08 இரண்டாம் பகுதியின்

திருக்கோவையார் உரைமாட்சி

பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர்

திருக்கோவையார் உரையாசிரியர் பற்றிய

பல கருத்துக்கள்:

எட்டாந் திருமுறையின் ஒருகூறாய் விளங்கும் திருக் கோவையார், சைவ சமயாசாரியராகிய மணிவாசக சுவாமிகளால் அருளிச் செய்யப்பட்டதாகும். அஃது உரையோடு ஆறுமுக நாவலர் அவர்களால் முதன் முதல் அச்சில் பதிப்பிக்கப்பட்டது. அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே அஃது ஐந்து பதிப்புக்களைப் பெற்றுவிட்டது. அவற்றில் அவ்வுரையாசிரியர் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. நூலின் இரண்டாம் பக்கத்தில் `இவ்வுரையைப் பிற்கால அறிஞர் பேராசிரியரது என்பர். முற்காலத்து அறிஞர் பலர் நச்சினார்க்கினியரது என்றனர். தஞ்சைவாணன் கோவை உரையாசிரியர் சேனாவரையரது என்றனர்', என்ற குறிப்பு அச்சிடப்பட்டுள்ளது.

திருக்கோவையார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அல்லர்:

உரையொடு கூடிய திருக்கோவையார் நாவலர் பதிப்பைப் பாராட்டிச் சிறப்புப் பாயிரம் வழங்கிய தாண்டவராய சுவாமிகள், மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தியாகராஜச் செட்டியார், சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார், முருகையப்பிள்ளை ஆகிய அனைவரும் உரையாசிரியரை நச்சினார்க்கினியரென்றே நவின்றுள் ளனர்.

நச்சினார்க்கினியர் வினையெச்சமே வினைமுற்றாகும் என்னும் கருத்தினர். `வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய' என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார எச்சவியல் 61ஆம் நூற்பா உரையில், `பெயர்த்தனென் முயங்கயான் - இது வினையெச்சத் தன்மைத் தெரிநிலைமுற்று. வந்தனை சென்மோ - இது வினையெச்ச முன்னிலைத்தெரிநிலைமுற்று. முகந்தனர் கொடுப்ப, மோயினள் உயிர்த்த காலை - இவை வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலைமுற்று' என்று குறிப்பிடுவர்.

`வரிசேர் தடங்கண்ணி' என்று தொடங்கும் திருக்கோவையார் 83ஆம் பாடல் உரையில், `தளிரன்னமேனியன், ஈர்ந்தழையன், இத்தேம்புனம்பிரியான்' என்புழி வினைமுற்றுக்களே வினையெச்சங் களாக வந்துள்ளன என்ற கருத்தில், `மேனியன் தழையன் என்பன வினையெச்சங்கள்' என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

`குறப்பாவை' என்று தொடங்கும் 205ஆம் பாடலில் `நறப்பாடலம் புனைவார் நினைவார்' என்புழிப் `புனைவார் என்னும் முற்றுச்சொல் செயவென் எச்சமாகத் திரித்து உரைக்கப்பட்டது' என விளக்கந்தரப்பட்டுள்ளது.

இவற்றால் இவ்வுரையாசிரியர் வினைமுற்றே வினையெச்ச மாகும் என்னும் கருத்துடையர் என்பது பெறப்படுகிறது. ஆகவே, எச்சமே முற்றாகும் என்ற நச்சினார்க்கினியரினும், முற்றே எச்சமாகும் என்ற கருத்துடைய இவ்வுரையாசிரியர் வேறாவர் என்பது தெளிவு.

திருக்கோவையார் உரையாசிரியர் சேனாவரையர் ஆகார்:

`எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி, பல்வழி நுதலிய நிலைத்தாகும்மே' என்னும் தொல்காப்பியச் சொல்லதிகாரப் பெயரியல் 32ஆம் சூத்திரத்திற்குச் சேனாவரையர், `எல்லாம் என்னும் பெயர் இருதிணைக் கண்ணும் பன்மை குறித்து வரும்' என்று பொருள்கூறி, `அஃது எஞ்சாப் பொருட்டாய் வருவதோர் உரிச்சொல் என்பாருமுளர்' என்றும் குறிப்பிட்டுள்ளார். எல்லாம் என்பது பெயர்ச் சொல்லேயன்றி உரிச்சொல் அன்று என்பது சேனாவரையர் கருத்தாகும்.

திருக்கோவையார் 351ஆம் பாடலில் `வெஞ்சுரம் சென்றதெல்லாம்....... பூவணைமேல் அணையாமுன் துவளுற்றதே' என்ற தொடரின் உரை விளக்கத்தில், `எல்லாம் என்பது முழுதும் என்னும் பொருள்பட நின்றதோர் உரிச்சொல். பன்மை ஒருமை மயக்கம் என்பாரு முளர்' என்று குறிப்பிடும் உரையாசிரியர் எல்லாம் என்பது உரிச்சொல் என்னும் கருத்தினர். எல்லாம் என்பது இருதிணைக் கண்ணும் பன்மை குறித்துவரும் பெயர் என்ற சேனாவரையர் கொள்கையை மறுக்காமல் `எல்லாம் துவளுற்றதே' என்ற தொடர், `பன்மை ஒருமை மயக்கம் என்பாருமுளர்' எனப் பிறன்கோட் கூறலாகத் தழுவிக் கொண்டுள்ளனர்.

தொல்காப்பியச் சொல்லதிகார 114ஆம் நூற்பாவுரையுள் சேனாவரையர் அன்மொழித்தொகை எச்சவியலுட் கூறப்படினும், அஃது ஆகுபெயராதல் உடைமை பற்றி வேற்றுமை மயங்கியலில் கூறப்பட்டது என ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்றே என்ற தமது கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

திருக்கோவையார் உரையாசிரியரோ 35 ஆம் பாடலுரையில் `அரன் அம்பலத்தின் இயல்' - ஆறாம் வேற்றுமைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்றும், 131ஆம் பாடலுரையில் `பொன்னங் கழல் என்பதற்குப் பொன்னானியன்ற கழலையுடையது என அன்மொழித்தொகைப்பட உரைப்பினும் அமையும்' என்றும், 134 ஆம் பாடலுரையில் `எற்றுந்திரை என்பது சினையாகிய தன் பொருட்கு ஏற்ற அடையடுத்து நின்றதோர் ஆகுபெயர்' என்றும் 151ஆம் பாடலுரையில் `குரைகழல் அன்மொழித்தொகை' எனவும் குறிப்பிடலின் இவ்வாசிரியர் ஆகுபெயர் வேறு, அன்மொழித் தொகை வேறு என்னும் கருத்தினர் என்பது இனிது விளங்கும்.

இவ்வாறெல்லாம் சேனாவரையரொடு மாறுபடும் கருத் துக்களையுடைய இவ்வுரையாசிரியர் சேனாவரையர் ஆதல் இல்லை.

திருக்கோவையார் உரையாசிரியர் பேராசிரியர் ஆவர்:

ஆறுமுக நாவலர் திருக்கோவையாரை உரையோடு பதிப்பித்தபின்னர்ச் சில்லாண்டுகள் கழித்துப் பிரயோக விவேகம் என்ற நூலை அதன் உரையோடு பதிப்பித்தார். அவ்வுரையில் திருக்கோவையாரின் உரையாசிரியர் பெயர் பேராசிரியர் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரயோக விவேகம் 14 ஆம் காரிகை உரையில் `ஆலத்தினால் அமிர்தாக்கிய கோன் என அநபிகித கன்மம் திருதியையில் வந்தது. ஆலத்தினால் என்னும் திருக்கோவையாருள் (61) பேராசிரியர் சொற் சோதனை செய்து காட்டிய பாலால் தயிராக்கினான் என்பதும் அது,' என்றும், 24ஆம் காரிகை உரையில் `திருக்கோவையாரில் பாயின மேகலை(282)யைப் பெயரெச்சம் ஒரு சொல்லாகலின் ஆகுபெயர் என்பர் பேராசிரியர்' என்றும், 36ஆம் காரிகை உரையில் `கொள்ளப்படாது மறப்பது அறிவில் என் கூற்றுக்களே என்றும் திருக்கோவையாரில் (87) பேராசிரியர் முதனிலையைப் பிரித்து எழுவாயாக்கி முடித்தலும் காண்க' என்றும், 39 ஆம் காரிகை உரையில் `கற்றில கண்டு அன்னம்' (பா.97) என்பதில் பேராசிரியர் கண்டு என்பது கற்றலோடு முடியும் என்பர்' என்றும், `தொழுதெழுவார் வினை வளம் நீறெழ' என்னும் திருக்கோவையாரில் (118) பேராசிரியர் தொழா நின்று எழுவார் எனத் துணைவினையாய் உரைப்பர்' என்றும், கூறியிருக்கும் செய்திகள் யாவும் ஆறுமுக நாவலர் பதிப்பித்துள்ள திருக்கோவையார் உரையில் காணப் படுதலின் அவர் பதிப்பித்த திருக்கோவையார் உரை பேராசிரியர் என்பவரால் இயற்றப்பட்டது என்பது போதரும்.

திருக்கோவையார் பேராசிரியர்

தொல்காப்பியப் பேராசிரியரினும் வேறானவர்:

திருக்கோவையார் உரையாசிரியர் அலங்காரங்களை 157, 161, 162, 185, 195, 217, 233, 234, 289 ஆகிய பாடல்களின் உரையில் குறிப்பிடுதலின், உவமையை அணி என்று கூறுவதை மறுக்கும் தொல்காப்பிய உரையாசிரியர் ஆகிய பேராசிரியரினும் இவர் வேறாதல் தெளிவு.

பழையவுரை:

பேராசிரியர் குறிப்பிடும் பாட வேறுபாடுகளிலும், சொற்றொடர்க்குப் பிறன்கோட் கூறலாய்க் குறிப்பிடும் உரைகளிலும் சிலவற்றைக் கொண்டதாய், கொளுக்களுக்கும் பாடல்களுக்கும் பொழிப்புரையாக அமைந்த உரை ஒன்று தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகார வரலாறு என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளதாய் இந்நூலின் கிளவிக் கொத்து எனப்படும் அதிகாரங்கள் பற்றிய நூற்பா அப்பதிப்பில் இல்லை. இயற்கைப் புணர்ச்சி முதலிய 25 கிளவிக்கொத்துகளிலுமுள்ள கிளவிகளை எடுத்தோதும் நூற்பாக்கள் யாவும் அப்பதிப்பில் இடம் பெற்றுள்ளன.

பேராசிரியர் பிறன்கோட் கூறலாகக் கூறும் செய்திகள் சிலவற்றைத் தன்பால் கொண்டுள்ள அவ்வுரை பேராசிரியர் உரைக்கும் முற்பட்டது ஆகும். அதன்கண் கிளவிக்கொத்துக்கள் பற்றிய நூற்பாக்கள் காணப்படுதலானும், கொளுக்களுக்கு உரை வரையப்பட்டிருத்தலானும், கொளுக்களும், கிளவிக்கொத்து நூற்பாக்களும் பேராசிரியருக்கு முற்பட்ட சான்றோரால் ஆக்கப்பட்டன ஆதல் வேண்டும்.

நூற்பாக்களுக்கு உரையும், தலைப்புக்களாகிய கிளவிகளுக்கு விரிவான விளக்கங்களும் வரைந்தமையே பேராசிரியருடைய பணியாக அமைந்தது. புறப்பொருளின் உட்பிரிவுகளைத் துறை எனவும், அகப் பொருளின் உட்பிரிவுகளைக் கிளவி எனவும் கூறலே பழைய மரபு.

அகப்பொருட்பாடல்கள் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலியோருள் ஒருவர் கூற்றாகவே அமைதலின் அகப்பொருளின் உட்பிரிவைத் துறை என்னாது கிளவி என்பதே நேரிய மரபாகும். ஆயினும், இன்னார் கூற்று என்னாது, `இற்செறிவித்தது' (133) என்றும், `நகர் காவலின் மிகுகழி காதல்' (258) என்றும், `வார்புனலூரன் மகிழ்வுற்றது' (365) என்றும், `கலவிகருதிப் புலவி எய்தியது' (366) என்றும், `மலர்நெடுங்கண்ணி புலவியுற்றது' (367) என்றும், `தாரவன், தன்மை கண்டு பின்னுந்தளர்ந்தது' (397) என்றும் வருவனவற்றைத் துறைகூறியனவாகக் குறிப்பிடுவர் உரையாசிரியர். கிளவிகளுக்கும் துறைகளுக்கும் விளக்கம் கூறும் இயல்பில் பேராசிரியருடைய புலமை சிறப்பாக வெளிப்படுகிறது.

சிறந்த உரையாசிரியர்:

நானூறு பாடல்களைக் கொண்ட திருக்கோவையாருக்கு உரை எழுதியதன் வாயிலாகப் பேராசிரியர் தம்முடைய பழுத்த இலக்கண, இலக்கிய சாத்திரப் புலமையை வெளிப்படுத்தியுள்ளார். சிறந்த உரையாசிரியரிடம் நாம் காண விழையும் நலன்கள் யாவும் இவர் உரையில் மிளிர்கின்றன.

பாடவேறுபாடுகள்:

பழங்காலத்தில் பெரும்பான்மையவாய நூல்களைத் தமிழ்ச் சான்றோர் மனப்பாடம் செய்துகொண்டு மற்றவருக்குக் கற்பித்து வந்தனர். பாடல்களின் யாப்பிற்கும் பொருளுக்கும் ஊறு வாராத வகையில், மனப்பாடம் செய்யும் போது பாடங்களில் சிற்சில வேறுபாடுகள் தோன்றுவது இயல்பே. ஒரு நூல் பலராலும் பயிலப்பட்டுப் பிரபலமாக இருந்தால், அந்நூலில் அதிகப் பாடவேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை.

கோவைக்கு உரிய இலக்கணம் செவ்விதின் அமையப்பெற்று, நானூறு என்ற வரையறை உடைய பாடல்களான் இயன்ற திருக்கோவையாரின் சொற்சுவை பொருட் சுவைகளில் ஈடுபட்ட சான்றவர் நாவில் பலகாலும் பயின்ற பாடல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடவேறுபாடுகள் பேராசிரியரால் குறிப்பிடப்

பட்டுள்ளன. அப்பாட வேறுபாடுகள் தள்ளத்தக்கன அல்ல; கொள்ளத்தக்கனவே என்பதே பேராசிரியரின் கருத்தாகும். அவற்றுள் மிக எளியவாக உள்ள ஒரு சிலவற்றை விடுத்து எஞ்சிய வேறுபாடுகளுக்கெல்லாம் பொருத்தமான உரையும் அவரால் வரையப்பட்டுள்ளது.

மேற்கோள் ஆட்சி:

திருக்கோவையார் தோன்றிய காலத்தில் தொல்காப்பியமும், இறையனார் அகப்பொருளும் அதன் உரையுமே தமிழகத்தில் பயிலப்பட்டன. ஆகவே, பேராசிரியர் தொல்காப்பியத்தையும், இறையனார் அகப்பொருளையும் மேற்கோள் காட்டியும், இறையனார் அகப்பொருள் உரைச்செய்திகளைக் கிளவித் தலைப்புக்களின் விளக்கத்திலும், கிளவித்தொகைகளின் நூற் பாக்களின் விளக்கத்திலும் பாடல்களின் விளக்கவுரைகளிலும் இடைமிடைந்தும் தம் உரையை வரைந்துள்ளமையைக் காண்கின்றோம். தொல்காப்பிய நூற்பாக்கள் 19உம், இறையனார் அகப்பொருள் நூற்பாக்கள் 8உம் இன்று பெயர் அறியமுடியாத அகப்பொருள் நூல்களின் நூற்பாக்கள் 6உம் திருக்கோவையார் உரையில் காணப்படுகின்றன. விளங்கா மேற்கோள் நூற்பாக்கள் இந்நூல் 5ஆம் பாடல் உரையில் ஒன்றும், 70ஆம் பாடலுரையில் மூன்றும், 109ஆம் பாடலுரையில் ஒன்றும், 252ஆம் பாடலுரையில் ஒன்றுமாக எடுத்தாளப்பட்டுள்ளன. சொற்பொருள் விளக்கத்திற்காகக் கலித்தொகை, குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், நாலடியார், திருக்குறுந்தொகை, தேவாரம், திருவாசகம், திவாகரம் என்ற நூல்களின் பாடலடிகள் பேராசிரியரால் ஆளப்பட்டுள்ளன.

பாடல்களுக்கு உரை:

பேராசிரியர் ஒவ்வொரு கிளவியையும் முதற்கண் விளக்கி, பின் அக்கிளவிக்குரிய பாடலுக்குப் பதவுரை வரைவர்; விளக்கவுரையில் சில சொற்றொடர்களுக்கு வேறுவகையாக உரை கூறப்படுமாயின் அவ்வுரையையும் வழங்குவர்; தமக்கு உடன்பாடு இன்றெனினும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் வேறு உரைகளைப் பிறன்கோட் கூறலாகக் கூறவும் செய்வர்; பாட வேறுபாடுகளைக் காட்டி, அவற்றிற்கு இயைபான உரையையும் தருவர்; எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் பற்றிய செய்திகளைச் சுட்டுவர். ஒவ்வொரு பாடலிலும் காணப்படும் மெய்ப்பாடும், அப்பாடலால் அதனிடத்துப் பயிலும் அகப்பொருள் மக்களுக்குக் கிட்டக்கூடிய பயனும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பாடல்களில் அமைந்துள்ள இறைச்சி, உள்ளுறை, ஏனை உவமம், ஏனைய அணிவகைகள் ஆகியவையும் இவ்வுரையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்:

ஒரு சொற்றொடர்க்குப் பதவுரையில் ஒரு பொருளும், விளக்கவுரையில் மற்றொரு பொருளும் வரைந்து இரு பொருளுக்கும் ஏற்றவாறு சொற்றொடர் அமைந்திருத்தலைப் பேராசிரியர் தம்முரையில் பல இடங்களிலும் சுட்டிச் செல்வர். 23 ஆம் பாடலில் மாணிக்கக்கூத்தன் என்ற தொடருக்குப் பதவுரையில் மாணிக்கம் போலும் கூத்தன் என்று உரைகூறி, விளக்கவுரையில் மாணிக்கத்தைக் கூத்தனுக்கு உவமையாக்காது கூத்தினுக்கு உவமையாக உரைப்பினும் அமையும் என்று வேறுபொருள்கூறியும், மென்தோள் கரும்பினை என்ற தொடருக்குப் பதவுரையில் மெல்லிய தோளையுடைய கரும்பைப் போல்வாளை என்று உரைகூறி விளக்கவுரையில் மெல்லிய தோளில் எழுதிய கரும்பை உடையாளை எனினும் அமையும் என்று வேறு பொருள் கூறியும் உள்ளமை போன்ற இடங்கள் பல.

பிறன்கோட் கூறல்:

ஒரு சொற்றொடர்க்குத் தாம் வரைந்த பொருளின் வேறாக ஒரு பொருள் வழங்குமாயின் அதனை என்பாருமுளர் என்னும் பிறன்கோட் கூறலாகத் தழுவிக்கோடலும் இவ்வுரையின் இயல்பாகும்.

32ஆம் பாடலில் `வாய் பவளம் துடிக்கின்றவா' என்ற தொடருக்கு வாய்பவளம் துடித்தாற்போலத் துடிக்கின்ற ஆறு என் என்று உரை கூறி, பவளம் போலப்பாடஞ் செய்கின்றவாறென் என்று உரைப்பாரும் உளர் என்று மற்றோருரையைத் தழுவுவது போன்று பல இடங்களில் காணலாம்.

பாடவேறுபாடு:

பாடல்களில் காணப்படும் வேறுபட்ட பாடங்களைச் சுட்டிக் காட்டி அப்பாடங்களுக்கு ஏற்பப் பொருள்கொள்ளுமாற்றையும் விளக்கிச்செல்லுதலை இவ்வுரையில் எங்கும் காணலாம்.

10ஆம் பாடலில் `கிளவியை என்னோ இனிக் கிள்ளையார் வாயில் கேட்கின்றதே' என்று பாடமோதி கிள்ளைபோல்வாள் வாயின் மொழியை இனிக் கேட்க வேண்டுகின்றதென்? என்று உரை கூறி, மொழி கிளிமொழியோடு ஒக்கும் என்பது போதரக் கிள்ளையார் என்றான் என்று விளக்கமும் வரைந்த உரையாசிரியர், வயின் என்பது பாடமாயின் வாயின் என்பது குறுகி நின்றதாக வுரைக்க; வயின் இடம் எனினும் அமையும் என்று பாட வேறுபாட்டைச் சுட்டி அதற்குப் பொருள் காணுமாற்றையும் கூறிச்செல்லுதல் காண்க.

எழுத்து, சொல் இலக்கணச் செய்திகள்:

11ஆம் பாடலில் கூம்பலங்கைத்தலத்தன்பர் என்பதில் அல்லும் அம்மும் சாரியைகளாகக், கூம்பு கைத்தலத் தன்பர் என்று கொண்டு பொருளுரைத்ததும், தேம்பலஞ்சிற்றிடை என்பதிலும் அவற்றைச் சாரியைகளாகக் கொண்டு தேம்பு சிற்றிடையாகக் கொண்டு பொருள் கூறியுள்ளதும் போன்றன எழுத்திலக்கணச் செய்திகள். 235ஆம் பாடலில் `நலச்சேட்டைக் குலக்கொடியே' என்ற ககர ஒற்று இடையே மிக்க தொடருக்கு நல்ல சேட்டையையுடைய சீரிய கொடியே என்றும், ககர ஒற்று இடையே மிகாது நின்ற `நலச்சேட்டை குலக்கொடியே' என்ற தொடருக்குச் சேட்டையாகிய தெய்வத்தின் நல்ல கொடியே என்றும் பொருள் கூறுதல் போன்ற சொல்லிலக்கணச் செய்திகளை இவ்வுரையில் நிரம்பக் காணலாம்.

பொருளிலக்கணச் செய்திகள்:

82ஆம் பாடலில் "மாதே புனத்திடை வாளா வருவர்வந் தியாதுஞ் சொல்லார், யாதே செயத்தக் கதுமது வார்குழலேந் திழையே" என்ற தொடரில் முதலில் மாதே என்று விளித்துப் பின்னும் ஏந்திழையே என்று அழைத்தமைக்கு அமைதி கூறுமுகத்தான், முகம் புகுகின்றாள் ஆதலின் மாதே என்று அழைத்த பின்னரும் ஏந்திழையே என்றாள் என்று தலைவியின் நினைவு அறியாநிற்கும் தோழியின் நுண்மதியை யுணர்த்துகின்றார் உரையாசிரியர்.

4ஆம் பாடல் உரை இறுதியில் கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவாய் எழுதிணையினுள்ளும் கைக்கிளையும் பெருந்திணையும் அகத்தைச் சார்ந்த புறமாயினும் கிளவிக்கோவையின் எடுத்துக் கோடற்கண் காட்சி முதலாயின சொல்லுதல் வனப்புடைமைமை நோக்கிக் கைக்கிளை தழீஇயினார். பெருந்திணை தழுவுதல் சிறப்பின்மையின் நீக்கினார் என்றும், 70ஆம் பாடலுரையில் இவை நான்கும் பெருந்திணைப் பாற்படும். என்னை, அகத் தமிழ்ச் சிதைவாகலான். என்னை, "கைக்கிளை பெருந்திணை அகப்புறம் ஆகும்." இவற்றுள் கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். என்னை, "ஒப்பில் கூட்டமும் மூத்தோர் முயக்கமும், செப்பிய அகத் தமிழ்ச் சிதைவும் பெருந்திணை" என்றும் கூறியுள்ளவை அகப்புறச் செய்திகள் ஆகும்.

விளக்க உரையில் குறிப்பிடும் நயங்கள்:

பேராசிரியர் நயமாக உரை எழுதும் திறத்தை ஏறத்தாழ 70 பாடல்களில் கண்டு சுவைக்கலாம்.

5 ஆம் பாடலில் `அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன்' என்ற தொடருக்கு எனக்கு ஆபரணமும், அமிழ்தும் என் உயிரும் ஆயவன் என்று பொருள் கூறி, அணி என்றார் அழகு செய்தலான். அமிழ்தென்றார் கழிபெருஞ் சுவையோடு உறுதிபயத்த லுடைமையான். ஆவியென்றார் காதலிக்கப்படும் பொருள்கள் எல்லாவற்றினுஞ் சிறந்தமையான். ஈறிலின்பம் பயக்கும் இறைவனோடு சார்த்த அணியும் அமிழ்தும் ஆவியும் இறப்ப இழிந்தனவே ஆயினும், `பொருளது புரைவே புணர்ப்போன் குறிப்பின், மருளற வரூஉ மரபிற் றென்ப' என்பதனான் ஈண்டுச் சொல்வானது கருத்துவகையானும், உலகத்துப் பொருள்களுள் அவற்றினூங்கு மிக்கன வின்மையானும் உயர்ந்தனவாய் உவமை ஆயின என்று விளக்கியுள்ளமை அவருடைய நயவுரைப் பகுதிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

சைவநூற்பயிற்சி:

சைவ சமயாசாரியராகிய மணிவாசகப் பெருமானால் அருளப்பட்ட இந்நூற்பாடல்களில் சைவ சமயக்கருத்துக்கள் நிறைந் துள்ளன. உரையாசிரியர் அவற்றை விளக்கிச் செல்லுதலோடு ஏற்ற இடங்களில் தேவார திருவாசக மேற்கோள்களைப் பெய்து அவற்றிற்கு வலி சேர்க்கின்றார்.

112ஆம் பாடலில் `தன் ஒரு பாலவள் அத்தனாம் மகனாம் தில்லையான்' என்பதற்குத் தனதொருபாகத்துளளாகிய அவட்குத் தந்தையுமாய் மகனுமாம் தில்லையான் என்று பொருள் கூறி, சிவதத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார் என்று அதற்கு விளக்கம் தந்து அதனை நிலை நிறுத்த `இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்' என்ற தி.8 திருவாசகத் திருப்பொற்சுண்ணப் பகுதி 13ஆம் பாடலடியை மேற்கோளாக எடுத்தாள்கின்றார்.

இருவேறு உரைகள்:

பேராசிரியர் பதவுரையில் ஒரு பொருளையும், ஆழ்ந்து நோக்கத் தோன்றும் வேறும் ஒரு பொருளை விளக்கவுரையிலுமாகச் சில பாடல்களுக்கு இருவேறு உரைகளை வரையும் இயல்பினர் ஆவர்.

சான்றாக 158ஆம் பாடலில் ஒலியாநின்ற அருவியால் பெருகுகின்ற சுனைப்புனற்கண் அன்றியான் வீழ்ந்து கெடப்புகப் பற்றிஎடுத்துக் கரைக்கண் உய்த்த பெரியோர்க்குச் சிறியேனாகிய யான் சொல்லுவதோர் மாற்றமறியேன் என்று பதவுரையிற் கூறி, பிறவிக் குட்டத்தியான் விழுந்து கெடப்புகத் தாமே வந்து பிடித்தெடுத்து அதனினின்றும் வாங்கிய பேருதவியார்க்குச் சிறியேனாகிய யான் சொல்வதறியேன் என்று வேறும் ஒரு பொருள் தோன்றியவாறு கண்டு கொள்க என்று விளக்கவுரையிற் கூறியுள்ளமை காண்க.

உரையிடை உவமை:

சொல்லும் செய்தியைத் தக்க உவமையை இடைப் பெய்து இனிது விளக்குந் திறம் இவ்வுரையில் ஆங்காங்குக் காணலாம். 149 ஆம் பாடலுரையில் எமது வாழ்பதி இவ்வொழுக்கத்தைச் சிறிது அறியுமாயின் சிந்தையாலும் நினைத்தற்கரிய துயரத்தைத் தருமாதலால், தாம் செத்து உலகாள்வார் இல்லை; அது போல இவ்வொழுக்கம் ஒழுகற்பாலீரல்லீர் என்று மறுத்துக் கூறியவாறாயிற்று என்றும், 272ஆம் பாடலுரையில் திருந்தும் கடனெறி என்பது தித்திக்கும் தேன் என்பது போல இத்தன்மைத்து என்னும் நிகழ்காலம்பட நின்றது என்றும் உவமைகளை ஆண்டுள்ளமை காண்க.

பிறருரை மறுத்தல்:

பிறருரைகளை, என்றுரைப்பாருமுளர் என்று கூறிப்பேரளவு எடுத்துக்காட்டும் இயல்பினர் இவ்வுரையாசிரியர். ஆனால், பிறருரை பொருத்தம் அற்றதாயின், தக்க காரணங்களைக் கூறி அதனை மறுத்தலும் செய்வார்.

86ஆம் பாடலுரையில், இதனைத் தோழி கூற்றாக உரைப்பாரும் உளர்; இவையிவை என்னும் அடுக்கானும், இனி `உள்ளப்படுவன உள்ளி' எனத் தலைமகளோடு புலந்து கூறுகின்றமை யானும், இவ்விரண்டு திருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தமுடைத்தென்பதறிக என்று தோழி கூற்றென்பாரை மறுத்தமை காண்க.

ஐயமகற்றல்:

கற்பார்க்கு இன்னின்ன இடங்களில் என்னென்ன ஐயங்கள் இயல்பாக எழும் என்பதனை உய்த்துணர்ந்து அவ்வவற்றைக் களையும் வண்ணம் வேண்டிய விளக்கங்களை ஆங்காங்கு வரைந்துதவும் இயல்பினர் இவ்வுரையாசிரியர்.

102ஆம் பாடலில் `மைத்தழையா நின்ற மாமிடறு' என்ற தொடரில் இயல்பாக எழும் கூறியது கூறல் என்னும் ஐயத்தை, `மா கருமை. மாமிடறு என்பது பண்புத் தொகையாய் இன்னது இது என்னும் துணையாய் நிற்றலானும், மைத்தழையா நின்ற என்பது அக்கருமையது மிகுதியை உணர்த்தி நிற்றலானும் கூறியது கூறலாகாமை அறிக' என்று கூறி அகற்றியமை காண்க.

124ஆம் பாடலில் தாரகைமுகை ஆயம், மதிக்கமலத் தலைவி என்பன அடுக்கிவரலுமை ஆகுங்கொல் என்னும் ஐயத்தை, முகையொடு தாரகைக்கு ஒத்த பண்பு வெண்மையும் வடிவும் பண்பும். தாரகையோடாயத்தார்க்கு ஒத்த பண்பு பன்மையும் ஒன்றற்குச் சுற்றமாய் அதனிற்றாழ்ந்து நிற்றலும். கமலத்தோடு மதிக்கு ஒத்த பண்பு வெண்மையும் வடிவும் பொலிவும். மதியோடு தலைமகட்கு ஒத்த பண்பு, கட்கு இனிமையும் சுற்றத்திடை அதனின் மிக்குப் பொலிதலும். இவ்வாறு ஒத்த பண்பு வேறுபடுதலான் உவமைக்கு உவமை ஆகாமை அறிந்து கொள்க என்று கூறிக் களைந்தவாறு காண்க.

சொற்பொருள்:

பாடலுட் பயிலும் அரிய சொற்களுக்குப் பொருள் கூறுவதில் இவ்வுரையாசிரியரின் நுண்ணறிவு புலப்படுகிறது. சான்றாகச் சில.

படிச்சந்தம் 78 - ஒன்றன் வடிவை உடைத்தாய் அது என்றே கருதப்படும் இயல்புடையது. சிலம்பு 99 - வெற்பின் ஒரு பக்கத்து உளதாகிய சிறுகுவடு. அழைப்பு 102 - பொருள் புணரா ஓசை. குதலைமை 104 - விளங்காமை. மழலை 104 - இளஞ்சொல். கூடம் 129 - மன்றாகமரத்திரளால் செய்யப்பட்ட தேவகோட்டம். இருவி 144 - கதிர் கொய்த தட்டை. தாள் 144 - கதிர் கொய்யாத முன்னும் சொல்வதொருபெயர். இசும்பு 149 - வழுக்குதல், ஏற்றிழிவு முதலாயின குற்றம். செறு 166 - நீர் நிலை. சோத்தம் 173 - இழிந்தார் செய்யும் அஞ்சலி. செறிவு 179 - எல்லைகடவா நிலைமை. கொழுமீன் 188 - மீன்களுள் ஒரு சாதி. சுத்தி 242 - பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்பிவடிவாகத் தலையோட்டால் அமைக்கப்படுவ தொன்று. செல்வு 266 - இரு முதுகுரவரால் கொண்டாடப்படுதல். நீதி 266 - உள்ளப்பொருத்தம் உள் வழி மறாது கொடுத்தல். மாத்து 373 - தலைமகற்கு உரியளாகி நிற்றலான் உண்டாகிய வரிசை.

சொற்றொடர்ப் பொருள்:

சில சொற்றொடர்களுக்குப் பேராசிரியர் வரைந்துள்ள பொருள் நுட்பம் எண்ணியெண்ணி வியத்தற்குரியதாகும். அவற்றுள் சில.

அவயவம் கண்டு 10 - அவயவங்களின் உறுதல் முதலிய நான்கையும் கண்டு. தையல் பாங்கி 60 - புனையப்படுதலையுடைய பாங்கி. இன்புறுதோழி 66 - இருவர் காதலையும் கண்டு இன்புறும் தோழி; ஐயம் நீங்கித் தெளிதலான் இன்புறும் தோழி; தலைவி நலத்திற்கேற்ற நலத்தையுடைய தலைமகனைக் கண்டு இன்புறும் தோழி. மெய்த்தகை 231 - மெய்யாகிய கற்பு; புனையா அழகுமாம். வண்புகழ் 298 - அறத்தொடுநின்று கற்புக் காத்தலான் வந்த புகழ். ஊரனோடு இருந்து வாடியது 354 - ஊரன் குறைகளை நினைந்து அதனோடு இருந்து வாடியது.

வடசொல் முதலியன:

உரையாசிரியர் திருக்கோவையாரில் பயின்றுள்ள வடசொல், பாகதச்சொல், வடநூல் முடிவு போன்றவற்றை எடுத்துக் காட்டி யுள்ளவற்றில் கீழ்க்காண்பன சில.

தேயம் 39 - வடமொழித்திரிபு. அளிகுலம் 45 - வடமொழிமுடிபு. கண்ணன் 53 - கரியோன் என்னும் பொருளதோர் பாகதச் சிதைவு. படிச்சந்தம் 78 - பிரதிசந்தம் என்றும் வடமொழிச் சிதைவு. மணிகண்டன் 81 - வடமொழி இலக்கணத்தால் தொக்குப் பின் திரிந்து நின்றது. இராகம் 194 - வடமொழிச் சிதைவு. கித்தம் 388 - செய்யப்பட்டது என்னும் பொருளதோர் வடமொழித் திரிபு.

உவம உருபின் பொருள்படும் சொற்கள்:

போல, புரைய, ஒப்ப, மான, கடுப்ப போன்று நூல்களில் பயில வழங்கும் உவம உருபுகளே அன்றி வேறு பல சொற்களும் திருக்கோவையாரில் மணிவாசகப் பெருமானால் போலும் என்னும் பொருள் தரும் வகையில் ஆளப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் உரையாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். அவற்றுட் சில.

கார்தரு பொழில் 32 என்பதில் தரு என்பதும், அரவரு நுண்ணிடை 81 கொளு என்பதில் வரும் என்பதும், கயல்வளர் வாட்கண்ணி 117 என்பதில் வளர் என்பதும் அம்மலர் வாட்கண் நல்லாய் 153 என்பதில் வாள் என்பதும், பொன் செய்த மேனியன் 278 என்பதில் செய்த என்பதும், காந்தளும் பாந்தளைப் பாரித்து அலர்ந்தன 324 என்பதில் பாரித்து என்பதும், பால் செலும் மொழியார் 359 என்பதில் செல்லும் என்பதும் உவமப் பொருளைத் தரும் சொற்களாகும்.

ஒரு சொல் நீர:

சில சொற்றொடர்கள் பொருள் தரும் தன்மையை ஆராய்ந்து அவற்றை ஒரு சொல் நீர என்றும், சில சொற்றொடர்கள் எழுவாய், இரண்டாவது ஆகியவற்றை முடிக்கும் தன்மை கண்டு அவற்றை ஒரு சொல் நீர என்றும் இவ்வாசிரியர் குறிப்பிடுவர். வகைக்குச் சில கீழே காண்பன.

நடுங்க நுடங்கும் 31- ஒரு சொல் நீர, நடுக்கும் என்னும் பொருளன. கெடக் கொண்டது 138 - ஒரு சொல் நீர, கெடுத்தது என்பது பொருள். கெடச்செய்திடுவான் 141-ஒரு சொல் நீர, கெடுப்பான் என்பது பொருள். பொடியாய் விழ விழித்தோன் 179 - ஒரு சொல் நீர, பொடியாக்கினான் என்பது பொருள்.

நாணுதல் உரைத்தல் 95 கொளு - என்னும் சொற்கள் ஒரு சொல் நீர்மைப்பட்டு இரண்டாவதனை அமைத்தன. உய்யநின்றோன் 106 - என்னும் சொற்கள் உய்வித்தோன் என்னும் பொருளவாய், ஒரு சொல் நீர்மைப்பட்டு இரண்டாவதற்கு முடிவாயின.

தொடை மடக்கும் 274 ஒரு சொல் நீரவாய்க் குன்றவர் என்னும் எழுவாய்க்கும், கணையை என்னும் இரண்டாவதற்கும் முடிபாம். சீர்வழுத்தா 337 என்பன ஒரு சொல் நீர்மைப்பட்டு அம்பலத்தை என்னும் இரண்டாவதற்கு முடிபாயின.

சொற்களின் திரிந்த வடிவம்:

சில சொற்கள் வடிவு திரிந்து வழங்குதலைக் கண்டு, இன்ன சொற்கள் இவ்வாறு திரிந்தன என்று எடுத்துக் காட்டுவர் இவ்வுரையாசிரியர்.

அளவியை யார்க்கும் அறிவு அரியோன் 10 என்பதில் துறவு துறவி என நின்றாற்போல அளவு அளவி என நின்றது என்பர். இரவில் வந்து மீளி உரைத்தி 151 என்பதில் மீடல் என்பது மீளி என நின்றது; மருடல் வெகுடல் என்பன மருளி வெகுளி என நின்றாற்போல என உரைப்பர்.

செய்யுள் விகாரங்கள் முதலியன:

செய்யுள் இன்பத்தையே சிறப்பாகப் போற்றி வரும் வலித்தல் முதலிய அறுவகை விகாரங்களையும், வழங்கற்பாடேபற்றிப் பெயர்ச் சொற்களிடத்து வரும் மூவகைக் குறைகளையும், விதியின்றி வரும் புணர்ச்சியில் விகாரங்களாகிய தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலைமாறுதல் ஆகியவற்றையும் சொற்களின் உண்மை வடிவறிந்து பொருள் காண உதவும் வகை இவ்வாசிரியர் எடுத்துக் காட்டுவர். வகைக்குச் சில.

நற்பகல் சோமன் 168 என்ற தொடர் விகாரவகையால் நற்பகற்சோமன் என வலிந்து நின்றது. அங்கட்டிகழ் மேனி 384 என்பது அங்கண் திகழ்மேனி என மெலிந்து நின்றது. போர்த்தரு அங்கம் 187 என்பது போர்த்தரங்கம் என்று தொகுக்கும் வழித்தொகுத்து நின்றது. ஒல்லைக் கண்டிட 214 என்பது விகார வகையால் வல்லெழுத்துப் பெறாது ஒல்லை கண்டிட என வந்தது. எவ்வம் செய்து 358 என்பது எவம் செய்து என இடைக் குறைந்தது. பறத்தல் இயல் வாவல் 375 என்பது பறல் இயல்வாவல் என இடைக்குறைந்தது. சோத்தம் 173 என்பது சோத்து எனக் கடைக்குறைந்தது. மல்லல் 178 என்பது மல் எனக் கடைக்குறைந்தது. வாயின் 10 என்பது வயின் என நின்றது. அணி 53 என்பது அண் எனக்குறைந்தது. வாமம் 263 என்பது வாமாண்கலை என இடைக்குறைந்தது. செல்ல அரிது 264 என்பது கடைக்குறைந்து செல்வரிது என்றாகியது.

இடைச் சொற்கள்:

பாடல்களில் பயிலும் இடைச்சொற்களைச் சுட்டி அவற்றின் பொருள்களை எடுத்துக்காட்டும் இவ்வுரையில் சிறப்பான சிலவற்றைக் காண்பாம். நின்று என்பது 34 ஐந்தாம் வேற்றுமைப் பொருள் உணரநிற்பதோர் இடைச் சொல். மீட்டு அது அன்றேல் 57 - மீட்டு என்பது பிறிதும் ஒன்று உண்டு என்பதுபட வினைமாற்றாய் நிற்பதோர் இடைச்சொல். தான் செறி இருள் 382 - தான் என்பது அதுவன்றி இது ஒன்று என்பதுபட நின்றதோர் இடைச்சொல். ஏழையின் 19-இன் ஏழன் உருபு புறனடையால் கொள்ளப்பட்டது. ஆவ 211, -இரங்கற்குறிப்பு, ஆவா 72 - அருளின்கட்குறிப்பு, இரக்கத்தின் கட்குறிப்பு. ஐயோ 384 - உவகைக்கண் வந்தது. அந்தோ 72- இரக்கத்தின்கட் குறிப்பு. கற்றவா 60- ஆ-வியப்பின் கட்குறிப்பு. யாதே 82- ஏகாரம்வினா. பேர் என்னவோ 56-ஓகாரம் வினா. மன்னும் 174 - மிகுதி.

உரிச்சொற்கள்:

30 ஆம் பாடல் கொளுவில் வய என்னும் உரிச்சொல் விகார வகையால் வயம் என நின்றது என்றும், 208 ஆம் பாடலில் மல்லல் மல் எனக் கடைக்குறைந்து நின்றது என்றும் 368 ஆம் பாடலில் மல்லல் கடைக்குறைந்து ஐகாரம் விரிந்து நின்றது என்றும் இவ்வுரையாசிரியர் உரிச்சொற்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அன்மொழித் தொகையும் ஆகுபெயரும்:

அன்மொழித் தொகையும் ஆகுபெயரும் ஒன்றல்ல என்னும் கருத்தினராதலின் இவ்வுரையாசிரியர் அவற்றை ஆண்டாண்டு எடுத்துக்காட்டும் இயல்பினர். சான்றாகச் சிலவற்றைக் காண்பாம்.

அரன் அம்பலத்தின் இயல் 35 - ஆறாம் வேற்றுமைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. பொன்னங்கழல் 131 - பொன்னை ஒக்குங் கழல் என உவமத் தொகை, பொன்னான் இயன்ற கழலை உடையது என அன்மொழித் தொகையும் ஆம். செறிகழல் 273 - செறியும் கழலை உடையது என அன்மொழித்தொகை. முத்தமணல் 273 - முத்துப்போன்ற மணலையுடைய இடம் என அன்மொழித் தொகை. எற்றும்திரை 134 என்பது சினையாகிய தன்பொருட்கு ஏற்ற அடையடுத்து நின்றதோராகுபெயராய்க் கடலைக் குறிப்பிடுகிறது. மாதுற்ற மேனி 174 - என்பது ஆகுபெயராய் மேனியை உடையான் மேல் நின்றதெனினும் அமையும். பாயினமேகலை 282 என்னும் சொற்கள் ஒரு சொல் நீர்மைப்பட்டு மேகலை உடையாளை உணர்த்தலின் ஆகுபெயர் எனப்படும். ஆழிதிருத்தும் புலியூர் 186 - ஆழி என்பது ஆழி சூழ்ந்த உலகைக் குறித்தலின் ஆகுபெயர்.

உருபு மயக்கம்:

இவ்வுரையாசிரியர் `பொருள் செல்மருங்கின் வேற்றுமை சாரும்' (தொல்; சொல்: 107) என்பதற்கேற்ப, ஆளப்பட்டுள்ள வேற்றுமை உருபு பிறிதொரு வேற்றுமைப்பொருளை உணர்த்துவ தாகிய உருபு மயக்கத்தை எடுத்துக்காட்டுவர்.
சின்மழலைக்கு 104 என்பது சின்மழலைத் திறத்தென நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது எனினும் அமையும் என்றும், சூழ்பொழிற்கே 161 என்னும் நான்கன் உருபு ஏழாவதன் பொருட்கண் வந்தது என்றும் இருந்தேமை 280 என்னும் இரண்டாவது ஏழாவதன் பொருட்கண் வந்தது என்றும், சின்மொழியை 343 என்னும் இரண்டாவது ஏழாவதன் பொருட்கண் வந்தது என்றும் பரிசினின் நிற்பித்த 286 - ஐந்தாவது ஏழாவதன் பொருட்கண்வந்து சிறுபான்மை இன்சாரியை பெற்று நின்றது என்றும் வடிக்கு 291 என்னும் நான்காவது, வடியின் என்னும் ஐந்தாவதன் ஒப்புப்பொருட்கண் வந்தது என்றும் விளக்குதல் காண்க.

வினைஎச்சம் எதிர்மறைவினை கோடல்:

மறைவினைகள், தொழிற்பெயர்கள் இவற்றின் முதனிலைகள் எப்பொழுதும் உடன்பாட்டுவினைகளாகவே இருத்தலின், வினைஎச்சங்கள் எதிர்மறை வினையின் முதனிலையாகிய உடன்பாட்டு வினையைக் கொண்டு முடிந்தன என்று கூறல் சான்றோர் மரபாகும். அம்மரபைப்பற்றி இவ்வுரையாசிரியர் வரைந்தவற்றுள் சில.

துப்புற என்னும் வினையெச்சம் 26 தந்தின்று என்பதன் தருதலொடு முடிந்தது. ஒருவிக்கெடாது 65 - ஒருவி என்னும் வினையெச்சம் கெடாது என்னும் எதிர்மறை வினையெச்சத்தின் கெடுதலொடு முடிந்தது. அறிய என்னும் வினையெச்சமும், சிறிது என்னும் வினையெச்சமும் 41 திறவாவிடின் என்னும் எதிர்மறையில் திறத்தலொடு முடிந்தன.

சினைவினை முதலியன:

உரையாசிரியர் 116 ஆம் பாடலுரையில் சினைவினை முதல் மேல் ஏறி நின்றன என்றும், 126 ஆம் பாடலுரையில் சினை தன்வினைக்கு ஏலா எழுத்துக் கொண்டது என்றும், 103 ஆம் பாடலுரையில் சினை வினை முதல்மேலேறியும், இடத்து நிகழ் பொருளின் வினை இடத்துமேல் ஏறியும் நின்றன என்றும், 222 ஆம் பாடலுரையில் சினைவினையெச்சம் முதல் வினையோடு முடிந்தது என்றும் இடத்து நிகழ்பொருளின் வினை இடத்தின் மேல் ஏறிநின்றது என்றும் சினைவினையும் இடத்து நிகழ் பொருளின் வினையும் கொள்ளும் முடிபுபற்றிக் கூறியுள்ளார்.

வினையெச்சம், வினைமுற்று, ஒருமைஉருபு,

பன்மையுருபு பொதுவினை பற்றிய சில செய்திகள்:

முத்தம் திங்களின் வாய்ந்து அளிவளர் வல்லி அன்னாய் 16 - வாய்ந்து என்பது வாய்ப்ப என்பதன் திரிபு ஆகலின் அளிவளர் என்னும் பிறவினை கொண்டது. கொள்ளப்படாது என்பது 87 வினைமுதல் மேலும் செயப்படுபொருள் மேலும் அன்றி வினைமேல் நின்ற முற்றுச்சொல், அகத்தின்னா வஞ்சரையஞ்சப்படும் (குறள் 824) என்பது போல. பைங்கார்வரை மீன்பரப்பி 130 - வினை முதல் அல்லாத கருவிமுதலியன அவ்வினைமுதல் வினைக்குச் செய்விப்பன ஆதலின் பரப்பி எனச் செய்விப்பதாகக் கூறினார். வன்மாக்களிற்றொடு சென்றனர் 338 - களிற்றுத் தானை சிறந்தமையின் ஒடு உயர்பின்கண் வந்ததாம். வேறு வினை ஒடுவாய்க் களிற்றினை உடையவராய்ச் சென்றார் என்பதுபட நின்றது எனினும் அமையும். ஊர்ந்தகளிறு என்று ஒடு கருவிப் பொருட்கண் வந்தது எனினும் அமையும். ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து 74 சாந்தும் எருக்கும் என இரணடாகலின் ஈசன எனப் பன்மை உருபு கொடுத்தார். விலங்கலைக் கால்விண்டு 24- விண்டு என்பது பிளந்து என்பது போலச் செய்வதன் தொழிற்கும் செய்விப்பதன் தொழிற்கும் பொது. இத்தகைய அரிய செய்திகள் இவ்வுரையிற் பல.

குறிப்பெச்சம்:

பாடலில் இடம் பெறாமல் பாடற்பொருளை நிரப்புவதற்குச் சில சொற்கள் எஞ்சி நிற்பன ஆயின் அவை குறிப்பெச்சம் எனப்படும். சில பாடல்களின் விளக்கவுரையில் உரையாசிரியர் குறிப்பெச்சங் களைச் சுட்டியுள்ளார்.

116ஆம் பாடலுரையில் இது குறிப்பெச்சமாதலின் ஆண்டுவா என்பது கருத்து என்றும் 152ஆம் பாடலுரையில் இவ்வாறு வினாவத் தலைவன் ஒன்றனை உட்கொள்ளும் என்று கருதிக் கூறினமையின் இது குறிப்பெச்சம் என்றும் 163ஆம் பாடலுரையில் இந்தீவரம் இவை காண் என்பது குறிப்பெச்சம் என்றும் சுட்டிச் செல்லும் பேராசிரியர் பாடலது தலைப்பின் விளக்கத்தில் குறிப்பெச்சச் செய்தி அறியக்கிடத்தலின். குறிப்பெச்சங்களை விரித்து விளக்கவில்லை.

அடைகள் பொருளில வாதல்:

அடைமொழியாய் நிற்கும் சொல்லின் பொருள் பின்வரும் பிறிதொன்றால் பெறப்படுமாயின், அவ்வடைமொழி பொருளின்றி வாளா நிற்பதாய்க் கூறும் மரபு பற்றி உரையாசிரியர், தன்பூங்கழலின் துணர்ப்போது 17-பூங்கழல் பூப்போலுங்கழல் என உவமைத் தொகையாய்க் கழல் என்னும் துணையாய் நின்றது என்றும், கருங்கண்ணனை அறியாமை நின்றோன் 53 - கண்ணன் என்பது கரியோன் என்றும் பெயரதொரு பாகதச் சிதைவு. அஃது அப்பண்பு குறியாது ஈண்டுப் பெயராய் நின்றமையின் கருங்கண்ணன் என்றார், சேற்றிற்பங்கயம் போல என்றும், மலைச்சிலம்பா 128 - சிலம்பன் என்பது அதனை உடையான் என்னும் பொருள் நோக்காது ஈண்டுப் பெயராய் நின்றது என்றும் கூறுவர்.

ஓரிடச் சொல் வேறிடத்து வருதல்:

படர்க்கைச் சொல் முன்னிலையிலும் தன்மையிலும், தன்மைச்சொல் முன்னிலையிலும் இந்நூலுள் வந்துள்ளமையை எடுத்துக் காட்டிச் செல்கின்றார் உரையாசிரியர்.

92ஆம் பாடலுரையில் அண்ணல் என்பது நீ என்னும் பொருளில் முன்னிலைக் கண்ணும், கொடிச்சியர் என்பது நாங்கள் என்னும் பொருளில் தன்மைக்கண்ணும் வந்தன என்றும் 164ஆம் பாடலுரையில் நாம் என்னும் முன்னிலை உளப்பாட்டுத்தன்மை உயர்வு தோன்ற முன்னிலைக்கண் வந்தது என்றும் காட்டுவன அதற்குச் சில சான்றுகள்.

நுட்பமான இலக்கண விளக்கங்கள்:

இவ்வுரையாசிரியர் நுட்பமான இலக்கணச் செய்திகளை நூல் நெடுக ஆட்டாண்டு வழங்கியுள்ளார். அவற்றுட் சிலவற்றை ஈண்டுக் காண்பாம்.

குற்றியலுகரத்தின் மேல் உயிரேறி முடியுமாகலின், 34ஆம் பாடலுரையில் நின்றதுவே என்புழி வகரம் சந்தம் நோக்கி வந்தது விரிக்கும்வழி விரித்தலின் பாற்படும். 286ஆம் பாடலுரையில் பாலன் என்பது பெண்பாலை உணர்திய பால்மயக்கம் அதிகாரப்புறநடையால் கொள்ளப்படும். 66ஆம் பாடலுரையில் மைஏர் குவளைக்கண் என்பதில் ஏர் குவளை என்னும் இயல்பு, புறனடையாற் கொள்க. 56 ஆம் பாடலுரையில் பேதையரே என உயர்திணைப் பெயர் சிறுபான்மை ஏகாரம் பெற்று விளி ஏற்றது. (இன்மை என்ற ஒன்றே உண்மை, உடைமை என்ற இரண்டற்கும் மறுதலையாய் வருவது.) 245 ஆம் பாடலுரையில் தீங்கையிலா என்புழி இன்மை உடைமைக்கு மறுதலையாகிய இன்மை. 25ஆம் பாடலுரையில் நோக்கிற்கு என்னும் நான்காவது நோக்கினால் என மூன்றாவதன் பொருளில் வந்தது. 264ஆம் பாடலுரையில் செல்வரிது என்பது செல்வுழிக்கண் என்பது போல மெய்யீற்று உடம்படு மெய். (மெய்யீற்று உடம்படுமெய் என்பது நச்சினார்க்கினியருக்கும் உடன்பாடாகும்.)

இறையனார் களவியலுரைச் செய்திகள்:

பேராசிரியர் பாடற் செய்தியைக் கிளவி என்றே குறிப்பிடுவர். கிளவித் தலைப்புக்களும், நூற்பாக்களும், கொளுக்களும் தமக்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றியமையின், அவற்றிற்கு விளக்கம் கூறுதலே இவர் பணியாக அமைந்தது. தமது உரையில் இறையனார் அகப்பொருள் நூற்பாக்கள் எட்டனை எடுத்துக்காட்டியுள்ள பேராசிரியர் அந்நூலுரைச் செய்திகள் பலவற்றையும் எடுத்தாண்டுள்ளார். அவற்றுட் சில.

18ஆம் பாடலுரையில் இயற்கைப்புணர்ச்சி எனினும் தெய்வப்புணர்ச்சி எனினும் முன்னுறு புணர்ச்சி எனினும் காமப்புணர்ச்சி எனினும் ஒக்கும். இடந்தலைப்பாடு என்னுந்தலைப்பின் கீழ் - பாங்கற் கூட்டம் நிகழாதாயின் இடந்தலைப்பாடு நிகழும், இடந்தலைப்பாடு நிகழாதாயின் பாங்கற்கூட்டம் நிகழும். மதியுடம் படுத்தல் என்னுந் தலைப்பின்கீழ் - இரண்டனுள் ஒன்றாற் சென்றெய்திய பின்னர்த் தெருண்டு வரைதல் தலை; தெருளானாயின் அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதற்றோழியை வழிபட்டுச் சென்றெய்துதல் முறைமையென்ப. 175ஆம் பாடல் உரையில், (காமம் மிக்க கழிபடர் கிளவி முதலிய) இவற்றைத் தலைமகன் கேட்பின் வரைவானாம்; தோழி கேட்பின் வரைவு கடாவுவாளாம்; கேட்பாரில்லையாயின் அயர்வுயிர்த்துத் தானே ஆற்றுதல் பயன். 293ஆம் பாடலுரையில் கிளிகடியும் பருவம் என்றதனால் கற்பினொடு மாறுகொள்ளாமை முதலியன கூறினாளாம்.

மெய்ப்பாடும் பயனும்:

திருக்கோவையார் பாடல் தோறும் மெய்ப்பாடும் பயனும் பேராசிரியரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மெய்ப்பாட்டொடு பயனை எடுத்துக் காட்டும் சிறப்பினைப் பிற்கால உரையாசிரியருள் நற்றிணைக்கு உரைவகுத்த நாராயணசாமி ஐயரிடமே காண்கின்றோம்.

மெய்ப்பாடுகளை நுணுக ஆராய்ந்து திருக்கோவையார் பாடல்கள் சிலவற்றில், அழுகையைச் சார்ந்த நகை, அழுகையைச் சார்ந்த இளிவரல், அழுகைச் சார்ந்து வருத்தம் பற்றிவந்த இளிவரல், அழுகையைச் சார்ந்த பெருமிதம், அழுகையைச் சார்ந்த உவகை, இளிவரலைச் சார்ந்த நகை, இளிவரலைச் சார்ந்த பெருமிதம், மருட்கையைச் சார்ந்த அச்சம், மருட்கையைச் சார்ந்த பெருமிதம், அச்சத்தைச் சார்ந்த நகை, அச்சத்தைச் சார்ந்த இளிவரல், அச்சத்தைச் சார்ந்த மருட்கை, அச்சத்தைச் சார்ந்த பெருமிதம், பெருமிதம் சார்ந்த நகை, பெருமிதம் சார்ந்த மருட்கை, உவகையைச் சார்ந்த அழுகை, உவகையைச் சார்ந்த மருட்கை, உவகையைச் சார்ந்த பெருமிதம், உவகையைச் சார்ந்த வெகுளி என்று இரண்டு மெய்ப்பாடுகளை விரவிக்கூறியுள்ள சிறப்புப் பேராசிரியருக்கே உரியதாகும்.

ஏனைய பாடல்களில் தனி மெய்ப்பாடுகளே கூறப்பட்டுள்ளன. "கண்ணினும் மனத்தினும் திண்ணிதின் உணரும், உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரிப்பின், நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே" (தொல். பொருள். மெய்ப்பாடு. 27) ஆதலின், இங்ஙனம் மெய்ப்பாடுகளைக் கூர்த்து உணர்ந்து பாடல் தோறும் தெரிவித்தல் இவ்வுரையாசிரியருடைய நுண்மாண் நுழை புலத்தை நுவல்வதாகும். அகப்பொருள் கோட்பாடுகளை நன்கு மனத்துட்கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் பயன் வரையும் திறத்திலும் இவர் நுண்ணறிவு புலப்படுகிறது.

இறைச்சி:

பாடலிற் பயிலும் பொருட்புறத்ததாகும் இறைச்சியிற் பிறக்கும் பொருளினைத் திறத்தியல் மருங்கின் தெரிந்துரைக்கும் பேராசிரியர் திறத்தினை 96 ஆம் பாடலுரையில் காண்கின்றோம். ஒன்றனை ஒன்றாக ஓர்க்கும் நாடன் ஆதலான் அணங்கலர் சூடாத எம்மைச் சூடுவேமாக ஓர்ந்தாய் என்பது இறைச்சிப்பொருள். ஒப்புமையான் அஞ்சப்படாததனையும் அஞ்சும் நிலமாகலின் எங்குலத்திற்கேலாத அணங்கலரை யாம் அஞ்சுதல் சொல்ல வேண்டுமோ என்பது இறைச்சி எனினும் அமையும்.

உள்ளுறை:

அகப்பொருளுக்கு மிக இன்றியமையாத பொருள் உள்ளுறை ஆகும். இவ்வுள்ளுறை உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐவகைப்படும். இவ்வுரைகாரர் உள்ளுறை உவமம் என்ற பெயரை 99, 128, 377ஆம் மூன்று பாடல்களின் உரையிலேயே குறிப்பிட்டுள்ளார். ஏனைய இடங்களில் உள்ளுறை என்றே குறிப்பிட்டுள்ளவை சுட்டு என்ற உள்ளுறையில் அடங்கும் போலும். ஏனை உவமம் உள்ள இடத்து இந் நான்கடிப் பாடல்களில் உள்ளுறை உவமம் அமைவது இன்று என்பது இவர் கருத்தாகும். (182)

99 ஆம் பாடலுரையில் மந்தி உயிர் வாழ்வதற்குக் காரணமாகிய வற்றைக் கடுவன் தானே கொடுத்து மனமகிழ்வித்தாற்போல அவள் உயிர் வாழ்தற்குக் காரணமாகிய நின் வார்த்தைகளை நீயே கூறி அவளை மனமகிழ்விப்பாயாக என உள்ளுறை உவமம் காண்க என்றும்,

128ஆம் பாடலுரையில், யாவருமறியா இவ் வரைக்கண் வைத்த தேன் முதிர்ந்துக்கு அருவி போன்று எல்லாரும் காணத் திசைதிசை பரந்தாற் போல, கரந்த காமம் இவள் கதிர்ப்பு வேறுபாட்டால் புறத்தார்க்குப் புலனாய் வெளிப்படாநின்றது என உள்ளுறையுவமை ஆயினவாறு கண்டு கொள்க என்றும், 377 ஆம் பாடலுரையில் உள்ளுறையுவமம் வெளிப்பட நின்றது என்றும் கூறியுள்ளார்.

133, 159, 168, 250, 252, 254, 260, 265, 276, 369, 381 ஆகிய பாடலுரைகளில் உள்ளுறைகள் காணப்படுகின்றன. இவை சுட்டு என்னும் உள்ளுறையின் பாற்படலாம். ஆனால், இவை எவ்வுள்ளுறையைச் சாரும் என்பதனைப் பேராசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டிலர்.

யாப்பு:

யாப்பு அமைதிக்கு ஏற்ற பாடவேறுபாடுகளையே பேராசிரியர் தமது உரையில் குறிப்பிட்டிருத்தலின் இவர் யாப்புப்பற்றித் தெளிவான கருத்துடையர் ஆதல் பெறப்படும்.

அணி:

தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியருக்கு உவமம் என்பது அணியன்று. செய்யுள் உறுப்புக்களுள் உவமமும் ஒன்றே என்பதும், அது பொருள் புலப்பாட்டிற்காகவே கொள்ளப்படும் என்பதும் அவர் கருத்து. இப்பேராசிரியருக்கு உவமம் என்பதும் ஓர் அலங்காரம். தமது உரையில் உவமம் பற்றிய ஐயுறவுகளை நீக்குவதனோடு ஏனை அலங்காரங்களுள் சிலவற்றையும் ஒரோவழி இவர் குறிப்பிட்டுள்ளார்.

உவமைக்கு உவமை ஆகாமை 124, 162ஆம் பாடலுரைகளில் விளக்கப்பட்டுள்ளது. 301ஆம் பாடலுரையில், பிரித்து உவமை ஆக்காது இவரது கூட்டத்திற்கு அவற்றது கூட்டத்தை உவமையாக அமைப்பினும் அமையும் என்று விளக்கம் அளிக்கிறார். 244ஆம் பாடலுரையில் இல்பொருள் உவமையையும், 162ஆம் பாடலுரையில் புகழுவமையையும் சுட்டுகின்றார்.

ஏனை அலங்காரங்களில் 157ஆம் பாடலுரையில் அலங்காரம்: எதிர் காலக் கூற்றிடத்துக் காரியத்தின் கண் வந்த இரங்கல் விலக்கு, உபாயவிலக்கு என்றும், 161ஆம் பாடலுரையில் அலங்காரம்: பரியாயம் என்றும், 185ஆம் பாடலுரையில் அலங்காரம்: அல்பொருள் தற்குறிப்பேற்றம் என்றும், 217ஆம் பாடலுரையில் அலங்காரம்: கூற்றிடத்து இருபொருட்கண் வந்த உயர்ச்சி வேற்றுமை என்றும், 289ஆம் பாட்டுரையில் அலங்காரம்: பரியாயம்; பொருள் முரணுமாம் என்றும், 233ஆம் பாட்டுரையில் நோக்கு என்னும் அலங்காரமாய்ப் பாம்பிற்கு அஞ்சும் மயில் என இல்குணம் அடுத்து வந்தது என்பாரும் உளர் என்றும், 234ஆம் பாடலுரையில் அலங்காரம்: முயற்சி விலக்கு என்றும் இவ்வுரையாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். அலங்காரங்களை எடுத்துக் காட்டிய இவ்வுரையாசிரியர் ஏனோ அவற்றை விளக்கிப் பாடலில் பொருத்திக் காட்டிற்றிலர்.

சிறப்பான உரைப் பகுதிகள்:

கிளவித் தலைப்புக்களுள் இருவயின் ஒத்தல், வற்புறுத்தல், பொழில் கண்டு மகிழ்தல், முன்னுறவுணர்தல், வேறுபடுத்துக் கூறல், விரவிக் கூறல், வஞ்சித்துரைத்தல், உட்கொளவினாதல், ஏதங்கூறி மறுத்தல், பெரும்பான்மை கூறி மறுத்தல், கூறுவிக்குற்றல், வருமது கூறி வரைவு உடன்படுத்தல், ஐயுற்றுக் கலங்கல் முதலியவற்றின் விளக்கம் கோவையின் பொருளுணரப்பெரிதும் உதவும்.

இவர் இரண்டு உரைகள் வரைந்துள்ளமையை 23, 25, 38, 52, 90, 91, 95, 97, 116, 118, 120, 129, 131, 140, 146, 151, 166, 170, 183, 185, 189, 204, 225, 235, 276 முதலிய பாடல்களில் காணலாம்.

இவருடைய நயமான உரை 1, 5, 8, 9, 10, 12, 14, 24, 25, 27, 28, 32, 33, 36, 39, 40, 42, 48, 50, 54, 57, 58, 60, 61, 64, 66, 70, 76, 77, 83, 84, 86, 108, 109, 118, 122, 123, 125, 136, 137, 150, 154, 156, 158, 197, 205, 210, 225, 226, 231, 235, 242, 258, 261, 276, 279, 281, 285, 298, 328, 352, 354, 365, 381, 394 முதலிய பாடல்களில் காணப்படுகிறது.

உரையாசிரியர் பெருமை:

கோவை நூல்களுள் திருச்சிற்றம்பலக்கோவையார் தலையாய நூலாகத் திகழ்வது போலக் கோவை நூல் உரைகளுள் பேராசிரியர் உரை தலையானதாகத் திகழ்கிறது. நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய பேருரையாளர் வரிசையில் இந்நூலுரை யாசிரியராகிய பேராசிரியரும் இடம் பெறத்தக்கவர் என்பது உறுதி. இவர் பெருமையைத் திருக்கோவையார் உரையாக வெளிவந்துள்ள பழைய உரையோடு ஒப்பிட்டு உணரலாம்.