குருகாவூர்வெள்ளடை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு காவியங்கண்ணி உடனுறை வெள்ளடைநாதர்


குளம்: பாற் கிணறு, சிவ குளம்

பதிகங்கள்: சுண்ணவெண் -3 -124 திருஞானசம்பந்தர்
இத்தனையாமாற்றை -7 -29 சுந்தரர்

முகவரி: திருக்கடாவூர் வடகால் அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609115
தொபே. 9245612705

ஊரின் பெயர் குருகாவூர். இங்குள்ள கோயிலின்பெயர் வெள்ளடை. திருக்கடாவூர் என்று வழங்கப்பெறுகின்றது. சீகாழிக்குக் கிழக்கே தென் திருமுல்லைவாயிலுக்குப் போகும் பெருவழியில் 4.5 கி.மீ. தெற்கே திரும்பினால் 1. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரி வடகரைத் தலங்களுள் 13 ஆவது ஆகும்.

( See the Annual Report on South Indian Epigraphy for the year 1918 No. 424 to 441.)

இறைவர் திருப்பெயர் - வெள்ளடைநாதர். இறைவி திருப் பெயர் - காவியங்கண்ணி. இத்திருப்பெயரை ஞானசம்பந்தப் பெருந் தகையார் ``காவியங்கண்ணி மடவாளோடுங் காட்டிடைத் தீயகலேந்தி நின்றாடுதிர்`` என இவ்வூர்ப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளனர். தீர்த்தம் - பால்கிணறு. இது திருக்கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தை அமாவாசையில், இறைவர் தீர்த்தங்கொடுக்கும் சமயத்தில் இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறும் அதிசயம் பொருந்தியது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தொண்டர் கூட்டத்துடன், சீகாழி யிலிருந்து, இவ்வூர்க்கு எழுந்தருளுகையில், நீர்வேட்கையும், பசியும் அவரை வருத்திற்று. இறைவர் அந்தணராய் அருள்வடிவங் கொண்டு வழியில் தண்ணீர்ப்பந்தல் ஏற்படுத்தி அவர்களுக்குத் தண்ணீரும் கட்டமுதும் அளித்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் உண்டு உறங்குகையில், இறைவர் பந்தலோடு மறைந்தருளினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தூக்கத்தினின்று எழுந்து, ``இத்தனையாமாற்றை யறிந்திலேன்`` எனத் தொடங்கும் பதிகம்பாடி கோயிலுக்குச்சென்று இறைவனை வழிபட்டார். இதற்கு ஏற்பப் ``பாடுவார் பசி தீர்ப்பாய்`` என்னும் குறிப்பும் இவ்வூர்ப் பதிகத்தில் காணப்பெறுகின்றது. தொண்டர்களுக்கு அமுது ஊட்டிய இடம் ``வரிசைப்பற்று`` என்னும் பெயரால் வழங்கப்பெறுகின்றது. கட்டமுது அளித்தருளிய விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பௌர்ணமியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

இவ்வூர்க்கோயிலில், முதலாம் இராஜேந்திர சோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரம சோழன், பரகேசரி வர்மராகிய குலோத்துங்க சோழன் மதுரையும் ஈழமும் கொண்டருளின இராச கேசரிவர்மனாகிய திரிபுவன சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவன் இவர்களால் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களில் இறைவர், திருக்குருகாவூர் திரு வெள்ளடை மகாதேவர், திருக்குருகாவூர் திருவெள்ளடை ஆண்டார், திருக்குருகாவூர் வெள்ளடையப்பர் எனக் கூறப்பெற்றுள்ளனர்.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனியும் பிரதிமைகளும்: இத்திருக்கோயிலில் சந்திரசேகர தேவரை எழுந்தருளுவித்து, அவர்க்கு நாள் வழிபாட்டிற்கு நிபந்தம் அளித்தவர், மணிகொண்ட சோழப்பட்டணத்து, சாத்தன்மண்டை ஆவர், இது நிகழ்ந்தது சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவரின் பதினைந்தாம் ஆண்டாகும். இக்கோயிலில் மூவர் முதலிகளைப் பிராகாரத்தில் எழுந்தருளுவிக்கப் பெற்ற காலம் குலோத்துங்கசோழ தேவரின் பதின்மூன்றாம் ஆண்டாகும்.

திருமடம்: இவ்வூரில் திருச்சிற்றம்பலமுடையான் மடம் என்னும் பெயருடைய மடமொன்றிருந்தது. அதில் மாகேஸ்வரர்களுக்கும், அபூர்விகளுக்கும், உணவளிக்கும்பொருட்டுக் குலோத்துங்க சோழ வள நாட்டு வேளாநாட்டுப் பிரம்பூருடையான் திருச்சிற்றம்பல முடையானான விழுப்பரையனால் நிலம் அளிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி பரகேசரி வர்மனாகிய விக்கிரமசோழனின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளது.

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு: இவ்வூர் இராஜாதிராஜ வளநாட்டுத் திருவாலிநாட்டுக் குருகாவூர் எனக்கூறப்பெற்றுள்ளது. இத்திருவாலிநாடு, மதுரையும் ஈழமும் கொண்டருளிய இராஜகேசரிவர்மனாகிய திரிபுவனச் சக்கிரவர்த்தி காலத்தில் எதிரிலி சோழ சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரையும் பெற்றிருந்தது.

பிறசெய்தி: இக்கோயிலிலுள்ள ஒரு பிரதிமையின் கீழ் `வெண்ணா யிலுடையான் ஈழத்தங்கிள்ளை ஆரூரன்` என்னும் பெயர் தீட்டப்பெற்றுள்ளது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி