கடவூர் (திருக்கடவூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அபிராமி அம்மை உடனுறை அமிர்தகடேசர்


மரம்: வில்வம், சாதிமுல்லை
குளம்: அமிர்தபுட்கரணி, காலதீர்த்தம்

பதிகங்கள்: சடையுடையா -3 -8 திருஞானசம்பந்தர்
மருள்துயர்தீர -4 -107 திருநாவுக்கரசர்
மலைக்கொளா -5 -37 திருநாவுக்கரசர்
பொடியார் -7 -28 சுந்தரர்

முகவரி: திருக்கடவூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609311

திருமால் முதலிய தேவர்கள் தூயதோர் இடத்தில் உண்ண வேண்டுமென்று அமுதகடத்தை இங்குக் கொண்டுவந்து வைத்தமையால் இத்தலம் கடபுரி அல்லது கடவூர் என்று ஆயிற்று என்பர். இயமவாதனையைக் கடத்தற்கு உதவும் ஊர் என்றும் கூறுவர்.

இது மயிலாடுதுறை - தரங்கம்பாடி தொடர்வண்டிப் பாதையில், திருக்கடவூர் நிலையத்திற்குக் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 47 ஆவது ஆகும். மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உளது.

இறைவர் திருப்பெயர்:- அமிர்தகடேசர். திருமால் முதலிய தேவர்கள் தூய்மையான இடத்தில் உண்ணும் பொருட்டு இங்குக் கொண்டுவந்து வைத்த அமுதகடம் அமுதலிங்கமாகத் திருவுருவம் பெற்றமையால் இப்பெயர் ஏற்பட்டது. இறைவியின் திருப்பெயர் - அபிராமி அம்மை. தலப்பிள்ளையார் - கள்ளவாரணப்பிள்ளையார். மரம் - வில்வ மரமும், சாதிமுல்லைக் கொடியும்.

தீர்த்தம் - அமிர்தபுட்கரணி, காலதீர்த்தம் முதலியன. மூலம் + ஸ்தானம் = மூலஸ்தானம்; அது மூலட்டானம் என வருவதுபோல, வீரம் + ஸ்தானம் = வீரட்டானம் எனவரும். இத்தகைய தலங்கள் எட்டு உள்ளன. அவை.

``பூமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை,
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் குறுக்கை யமன் கடவூர் இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களுஞ் சூடிதன் சேவகமே.``

என்னும் பாடலால் அறியத்தக்கன.
திருக்கண்டியூர் - பிரமன் தலைகளில் ஒன்றை அறுத்தது. திருக்கோவலூர் - அந்தகாசுரனைக் கொன்றது. திருவதிகை - திரிபுரத்தை எரித்தது, திருப்பறியலூர் - தக்கன் தலையைக் கொய்தது. திருவிற்குடி - சலந்தராசுரனைக் கொன்றது. வழுவூர் - யானையை உரித்தது. திருக்குறுக்கை - காமனை எரித்தது. திருக்கடவூர் - இயமனை உதைத்தருளியது. இது மார்க்கண்டரைக் காக்கும் பொருட்டுக் கூற்றுவனை உதைத்தருளிய வீரம் நிகழ்ந்த தலமாதல் பற்றி வீரட்டானம் எனப்பெயர்பெற்றது. இச்செய்தியைக் ``கரிதரு காலனைச் சாடினானும்``, ``மார்க்கண்டர்க்காக அன்று காலனை உதைப்பர்போலும் கடவூர் வீரட்டனாரே``, ``கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு`` என முறையே காணப்பெறும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் இவர்களின் தேவார அடிகளால் அறியலாம். அதற்கு ஏற்பக் கால சம்ஹாரமூர்த்தி தனியே எழுந்தருளியிருக்கின்றார். அவர் சந்நிதிக்கு எதிரில் அருள் பெற்ற இயமனது உருவமும் இருக்கின்றது.

பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்திலும் (அருச் சனைப்படலம்.),
``கறுவிவீழ் காலன் மார்பிற் சேவடிக் கமலம் சாத்திச்
சிறுவனுக் காயு ளீந்த சேவகப் பெருமான் மேய
அறைபுனற் பழனமன்ன மூதூர்``

எனக் கூறப்பெற்றுள்ளது.
ஏழுகன்னிகள், துர்க்கை முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றதலம். இப்பதியில் அவதரித்த குங்கிலியக்கலயநாயனார் வறுமையுற்ற காலத்தும், தம் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்கிலியத் தொண்டைச் செய்தும், காரி நாயனார் அவதரித்து அரசனிடம் சென்று பொருள் பெற்றுப் பல திருப்பணிகள் புரிந்தும் வீடுபேறு அடைந்த பதி இதுவே. சைவப்பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க்கு ஒருசேர எழுந்தருளி, கூற்று அடர்த்த பொன்னடிகளைத் தொழுதேத்திக் குங்கிலியக் கலைய நாயனார் திருமடத்தில் தங்கியிருந்த பெருமையும் இப்பதிக்குரிய பெருஞ்சிறப்பாகும். இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகங்கள் மூன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.

இத்திருக்கோயில் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜதேவன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னர்களில் மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி, எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவன், கோனேரின்மை கொண்டான், பெருமாள் சுந்தரபாண்டியன் என்போர் காலங்களிலும்; விஜயநகரவேந்தர்களில் கிருஷ்ணதேவமகாராயர், வீரவிருப்பண்ண உடையார் என்போர் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக் கல்வெட்டுக்களில் இறைவர் திருவீரட்டானத்துப் பெருமானடிகள், திருவீரட்டானமுடையபரமசுவாமி, காலகாலதேவர் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர்.

திருவிழா:
இக்கோயிலில் சித்திரைமாதத்தில் பெருந்திருவிழா எட்டு நாள் நடந்துவந்தது. இதன்பொருட்டுச் செலவினங்கட்கு முதலாம் இராஜேந்திரசோழதேவரின் பதினெட்டாம் ஆண்டில் இராஜராஜ மூவேந்தவேளான் நிலம் அளித்திருந்தனன்.

திருமடம்:
இவ்வூரில் முதல் குலோத்துங்கசோழன் காலத்தில் (கி.பி. 1070 - 1120) மார்க்கண்டேயர் மடம் ஒன்று இருந்தது. அம்மடத்தில் வேதம் வல்ல சிவயோகிகள் பதின்மருக்கு உணவு அளிக்கும் பொருட்டு மடப்புறமாக ஒன்றேமுக்கால்வேலி நிலம் அளிக்கப் பெற்றிருந்தது.

மண்டபங்கள்:
இக் கோயிலில் திருச்சிற்றம்பலவேலைக்காரன் திருமண்டபம் ஒன்று இருந்தது. திருக்கடவூர் சபையார் இம்மண்டபத்தில் கூட்டங் கூடுவது வழக்கம். இதுவன்றிக் குலோத்துங்கசோழன் திருவெடுத்துக் கட்டி என்னும் மண்டபமும் இருந்தது. இதிலும் சபையார் கூட்டங் கூடுவது உண்டு.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனிகள்:
அரையர் இராஜராஜ தேவராகிய வாணதரையர் இக்கோயிலில் இராசராச ஈசுவரரை எழுந்தருளுவித்திருந்த செய்தியை மூன்றாங் குலோத்துங்கசோழனுடைய கல்வெட்டு உணர்த்துகின்றது. சடாவர்மன் திரிபுவனச்சக்கிரவர்த்தியாகிய வீரபாண்டிய தேவரின் பதினான்காம் ஆண்டுக் கல்வெட்டு இக்கோயிலின் விக்கிரம சோழீச்சரமுடையாரைப்பற்றிக் குறிப்பிடுகின்றது.

அறச்சாலை:
இக்கோயிலில் இராஜாதிராஜன் அறச்சாலை ஒன்று இருந்தது. அதில் பதினேழுபேர்கள் உண்பதற்கு கோமக்குடி விஜயராஜேந்திர மூவேந்தவேளானாகிய பிச்சன் ஆதித்தன் சாலாபோகமாக நிலம் அளித்திருந்தான்.

அளிக்கப்பெற்ற நில நிவந்தம்:
திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்டான் தான் பிறந்த ஆனி மூலத்தில் காலகால தேவர்க்கு குலசேகரன் சந்தி என்னும் பெயரால் விசேட வழிபாட்டிற்கும் திருக்கோயிலுக்கு நாடோறும் வழிபாட்டிற்குமாக இராஜேந்திரசோழ மங்கலமான ஆக்கூரினின்று வேறு பிரிந்த குலோத்துங்கசோழன் கருப்பூரில் முப்பத்தொருவேலி நிலத்தை அளித்திருந்தான். விசயநகரவேந்தனாகிய கிருட்டிணதேவ மகாராயர் எட்டுவேலி நிலத்தை அளித்திருந்தார். வீரவிருப்பண்ண உடையார் நூறுவேலி நிலத்திற்குரிய வரிகள் அனைத்தையும் இக் கோயிலுக்குக் கொடுத்திருந்தனர். இவ்வூருக்கு அருகிலுள்ள எருக்காட்டுச்சேரியே இக்கோயிலுக்குச் சொந்தம் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற நுந்தாவிளக்குக்களைப்போல் வேறு எங்கும் அளிக்கப்பெறவில்லை. இந்த நுந்தாவிளக்குப்புறங்கள் பெரும்பான்மையும் இவ்வெருக்கட்டாஞ்சேரி மணற்குன்றுகளைத் திருத்தி நிலமாக அளிக்கப் பெற்றனவாகும். ``விரும்பி நல்விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக் கரும்பினில் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே`` என்னும் அப்பர்பெருமான் திருவாக்கை எண்ணியே மிக ஏராளமான நுந்தா விளக்குக்களுக்கு நில நிவந்தங்கள் அளித்திருத்தல் வேண்டும்.

பிற செய்திகள்:
இராசநாராயணவளநாட்டுக் கரம்பூர்நாட்டுத் தில்லையாளி நல்லூரில் தில்லையாளிஈசுவரமுடையார் கோயிலில் எழுந்தருளுவித் திருந்த திருக்கடவூர் நாயகருக்கு அர்ச்சனாபோகமாக மூன்று வேலி நிலத்தைத் திருக்கடவூர் சபையார் விக்கிரமசோழதேவரின் நான்காம் ஆண்டில் விட்டிருந்தனர். தில்லையாளிநல்லூரே இக்காலம் தில்லையாடி என்று வழங்கப்பெறுகின்றது. அக்கோயில் கல்வெட்டு அதைத் தில்லையாளிநல்லூர் என்றே குறிப்பிடுகிறது. இங்ஙனம் மூன்று வேலி நிலம் அளித்திருந்த செய்தியைத் திருவாவடுதுறைக் கோயிலின் மூன்றாம் பிராகாரத்து வடபுறச் சுவரிலுள்ள கல்வெட்டும் உணர்த்துகிறது. இச்செய்தியைப்பற்றி உணர்த்தும் கல்வெட்டு திருவாவடு துறைக் கோயிலில் இருப்பதன் காரணம் புலப்படவில்லை. விசய நகரவேந்தராகிய கிருட்டினராயர் காலத்துக் கல்வெட்டுப் பாடல் திருக்கடவூரில் வசித்து வந்தவனும், ரெய்ச்சூர் சண்டையில் ஈடுபட்டு வந்தவனும் ஆகிய ஆபத்சகாயன் என்னும் பிராமணன் இக் கோயிலைப் பழுதுபார்த்ததைப்பற்றிக் குறிப்பிடுகின்றது.

பாண்டிய நாட்டார் ஒருவர் பள்ளியறைக்குச் சிம்மாசனம் கொடுத்துள்ளனர். மூன்றாங் குலோத்துங்கசோழன் காலத்தில் வீராந்தப்பல்லவரையர் என்னும் புலவர் பெருமகனார் இருந்தனர். அவரிடத்தில் சோழ மன்னன் நல்லமதிப்பு வைத்திருந்தான். இப் புலவரின் விருப்பப்படி இக்கோயில் நட்டுவநிலை பாரசிவன் பொன்னனாகிய கால விநோத நிருத்தப் பெரியானுக்கு அரசனால் கொடுக்கப் பெற்றது.

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு:
இவ்வூர் முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தில் உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர்நாட்டுக் கடவூர் என்றும்; முதற் குலோத்துங்கசோழன் காலத்தில் இராஜநாராயணவளநாட்டு அம்பர் நாட்டுக் கடவூர் என்றும்; மூன்றாங் குலோத்துங்கசோழன் காலத்தில் சயங்கொண்ட சோழவளநாட்டு அம்பர் நாட்டுக் கடவூர் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளன.

(See the Annual Reports on South Indian Epigraphy of the year 1906 Numers 15 - 52. 1925 No. 241 - 258.)


கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி