குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம்

26ஆவது குருமகாசந்நிதானம்

சிறீலசிறீ சண்முகதேசிக ஞானசம்பந்த

பரமாசாரிய சுவாமிகள்

வழங்கியருளிய

012 ஆசியுரை

திருச்சிற்றம்பலம்

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

சீதவள வயல்புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம். -தி.12 பு.28 பா. 1

வேதம், சிவாகமம், புராணம், இதிகாசம், திருமுறைகள், சித் தாந்த சாத்திரங்களே நமது சைவசமயத்தின் அடிப்படைச் சட்ட நூல்க ளாகும். சிவநெறி கடைப்பிடிப்போர் இந்நூல்களின் வரையறைகளின் படியே நடக்கவேண்டும். நடவாதார் சைவத்திற்குப் புறம்பானவராவர்.

இந்தியப் பேரரசின் அடிப்படைச் சட்டம், அரசியலமைப்பு என்று சொல்லப்பெறும். இந்தியப் பேரரசின் மாநிலங்கள் அனைத்தும் அரசியலமைப்பு என்னும் இந்த அடிப்படைச் சட்டத்தைப் போற்றி மதித்தே நடந்துகொள்ள வேண்டும்.

அதைப்போலவேதான், சைவத்தின் அடிப்படைச் சட்டமாக விளங்குவது, வேதாகம, புராணதிகாச, திருமுறை, சித்தாந்த சாத்திரங்களாகும். ஆகவே இவற்றைப் போற்றியும், மதித்தும் நடந்து கொள்ளவேண்டும் என்பதே விதியாகும்.

அவரவர்களும் மனம் போன போக்கெல்லாம் போய்த் தனிவழி காண்பார்களானால் நாட்டின் ஒழுங்குமுறை கெட்டுச் சிதறிப் போக ஏதுவாகும். இதைச் சைவர்கள் அனைவரும் உணர்ந்து ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.

வேதம்:

வேதம் என்ற சொல், வித் என்ற வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது. வேதம் என்பதற்கு அறிவுநூல் என்பதே பொருள்.

அறிவுநூலாகிய வேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு பகுதிகளாக விளங்குகிறது.

வேதம் என்னும் சொல்லுக்குப் பொருள் - காண்டல், கருதல் முதலிய அளவைகளுக்குப் புலப்படாததாய், வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் நெறி முறைகளை அறிவிப்பதாய் உள்ள - அறிவுநூல் என்பதாகும்.

வித்-ஞானே என்பதாலும், வித் என்ற சொல்லுக்கு ஞானம் என்பதே பொருள். அஃதாவது நிச்சய ஞானம். நிச்சயம் என்பது நிலையானது; மாறுபாடு இல்லாதது. எனவே உண்மை ஞானத்தை உணர்த்தும் நூலுக்கு வேதம் என்பது பெயராயிற்று.

வேதங்களின் அங்கமாக உள்ள ஆறு அங்கங்களையும் முறையாகக் கற்றுத் தெளிந்தால்தான், வேதங்கள் நமக்குத் தெளிவா கப் புரியும். எதுபோல எனின், நன்னூல் என்னும் செந்தமிழ் இலக்கண நூலைக் கற்றுத் தெளிவு பெற வேண்டுமானால், அதற்கு முதற்படியாக விளங்கும் சிற்றிலக்கியங்கள், நிகண்டு நூல்களைக் கற்றால்தான், நன்னூல் என்னும் செந்தமிழ் இலக்கண நூல் இனிது விளங்கும்.

இது பற்றி, "நன்றாய்ந்த.... ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல்" என்ற புறநானூறு, 166ஆம் பாடல் குறிப்பிடுவது காண்க. ஈரிரண்டு என்பது நான்கு பகுதியாக உள்ள வேதங்கள் என்றும், ஆறுணர்ந்த என்பது ஆறு அங்கங்களால் உணர்த்தப்பட்டது என்றும், ஒரு முதுநூல் என்பது ஒப்பற்ற பழைய நூலாகிய வேதம் என்றும் பொருள் தரும். ஆறங்கமாவன 1. சிட்சை, 2. கற்பசூத்திரம்,

3. வியாகரணம், 4. நிருத்தம், 5. சந்தோவிசிதி, 6. சோதிடம் என்பனவாகும்.

1. வேதங்களை எடுத்தல், படுத்தல், நலிதல் முதலிய இசை வேறுபாட்டால் உச்சரிக்குமாற்றை உணர்த்துவது, சிட்சை.

2. வேதங்கள் கூறும் நெறிமுறைகளை அநுட்டிக்குமாற்றை உணர்த்துவது, கற்பசூத்திரம்.

3. வேதங்களின் எழுத்து, சொல், பொருளியல்புகளை உணர்த் துவது, வியாகரணம்.

4. வேதங்களின் சொற்பொருள் உணர்த்துவது, நிருத்தம்.

5. வேதமந்திரங்களில் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரும், அவற்றிற்குரிய எழுத்து இனைத்தென்றலும் உணர்த்துவது, சந்தோவிசிதி.

`. வேதங்களில் சொல்லப்படும் கருத்துக்களைச் செய்தற் குரிய கால விசேடங்களை உணர்த்துவது, சோதிடம்.

மேலும் புராணம், நியாயம், மீமாம்சம், ஸ்மிருதி என்னும் நான்கும் உபாங்கங்கள் எனப்படும்.

வேதம், உலக மக்களுக்குப் பொது அறம் போதிப்பது. சிவாகமம், சத்தினிபாதத்து உத்தமர்களுக்குச் சிறப்பறம் போதிப்பதாகும்.

வேதம் பற்றித் திருமூலர் அருள்வது காண்க.

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்

ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. (தி.10 பா.96)

வேதம் ஒவ்வொன்றும், கர்ம காண்டம், ஞானகாண்டம் என இரு பிரிவுகளையுடையது.

கர்மகாண்டம், செயல்முறைகளைப்பற்றிக் கூறுவது. ஞான காண்டம் உபநிடதங்களால் தத்துவ விசாரணை செய்வது.

யசுர் வேதத்தின் நடுப்பகுதியில் "நமசிவாயச சிவதராய\u2970?" என்னும் பஞ்சாட்சரம் அமைந்துள்ளது. எனவே, வேதம் சிவபரத்துவத் தைக் கூறுவதாகவே விளங்குகிறது.

ஆகமம்:

ஆகமம்: ஆ என்பது, ஈசுவரனைக் குறிக்கும் ஓரெழுத்தொரு மொழி; கமம் என்பது, வந்தது என்பதைக் குறிக்கும். எனவே ஈசுவர னிடமிருந்து வந்தது என்பதைக் குறிப்பதாகும். வேதம், ஆகமம் இரண் டுமே சிவபெருமானிடமிருந்து ஆன்மாக்களை நன்னெறி செலுத்தற் பொருட்டு வந்தவை என்பதையே அறிவிக்கும். இதை "மஹதோ பூதஸ்ய நிஸ்வசிதம்" என உபநிடதம் கூறுகிறது.

ஆகமங்கள் இருபத்தெட்டாகும். வேதம் நான்கும் பரமேசு வரனின் நான்கு முகங்களிலிருந்து தோன்றின என்பர்; ஆகமங்கள் இருபத்தெட்டும் பரமேசுவரனின் உச்சி முகத்தினின்றும் தோன்றின என்றும் திருமூலர் (தி.10 த.3) குறிப்பிடுகிறார்.

வேதம் நான்கும், முறையே பரமேசுவரரின் தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் நான்கு முகங் களிலிருந்தும் தோன்றின.

சிவ ஆகமங்கள் இருபத்தெட்டும் சிவபெருமானின் உச்சி முகமாகிய ஈசான முகத்தில் தோன்றின என்பார் திருமூலர். அப்பாடல் காண்க.

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்

அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்

அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்

அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே. (தி.10 பா.102)

ஆகமம் - ஆ என்பது சிவம். கமம் என்பதற்கு வந்தது என்பது பொருள். எனவே சிவபெருமானிடமிருந்து வந்தது என்பதே சிவா கமம் என்பதற்குப் பொருளாகும். மேலும் ஆ என்பது ஆன்மாக்கள் என்றும், கமம் என்பது ஆன்மாக்களிடமுள்ள மும்மலங்களையும் நாசம் செய்வித்து மோட்சம் அடையச் செய்வது என்றும் பொருள் தரும்.

புராணம்:

புராணம் என்ற சொல், பழமை என்னும் பொருளைக் குறிப்பது. பழமையானாலும் புதுமையாகவும் விளங்குவது.

பூரணனாகிய பெருமானிடமிருந்து வந்தமையால் பூரணம் என வழங்கி, பின்னர் அச்சொல்லே புராணம் எனத் திரிந்தது என்றும் கூறுவர். புராபிநவம் - பூரணம் எனக் கொண்டு, புராதனமாயும் புதுமை யாயும் உள்ளது எதுவோ, அதுவே புராணம் என்று ஆயிற்று என்றும் கொள்வர்.

"முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" (தி.8 ப.7 பா.9) என்னும் மணிவாசகரின் திருவாசகமே இதற்குப் போதிய சான்றாகும். மேலும் பழமையிலிருந்துதான் புதுமை தோன்ற முடியும் என்பதையும் ஊன்றி உணர்வோர் இவ்வுண்மையை உணர்வர்.

மேலும் அப்பர், பூவனூர்த் தேவாரத்தில்,

நார ணன்னொடு நான்முக னிந்திரன்

வார ணன்கும ரன்வணங் கும்கழற்

பூர ணன்திருப் பூவனூர் மேவிய

கார ணன்னெனை யாளுடைக் காளையே. (தி.5 ப.65 பா.10)

என்று பாடுவதாலும், திருக்காளத்தித் திருத்தாண்டகத்தில்,

"நாரணன் காண், நான்முகன்காண் நால்வே தன்காண்

ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன

பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்"

(தி.6 ப.8 பா.3) என்று போற்றுவதாலும் இவ்வுண்மையைத் தெளியலாம்.

புராணம், பழமையானது என்ற பொருளைத் தரும்; புராதனம் என்ற சொல்லின் மரூஉ மொழியே புராணம். எல்லாருக்கும் முன்னே தோன்றி முளைத்தவனாகிய சிவபெருமானைப் புராணன் எனத் தேவாரத் திருமுறைகள் கூறுகின்றன. "புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் புத்தேளும் காண்பரிய புராணன் தான்காண்" (தி.6 ப.30 பா.9) என அப்பர் பெருமான் அருளிச் செய்கின்றார்.

இலக்கிய வகைகளில், பழமையான வரலாறுகளை உணர்த்தும் நூல், புராணம் எனப் பொருள் தரும். வேத சிவாகமங்களையடுத்துப் பதினெண் புராணங்கள் சிறப்புடையனவாகப் போற்றப் பெறும்.

கடவுட் கொள்கையில் ஊன்றி நிற்றற்கும், சமய உண்மைகளை உணர்தற்கும், உலகியலில் அறநெறி வழுவாது வாழ்தற்கும் புராணங் களைப் படித்தல் இன்றியமையாததாகும். இவை வடமொழியில் அமைந்துள்ளனவாயினும், இவற்றின் கதைக்கூறுகள் சங்கநூல்கள் தொடங்கி அனைத்துத் தமிழ்நூல்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளன.

வேத சிவாகமங்கள் இறைவனால் அருளிச் செய்யப் பெற்றன போலப் பதினெண் புராணங்களும் அவ்விறைவன் திருவுள்ளப் பாங்கின்படியே தோன்றலாயின என்பதைத் திருஞானசம்பந்தர், திருவையாறு தேவாரத் திருப்பதிகத்தில்,

எங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா

மங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும்

பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்

அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே. (தி.2 ப.6 பா.6)

என அருளிச் செய்கின்றார். இப்புராணங்களைப் புடை நூல்கள் எனஙு சிவஞான சித்தியார் கூறுகிறது.

அருமறையா கமம்முதல்நூல் அனைத்துமுரைக் கையினால் அளப்பரிதாம் அப்பொருளை அரனருளால் அணுக்கள்

தருவர்கள்பின் தனித்தனியே தாமறிந்த அளவில்

தர்க்கமொடுத் தரங்களினால் சமயம்சா தித்து

மிருதிபுரா ணம்கலைகள் மற்று மெல்லாம்

மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம்வே தாங்கம்

சுருதிசிவா கமமொழியச் சொல்லுவதொன் றில்லை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொ ணாதே (சித். சூ. 8 பா. 14)

பதினெண் புராணங்கள்:

சிவபெருமான் அம்மைக்கு உபதேசித்த பதினெண் புராணங் களையும் இடையில் வீற்றிருந்த முருகப் பெருமான் கேட்டு, அதைச் சனற்குமாரருக்கு உபதேசிக்க, அவர் அகத்திய முனிவருக்கு உபதே சிக்க, அவர் வியாசருக்கு உபதேசிக்க, அவர் தம் மாணாக்கர் சூத முனிவருக்கு உபதேசிக்க, சூத முனிவர் பதினெண் புராணங்களையும் நைமிசாரணிய முனிவர்கட்கு உபதேசித்து, அஃது உலகில் பரவியது என்பதே புராண வரலாறு.

இந்த அமைப்பிலேயே பதினெண் புராணங்கள் தோன்ற லாயின. பதினெண் புராணங்களாவன,

1. பிரம புராணம், 2. பதும புராணம்,

3. விட்டுணு புராணம், 4. சிவ புராணம்,

5. பாகவத புராணம், 6. நாரதீய புராணம்,

7. மார்க்கண்டேய புராணம், 8. ஆக்கினேய புராணம்,

9. பவிஷ்ய புராணம், 10. பிரமவைவர்த்த புராணம்,

11. இலிங்க புராணம், 12. வராக புராணம்,

13. ஸ்கந்த புராணம், 14. வாமன புராணம்,

15. கௌமார புராணம், 16. மச்ச புராணம்,

17. கருட புராணம், 18. பிரும்மாண்ட புராணம்

என்பனவாம். இப்பதினெட்டும் மகாபுராணங்கள் எனப்படும்.

இவ்வாறே உபபுராணங்கள் பதினெட்டும், அதிபுராணங்கள் பதினெட்டும் உள்ளன.

கந்த புராணம்:

பதினெண் புராணங்களில் சிவ புராணங்களாக விளங்குவன பத்தாகும். அவற்றுள் ஒன்றான ஸ்காந்த புராணம், 50 காண்டங்களைக் கொண்டதாய், ஓரிலட்சம் கிரந்தங்களை உடையதாய் விளங்குவது.

சனற்குமார சங்கிதை, சூத சங்கிதை, பிரம சங்கிதை, விட்டுணு சங்கிதை, சங்கர சங்கிதை, சூர சங்கிதை என்ற ஆறு சங்கிதைகளை உடையது.

அவற்றுள் சங்கர சங்கிதை முப்பதாயிரம் கிரந்தங்களைக் கொண்டது. பன்னிரு காண்டங்களுடன் விளங்குவது. அவற்றுள் பதின்மூவாயிரம் கண்டங்களைக் கொண்ட சிவரகசிய காண்டத்தில் முருகன் வரலாறு - உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தக்ஷ காண்டம், உபதேச காண்டம் என்ற ஏழு காண்டங்களைக் கொண்ட இப் பகுதியை மூலமாக வைத்தே, கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தைப் பாடியுள்ளார்.

திருவிளையாடற் புராணம்:

பதினெண் புராணங்களில் ஒன்றான ஸ்காந்த புராணத்தில், சங்கர சங்கிதை, சிவபிரான் உமையம்மைக்குச் சொன்னதாகச் சொல்லப் பெறுவது. அவ்வாறு சொன்னபோது, தாயின் மடியிலிருந்து கேட்ட முருகன் அதனை அகத்தியருக்குச் சொன்னார். அதனால் அச் சங்கிதை, அகத்திய சங்கிதை எனவும் வழங்கப் பெறுகிறது. அச் சங்கிதையுள் விளங்குவது ஆலாசிய மகாத்மியம் (ஆலாசியம் - திருவாலவாய்) இஃது 71 அத்தியாயங்களைக் கொண்டது; 6,085 சுலோகங்களை உடையது. இதனுள் 4ஆவது அத்தியாயம் முதலாகச் சிவனின் திருவிளையாடல்கள் கூறுப்பெறுகின்றன. முதல் மூன்று அத்தியா யங்கள், மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவற்றின் பெருமைகளைக் கூறுகின்றன. ஏனைய அத்தியாயங்கள் ஆலவாய் இறைவனின் அருள் விளையாடல்களைத் தெரிவிக்கின்றன.

தமிழ்த் திருவிளையாடற் புராணத்துக்கு மூலநூல் வடமொழி யில் அமைந்த ஆலாசிய மகாத்மியம் ஆகும்.

இதிகாசம்:

இதிகாசம்: இதி+இக+ஆசம் என்ற மூன்று சொற்களே இதிகாசம் என்றாயிற்று. இதி - இது, இக - இப்படி, ஆசம் - நிகழ்ந்தது. எனவே இது இப்படி நிகழ்ந்தது என்பதே இதிகாசம் ஆயிற்று.

இராமாயணம், பாரதம் ஆகியவற்றை இதிகாசம் என்று வழங்குகிறோம். இராமபிரானின் வரலாறும் பஞ்சபாண்டவர் வரலாறும் இப்படித்தான் நிகழ்ந்தது என்று கூறுவதால்தான், இரண்டு வரலாறுகளும் இதிகாசமாயின என்று உணர்க.

பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும் வேத, சிவாகம, புராண, இதிகாசக் கருத்துக்களையே தெளிவாகத் தூய இனிய தெய்வத் தமிழில் விளக்கமாகக் குறிப்பிடுகின்றன. பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும், இறையருளால் சமயாசாரியர், சந்தானாசாரியர் உள்ளிட்ட நாயன்மார்கள் வாயிலாகத் தோன்றியவை. இத்திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் இல்லையேல் வேதம், சிவாகமம், புராணங்களைப் பற்றிப் பொது மக்களும், புலவர்களும் புரிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். வேதம், சிவாகமம், புராணங்கள் இல்லையென்றால் பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களும் தோன்றுவ தற்கே வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

எனவே வேத, சிவாகம, புராண இதிகாசக் கருத்துகளைத்தாம், திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் பல கோணங்களினின்று பார்த்து, அவற்றின் செம்பொருளை நமக்குப் பக்குவமாக உணர்த்தி வருகின்றன. இவற்றையெல்லாம் செந்நெறி நிற்க விரும்புவோர் கைக்கொண்டு பயன் பெறுவரே அன்றிக் கைவிடார்.

இனி, சமயாசாரியர் நால்வரும், வேதாகம, புராண, இதிகாசம் பற்றிக் கூறுமாற்றைக் காண்போம்.

சமயாசாரியருள் ஞானசம்பந்தர் கூற்று

வேதத்தை அருளிச் செய்தவர் சிவபெருமானே என்றும், வேதத் திற்குப் பொருள் உரைத்தவரும் அவரே என்றும் இருக்கு மறைப் பிள் ளையாராகிய திருஞானசம்பந்தர் அருள்கிறார்.

"மங்கையர்க்கரசி" (தி.3 ப.120 பா.1) என்று தொடங்கும் பதிகத்தின் முதற்பாடலின் மூன்றாம் அடியில், "பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி" (தி.3 ப.120 பா.1) என்று பாடியுள்ளார்.

அவரே திருமுதுகுன்றத் தேவாரத்தில், "அறங்கிளரு நால்வேத மாலின்கீ ழிருந்தருளி" (தி.1 ப.131 பா.7) என்று அருளிய இடத்தையும் குறிப்பிட்டுள்ளார். அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கையும் வகுத்து, வேதம் அறிவிப்பதால் வேதத்தையே அறம் என்ற சொல்லில் அருள்கின்றார் . அது வருமாறு:

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு

மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை

ஆலடைந்த நீழன்மேவி யருமறை சொன்னதென்னே

சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. (தி.1 ப.48 பா.1)

என்று சேய்ஞலூர்த் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வகையான புருடார்த்தங்கள்:

திருமுதுகுன்றத் தேவாரத்தில்,

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லரா நல்லிதழி

சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்

அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு

மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே. (தி.1 ப.53 பா.6)

என்று அறம் மட்டும் அல்லாமல் பொருள், இன்பம், வீடு ஆகிய புருடார்த்தங்கள் நான்கையுமே ஓதி உணர்த்தியுள்ளது வேதம் என்று கூறியுள்ளார்.

வேதத்தை உலக மக்களுக்காகச் சொன்னதோடு தாமே ஓதியும் வருகிறார் என்பதைத் திருப்பழனத் தேவாரத்தில்,

"வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்

பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்"

(தி.1 ப.67 பா.1) என்று ஞானசம்பந்தரே முதல் திருமுறையில் அருளி யுள்ளார்.

சிவபெருமான் வேதத்தை மட்டுமின்றி வேதம், ஆறங்கம், ஆகமம், பதினெண் புராணங்கள், இதிகாசங்களையும் அருளியுள்ள மையை,

எங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா

மங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும்

பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்

அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே. (தி.2 ப.6 பா.6)

என்று திருவையாறு தேவாரத்தில் பதினெண் புராணங்களையும் நால்வேதங்கட்கு உணர்வாய் உள்ள ஆறு அங்கங்களையும் ஐயாறப் பரே சொன்னார் என்று கூறியுள்ளார்.

பாதம்விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே

வேதநான்கும் பதினெட்டொ டாறும் விரித்தார்க்கிடம்

தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்

கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே. (தி.2 ப.114 பா.2)

என்று திருக்கேதாரத் தேவாரத்தில், வேதம் நான்கும் பதினெண் புராணங்களும் ஆறு அங்கங்களும் விரித்தோதியவர் திருக்கேதார நாதரே என்று அருளியுள்ளார்.

கூறை போர்க்கும் தொழிலா ரமண்கூறல்

தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்

ஆறு நான்கு மமர்ந்தா ரவர்போலும்

ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. (தி.1 ப.26 பா.10)

என்று திருப்புத்தூர் தேவாரத்தில், கூறை போர்க்கும் புத்தர்களும் அம ணர்களும் கூறுவதைத் தெளியாதீர்; திருப்புத்தூர்ப் பெருமானைத் தெளிந்து போற்றுங்கள். அவர் ஆறு அங்கத்திலும் நான்கு வேதத்தி லும் அமர்ந்துள்ளார் என்று அருளியுள்ளார். அமர்ந்தார் என்பதற்கு, விரும்பி அமர்ந்துள்ளார் என்று பொருள் கொள்வதே சிறப்பாகும்.

வேதத்தை அருளிச் செய்தவனும் வேதப் பொருளாக விளங்கு பவனும் சிவபெருமானேயாவார். உலக மக்கள் குற்றம் செய்யாமல், நன்னெறி நிற்றற் பொருட்டு, அச் சிவபெருமான் அருளிய உபதேசத்தையே முதலாகக் கொண்டு சூத முனிவர் உரைத்த ஒலி மாலையாகிய பதினெண் புராணங்களும் நன்னெறியையே போதிப்பனவாம்.

இக்கருத்துள்ள பாடல் சைவ தத்துவத்தை நிலைநாட்டிய புனல் வாதப் பதிகமாகும். "வாழ்க அந்தணர்" எனத் தொடங்கும் திருப் பாசுரப் பகுதியில் எட்டாவது பாடலாக விளங்குகிறது. அப்பாடல்,

வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்

ஏதப் படாமை உலகத்தவ ரேத்தல் செய்யப்

பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த

சூத னொலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே. (தி.3 ப.54 பா.8)

கலிக்கோவை - பதினெண்புராணம்:

கூன்பாண்டியனாகிய நெடுமாற பாண்டியனுக்கு உற்ற வெப்பு நோயைப் போக்கப் பாடிய, "மந்திரமாவது நீறு" பதிகத்தில் (தி.2 ப.66 பா.1), மந்திரமாவது திருஐந்தெழுத்தே என்றும், அது நினைப்பவரைக் காப்பது என்றும், அது வேதத்தின் நடுவில் உள்ளது என்றும், ஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர், தமது திருமண நிறைவில் எல்லோருக்கும் உபதேசமாக வழங்கியருளிய திருஐந்தெழுத்துத் திருப்பதிகம் "காதலாகி" (தி.3 ப.49 பா.1) என்பது. அப்பாடலில் "வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று அறிவித்துள்ளார். வேதத்தில் பசுமஜாபால உபநிடதம் என்று ஒன்று உள்ளது. அதில் திருநீறு பற்றிய விளக்கம் யாவும் தெளிவாக உள்ளது என்பதாலும் வேதத்தின் சிறப்பை உணரலாம்.

ஞானசம்பந்தர், பாண்டியனின் வெப்புநோய் தீர்ப்பதற்கு முன்பே, இருமுறை ஆலவாய் அண்ணல் கோயில் நண்ணி, "காட்டுமாவது உரித்து உரிபோர்த்து" என்ற பதிகம் (தி.3 ப.47 பா.1) பாடி "அமணர்களை ஓட்டி வாது செய்யத் திருவுளமோ?" என்று வினவி, அதில் மனம் நிறைவு பெறாது, மீண்டும் ஒரு முறை சென்று, ஆலவாய் அண்ணலிடம் "அமணர்களுடன் வாது செய்ய, பெருமானே உன் திருவுளம் யாதோ?" என்று வினவுகிறார். அப்போது பாடியதுதான்,

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்

ஆத மில்லி யமணொடு தேரரை

வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே

பாதி மாதுட னாய பரமனே. (தி.3 ப.108 பா.1)

என்று வேண்டிய பதிகம்.

அதில், ஒவ்வொரு பாடல் இறுதியிலும், "ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென், ஆலவாயில் உறையும் எம்ஆதியே" எனவும் வேண்டியுள்ளார்.

அதே பதிகத்தில், இரண்டாம் பாடலில், "வைதி கத்தின் வழியொழு காதவக் கைத வம்முடைக் காரமண் தேரரை" என்றும், "மறைவ ழக்கமி லாதமா பாவிகள்" என்றும், "அழல தோம்பு மருமறை யோர்திறம் விழல தென்னு மருகர்" என்றும், "அந்த ணாளர் புரியு மருமறை சிந்தை செய்யா அருகர் திறங்கள்" என்றும், வேதத்தைத் தூற்றும் அருகரை வென்று, வைதிக சைவத்தை மதுரையில் வைகைக் கரையில் நிலை நாட்டினார்.

வேதத்தைத் தழுவியது வைதிகம். சிவாகமத்தைத் தழுவியது சைவம். எனவேதான் "பழைய வைதிக சைவம் பரக்கவே" என்று கோயிற் புராணப் பாடல் (வாழ்த்து) குறிக்கின்றது.

மழை வழங்குக மன்னவன் ஓங்குக

பிழையில் பல்வளம் எங்கும் பெருகுக

தழைக அஞ்செழுத் தோசை தரையெலாம்

பழைய வைதிக சைவம் பரக்கவே. (கோயிற் புராணம்)

ஆகமம்

&# இனி, ஆகமம் பற்றி ஞானசம்பந்தர் குறிப்பிடும் இரண்டொரு இடங்களைக் காண்போம். திருவொற்றியூர்த் தேவாரத்தில், புத்தரும் சமணரும் கூறும் புறவுரைகளைக் கேளாதீர் என அடியவர்கட்கு அறி வுரை கூறுகின்றார். அந்த இடத்தில், சிவபெருமானை ஆகமச் செல்வ னார் என்று குறிப்பிடுகின்றார். ஆகமச் செல்வனாரை யலர் தூற்றும், சமண புத்தர்களைக் கூகை (கோட்டான்) என்று வெகுண்டு கூறுகின் றார். அப்பாடல் காண்க:

தோகையம் பீலிகொள்வார் துவர்க் கூறைகள் போர்த்துழல்வார்

ஆகமச் செல்வனாரை யலர் தூற்றுதல் காரணமாக்

கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மி னேழுலகும்

ஓகைதந் தாளவல்லா னுறை யும்மிட மொற்றியூரே. (தி.3 ப.57 பா.10)

மேலும், திருக்கோகரணத் தேவாரத்தில், பெருமான் திருமேனி யின் மேல் திருநீறாடி, திருவடிகளில் சிலம்பு ஒலிக்க, விளையாடி வரும் காளை மிசை ஊர்ந்து, பிச்சை ஏற்க வருபவர் இடம் திருக்கோகரணம் என்றும், இங்கு ஆறு சமயத்தவர்களும் மிகுதியாக ஆகம வழிபாட்டை விரும்பி, இங்குள்ள பெருமானுக்கு வழிபாடு நிகழ்த்தி அன்பு மிகுதியால் நடுக்கம் எய்தி வழிபடுகின்றனர் என்றும் அருள்கின்றார். அப்பாடல் வருமாறு:

நீறுதிரு மேனிமிசை யாடிநிறை வார்கழல் சிலம்பொலிசெய

ஏறுவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரு மீசனிடமாம்

ஆறுசம யங்களும்வி ரும்பியடி பேணியர னாகமமிகக்

கூறுமனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே. (தி.3 ப.79 பா.6)

திருநாவுக்கரசர் கூற்று:

ஞானசம்பந்தர் அருளிய அதே நடையில் கச்சி ஏகம்பத் தேவா ரத்தில், திருநாவுக்கரசரும்,

"நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்

வல்லானை வல்லார்கண் மனத்துறையு மைந்தனை" (தி.4 ப.7 பா.7)

என்று நான்மறையையும் ஆறங்கத்தையும் போற்றி உரைக்கின்றார்.

திருச்செம்பொன்பள்ளித் தேவாரத்தில், "தந்தையும் தாயுமாகித் தானவன் ஞான மூர்த்தி, முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி" (தி.4 ப.29 பா.4) என்று இருக்கு வேதத்தை ஓதி, தேவர்கள் வழிபட்டதைக் குறிக்கின்றார்.

ஆதிபுராணத் திருக்குறுந்தொகைப் பதிகத்தில் முதல் பாடலில், "வேத நாயகன் வேதியர் நாயகன்" (தி.5 ப.100 பா.1) என்று வேதத் திற்கும் வேதத்தை முறையாக ஓதும் வேதியர்கட்கும் நாயகனாக உள்ளவன் என்றும், எட்டாம் பாடலில்,

அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில்

அருக்க னாவா னரனுரு வல்லனோ

இருக்கு நான்மறை யீசனை யேதொழும்

கருத்தி னைநினை யார்கன் மனவரே. (தி.5 ப.100 பா.8)

என்றும் அருளியமை காண்க. மேலும் இப்பாடலின் பொருளைக் காண்போம்.

அத்வைதம் பேசும் அந்தணர்களில் பலரும், சந்தியா காலங்க ளில் அருக்கனாகிய சூரியனை வணங்குவார்கள். அரனுக்குள்ள எட்டு உருவில் அருக்கனாகிய சூரியனும் ஒருவன் என்பதை உணராமல் சூரியனாகிய உடலையே தொழுகின்றனர். அதில் உள்ள ஈசனைத் தொழுவாரில்லை. ஆனால் இருக்கு முதலிய வேதங்கள் அருக்கனுக்குள்ளிருக்கும் ஈசனையே தொழுகின்றன. (அருக்கன் - சூரியன்). இக்கருத்தை உணராத கல் மனத்தவராய் உள்ளனரே என்று இரங்குகின்றார்.

மேலும் அப்பர், திங்களூர் அப்பூதி அடிகளின் திருமகனார் மூத்த திருநாவுக்கரசு, விடம் தீண்டி இறந்த போது, அவரை உயிர்ப்பித்த திருப்பதிகம் "ஒன்று கொலாம்" எனத் தொடங்கும், விடம் தீர்த்த திருப்பதிகமாகும். அப்பதிகப் பாடலில், "நாலுகொ லாமறை பாடின தாமே" (தி.4 ப.18 பா.4) என்று மறைகள் நான்கு என்பதைக் குறிப்பிட் டுள்ளார்.

புள்ளிருக்குவேளூர்த் தாண்டகத்தில்,

"பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்

பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்

வாராத செல்வம் வருவிப் பானை

மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித்

தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை" (தி.6 ப. 54 பா.8)

என்னும் பாடலில், மந்திரம் வேத மந்திரம் என்பதையும், தந்திரம் ஆகமம் என்பதையும், மருந்து ஐந்தெழுத்து என்பதையும் குறிப்பிட் டுள்ளார்.

ஞானசம்பந்தரும் மந்திரமாவது திருவைந்தெழுத்து என்றும், தந்திரம் என்பது சிவாகமம் என்றும் குறிப்பிட்டுள்ளமை ஒத்து நோக்கத் தக்கனவாம்.

இதிகாசம் பற்றி அப்பர் குறிப்பிட்டுள்ளமையை இராமேச்சுரம் தேவாரத்தில் காணலாம். அப்பாடல் காண்க.

கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்

வீடவே சக்க ரத்தா லெறிந்துபின் னன்பு கொண்டு

தேடிமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை

நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே. (தி.4 ப.61 பா.9)

மேலும் அப்பர், வேத, ஆகம, புராணங்கள் பற்றி அருளி உள்ள அருள் மொழிகள் சில காண்போம். தில்லைப் பெரிய திருத்தாண் டகத்தில், "அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை" (தி.6 ப.1 பா.1) என்று ஓதியுள்ளார். இதில் வேதம் முழுவதிலும் உட்பொருளாய் இருக்கின்றவர் சிவமே எனக் குறிப்பிட் டுள்ளார். அதே பதிகம், ஆறாம் பாடல், இரண்டாம் அடியில் "அருமறையோ டாறங்க மாயி னானை" என்று பாடியுள்ளார்.

அடையாளத் திருத்தாண்டகம், ஐந்தாம் பாடலில் "பாடுமே ஒழியாமே நால்வே தம்மும்" (தி.6 ப.4 பா.5) என்று வேதத்தை இசையோடு பெருமானே ஓதுவதைக் குறிப்பிடுகின்றார்.

திருவதிகைப் போற்றித் திருத்தாண்டகத்தில், "நான்மறையோ டாறங்க மானாய் போற்றி" (தி.6 ப.5 பா.8) என்றும், பந்தணை நல்லூர்த் தாண்டகத்தில், "நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்" (தி.6 ப.10 பா.10) என்றும், மதுரைத் தாண்டகத்தில், "அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும் சீரானை" (தி.6 ப.19 பா.5) என்றும், ஆக்கூர்த் தாண்டகத்தில், "வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்" (தி.6 ப.21 பா.2) என்றும், திருமறைக்காட்டுத் தாண்டகத்தில், "மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய், முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்" (தி.6 ப.23 பா.9) என்றும் போற்றுகிறார்.

திருவாரூர்த் தாண்டகத்தில், "புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் புத்தேளும் காண்பரிய புராணன் தான்காண்" (தி.6 ப.30 பா.9) என்று புராணனையும் புராணத்தையும் போற்றுதலையும், பெருமானைப் புராணன் என்று சொல்லுமாற்றையும் காண்கின்றோம்.

திருமழபாடித் தாண்டகத்தில், "ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்" (தி.6 ப.39 பா.10) என்று, வேதங்கட்கெல்லாம் மூலமாய் உள்ள ஓங்காரத்தைக் குறிப்பிட்டு, அதன் உட்பொருளாய் இருப்பவன் சிவனே என்று உரைக்கின்றார்.

மழபாடியின் மற்றொரு தாண்டகப் பதிகத்தில் இரண்டாம் பாடலில், "மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே" (தி.6 ப.40 பா.2) என்று, பூவும் நீரும் கொண்டு மந்திர புட்பம் சமர்ப்பிப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

திருஆவடுதுறைத் தாண்டகத்தில், "நம்பனை நால்வேதம் கரைகண்டானை" (தி.6 ப.46 பா.1) என்று நால்வேதம் முழுவதும் கண்டவன் சிவனே என்றும் அறிவிக்கின்றார்.

"தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானை" என்னும் தாண்டகத்தின் இரண்டாம் அடியில், "சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை" (தி.6 ப.50 பா.4) என்றும், புள்ளிருக்கு வேளூர்த் தாண்டகத்தில் "ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற பொருளானை" (தி.6 ப.54 பா.4) என்று, வேதங்களைக் கடந்தவன் என்றும் சொல்கின்றார்.

திருவலம்புரம் தாண்டகத்தில், "செங்கண்மால் சிலைபிடித்துச் சேனையோடும் சேதுபந்தனம் செய்து" (தி.6 ப.58 பா.10) என்று இதிகாச வரலாற்றைக் குறிப்பிடுகின்றார்.

திருவெண்ணித் திருத்தாண்டகத்தில், "பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்" (தி.6 ப.59 பா.1) என்று, புராணத்தை உடையவராய் உள்ளார் சிவனே என்றும், திருநாகேச்சுரத் தாண்டகத்தில், "மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை" (தி.6 ப.66 பா.1) என்று, திருமால், பிரமன், மறைவல்ல அந்தணர்கள் போற்றும் மந்திர வடிவாய் உள்ளவனும், தந்திரமாகிய ஆகமமாக உள்ளவனும் சிவபெருமானே என்றும் அருளியுள்ளார். (தந்திரம் = ஆகமம்).

திருவாலங்காட்டுத் தாண்டகத்தில், "நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே" (தி.6 ப.78 பா.4) என்றும், திருப்பாசூர்த் தாண்டகத்தில், "வேதமோர் நான்காய் ஆறங்க மாகி விரிகின்ற பொருட்கெல்லாம் வித்து மாகி" (தி.6 ப.83 பா.4) என்றும், வேத, ஆகம, புராண, இதிகாசம் பற்றி நாவுக்கரசர் அருளியவற்றை ஒரு சிறிது கண்டோம்.

சுந்தரர் கூற்று:

"அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும் ஆய நம்பனை" (தி.7 ப.62 பா.2) பெருமான், ஆறு அங்கமாகவும் நால் வேதமாகவும் உள்ளவன் என்கிறார், சுந்தரர்.

திருவீழிமிழலைத் தேவாரத்தில், "வேத வேதியர் வேத நீதிய தோது வார்விரி நீர்மி ழலையுள்" (தி.7 ப.88 பா.10), வேதியர்கள் வேதத்தையும் வேதநீதியையும் ஓதி வந்துள்ளனர் என்பதை இப்பாடற் பகுதி அறிவிக்கின்றது.

திருநனிபள்ளித் தேவாரத்தில், "அங்கமொ ராறவையும் அரு மாமறை வேள்விகளும், எங்கும் இருந்தந்தணர் எரி மூன்றவை யோம்புமிடம்" (தி.7 ப.97 பா.7) என்று குறிப்பிட்டுள்ளார்.

திருக்கானப்பேர்த் தேவாரத்தில், "தொண்டர் தமக்கெளிய சோதியை" என்னும் பாடலின் மூன்றாம் அடியில், "அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும் ஆதியை" (தி.7 ப.84 பா.8) என்றும், பரவையுள் மண்டளித் தேவாரத்தில், "அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும் பெம்மானே" (தி.7 ப.96 பா.6) என்றும், நொடித்தான் மலைத் தேவாரத்தில், "அரவொலி ஆகமங்கள் அறி வார்அறி தோத்திரங்கள்" (தி.7 ப.100 பா.8) என்னும் பாடலில், ஆகமங்கள் பேசப்படுகின்றமை காண்க.

திருமுருகன்பூண்டித் தேவாரத்தில், "தயங்கு தோலை உடுத்துச் சங்கர சாம வேதமோதி" (தி.7 ப.49 பா.5) என்றும், "வேத மோதிவெண் ணீறுபூசி" (தி.7 ப.49 பா.7) என்றும், திருஆமாத்தூர்த் தேவாரத்தில், "காண்டனன் காண்டனன்" என்னும் பதிகத்தின் முதல் பாடலில் நான்காம் அடியில், "மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே" (தி.7 ப.45 பா.1) என்று, வேத வித்தல்லாத பாதகர்களிட மிருந்து மீண்டேன் மீண்டேன் என்று இருமுறை குறிப்பிடுகின்றார்.

"நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர் நான்ம றைக்கிட மாய வேள்வியுள்" (தி.7 ப.88 பா.1) என்றும், "தொண்டர் தமக்கெளிய சோதியை" (தி.7 ப.84 பா.8) என்றும், "அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும் ஆதியை" (தி.7 ப.84 பா.8) என்றும், மேலே உள்ள பல கூற்றுகளாலும், வேதாகம புராண இதிகாசங்களைச் சுந்தரர் போற்றியுள்ளமை காணலாம்.

மாணிக்கவாசகர் கூற்று:

மணிவாசகரின் சிவபுராணத்தில், "வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே" (தி.8 ப.1 வரி 34,35) என்று பேசுகின்றது. ஐயா எனின், சிவபெருமானையே தலைவன் என்று வேதம் குறிப்பிடுவதாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்தவன் என்றும், எல்லாவற் றிற்கும் கீழாக ஆழ்ந்தவன் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக அகன் றவன் என்றும், எல்லாவற்றிற்கும் நுண்பொருளாய் உள்ளவன் என்ப தால் நுண்ணியன் என்றும் கூறியுள்ள சிறப்பைக் காண்க.

வேதம் பொது நூலாதலின், அங்கு பாலில் நெய் இருப்பதைப் போல விளங்காதிருப்பான் இறைவன். சிவாகமம் சிறப்பு நூலாதலின் அங்கு, தயிரில் நெய்போல இனிது விளங்கித் தோன்றுவான். இதனாலேயே, "ஆகம மாகிநின் றண்ணிப்பான்" (தி.8 ப.1 வரி 4) என்றார். அண்ணித்தல் = இனித்தல்.

&#கீர்த்தித் திருவகவலில், "மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்" (தி.8 ப.2 வரி 9, 10) என்று சொல்லியுள்ளார். தென்பாண்டி நாட்டில், திருக்குறுங்குடி என்னும் வைணவத் தலத்தின் மேல்பால் மகேந்திரமலை உள்ளது.

திருப்படையாட்சி - நான்காம் பாடலின் மூன்றாம் அடியில், "மாமறை யும்அறி யாமலர்ப் பாதம்" (தி.8 ப.49 பா.4) என்றும், அன்னைப் பத்தின் முதல் பாடலில், "வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர்" (தி.8 ப.17 பா.1) என்றும், வேதங்களாகிய சொல்லை உடையவர் என்பதோடு மூலமாய் உள்ள, நாத தத்துவமாகிய பறையையும் உடையவர் என்கிறார்.

கண்ட பத்தில், "நான்குமறை பயில்தில்லை யம்பலத்தே கண்டேனே" (தி.8 ப.31 பா.9) என்றும், "வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே" (தி.8 ப.31 பா.10) என்றும், திருவேசற வில், "மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா ஓத்தானே பொருளானே" (தி.8 ப.38 பா.10) என்று, எல்லாப் பொருள்களுக்கும் முன்னவன், மூவாத இறையவன், மூப்படையா ஓத்து - வேதமாய் உள்ளவன் என்னும் பொருள் வருமாறு போற்றுகிறார்.

குழைத்த பத்தில், "புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதந் தருளாதே" (தி.8 ப.33 பா.10) என்று புராணன் என்ற பொருளில் குறிப்பிடுகின்றார். புராணன் என்பதற்கு, மிகப் பழமைக்கெல்லாம் பழமையாய் உள்ளவன் என்பதே பொருளாம்.

இவ்வருள்மொழிகளால், மணிவாசகரும் வேதாகம புராணங் கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளமையை ஒருவாற்றான் அறியலாம்.

மூவகை உபதேசம்:

வேத, சிவாகம, புராண இதிகாசங்கள் மக்கட்கு (மறைப் பொருளை) எப்படி உபதேசிக்கின்றன என்பதை முன்னோர் மூன்று வகையாகக் கூறியுள்ளமை பற்றிக் காண்போம்.

உபதேசம் செய்வதை மூவகையாகப் பகுத்துள்ளனர் முன்னோர். அவை பிரபு சம்ஹிதை, காந்தா சம்ஹிதை, சுகிருத் சம்ஹிதை என்பனவாம்.

பிரபு சம்ஹிதை என்பது அரசன் உத்தரவு (ஆணை) இடுவது போன்றது.

காந்தா சம்ஹிதை என்பது, மனைவி கணவனுக்கு இதமாகவும், பதமாகவும், சொல்வது போன்றது.

சுகிருத் சம்ஹிதை என்பது, நண்பன் நண்பனுக்குச் சொல்வது போன்றது.

சம்ஹிதை என்பதற்கு, சொல்லும் முறை என்பது பொருள். அரசன் (பிரபு) ஆணை இட்டுச் சொல்வது போல் வேதம், ஆகமம் இரண்டும் இன்னது செய்க, இன்னது தவிர்க்க என்று உத்தரவிடும்.

மனைவி கணவனுக்கு இதமாகவும், பதமாகவும் நன்மைகளை எடுத்துச் சொல்வது போல், புராணம் நயமாகச் சொல்லும்.

சுகிருத் - நண்பன், தன் நண்பனுக்கு இதமாகவும், பதமாகவும் சொல்வதுடன், இடித்தும் சொல்வான். இதிகாசம் நண்பன் நண்பனுக்குச் சொல்வதைப் போலச் சொல்லும்.

எனவே, அரசன் பணியாளர்க்கு ஆணையிடுவதுபோலவும், மனைவி கணவனுக்கு இதமாகச் சொல்வது போலவும், நண்பன் நண்பனுக்கு சொல்வது போலவும் சொல்லும் இவற்றையெல்லாம் நாம், நம் பன்னிரு திருமுறைகளிலும் காணலாம்.

ஞானசம்பந்தர் தேவாரத்தில் பிரபு சம்ஹிதை போலவும், அப்பர் தேவாரத்தில் காந்தா சம்ஹிதை போலவும், சுந்தரர் தேவாரத்தில் சுகிருத் சம்ஹிதை போலவும் உபதேசங்கள் வருவதை ஆங்காங்குக் காணலாம்.

முப்புராணங்கள்:

முப்புராணங்களாவன: பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் என்பனவாகும். இவை மூன்றும் சிவபெரு மானின் மூன்று கண்களாகப் போற்றப் பெறுவன. சூரியகுலத் தோன்றல்களாகிய சோழர்கள் காரணமாகத் தோன்றியதால், சிவபெருமானின் வலது கண்ணாகப் பெரியபுராணம் போற்றப்படுகிறது.

சந்திர குலத்தோன்றல்களாகிய பாண்டியர்கள் காரணமாகத் தோன்றியதால், சிவபெருமானின் இடது கண்ணாகத் திருவிளையா டற் புராணம் போற்றப்படுகிறது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமான் வரலாறு கூறுவதால், சிவபெருமானின் அக்கினிக் கண் ணாகக் கந்தபுராணம் போற்றப்படுகிறது.

பெரியபுராணம், மனிதன் குறிக்கோளுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறது. திருவிளையாடற் புராணம் மனிதன் பக்தியுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கந்தபுராணம், மனிதன் நன்றியறிதலுடன் வாழவேண்டும், இல்லையேல் கடுந்தண் டனையை அநுபவிக்க நேரிடும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.

பெரியபுராணம், சிவபெருமானின் அருமைப்பாட்டை அறிவிக் கிறது. திருவிளையாடற் புராணம் சிவபெருமானின் எளிவந்த கருணையை வெளிப்படுத்துகிறது. கந்த புராணம் அக்கினிக் கண்ணுக் கேற்பக் கடுமையைக் காட்டித் திருத்துவதாய் உள்ளது.

திருத்தொண்டர் புராணம்:

சேச்கிழார் பெருமான், விநாயகர் வணக்கத்தில் "எடுக்கும் மாக்கதை" (தி.12 பாயிரம் பா.3) என்று குறிப்பதாலும், செயற்கரும் செய்கை செய்த தீரர்களின் வரலாறுகள் கூறப்பெறுவதாலும், "செயற்கரிய செய்வார் பெரியர்" (குறள் 26) என்ற திருவள்ளுவர் கூற்றின்படியும்

பெரியவர்களின் புராணம், பெரியபுராணம் என வழங்கப் பெறுகிறது. ஆயினும் சேக்கிழார் இப்புராணத்திற்கு இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதேயாம்.

உலகில் புற இருளைப்போக்குகின்ற சூரியனைப் போல மக் களின் அக இருளைப் போக்கும் ஆன்றோர் செயல்களைக் கூறுவதால் இதைத் திருத்தொண்டர் புராணம் என்றே தெரிவிக்கின்றார். அப்பாடல் காண்க.

இங்கிதன் நாமம் கூறின் இவ்வுல கத்து முன்னாள்

தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற

பொங்கிய இருளை ஏனைப் புறஇருள் போக்கு கின்ற

செங்கதி ரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம்.(தி.12 பாயிரம் பா.10)

திருத்தொண்டர் புராணத் தோற்றம்:

திருக்கயிலை மலைச்சாரலிலே, வியாக்கிரபாத முனிவரின் குமாரரான உபமன்யு முனிவர், சில முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது வான வெளியில் ஒரு சோதி தோன்றியது. அதைக் கை கூப்பி வணங்கினார், உபமன்யு முனிவர்.

இவர் சிவபிரானையன்றி வேறு எவரையும் வணங்காதவர். எனவே முனிவர்கள் உபமன்யுவைப் பார்த்து, "சம்பு வின்அடித் தாமரைப் போதலால்" (தி.12 சரு.1-1 பா.19)வேறு யாரையும் இறைஞ்சாத தேவரீர், இச்சோதியை வணங்கிய காரணம் என்ன? என்று கேட்டனர்.

"தம்பி ரானைத்தன் உள்ளம் தழீஇயவன் நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்" (தி.12 சரு.1-1 பா.19) என உபமன்யு சொன்னார்.

அப்படியானால் அவரது வரலாற்றைக் கேட்க, பெரிதும் விரும்புகிறோம் என்றனர் முனிவர்கள். "அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்" (தி.12 சரு.1-1 பா.22). அவர் திருக்கயிலையில் இறைவனுக் குத் திருநந்த வனத்தில் வாசமலர் பறித்து நாளும் சூட்டி அணுக்கத் தொண்டராய் இருந்தவர், என்றார் உபமன்யு.

ஆலாலசுந்தரர்:

தேவர்களும் அசுரர்களும் என்றும் சாகாமல் இருக்க அமுதம் உண்ணும் பொருட்டுத் திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது இரண்டு விடம் உண்டாயின.

ஒன்று, வலிபொறுக்காமல் கயிறாகப் பயன்பட்ட வாசுகி என்னும் பாம்பு கக்கிய விடம். மற்றொன்று கடலினின்றும் தோன்றிய விடம். இரு விடமுமே ஆலால விடமாயிற்று.

இவை இரண்டும் தேவாசுரர்களை வெருட்டியபோது, தேவாசுரர்கள் சிவபெருமானைத் தஞ்சமடைந்தார்கள். அந்த விடத்தை எடுத்துவரத் தக்க ஆன்மா இல்லாததால், சிவபெருமான் கண்ணாடி முன் நின்றார். கண்ணாடியில் அவரது அழகிய திருவுருவம் தோன்றியது. அந்தப் பிம்பத்தைப் பெருமான் தமது சுட்டு விரலால் அழைக்க வந்தவரே ஆலாலசுந்தரர். இவரைப் பெருமான் அனுப்பினார். அவ்விரு விடத்தையும் நாவல் கனி அளவாகக் கையிலே கொண்டு வந்தார், ஆலாலசுந்தரர். அதனைப் பெருமான் வாங்கி உண்டு கண்டத்தில் அடக்கி நீலகண்டராகத் திகழ்ந்தார்.

மாதவம் செய்த தென்திசை:

இவ் ஆலாலசுந்தரர், பெருமானுக்குக் கயிலை மலையில் நந்தவனத்தில் மலர்பறிக்கும் திருத்தொண்டு செய்யும்போது, பிராட்டியாருக்கு அனிந்திதை, கமலினி என்ற இரு சேடிப்பெண்களும் மலர் கொய்வது வழக்கமாக நிகழ்ந்து வந்தது.

அதில் ஒருநாள், சுந்தரர் அவ்விருவர் மீதும் சிறிது மனம் போக்கினார். காதல் மாதரும் காட்சியில் கண்ணினார். பெரியவர்கள் பிழை செய்யமாட்டார்கள். அப்படி ஏதேனும் பிழை செய்தால் அதனால் நாட்டிற்கு நன்மையே கிடைக்கும். அந்த நன்மைதான் தமிழகத்திற்குக் கிடைத்த நாயனார்களின் பண்பாட்டு வரலாறு. இதைச் சேக்கிழார்,

மாத வம்செய்த தென்திசை வாழ்ந்திடத்

தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்

போது வார்அவர் மேல்மனம் போக்கிடக்

காதல் மாதருங் காட்சியிற் கண்ணினார். (தி.12 சரு.1-1 பா.25)

என்று காவியமாகப் பாடி நமக்கு வழங்கினார்.

எத்தனையோ காலம் சுந்தரரும் அனிந்திதை, கமலினியாரும் மலர்த்தொண்டு செய்துதான் வந்தனர். அப்போதெல்லாம் வாராத காதல் இப்போது எப்படி வந்தது? இதனை ஊன்றி உணர்ந்தால், மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடவே இக்காதல் மலர்ந்தது என்பதை உணரலாம்.

காவியத் தலைவர் சுந்தரர்:

இப்பெரியபுராணக் காவியத்தின் தலைவரே சுந்தரர்தான். இவர் வரலாறே திருமலைச்சருக்கம் தொடங்கி, தடுத்தாட்கொண்ட புராணம் வரை முதல் பகுதியாகவும், ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தில் குண்டையூரில் நெல் பெற்றது முதலாக ஏயர்கோனுடன் நட்பு, மேலும் கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாளின் நட்புவரை இடைப்பகுதி யாகவும், வெள்ளானைச் சருக்கம் நிறைவுப் பகுதியாகவும் அமைந் துள்ள முறை ஒரு காப்பியத்திற்கு வேண்டிய அனைத்துப் பகுதிகளுட னும் அமைந்து அணி செய்கிறது.

சோழநாட்டின் முதல் அமைச்சர்:

சேக்கிழார் கவிஞரல்லர். சோழநாட்டின் முதலமைச்சராக அநபாய சோழனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சோழ மன்னரைச் செந் நெறிப்படுத்த இக்காப்பியத்தை அருளினார்.

காப்பியக் கவிஞராக ஆக்கியது கூத்தப்பெருமானின் குஞ்சித பாதம். நடராசப் பெருமான் திருவருள், "உலகெலாம்" என்று அடியெ டுத்துக் கொடுத்தது. அதையே முதலாகக்கொண்டு காவியம் பாடத் தொடங்கினார். ஓராண்டில் பெரியபுராணத்தைப் பூர்த்தி செய்தார்.

கூத்தப் பெருமானுடைய அருள் வாக்காகிய "உலகெலாம்" என்னும் சொற்றொடர், புராணத் தொடக்கத்திலும், திருஞானசம்பந்தர் புராண இடைப்பகுதியிலும், வெள்ளானைச் சருக்கம் நிறைவிலும் அமையுமாறு திருவருள் துணை செய்துள்ளது.

இடையில் வந்துள்ள, "உலகெலாம்" என்ற பாடலால் ஞானசம் பந்தருக்குத் திருநெல்வாயில் அரத்துறை ஈசன், சிவிகை, பொற்சின் னம் முதலிய ஆசாரிய அங்கங்களை அடியார்கள் மூலம் கொடுத் தருளினார். அச்சிவிகையை எப்படி ஞானசம்பந்தர் ஏற்றுப்போற்றி னார் என்பதை எண்ணி, ஞானசம்பந்தரின் உள்ளக்கிடக்கையை உணர்தல் வேண்டும். பெருமான் அருளால், கேளாமலே வழங்கிய பெருங் கொடை. அதனைப் பெருமான் திருவருளாகவே கருதி, அதனை வலம்வந்து, பார்மீது விழுந்து வணங்கி, ஐந்தெழுத்து ஓதி ஏறினார். "உலகெலாம் உய்ய" என்று சேக்கிழார் படம்பிடித்துக் காட்டுகிறார். அப்பாடல் காண்க.

சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்

மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றி நின்று

ஆதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்

தோதி ஏறினார் உய்ய உலகெலாம். (தி.12 பு.28 பா.216)

சாதிகள் நெறியில் தப்பா:

பெரியபுராணத்தில் சாதிகள் இல்லை என்று புலமை சான்றவர்க ளும் இக்காலத்தில் பேசி வருகின்றனர். சாதிகள், குலங்கள், எத்தனை என்பதைப் பட்டியலிட்டு, சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு. மா. பாலசுப்பிரமணிய முதலியார் வெளியிட்டுள்ள தொகுப்பை இரண்டாம் காண்டத்தின் இறுதியில் வெளியிட்டுள்ளோம், காண்க, தெளிக.

அதை அடுத்து, நாட்டுச் சிறப்பில் ஒரு பாடல் சாதி பற்றிக் குறிப்பிடுவதைக் காணலாம். வீதிகளில் விழா தவறாது நடைபெறுகிற ஆரவாரமும், வீடுகளில் விருந்தினர் தவறாது வந்து செல்கின்ற ஆரவாரமும் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு சாதியினரும், அவரவர் ஒழுக்கநெறி நின்றும் தவறாது நடந்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் கலகலப்பாக மகிழ்ந்து விளையாடுகின்றனர். பறவைகளும் விலங்கு களும் கூட அவ்வவற்றிற்குரிய நெறிமுறை நீதிகளுடன் நடந்து வரு கின்றன. இவற்றைப் பார்க்கும் தேவலோகத்தில் உள்ள காமதேனுப் பசுவும் இந்நிலவுலகத்தில் வாழ விரும்பி அவாவுறுகின்றது.

மக்கள் ஒழுக்கநெறி நின்று தீட்சை பெற்று முறையாக அஞ் செழுத்தாகிய `நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தை அஞ்சாது செபிக்கின்றனர். அதனால் மக்கட்கு வரக்கூடிய பிணிகள் யாவும் இவர்களிடம் வர அஞ்சுகிறது என்கிறார் சேக்கிழார்.

இளையான்குடிமாற நாயனார் வரலாற்றில் முதல் பாடலில், "நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்கு லஞ்செய் தவத்தினால், இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை யான்கு டிப்பதி மாறனார்" (தி.12 பு.4 பா.1) என்று குறிப்பிடுகின்றார். அச் சாதி பற்றிய பாடலும் காண்க.

வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்

சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா

நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்

ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறு பிணி வரத்தாம் அஞ்சும். (தி.12 சரு.1-2 பா.34)

மனுநீதி கண்ட சோழன்:

சுமிருதி வழி வந்த மனு வேறு. சோழர் குலத்தோன்றலாகிய இம் மனு வேறு என்பதாகக் குறிப்புக் காணப்படுகிறது.

மனுவேந்தன் வரலாற்றில் அரசன் ஒருவன் எப்படிக் குடிகளைக் காக்கவேண்டும் என்பதை இரு பாடல்களால் குறிப்பிடுகின்றார்.

"மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாம்

கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்" (தி.12 சரு.1.3 பா.14)

என்பது ஒரு பாடல். அதில் மன்னுயிர் என்றதனால், உயிர் நிலையாக உள்ளது, உடல்தான் மாய்கிறது என்பதை வலியுறுத்தினார். மாநிலம் காவலனாவான், "மன்னுயிர்காக் குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்கள் தம்மால் ஆனபயம் ஐந்தும் தீர்த் தறம் காப்பான் அல்லனோ" (தி.12 சரு.1-3 பா.36) என்பது அடுத்த பாடல்.

இதில் உயிர்கட்கு இடையூறு செய்வது; முதலில் அரசனால் இடையூறு விளையாமல் காத்தல்; முதல்வன் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனை முதலில் சொன்னார். முதல்வன் சரியாக இருந்தால் அறநெறி சரியாக நடைபெறும்.

அடுத்து, தனக்கு உறுதுணையாக இருப்போரால் உயிர்கட்குத் துன்பம் வராமல் காத்தல்.

அடுத்து, பகைத்திறத்தால் என்றார். அரச பகைவர்களாலும் சமுதாயப் பகைவர்களாலும் தனிமனிதப் பகையாலும் உயிர்கட்கு இடர் வராமல் காத்தல். நேரிய அரசு செலுத்தும் திறன் உள்ள அரசிடம் எல்லோரும் நன்றி பாராட்டுவர். அவ்வாறு அரசு நடத்தவேண்டும். இஃது எல்லோராலும் இயலாது.

அடுத்து, கள்வரால் இடையூறு வாராது காத்தல். இதுவும் நேரிய அரசுக்குச் சாத்தியமே.

அடுத்து, உயிர் தம்மால் - உயிர் என்பது இங்கு விலங்குகள், விட சந்துக்களைக் குறிப்பிடுகிறது.

அரச நீதி நேர்மை தவறாது இருக்குமானால், மேற்குறிப்பிட்ட அனைத்தும் சாத்தியமேயாம். மனுவேந்தனைப் போல, தன் ஒரே மகனை முறைசெய்த திறன் இருக்குமானால், எல்லாம் நலமாகவே முடியும். மன்னன் நீதி பிழையாமையால் தனக்கும் தன் மகனுக்கும் மந்திரிக்கும் பசுவிற்கும் கன்றிற்கும் எந்தக் குறையுமில்லாமல் நிறை வாழ்வு கிடைத்ததை எல்லோரும் நினைத்து அதன்வழி நடந்து நலம் பெறுவார்களாக.

ஆணைவழியே தடுத்தாட்கொண்டார்:

திருக்கயிலையில் பெருமான், `மாதர்மேல் மனம் வைத்தனை, ஆதலால் பூமியில் தோன்றி அம்மெல்லியலாருடன் காதல் இன்பம் கலந்து அணைவாய்' என்றார். சுந்தரரோ, "மையல் மானுட மாய்மயங் கும்வழி ஐயனே தடுத் தாண்டருள் செய்" (தி.12 சரு.1-1 பா.28) என்றார்.

திருக்கயிலாய நாதர் அதற்கருள் செய்தார். பிறகு ஆலால சுந்தரர், அறம்தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்தருளப் பெரும் பேறுபெற்ற திருமுனைப்பாடி நாடு என்றும் நடுநாடு என்றும் போற்றப்பெறும் பகுதியிலே, திருநாவலூரில் ஆதிசைவ அந்தணர் குலத்திலே, சடையனார் இசைஞானியார் என்ற தவத்தில் தலைநின்ற தம்பதியர்க்கு அருந்தவ மகவாய்த் தோன்றினார்.

அப்பகுதியில் நரசிங்கமுனையரையர் ஆட்சி செய்தமையால் தான் திருமுனைப்பாடி நாடு என்னும் பெயர் பெற்றது. அந் நரசிங்க முனையரையரின் காதல் மகவாய் (அபிமான புத்திரர்) வளர்ந்து மணப் பருவம் உற்றார். திருவாமூருக்கு அருகில் உள்ள மணம்வந்த புத்தூரில் பெண் பார்த்து, திருமணம் நிகழும் காலத்தில், முன்பு திருக்கயிலையில் அருளியபடியே பெருமான் வயோதிக அந்தணர் வடிவில் வலிய ஆட்கொள்ள வந்தார்.

சுந்தரரோ, முன்பு கயிலையில் தெரிவித்தபடியே மையல் வாழ்வில் மயங்கி நின்றார். வந்த வயோதிக அந்தணர் `இந்த நாவலூரன் நமக்கு அடிமை, இவ்வழக்கை முடித்தே திருமணம் செய்க' என்றார்.

அப்போதுதான், இம்மறையோன் பித்தனோ என்று கேட்டு, ஓலையை வாங்கிக் கிழித்தார். வழக்கு விரிவடையவே, இதனை நல்லோர் வாழும் வெண்ணெய் நல்லூரில் முடிவு செய்வோம் என்று பெரியவர் புறப்பட்டார்.

திருவெண்ணெய் நல்லூரில், வேதநெறி வல்ல அந்தணர் சபை முன்பு இவ்வழக்கைத் தொடுத்தார். மூல ஓலை காட்டி ஆரூரர் அடிமை என்பதைச் சாதித்தார். `இந்த ஊரில் உமது வீட்டைக் காட்டுக' என மறையவரிடம் சபையோர் கேட்டனர். ஆரூரர் உள்ளிட்ட அந்தணர் களுடன் திருக்கோயிலுள் மறையவர் புகுந்தார். யாவரும் அதிசயித் தனர். மறையவர் மறைந்தார். இடபாரூடராக அம்மை அப்பர் காட்சி யருளினார். "மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம் பெற்றனை, நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின்மிக்க அற்சனை பாட்டே ஆகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்". (தி.12 சரு.1-5 பா.70)

சுந்தரர், `கோதிலா அமுதே, உன்றன் குணப்பெருங்கடலை நாயேன் என் சொல்லிப் பாடுகேன்' என்றார். பெருமானோ, `முன்பு சபையோர் அறிய என்னைப் பித்தன் என்றாய், நான் பித்தன்தான். நீ என்னைப் பித்தன் என்றே பாடுக' என்றருளினார். ஆரூரர் உடன்,

பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா

எத்தால்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை

வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர்அருட் டுறையுள்

அத்தாவுனக் காளாய்இனி அல்லேனென லாமே. (தி.7 ப.1 பா.1)

என்று பாடியருளினார். பித்தன் என்ற சொல்லுக்குப் பெருங்கருணை யாளன் என்பது பொருள். "பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு" என்ற பழமொழியாலும் இதனை நன்குணரலாம்.

கயிலையில் நின்றும் பிரியும்போது, ஆலாலசுந்தரர் கேட்ட வரம் யாது? தான் மையல் மானுடமாய் மயங்கும்போது பெருமானே அடியேனைத் தடுத்தாட்கொள்ளவேண்டும் என்பதே.

அதனைச் சுந்தரர் மறந்து, வாதம் பேசினார். பெருங்கருணை யாளனாகிய சிவபெருமான் அவருக்கே உள்ள பெருங்கருணையால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே, கருணையினால் சொன்னபடியே வந்து ஆண்டுகொண்டார்.

மேலும், பித்தனோ மறையோன் என்றவர் சுந்தரர். அது திரு வருள் வழியே வந்தது. அதனால்தான் என்ன சொல்லிப் பாடுவேன் என்ற சுந்தரருக்கு, முன்பே நம்மைப் பித்தன் என்றனை, அதுவே பொருத்தமான சொல், அதையே முதலாக வைத்துப் பாடுக, என்றார்.

திருவருள் நம்மை எப்படியெல்லாம் ஆட்கொள்கிறது என்பதையும் அவனன்றி நாமாக ஒன்றும் செய்ய இயலாது என்பதையும் புலப்படுத்துகிறதல்லவா இந்த நிகழச்சி.

பாடலின் பொருளைக் காண்போம். பித்தா என்றவர் கருணை யாளன் என்பதற்கு ஏற்ப, அடுத்துப் பிறைசூடி என்றார். குற்றம் செய்த பிறைச் சந்திரனைக் கண்டித்து, உயிர் போகாமல் வளரவும் தேயவும் செய்த கருணையை எடுத்துக்காட்டாகக் கூறினார். பெருமானே என்றும் அருளை ஆள்பவனே என்றும் வியந்து, முன்பு வழக்குப் பேசி, இப்போது இடையறாது நினைக்கின்றேன். காரணம் தேவரீர் முன்பு பொதுவாகக் கவனித்த பெருமானே, இப்போது சிறப்பாகக் கவனித்து என்னை அடிமைகொண்டு, என் சித்தத்தே தன்னை வைத்து அருளினீர். இதனை, மனத்து உன்னை வைத்தாய் என்ற சொற்களால் குறிப்பிடுகின்றார். பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது திருவெண்ணெய் நல்லூர். அடுத்து அதனைக் குறிப்பிட்டார். அதில் உள்ள கோயிலே அருட்துறை என்னும் ஆலயம். அப்பெருமானுக்கு ஆளாயினேன். இனி அல்லேன் எனல் ஆகுமோ? ஆகாது என்று கனிந்து உருகுகிறார்.

புனித நந்தவனங்கள் பணிந்தார்:

அவநெறியில் செல்லாமே தடுத்தாண்டாய். அடியேற்குத் தவ நெறி தந்தருள் என்று திருத்துறையூர்ப் பெருமானைப் பணிந்து வேண் டினார்.

உழவாரப் படையாளி கைத்தொண்டு செய்து பெருமையுற்ற திருவதிகைப் பதியை மிதிக்க அஞ்சி, அருகிலுள்ள சித்தவட மடத்தில் இரவு தங்கிப் பள்ளி கொண்டார். அதிகைப் பெருமான் வயோதிகராய் அவர்முடிமேல் அடி வைத்தார். பெரியாரை மதித்தமையினால் பெரு மானின் திருவடித் தீட்சை பெற்றார்.

செங்கணவன் வழிபட்ட திருமாணிகுழி பணிந்தார். வேதஒலி கீதஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார்.

வன்னி கொன்றைவழை சண்பகம் ஆரம்

மலர்ப்ப லாசொடு செருந்திமந் தாரம்

கன்னி காரங்குர வங்கமழ் புன்னை

கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்

துன்னு சாதிமரு மாலதி மௌவல்

துதைந்த நந்திகர வீரம் மிடைந்த

பன்ம லர்ப்புனித நந்த வனங்கள்

பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். (தி.12 சரு.1-5 பா.94))

நந்தவனத்தில் உள்ள நறுமலர்ச் செடிகள், கொடிகள், மணமலர் தரும் மரங்கள் தாமரை, குவளை முதலிய நீர்ப்பூக்கள் முதலிய யாவும் ஓரறிவுயிர்கள்தாம். மற்ற மரம் செடி கொடிகளினும் இவை சிறந்தவை என்னெனில்? இவற்றின் மலர்களையும், வில்வம் முதலிய இலை களையும் இறைவன் முடி முதல் அடி வரை சார்த்தப்படும் பெருமை யுடையன. எனவே மரம் செடி கொடிகளினும் சிறந்தனவாம். இது பற்றியே சுந்தரர் நந்தவனங்களைப் பணிந்தார் என்பது சிவக்கவி மணியாரின் குறிப்பு.

ஒன்றி இருந்து நினைமின்கள்:

"ஒன்றி இருந்து நினைமின்கள்" (தி.4 ப.81 பா.2) என்று அப்பர் பாடினார். ஒன்றியிருந்து வழிபடுவது எப்படி என்பதைச் சுந்தரர் நமக்கு வழிபட்டுக் காட்டினார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி, என்ற ஐந்தும் பொறிகள் எனப் பெயர் பெறும். அவற்றின் வாயிலாகத் தோன்றும் உணர்வை - அறிவை - புலன் என்று பேசப்படும். ஐந்தின் வாயிலாக வெளிப்படும் உணர்வுகளை ஒன்றுபடுத்துவதே ஒருமைப்பாடு என்று சொல்லப் பெறும். கண்ணால் காணும் அறிவையும், காதால் கேட்டல் அறிவை யும், மூக்கால் முகர்தல் அறிவையும், நாக்கால் சுவை உணர்வையும், வாக்கால் பேச்சறிவையும் உயிர்பெறுகிறது. இவ் அனைத்தும் தனித்தனியாகச் செயல்படுமானால் உயிர்க்கு இவற்றால் பயன் இன்றிப் போம்.

ஓர் அறிவு செயல்படும்போது மற்றவை செயல்படாது ஒத்து ழைத்தால்தான் குறித்த பயனை உயிர் அடைய முடியும். ஐந்தும் ஏக காலத்தில் செயல்பட்டால் குறித்த பயனை உயிர் அடைய முடியாது போய்விடும்.

உதாரணத்திற்குக் கீரைப் பாத்திகளை எண்ணிப் பார்ப்போம். கறிகாய்த் தோட்டத்தில் கீரைப் பாத்திகள் ஐந்து உள்ளன என்று கொள் வோம். ஏக காலத்தில் ஐந்து மடைகளையும் திறந்து வைத்துத் தண்ணீ ரைப் பாய்ச்சினால் ஒன்றிலும் சரியாகப் பாயாது. நான்கு மடைகளை அடைத்து ஒவ்வொரு மடையாகப் பாய்ச்சினால் விரைவாகவும் நிறைவாகவும் நீர் பாய்ச்சிப் பயன்பெறலாம்.

இதைப்போலவே ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள, மற்ற நான்கு பொறிகளும் செயல்படாதிருக்க வேண்டும்.

அந்தக் கரணங்களாகிய மனம் புத்தி, சித்தம், அகங்காரம் எனும் நான்கில், சித்தம் செயல்பட, மற்ற மூன்று கரணங்களும் செயல்படாது அடங்கி இருக்கவேண்டும்.

அத்துடன் குணம் மூன்றில், ரஜோ குணமும் தமோ குணமும் செயல்படாமல் சத்வ குணம் மேம்பட்டிருக்க வேண்டும்.

அப்படி வழிபடுவதே ஒன்றி இருந்து வழிபடுவதாகும். இதுவே சுந்தரர் நடராசப்பெருமானை வழிபட்ட நிலைமை. அப்பாடல் காண்க.

ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள

அளப்பரும் கரணங்கள் நான்கும்

சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்

திருந்துசாத் துவிகமே ஆக

இந்துவாழ் சடையான் ஆடும்

ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்

வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து

மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். (தி.12 சரு.1-5 பா.106)

இது அநுபவப் பயனாம். இதனையே தருமை ஆதீனம் நான் காவது குருமூர்த்திகள் குமரகுருபரரை வினாவினார்கள். அநுபவப் பயன்கூற இயலாமல், சீடரானார் என்பதை நோக்குக.

ஆரூரில் நம்பால் வருக:

ஆடலரசர் அசரீரியாக `ஆரூரில் நம்பால் வருக' என்று அருளினார். அதுகேட்ட நம்பிஆரூரர், கொள்ளிடம் கடந்து சீகாழி யைக் காலால் கடக்க அஞ்சி, ஊரையே வலமாக வந்து காழிநாதரின் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்.

ஆரூர்த் தியாகேசர், `நம் ஆரூரன் நாம் அழைக்க வருகின்றான். அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர்' என அருள் புரிந்தார். நம்பி ஆரூரரோ, எளியவனாகிய என்னையும், ஆரூர்ப் பெருமான் ஆள்வரோ கேளீர் என்ற பொருளுடைய பதிகம் (தி.7 ப.73 பா.1) பாடிப் பரவி, வீதி வலம் வந்து, பூங்கோயிலில் புகுந்து பெருமானைத் தரிசித்தார். அங்குத் தங்கியிருக்கும் நாளில்தான் பரவையார் திருமணம், பெருமான் அருளால் நிறைவேறியது. மணக்கோலத்துடன் ஆரூரில் தங்கி, பெருமானை நாளும் வழிபட்டு வந்தார்.

திருத்தொண்டத் தொகை அருளினார்:

நம்பி ஆரூரரைக் குருவாக, நண்பராகக் கொண்டவர்கள் நாயன் மார்களுள் மூவரைக் காணலாம்.

பெருமிழலைக்குறும்ப நாயனார் ஒருவர். இவர் சுந்தரரைக் காணாமலேயே குருவாகக் கொண்டவர். யோக முயற்சியாலே, ஆரூரர் நாளை கயிலை செல்கிறார் என்பதை யோக நிலையில் உணர்ந்து, முதல் நாளே, "கண்ணிற் கரிய மணிகழிய வாழ்வார் போல வாழேன் என்று, எண்ணிச் சிவன்தாள் இன்றேசென் றடைவன் யோகத்தால்" (தி.12 பு,23 பா.9) எனக் கயிலைப் பொருப்பர் அடி அடைந்தார்.

யோகநெறி விளக்க வந்த சுந்தரரைக் காணாமலே அவரைக் குருவாகக் கொண்டு யோக நெறிப் பதம் பெற்றார். மேலும் திரு வாரூரும் யோக நெறி விளக்கும் தலம் என்பதும் உணர்தல் வேண்டும். "உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால் உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி" (தி.6 ப.25 பா.1) என்று அப்பர் பெருமானும், "ஆதாரத்து ஒளியானே ஆரூரில் பெருமாளே" (நீ தான் எத்தனை என்னும் திருப்புகழில்) என்று அருணகிரிநாதரும் அருளியமை கண்டு உணரத்தக்கது.