அருள்மிகு கரும்போடுசொல்லம்மை உடனுறை சாட்சிநாதர்
மரம்: புன்னை மரம்
குளம்: சப்தசாகர தீர்த்தம்
பதிகங்கள்: மறம்பயமலைந் -2 -30 திருஞானசம்பந்தர்
கொடிமாட -6 -13 திருநாவுக்கரசர்
அங்கம் ஓதி -7 -35 சுந்தரர்
முகவரி: திருப்புறம்பயம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612303
தொபே. 0435 2459011
பக்கத்தே தண்ணீரையுடையது என்று பொருள்படும். இதற்கு ஏற்ப திருக்கோயிலின் மேல்புறத்தில் மதிலை ஒட்டி நீர்நிலை இன்றும் இருக்கின்றது. ஒரு காலத்தில் பிரளயம் வந்தபொழுது அது ஊரினுள் புகாதவாறு தடைப்பட்டு புறத்தே நின்றமையால் இப்பெயர்பெற்றது என்பர். அதற்கு ஏற்ப இவ்வூர்த் தல விநாயகர்க்குப் பிரளயங்காத்த விநாயகர் என்ற பெயர் இருக்கின்றது.
கும்பகோணத்திற்கு வடமேற்கே 9 கி.மீ. தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையில் இருக்கின்றது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.
இறைவரது திருப்பெயர் புறம்பயநாதர்; சாட்சிநாதர். ஒரு வணிகப்பெண்ணின் நிமித்தம் இவ்வூர்ச் சிவபெருமான் மதுரை சென்று சாட்சி கூறினமையால் சாட்சிநாதர் எனப் பெயர் பெற்றார். இறைவியாரது திருப்பெயர் கரும்படுசொல்லி. இத்திருப்பெயரை, (தி. 2 பதி. 196. பா. 5) ஞானசம்பந்தப் பெருந்தகையார்.
``ஓர் பாகம் கரும்பொடு படு சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்`` என்று எடுத்தாண்டுள்ளது பெருமகிழ்ச்சியைத் தருவதாகும். கரும்படு சொல்லி என்பதற்குக் கரும்பை வென்ற சொல்லை உடையவள் என்பது பொருள்.
தீர்த்தம், பிரம தீர்த்தம். இது இராஜகோபுரத்திற்கு வட கிழக்கில் இருக்கின்றது. சத்தசாகர தீர்த்தம்: இது பிரமதீர்த்தத்திற்குக் கிழக்கில் நந்த வனத்தில் இருக்கிறது. பிரளயகாலத்தில் அழிக்கவந்த ஏழுகடல்களும் இதனுள் அடங்கி, இருக்கின்றன என்று புராணம் கூறுகின்றது.
மண்ணியாறு: இது ஊரின் கிழக்கே இருக்கிறது.
கொள்ளிடப்பேராறு: இது ஊருக்கு வடபால் 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
தலவிருட்சம் புன்னை. இது முதல் பிராகாரத்தில் வட மேற்கில் இருக்கின்றது.
சனகர் முதலிய நால்வர்களுக்குச் சிவபெருமான் இத்தலத்தில் அறத்தை உணர்த்தினார். இச்செய்தியை, இவ்வூர்ப்பதிகத்திலுள்ள, ``நால்வர்க் கறம்பயனுரைத்தனை புறம்பயமமர்ந்தோய்`` (திருப் பாட்டு 1) என்னும் ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியால் அறியலாம். இத்தலத்தில், தன் தங்கை மகளுடன் வந்தடைந்த காவிரிப்பூம்பட்டி னத்து வணிகன் அரவு கடித்து இறந்துபோக, சிவபெருமான் அவனுக்கு உயிர் அளித்ததோடு அவனுக்கு அப்பெண்ணைத் திருமணம் புரிவித்தார். அப்பெண் மதுரையில், அவளது கணவனின் முதல் மனைவியால் பழிக்கப்பெற்றபோது வன்னி, கிணறு, மடைப்பள்ளி இவை களோடு சென்று சாட்சி பகர்ந்தார். திருக்கோயிலுக்கு நாளும் விறகு கொண்டுவந்த ஒரு ஆதித்திராவிடற்கு வீடு பேற்றை அருளினார். துரோணர் இறைவரை வழிபட்டு அசுவத்தாமா என்ற புதல்வனைப் பெற்றார். விசுவாமித்திரர், சுக்ரீவன் வழிபட்டும் பேறு பெற்றார்கள்.
இத்தலத்திற்குத் தமிழில் ஒரு புராணம் இருக்கின்றது. அது இதுவரை அச்சிடப்பெறவில்லை. அதை ஆக்கியோரும் இன்னாரென்று புலப்படவில்லை. இத்தலத்திற்கு உலா ஒன்று இருந்தது. அதில் சில கண்ணிகள்தான் கிடைத்துள்ளன. இத்தலத்திற்குப் புறம்பயமாலை என்ற நூலும் உண்டு. அதில் பத்துப் பாடல்களே கிடைத்துள்ளன. எஞ்சியவைகள் கிடைத்தில. அவைகளைத் திருவையாறு, வித்துவான், திரு.வை. சுந்தரேச வாண்டையார் அவர்கள் அச்சிட்டு உள்ளார்.
இத்தல விநாயகர்க்குப் பிரளயங்காத்த விநாயகர் என்று பெயர். இவருடைய திருமேனி கடல்படு பொருள்களாகிய இப்பி, சங்கு இவைகளால் ஆக்கப்பெற்றுள்ளது. இவர்க்கு ஆண்டுதோறும் ஆவணி மாதத்துச் சதுர்த்தியில் ஒரு ஆடம்தேன் அபிடேகம் நடைபெற்று வருகின்றது. அவ்வளவு தேனும் அவர் திருமேனியில் சுவறி விடுகின்றது.
இங்குத் தட்சிணாமூர்த்திக்குத் தனிக்கோயில் சந்நிதியில் இருக்கிறது. வணிகப் பெண்ணின் பொருட்டுச் சிவபெருமான் மதுரை சென்று சாட்சி பகர்ந்தததை உணர்த்தும் நாடகம் ஒன்று இவ்வூரில் வைகாசிமாதத்தில் நடைபெறுகின்றது. அதை மக்கள் `வன்னி நாடகம்` என்று கூறுகின்றனர்.
இக்கோயில் பணிமகளாராகிய ஒரு அம்மையார் ஆதனூரில் உள்ள தம் காதல் கிழவனிடம் ஒரு நாள் மாலைப்பொழுதில் செல்லும் பொழுது மண்ணியாற்றில் ஓடம் விட்டவன். யாரும் இல்லாத நிலையை உணர்ந்து, அவ்வம்மையாருடைய அணிகலன்கள், கூறைகள் முதலியவைகளைப் பறித்துக்கொண்டு அவளைக்கொன்று ஆற்றில் தள்ளிவிட்டான். ஆற்றைக் கடப்பதற்குள் அவனும் தவறி ஆற்றில்விழுந்து இறந்துவிட்டான்.
இவ்வரலாற்றை உட்கொண்டுதான், நிறைமொழி மாந்தராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
``குற்றொ ருவரைக் கூறை கொண்டு
கொலைகள் சூழ்ந்த களவெலாஞ்
செற்றொ ருவரைச் செய்த தீமைக
இம்மை யேவருந் திண்ணமே``
என (தி. 7 பதி. 35 பா. 4)அருளியுள்ளார்கள் என்பார்கள்.
இவ்வூர்ச் சிவபெருமான், மதுரை சென்று சாட்சிபகர்ந்த வரலாற்றுக் குறிப்பு, சிலப்பதிகாரத்தில்
``வன்னிமரமும் மடைப்பளியும் சான்றாக
முன்னிறுத்துக் காட்டிய மொய்குழலாள்``
எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இவ்வூர்க்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. மாணிக்கவாசகர், ``புறம் பயமதனில் அறம்பல அருளியும்`` என இவ்வூரைப் பாடியுள்ளனர். இக்கோயில் மதுரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.