வேள்விக்குடி (திருவேள்விக்குடி) (துருத்தி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பரிமளசுகந்தநாயகி உடனுறை கல்யாணசுந்தரேசுவரர்


மரம்: குத்தாலம்
குளம்: பதும, சுந்தர தீர்த்தங்கள், காவிரி

பதிகங்கள்: ஓங்கிமேலுழி -3 -90 திருஞானசம்பந்தர்
மூப்பதும் -7 -18 சுந்தரர்

முகவரி: குத்தாலம் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609801
தொபே. 04364 235225

சிவபெருமானின் திருக்கல்யாண வேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் குற்றாலம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

காவிரியின் வடகரைத் தலங்களில் 23 ஆவது ஆகும். மயிலாடுதுறையிலிருந்து மகாராஜபுரம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

இறைவன் திருப்பெயர் - கல்யாணசுந்தரேசுவரர். இறைவியின் திருப்பெயர் - பரிமளசுகந்தநாயகி. இத்தலம் திருத்துருத்தியோடு சேர்த்துப் பாடப்பெற்றிருக்கிறது.

இறைவர் பகற்காலத்தில் வேள்விக் குடியிலும், இரவில் திருத்துருத்தியிலும் எழுந்தருளியிருப்பதாகப் பதிகத்தால் அறியக்கிடக்கின்றது.

கோயிலைக் கட்டியவர்: இத் திருக்கோயிலைக் கருங்கல்லால் கட்டியவர் உத்தம சோழனது தாயாராகிய செம்பியன்மாதேவியாராவர்.

இச்செய்தி இக்கோயில் கருப்ப இல்லின் பின்புறச் சுவரின் கிழக்கிலும் வடக்கிலும் பொறிக்கப்பெற்றுள்ள ``இத் திருக் கற்றளி எடுப்பித்து இதேவர்க் ............. ஸ்ரீ உத்தமசோழதேவரைத் திருவயிறுவாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன்மாதேவியார் கோராசராசகேசரிபன்மர்க்கு ஆண்டு எ - வதில்`` என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.

கோயில் கட்டப்பெற்ற காலம்: ஈண்டுக் குறிக்கப்பெற்றுள்ள இராசகேசரிவன்மர் என்பவர் முதலாம் இராஜராஜமன்னராவர். இவர் கி.பி. 985 முதல் 1014 வரை சோழமண்டலத்தை ஆண்டவர். இவர் அரியணை ஏறிய கி.பி. 985 உடன் ஏழைக் கூட்ட கி.பி. 992 ஆகின்றது. எனவே கோயில் கட்டப்பெற்று இற்றைக்கு 963 ஆண்டுகள் ஆகின்றன.

கோயில் நிலைபெற்றுள்ள இடம்: இத்திருக்கோயில் சிவநெறிக் குரவராகிய திருநாவுக்கரசுப் பெருந்தகையார் காலத்தில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) காவிரியின் நடுவில் இருந்தது. இச்செய்தி ``பொன்னியின் நடுவுதன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தி யானை`` என்னும் அவரது தேவாரப் பகுதியால் விளங்கும்.

அது கருதியே இதற்குத் துருத்தி என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. துருத்தி எனினும் அரங்கமெனினும் ஒக்கும். துருத்தி என்பதற்கு ஆற்றிடைக் குறை என்பது பொருள். ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் இக்கோயில் இறைவரைக் ``காவிரி அகன்கரை உறைவார்`` எனக் குறித்துள்ளனர். எனவே சுந்தரர் காலத்தில் இது காவிரிக்கரைக் கோயிலாக விளங்கிற்று.

பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த முதலாம் இராஜராஜசோழன் கல்வெட்டு இக்கோயிலைக் காவிரித் தென்கரைக் கோயில் என்றே குறிப்பிட்டுள்ளது. இச் செய்தியைத் ``திண்டிறல் வென்றித் தண்டாற்கொண்ட கோவிராசகேசரி பன்மற்கு ஆண்டு கஎ ஆவது தென்கரை உய்யக்கொண்டார் வளநாட்டுத் திருவழுந்தூர் நாட்டுத் தேவதானம் வீங்குநீர்த்துருத்தி சொன்னவாறு அறிவார் ஆடுகின்ற பொற்பலகை விடங்கருக்கு`` என்னும் கல்வெட்டுப் பகுதி அறிவிக்கின்றது.

இறைவரின் திருப்பெயர்: இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர்க்குச் சொன்ன வாறு அறிவார், கற்றளியுடையமகாதேவர், வீங்கு நீர்த்துருத்தியுடையார் என்னும் பெயர்கள் வழங்கப்பெற்றுள்ளன. இவற்றுள் கற்றளியுடைய மகாதேவர் என்ற பெயர் கங்கைகொண்ட சோழனது நான்காம் ஆண்டுக் கல்வெட்டில்தான் முதன்முதல் காணப்படுகின்றது.

திருக்கோயிலின் பெயர்: இக்கோயில் வீங்குநீர்த்துருத்தியுடையார் கோயில், சொன்ன வாறறிவார்கோயில், செய்யபாதஞ்சேர்கழல்வலார் பொற்கோயில் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுவந்தது.

வழிபாடு: இத் திருக்கோயிலில் சிறுகாலை, உச்சியம்போது, அந்திப் போது, அர்த்தயாமம் என்னும் நான்கு காலங்களில் வழிபாடுகள் நடைபெற்றுவந்தன.

திருவமுது வகைகள்: வழிபாடு நடக்குங் காலங்களில் பயற்றுப் பொங்கல், (கும்மாய அமுது) பருப்பமுது, தயிரமுது ஆகிய இவைகள் பொரிக் கறியமுதுகளுடன் நிவேதிக்கப்பட்டுவந்தன.

வாத்தியங்களும் பிறவும்: வழிபாடு நடக்கும் நேரங்களில் பறை ஒன்று, மத்தளம் நான்கு, சங்கு இரண்டு, காளம் இரண்டு, செகண்டிகை ஒன்று, தாளம் ஒன்று, கைம்மணி இரண்டு இவைகள் ஒலிக்கப்பெற்று வந்தன. நடனமும் இருந்துவந்தது.

ஆண்டு விழா: இக்கோயிலில் வைகாசித்திங்களில் விசாகத்தில் திருவிழா நடந்துவந்தது. இச்செய்தி ``இதில் உடையார் சொன்னவாறறிவார் வைகாசித் திருநாள் திருவெழிச்சிக்கு வண்ணான்செய் நிலம் காலும், கும்பிடவந்து பூசித்தார், அமுதுசெய்கைக்கு நிலம் முக்காலே அரைமா அரைக்காணியும் ஆக நிலம் சந்திராதித்தவரை இறையிலியாக நாங்களே அநுபவிக்கக் கடவோமாகவும்`` என்னும் விக்கிரம சோழனது எட்டாம் ஆண்டிற் செதுக்கப்பெற்ற கல்வெட்டால் பெறப்படுகின்றது.

முதலாம் இராஜராஜன் கல்வெட்டிலும் இவ்விழா குறிக்கப் பெற்றுள்ளது.

அம்மன் கோயிலைப்பற்றிய செய்திகள்: சகம் 1552 இல் அதாவது கி.பி. 1630 இல் நாச்சியார்கோயில் சுற்றுமதில், உள்மதில், கோபுரம் இவைகள் பிப்பிலி சிதம்பர தீட்சிதரால் கட்டப்பெற்றுள்ளன.

பிற செய்திகள்: இக்கோயிலுக்குக் கல்யாண ஆலயம் என்று பெயர் வைக்கப் பெற்றிருந்தது என்பதைக் கிரந்தத்தில் பொறிக்கப்பெற்றுள்ள ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது. இவ்வூருக்கு அருகே வடபாலுள்ள கண்டியூர் இக்கோயிற் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. அது விக்கிரமசோழன் கல்வெட்டில் காணப்படுவதால் பழமை வாய்ந்த ஊராதல் வேண்டும்.

நாட்டின் பாகுபாடு: இவ்வூர் முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் உய்யக் கொண்டார் வளநாட்டுத் திருவழுந்தூர்நாட்டில் அடங்கியிருந்தது. இவ்வளநாடு காவிரிக்கும் அரிசிலாற்றிற்கும் இடைப்பட்ட நிலப்பரப் பாகும். முதற் குலோத்துங்கசோழன் காலத்தில் இவ்வள நாட்டின் பெயர் மாற்றப்பட்டு, இராசநாராயண வளநாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது.

மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் இந்த இராச நாராயண வளநாடு சயங்கொண்டசோழவளநாடு என்னும் பெயர் பெற்றது.

கோயிலின் நிர்வாகச் சிறப்பு: கோயில் குருக்கள் திருவாராதனை செய்யும் பிராமணர் என்றும், திருவாராதனை செய்யும் நம்பி என்றும், வழங்கப் பெற்றுள்ளனர். அவர்க்கு நாடோறும் நெல்லுப்பதக்கு நானாழியாக ஓராட்டைக்கு நெல் எழுபத்தைந்து கலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கோயில் பிராமணப்பிள்ளை திருவமுதாக்குதல், திருமஞ்சன நீரெடுத்தல், திருமெய்ப்பூச்சுத்தேய்த்தல் (சந்தனம் அரைத்தல்) விதானம் பிடித்தல் ஆகியவைகளைச் செய்து வந்தனர். அவர்க்கு நிசதம் நெல் குறுணி இருநாழியாக ஓராட்டை நாளைக்கு நாற்பத்தைங் கலங்கள் கொடுத்து வந்தனர். திருப்பள்ளித்தாமம் பறித்துத் தொடுப்பார்க்கு நிசதி நெல் குறுணி நானாழியும், திருவலகிடல் திருமெழுக்கிடல் இவைகளைச் செய்வார்க்கு நிசதி நெல் குறுணி இருநாழியும் திருமெய்க்காப்பார் இருவர்க்கு நிசதி நெல் முக்குறுணியும், கரணத்தான் ஒருவனுக்கு நிசதி நெல் பதக்கும், இராசநீதி ஓடிசெய்வார்க்கு நிசதி நெல் பதக்கும், ஸ்ரீ காரியஞ் செய்வானுக்கு நிசதம்பதக்காக ஓராட்டைக்கு நெல்லு அறுபதின்கலமும், திருப்பதியம் பாடுவார் இருவர்க்கு நிலம் எழுமாவரையும் ஆகச் சம்பளங்கள் கொடுக்கப்பெற்று வந்தன.

இவைகளை எல்லாம் அக்காலம் நல்ல சம்பளங்களாகக் கருதுதல் வேண்டும்.

வேள்விக்குடி கோயில் கட்டப்பெற்ற காலம்: இக்கோயிலில் உள்ள பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள் எல்லாம் ``கோப்பரகேசரி பன்மற்கு`` என்று தொடங்குகின்றன. இப்பரகேசரி என்னும் சோழன் பராந்தகன் I ஆதல் வேண்டும். எனவே முதலாம் ஆதித்த சோழனது மகனாகிய பராந்தகன்I காலத்தில் இக் கற்றளி எடுப்பிக்கப்பெற்றதாகும்.

கோயிலைக் கட்டியவர்: இத்திருக்கோயிலில் வாலக்கால்படை மட்டஞ் செய்வித்துத் தாடிப்படையும் பதினான்கு கல்லுஞ் செய்வித்தார் நல்லூர்நாட்டுத் திருநல்லூர் கச்சுவன் காடன் கெட்டியான திருவையாறு யோகியாவர். இத்திருக்கற்றளியில் நாலோபாதி கற்றளியைக் கட்டியவர் திரு வேள்விக்குடி நம்பியார் திருவையாறு யோகியாரும் அவரது மகனாகிய ஸ்ரீகர்ண திருக்கற்றளிப் பிச்சரும் ஆவர்.

மகாமண்டபத்தின் கிழக்கில் எடுத்துக்கட்டி கடலங்குடியில் இருந்த திருவரங்க தேவனான கங்கை கொண்ட சோழ விசயபாலனால் கட்டப்பெற்றதாகும். அர்த்த மண்டபத்து வாசல் நிலைக்கல்லைச் செய்வித்தான் திணைக்களத்து கரவு சாந்து எழுதுகின்ற பெரிய கிழவன் பட்டன் தேவன் ஆவன்.

கற்கள் உதவியவர்: சமிதன் வேளாண் சோழியும், ஆவூர்க் கூற்றத்து சூலபாணி வேள் கிழவனும், மணவில்கோட்டத்து அரும்பாக்கமுடையான் சீயகனாங்கனும், வீரநாராயணப் பல்லவரையர் பெண்டாட்டி குணமல்ல நாணங்கையும், இத்திருக்கோயிலைக் கட்டுவதற்குக் கற்கள் உதவியுள்ளனர்.

அர்த்தமண்டபத்து வாசலில் தென்பால் உள்ள மூன்று கற்கள் கண்டராச்ச தெரிஞ்ச கைக்கோளரில் ஒற்றிகண்ட ராவணன் முதலான மூவர்களால் இடப்பட்டனவாகும். இவர்களேயன்றி கொக்கையூர் கிழவன் அமரநிதி அண்ணியூர் நக்கனும் கல் கொடுத்துள்ளான்.

இறைவரின் திருப்பெயர்: இக் கல்வெட்டுக்களில் இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருவேள்விக்குடி ஆழ்வார், மங்கலநக்கர், ஸ்ரீகோயில் தேவர், திருவேள்விக்குடி உடையார், மணவாள நம்பி என்னும் திருப்பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

இறைவியாரின் திருப்பெயர்: இறைவியார் திருக்காமக்கோட்டமுடைய பெரியநாச்சியார், நாறு சாந்து இளமுலை நாச்சியார் என்னும் திருப்பெயரால் கூறப்படு கின்றனர். நாறு சாந்து இளமுலை அரிவையர் என்று அம்மையாரின் திருப்பெயரை ஞானசம்பந்தர் இவ்வூர்த் தேவாரத்தில் குறிப்பிட்டிருப் பது மகிழ்தற்குரியதாகும்.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனிகள்: திருவேள்விக்குடி எங்கணதாசன் கூவண்டென் ஆடவல்லான் பட்டன் இக் கோயிலில் திருவுருநம்பியாரை எழுந்தருளுவித்துள்ளான். இச்செய்தி கங்கை கொண்ட சோழனது மகனாகிய கோப்பர கேசரிபன்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திரதேவரின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.

சில திருமேனிகளைச் செய்வித்தவர்கள்: இக்கோயில் கர்ப்ப இல்லின் தென்புறத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியைச் செய்வித்தவர் வளஞ்சியர்பணிசெய் மகன் காத்தரேய் சிங்கம் ஆவர்.

இக்கோயிலில் துர்க்காதேவியார் (கொற்றவை) இல்லை. அவர் இருக்க வேண்டிய இடத்தில் ஓடேந்திச் செல்பவரின் (பிட்சாடனரின்) திருமேனியைப் பிற்காலத்தில் வைத்துள்ளனர்.

துர்க்கையின் திருமேனியைப் பழங்காலத்தில் எவர்கைக் கொண்டு சென்றனரோ அல்லது பழுதுற்றமையால் எங்கேனும் எடுத்துப் போட்டுவிட்டனரோ அறிகின்றிலம்.

அத்துர்க்கையாரைச் செய்வித்தவன் திருவழுந்தூர் நாட்டு நெற்குப்பை உடையான் ஆலன் பலதேவனான பாத்திரசேகர பல்லவரையன் ஆவன். அர்த்த மண்டபத்து வாசலடியில் உள்ள மகாகாளனைச் செய்வித்தவன் தென்கரை நாட்டு ஆனியமுடையான் காரிவேப்பனாகிய மூவேந்த வேளான் ஆவன்.

திருவேள்விக்குடியைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு: கோப்பரகேசரி வர்மன் காலத்தில் இவ்வூர் வடகரை குறுக்கை நாட்டுக்கு உட்பட்டிருந்தது. வடகரை என்பது காவிரிக்கு வடகரை யாகும். குறுக்கை என்பது தேவாரம் பெற்ற தலமாகிய திருக்குறுக்கை யாகும்.

இது திருவேள்விக்குடிக்கு வடகிழக்கே சுமார் 8 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. குறுக்கை நாட்டுக் குறுக்கை என்ற நாட்டுத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் குறிப்பிடப்பெற்றது இவ்வூரேயாகும்.

முதலாம் இராஜராஜன் காலத்தில் இவ்வேள்விக்குடி இராஜேந்திர சிங்க வளநட்டுக் குறுக்கை நாட்டிற்கு உட்பட்டிருந்தது.

இராஜேந்திர சிங்க வளநாடு என்பது காவிரிக்கும், சிதம்பரத்திற்கு வடக்கே இருக்கும் வெள்ளாற்றிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பாகும். இது இருபத்திரண்டு பிரிவுகளைக் கொண்டிருந்தது. விஜய ராஜேந்திரன் (கங்கைகொண்ட சோழனின் இரண்டாவது மகன்) கல்வெட்டில் இந்த இராஜேந்திரசிங்க வளநாடு இராஜாயிராஜ வளநாடு என்று வழங்கப் பெற்றிருந்தது.

இந்த இராஜேந்திர சிங்க வளநாடு முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் விருதராச பயங்கர வளநாடு என்று பெயர் பெற்றது. பிற்பட்ட காலங்களிலும் இப்பெயரே நின்று நிலவுவதாயிற்று.

திருவேள்விக்குடியைத் தன்னகத்துக் கொண்டுள்ள சதுர் வேதிமங்கலம்: சதுர்வேதிமங்கலம் என்பது சிலசிற்றூர்களைத் தன்னகத்துக் கொண்டதாகும். அம்முறையில் இத்திருவேள்விக்குடி கோப்பரகேசரி வர்மன் காலத்தில் விடேல்விடுகு சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்திருந்தது.

கங்கைகொண்ட சோழன் காலத்தில் இது கடலங்குடி என்று பெயர் பெற்றது. விஜயராசேந்திரன் காலத்தில் (கங்கைகொண்ட சோழ சதுர்ப்பேதிமங்கலம் என்று வழங்கப்பட்டது).

பின் இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தில் இக்கங்கை கொண்ட சோழ சதுர்ப்பேதி மங்கலம் கடலங்குடி ஆயிற்று. அதுவே இன்றளவும் நின்று நிலவுவது ஆயிற்று. இக்கடலங்குடி திருவேள்விக் குடிக்குத் தென்கிழக்கில் சுமார் கி.பி. தூரத்தில் இருக்கின்றது.

இவ்வூர்க் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற (அண்மையில் உள்ள) ஊர்கள்:- குணமலப்பாடி - இது திருவேள்விக்குடிக்கு மேற்கே கி.பி. தூரத்தில் இருக்கின்றது. இக்காலம் இதை மக்கள் குணதலாப்பாடி என்றும், கொள்ளாப்பாடி. என்றும் சொல்கின்றனர். கோப்பர கேசரி வர்மனின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றிருப்பதால் இவ்வூர் மிகப் பழமை வாய்ந்ததாகும்.

முருகவேள்மங்கலம்: இது திருவேள்விக்குடிக்கு வடமேற்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இவ்வூரும் கோப்பர கேசரிவர்மன் காலத்துக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. இது இக்காலம் முருவமங்கலம் என்று சொல்லப்படுகின்றது.

செம்பியன் கண்டியூர்: இது வேள்விக்குடிக்கு வடமேற்கில் சுமார் கி.பி. தூரத்தில் இருக்கின்றது. இக்காலம் கண்டியூர் என்று வழங்கப்படுகிறது. முதற் குலோத்துங்க சோழனின் பத்தாமாண்டுக் கல்வெட்டில் இவ்வூர் குறிக்கப்பெற்றுள்ளது. எனவே இது, இற்றைக்கு 875 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த ஊராகும்.

இவ்வூரைப் பற்றித் திருத் துருத்திச் சொன்னவாறு, அறிவார் கோயிலில் உள்ள விக்கிரம சோழன் கல்வெட்டிலும் குறிக்கப் பெற்றுள்ளது.

சோத்த மங்கலம்: இது திருக்குருக்கைக்கு மேல்பால் உள்ள ஊராகும். முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் நிவந்தம் அளிக்கப்பெற்று அவன் மகனாகிய கங்கை கொண்ட சோழன் காலத்தில் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டில் இவ்வூர் குறிக்கப்பெற்றுள்ளது. இவ்வூர் இற்றைக்கு 946 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததாகும்.

பாண்டூர்: இது திருக்குறுக்கைக்குத் தென்பால் உள்ள ஊராகும்., இக்கோயில் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற வேறு நாடுகள்:

நல்லாற்றூர் நாடு: இது திருவேள்விக்குடிக்கு மேற்கே நல்லாற்றூர் என்பதைத் தலைநகராகக்கொண்ட நாடாகும். குணமலப்பாடி, ஆலங்குடி, முதலான ஊர்கள் இந்த நல்லாற்றூர் நாட்டை



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி