புறம்பயம் (திருப்புறம்பயம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கரும்போடுசொல்லம்மை உடனுறை சாட்சிநாதர்


மரம்: புன்னை மரம்
குளம்: சப்தசாகர தீர்த்தம்

பதிகங்கள்: மறம்பயமலைந் -2 -30 திருஞானசம்பந்தர்
கொடிமாட -6 -13 திருநாவுக்கரசர்
அங்கம் ஓதி -7 -35 சுந்தரர்

முகவரி: திருப்புறம்பயம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612303
தொபே. 0435 2459011

பக்கத்தே தண்ணீரையுடையது என்று பொருள்படும். இதற்கு ஏற்ப திருக்கோயிலின் மேல்புறத்தில் மதிலை ஒட்டி நீர்நிலை இன்றும் இருக்கின்றது. ஒரு காலத்தில் பிரளயம் வந்தபொழுது அது ஊரினுள் புகாதவாறு தடைப்பட்டு புறத்தே நின்றமையால் இப்பெயர்பெற்றது என்பர். அதற்கு ஏற்ப இவ்வூர்த் தல விநாயகர்க்குப் பிரளயங்காத்த விநாயகர் என்ற பெயர் இருக்கின்றது.

கும்பகோணத்திற்கு வடமேற்கே 9 கி.மீ. தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையில் இருக்கின்றது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இறைவரது திருப்பெயர் புறம்பயநாதர்; சாட்சிநாதர். ஒரு வணிகப்பெண்ணின் நிமித்தம் இவ்வூர்ச் சிவபெருமான் மதுரை சென்று சாட்சி கூறினமையால் சாட்சிநாதர் எனப் பெயர் பெற்றார். இறைவியாரது திருப்பெயர் கரும்படுசொல்லி. இத்திருப்பெயரை, (தி. 2 பதி. 196. பா. 5) ஞானசம்பந்தப் பெருந்தகையார்.

``ஓர் பாகம் கரும்பொடு படு சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்`` என்று எடுத்தாண்டுள்ளது பெருமகிழ்ச்சியைத் தருவதாகும். கரும்படு சொல்லி என்பதற்குக் கரும்பை வென்ற சொல்லை உடையவள் என்பது பொருள்.

தீர்த்தம், பிரம தீர்த்தம். இது இராஜகோபுரத்திற்கு வட கிழக்கில் இருக்கின்றது. சத்தசாகர தீர்த்தம்: இது பிரமதீர்த்தத்திற்குக் கிழக்கில் நந்த வனத்தில் இருக்கிறது. பிரளயகாலத்தில் அழிக்கவந்த ஏழுகடல்களும் இதனுள் அடங்கி, இருக்கின்றன என்று புராணம் கூறுகின்றது.

மண்ணியாறு: இது ஊரின் கிழக்கே இருக்கிறது.

கொள்ளிடப்பேராறு: இது ஊருக்கு வடபால் 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

தலவிருட்சம் புன்னை. இது முதல் பிராகாரத்தில் வட மேற்கில் இருக்கின்றது.

சனகர் முதலிய நால்வர்களுக்குச் சிவபெருமான் இத்தலத்தில் அறத்தை உணர்த்தினார். இச்செய்தியை, இவ்வூர்ப்பதிகத்திலுள்ள, ``நால்வர்க் கறம்பயனுரைத்தனை புறம்பயமமர்ந்தோய்`` (திருப் பாட்டு 1) என்னும் ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியால் அறியலாம். இத்தலத்தில், தன் தங்கை மகளுடன் வந்தடைந்த காவிரிப்பூம்பட்டி னத்து வணிகன் அரவு கடித்து இறந்துபோக, சிவபெருமான் அவனுக்கு உயிர் அளித்ததோடு அவனுக்கு அப்பெண்ணைத் திருமணம் புரிவித்தார். அப்பெண் மதுரையில், அவளது கணவனின் முதல் மனைவியால் பழிக்கப்பெற்றபோது வன்னி, கிணறு, மடைப்பள்ளி இவை களோடு சென்று சாட்சி பகர்ந்தார். திருக்கோயிலுக்கு நாளும் விறகு கொண்டுவந்த ஒரு ஆதித்திராவிடற்கு வீடு பேற்றை அருளினார். துரோணர் இறைவரை வழிபட்டு அசுவத்தாமா என்ற புதல்வனைப் பெற்றார். விசுவாமித்திரர், சுக்ரீவன் வழிபட்டும் பேறு பெற்றார்கள்.

இத்தலத்திற்குத் தமிழில் ஒரு புராணம் இருக்கின்றது. அது இதுவரை அச்சிடப்பெறவில்லை. அதை ஆக்கியோரும் இன்னாரென்று புலப்படவில்லை. இத்தலத்திற்கு உலா ஒன்று இருந்தது. அதில் சில கண்ணிகள்தான் கிடைத்துள்ளன. இத்தலத்திற்குப் புறம்பயமாலை என்ற நூலும் உண்டு. அதில் பத்துப் பாடல்களே கிடைத்துள்ளன. எஞ்சியவைகள் கிடைத்தில. அவைகளைத் திருவையாறு, வித்துவான், திரு.வை. சுந்தரேச வாண்டையார் அவர்கள் அச்சிட்டு உள்ளார்.

இத்தல விநாயகர்க்குப் பிரளயங்காத்த விநாயகர் என்று பெயர். இவருடைய திருமேனி கடல்படு பொருள்களாகிய இப்பி, சங்கு இவைகளால் ஆக்கப்பெற்றுள்ளது. இவர்க்கு ஆண்டுதோறும் ஆவணி மாதத்துச் சதுர்த்தியில் ஒரு ஆடம்தேன் அபிடேகம் நடைபெற்று வருகின்றது. அவ்வளவு தேனும் அவர் திருமேனியில் சுவறி விடுகின்றது.

இங்குத் தட்சிணாமூர்த்திக்குத் தனிக்கோயில் சந்நிதியில் இருக்கிறது. வணிகப் பெண்ணின் பொருட்டுச் சிவபெருமான் மதுரை சென்று சாட்சி பகர்ந்தததை உணர்த்தும் நாடகம் ஒன்று இவ்வூரில் வைகாசிமாதத்தில் நடைபெறுகின்றது. அதை மக்கள் `வன்னி நாடகம்` என்று கூறுகின்றனர்.

இக்கோயில் பணிமகளாராகிய ஒரு அம்மையார் ஆதனூரில் உள்ள தம் காதல் கிழவனிடம் ஒரு நாள் மாலைப்பொழுதில் செல்லும் பொழுது மண்ணியாற்றில் ஓடம் விட்டவன். யாரும் இல்லாத நிலையை உணர்ந்து, அவ்வம்மையாருடைய அணிகலன்கள், கூறைகள் முதலியவைகளைப் பறித்துக்கொண்டு அவளைக்கொன்று ஆற்றில் தள்ளிவிட்டான். ஆற்றைக் கடப்பதற்குள் அவனும் தவறி ஆற்றில்விழுந்து இறந்துவிட்டான்.

இவ்வரலாற்றை உட்கொண்டுதான், நிறைமொழி மாந்தராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
``குற்றொ ருவரைக் கூறை கொண்டு
கொலைகள் சூழ்ந்த களவெலாஞ்
செற்றொ ருவரைச் செய்த தீமைக
இம்மை யேவருந் திண்ணமே``
என (தி. 7 பதி. 35 பா. 4)அருளியுள்ளார்கள் என்பார்கள்.

இவ்வூர்ச் சிவபெருமான், மதுரை சென்று சாட்சிபகர்ந்த வரலாற்றுக் குறிப்பு, சிலப்பதிகாரத்தில் ``வன்னிமரமும் மடைப்பளியும் சான்றாக முன்னிறுத்துக் காட்டிய மொய்குழலாள்`` எனக் குறிக்கப்பட்டுள்ளது.

இவ்வூர்க்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. மாணிக்கவாசகர், ``புறம் பயமதனில் அறம்பல அருளியும்`` என இவ்வூரைப் பாடியுள்ளனர். இக்கோயில் மதுரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.



கல்வெட்டு:

இந்தக் கோயிலில் 11 கல்வெட்டுக்கள் (See the Annual Reports on South Indian Epigraphy for the year 1897, No. 323-357; year 1932, No. 146-151. See also South Indian Inscriptions, Vol. VI, 18-32. See also)

தமிழ்ப் பொழில்படி எடுக்கப்பட்டன. எல்லாம் சோழர் கல்வெட்டுக்களே. இராஜகேசரி வர்மன் முதல், குலோத்துங்கன் வரை. அதாவது (கி.பி. 10-11) நிலதானங்கள் விளக்குக்களுக்காக நிலதானங்கள் விளக்குகளுக்காக நிலதானம், பொன்தானம், விளக்குத்தானம், விளக்குக்காகப் பசுதானம், ஆடு தானம் முதலியன கூறப்பெற்றுள்ளன.

இராஜகேசரிவர்மன் காலத்தில் ஆலய பண்டாரத்தில் பெற்ற மிச்சப் பொருளினால் பொன்னாபரணங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் செய்யப்பட்டன. இராஜேந்திரன் காலத்தில் திருப்புறம்பயத்து ஆதித்தேசுவரருக்கு 10 விளக்குக்களுக்காகப் பொன்தானம் செய்யப் பட்டது என்று கூறும் கல்வெட்டினால் இக்கோயிலின் மூர்த்தியின் பெயர் ஆதித்தேசுவரர் என்றும் இக்கோயிலை ஆதித்த சோழன் கட்டியிருக்கலாம் என்றும் ஊகிக்கலாம்.

