்பாக்கள் வடிவில் வளர்கின்ற. வெருவ - அஞ்சியலற.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழிற் காழியிறை கொச்சையம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய மிக்கயனூர் அமரர்கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ தரனாளும் அமருமூரே.

பொழிப்புரை :

சிவபிரான் நாள்தோறும் எழுந்தருளிய ஊர், புகழ் பெற்றதும் வேதங்கள் வளர்வதுமான தோணிபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

மறை - வேதம். சிலம்பன் வாழ்ஊர் - சிரபுரம். நாகநாத சுவாமிகோயில்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் புகலிதராய் தோணிபுரம்வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே கொச்சைதேவேந் திரனூர்சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற் சிலம்பனூர் காழிசண்பை
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் பயன்நுகர்வோர் பரவுமூரே.

பொழிப்புரை :

பாக்களில் பொருந்திய அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்து அவற்றின் பயனை நுகரும் அறிஞர்கள் போற்றும் ஊர், மலையான் மகளாகிய பார்வதி தேவியாரின் கணவராகிய பெருமானார் விரும்பும் வெங்குரு முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

மாமலையாள் - இமாசல குமாரியான உமாதேவியார். சேமம் - காவல். பூமகனூர் - பிரமபுரம். பொலிவு - விளக்கம். விறல் - வலிமை, வெற்றி. கலை எட்டெட்டு - அறுபத்து நான்கு கலைகள். நுகர் வோர் - அநுபவிக்கும் அறிஞர்கள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி வயங்கொச்சை தயங்குபூமேல்
விரைச்சேருங் கழுமலமெய் யுணர்ந்தயனூர் விண்ணவர்தங் கோனூர்வென்றித்
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருச் செல்வம்பெருகு தோணிபுரஞ்சீர்
உரைச்சேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவ முலகத்தி லுயர்ந்தவூரே.

பொழிப்புரை :

உலகின்கண் உயர்ந்தஊர், தரைத்தேவராகிய அந்தணர் பணியும் சண்பை முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

தரைத்தேவர் - பூசுரர், அந்தணர். தமிழ்க்காழி என்றதால் ஸ்ரீகாளிபுரம் என்றதன் திரிபென்ற கூற்று ஆராயத்தக்கது. விரை - மணம். மெய் உணர்ந்த அயன் என்க. அயனூர் - பிரமபுரம். விண்ணவர்தம் கோன்ஊர் - வேணுபுரம். திலை - அரை. உரை - (புகழ்) மொழி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு சிரபுரம்பூங் காழிசண்பை
எண்டிசையோ ரிறைஞ்சியவெங் குருப்புகலி பூந்தராய் தோணிபுரஞ்சீர்
வண்டமரும் பொழின்மல்கு கழுமலநற் கொச்சைவா னவர்தங்கோனூர்
அண்டயனூ ரிவையென்ப ரருங்கூற்றை யுதைத்துகந்த வப்பனூரே.

பொழிப்புரை :

வெல்லுதற்கு அரிய கூற்றுவனை உதைத்து உகந்த சிவபெருமானது ஊர், தாமரை மலர்களால் நிறைந்த வயல்கள் சூழ்ந்த புறவம் முதலான பன்னிரு திருப்பெயர்கள் பெற்ற சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

புண்டரிகத்து ஆர்வயல் - தாமரை மலர்களால் நிறைந்த கழனி. இறைஞ்சிய - வணங்கிய. வானவர் கோனூர் - வேணுபுரம். அண்ட அயனூர் - பிரமதேவனூர். பிரமபுரம். காலசங்காரகர்த்தா என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங் கோனூர்வண் புகலியிஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு சண்பைவியன் காழிகொச்சை
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந் தோணிபுரம் பூந்தராய்சீர்ப்
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம் பால்வண்ணன் பயிலுமூரே.

பொழிப்புரை :

வெண்ணீறு பூசிப் பால் போன்ற நிறமுடையோனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர், கொடைத்தன்மை நிரம்பியோர் வாழும் மேன்மையான பிரமபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

வண்மை - கொடை. வரத்து - மேன்மையையுடைய இஞ்சி - மதில். மிக்கோர் - ஞானம், தவம், தொண்டு, பூஜை முதலியவற்றால் மேம்பட்டவர். கற்றோர் - சிவபிரானை வழிபடும் நெறியை உணர்ந்தோர். வேதாகமங்களைக் கற்றவர் எனலுமாம். பார் - உலகம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் காழிமூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை வேணுபுரங் கமலநீடு
கூடியவ னூர்வளர்வெங் குருப்புகலி தராய்தோணி புரங்கூடப்போர்
தேடியுழ லவுணர்பயி றிரிபுரங்கள் செற்றமலைச் சிலையனூரே.

பொழிப்புரை :

போர் உடற்றத்தேடித் திரிந்த அவுணர்வாழும் திரிபுரங்களைச் செற்ற சிவபிரானது ஊர், துர்க்கையால் காவல் செய்யப் பெறும் புறவம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

மோடி - துர்க்கை. புறங்காக்கும் - காவல் செய்யும். மோடி புறங்காக்கும் ஊராகிய புறவம் என்க. (தி .2 ப .210 பா .8) சீர்ச்சிலம்பன் ஊர் - சிரபுரம். கமல நீடுகூடியவன் ஊர் - பிரமபுரம். (தாமரையில் வாழ்பவன்.) போர். புரங்கள் செற்றமலை சிலையன் - திரிபுரத்தசுரரை அழித்த மேருவில்லியாகிய சிவபிரான்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்றன்னூர்
நிரக்கவரு புனற்புறவ நின்றதவத் தயனூர்சீர்த் தேவர்கோனூர்
வரக்கரவாப் புகலிவெங் குருமாசி லாச்சண்பை காழிகொச்சை
அரக்கன்விற லழித்தருளி கழுமலமந் தணர்வேத மறாதவூரே.

பொழிப்புரை :

அந்தணர்களால் ஓதப்பெறும் வேதம் இடையறவுபடாத ஊர், கருணையே வடிவான சிவபிரானது தோணிபுரம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

இரக்கம் உடை இறையவன் - கருணையே உருவமாகிய சிவபிரான். நிரக்க வருபுனல் என்றது நீரின் பெருக்கத்தையும் விரைவையும் உணர்த்தும். தவத்து அயன் - தவத்தையுடைய பிரமன். புகல் என்றெண்ணி வரக் கரவாத புகலி. மாசு - குற்றம். அரக்கன் - இராவணன். விறல் - வலி. அருளி - சிவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங் கொச்சையிந் திரனூர்மெய்மை
நூலோது மயன்றனூர் நுண்ணறிவார் குருப்புகலி தராய்தூநீர்மேல்
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் சிலம்பனூர் செருச்செய்தன்று
மாலோடு மயனறியான் வண்காழி சண்பைமண்ணோர் வாழ்த்துமூரே.

பொழிப்புரை :

உலகினுள்ளோர் வாழ்த்தும் ஊர், மேலானதாக ஓதப்பெறும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

மெய்த்தவம் - உண்மைத் தவம்(தபசு). மெய்ம்மை நூல் - சத்தியமான வேதங்கள், நுணி அறிவு ஆர் குரு - நுட்பமான அறிவு பொருந்திய குரு, வெங்குரு. சேல் - மீனினம். செரு - போர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் கொச்சைகழு மலமன்பானூர்
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமொண் புறவநண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர் புகலிவெங் குருவுமென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா வகைநின்றான் றங்குமூரே.

பொழிப்புரை :

சாக்கியர் சமணர்களால் அறியப் பெறாதவனாகிய சிவபிரான் தங்கும் ஊர், ஆக்கம் மிக்க ஊராகிய சண்பை முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

ஆக்கு - ஆக்கம். `ஆக்கம்மிக்க ஊர்`(தி .2 பா .210 பா .8). (மன்று மன்றம் இன்பு இன்பம். நீட்டு நீட்டம். பாட்டு பாட்டம் என்பவைபோல் அம்முப்பெற்றது). ஆக்கம் அமர் சீர் ஊர் என்க. அன்பான் ஊர் - அன்புருவான சிவபிரான் ஊர். அன்பானூராகிய தோணிபுரம். `அன்பே சிவம்`. கமலத்தோன் - பிரமதேவன். புரந்தரன் - இந்திரன். ஓக்கம் - உயர்ச்சி. ஓங்குவது ஓக்கம். நீங்குவது நீக்கம். தேங்குவது தேக்கம். அடங்குவது அடக்கம். தொடங்குவது தொடக்கம். பழக்கம், பழகு. ஙகரவொற்றில்லை. இறக்கம் - இறங்கு. ஙகரவொற்றிருக்கின்றது. பகுதியில் அவ்வொற்றிருப்பினும் இன்றாயினும் வல்லொற்றுடைமை காண்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 12

அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய் தோணிபுர மணிநீர்ப்பொய்கை
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் புகழ்க்காழி சண்பைதொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் வேணுபுர மயனூர்மேலிச்
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் றான்சொன்ன தமிழ்தரிப்போர் தவஞ்செய்தோரே.

பொழிப்புரை :

புகழ்மிக்க தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் திருவருளில் திளைத்துச் சக்கரமாகச் சொன்ன இத்தமிழ் மாலையைப் போற்றி நாவில் தரிப்போர் தவஞ்செய்தோர் ஆவர்.

குறிப்புரை :

அக்கரம் (அக்ஷரம்) - அழிவின்மை. க்ஷரம் - அழிவு. அழியாத தருமனூர் என்றது வெங்குருவினை. தருமன் - இயமதருமன் `...... பூவைபாகன். அன்பழுத்தும் அறமகற்கு இவ்வருள் பழுத்து ..... பின்பழிச்சி ஒரு தருமன் தன் பதத்தின் இனிதிருக்கப் பெற்றான்` (சீகாழித் தலபுராணம்) (தி .7 ப .38 பா .9). புக்கரம் - தாமரை. தொல்லூர் - (புராதனபுரி). பழமையதாகிய ஊர். மிக்கரஞ்சீர் - மிக்கு அரன் சீர் என்றதாகக் கொண்டுரைக்கலாம். நன்கு புலப்பட்டிலது. இச்சக்கரம் எனச்சுட்டியதால், இப்பதிகம் சித்திர கவியுள் ஒன்றான சக்கர பந்தம் என்றறிந்து முன்னோர் தலைப்பிற் குறித்தனர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் குறைவிலாப் புகலிபூமேன்
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம் பூந்தராய் வாய்ந்தவிஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை புகழ்ச்சண்பை காழிகொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் கழுமலநாங் கருதுமூரே.

பொழிப்புரை :

நாம் கருதும் ஊர் பிரமபுரம் முதலான பன்னிரு பெயர்களையுடைய கழுமலமாகும்.

குறிப்புரை :

பூமேல் மாமகளூர் வெங்குரு - திருமகள் பரவும் ஊராகிய வெங்குரு, அவள் வாழும் ஊர் எனலுமாம், செல்வம் பற்றியது. இஞ்சி - மதில். சேமம் - காவல். காமனை - மன்மதனை. நுதல் - நெற்றி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த் தோணிபுரங் கனகமாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா யுலகாருங் கொச்சைகாழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் செங்கமலத் தயனூர்தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை முடியண்ணல் தங்குமூரே.

பொழிப்புரை :

சடைமுடியை உடைய அண்ணலாகிய சிவபிரான் தங்கும் ஊர் நல்ல, எண்ணமுடைய மறையவர் வாழும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களை உடைய காழிப்பதியாகும்.

குறிப்புரை :

கனகம் - பொன். திரு - இலக்குமி, அழகு. தரு - மரம், கற்பகம் முதலியவை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை யொளிமருவு காழிகொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் தோணிபுரங் கற்றோரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப் புறவமய னூர்பூங்கற்பத்
தார்மருவு மிந்திரனூர் புகலிவெங் குருக்கங்கை தரித்தோனூரே.

பொழிப்புரை :

கங்கையைச் சடையில் தரித்த சிவபிரானது ஊர் விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைத் தொடுமாறு உயர்ந்த மதில்களை உடைய சண்பை முதலிய பன்னிருபெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

ஊர்மதி - விண் ஊர்ந்து செல்லும் சந்திரன். கதுவ - பற்ற. கற்பத்தார் - கற்பகப்பூமாலை. தரித்தோன் - தாங்கியவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் தோணிபுரந் தரியாரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தராய்புகலி யிமையோர்கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி சண்பைசெழு மறைகளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ னூருலகில் விளங்குமூரே.

பொழிப்புரை :

உலகில் விளங்கும் ஊர், வேதங்களை நாவில் தரித்த அந்தணர்கள் மிகுந்த வெங்குரு முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

தரியார் - பகைவர். இஞ்சி - மும்மதில், திரிபுரம். இமையோர்கோன் - இந்திரன். விரை - மணம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை வேணுபுர மேகமேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி யெழிற்புகலி புறவமேரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் சிரபுரம்வன் னஞ்சமுண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா மன்னுடலங் காய்ந்தோனூரே.

பொழிப்புரை :

காமன் உடலைக் காய்ந்த சிவபிரானது ஊர், விளங்கும் பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

மேகம் ஏய்க்கும் - மேகமண்டலத்தை ஒன்ற ஓங்கும். கமுகம் - பாக்குமரம். எழில் - அழகு. ஏர் ஆர் வளம் - அழகு நிறைந்த வளமை. வல்நஞ்சம் - வலியவிடம். களங்கம் - குற்றம். களத்தவன் - (திருநீல) கண்டன். காமன் - மன்மதன். காய்ந்தோன் - காய விழித்தவன், கோபித்தவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத் தோணிபுரஞ்சீர்
ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ ரிருங்கமலத் தயனூரின்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை காழிசண்பை
சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம் பகைகெடுத்தோன் றிகழுமூரே.

பொழிப்புரை :

முருகப்பெருமானைப் பெற்றெடுத்து உலகில் தேவர்களின் பகைவனாகிய சூரபன்மனை அழித்தருளியவனும் சினந்துவந்த காலனை அன்று உதைத்தவனும் ஆகிய சிவபிரானது ஊர், கழுமலம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

காய்ந்து - கோபித்து. காலனை - இயமனை. சேந்தனை - முருகப்பிரானை. பயந்து - பெற்று. பகை - சூரன்படை. (பதி . 209. பா .1. பார்க்க).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

திகழ்மாட மலிசண்பை பூந்தராய் பிரமனூர் காழிதேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் வயங்கொச்சை புறவம்விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் குருவெம்போர் மகிடற்செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள் பணிந்துலகி னின்றவூரே.

பொழிப்புரை :

கொடியபோரில் மகிடாசுரனைக் கொன்று விளங்கும் நீலியாகிய துர்க்கை சிவபிரான் அடியிணைகளைப் பணிந்து தனது கொலைப் பழியைப் போக்கிக் கொண்டு நின்ற ஊர், விளங்கும் மாடவீடுகளைக் கொண்ட சண்பை முதலிய பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

மலி - மலிந்த, மிக்க. தேசு - ஒளி. மகிடற்செற்று - மகிடாசுரனைக் கொன்று. மகிடம் - எருமைக்கடா. நீலி - மாயோள், (துர்க்கை) கறுப்பாயி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி புரநிகழும் வேணுமன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி சண்பைவளர் புறவமோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் தராய்புகலி தேவர்கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்க டாங்காக்க மிக்கவூரே.

பொழிப்புரை :

பூதங்களால் தாங்கப் பெறும் ஆக்கம் மிக்க ஊர், நிலைத்துநின்ற மதில்களால் சூழப்பட்ட வெங்குரு முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

மன்றில் - பொதியில், புறம் என்னும் பொருளது. மன்றில் ஒன்று எனல்பொருந்து மேற்கொள்க. மோடி - துர்க்கை (தி .2 ப .209. பா .8). வென்றி - வெற்றி. பூதங்கள் தாங்கும் ஆக்கம் மிக்க ஊர். (தி .2 ப .210. பா .11).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

மிக்ககம லத்தயனூர் விளங்குபுற வஞ்சண்பை காழிகொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுர மதிற்புகலி வெங்குருவல் லரக்கன் றிண்டோள்
ஒக்கவிரு பதுமுடிக ளொருபதுமீ டழித்துகந்த வெம்மானூரே.

பொழிப்புரை :

வலிய அரக்கனாகிய இராவணனின் திண்ணிய தோள்கள் இருபது, முடிகள் பத்து ஆகியவற்றின் பெருமையை அழித்த எம்தலைவனாகிய சிவபிரானது ஊர், அழகு மிக்க தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலம் என்பது முதலான பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

தூ - தூய்மையுடைய. எல்லாவுயிர்க்கும் பற்றுக் கோடாகிய. மை - மேகம், கருமையுமாம். பொழில் - சோலை. அரக்கன் - இராவணன். ஈடு - வலிமை, பெருமையுமாம். எம்மான் எம்பெருமான்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் கழுமலநற் புகலியென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் தரனூர்நற் றோணிபுரம்போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய னூர்தராய் சண்பைகாரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் விளங்கியவெம் மிறைவனூரே.

பொழிப்புரை :

மேகம் போன்ற கரிய மேனியனாகிய திருமால், தாமரைமலர் மேல் உறையும் நான்முகன் ஆகியோர் உணராத வகையில் தழல் உருவாய் நின்ற இறைவனது ஊர், எம் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெங்குருமுதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

பொய்ம்மாண்பிலோர் - மெய்ப்புகழுடையோர். புரந்தரன் - இந்திரன். கைம்மா - துதிக்கையையுடைய யானை. காரின் மெய் மால் - மேகம்போலும் திருமேனியையுடைய திருமால். பூமகன் - பிரமன். தழல் - தீ.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

இறைவனமர் சண்பையெழிற் புறவமய னூரிமையோர்க் கதிபன்சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி புரங்குணமார் பூந்தராய்நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் கொச்சைகழு மலந்தேசின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் பரிசறியா வம்மானூரே.

பொழிப்புரை :

ஒளியின்றி மயிரைப் பறித்தெடுத்த முண்டிதராய அமண் கீழோர் சாக்கியர் ஆகியோரால் அறியமுடியாத தலைவராகிய சிவபெருமானது ஊர், இறைவனமர் சண்பை முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

இறைவன் - சிவபிரான். அமர் - விரும்பியெழுந்தருளிய. எழில் - அழகு. அதிபன் - இந்திரன். சிறை - அணை. தேசு - ஒளி. கையர் - கீழோர். பரிசு - சிவமாம்பெற்றி, சிவன் இயல்பு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 12

அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் குருக்கொச்சை புறவமஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி தோணிபுரந் தேவர்கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராயயனூர் வழிமுடக்கு மாவின்பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன் றமிழ்கற்போர் தக்கோர்தாமே.

பொழிப்புரை :

அம்மானாகிய சிவபிரான் எழுந்தருளிய கழுமலம் முதலான பன்னிரு திருப்பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியின் மீது வழியில் மாறிமாறி பாய்ந்துள்ள கோமூத்திரியின் அமைப்பில் அங்குள்ள சிவபிரான் மேல் ஒன்றிய மனமுடைய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலையைக் கற்போர் தக்கவராவர்.

குறிப்புரை :

மா - பெருமை, இலக்குமியுமாம். மானத்து - பெருமையையுடைய. ஒள் - ஒளி. அம்மால் - அழகிய திருமால் (கிருட்டிண மூர்த்தி). சிவபிரானுமாம். வழிமுடக்கும் ஆவின் பாச்சல் :- கோமூத்திரி என்னுஞ் சித்திரபந்தத்தினியல்பு கூறப்பட்டது. தம்மான் - தம் பிரான். `தன்னடைந்தார் தம்பிரான் ஆவான்` (தி .2 ப .176. பா .1). தம்மானை ஒன்றிய என்று இரண்டனுருபு விரித்து. சிவபிரானொடு அத்து விதமுற்ற என்று பொருள் கொள்க. தமிழ் - `சைவமும் தமிழும்` என்ற தொடர்க்கண் உள்ள தமிழ்மறை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

விண்ணியங்கு மதிக்கண்ணி யான்விரி யுஞ்சடைப்
பெண்ணயங்கொள் திருமேனி யான்பெரு மானனற்
கண்ணயங்கொள் திருநெற்றி யான்கலிக் காழியுண்
மண்ணயங்கொண் மறையாள ரேத்துமலர்ப் பாதனே.

பொழிப்புரை :

ஆரவாரம் நிறைந்த காழிப்பதியுள், உலகம் நலம் பெறமறைவல்ல அந்தணர் ஏத்தும் மலர்போன்ற திருவடிகளை உடைய இறைவன், விண்ணில் இயங்கும் பிறைமதிக் கண்ணியன்; விரியும் சடையோடு பெண்ணொரு பாகங்கொண்ட மேனியன்: பெரியோன்: அனல் விழியைக் கொண்ட நெற்றியன்.

குறிப்புரை :

விண் இயங்கும் மதிக்கண்ணியான் - ஆகாயத்தில் சஞ்சரிக்கும் திங்களாகிய தலைமாலையை அணிந்த சிவபிரான். பெண் நயம் கொள் திருமேனியான் - அர்த்தநாரீசுவரவடிவினன். அனல் கண் நயம்கொள் திருநெற்றியான் - நெருப்புக் கண்ணைக்கொண்ட அழகிய நெற்றியை உடையவன். மண் நயம்கொள் - மண்ணோர் நலமாக்கொண்ட.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
பலிவி ரும்பியதொர் கையினான்பர மேட்டியான்
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்
நலிய வந்தவினை தீர்த்துகந்தவெந் நம்பனே.

பொழிப்புரை :

வறுமை முதலியவற்றைத் தவிர்க்க வேள்வி முதலியன செய்யும் மறையவர் வாழும் சீகாழிப்பதியுள் நம்மை நலிய வரும் வினைகளைத் தீர்த்து மகிழும் நம்பனாகிய இறைவன், வலிய காலன் உயிரைப் போக்கியவன்: உமையம்மையோடு கூடியிருப்பவன்: பலியேற்கும் கையினை உடையவன்: மேலானவன்.

குறிப்புரை :

மடவாள் - உமாதேவியார். பரமேட்டியான் - தனக்கு மேலான தொன்றில்லாத ஸ்தாநத்தையுடைய முழுமுதற் பொருள். ஆன் விகுதி தமிழ். கலியை - வறுமை முதலிய துன்பங்களை. உகந்த - உயர்ந்த. எம் நம்பன் - எம் விருப்பாயுள்ளவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

சுற்ற லாநற்புலித்தோலசைத்தயன் வெண்டலைத்
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுண்
மற்ற யங்குதிர டோளெம்மைந்தனவ நல்லனே.

பொழிப்புரை :

கல்வி கேள்விகளில் வல்ல பெரியோர் வாழும் காழிப்பதியுள் மற்போர் செய்யத்தக்க திரண்ட தோள்களை உடைய வலியோனாகிய சிவபிரான் நல்லன். புலித்தோலை இடையிற்சுற்றிப் பிரமனது தலையோட்டில் உண்பலிதேரும் இயல்பினன்.

குறிப்புரை :

சுற்றல் ஆம் புலித்தோல்:- சுற்றுதல் - அரையிற் சுற்றி உடுத்தல். அசைத்து - கட்டி. துற்றல் - உண்ணல். சுடுநீறு -(தி .2 ப .214 பா .2.) மல் - வலிமை. தயங்கு - விளங்குகின்ற. மைந்தன் - வலியன், வீரன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை
மல்ல யங்குதிர டோள்களாரநட மாடியுங்
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுட்
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.

பொழிப்புரை :

கற்களையும் அசையச்செய்யும் கடல் அலை நீர் சூழும் காழிப்பதியுள் பழமையாகப் பரவிய புகழ் விரும்பிச்சேர்தற்கு உரிய ஒளி வண்ணனாகிய சிவபிரான், பற்கள் விளங்கும் தலையோட்டை ஏந்தியவன்: பலரும் இறந்தபின் எரிக்கப்படும் சுடுகாட்டில், மற்போருடற்ற வல்ல திரண்ட தோள்கள் அசைய நடனம் ஆடுபவன்.

குறிப்புரை :

அயங்கு - அசங்கிய, நிலைகுலைந்த, (தி .2 ப .140 பா.3). மல் ..... தோள் - வலிமையால் அசைந்த தோள். `மற்றயங்கு திரடோள்` என்றதை மேற்பாட்டிற் காண்க. தோள்கள் ஆர நடமாடுதல். `கல் அயங்குதிரை சூழ`:- `கற்களில் அசங்கிய அலை`. `கல் வித்தகத்தால் திரை சூழ் கடற்காழி`(தி .2. ப .208 பா .11). தொல் புகழ், அயங்குபுகழ் -(எங்கும்) பரவிய கீர்த்தி. பேண - அடியவர் விரும்பிப் புகல. `பொருள் சேர் புகழ் புரிந்தார்` சுடர் வண்ணன்:- `அந்தி வண்ணன் அழல் வண்ணன்` என்பன அவன் திருநாமங்கள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தூநயங்கொடிரு மேனியிற் பொடிப்பூசிப்போய்
நாநயங்கொண்மறை யோதிமா தொருபாகமாக்
கானயங்கொள்புனல் வாசமார் கலிக்காழியுட்
டேனயங்கொண்முடி யானைந்தாடிய செல்வனே.

பொழிப்புரை :

மாதொருபாகனாய், காடுகளில் படிந்துவரும் மணம்மிக்க நீர் சூழ்ந்த காழிப்பதியுள் தேன் மணம் கமழும் திருமுடியில் ஆனைந்தாடிய செல்வனாகிய சிவபிரான், தூய அழகிய திருமேனியில் திருநீறு பூசியவன்: நாநயம் பெற வேதங்களை அருளியவன்.

குறிப்புரை :

தூ - பரிசுத்தம். நயம் - நன்மை. நாநயம்கொள் மறை - நாவினது நற்பயனைக் கொண்ட வேதம். நாவாலுள்ளதாய நயம். `நாநலம்` - நாவாலுளதாய நலம்.(குறள்.641 உரை) பூசிப்போய்க் கொள்மறையோதி என்றியைக்க. ஓதி - பெயர். தேன் கொள்முடி - தேனாட்டப்படும் திருமுடி. அம் முடியில் ஆனைந்து ஆடிய செல்வன். ஆனைந்து:- பால், தயிர், நெய்; பிறசேரா.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே
மொழியி லங்கும்மட மங்கைபாக முகந்தவன்
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுட்
பழியிலங்குந்துய ரொன்றிலாப் பரமேட்டியே.

பொழிப்புரை :

உப்பங்கழிகளோடு கூடிய கடல் சூழ்ந்திலங்கும் குளிர்ந்த காழிப்பதியுள் பிறர் பழிக்கும் துன்பம் ஒன்றுமில்லாத மேன்மையோனாகிய சிவபிரான், சுழிகளைக் கொண்ட கங்கையைச் சடையில் கொண்டுள்ளதன் மேலும் இனிய மொழியினளாகிய உமைமங்கையை ஒரு பாகமாக உகந்தவன்.

குறிப்புரை :

சுழி - நீர்ச்சுழி. `கொவ்வைத்துவர் வாயார் குடைந்தாடுந் திருச்சுழியல்` (தி .7. பா . 834). மொழி இலங்கும் மடமங்கை பாகம் உகந்தவன் - `மாதியலும் பாதியன்`. கங்கையைச் சடையிலும், உமைநங்கையை வாமபாகத்திலும் உடையவன். பழி இலங்கும் துயர் - நிந்தையால் தோன்றும் துயரம். ஒன்று - சிறிதும் என்னும் பொருட்டு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

முடியி லங்கும்முயர் சிந்தையான்முனி வர்தொழ
வடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுட்
கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே.

பொழிப்புரை :

முடியின் மேலிடத்தில் சிந்தையைச் செலுத்தும் முனிவர்கள் தொழ, நன்றாக வடிக்கப்பெற்று விளங்கும் கழல் காலில் ஆர்க்க அனலைக் கையில் ஏந்தி ஆடும் இறைவன், மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியுள் கொடிபோலும் இடையினளாகிய பார்வதிதேவியோடு குடி கொண்டுள்ளான்.

குறிப்புரை :

முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ அடி இலங்கும் கழல் ஆர்க்க - துவாதசாந்தத் தலத்தில் விளங்கும் உயர்ந்த தியானத்தால் மனனசீலர்கள் வழிபடத் திருவடியில் பிரகாசிக்கும் கழல்கள் ஒலிக்க, கொண்டது முடி இலங்கும் என்று இயைத்துப் பொருள் கூறலும் ஆம். கொடி இலங்கும் இடையாள் - மின்னல் கொடி போலத் திகழும் மெல்லிடையுடைய உமாதேவியார். தொழ ஆர்க்க ஏந்தியும் காழியுட் குடிகொண்டதோ என்று அறிவினாவாக்குக.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

வல்ல ரக்கன்வரை பேர்க்கவந் தவன்றோண்முடி
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்
நல்லொ ருக்கியதொர் சிந்தையார்மலர் தூவவே
தொல்லி ருக்கும்மறை யேத்துகந்துடன் வாழுமே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்க்க வந்த வலிய அரக்கனாகிய இராவணனின் தோள் முடி ஆகியவற்றை அம்மலையாலேயே அடர்த்து அவனது வலிமையைச் செற்ற சிவபிரான், ஒருமைப்பாடுடைய நற்சிந்தையார் மலர்தூவிப் போற்றவும் தொன்மையான இருக்கு வேதமொழிகளைப் பாடி வழிபடவும் மகிழ்ந்து உமையம்மையோடு விளங்குகின்றான்.

குறிப்புரை :

நல்சிந்தை, ஒருக்கியதோர் சிந்தை - ஒற்றுமையாக்கிய தொருமனம். சிவனோடொற்றுமை. அத்துவிதம், மலர்தூவ - பூக்களைத்தூய் வழிபட. தொல் - தொன்மை. இருக்கும் மறை - விரித்தல் விகாரமாக்கொண்டு இருக்கு வேதம் எனல் சிறந்தது, இருக்கும் எனில் அழியாது நிலைபெறும் என்க. மறையேத்து - வேதஸ்துதியை. உடன் - அம்பிகையுடன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்
வெருவ நின்றதிரை யோதம்வார்வியன் முத்தவை
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.

பொழிப்புரை :

பொருந்திய நான்மறைகளை ஓதுபவனாகிய பிரமன், நீலமணி போன்ற நிறத்தினை உடைய திருமால் ஆகிய இருவரும் கூடி ஏத்த எரிஉருவாய் நின்ற சிவபிரானது ஊர், அஞ்சுமாறு வரும் கடல் அலைகளையும் அதனால் பெருகும் ஓதநீரையும் பெரிய முத்துக்கள், சங்குகள் சேரும் கரிய வைக்கோலைக் கொண்டுள்ள வயல்களையும் உடைய காழியாகும்.

குறிப்புரை :

எரியான்தன் ஊர் - தீப்பிழம்பாக நின்றவனதூர். வியல் முத்தவை - அகன்று பரவிய முத்துக்கள். கருவை - கரிய வைக்கோல். கருவேல மரமுமாம். முத்தவையும் சங்கும் சேர்காழி என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

நன்றியொன்றுமுண ராதவன் சமண்சாக்கியர்
அன்றியங்கவர் சொன்னசொல் லவைகொள்கிலான்
கன்றுமேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்
வென்றி சேர்வியன் கோயில்கொண்ட விடையாளனே.

பொழிப்புரை :

கன்றும் அதன் தாயாகிய எருமையும் இளங்கானலில் வாழும் காழிப்பதியுள் வெற்றி பொருந்திய பெரிய கோயிலை இடமாகக் கொண்ட விடையூர்தியானாகிய சிவபிரான் நன்மையைச் சிறிதும் உணராத வலிய சமணர்களும் சாக்கியர்களும் தம்முள் மாறுபட்டுப் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதவன்.

குறிப்புரை :

நன்றி - நன்மை. ஒன்றும் - சிறிதும். அன்றி - பகைத்து. கானல் - கடற்கரைச்சோலை. வென்றி - வெற்றி. வியன்கோயில் - பெரிய கோயில். விடை ஆளன் - எருதை (ஊர்தியாக) ஆள்பவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள்
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.

பொழிப்புரை :

மூன்று கண்களை உடைய முதலோனாகிய சிவபிரான் வாழும் காழிப்பதியுள் அத்தலைவனின் தண்ணருளைப் பேணி ஞானசம்பந்தன் சொல்லிய இப்பாடல்களை மூவகை வண்ணங்களையும் தெரிந்து இசையோடு பாடுவார் விண்ணுலகும் மண்ணுலகும் விரிகின்ற புகழாளர் ஆவர்.

குறிப்புரை :

கண்ணு மூன்றும் - முக்கண்ணும். உடை - உடைய. ஆதி - முதல்வன். உம்மை இனைத்தென அறிந்த சினைக்கு வினைப்படுதொகுதியின் வேண்டுவது.(தொல். சொல் . 33) உடை - குறிப்பு வினை. வண்ணம் மூன்றும் - மெலிவு, சமன், வலிவு என்பவை. இசை பாடுவார், இம்மூன்றும் தெரியாது பாடுவரேல் அவ்விசை, கேட்பவரை எழுப்பும் விசையுடையதாகும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய வெம்பெரு மானகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையி னார்கட்கில்லை யாம்பாவமே.

பொழிப்புரை :

தசைவற்றிய வெண்டலை மாலையைச் சூடிச் செறிந்த இருளில், பெருகி உயர்கின்ற தீக்கொள்ளி விளக்காக உயர்ந்த இடுகாட்டு எரியில் நின்றாடிய எம்பெருமானது அகத்தியான் பள்ளியை மனம் ஒன்றிப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

வாடிய - வற்றிய. தலைமாலை, `தலைமாலை தலைக் கணிந்து`. மயங்கு இருள் - செறிந்த இருள். கொள்ளி - தீக்கொள்ளி. கொள்ளி விளக்கொளி செய்ய என்றபடி. நிவந்த - உயர்ந்த, வளர்ந்த, அகரம் தொகுத்தல் விகாரம். எரிஆடிய - தீயில் ஆடிய. `அனலாடி` `தீயாடி` என்பவை சிவநாமங்கள். பாவம் இல்லையாம் என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

துன்னங்கொண்ட வுடையான் றுதைந்தவெண் ணீற்றினான்
மன்னுங்கொன்றை மதமத்தஞ் சூடினான் மாநகர்
அன்னந்தங்கு பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னஞ்செய்தமனத்தார்கள் தம் வினையோடுமே.

பொழிப்புரை :

தைத்த உடையை அணிந்தவன். வெண்மை செறிந்த திருநீற்றைப் பூசியவன். பொருந்திய கொன்றை, ஊமத்தை மலர்களைச் சூடியவன். அப்பெருமான் எழுந்தருளியதும் அன்னங்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்ததுமான அகத்தியான்பள்ளியை நினையும் மனம் உடையவர்களின் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

துன்னம் - தைத்தல். துதைந்த - நெருங்கிய. முற்றப்பூசிய, `முழுநீறுபூசிய மூர்த்தி போற்றி` (தி .6. ப .5. பா .3). `முழுநீறு பூசிய முனிவர்`. உன்னம் - தியானம். மனத்தார்கள் தம் வினை - மனத்தையுடையவர் வினைகள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந் துண்பதுங்
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்
அடுத்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
றொடுத்தது வுஞ்சர முப்புரந் துகளாகவே.

பொழிப்புரை :

உடுத்துள்ளது புலித்தோல். உண்பது பலியேற்றுத்திரிந்து. கொன்றது சினந்து வந்த கழலணிந்த காலனைக் காலினால். அவ்விறைவன் வாழ்வது பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி. சரம் தொடுத்தது துகளாகுமாறு திரிபுரங்களை.

குறிப்புரை :

உடுத்ததும் தோல், உண்பதும் பலி, காலினால் அடுத்ததும் காலனை, முப்புரம் துகளாகத் தொடுத்ததும் சரம் என்க. கடுத்து - கோபித்து.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.

பொழிப்புரை :

அன்று நெற்றிக்கண்ணால் சினந்தது காமனை. பாய்ந்து கொன்றது கழலணிந்த காலனை. பண்களோடு ஆராய்ந்தது வேதங்களை. ஒரு பாகத்தே ஏய்ந்து கொண்டது இமவான்மகளை. அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.

குறிப்புரை :

அன்று நெற்றிக்கண்ணால் காய்ந்ததும் மன்மதனை, பாய்ந்ததும் இயமனை, பண்ணினால் ஆராய்ந்ததும் வேதத்தை, பொருந்தியதும் இமாசல குமாரி பாகத்தை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.

பொழிப்புரை :

போர்த்துள்ளது யானைத்தோல். உடுத்துள்ளது புலித்தோல். ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு. அரையில் கட்டியுள்ளது பாம்பு. பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம். அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.

குறிப்புரை :

போர்த்ததும் யானைத்தோல். உடை - புலித்தோல். உடை என்பது தொழிலாகு பெயர். அது (உடுத்தது) வினையாலணையும் பெயர்ப் பொருளில் எழுவாய் நின்று புலித்தோலென்னும் பெயர்ப் பயனிலை கொண்டது. மழுவை ஏந்தி அரைக்கு ஆர்த்ததும் அரவம் (-பாம்பு) என்க. பார்த்ததும் படர்ந்த எரியில் அரணம் (மும்மதில்) மூழ்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை
அரிந்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே.

பொழிப்புரை :

தெரிவு செய்தது கணை ஒன்று. அக்கணை சென்று உடன் எரியச்செய்தது முப்புரங்களை. முற்காலத்தில் அரிந்தது அழகிய தாமரைமலர் மேல் உறையும் பிரமனின் தலையை. விரும்பி ஒரு பாகமாகப் புனைந்தது உமையவளை. அத்தகையோன் பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.

குறிப்புரை :

தெரி(ஆராய்)ந்ததும் கணை (- பாணம் ). ஒன்றை ஒரு சேரச்சென்று எரித்ததும் திரிபுரத்தை, முன் அரிந்ததும் அழகு பொருந்திய பூவில் வாழும் பிரமன் தலையை, புரிந்தது (விரும்பிக் கொண்டது)ம் உமாதேவியார் ஒரு பாகத்தைப் புனைதலை, அப்பனது ஒரு பாகத்தை அம்மை அழகு செய்ததனாற்றான் உயிர்கட்கு அவ்வழகு உண்டாயிற்று. `அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம்` (சித்தியார் சூ 1:-69).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச்
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியாற் றொழுவார் அவர்வினை நீங்குமே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதியவனே! உலகுக்கெல்லாம் ஒண் பொருளாகி விளங்குபவனே! நிலையான சோதி வடிவினனே! என்று கூறித் தொழுவாரவர் துயர் தீர்த்திடும் முதல்வனாகிய எங்கள் தலைவன் விளங்கும் அகத்தியான்பள்ளியை முறையாகத் தொழுபவர் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

எல்லாம் ஓதி - வேதங்களையெல்லாம் ஓதியருளியவனே! உலகுக்கு ஓர் ஒண்பொருள் ஆகி - உலகங்களுக்கு ஒப்பற்ற ஒளிர்பொருளானவனே! மெய்ச்சோதி - உண்மையொளியே! என்று கூறித்தொழுபவர் துயர்களைத் தீர்த்திடும் ஆதியாகிய பெருமானது பள்ளியைத் தொழுவார் வினை நீங்கும் என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத் திருந்தார்புரம்
ஒறுத்ததுவும் மொளிமா மலருறை வான்சிரம்
அறுத்ததுவும்பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.

பொழிப்புரை :

சினந்து அழித்தது தக்கன் வேள்வியை. ஒறுத்து எரித்தது பகைவர்தம் திரிபுரங்களை. அறுத்தது ஒளி பொருந்திய சிறந்த தாமரைமலர் மேலுறையும் பிரமனின் தலையை. நெரியச் செய்தது இராவணனின் இருபது தோள்களை. அத்தகையோன் அகத்தியான் பள்ளி இறைவன் ஆவான்.

குறிப்புரை :

செறுத்ததும் தக்கன்யாகத்தை. செறுத்தல் - கோபித்தல், அழித்தல். ஒறுத்தல் - கடிதல், வருத்துதல். ஒறுத்ததும் பகைவர் திரிபுரத்தை. திருந்தார் - பகைவர். திருந்தியவர் நண்பராவர். அறுத்ததும் ஒளியை உடைய தாமரைப்பூவில் வாழும் பிரமன் தலையை, இறுத்ததும் (-முறித்ததும்). இராவணனுடைய இருபது தோள்களையும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.

பொழிப்புரை :

தலைமாலையையும், பிறையையும், ஊமத்தை மலரையும், விளங்கும் கொன்றை மலரையும் பாம்பையும் அணிந்துள்ள சடையினனாகிய அகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரமனும் திருமாலும் தேடிக்காண முடியாத தன்மையைக் கூறிப் பரவவல்லவர் தங்கள் மேல்வரும் வினைகள் அழியும்.

குறிப்புரை :

சிரமும் - தலைமாலையும். நல்லமதி (உம்) - அழகிய பிறையும். மத்தமும் - ஊமத்தம் பூவும். `மத்தங்கமழ்சடை` (தி .2. ப .205 பா .6). அரவும் - பாம்பும். `அரவம்` என்ற பாடம் பிழை என்பது முதலடியாலே விளங்கும். பெற்றிமை - தன்மை. பாறும் - ஓடும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

செந்துவ ராடையினாரும் வெற்றரை யேதிரி
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.

பொழிப்புரை :

சிவந்த துவராடையை அணிந்து, ஆடையின்றி வெற்றுடல்களோடு திரியும் அறிவற்றவர்களாகிய சமண புத்தர்கள் பேசும் பேச்சுக்கள் பொய்மொழிகளாகும். அவற்றை விடுத்து அழகிய கருணையாளனும் எங்கள் தலைவனும் ஆகிய அகத்தியான்பள்ளி இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து ஓடும்.

குறிப்புரை :

செந்துவர் ஆடை - செங்காவித்துணி. பேசும் பேச்சவை - சொல்லும் பரசமயக்கோள்கள். அந்தணன் - சிவன். சிந்திமின் - தியானம் புரியுங்கள், நும் வினையானவை சிதைந்து ஓடும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஞாலம் மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
ஆலுஞ்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்
சூல நல்லபடையான் அடிதொழு தேத்திய
மாலைவல்லா ரவர்தங்கண் மேல்வினை மாயுமே.

பொழிப்புரை :

உலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய ஞானசம்பந்தன் சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான் பள்ளியுள் விளங்கும் நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப்பாடிய இத்தமிழ்மாலையை ஓதவல்லவர்கள் மேல்வரும் வினைகள் மாயும்.

குறிப்புரை :

ஆலும் - ஆடும். புடை - பக்கம். நல்ல சூலப்படையான் என்றும் சூலமாகிய நல்ல படையான் என்றும் கூறலாம். `நல்லபாம்பு`. மாலை - இத்திருப்பதிகம். மேல்வினை:- ஆகாமிய கன்மம் என்றலும் பொருந்தும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.

பொழிப்புரை :

அழிவற்றவரும், இளவெண்பிறையைச் சூடியவரும், வேதங்களை அருளியவரும், சுடலைப்பொடி பூசியவரும், அழலின் கண் நின்று ஆடுபவரும் ஆகிய அறையணிநல்லூர் இறைவரைத் தம் அம் கையால் தொழுபவர் பீடினால் பெரியோர் ஆவர். பாசங்கள் கெடப் பற்றற்றவராய் உயர்ந்தவர்கள் ஆவர்.

குறிப்புரை :

பீடு - பெருமை. பேதைமை - அறியாமை. ஈண்டுப் பண்பாகுபெயராய் ஆணவத்தையும் இனம்பற்றி மாயை கன்மங்களையும் உணர்த்திநின்றது. தீதிலா வீடு - முற்றத்துறந்து பற்றற்ற நிலை. `ஒருபற்றிலாமையும் கண்டிரங்காய்` வீடினால் - விடுதலால். வீடு இலார் - (அழிவில்லாத) நித்தியர். இளமதி, வெண்மதி - பிறை. சுடலைநீறு - மகாசங்கார காலத்தில் அனைத்துலகையும் அழித்துப் பொடித்த பொடி. அழல் - தீயில். பெரியோர்களும் உயர்ந்தார்களும் ஆவார் எவர் என்னில், அறையணிநல்லூரைத் தொழுபவர்களே என்று இயைத்துணர்க. வீடிலாரும் சூடினாரும் பாடினாரும் ஆடினாரும் ஆகிய சிவபெருமானது ஊர் என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

இலையினார்சூல மேறுகந் தேறியேயிமை யோர்தொழ
நிலையினாலொரு காலுறச் சிலையினான்மதி லெய்தவன்
அலையினார் புனல்சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்
தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.

பொழிப்புரை :

இலைவடிவமான முத்தலைச் சூலத்தை ஏந்தி, ஆன் ஏற்றில் விரும்பி ஏறி வருபவன். இமையவர் வேண்ட நிலைத்த ஒரு திருவடியால் வில்லை ஊன்றித் திரிபுரங்களை எய்தவன். அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய தலைவன். அப்பெருமான் எழுந்தருளிய அறையணிநல்லூர் சென்று அவனைத் தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர்.

குறிப்புரை :

இலையின்ஆர்சூலம்:- `மூவிலைவேல்` `இலையாருஞ் சூலத்தாய்` (அப்பர் திருத்தாண்டகம்)`இலைமலிந்த வேல்நம்பி யெறிபத்தர்` (திருத்தொண்டத்தொகை). தடுமாற்றம் - பிறவிக் குழியில் விழுந்தடுமாற்றம், ஓங்குவார் தடுமாற்றம் நீங்குவார் என்க. `ஆரூர் தம் கையினால் தொழுவார் தடுமாற்றறுப்பாரே` (தி .1 ப .105. பா .6).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
பின்பினாற்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் றாள்களுக்
கன்பினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.

பொழிப்புரை :

என்பு மாலை அணிந்தவர். கனலும் சூலத்தை ஏந்தியவர். விளங்கும் சிறந்த பிறைமதியை உச்சியில் சூடியவர். பின்னே தாழ்ந்து தொங்கும் சடையினர். தலைக்கோலம் உடையவர். பிறப்பற்றவர் என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண் மூர்த்திதன் திருவடிகளில் அன்புடையவர் ஆவர்.

குறிப்புரை :

என்பினார் - எலும்பணிந்தவர். கனல்சூலத்தார் - கனலும் (தீய்க்கும்) சூலப்படை ஏந்தியவர். மதியுச்சியான் - சந்திரசேகரன். பின்பு இன் ஆல் - பின்பினால், பின்புறத்தில். பின் - பின்புறத்தில், பின்னால் - பின்னலால் எனலும் பொருந்தும். `பின்றாழ்சடை` (தி .1 ப .71 பா .4, ப .80 பா .2)`பின்னுசடைகள்` (தி .1 ப .74 பா .6)`பின்னிய தாழ்சடையார்` (தி .1 ப .8 பா .10). பிறங்கும் - விளங்கும். பிஞ்ஞகன் என்பது சடையை அடையாக்கொண்டு நின்றதால் முடியன் என்ற மட்டில் அமைந்தது. முன்பினார் - வலிமை, பழமையுடையார். நினைத்தலையுடையவர் எனலுமாம். முன் பின் ஆர் என்று பிரித்துக் காலத்தையும் இடத்தையும் குறித்துக் கூறலுமாம். என்பினார் சூலத்தார் உச்சியான் பிஞ்ஞகன் பிறப்பிலி என்று கையால் தொழுவாரே மூவரும் தொழும் முக்கண் மூர்த்தி திருவடிக்கு அன்பராவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்
உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்
அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்
பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.

பொழிப்புரை :

அழகிய மார்பில் திருநீற்றை விரவப்பூசிய வேதியனும், வலிய நஞ்சினை அமுதாக உண்டு உலகிற்கு அழியாமை தந்தவனும், பாம்பை நீண்ட சடைக்கு முடிக்கண்ணியாகக் கொண்டவனும் ஆகிய அண்ணல் உறையும் அறையணிநல்லூரைப் பரவுவார் பழிபாவங்கள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

மார்பில் நீறு பூசிய வேதியன் என்றது சிவபிரானை. உரவு - கடல். அரவு - பாம்பு. கண்ணியார் - தலைமாலையுடையார். பரவுவார் - வாழ்த்திவணங்குபவர். பழிநீங்கப் பாவம் ஓடும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழு தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாயன லங்கையாயறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.

பொழிப்புரை :

தீப்போல விளங்கும் செம்மேனியனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவனே! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக்கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் காய்ந்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.

குறிப்புரை :

தீயின் ஆர் திகழ் மேனியாய் - தீயைப்போலப் பொருந்திய பிரகாசிக்குந் திருமேனியை உடையாய். தேவர் தாம் தொழுதேவன் நீ ஆயினாய், கொன்றையினாய், அனல் அங்கையாய், வீட்டினாய், பாயினாய் கழலினாய், பரமனே என மனமுருக வாய் குளிர அழைத்து, அடிபணிவன் என்றது பக்திசாகரத்தில் அழுத்துகின்றது. தம - தம்முடைய. பாயினாய் - பாய்ந்தாய்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய
அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்
நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்
உரையினாலுயர்ந் தார்களு முரையினாலுயர்ந் தார்களே.

பொழிப்புரை :

மணம் கமழும் கொன்றை மாலையைச் சூடியவர். சினம் மிக்க பாம்பினை அரையில் கட்டியவர். அறையணிநல்லூரில் விளங்கும் தலைமையாளர். அழகிய வெண்ணிறமான விடையை ஊர்தியாக உடையவர். திகம்பரர். அப்பெருமானை மலர்தூவி உரையினால் போற்றுபவர் புகழாளர் ஆவர்.

குறிப்புரை :

வேகம் - விடவேகம். பத்துவேகம் `பத்துக்கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின்பல்` (தி .4 ப .18 பா .10). நாகம் - பாம்பு. வீக்கிய - கட்டிய. அரையில் நாகம் வீக்கினார் என்க. நரையின் ஆர் விடை - வெண்ணிறத்தினைப் பொருந்திய எருது. நறும்போது - நறுமணம் கமழும் பூக்கள். உரையினால் - 1. தோத்திரங்களால். 2. புகழால், பூவால் அருச்சித்து வாயால் தோத்திரம் புரிதல்பற்றிப், `போதுசேர் உரை` என்றார். `உரை மாலையெல்லாம் உடைய அடி` (தி .6 ப .6 பா .7) `உரையாலுணரப்படாத அடி` `உரையாரும் புகழானே` (தி .6 ப .62 ரபா .6) `உரைப்பார் உரை உகந்து உள்கவல்லார்தங்கள் உச்சியாய்` (தி .7 பா .936)`உரையார் தமிழ்மாலை` (தி .1 ப .84 பா .11) `உரைப்பார் உரைப்பவையெல்லாம் இரப்பார்க் கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்` (குறள்). அர்ச்சனையில் உயர்வது புகழில் உயர்வதாகும் என்றவாறு. வழிபாட்டால் வரும் புகழேயன்றி மற்றைய வழிகளால் வரும் புகழ் உயர்வுடையதன்று. `உரையார் பொருளுக்குலப்பிலான்` (தி .6 ப .11 பா .7) என்பதற்கேற்பப் பொருள் உரைத்தலுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற வெம்மிறை
ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்
வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.

பொழிப்புரை :

ஞானமே வடிவான வேதியர். சினந்து வந்த பெரிய களிற்று யானையின் ஈரம் உடைய தோலைப் போர்த்து உமையம்மையார்பாற் சென்றவர். பாம்பினை ஆரமாகக் கொண்டவர். அறையணி நல்லூரில் விளங்கும் தலைமையாளர். அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும்.

குறிப்புரை :

வீரம் - ஞானம். ஞானவேதியர் - சிவபிரான். அட்ட வீரட்டம் (எட்டு வீரத்தலம்) நோக்கின் சிவபிரானுக்குப் பொருந்தும்.(வீரம் ஆகிய வேதியர்) தக்கயாகத்திலிருந்தவர்களும் ஆம். வேகமாகளியானை - அவர்கள் வேகத்துடன் போதர ஏவிய பெரிய மதக்களிப்பையுடைய யானை. யானையின் ஈரம் ஆகிய உரிவை - அந்த யானை ஈரிய தோல். அரிவை - உமாதேவியார். பாம்புமாலையணிந்தவர். வாரம் - அன்பு. நினைப்பார்கள் தம் வல்வினை மாயும் - தியானம் புரிபவர்களுடைய தீவினை அழியும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் றாழ்சடை
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ
அக்கினோடெழி லாமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்
நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.

பொழிப்புரை :

தக்கனது பெருவேள்வியைத் தகர்த்துகந்தவர். தாழ்ந்து தொங்கும் சடைகளையும் மூன்று கண்களையும் உடையவர். முனிவர்கள் தொழ வேதங்களை முறையோடு அருளியவர். என்பு மாலைகளையும் அழகிய ஆமை ஓட்டினையும் அணிந்த தலைமையாளர். அறையணிநல்லூரில் விளங்கும் திகம்பரர். நாங்கள் அவரது சார்பன்றி நலம் செய்யும் வேறு சார்பிலோம்.

குறிப்புரை :

தக்கனார் - தக்ஷன். முக்கணான் - `திரிநேத்திரன்`. அக்கு - எலும்பு, உருத்திராக்கமுமாம். ஆமைபூண்ட அண்ணலார். அவர்சார்வு - அச்சிவபிரான்றிருவடிச்சார்பு. நாங்கள் அவர் சார்வு அல்லால் பேரின்பம் பயக்கும் சார்பு வேறிலோம். அடுத்த பாடலின் ஈற்றடியும் ஈதேயாதல் அறிக. (தி.2 ப . 44 பா .3).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்
செய்வதேயலங் காரமா மிவையிவைதேறி யின்புறில்
ஐயமேற்றுணுந் தொழிலரா மண்ணலாரறை யணிநல்லூர்ச்
சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.

பொழிப்புரை :

வெம்மையான நோய்கள் எவையும் இல்லாதவர். வெறிபிடித்தவர் போலப் பிறர் பின் செல்லாதவர். அவர் செய்வதே அலங்காரம் ஆகும். இவற்றை முறையே தெளிந்து இன்புறவேண்டின் ஐயமேற்றுண்ணும் தொழிலரும் தலைமையாளரும் ஆகிய அறையணி நல்லூர்ச் சைவராகிய சிவபெருமானே நமக்குச் சார்வு ஆவார்: வேறு எதனையும் நாம் சாரோம் என்று எண்ணுக.

குறிப்புரை :

வெய்ய - வெம்மையுடைய. வெறியராய் - வெறி பிடித்தவர்போல. செய்வதே அலங்காரம் ஆம் இவை இவை என்பது செய்வனவே அழகாக்கும் பெற்றிபோலும். அவர் `கொண்டதே கோலம்` என்றலும் அமையும். எருக்கு முதலிய அணிதல், பாம்பணிதல் முதலியவை நோக்கின், சிவபிரானுக்கு அன்றிப் பிறர்க்கு அவை அலங்காரமாதல் இன்மை விளங்கும். சைவன் - சிவபிரான். `சைவா போற்றி`(திருவாசகம்.) `மான்மறிமழுவொன்றேந்துஞ் சைவன்` (தி .4 ப .62 பா .4). `சைவத்தசெவ்வுருவன் திருநீற்றன்` (தி .7 பா .838)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்
சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி
ஆக்கியம்மழு வாட்படை யண்ணலாரறை யணிநல்லூர்ப்
பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.

பொழிப்புரை :

நீண்ட தொடர்களைப் பேசி யாரோடும் வகையல்லாதவற்றைச் செய்யாதீர். சாக்கியர் சமணர் நெறிகளைச் சாராதீர். திரிபுரங்களைப் பொடியாகச் செய்த மழுவாட்படை அண்ணலார் உறைகின்ற அறையணிநல்லூரை அடைந்து பாக்கியமாகிய தேவையை நிறைவு செய்துகொள்ள விரும்புவீராயின் அதனை அடைதலே அன்றிப் பாவங்களும் கழியப்பெறுவீர்.

குறிப்புரை :

வாக்கியம் - பொருள் முற்றுப்பெற்ற சொற்றொடர். சாரேலும் - சாராதீர்கள். சாராதேயுங்கள். சாரேல்:- ஒருமை, அதனொடு `உம்` சேர்த்து முன்னிலைப் பன்மை யேவலாக்கினர். இது திருமுறையில் பல இடத்தில் காணப்படும். (தி .2. ப .119 பா .10; தி .3 ப .91 பா .10) காண்க. அரணம் - திரிபுரம். ஆக்கிய மழு. மகர மெய் விரித்தல் விகாரம். பாக்கியம் குறை - பாக்கியமாகிய இன்றியமையாப் பொருள். பாக்கியம் - தெய்வம். (குறள் .1141) எதுவந்தால் முடிவுறும்? அஃது, இல்லாமல் குறையாகி அவாவப்படும். படவே குறை என்பதற்கு முடிக்கப்படும் பொருள், இன்றியமையாப் பொருள் என்று பொருளுரைத்தனர் சான்றோர்.(குறள் .612)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப்
பழியிலாமறை ஞானசம் பந்தனல்லதோர் பண்பினார்
மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் றாள்தொழக்
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.

பொழிப்புரை :

உப்பங்கழிகள் உலாவும் கடற்சோலைகள் சூழ்ந்த தொல்பதியாகிய கழுமலத்தில் தோன்றிய குற்றமற்ற மறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய பதிகத்தை ஓதும் நற்பண்பினராய் அறையணி நல்லூரை அடைந்து முக்கண் மூர்த்தியாகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்றப் பொருந்தியவர்கள் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர்.

குறிப்புரை :

பழி இல்லாமை மறைக்கு அடை. பண்பின் ஆர் மொழியினால் - இத்திருப்பதிகத்தால். கெழுவினார் - பொருந்தினவர். கேடு இல்வாழ்பதி - சிவலோகம். தம்மொடும் பதி பெறுவர் என்றதால், தம்மையும் பெறுவர், பதியையும் பெறுவர் என்க. தம்மைப் பெறுதல் - `தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்`. (சிவஞான. அவையடக்கம்) என்றவாறு தம்மையுணர்தல். `தன்னுயிர்தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிரெல்லாந்தொழும்`(குறள் . 268). பதி - சிவம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர்கோவண வாடையர்
குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி
நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்
மிளிரிளம்பொறி யரவினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

விளங்குகின்ற இளம்பிறை சென்னிமேல் உடையவர். கோவண ஆடை உடுத்தவர். கங்கை நங்கையை விரும்பியவர். ஒளியும் புள்ளிகளும் பொருந்திய இளநாகம் அணிந்தவர். அவ்விறைவர் விரும்பி உறையும் தலம், தண்ணிய மழை பொழியத்தக்க மேகங்கள் தவழும் பொழில்களைக் கொண்டதும், அழகிய நீர் நிறைந்ததும் குளிர்ந்த புதிய புனலைக் கொண்டு நீண்ட துறையுடன் விளங்குவதுமான விளநகராகும்.

குறிப்புரை :

ஒளிர் - பிரகாசிக்கின்ற. சென்னிமேல் பிறை உடையர், கோவணம் ஆகிய ஆடை உடுத்தவர். குளிர் மழைக்கு இளமை, பெய்து வெளிறாமை. நளிர் - குளிர்ச்சி. துறை நதிசாதியடை. மிளிர் - பிறழ்கின்ற, புரள்கின்ற, விளங்குகின்ற. பொறி - பாம்பின் படத்திலுள்ள புள்ளிகள். `பொறியரவம்` (தி .1 ப .132 பா .2) `பொறிகிளர் அரவம்` (தி .3 ப .92 பா .3). `பொறிகிளர் பாம்பு` (தி .3 ப .101 பா .2). `பொறியரவு` (தி .4 ப .35 பா .6) என்று பயின்ற ஆட்சியாயிருந்தும், ஆகரங்காட்டிய அகராதியில் அராப்பொறி இராப்பொறியாயிற்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததொ ராமைபூண்
டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்
புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய
மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.

பொழிப்புரை :

எலும்பையும் பாம்பையும் அணிந்து, அவ்வணிகலனோடு ஆமை ஓட்டையும் பூண்டு இறந்தவரை எரித்த சுடுகாட்டு நீற்றை அணிந்து விளங்கும் பெருமான் மேவிய தலம் ஒளி நிறைந்த நீரை உடைய காவிரியில் மூழ்கிய அடியவர் துயர் கெடுமாறு நீறு பூசியவராய் வழிபாடு செய்கின்ற விளநகராகும்.

குறிப்புரை :

அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது. ஓர் ஆமைபூண்டு - எலும்பும் பாம்பும் (அழகுற) அணியும் ஆபரணம் என்ன, அவ்வாபரணத்தோடு கட்டியதோராமை அணிந்து, அணிகலனைச் சுட்டாமல் அக்கரவு:- தட்டிற்றெனில் அவற்றொடு எனல் வேண்டும். அக்கர் எனின், வலிந்து பொருள் கொள்ளலாம். உக்கவர் - அழிந்தவர். சுடுநீறு :- முற்பதிகத்தின் முதற்பாட்டுரையிற் பார்க்க. (பதி .211 பா .3) `ஒளிமல்கு புனல் காவிரி` என்றது இன்றும் கண்கூடு. பூண்டு அணிந்து அவர் மேயது விளநகர் என்க. காவிரிப்புக்கவர் என்பது சிவபிரானைக் குறித்ததாக்கொள்ளின், அணிந்து புக்கவர் என்க. காவிரிப் புக்கவர் - காவிரி நீரிற் புகுந்து முழுகியவர், இது சிவபிரான் தீர்த்தம் அருளற்பொருட்டு எழுந்தருளும் உண்மை குறித்தது.`துயர்கெடுக` எனச்சங்கற்பஞ்செய்து திருநீறு பூசுதல் வேண்டும். துயர் - பிறவித் துன்பம். துயர்க்கேடு - பாசநீக்கம். `துயர் கெடுக` என்றார்க்கு இன்புறுக என்றலும் உட்கோளாகும். அவ்வின்பாக்கம் - சிவப்பேறு. இவ்விரண்டும் சேர்ந்ததே ஆன்மலாபமாகிய முத்தி. `பாசவீடும் சிவப்பேறும் எனப் பயன் இருவகைப்படும். அவ்விரண்டனுள் பாசவீடாகிய பயனைப்பெறுமாறு உணர்த்து ..... தல் பயனோத்தின் முதற்பாதமாகிய இப்பத்தாஞ் சூத்திரத்தின் கருத்து என்க` ( சிவஞானபோதம், சூ .10. மாபாடியம்) `ஆன்மலாபம் இரண்டனுள் முடிவாய் எஞ்சிநின்ற சிவப்பேறு கூடுமாறுணர்த் ..... துதல் பயனோத்தின் இரண்டாம் பாதமாகிய பதினோராஞ்சூத்திரத்தின் கருத்து என்க` `ஆன்மலாபம் எனப்படும் பயன் இரண்டனுள் பாசநீக்கம் உணர்த்திய பின்னர்ச் சிவப்பேறு உணர்த்துதல் முறைமை` (? . சூ .11). இவ்விரண்டும் `சிவாயநம என்று நீறணிந்தேன்` என்று, `திருவருளால்` வந்த தேவாரத்தில் உள்ளன. `துயர்கெடுகெனப்பூசுவெண்பொடி` என்றதால், பூசும் பொழுது திருவைந்தெழுத்தோதாது பூசுவது தகாது. மிக்கவர் - மேலான அடியவர். வழிபாடு - அருள் வழிபடுஞ் சிவதரிசனம் முதலியவை. `நிலைநிலையாப் பொருளுணர்ந்து பற்றிகந்து கரணம் ஒரு நெறியே செல்லப் புலனெறி நீத்து அருள் வழிபோ` தல் வழிபாடு. (திருவிளையாடற் புராணம்).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

வாளிசேரடங் கார்மதி தொலையநூறிய வம்பின்வேய்த்
தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கட னஞ்சுடன்
காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்
மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

அம்பினைச் சேர்ப்பித்துப் பகைவரின் முப்புரங்களை அழியுமாறு செய்தவரும், புதிய மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்றவரும், உயர்ந்த பழமையான கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்டதோடு அதன் கரிய நிறம் மல்கிய கண்டத்தை உடையவரும், ஒளிவிரிந்த தழல் போலும் சடையினரும், வலிய விடையேற்றை உகந்து ஏறி வருபவரும் ஆன சிவபிரான் மேவியது விளநகர்.

குறிப்புரை :

வாளி - அம்பு. அடங்கார் - பகைவர். மதில் - மும் மதில். நூறிய - அழித்த. வம்பின் வேய்த்தோளி - புதிய மூங்கிலை ஒத்த தோள்களையுடைய உமாதேவியார், இரண்டு கணுக்கட்கும் இடைப் பகுதியே தோளுக்கு ஒப்பு. வம்பு - புதுமை. உயர்ந்த கடல், தொல் கடல் - பாற்கடல். நஞ்சு - விஷம். காளம் - கருமை. மல்கிய - நிறைந்த. காளமல்கிய கண்டத்தர் :- திருநீலகண்டர். கதிர் - செவ்வொளி. விரி - விரியும். சுடர்முடியினர் - நெருப்பைப்போலும் சடைமுடியுடையவர். `அலரும் எரிசெஞ்சடை` (பதி .37) `எரிதருசடை` (பதி .122) `எரியார் சடை` (பதி .154) `அனல்நிகர்சடை` (பதி .123) `கனல் செய்தகமழ் சடை` (பதி .121) `தீச்செய்தசடை` (பதி .119) `நெருப்பினாற் குவித்தாலொக்கு நீள்சடை` (தி .5 ப .30 பா .7) நெருப்பராய் நிமிர்ந்தாலொக்கும் நீள்சடை (? .9) என்னும் திருமுறைச்சான்று கொண்டு இப்பொருள் எழுதப்பட்டது. மீளி - வலிமை, பெருமையுமாம். ஏறு - விடை, எருது. உகந்து - விரும்பி, உயர்ந்து. மேயது - எழுந்தருளியிருப்பது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

கால்விளங்கெரி கழலினார் கையிலங்கிய வேலினார்
நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்
மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

காலில் விளங்கும் கழலணிந்தவர். கையில் விளங்கும் சூலத்தை உடையவர். பூணநூல் விளங்கும் மார்பினர். துன்புறும் நோயும் பிறத்தலும் இல்லாதவர். கருமை விளங்கும் ஒளி நிரம்பிய குற்ற மற்ற நீல மணி போலும் கண்டத்தினர். வானவெளியில் விளங்கும் வெள்ளிய பிறையைச் சூடியவர். அவ்விறைவர் மேயது விளநகர்.

குறிப்புரை :

நூல் - பூணுநூல். நோய் (உம்) இலார் பிறப்பும் இலார் - நோகுந்துன்பமும் இல்லார் பிறத்தலும் இல்லார். மால் - கருமை. மால் விளங்கிய மிடறினார் - திருநீலகண்டர். விளங்கு ஒளி மல்கிய மிடறு. மாசிலா மணிமிடறு - குற்றம் இல்லாத நீலமணிபோலும் மிடறு, அழகிய மிடறுமாம். மால் விளங்கு என்பதற்கு - `இடமால் தழுவிய பாகம்` (தி .4 ப .2 பா .4, ப .22 பா .4, ப .24 பா .7, ப .37 பா .7 ப .40 பா .5, ப .62 பா .8, ப .66 பா .8, ப .78 பா .7, தி .6 ப .24 பா .5) என்றும் கூறலாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித்
துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்
சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்
மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

வேதங்களை அருளியவர். அவ்வேதங்களைப் பாடுபவர். முடியில் திங்கள், சினம்மிக்க பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவர். மின்னுகின்ற பொன்போலும் முப்புரிநூலை அணிந்தவர். அவ்விறைவர் அன்பர்கள் வணங்கித்தூநெறி பெறும் பொருட்டு எழுந்தருளியிருக்குமிடம் பரவிய புகழையுடைய காவிரியின் துறைகளை உடைய கரையில் அமைந்த விளநகராகும்.

குறிப்புரை :

பன்னினார் - சொன்னார், ஆராய்ந்தார். `மறை` இடை நிலை விளக்கு. பாய - பரவிய. சீர்க்காவிரி, பழங்காவிரி, காவிரித் துறை. முன்னினார் - அணுகினவர். தூநெறி - தூய (சிவ) கதி. (பா. 11) திங்களை அராவோடும் கங்கையோடும் உடன் சேர்த்தவர், `ஓடு உடன்` இரண்டும் ஒருசேர நின்றதறிக.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

தேவரும்மம ரர்களுந் திசைகண்மேலுள தெய்வமும்
யாவரும்மறி யாததோ ரமைதியாற்றழ லுருவினார்
மூவரும்மவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்
மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

தேவரும், அமரரும், திசைக்காவல் தெய்வங்களும் முதலான யாவராலும் அறிதற்கரிய இயல்பினர். தழல் போலும் உருவினர். திருமால், பிரமன், உருத்திரன் ஆகிய மூவரும் இவரே என்று கூறுமாறும் அவர்களின் தலைவராய் விளங்குவார் இவரே என்னு மாறும் பொருந்த அரிய பொருளாய் விளங்குபவர். அவ்விறைவர் மேவிய இடம் விளநகராகும்.

குறிப்புரை :

தேவர் அமரர் என்பர் வெவ்வேறு எனல் காண்க. தேவர் - தெய்வமாவார். அமரர் - மரணமில்லாதவர். அமரார் என்றிருந்து, கால் குறைந்ததுபோலும், மரணமில்லாமையுடையவராய்த் தெய்வ மாகாதவர் அமரர். தெய்வமாகி மரணம் உடையார் தேவர். `நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்` (தி .5 ப .100 பா .3) என நுதலுந் தேவாரத்தால் தேவர்க்கு மரணம் உண்மை வெள்ளிடைமலை. `செத்துச் செத்துப் பிறப்பதே வென்று பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ` (தி .5 ப .100 பா .2). திசைகள் மேல்உள தெய்வமும் - அஷ்டதிக் பாலகர்களும், யாவரும் அறியாதது ஓர் அமைதி :- `ஏனையாவரும் எய்திடல் உற்று மற்று இன்னது என்று அறியாத தேனை .... சிவனை ... க்குறுகிலேன்` (திருவாசகம், திருச்சதகம். 42) மூவரும் இவரே எனவும் முதல்வரும் இவரே எனவும் மேவ அரும்பொருள் ஆயினார். இத்திருப்பாடலில் சிவபரத்துவம் உணர்த்தப்பட்டதறிக. மேவ - அடைய.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

சொற்றருமறை பாடினார் சுடர்விடுஞ்சடை முடியினார்
கற்றருவடங் கையினார் காவிரித்துறை காட்டினார்
மற்றருதிர டோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்
விற்றருமணி மிடறினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை அருளியவர். ஒளிவிடும் சடைமுடியை உடையவர். செபமணி மாலையைக் கையில் கொண்டவர். மற்போர் செய்தற்கு ஏற்ற திரண்ட தோள்களை உடையவர். குற்றமற்ற வெண்மையான திருநீற்றுப்பொடி பூசியவர். ஒளி தரும் நீலமணி போலும் மிடறுடையவர். அவ்விறைவர் மேவியது காவிரித்துறையில் அமைந்த விளநகராகும்.

குறிப்புரை :

சொல்தரும் மறை - `எழுதாக்கிளவி` யாதலின் கண் வழியே காணும் எழுத்தாலன்றிச், செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம். `சொற்றருமறை முதல் தொன்மை நூல்முறை கற்றொளிர் சிவப்பிரகாச நூல்புகல் கொற்றவன் குடிவரு குரவன்` (சிவபுண்ணியத்திரட்டு). கல்தருவடம் - செபமணி மாலை. தருவ்வடம் - வகரம் விரித்தல் விகாரம். மல் - வலிமை. திரள்தோளினார், பொடிப் பூசினார் - திருநீற்றையணிந்தவர். ஒற்றுமிகை. வில் - ஒளி. தரும்மணி - நீலரத்நம். முதலடியில் தருதல் துணைவினையாதலும் கூடும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

படர்தருஞ்சடை முடியினார் பைங்கழலடி பரவுவார்
அடர்தரும்பிணி கெடுகென அருளுவார்அர வரையினார்
விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்
மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

பரவிய சடைமுடியை உடையவர். தம் கழல் அடிகளைப்பரவும் அடியவர்களை வருத்தும் பிணிகள் கெடுவனவாக என அருள் செய்பவர். பாம்பினை இடையில் கட்டியவர். மலைப் பிளவில் இருந்து கிட்டும் நீலமணி போலும் மிடற்றை உடையவர். மின்னுகின்ற பொன்போன்ற முப்புரிநூலை அணிந்தவர். வலிய படைக்கலனாக மழுவை ஏந்தியவர். அவ்விறைவர் மேவியது விளநகராகும்.

குறிப்புரை :

படர்தரும் - படரும். பைங்கழல் அடி - பசிய கழலை அணிந்த திருப்பாதம். ஒற்று விரித்தல் விகாரம். அடர்தரும் - தாக்கும். பிணிகெடுக என அருளுவார். `துயர் கெடுக என` (பா .2). இவ் வீரிடத்தும் வியங்கோள்வினையின் ஈற்றுயிர் கெட்டது. அரவு அரை யினார் - பாம்பைக் கச்சாகக்கட்டிய திருவரையுடையவர். விடர் - மலைப்பிளப்பு. மலைகளில் மணி கிடைத்தல்பற்றிக் கூறியது. மின்னு பொன்புரி நூலினார் (பா .5).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்
பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்
மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

கையில் விளங்கும் சூலத்தை உடையவர். தோலாடை உடுத்தவர். முற்றழிப்புக் காலத்தில் தாம் ஒருவரே அழியாது நிற்பவர். பாம்பின் படம் போலும் அல்குலை உடைய உமையம்மையை இடப்பாகமாக உடைய பரமர். கரிய ஒளி நிறைந்த குற்ற மற்ற நீலமணி போன்ற மிடற்றினை உடையவர். திருமேனியில் விளங்கும் திருவெண்ணீற்றை அணிந்தவர். அவ்விறைவர் மேவியிருப்பது விளநகர் ஆகும்.

குறிப்புரை :

கைஇலங்கிய வேலினார் (பா .4) தோலினார் கரிகாலினார் என்பது காலினார் கரித்தோலினார் என்றிருந்து பிறழ்ந்தது போலும். தோலினார் - யானைத்தோலும் புலித்தோலும் தரித்தவர். கரி காலினார் - எல்லாம் வெந்து கரிந்துபோகுஞ் சருவசங்கார காலத்தில் தாம் ஒருவரே அழியாது நிற்பவர். கரிதல் - `வெந்து கரியான காமன்`. கால் - காலம். பை - படம். பின்புறத்தில் இடுப்பிற்கும் புறங்காலிற்கும் இடைப்பகுதி படம் விரித்த பாம்பின் தோற்றம் இருத்தலால், அல்குலுக்கு அரவு ஒப்பாயிற்று. அல்குலைக் குறி எனல் குற்றம். திரு முறையில் அஃது ஒவ்வாது. மெய் - திருமேனி. உண்மையுமாம். `உண்மையிலுள்ளது நீறு`, `சத்தியமாவது நீறு`, `தத்துவமாவது நீறு` (பதி .202).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்
உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்
உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார் தருஞ்சடை முடியின்மேல்
உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார் விளநகர் மேயதே.

பொழிப்புரை :

கீழ் உள்ள திருவடியை யான் காண்பேன் என்று சென்ற கரிய மணிவண்ணனாகிய திருமாலும், மேல் உள்ள திருமுடியை யான் காண்பேன் என்று சென்ற தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் உள்பொருளாய் விளங்கும் சிவபிரானைக் கண்டிலர். ஒளி பொருந்திய சடைமுடியின் மேல் விளங்கும் பிறை முதலியவற்றை யாரும் காண இயலாத சோதிப் பிழம்பாய்த் தோன்றும் அப்பெருமானார் தம்மை அன்பர்கள் கண்டு வழிபட விளநகரில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

கீழ்உள்ளதைக் காண்பன் என்ற மாமணிவண்ணன் - திருமால். மேல்உள்ளதைக் காண்பன் என்ற மாமலர் அண்ணல் - பிரமன். இவ்வாறு கொள்ளாமல், எங்கும் உள்ள தன்னைக் கீழ் காண்பன் மேல் காண்பன் என்றதாக்கொள்ளுதல் சிறப்புடையது. வண்ணனும் அண்ணலும் கண்டிலார் என்க. உள்ளது + அன் + தன் + ஐ = உள்ளதன்றனை எனக்கொண்டு, சிவபிரானை என்று பொருளுரைத்தல் மிக்க பொருத்தமுடையதாம். `ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு` என நீதி நூலும், உள்ளது என்னும் வினைப் பெயரால் சச்சிதாநந்தப் பொருளை உணர்த்துகின்றது. `உன்னும் உளது ஐயம் இலது` எனச் சிவாகமமும் (திருவருட்பயன் . 10) உணர்த்திற்று. உள்ளது - சத்து. சத்தெனவே அவிநாபாவமாகிய சிதாநந்தமும் பெறப்படும். சர்வ வியாபகவஸ்துவே உள்ளது எனப்பட்டது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய
நன்பிறைநுத லண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர்
இன்புறுதமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
துன்புறுதுய ரம்மிலர் தூநெறிபெறு வார்களே.

பொழிப்புரை :

மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள் யாழ் போல முரலும் விளநகரில் காவிரித்துறையில் எழுந்தருளிய பிறை சூடிய பெருமானை, சண்பைப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்பும் இனிமையும் பொருந்திய தமிழால் புனைந்த இப்பாடல்களைக் கூறி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைதல் இலர். தூய வீட்டு நெறியைப் பெறுவார்கள்.

குறிப்புரை :

வண்டுகள் யாழோசையைச் செய்கின்ற துறை என்று வளங்கூறப்பட்டது. சண்பை - சீகாழித் தலப் பெயர்களுள் ஒன்று. சீர் இன்பு - சீரும் இன்பமும். துன்பு உறும் துயரம் - துன்பமும் அடையும் துயரமும். அண்ணலைச் சொன்னவற்றை ஏத்துவார் தூநெறி பெறுவார்கள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு
சிவனதாட் சிந்தியாப் பேதைமார் போலநீ வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோ ரேறுகந் தேறிய காள கண்டன்
அவனதா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சி நிலை எய்தி, நா எழாதுலர்ந்து பிறர் பஞ்சில் தோய்த்துப்பால் முதலியவற்றைப் பிழிய உண்டு மரணமுறுங்காலத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தியாது இறக்கும் அஞ்ஞானியரைப் போல நமக்கும் இந்நிலை வருமா என நெஞ்சே நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து செல்லும் விடை ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.

குறிப்புரை :

நெஞ்சே! மரணமுறுங்காலத்தில் சிவனடியைச் சிந்திக்கும் பாக்கியமில்லாத அஞ்ஞானிகளைப்போல நாணினையே. விடையின்மேல் ஏறிவந்தருளும் திருநீலகண்டப் பெருமானுடைய திருவாரூரைத் தொழுது உய்யலாகும், மையல்கொண்டு அஞ்சாதே. ஆரூரைத் தொழப்பெறாதே கழியுமோ என்று கருதி மயங்கி அஞ்சாதே. மீண்டும்போந்து தொழப்பெறலாம் என்பது கருத்து. கொண்டு அஞ்சேல் என்பது காரணப் பொருட்டாய வினையெச்சம். கொண்டு என்பது அஞ்சு என்னும் முதனிலை கொண்டது. பவனம் - காற்று. இறக்குங்கால், பிராண வாயு உடலின் நீங்கும் பொருட்டுப் பெருகும். அது `மேல்மூச்சு வாங்குகின்றது` என்ற வழக்கினாலும் அறியப்படும். நாக்கு உலர்ந்துபோம். சோடை - வறட்சி, நாக்கு உலர்ந்து போதலோடு, அதன்கண் எய்தும் உணவை உட்செலுத்த எழ மாட்டாமலும் போம். நா எழாது என்பதில் துவ்விகுதி கெட்டது. ஒருமையாதலின் வல்லெழுத்து மிக்கது. பன்மையாயின், `காக்கை கரவா கரைந்துண்ணும்` (குறள் .527) என்பது போன்று இயல்பாகும். நாவானது பால் முதலியவற்றை உட்செலுத்தமாட்டாது (வலி குன்றியது) பற்றி, அருகில் இருப்பவர் அப்பாலையோ பிறிதோருணவையோ பஞ்சில் தோய்த்து உட்புகுமாறு பிழிவர். அப்பிழிவை உயிரை ஓம்புதற்பொருட்டு, இரையை எண்ணிப் பழகிய பழக்கத்தால் இறையை எண்ணாத பேதையர் தம்மை அறியாதே உட்செலுத்தப் பெறுவர். பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு சிந்தியாப்பேதைமார் என்க. தோய்த்து என்பதன் மரூஉ, தோய்ச்சு என்பது போலி என்பாருமுளர். காய்தல் முதலியவும் இவ்வாறு மருவியுள. சிவன் + அ = சிவன; ஆறனுருபு. தாளிரண்டாதலின் பன்மையுருபு நின்றது. `நுன கழலிணை` (திருவிசைப்பா. 7). அட்ட - பிழிந்து ஒழுக்க. கவனம் - விரைவு. கண்டனவன் எனப் பிரிக்காமல் கொள்வதே பொருத்தம். பிரித்துச் சுட்டுதல், வேண்டாதது. உய்யலாம் மையல் என்க. மையல் கொண்டஞ்சல் உய்யலாம் என்பாருமுளர். பேதைமார் போலாமையை `அவமிலா நெஞ்சமே` (பெரிய . புரா .518). எனச் சேக்கிழார் சுவாமிகள் விளக்கியதுணர்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டுபோவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியா லேழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

ஏழை நெஞ்சே! தந்தை தாயர் இறந்தனர். தாமும் ஒருநாள் இறக்கத்தான் போகின்றார். இயம தூதர்கள் வேலைக்கையில் கொண்டு குத்தி உயிர் போக்கப் பார்த்துக் கொண்டுள்ளனர். இப்படி வாழ்க்கை நிலையாமையில் இருத்தலால் நெஞ்சே இறவாமல் வாழ்வதற்கு எந்த நாள் மனம் வைப்பாய்? ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ உய்யலாம். மையல்கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

தந்தையர் தாயர் என்பன பலர்பால். தாமும் போவார் என்னும் பன்மைநோக்கி நின்றன. கொந்த - குத்த. `கொந்தி அயில் அகல் அம்பால் குட்டமிட்டுக் கொழுப்பரிந்து` (பெரிய . கண்ணப்பர் . 145). எரிய என்றுமாம். `கொந்தழல்` (சிந் .1499). கூற்றத்தார் - இயம தூதர் (உடம்பும் உயிரும் கூறுபடுதலைச் செய்பவர்). கொண்டு போவாராய்ப் பார்க்கின்றார். வைத்தி - வைப்பாய்?. எந்த நாள் வாழ்வதற்கு மனம் வைத்தி`. என்று வினாவியருளினார். மனம் `வாழாத நெஞ்சம்` எனப்படும். `வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே, சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும், வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே` என்பது திருவாசகம். வாழ்க்கை, `உரித்தன்று உனக்கு இவ்வுடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் தரித்தும் தவமுயன்றும் வாழாநெஞ்சே?`(தி .6 ப .42 பா .10). என்றதிற் குறித்தது தம்முன்னோர் எல்லாரும் இறந்தவாறே தாமும் இறப்பது திண்ணம். மாய்க்க மறலிதூதர் சித்தமாயுள்ளனர். இறப்பு அண்மையில் இருக்கின்றதால், இறவாமல் என்றும் வாழ்வதற்கு எந்தநாள் மனம் வைப்பாய்? வாழ்வது - திருவடி நிழலில் அழியாத இன்பத்தைத் துய்த்துக் கொண்டிருப்பது. ஆரூர் தொழுது உய்யலாம். நெஞ்சே மையல்கொண்டு அஞ்சாதே. முதலாவது விளி அதன் போக்கை உணர்த்த. இரண்டாவது விளி அதற்கு அபயம் அளிக்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

நிணங்குடர் தோனரம் பென்புசே ராக்கைதா னிலாய தன்றால்
குணங்களார்க் கல்லது குற்றநீங் காதெனக் குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர் வைகலு மனங்கொ டேத்தும்
அணங்கனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நிணம், குடல், தோல், நரம்பு, என்பு இவற்றால் இயன்ற ஆக்கை நிலையானது அன்று. நல்ல குணங்கள் உடையார்க் கன்றித் தீய குணங்கள் உடையார்க்கு உளதாகும் குற்றங்கள் நீங்கா. நீயோ நடுங்கிநின்றாய். தேவர் அசுரர் முதலானோர் அனைவரும் வந்து வணங்கி மனம் கொண்டு வழிபடும் ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.

குறிப்புரை :

யாக்கை (-கட்டப்பட்டது, உடம்பு) ஆக்கை என்று ஆயிற்று. யகரமெய் முதலிற்கொண்ட சொற்கள் அதனை ஊர்ந்த ஆமுதலாய் வழங்கப்படுதல், யாறு - ஆறு, யாமை - ஆமை, யாய் - ஆய், யாண்டு - ஆண்டு, யானை - ஆனை முதலியவற்றிற் காணப்படும். நிலாயது - நிலாவியது. `குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போடுயிரிடை நட்பு` (குறள் .338) நல்ல குணங்களுயுடையார்க்கே குற்றம் நீங்கும் அல்லாதார்க்கு (தீயகுணங்களைடைய வர்க்கு) க் குற்றம் நீங்காது. குலுங்கினாய் - நடுங்கினாய். சுராசுரர் எல்லாரும் நாடோறும் வணங்குவராய் மணம் (தூபம் முதலியவற்றைக்) கொண்டு ஏத்தும் கடவுள். `மனம்` என்ற பாடம் கழகப் பதிப்பில் உளது. மனம் கொடு - தியானித்து. அணங்கு - தெய்வத்தன்மை. அணங்கன் - சிவபிரான். குணம் குற்றம் இரண்டும் உடைமை குறிக்கச் சுராசுரரைக் குறித்தார்போலும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன நித்த நோய்கள்
வாதியா வாதலா னாளுநா ளின்பமே மருவி னாயே
சாதியார் கின்னரர் தருமனும் வருணர்க ளேத்து முக்கண்
ஆதியா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! நீ நீதிவழியே வாழவில்லை. வாழ் நாள்கள் பல செல்லா நின்றன. நாள்தோறும் நோய்கள் பல துன்பம் செய்யாவாய் உள்ளன. ஆதலால் ஒவ்வொரு நாளும் நீ இன்பத்தையே கருதி நிற்கின்றாய். நற்குலத்தில் தோன்றிய கின்னரர், தருமன், வருணன் முதலியோர் வழிபட்டுப் போற்றும் ஆரூர் ஆதி முதல்வனாய முக்கண் மூர்த்தியைத் தொழுதால் நோய்கள் செய்ய உள்ள துயர்களிலிருந்து உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.

குறிப்புரை :

நெஞ்சே, நீதிவழியே வாழவில்லை, காலம்பல வீணே கழிக்கின்றனை. நாளும் நோய்கள் வருத்தா. நோய்கள் வாதியா நாள் செலா நின்றன என்று கொண்டு கூட்டுக. வாதியா - வாதித்து, வருத்தி, இதற்கு வாதிப்பனவாயின என்றுரைப்பது எவ்வாறு? நாளும், நாளும் இன்பத்தையே பொருந்தினாய். சாதி - குலம். ஆர் - பொருந்திய. கின்னரரும் தருமனும் வருணனும் வழிபட்டனரென்று குறித்தார். ஆதி யாரூர் என்றது காவிரிநாட்டிடைத் தொன்மையில் மிக்கது. திகையெட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே என்ற கருத்தைக் குறித்தது. ஆதியின் ஆரூர் என்றலுமாம்.`ஆதிபாதமே ஓதி உய்ம்மினே` (தி .1 ப .90 பா .3).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பிறவியால் வருவன கேடுள வாதலாற் பெரிய வின்பத்
துறவியார்க் கல்லது துன்பநீங் காதெனத் தூங்கி னாயே
மறவனீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! பிறவியால் கேடுகளே விளையும். பெரிய இன்பத்தை அடைய விரும்பும் துறவியர்க்கு அல்லது துன்பம் நீங்காது என மனம் சோர்கின்றாய். இறைவனை ஒருபோதும் மறவாதே! பெரியோர் கூறிய நல்வழிகளையே நீ பின்பற்றி வாழ்கின்றாய், புனிதமான கங்கை தங்கிய சடையினனாகிய அறவாழி அந்தணன் ஆரூர் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

அவமிலா நெஞ்சம் (பெரிய . திருஞா .518) உயிர்க்குப் பிறத்தலும் இறத்தலும் பெருந்துன்பங்கள். மற்றையெல்லாத் துன்பங்களும் அவற்றிடை விளைவன. இறத்தலும் பிறத்தலால் உண்டாவதே, `தோற்றம் உண்டேல் மரணம் உண்டு`(தி .7 பா ,63)`பிறந்தால் பிணிப்பட வாய்ந்தசைந்துடலம் புகுந்து நின்று இறக்குமாறுளதே இழித்தேன் பிறப்பினை நான்` (தி .4 ப .20 பா .8) `கெடுவது இப்பிறவி சீசீ` (தி .4 ப .76 பா .10). துறவு வீடு பேரின்பத்தைக் கொடுப்பது. அத்துறவு பிறவியால் விளையும் கேடுகளை உணர்ந்தவர்க்கே உண்டாகும். ஆதலின், பிறவியால் கேடு வருவன உள. ஆதலின் பெரிய இன்பத் துறவியாரானார் என்றருளினார். துறவியார்க்கே துன்பம் நீங்கும். துறவாதார்க்குத் துன்பம் நீங்காது என்று சோர்ந்தது நெஞ்சு. தூங்குதல் - சோர்தல். நெஞ்சே! துன்பம் நீங்காது எனச் சோர்ந்தாய். சோர்வு வேண்டா. நீ ஆரூரை மறவல் (- மறவாதே). மார்க்கமே நண்ணினாய் - சன்மார்க்கத்தினையே சேர்ந்தாய். `மார்க்கர்கண்ட நூலோதி வீடு காதலிப்பவர்` (சித்தியார்.) என் புழிப்போல நின்றது. `தயாமூலதன்மம்` என்னும் தத்துவத்தின் வழி `நின்று தாழ்ந்தோர்க்கெல்லாம் நலங்கொடுக்கும் நம்பி` (தி .6 ப .20 பா .6). யாயிருத்தலாலும் `தயாமூலதன்மவழி எனக்கு நல்கி மனந்திருத்தும் மழபாடி வயிரத்தூண்` என்றதில் அடியார்க்கு நல்கும் `தயாமூலதன் மவழி`யுடையனாதலாலும் அறவாழியந்தணன் சிவனே. அறப் பெருஞ்செல்வி சிவையே. அவன் கல்லாற் கீழிருந்து உரைத்தருளிய அறத்தின் ஏகதேசமே ஏனையோர்பால் இருப்பது. `பிறவி அறுப்பீர்காள்`. `அறவனாரூரை மறவாதேத்துமின் துறவியாகுமே` என்றதை (தி .1 ப .91 பா .2). மறவல் நெஞ்சமே `(தி .1 ப .90 பா .8). என்பதனோடு ஒப்பு நோக்கியுணர்க. மறவன் என்று பிரிப்பது மறமன்றி அறமாகாது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

செடிகொள்நோ யாக்கையைம் பாம்பின் வாய்த் தேரைவாய்ச்சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

முடைநாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போல உலகியல் இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள் முடிதாழ்த்திப் பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

செடி - பாவம், துன்பம், தீ நாற்றமும் ஆம். (தி .2 ப.93 பா.2). (தி .6 ப .82 பா .7).(திருவாலவாயுடையார் புராணம். 54:- 19). நோயையுடைய யாக்கை. (பா .3). `ஐம்பாம்பு` என்ற பாடமே மதுரை - ஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் பதிப்பிலுளது. அம்பாம்பு என்ற பாடம் சிறவாது. `பாம்பின்வாய்த் தேரைபோலப் பலபல நினைக்கின்றேனை ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூருடைய கோவே`. (தி .4 ப .47 பா .1). பாம்பின் வாயில் தேரை. தேரையின் வாயில் சிறுபறவை (வண்டு). அவ்வண்டின் வாயில் மலர்த்தேன் துளி. அதைச் சுவைத்துக் கொண்டிருக்கும் அச்சிறு பறவைக்கும், அதை உண்ணும்தேரைக்கும், அதை விழுங்கும் பாம்பிற்கும் அவ்வவ்வுணவால் எய்தும் இன்பத்தின் சிறுமையும் தாம் உற்ற துன்பத்தின் பெருமையும் உவமை. உயிர்கள் விரும்பும் உலக இன்பத்தின் சிறுமையும் அதனை விழைந்து முயன்று தேடிப்பெறும் பொருட்டு உயர்ந்த பிறவியைப் பயன்படுத்தித் திருவருளிற் செலுத்தாமையால், அடையப்பெறாத உண்மையின்பத்தின் பெருமையும் உவமேயம். சிறு பறவை முதலிய மூன்றற்கும் உள்ளது போல்வதொரு பெருங்கேடு யாக்கையின் செடி கொள்நோய். நோய் பாம்பைக்கொல்லும், பாம்பு தேரையைக்கொல்லும், தேரை வண்டைக் கொல்லும். அந்நிலையில் பாம்பு முதலிய மூன்றும் தேரை, வண்டு தேன்றுளியால் முறையாகச் சிறிது இன்புறும் செயலால், பின் உள்ள பெருந்துயரை அறியாதுள்ளன. இந்நிலைமையை நெஞ்சிற்கு அறிவுறுத்தி, நிலைத்த பொருளை நாடுவித்தலே இதன் உட்கோள். `அடுகரி தொடர வீழ ஐந்தலை நாகங் காண இடிகிணற் றறுகின் வேரைப் பற்றிநான் றிடஅவ் வேரைக் கடுகஓர் எலியும் வந்து கறித்திட அதில்நின் றோனுக் கிடைதுளி தேன்நக் கின்பம் போலும்இப் பிறவி யின்பம்.` `கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம் விண்ட நாகத்தின் வாயினில் வெருண்டவன் றேரை மண்டு தேரையின் வாய்தனில் அகப்படு தும்பி வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.` என்னும் தனிப்பாடல்களையும் `வனப்பாழ்ங்கிணற்றுள் வெம்பாம்பு பற்றும் விடத் தேரை வாய்வண்டு தேன் வேட்டல் போல் விசித்துக் கொடுபோய்விட ... ... கூற்றை எண்ணாது எண்ணும் வேட்கையெல்லாம் விட... ... அரங்கன் திருத்தாளில் விழு நெஞ்சமே` (திரு வரங்கத்தந்தாதி .93) என்பதையும் துன்பத்துள் துன்பமான உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே தனக்கு உடனே வரக்கடவதாகிய துன்பத்தைச் சிறிதும் நினையாமல் இன்பத்தையே மேன்மேல் அவாவும் பேதைமையியல்புக்கு, ... ... கானகத்தில் நீரற்ற பாழ்ங் கிணற்றிலே பாம்பின் வாய்ப்பட்டு நஞ்சு தலைக்கு ஏறிய தேரையின் வாயில் அகப்பட்டதொரு வண்டு தேனை விரும்புதலை உவமை கூறினார்` என்னும் அதன் விளக்கத்தையும் நோக்கி உணர்க. இதற்குப் பிறர் எழுதியது பொருந்துமா என்று ஆய்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

ஏறுமால் யானையே சிவிகையந் தளகமீச் சோப்பி வட்டின்
மாறிவா ழுடம்பினார் படுவதோர் நடலைக்கு மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர் மதியம் வைத்த
ஆறனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! உலாவரும் பெரிய யானை, சிவிகை, கவசம், விருது முதலியவற்றை ஆடைகளை மாற்றுவது போல மாற்றப்படும் பல பிறவிகள் எடுக்கும் உடலை உடையார் தாற்காலிகமாகப் பெறும் துன்பமயமான வாழ்வைக்கண்டு மயங்குகின்றாய். ஒப்பற்ற அழகிய தனபாரங்களைக்கொண்ட உமையம்மை பங்கினரும், பிறைமதியையும் கங்கையையும் சூடிய முடியினரும் ஆகிய ஆரூர் இறைவரைத் தொழுதால் உய்யலாம். மையல்கொண்டு அஞ்சாதே!.

குறிப்புரை :

ஏகாரம் எண்ணுப் பொருட்டு, சிவிகை - பல்லக்கு. அந்தளகம் - கவசம். (தமிழ் லெக்ஸிகன் : பக்கம் 82.) ஈச்சோப்பி - ஈயோட்டி. விருது என்றாருமுளர், வட்டின்மாறி வாழ் உடம்பு:- உடையை மாற்றுவதுபோல் உடம்பினை மாற்றுவது அவ்வுடம்பினை எடுக்கச்செய்யும் வினைப்பயனாக உயிர்க்கு நிகழ்வது. வட்டு - உடை. வட்டின் - வட்டுப்போல. உடம்பில் மாறி வாழ்தல் ஆவது எடுத்த உடம்பினை விடுத்துப் புதியதோருடம்பிற்புகுதல். யானை, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி என்பவற்றை உடையவர் அருள்வாழ்வு பெறாராயின், அழியாத பேற்றை அடைவாரல்லார். மாறிவாழ் உடம்பினாரேயாவர். அவர் அந்நடலையே படுவர். நடலை - பொய். அதை நன்று என்று மயங்கிப் பற்றின் பிறவிதொலையாது. அல்லியங்கோதையார் பாகராகிய தியாகராயரைத் தொழுது பிறவித்துன்பத்தினின்றும் உய்தி அடையலாம். நெஞ்சே மையல் கொண்டு அஞ்சாதே என்க. செல்வராயிருந்தபோது யானை மீதும் சிவிகை மீதும் சென்றவர், வறியரானபோது, ஈயோட்டும் இழி நிலையும் உண்ணும் வட்டில் மாறும் நிலையும் அடைவது பற்றிக் கூறியதாகக் கொள்ளலும் பொருந்தும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் திதுநம் மில்லம்
புன்புலா னாறுதோல் போர்த்துப்பொல் லாமையான் முகடு கொண்டு
முன்பெலா மொன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கி டாதே
அன்பனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! எலும்புகளாய கழிகளைக் கட்டி இறைச்சியாகிய மண் சுவர் எழுப்பி, அற்பமான புலால் மணம் கமழும் தோலைப் போர்த்துப் பொல்லாமையாகிய முகடுவேய்ந்தமைத்தது நம் இல்லமாகிய உடல். பண்டு தொட்டு ஒன்பது வாயில்களை உடைய நம் உடலைப் பேணுதலாகிய முயற்சியிலேயே மூழ்கிவிடாமல் நம்மேல் அன்புடையனாய ஆரூர் இறைவனை வணங்கினால் உய்தி பெறலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

எறிந்து - நீளக்கட்டி. முகடு - மேல்மூடு. ஒன்பது வாய்தல் - நவத்துவாரம். குரம்பை - உடற்குடில். (தி .4 ப .33 பா .4). அன்பன் - சிவபிரான். `அன்பே சிவம்`. கால்கொடுத்தெலும்பு... ... கூரை (தி .4 ப .67 பா .13) `ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து தாம் எடுத்த கூரை`. (தி .6 ப .12 பா .1) முகடு என்பது மூடு என மரூஉவாகும். ஒன்பது வாய்தல்:- `புழுப்பெய்த பண்டிதன்னைப் புறம் ஒரு தோலான் மூடி ஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை` (தி .4 ப .5 பா .22) குரம்பை - (தி .4 ப .31 பா .2,3). `புலால் கமழ்பண்டம்`(தி .4 ப .67 பா .8)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

தந்தைதாய் தன்னுடன் றோன்றினார் புத்திரர் தார மென்னும்
பந்தநீங் காதவர்க் குய்ந்துபோக் கில்லெனப் பற்றி னாயே
வெந்தநீ றாடியா ராதியார் சோதியார் வேத கீதர்
எந்தையா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! தந்தை, தாய், உடன் பிறந்தார், புத்திரர், மனைவி ஆகிய பந்தங்களிலிருந்து விடுபடாதவர்க்கு உய்தி அடையும் உபாயம் இல்லை எனத்தெளிந்து, வெந்த வெண்பொடி பூசியவரும், ஆதியான வரும் சோதியாரும் வேதப்பாடல்களைப் பாடுபவரும், எந்தையும் ஆகிய ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

நெஞ்சே, நீ, அஞ்சாதே, தந்தை, தாய், சகோதரர், புத்திரர், மனைவி என்னும் பற்று நீங்காதவர்க்குப் பிறவித்துன்பத்தினின்றும் உய்தி அடையும் உபாயம் இல்லை என்று தெளிந்து, திருவாரூர்த் தியாகராசப் பெருமான் திருவடியே கதி எனப்பற்றிக் கொண்டாய். ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டாய். `தந்தையார் தாயாருடன் பிறந்தார், தாரமார் புத்திரரார்தாந்தாமாரே, வந்தவாறெங்ஙனே போமாறேதோமாயமா மிதற்கேது மகிழவேண்டா, சிந்தையீருமக்கொன்று சொல்லக் கேண்மின், திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ்சென்னி யெந்தையார் திருநாம நமச்சிவாய வென்றெழுவார்க் கிருவிசும்பிலிருக்கலாமே`. `உடலைத் துறந்து உலகேழுங் கடந்து உலவாத துன்பக் கடலைக் கடந்து உய்யப் போயிடலாகும் ... ... ... ... சுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கண் துணி நெஞ்சமே`. (தி .6 ப .93 பா .10), (தி .4 ப .112 பா .2)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

நெடியமால் பிரமனு நீண்டுமண் ணிடந்தின்ன நேடிக் காணாப்
படியனார் பவளம்போல் உருவனார் பனிவளர் மலையாள் பாக
வடிவனார் மதிபொதி சடையனார் மணியணி கண்டத் தெண்டோள்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! நெடிய உருவெடுத்த திருமால், பன்றி உருவெடுத்து மண்ணிடந்தும், பிரமன் அன்ன வடிவெடுத்துப் பறந்து சென்றும் இன்றுவரை தேடிக்காணாத நிலையில் தன்மையால் உயர்ந்தவரும், பவளம் போன்ற உருவினரும் இமவான் மகளாகிய பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்ட வடிவினரும், பிறையணிந்த தலை முடியினரும் நீலமணிபோன்ற அழகிய கண்டத்தினரும் எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவருமாகிய ஆரூர் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

நெடியமால் மண் (பூமியை) இடந்தான் - பேர்த்தான் பிரமன் (வானில் உயர) நீண்டான், பறந்தான். நீண்டு. இடந்து இன்னம் நேடிக் காணாப்படியனார் என்க. படி - பண்பு. உருவம் எனில் ஈண்டுத் தீப்பிழம்புருவம் ஆகும். `இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே`(தி .6 ப .97 பா .10) என்பதில் காட்சிக்குரியது எனல் உணர்க. பாகவடிவு - அர்த்தநாரீச்சுரரூபம். மணி - நீலரத்நம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

பல்லிதழ் மாதவி யல்லிவண் டியாழ்செயுங் காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம் பந்த னாரூர்
எல்லியம் போதெரி யாடுமெம் மீசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலா ரோதநீர் வைய கத்தே.

பொழிப்புரை :

பலவாகிய இதழ்களையுடைய மாதவி மலரின், அக இதழ்களில் வண்டுகள் யாழ் போல ஒலி செய்து தேனுண்டு மகிழும் காழிப் பதியூரனும் நல்லனவற்றையே நாள்தோறும் சொல்லி வருபவனும் ஆகிய ஞானசம்பந்தன் இராப்போதில் எரியில் நின்று ஆடும், ஆரூரில் எழுந்தருளிய எம் ஈசனை ஏத்திப் போற்றிய இப்பதிகப் பாடல்களைச் சொல்லி வழிபட வல்லவர்கள் கடல் நீரால் சூழப்பட்ட இவ்வையத்தில் தீதிலர்.

குறிப்புரை :

யாழ் - யாழொலியை. `நல்லவே நல்லவே` என்ற அடுக்கும் ஏகாரமும் ஆசிரியர் திருவாய் மலர்ச்சியின் எய்தும் ஆன் மலாபத்தை உறுதிப்படுத்தி நின்றன. `ஒழுக்கம் உடையவர்க்கு ஒல் லாவே தீயவழுக்கியும் வாயாற்சொலல்` (குறள் .139) என்றதனுரையில் பரிமேலழகர் எழுதிய தாற்பரியம் ஈண்டுக் கருதற்பாலது. எல்லியம்போது - இரவு. ஓதம் - கடல். வையகத்தே பாடல் சொல்ல வல்லவர் தீது இலர் என்க. இத்திருப்பதிகம் நித்திய பாராயணத்திற்குரியனவற்றுள் ஒன்றாகும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

வரியமறையார் பிறையார் மலையோர்சிலையா வணக்கி
எரியமதில்கள் எய்தார் எறியுமுசலம் உடையார்
கரியமிடறு முடையார் கடவூர்மயான மமர்ந்தார்
பெரியவிடைமேல் வருவார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

இசைப்பாடல்களாக அமைந்த வேதங்களை அருளியவர். பிறையணிந்தவர். மலையை ஒருவில்லாக வளைத்து முப்புரங்கள் எரியுமாறு கணைதொடுத்தவர். பகைவரை அழிப்பதற்கு எறியப்படும் உலக்கை ஆயுதத்தை உடையவர். கரிய மிடற்றை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பெரிய விடைமீது ஏறிவருபவர். அவர் எம்பிரானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

வரிய மறையார் - வரிகளையுடைய வேதியர். வரிய - சிரேட்டமுடைய எனலும் பொருந்தும், மலையை ஒரு சிலையாக வணக்கி என்க. சிலை - வில். வணக்கி - வளைத்து. மதில்கள் எரிய எய்தவர். எறியும் முசலம் - வீசும் உலக்கை. மிடறு - கழுத்து.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

மங்கைமணந்த மார்பர் மழுவாள்வலனொன் றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயான மமர்ந்தார்
செங்கண்வெள்ளே றேறிச் செல்வஞ்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட மார்பினர். மழுவாகிய வாள் ஒன்றை வலக்கரத்தில் ஏந்தியவர். கங்கையைச் சடையின் மீது மறைத்துள்ளவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். சிவந்த கண்களை உடைய வெள்ஏற்றில் ஏறிச் செல்வர் போல் அருட்காட்சி தருபவர். அழகிய கையில் மானை ஏந்தியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

மங்கை மணந்த மார்பர் - உமாதேவியாரை இடப்பால் உடையவர். மார்பு இடப்பக்கத்தது. `போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த ... அண்ணல்` வலன் - வலக் கையில். கரந்தார் - மறைத்தார். செல்வம் - அடியார்கட்குத் திருவருட் காட்சி கிடைக்கும் பாக்கியம். செய்யா - செய்து. மறி - மான்கன்று. (பா .5.) அதை ஏந்தியதால் அங்கை ஏறிய மறியார் என்றார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

ஈடலிடப மிசைய வேறிமழுவொன் றேந்திக்
காடதிடமா வுடையார் கடவூர்மயான மமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
ஆடலரவ முடையார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

ஒப்பற்ற இடபத்தின் மேல் ஏறி, மழு ஒன்றை ஏந்தி, சுடுகாட்டை இடமாகக் கொண்டவர். அவர், கடவூர் மயானத்தில் எழுந்தருளியுள்ளார். பாடல் இசைக்கருவிகளோடு கூத்தாடுதல் பலவற்றையும் புரிபவர்; ஆடும் பாம்பை அணிகலனாக உடையவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

ஈடு + அல் = ஈடல். தன்னொடு பிறிதொன்று ஒப்பு அல்லாத இடபம். காடது இடமாக உடையவர். பாடல் இசை - பாடுதலில் இசை. படுதம் - கூத்து. `பாகம் உமையோடாகப் படிதம் பல பாட` (பதி . 198 பா .4) என்பதில் `படிதம்` என்றுள்ளதறிக.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

இறைநின்றிலங்கு வளையா ளிளையாளொருபா லுடையார்
மறைநின்றிலங்கு மொழியார் மலையார்மனத்தின் மிசையார்
கறைநின்றிலங்கு பொழில்சூழ் கடவூர்மயான மமர்ந்தார்
பிறைநின்றிலங்கு சடையார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

முன் கையில் நின்று விளங்கும் வளையல்களை அணிந்த இளமைத் தன்மை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் உடையவர். வேத வசனங்கள் திகழும் மொழியினை உடையவர். தெளிந்த ஞானிகளின் மனத்தின்கண் வந்து தங்குபவர். கருமை விளங்கும் பொழில் சூழ்ந்த கடவூர் மயானத்தே எழுந்தருளியிருப்பவர். பிறை விளங்கும் சடைமுடியினர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

இறை - முன்கை. வளையாள் - வளையலையுடையவள். இளையாள் - தேவியாரைக் குறித்தவை. மறை... மொழி யார் - வேதவாக்கியப் பொருளாயுள்ளவர். மலையார் - மலைத்தல் இல்லாதவர், தெளிந்தவர். அவர் மனத்தின் மிசையார். மனம் ஊர்தி. சிவபிரான் - ஊர்பவர். `அன்பர் மனமாங்குதிரை`. கறை - கறுப்பு நிறம். மரச்செறிவால் இருள்மிக்க சோலை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோடொருகா திலங்கத்
துள்ளுமிளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக்
கள்ளநகுவெண் டலையார் கடவூர்மயான மமர்ந்தார்
பிள்ளைமதிய முடையார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

வெண்மை நிறமுடைய எருதின் மேல் வருபவர். ஒளிவிரியும் தோடு ஒருகாதில் விளங்க, துள்ளும் இளமான் கன்றைக் கையில் ஏந்தியவர். ஒளிவிடும் பொன்னிறமான சடை விளங்க அதன்மிசைக் கள்ளமாக நகும் வெண்மையான தலைமாலையைச் சூடியவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். இளம் பிறையைச் சூடியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவர்.

குறிப்புரை :

ஒளிவிரியும் தோடு ஒருகாதிலும், குழை ஒருகாதிலும் விளங்க. மான்மறி (பா .2.) துலங்க - ஒளிசெய்ய. பிள்ளை மதியம் - இளம்பிறை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங்கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்த துடையாரதுவே யூர்வார்
கன்றாவினஞ்சூழ் புறவிற் கடவூர்மயான மமர்ந்தார்
பின்றாழ்சடைய ரொருவர் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

பொன்னிறமான மகரந்தம் உதிரும் மணம் பொருந்திய அழகிய கொன்றைமாலையை அணிந்தவர். சிறப்புடைய வெள்ளேற்றினைக் கொடியாக உயர்த்தவர். அதனையே ஊர்தியாகவும் கொண்டவர். கன்றுகளோடு கூடிய பசுக்கள் மேயும் காடுகளை உடைய கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பின்னால் தாழ்ந்து தொங்கும் சடைமுடியினை உடையவர். ஒப்பற்றவர். அவர் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

பொன்தாது உதிரும் கொன்றை, மணம்கொள் கொன்றை. புனைகொன்றை. பூங்கொன்றை என்று இயைத்துக் கொள்க. புனை - அழகுசெய்யும். புனைந்தார். - அணிந்தார். வெள்ளேறு - வெளியவிடை. ஒன்றா - ஒன்றாக, சிறப்புடையதாக. உயர்த்தது - தூக்கியது. அதுவே - அவ்விடையே. கன்று ஆ இனம் - கன்றுகளையுடைய பசுக்கூட்டம். புறவு - காடு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

பாசமான களைவார் பரிவார்க்கமுத மனையார்
ஆசைதீரக் கொடுப்பா ரலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போன் மிடற்றார் கடவூர்மயான மமர்ந்தார்
பேசவருவா ரொருவர் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

பாசங்களைப் போக்குபவர். அன்பர்க்கு அமுதம் போல இனிப்பவர். ஆசை அகலுமாறு அருள் கொடுப்பவர். மாலையணிந்த விடைமீது வருபவர். காயாமலர்போலும் மிடற்றினை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். அவரது புகழைப் பலரும் பேசி வணங்கவரும், ஒப்பற்றவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

பாசம் ஆன களைவார் - மலம் ஆயின ஐந்தையும் போக்குவார். ஆணவம், மாயை, கன்மம் என்று மும்மலமும், அவற்றையே மாயேயம், திரோதான சத்தியுடன் கூட்டி ஐம்மலமும் உண்டு என்பர். சிவஞானமாபாடியம். சூ .2. அதி .2. பார்க்க. `மலங்கள் ஐந்தாற் சுழல்வன்` (திருவாசகம் 133). ஆன - வினைப்பெயர். பரிவார்க்கு - அன்பர்க்கு. பரிவு - அன்பு. அமுதம் அனையார் - அமிர்தத்தைப் போல்பவர். ஆசைதீர - மூவாசையும் (மண், பொன், பெண்) ஒழிய. அலங்கல் - மாலை. காசை மலர் - காயாம்பூ; திருநீல கண்டத்துக்கு ஒப்புரைப்பது மரபு. 19-4-54 திங்கட்கிழமை இரவு 7 மணிமுதல் 8-05 வரையில் இத்தருமை ஆதீனத்து 25 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமண்ய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், தரிசனார்த்தம் வந்த எழுத்தாளர் பலருக்குக் காட்சிகொடுத்து, செவியறிவுறுத்தி அருளியவற்றுள், இடையில் இத்திருப்பாடலை எடுத்துக்காட்டி, நயம் பல கூறிய போது, அடியேம் மெய்ம்மறந்து உருகி நின்றேம். `ஆசை தீரக் கொடுப்பார்` என்றதற்குக் கூறிய நயம், அக்குருநாதர் திருக்கை வழங்கப்பெற்ற அடியேங்களுக்கோ அநுபவப் பொருளாயிருந்தது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

செற்றவரக்க னலறத் திகழ்சேவடிமெல் விரலாற்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர்மயான மமர்ந்தார்
மற்றொன்றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

சினம் மிக்க இராவணன் அலறுமாறு, விளங்கும் தம் சேவடி விரலால் கயிலைமலையின் கீழ் அவனை அகப்படுத்தி அடர்த்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். உவமையாகச் சொல்லுவதற்கு வேறொரு பொருள் இல்லாத குற்றமற்ற வெள்ளிமலை போன்ற விடைமீது ஏறி வருபவர். அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

செற்ற - கோபத்தையுடைய. கற்குன்று - கயிலைமலை. மற்று ஒன்று இணை இல்லாத வலிய மாசு (- குற்றம்) இல்லாத வெள்ளி மலைபோலும் பெற்று (- எருது) ஒன்று ஏறிவருவார் என்க. பெற்றம் - பெற்று என்று நின்றது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

வருமாகரியி னுரியார் வளர்புன்சடையார் விடையார்
கருமானுரிதோ லுடையார் கடவூர்மயான மமர்ந்தார்
திருமாலொடுநான் முகனுந் தேர்ந்துங்காணமுன் னொண்ணாப்
பெருமானெனவும் வருவார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

தம்மைக் கொல்ல வந்த பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். நீண்டு வளர்ந்த மென்மையான சடையினை உடையவர். விடை ஊர்தியை உடையவர். கரிய மானின் தோலை உடையாக அணிந்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். திருமாலும் நான்முகனும் தேடியும் காண ஒண்ணாத பெருமான் எனவும் பேசுமாறு வருபவர். அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

மான் உரிதோல் - மானை உரித்த தோல் `மானினது உரியாகிய தோல்` எனலுமாம். முன்னது வினைத்தொகை. பின்னது பண்புத்தொகையாதல் உரித்தோல் என்று நிற்புழி. ஒண்ணா - ஒன்றாத. மரூஉ. கன்று - கண்ணு, மூன்று - மூணு முதலியவைபோல.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

தூயவிடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்
காயவேவச் செற்றார் கடவூர்மயான மமர்ந்தார்
தீயகருமஞ் சொல்லுஞ் சிறுபுன்றேர ரமணர்
பேய்பேயென்ன வருவார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

தூய விடைமீது வருபவர். பகைவர் தம் முப்புரங்களும் காய்ந்து வேகுமாறு சினந்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். தீய செயல்களைச் செய்யுமாறு சொல்லும் சிறுமையாளராகிய தேரர் அமணர்கள் தம்மைப் பேய் என்று பயந்து ஒதுங்க வருபவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

துன்னார் - பகைவர். செற்றார் - கோபித்தார். தீய கருமம் - கெட்ட செயல்கள். இறையை, `பேய் பேய்` என்பார் தேரரும் அமணரும், சிறுமை புன்மை இரண்டும் பொது அடை. தீயகருமஞ் செய்தல் சிறுமை. சொல்லுதல் புன்மை `சிறுமை யுறுபசெய்பறியலரே`(நற்றிணை ,1)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

மரவம்பொழில்சூழ் கடவூர் மன்னுமயான மமர்ந்த
அரவமசைத்த பெருமா னகலமறிய லாகப்
பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொன் மாலை
இரவும்பகலும் பரவி நினைவார்வினைக ளிலரே.

பொழிப்புரை :

குங்கும மரங்கள் செறிந்த பொழில் சூழ்ந்த கடவூரை அடுத்த மயானத்தில் விளங்கும், அரவணிந்த பெருமானின் பெருமைகள் முழுவதையும் அறியலாகாதெனினும் இயன்றவரை கூறிப் பரவுமாறு ஞானசம்பந்தன் சொல்லும் இப்பதிகச் செஞ்சொல் மாலையை இரவும் பகலும் ஓதிப்பரவி நினைபவர் வினைகள் இலராவர்.

குறிப்புரை :

மரவம் - குங்குமமரம். அசைத்த - கட்டிய. அகலம் - வியாபகம். அறியல் ஆக - அறிவது இசையும்படி. பரவுமுறையே பயிலுதல் ஆசிரியர்க்கே இருந்ததெனின், நம்மனோர்க்கு அதன் இன்றியமையாமை கூறல் வேண்டுமோ?

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தி னொலியொடு மும்பர்வா னவர்புகுந்து
வேதத்தி னிசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

பொழிப்புரை :

பூதப்படைகளை உடையவரே! கொன்றை மலர் மாலை அணிந்தவரே! கடல் ஒலியோடு உம்பரும் வானவரும் வந்து வேதகீதம் பாடி மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடும் திருவடிகளை உடையவரே! நீர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

பூதகணங்களை உடையீர், கொன்றைப்பூ மாலையை அணிந்தீர். கடல் முழக்கத்தொடும் உம்பரும் வானவரும் உட்புகுந்து வேதமுழக்கஞ்செய்து மணமலர்களைத் தூவி வழிபடும் திருவடியை உடையீர். வேணுபுரத்தைத் திருப்பதியாகக் கொண்டு எழுந்தருளியிருக்கின்றீர், பூதகணம், கொன்றைப் பூமாலை சிவபிரானுக்குள்ளவை. வேணுபுரம் கடலிடத்ததாகலின் ஓதத்தின் ஒலியோடும் வேதத்தின் இசைபாடி எனப்பட்டது. `உம்பர், வானவர்` உம்பரும் வானவரும். உம்மைத் தொகை. `உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச் செம்பொனைத்தந்தருளி, (தி .7 பதி .25 பா .2.) `ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவாநாளே` (தி .6 பதி .1 பா .10.) `அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்` (தி .5(தி .5 ப .39 பா .3) `மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்றப் பண்ணினார் எல்லாம்` (தி .3 ப .118 பா .4) `தாரன்மாலையன் தண்ணறுங்கண்ணியன்` (தி .5 பதி .12 பா .7) என்பதால் இருபாலும் ஒவ்வொரு பூவைத்துத் தொடுக்கும் தார், ஒருபால் காம்பும் ஒருபால் மலரும் அமையத்தொடுக்கும் கண்ணிக்கும், பன்மலர் மாலைக்கும் வேறுபட்டது எனல் விளங்கும். ஓதம் - கடல்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்
உடையாடை யதுகொண்டீ ருமையாளை யொருபாகம்
அடையாள மதுகொண்டீ ரங்கையினிற் பரசுவெனும்
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

பொழிப்புரை :

சுடுகாட்டில் எழுந்தருளியிருப்பவரே, நைந்த கோவணத்துடன் புலித்தோலை உடுத்தும் ஆடையாகக் கொண்டவரே, அருள் வழங்கும் அடையாளமாக உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவரே, அழகிய கையில் மழுப்படையை உடையவரே, நீர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

துன்னம் - துளைத்தல், தைத்தல். கோவணம் தோல் உடையாடை :- `புலியதள் கோவணங்களுடை ஆடையாக உடையான்` (பதி .219 பா .6.) அங்கை - அகங்கை, உள்ளங்கை, அழகிய கையும் ஆம். பரசு எனும் படை - மழு என்னும் ஆயுதம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
திங்களோ டிளவரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர்
மங்கையோர் கூறுடையீர் மறையோர்க ணிறைந்தேத்தப்
பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

பொழிப்புரை :

கங்கையணிந்த சடைமுடியை உடையவரே காலனைச் செற்றுப்பின் உகந்து அருள் செய்தவரே, திங்களையும் பாம்பையும் பகை நீக்கித்திகழும் முடிமீது வைத்து மகிழ்பவரே, உமையம்மையை ஒருகூறாக உடையவரே, நீர் மறைவல்ல அந்தணர்கள் நிறைந்து ஏத்தத் தாமரை பூத்ததடாகங்களும் வயல்களும் சூழ்ந்த வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

செற்று - அழித்து. அரவம் - பாம்பு. சென்னி - தலை. பங்கயம் - தாமரை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நீர்கொண்ட சடைமுடிமே னீண்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோ டெழின்மத்த மிலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.

பொழிப்புரை :

கங்கையணிந்த சடைமுடிமேல் இருமுனையாக நீண்ட பிறை, பாம்பு, அழகிய கொன்றை மலர், எழிலுடைய ஊமத்தை மலர் ஆகியன இலங்க, நீர் அணிகலன் புனைந்த மகளிர் மாளிகைகளின்மேல் ஏறி வாழ்த்த மேகம் தவழும் மூங்கிலைத் தலமரமாகக் கொண்ட வேணுபுரத்தைப் பதியாகக்கொண்டு எழுந்தருளியுள்ளீர்.

குறிப்புரை :

நீர் - கங்கைநீர். அபிடேக நீரும் ஆம். மதியம் - பிறை. மத்தம் - ஊமத்தை. மாளிகை - நகரிலுள்ள உயரிய வீடுகளும் தோணியப்பர் மலைக்கோயிலும் ஆம். கார்கொண்ட வேணுபுரம் என்றதனால் மூங்கிலின் உயர்ச்சி விளங்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

ஆலைசேர் தண்கழனி யழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்க ளிசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

பொழிப்புரை :

கரும்பாலைகளைக் கொண்ட தண்ணிய கழனிகளை உடையதும், சோலைகளில் வண்டுகள் தேனுண்டு இசைபாடி மகிழ்விப்பதும், காலை நேரங்களில் இனிய மொழிகள் பேசுமகளிர் ஆலயம் வந்து கைகூப்பித்தொழ, பாலையாழ் ஒலிக்கும் சிறப்பினதுமாகிய வேணுபுரத்தை நீர் உமையம்மையோடு கூடிய திருமேனியராய் எழுந்தருளும் பதியாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

ஆலை - கரும்பாலை, கரும்பு. நறவு - தேன், தூ - தூய்மை. காலையே ..... கைதொழ :- என்றதால் பண்டு மகளிர் நாள் தோறும் காலையில் தவறாமல் கோயிலுக்குச் சென்று வழிபட்ட உண்மைபுலப்படுகின்றது. பாலையாழ் :- நாற்பெரும் பண்ணுள் ஒன்று, பாலையாழ். `அராகம் நோந்திறம் உறுப்புக் குறுங்கலி ஆசான் ஐந்தும் பாலையாழ்த்திறனே` என்பது பிங்கலந்தை -1381. நோந்திறத்தின் மறுதலை செந்திறம். `கைக்கிளை செந்திறம் பெருந்திணை நோந்திறம்` தொல். அகத் .55. உரை இளம்பூரணம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

மணிமல்கு மால்வரைமேன் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டி லாட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்
தணிமல்கு கோயிலே கோயிலாக வமர்ந்தீரே.

பொழிப்புரை :

மணிகள் பதித்த பெரிய திருத்தோணிமலை மீது உமையம்மையாரோடு மகிழ்ந்து உறைபவரே, கிழித்த கோவண ஆடையை உடுத்தவரே, சுடுகாட்டில் ஆடுவதை மகிழ்வாகக் கொள்பவரே, நீர் தொண்டில் விருப்புடைய அந்தணர்கள் அன்புடன் வணங்க வேணுபுரத்தில் விளங்கும் தண்மை மிக்க கோயிலே நுமக்குரிய கோயில் எனக்கொண்டு அமர்ந்துள்ளீர்.

குறிப்புரை :

`மணிமல்கு ...... இருந்தீர்` தோணிபுரம் எனப்படும் மலைக்கோயிலில் அம்மையப்பராக வீற்றிருந்தீர். அக்கோயில் `நாலைந்து புள்ளினம் ஏந்தின` (தி .4 ப . 82 பா .1) அமைப்புடையது. துணி - துண்டு. ஆட்டு - கூத்து. பரிந்து - அன்புகொண்டு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் றனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனி யழகார்வேணு புரமமருங்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாக்கொண்டீரே.

பொழிப்புரை :

நீல நிறம் சேர்ந்த கண்டத்தை உடையவரே, நீண்டு சிவந்துள்ள சடைகளைக் கொண்டவரே, அழகிய விடையூர்தியை உடையவரே, கொடிய காலனை அழித்தவரே, நீர், தண்ணீர் நிரம்பிய கழனிகளை உடைய அழகிய வேணுபுரத்தில் உள்ள வேலைப்பாடுகளால் விளங்கித் தோன்றும் கோயிலையே நுமக்குரிய கோயில் எனக்கொண்டு அமர்ந்துள்ளீர்.

குறிப்புரை :

நீலஞ்சேர் மிடற்றினீர் - திருநீலகண்டத்தீர். கோலம் - அழகு. ஆலம் - நீர், கலப்பையும் ஆம். கோலம் - வளைவு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்
விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
கரைமண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.

பொழிப்புரை :

சங்குகள் இரைகளை மிகுதியாக உண்டு கரைகளில் ஏறி இளைப்பாறும், கடலால் சூழப்பட்ட தென்திசையிலுள்ள இலங்கையர் மன்னனாகிய இராவணனின் மணம் மிக்க முடிகள் பத்தும் நெரியுமாறு கயிலைமலையின் கீழ் அகப்படுத்திக் கால் விரலை ஊன்றி அடர்த்தவரே, நீர் ஓதம் பெருகி கரையை அலைக்கும் கடலை அடுத்துள்ள அழகிய மணம்மிக்க வேணுபுரத்தையே நுமக்குரிய பதியாகக்கொண்டு அமர்ந்து பெருமையால் சிறந்து விளங்குகின்றீர்.

குறிப்புரை :

மண்டி - மேற்சென்று, நெருங்கியும் ஆம். விரை - நறுமணம். கவின் - அழகு. ஓதம் - நீர். எற்றும் - மோதும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால்
போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையான் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.

பொழிப்புரை :

முத்தீயோம்பும் அந்தணர்கட்கு முதல்வனாகிய பிரமன், திருமால் ஆகியோர் வானில்பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் காணுதற்கு அரிய திருமுடி திருவடிகளை உடையவரே!, நீர், அலைகளால் மோதப்பெறும் பாய்மரக்கலங்களைக் கொண்ட கடலை அடுத்துள்ளதும் நீண்டு வளர்ந்த மூங்கிலைத்தலமரமாகக் கொண்டுள்ளதுமாகிய வேணுபுரத்தையே நுமக்குரிய வளமையான பதியாகக் கொண்டு விளங்குகின்றீர்.

குறிப்புரை :

தீயோம்பு...... முகன்:- பிராமணர்க்கு முதல்வன் பிரமன் என்னும் உண்மை உணர்த்தப்பட்டது. மால் - திருமால், ஓங்குதல் - பிரமன் செயல். இழிதல் - மால்வினை. போற்ற அரிய திருவடி எனத் திருவடிச்சிறப்பு உணர்த்தப்பட்டது. பாய் ..... வேணுபுரம் :- பண்டு சீகாழியில் மரக்கலங்கள் (கடற்றுறையுள்) இருந்தமை தெளிவாகும். சேய் ..... புரம் :- விண்ணில் ஓங்கிய உயர்ச்சியைக் குறிப்பது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலையானா ரறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே
நிலையாகப் பேணீநீ சரணென்றார் தமையென்றும்
விலையாக வாட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.

பொழிப்புரை :

பெருமானே! நீர், நின்றுண்ணும் இயல்பினராய இழிந்த சமணர்கள் சாக்கியர்கள் கூறும் அறிவுரைகளைப் பொருட்படுத்தாது உம் பொன்னடிகளை விரும்பி நீயே சரண் என்று அடைந்தவர்களை எப்பொழுதும் நும்மைத் தந்து அவர்களைக் கொள்ளும் விலையீட்டில் ஆட்கொள்ள வேணுபுரத்தைத் நுமக்குரிய தலமாக விரும்பியுள்ளீர்.

குறிப்புரை :

நிலையார்ந்த உண்டியினர் - நின்று உண்பவர். அடுத்த பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் ஈற்றில் அருளிய திறத்தை நோக்கினால் உன்பொன்னடியே நிலையாகப்பேணி நீ (யே) சரண் என்றாரை, என்றும் விலையாக ஆட்கொள்ளும் திறம் வாய்மையாதல் விளங்கும். * * * * * * * 11 11. * * * * *

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

இனிய மொழியினளாகிய உமையம்மை பங்கனும், எம்தலைவனும், விண்ணுலகில் வாழும் வானவர் தலைவனும், குற்றமற்றவனும், விடையூர்தியும், ஆகிய, தெளிந்த நிலவொளியைத் தரும் மதிதவழும் மாளிகைகளைக் கொண்ட தேவூரில் விளங்கும் அண்ணலின் சேவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் இலராயினோம்.

குறிப்புரை :

`பண்ணிலாவிய மொழியுமைபங்கன்` என்றதில், இத்தலத்தின் தேவிக்கு வழங்கிய திருப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதைப் பின்னோர் `மதுரபாடணியம்மை` என்று மாற்றினர். விண்ணில் வானவர் என்பது தேவகணம் எல்லாவற்றையும் குறித்தது. கோன் - சிவபெருமான். விமலன் - மலரகிதன். விடையூர்தி - எருதூர்பவன். தெள்நிலா - தெளிந்த நிலவுடைய. மதி - பூரணசந்திரன், பிறையுமாம். அண்ணல் - பெரியோன், சிவன். அடைந்தது காரணம். அல்லல் இன்மை காரியம். அல்லல் - பிறவித்துன்பம். பிறப்பில் எய்தும் துன்பம் எனலும் பொருந்தும். ஒன்று இலம் - ஒன்றும் இல்லேம். சிறிதும் இல்லேம் எனலுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு
சோதி வானவன் றுதிசெய மகிழ்ந்தவன் றூநீர்த்
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதி சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

நிலவுலகில் வாழ்வோர் ஓதிஉய்ய, உதயகிரியில் ஏறிவரும் கதிரவனால் வழிபடப்பட்ட வானவர் தலைவனாய் விளங்குவோனும், தன்னைத் துதிப்பாரைக் கண்டு மகிழ்ந்து உடனே அருள் புரிபவனும், ஆகிய குற்றமற்ற தாமரை மலர்கள் மகளிர்முகம் போல மலரும் சிறப்பினதாகிய தேவூரில் விளங்கும் முழுமுதற் கடவுளின் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம்.

குறிப்புரை :

மண்தலத்தோர் ஓதி முழுது உய்ய - மண்ணிடத்து வாழும் மக்கள் திருப்புகழ்களை ஓதிப்பூரணமான உய்வைப்பெற. வெற்பு ஏறு சோதிவானவன் - உதயகிரியில் ஏறி ஒளிர்கின்ற சூரிய தேவன். துதிசெய - வழிபட. மகிழ்ந்தவன் - உவந்து அருள்புரிந்த சிவபிரான், தேவூரில், நீரில், குற்றம் இல்லாத தாமரைப்பூக்கள் மகளிருடைய முகம் போலப்பூக்கும் என்பது நீர் நிலவளம் உணர்த்திற்று. தேவூர் ஆதி - தேவூரில் கோயில் கொண்டெழுந்தருளிய முதல்வன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பொருவயற் றேவூர்
அறவன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

வேதவிதிப்படி மிக்க வழிபாடுகளை இயற்றிய மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்தற்குச் சினந்து வந்த காலனைக் காய்ந்த கடவுளும், சேற்றில் வாழும் வாளைமீன்களும் சேல்களும் சண்டையிடுகின்ற வயல்களை உடைய தேவூரில் விளங்கும் அறவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம்.

குறிப்புரை :

மாணி - பிரமசாரி. மார்க்கண்டேயர். கறுவு - கோபம், எம்கடவுள், செறுவில் - சேற்றில். பொரு - போர்செய்கின்ற. அறவன் - தருமரூபி. சிவபிரான், `அறவாழியந்தணன்` (குறள்).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

முத்தன் சில்பலிக் கூர்தொறு முறைமுறை திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் றன்னடி யார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழிற் றேவூர்
அத்தன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

பாசங்களின் இயல்பாகவே விடுபட்டவனும், சிலவாக இடும் உணவுக்கு ஊர்கள் தோறும் முறையாகப் பலியேற்கும் பித்தனும், சிவந்தசடையைக் கொண்டுள்ள பிஞ்ஞகனும், தன் அடியவர்களின் சித்தத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய மாளிகைகளையும், மதிதவழும் பொழில்களையும் உடைய தேவூர்ப்பெருமான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.

குறிப்புரை :

முத்தன் - அநாதிமுத்தன், இயல்பாகவே பாசங்கள் இல்லாதவன். எண்குணத்துள் ஒன்று. சடைப்பிஞ்ஞகன் - மயிர் முடியினன். தன் அடியார்கள் சித்தன் - தன் அடியை வழிபடுவோரது சித்தத்தில் இருப்பன். சித்தன் - அறிவுக்கறிவாயிருப்பவன் என்றலும் அமையும். `மதிதவழ்பொழில்` சோலையின் உயர்ச்சியைக் குறித்தது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்
தேடு வார்பொரு ளானவன் செறிபொழிற் றேவூர்
ஆடு வானடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

இசைபாடுபவர்க்கும், பல்பொருள் பயனாக அவன் இருத்தலை அறிந்துணர்ந்து அன்போடு கூடுவார்க்கும், உலகில் துணையாகக் கொண்டுள்ளவர்கள் மேல் செலுத்தும் பற்றுக்களை விட்டு அவனையே பற்றித் தேடுவார்க்கும் பொருளாயிருப்பவனும், செறிந்த பொழில்களை உடைய தேவூரில் நடனம் புரிபவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.

குறிப்புரை :

பாடுவாரும் கூடுவாரும் தேடுவாருமான அடியார்கட்குப் பேறாயுள்ள பொருளானவன் தேவூர்த் திருக்கூத்தன் என்றவாறு. இசைபாடுவார் சிவபிரானைத் துணையாக்கொண்டவர்கள், தங்கள் பற்றுக்கள் எல்லாம் அற்றொழிய அச்சிவபிரானையே பற்றாகப் பற்றித் தேடுவார்கள். அவர்களுக்கு அவனன்றி வேறு பொருள் இல்லையாதலின், `தேடுவார் பொருளானவன்` என்றார். துணையாகக் கொண்ட தமது பற்று அற எனலுமாம், முன் துணையெனப்பற்றப் பட்டது பின் பொய்யாய்த்தோன்ற, மெய்த்துணை உயிர்த்துணையாகிய சிவபிரானே எனல் விளங்கும். விளங்கின் அதையே பற்றுதலும் தேடுதலும் நிகழும். `ஆடுவான்` என்றது எல்லாத் தலங்களிலும் ஒரு ஞானக்கூத்தனே எழுந்தருளியிருக்கும் உண்மை பற்றியது, இச் சிந்தாந்தவுண்மையுணராமல் உரைப்பவை பொருந்தா. (பதி .152 பா .1.)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுடென் றேவூர்
அங்க ணன்றனை யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

கிளர்ந்து எழுந்த அணிகலன் பூண்டுள்ள தனங்களையும், நெறிந்த கூந்தலையும், வரிவளையல்களையும் கொண்டுள்ள மலைமங்கை பங்கினனும், கங்கையை வளர்ந்த சடைமீது வைத்தவனும், திங்கள் சூடியவனும், தீப்போன்ற செந்நிறமுடைய கடவுளும் ஆகிய, அழகிய தேவூரில் எழுந்தருளிய அழகிய கருணையாளனை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.

குறிப்புரை :

பூண் - ஆபரணம். குழல் - கூந்தல். பொருப்பின் மங்கை - இமாசலகுமாரி. தீநிறக்கடவுள் - அழல்வண்ணனாகிய சிவபிரான். அங்கணன் - கருணாகடாக்ஷன். `கண்ணுக்கு அழகு கருணை`

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் றக்க
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

வலியதோள்களை உடைய அவுணர்தம்புரங்கள் எரியுமாறு தன்தோள்களால் பெரிய மேருமலையை வில்லாகப் பொருந்த வளைத்தவனும், தென்தமிழ்க் கலைகளை நன்குணர்ந்தவர் வாழும் தேவூரில் விளங்கும் அன்பனுமாகிய சிவபிரானின் சேவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.

குறிப்புரை :

வல்புயத்த அத் தானவர் - வலிய புஜங்களையுடைய அந்த அசுரர். அ - பண்டறிசுட்டும் உலகறி சுட்டுமாம். புயத்து அவம் எனப்பிரித்துரைத்தலும் அமையும். வரை - மேருமலை. தேவூரில் தமிழ்ப்புலவர் இருந்த உண்மை உணர்த்தப்பட்டது. அன்பன் - `அன்பேசிவம்`.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுக னெரிந்து
வெருவ வூன்றிய திருவிர னெகிழ்த்துவாள் பணித்தான்
தெருவு தோறுநற் றென்றல்வந் துலவிய தேவூர்
அரவு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

சிறப்புடைய மரங்கள் உயர்ந்து வளர்ந்த கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பத்துத் தலைகளை உடைய இராவணன் நெரிந்து வெருவுமாறு ஊன்றிய கால்விரலை, அவன் பாடல் கேட்டு நெகிழச்செய்து அவனுக்கு வாள் முதலியவற்றை வழங்கியவனும், தெருக்கள் தோறும் நல்ல தென்றல் வந்துலவும் தேவூரில் பாம்பணிந்தவனாய் விளங்குவோனுமாகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.

குறிப்புரை :

தசமுகன் - இராவணன், தேவூர்த்தெருக்களின் நலம் கூறப்பட்டது. சூடி - அணிந்த சிவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

முந்திக் கண்ணனு நான்முக னும்மவர் காணா
எந்தை திண்டிற லிருங்களி றுரித்தவெம் பெருமான்
செந்தி னத்திசை யறுபத முரறிருத் தேவூர்
அந்தி வண்ணனை யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

திருமால் பிரமர்கள் அடிமுடிகாண்போம் என முற்பட்டுத் தேடிக் காணாது தொழுத எந்தையும், திண்ணிய வலிமை பொருந்திய பெரிய யானையை உரித்த எம்பெருமானும், செந்து என்னும் இசைவகையை இசைத்து வண்டுகள் முரலும் தேவூரில் விளங்கும் அந்திவண்ணனும் ஆகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.

குறிப்புரை :

களிற்றிற்குத் திண்மையும் திறலும் இருமையும் அடைகளாயின. செந்து - பெரும்பண்களுள் ஒன்று. `செந்து மண்டலி` பிங்கலந்தை. செந்து இனத்து இசை - செந்து என்னும் பண்வகையைச் சார்ந்த இசையை. `செந்திலங்கு மொழியவர்` (தி .2 ப .3 பா .10) `செந்து நேர்மொழி யார்` (தி .2 ப .51 பா .11) `செந்திசை பாடல்` (தி .1. ப .114 பா .11) அறுபதம் - வண்டு, முரல் - ஒலிக்கும், `திருத் தேவூர்` என்று ஆசிரியரே சிவதலங்களை வழங்குமாறு உபதேசித்தருளியவாறுணர்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுடென் றேவூர்
ஆறு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே

பொழிப்புரை :

ஓடித் திரியும் புத்தர்களும், தவத்தை மேற்கொண்ட சமணரும் பலநாள்களாகக் கூறிவரும் இலக்குப் பிழையானது எனத் தெளிவுற்று, எங்கும் மிகுந்து தோன்றும் நம் செஞ்சடைக் கடவுள் எழுந்தருளிய தேவூரை அடைந்து கங்கையை அணிந்துள்ள சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.

குறிப்புரை :

பாறுபுத்தர் - ஓடுகின்ற புத்தர்கள். பாறல் - ஓடுதல். தவம் அணி - தவக்கோலம் அணிந்த. குறி :- `குண்டர் சாக்கியர் கூறிய தாம் குறியின்மையே சொலீர்` (பதி .137 பா .10). தேறி - தெளிந்து.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
எல்லை யில்புகழ் மல்கிய வெழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும்வல் லாரே.

பொழிப்புரை :

காழிவாழ் மக்களுக்குத்தலைவனும், நல்ல செந்தமிழ் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் எல்லையற்ற புகழ் பொருந்திய அழகிய தேவூரில் விளங்கும் பழமையான இறைவனைப் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் துன்பங்கள் இன்றி விண்ணுலகை ஆள்வர்.

குறிப்புரை :

அல்லல் இன்றி விண்ணாள்வர்கள் வல்லார் என்க. முற்பாக்களில் `யாம் அல்லல் ஒன்று இலம்` என்றருளி, இதில், இப்பத்தும் வல்லார் அல்லல் இலராவர் என்ற உண்மை உணர்த்தப்பட்டது. இத்திருப்பதிகத்தை நாடோறும் நியமமாகப் பாராயணம் செய்பவர் அல்லல் அடையார் என்பது திண்ணம். அதிபன் - தலைவன்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணிவண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை விழவோசை வேத வொலியின்
சாலநல் வேலையோசை தருமாட வீதி கொடியாடு கொச்சை வயமே. 

பொழிப்புரை :

நீல நிறம் பொருந்திய கண்டத்தினனும், வலிமை நிறைந்த சினம் மிக்க பெரிய யானையை உரித்தவனும், சேல்மீன் போன்ற கண்ணினளாகிய ஒப்பற்ற உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்ட வடிவினனும் ஆகிய சிவபிரான் மேவிய பதி, வேல்போன்ற கண்களைக் கொண்ட அழகிய பெண்கள் விளையாடும் ஒலியும், விழாக்களின் ஆரவாரமும், வேத ஒலியும், கடல் ஓசையும் நிறைந்த, கொடி ஆடும் மாட வீதிகளைக் கொண்டுள்ள கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

நீலநன்மாமிடற்றன் - திருநீலகண்டத்தர். சினத்த - கோபத்தை உடைய. மா - யானை. சேல் அன்ன கண்ணி - சேல் மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியார். கூறு - பாகம். உருகொள் திகழ்தேவன் என்க.
கண்ணுக்கு வேல் ஒப்பு. மகளிர் விளையாட்டோசையும், விழாவினோசையும், வேத முழக்கமும், கடலோசையும் உடைய வீதிகள், பதிதான் கொச்சைவயம் என்க. முதல் 9 பாக்கட்கும் இவ்வாறே கொள்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

விடையுடை யப்பனொப்பி னடமாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் தகவைத்த சோதி பதிதான்
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் வளர்கின்ற கொச்சை வயமே.

பொழிப்புரை :

விடையை ஊர்தியாகக் கொண்ட தந்தையும், ஒப் பற்ற நடனங்கள் புரிபவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட விமலனும், சடையில் வெள் எருக்கமலர் கங்கை திங்கள் ஆகிய வற்றைப் பொருந்தச் சூடிய ஒளிவடிவினனும் ஆகிய சிவபிரானது பதி, மடைகளில் அன்னப்பறவைகள் நிறைந்து பரவித் தாமரைமலர்கள் மேல் தங்கும் வயல்கள் சூழ்ந்ததும், கொடை வள்ளல்களாய் மறையவர்கள் வாழ்வதுமாகிய கொச்சை வயமாகும்.

குறிப்புரை :

ஒப்பு இல் நடம் - உவமை இல்லாத ஞானத்திருக்கூத்து. விகிர்தம் - மாறுபாடு (பா.10) சடையிடை, வெள்ளெருக்க மலர்:- `வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பு\' (கம்பர், யுத்தகாண், இராவணன் வதைப்,237). தக - தகுமாறு, பொருந்த. சோதிபதி:- ஆறன்றொகை, அன்னம்பரந்து கமலத்து வைகும் வயல். கொடை யுடை வண்கையாளர்:- `கொடையில் ஓவார் குலமும் உயர்ந்தம் மறை யோர்கள்\' (தி.2. ப.122 பா.1) `உரவார் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒரு நாளும் கரவாவண்கைக் கற்றவர் சேரும் கலிக்காழி, (தி.1 ப. 102 பா. 1).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்தலைக்கை பலிகொள்ளும்இன்பன் இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடு நளிர்சோலை கோலு கனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல மறையோது கொச்சை வயமே.

பொழிப்புரை :

படம் பொருந்திய பாம்பு ஆடும் முன்கையை உடையவனும், துன்பங்களைப் போக்கும் எம் தலைவனும், அகன்ற வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலிகொள்ளும் இன்பனும் ஆகிய சிவபிரானுக்கு இடமாக விளங்கும் அழகிய தலம். மயில்கள் நடனமாட வண்டுகள் மது உண்டு பாடும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், பொற்கலசம் பொருந்திய கூடங்களில் நாகணவாய்ப் பறவைகள் வேதங்கள் ஓதுவதுமாகிய கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

மஞ்சை - மயில், மயில் ஆட வண்டு பாடும். நளிர் - குளிர்ச்சி. கூடத்தின் மிசைக் குடம் இடுதல் முன்பே இருந்தது. பூவை - நாகணவாய்ப் புள், கூடம் ஏறி மறை ஓதும் கொச்சைவயம் என்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

எண்டிசை பாலரெங்கு மிகலிப் புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன்மிண்டி வருநீர பொன்னி வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன வளர்கின்ற கொச்சை வயமே.

பொழிப்புரை :

எண்டிசைப் பாலகர்களாகிய இந்திரன் முதலா னோர் எங்கும் சூழ்ந்து புகுந்து மன எழுச்சியோடு விளக்குகளை வரி சையாக ஏற்றித்தூபம் இட்டு வழிபடும் திருவடிகளை உடைய சிவ பிரானது பதி, செறிந்த வண்டல் மணலோடு வரும் பொன்னி நதியின் நீர் வயல்களில் பாய வாளை மீன்கள் கூடி ஆழமான இடங்களில் பாய்ந்து விளையாடும் ஓசை, படைகள்வரும் ஓசைபோல வளர்கின்ற கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

பாலர் - பாலகர். இகலி - பகைத்து. வழிபடு முறையுட் சிறிது உணர்த்திற்று. ஒளி தீபமாலை - தீபாவளி. பாதர் - திருவடி யுடையவர். குண்டு - ஆழம்

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன வல்லவற்றை யினிதாக நல்கும் இறைவன் னிடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் வளர் தூம மோடி யணவிக்
குனிமதி மூடிநீடு முயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சை வயமே.

பொழிப்புரை :

பனிபடர்ந்த மலைக்கு மன்னாகிய இமவானின் மருகனும், குபேரனோடு தோழமை கொண்ட பகவனும், இனியன அல்லாதவற்றையும் இனிதாக ஏற்று அருள் நல்குபவனுமாகிய இறைவன் இடமாகக்கொண்டருளும் தலம், முனிவர் குழாங்களோடு அந்தணர்கள் வளர்க்கும் வேள்விப்புகை சென்று பரவி வளைந்த பிறையையும் வானையும் மறைத்து நிறையும் கொச்சை வயமாகும்.

குறிப்புரை :

பனி ... ... மலைக்கு - இமாசலராசனுக்கு. குபேரன் சிவ பிரானுக்குத் தோழனாதல் பிரசித்தம். இனிக்காதவற்றையும் இனிய வாகச் செய்தருளும் பெருமான். பிறப்பு இன்னாதது என்பது சர்வமத சம்மதம். அதனை இனியதாகப் பலவுயிரும் விரும்புகின்றன. அவ் விருப்பம் மீண்டும் பிறப்பதற்கு உரிய வினையாகின்றது. இது திரு வருட்செயல். அணவி - கிட்டி. `வேள்விப் புகையால் வானம் இருள் கூர் வெண்காடே\' (பதி. 197. பா.7.)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

புலியதள் கோவணங்க ளுடையாடை யாக வுடையா னினைக்கு மளவில்
நலிதரு முப்புரங்க ளெரிசெய்த நாத னலமா விருந்த நகர்தான்
கலிகெட வந்தணாளர் கலைமேவு சிந்தை யுடையார் நிறைந்து வளரப்
பொலிதரு மண்டபங்க ளுயர்மாட நீடு வரைமேவு கொச்சை வயமே.

பொழிப்புரை :

புலித்தோலையும் கோவணத்தையும், தான் பெற்றுடைய ஆடையாகக் கொண்டவனும், நினைக்கும் ஒருநொடிப் பொழுதில் உலகை நலிவு செய்து வந்த முப்புரங்களை எரிசெய்தழித்த நாதனும் ஆகிய சிவபிரான் மகிழ்வோடு விளங்கும் தலம், கலிகெட வேள்வி செய்யும் அந்தணர்களும் கலையுள்ளம் கொண்டவர்களும் நிறைந்து வாழ்வதும் அழகிய மண்டபங்களும் உயர்ந்த மாடங்களும் நீண்ட மலைகள் போலத் தோன்றுவதுமாய கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

அதள் - தோல். உடையாடை. (பதி. 217.பா. 2.) கலி - வறுமை. அந்தணாளர் - அழகும் தண்மையும் ஆள்பவர். கலை - வேத முதலிய கலைகள்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

*பாடல் கிடைக்கவில்லை *

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன் முடியோடு தோள்க ணெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் னடிவைத்த பேயொ டுடனாடி மேய பதிதான்
இழைவள ரல்குன்மாத ரிசைபாடி யாட விடுமூச லன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார் கடங்க ளடிதேடு கொச்சை வயமே.

பொழிப்புரை :

மழைமுகில் போன்ற கரிய மேனியையும் வலிய வாளையும் உடைய அரக்கனாகிய இராவணன் தன் தலைகளோடு தோள்களும் நெரியவும், அவனது பிழை நீங்கவும் சிறந்த மலர்போன்ற திருவடியைச் சிறிதே ஊன்றியவனும்,பேய்களோடு உடனாடி மகிழ் பவனும் ஆய சிவபிரான் எழுந்தருளியபதி, மேகலையணிந்த அல் குலை உடைய மகளிர் இசைபாடி ஆட, வானளாவ உயர்ந்த கமுக மரத் தழைகள் விண்ணில் செல்வார் அடிகளை வருடுமாறு உயர்ந்துள்ள கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

மழை முகில் - மழையைப் பொழியும் மேகம். அரக்கன்-இராவணன். இராவண்ணன் என்றவாறு. பிழை - மதியாது மலை யெடுத்த குற்றம். இழை - மேகலை முதலியன. கண்ணி - வலை, புட்களைப் படுக்கும் முடிப்புக்கயிறுமாம். கமுகின் குழை (-தளிர்) தருக ண்ணி, விண்ணில் வருவோர் காலைச்சிக்கச் செய்யும் என்றதால், அதன் உயர்ச்சிகூறிற்று.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

வண்டமர் பங்கயத்து வளர்வானும் வைய முழுதுண்ட மாலு மிகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்து மறியாத சோதி பதிதான்
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து விரைதேர போது மதுவிற்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து வயன்மேவு கொச்சை வயமே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்மேல் எழுந் தருளிய பிரமனும், உலகம் முழுவதையும் உண்ட திருமாலும் தம்முள் மாறுபட்டு அடி முடிகளைக் காண்போம் என்று திருமால் பன்றியாய் நிலத்தைக் கிளறியும் பிரமன் அன்னமாய்ப் பறந்து சென்றும் அறிய முடியாதவாறு சோதிவடிவாய் நின்ற சிவபிரானது பதி, நண்டு உண்ண வும் நாரைகள் செந்நெல் நடுவே இருந்து இரைதேட, நிரம்பிய தேனுடன் தாமரை மலரோடு குவளை மலர்கள் வயலிடையே மலரும் கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

வளர்வான் - பிரமன். மால் கிளறி, வளர்வான் பறந்தும், நண்டு உண்ண, நாரை இரையைத் தேர (-ஆராய). புண்டரிகம் - தாமரை. குமுதம் - ஆம்பல்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்ட ரிடுசீவ ரத்தி னுடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக்கமழ்ந்து மணநாறு கொச்சை வயமே.

பொழிப்புரை :

கையில் உணவை ஏற்று உண்டு உடலினின்று உதிரும் அழுக்கினரும், குண்டர்களும், சீவர உடையினராகிய ஆகிய சமணரும், புத்தரும் மெய்யுரையாதவாறு செய்து விளை யாடவல்ல வேறுபட்ட பல்வகை உருக்கொண்டருளும் பரமனாகிய சிவபிரானது பதி, படப் பாம்பின் எயிறு போன்று குரவம் மலர, வயல்களில் நீல மலர்கள் அலர, இவற்றால் மணம் சிறந்து விளங்கும் கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

மாசர் - அழுக்கர். புறப்புறச்சமயத்தார்க்குச் சமயா தீதனான பரசிவத்தின் மெய் புலப்படாமை கூறிற்று. எயிறு - பல். பயின்று - மிகுதியாய். செய் - கழனி. (மொட்டு - அரும்பு). கமழ்ந்து - பரந்து. வியலிடம் கமழ் (புறநா.50.)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

இறைவனை ஒப்பிலாத வொளிமேனி யானை யுலகங்க ளேழு முடனே
மறைதரு வெள்ளமேவி வளர்கோயின் மன்னி யினிதா விருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர் போய்
அறைகழ லீசனாளு நகர்மேவி யென்றும் அழகா விருப்ப தறிவே

பொழிப்புரை :

எங்கும் நிறைந்தவனை, ஒப்பில்லாத ஒளி மயமான திருமேனியனை, ஏழுலகங்களையும் மறைக்குமாறு ஊழி வெள்ளம் பரவியகாலத்தும் அழியாது மிதந்து வளர்ந்த திருத்தோணி மலைக் கோயிலில் மன்னி இனிதாக இருந்த மாணிக்கத்தைக் குறை வற்ற ஞானம்பெற்ற இனிய ஞானசம்பந்தன் பாடிப்பரவிய தமிழ் மாலைப் பத்தையும் பாடிப் போற்றுபவர் ஒலிக்கின்ற கழல் அணிந்த ஈசன் ஆட்சி செய்யும் சிவலோகத்தை அடைந்து இனிதாக ஞான வடிவினராய் வீற்றிருப்பர்.

குறிப்புரை :

ஒப்பு இலாத ஒளி மேனியான் - உவமையில்லாத பிரகாசத்தையுடைய திருமேனியை உடையவன். `அங்கு இங்கு என்னாதபடி எங்கும் பிரகாசமாய்\' (தாயுமானவர். 1.) விளங்குவது வேறொன்றில்லாமையால் ஒப்பின்மை தெளிவாம். மறைக்கும் வெள்ளம் ஊழிப்பிரளயம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை, ஈகை, படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச் சூரை செறிந்த சுடுகாட்டை விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய சோலைகள் சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை மிதித்துத்துள்ள, அதனைக் கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும் நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

காரைமுதலிய தாவரங்கள் சுடுகாட்டில் மிக்குள்ளன. `முட்காற்காரை` புறம். 258. கள - களா. `கருவையிலும் சிங்கையிலும் களவாண்டான்`. (தனிப்பாடல்) ஈகை - இண்டஞ்செடி, ஈங்கை - புலி தொடக்கி எனலுமுண்டு. `இண்டுபடர்ந்த இருள்சூழ்மயானத்து` தொடரி - முட்செடி. `கடுவும் தான்றியும் கொடுமுள் தொடரியும்`. சூரை :- `கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து` மணிமேகலை. 6:- 81. பம்மி - செறிந்து. `குளத்தினில் ஆரைபடர்ந்து` திருமந்திரம். 2911. `மகளிர் வள்ளை கொய்யும்` பதிற். 29-2.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

சடையிடைப் புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணி அயலே
இடையிடைவைத்ததொக்கு மலர்தொத்து மாலை யிறைவன் னிடங்கொள் பதிதான்
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து மணநாறு நீலம் மலரும்
நடையுடை யன்னம்வைகு புனலம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

சடையிடைப்புக்கு ஒடுங்கியுள்ளதாய்த் தங்கிய கங்கையையும், வளரும் பிறையாகிய கண்ணியையும், இடையிடையே விரவிய கொத்தாகிய மாலையையும் உடைய இறைவன் இடங்கொண்டருளும் பதி, மடையிடையே வாளைமீன்கள் துள்ள, முகிழ்த்துள்ள வாய் விரிந்து மணம் வீசும் குவளைமலர்களுடையன வாய் நடையில் சிறந்த அன்னங்கள் வாழும் நீர்நிலைகளை உடைய தோட்டங்கள் சூழ்ந்த நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

உள்ள + தங்கு + வெள்ளம் எனப் பிரிக்க. படப்பை - தோட்டம். பக்கம் எனலுமாம். அன்னத்தின் நடை உவமிக்குஞ் சிறப்புடையது ஆதலின், நடையுடை யன்னம் எனப்பட்டது.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபா டிலாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் விடுபோ தலர்ந்த விரைசூழ்
நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

அடியவர்கள் தங்களுக்குக் கிடைத்த மலர்களைக் கொண்டு வழிபட அதனை ஒழியாது ஏற்றருளும் தலைவனும், கருங்குவளைமலர் போலத்தனது கண்டம் நிறம் உறுமாறு விடத்தை உண்ட காளையும் ஆகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், வண்டுகள் தங்கித் தேன் உண்டு விட்ட வெறுமலர்களோடு கூடி விசைத்து எழும் கொம்புகளில் விரியும் பருவத்துள்ள மணம் பொருந்திய மலர்களின் தேன் உண்டு அகஇதழ்களில் வண்டுகள் உறங்கும் பொழில்களை உடைய நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

தேனை விரும்பிய வண்டுகள் முன்னரே பூத்து மணம் நீங்கிய வறும்பூக்களைத் தொட்டுத் தங்கியதால் தாழ்ந்து எழுந்து விட்டதால் ஓங்கி எழுந்து விசையுடன் சென்ற மலர்க்கொம்புகளில், அவ்வண்டுகள் தொடாது விட்ட போதுகள்பூத்தமையால் மணம் பரவிற்று. பரவிய அம்மணத்தால், பூத்த மலர்களின் அகவிதழ்களைப் பொருந்தி வண்டுகள் ஒலி அடங்கித் தேனுண்டு உறங்கின, இவ்வியற்கையை ஆசிரியர் அருளிய திறத்தை உணர்ந்து மகிழ்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி யுமைபாக மாக வுடையா னுகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

குளிர்ந்த கங்கை தங்கிய சடையின்கண் விளங்கிய தலைமாலையோடு கூடி, ஒளிதரும் திங்களைச் சூடி, உமையம்மையை ஒருபாகமாக உடைய பெருமான் உகந்து எழுந்தருளிய நகர், குளிர்ந்த, கொம்பு என்னும் இசைக்கருவியின் பாடல்களோடு குயில் கூவும் இசையையும் கேட்ட பெடை வண்டு தானும் முரல நண்ணிய சோலைகளில் வரிசையாக நாரைகளும் குருகுகளும் வைகும் நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

மாலையோடு குலவிப் பிரகாசிக்கும் பிறை சூடி, கொம்பில் என்றே மதுரைத் திருஞானசம்பந்தப்பிள்ளை பதிப்பில் உள்ளது. சுவாமிநாத பண்டிதரும் வேறு சிலரும் பதித்தவற்றுள், கொம்மல் என்றுள்ளது. அது கெதாநு கெதிகநயம் பற்றியதொரு பிழையாகும். குளிர்ச்சியைத்தரும் கும்மிப்பாடலொடு குயிலின் பாடலைக்கேட்ட வண்டு என்று கூறுவதினும் கொம்பு என்னும் இசைக்கருவியின் ஒலியொடு குயிலின் பாடலைக் கேட்ட வண்டு எனக்கூறுவது சிறந்தது.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

தோடொரு காதனாகி யொருகா திலங்கு சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடும் எந்தை யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

ஒருகாதில் தோடணிந்தவனாய், ஒருகாதில் வளைந்த சங்கைக் குழைதாழ நின்று புரளுமாறு அணிந்தவனாய்ச் சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அனலிடை ஆடும் எந்தையாகிய சிவபிரானது பதி, வீடு அடைய விரும்பும் அடியவர்கள் விதி முறையிது என்று தெரிந்து நீராடி மணம் பொருந்திய நீரை விரலால் தெளித்து அர்க்கியம்தர, ஒலியோடு பெருவெள்ளமாய்ப் பெருகி நாடு முழுதும் பரவி வரும் காவிரியின் கரையில் விளங்கும் நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

ஒரு காதில் சங்கத்தோடும் ஒருகாதில் சங்கக் குழையும் அணிந்தமை குறிக்கப்பட்டது. கனல் - தீயில். வீடுடன் எய்துவார்கள் பேரின்ப வீட்டை விரைந்து எய்தும் வைதிக சைவர்கள் மனைவியுடன் நீராடச் சென்று அடையும் வைதிகர்கள் எனலுமாம். விரலால் தெளித்தல் :- கை (விரல்) களால் அர்க்கியங்கொடுத்தல். நாடுடன்நாடு வெள்ளமா ஆரும் குடகுநாட்டில் தோன்றிக் கொங்குநாட்டில் பாய்ந்து சோழநாட்டில் கடலை அடைவது நோக்கின் நாடுடன்நாடு காவிரி வெள்ளம் நிறையும். மேதினிக்கு வளம் நிறைத்துக் குறைந்த நீருடைமையால், கடல் வயிறு நிறையாத காவிரி ஆயிற்று (பெரிய . திருமூல . 8.) என்றனர். `பொன்னி` என்றது நீரின் செம்மையும் மணலின் பொன்மையும்பற்றி வழங்கிய காரணப்பெயர். நாடுடன் ஆடு வெள்ளம் என்றுகொண்டு, கங்கையிற் புனிதமாய காவிரியில் நாட்டினர் ஒரு சேரப்போந்து நீராடுதலைக் குறித்ததாகக் கொள்ளலும் ஆகும்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

மேகமொ டோடுதிங்கண் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன்
ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொ டாடுமந்தி யுகளுஞ் சிலம்ப அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமொ டாரம்வாரு புனல்வந் தலைக்கு நனிபள்ளி போலும் நமர்காள்.

பொழிப்புரை :

மேகங்களோடு ஓடும் திங்களைக் கண்ணியாகச் சூடி, மலைமகளை அழகிய பொன்மயமான திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அழலின்கண் நின்று ஆடும் எந்தையாகிய பெருமான் எழுந்தருளியநகர். கருங்குரங்குகளும், மந்திகளும் விளையாடும் மலையின்கண் உள்ள அகில் மரங்களையும் ஒளி பொருந்திய பொன்னையும் நாகமரம் சந்தன மரம் ஆகியவற்றையும் புரட்டியும் எற்றியும் ஓடிவரும் காவிரிநீர் வந்து அலைக்கும் நனிபள்ளியாகும்.

குறிப்புரை :

ஊகம் - கருங்குரங்கு, குரங்குமாம். மந்தி - பெண் குரங்கு. உகளும் - பாயும், குதிக்கும். இடறி - எற்றி, தள்ளி. நாகம் - நாகமரம். ஆரம் - சந்தனமரம். பாம்பும் (நாகரத்நமும்) முத்தும் ஆம். வாருபுனல் - கொழிக்கும்நீர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டிவீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்

பொழிப்புரை :

பெருமை பொருந்திய தண்டு , சூலம் , அனல் உமிழும் நாகம் ஆகியவற்றை உடையவராய் , வகையாக அமைந்த வன்னி கொன்றை ஊமத்தை ஆகியவற்றை அணிந்து கொடுகொட்டி என்னும் திருக்கூத்தியற்றிய பெருமான் உகந்த நகர் , புகையாக எழுந்த மணத்துடன் மாலை புனைவார்கள் புகழும் ஓசையும் , பணிந்து போற்று வார் பாடும் பாடல் ஓசையும் பெருகி ஒளிவீசும் முத்துக்கள் இலங்கும் மணல் சூழ்படப்பைகளை உடைய நனிபள்ளியாகும் .

குறிப்புரை :

தகை - தடை . தண்டு - தண்டாயுதம் . சிவிகையுமாம் . கொடுகொட்டி - திரிபுரதகனகாலத்திற் சிவபிரான் ஆடிய திருக்கூத்து . கந்தம் - மணம் . நகை - வெண்மை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று மதியா வரக்கன் வலியோ
டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழுமேலு நிகராது மில்லை யெனநின்ற நீதி யதனை
நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்

பொழிப்புரை :

வலிமை மிக்க வாள் வேல் ஆகியவற்றையும் வளைந்த ஒளி மிக்க பற்களையும் உடைய மதியா அரக்கனாகிய இராவணன் உடல் வலிமையோடு கற்றூண் போன்ற தோள் வலியும் இழக்குமாறு கால் விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர் , கீழுல கிலும் மேலுலகிலும் தனக்கு நிகர் யாருமில்லை என்கின்ற நீதி வடிவினனாகிய அவனை நன்மைமிக்க தொண்டர்கள் நாளும் திருவடிகளைப் பரவும் நனிபள்ளியாகும் .

குறிப்புரை :

வாளன் - சிவபிரான் அருளிய வாளை உடையவன் ( இராவணன் ). வாளன் வேலன் இரண்டும் சிவபிரானைக் குறித்தவை எனலும் ஆம் . உலம் - கற்றூண் , திரண்டகல் . ஆதும் - யாதும் . ` ஆதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்றபோது ` ( தி .4 ப .3 பா .1) இதில் , பிறபத்தும் நோக்காதார் ` யாதும் ` என்று எழுதிவிட்டனர் . ` சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான் ` ( தி .6 ப .20 பா .9).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேதநாவன் அயனோடுமாலு மறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்

பொழிப்புரை :

நிறம் பொருந்தியதொரு எரிவடிவம் தோன்றித் தங்களிடையே நிற்க அதன் நீர்மை சீர்மை ஆகியவற்றை நினையாத வராய் அறம்பொருந்திய வேதங்களை ஓதும் நாவினனாகிய பிரமனும் திருமாலும் முடி அடிகளைத் தேடமுயன்று அறியாதவராய் நின்ற தலைவனது நகர் , முல்லை நிலத்தில் விரிந்த முல்லை , மல்லிகை , அசோகு , புன்னை , கொன்றை ஆகியன செறிந்த சோலைகளில் பூத்த மலர்களில் புதுமணம் கமழும் நனிபள்ளியாகும் .

குறிப்புரை :

முதலீரடியில் அரியும் அயனும் அடிமுடி தேடிய வரலாறு குறிக்கப்பட்டது . பின்னீரடியில் முல்லை மௌவல் முதலிய வற்றின் மணம் வீசும் சிறப்பு நனிபள்ளிக்கு உண்டென்பது கூறப் பட்டது . புற - புறவம் . ` குறியதன்கீழாக்குறுகல் ` ( நன்னூல் ).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் இடவுண்டு பட்ட அமணும்
மனமிகு கஞ்சிமண்டை யதிலுண்டு தொண்டர் குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யு நனிபள்ளி போலும் நமர்காள்

பொழிப்புரை :

அன்னமாக , வயிற்றுக்குட் செல்லும் சோறு கொணர்க எனக் கேட்டுக் கையில் இட உண்டு திரியும் அமணரும் , மனம் விரும்பிக் கஞ்சியைப் பனைமட்டையாலியன்ற மண்டையில் ஏற்றுண்டு தொண்டர்க்குரிய குணமின்றி நிற்கும் புத்தரும் கூறுவன வற்றைக் கொள்ளாது கிரியைகள் மிகுந்த வேதங்கள் நான்கையும் ஓதிய நாவினை உடைய விடையூர்தியான் விரும்பிய நகர் , தெளிந்த ஞானமுடைய தொண்டர்கள் நாள்தோறும் திருவடிகளைப் பரவிப் போற்றும் நனிபள்ளியாகும் .

குறிப்புரை :

செல்கு - செல்லும் . செல்குசோறு :- வினைத்தொகை . கொணர்க - கொண்டுவருக . மண்டை - பனைமட்டையாலான உண் கலம் . சிவபிரான் வேதங்களை அருளியவன் என்பது இங்கும் உணர்த்தப்பட்டது . நன - நனவு . தெளிவு .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் இசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே

பொழிப்புரை :

கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளை யும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத , ஆறங்கங் களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப் பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும் .

குறிப்புரை :

ஆறும் நாலும் - ஆறங்கங்களும் நால்வேதங்களும் . ( தி .2 பதி .6 பா .3.) அத்தர்பியல்மேல் இருந்து - தந்தையார் திருத் தோள்மிசை அமர்ந்து . ஆணைநமதே :-( தி . 2 ப .84-85 பா .11, தி .3 ப .78 பா .11, தி . 3 ப .118 பா . 11)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொழிப்புரை :

மூங்கில்போன்ற தோளினை உடைய உமை யம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்த வனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையைமீட்டிக்கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு , திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம் . அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

வேய்உறுதோளிபங்கன் - மூங்கிலின் இரு கணுக் களுக்கும் இடைப்பட்ட பகுதியைப்போலும் தோள்களையுடைய உமா தேவியாரை இடப்பால் உடையவர் . ஞாயிறு ... பாம்பு இரண்டும் - சூரியன் முதலிய ஒன்பதுகோள் ( கிரகங் ) களும் . ஆசு அறு நல்ல நல்ல - குற்றம் அற்ற நலத்தைச் செய்வன . அவை அடியார்களுக்கு மிக நல்லன நல்லன . பாம்பு இரண்டும் - இராகுவும் கேதுவும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொழிப்புரை :

என்பு , பன்றிக்கொம்பு , ஆமையோடு ஆகியன மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைமலர்மாலை , கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமை யம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத் தலால் , அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது , பத்து , பதினாறு , பதினெட்டு , ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவன வும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

கொம்பு - பன்றிக்கொம்பு . ஆமை - முற்றலாமை யோடு . ஏழை - உமாதேவியார் . ` ஏழை பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய் ` ஒன்பது :- அசுவினி முதலாகக்கொண்டு எண்ணின் ஒன்பதாவது நட்சத்திரம் ஆயிலியம் . ஒன்பதோடொன்று :- பத்து - மகம் . ஒன்பதொடேழு :- பதினாறு - விசாகம் . பதினெட்டு . கேட்டை . ஆறு :- திருவாதிரை , உடனாய நாள்கள் மற்றயவை . அவை :- பரணி , கார்த்திகை . பூரம் , சித்திரை , சுவாதி , பூராடம் , பூரட்டாதி , நாள்கள் என்றதால் , ஆகாத திதிகளும் கிழமைகளும் அடங்கின . இவ் வுண்மையை , ` ஆதிரை பரணி ஆரல் ஆயில்யமுப் பூரம் கேட்டை தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம்ஈ ராறும் மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார் பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின்வாய்த் தேரைதானே .` என்னுஞ் சோதிடநூற் பாட்டாலுணர்க . கயப்பாக்கம் சதாசிவச் செட்டி யார் அவர்கள் எழுதிய அகத்தியர் தேவாரத் திரட்டின் உரை யில் உள்ள தும் , தமிழ்ப்பொழில் - துணர் 7.8. 9 இல் பண்டித அ . கந்தசாமிப் பிள்ளை அவர்களும் எம் . எஸ் . பூரணலிங்கம்பிள்ளை அவர்களும் எழுதிய கட்டுரைகளால் ஐயந்தீர்த்து முடிவு செய்யப்பட்டதுமான உரையே இதில் குறிக்கப்பட்டதாகும் , ஆயினும் சிவபெருமானுக்குரிய திருவாதிரையை முதலாக்கொண்டு , அதற்கு ஒன்பது சித்திரை . அத னொடு ஒன்று சுவாதி . அதிலிருந்து முன் ஏழு ஆயில்யம் . அதற்குப் பதினெட்டு பூரட்டாதி . அதற்குமுன் ஆறு பூராடம் என்றும் , உடனாய நாள்கள் : பரணி , கார்த்திகை , மகம் , பூரம் , விசாகம் , கேட்டை என்றும் உரைப்பாருமுளர் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொழிப்புரை :

அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை , திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள் , துர்க்கை , செயமகள் , நிலமகள் , திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும் . அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும் .

குறிப்புரை :

உருவளர் பவளமேனி - அழகுவளரும் பவளம் போன்ற செம்மேனியில் . கலையதூர்தி - துர்க்கை . நெதி - திரவியம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையா ரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை , கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , சினம் மிக்க காலன் , அக்கினி , யமன் , யமதூதர் , கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடை யனவாய் நல்லனவே செய்யும் . அடியவர்களுக்கும் மிகவும் நல்ல னவே செய்யும் .

குறிப்புரை :

வடபால் - ஆலின்கீழ் . வடம் - ஆலமரம் . ` கல்லால் நிழற்கீழ் வாடாமுலை மங்கையும் தானும் மகிழ்ந்து ஈடா உறைகின்ற இடைமருது ` ( தி .1 ப .32 பா .1.) வடபக்கம் என்பாருமுளர் . கொதி - கோபம் , உக்கிரம் . காலன் - ` காளமேகந் நிறக்காலனோடு அந்தகன் ` ( தி .2. ப . 119. பா .6.) அங்கி - அக்கினி . நமனொடு தூதர் - இயமனும் இயமதூதரும் , ` மண்ணிடைக் குரம்பைதன்னை மதித்து நீர் மையல் எய்தில் விண்ணிடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் ? ( தி .4. பதி .31. பா .2.) ` தருமராசற்காய் வந்த கூற்றினைக்குமைப்பர் ` ( தி .4. பதி .49. பா . 2.) என்பவற்றால் , நமன் ( தருமராசன் ) வேறு நமனுடைய தூதராகிய கூற்றுவர் வேறு என்றும் ` சூலத்தால் அந்தகனைச் சுருளக்கோத்துத் தொல்லுலகில் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக் காலத்தால் (- காலால் ) உதைசெய்து ` ( தி .6. பதி .83. பா .9.) என்பதில் அந்தகன் வேறு கூற்று வேறு என்றும் உணர்த்தல் அறிக .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

நஞ்சணிந்த கண்டனும் , எந்தையும் , உமையம்மை யாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான் , இருள் செறிந்தவன்னிஇலை , கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர் , இடி , மின்னல் , செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

துஞ்சிருள்வன்னி :- வன்னிமரத்தின் இலைகள் மிகுந் தும் அடர்ந்தும் தழைத்திருத்தலால் இருள் துஞ்சும் நிலையினது . உளத் திற்கு ஏற்றினும் அமையும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோலாடையை உடுத்து வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார் உமையம்மையாரோடும் உடனாய் அன்றலர்ந்த மலர்கள் , வன்னி , கொன்றை , கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடிவந்து என் உளத்தின் கண் புகுந்துள்ள காரணத்தால் வலிய குரங்கு , புலி , கொலையானை , பன்றி , கொடிய பாம்பு , கரடி , சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும் ! அடியார் கட்கும் மிக நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

வரி - கீற்றுக்களை உடைய புலியினது . வாள்வரி :- அன் மொழித்தொகை . கோள் - வலிமை . அரி - குரங்கு . கோளு ( வலிமை , கொலையு ) ம் அரி (- பகை ) யும் உடைய உழுவை (- புலி ) எனலுமாம் . ஆளரி - சிங்கம் . ` ஆளரியேறனையான் ` ( பெரிய . திருஞான .474).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும் , கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய் , என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால் , வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா . அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

செப்பு - சிமிழ் . அடைவு ஆர் - அடைதலுற்ற . அப்பு - கங்கை . வெப்பு - வெம்மை . சுரநோய் சிலேத்துமம் . வாதம் - வளி . பித்து - பித்தம் . ` மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று ` ( குறள் .941)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

மன்மதன் அழியுமாறு நெற்றி விழியைத்திறந்து எரித்து விடைமீது உமைமங்கையோடும் உடனாய் இருந்து , முடிமிசை ஒளிபொருந்திய பிறை , வன்னி , கொன்றைமலர் ஆகியனவற்றைச் சூடிச் சிவபெருமான் வந்து என் உளம்புகுந்துள்ள காரணத்தால் ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிற ராலும் வரும் இடர்கள் நம்மை வந்து நலியா ; ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும் . அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும் .

குறிப்புரை :

விழிசெய்து - நெற்றிவிழி திறந்து எரித்து . வாள் - ஒளி . அரையன் - அரசன் , இராவணன் . இடர் ஆன - துன்பமானவை . கடல்நல்ல .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும் , உமைபாகனும் , எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான் , முடிமீது கங்கை , எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரைமலர்மேல் உறையும் பிரமன் , திரு மால் , வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும் , கெட்ட காலங்கள் , அலைகடல் , மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும் . அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

` வேடம் பலவாகி நின்ற பரமன் ` ( தி .2 ப .87 பா .6.) ஒருவனுமே பலவாகி நின்றதொரு வண்ணமே ` ( தி .3 ப .10 பா .8.) ஒன்றொடொன்று ஒவ்வாவே ` ( தி .3. ப .102 பா .6.) ` ஒன்றோ டொன்றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக்கொண்டு நின்றனன் ` ( சித்தியார் - 71.) நாரி - உமாதேவியார் . மலர்மிசையோன் - செந்தாமரை மேலிருக்கும் பிரமன் . காலம்ஆன - கெட்டகாலங்களானவை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள்புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர் , பிறை , பாம்பு ஆகியவற்றை அணிந்து , என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும் . நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும் . அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

விசையற்கு - அர்ச்சுனனுக்கு . வேடவிகிர்தன் - வேடனாக மாறியவன் . வாதில் - மதுரையில் நடந்த அனற்போர் புனற் போர்களிலும் போதிமங்கைக்கருகில் புத்தருடன் நடந்த போரிலும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே

பொழிப்புரை :

தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும் , கரும்பு , விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும் , வளரும் செம் பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும் , நான்முகனால் முதன்முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர் . இது நமது ஆணை .

குறிப்புரை :

மறைஞான ஞானமுனிவன் - அபரஞானமும் பர ஞானமும் ஆகிய இரண்டையும் உடைய முனிவர் . பெரிய , திருஞான . ` சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் ( ஆகிய ) உணர்வரிய விஞ்ஞானம் பவம் ... ... அறமாற்றும் ... ... ஓங்கிய ஞானம் ( ஆகிய ) உவமையிலாக் கலைஞானம் தவமுதல்வர் சம்பந்தர் ... ... உணர்ந்தார் `. கோளும் - சூரியன் முதலிய கிரகங்களும் . நாளும் - அசுவினி முதலிய நட்சத்திரங்களும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம செயறீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண மிகவேத்தி நித்த நினைமின்
வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங் களைச் செற்று, வளரும் கங்குலில் உமையம்மை அஞ்சக் கடல் நஞ் சினை உண்ட சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கையால் தொழுதால் வாக்கு; மனம் காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். அங்குள்ள பெருமானை அவ்வாறு தீருமாறு மிக ஏத்தி நித்தமும் நினைவீராக.

குறிப்புரை :

உரையினில் வந்த பாவம் - வாக்கால் வந்த தீவினைகள். உணர்நோய்கள் - (மனத்தால்) நினைப்பால் உண்டான தீவினைகள். செயல்தீங்குகுற்றம் - (காயத்தால்) தீச்செயல்களால் வந்த தீவினைகள். தீங்கு செயல் என மாற்றுக. பாவம், நோய்கள், குற்றம் மூன்றற்கும் `உம்ம\\\\\\\' என்னும் ஆறனுருபு ஏற்ற சொல் பொதுவாய் நின்றது. உம்முடைய பாவம் நோய்கள் குற்றம் என்க. செயல் தீங்கு குற்றம் - செயலது தீங்காலாகும் குற்றமென விரித்தலும் ஆகும். வரையினிலாமை - அளவில்லாமை, அளவில் நில்லாமை.(`மை\\\\\\\') எதிர்மறைவினையெச்சமும் பெயரும் ஆம். கைதொழுதால், செய்த அவை தீரும், அவை - உம்முடைய உரையால் வந்த பாவமும் உணர் நோய்களும் தீச்செயலான குற்றமும்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற பிணிநோ யொருங்கு முயரும்
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி விதியான வேத விகிர்தன்
கானிடை யாடிபூதப் படையா னியங்கு விடையா னிலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

உயரிய வானத்தில் விளங்குகின்ற வெள்ளிய மதியைச் சூடிய சென்னியினனும், விதிகளைக் கூறும் வேதங்களை அருளிய விகிர்தனும், இடுகாட்டில் பூதப் படையோடு ஆடுபவனும், இயங்கும் விடையூர்தியினனும், விளங்கும் தலைமீது வண்டு பாடும் தேனடைந்த மலர்களைச் சூடிய சடையினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால் உடலால் செய்யப்பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப்பற்றிய பிணி நோய்களும் கெடும்.

குறிப்புரை :

ஊன் - உடம்பு, ஆகுபெயர். ஒருங்கும் - கெடும். உயரும்வான், வான் அடைகின்ற மதி. வெள்ளைமதி என்க. ஆடி:- பெயர். இயங்குவிடையான் - சஞ்சரிக்கும் இடபவாகனன்

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் றுயருற்ற தீங்கு விரவிப்
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை யொழிவுற்ற வண்ண மகலும்
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று புகழ்வானு ளோர்கள் புணரும்
தேரிடை நின்றவெந்தை பெருமா னிருந்த திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

திரிபுரத்தசுரரோடு போர் செய்து மும்மதில்களைக் கணையால் எய்த காலத்தில் புகழ்பெற்ற தேவர்கள் கூடியமைத்த தேரில் நின்ற எந்தை பெருமான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால், ஊரின் கண் நின்று வாழ்ந்த உயிர் கவரும் காலனால் வரும் தீங்கும், உலகவர் கூடி மெள்ளப் பழித்துரைக்கும் வார்த்தைகளும் ஒழிவுறும்.

குறிப்புரை :

இத்திருப்பாட்டின் முற்பகுதியில் காலன் தீங்கு விரவிப் பாரிடைவந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வரலாறு கூறப்பட்டது. அது திருநாரையூர்ப் புராணத்தில் காணப்படவில்லை. ஞான்று:- நாளன்று என்பதன் மரூஉ. இது கல்வெட்டுக்களில் பயின்றுள்ளது. `நாளன்று போகி\\\\\\\' (புறம் 124) என்புழிப்படும் பொருள் ஈண்டுக் கொள்ளலாகாது. நாளாகிய அன்று, அந்நாள், பொழுது என்னும் பொருளில் ஆளப்படுகின்றது.
`திருமுடியூர் ஆற்றுத் தளிப்பெருமானடிகளுடைய...... திருக் கற்றளியாக அமைப்பித்து, இவ்வாட்டை மகர ஞாயிற்றுச் சனிக் கிழமை பெற்ற இரேவதி ஞான்று கும்பதாரை\\\\\\\' (Archaeological Survey of India, Annual Report 1905-6, pp. 182-3.)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

தீயுற வாயவாக்கை யதுபற்றி வாழும் வினைசெற்ற வுற்ற வுலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

இடுகாட்டில் பேய்களோடு உறவுகொண்டு நடன மாடுபவனும் விடமுண்ட அழகியகண்டத்தினனும் முடிமேல் தேய்ந்த பிறையைச் சூடியவனும் ஆகிய சிவபிரான் மேவிய திருநாரையூரை வணங்கினால் தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும். தாயாய்த் தலையளி செய்யும் அவன் நாமங்கள் நும் உள்ளத்தில் மருவும்.

குறிப்புரை :

செற்ற - நெருங்கிய, பின்னிய. செற்றவுலகு என்று இயைக்க. செற்ற என்பதற்கு அழித்த என்று பொருள் கொள்ளின் தலைவன் என்பதோடியையும். `உலகின்தாய்\\\\\\\' \\\\\\\"தாயாய் முலையைத் தருவானே\\\\\\\" (திருவாசகம் 50-5) (தி.2 ப.24 பா.8). குறிப்புரை காண்க. நடமாடி:- பெயர். தேய்பிறை என்றது இயல்படை. சிவபெருமான் திருமுடியில் உள்ள பிறைக்குத் தேய்தலும் வளர்தலும் இல்லை. தொழமருவும் என்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

வசையப ராதமாய வுவரோதம் நீங்குந் தவமாய தன்மை வரும்வான்
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு விரிநூலர் விண்ணு நிலனும்
இசையவ ராசிசொல்ல விமையோர்க ளேத்தி யமையாத காத லொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

மேலான வீட்டுலகில் இருப்பவர். எல்லார்க்கும் முன்னே தோன்றியவர். அழகிய மார்பில் இலங்கும் முப்புரிநூலர். விண்ணும் மண்ணும் நிறைந்தவர். இமையவர்கள் ஏத்த அவர்கட்கு ஆசி சொல்பவர். அன்போடு திசைப்பாலகர் போற்ற நிற்பவர் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைத் தொழின் கடலளவு பெருகிய பழிகள் இடையூறுகள் நீங்கும். தவம் வரும்.

குறிப்புரை :

உவரோதம் - உபரோதம். இடையூறு. உவர் ஓதம் என்னும் தொடர் உப்பு நீர்க்கடல் என்னும் பொருளதுமாம். அப் பொருள் கொள்ளின் வசை ஆம் அபராதமாய உவரோதம் என்ப தற்குக் கடல் அளவு குற்றமாம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

உறைவள ரூனிலாய வுயிர்நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை யுலகில்
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன்மாவி னுரிபோர்த்த மெய்யன் அரவார்த்த வண்ணல் கழலே
திறைவளர் தேவர்தொண்டி னருள்பேண நின்ற திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

வேதம் வளரும் திருநாவினன் யானைத் தோலை மெய்யில் போர்த்தவன். பாம்பைக் கச்சையாகக் கட்டியவன். தலைமைத் தன்மை உடையோன் . அப்பெருமான் திருவடிகளையே திறைப்பொருளாக வளர்கின்ற தேவர்கள் தம் தொண்டால் அவன் அருளைப் பெற நிற்கும் திருநாரையூரைத் தொழுதால் உறையாக நிற்கும் உடலில் விளங்கும் உயிர் நிலை பெறும். நல் உணர்வைத்தரும். குறைகளைப் போக்கும். நெஞ்சில் நிறைவைத் தரும். நேசம் வளரும்.

குறிப்புரை :

வேதம் வளரும் திருநாவினன், யானை உரி போர்த்த திருமேனியன், பாம்பைக் கச்சாகக்கட்டிய தலைவன் ஆகிய சிவபெரு மான் திருவடிகளையே தேவர்கள் திருத்தொண்டின் எய்தும் திருவரு ளால் விரும்பநின்ற திருநாரையூர். திறைவளர்தேவர் - சிவபிரானுக் குத் திறையாக வளர்கின்ற தேவர்கள். திறையாதல் - தம்மை அர்ப்பணம் செய்தல். அடைக்கலமும் ஆம். தெறுதல் - தெறை - திறை. \\\\\\\"ஒன்னார்த்தெறுபொருள் - பகைவரைத் திறையாகக்கொள்ளும் பொருள். தெறுதலான் வரும் பொருள் எனவிரியும்\\\\\\\" (குறள் 756. உரை).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

தனம்வரு நன்மையாகுந் தகுதிக் குழந்து வருதிக் குழன்ற வுடலின்
இனம்வள ரைவர்செய்யும் வினயங்கள் செற்று நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலமூன்று புரம்வெந்து மங்கச் சரமுன் றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

முன்னொரு காலத்தில் முப்புரங்கள் அழியுமாறு சரம் விடுத்து அவுணரின் சினத்தை அழித்த சிவபெருமான் மேவிய செல்வத் திருநாரையூரைத் கைகளால் தொழுதால் தனம் வரும். நன்மையாகும். பெருமை பெறுதற்குத் திசைதோறும் அலைந்து உழன்று உடலின்கண் பொருந்திய ஐம்பொறிகளால் ஆகும் வஞ்சகங் களை அழித்துப் பெருமான் திருவடிகளில் நினைவு ஒன்றும் சிந்தை உண்டாகும்.

குறிப்புரை :

திருநாரையூரைத் தொழுதால் செல்வம் வரும். நலங்கள் உளவாகும். மேன்மை பெறுதற்கு முயன்று திசையெல்லாம் சுழன்ற உடம்பில் கூட்டமாக வளர்கின்ற ஐம்புலக் கள்வர் செய்கின்ற வஞ்சகங்களை அழித்து, சிவபெருமான் திருவடிக்கே பதித்த சிந்தை வளரும்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

உருவரை கின்றநாளி லுயிர்கொள்ளுங் கூற்ற நனியஞ்சு மாத லுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் இழிபா டிலாத கடலின்
அருவரை சூழிலங்கை யரையன்றன் வீரம் மழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

அழிவில்லாத கடலாலும் அரிய மலைகளாலும் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வீரம் அழியவும், நீண்ட கைகள் முடிகள் நெரியவும், திருவிரலை ஊன்றி, உகந்த சிவன் மேவிய திருநாரையூரைக் கைகளால் தொழ உடல் நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர் மணமலர் களைத் தூவி அப்பெருமானை வழிபாடு செய்வீர்களாக.

குறிப்புரை :

திருநாரையூரைத் தொழ உடம்பு நீங்கும் காலத்தில் உயிரைக் கொள்ளும் கூற்றுவன் மிக அஞ்சுவன். ஆதலால் நீர் மிகுதி யாக மணமலர்களைத் தூவி எப்பொழுதும் சிவ வழிபாடு செய்மின். அழிதலில்லாத கடல் நடுவே மலைகள் ஆழப்பெற்ற இலங்கைக்கு வேந்த னாகிய இராவணனது வீரம் அழியவும் பத்துத் தலைகளும் இருபது கைகளும் நசுங்கவும் ஒரு திருக்காற் பெருவிரலை ஊன்றி உயர்ந்த சிவபெருமான் எழுந்தருளிய செல்வத்தை உடைய திரு நாரையூர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க பகைதீர்க்கு மேய வுடலில் தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்
சேறுயர் பூவின்மேய பெருமானும் மற்றைத் திருமாலு நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

சேற்றில் உயர்ந்து தோன்றும் தாமரை மலரில் விளங்கும் நான்முகனும், திருமாலும் தேடச் சிவந்த எரியுருவாய்ச் சீறி எழுந்த சிவபிரான் மேவிய திருநாரையூரைக் கையால் தொழப் பிறப்பு இறப்பற்ற தன்மை கிடைக்கும். வினையாகிய துக்கம், மிக்க பகை இவற்றைத் தீர்க்கும். தெளிந்த சிந்தையில் வாய்மை விளங்கித்திகழ மறைந்து நிற்கும் சிவனது வெளிப்பாடு கிடைக்கும்.

குறிப்புரை :

சேற்றில் தோன்றி உயர்ந்த தாமரைப்பூவில் மேவிய பெரியோனாகிய பிரமனும் திருமாலும் தேடத் தீப்பிழம்பாகிக் கனன்ற செம்மையாகும் சிவபெருமான் எழுந்தருளிய செல்வத்தை உடைய திருநாரையூரைக் கைதொழுதால் பிறந்திறந்துழலும் துன்பவாழ்விற்கு வேறாய் உயர்ந்த பேரின்ப வாழ்வாகிய சகச நிலை திகழும். வினையும் அதனால் வரும் துக்கமும் மிக்க பகையைத்தீர்க்கும். பொருந்திய உடலில் தெளிந்த சிந்தையும் உண்மையும் தெளியச் செய்யநின்ற தனது மறைவை ஒழித்து விளங்கும். தன்மை - சகசம், சுபாவம், இயல்பு. வினையாகிய துக்கம்மிக்க பகை. வினையைப் பகை என்றல் திரு முறையில் பயிலக்காணலாம். `கரப்பர்கரிய மனக்கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம்துரப்பர்\\\\\\\\\\\\\\\'. (தி.6 ப.17 பா.5)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

மிடைபடு துன்பமின்ப முளதாக்கு முள்ளம் வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ண மொலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரு முடல்போர்த்து ளோரும் உரைமாயும் வண்ண மழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

சூலப்படையைக் கையில் ஏந்திப் பலியேற்கும் தன்மையனாய் இசைபாடி ஆடிச் செல்லும் இறைவனது பெருமையை உடையின்றியும் உடை போர்த்தும் திரியும் சமண் சாக்கியர் கூறுவன மாயுமாறு செய்து காக்கும் சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கை தொழத் துன்பம் நீங்கும். இன்பம் உளதாகும். உள்ளம் ஒளி யாக்கும். ஆதலின் அத்தலத்தை உன்னி உணருங்கள்.

குறிப்புரை :

வெளியாக்கும் - ஒளியைஆக்கும், \\\\\\\"அடியார்கள் உளமான வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே\\\\\\\" (சிவப்பிர காசம் - காப்பு) உன்னி உணரும் - தியானித்து உணருங்கள். முன்னி எனப்பிரித்தலும் ஆம். அதற்கு நினைந்து என்றும் முந்தி என்றும் கொள்க. உணரும்:- நிகழ்காலஉம்மீறு அன்று. எதிர்காலம் உணர்த்தும் முன்னிலைப் பன்மை. சீவக. 808. உரை - சமணசாக்கிய சமயங்களின் கொள்கைகள். செடி - குணம் இல்லாமை. கைதொழ வெளியாக்கும் அதனால் ஆடியின் பெருமையை உன்னி உணரும் என்று இயைக்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

எரியொரு வண்ணமாய வுருவானை யெந்தை பெருமானை யுள்கி நினையார்
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் உரைமாலை பத்து மொழிவார்
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க துளதென்பர் செம்மை யினரே.

பொழிப்புரை :

தீயைப் போலச் சிவந்த நிறத்தை உடையவனாய், எம் தந்தையாகிய பெருமானாய் மனமுருகி நினையாத அசுரர்களின் திரிபுரத்தை அக்காலத்தில் அழித்துக் காத்த சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கை தொழுது நீர் வளம் நிறைந்த காழி மறைஞான சம்பந்தன் உரைத்த இத்தமிழ்மாலையை மொழிபவர் திருவளரும் திருவருட்பேற்றுடன் செம்மையினராவர்.

குறிப்புரை :

எரி...உருவானை\\\\\\\' - தீயைப் போலும் ஒப்பற்ற அழகிய தாய நிறத்தை உடையவனை, `அழல்வண்ணன்\\\\\\\' என்பது திருநாமம். எந்தை பெருமானை உள்கித் திருநாரையூரைக் கைதொழுவான் ஆகிய மறைஞானசம்பந்தன் உரை(த்த) மாலை பத்தும் மொழிவார் செம்மை யாகிப் பேறுமிக்கதுள்ளது என்பராய்ச் செம்மையினர் ஆவர் என ஆக்கம் விரித்து முடிக்க. உள்குதல் கைதொழுதல் இரண்டும் மொழி வார்க்கு ஏற்றி உரைத்தலும் பொருந்தும். அப்பொருட்குத் தொழுவான் என்பது வினையெச்சமாகும். முன்னைய பொருளுக்கு வினை யாலணையும் பெயர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி யரியான்மு னாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி யுறுதீயு மாய நிமலன்
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த நல்குண்டு பண்டு சுடலை
நாரியொர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

ஊர்கள் தோறும் சென்று , பிச்சையேற்று உலகங் கள் போற்ற நல்குவதை உண்டு , முற்காலத்தே சுடலையில் மாதொரு பாகனாக நடனமாடவல்ல , நறையூரில் விளங்கும் நம்பனாகிய சிவ பெருமான் , நுண்ணியன் . பேருருவினன் . தன்னொரு பாகத்தை அளித்த திருமால்முன் சோதிப்பிழம்பு ஆனவன் . நீர் , காற்று , முதலான ஐம்பூத வடிவினன் .

குறிப்புரை :

நேரியன் - நுண்ணியன் , தோன்றுபவன் . ( சித்தி .280.) முன் ஆய ஒளியான் - அநாதியாகிய சிவப்பிரகாசன் . திருமால்முன் சோதிப்பிழம்பு ஆனவன் எனலும் ஆம் . அல்லன் - நேரியனல்லாத பரியன் . நீரியல் .... நிமலன் - நீர் , காற்று , விண் , தீ ஆகிய விமலன் . நல் குண்டு - நல்க உண்டு . அகரம் ( தொகுத்தல் விகாரம் ).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

இடமயி லன்னசாயன் மடமங்கை தன்கை யெதிர்நாணி பூண வரையில்
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து வமரர்க் களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை யெனநின்றுதொண்டர் மனநின்ற மைந்தன் மருவும்
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

பொருந்திய மயில்கள் நடனம் ஆடி அகவவும் , புகழ் நீடிய குயில்கள் கூவவும் , விளங்கும் சோலை சூழ்ந்த நறையூரில் விளங்கும் நம்பனாகிய அப்பெருமான் , இடப்பாகத்தே மயிலன்ன சாயலுடன் விளங்கும் மலைமங்கையோடு தன் கையில் உள்ள மலைவில்லில் அரவு நாணைப் பூட்டிக் கடிதானகூரிய அம்பினைக் கோத்து , மூவெயில்களைச் செற்று மகிழ்ந்து தேவர்கட்கு வாழ்வளித்த தலைவன் . இளைய மயிலூர்தியைக் கொண்ட முருகனின் தந்தை என்று தொண்டர் எதிர்நின்று போற்ற அவர்கள் மனத்திலே எழுந்தருளும் மைந்தன் ஆவான் .

குறிப்புரை :

நாணி - வில்லின்நாண் . வரை - மேருவாகிய வில் . கடும் அயில் அம்பு - கடிய கூரிய கணை . மயிலூர்தி - முருகப்பெருமான் . நின்று நின்றமைந்தன் எனக் கூட்டுக .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

சூடக முன்கைமங்கை யொருபாக மாக வருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு படுபிச்ச னென்று பரவத்
தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும் நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

இளம் பெண்கள் நாட்டியம் ஆடிப்பாடிப் போற்றும் நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய அப்பெருமான் வளையல் அணிந்தமுன் கைகளை உடைய மலைமங்கை ஒரு பாகமாக விளங்க அருள்புரிய வருபவன் . பெரிய வீடுகளை நோக்கிச் சென்று அவர்கள் இடும் பிச்சையை ஏற்று , மிக்க ஈடுபாடு உடையவன் என்று அடியவர் பரவி ஏத்த , இரு காதுகளிலும் தோடும் குழையும் அணிந்து யானையின் தோலைப் போர்த்துள்ளவன் .

குறிப்புரை :

சூடகம் - வளையல் . ஈடு அகம் ஆன - பெரிய வீடுகள் ஆனவற்றைநோக்கி . தோடும் குழையும் இருவேறு திருச்செவியிலும் அணிந்தது முன்னும் குறிக்கப்பட்டது . ( தி .2 ப .84 பா .5).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

சாயனன் மாதொர்பாகன் விதியாய சோதி கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த வருளாய செல்வன் இருளாய கண்ட னவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

தாங்கள் விரும்பிய மலையின்கண் இருந்து தவம் முயலும் சித்தர்கள் இறங்கி வந்து வழிபடுகின்ற , சித்தர்கட்கு ஈசுவரன் என்று மறையவரால் போற்றிப் பேணும் நறையூர்ச் சித்தீச்சரத்து இறை வனாகிய அவன் , அழகிய மலைமாதினை ஒரு பாகமாகக் கொண்ட வன் . எல்லோர்க்கும் ஊழை வரையறுக்கும் சோதி . சிவகதியாக நிற்கும் கடவுள் . என் மனத்திடை வந்து அருள் புரியும் செல்வன் . இருண்ட கண்டத்தினன் . தாயெனத் தலையளி செய்யும் தலைவன் .

குறிப்புரை :

கதியாகநின்ற கடவுள் - சிவகதியாக நிற்கும் பரமேச்சு வரன் . அவனித்தாய் ` தாயவன்காண் உலகிற்கு ` ( தி .6 ப .64 பா .4). மலையின்கண் வந்து தொழுவார் நாயகன் :- மலையினிருந்து வந்து வழிபடுகின்ற சித்தர்க்கு ஈசுவரன் என்று மறையோர்கள் இறைஞ்சிப் பேணும் நறையூர் என்க . பா . ` சித்தர் பேண `.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

நெதிபடு மெய்யெமைய னிறைசோலை சுற்றி நிகழம்ப லத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல வமரர்க் கொருத்தன் எமர்சுற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து விடையேறி யில்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும் நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

வாளைமீன்கள் நதி வழியாக நீந்தி வந்து வயல் களிற் பாயும் நறையூரில் எழுந்தருளிய இறைவன் , சேமநிதியாகக் கருதப்படும் மெய்ப்பொருள் . எமக்குத் தலைவன் . நிறைந்த சோலை கள் சூழ்ந்த அம்பலத்தில் அதிர்பட ஆடுபவன் . அமரர்க்குத் தலைவன் . அடியவர்க்குச் சுற்றமாய் விளங்குபவன் . பிறை பொருந்திய சடை தாழ்ந்து தொங்க விடைஏறி வந்து வீடுகள் தோறும் பலி ஏற்பவன் .

குறிப்புரை :

நெதிபடுமெய் - நிதியாகப்படுகின்ற மெய் ( ப்பொருள் ). அமரர்க்கு ஒருத்தன் - தேவாதி தேவர்க்கெல்லாம் தலைவன் . அமர ரால் அமரப்படுவான் -( தி .7 பா .384.) எமர்சுற்றம் ஆய இறைவன் - எம்மவராகிய அடியார்களுக்கு உறவாய கடவுள் . இல் - வீடுதோறும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை மலர்துன்று செஞ் சடையினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதவோசை யகலங்க மாறின் பொருளான ஆதி யருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

அருள் பெறத் தன்னை நண்ணிய தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நறையூரில் விளங்கும் இறைவன் . கங்கை தங்கிய முடி மீது வன்னி , கொன்றைமலர் முதலியன பொருந்திய சடையினை உடையவன் . வணங்குதற்கு முன்னரே அவர்கள் விரும்பும் வடிவங் கள் பலவாகத் தோன்றி அருள்புரிபவன் . தன்னை அணுகிய வேதங் களின் ஓசை , அகன்ற ஆறு அங்கங்களின் பொருளாக விளங்கும் கருணையாளன் .

குறிப்புரை :

கணிகை - கங்கை . கணிகையொர் சென்னி - தியானிப் போர் ; பிரமரந்திரம் எனல் பொருந்தாது . சென்னியில் வன்னியும் கொன்றைமலரும் துன்றிய செஞ்சடை உடையவன் . பணிகையின் முன் - வணங்குதற்கு முன்னரே பணிகின்ற கை என்ன வினைத் தொகையாகக் கொள்ளலும் பொருந்தும் . அணுகிய வேத ஓசை - தன்னை அடைய வேண்டும் என்று தேடிக்கிட்டிய வேத முழக்கம் . அகல் அங்கம் ஆறின் பொருள் - விரிந்த ஆறங்கங்களின் பொருள் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க மவையார ஆட லரவம்
மிளிர்தரு கையிலங்க வனலேந்தி யாடும் விகிர்தன் விடங்கொண் மிடறன்
துளிதரு சோலையாலை தொழின்மேவ வேத மெழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேருமாட மடவார்க ளாரு நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

தேன் துளிக்கும் சோலைகளையும் , கரும்பினைப் பிழிந்து வெல்லம் ஆக்கும் தொழிலையும் வேதமுழக்கங்களின் எழுச்சியையும் , வெற்றி வழங்கும் செல்வவளம் உடைய வான ளாவிய , மடவார்கள் வாழும் மாடவீடுகளையும் உடைய நறையூரில் எழுந்தருளிய இறைவன் ஒளிதரும் தன்திருமேனியிலுள்ள அங்கங்கள் எங்கும் அரவுகள் ஆட , கையில் விளங்கும் அனலை ஏந்தி ஆடும் விகிர்தன் . விடம் பொருந்திய கண்டத்தினன் .

குறிப்புரை :

மேனி - நிறம் . துளிதரல் - தேன்துளித்தல் . வேதம் எழில்ஆர - வேத முழக்கத்தின் எழுச்சி நிறைய . மதிசேரும் மாடம் :- வண்கொண்டல் விட்டு மதிமுட்டுவன மாடம் ` ( கம்பர் ).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

அடலெரு தேறுகந்த வதிருங் கழற்கள் ளெதிருஞ் சிலம்பொ டிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற் றிலங்கை யரையன்
உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும் இசைகேட் டிரங்கி யொருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனாகிய இராவணனின் உடல் தோள் பத்துத்தலைகள் ஆகியவற்றை நெரித்துப் பின் அவனது இசையைக்கேட்டு இரங்கி அவன் துன்பங்களைத் தவிர்த்து ஒப்பற்ற வாளைத் தந்து கருணை காட்டியவனாய் நம்மை ஆளுதற்பொருட்டு நறையூரில் எழுந்தருளிய இறைவன் வலிய எருதினை உகந்தவன் . அதிரும் கழல்களோடு ஒருபாதியில் சிலம்பு ஒலிக்க வருபவன் . கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டு கனிவு பொருந்தக் கண்டத்தில் நிறுத்தியோன் .

குறிப்புரை :

கழல்கள் எனற்பாலது கழற்கள் எனத் திரிந்தது . அரை யன் - அரசன் , இராவணன் . உடல் தோள் முடி அனைத்தும் இறுத்தும் கேட்டு , இரங்கி , தீர்த்து ( வாள் ) நல்கி என்க . நல்கி ஆளவல்ல நம்பன் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

குலமலர் மேவினானும் மிகுமாய னாலும் எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல வெய்தொணாமை யெரியா யுயர்ந்த பெரியா னிலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

சிலபல தொண்டர்கள் நின்று பெருமைகள் பேசிப் பரவக் கரியமேகங்கள் விளங்கும் பொழிலின் நல்ல மலர்கள் சிந்து தலால் மணம் வீசும் வீதிகளை உடைய நறையூரில் எழுந்தருளிய நம்ப னாகிய இறைவன் மலர்களிற் சிறந்த தாமரைமலர் மேல் விளங்கும் பிரமனும் புகழ்மிக்க திருமாலும் எதிர்கூடித் தேடியும் அவர்கள் நினைப்பில் உற்றிலாத பல சிறப்பினனாய் அவர்கள் காணமுடியாத படி , தீயாய் ஓங்கிய பெரியோன் , விளங்கும் சடைமுடியை உடையவன் .

குறிப்புரை :

மேவினான் ; பிரமன் . மிகுமாயன் - மாயம் மிக்கவன் . நேடி - தேடி . நினைவுற்றில பல - நினைப்பில் உற்றில்லாதன பலவாய் . பெருமைகள் - பொருள்சேர்புகழ்கள் . ` பெருமைக்கள் ` என்பதில் கவ் வொற்று இசைப்பொருட்டு விரித்தலாயிற்று . அருமை - அரிய மேகம் . வரும்மை , அருமை எனலுமாம் . பொழில் இனிய நல்ல மலர்களைச் சிந்த , வாசமணம் . ஒருபொருளிரு சொல் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

துவருறுகின்ற ஆடை யுடல்போர்த் துழன்ற அவர்தாமும் அல்ல சமணும்
கவருறு சிந்தையாள ருரைநீத் துகந்த பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயி லொளிபொன்செய் மாட நறையூரின் நம்ப னவனே.

பொழிப்புரை :

தவம் நிறைந்த பத்தர்கள் , சித்தர்கள் , மறை வல்லோர் விரும்பி வழிபடவும் , மாதர்கள் முறையாகப் பாடி அடைய வும் , நவமணிகள் செறிந்த கோயிலையும் ஒளிதரும் பொன்னால் இயன்ற மாடவீடுகளையும் கொண்டுள்ள நறையூரில் விளங்கும் இறைவன் , துவர் ஏற்றிய ஆடையை உடலில் போர்த்துத் திரியும் தேரரும் அவரல்லாத சமணர்களும் ஆகிய மாறுபட்ட மனம் உடை யோர் உரைகளைக் கடந்து நிற்கும் பெருமான் ஆவன் . அவன் விளங்கும் சடைமுடி உடையோன் .

குறிப்புரை :

துவர் உறுகின்ற ஆடை - துவர் ( காவி ) ஊட்டிய துணி . அல்ல - ( தேரர் ) அல்லாத , கவர் உறு சிந்தையாளர் - பல தலையாய் உற்ற மனம் உடையவர் . பலதலை - ஐயம் . தவம்மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண - தவத்தின் மிகுந்த அன்பரும் சித்துவல்லாரும் வேதியரும் விரும்பிவழிபட . ( பா .4) இல் ` மலையின் கண் வந்து தொழுவார் ` என்றது இதிற்குறித்த சித்தரையே .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

கான லுலாவி ஓதம் எதிர்மல்கு காழி மிகுபந்தன் முந்தி யுணர
ஞான முலாவுசிந்தை அடிவைத் துகந்த நறையூரின் நம்ப னவனை
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த தமிழ்மாலை பத்து நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று வழிபாடு செய்யு மிகவே.

பொழிப்புரை :

ஓதநீர் கடற்கரைச் சோலைகளைக் கடந்து வந்து நிறையும் காழிப்பதியில் தோன்றிய புகழ் மிகு ஞானசம்பந்தன் இளமை யில் உணரும் வண்ணம் ஞானம் உலாவுகின்ற மனத்தில் தன் திருவடி களைப் பதிய வைத்து உகந்த நறையூரில் விளங்கும் இறைவனை , குற்ற மற்றவகையில் இசையால் உரைத்த தமிழ்மாலையாகிய இப்பத்துப் பாடல்களையும் உணர வல்லவர் நிலவுலகம் நின்று வழிபடுமாறு வானம் நிலாவ வல்லவர் ஆவர் .

குறிப்புரை :

ஞானம் உலாவு சிந்தை - திருப்பெருகு சிவஞானம் உலாவுகின்ற திருவுள்ளத்தில் சிந்திக்கும் வண்ணம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி யும்பர் உலகங் கடந்த உமைபங்கன் எங்க ளரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவிற்
தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

விடத்தினை விரும்பி உண்டு அதனால் கருமை நிறம் பெற்ற கண்டத்தினனும் , நடனமாடும் ஒளி பொருந்திய வடிவின னும் பேரொளிப் பிழம்பாய் உம்பர் உலகத்தைக் கடந்த உமைபங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர் , களிப்புத்தரும் சோலையை அடுத்துள்ள வயல்களில் மலர்ந்த தாமரைகளில் தங்கிய மதுவின் தெளிவை வயிறார உண்டு சிறை வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இத் தலம் ஆகும் .

குறிப்புரை :

துளி - விஷத்துளி . நிறம் :- ஈண்டுக் கருமை . தெளி - தெளிவு , தேறல் . ஊர் :- எழுவாய் . ( திருமுல்லைவாயிலாகிய ) இது :- பயனிலை , இதுவே அரனூர் எனலுமாம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு மரவிக்க நின்ற வரனூர்
உருவத்தின் மிக்க வொளிர்சங்கொ டிப்பி யவையோத மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

பக்குவம் வந்த காலத்தில் வந்து பேரின்பப் பயன் அருளவல்ல பண்பினனும் , அயனைப்படைத்த பரமனும் , பாம்பினை உடல் முழுதும் கட்டிக் கொண்டு எல்லோராலும் போற்றிப் புகழப் படு வோனுமாகிய அரனது ஊர் , உருவத்தால் பெரிய சங்குகளும் சிப்பி களும் ஓத நீர் மோதுவதைக் கண்டுவெருவித் தெருவில் வந்து செழு மையான முத்துக்களைப்பல இடங்களிலும் ஈனும் திருமுல்லை வாயி லாகிய இத்தலமாகும் .

குறிப்புரை :

பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன் என்பது இரு வினை யொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிகழப் பெற்று , குரு வருளால் சிவஞானம் வளரலுற்று , பழமலம் பற்றறுத்து , சிற்றறிவு தீர்ந்து , திருவடி அடையும் பருவத்தில் எழுந்தருளி வந்து , பயனாகப் பொருந்திய எண்குணத்தன் . அரவிக்க - ஒலிக்க . தெருவம் - தெரு . முத்து + அலை + கொள் எனப்பிரிக்க . அலை - அலைதல் . சங்கும் இப்பி யும் முத்துக்களை ஈன்ற குறிப்புணர்த்தப்பட்டது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

வாராத நாடன் வருவார்தம் வில்லின் உருமெல்கி நாளு முருகில்
ஆராத வின்ப னகலாத அன்பன் அருண்மேவி நின்ற வரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காத னெதிநேர நீடு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

மீண்டும் வாராத பேரின்ப நாடுடையவன் , உலகிற் பிறந்தோர் வானவில் போன்று விரைவில் தோன்றி மறையும் . இவ்வுடல் மெலியுமாறு உருகி வழிபடில் ஆராத இன்பம் அருள்பவன் . அகலாத அன்புடையவன் . அத்தகைய அரன் அருள் செய்ய எழுந் தருளியுள்ள ஊர் , நீங்கா ஒளியுடைய திருமால் மார்பை விடுத்துப் பிரியாத திருமகளின் அன்புடன் செல்வம் தழைத்தோங்கும் பெருமை மிக்க திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

வாராத நாடன் - மீண்டு வாராத பேரின்ப நாடுடைய வன் . வில்லின் உரு - வானவில்லைப்போலத் தோன்றி விரைந்து மறை யும் உடம்பு , ` வாங்குசிலைபுரையும் உடல் ` நால்வர் நான் மணிமாலை . வில்லைப்போலக் கூனிக் கெடும் உடம்பெனலுமாம் . நாளும் உருகில் ஆராத இன்பன் - நாள்தோறும் பக்தியால் உருகித் தற்போதம் அற்றுச் சிவபோதம் உற்றால் , அமையாத பேரின்பமாக விளங்குபவன் . ` உள்ளம் உருகில் உடனாவார் ` ( தி .2 ப .111 பா .3.). கௌத்துவ மணி நீங்காத திருமால் மார்பின்கண் வீற்றிருக்கும் திருமகள் . மலர்மகள் பிரியாது , நீங்காத காதலுடன் செல்வம் தோன்ற நீடுகின்ற திருமுல்லைவாயில் என்னும் பொருளும் உரியதாகும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

ஒன்றொன்றொ டொன்று மொருநான்கொ டைந்து மிருமூன்றொ டேழு முடனாய்
அன்றின்றொ டென்று மறிவான வர்க்கும் அறியாமை நின்ற வரனூர்
குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று கொடியொன்றொ டொன்று குழுமிச்
சென்றொன்றொ டொன்று செறிவா னிறைந்த திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு . புருடதத்து வம் இருபத்தைந்தாவது தத்துவம் . இவ்விருபத்தைந்து தத்துவங் கட்கும் வேறாய் நிற்பவன் இறைவன் . இதனை அறியாதார் இருபத் தைந்தாவதாய் உள்ள உயிரையே பதி என மயங்குவர் . இவ்வாறு தத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறியாது தடுமாறுகின்ற நிலையில் விளங்கும் அரனது ஊர் , குன்றுகள் ஒன்றோடு ஒன்று இணைவன போலும் மாடவீடுகளும் , குலைகளும் கொடிகளும் ஒன்றோடு ஒன்று குழுமிச் செறிவால் நிறைந்துள்ள திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

ஒன்று .... ஏழும் உடனாய் - இருபத்தைந்தும் உடனாகி . தத்துவம் இருபத்தைந்தும் இவ்வாறு (1+1+1+4+5+6+7) தொகுத்து உரைக்கப்பட்டன . 1. மூலப்பகுதி ( குணதத்துவ காரணம் ) 2. புத்தி . 3. அகங்காரம் . 4. மனம் . 5. செவி . 6. மெய் ( துவக்கு ) 7. கண் . ( நோக்கு ) 8. வாய் . ( நாக்கு ) 9. மூக்கு . 10. வாக்கு . 11. பாதம் . 12. பாணி . 13. பாயு . 14. உபத்தம் . 15. சத்தம் . 16. பரிசம் . 17. உருவம் . 18. இரதம் . 19. கந்தம் . 20. ஆகாயம் . 21. வாயு . 22. தேயு . 23. அப்பு . 24. பிருதிவி . என்னும் இருபத்துநான்கும் ஆன்மதத்துவங்களாகும் . அவற்றுள் , பிருதிவியை முதலாகக்கொண்டு எண்ணின் , எண்ணப்பட்ட இருபத்து நான்கின் வேறாய் எண்ணுகின்ற கர்த்தா ஒன்று உண்டு . அதுவே ஆன்மா . அவ்வான்மாவே கடவுள் என மயங்கி , அம்மயக்கத்தைத் தெளிவெனக் கொண்டவர்க்கு பரமான்மா வேறொன்று உண்டு எனப் புலப்படாது . அவர் , ஆன்மாக்களின் வேறாய் , அவற்றிற்கு உயிராய் , உடனாய் இருக்கின்ற மெய்ப்பொருள் வேறு ; இருபத்துநான்கு தத்துவங்களையும் கொண்டு நிற்கும் ஆன்மாக்கள் வேறு ; அவ்வுண்மையை யறியாதார் பசுவைப் பதியாக் கொள்ளும் மயக்கம் மயக்கமே ; தெளிவன்று ; அது பாதகம் என்று உண்மையுணர்த்துவது சமய குரவர்க்குக் கடனாதலின் , இத்திருப் பாட்டின் முன்னீரடியினும் தமது கடனாற்றினார் நமது சமயத்தின் ஆசிரியர் . புருடதத்துவம் இருபத்தைந்தாவது . அதையே முடிவான பொருள் எனக்கொள்ளும் சமயமும் உண்டு . குறள் . 27. உரை பார்க்க . சிவதருமோத்தர த்துள் , 10 ஆவது சிவஞானயோகவிய லின் 32- ஆவது செய்யுளுரைக்கீழ் பௌராணிகர் மதத் தின் படி கூறியுள்ள தும் அதன் உரையில் , ஐயஞ்சின் அப்புறத்தானும் ஆரூரமர்ந்த அம் மானே . ( தி .4 ப .4. பா .10) என்று மேற்கோள் காட்டியதும் உணர்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

கொம்பன்ன மின்னி னிடையாளொர் கூறன் விடைநாளு மேறு குழகன்
நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின் மதியேறு சென்னி யரனூர்
அம்பன்ன வொண்க ணவரா டரங்கின் அணிகோ புரங்க ளழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போலும் இடையினளும் ஆகிய உமையம்மையை ஓரு கூற்றாகக் கொண்டவன் . நாள்தோறும் விடைமீது ஏறிவரும் இளையோன் . நம் மேல் அன்புடையோன் . மறையோதும் நாவினன் . வானில் செல்லும் மதி பொருந்திய சென்னியை உடைய அவ்வரனது ஊர் , அம்பு போன்ற ஒளி பொருந்திய கண்ணினை உடைய குலமகளிர் ஆடும் அரங்குகளும் , அழகிய கோபுரங்களும் உடையதாய்ச் செம் பொன் னின் அழகைத்தரும் மாடவீடுகள் கொண்ட திருமுல்லை வாயிலாகிய இத் தலமேயாகும் .

குறிப்புரை :

பூங்கொம்பு உமாதேவியார்க்கும் மின் இடுப்பிற்கும் கொள்ளலாம் . குழகன் - இளைஞன் ; அழகன் . கணவர் - கண்ணுடைய மகளிர் . பொன்ன - பொன்னினுடைய .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

ஊனேறு வேலி னுருவேறு கண்ணி யொளியேறு கொண்ட வொருவன்
ஆனேற தேறி யழகேறு நீறன் அரவேறு பூணு மரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவித்
தேனேறு மாவின் வளமேறி யாடு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

ஊன் பொருந்திய வேல் போன்ற கண்ணினள் ஆகிய உமையம்மையின் கருநிறஒளியைப் பெற்றவன் . ஆனேற்றின் மிசை ஏறி , அழகுதரும் திருநீற்றை அணிந்தவன் . பாம்பினை அணி கலனாகப் பூண்டவன் . அவ்வரனது ஊர் , மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும் , மயிலும் குயிலும் வாழும் சோலைகளையும் , தேனைப் பொருந்திய வண்டுகளைக் கொண்ட வளத்தையும் உடைய திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

கண்ணி :- உமாதேவியார் . அழகு ஏறும் நீறன் - ` சுந்தர மாவது நீறு ` ` கவினைத்தருவது நீறு `; அழகு ஏறுதலால் ` கண்திகைப் பிப்பது நீறு ` கொல்லையில் மானும் , சோலையில் மயிலும் குயிலும் ஏறுதல் இயல்பு . மா - வண்டு . தேன் - மலர்கள் . முல்லை மாவின் வளத்தில் ஏறியாடும் என்றால் மா - மரத்தையும் , மாவின்வளம் முல்லையில் ஏறியாடும் என்றால் மா வண்டினையும் குறித்ததாக் கொள்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனி யரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் உளதென்று வைகி வரினுஞ்
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின் வினைகளைப் போக்கியருள்பவன் . ஆனைந்தாடுபவன் . அரவு ஆடும் கையன் . அனல்போன்றமேனியன் . அவ் அரனது ஊர் , மேகங் கள் தங்கும் உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சை யேற்க யார்வரினும் செந்நெற் சோறளித்து மகிழ்வோர் வாழும் திரு முல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

நெஞ்சார நீடு நினைவாரை மூடுவினை - உள்ளத் தாமரையில் சிவபெருமான் திருவடியே அன்றி மற்று எதையும் எண் ணாமல் , இடைவிடாது கருதிப்பணிகின்ற மெய்யடியரைச் சூழும் இரு வினையும் . தேய அவரைப் பற்றாது முற்றும் தேய்ந்தொழிய . நின்ற நிமலன் - அவர் உள்ளத்தாமரையில் நிலைத்தருளிய பரசிவன் . ஈயப் படும் பொருளின் உயர்வு விளங்கச் செஞ்சாலிநெல்லின் வளர்சோறு எனக் குறிக்கப்பட்டது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன் முடிபத்து மிற்று நெரிய
உரைவந்த பொன்னி னுருவந்த மேனி உமைபங்க னெங்க ளரனூர்
வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேற லாடு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

கயிலைமலையை வந்தெடுத்த வலிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரியச் செய்தவனும் , உரைத்துக்காணப் பெறும் பொன்போலும் மேனியனாகிய உமையம்மை பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர் , மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும் பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள் ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

உரைவந்த பொன்னின் உருவந்தமேனி உமை - கட்டளைக்கல்லில் மாற்று உரைக்கப்பெற்ற சிறந்த பொன்னிறம் பொருந்திய திருமேனியை உடைய உமாதேவியார் . தேறல் - தெளிதேன் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானு முன்னி யவர்தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர்துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலிற்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

திருமேனிமேல் நீண்டு ஓடிவிளையாடலைப் பொருந்திய முப்புரிநூலை உடையவன் . வேதமுதல்வன் . பிரமனும் திருமாலும் தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன் . அவனது ஊர் , காற்றில் அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய் , கதிர் மிகுந்த செந்நெல் வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லைவாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

` மேலோடி ... நூலன் `:- திருமார்பில் அணிந்த முப்புரி நூல் அவனது திருமேனியில் திருத்தோள்மேல் ஓடி நீடும் விளையாடுதல் மேவுதலை உணர்த்திற்று . விரிநூலன் என்பது சிவபிரான் என்னும் பொருட்டாய் நின்றதென்றும் , அவன் விளையாடல் மேவியவன் என்றும் கொள்ளலும் பொருந்தும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

பனைமல்கு திண்கை மதமா வுரித்த பரமன்ன நம்பன் அடியே
நினைவன்ன சிந்தை யடையாத தேரர் அமண்மாய நின்ற வரனூர்
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு முகுளங்க ளெங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு திருமுல்லை வாயி லிதுவே.

பொழிப்புரை :

பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய மதயானையை உரித்த பரமன் . நம்பால் அன்புடையவன் . தன் திருவடியை நினையாத சமணர் தேரர் ஆகியோர் அழிந்தொழிய நிற்பவன் . அப்பெருமானது ஊர் , வனங்களில் தாழை மரங்கள் , மகிழ மரங்கள் ஆகியன எங்கும் நிறைந்த மொட்டுக்களைத்தரவும் , அரும்பு களை உடைய புன்னை மரங்களின் மணம் வீசவும் விளங்கும் திரு முல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .

குறிப்புரை :

` பனை .. கை `:- ` பனைக்கை மும்மதவேழம் ` பரமன் நம் நம்பன் . நம்பன் அடியே நினைவு அன்னசிந்தை - சிவபெருமான் திரு வடியே நினைக்கும் அத்தகைய சித்தத்தை . வகுளங்கள் - மகிழ மரங்கள் . முகுளங்கள் - மொட்டுக்கள் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

அணிகொண்ட கோதை யவணன்று மேத்த வருள்செய்த வெந்தை மருவார்
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி திருமுல்லை வாயி லிதன்மேல்
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான மிகுபந்தன் ஒண் தமிழ்களின்
அணிகொண்ட பத்து மிசைபாடு பத்தர் அகல்வானம் ஆள்வர் மிகவே.

பொழிப்புரை :

அணிகொண்ட கோதை என்ற திருப்பெயருடைய இத்தலத்து அம்பிகை மிகவும் ஏத்தி வழிபட அவளுக்கு அருள் செய்த எந்தையாவர் . பகைமை கொண்ட அசுரர்களின் வலிய முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவர் . அப்பெருமான் எழுந்தருளிய திரு முல்லை வாயிலாகிய இத்தலத்தின்மீது தணித்த சிந்தை உடையவனும் காழிப்பதியில் தோன்றியவனுமாகிய ஞானம் மிக்க சம்பந்தன் பாடிய ஒண் தமிழ்ப் பாடல்களின் மாலையாக அமைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற வானுலகை மிகவும் அரசாள்வர் .

குறிப்புரை :

அணிகொண்ட கோதையவள் என்பது இத்தலத்து அம் பிகையின் திருப்பெயர் . தணிகொண்ட சிந்தையவர் - விருப்பு வெறுப் புக்களால் உண்டாகும் வெப்பம் தணிதலை உடைய உள்ளத்தவர் ( தி .1 ப .57 பா .4). ( தி .7 ப .8 பா .7). சித்தியார் - 181. என்ப வற்றில் குறிக்கப்பட்ட மனமே தணி கொண்டதாகும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

அறையும் பூம்புன லோடும் ஆடர வச்சடை தன்மேற்
பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார்
மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத
குறைவி லந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

வேதம் ஓதுவதால் உண்டாகும் ஒல்லென்னும் ஒலி நீங்காத மந்திரங்களோடு கூடிய வேள்விகள் நிகழ்வதும் குறைவற்ற அந்தணர்கள் வாழ்வதுமாய கொச்சை வயத்தில் எழுந்தருளியுள்ள இறைவர், ஒலிக்கின்ற அழகிய கங்கையோடு ஆடும் பாம்பையும் அணிந்துள்ள சடைமேல், பிறையையும் சூடியிருப்பவர். திருமேனி யில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர்.

குறிப்புரை :

அறையும் - ஒலிக்கும். மறையின் ஒல்ஒலி - வேதங் களை ஓதுவதால் உண்டாகும் ஒல்லென்னும் ஒலி. குறைவு இல் அந் தணர் - வேதாத்தியயனத்திலும், வைதிகாசாரத்திலும், யாககிருத்தியங் களிலும் குறைபாடில்லாத அழகும் குளிர்ச்சியும் உடையவர். வேதாந் தத்தை அணவுவார் அந்தணர் என்றார் நச்சினார்க்கினியர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக்
கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குனின் றாடுவர் கேடில்
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும்
வண்ணத்த வந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

வேதங்களை உணர்ந்தவர்களும், நல்லவேள்வி களைத் தவறாது செய்பவரும், மேம்பட்ட எரியோம்பும் தன்மையர் என்று சொல்லத் தக்கவருமாகிய அந்தணர் வாழும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், திருநீறு அணிந்தவர். மான்தோலோடு முப்புரிநூலை அணிந்த மார்பினர். சூழ்ந்த பூதகணங்களை உடையவர். கொடிய கனலைக் கையில்ஏந்தி இரவில் நடனம் புரிபவர். குற்றமற்ற மனத்தில் உறைபவர்.

குறிப்புரை :

சுண்ணத்தர் (திருநீற்றுப்) பொடியர். பூதக்கண்ணத்தர் என்பதில், ணகரமெய் எதுகை நோக்கி விரிந்தது. பூதகணத்தையுடைய வர் என்பது பொருள். கேள்வி - சுருதி.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ
மாலை யாடுவர் கீத மாமறை பாடுதன் மகிழ்வர்
வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங்
கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

வேலை எனப்படும் பெரிய கடல் நீரின் வெள்ள மாகப் பெருகிய ஓதத்தின் அலைகள் அழகிய சிறந்தமணிகளைக் கரை மிசைச் சிந்தும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், பால் போன்ற திருவெண்ணீற்றைப் பூசியவர். சடைகள் பலவும் தாழ்ந்து தொங்க, மாலைக் காலத்தே நடனம் புரிபவர். வேதகீதங்கள் பாடுதலை விரும்புபவர்.

குறிப்புரை :

பாலை அன்னவெண்நீறு:- \\\\\\\"பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறு\\\\\\\" மாலை - இரவு. கீதம்......பாடுதல் மகிழ்வர். (தி.4. ப.77 பா.3; தி.6 ப.34 பா.8; தி. 2 ப.43. பா5) மாமணி - உத்தமரத்நம், அழகிய முத்தும் நீலமணியும் ஆம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர்
பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையொர் பங்கர்
கடிகொ ணீடொலி சங்கி னொலியொடு கலையொலி துதைந்து கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.

பொழிப்புரை :

மணவீடுகளில் நீண்டு ஒலிக்கும் சங்குகளின் ஒலி யோடு, கலைகள் பலவற்றின் ஒலிகளும் சேர்ந்து ஒலிப்பதும் நீண்ட கொடிகள் விளங்கும் மாடங்களை உடையதுமான கொச்சை வயத்தில் விளங்கும் இறைவர், வில்வம், ஊமத்தை ஆகியவற்றின் மணம் கமழ் கின்ற சடையின்கண் நீண்ட கண்ணி சூடியவர். திருநீறு அணிந்துள்ள மார்பின்கண் கொண்டுள்ள உமையம்மைக்குத்தம் திருமேனியில் பாதியை வழங்கியவர்.

குறிப்புரை :

மத்தம் கமழ்சடை. மார்பில் புனைதல்:- முதற்பாட்டின் குறிப்பிற் காண்க. கடி - மணம் (விவாகம்). கலை - வேதம் முதலிய கலை. துதைந்து - நெருங்கி.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

ஆடன் மாமதி யுடையார் ஆயின பாரிடஞ் சூழ
வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார்
ஆடன் மாமட மஞ்ஞை யணிதிகழ் பேடையொ டாடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

ஆடும் இளமயில்கள் அழகிய தம் பெண்ணினத் தோடு மகிழ்ந்து கூடும் தண்ணிய பொழில்கள் சூழ்ந்த கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான், வானவெளியில் திரியும் சிறந்த மதியைச் சூடியவர். பொருந்திய பூதகணங்கள் சூழ ஊன்வற்றிய வெண்டலையைக் கையில் ஏந்தி உலகில் மகளிர் இடும் பிச்சைக்கு உழல்பவர்.

குறிப்புரை :

பாரிடம் - பூதம். வையகம் - பூமியோர். இடவாகு பெயர். உழல்வார் - சுழல்வார், தடுமாறுவார். இடுபலிக்கு வையகத்தில் திரிவார் எனலுமாம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர்சடை தன்மேற்
றுண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக
விண்ட தானவ ரரணம் வெவ்வழ லெரிகொள விடைமேற்
கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான் நீர் செறிந்த கங்கையும் பாம்பும் தங்கிய நீண்ட சடைமுடியில், வெள்ளிய பிறைத் துண்டத்தை அணிந்தவர். பழமையான மேருமலையை வில்லாகக் கொண்டு பகைகொண்ட அசுரர்தம் மூவரணங்களும் கொடிய எரியில் வெந்தழியுமாறு செய்து, விடைமீது அருள் புரியும் கோலத் துடன் காட்சி தருபவர்.

குறிப்புரை :

மண்டு - மிக்குச்செல்லும், கங்கையும் பாம்பும் மல்கிய சடை, வளர்சடை. துண்டப்பிறை, வெண்பிறை. தானவர் - அசுரர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

அன்ற வானிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப்
பொன்றி னார்தலை யோட்டில் உண்பது பொருகட லிலங்கை
வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்றோய்
குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

வானில் தோயும் மலை போன்ற அழகிய மாட வீடு களைக் கொண்ட கொச்சை வயத்தில் அமர்ந்துள்ள இறைவர், அக் காலத்தில் ஆல்நிழற்கீழ் இருந்து நால்வர்க்கு அறம் அருளியவர். இறந்த பிரமனது தலையோட்டில் உண்பவர். கடல் பொரும் இலங்கை மன்னன் இராவணனை வலியழியுமாறு ஊன்றிய கால் விரலினர்.

குறிப்புரை :

அன்று அ ஆல் நிழல் என்று பிரிக்க. பொன்றினார் தலை - இறந்த அயனார்தலை. வான்தோய் குன்றம் அன்னமாடம். பொன்மாடம். சீகாழியின் செல்வநெடுமாடம் சென்று சேணோங்கிய சிறப்புணர்த்திற்று.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

சீர்கொண் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த
ஏர்கொள் வெவ்வழ லாகி எங்கும் உறநிமிர்ந் தாரும்
பார்கொள் விண்ணழல் கானீர்ப் பண்பினர் பான்மொழி யோடுங்
கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

பால்போன்று இனிய மொழி பேசுபவளாகிய உமையம்மையாரோடு கையில் கூரிய வேலை வெற்றிபெற ஏந்தியவராய்க் கொச்சை வயத்தில் விளங்கும் பெருமானார், சிறப் பமைந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் செங்கண் மாலும் போற்றித் துதிக்க அழகிய கொடிய அழலுருவாகி நிமிர்ந்தவர். நிலம் விண்முதலான ஐம் பூத வடிவினர்.

குறிப்புரை :

பார்கொள்விண் அழல்கால் நீர்ப்பண்பினர் - நிலம், வான், தீ, வளி, புனல் என்னும் ஐம்பெரும் பூதத்தின் இயல்பை உடையவர்.
\\\\\\\"மண்ணிற்றிண்மை\\\\\\\", நீரில் இன்சுவை\\\\\\\", \\\\\\\"தீயின் வெம்மை\\\\\\\", \\\\\\\"காலின் ஊக்கம்\\\\\\\", \\\\\\\"வானிற்கலப்பு\\\\\\\" இவற்றினைத் தோற்றியவன் இறைவனாதலின், அப்பண்புகள் அவனுடைமையல்லவோ? `எல்லாம் உன் உடைமையே` (தாயுமானவர் பாடல்) பால்மொழி:- உமா தேவியார்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

குண்டர் வண்டுவ ராடை போர்த்ததொர் கொள்கை யினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டன்
பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங்
கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

குண்டர்களாகிய சமணர்களும், செறிந்த துவர் ஊட்டப்பட்ட ஆடையைப் போர்த்துள்ள தனிக்கொள்கையுடைய புத்தர்களுமாகிய வலியர்கள் பேசும் பேச்சுக்கள் மெய்யல்லாதவை. அவற்றைக் கருதாதவர்க்கு அருள்புரிபவர். நீலமணி போன்ற கண்டத்தை உடையவர். நாம் செய்த பழவினைகளைத் தீர்த்தருளும் பண்பினர். ஒளிபொருந்திய கொடி போன்ற உமையம்மையாரோடு மேகங்கள் தவழும் மணி மாடங்களை உடைய கொச்சை வயத்தில் எழுந் தருளியிருப்பவர்.

குறிப்புரை :

துவர்க்கு வண்மை அடையாதலின் அதனது துவர் நிறத்தின் மிகுதி புலப்படும். பார்ப்பவர் கண்ணுக்கும் கருத்திற்கும் முறையே தோற்றத்தாலும் நினைப்பாலும் வெறுப்பை விளைக்கும் வண்டுவர் ஆடையில் ஊட்டப்பட்டது என்க. பேசிய பேச்சு மெய் யல்லாதவை, பொய்ப்பேச்சு.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய
அந்த ணன்அடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன்
சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.

பொழிப்புரை :

கொத்தாக மலர்ந்த பூக்களுடன் கூடிய அழகிய பொழில் சூழ்ந்த கொச்சை வயம் என்னும் நகரில் மேவிய அந்தணனாகிய இறைவன் திருவடிகளை ஏத்தும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய சந்தம் பொருந்திய அழகிய இத்தமிழ் மாலையை ஓதிப் பரவ வல்லவர், வினைகள் கெட முற்படச் சென்று வானவர்களோடு அவர்கள் உலகில் புகவல்லவர் ஆவர்.

குறிப்புரை :

அந்தணன் - தோணியப்பர். `அறவாழிஅந்தணன்` `அந்தணர் என்போர் அறவோர்` `அந்தணர் நூல்` என்பவற்றால் திருவள்ளுவர் குறிக்கும் பொருளை உணர்க. அருமறை ஞானசம்பந்தன்:- மறையின் அருமையும், அம்மறையால் எய்தும் ஞானமும், அந்தஞானத்தொடு தமக்குள்ள சம்பந்தமும் உணர்த்திப் பெயர்க்காரணம் புலப்படுத்தியவாறு. இத்திருப்பதிகம் சந்தம் நிறைந்தும் அழகுடையதாயும் உள்ள தமிழ் மாலை. அழகு - சொல்லழகு, பொருளழகு, தொடையழகு, திருவருட்பொலிவு. வினைகெடமுனை (முன்பு) புகவல்லவர் என்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய மலர்களை உந்திக்கொண்டு பெருகிவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருநெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள் , எம் தந்தை , ஈசன் , பெரியோன் , ஆனேற்றை ஏறிவருவோன் என்று அவன் பெயர்களைப் பலமுறை சொல்லி ஏத்தி மனம் பொருந்தி வழிபடவல்லவர்கட்கு அல்லால் , ஏனையோர்க்குக் கைகூடாதது .

குறிப்புரை :

இத்திருப்பதிகம் முத்துச் சிவிகையில் ஏறுவதன் முன்னர் , திருவருட் சிறப்புணர்த்தப் பாடியருளியது . அப்பொழுது ஆங்கு இருந்த அன்பர் அனைவர்க்கும் ஆண்டவன் திருவருளைப் பெறுவதற்கு வேண்டும் வழிபாட்டை வற்புறுத்துவதை ஒவ்வொரு பாடலிலும் உணரலாம் . எட்டாவது திருப்பாட்டில் அருளைச் செயப் படுபொருளாகக் கொள்ளல்வேண்டும் . ஏனைய ஒன்பது பாக்களிலும் அருள் எழுவாயாக நிற்றலறிக . ஈற்றுப்பாட்டில் , அருளைச்சொன்ன பாடல் என்றதுணர்க . எந்தை , ஈசன் , எம் பெருமான் , ஏறமர்கடவுள் ( தி .2 ப .92 பா .5) என்று எடுத்து வாக்கால் ஓதி மனத்தால் சிந்தித்து , ( காயத்தால் வழிபாடு ) செய்பவர்க்கே அடிகள் திருவருள் கைகூடுவது , சென்று - மலவழி மலநடை கொள்ளாது நீக்கி அருள் வழியில் அருணடை கொண்டு . நிவா :- ஆற்றின்பெயர் . அரத்துறை :- அறத்துறை என்பதன் மரூஉ . அரன் துறை என்பது சிறவாது . றகரம் ரகரமாக ஒலித்தல் பல சொற்களிற் காணலாம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை யணிந்தவெம் பெருமான்
சீருஞ் செல்வமு மேத்தாச் சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

சிறந்த மலர்களை வாரிக்கொண்டு உந்திவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் பொருந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள் , குளிர்ந்த நீண்ட சடைமேல் இளம்பிறை அணிந்த எம்பெருமானே என்று கூறி அவன் சீரையும் செல்வத்தையும் ஏத்தாத பேதையர்கள் தொழுது பெறுதற்கு இயலாதது .

குறிப்புரை :

ஈரம் - குளிர்ச்சி . ` குளிருஞ்சடை ` ( தி .2 ப .62 பா .6.) ` குளிர்ந்தார் சடையன் `( தி .1. ப .134 பா .3) சிதடர் - குருடர் , பேதையர் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

பிணி கலந்தபுன் சடைமேற் பிறையணி சிவனெனப் பேணிப்
பணி கலந்துசெய் யாத பாவிகள் தொழச்செல்வ தன்றால்
மணி கலந்துபொன் னுந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
அணி கலந்தநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

மணிகளையும் பொன்னையும் உந்திக் கொண்டு வரும் நீரை உடைய நிவாநதிக் கரைமேல் அழகுற அமைந்த நெல் வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் பிணிப்போடு அமைந்த மென்மையான சடைமீது பிறையணிந்துள்ள சிவனே எனப் பக்தி செய்து அவன் திருத்தொண்டுகளை அன்போடு செய்யாத பாவிகள் தொழுது பெறுதற்கு இயலாதது .

குறிப்புரை :

பிணி - பிணிப்பு . சடையாதற்குப் பிணிப்பு இன்றியமையாதது . கலந்து - திரிகரணங்களும் ஒற்றுமையுற்று . பணி செய்யாத பாவிகள் . மணிகளையும் பொன்னையும் உந்தி (த் தள்ளி)க் கொண்டு வரும் நீர் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

துன்னவாடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றின ராகி
உன்னி நைபவர்க் கல்லா ல் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
பொன்னு மாமணி யுந்திப் பொருபுன னிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே

பொழிப்புரை :

பொன்னையும் சிறந்த மணிகளையும் உந்திக் கொண்டு வரும் நீரைஉடைய நிவா நதிக்கரைமேல் அன்னங்கள் தங்கி மகிழும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் , தைத்த கோவண ஆடை ஒன்றைக் கட்டிக் கொண்டு தூய வெண்ணீறணிந்து திகழும் அவன் பெருமைகளை எண்ணி நைந்துருகுபவர்கட்கு அல்லால் ஏனையோருக்குக் கைகூடுவதன்று .

குறிப்புரை :

துன்ன ஆடை - தைத்தலையுடைய ஆடை . அன்னம் - பறவை . திருஞானசம்பந்தர் காலத்தில் அன்னப்புள் இருந்த உண்மை இதனாலும் புலனாயிற்று .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

வெருகு ரிஞ்சுவெங் காட்டில் ஆடிய விமலனென் றுள்கி
உருகி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
தருகு ரிஞ்சுநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

மணம் தவழும் பூஞ்சோலைகளில் பூத்த மணம் மொய்க்கும் மலர்களைச் சுமந்து ஓடிவரும் நிவா நதி அருகில் வந்து பொருந்திச் செல்லும் நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள் , காட்டுப்பூனைகள்வாழும் கொடிய சுடுகாட்டில் ஆடும் விமலனே ! என்று அழைத்து அவன் பெருமைகளை எண்ணி மனம் உருகுபவர்கட்கு அல்லால் ஏனையோர்க்கு ஒரு சிறிதும் கைகூடாதது .

குறிப்புரை :

வெருகு - காட்டுப்பூனை . உரிஞ்சு - தேய்க்கின்ற . உருகி நைபவர் - உள்ளம் உருகி இதுகாறும் இறைவனை வழிபட மறந்தமைக்கு வருந்துவோர் . இழி - இறங்குகின்ற .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

உரவு நீர்சடைக் கரந்த வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற் பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

குராமரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவா நதிக்கரைமேல் விளங்கும் நீர்ப்பாம்புகள் இளைப்பாறி மகிழ்வதான நெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள் , வலிமை பொருந்திய கங்கை வெள்ளத்தைத் தன் சடைமிசை ஒளித்த ஒப்பற்றவனே என்று மனம் குளிர்ந்து ஏத்தி வணங்கி மனம் உருகுபவர்க்கு அல்லால் ஏனையோரிடத்து அவன் அன்புகாட்டுவ தில்லை ஆதலின் கை கூடாதது .

குறிப்புரை :

உரவுநீர் - பரந்தகங்கை . ` ஊரங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் ` ( நாலடி .175) என்பதில் பரந்த கடல்நீரைக் குறித்தல் அறிக . பரவி - வணங்கி வாழ்த்தி . ` பரவு வார் பிணிகளைவாய் ` என்பதில் வணக்கமும் , ` வாழ்த்துவதும் ... ... யானும் உன்னைப் பரவுவனே ` ( திருவாசகம் 20). என்பதில் வாழ்த்தும் உணர்த்துவது உணர்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணும்
சீல மாந்தர்கட் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

அழகிய மலர்களை உந்திக் கொண்டு ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவாநதிக் கரைமேல் ஆரவாரிக்கும் சோலை கள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திரு அருள் , நீல மணி போன்ற கண்டத்தினன் , நீறணிந்த சிவன் , என விரும்பி வழிபடும் சிவஞானியர்க்கு அல்லால் ஏனையோர்க்குக் கைகூடுவது அரிது .

குறிப்புரை :

சீலமாந்தர் - ஞானியர் . அவரே சிவனெனப்பேணும் உண்மைநிலை உணர்ந்தவர் . ` திருநீலகண்டா! நீறணிமுதல்வா! சிவபெருமானே! எனப் போற்றும் மனிதரும் ஆம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி யிராவண னலற
அழுந்த வூன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங்க னிசுமந் துந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

கொழுமையான கனிகளைச் சுமந்து உந்திவரும் குளிர்ந்த நீரைஉடைய நிவாநதிக்கரைமேல் அழுந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் திருவருளை , செழுமையான குளிர்ந்த பெரிய கயிலைமலையைப் பெயர்த்த போர் வலிமிக்க இராவணன் அலறுமாறு அழுந்த ஊன்றிய விரலை உடையவர் என்று போற்ற வல்லார்க்கு அல்லாமல் ஏனையோர்க்குத் தாரார் .

குறிப்புரை :

விரலான் :- அண்மை விளி . அருளான் - அருள் செய்யான் . அருள் அருளான் என்று இயைக்க . அடிகள் தம் அருளை , போற்றி என்பார்க்கு அல்லது அருளான் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

நுணங்கு நூலயன் மாலும் இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால் வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

மணம் கமழ்ந்து பொன்னுந்தி வரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகு செய்யும் சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் , நுட்பமான நூல்களை அறிந் துணர்ந்த பிரமன் மால் ஆகிய இருவராலும் காணுதற்கு அரிய பொருளாய் இருப்பவனை வணங்கி நைந்து வழிபடுவார்க்கு வாய்க்குமே யன்றி ஏனையோர்க்குக் கைகூடாதது .

குறிப்புரை :

நுணங்கும் நூல் :- நூற்பொருளின் நுண்மை நூலின் மேல் ஏற்றிக்கூறப்பட்டது . ` நுணங்கிய கேள்வியர் ` ( குறள் 419.) என்பதற்கு , ` கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்வி மேலேற்றப்பட்டது ` என்ற பரிமேலழகர் உரையை நோக்குக . அவன் வேதம் நுணங்கிய நூல் , நோக்க அரியான் - நோக்கரியான் . நான்கன் றொகையாக்கலும் ஆம் . கமழ்ந்து - தோற்றி . கமழ்ந்து உந்தி வருபுனல் என்றியைத்துக்கொள்க . அணங்கும் - அழகு செய்யும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

சாக்கி யப்படு வாருஞ் சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப் பாவிகள் தொழச்செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப் பொருபுன னிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

மலர்களின் மணம் கமழ்ந்து பொன்னுந்திக் கரையை பொருது வரும் நீரை உடைய நிவா நதிக் கரைமேல் ஒலிக் கின்ற சோலைகளால் சூழப்பெற்று விளங்கும் நெல் வாயில் அரத்துறை அடிகள்தம் , திருவருள் சாக்கிய மதத்தில் விழுபவர்களும் சமண சமயத்தைச் சார்பவரும் மற்றும் புறப்புறச் சமயங்களைத் தழுவுவார் களும் ஆகிய , சைவ நெறி சாரும் பாக்கியம் இல்லாத பாவிகளால் , தொழுது பெறுவதற்கு இயலாதது .

குறிப்புரை :

சாக்கியப்படுவார் - சாக்கியமதத்தில் விழுபவர் . சமண் படுவார் - சமண மதத்தில் விழுபவர் . மற்றும் பாக்கியப் படகில்லாப் பாவிகள் - சாக்கியரும் சமணரும் அல்லாத வேறு மதங்களில் விழுந்து , சைவசமயம் புகும் பாக்கியத்தை அடையமாட்டாத தீயவினையின் பயனை நுகர்பவர்கள் . ஆர்க்கும் - ஒலிக்கும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

கறையி னார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையு மையுற வில்லை பாட்டிவை பத்தும்வல் லார்க்கே.

பொழிப்புரை :

கருமை நிறம் அமைந்த பொழில்கள் சூழ்ந்துள்ள சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் , ஒலிக்கின்ற அழகிய புனல் பரவிய நெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருளைப் பெறுதற்குரிய நெறிகளை முறையோடு தெரிவித்துள்ள இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கட்கு ஐயுறவின்றி வினைகள் நீங்கும் . இஃது உறுதி .

குறிப்புரை :

பொழில் ( சோலை ), மரச்செறிவால் கதிரொளி புகப்பெறாது , இருண்டு கிடக்கும் நிலைபற்றிக் கறுப்பு நிறம் உரித்தாயிற்று. நிழல் என்பதற்கு ஒளி என்பது பொருளாதலின், பொழிலின் நிழல் காரொளியுடையதாதல் வேண்டும். அவ்வாறின்றி, உட்புக இயலாமல், தாவரச்செறிவு கறுத்த நிழலைச் செய்திருக்கின்றது என்றவாறு. மாந்தராகிய வல்லார்க்கு அவர் தம் வினைபோய்ப் பறையும். அதற்கு ஐயம் இல்லை. பறைதல் - அழிதல். வினை பறை வதில் வல்லார்க்கு ஐயம் இல்லை எனலுமாம். மொழிவதும் வன்மையுறுவதும் ஒன்றாகா. இத்திருப்பதிகத்துள், திருவருளைக் கூட வேண்டின் சிவநாமங்களை எடுத்தோதியும் அவன் சீரும் செல்வமும் சொல்லிப் போற்றியும், உருகிப்பரவி நைந்தும், பேணிப் பணிகள் செய்தும் வழிபடுவது இன்றியமையாதது என்பது உணர்த்தப்பட்டது.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

பொங்கு வெண்மணற் கானற் பொருகடற் றிரைதவழ் முத்தம்
கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாம்
திங்கள் சூடின ரேனுந் திரிபுர மெரித்தன ரேனும்
எங்கு மெங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே.

பொழிப்புரை :

பொங்கியது போன்ற வெண்மையான மணற் பரப்பில் அமைந்துள்ள சோலையில் கரையைப் பொரும் கடல் அலை களில் தவழ்ந்து வரும் முத்துக்கள் கங்குலில் செறிந்த இருளைப் போழ்ந்து ஒளிதரும் , ஒலிமிகுந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் திங்கள் சூடினரேனும் திரிபுரத்தை எரித்தனரேனும் எவ் விடத்தும் எங்கள் பிரானார்க்குப் புகழ் ஆகுமேயொழிய , இகழும் பழி உளவாதல் இல்லை .

குறிப்புரை :

போழும் - பிளக்கும் . கலி - ஒலி . மறைக்குஅடை ; காட்டிற்கு அன்று திங்களைச்சூடியதும் திரிபுரத்தை எரித்ததும் புகழே அன்றிப் பழியாகாது . இகழ்பழி :- வினைத்தொகை . இகழாகிய பழி எனலும் பொருந்தும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை
ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவம்
கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத்
தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே.

பொழிப்புரை :

கடற்கரைச் சோலைகளில் உப்பங்கழிகளின் வெள்ளம் கரையோடு மோதுதலால் ஒளிதரும் மணிகள் சுடர்விட , தேனின் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்துள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள ஈசர் வளைந்த பிறைமதியைச் சூடி வளைந்த கோடுகளைக் கொண்ட புலித்தோலை ஆடையாக உடுத்து ஆனைந்து ஆடி மகிழ்பவர் . அவர் அணிகலனாகப் பூண்டுள்ளது பாம்பாகும் .

குறிப்புரை :

ஆனில் அம் கிளர்ஐந்து - ( தி .2 ப .10 பா .5.) ` நாயன்மார் ஆனைந்தில் இரண்டுபேர் உரையார் நவையெனமற்று இரண்டொன்று நயந்துளது ஆன்முலைக்கண் ` என்னும் ஞானபூசாவிதி 14 ன் உரைக்கண் . கோமயம் கோசலம் இரண்டும் ஆகா என்று இவை யிற்றில்பேர் ஐந்து என்ற திருப்பாட்டுக்களில் அருளிச் செய்யாமல் அடக்கியருளிச் செய்தார்கள் . நின்ற நெய் பால் தயிருமாக அஞ்சையும் ஒரு பாத்திரத்திலே கூட்டி உண்டாக்கிவைத்து என்று எழுதியிருத்தலை உணர்க . ( தி .2 ப .60 பா .3; தி .5 ப .49. பா .10; தி .7 ப .5 பா .1)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்குபொன் மார்பில்
பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே.

பொழிப்புரை :

ஆரவாரம் மிக்க திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் , நுண்மையான வெள்ளிய நூல் விளங்கும் அழகிய மார்பினை உடையவர் . இசைதரும் யாழ் போல அடக்கமான இனிய மொழிபேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர் . தண்மை யான வெள்ளிய அருவி சலசல என்னும் ஒலியோடு பாய்வதால் பெருகிய கங்கை நுரைத்து மணிகள் ததும்புமாறு சடையிற் கொண்ட தோடு இளம் பிறையாகிய முடிமாலையையும் சூடியிருப்பவர் ஆவார் .

குறிப்புரை :

மார்பில் அணியும் நூல் நுண்மையும் வெண்மையும் உடையதாயிருத்தல் வேண்டும் . அதுகொண்டு முதுகின் அழுக்காற்று வார்க்கு இதுதெரியுமே ? பண் + யாழ் = பண்ணியாழ் . மாதர்பிறைக் கண்ணியான் . ( தி .4 ப .3 பா .1.)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே.

பொழிப்புரை :

அறியாமையை உடைய வெண் குருகு அயலே விளங்கும் தாழை வெண்மடலைத்தன் துணைப் பேடை எனக் கருதிப் புல்கும் தண்ணிய திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவர் இளமை யையும் , கயல் போன்ற கண்களையும் உடைய மலைமகளின் கணவ ராவார் . அவர் திருவடி நீழலையே சரணாக நினைபவர் வினைகளால் வரும் துன்பங்கள் இலராவர் .

குறிப்புரை :

வேதாரணியத்தில் ஏழைவெண்ணாரையானது தாழை மடலைத் தனது நற்றுணைப்பேடை என்றுகருதித் தழுவுமென்க . ( நாரை ) இது தாழை இதுபேடை எனப்பகுத்தறியும் அறிவு இல்லாமை யால் ஏழைநாரை என்றார் . புல்குதல் - கூடுதல் . மாழை - அழகு , இளமை . அடியின் நீழலே சரணாநினைபவர் என்றதால் , சிவனடி யார்கள் சிந்தனைக் குரியது சிவனடியே அன்றிப்பிறிதும் யாதும் இல்லை என்றுணரலாம் . ` காதலால் அவை இரண்டுமே செய்கருத்து உடையார் ` ( திருநீலநக்கர் 5) என்புழி அருச்சித்தல் பணிதல் என்று தொழிலால் இரண்டாயினும் சிந்தனையால் ஒன்றே ஆதல் உணர்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான்
மரவ நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயு மறைக்காட்
டிரவு மெல்லியும் பகலும் ஏத்துதல் குணமென லாமே.

பொழிப்புரை :

பாம்பைக் கச்சாகக் கட்டிய இடையையும் , ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளையும் , நாம் பரவினால் நாம் செய்த பாவங்கள் நீங்க அருள் புரியும் சிவபெருமான் எழுந்தருளிய பதி , குங்கும மரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் வண்டுகள் யாழ் போல இசைதரும் திருமறைக்காடாகும் . அங்குள்ள பெருமானை இரவும் பகலும் ஏத்துதலே குணமாகும் .

குறிப்புரை :

வீக்கிய - கட்டிய . அரை - திருவரை (- இடுப்பு ), கழ லடி . அரையையும் அடியையும் பரவினால் பாவம் அழியும் வண்ணம் அருள்செய்யும் பரசிவன் . மரவம் - குங்குமமரம் . இரவும் எல்லியும் பகலும் - ` இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே ` ( தி .5 ப .74 பா .9.) ` எல்லியும் பகலும் இசைவானவா சொல்லிடீர் ,( தி .5 ப .75 பா .6.) ` எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தமாக ஏத்தும் ` ( தி .4 ப .41 பா .3.) ` எல்லியும் பகலும் பணியது செய்வேன் ` ( தி .7 ப .69 பா .7.) இரவும் எல்லியும் பகலும் ஏத்துவார் ` எம்மையும் ஆளுடை யாரே ` ( தி .7 ப .75 பா .8.) என்பவற்றை ஆராய்ந்தால் இரவுக்கும் பகலுக்கும் வேறாயது எல்லி என்று புலனாகும் . ஆயின் , அவ்விரண்டினும் வேறாய் நிற்பது அவ்விரண்டன் சந்தியேயன்றி வேறில்லை . இரவொடு பகலும் , பகலொடு இரவும் சந்திக்கும் இரண்டிலும் எல் ( ஒளி ) இருப் பதால் ` எல்லி ` என்ற பெயர் பெற்றது . எல் - ஒளி , சூரியன் , பகல் . எல்லியை இரவென்னும் பொருளில் வழங்குதல் பயின் றுளது . எல்லியம் பகல் - ஒளி வீசும் பகற்பொழுது . எல்லியம் பகல் - என்பது நல்ல பாடம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

பல்லி லோடுகை யேந்திப் பாடியு மாடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
மல்கு வெண்டிரை ஓத மாமறைக் காடது தானே.

பொழிப்புரை :

பல்லில்லாத தலையோட்டைக் கையில் ஏந்திப் பாடியும் ஆடியும் பலிதேரும் அல்லல் பொருந்திய வாழ்க்கையை உடையவர் ஆயினும் அவருக்கு அது அழகியதேயாகும் . அதனையும் அவரே அறிவார் . எருதேறிவருவார் . பூதங்கள் அருகேபுடைசூழ்ந்து வரத்திரிவார் . அத்தகைய பெருமானாருக்கு இடமாக விளங்குவது நிறைந்த வெண்மையான திரைகளை உடைய ஓத நீர் சூழ்ந்த திருமறைக்காடாகும் .

குறிப்புரை :

பல் இல் ( லாத ) ஓடு , பலிதேரும் வாழ்க்கை அல்லலை ஆக்குவதேனும் அடிகளுக்கு அழகியது . அதனையும் அவரே அறி வார் . புல்லம் - ( புல்லைமேயும் ) எருது . ` புல்வாய் ` என மானைக் குறித்தல் காண்க . உழிதர்வர் - உழிதருவர் . ( பா .10.) பார்க்க . திரிவர் . ` உழிதருகால் ` ( திருவாசகம் ) திரிதருவர் - திரிதர்வர் , திரிதவர் , ` தேவர் என்றே இறுமாந்து என்னபாவம் திரிதவரே ` ( ? )

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்குமத் தாகப்
பாகந் தேவரொ டசுரர் படுகட லளறெழக் கடைய
வேக நஞ்செழ வாங்கே வெருவொடு மிரிந்தெங்கு மோட
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே.

பொழிப்புரை :

வாசுகி என்னும் பாம்பு கயிறாகவும் செறிவான மந்தரமலை மத்தாகவும் கொண்டு , தலைவால் பாகங்களாகப் பகுத்துக் கொண்டு தேவாசுரர் ஆழமான கடலை அளறு எழுமாறு கடைந்த போது கொடிய நஞ்சு வெளிப்பட , அதனைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடியபோது அந்நஞ்சை உண்டு தன் திருமேனிமிடற்றில் நிறுத்தி அமிர்தமாகக் கொண்டவன் எழுந்தருளிய தலம் திருமறைக்காடாகும் .

குறிப்புரை :

வரை - மந்தரமலை . தேவாசுரர் பாற்கடல் கடைந்த வரலாறு . வெருவ - வாய்பிதற்றல் . ஆகம் - மார்பு , உடம்பு , உடம் பாயின் , உடம்பினுள் என்றும் , மார்பாயின் அதன்மேல் ஆதேயமான கழுத்தில் என்றும் கருதுக .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை யோரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலு மலைமகள் நடுங்க
நக்குத் தன்றிரு விரலால் ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே.

பொழிப்புரை :

தக்கன் வேள்வியைத் தகர்த்தோனாகிய சிவபிரானது ஒப்பற்ற பெருமையை உணராத அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலை மகள் அஞ்ச , பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத்தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடுநடுங்கி அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும் .

குறிப்புரை :

தனது பெருமையை ஓரான் :- தன்பெருமைதான் அறியாத் தன்மையன் ` ( திருவாசகம் ) ஓரான் :- உணரான் என்பதன் மரூஉவாகும் . நக்கு - சிரித்து . நடுநடுத்து - நடுநடுங்கி . பரிந்தவன் - இரங்கியவன் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய பரிசின னவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே.

பொழிப்புரை :

விரிந்த தாமரை மலரில் மேவிய பிரமனும் , விளங் கும் ஒளியுடைய பாம்பணையில் துயிலும் திருமாலும் , முற்காலத்தும் காணுதற்கு அரியனாய தன்மையனாகிய சிவபிரான் உறையும் பதி , தாழைமரங்கள் அடுத்துள்ள கழிகளில் பெருகிய ஓதநீர் ஒளிதரும் மணிகளோடு ததும்ப வண்டல் மண்ணில் மணம் கமழ்ந்து வளரும் சோலைகள் சூழ்ந்த சிறந்த திருமறைக்காடாகும் .

குறிப்புரை :

விண்ட - ( பூத்த ) இதழ்கள் விள்ளலுற்ற . அரவு - அணை - சர்ப்பசயனம் ; பண்டும் என்றதால் இன்றும் காணாமை எனப் படும் . கண்டல் - தாழை , நீர்முள்ளியும் ஆம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோது மவர்திற மொழிந்துநம் மடிகள்
பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே.

பொழிப்புரை :

பெரிய குடையும் மயிற்பீலியும் வெயிலை மறைக்க , கரிதான மண்டை என்னும் உண்கலன் ஏந்திக் கல் என்ற ஆர வாரத்துடன் பலி ஏற்கும் கழுக்களாகிய சமண புத்தர்கள் உண்டாம் இல்லையாம் என ஓதித்திரிய அச்சமயத்தவரின் நீங்கி , நல்ல மனம் உடையவர்களே ! நம் தலைவராக விளங்கும் பெருமைமிக்க திருமறைக்காட்டு இறைவனை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

பெருங்குடையும் மயிற்பீலியும் உடைய அப் புறப்புறச் சமயத்தவர் . மண்டை - உண்கலம் . உண்டு - உணவு கொண்டு . ` உண்டாம் இல்லையாம் ` என்பன முதலியவை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

மையு லாம்பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்
கையி னாற்றொழு தெழுவான் காழியுண் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுட் சேர்க்கவல் லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே.

பொழிப்புரை :

மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சிறந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவரைக் கைகளால் தொழுது எழு வோனாகிய காழிப்பதிவாழ் ஞானசம்பந்தன் செய்த இச்செந்தமிழ் பத்தையும் சிந்தையில் பதித்துப் போற்றவல்லவர் பொய்மையற்ற வானவர் உலகில் அவரோடும் புகவல்லவர் ஆவர் . புகழே கொள்ள வல்லவராய் விளங்குபவர் .

குறிப்புரை :

மை - மேகம். பொய்யில்வானவர் - அழியாத வீட்டுலகினர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிரு ளாடும் நாதன் நவின்றுறை கோயில்
புட்டன் பேடையொ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

ஆண் பறவைகள் தன்பிணையோடு கூடி மகிழும் அழகிய புகலூரில் அடியவர்கள் வட்டமாகச் சூழ்ந்து திருவடிகளைப் போற்றிப் பரவும் வர்த்தமானீச்சரத்து இறைவர் திருமேனிமேல் உத்தரீயமும் விரிந்த சடைமேல் வெண்மதி ஒளிதரும் கங்கை ஆகியவற்றையும் கொண்டு நள்ளிருளில் நட்டமாடும் தலைவர் ஆவார் . அவர் கோயில் திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் ஆகும் .

குறிப்புரை :

பட்டம் - உத்தரீயம் . பாணி - கங்கை . ` பாணி மூவுலகும் புதைய மேல்மிதந்த ` தோணிபுரத்துறைந்தனை ` ( தி .1 ப .1 பா .128.) ` விண்ணியல் பாணியன் ` ( பொன்வண் . 30). ` நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் ` . புள் - பறவை . பேடை - பெண்பறவை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

முயல்வ ளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை
இயல்வ ளாவிய துடைய வின்னமு தெந்தையெம் பெருமான்
கயல்வ ளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும்
வயல்வ ளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

கயல்கள் நிறைந்த கழனிகளில் கரிய நிறக் குவளை கள் மலரும் வயல்களை உடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர் , முயற்கறை பொருந்திய திங்கள் போன்ற ஒளிபொருந்திய முகத்தினை உடைய மங்கையரில் மேம்பட்ட தெரிவையாகிய உமையம்மையைப் பாகமாக உடைய இனிய அமுதம் போன்றவர் . எமக்குத் தந்தையாக வும் தலைவராகவும் விளங்குபவர் .

குறிப்புரை :

முயல் - களங்கம் . திங்கள் (- சந்திரன் ) இடத்திருப்பது . அரிவை தெரிவை இரண்டும் மாதர் பருவத்தின் வேறுபாட்டாற்பெற்ற பெயர்கள் . கண்மலரும் - கண்போல் பூக்கும் . குவளைகள் பூக்கும் எனலுமாம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும்
கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலம்
கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

தொண்டர்கள் குளிர்ந்த நீர் நிலைகளில் மூழ்கி மலர்மாலை சாந்து , மணப்புகை கொண்டு திருவடிபரவி வழிபடக் கண்டு அவர்தம் குறிப்பறிந்து அவர்கட்கு உதவும் முருகநாயனார் தாமும் அவ்வாறே இறைவனை அலங்கரித்துக் கண்குளிரக் கண்டு மகிழுமாறு வண்டுகள் கள்ளுண்டு பண்செய்யும் ஒலிபோல ஒலிக்கும் . வர்த்த மானீச்சரத்துள் சிவபெருமான் உகந்தருளியுள்ளார்

குறிப்புரை :

கயம் - நீர்நிலை . துணையல் - மாலை . ` கொண்டு ` இரண்டனுள் , ஒன்று துணையல் முதலியவற்றைக்கொண்டு என்றும் மற்றொன்று அடியை உளங்கொண்டு என்றும் கொள்ள நின்றமை உணர்க . குறிப்பு அறிமுருகன் :- முருக நாயனார் சிறப்புணர்த்திற்று . அவரது குறிப்பு அறியும் ஆற்றலை , தமக்கு நண்பருமாம் பெருமை தந்த பிள்ளையாரே அறிவார் . பூக்கள் திறக்கும் அநுபவ மிகுதியால் , அவற்றைக் கொள்ளும் சமயக் குறிப்பும் ஆம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாடல றாத
விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரொர் பாகம்
பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த
வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

விரிந்த பரப்புடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர் , பாடல் ஆடல்களில் பயிலும் பண்ணிசை மயமான வரும் , ஆகாய வடிவினராய் விளங்குபவரும் , பெண்ணொர் பாகமான வடிவினரும் , ஆணொடு இணைந்த அரி அர்த்த வடிவினரு மானவர் .

குறிப்புரை :

பண்ண வண்ணத்தர் - பண்ணிசை மயமான சிவ பெரு மான் . ` ஏழிசையாய் இசைப்பயனாய் `. விண்ணவண்ணத்தர் - ஆகாச ரூபர் . பாகம் பெண்ணவண்ணத்தர் - அம்மையப்பர் . அர்த்தநாரீச்சுரர் . ஆண் இணை பிணைந்தவண்ண வண்ணத்து எம்பெருமான் என்றது அறியத்தக்கது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

ஈச னேறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்
பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில்
மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் முருகநாயனார் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் கொண்டு மூன்று பொழுதிலும் வழிபட அம் மண மலர்களோடு விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் எல்லோர்க்கும் தலைவர் . விடையேறு உடையவர் . இனிய அமுதம் போன்றவர் . எந்தை , எம்பெருமான் குற்றம் அற்ற வெண்ணீறு பூசியவர் .

குறிப்புரை :

இதன் முதலடியோடு ஒத்தது முன் ( தி .2 ப .90 பா .1.) உணர்ந்தது . பூச - பூசுதற்கு . நீற்றர் - நீறுடையவர் . பூச என்னும் எச்சம் நீற்றர் என்னும் வினைக்குறிப்பில் உடையர் என்பதோடு முடிந்தது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

தளிரி ளங்கொடி வளரத் தண்கய மிரியவண் டேறிக்
கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில்
உளரி ளஞ்சுனை மலரு மொளிதரு சடைமுடி யதன்மேல்
வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீர் நிலைகளை அடுத்து வளரும் இளங் கொடிகளின் தளிர்கள் கிழியுமாறு வண்டுகள் சரேலென எழுந்து முழை கள்தோறும் செல்லும் பொழில்கள் சூழ்ந்த புகலூரில் வாழ்பவர் சுனை நீரில் பூத்த மலர்கள் விளங்கும் சடைமுடியில் பிறை சூடியவராகிய வர்த்தமானீச்சரத்து இறைவர் .

குறிப்புரை :

இளமுழை - இளமான் . உளர் - அசைகின்ற ; சுழல் கின்ற . தளிர்களையுடைய கொடி , இளங்கொடி . தண்கயம் - குளிர்ந்த நீர் நிலையில் . இரிய - சாய . சுனைமலரும் ஒளிதருஞ்சடை . சடைமுடி மேல் பிறை உடையார் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

தென்சொல் விஞ்சமர் வடசொற் றிசைமொழி யெழினரம் பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிரு ணீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்
அஞ்ச னம்பிதிர்ந் தனைய வலைகடல் கடையவன் றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே

பொழிப்புரை :

அடியவர் தமிழிலும் வடமொழியிலும் திசை மொழிகளிலும் அழகிய யாழ் நரம்பை மீட்டித் தங்கள் மனத்திருள் நீங்கப்பாடித் தொழும் புகலூரில் , அன்று அலைகடலைக் கடந்த போது , மை பிதிர்ந்தாற்போல எழுந்த வஞ்ச நஞ்சினை உண்ட அழகிய கண்டத் தினாராய் விளங்குபவர் வர்த்தமானீச்சரத்து இறைவர் .

குறிப்புரை :

தென்சொல் - தமிழ் . விஞ்சுதல் - மிகுதல் , வடசொல் - ஆரியபாடை . திசைமொழி - ஏனைய மொழிகளினின்று தமிழில் வந்து வழங்கும் சொற்கள் . சிவதோத்திரம் பாடும் பாஷைகள் குறிக்கப் பட்டன . நெஞ்சு இருள் - நெஞ்சிலுள்ள ( அகத்து ) இருள் . எழில் நரம் பெடுத்தலாவது :- இசை எழுச்சியையுடைய யாழ்நரம்பில் அமைத்துப் பாடுதல் . அஞ்சனம் - மை . நஞ்சுக்குவமை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

சாம வேதமொர் கீத மோதியத் தசமுகன் பரவும்
நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக்
காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்
வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

தண்மையான புகலூரில் விளங்கும் வர்த்தமானீச் சரத்து இறைவர் , இராவணன் சாம வேதம் பாடிப் பரவும் பெயரையும் ஊரையும் உடையவர் . நன்குணர்ந்து அடிகள் என்றேத்தும் பெயர்களை உடையவர் . காமதேவனை எரித்த கண்ணையுடையவர் .

குறிப்புரை :

தசமுகன் ( இராவணன் ) சாமவேத கீதம்பாடி நலம் உற்றான் . நாமதேயம் - பெயராற் சுட்டப்படுவது . கண்ணார் - நெற்றிக் கண்ணினார் . வாமதேவர் - பஞ்சப்பிரம மந்திரரூப மூர்த்திகளுள் ஒன்றாய் விளங்கும் சிவபிரான் . சதாசிவருடைய ஐந்துமுகத்தில் நான்காவது வாமதேவம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு
நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர ணங்குறு முமையை யஞ்சுவித் தருளுதல் பொருட்டால்
வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

வர்த்தமானீச்சரத்து இறைவர் , சிறந்த தெய்வத் தன்மை உடையவர்களாய் யார் தலைவர் என்பதில் மாறுபட்டவர் களாய்த் தம்முட் செருச்செய்த திருமால் பிரமர்களின் கருத்தழியுமாறு அவர்களிடையே தோன்றி நகை செய்தவர் . உமையம்மையை அஞ்சுவிக்கும்பொருட்டு அவள் எதிரே யானையை உரித்தவர் .

குறிப்புரை :

அணங்கு - தெய்வம் , அழகுமாம் . செரு - இருவரும் , சிவபிரானைக் காண்பேன் என்று சொல்லி நிகழ்த்திய போர் . ` அவனொடு நாராயணனும் கருத்தழிய நம்பர் நகைசெய்தார் `. அஞ்சுவித்து - அஞ்சச்செய்து . வாரணத்து உரி - யானைத்தோல் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னால்தம்
மெய்யைப் போர்த்துழல் வாரு முரைப்பன மெய்யென விரும்பேல்
செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

வாளைமீன்களோடு கயல்கள் குதித்து விளை யாடும் வயல்களைக் கொண்ட புகலூரில் நீல கண்டராய் விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் புகழே மெய்ம்மையானவை . கையில் உணவு ஏற்று உண்ணும் சமணரும் துவராடை போர்த்த புத்தரும் கூறும் உரைகளை மெய்யெனக் கருதேல் .

குறிப்புரை :

ஆடையினால் தம் உடம்பைப் போர்த்து உழல்வார் தேரர் . உரைப்பன - உரைக்கும் புறப்புறச் சமயக் கொள்கைகளை . மெய் - வாய்மை . விரும்பேல் - விரும்பாதே . செய் - கழனி . வாளை யும் கயலும் மீன்கள் . மை - கருநிறம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற்புக லூரில்
மங்குன் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத்
தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் றண்டமிழ் பத்தும்
எங்கு மேத்தவல் லார்கள் எய்துவ ரிமையவ ருலகே.

பொழிப்புரை :

மிகுதியான தண்ணிய நீராலும் , மலர்பூத்த பொழில்களாலும் சூழப்பெற்று விளங்கும் புகலூரில் வானளாவிய வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் விளங்கும் இறைவரைப் புகழ்மிக்க ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்கள் பத்தையும் எவ்விடத்தும் பாடி ஏத்துவார் இமையவர் உலகம் எய்துவர் .

குறிப்புரை :

போது - பூவின் முன்னைய பருவத்தது . மங்குல் - ஆகாயம் . மதிதவழும் ஈச்சுரம் என்றுகொண்டு , அத்திருக்கோயிலின் உயர்ச்சியைக் கருதுக . ஈச்சரத்தாருக்கு ஏற்றின் பிறையணிந்த வரலாறு குறித்ததாம் . தங்குசீர் - நிலைத்த சீர்த்தி . ` தண்டமிழ் ` என்றது இத்திருப் பதிகத்தை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவ ரிடுபலிக் கெழில்சேர்
விரைசெய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்று எனப்பெறும் கோயிலில் அமர்ந்த இறைவர் துன்பம் தரும் வலிய வினைகளைப் போக்கும் புண்ணியர் . விண்ணவர் போற்றக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர் . முப்புரம் எரித்தவர் . இடுபலிக்கு உழல்பவர் .

குறிப்புரை :

ஆரழலுக்கு இரையாச் செய்து ஊட்டி , இடுபலிக்கு உழல்பவர் அமர்ந்தார் என்றார் . தென்கு ( தெங்கு ) + ஊர் = தெங்கூர் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின் றாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்
பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

தாழ்ந்த பொழில் சூழ்ந்து விளங்கும் தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர் , மனம் ஒன்றி நினைக்கும் அடியவர்களின் கொடுவினைகளைத் தீர்ப்பவர் . கொத்தாக விளங்கும் சடைமுடிமேல் அரவோடு பிறையைச் சூடியவர் . பக்தர்கள் பணிந்தேத்தும் பரம்பரர் . நீரில் பதித்த விதை போன்றவர் .

குறிப்புரை :

தன் அடி சித்தம் நினைவார் வினை என்றியைக்க . சித்தத்தில் நினைவார் . செடிபடு - பாவத்தாலுண்டான . பிறையன் என்பது சிவனென்னும் பெயரளவாய் நின்று , தீர்க்கும் எனுமெச்சத்தைக் கொண்டது . கோள் - வலிமை , கொலை . புனல் பதித்த வித்தன் - நீரில் பதியச்செய்த விதையானவன் . ( தி .6 ப .15 பா .2.) ( திருவாசகம் 253 )

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

அடையும் வல்வினை யகல அருள்பவ ரனலுடை மழுவாட்
படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண்
விடையர் வீங்கெழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

அழகுமிக்க தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் பெருமானார் , நம்மை அடையும் வலிய வினைகளைத் தீர்ப்பவர் . அனல்போன்ற மழுப்படையை உடையவர் . புலித்தோல் உடுத்தவர் . கொன்றையணிந்த சடைமேல் பிறைசூடி மணி கட்டிய விடைமீது வருபவர் .

குறிப்புரை :

வினை அகல அருள்பவர் . விடை எருதுக்கு அதன் கழுத்தில் மணிகட்டுதல் உண்மையான் , மணி அணிதிரு விடை எனப் பட்டது . தறுகண் - கொடுமை ; அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சாமை . ` தறு கணன் ` ( நன்னூல் ) கண் என்பதன் முன் சில முதனிலைகள் சேர்ந்து வெவ்வேறு பொருள் பயத்தலை - அலக்கண் , புண்கண் , இடுக்கண் ( இடுங்குகண் ) வன்கண் முதலியவற்றிற் காண்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமல ரூதி மதுவுண விதழ்மறி வெய்தி
விண்ட வார்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

மது உண்ண வந்த வண்டுகளால் விரிந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் இறைவர் , முற்பிறவிகளில் நான்செய்த பழவினைகளைத் தீர்த்து நல்நெறியையும் அருளையும் தருபவர் . வானத்து இளம் பிறையைச் சூடியவர் . கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலமணி போன்ற கண்டம் உடையவர் .

குறிப்புரை :

பறைய - அழிய , பயப்பார் . கொண்டல் - மேகம் . வானிற்கு அடை . குரைகடல் - முழங்கும் கடல் . வண்டு ... விண்ட பொழில் - இயற்கை உணர்த்திற்று .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

சுழித்த வார்புனற் கங்கை சூடியொர் காலனைக் காலால்
தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை
கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல்பொடி யாக
விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

திருத்தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்த இறைவர் கங்கையை முடிமிசைச் சூடி வானவர் நடுங்கக் காலனைக் காலால் செற்றவர் . அன்னப் பறவையாய் வடிவெடுத்த பிரமனது தலை யோட்டைக் கையில் தரித்தவர் . காமனின் உடல் பொடியாகுமாறு விழித்தவர் .

குறிப்புரை :

சுழித்த - சுழற்சியைச் செய்த , தெழித்து - கோபித்து , சிறையணிபறவை கழித்த வெண்டலை - பிரமகபாலம் . அன்னப் பறவையான காரணம் பற்றியது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்
எல்லி சூடிநின் றாடும் இறையவ ரிமையவ ரேத்தச்
சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற
வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர் , பழவினை தீர்ப்பவர் . சுடலைப் பொடி பூசியவர் . திங்களை முடியில் சூடி நின்று ஆடுபவர் . இமையவர் ஏத்த விடை மீது ஏறிச் சென்று திரி புரம் எரித்த வில்லினர் .

குறிப்புரை :

தொல்லை வினை - பூர்வகர்மம் , பிராரப்தம் , சஞ்சிதம் இரண்டும் , சுவண்டர் :- சு = அண்டர் நல்லதேவர் எனவும் இடனில்லை . ` சுந்தரராய்த் தூமதியம் சூடுவது சுவண்டே ( தி .7 பா . 470.) என்பது கொண்டு முன்பொருத்தம் என்றேம் . அது இங்குப் பொருந்தாது . எல்லி - தண்ணொளியுடைய திங்கள் . எல் - ஒளி . சில்லை - இழிவு . பாசக்கடற்குளே வீழ்கின்றதே இழிவு . வில்லினார் - மேருமலையாகிய வில்லையுடையார் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்
முறிகொண் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப்
பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

வெண்ணீறணிந்தவராய் மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றில் எழுந்தருளிய இறைவர் , நெறியான மனம் உடையவராய் நினைபவர் வினைகளைத் தீர்ப்பவர் . தளிர்போலும் திருமேனியையும் மூன்று கண்களையும் உடையவர் . பிறைகண்டு அஞ்சுமாறு சடைமிசைப் பாம்பைச் சூடிய புண்ணியர் .

குறிப்புரை :

நெறி - திருநெறி . முறி - தளிர் . முளைமதி - பிறை . வெறி - மணம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

எண்ணி லாவிறல் அரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக்
கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர்
தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்
விண்ணு லாம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

விண்ணளாவிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் விளங்கும் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர் , அளவற்ற ஆற்றல் படைத்த இராவணன் கயிலை மலையை எடுக்க முற்பட்டபோது அவன் கண்களெல்லாம் பொடியாய் , அவன் அலறி விழுமாறு கால் விரலால் ஊன்றிய தலைவர் . தண்ணிய கங்கையாகிய கண்ணியைச் சூடியவர் .

குறிப்புரை :

எண் - கணக்கு . விறல் - வலிமை . கருத்தர் தலைவர் வினைமுதல்வர் . கண்ணி - கங்கை . பிறைக்கண்ணியுமாம் . விண் உலாம் பொழில் :- சோலையுயர்வு குறித்தது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார்
பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால்
ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும்
வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

திருத்தெங்கூரில் , அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடியையும் தேடிக் காணப்பெறாதவர் . பூதப் படைகள் பாடச் சுடலையில் பலகாலும் ஆடும் இயல்பினர் . அருச்சுனனுக்கு அருள் செய்யும் வேடத்தினர் .

குறிப்புரை :

அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடி யினையையும் தேடித் தான்காணார் . இணை - ஒத்தன ( இரண்டும் ) பாட ... படையினார் :- பாட என்னும் வினையெச்சம் படையை உடை யவர் என்பதில் உள்ள உடையவர் எனும் வினைக் குறிப்பைக் கொண்டது . ஆடவல்லர் . வேடத்தார் - வேட்டுவக் கோலத்தார் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர்சொற் றவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமி னிருமருப் பொருகைக்
கடங்கொண் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த பெருமான் உடலிற்போர்த்திய சீவரப் போர்வையை உடைய சாக்கியர் சமணர் சொற்களை வெறுத்துச் சைவ நெறிசார்வோரின் வல்வினை களைத் தீர்த்தருள்புரிபவர் . இருமருப்புக்களையும் ஒருகையையும் உடைய யானையின் தோலைப் போர்த்தியவர் . கடல் கடைந்த போதெழுந்த விடம் பொருந்திய கண்டத்தினர் .

குறிப்புரை :

சடம் - உடம்பு , பொய் , இடம் கொள் - மாயையைப் பற்றுக் கோடாகக் கொண்ட . இருமருப்பு - இரண்டு ( பெருங் ) கொம்பு . கடம் - மதநீர் . களிற்றுரியர் - யானைத்தோலர் , கனன்று - வெம்மை வீசி .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும்வல் லார்மேல்
பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.

பொழிப்புரை :

வெந்த வெண்ணீறணிந்த தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்த இறைவரை மணம் பொருந்திய பொழில் சூழ்ந்த காழி ஞானசம்பந்தன் பாடிய சந்தப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மேல் பந்தமாக அமைந்த பாவங்கள் நீங்கும் . அவர்கள் தெளிவு பெறுதல் வந்துறும் பயனாகும் .

குறிப்புரை :

சந்தம் ஆயின பாடல் - சந்தப்பாடல் . பந்தம் ஆயின பாவம் - வினைப்பற்று உண்டாவதற்கு ஏதுவான பாவங்கள் . பாறுதல் - ஓடுதல் . தேறுதல் - தெளிதல் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

சாகை யாயிர முடையார் சாமமு மோதுவ துடையார்
ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்
தோகை மாமயி லனைய துடியிடை பாகமு முடையார்
வாகை நுண்டுளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாகை மரங்கள் நுண் துளி சொரியும் வாழ் கொளிபுத்தூர் இறைவர் வேதப்பிரிவுகளான சாகைகள் பலவற்றை அருளியவர் . சாமகானம் பாடுபவர் . கொடுப்பவர் இல்லங்கட்குச் சென்று இரக்கும் வேடங்கள் கொள்பவர் . மயில் போன்ற சாயலையும் துடி போன்ற இடையையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர் .

குறிப்புரை :

சாகை - வேதநூற்பிரிவு , சாமம் - சாமவேதம் . ஈகை - வினைத்தொகை . வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி , ( திருவாசகம் . 73). ` இட்டும் அட்டியும் ஈ தொழில் பேணில் என் ? ( தி .5 ப .99 பா .3.) என்பவற்றில் உள்ள வினைத்தொகையை நோக்குக .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

எண்ணி லீரமு முடையா ரெத்தனை யோரிவ ரறங்கள்
கண்ணு மாயிர முடையார் கையுமொ ராயிர முடையார்
பெண்ணு மாயிர முடையார் பெருமையொ ராயிர முடையார்
வண்ண மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் , எண்ணற்ற வகைகளில் அன்பு காட்டுபவர் . இவர் அறங்களைப் பெற்றோர் பலராவர் . இவர் ஆயிரங்கண் , கைகளை உடையவர் . சக்தியின் அம்சமாகப் பல வற்றை உடையவர் . பெருமைகள் பல உடையவர் . இவர் வண்ணமும் பலவகைப்படுவனவாகும் .

குறிப்புரை :

எண் இல் ஈரம் - ` அளவுபடாததோர் அன்பு ` ( தி .4 ப .3 பா .10.) எண்ணில் - ஆராய்ந்தால் எனலுமாம் . இவர் அறங்கள் எத்தனையோர் என்று கொள்க . அறங்கள் எத்தனை ? எத்தனை ( யுடை ) யோர் ? இவர் எத்தனையோர் ? தனை - அளவு ஆயிரங்கண்ணர் . ஆயிரங்கையர் . பெண்ணும் ஆயிரம் உடையார் :- சிவசக்தியை உடையது சிவம் . சிவமும் சத்தியும் உருவம் முதலியவை இல்லாத உயர்வின . அவற்றில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை . ஆற்றலைப் பெண்மையாயும் ஆற்றலுடையதை ஆண்மையாயும் உருவகித்தமையால் , உண்மையிற் பெண் என்றும் அஃது ஆயிரம் என்றும் கொண்டு , நினைப்பென்னும் நெடுங்கிணற்றில் விழுதல் பெரும்பாவமாகும் . சிவசக்தியும் சிவமும் , அவ்வச்சத்திகட்கு இடமாய விந்துவும் முறையே பலவேறு வகையான் விருத்திப்பட்டும் நிற்கும் . சிவஞான பாடியத்தில் சூ .2. அதி . 2. காண்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

நொடியொ ராயிர முடையார் நுண்ணிய ராமவர் நோக்கும்
வடிவு மாயிர முடையார் வண்ணமு மாயிர முடையார்
முடியு மாயிர முடையார் மொய்குழ லாளையு முடையார்
வடிவு மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் , நுட்பமான கால அளவுகளாய் விளங்குபவர் . மிகவும் நுண்மையானவர் . அவர் பார்வையும் பலவேறு வகைப்பட்டவை . பலவேறு வண்ணங்கள் கொண்டவர் . பலவாய முடிகளை உடையவர் . உமையம்மையை இடப்பாக மாகக் கொண்டவர் . பலவேறு வடிவங்கள் கொண்டவர் .

குறிப்புரை :

நுண்ணியர் :- ` நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே ` திருவாசகம் .1 அடி : 76.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

பஞ்சி நுண்டுகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்
குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்
அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையி னீருரி யுடையார்
வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையினை உடைய மகளிர் வாழும் வாழ்கொளிபுத்தூர் இறைவர் , பஞ்சினால் இயன்ற துகில் போன்ற சேவடிகளை உடையவர் . சடைமுடியில் ஆடையைத்தரித்தவர் . பூங்கொத்துக்கள் சூடிய வேலை வெற்றிக்கு அடையாளமாகக் கொண்டவர் . ஐம்பொறிகளை வென்றவர்க்கு அணிமையில் இருப்பவர் . ஆனைத்தோல் போர்த்தவர் .

குறிப்புரை :

சேவடியின் மென்மை உணர்த்தப்பட்டது . குஞ்சி மேகலையுடையார் :- சைவத் துறவியர் சடைமுடி மறைக்கும் கல்லாடையைக் குறித்ததுபோலும் . குஞ்சிமேற் கலையுடையார் என்றிருந்ததோ ? மகளிர் இடையில் அணிவது மேகலை . இங்குக் குஞ்சி ( தலைமயிர் ) மேல் உடையது மேகலை என்று குறிக்கின்றது . கொந்து - கோபம் . ( ஞானாமிர்தம் ). அஞ்சும்வென்றவர் :- ` பொறிவாயில் ஐந்தவித்தார் `. இடைக்கு உவமை வஞ்சிக்கொடி .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

பரவு வாரையு முடையார் பழித்திகழ் வாரையு முடையார்
விரவு வாரையு முடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பது முடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
வரமு மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் பரவுவாரையும் பழித்து இகழும் புறச் சமயத்தவரையும் உடையவர் . தம்மோடு அன்பு கலந்து ஒன்றாகுபவரையும் உடையவர் . பிரமனது வெள்ளிய தலை யோட்டில் பலிகொள்பவர் . அரவம் பூண்டவர் . ஆயிரம் பேருடையவர் . வரங்கள் பல அருள்பவர் .

குறிப்புரை :

விரவுவார் :- மெய்யன்புடைய அடியார் . ` பரவுவார் இமையோர்கள் .. விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் ` திருவாசகம் .21. விரவுதல் . ` கலந்துநின் அடியாரோடு அன்று வாளா களித் திருந்தேன் ` ( திருவாசகம் . 485). ` எனைக்கலந்து ` ( ? .84). ` கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட விடையவனே `( ? ,105).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமு முடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலு மரியார் காட்சியு மரியதொர் கரந்தை
வண்டு வாழ்பதி யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும் வளம் உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவர் தண்டு , தாளம் , குழல் , தண்ணுமை ஆகியவற்றுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர் . பல்வேறு கோலங்கள் கொண்டவர் . காணுதற்கும் காட்சிக்கும் அரியவர் .

குறிப்புரை :

தண்டு , தாளம் , குழல் , தண்ணுமைக்கருவி , பூதம் , பல பல கோலம் , காட்சியருமை , கண்டு கொள்ளலருமை ஆகியவற்றை இறைவன் உடையவன் . தண்டு - வீணை . சிவிகை என்றும் பொருள் உண்டு . அஃது இங்குப் பொருந்தாது . தாளம் முதலிய இன்னிசைக் கருவி களாகிய இனம்பற்றி வீணை என்பதே . ` வேயுறு தோளிபங்கன் ... மிக நல்ல வீணை தடவி ` ( தி .2 ப .85 பா .1.) கரந்தைப்பூவில் வண்டு வாழ்கின்ற வளமுடையபதி . ` செஞ்சடைசேர் கரந்தையான் ` ( தி .1 ப .61 பா . 3.) அவர் காட்சி கொடுப்பதும் அரிது ; அவரைக் கண்டு கொள்வதும் அரிது என்பதன் உண்மை அத்துவிதமாய் நின்றுணர்வோர்க்கே விளங்கும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருண் மகளிர்நின் றேத்த
வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் , பெருமை பொருந்திய வாழ்க்கையர் . தம்மோடு மலைந்த அசுரர்களின் மும்மதில்களை அழித்தவர் . அருட் கொடை வழங்கும் இயல்புடைவர் . தவத்தோடு நாம் பரவ ஞானவாழ்வு அருள்பவர் . நள்ளிருளில் அரமகளிர் நின்று ஏத்த வானநாட்டு வாழ்வினை உடையவர் .

குறிப்புரை :

மலைந்தவர் - மாறுபட்ட ( பகை ) வர் . தவத்தொடு ஞானவாழ்க்கை உடையவர் . புகழ்ந்து ஏத்தற்குரியது ஞான வாழ்வு ஒன்றே . மற்றைய வாழ்வெலாம் இகழ்ந்து ஒதுக்கற் பாலன . நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த வானவாழ்க்கைய துடையார் ` அல்லிய ... குழலார் . .. பரவ ... வல்லார் ` என்பதொடு பொருத்திக்காண்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

ஏழு மூன்றுமொர் தலைகள் உடையவ னிடர்பட வடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்
கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க
வாழி சாந்தமு முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் , பத்துத்தலைகளை உடைய இராவணனைத் துன்புறுமாறு அடர்த்தவர் . தக்கன் செய்த வேள்வியைச் செற்றவர் . பலப்பல விருப்புடையவர் . வெண்பிறை போன்ற பன்றிக் கொம்பை மணி மிடற்றில் தரித்தவர் . சாந்தம் அணிந்தவர் .

குறிப்புரை :

பத்துத் தலையுடையவன் , வேழ்வி - வேள்வி . தக்கன் செய்த யாகம் . எதுகைநோக்கி ளகரம் ழகரமாயிற்று . விரும்பிச் செற்ற தும் உடையார் என்றும் அவர் பலபல விருப்புடையார் என்றும் இயைக்க . கேழல் - பன்றிக்கொம்பு . ` ஏனக்கொம்பு ` ( தி .2 ப . 102 பா .2.) அன்ன - அவைபோல்வன ; ( ஆமை , நாகம் , தலையோடு முதலியன ). மிடறு - திருக்கழுத்து . சாந்தம் - சந்தனம் ; பொறுமையு மாம் . அட்ட புட்பத்துள் ஒன்று .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

வென்றி மாமல ரோனும் விரிகடற் றுயின்றவன் றானும்
என்று மேத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி
முன்றின் மாமலர் வாச முதுமதி தவழ்பொழிற் றில்லை
மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் , தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் விரிந்த கடலிடைத்துயிலும் திருமாலும் நாள் தோறும் துதித்து வணங்கப் பெறுபவர் . இமையவர் துதித்தலை விரும்பி வானளாவிய மலர் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த தில்லைமன்றில் ஆடுபவர் .

குறிப்புரை :

ஏத்துகை - துதிக்கை ; வினைத்தொகையும் ஆம் . பா . 1. ஈகை . பார்க்க . துதி - ( தோத்திரம் ) புகழ்ச்சி மலர்வாசம் பொழில் . மதி தவழ் பொழில் . ஆடலது - திருக்கூத்தாடுதலை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

மண்டை என்னும் உண் கலன் ஏந்தித் திரியும் தேரர் , அழுக்கேறிய உடலினராகிய சமணர்களாகிய குண்டர்கள் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதீர் . ஒளிமிக்க பிறை சூடி , திருநீற்றுப் பொடி பூசி வண்டுகள் வாழும் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் இறைவனைப் போற்றுவீராக .

குறிப்புரை :

பிறைக்கு அடை திகழொளியும் நன்மையும் துண்டமும் , வெண்மையும் , சுண்ணப்பொடி என்பதினும் சுண்ணமும் பொடியும் எனல் சிறந்தது . சுண்ணம் :- திருப்பொற் சுண்ணம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை
இலங்கு வெண்பிறை யானை ஏத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.

பொழிப்புரை :

நன்மை நிறைந்த அழகிய பொழில் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய நற்றமிழ் ஞானசம்பந்தன் வெற்றிதரும் வெண் மழுவை ஏந்தி விளங்கும் வாழ்கொளிபுத்தூர் இறைவனாகிய பிறை சூடிய பெருமானை ஏத்திப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் . நலந்தரும் சிந்தையராய் நன்னெறி எய்துவர் .

குறிப்புரை :

நலம் - குறைவிலாமங்கலம். நன்னெறி - சரியையாதியின் பயனாகிய ஞானம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல்
ஆடன் மாசுண மசைத்த அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

செஞ்சடையில், இசைபாடும் வண்டுகள் சென்று சூழும் கொன்றை மலர், பால்போலும் பிறைமதி, பாய்ந்து வரும் புனலை உடைய கங்கை, வெண் காந்தள், வில்வ மாலை, ஊமத்தம் பூ ஆகியன குலவி விளங்க, கழுத்தில் தசை உலர்ந்த வெண்டலை மாலை மருவ, இடையில் புலித் தோலை உடுத்தித் தோள்மேல் பாம்பைச் சுற்றிக் கொண்டுள்ள அடிகளாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும்.

குறிப்புரை :

செஞ்சடையில் குலாவுவன - கொன்றை, பிறை, கங்கை. கோடல் (வெண்காந்தள்), கூவிள (-வில்வ) மாலை, ஊமத்தம்பூ. தலைமாலை. வல்லி - உமாதேவியார். மாசுணம் - பாம்பு. நிலத்திலூர்ந்தும் புரண்டும் மாசு உண்ணுங் காரணத்தாற்பெற்ற பெயர். அழுக்கு அடையும் ஆடைக்கு மாசுணி என்ற பெயர் உள்ளமை அறிக. `பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்` (ஆசாரக்கோவை,) `வல்லியந் தோல்` என்றிருந்து, லகரம் ளகரம் ஆகிய பிழைபோலும். வல்லியம் - புலி.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி
வேறு செய்தத னுரிவை வெண்புலால் கலக்கமெய் போர்த்த
ஊறு தேனவ னும்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

விடையேற்றினை விரும்பி ஏறி, இளமையும் மதமும் உடையதாய்த் தம்மை எதிர்த்து வரும் யானையை உதைத்துக் கொன்று அதன் தோலை வெண்புலால் உடலிற் கலக்குமாறு மேனிமீது போர்த்தவரும், அடியார் சிந்தனையுள் ஊறும் தேனாக விளங்கு பவரும், தேவர்களால் போற்றப்படும் ஒருவரும், ஒளி பொருந்திய சுடராகத் திகழ்பவரும், கங்கை சூடிய சென்னியரும் ஆகிய சிவ பிரானுக்கு உகந்த இடம் அரசிலியேயாகும்.

குறிப்புரை :

களிறு:- களிப்புடையது என்னுங் காரணப் பொருட்டாய், ஆண் யானையைக் குறிப்பது. உரிவை - தோல், புலால் கலக்க மெய்யிற்போர்த்த இனியன். யானையை உரித்துப் போர்த்தவன் இன்னாதவன் என்று கொள்ளுதல் பொருந்தாமை உணர்த்த. ஊறுதேனவன் (-`சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று பிறந்த பிறப்பு அறுக்கும்` இனியவன்) என்றருளினார். ஆணவமல நாசஞ்செய்வதே யானையுரி வரலாற்றின் தாற்பரியம். உம்பர்க்கு ஒருவன் - `அமரரால் அமரப்படுவான்`. சுடர் - சிவம். ஒளி - சத்தி.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

கங்கை நீர்சடை மேலே கதமிகக் கதிரிள வனமென்
கொங்கை யாளொரு பாகம் மருவிய கொல்லைவெள் ளேற்றன்
சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க்கருள் செய்து
அங்கை யாலன லேந்து அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

வேகத்தோடு வந்த கங்கை நீரைச் சடைமேல் தாங்கி ஒளியும் இளமையும் அழகும் பொருந்திய தனபாரங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் `முல்லை` நிலத்துக்குரிய விடையேற்றை உடையவரும், ஐயுறவு கொண்டு வீண்பொழுது போக்காத தம்மடியவர்கட்கு அருள்புரிபவரும், அழகிய கையில் அனல் ஏந்தியவருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

குறிப்புரை :

கதம் - வேகம். வனம் - அழகு, சங்கை - சந்தேகம். அடியார்கள் ` நமக்கு ஆண்டவன் அருள்வானோ அருளானோ` என்னும் ஐயுறவுகொண்டு திரிந்து, வீண்காலம் போக்கும் அவப்பொழுது நேராது சிவப்பொழுது போக்குமாறு அவர்கட்கு அருள்வான் என்பது கருத்து. திரியாமே அருள்செய்து அனல் ஏந்தும் அடிகள் என்க. எருதேறித் திரியும் இறைவன் எனினும் அடியார்க்கு அருள்செய்யத் தவறான் என்றும். சங்கை - ஐயம். ஐயம் -பிச்சை. இரப்போர்க்கு இன்று நாம் இரப்பது சிறக்கக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயம்பற்றிய காரணப் பெயர். பிச்சைக்காரனாய்த் திரியும் ஒன்றே செய்யாமல் அடியார்க் கருள்வதையும் செய்து என்றும், பிச்சையெடுத்தாலும் அடியார்க்கு அருளும் பெருஞ்செல்வன் என்றும் கொள்ளும்பொருள் வலிந்து கொள்வனவேயாம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்
புக்க வூரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை
அக்கி னாரமும் பூண்ட அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

அறநெறியோடு உயிர்களைக் கவரும் எமனை அழித்துத் காமன் உடல் நீறாகும்படி விழித்து, ஊரார் இடும் பிச்சையை ஏற்று உண்டு, மார்பில் பொன்போலத் திகழும் கொன்றை மாலை, பூணூல் ஆகியவற்றையும், திருவெண்ணீற்றையும் அணிந்து ஆமை யோடு, என்புமாலை ஆகியவற்றைச் சூடிவரும் சிவபிரானுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

குறிப்புரை :

மிக்ககாலன் - இன்னான் இனியான் என்று கருதாது, உரிய காலத்தில் கூறுபடுத்தும் அறத்தில் மேம்பட்ட தருமராசன். தக்கநூல் - வேதாந்தம் என்னத் தக்க பூணூல், நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்` (திருமந்திரம்). அக்கின் ஆரம் - எலும்புமாலை. இனமல்லாமையால் ஆமையோடும் உருத்திராக்க மாலையும் எனல் ஒவ்வாது.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித்
தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து
வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி
ஆனஞ் சாடிய சென்னி அடிகளுக் கிடமர சிலியே.

பொழிப்புரை :

மானும் கண்டு அஞ்சும் மடநோக்கினை உடைய மலை மகளை ஒருபாகமாக மருவியவரும் அஞ்சாது தன்னை எதிர்த்த முப்புரங்களைத் தழல் எழுமாறு அம்பெய்து அழித்தவரும், வான வரும் அஞ்சும் ஆலகாலப் பெருவிடத்தை உண்டருளியவரும், ஆனைந்தாடும் திருமுடியினருமாகிய சிவபிரானுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.

குறிப்புரை :

மான் அஞ்சும் மடநோக்கியாகிய மலைமகள், நோக்கி - (கண்ணி) நோக்கத்தையுடையவள். மானினது கண்போன்ற கண் என்னாது, அக்கண்ணினது நோக்கம் போன்ற நோக்கம் எனல் முன்னோர் கருத்து, மான்விழி` என்பதும் மான் கண் என்பதும் ஒன்றாகா, விழிப்பது விழி. கண்ணுவது கண்,
விழித்தல் - இமைதிறத்தல். கண்ணுதல் - மனம் கருதல். இமை திறந்தும் திறவாதும் கருதல் செய்யலாம். திறக்கக் கருதினாலன்றி இமைதிறத்தல் நிகழாது. வான் - வானோர், அசுரர்.ஓதி:- பெயர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்குமத் தாகப்
பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய வவர்தமைக் கண்டு
அரிய வாரமு தாக்கும் அடிகளுக் கிடமர சிலியே.

பொழிப்புரை :

அமுதை விரும்பிய வானவர் வாசுகி என்னும் பெரிய பாம்பைக் கயிறாகக் கொண்டு மந்தரம் என்னும் மலையை மத்தாக நாட்டிப் பெரிய கடலைக் கலங்குமாறு கடைந்த போது அதனிடை, கருநிறமான ஆலகால விடம் தோன்றக் கண்டு அஞ்சிய அவர்களைக் கண்டு இரங்கி அதனை எடுத்துவரச் செய்து அரிய அமுதாக உண்டு வானவரைக் காத்தருளிய அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

குறிப்புரை :

பரிய - பெரிய. அரிய அமுது எனலே அமையும். `அரிய ஆரமுது` என்றது பெரிய பேராசிரியர் (மகாமகோபாத்தியார்) என்ற (ஆன்மாக்களின் அகங்காரத்தை வளர்க்கும்) பட்டப்பெயர் போல்வது. ஆருயிர் - காருடல் என்பனபோல ஆரமுதும் பண்புத் தொகை. அரிய:- நஞ்சு அமுது ஆதல் முன் இன்மை குறித்தது. ஆர் - முன் இல்லாத அஃது இப்பொழுது (அமுதாக்கிய சமயம்) விளங்கு தலைக் குறித்தது. அருமை - இன்மை, விளக்கம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடமர சிலியே.

பொழிப்புரை :

அழகிய கயிலை மலையைக் கீழ் மேலாகுமாறு புரட்ட முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்களும் தோள்களும் வாய்களும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

குறிப்புரை :

வண்ணமால்வரை - கயிலைமலை. மறித்திடல் - கீழ் மேலாக்குதல். கண், தோள், வாய் நெரிய என்க. கைந்நரம்பு - இராவணன் கையிலிருந்த யாழ். பண்ணின் பாடல் நரம்புக்கு அடை. பாடிய பாடல் - அந்நரம்பாற் பாடிய பாடல். அண்ணலாய் - நாளும் வாளும் அருளிய பெருமையிற் சிறந்தவனாகி; இன்னாசெய்தாற்கும் இனியவே செய்யும் பெருமையனாகி.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

குறிய மாணுரு வாகிக் குவலய மளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத் தோனும்
செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின் பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய முடியாதவாறும் அறியமுடியாதவாறும், அழலுருவாய் ஒங்கி நிமிர்ந்த திருவுருவத்தைக் கொண்டருளிய எம் அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

குறிப்புரை :

குறிய மாணுரு - வாமனாவதாரம், `குறுமாணுருவன்` (தி.1 ப.101 பா.5. )வெறி - மணம். மெய்த்தவத்தோன் - பிரமன். செறிவு ஒணா- செறிதல் ஒன்றா. செறிதல் - பொருந்துதல். அறிவொணாவுருவம் - ஐம்பொறிகளாலும், மனாதியாலும், ஜீவபோதத்தாலும் அறிதல் ஒன்றாத ஞானசொரூபம்.
`பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம் பரனைப் பதிஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாதநீழற் கீழ்` நின்று அறியப்படும் திருவுருவம் அது. `அறிவினில் அருளான் மன்னி` (சித்தியார்).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை யார்தர நல்கும் அடிகளுக் கிடமர சிலியே. 

பொழிப்புரை :

இளமையான மகளிர் இருப்ப அவரோடு கூடி வாழாது தலைமயிரைப் பறித்து முண்டிதராய்ச் சோற்று உருண்டை களைக் கையில் இரந்துண்டு பெற்று உண்பவர்களாகிய சமணரும் புத்தரும் சொல்லும் அவர்தம் சமயக் கொள்கைகளைக் கொள்ளல் வேண்டா. அடையத்தக்க பொருளானவரும், பொய்மையில்லாத வரும் உண்மையின் வடிவானவரும், தம் பொன்னடிகளை வணங்கு வார்க்கு அருளை நிரம்ப நல்குபவரும் ஆகிய சிவபிரானுக்குகந்த இடம் திரு அரசிலியே யாகும். அத்தலத்தை எய்தி வழிபடுங்கள்.

குறிப்புரை :

உண்பவர் - சமணர். சொல்லிய - சொன்னதம் சமயக் கொள்கைகளை. வினையாலணையும் பெயர். பொருள் - `உயர் பொருள்` (தி.1 ப.13 பா.5.) `உரமென்னும் பொருள்` (தி.7 ப.86 பா.5.) `பல்கலைப் பொருள்` (தி.7 ப.69 பா.10.) `மெய்ப்பொருள்` (தி.4 ப.74 பா.9.) `கொன்றைத் தொங்கலான் அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே` (தி.2 ப.41 பா.7.) என்றதால் ஆன்மாக் களுக்குப் பொருளாவது சிவபரம் பொருளே என்றறிக. குருளை என்பது ஈண்டு இளமையைக் குறித்தது. இளமகளிரை வாழ்க்கைத் துணையாகப் பெற்றிருந்தும், தலை மயிரைப் பறித்து விடுவது பொருத்தமாகாமையை உணர்த்துவதுடன், அதற்கு ஏதுவாவது அமிதபோஜனப்ரியம் என்றுங் குறித்தார்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி அடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த
வல்ல வானுல கெய்தி வைகலு மகிழ்ந்திருப் பாரே.

பொழிப்புரை :

நீர்ப் பூக்களை உடைய நீண்ட வயல்கள் சூழ்ந்த திரு அரசிலி இறைவனைப் போற்றிச் சீகாழிப் பதியில் தோன்றிய நல்ல ஞானசம்பந்தர் பாடியருளிய இத் திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் நாள்தோறும் சொல்லி வழிபடவல்லவர். வானுலகெய்தி அமரர்கள் தொழுது ஏத்த வைகலும் மகிழ்ந்து வாழ்வர்.

குறிப்புரை :

அல்லி - அகவிதழ். (இரவில் பூக்கும் பூக்கள்) நற்றமிழ் - பிறவிப்பிணிக்கு மருந்தாகிய தமிழாகிய இத்திருப்பதிகம். `நாளும் சொல்ல வல்லவர் வைகலும் மகிழ்ந்திருப்பார்` ஒருநாள் தவறின் அன்று மகிழ்ந்திரார் என்பது அவரவர் அநுபவத்தால் உணரப் படும்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான்
செங்க ணாடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில்
பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந்
தங்கு வெண்டிரைக் கானல் தண்வயற் காழிநன் னகரே. 

பொழிப்புரை :

வெண்மை மிக்க முப்புரிநூல் புரளும் அழகிய மார்பினனாகிய எம் பெருமானும், சிவந்த கண்களை உடைய ஆடும் பாம்பினைப் பிடித்து ஆட்டுபவனும், செல்வனும், ஆகிய எம் சிவபிரான் உறையும் கோயிலை உடையது, தோல்வியுறாத வேதங் களில் வல்லவர்களும் பத்தர்களும் பரவுவதும், வெண்மையான அலைகள் வீசும் கடற்கரைச்சோலைகளையும் வயல்களையும் உடைய தும் ஆகிய சீகாழி நன்னகர் ஆகும்.

குறிப்புரை :

1. வெண்புரி - வெண்ணிறத்தையுடைய நூலாலாகிய முப்புரி. பங்கம் - தோல்வி; மறைப்பொருள்கள் வேறு எந்நூற் பொருள் களுக்கும் தோல்வி அடையாமைகுறிக்க, பங்கம் இல் மறைகள். அழியாமை குறித்ததுமாம்.
வேதம் நித்தியம், வல்லவர்களும் பத்தர்களும் பரவும் காழி நன்னகர் என்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கட னிறுவி
நாவ தாலமிர் துண்ண நயந்தவ ரிரிந்திடக் கண்டு
ஆவ வென்றரு நஞ்ச முண்டவ னமர்தரு மூதூர்
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழில் காழிநன் னகரே.

பொழிப்புரை :

தேவர்களும், அசுரர்களும் கூடி, நாவினால் அமிர் தம் பெற்றுண்ணப் பெரிய கடலில் வலிய மந்தர மலையை மத்தாக நட்டுக் கடைந்த போது எழுந்த அரிய நஞ்சினைக் கண்டு ஆஆ என அலறி ஓடிச் சரண் அடைய, அந்நஞ்சினைத் திரட்டித் தானுண்டு தேவர் களைக் காத்தருளிய சிவபிரான் அமர்ந்தருளிய மூதூர், காவலாக அமைந்த மதில்கள் சூழ்ந்ததும் மணம் பொருந்திய பொழில்களை உடையதுமான சீகாழி நன்னகர் ஆகும்.

குறிப்புரை :

நிறுவி - மத்தாக நிறுத்தி, நாவதால் - நாக்கால்; அது பகுதிப் பொருள்விகுதி. இரிந்திட - சாய. ஆவ என்று - ஆஆ என்று இரங்கி, இத்தொடர் திருமுறைகளில் பயின்றுள்ளதை ஆங்காங்கு நோக்குக. காவல் ஆர் மதில்சூழ்ந்த நகர்; பொழிலையுடைய காழி நகர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

கரியின் மாமுக முடைய கணபதி தாதைபல் பூதந்
திரிய வில்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர் தரு மூதூர்
சரியின் முன்கைநன் மாதர் சதிபட மாநட மாடி
உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே.

பொழிப்புரை :

யானைமுகத்தோனாகிய கணபதியின் தந்தையும், பூதங்கள் பல சூழ்ந்து வர மனைகள் தோறும் உண் பலியேற்றுத் திரி பவரும், செழுமையான சுடர் போன்றவருமான சிவபிரான் எழுந் தருளிய மூதூர், வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய அழகிய மகளிர் காலில் தாளத்தட்டு நிற்கச் சிறந்த நடனத்தை ஆடிக் கொண்டு உரிய சிவநாமங்களை ஓதிப்போற்றும் ஒலிபுனல் சூழ்ந்த காழி நகராகும்.

குறிப்புரை :

கரத்தை உடையது கரி எனப்பட்டது. பூதகணங் களோடு பலிக்கு ஏகினார் எனல் அறிக. செழுஞ்சுடர்:- அழியாததும் அறியும் ஆன்மாக்களிடத்தில் வளர்வதுமாகிய ஒளி - `செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற்சோதி மிக்கவுருவே` அப்பர். `ஒளிவளர் விளக்கே` (திருவிசைப்பா). சரி - வளையல். சதிபட மாநடம் ஆடல். தண்ணுமை விளங்கலுறு தாளம் இசையெல்லாம் வண்ணமலர்மெல்லடி வழிச்சதியில் நிற்பக் கண்ணிணை கொள்பல்வளைய கைவழி நடப்ப, (பிரபுலிங்க. மாயை பூசைகதி 52). நடித்தல். செப்பமைந்த தண்ணுமை யிசை தாளம் மென்சிறுதாட் டுப்பமைந்த வொண்சதிதழீ இச்சுவைய பல்காய முப்பமைந்தவின் கறியென நடித்தல். (பிரபு. கைலாச 31). உரிய நாமங்கள் ஓதி என்றதால், அக்காலத்து மகளிர்க்குச் சிவநாமம் ஓதும் உரிமையை ஆசிரியர் உணர்ந்து மகிழ்ந்து பாட்டிலும் நாட்டிய உண்மை புலப்படும்.
இக்கால மகளிர் பலர், இறைவனை ஏத்த உரியநாமங்களை உணராமைக்குக் காரணத்தை ஆராய்ந்து கண்டு, போக்குதல். சமய வளர்ச்சிக்கு வழி கோலுவதாம். மகளிரே சமயம் வளர்க்கத்தக்கார்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூணென வுடைய வப்பனுக் கழகிய வூராந்
துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாண்மதி தடவு மணிபொழில் காழிநன் னகரே.

பொழிப்புரை :

சங்கவெண்குழை அணிந்த செவியினனும், தண் மதி சூடிய சென்னியனும், எலும்புகளை மாலையாகக் கோத்து அணிந்த தலைவனுமாகிய சிவபிரானுக்கு அழகிய ஊராக விளங்கு வது, உயர்வான மாளிகைகளில் கட்டிய உயரிய கொடிகளின் தொகுதி கள் வானத்தில் சென்று, வெள்ளி போலத் திகழும் ஒளி பொருந்திய மதியைத் தடவும் அணி பொழில் காழி நன்னகராகும்.

குறிப்புரை :

அங்கம் - எலும்பு. துங்கம் - உயர்ச்சி. தொகு கொடி - தொக்க கொடிகள். வினைத்தொகை.
மிடைந்து - நெருங்கி. வங்கமதி - வெள்ளியைப் போன்ற திங்கள்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான்
எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
சங்கை யின்றிநன் னியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே. 

பொழிப்புரை :

உமையம்மை ஒரு பாதியாக அமைந்த திரு மேனியனும், மான்மறி ஏந்திய கையினனும், எங்கள் ஈசன் என்று எழுவார் துன்பங்கள் அவற்றுக்குக் காரணமான வினைகள் ஆகியவற்றைத் தீர்ப் பவனும் ஆகிய சிவபிரானுக்கு உரிய ஊர், ஐயம் இன்றி நல்ல நியமங்களை முறையே செய்து தகுதியால் கங்கை நாடு வரை பரவிய புகழுடைய மறையவர் வாழும் காழி நன்னகர் ஆகும்.

குறிப்புரை :

உண்மை வடிவானவன் என்பது பொருந்துமேல் கொள்க. எழுவார்:- விழித்து எழுதல், மூலாதாரத்திலிருந்து சுழு முனை நாடி வழியாகத் தியானித்து எழுதல். இடர்வினை. இரண்டன் உருபும் பயனும் உடன் தொக்க தொகையாயும் உம்மைத் தொகை யாயும் கொள்ளலாம்.
வினைகொடுப்பவன் - வினைகளைப் போக்கிப் பிறவியை ஒழித்துப் பேரின்பம் அருளும் சிவபெருமான். சங்கை - ஐயம். தகுதி- ஒழுக்கத்தால் உயர்தல் மிக்கமறையவர். கீர்த்தியை உடைய மறையவர். உயர்கீர்த்தி வினைத்தொகை.
கங்கைநாடு:- கங்காநதி பாயும் நாட்டினின்றும் வந்த மறையவர் என்றேனும் அந்நாடு வரையிலும் பரவிய கீர்த்தியை யுடையமறையவர் என்றேனும் கொள்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

நாறு கூவிள மத்த நாகமுஞ் சூடிய நம்பன்
ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்
நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்
தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே. 

பொழிப்புரை :

மணம்வீசும் வில்வம், ஊமத்தை ஆகியவற்றோடு பாம்பையும் முடியில் சூடிய நம்பனும், விடை ஏற்றினை விரும்பி ஏறும் ஈசனும் ஆகிய சிவபிரான் மேவிய ஊர், திருநீறு பூசிய உருவினராய், நெஞ்சினில் வஞ்சம் சிறிதும் இன்றித் தெளிவு பெற்ற அடியவர்கள் சென்று தொழும் சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

ஏறும் ஏறிய ஈசன் - என்பதிலுள்ள உம்மை ஏற்றின் அடங்காமையையும் அதை அடக்கிய ஈசன் ஆற்றலையும் குறித்தது. பசுக்களுக்கு எல்லாம் பதியாதலை உணர்த்துவதே அதன் உண்மைக் கருத்து. இருந்து அமர்தரும் ஊர் என்றதால் நிலைத்திருக்கையும் மிக்க விருப்பமும் புலப்படும்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில்
விடம மர்ந்தொரு காலம் விரித்தற முரைத்தவற் கூராம்
இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிக்
குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே.

பொழிப்புரை :

நந்தி மத்தளம் வாசிக்கச் சுடலையில் நடனம் ஆடிய தலைவனும், விடத்தை விரும்பி உண்டு முன் ஒரு காலத்தில் அறம் விரித்துச் சனகாதியர்க்கு உரைத்தருளியவனும் ஆகிய சிவ பிரானுக்கு உகந்த ஊர், விரிந்த மறைகளைப் பயின்ற அந்தணர்கள் வாழ்வதும் அழகிய போதிகையில் குடம் அமைந்தது போன்ற உறுப்புக்கள் திகழும் மணிமாடங்கள் விளங்குவதுமாகிய காழி நகராகும்.

குறிப்புரை :

நடமது - திருக்கூத்து, நடனமாகியமது எனக் கொண்டுரைத்தலுமாம். ஆனந்த நடனம் என்பதை நடமது எனப் பொருந்தும் மதுவை உண்டு அடையும் இன்பத்தை மது எனலாம். ஆனந்தத்தைக் குறிக்க அச்சொல்லை ஆள்வது பொருந்தும். நந்தி மத்தளம் வாசிக்க நடமாடினார் என்னும் வரலாறு இதில் குறிக்கப் பட்டது. ஒருகாலம் அறம்விரித்து உரைத்தவற்கு என்பதில் சநகாதி யார்க்குக் கல்லாலின் கீழ் இருந்து உபதேசித்த உண்மை குறிக்கப் பட்டது. இடம் - பரப்பு. வேதப்பொருளின் விரிவைக் குறித்தது. இருந்தவர் - பெருந் தவத்தோர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

கார்கொண் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி
ஏர்கொண் மங்கையு மஞ்ச வெழின்மலை யெடுத்தவ னெரியச்
சீர்கொள் பாதத்தொர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே. 

பொழிப்புரை :

கரியமேனியனாகிய இராவணன் தன் வலிமையைப் பெரிதெனக் கருதி அழகிய உமைநங்கை அஞ்சுமாறு அழகிய கயிலை மலையை எடுத்தபோது அவன் நெரியுமாறு சிறப்புமிகு பாதத்தில் அமைந்த ஒரு சிறு விரலால் செற்ற சிவபிரான் உறையும் கோயில், மலர்களில் பொருந்திய தேனை உண்ண வண்டுகள் சூழ்ந்து விளங்குவதும் தண்வயல்களை உடையதுமான காழி நன்னகர் ஆகும்.

குறிப்புரை :

ஏர் கொள்மங்கை - அழகுடைய உமாதேவியார். எழில் மலை - அழகிய கயிலை, உயர்ச்சியைக் குறித்த எழுச்சியுமாம். தார் - பூ.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

மாலு மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற்
பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்
சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய
ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் கூடி நின்று யார் பெரியர் என்று தம்முள் மாறுபட்ட மனத்தினராய் நிற்க, அவர்களிடையே தனது பக்கத்தையும் காண மாட்டாத வகையில் தோன்றி நின்ற பரஞ்சுட ராகிய சிவபிரானது பதி, சேல், வாளை, கயல் ஆகியன தம் கிளையொடு செறிந்து வாழ்வதும், ஆலும் நெற்கதிர்களைக் கொண்டது மான அணிவயல்களை உடைய காழி நன்னகராகும்.

குறிப்புரை :

பாலும் காண்பு அரிதாய பரஞ்சுடர் - தனது பக்கத்தையும் காண்டற்கு எளிதல்லாத மெய்யொளி. சேல், வாளை, கயல் என்பன வெவ்வேறு வகைமீன்களாதலை அறியாமல் எழுதியுள்ள இடம் பல உள. ஆலும்சாலி - ஆடுகின்ற நெல்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ்
சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்
சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே. 

பொழிப்புரை :

அழகிய கழலணிந்த திருவடிகளைக் காணும் மன மற்ற பொய்மைமிக்க புத்தர், சமணர் ஆகியவர்க்கு இல்லாதவாறு திகழ்கின்ற நற்செழுஞ்சுடர்க்கு ஊர், சித்தர்களும், அமரர்களும் முறை யோடு செறிந்த நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்து \\\\\\\"முத்தனே அருள்\\\\\\\" என வேண்டி நிற்கும் காழி நன்னகராகும்.

குறிப்புரை :

`பொய்மிகு` என்பது இடைநிலை விளக்கு. பொலி கழல் இணைகாணும் சித்தம் அற்றவர்க்கு - பொன்போல் ஒளிசெய்யும் கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் உணரும் உள்ளம் ஒழிந்த அப்புத்தர்க்கும் சமணர்க்கும். இல்லாமை - பெறுதல் இல்லாதபடி, திகழ்ந்த நல் செழுஞ்சுடர்க்கு - சிவனடியார்க்கு விளங்கிய நல்ல செழித்த ஒளியாகிய சிவபிரானுக்கு. சித்தரோடு அமரர் மலர்கொண்டு வழிபாடு செய்யும்போது `முத்தனே அருள்` என்று முறையிட்டுக் கொண்டனர் என்றபடி. குறையிரந்து முறைமை செய்தல், அரசர் முதலியவர்பால் குடிகள் முதலியார்க்கு உள்ளது.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

ஊழி யானவை பலவு மொழித்திடுங் காலத்தி லோங்கு.
* * * * * *

பொழிப்புரை :

பல ஊழிக்காலங்கள் மாறிமாறி வந்துறும் காலங்களிலும் அழியாது ஓங்கி நிற்கும் சீகாழி.

குறிப்புரை :

* * * * * *

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

நம்பொருள் நம்மக்களென்று நச்சியிச்சை செய்துநீர்
அம்பர மடைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்
உம்பர்நாத னுத்தமன் ஒளிமிகுந்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே. 

பொழிப்புரை :

நம் பொருள், நம் மக்கள் என்று பற்றுச் செய்து நீர் அழிந்தொழிந்து அல்லல் உறுதற்குமுன்னரே, தேவர் தலைவன், உத்தமன், ஒளிமிக்க செஞ்சடையை உடைய நம்பன் எழுந்தருளிய நன்னகராகிய அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

பொருட்பற்றாலும் மக்கட் பற்றாலும், லோகாந்தரம் சேர்ந்து, துன்பம் அடைதற்கு முன்னமே சீகாழியைச் சேருங்கள் நீங்கள் என்று உபதேசம் புரிந்தருள்வதை உணர்க. அம்பரம் அடைதல்:- நாதனார் ஆணை உய்க்க நரகொடு சுவர்க்கம் போய்ச் சேர்தல்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

பாவமேவு முள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்துசாவ தன்முனம்மி சைந்துநீர்
தீவமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநம்
தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே. 

பொழிப்புரை :

பாவங்களைச் செய்யும் உள்ளத்தோடு இறை வனிடம் பக்தி இன்றி நாள்தோறும் பயனற்றன செய்து இறப்பதன் முன்னம், நீர் சிவபிரானிடம் அன்பு கொண்டு தீபம், மாலை, தூபம் முதலியன ஏந்திய கையராகித் தேவர் தலைவனாகிய அவ் விறைவன் எழுந்தருளிய ஊராகிய அழகிய காழிப்பதியை அடை வீர்களாக.

குறிப்புரை :

நல்வினை தீவினை என்பன கன்மங்கள். அவை ஆகாமியவினை. அவ்விரண்டும் அறமும் மறமும் ஆகும் நிலைமை யில் சஞ்சிதம் எனப்படும். அறம் - புண்ணியம், மறம் - பாபம். அப் புண்ணிய பாவம் இரண்டும் அநுபவத்திற்கு வந்து சுக துக்கங்களை ஆக்கும், அப்போது அவ்விரண்டும் பிராரப்தம் எனப்படும். புண்ணி யம் பசுபுண்ணியம், சிவபுண்ணியம் என இருவகைப்படும். அவற்றுள் ஈண்டுச் சிவபுண்ணியத்துள் அடங்கும் சிவபூஜையைக் கருத வேண்டும். \\\\\\\"புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு\\\\\\\" என்பது திருமந்திரம். அப்புண்ணியத்தைச் செய்க என விதிப்பாராய், \\\\\\\"நீர், தீபம், மாலை, தூபம் என்பவை செறிதல் வேண்டும்\\\\\\\" என்றருளினார். நீர் என்பது முன்னிலைப் பெயராயினும் பொருத்தமாயிருத்தலின் வழி பாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகவும் கருதப்பட்டது.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக்
கேறுசுற்ற மெள்கவே இடுக்கணுய்ப்ப தன்முனம்
ஆறுமோர் சடையினான் ஆதியானைச் செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.

பொழிப்புரை :

உணவும், உடையும் இன்றித் துவண்டு, உற்ற சுற்றத்தினர் விலகிச்செல்லத் துன்பம் உறுவதன் முன்னம், கங்கை தங்கிய சடையினனும், நான்முகன் தலையைக், கொய்தவனும் ஆகிய சிவபெருமான் உகக்கும் தேன் மணம் கமழும் மலர்ப்பொழில் சூழ்ந்த அழகிய காழிப் பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

இடுக்கண் என்பது மரூஉ. அலக்கண், தறுகண், வன் கண், புன்கண் முதலியவை உள்ளேயுற்ற நிலையை வெளியே தோற்றும் கண்ணென்னும் உறுப்பைப் பற்றித் தோன்றிய பெயர் களாதல் அறிக. ஆறும் - சுவதந்திரம் முதலிய அறுகுணங்களும் எனக் கொண்டு, அவற்றால் ஓர்தற்குரிய சடையுடையான் எனல் சிறக்கும். சடைஞானமயமாகும், \\\\\\\\\\\\\\\"நுண்சிகைஞானமாம்\\\\\\\\\\\\\\\" (திருமந்திரம்)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம்
பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யு மெம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. 

பொழிப்புரை :

பொருளை விரும்பிப் பிறர் மனைவாயிலை நடந்து சென்று அடையக்கண்டும் அச்செல்வர் `நாளை நண்பகற்போதில் வருக `எனக் கூறும் உரையைக் கேட்டு வருந்துவதன் முன்னம் நம் மேல் ஈடு பாடுடையவரும், விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய ஒளி வடிவினரும் வழிபடுவாரிடம் அன்பு செய்யும் எம்பிரானாரும் ஆகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

இரப்பவர் பிறர் கடைவாயில் நின்று \\\\\\\"இடுக\\\\\\\" என்று இரக்க அவர் \\\\\\\"நாளை நண் பகலில் வருக\\\\\\\" என்று சொல்லும் சொல்லைக் கேட்டுணர்ந்து வருந்தும் நிலையெய்தும் முன்னரே சிவ பிரான் திருக்காழியைச் சேருங்கள்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன்ற லாதநோய்
உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்
கண்கள்மூன் றுடையவெம் கருத்தர்காழி சேர்மினே.

பொழிப்புரை :

கண்கள் காட்சி தவிர்ந்து உடல் கன்றி ஒன்றல்லாத பல நோய்கள் நும்மைத் தாக்கி அழிப்பதற்கு முன்னமே விண்ணகத் தேவர் உய்யக் கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்ட முக்கண்ண ராகிய எம் தலைவர் விளங்கும் காழிப்பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

காண்பு - காட்சி, \\\\\\\"காண்பரிதாய பரசுடர்\\\\\\\" \\\\\\\"காம்பி னொடுநேத்திரங்கள் பணித்தருளவேண்டும் \\\\\\\"காண்பினிய மணி மாடம்\\\\\\\" (தி.7 ப.46 பா.2,3) \\\\\\\"கண்கள் காண்பொழிந்து\\\\\\\".

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமேபிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே. 

பொழிப்புரை :

துன்பமயமான வாழ்க்கையை நடத்துதற்கு வீணாகப் பிறந்து, நீர் எல்லையில்லாத மாறுபாடுகளில் கிடந்திடாது புறப்படுவீர்களாக. பல்லில்லாத வெண்டலையில் பலியேற்கத் திரிதற்கு முல்லை நிலத்து ஆனேற்றில் ஏறிச் செல்வோனாகிய சிவ பிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

அவத்தம் - (அபத்தம்) தவறு, பொய். பலிக்கு இயங்கு பான்மையான், இயங்குதல் - நடத்தல்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்
ஐமிகுத்த கண்டரா யடுத்திரைப்ப தன்முனம்
மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே. 

பொழிப்புரை :

மிகுதியாகப் பொய் பேசும் வாயினராய்ப் பொறாமையோடு பேசும் நீர், கோழைமிகுந்த கண்டத்தினராய் இரைப்பு அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ் நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும் ஆகிய சிவபிரானது காழியை அடைவீர்களாக.

குறிப்புரை :

ஐமிகுத்த கண்டர் - கோழை பெருகிய கழுத் தினர்.இரைப்பது என்பது கோழைகட்டியபின் பேசமுடியாமல் மூச்சுடன் வரும் ஒலி.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினா ரிகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே. 

பொழிப்புரை :

கைகால்கள் தளர்ந்து, விரும்பி உடலைப் பற்றிய நோயினால் அன்பொடு போற்றிய அழகிய மனைவியரும் இகழ்ந்து பேசுதற்கு முன்னமே, திருமால் பிரமர்கள் மதித்துக் காண ஒண்ணாத நீலகண்டர் எழுந்தருளிய காழிப்பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

காலுங் கையுந்தளர்ந்து, நோய்மிகப் பெற்றமையால், அன்பொடு உபசாரங்கள் செய்து போற்றிவந்த மனைவியரும் இகழ்ந் துரைக்கும் இழிவை அடையும் முன்னரே காழிசேர்மின் என்க. ஏலம்- மயிர்ச்சாந்து.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந்
தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன்
சிலைபிடித் தெயிலெய்தான் திருந்துகாழி சேர்மினே. 

பொழிப்புரை :

பலநாள்கள் நோயிற் கிடத்தலால் தந்தை என்ற முன்நிலையை வெறுத்த அன்பு அற்ற புதல்வர்கள், மனைவி முதலா னோர் முனிவு கொள்ளுதற்கு முன்னரே, தலைபறித்து வாழும் சமணர், தேரர் ஆகியோர் நினைதற்கும் அரியவனும், சிலைபிடித்து முப்புரம் எரித்தவனும் ஆகிய சிவபிரானது அழகிய காழியை அடைவீர்களாக.

குறிப்புரை :

பெற்றவரை வழிபட்ட மக்களும் பல நாள் படுக்கையிற் கிடந்து வருந்தும் அப்பெற்றோர்க்கு அவ்வப்போது வேண்டுவன செய்து சலித்து, வெறுத்து, இவ்வாறுகிடந்து தாமும் துன்புற்று நம்மை யும் துன்புறுத்தும் இவர்கள் இருப்பதினும் இறப்பதே நன்று, என முன்னைய நிலையை வெறுப்பர். அதனை `நிலைவெறுத்தநெஞ்சம்` என்றார். வெறுத்தல் செறிதல், நெருங்கல்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

தக்கனார் தலையரிந்த சங்கரன் தனதரை
அக்கினோ டரவசைத்த வந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
மிக்கவின்ப மெய்திவீற் றிருந்துவாழ்தன் மெய்ம்மையே. 

பொழிப்புரை :

தக்கன் தலையை அரிந்தவனும், சங்கரனும், தனது இடையில் என்புமாலையுடன் பாம்பு அணிந்த அந்தி வண்ணனும் ஆகிய சிவபிரானது காழிப்பதியைப் பொருந்துமாறு ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப்பாடல்களை வல்லவர்கள் மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் உண்மையாகும்.

குறிப்புரை :

தலையரிந்தசங்கரன் என்றதால், தலை அரிந்த கொடுமை செய்தல் கடவுட்குத்தகுமோ? என்பார்க்குச் சுகத்தைச் செய்பவன் அசுகத்தை விளைக்குமளவு மிக்க அபராதங்களைத் தக்கன் செய்தான் என்றும், ஆண்டும் சிவபிரான் மறக்கருணையால் ஆண்டு சுகத்தையே பின்விளைவாகச் செய்தான் என்றும் உணர்க.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.

பொழிப்புரை :

மலைகளிலிருந்து பொன்னையும் , அரிய அணி களையும் உந்தி ஆரவாரம் செய்து அலை வீசி வரும் காவிரிக் கரை யிலுள்ள திருத்துருத்தியில் எழுந்தருளும் விருப்புடைய இறைவனே ! சொன்னவாறறிதலில் உனக்கு யாம் உணர்த்தும் வன்மை உடையோமோ ?

குறிப்புரை :

காவிரியிலிருந்து கிளைத்த விக்ரமம் என்னும் ஆறு செல்ல அவற்றைச் சார்ந்திருத்தலின் துருத்தி எனப்பட்ட இத்தலத்தின் இறைவன் திருப்பெயர் சொன்னவாறறிவார் என்பது . அது கருதி , உரைத்தலைப்பொலிந்த - சொன்னவாறறிதலில் விளங்கிய உனக்கு உணர்த்துமாறு வல்லோமோ ? வல்லோம் அல்லோம் . அறிவார்க்கு அறிவிப்பது எப்படி என்றவாறு . பொலிந்த உனக்கு என்பதில் பெய ரெச்சத்து அகரம் தொக்கது . சொன்னவாறு அறியவல்ல உனக்கு உரைத்தலைப் பொலிந்து உணர்த்துமாறு வல்லமோயாம் ? வெளிப் படச் சொல்லாத முன்பே அன்பர் நினைத்தவற்றைச் சொன்னவாறு அறியும் உனக்கு யாம் உணர்த்தும் வன்மை யுடையோமோ ? இல்லை , எனலுமாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளம்
தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம்
எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகில் நல்லமே.

பொழிப்புரை :

சடையில் அகத்திப்பூ , வன்னி , வில்வம் கொன்றை மலர் என்பவற்றை அடுத்தடுத்துத் தொடுத்தணிந்தவனே ! திருத்துருத்தி யில் எழுந்தருளியவனே ! நீ காலனைச் சினந்து திருவடியால் அவன் மார்பில் உதைத்தழித்த காரணத்தைப் பலகாலும் எடுத்து எடுத்து உரைத்தலில் வல்லமை உடையோமாயின் நாங்கள் நன்மை உறுவோம் .

குறிப்புரை :

சிவபிரான் சடையில் , அகத்திப்பூ , வன்னியிலை , கொன்றைமலர் , வில்வம் என்பவற்றை அடுத்தடுத்து வைத்துத் தொடுத்த மாலையை அணிந்துளான் என்னும் உண்மை வேறு யாண்டும் காண்டல் அரிது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூ லுருத்திரா துருத்திபுக்
கெங்குநின் னிடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ.

பொழிப்புரை :

கங்குலில் ஒளி வீசுதலைக் கொண்ட திங்களோடு கங்கையும் தங்கிய செஞ்சடையையும் , சங்கால் இயன்று விளங்கும் வெண்குழை தொங்கும் காதினையும் , பொங்கி விளங்கும் பூண நூலையும் உடைய உருத்திரமூர்த்தியே ! எல்லா இடங்களும் உன் இடங்களாக இருக்க , திருத்துருத்தி என்ற இத்தலத்தில் புக்கு அடங்கி வாழ்தற்குக் காரணம் யாதோ ?

குறிப்புரை :

பூணூல் உருத்திரா - முப்புரி நூலைப்பூண்ட உருத்திர மூர்த்தியே . துருத்திபுக்கு எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்தல் என்கொல் :- புக்கது துருத்தியாயினும் எல்லா இடங்களும் சிவப் பிரகாசத்தால் உன் நிறைவையே உணர்த்துகின்றன . அவ்வாறு ஓரிடத் திருந்து பலவிடத்தும் காட்சி தரும் ஆற்றல் இருந்தவாறென்னே ! என்ற படி , துருத்தியில் இன்றும் அத்திருக் கோயில் பொலிவு அத்தலம் முழுதும் விளங்கக் காணலாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

கருத்தினாலொர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியாற்றம் மல்லல்சொல்லி யையமேற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டு யோகியாய்
இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாய மென்பதே.

பொழிப்புரை :

கருதுமிடத்து ஒரு காணி நிலத்தில் பயிரிட்டு வரும் வருவாயும் உனக்கு இல்லை . தொண்டர்கள்மேல் உள்ள ஆசையால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்கின்ற தன்றி , ஒரு பெண்ணைத் தன் உடம்பின் ஒரு பாகத்தே கொண்டிருந்தும் உடம்பின்மேல் உளதாம் பற்றை விடுத்து யோகியாய் இருந்து திருத்துருத்தியில் புகுந்து எழுந்தருளி யிருத்தற்குரிய மாயம் யாதோ ?

குறிப்புரை :

( பா . 8 பார்க்க ). யோகியாயிருந்த உண்மை உணர்த் தியவாறு . ஒருகாணி நிலம் உடையவனாகி , அதிற் பயிரிட்டு ஜீவனம் புரிதல் இல்லை . தம் வறுமைத்துன்பம் உரைத்துப் பிச்சை எடுப்பது . ` பகலிடம் புகலிடம் .... துருத்தியார் , இரவிடத் துறைவர் வேள்விக் குடியே ` என்று முதலிற் கூறியதுமன்றிப் பாடல்தொறும் அதனைத் தெரிவித்திருப்பதாலும் . ( தி .3 ப .90 பா .1.) ` ஒருத்திபால் பொருத்திவைத்து உடம்பு விட்டுத் துருத்திபுக்கு இருத்தி , இது என்னமாயம் என்பதோ ?` என்று இங்கு வினாவியதாலும் ` காப்பது வேள்விக்குடி தண்துருத்தி யெங் கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம் ` என்றதாலும் ஆளுடைய பிள்ளையார் காலத்துக்கும் முன்பே , பகலில் துருத்திவாசமும் இரவில் வேள்விக்குடிவாசமும் உண்டு என்ற வரலாறு வழங்கப் பட்டமை விளங்கும் . இவை இல்லையேல் இரண்டு தலங்களையும் ஒருங்கு பாடார் என்க . ` வட்டக்குண்டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார் அட்டக்கொண் டுண்பதறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோம் ` என்றதில் ` வேள்விக்குடி ` என்னும் பெயர்க்காரணம் உள்ள தறிக . மான்தோல் ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்கும் இட்டு யானைத்தோல் போர்ப்பதறிந்தோமெனில் நாம் இவர்க்கு ஆட்படோம் 7. என்பதில் துருத்தியோகியை நினைவூட்டினாரென்பர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமா றிலாதவென்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படு முடம்புவிட்
டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே.

பொழிப்புரை :

திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே! பகலில் யோகியாய்த் திருத்துருத்தியிலும், இரவில் மணவாளக் கோலத்தோடு வேள்விக் குடியிலும் எழுந்தருளியுள்ள நீ, துறக்கும் உபாயத்தைக் கூறினீர் இல்லை. அழகிய திருவடியின்பத்தில் திளைத்து அதனை மறவாதிருந்த என்னை மயக்குறுத்திடும் மண்ணுலகில் பிறக்குமாறும், நோய்க்கு இடமான இவ்வுடம்பை விடுத்து இறக்குமாறும் செய்தருளினாய். யான் உனக்குச் செய்த இழுக்கு யாதோ? சொல் வாயாக.

குறிப்புரை :

துருத்தியில் எழுந்தருளிய முதல்வனே, பகலில் துறவி போல வேடங்கொண்டு இரவில் வேள்விக்குடியில் மணவாளக் கோலம்பூண்டு, தழும்பும் உற இணை விழைச்சுடையாய்; துறக்கும் ஆறு சொல்லப்படாய், உன் திருந்திய திருவடிகளை மறக்கும் மாறுபாடு சிறிதும் இல்லாத என்னை, மையல்செய்து, இம்மண்ணுலகில் பிறக்குமாறு காட்டியருளினை. நோய்களுக்கு இடமாகும் உடம்பைத் தவிர்த்து, இறக்குமாறு காட்டியருளினை ; இவ்வாறு பிறப்பும் இறப்பும் நீ காட்ட நான் உனக்குச்செய்த இழுக்கு யாது? மறக்கும் ஆறு எனலும் உண்டு. நான்கடியிலும் ஆறு என்றே கொள்ளல் ஏலாததன்று. `பிணிப் படும் உடம்பு `-` இடும்பைக் கிடும்பை` ( மூதுரை ) என்றதுணர்க.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
மயிற்கெதிர்ந் தணங்குசாயன் மாதொர்பாக மாகமூ
வெயிற்கெதிர்ந் தொரம்பினால் எரித்தவில்லி யல்லையே.

பொழிப்புரை :

வெயிலை எதிர்த்து அதற்கு இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழிலில் துயிலாதனவாய்ப் பறவைஇனங்கள் நிறைந்து வாழும் தண்மையான திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே ! மயிலொடு மாறுபட்டு அழகால் அதனை வருந்தச் செய்யும் அழகினை உடைய உமைபாகராக மூவெயில்களை எதிர்த்து அவற்றை ஓரம்பினால் எரித்த சிறந்த வில்லாளி யல்லையோ நீ !.

குறிப்புரை :

துருத்தியில் உள்ள சோலைவளம் கூறியவாறு . வெயிலுக்கு எதிர்த்து இடம் கொடாது குளிர்ந்த சோலை இப்பொழுதும் உண்டு . அணங்கு - அழகு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல்
மணிப்படும்பை நாகநீ மகிழ்ந்தவண்ண லல்லையே.

பொழிப்புரை :

மழுப்படையினை உடைய செல்வரே ! பல்லூழிக் காலங்களில் அழிந்தொழிந்த சிறப்பினராகிய திருமால் பிரமர் களுடைய தலையோடுகளைக் கட்டிய முடிச்சுடையவரே ! கரந்தை சூடியவரே , திருத்துருத்தியில் உறைபவரே ! அழகியதும் ஒப்பற்றது மான இளம்பிறையின் குளிர்ந்த நிலவொளியை அவாவும் , நல்ல மணியை உடைய படப்பாம்பை ஒருங்கே அணிந்த தலைமையாளர் அல்லிரோ நீர் .

குறிப்புரை :

கணிச்சி படை - கணச்சியம்படை , மழுப்படை . கழிந் தவர் - நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் , ஆறு கோடி நாராயணர் அங்கனே , ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர் , ` ஈறிலாதவன் ஈசன் ஒருவனே , ( தி .5 ப .100 பா .3.) என்றதிற் குறித்தவர்கள் , துணி சிரம் கிரந்தை - துணிந்த தலைமுடிச்சு ; தலை மாலையை அணிந்தவனே ; கரந்தையாய் - சிவகரந்தையைச் சூடியவனே `.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன்
இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக வெண்ணினாய்
கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை
அடற்பட வடுக்கலில் லடர்த்தவண்ண லல்லையே.

பொழிப்புரை :

நெற்றிவிழி சுடுதலால் பொடியாய் உடம்பு அழிந்த மன்மதன் இடர்ப்பட , அவனை வென்று தமக்கு இடமாகத் திருத்துருத்தியைக் கொண்டவரே ! கடற்படையை உடைய இலங்கை மன்னன் இராவணன் துன்புறுமாறு மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்த தலைமையாளர் அல்லிரோ நீர் .

குறிப்புரை :

நெற்றிக்கண்ணால் சுட்டொழிக்க , சாம்பராகி மெய்யிழந்த உருவிலியாகிய மன்மதன் . இடர்ப்படும்படி வென்று துருத்தி இடம் ஆகத் திருவுள்ளம் கொண்டருளினை . கடல் போலும் பெரும் படையை உடைய அப்பிரசித்திபெற்ற கடலின் நடுவே உள்ள இலங்கைக்கு வேந்தனை . கொலை உறத் திருக்கயிலை மலையை அழுத்தி அடர்த்த இறைவன் அல்லையோ ?

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

களங்குளிர்ந் திலங்குபோது காதலானு மாலுமாய்
வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே.

பொழிப்புரை :

தேன் உடையதாய்க் குளிர்ந்து இலங்கும் தாமரைப் போதில் எழுந்தருளிய பிரமனும் திருமாலும் வந்து வணங்கி அழகிய திருவடிகளைக் காணாதவராயினர் . ஒளி துளங்கும் இளம்பிறையைச் சூடிய சென்னியினராய திருத்துருத்தி இறைவரே ! உம் திருவடிப் பெருமைகளை உளம் குளிர்ந்த போதெல்லாம் உவந்து உரைத்து மகிழ்கிறேன் .

குறிப்புரை :

கள் அம்குளிர்ந்து இலங்குபோது காதலான் - தேனுடைய அழகிய குளிர்வுற்று விளங்கும் தாமரைப்பூவை விரும்புமவன் . களம் இடமுமாம் , போது ஆகிய களம் , களமாகியபோது களம் போது ஆகக் காதலிப்பவன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை
உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினம்
துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித்த னைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.

பொழிப்புரை :

புத்தர்களும் தத்துவங்கள் அற்ற நெறியாகிய சமணமதத்தினரும் உரைத்த பொய்களை உண்மை எனக் கொள்ளாது , வண்டினங்கள் மகிழ்வோடு எழுந்து , துத்தம் என்னும் சுருதியில் பாடும் பைம்பொழில் சூழ்ந்த திருத்துருத்தியில் விளங்கும் பக்தர்களிடம் அன்பு செய்யும் பரமனைத் தொழப் பிறப்பறுத்தல் பயனாய் விளையும் .

குறிப்புரை :

உத்தமம் எனக் கொள்ளாது மேகம் துத்தம் - ஏழிசையுள் ஒன்றானது . பித்தர் பித்தன் :- பித்தர்க்கெல்லாம் பித்தனாயிருப் பவனைத் தொழுதலால் பிறவிப் பெருங்கடலைத் தீர்த்தலே பெற்றி மையாகும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ்
சுற்றுமுற்று மாயினா னவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்று மின்மையிற் குணங்கள்வந்து கூடுமே.

பொழிப்புரை :

கல்விகற்று நிறைவு பெற்றவர்களால் தொழப் பெறும் கழுமலத்துள் தோன்றிய , அருந்தமிழை முற்றிலுமாக அறிந்துணர்ந்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் விடைக் கொடியை ஏந்திய சிவபிரானது திருத்துருத்தியை விரும்பி வழிபடுவோர் குற்றமற்றவர் ஆவர் . அவரிடம் நற்குணங்கள் வந்து பொருந்தும் .

குறிப்புரை :

சுற்றும் முற்றும் ஆயினன் - சுற்றிலும் முற்றிலும் ஆகிய சிவபிரான் . பெற்றம் - எருது எழுதிய கொடிக்கு ஆகுபெயர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற விச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

இன்றையநாள் நல்லது . நாளைய நாள் நல்லது என்று இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது அழிந் தொழியும் வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள் . மின்னல் போன்ற ஒளியினனும் , வெண்மதி , கங்கை , கொன்றை ஆகியவற்றை முடியில் சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சென்றடைவீர்களாக .

குறிப்புரை :

இத்திருப்பதிகம் முழுதும் உள்ள உபதேசத்தை உணர்ந்தொழுகுக . பொய் வாழ்க்கையைப் போக்கி , மெய் வாழ்க்கையைப் பெறும் அன்புற்று வம்மின் உலகீர் , சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோடிகாவைச் சேர்மின் . ( தி .5 ப .78 பா .2,6.) ( ஐயடிகள் க்ஷேத்திரவெண்பா . 6.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

அல்லன்மிக்க வாழ்க்கையை யாதரித் திராதுநீர்
நல்லதோர் நெறியினை நாடுதுந் நடம்மினோ
வில்லையன்ன வாணுதல் வெள்வளையொர் பாகமாங்
கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

அல்லல் மயமான வாழ்க்கையை விரும்பியிராது நீர் நற்கதியை அடையும் நெறியை நாடுதற்குப் புறப்படுவீர்களாக . வில் போன்ற ஒளி பொருந்திய நுதலை உடையவளும் , வெண்மையான வளையல்களை அணிந்தவளுமாகிய உமையம்மையை ஒரு பாக மாகக் கொண்டு , முல்லை நிலத்து வெள்ளை ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானுடைய திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

துன்பம் மிக்க வாழ்க்கையை விரும்பியிராமல் , நல்ல தொருகதியை நாடுவோம் . வம்மின் , வெள்ளேற்றண்ணலது திருக்கோடிகாவைச் சேர்மின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே

பொழிப்புரை :

துக்கம்மிகுந்த வாழ்க்கையினால் வரும் இளைப்பை நீக்கி , நீர் தக்கதொரு நெறியை அடைய வாருங்கள் . அரை மிசை என்பு மாலையை அணிந்தவனாய் , கங்கை சூடிய சடைமுடியில் கொக்கிறகு அணிந்துள்ள சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சேருங்கள் .

குறிப்புரை :

துக்கம் மிக்க வாழ்க்கையினால் வரும் இளைப்பை ஒழித்து . தக்கதொருகதியை அடையத் திருக்கோடிகாவைச் சேர்மின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
உண்டுமக் குரைப்பனா னொல்லை நீ ரெழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக்
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் முழுவதும் அழிந்தொழிதற்குரிய வழி ஒன்றுண்டு . அதனை உங்கட்குக் கூறுகிறேன் . விரைந்து நீங்கள் புறப்படுவீர்களாக . செஞ்சடையில் கங்கையைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள மார்பினனாய சிவபிரானது திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

முற்பிறவியில் செய்த வினை பசையறக் கெடும்படி திருக்கோடிகாவைச் சேர்மின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
தின்னநீரி டும்பையின் மூழ்கிறீ ரெழும்மினோ
பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட வாடலான்
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

முற்பிறவியில் நீர் , செய்த பாவத்தால் சிவமூர்த்தி யின் திருவடிகளை நினையாது இன்னமும் நீங்கள் துன்பங்களில் மூழ்கித் துயருறுகின்றீர்களே , புறப்படுவீர்களாக . பொன்னையும் வென்ற அழகிய கொன்றை சூடியவனாய்ப் பூதங்கள் பாட ஆடும் இயல்பின னும் , கொல்லும் தன்மை வாய்ந்த வேலினை உடையவனும் ஆகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

முற்பிறவியில் செய்த பாவத்தால் , சிவமூர்த்தியின் திருவடியைச் சிந்தை செய்யாமல் துன்பத்தில் முழுகுகின்றீர் , எழுமின் , சிவபிரானது திருக்கோடிகாவைச் சேர்மின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்
பாவமெத் தனையுநீர் செய்தொரு பயனிலைக்
காவன்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

பெருமையற்ற உலகவாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக . வெண்மையான என்பு மாலையை அணிகலனாகப் பூண்டு , பொன் போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண் பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

ஏவம் - இகழ்ச்சி . குற்றம் . காவல் மிக்க மாநகர் :- திரிபுரம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

ஏணழிந்த வாழ்க்கையை யின்பமென் றிருந்துநீர்
மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

பெருமையற்ற உலக வாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக . வெண்மையான என்புமாலையை அணி கலனாகப் பூண்டு , பொன்போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

மூப்படைந்து . அதனால் தளர்ச்சி எய்தி வருந்துவதன் முன்னரே , வம்மின் ; திருக்கோடிகாவைச் சேர்மின் . ஏண் - பெருமை . பொன்போலும் சடையில் வெண் பிறையைச் சூடியவன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட விருந்ததோர்
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

இவ்வாழ்க்கையை மெய்யென்று கருதும் எண்ணத்தை விடுத்துச் சிவபிரான் திருவடிகளைப் பணிந்து பற்றி வாழ்வீர்களாக . வெற்றியையே பெற்று வந்த இராவணனின் வலிமையை அழித்த குற்றமற்ற கயிலை மலைக்கு உரியவனாகிய அச்சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

இது மெய்வாழ்க்கை அன்று என்று நீக்கித் திருக் கோடிகாவைச் சேர்மின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

மங்குநோ யுறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

வாழ்வை மங்கச் செய்யும் நோய்க்குக் காரணமான வினைகள் அழிதற்குரிய உபாயம் ஒன்றைச் சொல்லுவேன் : கேளுங்கள் . செங்கண் மாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணுதற் கியலாத பெருமையனும் , வெவ்விய கண்களைக் கொண்ட பெரிய விடையூர்தியை உடைய வேதியனுமாகிய சிவபிரான் விரும்பும் தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

நோய் அடைதற்கு ஏதுவாகிய கட்டு , உடலையும் அதைச் சார்ந்து உயிரையும் பிணித்தலால் பிணி எனப்பட்டது . பிறவிப் பிணி அழியும் வகை சொல்வேன் . திருமாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணமாட்டாத பெருமையன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

தட்டொடு தழைமயிற் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகும் முழவொடும்
கொட்டமைந்த வாடலான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

தட்டோடு , தழைத்த மயிற் பீலியை ஏந்தித்திரியும் சமணர்களும் , பட்டால் ஆகிய விரிந்த ஆடையைப் போர்த்த புத்தர்களும் சொல்வன பயனற்ற சொற்களாகும் . தொங்க விட்ட சடையினனாய் மேதகு முழவு கொட்ட ஆடுபவனாய் விளங்கும் சிவ பிரானின் கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

சொல்லுஞ் சொல் பயனில்லை . தொங்கவிட்ட பொன்னார் செஞ்சடை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்களை உடைய குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவில் எழுந்தருளிய செந்தழல் உருவனை , சிறப்புமிக்க திறனுடைய அந்தணர்கள் வாழும் புகலியுள் தோன்றிய வேதங்களில் வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்களின் பாவங்கள் நீங்கும் .

குறிப்புரை :

திருக்கோடிகாவை மேவிய அந்தணர் வாழும் , திருப் புகலியுள் ஆய்ந்த மறையாகிய வேள்வியையுடைய திருஞானசம்பந் தருடைய இத்தமிழ் மாலை பாட வல்லவர் பாவம் போக்குவர் . கொந்து - பூங்கொத்து . கேள்வி - சுருதி . அந்தணர் புகலி என்றதால் அங்கு அக்காலத்தில் சிவபத்தியிற் சிறந்த அந்தணர் பலர் இருந்தமை யும் , அதிற் சிறவாதாரைக் கூறார் என்பதும் , கூறியது கொண்டு அவரை நாமும் இப்பொழுது நினைந்து பணிந்து நலம் பெறலாயிற்று என்பதும் உணர்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

படைகளைக் கொண்ட கூற்றுவன் வந்து உடலைப் பிரித்து உயிரைக் கொள்வதற்குப் பாசக்கயிற்றை வீசும் நேரத்தில் இடையில் வந்து தடுப்பார் எவரும் எமக்கு இல்லை . நெஞ்சே ! எழுக . என்னோடு போதுக . வெண்கொற்றக்குடையைக் கொண்ட மலைய மானின் முதிய தாதையாக விளங்கும் குழகனும் விடைக் கொடியினனு மாய்க் கோவலூரில் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் .

குறிப்புரை :

பாசம் - கயிறு ; எமபாசம் . நெஞ்சமே எழுக , போதுக . வெண்கொற்றக் குடையைக்கொண்ட மலையமான் முது தாதையாகிய குழகன் சிவபிரான் . குழகன் இத்தலத்தின் இறைவன் திருப்பெயர் ; ( பா . 3.6.9) விடையது - அது பகுதிப்பொருள் விகுதி . வீரட்டானம் , வீரஸ்தாநம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

கரவலாளர் தம்மனைக் கடைகடோறுங் கானிமிர்த்
திரவலாழி நெஞ்சமே யினியதெய்த வேண்டில்நீ
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! கரப்பவர் இல்லங்கள் தோறும் சென்று இரவாதே . இனியதை நீ எய்த வேண்டின் , வண்டினங்கள் குரா மரங்களில் ஏறிக் குழலும் யாழும் போல ஒலிசெய்யும் கோவலூரில் மணம் விரவி வீசும் கொன்றைமாலையை அணிந்த சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் .

குறிப்புரை :

கரப்பவர் வீடுகளின் கடைவாயில் தோறும் , கால் நிமிர்த்து ( நடந்து ) இரப்பதைச் செய்யாதே ; நெஞ்சமே ! ஆழி நெஞ்சம் - கடலாழத்தினும் காண்டற்கரிய ஆழமுடைய நெஞ்சமே ! நினைப் பென்னும் நெடுங்கிணறு . இனியதை எய்தவேண்டினால் , சிவபெருமான் வீரட்டானத்தைச் சேர்வோம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்
அள்ளற்சேற்றிற் காலிட்டிங் கவலத்துள் ளழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்
வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

நல்ல உள்ளம் உடையவர்களே ! உயிருக்கு உறுதி யானதை நீர் அறிய விரும்புவீராயின் நரகத்தில் அழுந்தித் துயரு றாமல் , செவி ஏற்கும் பாடல்களைப் பாடுபவனும் குழகனும் கோவலூரில் கங்கை தங்கிய சடையினனாக விளங்குவோனும் ஆகிய பெருமான் உறையும் வீரட்டானத்தை அடைவோம் . வருக .

குறிப்புரை :

நல்ல உள்ளத்தை உடையவரே உயிர்க்கு உறுதி யாவதை அறிதிர் என்னில் திருக்கோவலூர் வீரட்டானம் சேர் வோம் . அள்ளற்சேறு - நரகம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
இனையபலவு மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

மூப்புக் காலத்தில் கனைத்தலைக் கொண்ட இருமல் , சூலை நோய் , நடுக்கம் , குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு முன்னே , பனைகள் மிக்க பசிய பொழில் வயல் ஆகியன சூழ்ந்த கோவலூரில் , இருவினைகளும் அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோமாக .

குறிப்புரை :

கம்பதாளி - தாள்நடுங்கும் ஒருவகை நோய் ; கம்பம் - நடுக்கம் ; தாளி - கால்களைப்பற்றுவது . ` பெண்ணை ` என்றதற்கேற்ப பனந்தோப்பு மிக்கிருக்கும் நாடு . இருவினையையும் போக்கிய சிவ வேடத்தை உடையவன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

உளங்கொள்போக முய்த்திடா ருடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

ஆழமான சிந்தனையை உடைய நெஞ்சமே ! உடலற்ற காலத்தில் மனத்தால் விரும்பியவற்றை எய்துதல் இயலாது . நாள் தோறும் துளங்கித் துயருறாதே . வளமான பெண்ணையாறு வந்து பாயும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில் , விளங்கிய கோவணத்தினனாய்ச் சிவபிரான் வீற்றிருந்தருளும் வீரட்டானத்தை அடைவோம் .

குறிப்புரை :

ஆழி நெஞ்சமே ! - ஆழ்தலையுடைய மனமே ! மனத்தில் விரும்பப்பட்ட போகங்களை அநுபவிக்கச் செய்யும் புண்ணியம் இல்லாதவர்கள் கட்டையை விட்டகன்ற சமயத்தில் , தளர்ந்து நின்று நாள்தோறும் துயரம் அடையாதே .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும்
ஆடுபோல நரைகளா யாக்கைபோக்க தன்றியும்
கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

நம் உடல் நரையுடையதாய் , ஆடுபோல அலைதலால் கேடு , முதுமை , சாக்காடு ஆகியன நெருங்கி வந்து அழிதலை உடையது . பசுமையான பொழில்கள் செறிந்து நின்று அணி செய்யும் கோவலூரில் விளங்கும் குழகனும் , வீடுகாட்டும் நெறியினனும் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் . நெஞ்சே ! வருக .

குறிப்புரை :

கேடும் முதுமையும் இறப்பும் பொருந்திவந்து நாள் தொறும் ஆடுகளைப்போல நரைகளாகி உடம்பு அழிதலுடையது . பேரின்ப வீட்டைக்காட்டும் திருநெறி . நெறியினான் - திருநெறியில் சென்று அடையப்பெறும் சிவபிரான் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

உரையும்பாட்டுந் தளர்வெய்தி யுடம்புமூத்த போதின்கண்
நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர் நமர்க ளாதலால்
வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

பேச்சும் , பாட்டும் தளர்ந்து நம் உடல் மூத்த போதில் நம் உறவினர் நரைதிரை கண்டு இகழ்ந்து சிரிப்பர் . ஆதலால் , மலையி லிருந்து இழிந்து வரும் பெண்ணையாறு பாய்ந்துலாவும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில் மணம் கமழும் சிறப்புமிக்க வெண்ணீறணிந்தவனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தைச் சென்றடைவோம் .

குறிப்புரை :

உரையும் பாட்டும் - பேச்சும் பாடலும் . ` பாட்டும் உரையும் பயிலாதன இரண்டோட்டைச் செவியும் உள`.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

ஏதமிக்க மூப்பினோ டிருமலீளை யென்றிவை
ஊதலாக்கை யோம்புவீ ருறுதியாவ தறிதிரேல்
போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவலூர்தனுள்
வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

துன்பம்மிக்க மூப்போடு இருமல் ஈளை ஆகியனவற்றுக்கு இடனாய பருத்த உடலைப் பேணித் திரிபவர்களே ! உயிர்க்கு உறுதியாவதை அறிவீராயின் , மலர்களில் வண்டுகள் பண் பாடும் அழகிய கோவலூரில் , வேதங்களை ஓதும் நெறியினன் ஆகிய சிவ பிரானது வீரட்டானத்தை அடைவோம் . வருக .

குறிப்புரை :

ஈளை - சிலேட்டும தோடத்தால் வரும் நோய் வகையுள் ஒன்று . ஊதல் ஆக்கை - பருத்தலையுடைய உடம்பு . உறுதி - ஆன்ம லாபம் . அறிதிர் ஏல் - அறிவீர் எனில் . வேதம் ஓதும் நெறியினான் - வேதநெறியை அருளியவன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனுள்
நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

கங்கை தங்கிய மென்மையான சடைகளை உடைய அழகனும் , உமையம்மைக்குத் தன் மேனியில் ஒரு கூற்றை அளித்தவனும் ஆகிய குழகன் விளங்கும் கோவலூரில் நீறணிந்த கோலத்தினனாய் , நீலகண்டனாய் , திருமால் பிரமர்க்கு வேறான சிந்தையனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தை அடைவோம் வருக .

குறிப்புரை :

ஆயிழை - உமாதேவியார் . திருவெண்ணீறு சண்ணித்த மேனியழகினன் . இருவர் - மாலும் அயனும் , வேறுபட்ட சிந்தைக்கு ஏதுவாயிருந்தவன் .` அந்தணர் தம் சிந்தையானை ` ` வாயானை , மனத் தானை , மனத்துள் நின்ற கருத்தானை `.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும்
அறிவிலாத வமணர்சொல் லவத்தமாவ தறிதிரேல்
பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்
வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

ஆழமாகப்பலவற்றை எண்ணும் நெஞ்சமே ! துவரூட்டிய ஆடையினர்களாகிய புத்தர்களும் அறிவிலாத சமணர்களும் கூறும் சொற்கள் பயனற்றவை ஆதலை உணர்வாயேயானால் , பொறிகளை உடைய வண்டுகள் இசைபாடும் அழகிய கோவலூரில் மணம் கமழும் கங்கையை அணிந்த சடையினனாகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் வருக .

குறிப்புரை :

` ஆழி நெஞ்சமே `. நீராழங்கண்டாலும் நெஞ்சாழம் காணமுடியாது . அவத்தம் - பொய் , பொறி - வரி . வெறி - மணம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொற் பாவநாச மாதலால்
அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனுள்
விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

வீணே அழிதல் இல்லாதவர்களே ! உப்பங் கழிகளோடு கூடிய கடற்கரைச் சோலைகள் சூழ்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் , பழிகள் நீங்கப்பாடிய இப்பதிகச் செஞ் சொல் , பாவங்களை நீக்கும் தன்மையன ஆதலின் இவற்றை ஓதி வழி படுங்கள் . அழகிய தண்ணிய கோவலூரில் பெரிய விழிகளைக் கொண்ட பூதப்படைகளை உடைய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் . வருக .

குறிப்புரை :

பழிகள் தீரச்சொன்ன சொல் . பாவநாசம் - பழிகள் ஒழியப் பாடியருளிய இத்திருப்பதிகத்தினை ஓதுவார்க்குப் பாவங்கள் அழியும் . கொண்டு - இத்திருப்பதிகப் பொருளை உள்ளத்திற் கொண்டு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
அருக்கன்மண்ட லத்தணாவு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

பருத்த கையை உடைய யானையோடு போரிடும் சிங்கத்தின் கை நகங்கள் அதன் மத்தகத்தைக் கீறலால் , மத்தகம் முத்துக்களைச் சிந்தும் கயிலைமால்வரையைத் தனக்கு இடமாகக் கொண்ட சிவபிரானது ஊர் பசுமையான சோலைகளால் சூழப்பெற்றுக் கதிரோன் மண்டலத்தைக் கிட்டும் கொடிகள் கட்டப்பட்ட மாட மாளிகைகளை உடைய திருவாரூர் .

குறிப்புரை :

மத்தகம் - தலை , நெற்றி . அரி - சிங்கம் , அருக்கன் - சூரியன் . அணாவும் - கிட்டும் . ஆரூர் - ` ஆத்தி ` பற்றி வந்த காரணப் பெயர் . அது சோழ மன்னரது தார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

விண்டவெள் ளெருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்ட மூடறுக்கு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

` மலர்ந்த வெள்ளெருக்குமலர் , விரிந்தவன்னி யிலை , கொன்றைமலர் , ஊமத்தம் மலர் ஆகிய இவற்றால் இயன்ற இண்டை மாலையைச் சூடிய செஞ்சடை முடியினை உடைய சிவனது ஊர் , கெண்டைமீன் போன்ற விரிந்த கண்களை உடைய மகளிர் பாடும் கீத ஒலி மேலுலகைச் சென்றளாவும் திருவாரூர் .

குறிப்புரை :

இண்டை - திங்கள் வட்டம்போலத் திரட்சியுற்ற பத்திரபுட்பங் கலந்த மாலைவகை . சிவலிங்கத்திற்கு இண்டை இன்றியமையாதது . அண்டம் - மேலுலகம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

கறுத்தநஞ்ச முண்டிருண்ட கண்டர்கால னின்னுயிர்
மறுத்தமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர்
வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி
அறுத்துமண்டி யாவிபாயு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

கொடிய ஆலகால விடத்தை உண்டு இருண்ட கண்டத்தை உடையவரும் , காலன் உயிரைக் கவரவந்த போது மார்க்கண்டேயரைக் காத்து அவரது உடல் என்றும் இளமையோடு திகழும் பேற்றை வழங்கியவருமான இளமையும் வலிமையும் உடைய சிவன் ஊர் . எருமைகள் மயங்கியோடி வெள்ளியவள்ளைக் கொடிகளை அறுத்துக் குளங்களில் பாயும் குளிர்ந்த திருவாரூர் .

குறிப்புரை :

` பாலாகித்தோன்றிப் பருகினாராவிகொள்ளும் ஆலாலம் ` கந்தபுராணம் - வள்ளியம்மையார் . மாணி - பிரமசாரி ; மார்க்கண்டேய முனிவர் , வண்மை - கொடைமை , வன்மை என்றும் பாடம் இருத்தல் கூடும் . வெறித்து - மயங்கி , கலங்கி . வள்ளை என்பது ஒரு கொடி , ஆவி - குளம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

அஞ்சுமொன்றி யாறுவீசி நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய வஞ்சலென்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை
அஞ்சொலார் அரங்கெடுக்கு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

காமம் , குரோதம் முதலிய அறுபகைகளை விடுத்து , ஐம்புலன்களும் ஒன்றிநிற்கத் தலையாரக் கும்பிட்டு வழிபடும் அடியவர்களுக்கு அஞ்சாதீர் என்று அபயமளிக்கும் சிவன் மன்னிய ஊர் , பஞ்சுபோன்ற மென்மையான அடிகளையும் , பருத்த தனங்களையும் , நுண்ணிடையையும் , அழகிய இனிய சொற்களையும் உடைய மகளிர் அரங்கில் ஏறிநடஞ்செயும் ஆரூர் .

குறிப்புரை :

அஞ்சும் ஒன்றுதல் - ஐம்பொறிகளும் தத்தம் புலன்களைக் கொள்வதில் சிவபெருமான் திறத்திலன்றி மற்றெத்திறத்தி லும் ஈடுபடாமை . ` ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள ` ஆறு வீசுதல் - காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் , அறு பகையும் செற்று ஐம்புலனும் அடக்கி நிற்றல் . குஞ்சி - தலைமயிர் . ஈண்டுத்தலைக்கு ஆகுபெயர் : குஞ்சி ஆர - தலையார . வந்தி - வந்தனை . தலையாரக் கும்பிட்டு . அஞ்சல் என்னி - அஞ்சாதே என்னும் சிவபிரான் . பஞ்சியாருமெல்லடி - பஞ்சுலாவிய மெல்லடி . ( தி .2. ப .105. பா .9.) அடியின் மென்மைக்குப் பஞ்சு ஒப்பு . மகளிர் அரங்கில் ஏறி நடஞ்செய்யும் திறம் அவை யோரால் எடுத்துப் புகழ்ந்து பாராட்டும் அளவுடையதாகும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்றவெங்க ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

சங்கு போன்ற வெண்மையான பிறைமதியைத் தலையில் சூடி , தன்னை நினைப்பவர் மனத்தில் நிறைந்துநிற்கும் எங்கள் ஆதிதேவன் மன்னிய ஊர் , தென்னஞ்சோலைகளையும் , வானுலகம் வரை மணம் வீசும் உயர்ந்த செண்பக மரங்களையும் உடைய திருவாரூர் .

குறிப்புரை :

சங்கு உலாவு திங்கள் - சங்கினைப்போலும் வெண்டிங்கள் . சூடி - சூடிய சிவபிரான் . எங்கள் ஆதிதேவன் என்று உரைக்கும் உரிமை ஆசிரியர்க்கு உண்டு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ
டுள்ளமொன்றி யுள்குவா ருளத்துளா னுகந்தவூர்
துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ளல்நாரை யாரல்வாரு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

கள்ள நெஞ்சத்தையும் அது காரணமாகச் செய்யும் வஞ்சகச் செயல்களையும் , தீய எண்ணங்களையும் கைவிட்டு , அன்போடு மனமொன்றி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்கும் இறைவன் ஊர் , வாளை மீன்கள் துள்ளிப்பாயும் வயல்களையும் , சுரும்புகள் உலாவும் நெய்தல் மலர்களையும் , நாரைகள் ஆரல் மீன்களைக் கவர்ந்து உண்ணும் சேற்று நிலங்களையும் உடைய ஆரூர் .

குறிப்புரை :

கள்ளநெஞ்ச வஞ்சகக்கருத்து - நெஞ்சத்தின் இயல்பும் அதுகாரணமாகத் தோன்றும் வஞ்சகமாகிய காரியமும் , அக்காரியத்தின் விளைவான தீயகருத்தும் உணர்த்தப்பட்டன . அத்தீயகருத்து உள்ளவரை அருள்பெறலரிது . அக்கருத்தை ஒழித்து , அன்போடு , உள்ளம் ஒன்றியிருந்து , தியாநம் புரிபவர் உள்ளத்தில் உள்ள சிவபெருமான் . வாளைகள் துள்ளிப்பாய்கின்ற வயல் . வயலில் நாரை ஆரும் ஆரூர் . நெய்தற் பூக்களைச் சூழ்ந்து வண்டுகள் உலாவும் . அள்ளல் - சேறு . நெய்தற்கண் உள்ள ஆரல் மீன்கள் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

பொங்கி வந்த கங்கையைச் சடையிற் கரந்த . சருவவியாபகரும் , காமன் பொடிபட அனற்கண்ணைத் திறந்த வரும் , மங்கைபங்கரும் ஆகிய சிவன் மன்னிய ஊர் , அழகிய கண்களை உடைய மந்திகள் தென்னை மரத்தின் வழியே ஏறி வாழைக் குலைகளை ஒடித்து மாமரத்தின் மேல் ஏறும் சோலை வளம் சான்ற திருவாரூர் .

குறிப்புரை :

கங்கைநீர் பொங்குஞ் செஞ்சடை , கங்கையைக்கரந்த அகண்டர் . அகண்டர் - சருவவியாபகர் . மந்தி - பெண்குரங்குகள் . தெங்கினூடுபோய் , வாழைக்குலையை ஒடித்து , மாமரத்தின் மேல் ஏறும் வளமுடைய .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

வரைத்தலம் மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்
நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்
நிரைத்தமாளி கைத்திருவி னேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்க ளாடுமாரூ ரென்பதே.

பொழிப்புரை :

திருக்கயிலைமலையை எடுத்த இராவணனுடைய தலைகளையும் மார்பினையும் நெரித்தவனும் , திரிபுரங்களை எரித்தவனும் ஆகிய , சிவபிரான் ஊர் , வரிசையாயமைந்த மாளிகைகளில் திருமகளை ஒத்த அழகும் , வெண்ணகையும் செவ் வாயுமுடைய மகளிர் நடனமாடி மகிழும் ஆரூர் .

குறிப்புரை :

உரத்தொடும் - மார்பொடும் , வலியுடன் , நிரைத்த - வரிசையுற்ற . திருவின் நேரனார்கள் - திருமகளை நேரொத்தவர்கள் . அரத்தவாய் - செவ்வாய் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய்
வருந்தியு மளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

தாமரைமலரில் இருந்த நான்முகனும் , பாம் பணையில் கிடந்த திருமாலும் விண்பறந்தும் மண்ணிடந்து வருந்தியும் அளந்துகாணமுடியாத முடியையும் அடியையும் உடைய பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் ஊர் , செருந்தி , ஞாழல் , புன்னை , வன்னி , செண்பகம் , குரா ஆகியன மலர்ந்து மணம்வீசும் சோலைகள் உடைய திருவாரூர் .

குறிப்புரை :

நான்முகன் திருமால் இடந்தும் பறந்தும் வருந்தியும் அளப்பதற்கு ஒன்றாத உம்பரான் . செருந்தி - ஒருவகைமரம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம்
வெறித்தவேடன் வேலைநஞ்ச முண்டகண்டன் மேவுமூர்
மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செந்நெல்
அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

பறித்த வெள்ளிய தலையையும் , கடுக்காய்ப் பொடிபூசிய மேனியையும் , உடைய சமணர் , மெய்யில்லாத தவம் மேற்கொண்டு கண்டு அஞ்சும் வேடமுடையவனும் , நஞ்சுண்ட கண்டனும் ஆகிய சிவபெருமான் மேவும் ஊர் , மீண்டும் , மீண்டும் தோன்றும் வண்டலை வாரி நீரைத்தடுத்து , செந்நெல்லை அறுத்த வயல்களில் ஊற்று வழியே நீர்ப்பொசிவு தோன்றும் , மண்வளமும் , நீர் வளமும் உடைய திருவாரூர் .

குறிப்புரை :

பறிகொள்தலையினாக கடுப்படுத்த மேனி , கடுப்பொடியுடற்கவசர் . ` கடுவேதின்று ` மெய்ப்பொடியட்டி . வெறித்த வேடன் - அஞ்சிய சிவவேடமுடைய சிவபிரான் . அச்சம் - நெறியல்லா நெறியிற் செல்வதுபற்றித் தோன்றுவது . மறித்து - தடுத்து , திருப்பி . அசும்பு - நீர்ப்பொசிவு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
அல்லிமா தமர்ந்திருந்த வந்தணாரூ ராதியை
நல்லசொல்லு ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே.

பொழிப்புரை :

கொடிகள் அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்று மாமரங்களைக் கொண்டு விளங்கும் திருவீதிகளை உடைய அழகு பொருந்திய அல்லியங்கோதையம்மையோடு எழுந்தருளி விளங்கும் ஆரூர் இறைவனை ஞானநெறிகளை உணர்த்தும் சொற்களைக்கூறும் ஞானசம்பந்தன்தன் நாவினால் பாடிப் போற்றிய இன்னுரைகளை ஓதும் தொண்டர்கள் வானம் ஆள்வர் ; இஃது உண்மை .

குறிப்புரை :

சூதம் - மாமரம். பொன்னுலாவல்லிமாது - `அல்லியங் கோதை` தேவியின் திருநாமம். நல்ல - ஞான நன்னெறியுணர்த்துஞ் சொற்களை. இன்னுரை - பேரின்பப்பாடல். வானம் - தேன்வந்த முதின்றெளிவி னொளிவந்தவான்` திருவாசகம் . 178. `வானுக்குள் ஈசனைத் தேடும் மதி இலீர்` திருமந்திரமாலை . முத்தி நிச்சயம் . பக்கம்.139. வாய்மை - வாயின் (நாவின்) பொய்யாமொழி. `வாய்மை எனப்படுவது யாதெனின்` என்று ஒரு வினாவை ஏறிட்டுக்கொண்டு, அதற்கு விடையிறுக்கும் ஆசிரியர், `யாதொன்றும் தீமை இலாத (வற்றைச்) சொலல்` என்றார். செயல் என்றோ எண்ணல் என்றோ உரைத்தாரல்லர், அதனால், வாய்மை சொற்களைப் பற்றியதாதல் விளங்கும். உள் - உள்ளம். உள்ளத்தின்தன்மை உண்மை, உள்ளு தலின் பொய்யாமை குறித்து. `உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலதத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்`. மெய்ம்மை - மெய்யாற் செய்யுஞ் செயலின் பொய்யாமை. உண்மையும் முறையே எண்ணம் செய்கை இரண்டனையும் பற்றிய காரணப் பெயர்களாம்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

அன்ன மென்னடை யரிவையோ டினிதுறை யமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர் வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற் சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமல ரடிதொழு மடியவர் வினையொடும் பொருந்தாரே.

பொழிப்புரை :

அன்னம் போன்ற மெல்லிய நடையினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் அமரர் தலைவரும் , ஒளி விடும் செஞ்சடையில் வெள்ளெருக்கமலர் சூடியவரும் . வேதங்களின் முடிபாய் விளங்கும் உபநிடதங்கள் வழியே நன் பொருள்களை அருளியவரும் பெரியமதில்களால் சூழப்பட்ட சிரபுரத்தில் எழுந்தருளி யிருப்பவரும் ஆகிய புகழாளர்தம் அழகிய மலர் போன்ற திருவடி களைத் தொழுது எழும் அடியவர் வினையொடும் பொருந்தார் .

குறிப்புரை :

அன்னப்பறவையின் நடைபோல மெல்லிய நடை யுடைய உமாதேவியார் . அடியவர் வினையொடும் பொருந்தார் . இத்திருப்பதிக முழுதும் பாராயணம் புரிவாரது வினை தீர்க்கும் உண் மையை அனுபவித்துணர்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

கோல மாகரி யுரித்தவ ரரவொடு மேனக்கொம் பிளவாமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் தொழவினை நில்லாவே.

பொழிப்புரை :

அழகிய பெரிய யானையை உரித்தவரும் , பாம்பு , பன்றிப்பல் , இளஆமையோடு இவற்றைமிகுதியாகப் புனைந்து தண் மதிசூடிய சங்கரனாரும் , தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பம் அளிப்பவரும் , பெரிய கடலிடைத் தோன்றிய விடத்தை உண்ட நீல கண்டரும் ஆகிய சிரபுரத்து இறைவனைத் தொழ வினைகள் நாசமாகும் .

குறிப்புரை :

சால - அமைய , சங்கரன் - சுகத்தைச் செய்பவன் , நித்தியசுகம் , பேரின்ப வடிவினனாகிய பரமசிவன் தன் அடி அடைந்தவர்க்குத் தனது பேரின்பவடிவினை அருள்கின்றான் . ( முத்திநிச்சயப் பேருரை :- பக்கம் - 74, 177. பார்க்க ).

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா யமர்செயக் கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடு மடியரைக் கொடுவினை குற்றங்கள் குறுகாவே.

பொழிப்புரை :

பெருமைமிக்க தோள்வலிமையோடு வில்திறனில் சிறந்திருந்த அருச்சுனனை அவன்தவம் கெடுமாறு செய்து அவனை மதித்துக் கானகத்தில் ஒரு வேடனாய்ச் சென்று அவனை எதிர்த்து அமர் செய்யும் அவன் ஆற்றலைக் கண்டு அருள்புரிந்தவரும் , வண்டுகள் பூந் தேனைத் தேர்ந்து திரியும் மலர்வனம் சூழ்ந்த சிரபுரத்துறை எங்கள் தலைவரும் ஆகிய பெருமானாரைக் கும்பிடும் அடியவரைக் கொடு வினைக்குற்றங்கள் குறுகா .

குறிப்புரை :

மானம் - பெருமை , வலி . பார்த்தன் அர்ச்சுனன் . புருதையின் புதல்வன் என்னும் பொருளது . மதித்து - அறிந்து . கானத்தே திரிவேடன் - வனசரன் . அமர் - விரும்பிச் செய்யும் போர் . பகைத்துச் செய்யும் போரன்று . களிப்புமிகுதி குறிக்கின்றுழி ` அமர்க்களம் ` என்பது உலகவழக்கு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக் காலனை யுதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப் பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச் சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை யடிதொழு மடியவர்க் கருவினை யடையாவே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயர் உயிரை மதித்துத் தானே கவர வந்த தென்திசைக்கோனாகிய காலனை உதைத்தவரும் , தம்மை விரும்பி நினையும் மெய்யடியார் படும் பெருந்துயர்ப்பிணக்கை நீக்கி அருள்புரிபவரும் , சடையில் வெண்பிறை அணிந்தவரும் ஆகிய விரிந்த புகழை உடைய சிரபுரத்தில் அமர்கின்ற மாற்றுயர்ந்த ஆணிப் பொன் போன்றவரை அடிதொழும் அடியவர்களை அருவினைகள் அடையா .

குறிப்புரை :

முனிவர் உயிரை அறிந்து கொள்ளவந்த அக்கூற்று வனை ` பெறுமவற்றுள் யாமறிவதில்லை ` ( குறள் ) என்பதில் பரி மேலழகர் மதிப்பது என்றுரைத்தார் . உண்மை அடியவர்க்குத் திருவடி வேட்கையும் , சதாகால தியானமும் இன்றியமையாதவை . துயர்ப் பிணக்கு - துயரத்தைத் தரும்மாறுபாடு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

பாரு நீரொடு பல்கதி ரிரவியும் பனிமதி யாகாசம்
ஓரும் வாயுவு மொண்கனல் வேள்வியிற் றலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தன மகிலொடு வந்திழி செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழு மடியவர் வருந்தாரே.

பொழிப்புரை :

மண் , நீர் , பல கதிர்களை உடைய இரவி , தண்மதி , ஆகாயம் , வாயு , ஒளிபொருந்திய கனல் வேள்வித்தலைவனாகிய உயிர் ஆகிய அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர் எழுந்தருளிய , ஆற்றுநீர் கொணரும் சந்தனம் அகில் ஆகியவற்றோடு வந்திழியும் செழும்புனலை உடைய கோட்டாறுபாயும் தண்புனல் சூழ்ந்த சிரபுரத்தைத் தொழும் அடியவர்கள் வருந்தார் .

குறிப்புரை :

வேள்வித்தலைவன் - இயமானன் . ` இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி ` ( அப்பர் ) சிவனை நினையாத உயிர்கள் அவ்வெட்டுருவங்களுள் சிறந்த ஒன்று ஆமோ ? கோட்டாறு :- கோணிய கோட்டாற்றுக் கொச்சை ( தி .2 ப .70 பா .2.) ` கோட்டாறு சூழ் கொச்சை ( தி .3 ப .89 பா .1.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

ஊழி யந்தத்தி லொலிகட லோட்டந்திவ் வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக வந்தரத் துயர்ந்தார்தாம்
யாழி னேர்மொழி யேழையோ டினிதுறை யின்பனெம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ வல்வினை யடையாவே.

பொழிப்புரை :

ஊழி முடிவில் ஒலிக்கும் கடல்அலைகள் ஓடிவந்து உலகங்களை மூடிய காலத்தில் அமரர்கள் ஓடிவந்து ` அருட்கடலே ! எந்தையே ` என்று சரண்புக அதுபோது ஊழி வெள்ளத்தில் தோணி புரத்தை மிதக்கச் செய்து அமரரைக்காத்தருளிய , யாழ்போலும் மொழி யினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் இன்பனும் எம்பெருமானும் ஆகிய சிவபிரானின் மாநகராகிய சிரபுரம் தொழு தெழ வல்வினைகள் அடையா .

குறிப்புரை :

யுகாந்தகாலத்தில் வெள்ளம் உலகங்களைமூடி அழிக்கும்போது தேவர்கள் சிவபெருமானைச் சரண்புகுந்தனர் என்பது வரலாறு . ஓட்டந்து - ஓட்டம்தந்து . ஆழி - அருட்கடல் . அந்தரம் - வானம் . இன்பன் - ஆனந்தரூபன் , மாநகர் - பெருங்கோயில் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெயப் பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநட மாடும்வித் தகனாரொண்
சாய்க டான்மிக வுடையதண் மறையவர் தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத் தொழுமவர் தளராரே.

பொழிப்புரை :

பேய்கள் பாடவும் , பலபூதங்கள் துதிக்கவும் , பிணங்கள் எரிக்கும் சுடுகாட்டில் , மூங்கில் போலும் தோளினை உடைய காளி நாண மாநடம் ஆடும் வித்தகனாரும் புகழ்மிகவுடைய மறையவர் வாழும் தக்க சிரபுரத்தில் உறைபவரும் , பல்வகை உயிர்கட்கும் அவ் வவற்றிற்குரிய தாய்களாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானைத் தொழுபவர் தளர்ச்சியுறார் .

குறிப்புரை :

பேய்கள் பாடவும் பூதங்கள் துதிக்கவும் காளி நாணவும் மகாதாண்டவம் ஆடிய ஞான சொரூபர் . சாய்கள் - புகழ்கள் ` இந்திரன் தன் சாயாப்பெருஞ்சாய் கெடத் தாம்புகளால் தடந்தோள் போய் ஆர்த்தவன் ` ( கம்ப - யுத்த - நாக 21) ` தாய்களாயினார் பல்லுயிர்க் கும் - ( தாயவன் காண் உலகிற்கு ,) ( அப்பர் ) பல்லுயிர்க்கும் தாய் களாயினார் தமை என்று மாற்றிக்கூட்டிச் சிவபெருமானை எனப் பொருளுரைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

இலங்கு பூண்வரை மார்புடை யிராவண னெழில்கொள்வெற் பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி நெரியவைத் தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றன்மன் றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொண் மாமறை யவர்சிர புரந்தொழு தெழவினை குறுகாவே.

பொழிப்புரை :

விளங்கிய அணிகலன்களைப் பூண்டவனாய் மலை போலும் மார்பினனாய் விளங்கும் இராவணன் அழகியகயிலை மலையை நிலைகுலையச்செய்து பெயர்த்தபோது அதனைக்கண்டு தம் திருவடிவிரலால் நெரியச் செய்து பின் அவன் தன் பிழைக்கு வருந்திய போது அருள்செய்தவர் ஆகிய சிவபெருமான் வீற்றிருப்பதும் வயல் களில் முளைத்த செங்கழுநீர் மலர் மணத்துடன் தென்றல் மன்றி னிடைப்புகுந்து இளைப்பாற்றும் சிறப்புடையதும் உயர்குலத்தில் தோன்றிய மறையவர் வாழ்வதுமான சிரபுரத்தைத் தொழ வினைகள் குறுகா .

குறிப்புரை :

நெரியக் கழலடியை வைத்து என்க . புலன்கள் - வயல்கள் . கள்தேனுமாம் . மன்றில் தென்றல்புகுந்து என மாற்றுக . குலம் - கூட்டம் . மா - பெருமை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோ ரேனமோ டன்னமாய்க் கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம் பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ வினையவை கூடாவே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கும் தாமரைமலர்மிசை விளங்கும் நான்முகனும் திருமாலும் ஆகிய இருவரும் சிவபிரானைக் கண்டறியும் முயற்சியில் முறையே அன்னமாகவும் பன்றியாகவும் பறந்தும் கிளறியும் தேடியபோது அவர்கள் முன்பு கண்ட அத்துணை அளவே காணுமாறு அழலுருவாய் நீண்ட எம் பசுபதியும் , பரமேட்டியும் ஆகிய சிவபிரான் விளங்கும் செல்வவளம் உடைய சிரபுரம் தொழுதுஎழ வினைகள் கூடா .

குறிப்புரை :

பண்டுகண்டது காண்டல் - புதிதாக ஒன்றும் காணாமை . அறியுந்தோறும் அறியாமைகாண்பது புதுக்காட்சி . அறியாமை விலகாதிருப்பதே பண்டுகண்டது காண்டலாகும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பறித்த புன்றலைக் குண்டிகைச் சமணரும் பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத் தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியின் மூழ்கிட விளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை விட்டிடு மிகத்தானே.

பொழிப்புரை :

மயிர் பறித்த புன்தலையையும் குண்டிகை ஏந்திய கையையும் உடைய சமணரும் , உலகில் துவர் தோய்ந்த சீவரம் என்னும் ஆடையை அணிந்த தேரரும் , அறியமுடியாத தேவர் தலைவர் எழுந்தருளிய , எருமைகள் கரும்பை முறித்துத்தின்று குளங் களில் மூழ்க அதனைக்கண்டு அங்குள்ள இள வாளைகள் வெறித்துப் பாயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் தொழ மிகுதியான வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

மேதிகள் கரும்பை முறித்துத் தின்று குளத்தில் மூழ்க வாளை கலங்கிப்பாயும் வயல் , ஆவி - குளம் , வெறித்து - கலங்கி , அஞ்சி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

பரசு பாணியைப் பத்தர்க ளத்தனைப் பையர வோடக்கு
நிரைசெய் பூண்டிரு மார்புடை நிமலனை நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே.

பொழிப்புரை :

மழுவேந்திய கையனை , பக்தர்கள் தலைவனை , படப்பாம்பு , என்புமாலை ஆகியன அணிந்த அழகிய மார்புடைய நிமலனை , முத்துக்களின் கொத்தாக விளங்குவோனை , மணம் தரும் மலர்களை உடைய பொழில் சூழ்ந்த சிரபுரத்து அண்ணலை , தேவர் பெருமானைப் பரவிய ஞானசம்பந்தனின் செந்தமிழ்ப்பாடல்கள் பத்தையும் வல்லவர் பரமனைப்பணிபவர் ஆவார் .

குறிப்புரை :

பரசுபாணி - மழுவேந்தியகையன் . பத்தர்கள் அத்தன் - மெய்யன்புடையார்க்கு இறைவன் . அத்தன் - கையகப்படுவோன் எனலுமாம் . அக்கு - எலும்பு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
அல்லு நண்பக லுந்தொழு மடியவர்க் கருவினை யடையாவே.

பொழிப்புரை :

பொன்னிறம் பொருந்திய சடைமுடியில் இளம் பிறையையும் தேன் பொருந்திய கொன்றைமலரையும் பிணைத்துச் சூடிய பெருமான் எழுந்தருளிய அரிசிலாற்றின் வடகரையில் உள்ள அம்பர் மாகாளத்தை இரவும் பகலும் தொழும் அடியவர்களை அருவினைகள் அடையா .

குறிப்புரை :

அரிசிலாற்றின் வடகரையில் மாகாளத்தை இராப் பகல் இடைவிடாமல் வழிபடும் அடியார்களுக்கு நீக்குதற்கு அரிய வினைகள் நீங்கிப்போம் . அவை மீண்டும் அவரை அடைய வல்லன அல்ல . ` அல்லும் நண்பகலும் தொழும் அடியவர் `:- ` கங்குலும் பகலும் தொழும் அடியவர் ` ( பா . 4.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

அரவ மாட்டுவ ரந்துகில் புலியதள் அங்கையி லனலேந்தி
இரவு மாடுவ ரிவையிவர் சரிதைகள் இசைவன பலபூதம்
மரவந்தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர் பயன்றலைப் படுவாரே.

பொழிப்புரை :

பாம்பினைப் பிடித்து ஆட்டுபவர் , புலித்தோலை ஆடையாக உடுப்பவர் . அழகிய கையில் அனலேந்தி இரவுப் பொழுதில் ஆடுபவர் , அவர்தம் சரிதைகளாகிய இவற்றைப் பல பூதங்கள் பாடித்துதிக்கின்றன . வெண்கடம்ப மரச்சோலைகளை உடையதும் அரிசிலாற்றின் வடகரையிலுள்ளதுமாகிய திருமா காளத்தில் உறையும் அப்பெருமானைப் பரவிப் பணிந்து ஏத்த வல்லவர் விழுமிய பயனை அடைவர் .

குறிப்புரை :

பாம்பாட்டுபவர் . புலித்தோல் உடுப்பவர் . கையில் எரி ஏந்துவர் . ஏந்தி இரவில் ஆடுவர் . இவர் சரிதைகள் இவை . இசைவன - இசைபாடுவன . தலைப்படுவார் - அடைவார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங் குரைகழ லடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
வணங்கு முள்ளமோ டணையவல் லார்களை வல்வினை யடையாவே.

பொழிப்புரை :

அவன் குணங்களைக் கூறியும் தம் குற்றங்களை எடுத்துரைத்தும் அவன் திருவடிகளை அடைய முற்படின் , பூதகணங்கள் பாடவும் , அன்பர்கள் பரவித்துதிக்கவும் வீற்றிருக்கும் அப் பெருமான் நம் , கருத்தறிந்து அருள் செய்யும் இயல்பினனாவான் . அவ் விறைவன் மேவிய திருமாகாளத்தை வணங்கும் உள்ளத்தோடு அத்தலத்திற்குச் செல்லவல்லவர்களை வல்வினைகள் அடையா .

குறிப்புரை :

கணங்கள் பாடவும் , தரிசித்தோர் வாழ்த்தவும் அவரவர் கருத்தை அறிந்து அருளும் சிவபிரான் எழுந்தருளிய அரிசிற்கரை மாகாளத்தை வணங்கும் உள்ளத்தொடும் சேர வல்லவர் களை அடையும் வன்மை வினைகளுக்கு இல்லை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர் இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந் தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
கங்கு லும்பக லுந்தொழு மடியவர் காதன்மை யுடையாரே.

பொழிப்புரை :

மேகங்கள் தோயும் பொழில் சூழ்ந்ததும் , அரிசிலாற்றின் வடகரையில் உள்ளதும் ஆகிய திருமாகாளத்தில் இழையால் கட்டிய மணம்கமழும் கொன்றைமாலை , தாமம் , கண்ணி ஆகியவற்றை அணிந்த இறைவரை இரவும் பகலும் தொழும் அன்புடை அடியவர் எவ்விடத்தும் ஒருசிறிதும் பிணியிலராவர் .

குறிப்புரை :

எவ்விடத்தும் ஒருசிறிதும் பிணி எய்திலர் . கெடுத லிலர் . தொங்கல் - மாலை , தாமம் - தார் . காதன்மை - காதலின் இயல்பு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

நெதிய மென்னுள போகமற் றென்னுள நிலமிசை நலமாய
கதிய மென்னுள வானவ ரென்னுளர் கருதிய பொருள்கூடில்
மதியந் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் டேத்துதல் புரிந்தோர்க்கே.

பொழிப்புரை :

திங்கள் தோயும் பொழில்களால் சூழப்பெற்றதும் , அரிசிலாற்றின் வடகரையில் விளங்குவதுமாகிய திருமாகாளத்து இறைவரைப் பூக்கள் சந்தனம் நறுமணப் புகைகளைக் கொண்டு ஏத்தி வழிபடும் சிவபுண்ணியம் உடையோருக்கு அச்சிவபூசையால் எய்தும் திருவருளினும் வேறுநிதியம் , சுகபோகம் அடையத்தக்க வேறுகதிகள் உலகில் உண்டோ ?

குறிப்புரை :

நெதியம் - நிதியம் . மதியம் - தோய்புனல் . கதியம் - வழி . மாகாளத்துப் பரசிவனைப் புதுப்பூக்கள் சந்தனம் தூபம் ( முதலியவை ) கொண்டு ஏத்தி வழிபடும் சிவபுண்ணியத்தை உடையவர்க்கு அச்சிவபூஜையால் எய்தும் திருவருளினும் நிதியம் சுகபோகம் வேறு என்ன இருக்கின்றன ?

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக் கனல்விடு சுடர்நாகம்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ் வுலகினி லுயர்வாரே.

பொழிப்புரை :

கதிரொளி பொருந்திய முடிமிசைப் பாம்பு திங்கள் தலைமாலை ஆகியவற்றை அணிந்த பெருமான் எழுந்தருளிய பொழில் சூழ்ந்த அரிசிலாற்று வடகரையில் விளங்கும் திருமாகாளத்தை உள்ளத்தே கொண்டு வழிபடுபவர் யாவரோ ? அவர் இவ்வுலகில் உயர்வெய்துவர் .

குறிப்புரை :

கண் உலாவிய கதிர் ஒளிமுடி :- செஞ்சடை முடியின் ஒளியை உணர்த்திற்று . திலதம் - திலகம் . வைத்தவர் - சிவபிரானார் . உள் - மனத்தில் . நிலாம் - நிலாவுகின்ற .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும் புகழ்புரிந் தவர்மேய
மாசு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
பேசு நீர்மையரி யாவரிவ் வுலகினிற் பெருமையைப் பெறுவாரே.

பொழிப்புரை :

தோலே அவர் இடையில் கட்டியுள்ள ஆடை யாகும் . கொன்றையே அவர்தம் கண்ணி , பூசுவது வெண்பொடி . புகழை விரும்புபவர் . அவர்தம் திருமாகாளத்தைப் பேசும் தன்மையர் யாவரோ அவர் இவ்வுலகில் பெருமையைப் பெறுவர் .

குறிப்புரை :

தூசு - உடை . அரையில் தோலுடையே தூசு . கொன்றையே - கண்ணி . பூசுவது வெண்பொடி , புரிந்தவர் - விரும் பினவர் . மாசு - மேகம் . யாவர் ? அவர் பெருமை பெறுவார் என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

பவ்வ மார்கட லிலங்கையர் கோன்றனைப் பருவரைக் கீழூன்றி
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த விறையவ னுறைகோயில்
மவ்வந் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
கவ்வை யாற்றொழு மடியவர் மேல்வினை கனலிடைச் செதிளன்றே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்து , இமையவர்க்குத் துன்பங்கள் தீர அருள் செய்தவர் . அவ்விறைவர் உறையும் கோயில் அம்பர் மாகாளம் . அத்தலத்தைத் தோத்திர ஆரவாரத்தோடு வழிபடும் அடியவர்களின் வினைகள் அழலிற்பட்ட தூசுபோலக்கெடும் .

குறிப்புரை :

பவ்வம் ஆர் ( கடல் ) - நீர்க்குமிழி நிறைந்த ; நுரையும் ஆம் . ` நுரை மொக்குள் பௌவத்தோடு நொவ்விய புற்புதங்கள் திரைகொள் நீர்க்குமிழி ஐந்தாம் ` ( சூடாமணி நிகண்டு . 5. பெயர்ப் பிரிவு . 2.5). மவ்வம் - மேகம் . அழகு ( தோய்பொழில் ) எனல் பொருந்தாது . ( தமிழ் லெக்ஸிகன் , பக் . 3112 .) கவ்வை - தோத்திர முழக்கம் . தீயிற்பட்ட மரத்தூள் போல வினை அழியும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

உய்யுங் காரண முண்டென்று கருதுமி னொளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொ ளண்ணலும் பரவநின் றவர்மேய
மையுலாம்பொழி லரிசின் வடகரை வருபுனன் மாகாளம்
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங் கவலையுங் களைவாரே.

பொழிப்புரை :

கடைத்தேறுதற்கு ஒருவழி உண்டென்று கருதுங்கள் . நான்முகனும் திருமாலும் பரவ நின்றவராகிய இறைவர் பொழில்சூழ்ந்த அரிசிலாற்றின் கரையில் உள்ள திருமாகாளத்தில் உள்ளார் . அவரைக் கையினால் தொழுவாரே அவலமும் பிணியும் கவலையும் இலராவர் .

குறிப்புரை :

அவலமும் . பிணியும் , கவலையும் ( ஆக்கும் பிறவியைக் ) களைவார் மாகாளத்தைத் தொழுவாரே . அடியார்க்கே அவற்றைக்களையும் நிலைமை உண்டு . உய்யும் காரணம் அவர்க்கு உண்டு என்று நீவிர் கருதுமின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பிண்டி பாலரு மண்டைகொ டேரரும் பீலிகொண் டுழல்வாரும்
கண்ட நூலருங் கடுந்தொழி லாளாருங் கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப் பரவுதல் செய்வோமே.

பொழிப்புரை :

மாவுக்கஞ்சி உண்டு தம்மைப் பசியிலிருந்து காப் பவரும் , மண்டை என்னும் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்பவரும் , பீலிகொண்டு உழல்வோரும் , கண்டநூல்களை வேதங் களாகக் கொண்டு கூறுவோரும் , கடுந்தொழில்புரிவோரும் ஆகிய சமணர் புத்தர் ஆகியோர் புறங்கூறும் பொய்யுரைகளைக் கேளாது மாகாளம் மேவிய பெருமானை முற்பிறவிகளில் நாம் செய்தபாவங் களின் தொடர்ச்சி நீங்கப் பரவுதல் செய்வோம் .

குறிப்புரை :

பிண்டிபாலர் - தலையிலே பீலி கட்டப்பட்டு , எறி கின்ற படையான பிண்டிபாலத்தை ஏந்திய ஒருவகைச் சமணர் , ` பெருவலியதனை நோனான் பிண்டிபாலத்தை யேந்தி ` சிந்தா . 2269. என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் எழுதியதைக் காண்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

மாறு தன்னொடு மண்மிசை யில்லது வருபுனன் மாகாளத்
தீறு மாதியு மாகிய சோதியை யேறமர் பெருமானை
நாறு பூம்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன தமிழ்மாலை
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங் குற்றங்கள் குறுகாவே.

பொழிப்புரை :

இவ்வுலகில் தன்னொடு ஒப்புக்கூறத்தக்க தலம் ஒன்றும் இல்லாத மாகாளத்தில் உறையும் ஆதியும் அந்தமும் இல்லாத சோதியை , விடை ஏறும் பெருமானை , ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய தமிழ்மாலையைக் கூறி வழிபடுவோரையும் , கேட்போரையும் குற்றங்கள் குறுகா .

குறிப்புரை :

மண்மிசை தன்னொடு மாறு இல்லது - இப்பூமியில் தன்னுடன் ஒப்புக்கூறத் தக்கது வேறு யாதும் இல்லாதது . ஈறும் ஆதியும் - அநாதி நித்தமுத்த சுத்த சித்துருவாகிய பரசிவம் உயிர்கட்கு அருளற்பொருட்டு ஆதியும் அந்தமும் ஆகி உபகரித்தல் குறித்தது , ` ஆதியும் அந்தமும் ஆயினார் ` ( திருவாசகம் 214.) இறைவன் ஏறுவதால் ஏறு எனப் பெயர்பெற்றது எனல் இதுபோலும் இடங்களில் பொருந்துவதே .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

பொடிகொண் மேனிவெண் ணூலினர் தோலினர் புலியுரி யதளாடை
கொடிகொ ளேற்றினர் மணிகிணி னெனவரு குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.

பொழிப்புரை :

திருநீறணிந்த மேனியராய் , வெண்ணூல் அணிந் தவராய் , புலித்தோலுடுத்தவராய் , யானைத்தோலைப் போர்த்திய வராய் , விடைக்கொடி உடையவராய் , கட்டப்பட்ட மணிகள் கிணின் என ஒலிக்கக் , கால்களில் சுழல் சிலம்பு ஆகியன ஒலிக்க மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தைத் தம் முடிசாய்த்து அடிகளில் வீழ்ந்து வணங்கும் அடியவரைப் பழ வினைகள் தொடரா .

குறிப்புரை :

கடிக்குளத்தில் எழுந்தருளிய கற்பகத்தைத் தலை சாய்த்துத் திருவடியை வணங்கும் அடியார்களை வினைகள் சூழமாட்டா . கற்பகம் - இத்தலத்தில் இறைவன் திருநாமம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

விண்க ளார்தொழும் விளக்கினைத் துளக்கிலா விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித் தன்பரா யின்புறும் வள்ளலை மருவித்தம்
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் துறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே.

பொழிப்புரை :

தேவர்கள் தொழும் திருவிளக்கை , தளர்ச்சியுறாத விகிர்தனை , விழாக்கள் பலவும் நிகழ்த்தும் மண்ணுலகில் உள்ளார் துதித்து அன்புடையவர்களாய் மகிழும் வள்ளலை , சென்றடைந்து தம் கண்களாரக் கண்டு மகிழும் நம் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை , பண்களோடு பாடல்களைப் பாடிப் போற்றுவார் கேடிலர் . பழியிலர் அவரைப் புகழ்வந்தடையும் .

குறிப்புரை :

விண்ணோர் தொழும் விளக்கு . துளக்கு - தளர்ச்சி . விகிர்தன் - முரணுறுசெயலினன் . திருவிழாக்கள் நிறைந்த மண்ணுலகில் வாழ்வோர் அன்பராகிப் பேரின்பம்பெற ஈந்தருளும் வள்ளல் . அவ்வள்ளலைச் சேர்ந்து கண்ணாரக்கண்டு பண்ணாரப் பாடிப் பணிவார் கேடும் பழியும் இலராவர் , புகழ் உளராவர் . தரிசனமும் கீதமும் திருந்தவும் முற்றவும்செய்தால் எய்தும்பயன்கள் உணர்த்தப்பட்டன .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது புலியத ளழனாகம்
தங்க மங்கையைப் பாகம துடையவர் தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் துறைதரு கற்பகத்தை
எங்கு மேத்திநின் றின்புறு மடியரை யிடும்பைவந் தடையாவே.

பொழிப்புரை :

சினந்துவந்த நல்ல யானையின் தோலைப் போர்த்து , புலித்தோலை உடுத்து , கொடிய பாம்பு திருமேனியில் விளையாட , உமை நங்கையைப் பாகமாகக் கொண்டு , தழல் போன்ற சிவந்த திருமேனியராய்க் கங்கை சேர்ந்த சடையினராய் விளங்கும் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை எவ்விடத்தும் ஏத்தி நின்று இன்புறும் அடியாரைத் துன்பம் வந்து அடையமாட்டா .

குறிப்புரை :

கடிக்குளத்து எழுந்தருளும் கற்பகத்தை எவ்விடத்தும் வழிபட்டு இன்பத்தை அடையும் அடியார்களை இடும்பைகள் வந்து அடையமாட்டா .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

நீர்கொ ணீள்சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப் பசும்பொனை விசும்பாரும்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகந்தன்னைச்
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.

பொழிப்புரை :

கங்கைதங்கிய நீண்ட சடைமுடியினனை , முத்துக்களின் கொத்தாய் விளங்குவோனை , உலகில் பல இடங் களிலும் உள்ள மக்கள் வந்து தொழும் பவளத்தை , பசும் பொன்னை , வானளாவிய மேகங்கள் தங்கியவாய் விளங்கும் அழகிய பொழில்கள் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க அருட் செல்வங்களை ஏத்த வல்லவர்களின் வினைகள் தேய்வது திண்ணம் .

குறிப்புரை :

திருக்கடிக்குளத்தில் எழுந்தருளும் கற்பகத்தின் செல்வங்களைப் புகழவல்லவருடைய வினைகள் தேய்ந்தொழிவது உறுதி . செல்வங்கள் :- ` அவளால்வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை யெல்லாம் `. ( சித்தியார் 89).

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு துன்னிய தழனாகம்
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல கொண்டடி யவர்போற்றக்
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் துறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையொ டுளமகிழ்ந் துரைப்பவர் விதியுடை யவர்தாமே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்த சடையினனும் , கொடிய பாம்பினை மதியோடு பகை நீக்கிப் பொருத்திவைத்த முடியினனும் , அரும்புகளையும் மகரந்தம் விரிந்து அலர்ந்த மலர்களையும் கொண்டு அடியவர் போற்ற , கரும்புகளும் உயர்ந்து வளர்ந்த கொடிகளும் பின்னி வளர்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தை அன்போடு விரும்பி உளம்மகிழ்ந்து போற்றுபவர் நல்லூழ் உடையவர் ஆவர் .

குறிப்புரை :

அரும்புகள் தாது அவிழ்ந்து விரிந்த பல மலர்களைக் கொண்டு அடியவர்கள் வழிபடக் கடிக்குளத்து எழுந்தருளும் கற்பகம் . கரும்புகளும் மேக மண்டலத்தை அளாவிய கொடிகளும் பின்னிய கடிக்குளம் . மனமகிழ்ந்து தோத்திரம் சொல்லும் அடியவர்கள் செல்வ முடையவராவார்கள் , விதி - செல்வம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

மாதி லங்கிய பாகத்தன் மதியமொ டலைபுன லழனாகம்
போதி லங்கிய கொன்றையு மத்தமும் புரிசடைக் கழகாகக்
காதி லங்கிய குழையினன் கடிக்குளத் துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை பற்றறக் கெடுமன்றே.

பொழிப்புரை :

உமைமாது விளங்கும் பாகத்தினனும் , திங்கள் கங்கை , சினம் மிக்க பாம்பு , கொன்றைமலர் , ஊமத்தை மலர் ஆகியன வற்றை வளைந்த சடையின் மேல் , அழகுறச் சூடியவனும் காதிலங்கு குழையினனும் , ஆகிய கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் பாதங் களைக் கைகளால் தொழுது ஏத்த வல்லார் வினைகள் அடியோடு கெடும் .

குறிப்புரை :

கற்பகத்தின் திருவடியைக் கைகூப்பித் தொழவல்லவர் வினைகள் முழுதும் கெட்டொழியும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம்பல குளிர்பொய்கை
புலவு புள்ளின மன்னங்க ளாலிடும் பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் துறையுங்கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை நிற்ககில் லாதானே.

பொழிப்புரை :

விளங்கும் அழகினை உடையனவான கொடிகள் கட்டப்பட்ட உயரிய மாடவீடுகளையும் மகளிர் குழாம் நீராடும் குளிர்ந்த பொய்கைகளையும் உடையதும் புலாலுண்ணும் நாரை முதலிய பறவைகளும் அன்னங்களும் விளையாடும் சிறப்பினதுமான கடிக்குளத்தில் மலர்கள் பொருந்திய கூந்தலினளாகிய உமையம்மை யோடு கூடிக் கண்ணிமிலைந்து விளங்கும் கற்பகத்தைப் புகழ்ந்து போற்றி ஏத்துவார்மேல் வினைநில்லா .

குறிப்புரை :

பூவைசேரும் கூந்தற்கலவையென்பது வாமபாகத்தைக் குறித்தது . கற்பகத்தை ஏத்துவார்பால் வினைகள் நிற்கமாட்டா .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேன் மதியிலா மையிலோடி
எடுத்த லும்முடி தோள்கர நெரிந்திற விறையவன் விரலூன்றக்
கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக் கடிக்குளந் தனின்மேவிக்
கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் குணமுடை யவர்தாமே.

பொழிப்புரை :

பகைவரைக் கொல்லும் வாட்படையை உடைய இராவணன் அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த அளவில் அவனுடைய முடி தோள் கை ஆகியன நெரிந்து அழியுமாறு சிவபிரான் கால் விரலை ஊன்றிய அளவில் , அவன் தன் குற்றத்திற்கு வருந்தி கை கூப்பி அலற , பேரருள் கொடுத்த ஆனந்தக் கூத்தனைக் கடிக்குளத்தை அடைந்து ஏத்துபவர் நல்ல குணமுடையவர் ஆவர் .

குறிப்புரை :

மடுத்த - ( பகைவர் உடம்பின் ) உட்புகுத்திய . இற - முரிய . அருட்கூத்தன் - ஞானநாடகமாடும்பிரான் . குணம் - எண்குணம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

நீரினார் கடற் றுயின்றவ னயனொடு நிகழடி முடிகாணார்
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் பவளத்தின் படியாகிக்
காரினார் பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தின்றன்
சீரினார்கழ லேத்தவல் லார்களைத் தீவினை யடையாவே.

பொழிப்புரை :

நீர் நிறைந்த கடலிடைத் துயிலும் திருமாலும் , பிரமனும் அடிமுடி காணாராய் எய்த்தகாலத்து , மண்ணுலகில் அடித்தளம் , விசும்பின் எல்லைவரை எழுந்து பவளம் போன்றநிறம் உடையவராய்த் தோன்றி , மேகம்தவழும் பொழில் சூழ்ந்த கடிக் குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க திருவடிகளை ஏத்த வல்லார்களைத் தீவினை அடையா .

குறிப்புரை :

கடல் துயின்றவன் - பாற்கடலில் யோக நித்திரை செய்யும் திருமால் . விசும்பு - ஆகாயம் . படி - உருவம் . கற்பகத்தின் கழல் ஏத்தவல்லவர்களுக்கு வினை இல்லை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் குறியினி னெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் துறைதரு மெம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி யெளிதாமே.

பொழிப்புரை :

குண்டர்களாகிய சாக்கியர் சமணர்கள் ஆகியோர் தாம் கூறும் குறிகளின் நெறிநில்லாமிண்டர்கள் . அவர்தம் பொய் யுரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதாதீர் . விடம் உண்டகண்டரும் திரிபுண்டரம் அணிந்த நன்மேனியரும் ஆகிய கடிக் குளத்தில் உறையும் எம் ஈசர்தம் தொண்டர் தொண்டரைத் தொழுது அடிபணிமின் . தூய சிவநெறி எளிதாம் .

குறிப்புரை :

குறி - குறிக்கோள் . தொண்டர் தொண்டர் - தொண்டர்க்குத் தொண்டர் . தூநெறி - திருநெறி , சிவநெறி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

தனமலி புகழ் தயங்குபூந் தராயவர் மன்னன்நற் சம்பந்தன்
மனமலி புகழ் வண்டமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடும்
கனமலி கட லோதம் வந்துலவிய கடிக்குளத் தமர்வானை
இனம லிந்திசை பாடவல் லார்கள்போ யிறைவனோ டுறைவாரே.

பொழிப்புரை :

செல்வவளம் மிக்க புகழ் விளங்கும் பூந்தராய் மக்களின் மன்னனாகத்திகழும் ஞானசம்பந்தன் மனநிறைவோடு புகழ்ந்துரைத்த வண்டமிழ் மாலைகள் மீது அன்பு கொண்டு , மகிழ் வோடு , கடல்ஓதம் வந்துலவும் கடிக்குளத்து அமரும் இறைவனை அடியவர்களோடு கூடி அவற்றை இசையோடு பாடவல்லார்கள் போய் இறைவனோடு உறைவார்கள் .

குறிப்புரை :

செல்வமும் மிக்க புகழும். மாலது - அன்பு. கனம் - மேகம். இனம் - அடியார்கூட்டம்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

மின்னு லாவிய சடையினர் விடையினர் மிளிர்தரு மரவோடும்
பன்னு லாவிய மறையொலி நாவினர் கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே.

பொழிப்புரை :

மின்னலைப்போல ஒளிவிடும் சடையினரும் , விடைஊர்தியரும் , அரவாபரணரும் இசையமைப்புடைய வேதங்களை ஓதிய நாவினரும் , நீலகண்டரும் பொன்போன்ற கொன்றைத் தாரினரும் ஆகிய புகழ்மிக்க கீழ்வேளூர் இறைவரை நினைக்கும் நெஞ்சினர்க்கு வினைகள் நீங்க வீடு கிட்டும் .

குறிப்புரை :

உன் - உன்னுதல் . திருக்கீழ்வேளூரை நினைப்பவர்க்கு வினையில்லை , வீடுண்டு என்று அருளியது , இவ்வூர்ப்பெருமான் திருப்பெயர் கேடிலியப்பர் என்பதன் உண்மைப் பொருளை உலகோர்க்கு உணர்த்துவதாகும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

நீரு லாவிய சடையிடை யரவொடு மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யவளொடு மணிசிலம் பவையார்க்க
ஏரு லாவிய விறைவன துறைவிட மெழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் பிணியொடு வினைபோமே.

பொழிப்புரை :

கங்கை சூடிய சடையின்கண் , அரவு , மதி , தலைமாலை ஆகியவற்றை அணிந்து , கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடி அழகிய சிலம்புகள் ஆர்க்க விளங்கும் இறைவனது உறைவிடம் கீழ்வேளூராகும் . இத்தலத்தைச் சிந்திப்பவர் கட்குப் பிணிகளும் வினைகளும் போகும் .

குறிப்புரை :

திருக்கீழ்வேளூரைச் சிந்திப்பவர்கட்குப் பிணிகளும் வினைகளும் போம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு வெள்ளெருக் கலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோ டாடலர் பயில்வுறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையா ருலகினி லுள்ளாரே.

பொழிப்புரை :

வெள்ளிய நிலவைத்தரும் பிறையை அணிந்த விரி சடையில் அரவு , வெள்ளெருக்க மலர் ஊமத்தை ஆகியவற்றை அணிந்து , இசைப்பாடல்களைப் பாடியும் ஆடியும் மகிழ்வுறும் மக்கள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்கும் பெண் ணொருபாகனை உள்கும் பயிற்சி உடையார் உலகில் நிலை பெற்றிருப்பர் .

குறிப்புரை :

கீழ்வேளூரில் பெருந்திருக்கோவிலில் எழுந்தருளிய அம்மையப்பரை உள்கும் பயிற்சி உடையார் எவ்வுலகில் இருப்பினும் சிவலோகத்தில் இருப்பவரேயாவர் . ` நரகம்புகினும் எள்ளேன் திருவருளாலே யிருக்கப்பெறின் இறைவா ! உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது எங்கள் உத்தமனே ` திருவாசகம் . 6-2.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் தொங்கவைத் தழகாக
நாடு லாவிய பலிகொளு நாதனார் நலமிகு கீழ்வேளூர்ப்
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் கோயிலுட் பிரியாது
நீடு லாவிய நிமலனைப் பணிபவர் நிலைமிகப் பெறுவாரே.

பொழிப்புரை :

பெருமைமிக்க கங்கையை முடியில் சூடி , மிக அழகாக நாடு முழுதும் சென்று பலியேற்கும் நாதரும் நன்மைகள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் வலிமைமிக்க பெருமை யோடு திகழ்பவருமாகிய சிவபிரானை இடைவிடாது வழிபடுவோர் நிலையான பேரின்ப வாழ்வு பெறுவர் .

குறிப்புரை :

சேடு - பெருமை . பீடு - வலிமை . நீடு - அழியாமை . கீழ்வேளூர்ப் பெருமானார் பெருந்திருக்கோயிலை வழிபடுவோர் நிலைத்த பேரின்பவாழ்வு மிகப் பெறுவர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவ ரினிதியன் மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் நிமலனை நினைவோடும்
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.

பொழிப்புரை :

நெருக்கமாக நீண்டு வளர்ந்த சடையில் திங்கள் , பிரம கபாலம் , கயிறு , மணிகள் , தலைமாலை முதலியவற்றை அணிந்து , மன்றத்தில் மாதவத்தோர் உலாவும் சிறப்புமிக்க கீழ் வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் விளங்கும் நிமலனை நினைவோடு சென்று ஏத்த வல்லவரின் வினைகள் தேய்வது திண்ணம் .

குறிப்புரை :

நகுதலை - பிரமகபாலம் . வடம் - கயிறு . சிரம் - தலைகள் . திருக்கோயில் மன்றத்துள் மாதவத்தோர் உலாவிய சிறப்பு உணர்த்திற்று . சிரமாலையையுடையவரும் மன்றுள் நடமாடியவரும் ஆகிய மாதவர் எனச் சிவபெருமானைச் குறித்ததாயின் நிமலன் என்னும் ஒருமைக்கு ஏலாது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் கூத்தனை மகிழ்ந்துள்கித்
தொத்து லாவிய நூலணி மார்பினர் தொழுதெழு கீழ்வேளூர்ப்
பித்து லாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக் கோயின்மன்னு
முத்து லாவிய வித்தினை யேத்துமின் முடுகிய விடர்போமே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் அணிந்துள்ள சடைமுடியனும் , கூத்தனும் , நூலணிந்த அந்தணர் பக்தர்கள் ஆகியோர் நினைந்துருகி வழிபடும் கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்குபவனும் , முத்துப் போல்பவனும் எல்லாவற்றுக்கும் வித்தாகத் திகழ்பவனும் ஆகிய பெருமானை ஏத்துமின் . வலிந்துவரும் இடர்போகும் .

குறிப்புரை :

கொத்து - பூங்கொத்துக்கள் . தொத்து - கூடுதல் . பித்து - திருவடிப்பற்று . முத்து ...... வித்து - ` முத்தினைப் பவளத்தை ` ` வித்தாம் முளையாகும் வேரேதானாம் `.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் வன்னியுந் துன்னாரும்
கறைநி லாவிய கண்டரெண் டோளினர் காதல்செய் கீழ்வேளூர்
மறைநி லாவிய வந்தணர்மலிதரு பெருந்திருக் கோயின்மன்னு
நிறைநி லாவிய வீசனை நேசத்தால் நினைபவர் வினைபோமே.

பொழிப்புரை :

பிறையணிந்த சடைமுடியில் கங்கை , வன்னி ஆகியவற்றை அணிந்தவனும் , கறைக் கண்டனும் , எண்தோளினனும் ஆகிய இறைவன் விரும்புவதும் மறைவல்ல அந்தணர் நிறைந்ததும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் குறைவிலா நிறைவின னாய் விளங்கும் ஈசனை அன்போடு நினைபவர் வினைகள் போகும் .

குறிப்புரை :

` மறைநிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக் கோயில் ` என்றதால் , அக்காலத்து வேதியர் சிறப்பும் அவர்க்குள்ள கோயில் வாழ்வும் புலப்படும் . நிறை - ` குறைவிலா நிறைவு `. அவ்வத் தேவரை அவ்வப்புவனத்தில் அவரவர்க்கு உரிய தொழிலில் நிறுத்து வதுமாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

மலைநி லாவிய மைந்தன்அம் மலையினை யெடுத்தலு மரக்கன்றன்
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான் உறைதரு கீழ்வேளூர்க்
கலைநி லாவிய நாவினர்கா தல்செய் பெருந்திருக் கோயிலுள்
நிலைநி லாவிய வீசனை நேசத்தா னினையவல் வினைபோமே.

பொழிப்புரை :

திருக்கயிலாய மலையில் விளங்கும் பெருவீரனும் , அம்மலையை எடுத்த இராவணன் தலை நெரிந்து அலறக் கால் விரலை ஊன்றியவனும் ஆகிய சிவபெருமான் உறைவதும் , கலைகள் அனைத்தையும் ஓதிய நாவினர் அன்பு செய்வதும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந் திருக்கோயிலில் நிலைபெற்று விளங்கும் ஈசனை நினைய வல்வினை போகும் .

குறிப்புரை :

மைந்தன் - வீரன் , அழகன் , வலியன் , மலைநிலாவிய மைந்தன் - மலைபோலுந் தோற்றமுடைய ( ஞான ) வீரன் . பத்துத் தலை களும் என்னத் ` தலையெலாம் ` என்று குறித்தருளினார் . தலை நிலாவிய நாவினர் - வேதாகமாங்க பிராணேதிகாசாதி சகல கலைகளு முணர்ந்த நாவினர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

மஞ்சு லாவிய கடற்கிடந் தவனொடு மலரவன் காண்பொண்ணாப்
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி பாகனைப் பரிவொடும்
செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் நடலைகள் நணுகாவே.

பொழிப்புரை :

மேகங்கள் உலாவும் கடலில் துயில்கொள்ளும் திருமாலும் , தாமரைமலரில் உறையும் நான்முகனும் காண இயலாதவனும் , பஞ்சு போன்ற மென்மையான அடிகளை உடைய பார்வதி பாகனும் , செஞ்சொற் புலவோர் பரவும் புகழ்மிக்க கீழ் வேளூரில் விளங்கும் நஞ்சணிந்த கண்டனும் ஆகிய பெருமானைச் சென்றடையுங்கள் . துன்பங்கள் நம்மை அடையா .

குறிப்புரை :

கடல் - பாற்கடல் . காண்பு - பார்வை . ` காண்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும் ` ` கண்கள் காண்பு ஒழிந்து `. 2.97-5.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

சீறு லாவிய தலையினர் நிலையிலா வமணர்கள் சீவரார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில் பெருந்திருக் கோயின்மன்னு
பேறு லாவிய பெருமையன் றிருவடி பேணுமின் தவமாமே.

பொழிப்புரை :

மழித்த தலையினரும் , நிலையற்ற சொல் செயல் உடையவரும் துவரூட்டிய ஆடையரும் ஆகிய சமண புத்தர்களின் பெருமையற்ற சொற்களை விரும்பாதீர் ; வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விடைக்கொடி யனாய் விளங்குபவனும் அந்தமில்லாத ஆனந்தத்தை அருளும் பெரியவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வழிபடுங்கள் . அதுவே சிறந்த தவமாகும் .

குறிப்புரை :

சீறு - முதனிலைத் தொழிலாகுபெயர் . சீவரார் - துவரூட்டிய சீலையர் ( தேரர் ). வீறு - பெருமை , வெற்றியுமாம் . பேறு - ஆன்மாக்களுக்குரிய பேறு ( சிவானந்தம் ). பேறு உலாவிய பெருமையன் . ஆனந்தம் நிகழும் பெருமையையுடைய பரமசிவன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை யழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் கோயிலெம் பெருமானை
இருண்ட மேதியி னினமிகு வயன்மல்கு புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி பெறுவது திடமாமே.

பொழிப்புரை :

கடைசுருண்ட சடையினனும் , இளைஞனும் அழகிய கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விளங்குபவனும் ஆகிய பெருமான் மீது கரிய எருமைகள் மிக்கதும் , வயல்கள் நிறைந்தது மாகிய புகலியின்மன்னன் ஞானசம்பந்தன் அருளிய தெளிந்த பாடல் களை ஓதுபவர் சிவகதி பெறுதல் உறுதி .

குறிப்புரை :

` குருண்டவார் குழற்சடைக் குழகன் ` - ` குருள்குஞ்சி ` ( தி .2 ப . 116 பா .4.) குழகன் - இளையன் ; அழகன் . புகலி - சீகாழி . மன் - இறைவன் . தெருண்ட - தெளிந்த .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே.

பொழிப்புரை :

முழுமையான மணிகளும் , முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும் , அன்பு செய்தும் , பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத் தலால் , கடல் சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில் , நெஞ்சே ! நீ ! எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய் ?

குறிப்புரை :

நெஞ்சமே ! நீ ( இவ் ) வையத்து , திருவலஞ்சுழி வாணனை வாயாரப்பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே என்ன புண்ணியஞ் செய்தனை ? புண்ணியஞ் செய்ததா அன்றா என்னும் ஐயம் இல்லை . பல்வகைப் புண்ணியத்துள் இவ்வழி பாட்டிற்குரிய புண்ணியம் யாதென்பதே ஐயம் . ` நல்வினைப் பயன் ` என்று கொண்ட முடிவே அதற்குச் சான்றாயிற்று . அந்நல்வினையுள் யாது என்பது கருத்து . இத்திருமுறையுள் 79 ஆவது திருப்பதிகத்துள் வரும் பல திருப்பாடலுள் ` பேதைமார்போலநீ வெள்கினாயே ` ` மற வல்நீ மார்க்கமே நண்ணினாய் ` என்றுள்ள சிறப்பையும் அவ்வுண்மையைக் குறித்தருளக் கருதிய ஸ்ரீ சேக்கிழார் பெருமானார் , ` அவ மிலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யுமாறு அறிதி ` என்று அருளியதையும் உணர்ந்தால் , நல்வினைபற்றிய ஐயம் இல்லாமையும் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவுள்ளத்தை நாம் உணரத்தகும் முறைமையும் தெளிவாகும் . வாயாரப் பன்னுதல் பாடுதல் - வாக்கின் வினை . ஆதரித்தல் - மனத்தின்றொழில் . ஏத்துதல் - காயத்தின் செயல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய விறைவனை யுலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையொர் பங்கனை வலஞ்சுழி யிடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ டினிதிருந் தமையாலே.

பொழிப்புரை :

கடலிடைத்தோன்றிய நஞ்சை உண்டு அமரர் களைக் காத்தருளிய இறைவனை , உமைகேள்வனை , இவ்வுலகில் வலஞ்சுழியை இடமாகக் கொண்டு விளங்கும் இறைவனை வணங்கி அவ்விறைவனின் உண்மைத் தொண்டு புரியும் தொண்டர்களோடு கூடி உறையும் பேறு பெற்றதால் நிச்சயம் நம் வினைகள் விண்டொழிந் தனவாகும் .

குறிப்புரை :

இனி திருந்தமையாலே விண்டொழிந்தன வல்வினை . விண்டு - நீங்கி . கடல் - பாற்கடல் . இறைஞ்சு வானவர் - வழிபடும் விண்ணவர் . தாங்கிய - நஞ்சுண்டு காத்தருளிய . ` வண்டார் குழலி ` - தேவியார் திருப்பெயர் . அவை கோட்டாறு , கோளிலி , பிரமபுரம் , மருகல் என்பவை . மெய்த்தொழில் - உண்மைத் தொண்டு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

திருந்த லார்புரந் தீயெழச் செறுவன விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர மாவன வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயக னிமையவ ரேத்திய விணையடித் தலந்தானே.

பொழிப்புரை :

திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு எழுந் தருளியுள்ளவனும் , இமையவர் ஏத்தும் பெருமையாளனும் ஆகிய பெருமான் திருவடிகள் பகைவரான அசுரர்களின் முப்புரங்களைத் தீஎழச் செய்து அழித்தன . அடியவர்களை அன்புடன் காப்பன . பக்தி செய்வார்க்குக் காட்சி தருவன . உன்மத்தம் முதலான நோய்களுக்கு மருந்தும் மந்திரமும் ஆவன .

குறிப்புரை :

திருந்தலார் - பகைவர் . விறல் - பெருமை , வெற்றி . பரிந்து - இரங்கி . பத்தி - சிவபக்தி . ` பத்திவலையிற் படுவோன் காண்க `. மத்தம் - மயக்கம் . பிணியும் நோயும் மயக்கத்தால் வருவனவே . தெளிவு நோயை விளைவிக்காது . இணையடித் தலந்தான் புரம்செறுவன , அடியாரைக்காப்பன பத்தியில் வருவன . நோய்க்கு மருந்தாவன , மந்திரமாவன என்க . அப்பர் அருளிய ` சிந்திப்பரியன ` என்பது முதலிய இருபது திருவிருத்தங்களையும் இங்கு எண்ணுக .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி யிடமகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய வற்புத மறியோமே.

பொழிப்புரை :

நீலகண்டரும் , செம்மேனியரும் அன்று ஆலின் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் உபதேசித்தவரும் வேதங்களை அருளிய வரும் ஆகிய இறைவர் திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு சிலம்பு ஆர்க்க நின்று ஆடும் அற்புதத்தை யாம் இன்னதென அறியேம் .

குறிப்புரை :

கறை - நஞ்சாலாய கறுப்பு . கதிர் - சூரியன் . அறத் திறம் - தருமங்களின் வகைகளும் வேதாகம நூற்பொருளின் கூறுபாடும் . கழல் சிலம்பு - உம்மைத்தொகை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலா மெரியுரு வொருபாகம்
பெண்ண ராணெனத் தெரிவரும் வடிவினர் பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலு மெனைப்பல வியம்புவ ரிணையடி தொழுவாரே.

பொழிப்புரை :

சிவபிரான் மண் , விண் முதலான ஐம்பூதங்களின் வடிவினராயிருப்பவர் . பெண்ணும் , ஆணும் கலந்த திருவுருவினர் . கடற் பவளம்போலும் திருமேனியர் . வலஞ்சுழியில் நீங்காது உறைபவர் . தம்மை வழிபடும் அடியவர்களின் மனத்தில் புகுந்து எண்ணத்தில் நிறைபவர் . அவர்தம் இணையடி தொழுபவர் இவ்வாறானபல பெருமைகளை இயம்புவர் .

குறிப்புரை :

சிவபிரான் ஐம்பெரும் பூதரூபமாக உள்ளவர் . அட்ட மூர்த்தங்களுள் முதல் ஐந்து அம்மையப்பர் ; அர்த்தநாரீச்சுவரர் . பவள வண்ணர் . நீங்காது வாழ்பவர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் மேனியர் மடமாதர்
இருவ ராதரிப் பார்பல பூதமும் பேய்களு மடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே வரிவளை கவர்ந்தாரே.

பொழிப்புரை :

அகப்பொருட்டுறை ; தலைவி கூற்று . ஒருவராலும் உவமிக்க ஒண்ணாததொரு திருமேனியர் . உமை , கங்கை இருவர் பால் அன்பு செய்பவர் . பூதங்களும் பேய்களும் பாடி ஆட வெண்டலையைக் கையில் ஏந்தி வீடுகள் தோறும் பலி ஏற்க வருபவர் . வலஞ்சுழியில் வாழும் அவரே என் வரிவளைகளைக்கவர்ந்தவர் .

குறிப்புரை :

இறைவன் திருமேனிக்கு ஒப்புரைக்க வேறு யாதும் இல்லாமையால் ` ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர் ` என்க . ` இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே ( அப்பர் ) அருவராதது - அருவருக் காதது . முறுமுறுப்பு , சுறுசுறுப்பு , கிறுகிறுப்பு முதலியவற்றைப்போல ` அறுவறுப்பு ` என்பதும் உண்டு . மனத்தை அறுப்பதுபற்றிய பெயர் , அஃது இடையெழுத்தாக மருவிற்று . ` அஞ்சனம்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க் குஞ்சி வெளுத்துடலம் கோணாமுன் நெஞ்சமே ..... சாய்க்காடு கைதொழு நீ சார்ந்து ` ( க்ஷேத்திரவெண்பா . 15.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்று மியம்புவ ரிமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்தமக் குள்ளன வறிகிலோம் வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனிற் றலைப்பட லாமென்று சேயிழை தளர்வாமே.

பொழிப்புரை :

அகப்பொருட்டுறை ; தோழி கூற்று . குன்றியூர் குடமூக்கு முதலிய தலங்களைத் தமது ஊர் எனச்சொல்லி வருபவர் . இமையவர் அவர்தம் ஏவலைக் கேட்கின்றனர் . மேற்குறித்த ஊர் களைத் தவிர அவர் வாழும் ஊர் யாதென அறிகிலோம் . பல ஊர் களுக்கும் உரிய அவரைத் திருவலஞ்சுழி சென்றால் சேரலாம் என்று கூறித் தலைவி தளர்கின்றாள் .

குறிப்புரை :

இதிற் குறித்த குன்றியூர் எங்குளதோ ? தெரிந்திலது , ` வலம் என்றதால் ` இடம் ` இருத்தல் வேண்டும் . தலைப்படல் - சேர்தல் . ` தம்மிற்றலைப்பட்டார் ` ( திருக்களிறு . 2.) சேயிழை - தலைவி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே.

பொழிப்புரை :

குயில் மொழியும் கொடியிடையும் மயிலின் சாயலும் உடைய உமை வெருவக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனின் இருபது தோள்களையும் ஊன்றி அடர்த்து அம்மையோடு உடனுறையும் வலஞ்சுழி எம்மானைப் பாடிப் பழக வல்லவர் பரகதி பெறுவர் . அல்லவர் காணார் .

குறிப்புரை :

கொடியிடையும் மயிலை நேரொத்த சாயலும் உமா தேவியாரைக் குறித்தன . வல்லவர் காண்பவர் . அல்லவர்காணார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

அழல தோம்பிய வலர்மிசை யண்ணலு மரவணைத் துயின்றானும்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு துன்பங்கள் களைவாரே.

பொழிப்புரை :

நான்முகனும் , திருமாலும் திருமுடியையும் , திரு வடிகளையும் காண இயலாதவாறு சோதிப்பிழம்பாய் நின்றவர் சிவபெருமான் . மழலைபோல இனிய இசைதரும் வீணையைக் கையில் ஏந்தியவர் . அவர் எழுந்தருளிய திருவலஞ்சுழியை அடை வார் தொல்வினை களும் துன்பங்களும் நீங்கப்பெறுவர் .

குறிப்புரை :

அழலது - தீ . ` கற்றாங்கு எரியோம்பிக் கலியைவாராமே செற்றார் `. அண்ணல் - பிரமன் . அரவணை - பாம்பாகிய படுக்கை . துயின்றான் - திருமால் . ஆயவர் - சிவபிரான் . மழலை வீணையர் - ` மிக நல்ல வீணைதடவி `. பாதத்தால் சுழலும் மாந்தர்கள் - திருக் கோயிலை வலம் வரும் அன்பர்கள் . தொல்வினை - சஞ்சித கர்மம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடி லளவறுப் பொண்ணாதே.

பொழிப்புரை :

அறிவில்லாத சமணரும் சாக்கியரும் தவம் புரிந்து கொண்டே அவம்பல செய்கின்றனர் . அவர் கூறும் நெறியலா உரைகளைக் கேளாதீர் . வலஞ்சுழி இறைவனைப் பிரியாத அடியவர் பெறும் கதிகளைப் பேசினால் வரும் பயன்கள் அளத்தற்கு அரியனவாகும் .

குறிப்புரை :

தவம் புரிந்து அவம் செய்தல் - மேற்கொண்ட தவத் திற்கு ஒவ்வாத பாவச்செய்கையை உடையராதல் . நெறி அல்லாத வற்றைப் போதிப்பர் . தேறல்மின் - தெளியத்தக்கன அல்ல என்று தெளி யாது ஒழிமின் . பிறிவு இல்லாதவர் :- இடைவிடாமல் வழிபடும் அடியர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே.

பொழிப்புரை :

மாதொருகூறனை , திருவலஞ்சுழியில் விளங்கும் மருந்து போல்வானை , காழி ஞானசம்பந்தன் பாடி ஏத்திய இத் திருப்பதிகத்தை அன்போடு இசைகூட்டிப் பாடுவார் அதனைக் கேட்பார் ஆகிய அடியவர்களை வினைகள் சாரா . இம்மை , மறுமை எப்போதும் வருத்தம் வந்து அவர்களை அணுகா .

குறிப்புரை :

கூறன் - பாகத்தன் . மருந்து - பிறவிநோய் தீர்க்கும் மருந்து . தீராநோய் தீர்த்தருளவல்ல மருந்து . ` வருந்துயரந் தீர்க்கும் மருந்து ` ` காழிநாதன் ` ` வேதியன் ` என்பன ஆசிரியர் சிறப்புணர்த்தின . நவிற்றிய - திருவருள் நவிலச்செய்த ` நித்தம் நோய்கள் வாதியா , ( தி .2 ப .79 பா .4.) வாதித்தல் - வருத்துதல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

விருது குன்றமா மேருவில் நாணர வாஅனல் எரிஅம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளும்
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம்
கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.

பொழிப்புரை :

வெற்றிக்கு அடையாளமாக , பெரிய மேரு மலையை வில்லாகக் கொண்டு அரவை நாணாகப்பூட்டி அனல் எரியை அம்பாகக் கொண்டு பொருது முப்புரங்களை எரித்த சிவ பிரான் பற்றிநின்று உறையும் பதியாக அடியவர் எந்நாளும் கருதுகின்ற ஊர் , ஆரவாரிக்கின்ற கடலால் சூழப்பட்ட , மணம் கமழும் பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில் பலரும் கருதி வழிபாடு செய்யாநின்ற திருக்கேதீச்சரமாகும் . அதனைக் கைதொழின் கடுவினைகள் நம்மை அடையா .

குறிப்புரை :

விருது - வெற்றி . அடையாளம் மாமேருகுன்றம் வில் ஆ - மகாமேருமலை வில்லாக . மாதோட்டம் என்பது தலப்பெயர் கேதீச்சுரம் என்பது திருக்கோயில் . மகாதுவட்டாபுரம் என்பதன் திரிபன்று . அங்குப்பொழிலணி மாதோட்டம் உளது . இக்கேதீச்சுரத்தில் ` கேது ` இருப்பதை இன்றுங்காணலாம் . இத்தலத்தை வழிபடுவோர் வினைகளும் நோய்களும் தீரப்பெற்றின்புறுவர் என்பது திண்ணம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது விருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் கெடுமிடர் வினைதானே.

பொழிப்புரை :

வீணையை மீட்டிக்கொண்டு பாடுபவர் . பற்பல வான புராண வரலாறுகளைக் கொண்டவர் . எருது உகைத்து அரிய நடனங்களாகிய ஆடல்களைப் புரிபவர் . அமரர் வேண்ட நஞ்சினை உண்டு இருண்ட கண்டத்தினை உடையவர் . அவருக்குரிய இடம் , கரிய கடற்கரையில் உள்ள அழகிய மாதோட்டம் என்னும் ஊரின்கண் விளங்கும் கேடில்லாத கேதீச்சரம் ஆகும் . அதனைத் தொழ இடர்வினை கெடும் .

குறிப்புரை :

சரிதையர் - ஒழுக்கத்தவர் . உகைத்து - செலுத்தி . இருள் - இருண்ட . ஈடம் :- முதல் நீட்சி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் அகந்தொறும் இடுபிச்சைக்
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் உயர்தரு மாதோட்டத்
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் கருவினை யடையாவே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர் . பிறை தவழ் சடையினர் . திருநீற்றை விரும்பிப்பூசி , கழலும் சிலம்பும் ஆர்க்க ஆடுபவர் . பாடுபவர் . உண்ணும் இச்சை உடையவர் போல வீடுகள்தோறும் இடும் பிச்சைக்கு உழல்பவர் . அவ்விறைவர் எழுந் தருளிய உயரிய மாதோட்டத்தில் விளங்கும் கேதீச்சரத்தை அடை பவரை இருவினைகள் அடையா .

குறிப்புரை :

சுண்ணம் - திருவெண்ணீறு . பிச்சைக்கு இச்சை :- ` தந்த துன்றன்னைக் கொண்டதென்றன்னை ` என்றகருத்தும் ஈண்டுப் பொருந்தும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் மறிகடல் மாதோட்டத்
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல் மொய்த்தெழும் வினைபோமே.

பொழிப்புரை :

திருநீறணிந்த திருமேனியர் . புலித்தோலை உடுத்தவர் . விரிந்த கையினில் ஏந்திய கூரிய முத்தலைச்சூலத்தை உடையவர் . முப்புரி நூல் அணிந்தவர் . மறித்துவரும் அலைகளைக் கொண்ட கடல் சூழ்ந்த மாதோட்ட நகரில் எழுந்தருளி விளங்கும் அடிகள் . அவர் விரும்பி எழுந்தருளிய கேதீச்சரத்தை அன்புகொண்ட மனத்தராய் வணங்கும் அடியவர்மேல் பற்றித் திரண்டு வரும் வினைகள் நீங்கிப்போகும் .

குறிப்புரை :

பொடி - திருநீறு . இலைவேல் - முத்தலைச் சூலம் . அடிகள் - சிவபெருமானை . பரிந்த - அன்பு கொண்ட .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

நல்ல ராற்றவும் ஞானநன் குடையர் தம் மடைந்தவர்க் கருளீய
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் மலிகடல் மாதோட்டத்
தெல்லை யில்புக ழெந்தைகே தீச்சரம் இராப்பகல் நினைந்தேத்தி
அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் அன்பராம் அடியாரே.

பொழிப்புரை :

மிகவும் நல்லவர் . ஞானம் நன்கு உடையவர் . தம்மை அடைந்தவர்கட்கு அருளிய வல்லவர் . மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பிறத்தல் இறத்தல் இல்லாதவர் . நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட மாதோட்டத்து எல்லையில்லாத புகழை உடைய எந்தையாகிய அவரது கேதீச்சரத்தை இரவும் பகலும் நினைந்து போற்றித் துன்பம் குற்றம் அற்றவர்களாய் அவ் அரனடியினை தொழும் அன்புடையவரே அடியவர் ஆவர் .

குறிப்புரை :

ஆற்றவும் - மிகவும் . அருள் ஈய வல்லர் . பார்மிசை வான் - மண்ணிலும் விண்ணிலும் . எல்லை - அளவு . அல்லல் - துன்பம் . ஆசு - குற்றம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் பொருந்தவைத் தொருபாகம்
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே தீச்சரம் பிரியாரே.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய நீண்ட சடையின்கண் பெருந்திருவினளாகிய கங்கையை மறைத்து வைத்து , தம் திருமேனி யின் ஒரு பாகமாகிய அழகிய கயல் போலும் கண்ணினள் ஆகிய உமை யம்மைபால் கருணை காட்டும் இயல்பினராகிய இறைவர் வாழைத் தோட்டங்களில் பழுத்த பழங்களை உண்ண மந்திகள் களிப்புற்று மருவிய மாதோட்டத்தில் , பன்றியின் வெண்மையான கொம்பினை அணிந்துள்ள அகன்ற மார்பினராய்க் குடி கொண்டு வாழும் இடமாகக் கொண்டு கேதீச்சரத்தில் பிரியாது உறைகின்றார் .

குறிப்புரை :

பேழை :- பெருமை , ` பேழைப் பெருவயிற்றோடும் புகுந்து என் உளம்பிரியாந் ` (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை 4) பெருந்திரு மகள் - கங்கை . மாழை - அழகு . இங்கு மாதோட்டம் என்பதன் விளக்கம் உளது . கேழல் பன்றி , மருப்பு - கொம்பு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில்
வண்டு பண்செயு மாமலர்ப் பொழின்மஞ்ஞை நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே தீச்சர மதுதானே.

பொழிப்புரை :

முற்காலத்தில் நால்வர்க்கு அறம் உரைத்தருளிப் பல உலகங்களிலும் பிறந்துள்ள உயிர்களின் வாழ்க்கைக்குரிய ஊழை அமைத்தருளிய நாதனார் , கடல் சூழ்ந்த இவ்வுலகிலுள்ளோர் கண்டு கைதொழுமாறு விரும்பி உறையும் கோயில் , வண்டுகள் பண்ணிசைக்கும் , சிறந்த மலர்கள் நிறைந்த பொழில்களில் மயில்கள் நடனமாடும் மாதோட்டத்தின்கண் தொண்டர்கள் நாள்தோறும் துதிக்க அருள் புரியும் கேதீச்சரமாகும் .

குறிப்புரை :

பல உலகங்களிலும் உடம்போடு உயிர்வாழ்க்கையை , அவ்வவ்வுயிர்களின் கன்மத்திற்கேற்ப அருளிய முதல்வன் பரம சிவனே என்றதாம் . பண் - பண்ணிசை . மஞ்ஞை - மயில் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே.

பொழிப்புரை :

தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன் முடி , தோள் ஆகியன அழ கிழக்குமாறு அடர்த்துப் பின் அவனது பாடல்கேட்டு அருள் செய்த தலைவனார் , பொன் , முத்து , மாணிக்கம் , மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரை அடைந்து அன்பர்கள் இறைஞ்சி வழிபடும் கேதீச்சரத்து உள்ளார் .

குறிப்புரை :

குலபதி - குலத்திற்குத் தலைவன் . நலிந்து - நெருக்கி . அடர்த்து அவனுக்கு அருள் செய்த தலைவனார் . உன்னி - தியாநித்து .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் புவியிடந் தெழுந்தோடி
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா வித்தக மென்னாகும்
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் திருந்தஎம் பெருமானே.

பொழிப்புரை :

மா , கமுகு , வாழை ஆகியன செறிந்த மாதோட்ட நன்னகரில் நிலையாக , தேவியோடும் அழகிய கேதீச்சரத்து விளங்கும் எம்பெருமானே ! தாமரை மலரில் உறையும் நான்முகனும் , கடல் வண்ணனாகிய திருமாலும் நிலத்தை அகழ்ந்து சென்றும் வானில் பறந்து ஓடியும் உன் திருவடி இணைகளைக் காணாதவாறு உயர்ந்து நின்ற உன் திறமை யாதோ ? இஃது எதிர் நிரல் நிறை .

குறிப்புரை :

பூவுளான் - பிரமன் . புவி - பூமி . இடந்து - பேர்த்து . இடந்தவன் மாயன் . ஓடியவன் அயன் . நுன் அடியிணை - உன்னுடைய திருவடிகளிரண்டும் . வித்தகம் - சாதுரியம் . மா , பூகம் ( பாக்கு ), கதலி எல்லாம் உள்ளது அம்மாதோட்டம் . தேவி - கௌரி ( திருக்கேதீச்சர மான்மியம் , பகுதி 1. பா . 36.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் புறனுரைச் சமணாதர்
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய ஏழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட வுரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரம் அடைமின்னே.

பொழிப்புரை :

புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும் , ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும் , கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர் . மதம் பொருந்திய யானையை அஞ்சுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தவர் ஆகிய , மாதோட்டத்துள் பாலாவியின் கரைமேல் விளங்கும் கேதீச்சரத்து அத்தரை அடை யுங்கள் .

குறிப்புரை :

ஆதர் - அறிவிலார் , எத்தர் - ஏமாற்றுவோர் , விரகுள்ளவர் . ஏழைமை - அறியாமை தோற்றும் சொற்கள் . மறுகிட - கலங்க . பாலாவி - அத்தலத்தின் தீர்த்தம் . அது மிகப்பெரியது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

மாடெ லாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத்
தாட லேறுடை யண்ணல் கேதீச்சரத் தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப்
பாட லாயின பாடுமின்ப த்தர்கள் பரகதி பெறலாமே.

பொழிப்புரை :

அருகிலெல்லாம் மணமுரசு ஒலிப்பதுபோலக் கடல் ஒலி நிரம்பப் பெற்றமாதோட்டத்தில் , வலிய ஏற்றினை உடைய தலைவராகிய கேதீச்சரத்துப் பெருமானை அழகிய காழி நாட்டினர்க்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன் சொல் நவின்றதால் தோன்றிய இப்பாமாலையைப் பக்தர்களே ! பாடி வழிபடுமின் . பரகதி பெறலாம் .

குறிப்புரை :

மணமுரசு :- வீரமுரசு , தியாகமுரசு என்னும் மூவகை யுள் ஒன்று . ` இமிழ்குரல் முரசம் மூன்று உடன் ஆளும் தமிழ்கெழுகூடல் தண்கோல்வேந்து ` ( புறம் 58) ` வம்மின் எனப்புலவோரை அளித்திடு வண் கொடைமுரசு ... மணமுரசு ... திறல்முரசு ` ( முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் . 8) ஆடல் - வெற்றி . காழிநாடுளார்க்கிறை ` ஆசிரியர் . பரகதி - சிவானந்தப் பேறு அடையும் நெறி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே. 

பொழிப்புரை :

தெளிவான திருமேனியினரும், வானத்துப்பிறை மதியைச் சூடியவரும், கங்கையை அணிந்தவரும் தேன் நிறைந்த மண முடைய கொன்றை மலரைச் சூடிய சடையினரும், கொடிபோன்ற உமையம்மை மணாளரும் புவித்தோலை உடுத்தவரும் ஆகிய விடை ஏறும் எம்பெருமான் இனிதாக அமர்ந்துறையும் விற்குடி வீரட்டத்தை அடியவராய் நின்று ஏத்தவல்லார்களை அரியவினைகள் அடையா.

குறிப்புரை :

வடி - தெளிவு, மது - தேன்.
கொடி - உமாதேவியார் அருவினை அடையாமைக்கு வேண்டுவது அடியாராகிநின்று ஏத்தும் வன்மை.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் வருத்தம தறியாரே. 

பொழிப்புரை :

களர் நிலத்துப்பூக்கும் கொன்றை மலரையும், கதிர்விரியும் மதியத்தையும், மணம் கமழும் சடையில் ஏற்றி, மனம் பொருந்த வழிபடும் அன்பர்கட்கு அருள் செய்துவரும் பெருமை யரும், யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து விளங்கும் திருமேனியை உடையவரும் ஆகிய எம்பெருமானார் உறையும் விற்குடி வீரட்டத்தைச் செழுமையான மலர்களைக் கொண்டு தூவி நினைந்து ஏத்துவார் வருத்தம் அறியார்.

குறிப்புரை :

கதிர் - நிலவு. கடி - மணம். பத்தியை உள்ளத்திற் கொண்டவரிடத்தில் சிவனருள் விளங்கும். கரி - யானை. மலரால் வழிபட்டு மனத்தில் நினைத்து வாயால் துதிப்பார்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்  தாடிய வேடத்தர்
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் பேணுவ ருலகத்தே. 

பொழிப்புரை :

கரிய கண்டத்தினரும், வெண்மையான திரு நீற்றை அணிந்த மார்பினரும், வலக்கையில் எரியேந்தியவரும், மெல்லிய சடைகள் நிலத்தில் புரளச் சுடுகாட்டகத்தே ஆடிய கோலத் தினரும், ஆகிய சிவபிரான் உறையும் மலர்ப்பொய்கைசூழ்ந்த விற்குடி வீரட்டத்தைப் பிரியாது தொழுபவரைப் பெருந்தவத்தோர் என உலகில் பேணுவர்.

குறிப்புரை :

வலங்கை:- வலக்கை இடக்கையென்றலே குற்றமில்லாதது. வேடம் - சிவவேடம். பிரிவிலாதவர் - மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் நீக்கமின்றி நினைத்தும் போற்றியும் வழிபட்டும் வரும் அடியார்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு கடலெழு விடமுண்டார்
வேதம் ஓதிய நாவுடை யானிடம் விற்குடி வீரட்டம்
சேரு நெஞ்சினர்க் கல்லதுண் டோபிணி தீவினை கெடுமாறே.

பொழிப்புரை :

பூதகணங்களோடு சேர்ந்து பாடுபவர், ஆடுபவர், அழகுபொலிந்த திருவடிகளைச் சேர்ந்த சிலம்புகளை அணிந்தவர். மரக்கலங்கள் உலாவும் கடலிடையே தோன்றிய விடத்தை உண்டவர். வேதம் ஓதும் நாவினர். அப்பெருமானுக்குரிய இடமாக விளங்கும் விற்குடி வீரட்டத்தைச் சேரும் நெஞ்சினர்க் கன்றிப் பிறருக்குத் தீவினை, பிணி கெடும் வழி உண்டோ?

குறிப்புரை :

பாடுதலுடையார், ஆடுதலுடையார், மரக்கலம், வேதங்களை அருளிச்செய்த முதல்வன். இடைவிடாது நினைக்கும். சேர்தல் - இடைவிடாது நினைத்தல் (குறள், 3.உரை.) பிணியும் வினையும் கெடுமாறு, வீரட்டம்சேரும் நெஞ்சினர்க்கே உண்டு. சேரும் என்பது எதுகைத் தொடைக்கு ஏலாது.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

கடிய ஏற்றினர் கனலன மேனியர் அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற் பற்றறும் அருநோயே. 

பொழிப்புரை :

விரைந்து செல்லும் விடைஏற்றை உடையவர். கனல்போன்ற மேனியர். திரிபுரங்களில் அனல் எழுமாறு பெரிய மேருமலையைக் கால் ஊன்றி வளைத்தவர். தம் அடியவர் மேலுள்ள தீய வல்வினைகளைப் போக்குபவர். அவரது உறைவிடமாகிய விற்குடி வீரட்டத்தைப் பண்போடு பரவுமின். பரவினால் அரிய நோய்கள் பற்றறும்.

குறிப்புரை :

ஏற்றினர் - எருதுடையவர். கனல் அன்ன மேனியர்:- `தீவண்ணர் திறம் ஒருகால் செப்பாராகில்`. ஊர் மூன்றும் - திரிபுரங்களும். வரை - மேரு. வெடிய - பகையாகிய. கேடாகிய அச்சத்தினைச் செய்யும். வீட்டுவிப்பான் - கொல்விப்பவன். படி - பண்பு. நோய் பற்று அறும்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்  அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழின் மல்கிய மலர்விரி  விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்  கிடர்கள்வந் தடையாவே.

பொழிப்புரை :

மாதொருபாகத்தர். பெருமை உடையவர். சிறியமான் கன்றை ஏந்திய கையினர். உண்மையான தலைவர். அன்பு செய்பவர்க்கு எளியவர். அல்லாதவர்க்கு அரியவர். அவர் உறையும் இடமாகிய, விண்ணுறஓங்கிய மலர்மல்கிய பொழில்கள் சூழ்ந்த விற்குடி வீரட்டத்தை எண்ணிய சிந்தையர்க்கு இடர்கள் வந்தடையா.

குறிப்புரை :

கூறு - பாகம், மறி - மான். அன்பர்க்கு எளியவர் அல்லார்க்கு அரியவர். `அளவறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு, அடியவர்க்கு எளியான்` ` மெய்யடியவர்க்கு எண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு`. (திருவாசகம்) விண்ணில் ஆர் பொழில் என்க. எண்- எண்ணுதல்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்தனை யிகலழி தரவூன்று
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி விற்குடி வீரட்டம்
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்  துன்பநோ யடையாவே. 

பொழிப்புரை :

இடமகன்ற பெரிய கடலால் சூழப்பட்ட இலங்கையர் மன்னனை அவனது பகைமை அழியுமாறு ஊன்றிய திடமான பெரிய கயிலாய மலைக்கு உரியவர். சொற்களின் பொருளாய் விளங்குபவர். இருளார்ந்த விடமுண்ட கண்டத்தர். அவர் உறையும் பதியாகிய விற்குடி வீரட்டத்தை எண்ணும் வகையில் இசைபாடி நிற்பவர்களைத் துன்பம் நோய்கள் அடையா.

குறிப்புரை :

இகல் - வலி. மிடறு - திருக்கழுத்து. தொடங்கும் ஆறு- தொடங்கும் நெறி. சிவசம்பந்தமான இசைப்பாட்டு என்றவாறு. துன்பநோய் - துன்பத்தைத் தரும் நோய்கள்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந் திருவ டியறியாமை
எங்கு மாரெரி யாகிய இறைவனை  யறைபுனன் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் விற்குடி வீரட்டம்
தங்கை யால்தொழு தேத்தவல் லாரவர் தவமல்கு குணத்தாரே. 

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் தேடியும் திருவடி மற்றும் திருமுடியைக்காண இயலாதவாறு எரியுருவாக நின்ற இறைவனை, கங்கை சூடிய முடியோடு, சினம் மிக்க யானையின் தோலினை உரித்துப்போர்த்து உகந்தவனை, விற்குடி வீரட்டத்துள் கண்டு தம்கையால் தொழுது ஏத்த வல்லவர்கள் தவம் மல்கு குணத்தோர் ஆவர்.

குறிப்புரை :

அறியாமை - அறியாதவாறு. ஆர் எரி - நிறைந்த தீ. வரைக்கரி - மலைபோலும் யானை.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ ராடைய ரவர்வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்  விற்குடி வீரட்டம்
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் கருத்துறுங் குணத்தாரே. 

பொழிப்புரை :

அன்புடையவர்களே! கேளுங்கள்: சோற்றுத்திரளை உண்டு திரியும் சமணர்களையும் துவர் ஆடை உடுத்த புத்தர்களையும், பண்டும் இன்றும் ஒருபொருள் எனக்கருதாதீர். விரிந்த மலர்களைச் சூடிய சடைகளை உடைய சிவபிரான் உறையும் இடம் எது எனில் விற்குடி வீரட்டமாகும். அதனைக்கண்டு காதல் செய்வார் கருதத்தக்க குணமுடையோர் ஆவர்.

குறிப்புரை :

வார்த்தையை ஒரு பொருள் என்று கருதாதீர்கள். பரிவு உறுவீர் - அன்புமிக்கீரே! அடி - திருவடிகளை.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

விலங்க லேசிலை யிடமென வுடையவன் விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை யெம்பெரு மான்றனை எழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் மற்றது வரமாமே. 

பொழிப்புரை :

மேருமலையேவில். கயிலாய மலையே தங்குமிடம் எனக்கொண்ட விற்குடி வீரட்டத்தில் விளங்கும் சோதியை, எம்பெருமானை, அவனது அழகிய திருவடிகளை விரும்பி அழகிய சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழ் மாலையை உறுதியாகப் பற்றி இசையோடு மொழியுங்கள். மொழிந்தால் அதுவே நன்மைகளைத் தரும்.

குறிப்புரை :

விலங்கலே (-மேருமலையே) சிலையெனவும் (கயிலைமலையே) இடமெனவும் உடைய சிவன். எழில் - அழகு. நலம் - அழகு. செறிவு முதலிய நலங்கள்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

நீல மார்தரு கண்டனே நெற்றியோர் கண்ணனே யொற்றைவிடைச்
சூல மார் தரு கையனே துன்றுபைம் பொழில்கள் சூழ்ந்தழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
சால நீடல மதனிடைப் புகழ்மிகத் தாங்குவர் பாங்காவே.

பொழிப்புரை :

நீலகண்டனே , நெற்றிக்கண்ணனே , ஒற்றைவிடை மீது ஏறி வருபவனே , முத்தலைச்சூலம் ஏந்திய கையனே , செறிந்த பொழில்களால் சூழப்பட்டதும் அழகிய மலர்களின் மணம் கமழ்வது மாகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்தே என்றுகூறி அவனை வணங்க எழுபவர் மிகப்பெரிதாய சிவலோகத்தில் பெருமானுக்கு அருகில் புகழ் பெறத் தங்குவர் .

குறிப்புரை :

நீலம் - நீலநிறமுடைய ஆலகாலவிடம் . கோலம் - அழகு . கொழுந்து என்பது இறைவன் திருப்பெயர் . சாலநீள் தலம் - சிவலோகம் ,

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுறு மெல்விர லரவல்குல்
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென மிழற்றிய மொழியார்மென்
கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு அருள்பெறல் எளிதாமே.

பொழிப்புரை :

தாமரைமலர் போன்ற அழகிய சிறியகால்களையும் பஞ்சுபோன்ற மென்மையான விரல்களையும் , அரவு போன்ற அல்குலையும் உடையவரும் . மயில் குயில் கிளி போன்ற மொழியினரும் , மென்மையான தனங்களையுடையாருமாகிய மங்கையர் குணலைக்கூத்து ஆடிமகிழும் கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று கூறிச் சங்கரனை வணங்க எழுவார் ஐயமின்றி அவன் திருவருளைப் பெறுவர் .

குறிப்புரை :

பங்கயம் - தாமரை . மயிலும் மொழிக்கு ஒப்பாக் கூறுவது உண்டுபோலும் . ` குயில்மொழி ` ` கிளிமொழி ` என்பனபோல மயில் மொழி என்று கேட்டிலோம் . மிழற்றிய - மெல்லச் சொல்லிய . குணலை - கூத்துள் ஒன்று . சங்கை - சந்தேகம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் அடியவர் தமக்கெல்லாம்
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் செல்வமல் கியநல்ல
கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் கொழுந்தே யென்றெழுவார்கள்
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ டமர்ந்தினி திருப்பாரே.

பொழிப்புரை :

நல்ல மலர்களைக்கொண்டு தொழுது எழும் அடியவர்கட்கு நம்பனாரும் , செம்பொன்போன்ற மேனியையும் அழகிய நகில்களையும் உடைய பூங்கொம்பு போன்ற மகளிர் ஆடிப் பாடித் தொழுபவரும் , செம்மைமல்கிய கோட்டூரில் விளங்குபவரு மாகிய இறைவரைக் கொழுந்தீசரே என்று வணங்கிட எழுவார் பொன்னுலகில் தேவரோடும் இனிதிருப்பர் .

குறிப்புரை :

அடியவர் தமக்கு எல்லாம் நம்பனார் . பொன்னுலகில் தேவரொடும் இனிதிருப்பர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் அன்னஞ்சேர்ந் தழகாய
குலவும் நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தேயென்றெழுவார்கள்
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை நீடிய புகழாரே.

பொழிப்புரை :

பலாச்சுளை , மாங்கனி முதலிய தீங்கனிகளையும் தேனையும் உண்ட தோகைமயில்களும் கிளிகளும் அன்னங்களும் விளையாடும் மரஞ்செடி கொடிகள் பலவும் நிறைந்த பொழில் களையும் , கயல்கள் உகளும் அழகிய வயல்களையும் உடைய கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று போற்றியவர் அழியாத செல்வமுடையவராய் இவ்வுலகில் புகழோடு வாழ்வர் .

குறிப்புரை :

பலவு - பல மரஞ்செடி கொடிகளும் . கலவம் - தோகை . மஞ்ஞை - மயில் . கிள்ளை - கிளி . நிலவு செல்வத்தர் - அழியாத ஐசுவரியமுடையவர் . நீடிய - அழியாத .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் அன்பராம் அடியார்கள்
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு பத்திசெய் தெத்திசையும்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் அவனருள் பெறலாமே.

பொழிப்புரை :

உள்ளம் உருகுவார்க்கு ஒண்சுடராகவும் , என்றும் தன்மேல் அன்புடையடியார்க்கு ஆரமுதாகவும் விளங்குபவனே என்றும் கூறிப் பரிவும் பக்தியும் செய்து , குருகுகள் வாழும் கோட்டூர் நற்கொழுந்தே என்று விளித்து வழிபடப்புகும் அடியவர்களின் வினைகள் நீங்கும் . அவனது திருவருளைப் பெறலாம் .

குறிப்புரை :

உள்ளம் உருகுவார்க்கு ஒளிவளர் விளக்கு , அன்புடை யடியார்க்கு உண் ஆரமுது ` பரிவும் பக்தியும் செய்து கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார் வினைகள் விலகும் . திருவருள் வாய்க்கும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

துன்று வார்சடைத் தூமதி மத்தமுந் துன்னெருக் கார்வன்னி
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் புலியுரி யுடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற் கொழுந்தே யென்றெழுவாரை
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை ஏதம்வந் தடையாவே.

பொழிப்புரை :

நெருங்கி நீண்டு வளர்ந்த சடைமுடியில் பிறைமதி , ஊமத்தை , வெள்எருக்கமலர் , வன்னியிலை , ஆகியவற்றைச் சூடியும் , தலைமாலைகளை மேனியில் அணிந்தும் , கையில் கபாலத்தை உண்கலனாக ஏந்தியும் , புலித்தோலை இடையில் உடுத்தும் , கொன்றை மரங்கள் பொன்போல மலரும் கோட்டூரில் எழுந்தருளி விளங்கும் கொழுந்தீசரின் திருப்பெயரை விளித்து அவரை வழிபட எழும் அடிய வரை என்றும் வழிபடுவார்க்கு இடரும் , கேடும் ஏதமும் இல்லை .

குறிப்புரை :

கோட்டூர் நற்கொழுந்தே என்று எழும் அடியவரை என்றும் வழிபடுவார்க்கு இடரும் கேடும் ஏதமும் இல்லை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

மாட மாளிகை கோபுரங் கூடங்கண் மணியரங் கணிசாலை
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் பரிசொடு பயில்வாய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
கேட தொன்றில ராகிநல் லுலகினிற் கெழுவுவர் புகழாலே.

பொழிப்புரை :

மாடமாளிகை , கூடகோபுரம் , மணிஅரங்கம் , அழகியசாலை , புகழ்தற்குரியமதில் , பொன் மண்டபம் ஆகியவற்றோடு , அழகிய பொழில்கள் சூழ்ந்த கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே , என்று எழுவார் கேடில்லாதவராய் உலகெலாம் விளங்கிய புகழ் உடையவராவர் .

குறிப்புரை :

மாளிகை , கோபுரம் , கூடம் , மணி அரங்கம் , சாலை , பொன்மண்டபம் , மதில் , பொழில் , எல்லாம் கோட்டூர்ச் சிறப்பை உணர்த்தின . கேடில்லாதவராய் உலகெலாம் விளங்கிய புகழ் உடையராவர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை யெடுத்தலும் உமையஞ்சிச்
சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு நாளவற் கருள்செய்த
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் தவமுடை யவர்தாமே.

பொழிப்புரை :

ஒளியும் கூர்மையுமுடைய பற்களைக் கொண்ட இராவணன் கயிலைமலையை எடுத்தபோது , உமையம்மை அஞ்ச , இறைவன் தனது திருக்கால் பெருவிரலைச் சிறிதே சுளித்து ஊன்றிய அளவில் அவ்விராவணன் நெரிந்து வருந்தி வேண்ட , அவனுக்கு வாளும் நாளும் அருள் செய்தருளிய , பொழில் சூழ்ந்த கோட்டூர்க் கொழுந்தீசனைத் தொழுவார் இறைவன் திருவடித் தாமரைகளை அடையும் தவமுடையவராவர் .

குறிப்புரை :

வாள் எயிறு - வாள்போலும் கோரைப்பல் . சுளிய - சுளிக்க , வாளொடுநாள் - வாட்படையும் ஆயுளும் . தளிர்கொள் தாமரைப் பாதங்கள் . அருளைப் பெறுதற்குரிய தவம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

பாடி யாடும்மெய்ப் பத்தர்கட் கருள்செயும் முத்தினைப் பவளத்தைத்
தேடி மாலயன் காணவொண் ணாதவத் திருவினைத் தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் நிகழ்தரு புகழாரே.

பொழிப்புரை :

பாடி ஆடுகின்ற உண்மை அடியார்க்கு அருளும் முத்தும் பவளமும் போன்றவனை , திருமாலும் நான்முகனும் தேடி யறிய முடியாத திருவை , மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூரில் விளங்கும் கொழுந்தை வழிபட எழுபவர் நீடிய செல்வ மும் , உலகெலாம் நிகழும் புகழும் அடைவர் .

குறிப்புரை :

பாடி ஆடுகின்ற உண்மையடியார்க்கு அருளும் முத்து . அரி அயன் அறியாத திரு . மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூர்க் கொழுந்தே என்று எழுவார்க்கு நீடிய செல்வமும் உலகெலாம் நிகழும் புகழும் உண்டாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழுந்திரளைப்
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா மெய்யன்நல் லருளென்றும்
காண லொன்றிலாக் காரமண் தேரர்குண் டாக்கர்சொற் கருதாதே
பேணல் செய்தர னைத்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே.

பொழிப்புரை :

வளைந்த வெண்பிறையை அணிந்த சடைமுடியராகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசராகிய , செழுமை யின் திரட்சியை , மலர்களால் அலங்கரித்து அவர்தம் திருவடிகளைப் போற்றுமின் . பொய்யில்லாத மெய்யராகிய அவர்தம் நல்லவருளைக் காணும் நல்லூழில்லாத சமண புத்தர்களின் உரைகளைக்கேளாது அவ்விறைவரை விரும்பித்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவர் .

குறிப்புரை :

பூணல் - மலர்களாலும் ஆடை ஆபரணங்களாலும் அலங்கரித்தல் , அரனைப் பேணல்செய்து தொழும் அடியவர் . பேணல் - பக்தி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் பாவையோ டுருவாரும்
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழும்பவளம்
வந்து லாவிய காழியுள் ஞானசம் பந்தன்வாய்ந் துரைசெய்த
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே.

பொழிப்புரை :

பந்தாடும் மெல் விரலையும் , பவளவாயையும் தேன்மொழியையும் உடைய உமையம்மையோடு அழகிய மலர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசரை , கடல் அலைகள் பவளங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்மாலையை ஓதவல்லவர் புகழ்பெறுவர் .

குறிப்புரை :

தேன்மொழிப்பாவை - இத்தலத்தில் உள்ள தேவியார் திருப்பெயர். இதனை மதுரவசனி என்று பின்னோர் மொழி பெயர்த்தனர். கொந்து - பூங்கொத்து. சந்து - சந்தம். பாவண்ணம்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே.

பொழிப்புரை :

வேங்கை , ஞாழல் , செருந்தி , செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும் , சந்தனமரம் , மாதவி மலர் , சுரபுன்னை மலர் , குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம் .

குறிப்புரை :

வேங்கை பொன்போல் பூக்கும் . வேங்கை முதலியவை காவிரி வெள்ளத்தால் உந்தப்பட்டுவருவன . ஆரம் - சந்தனம் . பொன் நேர்வருகாவிரி :- ` பொன்னி `.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானத்
துளவ மான்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே.

பொழிப்புரை :

விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் , மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை , அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம் .

குறிப்புரை :

விளவு - விளா . வேய்மணி - மூங்கில்முத்து . துளவ மால் மகன் - துழாய் அணிந்த திருமாலுக்கு மகனான . அளகம் - கூந்தல் . ஈற்றடியைச் சைவர் மறத்தல் கூடாது . ( பா . 3, 4 பார்க்க ).

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே.

பொழிப்புரை :

தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில் மாந் துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம் .

குறிப்புரை :

வாடினார்தலை :- பிரம கபாலம் . கேடிலாமணி - இத் தலத்து இறைவர் திருப்பெயர் . மாந்துறைமணி என்பன முன் வழங்கி யவை . கெழுமுதல் - நிறைவு , பொருத்தம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை யிளமரு திலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே.

பொழிப்புரை :

இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை , பிறை , அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம் .

குறிப்புரை :

இலவம் முதலியவை மரங்கள் . ஈஞ்சு - ஈந்து ; போலி . கண்டன் - தலைவன் . புனல் - கங்கை . அம்புலி - பிறை . மலை .- ` அருள் நிதிதரவரும் ஆனந்த மலையே ` திருப்பள்ளியெழுச்சி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படுந் தவத்தோரே.

பொழிப்புரை :

கோங்கு , செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை , தூபம் தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர் .

குறிப்புரை :

குரவு - குராமரம் . பாங்கு - சிவாகம விதி . பாட்டு - தோத்திரம் . அவி - நிவேதனம் . தாங்குவார் - சிவபூஜாதுரந்தரர் . தலைப்படல் - சேர்தல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பெருகு சந்தனங் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே.

பொழிப்புரை :

சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி , மதி , மன்னர்கள் , மருத்துக்கள் அன்போடுவழிபடும் திருவடிகளை வணங்குவோம் .

குறிப்புரை :

பரிவு - பக்தி . இரவி - சூரியன் . மருதவானவர் - மருத்துக்கள் . இதில் , இத்தலத்தை வழிபட்டவர்களை உணர்த்தி யருளினார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறையன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே.

பொழிப்புரை :

மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந் தவனும் , மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம் .

குறிப்புரை :

நறவம் - தேன் , மணம் , மௌவல் - காட்டு மல்லிகை . இறவில் - மிகுதியில் . அறவணாகிய கூற்று - தருமராசன் . வரைவில் - மேருவாகியவில் , வாங்கி - வளைத்து . எயில் - திரிபுரம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

மந்த மார்பொழின் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை
நிந்தி யாஎடுத் தார்த்தவல் லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே.

பொழிப்புரை :

மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை , நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால் விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர் .

குறிப்புரை :

மந்தம் - தென்றல் . நிந்தியா - நிந்தித்து . சிந்தியா மனத் தார் - சிந்திக்காத மனமுடையவர் . தீநெறி - நரகிற் செலுத்தும் தீயகதி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை
மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளும்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.

பொழிப்புரை :

நீல மணிகளையும் , முத்துக்களையும் , மலர்களை யும் அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள் . நம்மைக் கூற்றுவன் நலியான் .

குறிப்புரை :

நித்திலத்தொத்து - முத்துக்கொத்து . ஆலியா - துளித்து . இணை - இரண்டு . நாளும் - நாடோறும் . கோலம் - சிவக் கோலம் . நலியான் - வருத்தமாட்டான் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களு நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது அதுவவர்க் கிடமாமே.

பொழிப்புரை :

சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர் . நீண்ட மூங்கில் , தேன் பொருந்திய வேலமரம் , மாங்கனி , வாழைக் கனி , நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ளதிருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த நிலையே மேலானது .

குறிப்புரை :

கழை - மூங்கில் . கரும்பு . நறவு - மணம் , கதலி - வாழை . பலம் - பழம் . ஒருகாலம் அன்றி :- எக்காலத்தும் . உள் அழிந்து எழும் பரிசு - நெஞ்சுருகி எழுகின்ற தன்மை . அது - அப்பரமானந்தநிலை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தன்அன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே.

பொழிப்புரை :

மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத் தனாய் , சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத் தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப் பெறுவர் .

குறிப்புரை :

வரைவளம் - மலைவளங்களை , மறை நிறைநாவன் - வேதங்கள் நிறைந்த நாவினர் . அர :- அரகர என்னும் முழக்கம் . இப்பணியில் வல்லமை நல்லுயிர்க்கே உண்டாகும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

தளிரிள வளரென வுமைபாடத் தாளம் மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருணல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

தளிர்களோடு கூடிய இளங்கொம்புபோல , உமையம்மை அருகிருந்து பாடவும் , தாளம் இடவும் ஒப்பற்ற தழலை உடைய கையை வீசி , விளங்கும் மாணிக்க மணியை உடைய பாம்பை இடையிலே கட்டி ஆடும் பொய்வேடத்தை உடையவர் . தம்மை விரும் பும் பருத்த தனபாரங்ளை உடைய மகளிர்க்கு அருள் நல்கித் திரு நீறுபூசி , முடிமேல் பிறையணிந்து காட்சி தருபவர் . வாய்மூரடி களாகிய அவர் வருவார் காணீர் .

குறிப்புரை :

இப்பதிகத்தில் அகத்துறை அமைந்தமை உணர்க . உமையம்மையார் தளிர் இளவளர் எனப் பாடவும் தாளம் இடவும் ஒருதாள் எடுத்து ஆடும் கிறிமையார் . கிறிமை - பொய்ம்மை . விளர் - வெழுப்பு . ` மன்னிய ஆடல்காட்ட ` எனச் சேக்கிழார் சுவாமிகள் அருளியதை நோக்கின் , இவர் காணீர் என்று இருத்தல் வேண்டும் எனத் தோன்றுகின்றது . அதில் ககர உயிர்மெய் ஏட்டில் கெட்டிருக்க ரகர ஆகாரமாகக் கொண்டனர்போலும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி விரிதரு கோவண வுடைமேலோர்
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ
வந்தனை பலசெய இவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

தழல் போன்ற திருமேனியராய் , திருநீறுபூசி , விரித் தணிந்த கோவண ஆடை மீது பாம்பை அரைநாணாகக் கட்டிக் கொண்டு வேதஒலி இசைத்துக் கொண்டு பலபல வீடுகளுக்கும் சென்று பலியேற்பவர் . செஞ்சுடர் வண்ணராகிய வாய்மூரடிகள் என் சிந்தனை புகுந்து எனக்கு அருளை நல்கி ப்புறத்தே தம் அடியைப் பரவி வழிபாடு செய்யுமாறு வருவார் காணீர் .

குறிப்புரை :

இறைவர் என் சிந்தனையுட்புகுந்து எனக்கு அருள் நல்கித் தன்னைப் பரவச்செய்ய வருவார் காணீர் என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமு முணராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர் சுடர்பொற் சடைமேற் றிகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

பண்ணிசை பொருந்திய வீணையை உடையவர் . பதினெட்டுத் தேவர் கணத்தினரும் உணராத வகையில் நஞ்சுண்டு விளங்கும் திருமிடற்றை உடையவர் . திருநீற்றுச் சுண்ணம் அணிந்த மார்பினர் . அழகிய சடை மீது இளம்பிறை சூடியவர் . வாய்மூரில் விளங்கும் அவ்அடிகள் வருவார் காணீர் .

குறிப்புரை :

பண் - பண்ணிசை . வீணையர் - ( பா .8 பார்க்க ) பதினெண்கணம் - பதினெட்டுத் தேவர்கூட்டம் . நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார் - நஞ்சு உண்டும் சாவா ஒருவன் என்ற கருத்தை உணர்த்திற்று . ` உள்ளம் உருகில் உடனாவர் ` என்னும் பரமாப்த வசனத் தைத் திருவுந்தியாரில் (7) அமைத்து , உள்ளம் உருகில் உடனாவர் அல்லது தெள்ள அரியர் என்று உந்தீபற , சிற்பரச் செல்வர் என்று உந்தீ பற என்றருளியது காண்க . சுண்ணம் - சுவர்ணம் , திருநீற்றுப் பொற் சுண்ணம் . பொன்போலச் சுடருஞ் சடை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

எரிகிளர் மதியமொ டெழினுதன்மேல் எறிபொறி யரவினொ டாறுமூழ்க
விரிகிளர் சடையினர் விடையேறி வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருவகலம் பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியர வரைக்கசைத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

சடைமுடி மீது நெருப்புப்போல விளங்கும் பிறை மதியையும் , அழகிய நுதலின் மேற்பகுதியில் பாம்பையும் , கங்கையை யும் அணிந்து விடையேறி வந்து மகளிராகிய எங்கட்கு இடர் செய்த விகிர்தர் . திருநீறணிந்த மார்பினர் . சத்திய வடிவினர் . வாய்மூரில் விளங்கும் அவ்வடிகள் அழகியதொரு அரவை அரைக்கசைத்து வரு வார் . காணீர் .

குறிப்புரை :

பொறி - படப்பொறி . அகலம் - மார்பு . ( பா .7.) வாய்மையர் - சத்தியரூபர் . வாய்மையரூர் என்பதன் மரூஉவே வாய்மூர் . அரவு அரைக்கு அசைத்து வருவார் இவர் காணீர் என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

அஞ்சன மணிவணம் எழில்நிறமா வகமிட றணிகொள வுடல்திமில
நஞ்சினை யமரர்கள் அமுதமென நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின்தோல் வெருவுறப் போர்த்ததநிறமு மஃதே
வஞ்சனை வடிவினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

நஞ்சினைக்கண்டு தேவர்கள் உடல் நடுங்கி வேண்டியபோது நீலமணிபோலும் அழகிய நிறத்தினைப் பெறவும் கழுத்திடம் அழகுபெறவும் அமுதம்போல அதனை உண்டவரும் நறு நுதலை உடைய உமையம்மை நடுங்க யானையின் தோலைக் கண் டோர் அஞ்சுமாறு உரித்துப் போர்த்தவரும் ஆகிய வாய்மூர் அடிகள் பெண்களின் மனம் கவர வஞ்சனைவடிவோடு வருவார் . அவரைக் காணீர் .

குறிப்புரை :

நீலமணிபோலும் மேனியர் . அஞ்சனம் - கருநிறம் , மணிவண்ணம்போலும் அழகிய நிறம் . அகம் மிடறு - கழுத்திடம் . திமிலம் - பேரொலி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

அல்லிய மலர்புல்கு விரிகுழலார் கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச் சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

அடுக்கடுக்கான இதழ்களை உடைய மலர்களைச் சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம் திருவடிகளைப் பரவ இராப்போதில் எரியேந்தி ஆடும் அவ்விறைவர் அம் மகளிரது பரவு தலை ஏற்றருளுபவர் . வேதங்களைப் பாடிக்கொண்டு , இளமதி சூடி ஒருகாதில் தோடணிந்து புலித்தோலுடுத்துவருவார் . அவ்வாய்மூர் இறைவரைக் காணீர் .

குறிப்புரை :

இதன் முதலீரடியொடும் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்தவான வாழ்க்கையது உடையார் ( தி .2 ப .94 பா .7.) என்பதைப் பொருத்திக் காண்க . மகா சங்கார தாண்டவத்தைப் பல்வேறு கூறுபாடுற்ற சத்திகள் ஒருங்குசேர்ந்து காணும் உண்மை உணர்த்திற்று . வல்லியம் - புலி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கடிபடு கொன்றைநன் மலர்திகழுங் கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார் முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம் பொன்னென மிளிர்வதொர் அரவினொடும்
வடிநுனை மழுவினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

மணம் கமழும் கொன்றை மலர் மாலையைத் தலை யில் அணிந்தவர் . தேவர்கள் தலையில் சூடிய முடிகளில் பதித்த முழு மணிகளின் ஒளி சிதறும் திருவடியினர் . வீதிகளில் பெண்கள் பலி யிடலைக் கண்டு முறுவல் செய்பவர் . திருநீறு அணிந்த வடிவோடும் , பொன்போல் மிளிரும் பாம்பணிந்த மார்போடும் , கூரிய மழுவை ஏந்தி அவ்வாய்மூர் இறைவர் வருவார் . காணீர் .

குறிப்புரை :

கண்ணியர் - தலையிற்சூடும் மாலையர் , மணிமுடி . பில் கும் - ( ஒளி ) சிதறும் , ( பா .4.) பொடி - திருநீறு . வடி - கூர்மை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

கட்டிணை புதுமலர்க் கமழ்கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா இறைவனா ருறைவதொர் இடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார் பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

இணை இணையாகக் கட்டப்பட்ட புதிய கொன்றை மலர்மாலையைத் தலையில் அணிந்தவர் . வீணை வாசிப்பவர் . அவ் விறைவர் சந்தனமணிந்து உமையம்மை துணையாக உறையுமிடம் வாய்மூராகும் . பட்டாடை அணிந்த தாருகாவன மகளிரிடம் பலி கேட்டு அவர்களை மயங்குமாறு செய்து தாளமிட்டுச் சதிராடும் வாய் மூர் இறைவராகிய அப்பெருமானார் வருவார் . காணீர் .

குறிப்புரை :

கட்டிணை புதுமலர் - இணை இணையாகக் கட்டப்படும் புதிய பூக்கள் . எட்டுணை - ( எண் + துணை ) எண் மடங்கு . பட்டு இணைந்த - பட்டிசைந்த . பாவையர் - தாருகவனத்து மகளிர் . வட்டணை - வட்டம் . தாளம் போடுதலுமாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

ஏனம ருப்பினொ டெழிலாமை யிசையப் பூண்டோ ரேறேறிக்
கானம திடமா வுறைகின்ற கள்வர் கனவிற் றுயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித் திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநன் மதியினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

பன்றிக் கொம்போடு ஆமைஓட்டையும் அணிந்து எருதேறிக் காட்டை இடமாகக் கொண்டு உறையும் இவர் நம் உள்ளங் களைக் கவரும் கள்வராவர் . கனவிடைத் தோன்றி நமக்குத் துயர் விளைத்துத் தேன்பொருந்திய மலர்களை அணிந்த அழகிய சடைமீது பிறையணிந்து அவ்வாய்மூர் இறைவர் வருவார் . காணீர் .

குறிப்புரை :

ஏனம் - பன்றி . மருப்பு - கொம்பு , பன்றிக்கொம்பும் ஆமையோடும் பூண்டவர் என்று திருமுறைகளில் பல இடங்களில் இருத்தல் வெளிப்படை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

பிறைசூடியவராய் , சுடர்முடியவராய் , திருநீறு பூசியவராய் மழுவேந்தியவராய் , கொன்றைமாலை சூடியவராய் , பாம்பும் முப்புரி நூலும் அணிந்தவராய் , காந்தள் போன்று முகிழ்த்த கையினராகி , தாருகாவன முனி பன்னியர் பலிபெய்யுமாறு பிரமகபாலத்தை ஏந்தியவராய் வாய்மூர் இறைவர் வருவார் . காணீர் .

குறிப்புரை :

பசைந்து - பற்றி , பசுமையுற்று . கோடல் - வெண் காந்தள் , ஈண்டுக் காந்தளையுணர்த்தி , மகளிர் செவ்விரல்களுக்கு ஒப்பாயிற்று . முகிழ் - அரும்பு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

திங்களொ டருவரைப் பொழிற்சோலைத் தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமொ டருமறை யொலிபாடல் அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.

பொழிப்புரை :

சந்திரனைச் சென்று தொடும் மதில்களையும் சோலைகளையும் உடைய திருவாய்மூரிலுள்ள , வேதங்கள் , வேதாங் கங்கள் ஆகிய பாடல்களின் பொருளாயுள்ள தீ வண்ணரின் திருவடி களைப் பரவி நம்வினை கெடுமாறு ஞானசம்பந்தன் மொழிந்த இத்தமிழ் மாலை தங்கிய மனத்தோடு அவரைத் தொழும் அடியவர் நெறி , உலகில் மேலான தவநெறியாகும் .

குறிப்புரை :

வரைப்பொழில் - மலையிலுள்ள சோலைகள் . மறை யொலி - வேதமுழக்கம் . நங்கள் தம்வினை . எழுவார் நெறி , எழு வார்க்குத் தமர்நெறி , உலகுக்கு ஒரு தவநெறி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

மாதொர் கூறுகந் தேற தேறிய
ஆதி யானுறை யாடானை
போதி னாற்புனைந் தேத்து வார்தமை
வாதியா வினை மாயுமே.

பொழிப்புரை :

அம்பிகையை ஒருபாகமாக உகந்து கொண்டு விடைமேல் ஏறியருளும் முதல்வன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனை மலர்களால் அலங்கரித்தும் அர்ச்சித்தும் வழிபடுபவர்களின் வினைகள் அவர்களை வருத்தமாட்டாதனவாய் மாய்ந்துவிடும் .

குறிப்புரை :

அம்பிகைபாகனாகி விடைமேலேறியருளும் முதல்வன் திருவாடானையைப் போது ( அரும்பு, பூக் ) களால் அலங்காரமும் அருச்சனையும் புரிந்து பூசிப்பவரை வினைகள் வருத்த மாட்டாதனவாய் மாய்ந்துவிடும். இப்பதிகமுழுதும் அருச்சனையின் பயன் உணர்த்தப்பட்டமை அறிக .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

வாடல்வெண்டலை யங்கையேந்திநின்
றாடலானுறை யாடானை
தோடுலாமலர் தூவிக்கைதொழ
வீடுநுங்கள் வினைகளே.

பொழிப்புரை :

உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி நின்று ஆடுதலை உடைய சிவபிரானது திருவாடானையை அடைந்து அவ் விறைவனை மலர்தூவித் தொழுதால் உங்கள் வினைகள் யாவும் அழியும் .

குறிப்புரை :

வற்றிய பிரமகபாலத்தையேந்தி நின்று ஆடுதலை யுடைய சிவபிரான் ஆடானையை மலர்தூவித் தொழுதால் வினைகள் அழியும் . தோடு - பூவிதழ் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

மங்கைகூறினன் மான்மறியுடை
அங்கையானுறை யாடானை
தங்கையாற்றொழு தேத்தவல்லவர்
மங்குநோய்பிணி மாயுமே.

பொழிப்புரை :

மங்கை பங்கனும் மான் கன்றைக் கையில் ஏந்தியவனுமாகிய சிவபிரான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனைத் தம் கைகளைக் கூப்பிப் போற்றவல்லவர்களின் நோய்கள் கெடும் . பிணிகள் ( வினைகள் ) மாயும் .

குறிப்புரை :

மங்கைபங்கன் , மான்கன்றேந்திய திருக்கரத்தன் . ஆடானையைத் தம்கைகளால் தொழுது ஏத்தவல்லவர் நோயும் பிணியும் மாயும் . மங்குதல் - கெடுதல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

சுண்ணநீறணி மார்பிற்றோல்புனை
அண்ணலானுறை யாடானை
வண்ணமாமலர் தூவிக்கைதொழ
எண்ணுவாரிட ரேகுமே.

பொழிப்புரை :

சந்தனச் சுண்ணமும் திருநீறும் அணிந்த மார்பில் பூணநூலின்கண் மான்தோலைப் புனைந்துள்ள தலைமைக் கடவு ளாகிய சிவபிரானுறையும் திருவாடானையை அடைந்து , அவ் விறைவனை அழகும் மணமும் கூடிய மலர்களைத்தூவிக் கைதொழ எண்ணுபவர்களின் இடர் ஏகும் .

குறிப்புரை :

தோல் - மான்றோல் பூணுநூலொடு சேர்த்துத் தரித்துக் கொள்வது . ( தி .1 ப .28 பா .2; தி .1 ப .133 பா .4; தி .1 ப .80 பா .9; தி . 1 ப .6 பா .3.) வண்ணம் - அழகு . எண்ணுவார் - தியானம்புரிவார் . ( பா .8.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

கொய்யணிம்மலர்க் கொன்றைசூடிய
ஐயன்மேவிய வாடானை
கையணிம்மல ரால்வணங்கிட
வெய்யவல்வினை வீடுமே.

பொழிப்புரை :

கொய்யப் பெற்றதும் அழகியதுமாகிய கொன்றை மலர்மாலையைச் சூடிய தலைவன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனைக் கைகளால் மலர்தூவித்தொழுது வணங்குபவர்களின் கொடிய வல்வினைகள் அவர்களை விட்டொழியும் .

குறிப்புரை :

கொய் - கொய்த , ஐயன் - தலைவன் , பிதா . தலந் தொறும் கைநிறையப் பூக்களைக்கொண்டு தூவிவழிபடுவது சைவர்க் குரிய நன்னெறியாதலைப் பெரியபுராணத்துட்காண்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

வானிளம்மதி மல்குவார்சடை
ஆனஞ்சாடல னாடானை
தேனணிம்மலர் சேர்த்தமுன்செய்த
ஊனமுள்ள வொழியுமே.

பொழிப்புரை :

வானில் விளங்கும் இளம்பிறையைத் தமது திருமுடியில் சூடியவரும் நீண்ட சடைமுடியை உடையவரும் , பஞ்ச கௌவியத்தை விரும்பி ஆடுபவருமாகிய சிவபெருமான் எழுந் தருளிய திருஆடானையை அடைந்து அவ்விறைவர் திருவடிகளில் தேன் பொருந்திய அழகிய மலர்களைச் சேர்ப்பவர்களின் முன் வினைகளாக உள்ளனயாவும் ஒழியும் .

குறிப்புரை :

பிறைமல்கு நீள்சடை , பஞ்சகௌவியம் , அஞ்சு - ஐந்து . போலி , அணிமலர் சேர்த்தலால் பழவினை பற்றறும் . ` உள்ளத்தே புகுந்தளிப்பவன் ஊனம் எலாம் ஓட `.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

துலங்குவெண்மழு வேந்திச்சூழ்சடை
அலங்கலானுறை யாடானை
நலங்கொண்மாமலர் தூவிநாடொறும்
வலங்கொள்வார்வினை மாயுமே.

பொழிப்புரை :

விளங்குகின்ற வெண்மழுவைக் கையில் ஏந்தி , சுற்றிய சடைமுடிமீது கொன்றை வில்வமாலைகளை அணிந்துள்ள சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ் விறைவனை அழகும் மணமும் கொண்ட மலர்களைத் தூவித் தொழுது நாள்தோறும் அவன் திருக்கோயிலை வலம்வருவார் வினைகள் மாயும் .

குறிப்புரை :

சடையசைதலையும் ஒளிர்தலையும் மாலையையும் கூறலாம் . நலம் - அழகு . வலங்கொள்ளல் வழிபாட்டின் உறுப்புக்களுள் ஒன்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

வெந்தநீறணி மார்பிற்றோல்புனை
அந்தமில்லவ னாடானை
கந்தமாமலர் தூவிக்கைதொழும்
சிந்தையார்வினை தேயுமே.

பொழிப்புரை :

தீயிடைவெந்த திருநீற்றை அணிந்தவரும் மார்பின் கண் மான்தோலை அணிந்தவரும் , தோற்றக் கேடு இல்லாத வருமான சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவரை மணமலர்களைத்தூவி வழிபடும் சிந்தனையை உடையவர் களின் வினைகள் தேயும் .

குறிப்புரை :

பா .4, பார்க்க . ` ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி ` சிந்தையார் வினை - சிந்தனை உடையவரது வினை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

மறைவலாரொடு வானவர்தொழு
தறையுந்தண்புன லாடானை
உறையும்ஈசனை யேத்தத்தீவினை
பறையுநல்வினை பற்றுமே.

பொழிப்புரை :

வேதங்களில் வல்ல அந்தணர்களோடு விண்ணில் உறையும் தேவர்களும் வந்து வணங்கும் நீர்வளம்சான்ற திரு வாடானையில் உறையும் ஈசனை ஏத்தத் தீவினைகள் அழியும் . நல்வினைகள் வந்துசேரும் .

குறிப்புரை :

வலார் - வல்லவர் ; பூசுரர் . வானவர் - சுரர் . ஆடானை யில் எழுந்தருளும் உடையவனை , பறையும் - அழியும் . பறைவது தீவினை . பற்றுவது நல்வினை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

மாயனும்மல ரானுங்கைதொழ
ஆயவந்தண னாடானை
தூயமாமலர் தூவிக்கைதொழத்
தீயவல்வினை தீருமே.

பொழிப்புரை :

மாயவனாகிய திருமாலும் , தாமரைமலர் மேலுறையும் நான்முகனும் கைகளால் தொழுது வழிபடுதற்குரிய வனாகிய அந்தணன் உறையும் திருவாடானையை அடைந்து அவ் விறைவனைத் தூய மலர்களைத் தூவிக்கைகளால் தொழுபவர்களின் தீய வல் வினைகள் தீரும் .

குறிப்புரை :

ஆய - ஆகிய . தீயவினை ; வல்வினை . அந்தணன் :- சிவபிரான் . மலர்தூவிக் கையால் தொழ வினை தீரும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

வீடினார்மலி வெங்கடத்துநின்
றாடலானுறை யாடானை
நாடிஞானசம் பந்தன்செந்தமிழ்
பாடநோய்பிணி பாறுமே.

பொழிப்புரை :

ஊழிக்காலத்து இறந்தவர்களின் உடல்கள் நிறைந்து எரிந்து வேகும் சுடுகாட்டுள்நின்று உருத்திரதாண்டவமாடும் இறைவன் உறையும் திருவாடானையை அடைந்து ஞானசம்பந்தன் அருளிய இச்செந் தமிழ் மாலையைப் பாடி வழிபடுபவர்களின் நோய்களும் பிணிகளும் நீங்கும் .

குறிப்புரை :

வீடினார் - இறந்தவர் . வெங்கடம் - வெப்பமுடைய காடு . ` கள்ளிமுதுகாட்டிலாடி `. பாடலால் நோயும் பிணியும் அழியும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 1

பொடியிலங்குந் திருமேனி யாளர் புலியதளினர்
அடியிலங்குங் கழலார்க்க ஆடும் மடிகள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம் மல்கவ் வெறிவார்திரைக்
கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே.

பொழிப்புரை :

திருநீறணிந்த திருமேனியர் . புலித்தோல் உடுத்தவர் . திருவடிகளில் விளங்கும் கழல்கள் ஆர்க்க ஆடுபவர் . அவர் உறையு மிடம் , இடிபோல் முழங்கும் கடல் அலைகளின் நீர்ப் பெருக்கு முத்துக் களை மிகுதியாகக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காழிப்பதியாகும் .

குறிப்புரை :

இலங்கும் - விளங்கும் . கடல் அலையொலி இடி யொலி போலுள்ளதாம் . கடி - விரைவு , மிகுதி . அடிகள் இடம் கடற்காழி என்றவாறே மேலும் இயைத்துக் கொள்க .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள்
அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ் வடிகள்ளிடம்
புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.

பொழிப்புரை :

மயக்கம் தரும் பிறவித்துயராகிய மாசினைப் போக்க எண்ணிய தொண்டர்கள் தான் வாழும் இடங்கள் எங்கும் பணி செய்ய நின்ற சிவபிரான் உறையுமிடம் , மேகம் போல வரையாது கொடுக்கும் கொடையாளர்களுடன் வேதஒலிபரவும் சிறப்பினதாய , கயல்மீன்கள் தவழும் வயல்கள் சூழ்ந்த காழிப் பதியாகும் .

குறிப்புரை :

துயர்மாசு - உம்மைத்தொகை . ` கைம்மாறு வேண்டாக் கடப்பாடுமாரி மாட்டு என் ஆற்றுங்கொல்லோ உலகு ` ( குறள் . 211). கொடையாளர் - அந்தணர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

கூர்விலங்குந் திரிசூல வேலர்குழைக் காதினர்
மார்விலங்கும் புரிநூலு கந்தமண வாளனூர்
நேர்விலங்கல் லனதிரை கள்மோதந் நெடுந்தாரைவாய்க்
கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே.

பொழிப்புரை :

கூரிய முத்தலைச் சூலத்தை ஏந்தியவர் . குழை யணிந்த செவியினர் . மார்பில் முப்புரிநூல் விளங்கும் மணவாளக் கோலத்தினர் . அவருக்குரிய ஊர் , மலைபோலக் கடல் அலைகள் வந்தலைக்கும் காழிப் பதியாகும் .

குறிப்புரை :

திரிசூலமாகி . வேலுடையவர் , மார்வு - மார்பு . உகந்த மணவாளன் . விலங்கல் - மலை . தாரை - நீரொழுக்கு , பெருமழை .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

குற்றமில்லார் குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்த பெருமானிடம்
மற்றுநல்லார் மனத்தா லினியார் மறைகலையெலாங்
கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.

பொழிப்புரை :

குற்றம் இல்லாதவர் . தம் குறைகளைக் கூறி வேண்டு பவருக்கு வரும் பழிகளைத் தீர்ப்பவர் . விடைக்கொடியை உயர்த்தி யவர் . அப் பெருமானுக்குரிய இடம் , நல்லவர் , மனத்தால் இனியவர் , வேதங்களைக் கற்றுணர்ந்து நல்லோர் செய்யும் பிழைதெரிந்து போக்கித் தலையளி செய்வோர் ஆகியவர்கள் வாழும் கடற்காழியாகும் .

குறிப்புரை :

குற்றம் இல்லார் . குறைபாடு செய்பவரது பழியைத் தீர்ப்பவர் . நல்லார் ; இனியார் ; கலையெல்லாம் கற்று நல்லாரானவர் என்று அந்தணரைக் குறித்தல் அறிக . அளிக்கும் - தலையளிசெய்யும்

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

விருதிலங்குஞ் சரிதைத் தொழிலார் விரிசடையினார்
எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக் கிடமாவது
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப் பிழைகேட்டலாற்
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.

பொழிப்புரை :

வெற்றியமைந்த புராண வரலாறுகளை உடையவர் . விரிந்த சடையினர் . எருது விளங்க அதன்மேல் பொலிவோடு அமரும் எந்தை . அவருக்குரிய இடம் , பெருமை பொருந்திய வேதங்களைப் பயில்வோர் ஓதக்கேட்டு அதிலுள்ள பிழைகளைப் பலகாலும் கேட்டுப் பழகிய வாசனையால் கிளிக் குலங்கள் தெரிந்து தீர்க்கும் காழிப்பதியாகும் .

குறிப்புரை :

சரிதை - ஒழுக்கம் . சீகாழியில் வேதியர்கள் வேதத்தை ஓதுங்கால் கேட்டுணர்ந்து , முன்புற்ற கேள்வி வன்மையால் , கிளியினங்கள் அதன்கண் பிழைகளைத் திருத்தும் அற்புதம் உணர்த்தப்பட்டது .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

தோடிலங்குங் குழைக்காதர் தேவர்சுரும் பார்மலர்ப்
பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க் கிடமாவது
கோடிலங்கும் பெரும்பொழில் கள்மல்கப் பெருஞ்செந்நெலின்
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.

பொழிப்புரை :

தோடும் குழையும் விளங்கும் காதினர் . வேதங்களை அருளியவர் . வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்து பெருமையோடு இலங்கும் சடைமிசைக் கங்கையைச் சூடியவர் . அவ்வடிகட்கு இடம் பெரிய கிளைகளோடு கூடிய மரங்கள் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ளதும் செந்நெற்காடுகளை உடைய வயல்களை உடையதுமான காழிப்பதியாகும் .

குறிப்புரை :

தோடும் குழையும் இலங்கும் காதர் . வேதர் - வேதத்தை யுடையவர் . கோடு - கொம்பு . செந்நெலின்காடு - செந்நெற்பயிர் நெருக்கம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்
தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்
இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலாற்
கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.

பொழிப்புரை :

மேருமலையை வில்லாகக் கொண்டு முப் புரங்களை எரித்து , அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசை வைத்துள்ள அடிகட்கு இடம் , இலைகளோடு பூத்து விளங்கும் தாழை நீர் முள்ளி ஆகியவற்றின் மணத்துடன் வேதம் வல்லமறையவர் கணம் வாழும் காழிப்பதியாகும் .

குறிப்புரை :

வைத்த அடிகள் என்னும் பெயரெச்சத்தொடர்க்கு இடையில் வகரமெய் பிற்பதிப்புக்களில் இருக்கின்றது . கைதை - தாழை . கண்டல் - நீர்முள்ளி , கலையிலங்குங்கணத் தினம் :- கல்வி விளங்கும் மறையவர் கூட்டம் ; மான்கூட்டம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ் வடர்த்தாங்கவன்
தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது
கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே.

பொழிப்புரை :

உலகில் மாறுபாடுடையவனாய் வாழ்ந்த இராவணன் அழுது இரங்க , அவன் தலை மார்பு ஆகியன ஒடுங்க அடர்த்துப் பின் அவன் தொழுது இரங்கிய அளவில் அவனது துயர் தீர்த்தருளிய இறைவற்கு இடம் வண்டும் பறவைகளும் மதிற்புறத்தே வாழும் கடற் காழியாகும் .

குறிப்புரை :

முரண் - வலி , மாறுபாடு . சிரம்உரம் - தலையும் மார்பும் . உகந்தார் - உயர்ந்த சிவபிரான் . கழுது - வண்டு . பேயும் ஆம் . புள் - பறவை .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகடனை
மேவினானும் வியந்தேத்த நீண்டா ரழலாய்நிறைந்
தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ் வொருவர்க்கிடங்
காவியங்கண் மடமங்கையர் சேர்கடற் காழியே.

பொழிப்புரை :

நான்முகனும் , தாமரைமலரில் வாழும் திருமகளை மருவிய திருமாலும் வியந்து போற்ற , அழலுருவாய் நீண்டுப்பின் அதனின் நீங்கி அவர்களுக்கு அருள்புரிந்த இறைவற்கு இடம் , குவளை மலர் போலும் கண்களை உடைய அழகிய மகளிர் வாழும் கடற்காழியாகும் .

குறிப்புரை :

விரிபோது - பூத்த தாமரைமலர் . மேவினான் - விரும்பிய திருமால் . ஓவி - நீங்கி . புரிந்த ஒருவர் என்னும் பெயரெச்சத் தொடரில் வகரம் விரித்தல் விகாரம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

உடைநவின் றாருடைவிட் டுழல்வார் இருந்தவத்தார்
முடைநவின் றம்மொழி யொழித்துகந்தம் முதல்வன்னிடம்
மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதரக்
கடைநவின்றந் நெடுமாடம் ஓங்குங்கடற் காழியே.

பொழிப்புரை :

உடையோடும் , உடையின்றியும் திரிபவரும் , கடுமையான விரதங்களைத் தவமாக மேற்கொள்பவருமான புத்தர் சமணர்களின் நாற்றமுடைய மொழிகளையொழித்து உகந்த முதல்வன் இடம் , கெண்டை மீன்கள் துள்ளிப் பாயும் நீர் நிறைந்த மடைகளோடு கூடிய வயல்கள் சூழ்ந்ததும் , வாயில்களை உடைய உயர்ந்த மாட வீடுகளைக் கொண்டுள்ளதுமான காழிப்பதியாகும் .

குறிப்புரை :

உடை நவின்றார் - உடை செய்தார் , உடுத்தார் . தேரர் , உடைவிட்டு உழன்றார் - ஆடையின்றித் திரிந்தவர் ; சமணர் . முடை - நாற்றம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

கருகுமுந்நீர் திரையோத மாருங் கடற்காழியுள்
உரகமாருஞ் சடையடி கள்தம்பா லுணர்ந்துறுதலாற்
பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ்
விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.

பொழிப்புரை :

கரிய கடல் அலைகளின் ஓதநீர் நிறைந்த காழிப் பதியுள் , பாம்பணிந்தவராய் விளங்கும் சடைகளை உடைய அடிகளின் அருளை உணர்ந்து ஓதுதலால் புகழ் பெருக வாழ்ந்து அன்பு செய்யும் தொண்டர்கள் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் சொன்ன இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆட அவர்களுடைய பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

உரகம் - பாம்பு . அடிகள் தம்பால் - சிவபிரானிடத்தில் . விரகன் - வல்லவன் , அறிஞன் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 1

தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.

பொழிப்புரை :

அடியவர் ஐம்புலக்களிறுகளையும் அடக்கி ஆண்டு , நாண்மலர்களைக் கொண்டு இண்டைகட்டிச் சார்த்தி வழிபாடு செய்யுமிடம் , வண்டுகள் பாடவும் , மயில்கள் ஆர்ப்பரிக்கவும் , மான் கன்றுகள் துள்ளவும் , சுனைகளில் கெண்டைகள் பாய்வதால் நீலமலர் மொட்டுக்கள் அலரவும் விளங்கும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

அஞ்சுகளிறும் - ஐம்புலங்களாகிய ஆண்யானைகளை யும் . ` ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம் உள்ளப் புண்ட ரிகத்துள் இருக்கும் புராணர் ` ( தி .1. ப .32. பா .6.) இண்டை கட்டி வழிபாடு செய்தல் வடநாட்டிலும் உண்டுபோலும் ! ` என்பரால் ` என்றது , காணாது கேட்டுப் பாடியருளியதைக் குறித்தது .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

பாதம்விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே
வேதநான்கும் பதினெட்டொ டாறும் விரித்தார்க்கிடம்
தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.

பொழிப்புரை :

விண்ணோர் பலரும்பாதம் பரவித் தொழ நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பதினெண் புராணங்களையும் விரித்துரைத்த சிவபிரானுக்கு இடம் , மலரின் மது உண்ட வண்டுகள் கீதம்பாட மந்திகள் கேட்டு மகிழும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

விண்ணோர் பலரும் பாதம் பரவிப் பணிந்து ஏத்த விரித்தார்க்கு இடம் கேதாரம் என்க . வண்டினம் கீதம்பாட மந்திகள் கேட்டுத் துள்ளும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

முந்திவந்து புரோதாய மூழ்கி முனிகள்பலர்
எந்தைபெம்மா னெனநின்றி றைஞ்சும் மிடமென்பரால்
மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்
கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே.

பொழிப்புரை :

முனிவர்கள் உதயத்துக்கு முன் எழுந்து நீராடி எந்தைபெருமான் என இறைஞ்சச் சடாதாரியான சிவபிரானுக்குரிய இடம் , மந்திகள் பாய்தலால் சரேலெனத் தேனைச் சொரிந்து முரிந்து வீழ்ந்த மலர்களின் மணங்கமழும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

புரோதாயம் :- புர + உதயம் = புரோதயம் , புர :- கீழ்த் திசை உதயத்திற்கு முன்னர் எனலுமாம் . ` நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம் ` புரோதயம் என்பது புரோதாயம் எனப் பிழையாய் நின்றது . சிவாலிங்கம் , சடாட்சரம் ஆதினம் ஆதிபன் ஆம்பா ( கண்ணாம்பா ஜகதாம்பா ) முதலியவற்றில் நீண்டதுபோல உதயம் - உதாயம் என்று நீண்டது பிழைவழக்கு . புரா + உத் + ஆயம் எனின் , ( கதிரவன் ) எழுமுன் என்க . ` தாயம் ` என்பதை ணமுல் ப்ரத்யயாந்த மாகக் கொள்ளின் முன்னர்க்கொடுத்து என்றுரைக்க . முனிகள் பலர் இறைஞ்சும் இடம் கேதாரம் . ` சரேல் எனச் சொரிந்து ` என்றிருந்தது போலும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

உள்ளமிக்கார் குதிரைம் முகத்தார் ஒருகாலர்கள்
எள்கலில்லா இமையோர்கள் சேரும் மிடமென்பரால்
பிள்ளைதுள்ளிக் கிள்ளைபயில்வ கேட்டுப் பிரியாதுபோய்க்
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.

பொழிப்புரை :

தியான பலம் உடையோரும் , குதிரை முகமுடைய கின்னரரும் , ஒற்றைக் காலுடைய பிரமதகணத்தவரும் இமையவரும் சிவபிரானை வழிபடக் கூடுமிடம் , தம்குஞ்சுகள் பசியோடு தம்மை அழைப்பதைக் கேட்டுக் கிளிகள் ஏனற் கதிர்களைக் கொய்து வந்து அவற்றின் வாயிற் பெய்யும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

உள்ளம் மிக்கார் - தியானபலம் மிகுந்தவர் . குதிரை முகத்தார் - கின்னரர் ஸ்யா திக் , க்ஷரஹ் : கிம்ரூபுர த்ருட வதனோ மயூம் என்பது ( அமரகோசம் முதற்காண்டம் சுலோகம் 74) ஒருகாலர்கள் :- ` கொம்பைப் பிடித்தொருக்காலர்கள் இருக்கான் மலர்தூவி ` ( தி .7. ப .78. பா .3.) பிரமதகணத்தவருள் ஒருவகையர் என்னும் பவிடிய புராணக்கூற்று இங்குப் பொருந்துமோ ?

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால்
வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும் இடமென்பரால்
மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.

பொழிப்புரை :

பல்லூழிக்காலம் வேதப் பொருள்களை உணரும் அடியவர் சிவபெருமானை வாழ்த்தி இறைஞ்சிச் சேரும் இடம் , உணவு பெற விரும்பிக் கலப்பையால் உழுவார்க்கு அந்நிலத்தில் மாணிக்க மணிகள் கிடைக்கும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

ஊழிஊழி உணர்வார்கள் . புழுதியின் மரூஉ பூழ்தி , ( பொழுது - போழ்து ), கிளைக்க - கிண்ட .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரைதன்மேல்
தேறுசிந்தை யுடையார்கள் சேரும் இடமென்பரால்
ஏறிமாவின் கனியும்பலா வின்இருஞ் சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே.

பொழிப்புரை :

நீரில் மூழ்கித் திருநீற்றை அணிந்து , நிலத்திடை உண்டு , நீண்ட மலையின்மேல் தெளிந்த சிந்தை உடைவர்களான தாபதர்கள் வாழும் இடம் , குரங்குகள் மா , பலா மரங்களில் ஏறி அவற்றின் கனிகளைக் கீறி உண்டு மகிழ்ந்து வாழும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

தாபதரொழுக்கம் முதலீரடிகளில் குறிக்கப்பட்டது . தேறு சிந்தை - தெளிந்த உள்ளம் . மாமரத்தில் ஏறிப் பழங்களையும் பலா வைக் கீறிச் சுளைகளையும் உண்டு திரிவன குரங்கினங்கள் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத்
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க் கிடமென்பரால்
உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக்கல் லறைகண்மேல்
கிடந்தவேங்கை சினமாமுகஞ் செய்யுங் கேதாரமே.

பொழிப்புரை :

சிவபிரான் வானோர் தொழுமாறு மறை ஓதியும் , மங்கை பங்கராகியும் , வேதாகமங்களை அருளியும் , அடியவர் வினை களைத் தீர்த்தற்கு எழுந்தருளி விளங்கும் இடம் , காற்றடிக்கப் பூத்த வேங்கை மலர்கள் பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்து புலியென மற்ற புலிகளை மருள்விக்கும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

சிவபிரான் , மங்கைபங்கராகியும் வேதாகமங்களை அருளியும் உயிர்களின் வினைகளைத் தீர்க்கின்ற உண்மை முன்னீரடி களில் உணர்த்தப்பட்டது . ` ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவு கொண்டு , காரணன் அருளானாகில் கதிப்பவர் இல்லை ஆகும் ` என்பது சிவாகம வசனம் . காற்றடிக்கப் பூத்த வேங்கைப் பூக்கள் கற்பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்தன . வேங்கை கண்டு பிறிதொரு வேங்கை எனச் சினந்தது .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.

பொழிப்புரை :

கடல்சூழ்ந்த இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது அம்மலைக்கீழ் அகப்படுத்திக் கால்விரலை ஊன்றி அடர்த்த இறைவனுக்கு இடம் , குரவம் , கோங்கு , அசோகு , ஞாழல் , சுரபுன்னை ஆகிய மரங்களில் பூத்த மலர்களில் முறையாக வண்டு பண்செய்து தேனுண்ணும் கேதாரமாகும் .

குறிப்புரை :

அரவம் - முழக்கம் . வரை - மலை . குரவம் - குராமரம் . பிண்டி - அசோகம் . கிரமம் - முறை .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

ஆழ்ந்துகாணா ருயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர்
தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க் கிடமென்பரால்
வீழ்ந்துசெற்றுந் நிழற்கிரங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக்
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே.

பொழிப்புரை :

பன்றியுருக் கொண்டு மண் இடந்தும் காணாத திருமாலும் , அன்னப்புள்ளாய் விண் பறந்தும் காணாத பிரமனும் தாழ்ந்து தம் முடிசாய்த்து வணங்க நின்றவனாகிய சிவபிரானுக்கு உரிய இடம் , சிங்கம் யானைமேல் வீழ்ந்து அழித்து அதன்மருப்பைப் பிளந்து குருத்தை உண்ணும்போது முத்துக்கள் மருப்பிலிருந்து உதிரும் கேதாரமாகும் .

குறிப்புரை :

ஆழ்ந்துகாணார் - பன்றியுருக்கொண்டு மண் இடந்தும் காணாத திருமால் . உயர்ந்து எய்தகில்லார் - அன்னப்புள் வடிவு கொண்டு விண்பறந்தும் காணாத அயன் , தாழ்ந்து தம்தம் முடிசாய நின்றவர் சிவபிரான் . சாய்ந்தவர் - அயனும் அரியும் . சிங்கம் யானை மேல் வீழ்ந்து அழித்து மருப்பைப் பிளந்து உண்ணுகின்றுழி முத்துக்கள் உதிரும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

கடுக்கள்தின்று கழிமீன் கவர்வார்கண் மாசுடம்பினர்
இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணா விடமென்பரால்
அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங் கவர்வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.

பொழிப்புரை :

துவர்க்காய்களைத் தின்று கழிமீன்களை யாரும் அறியாமல் கவர்ந்து உண்பவரும் , மாசு பொருந்திய உடலினரும் மக்களைத் துன்பநெறியில் செலுத்துவோருமாகிய சமணர்கள் சாராத இடம் , அருகில் இருந்து அறநெறியான வார்த்தைகளைக் கேட்டு அடிய வர் வினைகளைக் கெடுக்கும் பெருமான் உறையும் கேதாரமாகும் .

குறிப்புரை :

கடுக்கள் தின்று - துவர்க்காய்கள் தின்று . கழிமீன்கள் கவர்வார்கள் என்றதில் அவர் புலைமை குறிக்கப்பட்டது . இடுக்கண் - ( இடுங்குகண் ) துன்பம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்
ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர்
வேந்தராகி யுலகாண்டு வீடுகதி பெறுவரே.

பொழிப்புரை :

வயல்வளம் உடைய காழிநகரில் தோன்றிய ஞானசம்பந்தன் , நீர் அருவிகளை உடையதும் , இமையோர்கள் உறைவதுமாகிய கேதாரத்து இறைவர்மீது ஆய்ந்து சொன்ன அருந்தமிழ் பத்தையும் இசையோடு பாடி வழிபட வல்லவர் . வேந்தராய் உலகை ஆண்டு முடிவில் வீடுகதி பெறுவார்கள் .

குறிப்புரை :

ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரம் என்றதில் , கேதாரத்தை வழிபடும் இமையவர் அவ்வாறு திங்களும் உறைகின்ற இடம் நீர்க்கோடு என்பது குறிக்கப்பட்டது . வீடுகதி - வீட்டிற்குரிய நெறி . வீடும் ( பாசநீக்கம் ) கதியும் ( சிவப்பேறு ) என உம்மைத் தொகையுமாம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 1

வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர்ப்
பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள்
திங்கள்சூடித் திரிபுரம்ஒர் அம்பால்எரி யூட்டிய
எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்இடர் கழியுமே.

பொழிப்புரை :

விரும்பத்தக்க தேன் விம்மும் மலர்கள் கூடிய கூந்தலினராகிய இளம்பெண்கள் ஆட , மணம் விரவும் நீர்நிலையில் வாழும் செம்மைமிக்க கண்களை உடைய கரிய கயல்மீன்கள் துள்ளிப் பாயும் புகலூரில் விளங்கும் திங்கள் சூடித் திரிபுரங்களை ஓரம்பால் எரி யூட்டிய எங்கள் பெருமான் திருவடிகளைப்பரவ இடர் கெடும் .

குறிப்புரை :

குழலில் மலரினது கள் இருத்தலால் , ` வெங்கள் விம்மு குழல் ` எனப்பட்டது . செங்கட் கருங்கயல் ; திரிபுரம் ஓரம்பு :- முரண் டொடை . நாளும் பரவ இடர்கழியும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

வாழ்ந்தநாளும் இனிவாழு நாளும்இவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன் புகலூரையே
சூழ்ந்தவுள்ளம் முடையீர்கள் உங்கள்துயர் தீருமே.

பொழிப்புரை :

இதுவரை வாழ்ந்த நாளையும் இனி வாழும் நாளையும் அறிவீரேயானால் எம்பெருமானை ஏத்தாத நாள்கள் வீழ்ந்த நாட்கள் என்றறிந்தும் , எம்பெருமானை ஏத்தும் நல்லூழாகிய விதி இல்லாதவர்களே ! பிறை மதிசூடிய சடையினான்தன் புகலூரை மறவாது நினையும் உள்ளம் உடையீர்களாயின் உங்கள் துயர் தீரும் .

குறிப்புரை :

உடம்பொடு உயிர்வாழ்வின் இறந்த காலத்தையும் அறிவீர் எனில் :- ` ஆர் அறிவார் சாநாளும் வாழ்நாளும் ` ( தி .1 ப .41 பா .3.) எம் பெருமானை ஏத்தாத நாள் வாழ்ந்த நாளாகா . ` நின்திரு வருளே பேசின் அல்லால் பேசாத நாளெல்லாம் பிறவாநாளே ` ( தி .6 ப .47 பா .10) சூழ்ந்த - ஆராய்ந்த .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

மடையின்நெய்தல் கருங்குவளை செய்யமலர்த் தாமரை
புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள்
தொடைகொள்கொன்றை புனைந்தானொர் பாகம்மதி சூடியை
அடையவல்லவர் அமருலகம் ஆளப்பெறு வார்களே.

பொழிப்புரை :

மடைகளில் நெய்தல் , குவளை , செந்தாமரைமலர் ஆகியன விளங்க , அருகில் செந்நெல் விளையும் வயல்களை உடைய புகலூரில் தன்பாகத்தே கொன்றை மாலை சூடி மதிபுனைந்து உமை யோடு விளங்கும் சிவபிரானை அடைய வல்லவர் அமருலகு ஆள்வர் .

குறிப்புரை :

தொடை - மாலை . அமருலகம் :- அமரருலகம் என்பது இவ்வாறு ஆளப்பட்டது . வன்மை பேற்றிற்குக்காரணம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

பூவுந்நீரும் பலியுஞ் சுமந்து புகலூரையே
நாவினாலே நவின்றேத்த லோவார்செவித் துளைகளால்
யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கடாம்
ஓவும்நாளும் உணர்வொழிந்த நாளென் றுள்ளங்கொள்ளவே.

பொழிப்புரை :

பூவும் , நீரும் , நிவேதனப் பொருள்களும் எடுத்து வந்து புகலூரை அடைந்து , அங்குள்ள பெருமானை நாவினால் நவின்று , ஏத்த வல்லவராய் , செவிகளால் அவன் பெருமையல்லால் யாதும் கேளாதவராய்த் தொண்டுபூண்ட அடியவர்களே இறைவனை நினைதல் பேசுதல் இல்லாத நாள்களைப் பயனின்றிக் கழிந்த நாள் என்றும் உணர்வு ஒழிந்த நாள் என்றும் கருதுவர் .

குறிப்புரை :

பலி - நிவேதனம் . ஓவார் - நீங்கார் . அடியார்கள் அவன் பெருமை அல்லால் செவித்துளைகளால் யாதும் கேளார் . ஓவார் , ஓவும் நாள் உணர்வு ஒழிந்த நாள் என்க . ` ஓவும் நாள் உணர்வு அழியும் நாள் ` ( தி .7 ப .48 பா .3)

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள்
முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால்
இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச் சிறிதெளியரே.

பொழிப்புரை :

அன்னங்கள் கன்னிப் பெடைகளைத் தழுவி ஒதுங்கி அழகிய நடையினவாய்ப் பொன்போன்று அலரும் காஞ்சி மரங்களின் நிழலில் ஆரவாரிக்கும் புகலூரில் , முன் நாளில் முப்புரங்களை எரித்த மூர்த்தியின் இயல்புகளைக் கருதுமிடத்து இத்தகையவர் என்னப் பெரிதும் அரியராய் அடியார்கள் ஏத்த மிக எளியவர் ஆவர் .

குறிப்புரை :

புல்கி - தழுவி . ஒல்கி - ஒதுங்கி . இன்னர் என்னப் பெரிது அரியர் :- ` அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய வொண்ணார் ( தி .6 ப .85 பா .3). ` இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே ` ( தி .6 ப .97 பா .10).

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

குலவராகக் குலமிலரும் மாகக்குணம் புகழுங்கால்
உலகினல்ல கதிபெறுவ ரேனும்மலர் ஊறுதேன்
புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக லூர்தனுள்
நிலவமல்கு சடையடிகள் பாதம் நினைவார்களே.

பொழிப்புரை :

உயர் குலத்தினராயினும் அல்லாதவராயினும் அவருடைய குணங்களைப் புகழுமிடத்து அவர் நற்கதி பெறுவர் . ஆத லின் , அடியவர்கள் மலர்களில் விளைந்த தேனால் , புலால் நாறும் இடங்களிலும் மணம் வீசுகின்ற , அழகிய புகலூரில் பிறையணிந்த சடை யுடைய அடிகளின் திருவடிகளையே நினைவார்கள் .

குறிப்புரை :

குலவர் - உயர் குலத்திற் பிறந்தவர் . ஆக :- இரண்டும் வியங்கோள் . குணம் - இறைவனுக்குள்ள எண்குணங்கள் , பொருள் சேர்புகழ்கள் . நல்லகதி :- ` நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவு இலை ` ( தி .3 ப .24 பா .1). புலவும் - புலால் நாற்றம் உடையவை . நிலவம் - பிறை .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்அர வாரமாப்
பூணுமேனும் புகலூர்தனக் கோர்பொரு ளாயினான்
ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேனும் பிரானென்ப ரால்எம்பெரு மானையே.

பொழிப்புரை :

புகலூரைத் தமக்குரிய இடமாகக் கொண்ட இறைவர் ஆணும் பெண்ணுமான வடிவுடையரேனும் , பாம்புகளை உடல் முழுதும் அணிகலன்களாகப் பூண்பவரேனும் , ஊரார் இடும் பிச்சையை ஏற்று உண்பவரேனும் , கோவணம் ஒன்றையே உடையாகக் கொண்டவரேனும் , அடியவர் அவரையே பிரான் என்பர் .

குறிப்புரை :

ஊணும் ஊரார் இடுகின்ற பிச்சையுண்டி . உடையும் கோவணம் , பிச்சையைப்பேணும் ( விரும்பும் ) கோவணத்தைப் பேணும் . எம்பெருமானையே பிரான் என்பர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுயர் இலங்கைக்கோன்
கைகளொல்கக் கருவரை யெடுத்தானை யோர்விரலினால்
செய்கைதோன்றச் சிதைத்தருள வல்லசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! உய்தி பெற வேண்டில் எழுக , போதுக : உயரிய இலங்கைக்கு அரசனாகிய இராவணனை , கைகளால் கயிலை மலையைப் பெயர்த்தவனை ஓர்விரலால் தன் வன்மை தோன்றச் சிதைத்து அருளவல்ல சிவன் மேவிய , பூம் பொய்கை சூழ்ந்த புகலூரைப் புகழ்ந்து போற்ற அதுவே அடைதற்குரிய மெய்ப் பொருள் ஆகும் .

குறிப்புரை :

நெஞ்சே ! உய்யவேண்டுவையாயின் எழு . போத :- புகுத என்பதன் மரூஉ . ஒல்க - தளர . புகழ்ந்தால் மெய்ப்பொருள் கிட்டும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழ லாயினான்
சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும் புகலூரையே.

பொழிப்புரை :

சக்கராயுதம் உடைய திருமாலும் , நான்முகனும் இதுவே ஏற்ற வழி எனக்கூறுபடுத்திப் பன்றியாயும் அன்னமாயும் வடிவு கொண்டு தேட அழலுரு ஆனவனும் முருகனின் தந்தையும் ஆகிய புகலூர்ப் பெருமானே நாம் சரண் அடைதற்குரியவன் ஆவன் , என்று தலைதாழ்த்தி வணங்குமின் . உலகம் புகழும் செல்வமும் நலமும் நிறையும் .

குறிப்புரை :

நேமியான் - சக்கிராயுதம் ஏந்திய திருமால் , நான்கு முக முடைய நெறியண்ணல் எனமாறுக . ஆம் இது என்று தகைந்து - மேலி டம் ஆகும் கீழிடமாகும் இ ( றைவனது இ ) ந்நிலை என்று கூறுபடுத்தி . சாமி - முருகன் . புகழ் செல்வம் :- வினைத்தொகை . உம்மைத் தொகை யும் ஆம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

வேர்த்தமெய்யர் உருவத் துடைவிட் டுழல்வார்களும்
போர்த்தகூறைப் போதிநீழ லாரும் புகலூர்தனுள்
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே.

பொழிப்புரை :

வியர்வை தோன்றிய உடலினோரும் , உடலில் உடையின்றித்திரிபவரும் , ஆடையைப் போர்த்திக் கொண்டு அரச மரநிழலில் உறைவாரும் ஆகிய சமணரும் புத்தரும் கூறும் நெறிகளை விடுத்து , புகலூரில் கங்கைசூடிய பெருமான் திருவடிகளைக் கருதி வழிபடுமிடத்து அவனுடைய இயல்புகளை ஆராய முற்படாமல் அவன் திருவடிகளை வணங்கி உய்மின் .

குறிப்புரை :

கூறை - ஆடை . போதி - அரசமரம் . தீர்த்தம் - கங்கை . கரந்த - மறைத்த . ஓர்த்து - ஆராய்ந்து .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை
அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே.

பொழிப்புரை :

அறிவார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூரில் நன்கு வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசவல்லவனும் , விடையூர்திய னும் , அழிவற்ற அனலில் நின்று ஆடுபவனும் ஆகிய பெருமானை ஞான சம்பந்தன் சொன்ன இத்தமிழ்மாலையைப் பாடி , ஆடிப் போற்ற , பாவம் கெடும் .

குறிப்புரை :

புந்தி - அறிவு . அந்தம் - முடிவு , முடிவின்மை இறை வனுக்குரியது . ( தி .2 ப .117 பா .11). தமிழ் - இத்திருப்பதிகம் பாடி ஆடினால் பாவம் கெடும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 1

கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா
ஏனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை
வானநாடன் அமரர்பெரு மாற்கிட மாவது
கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

வளைந்த பிறையாகிய சிறிய தலைமாலை , ஒளி உமிழும் வெண்ணிலவில் குறிஞ்சி நிலத்தில் தினைக்கொல்லையில் பூத்த கடம்பமலர்மாலை ஆகியவற்றைப் புனைந்த சடையை உடைய வானநாடனும் , அமரர் பெருமானும் ஆகிய இறைவற்கு இடமாவது சோலைகளை வேலியாகக் கொண்டதும் உப்பங்கழிகளை உடையது மாகிய கடல்நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

கூனல்திங்கட் குறுங்கண்ணி :- வளைந்த பிறையாகிய சிறியதலைமாலை . ஏனல் - தினை . மராங்கோதை - கடம்பலர் மாலை . ` வான நாடன் ; அமரர் பெருமான் `( தி .3 ப .118 பா .4; தி .7 ப .25 பா .2; தி .81 ப .1 பா .5; தி .39 ப .3)

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

விலங்கலொன்று சிலையாமதில் மூன்றுடன் வீட்டினான்
இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவது
மலங்கியோங்கிவ் வருவெண்டிரை மல்கிய மால்கடல்
கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

மேருமலை ஒன்றை வில்லாகக் கொண்டு மும் மதில்களை அழித்தவனும் அழகிய கழுத்தில் ஆமை ஓட்டைப் பூண்ட வனும் ஆகிய இறைவனுக்கு இடம் , கலங்கி ஓங்கி வரும் வெண் திரை களை உடைய கடலின் கரையில் கலங்கிய நீர்ப்பெருக்கோடு கூடிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

விலங்கல் - மேருமலை . ஆமை கழுத்திற் பூண்டான் . மலங்கி - அலைந்து .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில்
முறிகொண்ஞாழல் முடப்புன்னை முல்லைமுகை வெண்மலர்
நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு நாதற் கிடமாவது
கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

தளிர்களோடு கூடிய ஞாழல்மலர் , வளைந்த புன்னை மரத்தில் பூத்தமலர்கள் , வெள்ளிய முல்லையரும்புகள் , தேன் நிறைந்த கொன்றைமலர் ஆகியவற்றை விரும்பி அணியும் பெருமானுக்கு இடம் , மணம் கமழும் தாழைமலர் , நெய்தல்மலர் ஆகியவை நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட , கரிய ஓதம் பரவி விளங்கும் கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

வெறி - மணம் . கைதை - தாழை . முறி - தளிர் . ஞாழல் - மரம் , கோங்கு . நறை - தேன் . கறை - கறுப்பு .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

வண்டுபாட வளர்கொன்றை மாலைமதி யோடுடன்
கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் மெனவைத்து கந்தவொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

வண்டுகள் பாடுமாறு மலர்ந்த கொன்றை மலர் மாலையை இளம்பிறையோடு ஒருசேர அணிந்து , சுருண்ட சடையுள் குளிர்ந்த கங்கையை ஐயப்படுமாறு மறைத்துவைத்து மகிழ்ந்த இறைவனுக்கு இடம் , தாழைவேலி சூழ்ந்ததும் உப்பங்கழிகள் நிறைந்ததும் ஆகிய கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

மாலைமதி :- ` மாசில்வீணையும் மாலைமதியமும் ` கோலம் - அழகு . சிவவேடம் . குருள்குஞ்சி - குருண்டசடை , குருண்டவார் குழற்சடை யுடைக்குழகன் ( தி .2 ப .105 பா .11).

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந் தேத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடு வெண்திங்கள் நிகழ்வெய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவது
கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

நல்லவர் மகிழ்ந்தேத்த , கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடுகூடிய அழகோடு , தண்மையான அழகிய சடையில் நீண்டநிலாக்கதிர்களைப் பரப்பும் இளம்பிறை விளங்கப் போருடற்றும் சூலப்படையைக் கையின்கண் கொண்டுவிளங்கும் சிவ பிரானுக்குரிய இடம் ஓதம் பெருகும் கரிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக் காரோணமாகும் .

குறிப்புரை :

வார் - கச்சு , நிகழ்வு - விளக்கம் . கார் - மேகம் . ஏத்தவும் எய்தவும் புல்குகையார்க்கு இடம் காரோணம் என்க . ` பரமாயவர் ` என்றும் பாடம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

விடையதேறிவ் விடவர வசைத்தவ் விகிர்தரவர்
படைகொள்பூதம் பலபாட ஆடும்பர மரவர்
உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவது
கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

விடைமீது ஏறி வருபவனும் , விடம்பொருந்திய பாம்பை இடையில்கட்டிய விகிர்தனும் , பூதப்படைகள் பாட ஆடும் பரமனும் , புலித்தோலை உடையாக உடுத்தவனும் ஆகிய சிவபெரு மானுக்குரிய இடம் , மீன்களாகிய செல்வங்கள் நிறைந்த கழிசூழ்ந்த கடல்நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

விடை ஏறி நச்சுப்பாம்பை அரைக்கச்சாகக்கட்டிய விகிர்தர் . பூதங்கள் பாட ஆடும் பரமர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும் மலர்ப்பூசனை
செய்துவாழ்வார் சிவன்சேவடிக்கே செலுஞ் சிந்தையார்
எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற் கிடமாவது
கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

மனத்தைப் பாழ்படுத்தி வாழும் பொய்ம்மை வாழ்வுடையாரும் , சிவன் சேவடிக்கே செல்லும் சிந்தையராய் மலர் தூவிப் பூசனைசெய்து வாழ் அடியவரும் தம்மை எய்தவாழ்வாராகிய அழகிய பெருமானுக்கு இடம் , தாழைவேலியையும் உப்பங் கழிகளை யும் உடைய கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

பொய்து வாழ்வு - பொள்ளலுடையதாகிய வாழ்வு . ஆர் - பொருந்திய , வாழ்வாரும் சிந்தையாரும் எய்த வாழ்வாராகிய நக்கர் . பொய்து வாழ்வார் மனத்தைப் பாழ்படுக்கும் பூசனை என்றலும் பொருந்தும் . பூசனை செய்து வாழ்வாரும் சிவன் சேவடிக்கே செலுஞ் சிந்தையாரும் எய்த வாழ்பவர் நக்கர் . கைதல் (- தாழை ) என்பது அருஞ்சொல் . கைதல் சூழ்கழிக்கானல் ` ( தி .3 ப .66 பா .2).

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

பத்திரட்டி திரடோ ளுடையான் முடிபத்திற
வத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவது
மைத்திரட்டிவ் வருவெண்டிரை மல்கிய மால்கடல்
கத்திரட்டுங் கழிசூழ் கடனாகைக் காரோணமே.

பொழிப்புரை :

இருபது தோள்களை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியச் சிவந்த கால் விரல்களால் அடர்த்த பெருமானுக்குரிய இடம் , கரிய மணலைத்திரட்டி வரும் வெண்திரைகளை உடைய பெரியகடலைச் சூழ்ந்துள்ள கழிகள் ஒளிசிறந்து ஒலியெழுப் பும் கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

பத்து இரட்டிதோள் - இருபது தோள்கள் . அத்து - சிவப்பு . மை திரட்டிவரு வெள்திரை எனப் பிரிக்க . கத்து - ஒளி .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

நல்லபோதில் லுறைவானு மாலுந் நடுக்கத்தினால்
அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது
மல்லலோங்கிவ் வருவெண்டிரை மல்கிய மால்கடல்
கல்லலோதங் கழிசூழ் கடனாகைக் காரோணமே.

பொழிப்புரை :

நல்ல தாமரை மலரில் உறையும் நான்முகனும் , திருமாலும் நடுக்கத்தால் இவரே சிவபரஞ்சுடர் எனவும் அல்லர் எனவும் ஐயுற நின்ற பெருமானுக்குரிய இடம் , வளமோங்கிவரும் வெள்ளிய அலைகள் நிரம்பிய பெரிய கடலினது ஒலிக்கும் ஓதங்களை யுடைய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

இவர் சிவபெருமான் அல்லார் எனவும் இவரே சிவ பரஞ் சுடர் ஆவார் எனவும் ஐயுற நின்ற பெருமான் . மல்லல் - வளம் , கல்லல் - ( சகரர் ) தோண்டுதல் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட் டுழல்வார்களும்
பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண் டுழல்வார்களும்
நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவது
கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

தாமரைமலர் போன்று சிவந்த கல்லாடையை உடுத்தவர்களும் உடையின்றித் திரிபவர்களும் கையில் ஏந்திய மண்டையில் பிறர் இடும் பிச்சையை உணவாகக் கொண்டு உழல் பவரும் ஆகிய புத்தர்களும் சமணர்களும் விரும்பிக் காணாத வாறு நின்ற பெருமானுக்கு உரிய இடம் ஆழமும் நீர்ப் பெருக்கும் உடைய கழிகள் சூழ்ந்து விளங்கும் கடல்நாகைக் காரோணமாகும் .

குறிப்புரை :

சமணரும் தேரரும் இங்குக் குறிக்கப்பட்டவாறு காண்க . கயம் - ஆழம் , நீர் , பெருமை . ` பியர்ந்த ` பி . பே .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான்
நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன்நல் லார்கள்முன்
வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்தமிழ்
சொல்லுவார்க்கும் இவைகேட்ப வர்க்குந்துய ரில்லையே.

பொழிப்புரை :

நீர்நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றியவரும் நல்ல கேள்வியை உடையவரும் ஆகிய தமிழ் ஞானசம்பந்தர் நல்லோர்கள்முன் வல்லவாறு பாடிய காரோணத்துத் திருப்பதிகமாகிய இவ்வண்தமிழைச் சொல்பவர் கட்கும் கேட்பவர்கட்கும் துன்பம் இல்லை .

குறிப்புரை :

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருநாகைக் காரோணத்தில், நல்லோர்கள் முன்னர், இத்திருப்பதிகத்தைப் பாடி யருளிய உண்மை குறிக்கப்பட்டது.

பண் :செவ்வழி

பாடல் எண் : 1

மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரமூன் றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.

பொழிப்புரை :

கங்கையைச் சடையில் கரந்து , பிறைமதியைச் சூடி , மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த குழகனது இடம் , எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய திருமாகாளமாகும் .

குறிப்புரை :

கங்கைச்சடையன் , பிறைசூடி , மானேந்தி , முப்புர மெரித்த முதல்வன் . திசையெலாம் பரவிய புகழுடைய தலம் . ` மான் ` உமாதேவியுமாம் . ` விற்றாங்கி யகரம் வேல்நெடுங்கண்ணி வியன் கரமே ` ( அப்பர் ) ` இசையால் திசைபோயது `, சுலாய் - சுற்றி . ஊர் இரும்பை ; கோயில் மாகாளம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தாய் நீறெழக் கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.

பொழிப்புரை :

வேதவித்தாய் , வெண்ணீறுபூசி , வினைகள் யாவற்றையும் அழித்து , கொடிய திரிபுரங்களை நீறெழச் செய்து , குற்றங்களுக்கு விதையானவற்றைத் தீர்த்து , அருள்புரியும் சிவ பிரானது இடம் , திருஇரும்பை நகரில் உள்ளதும் , மாதவத் தோரும் மறையோரும் தொழ நின்றதுமான திருமாகாளமாகும் .

குறிப்புரை :

மாதவத்தோரும் மறையோரும் தொழ நின்ற சிறப்புடையது மாகாளம் . சிவபிரான் வேதவித்து , வெண்ணீறாடி , வினை யெலாம் நீறுபட அழித்தவன் . ஏதவித்து - குற்றத்திற்கு விதை.

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

வெந்தநீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மா னிடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள்
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.

பொழிப்புரை :

திருவெண்ணீற்றையும் எலும்பையும் அணிந் தவனும் , விடைஊர்தியனும் , எந்தையும் , தலைவனுமாகிய இறைவனது இடம் , அழகிய சோலைகள் சூழ்ந்ததும் மணம் கமழும் பலாக் கனிகளை மந்திகள் ஏறிப் பறித்து உண்டு திரியும் பொழில்கள் சூழ்ந்தது மாகிய திருஇரும்பை நகரில் உள்ள திருமாகாளம் ஆகும் .

குறிப்புரை :

பலவின்கனிகள் - பலாப்பழங்கள் . பல இனிய கனிகள் எனலும் பொருந்தும் . மந்திகள் கொண்டுவந்து உண்டு திரியும் மாகாளம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்
எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.

பொழிப்புரை :

நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும் , மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம் , குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும் .

குறிப்புரை :

மலையான் - இமாசலராசன் . வேழம் - யானை . எஞ்சல் - குறைதல் . மஞ்சு - மேகம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள்
கூசவானை யுரித்தபெரு மான்குறை வெண்மதி
ஈசனெங்கள் இறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே.

பொழிப்புரை :

குற்றமற்ற திருநீற்றுப் பொடியைப் பூசியவனும் , விடையூர்தியனும் , மலைமகள் கூசுமாறு யானையை உரித்த பெருமானும் , பிறைமதி சூடிய ஈசனும் ஆகிய எங்கள் இறைவனது இடம் , திரு இரும்பையில் உள்ளதும் , அடியவர் மலர் கொண்டு அணிவித்து மகிழ்வதுமாகிய திருமாகாளம் ஆகும் .

குறிப்புரை :

பூசும்பொடி , மாசு இல்பொடி , பொருப்பான் - இமாசல ராசன் , தேவியார் கூசுமாறு ஆனையை உரித்தான் . மாசு இலோர்கள் - மும்மலமாகிய குற்றம் இல்லாத சைவமறையோர் அடியார் முதலியோர்கள் , (தி. 2 ப. 6 பா. 10 பார்க்க) .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.

பொழிப்புரை :

கலைகள் குறைந்த பிறைமதியைச் சூடிக் கூத்தாடிய வரும் , வினைகளை அழிக்கும் பரமரும் , தூய்தான ஆறு குணங்களை உடையவரும் , பரவலான சடைகளை உடைய இறைவ ரும் , எங்கள் பெருமானுமாகிய இறைவரது இடம் திருஇரும்பை நகரில் வேத வித்துக்கள் வழிபடும் திருமாகாளமாகும் .

குறிப்புரை :

குனித்தான் - கூத்தாடிய பிரான் . பறைவது - அழிவது . பரமன் முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருள் . பகவன் - சாட்குண்யன் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

பொங்குசெங்கண் அரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமானென நின்றவர் தாழ்விடம்
எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.

பொழிப்புரை :

சடையில் பாம்பையும் பிறையும் பகை நீக்கித் தங்க வைத்த பெருமானும் , எவ்விடத்தும் விருப்போடு எழுந்தருளி விளங்குபவனுமாகிய இறைவனது இடம் திருஇரும்பையூரில் வானளாவிய பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருமாகாளம் ஆகும் .

குறிப்புரை :

சடையில் பாம்பும் பிறையும் பகையின்றி வாழவைத்த பெருமான் . ` பொங்குசெங்கண்ணரவு ` என்றதால் , விளங்கும் பெருங் கோபம் சடையின்கண் தணிந்தது . தாழ்வு - எழுந்தருளுதல் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

நட்டத்தோடு நரியாடு கானத்தெரி யாடுவான்
அட்டமூர்த்தி யழல்போ லுருவன் அழகாகவே
இட்டமாக இருக்கும் இடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.

பொழிப்புரை :

நரிகள் விளையாடும் இடுகாட்டில் எரியேந்தி நடனம் புரிபவரும் , அட்டமூர்த்தி வடிவினரும் , அழல் உருவினரும் ஆகிய இறைவர் விருப்போடு எழுந்தருளிய இடம் திருஇரும்பை நகரில் உள்ளதும் வலம் வந்து தொழுவார் பிணிகளைத் தீர்ப்பதுமாகிய திருமாகாளமாகும் ,

குறிப்புரை :

நட்டம் - திருக்கூத்து . அட்டமூர்த்தி - எட்டுருவத்தன் . மண் , நீர் , அனல் , வளி , விண் , இருசுடர் , வேள்வித்தலைவன் , இட்டம் - விருப்பம் , வட்டம் சூழ்தல் - வலம் வரல் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரோடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவரும் , இராவணன் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவரும் , ஆகிய சிவபிரான் இட்டமாக இருக்குமிடம் திருஇரும்பை நகரில் விளங்குவதும் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும் .

குறிப்புரை :

அட்ட - மார்க்கண்டேய முனிவரொடு போராடிய , எட்டும் இருபத்திரண்டும் - பத்துத்தலையும் இருபது கையுமாகிய முப்பதும் . மட்டு - தேன் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.

பொழிப்புரை :

பாம்பைத் தம் இடையில் கட்டிக்கொண்டு , அனலை அங்கையில் ஏந்தி , பிரமன் , மால் ஆகியோர் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்ற பெரியோன் இடம் , குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த திரு இரும்பை நகரில் உள்ள வானோரும் மறையோரும் தொழும் திருமாகாளமாகும் .

குறிப்புரை :

ஆர்த்து - கட்டி , அனல் - தீ . குரவம் - குராமரம் . வானோரும் மறையோரும் தொழுகின்ற தலம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

எந்தையெம்மான் இடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடு வானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார்பழி போகுமே.

பொழிப்புரை :

எந்தையும் எங்கள் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவதும் திருஇரும்பையில் விளங்கும் தென்றல் வந்துலவும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாகாளத்தில் முடிவற்ற நிலையில் அனலாடும் இறைவன் மீது ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதுபவர்களின் பழிகள் போகும் .

குறிப்புரை :

எழில்கொள்சோலை இரும்பை எனத் திருத்தலத்தை யும் பொழில்சூழ்ந்து அழகு ஆரும் மாகாளம் எனத் திருக்கோயிலை யும் குறித்ததால் அவ்விரண்டையும் சுற்றிக்கிடக்கும் சோலைவளம் குறிக்கப்பட்டது . ` மந்தமாய பொழில் ` ` ( தி .2. ப .117. பா . 11.)

பண் :செவ்வழி

பாடல் எண் : 1

பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர் மணங்கமழும் மதிமுத்தமே.

பொழிப்புரை :

வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மன மாரத் தொழுதேத்தநின்ற அழகனது இடம் , கொடிகள் ஓங்கி அசைந் தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய திருத் திலதைப்பதியிலுள்ள அழகிய சோலைகளின் மலர்கள் மணம் கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் கோயிலாகும் .

குறிப்புரை :

தலம் :- திலதைப்பதி , கோயில் :- மதிமுத்தம் . அடியார் கள் பலர் வைகறையிலே நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவு டன் திருக்கோயில் வழிபாடு செய்த பண்டைய உண்மை நிகழ்ச்சி குறிக்கப்பட்டது . ஆரத்தொழுதல் :- ` தலையாரக் கும்பிட்டு ` ` வாயாரப் பாடுந் தொண்டரினத்தகத்தான் ` ` நாவார நம்பனையே பாடப் பெற் றோம் `. ` கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் ` என்பவை முதலியவற்றால் செய்வனதிருந்தவும் நிறையவும் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தல் காண்க .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைம் மதிமுத்தமே.

பொழிப்புரை :

தெளிந்த நீரையுடைய அரிசிலாற்றங்கரை யிலமைந்த திலதைப்பதியில் விளங்குவதும் , வண்டுகள் கெண்டி இசை பயிலும் மலர்களை உடைய சோலைகளால் சூழப்பெற்றதுமாகிய மதி முத்தம் , நெருங்கிவந்து நறுமணப் புகையும் சாந்தமும் மாலைகளும் கொண்டு வழிபடும் அடியார்களின் கருத்தறிந்து . அவர்கட்கு அருள் புரியும் குழகன் இடமாகும் .

குறிப்புரை :

மிண்டி - நெருங்கி . முத்தம் - முற்றம் ; மரூஉ . ` நிலா முற்றம் ` ` சத்திமுற்றம் `. கண்டார் - தரிசனம் புரிந்த அடியவர் . குறிப்பு - கருத்து . அரிசில் ஆற்றங்கரையில் உள்ளது இத்தலம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

அடலுளேறுய்த் துகந்தான் அடியார் அமரர்தொழக்
கடலுள்நஞ்ச அமுதாக வுண்ட கடவுள்ளிடம்
திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்த திலதைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும் மதிமுத்தமே.

பொழிப்புரை :

திடல்களைச்சுற்றி வயல்கள் சூழ்ந்து விளங்கு வதும் , மடல்வழியாக வாழைக்கனிசாறு ஒழுகுவதும் ஆகிய வளங் களை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம் , வலிய விடையை ஏறிச் செலுத்தி மகிழ்பவரும் , அடியார்களும் அமரர்களும் தொழுமாறு கடலுள் எழுந்த நஞ்சை அமுதாக உண்டருளியவருமாகிய கடவுள் விரும்பி உறையுமிடமாகும் .

குறிப்புரை :

அடல் உள் ஏறு - வெற்றியை உள்ளு ( கருது ) கின்ற விடை , வலிமைக்கு ஒப்புறுத்த உள்ளுகின்ற விடையையும் ஆம் . ` ஏறு போற்பீடுநடை `. பிலிற்றும் - கொப்புளிக்கும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

கங்கைதிங்கள் வன்னிதுன் எருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்னிடம்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார் மதிமுத்தமே.

பொழிப்புரை :

கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீரை உடைய அரிசிலாறு சூழ்ந்ததும் , மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திலதைப்பதியில் விளங்கும் அழகிய மதிமுத்தம் , கங்கை , பிறை , வன்னி , எருக்கு , கூவிளம் , நாகம் ஆகியவற்றைத் தம் விரிசடையில் வைத்த விகிர்தனின் இடமாகும் .

குறிப்புரை :

திருச்சடையில் உள்ளன என்று கங்கை முதலிய ஆறு கூறப்பட்டன . மங்குல் , மேகம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவமவ்வல் மலருந் திலதைம் மதிமுத்தமே.

பொழிப்புரை :

ஞாழல் , கோங்கு , வேங்கை , சுரபுன்னை , கடம்பு , முல்லை ஆகியன மலரும் பூங்காவை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம் , மணிகள் கட்டிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கொடித் தேரைச் செலுத்தும் சூரியன் நின்று வழிபாடு செய்யும் இறைவனது ஊராகும் .

குறிப்புரை :

சூரியன் கதிரில் உள்ள ஏழுநிறமும் ஏழு குதிரைகளாக உருவகிக்கப்பட்டன . மரவம் - குங்குமமரம் . சூரியன் பூசித்த தலம் என்பது முற்பகுதியால் விளங்கும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

விண்ணர்வேதம் விரித்தோத வல்லார் ஒருபாகமும்
பெண்ணர்எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார்வந் தருள்பேண நின்றம் மதிமுத்தமே.

பொழிப்புரை :

விண்ணுலகிலுள்ளவரும் , வேதங்களை அருளிய வரும் , ஒரு பாகமாக உமையம்மையை உடையவரும் , தம்மை எண் ணாத திரிபுரத்தசுரர்களின் கோட்டைகளை அழித்துப் பின் அவர் கட்கு அருள்செய்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம் , தெளிந்த நிலா வொளி வீசும் சோலைகள் சூழ்ந்ததும் மண்ணுலகில் உள்ளவர் அருள் பெற வழிபடுவதுமாகிய திலதைப்பதியிலுள்ள மதி முத்தமாகும் .

குறிப்புரை :

விண்ணரும் வல்லாரும் பெண்ணரும் ஆகிய பெருமான் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் முருவர்க் கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில் சூழ்ந்தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தம் மதிமுத்தமே.

பொழிப்புரை :

கங்கையைத் தலையில் சூடியவர் . திரிபுரப் பகை வருடைய கோட்டைகளை அழித்தவர் . மாதொரு கூறர் . அவ் விறைவர்க் குரிய இடம் , தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும் , அழகியதும் , நீர்வற்றாத அரிசிலாற்றினால் சூழப்பெற்றதுமாகிய திலதைப்பதியி லுள்ள மதிமுத்தமாகும் .

குறிப்புரை :

சூடி :- பெயர் . அடையார் - பகைவர் . செற்றவர் - அழித் தவர் . பொற்றொடி ` வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன் மொழித் தொகை . தேறல் - தேன் . பொற்றொடி நாயகி என்னுந் தேவி யார் திருப்பெயரில் தொடி என்பது கொடி என்றாயிற்றோ ?

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும் மதுப்பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந் திலதைம் மதிமுத்தமே.

பொழிப்புரை :

சினத்தோடுவந்த கார்மேகம் போலும் நிறத்தை உடைய இராவணன் வலிய கயிலைமலையை எடுக்க , அவனுடைய முடிதோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம் , தழைத்து வளர்ந்த பாக்குமரத்தின் இளம்பாளைவழியாய்ப் பாயும் தேனை உண்டு மந்திகள் விளையாடும் திலதைப்பதியிலுள்ள மதிமுத்தமாகும் .

குறிப்புரை :

கனல் - தீ . பூகம் - பாக்கு மரம் . மது - கள் . மடுத்து - உண்டு .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

படங்கொணாகத் தணையானும் பைந்தா மரையின்மிசை
இடங்கொணால்வே தனுமேத்த நின்ற இறைவன்னிடம்
திடங்கொள்நாவின் இசைதொண்டர் பாடுந் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

பொழிப்புரை :

ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன் படுக்கையாகக்கொண்ட திருமாலும் , புதியதாமரைமலரில் விளங்கி வேதங்களை ஓதும் நான்முகனும் வழிபட எழுந்தருளிய இறைவன் இடம் , தொண்டர்கள் திண்மையான நாவினால் இசை பாடித் தொழும் திலதைப்பதியுள் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமாகும் .

குறிப்புரை :

மடங்கல் :- இயமன் , இடி , சிங்கம் என்பவற்றுள் ஒன்று பூசித்த தலமாயிருந்தால்தான் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தம் என்றிருக்கலாம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட்கி லாத பெருமானிடம்
பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

பொழிப்புரை :

புத்தர் , தேரர் , அறிவற்றசமணர் , பெருமை யில்லாத பித்தர் ஆகிய புறச்சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமானது இடம் , அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில் மதயானைவந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும் .

குறிப்புரை :

பொறி - அறிவு . வீறு இல்லாத பித்தர் . பத்தர் - அன்பர் . சித்தர் - அறிஞர் . யானை வழிபட்டதலம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

மந்தமாரும் பொழில் சூழ்திலதைம் மதிமுத்தர்மேற்
கந்தமாருங் கடற்காழி யுள்ளான் தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர நின்றேத்த வல்லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சேவடி சேர்வது திண்ணமே.

பொழிப்புரை :

தென்றற்காற்று வீசும் சோலை சூழ்ந்த திலதைப் பதியுள் விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது நறு மணம் கமழும் கடற்கரையில் விளங்கும் காழி ஞான சம்பந்தன் பாடிய பாமாலையைப் பழிதீர ஓதி வழிபடுபவர் சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய் அவ்வடிகளை அடைவது உறுதி .

குறிப்புரை :

மந்தம் - `மந்தமாய பொழில்` (தி.2 பதி.117 பா.11). கந்தம் - மணம், புலால் நாற்றம். `பழிதீர நின்று மாலை ஏத்த`.

பண் :செவ்வழி

பாடல் எண் : 1

தழைகொள்சந் தும்மகிலும் மயிற்பீலி யுஞ்சாதியின்
பழமும்உந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை
நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத்
தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க் கழகாகுமே.

பொழிப்புரை :

தழைகளோடு கூடிய சந்தன மரங்கள் , அகில் மரங்கள் , மயிற்பீலி , நல்லபழங்கள் ஆகியவற்றைப்புனலில் உந்தி வந்து பாயும் பழமையான காவிரியின் தென்கரையில் வானோர் விலகாது தொழ அருள் நல்கும் சிறப்புமிக்க நாகேச்சுரத்தில் விளங்கும் அழகர் பாதங்களைத் தொழுது போற்றவல்லார்க்கு அழகு நலம் வாய்க்கும் .

குறிப்புரை :

சந்து - அகில் , பீலி , சாதிப்பழம் எல்லாம் காவிரி வெள்ளத்தால் கொள்ளப்பட்டவை , நழுவு . இல் - விலகுதல் இல்லாத . அழகராதலின் வணங்க வல்லார்க்கும் அழகு அருள்கின்றார் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

பெண்ணொர்பாகம் அடையச் சடையிற் புனல்பேணிய
வண்ணமான பெருமான் மருவும் இடம்மண்ணுளார்
நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரம்
கண்ணினாற் காணவல்லா ரவர்கண் ணுடையார்களே.

பொழிப்புரை :

ஒருபாகத்தே உமையையும் , சடையில் நீர் வடிவான கங்கையையும் கொண்ட அழகிய பெருமான் அமரும் இடம் ஆகிய , மண்ணுலகத்தோர் நாள்தோறும் வந்து வணங்கி நன்மைகள் பெறும் நாகேச்சரத்தைக் கண்ணால் காண்பவரே கண்ணுடையராவர் .

குறிப்புரை :

நன்கு - சிவபுண்ணியம் முதலிய நன்மைகள் . கண்ணி னால் என்றது காண்டற்குக் கடவுளையே பொருளாக் கொண்ட கண் என்று அதன் சிறப்புணர்த்த .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும் மணிகுலவுநீர்
பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத்
திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

குறவர் வாழும் குறிஞ்சிப்புனம் , முல்லைநிலம் ஆகியவற்றைக் கொள்ளைகொண்டு மணிகள் குலாவும் நீரைப் பரவச் செய்யும் காவிரித் தென்கரையில் தேன்மணம் கமழும் பொழில் சூழ்ந்து அழகியதாய் விளங்கும் நாகேச்சுரத்து இறைவர் பாதங்களைத் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர்இல்லை .

குறிப்புரை :

ஆல - அசைய . அழகாய நாகேச்சரம் . நாகேச்சரத்து அழகர் ( பா . 1.) என்றவற்றால் தலமும் மூர்த்தியும் அழகுடைமை உணர்க .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

கூசநோக்காதுமுன் சொன்ன பொய்கொடு வினைகுற்றமும்
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரம்
தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்
நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.

பொழிப்புரை :

ஆராயாது பிறர் மனம் கூசுமாறு சொல்லும் பொய் , கொடிய வினைகளால் வந்த குற்றங்கள் ஆகியவற்றைச் செய்யாத நன்மனம் உடைய அடியவர்கள் வந்து மகிழும் நாகேச்சுரத்தை ஒளி விளங்கும் கோயிலாகக் கொண்ட செல்வன் திருவடிகளில் அன்புடையவர் அறநெறிப் பாலராவர் .

குறிப்புரை :

கூசச்சொன்னபொய் , நோக்காது சொன்னபொய் . பொய்யும் வினையும் குற்றமும் நாசம் ஆக்கும் மனத்தார்கள் . ஆடுதல் - தீர்த்தமாடுதல் . நேசம் - அன்பு . அறத்தார் - சிவ தரும முடையவர் . நெறிபாலர் - வீட்டுநெறிக்கண் ஒழுகுபவர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர்
பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச் சென்றுடனாவதும்உண்மையே.

பொழிப்புரை :

மணம் கமழும் மலர்களையும் , மலைப் பொருள் களையும் வாரிக் கொண்டு , பைம் பொன் கொழித்து வரும் நீரை யுடைய பழங்காவிரித் தென்கரையில் நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச் சரத்தை நண்ணுபவர் உம்பர் வானவர் தொழச் சிவபிரானோடு ஒன்றாவர் .

குறிப்புரை :

உம்பரும் வானோரும் , உடனாவது - அத்துவித முறுவது . ஒன்றாய் வேறாய் உடனாதல் . அஃது ஈண்டு ஆன்மாச் சிவனு டனாதலை உணர்த்திற்று .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும்
நீளமாய்நின் றெய்தகாமனும் பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்
கோளுநாளுந் தீயவேனும் நன்காங் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

கரிய நிறமுடைய காலன் , அந்தகன் , கருடன் , விலகி நின்று கணை எய்த காமன் ஆகியோரை இறைவன் செற்றதை நினைந்து நாள்தோறும் சிவபிரான் உறையும் நாகேச்சுரத்தை நண்ணி வழிபடுபவர்க்குக் கோள்களும் நாள்களும் தீயவேனும் நல்லன ஆகும் . அதனை மனத்தில் கொள்மின் .

குறிப்புரை :

காளம் - கருமை . காலன் அந்தகன் என்னும் இருவரும் வெவ்வேறு ஆவர் . கருடன் பட்டது :- இத்தலத்தில் ஐந்தலைப் பாம்பின் பணிகொண்டு கருடனைச் செற்ற வரலாறு குறித்தது . அடுத்த குறிப்பிற் காண்க . ` மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத்தாள் ` ( பெரிய . 2310). கோள்களும் நாள்களும் தீயன எனினும் நல்லன ஆகும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

வேயுதிர்முத் தொடுமத்த யானை மருப்பும்விராய்ப்
பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம்
மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.

பொழிப்புரை :

மூங்கில் முத்துக்கள் , யானைமருப்பு ஆகியவற்றுடன் வந்து வளம் செயும் காவிரியாற்றின் தென்கரையில் , நாயிறு , திங்கள் இரண்டும் வந்து வழிபடும் நாகேச்சுரத்தில் எழுந்தருளிய இறைவன் திருவடிகளைப் போற்றி என வணங்குவார் வினைகள் கெடும் .

குறிப்புரை :

ஞாயிறு - சூரியன் . சூரிய சந்திரர் வழிபட்ட தலம் . ` சந்திரன்னொடு சூரியர் தாம் உடன் வந்து சீர்வழிபாடுகள் செய்தபின் ஐந்தலையரவின் பணிகொண்டருள் மைந்தர்போல் மணி நாகேச்சுரவரே ` ( தி .5 ப .52 பா .4). வீடும் - அழியும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

இலங்கைவேந்தன் சிரம்பத்தி ரட்டியெழிற் றோள்களும்
மலங்கிவீழம் மலையால் அடர்த்தா னிடமல்கிய
நலங்கொள்சிந்தை யவர்நாள்தொறும் நண்ணும் நாகேச்சரம்
வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே.

பொழிப்புரை :

இலங்கை வேந்தனாகிய இராவணனின் பத்துத் தலைகள் இருபது தோள்கள் ஆகியன சிதையுமாறு மலையினால் அடர்த்த இறைவன் இடம் ஆகிய நன்மைகெழுமிய மனமுடையோர் நாள்தோறும் நண்ணி வழிபடும் நாகேச்சுரத்தை வலம் வந்து வழிபடும் சிந்தை உடையவர்களின் இடர்கள் கெடும் .

குறிப்புரை :

வீழ அடர்த்தான் , சிந்தைக்கு நலம் தியாகபலம் , வலம் - திருக்கோயிலைச் சூழ்தல் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

கரியமாலும் மயனும் மடியும்முடி காண்பொணா
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்இட மீண்டுகா
விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்
பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.

பொழிப்புரை :

கருநிறமுடைய திருமாலும் , பிரமனும் அடிமுடி காண இயலாதவாறு எரியுருவாக நிமிர்ந்த இறைவன் அமரும் இடம் ஆகிய , பெருகிவரும் காவிரி நீர் வந்தலைக்கும் தென் கரையில் அமைந்த நாகேச்சுரத்தைப் பிரிவிலாத அடியவர் சிவலோகத்தைப் பிரியார் .

குறிப்புரை :

காண்பு - காட்சிக்கு . காவிரியினீர் கரையை அலைக்கும் நாகேச்சுரத்தைப் பிரியாதவர் சிவலோகத்தைப் பிரியார் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

தட்டிடுக்கி யுறிதூக்கி யகையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளி லங்காட்டிடை
நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சுரம்
மட்டிருக்கும் மலரிட் டடிவீழ்வது வாய்மையே.

பொழிப்புரை :

தட்டைக் கக்கத்தில் இடுக்கி உறிதூக்கிய கையின ராய்த்திரியும் சமணர் , சாக்கியர் , புனைந்து சொல்லும் மொழிகளைக் கொள்ளாது , இடுகாட்டில் நள்ளிருளில் நடனமாடும் நாகேச்சுரத்து இறைவனைத் தேன் நிறைந்த மலர்களைத் தூவி அடி வீழ்ந்து வணங்கு வது உண்மைப் பயனைத்தரும் .

குறிப்புரை :

கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் - கட்டிச் சொல்லும் சொற்களைக் கொள்ளதேயுங்கள் . கொள்ளல் என்னும் முன்னிலை ஒருமை ஏவல் வினையுடன் உம்மை சேர்த்துப் பன்மையேவல் வினை யாக்கியவாறுணர்க . வெள்ளில் - பிணப்பாடை . நடு இருள் = நட்டிருள் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

கந்தநாறும் புனற்காவிரித் தென்கரைக் கண்ணுதல்
நந்திசேருந் திருநாகேச் சரத்தின் மேன்ஞானசம்
பந்தனாவிற் பனுவல் லிவைபத்தும் வல்லார்கள்போய்
எந்தையீசன் இருக்கும் உலகெய்த வல்லார்களே.

பொழிப்புரை :

மணம் கமழும் நீரை உடைய காவிரித் தென் கரையில் , கண்ணுதற் கடவுளாகிய நந்தி எழுந்தருளிய திருநாகேச் சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் நாவினால் போற்றிய இப்பனுவல் பத்தையும் வல்லவர் மறுமையில் எந்தையீசன் இருக்கும் சிவலோகம் எய்துவர் .

குறிப்புரை :

கந்தம் - மணம் . கண்ணுதல் நந்தி - சிவபிரான் . உலகு - சிவலோகம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 1

சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.

பொழிப்புரை :

சந்தனம்போலத் திருநீற்றை உடல் முழுதும் பூசி , கங்கையைச் சடைமீது வைத்துள்ளவராகிய சிவபிரான் , காந்தள் போன்ற கைவிரல்களை உடைய உமையம்மையோடு கூடியிருந்ததற் குரிய காரணத்தை ஆராய்ந்தறிந்தவர்கள் யார் ? கோச்செங்கட்சோழ னால் கட்டப்பட்ட மூக்கீச்சரத்துள் விளங்கும் இறைவன் செய்யும் மெய்மை இதுவாகும் .

குறிப்புரை :

வெண்ணீறு சாந்தம் எனப்பூசி ` சாந்தம் ஈதுஎன்று எம் பெருமான் அணிந்த நீறு ` ( தி .1 ப .52 பா .7). காந்தள் ஆரும் விரல் - காந்தளை ஒத்த கைவிரல்கள் . ஏழை - உமாதேவியார் . கடவுள் நிறைவு ஆய்ந்து கொண்டறியத்தக்கது . கோச்செங்கட்சோழநாயனார் கட்டுவித்த மாடக்கோயில் ஆதலின் வேந்தன் மூக்கீச்சரம் எனப்பட்டது . இப்பதிகத்தில் வரலாறு பற்றிய உண்மைகளைக் காண்க .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
கொண்டலாரும் புனல்சேர்த் துமையாளொடுங் கூட்டமா
விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில் வேள்வெந்தெழக்
கண்டவர் மூக்கீச்சரத்தெம் அடிகள் செய்கன்மமே.

பொழிப்புரை :

வெண்தலையை உண்கலனாகக் கையில் ஏந்திப் பலிதேர்தல் , விரிந்தசடையில் கங்கையைத் தாங்குதல் , உமையம்மை யோடு கூடியிருத்தல் , பகைவர்தம் முப்புரங்களை எய்து அழித்தல் , மன்மதனை நெற்றிவிழியால் வெந்தழியச் செய்தல் ஆகியன மூக்கீச் சரத்தில் விளங்கும் எம் அடிகள் செய்த செயல்களாகும் .

குறிப்புரை :

கொண்டல் - கொள்ளுதல் . காற்று , மேகம் எனல் இங்குப் பொருந்தாது . வேனில்வேள் - மன்மதன் ,

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

மருவலார்தம் மதிலெய்த துவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட்டி யதும்உல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானை யினான்செய்த
பொருவின் மூக்கீச்சரத்தெம் அடிகள் செயும்பூசலே.

பொழிப்புரை :

போர்க்கருவியாகிய வில் , புலி , கயல் ஆகிய மூவிலச்சினைகளுக்கும் உரிய சேர , சோழ , பாண்டிய மண்டலங்களுக் குரியவனாய் விளங்கிய கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட ஒப் பற்ற மூக்கீச்சரத்தில் உறையும் எம் அடிகள் செய்த போர்களில் மும் மதில்களை எய்தது , மால்மகனாகிய காமனை எரித்தது ஆகியன உலக றிந்தனவாம் .

குறிப்புரை :

மால்மதலை - மன்மதன் . உருவில் ஆர - வடிவத்தில் நிறைய . புலிசெங்கயல் ஆனை :- சோழபாண்டிய சேரர்க்குரிய மூன்றும் மூவேறுயிர்களாயும் முறையே மும்மண்டலத்திலும் உள்ளன வாயும் இருத்தல் அறிக . புலிவிற் கெண்டை என்பதில் வானவரம் பனாதலின் , வானிற்றோற்றும் வில்லைக் கொண்டனர் . ` தென்னவனா யுலகாண்ட செங்கணார்க்கு அடியேன் ` மூக்கீச்சரத்தில் மூவேந்தர் திருப்பணியும் உண்டு போலும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

அன்னமன்னந் நடைச்சாய லாளோ டழகெய்தவே
மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம்
தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்மாயமே.

பொழிப்புரை :

தென்நாட்டின் உறையூர் வஞ்சி ஆகிய சோழ , சேர மண்டலங்களுக்கும் உரியவனாய்ப் புகழ்மிக்க செங்கோலினனாய் விளங்கிய கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய மூக்கீச்சரத்துக் கோயிலில் விளங்கும் அடிகள் , அன்னம் போன்ற நடையினை உடைய உமை யம்மையாரோடு அழகுற விளங்கி , மின்னல் போன்ற சடையில் கங்கையைக் கொண்டுள்ள காரணம் யாதோ ?

குறிப்புரை :

சாயலாள் - உமையம்மையார் . தென்னன் - தென் பாண்டிநாட்டான் . செங்கோல் ஏனையிரண்டும் மண்டலத்திலும் ஓங்கும் பெருமை நாயனாருக்கு உண்டு என்று உணர்த்துகின்றதால் மும்மண்டலத்தும் ஓங்கும் செங்கோல் என்க . தென்னன் என்பது பாண்டி மண்டலத்துக்கு ஆவதால் ஆகுபெயர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

விடமுனாரவ் வழல்வாய தோர் பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
வடமன்நீடு புகழ்ப்பூழி யன்றென்ன வன்கோழிமன்
அடன்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே.

பொழிப்புரை :

வடதிசையில் புகழ்மிக்கு விளங்கும் பாண்டிய னாகவும் உறையூருக்குரிய சோழனாகவும் விளங்கிய வலிமை பொருந்திய கோச்செங்கட்சோழமன்னன் கட்டிய மூக்கீச்சரத்துறையும் அடிகள் அச்சம் தரும் முறையில் , அழல் போன்ற வாயில் நஞ்சுடைய பாம்பை அரையில் கட்டியவர் . நள்ளிருளில் பேயோடு , ஆரழலில் நடனம் ஆடுபவர் .

குறிப்புரை :

நஞ்சுடைய பாம்பை அரையில்கட்டிப் பேயொடு நள்ளிருளில் தீயில் நடமாடுவர் . வடமன்நீடுபுகழ் - வடக்கில் மிக நீடிய கீர்த்தி . பூழியன் - பாண்டியன் . கோழிமன் - உறையூர்க் கிறைவன் . அடல்மன் - போர்வேந்தன் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

வெந்தநீறு மெய்யிற் பூசுவராடுவர் வீங்கிருள்
வந்தெனாரவ் வளைகொள்வதும் இங்கொரு மாயமாம்
அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரேதமே.

பொழிப்புரை :

அகத்துறைப்பாடல் : பகைவரின் மானத்தை அழிக்கும் பெருவீரனும் நேரியன் செம்பியன் என்ற பெயர்களை உடைய வனுமான கோச்செங்கட்சோழன் கட்டிய மூக்கீச்சரத்தில் விளங்கும் அடிகள் செய்த ஏதமான செயல் திருநீற்றை மேனியில் பூசிய சுந்தரத் திருமேனியராய் , ஆடல் வல்லவராய் , மிக்க இருளில் வந்து என் அரிய வளையல்களை மாயமானமுறையில் கவர்ந்து சென்ற தாகும் .

குறிப்புரை :

மெய்யில் நீறு பூசுவர் , இருளில் ஆடுவர் , இங்குவந்து என்வளை கொள்வதும் ஒரு மாயமாம் . இத்திருக்கோயில் மூவேந் தராலும் வழிபடப்பட்டது என்பதை 3,9, பாடல்களாலும் அறிக . மானதன் - பகைவரது மானத்தை அழிப்பவன் , மானத்தை உடையவன் . நேரியன் என்பவை சோழனையே குறித்தன .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

அரையிலாருங் கலையில்ல வனாணொடு பெண்ணுமாய்
உரையிலாரவ் வழலாடு வரொன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதின்மூன் றுடன்வெவ்வழ லாக்கினான்
அரையன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே.

பொழிப்புரை :

இடையில் பொருந்தும் உடை இல்லாதவன் . ஆணும் , பெண்ணுமாய் விளங்குபவன் . அழலில் நின்று ஆடுபவன் . ஒன்றாயின்றிப் பலபலவேடம் கொள்பவன் . பகைவரின் முப்புரங்களை அழல்எழச் செய்து அழித்தவன் . கோச்செங்கணான் கட்டிய மூக்கீச்சரக் கோயிலில் விளங்கும் அப்பெருமான் செய்யும் அச்சமான செயல்கள் இவையாகும் .

குறிப்புரை :

அரையில் ஆரும் கலையில்லவன் - இடையிற் பொருந்தும் உடையில்லாதவன் , திகம்பரன் , பெண்ணுமாய் ஆணுமாகி , ( பெரிய , தில்லைவாழ் ). ஒன்றலர்காண் - பலபலவேடமாகும் பரன் , விரவலார் - பகைவர் . அரையன் - கோச்செங்கட்சோழநாயனார் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

ஈர்க்குநீர்ச்செஞ் சடைக்கேற் றதுங்கூற்றை யுதைத்ததும்
கூர்க்குநன்மூ விலைவேல்வல னேந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தை நெரித்தவ்வடல்
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.

பொழிப்புரை :

மூக்கீச்சரத்து அடிகள் செய்த வலிய செயல்கள் ஈர்க்கும் தன்மையை உடைய கங்கையைச் சடைமிசை ஏற்றது , கூரிய முத்தலைச்சூலத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பிடித்துள்ளது , ஆரவாரிக்கும் வாயினனும் வலியமூர்க்கனும் , அரக்கனும் ஆகிய இராவணன் உடலை நெரித்தது முதலியனவாகும் .

குறிப்புரை :

ஈர்க்கும் - இழுக்கும் . கூர்க்கும் - கூராக இருக்கும் . ஆர்க்கும் - ஆரவாரம் செய்யும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்
சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான்
சீரினாலங் கொளிர்தென்ன வன்செம்பி யன்வில்லவன்
சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்செம்மையே.

பொழிப்புரை :

சிறப்புமிக்க தென்னவன் , செம்பியன் , வில்லவன் ஆகிய மூவேந்தரும் வந்து வழிபடும் மூக்கீச்சரத்தில் , உறையும் பெருமான் நீருள் தோன்றிய தாமரையில் விளங்கும் நான்முகனும் , நெடியமாலும் புகழிற் பொருந்திய திருவடிகளைத் தேட முற்பட்ட போது தீத்திரளாய் நின்றவன் .

குறிப்புரை :

மெய்த்தீத்திரள் - ஞானத்திரளாய் நின்ற பெருமான் ( தி .1 ப .69 பா .3) தென்னவன் - பாண்டியன் . வில்லவன் - சேரன் . செம்பியன் - சோழன் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்
உண்பினாலே யுரைப்பார் மொழி யூனமதாக்கினான்
ஒண்புலால்வேன் மிகவல்லவ னோங்கெழிற் கிள்ளிசேர்
பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.

பொழிப்புரை :

வெண்மையான புலால் நாற்றம் வீசும் ஆடையை மார்பிற் கொண்டவரும் , வெற்றுடம்போடு திரிபவரும் ஆகிய புத்தர்களும் சமணரும் உண்ணும் பொருட்டு உரைக்கும் மொழிகளைக் குறையுடைய தாக்கினான் . புலால் மணக்கும் வேல் வென்றி உடையவன் . சோழமன்னன் எடுப்பித்த மூக்கீச்சரத்து அப் பெருமான் செய்யும் புதுமையான செயல் இதுவாகும் .

குறிப்புரை :

துகில் - ஆடை . வெற்றரை :- ஆடையில்லாமை குறித்தது . உண்பினாலே - உண்டபிறகு .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய்வாழ் பவர்காழி யுள்ஞான சம்பந்தன
சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.

பொழிப்புரை :

மற்போரில் வல்லவராய முடிமன்னர் மூவரானும் தொழப் பெறும் மூக்கீச்சரத்து அடிகளை நல்லவர் வாழும் காழியுள் மேவிய ஞானசம்பந்தன் செல்வராக நினையும்படிப் பாடிய இச் செந்தமிழைச் சொல்லவல்லவர் வானுலகையும் ஆளவல்லவர் ஆவர் .

குறிப்புரை :

மல் - வலிமை. மும்முடி மன்னர் - முடிவேந்தர் மூவர். ஞானசம்பந்தன என்று இத்திருப்பாடல்களைக் குறித்தருளினார். சொல்லவும் வல்லார். ஆளவும்வல்லார்.

பண் :செவ்வழி

பாடல் எண் : 1

முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக் கையைப்பெறு வார்களே.

பொழிப்புரை :

முடங்கிய கால்களை உடைய முயலுருவத்தைப் பெற்றுத் தன்னை வணங்கி முன்னே நின்ற மங்கண முனிவருடைய சாபத்தைப் போக்கி அவருக்கு அருள் செய்து , நீண்ட புன்னைமரங்கள் மணம் கமழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளி இருக்கும் இறை வனை வணங்கும் மேலான தவம் இல்லாதவர்கள் நோயால் நலியும் யாக்கையைப் பெறுவார்கள் .

குறிப்புரை :

முடக்கால் முயற்கு அருள்செய்து :- இத்தலத்தில் முற் காலத்தில் முடங்கிய காலொடு முயலாகும் சாபம்பெற்ற மங்கண முனிவர் அச்சாபம் நீங்கப்பெற்ற வரலாற்றைக் குறிப்பது . சிவபிரானை வழிபடும் தவம் வாய்க்கப்பெறாதவர்கள் பிணி யுடைய உடம்பொடு வருந்துவர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்இடம்
புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை
உள்ள நம்மேல் வினையாயின ஒழியுங்களே.

பொழிப்புரை :

நகும் போது தீயை உமிழும் திறந்த வாயை உடைய பேய்கள் குழைந்தாட முள்ளிலவ மரங்கள் நிறைந்த சுடு காட்டில் உறையும் இறைவன் இடமாகிய , அன்னம் , மயில் முதலிய பறவையினங்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரை நினைந்து வழிபட்டு நம்மேலுள்ளன ஆகிய வினைகளை ஒழியுங்கள் .

குறிப்புரை :

முதல்வனது திருப்பாதிரிப்புலியூரை நினைத்து வழி பட்டு வினைகளை ஒழியுங்கள் . ( நுணுகுங்கள் பா .8)

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
பொருளினல்லார் பயில் பாதிரிப் புலியூருளான்
வெருளின்மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்தபின்
அருளிஆகத் திடைவைத் ததுவும் மழகாகவே.

பொழிப்புரை :

மெய்ப்பொருளை அறிந்தவரும் மயக்கமற்ற ஞானி யரும் வழிபாடு செய்து வாழும் திருப்பாதிரிப்புலியூரில் வாழும் மழுவாளரைக்கண்டு மருளும் பெண்மான் போன்ற பார்வையை உடைய பார்வதியை நோக்கி , அவளைத் தம்மீது காதல் கொள்ளச் செய்து , தம் ஆகத்திடை வைத்து அருள்பவராய் உள்ள அப் பெருமான் செயல் மிக்க அழகானதாகும் .

குறிப்புரை :

மருள் இல் நல்லார் - மயக்கமற்றஞானிகள் . மேல் பொருள் இல்நல்லார் - தனக்குமேல் ஒரு பொருள் இல்லாத சிவனார் . அம்மையப்பரான உண்மை குறித்தது .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள்
ஆதிநாலும் அவலம் மிலாதஅடி கள்மறை
ஓதிநாளும் இடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.

பொழிப்புரை :

மலர்கள் தூவியும் தசாங்கம் முதலிய மணமுடைய பொருள்களைப் புகைத்தும் அடியவர்கள் காலந்தவறாமல் வழிபாடு செய்யப் பாதிரிப்புலியூரில் உறையும் அவலம் இலாத அடிகள் நாள் தோறும் வேதங்களை ஓதிக் கொண்டு சென்று அன்பர்கள் இடும் பிச்சையை ஏற்று உண்ணும் இயல்பினர் .

குறிப்புரை :

போது - புஷ்பம் . போதினால் - விதித்த காலங்களில் . நாலும் - நான்கும் . தொங்கும் , பிச்சைக்குச் செல்லும்போதும் வேதம் ஓதிய உண்மையுணர்க . உண்டு உணப்பாலது என்பதை ஆராய்தல் வேண்டும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை
நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்
போகநல்லார் பயிலும் பாதிரிப் புலியூர் தனுள்
பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.

பொழிப்புரை :

நுகர்ச்சிக்குரிய இளமகளிர் பயிலும் பாதிரிப்புலி யூரில் பெரிய நாயகியாரை இடப்பாகமாகக் கொண்டுள்ள பரமேட்டி உடலின் இடப் பாதியிலே உறையும் உமையம்மை அமுது ஆக்கிக் கொடுக்க நஞ்சை உண்டவன் . நல்லோர் பரவ நச்சு வெப்பத்தை உடைய ஐந்தலைப் பாம்பை விரும்பி அரையில் கட்டியவன் .

குறிப்புரை :

உமாதேவியார் அமுதாக்கிக் கொடுக்க நஞ்சை யுண்டான் . நல்லோர் பரவ நச்சு வெப்பத்தையுடைய ஐந்தலைப் பாம்பை விரும்பி அரையிற்கட்டியவன் . போகமாதர் பயிலும் புலியூர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்
புதியமுத்தந் திகழ் பாதிரிப் புலியூரெனும்
பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்
குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.

பொழிப்புரை :

பழ அடியார்கள் அழகாக ஆகம விதிகளின்படி வழிபாடு செய்யவும் ஆனந்தக் கூத்தாடவும் நிலவொளி போன்று வெண்மணல் பரவிய கடற்கரைச் சோலை இடத்தே புதிய முத்துக்கள் திகழும் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி உள்ளார் இறைவர் .

குறிப்புரை :

மணல்நிலாப்போல் ஒளிர்கின்றது . பழந்தொண்டர்கள் அழகாக ஆனந்தக்கூத்தும் ஆகமவிதியும் செய்வர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்
சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்
பொங்கரவம் முயர் பாதிரிப் புலியூர்தனுள்
அங்கரவம் அரையில் அசைத்தானை அடைமினே.

பொழிப்புரை :

பூந்தாதுகளின் வண்டுகள் செய்யும் ஒலி கடற்கரைச் சோலைகளில் சங்குகளின் ஒலி , பறைமுழவு ஆகிய ஒலிகள் கூடி ஆரவாரம் மிகுந்து தோன்றும் திருப்பாதிரிப் புலியூரில் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்து எழுந்தருளிய பரமனை அடையுங்கள் .

குறிப்புரை :

பூந்தாதுகளில் ஒலிசெய்யும் வண்டுகள் , சங்கொலி , பறையின் ஒலி , பாம்பரையார்த்த பரமனை அடையுங்கள் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

வீக்கமெழும் மிலங்கைக் கிறை விலங்கல்லிடை
ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்
பூக்கமழும் புனற் பாதிரிப் புலியூர்தனை
நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.

பொழிப்புரை :

பெருமை மிக்க இலங்கைக்கு அரசனாகிய இரா வணன் கயிலை மலையிடைத்தனது செருக்கழிந்து அலறுமாறு கால் விரலை ஊன்றிய இறைவன் எழுந்தருளிய மலர் மணம் கமழும் நீர் வளம் சான்ற பாதிரிப்புலியூரை நோக்க வினைகள் மெலிந்து நுணுகி ஒழியும் .

குறிப்புரை :

வீக்கம் - பெருமை . விலங்கல் - கயிலை , இறை - சிறிது . நோக்க - நோக்குதலால் - வினைமெலிந்து . அணுகா . நுணுகுங்கள் ( ஒழியுங்கள் பா .2)

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

அன்னந்தாவும் மணியார் பொழின்மணியார் புன்னை
பொன்னந் தாதுசொரி பாதிரிப் புலியூர்தனுள்
முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்
தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.

பொழிப்புரை :

அன்னங்கள் விளையாடும் அழகிய சோலைகளில் முத்துமணி போன்ற புன்னை மலர்கள் பொன்போலும் தாதுக்களைச் சொரியும் திருப்பாதிரிப்புலியூரில் , முற்காலத்தே எல்லா உலகங் களையும் தாவி மூன்றடியால் அளந்த திருமாலும் , நான்முகனும் , சிறி தேனும் திருத்தாளையும் திருமுடியையும் அறிய முடியதவராய்த் தவத் தின் நேரிய நீதி வடிவினராய்ப் பெருமான் விளங்குகிறார் .

குறிப்புரை :

புன்னை பொன்போலும் தாதுக்களைச் சொரியும் உண்மை - திருமுறையில் முதற்பாட்டில் உணர்த்தப்பட்டது . முன்னம் ... அளந்தவன் - திருவிக்கிரமன் . தன்னம் - அற்பம் . திருவடியாக் கொள்ளின் இனம்பற்றித் திருமுடியும் கொள்ளப்படும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.

பொழிப்புரை :

ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தை உடைய சமணரும் , புத்தரும் எரிவினால் சொல் லும் உரைகளைக் கொள்ளாது , திருவெண்ணீறு அணிந்த திருப்பாதிரிப் புலியூர் அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள் .

குறிப்புரை :

உரிந்த ... நோன்பர் - ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தையுடையவர் என்னும் சமணர் . எரிந்து சொன்ன உரை :- எரிவினாற்சொன்னார் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்
பந்தன்நல் லார்பயில் பாதிரிப் புலியூர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத்தி வைதரித் தார்கண்மேல்
வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.

பொழிப்புரை :

அந்தணர்கள் நிறைந்துவாழும் அகன்ற சீகாழிப் பதியில் திருஞானசம்பந்தன் , நல்லவர் வாழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளிய இறைவர் மீது பாடிய இசை மாலை ஆகிய இததிருப்பதிகத்தை ஓதி வழிபடுவாரைத் தீமைகள் அணுகா . அவர்தம் வினைகள் மாயும் .

குறிப்புரை :

அம்தண்நல்லார் - அந்தணர் . நல்லார் - பெண்டிர் . சந்தம் - பண்ணிசை . தீமை உடையவை சேராமையால் வினைகள் ஒழியும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 1

விடைய தேறி வெறிஅக் கரவார்த்த விமலனார்
படைய தாகப் பரசு தரித்தார்க் கிடமாவது
கொடை யிலோவார் குலமும் உயர்ந்தம் மறையோர்கள்தாம்
புடைகொள் வேள்விப் புகையும்ப ருலாவும் புகலியே.

பொழிப்புரை :

விடைமீதுஏறி, முடைநாறும் எலும்பு, பாம்பு இவற்றை மாலையாக அணிந்துவரும் விமலரும், மழுவைப் படைக் கலனாகக் கொண்ட வரும் ஆகிய சிவபிரானுக்குரிய இடம், கொடை வண்மை, குன்றா மரபினரும் ஆகிய, உயரிய, வேதங்களில் வல்ல அந் தணர் வேட்கும் வேள்விப்புகை வானத்து உலாவும் புகலிப் பதியாகும்.

குறிப்புரை :

ஆர்த்த - கட்டிய. விமலனார் - இயல்பாகவே பாசங்கள் இல்லாதவர். அநாதிமலமுத்தர். பரசு - மழு. புடை - பக்கம். வேள்வி- யாகம். உம்பர் - ஆகாயம். கலை நிலவிய புலவர்க ளிடர்களை தரு கொடை பயில்பவர். (தி.1 ப.20 பா.3).
புகலி - புகலடைந்த காரணம் பற்றிய பெயர் . `அமரர் புகலால் மலிந்த பூம்புகலி மேவிய புண்ணியனே`. (தி.1. ப.63 பா.3).

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

வேலை தன்னின் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்
ஞால மெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது
சால நல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்
சோலை மேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.

பொழிப்புரை :

கடலில் தோன்றிய மிக்க நஞ்சினை உண்டு இருண்ட கண்டத்தினரும், உலகெங்கும் பலியேற்றுத் திரிபவருமான சிவபிரானுக்குரிய நகர், மிகவும் நல்லவர் பயிலும் வேதப்பதங்களைக் கேட்டு, சோலைகளில் வாழும் கிளிகள் அச்சொற்களை மீண்டும் கூறும் புகலியாகும்.

குறிப்புரை :

வேலை - பாற்கடல். உண்டு என்னும் வினையெச்சம் இருள் என்னும் வினைப்பகுதிகொண்டது. இருள்கண்டனார் - இருண்ட திருக்கழுத்தினையுடையவர். ஞாலம் - பூமி, உலகம். நாலம் என்பதன் மரூஉ. உழல்வார் - திரிபவர். நல்லார் சாலப்பயிலும் மறை என்க. சால நல்லார் என்றே கொள்ளலுமாம். கிளிகள் நல்லார் பயிலும் மறை(யைக்) கேட்டுப் பதங்களைச் சொற்பயிலும் என்க. `கிளித்தான்` என்பது, `வேற்றுமையல்வழி` (தொல், தொகைமரபு. 16) என்னுஞ் சூத்திரத்தின்படி வல்லெழுத்து மிக்கது.

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

வண்டு வாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித்
துண்ட மேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது
கெண்டை பாய மடுவில் லுயர்கேதகை மாதவி
புண்ட ரீகம் மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே. 

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உமை நங்கையை தன் மேனியின் ஒரு கூறாக உகந்தவரும், பிறைமதி அணிந்த ஒளி மயமான தொல்சடை முடியினரும், ஆகிய சிவபெரு மானுக்கு இடமாக விளங்குவது கெண்டை மீன்கள் துள்ளி ஆடும் மடுக் களையும், தாழை, மாதவி மரங்களையும், தாமரை மலரும் பொய்கை களையும் கொண்ட புகலியாகும்.

குறிப்புரை :

மங்கை - உமாதேவியார். அவர் குழலில் வண்டுகள் வாழும் என்றது சாதியடை. மதித்துண்டம் - பிறை. `திங்கட் பிளவு`. சுடர்ச்சடை, தொல்சடை என்க. தொல்சடை என்னும் பண்பு தொகு மொழி, சுடர் என்னும் அடைகொண்டதாதலின், சுடரை (-ஒளியை) உடைய தொல்சடை என விரிக்க. தொல்சடை என்பதைப் பிரித்துப் புணர்ச்சி விதி கூறலாகாது என்பதை , `ஐம்பாலறியும் பண்பு தொகு மொழியும்...தொழில் தொகுமொழியும்... ... பிறவும்` ... ... மருவின் பாத்திய, புணரியல் நிலையிடை உணரத்தோன்றா` என்ற தொல் காப்பியச் சூத்திரத்தால் (எழுத்து, 482) உணர்க. கேதகை - தாழை. மாதவி - குருக்கத்திக்கொடி. புண்டரீகம் - தாமரை. பொய்கை - மானுட ராக்காத நீர்நிலை (சிந்தாமணி. 337.)

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

திரியு மூன்று புரமும் எரித்துத் திகழ்வானவர்க்
கரிய பெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது
பெரிய மாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற்
புரிவி லாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே. 

பொழிப்புரை :

வானத்தில் திரிந்து இடர்விளைத்த முப்புரங்களை எரித்தவனும் வானவர்க்கு அரியவனாய் விளங்குவோனும், அரவக் குழை அணிந்தவனுமாகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது, பெரிய மாடவீடுகளில் விளங்கும் கொடிகளால் வெண்மையான வெயிலொளி புகாததாய், தடம் பொய்கைகள் சூழ்ந்ததாய் விளங்கும் புகலியாகும்.

குறிப்புரை :

`அளவறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு` (திருவாசகம். திருச்சதகம் 35) அரவக்குழையார் - சர்ப்ப குண்டலம் அணிந்தவர். மிடைவால் - நெருக்கத்தால், வெயில் புரிவு இலாத - வெயிலைச் செய்தலின்றி நிழலைச் செய்தலுடைய. தட - பெரிய. பூம் பொழில் - மலர்க்கா.

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

ஏவி லாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர்
நாவி னாண்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது
மாவி லாருங் கனிவார் கிடங்கில் விழவாளைபோய்ப்
பூவி லாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே.

பொழிப்புரை :

கணை பொருந்திய வில்லில் வல்ல அருச்சுனனுக்கு அருள் செய்தவரும், கலைமகளின் மூக்கை அரிவித்தவரும், ஆகிய சிவபிரானுக்குரிய இடம், மாங்கனிகள் பெரிய மடுக்களில் வீழ்வதைக் கண்டு வாளைமீன்கள் பூக்கள் நிறைந்த அப்பொய்கை மடுக்களைச் சென்றடையும் புகலிப்பதியாகும்.

குறிப்புரை :

நாவினாள் - நாமகள். மூக்கு அரிவித்த நம்பர் - மூக் கினை அரியச்செய்த சிவபிரானார், தக்கயாக சங்காரத்தில் வீரபத்திரர் அரிந்தார். சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் ... இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்` (தி.3 ப.118 பா.5). நம்பர் - உயிர்களின் விருப்பிற்குரியர், விருப்பாயிருப்பவர். மாவில் ஆரும் கனி - மாமரத்தில் நிறைந்த பழங்கள். வார் கிடங்கில் - நீண்ட அகழியில். விழ- விழலால். வாளை போய்ப் பொய் கையில் வைகும் என்க.

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
ஒக்க வேயெம் முரவோ னுறையும் மிடமாவது
கொக்கு வாழை பலவின் கொழுந்தண்  கனிகொன்றைகள்
புக்க வாசப் புன்னை பொன்றிரள் காட்டும் புகலியே.

பொழிப்புரை :

தக்கன் வேள்வியைத் தகர்த்தவனும், எம் உரவோனும் ஆகிய சிவபிரான் தையலாளொடு உறையும் இடம், மா, வாழை, பலா ஆகிய கனிகளின் மணத்துடன் கொன்றை, புன்னை இவற்றின் மகரந்தம் பொன்திரள் போலத் தோன்றும் புகலியாகும்.

குறிப்புரை :

தக்கன் - தக்ஷன். தகர்த்த - அழித்த. தையலாள் - உமா தேவியார். கொக்கு - மாமரம். புன்னைகள் பொன் போலப் பூக்கும். திரள் என்பது இங்குத் திரட்சி என்னும் பொருளதாயிற்று.

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

தொலைவி லாத அரக்கன் உரத்தைத் தொலைவித்தவன்
தலையுந் தோளுந் நெரித்த சதுரர்க் கிடமாவது
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார்
பொலியு மந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே.

பொழிப்புரை :

அழிவற்ற இராவணனின் ஆற்றலை அழித்து அவ னது தலை தோள் ஆகியவற்றை நெரித்த சதுரப்பாடுடைய சிவ பிரானுக் குரிய இடம், கலை உள்ளம் கொண்டோர், இரப்போர்க்கு இல்லை என்னாத வண்மையுடையோர் விளங்கும் பொழில் சூழ்ந்த புகலிப் பதியாகும்.

குறிப்புரை :

தொலைவு - தோல்வி. உரத்தை - வலியை. மார்பை எனலுமாம். தொலைவித்து - ஒழித்து, அவன் தலையும் தோளும் நெரித்த சதுரர் என்க. சதுரர்க்கு - மூவர்க்கும் மேலாய முதல்வர். கலை- வேதாகம புராணேதிகாசாதி கலைகள். மனத்தோர் - உள்ளத்தை யுடைய அந்தணர், கரப்பு இலார் - மறைத்தலில்லாமல் ஈந்துவப்பவர். கரப்பு - மறைப்பு. பொலியும் - விளங்கும். அம் - (அழகு) ஆரும் - நிறையும்.

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

கீண்டு புக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க்
காண்டு மென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது
நீண்ட நாரை யிரையாரல் வாரநிறை செறுவினிற்
பூண்டு மிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே. 

பொழிப்புரை :

கேழலாய் நிலத்தை அகழ்ந்து சென்ற திருமால், அன்னமாய்ப் பறந்து உயர்ந்து சென்ற நான்முகன் ஆகியோர் அடிமுடி காண்போம் எனச்சூளுரைத்து முயன்று தோற்றுக் கழல்பணிய நின்றார்க்கு இடமாக விளங்குவது, நாரைக்கு இரையான ஆரல் மீன்கள் ஒழுகி ஓட, நிறைந்த சேற்றோடு விளங்கும் வயல்களை உடைய அழகிய புகலிப்பதியாகும்.

குறிப்புரை :

கீண்டு - (நிலத்தைப்) பிளந்து. திருமால் செயல். கேழல்- பன்றி. காண்டும் - காண்போம், பறந்துயர்ந்தார். பிரான் திரு வடிகளை. பணிய - பணிந்து வழிபட. நின்றார்க்கு - நின்ற சிவபெரு மானுக்கு. நாரைக்கு இரையாகிய ஆரல் மீன்கள் ஒழுகியோட, நிறைந்த செறு. செறு - சேறு. மிக்கவயல் என்பது சந்தம் நோக்கி விரித்தல் விகார முற்றது.

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

தடுக்கு டுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்க ணுய்ப்பா ரிறைஞ்சாத வெம்மாற் கிடமாவது
மடுப்ப டுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்
அடுத்த டுத்துப் புகுந்தீண்டு மந்தண் புகலியே. 

பொழிப்புரை :

ஓலையால் இயன்ற தடுக்கைக் கட்டிக் கொண்டும் தலையைப் பறித்துக் கொண்டும் வாழும் சமணர்களும், சாக்கியர் களும் இடுக்கண்பட்டவராய் இறைஞ்சாது நிற்குமாறு செய்த எம் பெருமானுக்கு உரிய இடமாக விளங்குவது, வேதம் வல்ல அந்தண ரும் வானுலகில் வாழும் தேவர்களும் அடுத்தடுத்து வந்து வழிபடும் புகலிப்பதியாகும்.

குறிப்புரை :

பறிப்பார் - சமணர். உய்ப்பார் - செலுத்துவார், உண் டாக்குவார் என்றவாறு. இறைஞ்சாத - தலைவணங்காத. வணங்கப் பெறாமை எம்மானது. மடுப்படுக்கும் - (வைகறையில் நீர்) மடுவில் குளிக்கும். சுருதிப்பொருள் - வேதார்த்தம். வல்லவர் - வல்ல அந்தணர். மடுப்பு அடுக்கும் எனப் பிரித்து, உட்கொள்ளுதலைப் பொருந்தும் என்று கொண்டு, சுருதிப் பொருளையுட்கொண்டு என்க. வான் உளோர் - தேவர். பூதேவரும் மாதேவ ரும் அடுத்து அடுத்துப் புகுந்து ஈண்டும் புகலி.

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

எய்த வொண்ணா இறைவன் னுறைகின்ற புகலியைக்
கைதவ மில்லாக் கவுணியன் ஞான சம்பந்தன்சீர்
செய்த பத்தும் மிவைசெப்ப வல்லார் சிவலோகத்தில்
எய்தி நல்ல விமையோர்க ளேத்த இருப்பார்களே.

பொழிப்புரை :

உயிர் தம் அறிவால் எய்த ஒண்ணாத இறைவன் உறையும் புகலியை, வஞ்சனையற்ற கவுணியர்குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்புடன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவற்றை, செப்பவல்லவர் சிவலோகத்தை அடைந்து நல்ல தேவர்கள் ஏத்தப் புகழுடன் இருப்பர்.

குறிப்புரை :

எய்த ஒண்ணா இறைவன் - பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்! (சித்தியார்சூ.9) \\\\\\\\\\\\\\\"இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய்\\\\\\\\\\\\\\\" (திருவாசகம். திருச்சதகம்.25) உறைகின்ற - திருக்கோயில்கொண்டு (கடல் கொண்ட கடை நாளிலும்) அடியார்க்கு அருளற்பொருட்டு எழுந்தருளியுள்ள.கைதவம் - வஞ்சகம். நல்ல இமையோர்கள் - சிவலோகத்தை அடையச் சிவ புண்ணியம் செய்த நன்மையையுடைய தேவர்கள். ஏத்த - எடுத்துப் புகழ்ந்து வழிபட, இருப்பார்களே - பேரின்பம் நுகர்ந்து அழியா திருந்து விளங்கும் சாலோகமான பத முத்தியடைந்தாரே யாவர்.
சிற்பி