திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்
சைவப் பெரியோர்கள் இயற்றிய அருள் நூல்கள் திருமுறைகளாகும். இன்பம் வரினும் துன்பம் வரினும் ஒன்றாகக் கருதும் மனச் செம்மையே `திரு' என்னும் சொல்லுக்குப் பொருள் என்றார் பேராசிரியர்.
உலக வாழ்க்கையில் ஆக்கங்களையெண்ணிக் களிப்படைதலும், கேடுகளை நினைந்து கலக்கமுறுதலும் அனைவரிடத்தும் பொதுவாகக் காணப்பெறும் இயல்பாகும். இரு நிலைகளையும் ஒன்றாகக் கருதுவோரைச் சேக்கிழார் `கேடும் ஆக்கமுங் கெட்ட திருவினார்' என்று போற்றுவார்.
எத்தகைய பேரிடர்கள் அடுக்கி வந்தாலும் அவற்றைக் கண்டு ஒரு சிறிதுங் கலங்காத உள்ள உறுதியுடையராய் விளங்குவர். இப்படிப்பட்ட நிலையைத் தந்தவர் யார்? அவரே நடனசபேசர்.
திருப்பதியம் (தேவாரம்) விண்ணப்பம் செய்தல்: மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் கி.பி. 825இல் திருப்பதியம் விண்ணப்பம் செய்வோர்க்கு நிவந்தங்கள் வழங்கப் பெற்றதைக் கல்வெட்டால் அறிகிறோம்.
நந்திவர்மனைச், `சிவனை முழுதும் மறவாத சிந்தையன்' என்று நந்திக் கலம்பகம் எனும் நூல் நவிலும். சிவனது அடையாளமாகிய `திருநீறு நெற்றியில் கொண்ட நந்திவர்மன்' என்று வேலூர்ப் பாளையம் செப்பேடு செப்பும்.
இவனது 17-ஆம் ஆட்சியாண்டில் திருவல்லம் கோயிலுக்கு மூன்று ஊர்களை `விடேல் விடுகு விக்கிரமாதித்தச் சதுர்வேதி மங்கலம்' என்று பெயரிட்டுத் தேவதானமாக்கினான்.
கி.பி. 943இல் திருத்தவத்துறையாகிய இலால்குடியில் உள்ள மகாதேவர் திருமுன் நாள்தோறும் மூன்று சந்திகளிலும் இருவர் திருப்பதியம் விண்ணப்பம் செய்தனர். அதற்காகச் சிவகோசரி பிடாரன் தேசவிடங்கன் என்பார் நிலத்தானம் செய்தார் என்று முதற்பராந்தகனின் 37-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இன்றும் காட்டுகின்றது.
இந்நிவந்தம் போதாமையால், 16 ஆண்டுகள் சென்ற கி.பி. 959இல் மேலும் சில நிலங்களை அவனே அறக்கொடையாக நல்கினான். நிலத்தினின்றும் பெறும் எள்ளுக்கு உரிய எண்ணெயில் குடிவாரப் பகுதி கோயிலுக்கும், நிலத்துக்குரிய செவ்வாரப் பகுதி திருப்பதியம் விண்ணப்பம் செய்வார்க்கும் தரப் பெறல் வேண்டும் என்று கல்வெட்டு மெய்ப்பிக்கிறது. சிவகோசரியார் என்பதால் முப்போதும் திருமேனி தீண்டுவார் என்பதும், பிடாரன் என்பதால் இவரே தேவாரம் பாடுவார் என்பதும் அறியலாம்.
திருவாதிரைத் திருநாளில் திருவெம்பாவை விண்ணப்பம் செய்வதற்காகவும், பாடியும் நடித்தும் தொண்டு செய்து வந்த 22 தளிச் சேரிப் பெண்டிர்க்கும் ஆடல் ரசன் ஒருவனுக்கும், அகமார்க்கத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்யவும் 16 தேவரடியார்களுக்கும் நில அறக் கொடையளித்தனர். அக மார்க்கமாதல், தேவாரம் பாடும்போது அபிநயத்தோடு பாடினர் என்பது தெரிகிறது.
திருவரம்பூர் ஆதித்தீசுவரர் சந்நிதியில் நான்கு வேளையும் திருப்பதியம் விண்ணப்பித்தனர். திருவாடுதுறை, அந்த நல்லூர் கோயில்களிலும் திருப்பதியம் விண்ணப்பம் செய்துள்ளனர்.
திருவக்கரையில் முதல் இராசராசன் காலத்தில் திருப்பதியம் பாடுவார் இருவர்க்கு நிசதம் நெல்லு பதக்கு அளித்துள்ளதைக் கல்வெட்டால் அறிகிறோம்.
செஞ்சிப் பகுதியில், மேல் சேவூரில், சோழன் மூவேந்த வேளாண் என்பவன் திருப்பதியம் இருவர் விண்ணப்பம் செய்துள்ளனர். (ஆ.அ.1904, எண் 212) (கி.பி. 1008)
திருவலஞ்சுழியில், திருப்பதியம் பாடுவார் இருவர்க்கு நிவந்தம் அளித்துள்ளனர். (ஆ.அ. 1902 எண் 633)
உடையாலூர் இறைவனுக்கு கி.பி. 1119இல் முதற்குலோத்துங்கன் காலத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்ததை அறிகிறோம். (ஆ.அ. 1927 எண் 306)
கோனேரி ராசபுரம் கோயில் இறைவனுக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்துள்ளனர். (ஆ.அ. 1909 எண் 624)
விருத்தாசலம் வட்டம் நல்லூரில், வில்வாரன்னேசுவரர் கோயில் இறைவனுக்கு, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1200இல் `ஆழ்விமழகியாள் பதினெண்பூமி நங்கை' எனும் பெயருடைய தேவரடியாள் திருவெம்பாவையில் இரண்டாம் திருப்பத்தைப் பாடி ஆடினாள். அவளுக்கு மூன்று கழஞ்சு பொன் கொடையாக அளிக்கப்பெற்றது. (ஆ.அ. 1940 எண் 160)
அதே கோயிலில், கி.பி. 1202இல் பூமி ஆள்வி மகள் பொற்கோயிற் நங்கை, விழா நாட்களில் சாக்கை எனும் ஆட்டத்தைத் திருவெம்பாவையில் கடைக்காப்புப் பகுதியைப் பாடி ஆடினாள்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவாமாத்தூர் கோயிலில் 2-ஆம் குலோத்துங்கன் காலத்தில் கி.பி.1133 இறைவன் முன்பு 16 குருடர்கள் நாள்தோறும் கோயிலில் திருப்பதியம் விண்ணப்பிக்கவும், அவர்களுக்குக் கண் காட்டுவார் இருவர் வழித்துணையாக அவர்களைக் கைப்பிடித்து நடத்திச் செல்லவும் திட்டம் செய்யப் பெற்றதைக் கல்வெட்டு இன்றளவும் மெய்ப்பிக்கிறது. அவர்கள் அனைவருக்கும் இருக்க இடமும் உண்ண உணவும், அணி ஆடையும் வழங்கியுள்ளனர். (தெ.க.தொ. க்ஷிமிமிமி எண் 749) சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பைச் செய்து உதவியைப் பெறுகின்ற செயல் போற்றுதற்குரியதாகும்.
வழுவூர், வீரட்டானேசுவரர் கோயிலில், இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் கி.பி. 1127இல் மார்கழியில் திருவாதிரைத் திருநாளில் திருவெம்பாவை இசையுடன் இசைத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக் குறிச்சியில் - முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1224) நாகேசுவரர் கோயிலில் திருப்பதியம் விண்ணப்பித்தனர்.
திருவிடைவாயிலில் மூன்றாம் இராஜேந்திர சோழனின் காலமாகிய கி.பி. 1249இல் திருப்பதியத்தில் திருப்பத்து இசைக்கப்பெற்றது.
திருவீழிமிழலையில், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1285) திருமுறை விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவ்வாறு எண்ணற்றக் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் பாடப்பெற்றதைக் கல்வெட்டு வழியாக அறிகிறோம்.
கல்வெட்டில் திருக்கைக்கோட்டியும், தேவாரமும்:
திருமுறைகள் வைத்துப் பூசிக்கப்பெற்ற கோயில் மண்டபம் `திருக்கைக் கோட்டி' என்று சொல்லப் பெறும்.
சீர்காழியில் உள்ள திருஞான சம்பந்தர் கோயிலில் தென்புறத்தில் உள்ள கல்வெட்டு வாசகம் நம் கவனத்தைக் கவர்கின்றது.
`திரிபுவனச் சக்கரவர்த்திகள் சிறீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு... ஆவது இராசராச வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப்பிரமதேயம் திருக்கழுமலம் கற்கடக ஞாயிற்று முதல் கிராமகாரியஞ் செய்கிற பெருமக்களோம். ஆளுடைய பிள்ளையார்த் திருமாளிகைத்தமிழ் விரகர் கண்டு இக்கோயில் திருக்கைக் கோட்டியில் எழுந்தருளியிருக்கிற திருமுறைகள் திருக்காப்பு நீக்கி...' என்று வருகின்றது.
முதல் இராசராசன் கோயில்களில் நடைபெறும் விழாக்களையும் பூசை முறைகளையும் நெறிப்படுத்தினான். அக்காலம் முதல் தேவாரத்தை இருபாலரும் ஓதியிருக்கின்றனர். ஆண் ஓதுவார்களைக் `கந்தருவர்' என்றும், பெண் ஓதுவார்களைக் `கந்தர்வி' என்றும் அழைத்தனர். தேவாரம் ஓதுபவர்களைப் பார்வையிட `தேவார நாயகம்' எனும் அலுவலர் நியமிக்கப் பெற்றிருந்தனர்.
தமிழ்க் கல்வெட்டு இருக்கும் கோயிலை யாரும் உரிமை கொண்டாட உரிமை இல்லை.