சிக்கல்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வேல்நெடுங்கண்ணி உடனுறை வெண்ணெய்ப்பிரான்


மரம்: மல்லிகை
குளம்: புட்கரணி

பதிகம்: வானுலாவும் -2 -8 திருஞானசம்பந்தர்

முகவரி: சிக்கல் அஞ்சல்
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 611108
தொபே. 04365 245350

வசிட்டர், காமதேனுவின் வெண்ணெயினால் சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளுவித்துப் பூசித்தார். பூசைமுடிவில் அதை எடுக்க முயன்றபோது, எடுக்கக் கூடாமல் சிக்கிய காரணத்தால் இப்பெயர் பெற்றது.

நாகப்பட்டினத்திற்கு மேற்கே 8.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 83ஆவது தலமாகும். திருவாரூர் - நாகப்பட்டினம் பேருந்து வழியில் செல்லும் பேருந்து களில் சிக்கல் செல்லலாம்.

இறைவரின் திருப்பெயர் வெண்ணெய்ப்பிரான். இறைவி யாரின் திருப்பெயர் வேல்நெடுங்கண்ணி. ``சிக்கலுள் வேலவொண் கண்ணியினாளை யோர்பாகன் வெண்ணெய்ப்பிரான் பாலவண்ணன் கழலேத்த நம்பாவம் பறையுமே`` என இவ்வூர்ப்பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருந் தகையார் அம்மை, அப்பர் திருப்பெயர்களை எடுத்து ஆண்டிருப்பது பெருமகிழ்ச்சிக்கு உரியதாகும். தீர்த்தம் க்ஷீரபுஷ்கரிணி. தலவிருட்சம் மல்லிகை. திருக்கோயில் கட்டுமலையின்மேல் இருக்கின்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானுக்குச் சிங்காரவேலவர் என்று பெயர். இங்குச் சூரசம்ஹார விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இத் தலத்துக்குப் பதிகம் ஒன்றாகும்.



கல்வெட்டு:

மொத்தம் எட்டு எடுக்கப்பட்டுள்ளன. கோயில் அஸ்தி வாரத்தில், ஸ்கந்தபுராணத்தில் கூறப்பட்ட மகாத்மியம் இக் கோயில் கூறப்பட்டுள்ளது. பிறகு இக்கோயிலில் வழிபட்ட ரிஷிகள், தல விருட்சம் பற்றி விவரித்தும், அவ்வவ் உருவங்களை அடியில் வரைந்தும் உள்ளது.

சதாசிவராயன் காலத்துக் (சகம் 1482) கல்வெட்டில் இராமராசையர்மகன் கிருஷ்ணமாராசையன் திருவாரூர் ஞானப் பிரகாசப் பண்டாரத்தை கோயில் மேல்பார்வைக்கு நியமித்தான். அச்சுததேவராயன் காலத்தில் குமாரசாமியின் உற்சவங்களுக்கு நிலதானம் செய்யப்பட்டது. மற்றொன்றில் அரங்கப்பராசன் கந்தசாமிப்பேட்டையைக் கோயிலுக்குக் கொடுத்தான்.

இத்திருக்கோயிலில் ஜடாவர்மன், திருபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் விஜயநகர பரம்பரையைச் சேர்ந்த மகாமண்டலேசுவரர் சதாசிவ மகாராயர் காலத்தில் பொறிக்கப்பெற்றது ஒன்றும், வீரபூபதி அச்சுத தேவ மகாராயர் காலத்தது ஒன்றும், கிரந்தத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றும், விஜய வருஷத்தில் ஏற்பட்ட கல்வெட்டு ஒன்றும் ஆக ஐந்து கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவைகளுள், வீரபாண்டியன் கல்வெட்டு, பால்வெண்ணெய் நாயனாருக்கு வழிபாட்டிற்குப் பணம் கொடுத்ததையும்; சதாசிவ மகாராயர் கல்வெட்டு (சகம் 1482 ரௌத்திரி ஆண்டில் ஏற்பட்டது) திருவாரூர் ஞானப்பிரகாச பண்டாரம் கிருஷ்ணமாராசையன் கட்டளைப்படி சிக்கல் வடக்குடி வேடச்சேரி முதலியவைகளுக்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்ததையும், அச்சுததேவ மகாராயர் கல்வெட்டு, பால்வெண்ணெய் நாதர் கோவிலில் உள்ள குமாரசாமிக்கு, விளக்குக்களுக்கும் விழாக்களுக்கும் நில நிவந்தம் செய்துகொடுத்ததையும், விஜயவருஷம் கல்வெட்டு, கந்தசாமிப் பேட்டை என்ற ஊரை அரங்கப்பராசர் கொடுத்ததையும் கிரந்தத் திலுள்ள கல்வெட்டு ஸ்கந்தபுராணத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள சிக்கல் மகாத்மியத்தைப்பற்றியும், தமிழிலும் கிரந்தத்திலும் உள்ள கல்வெட்டு, இத்தலத்தின் திருக்குளம் தலமரம், வழிபட்ட ரிஷிகள் இவர்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. (See the Annual Reports on South Indian Epigraphy for the year 1911, No. 102 to 107).

 
 
சிற்பி சிற்பி