தலைவாயில்

பத்தாம் திருமுறை - முதலாம் பகுதி ஆசியுரை தொடர்ச்சி... | 1 | 2 | 4 |

முதல் தந்திரம்:

முதலில் சிவபரத்துவம் கூறுகிறார். சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை என்பது முதலாக 46 பாடல்களில் இதனை விளக்குகிறார். இது காரணாகமத்தின் சாரமாகக் கொள்ளப்படுகிறது. "ஞான முதல் நான்கும் மலர் நல் திருமந்திரமாலை" என்ற சேக்கிழார் வாக்கிற்கேற்ப சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதம் (நிலைகளைப்) பற்றி விளக்க வந்தவர் முதலில் சிவபரத்துவம் கூறி பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையை விளக்குகிறார்.

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்

பதியினைப் போல்பசு பாசம் அனாதி

பதியினைச் சென்றணு காப்பசு, பாசம்

பதிஅணு கில்பசு, பாசம் நிலாவே. (தி.10 பா.115)

என்பது அப்பாடல். கடவுள், உயிர், மலம் என்ற முன்றுமே என்றும் உள்ள உண்மைப் பொருள்கள். ஆனால் கடவுளை உயிர்களும் மலமும் சென்றடையா. பதியாகிய கடவுள் பசுவாகிய உயிரை அணுகுவார். அணுகினால் உயிரைப் பற்றி நிற்கும் பாசமாகிய மலம் அகலும். அகன்றால் உயிர் கடவுளுடன் கலந்து பேரா இன்பப் பெருவாழ்வு பெறும். இக்கருத்தே சைவம் கூறும் உண்மை.

இறைவன் உயிர்களை அனாதியாகவே பற்றி நிற்கும் மலமாகிய அழுக்கை அகற்றுதற்குக் கருணையினால் உடல், கரணம், புவனம் போகங்களைக் கொடுக்கிறான்; அவற்றை உயிர் அநுபவிக்கும் போது நல்லது கெட்டதை அறிவதற்கும் நிலையானவை நிலையில்லாதவை இன்னவை என உணர்த்தி நிலையானவற்றைப் பற்றி உய்தற் பொருட்டும், வேதாகமங்களை அருளி, அதன் வாயிலாக இளமை, செல்வம், யாக்கை முதலியவற்றின் நிலையாமையை உணர்த்தியும், வேதத்தில் விதிக்கப்பட்ட கொல்லாமை, அன்புடைமை முதலாய அறங்களை வற்புறுத்தியும், அந்நெறி பற்றி உயரும் உயிர்கள் தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம் என்னும் இவ்வழியே சென்று சிவபோகம் துய்த்து உப்பானது தண்ணீரில் கூடித் தன்னிலை கெட்டு தண்ணீராகவே ஒன்றாகுமாறு போல் சீவனும் தன்னிலை கெட்டு சிவத்துள் அடங்கும் என்ற எடுத்துக் காட்டுடன் நிறைவு செய்துள்ளார்.

பாயிரம் - கடவுள் வாழ்த்து:

இதில் முதல் பாடல் "ஒன்றவன்தான்" என்பது. இதனைச் சேக்கிழார், "பான்மை முறை ஓராண்டுக் கொன்றாகப் பரம்பொருளாம் ஏன எயிறணிந்தாரை ஒன்றவன்தான்" என எடுத்து என்ற தொடரால் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான் குணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறுவிரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந்தான் உணர்ந்தெட்டே. (தி.10 பா.1)

ஏகம்சத் என்பது வேதம். `ஒருவன் என்னும் ஒருவன் காண்க' என்பது திருவாசகம். `ஒருவனே தேவன்' என்பது இத்திருமந்திரம்.

இறைவன் ஒருவனே என்பதைத்தான் திருமூலர், ஒன்றவன் தானே என்று முதலில் குறிப்பிட்டார்.

அடுத்து தன்னிடமிருந்து பிரிப்பின்றி நிற்கும் ஆற்றலை அதாவது அருளை இரண்டெனக் கொண்டுள்ளார். இரண்டவன் இன்னருள் என்பதில் அவனது அருள் இருதிறப்படும் என்ற பொருள்பட அறக்கருணை, மறக்கருணையைக் குறிப்பிட்டுள்ளார்.

நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். இலய போக அதிகாரத்துள் நின்றமையை இது குறிப்பிடுகிறது.

நான்கு உணர்ந்தனன் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனையும் தானே உணர்ந்து உயிர்கட்கு உணர்த்துபவன் என்பதைக் காட்டுகிறது.

ஐந்து வென்றனன் என்பது ஐந்தவித்தான் என்ற திருக்குறள் கருத்தும், நேரிழையைக் கலந்திருந்தே புலன்களைந்தும் வென்றானை என்ற அப்பர் திருவீழிமிழலைத் தாண்டகக் (தி.6 .50 பா.3) கருத்தும் புலப்படத் தோன்றுவது.

ஆறு விரிந்தனன் என்பது, மந்திரம். பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறு (அத்துவாக்கள்) வழிகளாக விரிந்தனன் என்பதை உணர்த்துகிறது.

ஏழு உம்பர்ச் சென்றனன் என்பது பிரமலோகம், விஷ்ணு உலகம், உருத்திரலோகம், மகேசுவரலோகம், சதாசிவலோகம், சக்திலோகம், சிவலோகம் என்னும் ஏழுலகங்கட்கும் மேற்சென்று நின்றவன் என்பதை உணர்த்தும்.

அங்கு அவன் தனித்துச் செயற்படாது இருந்தான் அவனை நெஞ்சமே நீ உணர்ந்து எட்டு அடைவாயாக என்று பூர்த்தி செய்துள்ளார். தனித்துச் செயல்படாதிருந்தான் என்பது பரசிவமும், பராசக்தியும் தன்னிலையில் உலகமுகப்படாது சும்மாயிருக்கும் சொரூப நிலையைக் குறிப்பதாகும்.

முதல் தந்திரத்தில் சில பாடல்கள்:

தான் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெற்று இன்புற வேண்டும் என்ற கருணையினால் திருமந்திரம் என்னும் இந்நூல் எழுந்தது. இதனை,

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. (தி.10 பா.85)

என்ற பாடலால் குறிப்பிடுகின்றார். இப்பரந்த உள்ளப்பாங்கை உணர்த்தும் இப்பாடல் பாயிரத்துள் காட்சி தருகிறது.

யாக்கை நிலையாமையை,

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்

இடப்பக்கமே இறை நொந்தது என்றார்

கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. (தி.10 பா.148)

என்ற அரிய பாடலால் விளக்கியுள்ளார்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. (தி.10 பா.139)

என்ற திருமந்திரம்,

நல்லாரைக் காண்பதும் நன்றே நலம்மிக்க

நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.

என்ற நல்வழிப் பாடலை நினைவு கூர்கிறது.

யாவர்க்கும்ஆம் இறைவற்கொரு பச்சிலை

யாவர்க்கும்ஆம் பசுவுக் கொருவா யுறை

யாவர்க்கும்ஆம் உண்ணும்போதொரு கைப்பிடி

யாவர்க்கும்ஆம் பிறர்க்கு இன்னுரை தானே. (தி.10 பா.252)

என்ற பாடலால் எல்லோரும் பின்பற்றத்தக்க எளிய அறம் நான்கினை விளக்கியுள்ளார்.

அன்பே சிவம்:

அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. இவ்வன்பு எல்லோரிடமும் இருப்பதுதான். இருப்பினும் அவரவர்க்கு ஏற்படும் நன்மை, தீமை காரணமாக அவ்வன்பின் தன்மை வேறுபடும். அங்ஙனம் வேறுபடாது ஒரே தன்மைத்தாய் உள்ள அன்பையே இங்குத் திருமூலர் குறித்துள்ளார்.

இதனால்தான், காரைக்காலம்மையார் திருக்கயிலைப் பெருமானிடம் "இறவாத இன்ப அன்பு" வேண்டினார். இறவாத எனில், கெடுதல் இல்லாததும் என்றும் நீங்காததும் நிலையானதும் ஆகும். அத்தகு நிறைவான இன்பமே பேரின்பம். அப் பேரின்பத்தைப் பெறவே நிலையான அன்பை இங்ஙனம் வேண்டினார். அன்பே இன்பத்திற்கு அடிப்படை என்பதை உணர்த்தினார்.

அன்பும் சிவமும் வேறல்ல என்பதுபோலவே அன்பும் இன்பமும் வேறல்ல.நமது அன்பின் முதிர்விலே முடிவிலா இன்பமான சிவம் வெளிப்பட்டுத் தோன்றும்.

நிலையான அன்புப் பிழம்பாகச் சிவம் திகழ்கிறது. அதனை அடைய நாமும் அன்புருவாய், நிலையான அன்புருவாய் ஆகவேண்டும். நமது அன்பு வளரும்; தளரும்.இறை அன்போ என்றும் ஒரே படித்தாய், உயிர்களிடத்தே நீங்காதிருக்கும். இதனை மணிவாசகரும், திருவாசகம், போற்றித்திருவகவலில் "சாயா அன்பு" என்று குறிப்பிடுகிறார்.

"சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்

தாயேயாகி வளர்த்தனை போற்றி."

-தி.8 போற்றித் திருவகவல் 86,87

என்பது அப்பகுதி. இதனைத்தான் திருமூலர் அருளியுள்ள பாடலும் தெளிவிக்கிறது.

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. (தி.10 பா.269)

இதனை வேறொரு வகையிலும் சிந்திக்கலாம். அறிவு, சிவம், அன்பு, சக்தி இவ்விரண்டும் வேறல்ல. ஒன்றே, அறிவாகிய சிவம் பொருளாயிருப்பது. அன்பாகிய சக்தி சிவத்தின் தன்மையாயிருப்பது. எனவே, ஒரு பொருளும் அதன் தன்மையும் ஒன்றேயாமாறுபோல அறிவாகிய சிவமும் அதன் தன்மையாகிய அல்லது பண்பாகிய சக்தியும் வேறல்ல ஒன்றேயாம் என்பதை இம்மந்திரத்தால் தெளிவிக்கின்றார்.

இரண்டாம் தந்திரம்:

முதல் தந்திரத்தில் கூறியபடி நின்றவர்கள் அடையும் நன்மைகளையும் நில்லாதவர் அடையும் தீமைகளையும் புராண வரலாற்று வாயிலாக விளக்கியுள்ளார்.

அசுரர்களைப் பொதிய மலைக்கு வடக்கே செல்லவொட்டாமல் தடுத்த அகத்தியர் திறத்தினை அகத்தியம் என்ற தலைப்பிலும், அட்டவீரட்டச் செயல்களைப் பதிவலி என்ற தலைப்பிலும், அயனுக்கு வாளும், அரிக்கு ஆழியும், இராவணனுக்கு நாளும் வாளும் கொடுத்ததையும், சூரபன்மன் வதத்தையும் சண்டீசர் பதம் பெற்றமையையும் இலிங்க புராண(தி.10)ப் பகுதியிலும் குறித்துள்ளார்.

திருமால் சக்கரம் பெற்ற வரலாறு சக்கரப்பேறு என்ற பகுதியில் விளக்கப்படுகிறது. பிரமவிஷ்ணுவின் அகங்காரத்தைப் போக்கிய பகுதி "அடிமுடி தேடல்" என்ற பகுதியில் விளக்கப்படுகிறது. பரமன் எலும்பும் கபாலமும் ஏந்திலனேல் ஐந்தொழில் நடைபெறா என்பது "எலும்பும் கபாலமும்" என்ற பகுதியில் விளக்கப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களையும், முறையே அயன், மால், உருத்திரன், மகேசன், சதாசிவனாய் நின்று செயற்படும் திறனையும், புவனங்களையும் அதில் உள்ள எண்பத்து நான்கு நூறாயிரம் ஜீவபேதங்களையும் பரிபாலிக்கும் திறனையும், இப்பகுதிகள் விளக்கிக் காட்டுகின்றன.

அடுத்து, ஒருமலமுடைய விஞ்ஞானகலர், இருமலமுடைய பிரளயாகலர், மும்மலமுடைய சகலர், உற்பவிக்கும் முறை, கரு உற்பத்தி, உற்பவித்த சீவர்கள், குருநிந்தை, சிவநிந்தை, மாகேசுவர நிந்தையின்றிப் பெரியாரைத் துணைக்கொண்டு சத்பாத்திரம் அசத்பாத்திரம் தெரிந்து ஒழுகினோர் இறைவனடி சேர்வர் என்பவற்றை விளக்கியுள்ளார்.

இரண்டாம் தந்திரத்தில் சில பாடல்கள்:

பொதுவான அறங்கள் பலவும் சிவநெறிக்கண் சிறந்து நிற்றலையும், சிவபரத்துவம் நிரந்து நிற்றலையும் முதல்தந்திரத்துள் அருளிய திருமூலர் புராண தந்திரம் எனப் போற்றப் பெறும் இரண்டாந் தந்திரம் சிவபரத்துவத்திற்குச் சான்று காட்டுவதாயுள்ளது.

இதில் உள்ள முதல்பாடல் அகத்தியர் பெருமை கூறுமுகத்தால் சிவபரத்துவம் கூறுகிறது.

நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்து

கெடுகின்ற தெம்பெருமான் என்ன ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீபோய்

முடுகிய வையத்து முன்னி ரென்றானே. (தி.10 பா.337)

தீ வண்ணனாகிய சிவபெருமானைச் சதாகாலமும் அகத்தே தியானிப்பவரானதால் அகத்தீயர் எனப்பெற்றார். இப் பெயர்ப் பொருள் பலரும் அறியாத ஒன்று. அகத்தீயரே மருவி அகத்தியர் என வழங்குகிறது என்பது இதனால் புலனாகிறது.

மக்கள் அறநெறி பிறழ்வார்களானால் நிலநடுக்கமும் நிலப்பெயர்ச்சியும் ஏற்படும். அதுபோது சான்றோர் சிலர் இருப்பரேல் உலகம் அழியாது நிலைபெறும். இக்கருத்தைத் திருவள்ளுவரும்,

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை. -குறள் 990

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன். -குறள் 96

என்ற குறட்பாக்களால் தெளிவுபடுத்தியுள்ளார்.

அறம் குறைந்து மறம் பெருகியதால் நிலம் ஒரு பக்கம் சரியத் தொடங்கியது: அப்போது தேவர்கள் சிவபெருமானை வேண்டினர்; பெருமான் சதாகாலமும் செம்பொருளாகிய தன்னை அகத்தே கொண்ட அகத்தியரைத் தெற்கே அனுப்பி, தான் வடக்கே வீற்றிருந்தருளினான். நிலம் சமமாயிற்று. இந்நிகழ்ச்சி சிவபெருமான் திருமணக்காலத்தில் நிகழ்ந்ததாகவும் சொல்லப்பெறும்.

இவ்வரிய பெரிய சிவன் பெருமை, சிவனடியார் பெருமை கூறுவதையே முதலாகக் தொடங்குகிறது இரண்டாந் தந்திரம். இதில் திருக்கோயில்களில் பூசை தடைப்படுமானாலும், பூசை புரிவோர் அன்பு, அறிவு ஆசாரமில்லாதவரானாலும் நாட்டிற்குத் தீங்குவரும் என்று அறிவுறுத்துகிறார்.

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வாரிவளங் குன்றும்

கன்னம் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுத்துரைத் தானே. (தி.10 பா.510)

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. (தி.10 பா.511)

தலைவாயில்

பத்தாம் திருமுறை - முதலாம் பகுதி - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 2 | 4 |