உதயேந்திரச் செப்பேட்டின் படி கங்க அரசன் பிருதிவி பதிக்கும் வரகுண பாண்டியனுக்கும் நடந்த போரில் கங்க அரசன் உயிர்நீத்தான்.(See South Indian Inscriptions, Vol. I, 381.)

இந்நாட்டின் பெயர் இராஜேந்திரசிம்ம வளநாட்டு அண்டாற்றுக் கூற்றம் என்றும் காணக்கிடக்கிறது.

இத்திருக்கோயிலில் முதலாம் பராந்தகன், இரண்டாம் ஆதித்தன், முதலாம் இராஜராஜசோழன், முதற் குலோத்துங்க சோழன், விக்கிரமசோழன், மூன்றாம் இராஜராஜசோழன், மூன்றாம் இராஜேந்திர சோழன் என்னும் பிற்காலச் சோழ மன்னர்களின் காலங்களில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் அறுபத்திரண்டும், விசயநகர வேந்தனாகிய விரூபாட்சிராயன் காலத்தது ஒன்றும் ஆக அறுபத்து மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவைகளுள் முதற் பராந்தகசோழன் காலத்துக் கல்வெட்டு, இக்கோயிலுக்கு ஆதித்தேச்சுரம் என்னும் பெயர் உண்மையைப் புலப்படுத்துகின்றது. கோயில் திருவிசைப்பாப் பதிகம் பாடிய முதல் கண்டராதித்த சோழதேவரது மனைவியராகிய செம்பியன் மாதேவியார் புறம்பயத்து இறைவர் நீராடியருளுவதற்கு வெள்ளிக் கலசம் ஒன்றை அளித்துள்ளனர். இரண்டாம் ஆதித்தசோழன் காலத்தில் இருமடிசோழப் பெரும்படையினர். நந்தவனத்தின் பொருட்டு ஆறு மா நிலம் விட்டுள்ளனர்.

வானவன் மூவேந்த வேளான் என்பான் இத்திருக்கோயிலில் அஷ்டபரிவார தேவர்களை எழுந்தருளுவித்து அவர்களுக்கு நாள்வழி பாட்டிற்கு நிவந்தங்கள் அளித்துள்ளான். பங்குனித் திருநாளுக்கும், திருவேட்டை விழாவிற்கும் திருவெள்ளறை நல்லூர் என்னும் ஊரில் முதற் குலோத்துங்கன் நிலம் அளித்துள்ளான். முடிகொண்ட சோழப் பல்லவரையன் முத்திறத்து அடிகளுக்கும் நாள் வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான்.

மூன்றாங்குலோத்துங்கசோழன் காலத்தில் ஆலங்குடையான் அடிகள் புறம்பயனும், திருச்சிற்றம்பலமுடையானும் ஆளுடைய நாயகர் கூத்தாடுந் தேவர், அவர்தம் பிராட்டியார், பிள்ளையார் முத்துமுளைக்கன்று. அறம்பயந்த பிள்ளையார் இவர்களுக்கு அமாவாசைதோறும் திருமஞ்சனம் ஆட்டி அருளுவதற்கும் திருவமுதுக்கும் நிலம்கொடுத் துள்ளதோடு இவ்வேந்தன் காலத்தில் வீதிவிடங்க விழுப்பரையனும் அவன் தம்பி அகிலநாயக விழுப் பரையனும் மூன்றாம் பிராகாரத்தில் முதல்கோபுர வாசலடியில் அறம் உரைத்த நாயனாரையும், முதற் பிராகாரத்தில் திருவலஞ்சுழி இறைவனையும் , புற்றிடங் கொண்டாரையும் எழுந்தருளுவித்து, நாள்வழிபாட்டிற்கு நிலங்களை அளித்த செய்தியும் அறியலாம். மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தில் குந்தவை நல்லூர்ச் சபையார் புறம்பயத்து இறைவனுக்கு நிவந்தம் அளித்துள்ளனர். விஜய நகர வேந்தன் கல்வெட்டு மக விழாவைப்பற்றிக் குறிப்பிடுகின்றது. இவ்வூரில் ஆண்டார்க்கடியா பரணர் மடம் ஒன்று இருந்தது. தாமோதர விண்ணகரம் என்ற பெருமாள்கோயில் ஒன்று இருந்தது. இவை போன்ற பல செய்திகள் இவ்வூர்க் கல்வெட்டுக்களில் காணலாம்.

 
 
சிற்பி சிற்பி