03 ஆராய்ச்சிக் கட்டுரை


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறைகளின் சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 1

அடியார் பெருமை

தருமை ஆதீன வித்துவான்

முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்

திருவடியை உணராமல் அடியவர் என்னும் பெயர்ப் பொருளை உணர்வது அரிதினும் அரிதாகும். உடம்புடைய உயிர் கட்குப் பெரும்பாலும் அவ்வுடம்பின் அடிப்பகுதியை அடி என்பது வெளிப்படை. உருவம், அருவம், அருவுருவம் மூன்றும் இல்லாத கடவுளுக்கு அடி உண்டு என்றால், உருவத்தில் கொள்ளும் அடி அல்லாத வேறு அடியே அங்குக் கொள்ளற்பாலது.

உருவத்தில் உள்ள அடி அருவுருவத்திலும் அருவத்திலும் இருத்தல் கூடாது. இருப்பின், அருவம் என்றும் அருவுருவம் என்றும் சொல்லப்பெறுமோ? உருவம் என்றே கொள்ளப்படும். அம் மூவகை வடிவங்களையும் கடந்த பெருநிலையில், உணர்ந்து வழிபடப் பெறும் அடி உண்டு. அத் திருவடியை அடையும் பொருட்டே, உருவத் திரு வடியைக் கொள்ளல் வேண்டும். திருக்கோயில்களில் திருவுருவத்தில் திருவடியை வழிபடும்போதும் முடிவான திருவடியை நினைந்து போற்றுவதே வீடுபேற்றிற்குத் தலைசிறந்ததொன்றாகும். அத் திருவடியைச் சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்திப் பேரின்பக் கரையை எய்தார்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவ னடி சேரா தார்"

என்பது பொய்யா மொழி. அத்திருவடிச் சேர்வும் அதனால் எய்தும் பேரின்ப வாழ்வும் திருக்கோயில் முதலியவற்றில் உருவத் திருமேனி களில், வைத்து வழிபடப்பெறும் திருவடியை மறவாது போற்று வார்க்கே கிடைக்கும். ஏனையோர் எத்தனை பிறவியெடுக்கினும் போற்றார் ஆயின் வீடு பெறல் அரிதே.

தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கே மனக் கவலை மாற்றல் எளிது. மற்றையோர்க்கு அரிது. அத்தாள் சேர்ந்தாரே நிலமிசை (பேரின்ப வீட்டில்) நீடுவாழ்வார். மும்மலமும் நீங்கிய உயிரின் அறிவில் தங்கி நின்று உணர்த்தும் முதன்மை யுடையவனை நம்மைப்போல ஒரு வடிவுடையனென்று மட்டும் கொண்டு, அவனது உணர்வுருவை மறந்தால் நமக்கு உய்யும் வழியே இல்லையாம். அதுவே (சத்திரூபம்) அருளுருவம். அதுதான் மலம்நீங்கிய உயிர்கட்கு நிறையுணர்வு (வியாபக ஞானம்) விளைப்பது. அத்தகைய நிறையுணர்வு தான் உயிர்கள் அடையும் பேரின்பத்துக்கு உருவம். அப்பேரின்ப நுகர்ச்சியே `சிவாநந்தாநுபூதி' எனப்படும். அச் சிவாநந்தாநுபூதியைத் திருவடி என்பது சைவ மரபு. "முதல்வன் திருவடியாகிய சிவாநந்தாநுபூதியைத் தலைப்படும்" என்பது சிவஞானபோதமாபாடியம் ( சூ. 11.) வசனம் "மலவாசனை நீங்கினால் அன்றி முதல்வனது திருவடியாகிய சிவாநந்தத்தை அநுபவித்தல் கூடாது" (௸ சூ.10. அதி 1.) `திருவருளான திருவடி' என்று அத்திருவருளுருவையும் கூறுதல் உண்டு. குண குணிகட்குப் பேதம் கொள்ளாத நிலையில் அது வழங்கும்.

`யான் எனது என்று அற, உயிரில் பரை (சிவசத்தி) நின்றது அடியாம்' என்பது உண்மை நெறிவிளக்கம். "என்னது யான் அற்றால் இறைவனடி தானாகும்" என்பது அநுபோக வெண்பா. அத்தகைய உண்மையில். `யான்' `எனது' என்னும் இருவகைப் பற்றும் அற்றுத் திருவருளாய்ச் சிவாநந்தத்தை நுகரும் அன்பரே அடியார் என்னும் திருப்பெயர்க்கு உரியவர். அதுபெறமுயலும் உண்மையாளர்க்கும் உபசாரத்தால் `அடியார்' என்னும் அருட்பெயர் உரித்தாயிற்று.

"அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர்

அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்

அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்

அடியார் பவரே அடியார் ஆம்ஆல்".

"அடியார் பொன்னம்பலத்து ஆடல்கண் டாரே"

எனப்பெறும் திருமந்திரவசனத்தை உற்றுணர்ந்தால் அடியார் என்பதன் உண்மை வாய்மையாகும்.

"ஆரியனாம் ஆசான்வந்து அருளால் தோன்ற

அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்"

என்பது சிவஞான சித்தி வாக்கியம். அடிஞானம் ஆன்மாவில் தோன்றும். ஆயின், அந்த ஞானத்திற்கு முதலான ஞேயம் அந்த ஆன்மாவில் தோன்றாதேல், ஆன்மா, சிவத்தை அறிவது எவ்வாறு? ஞானமும் ஞேயமும் தோன்றும் இடம் ஆன்மாவே ஆகும். அப்பொழுது அடிஞானத்தால் நிறைந்த ஆன்மா முடியாகிய ஞேயமாய் நிற்கும் பேரின்பமாம்.

"முடியெனும் அதுவும் பொருளெனும் அதுவும் மொழிந்திடின் சுகம்"

"துன்னும் அவனே தானாக அடையின் முடியாம்"

"உரையிறந்த சுகமதுவே முடியாகும்"

"அடியெனும் அதுவும் அருளெனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவு"

சிவாநந்தாநுபூதி பெற்றவர்க்குச் சிவபிரானும், திருவடியும், திருமுகமும், திருமுடியும், பிறவும் ஆகிய எல்லாம் இன்பமேயாய்த் திகழும் இன்பம் அன்றி வேறு இல்லை.

`இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்னும் உயர்வுக்கு உரிய பெரு நிலைத் தாண்டவம் அடியார்க்குத்தான் தெரியும்.

"ஆநந்த மேசெவி அம்புயத்

தாளிணை அங்கைகளும்

ஆநந்தமே திருக்கண்ணும் செவ்வாய்

அருள் மேனியெல்லாம்

ஆநந்தமே அருட்சிற்றம் பலவர்

அருட் பொருளும்

ஆநந்தமே அவன் தில்லையும்

காழியும் ஆநந்தமே"

- சிற்றம்பல நாடிகள்

அத்தகு முடிந்த முடிபாகிய அடிமுடிகளை அறிந்து அநுப வித்து வரும் பேரின்ப வாழ்க்கையரே அடியார் ஆவார்.

அடியார் வேறு ஆண்டவன் வேறு அல்லர். 1 மண், 2 நீர் , 3 தீ, 4 கால், 5 விண், 6 செங்கதிர், 7 வெண்கதிர், 8 வேள்வித் தலைவன் என்னும் எட்டும் ஆண்டவனுடைய வடிவங்கள் ஆகும். அவற்றுள், வேள்வித்தலைவன் சித்துருவன். ஏனை ஏழும் அசித்துருவம். அசித்துக்கும் சித்துக்கும் ஆண்டவன் வாழ்ச்சியாலும் வேறுபாடுண்டு. அவன் அசித்துக்களைத் தொழிற்படுத்தும் அளவாய் அவற்றிற் படுவன். அச் சித்துக்கோ அநந்நியமாகி அருளி வருவன். எல்லா உயிர்களும் சித்துக்களே ஆயினும், வேள்விக்கோன் ஆண்டவனை மறவாதவனாதலின், அவன் அம் முதல்வனுக்கு என்றும் நீங்காது வாழும் இடமாயினான்.

"தீவளி விசும்பு நிலன்நீர் ஐந்தும்

ஞாயிறும் திங்களும் அறனும்."

-பரிபாடல். 3, 4-5

என்பதற்கு, "அவை தீ, வளி, விசும்பு, நிலம், நீர் என்னும் பூதங்கள் ஐந்தும் ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனும் என இவை" என்றுள்ள உரையை இங்குக் கருதுக. வேள்வி முதல்வன் என்றது, அவரவர் சமயத்திற்குக் தக வேறுபடும். சைவ சமயத்திற்கு வேள்வி முதல்வன் சிவாபூஜா துரந்தரன், சிவஞானி ஆவன். அவனே நடமாடுங் கோயில், சிவனை வழிபடாத மாக்களை நடமாடுங் கோயில் என்பது நரகத்தை அடைவிக்கும் நாச வார்த்தையே ஆகும். அடியார்க்கே நடமாடக் கோயில்' என்னும் பெயர் உரியது. அதனை, நம் ஞானசம்பந்த பரமாசாரியர்,

"காதலால் நினைவார்தம் அகத்தன்" (தி.3 ப.373 பா.3)

"நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சுளானே" (தி.1 ப.119 பா.4)

"கைதொழுது ஏத்தும் அடியார்கள் ஆகம் அடிவைத்தபெருமான்" (தி.1 ப.2 பா.9)

"போகமும் இன்பமும் ஆகிப் போற்றி என்பாரவர் தங்கள் ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர்.' (தி.2 ப.205 பா.5)

என்பவற்றால், அடியார் அகத்திலும் ஆகத்திலும் ஆண்டவன் பிரியாமல் உறையும் உண்மையை உணர்த்தியருளினார்.

"கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழி பட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமான்" (தி.3 ப.105 பா.3). "பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந் தொண்டர் உள்ளுருக ஆவியுள் நின்று அருள் செய்ய வல்ல அழகர்" (தி. 3 ப.103 பா.10). என்றவற்றை உற்று உற்று நோக்கி உணர்ந்தால் திருஞானசம்பந்த சுவாமிகள். நாம் உய்யும் வழியை வெளிப் படையாக உபதேசித்தருளும் உண்மை இதுவே என்று நமக்கே இனிது புலப்படும்.

`உச்சிமேல் உறைபவர்', `உளங்கொள்வார் உச்சியார்' `எங்கள் உச்சி உறையும் இறையார்' என்பவற்றால், அகத்தும் புறத்தும் நின்று அடியவர்க்கு அருளும் மெய்ம்மை விளங்கும். சீவன்முத்தி எய்திய அடியார்க்குப் பிராரத்த தேகம் விளங்கும் அளவும், அதில் அம்மையப்பர் வீற்றிருப்பர் என்பதை, `ஊன் அமரும் உடலுள் இருந்த உமை பங்கன்' (தி.3 ப.12 பா.4) `அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர்' (தி.1 ப.132 பா.6) `உருகுவார் உள்ளத்து ஒண்சுடர் (தி.2 ப.109 பா.5) "எண் ஒன்றி நினைந்தவர் தம்பால் உள் நின்று மகிழ்ந்தவன்" (தி.1 ப.37 பா.2) "பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து ஆடி" (தி.1ப.28 பா.7) என்பவற்றால் விளக்கியருளினார்.

அன்பு அகத்தில் அமர்ந்து பெருகுதல் வேண்டும். வேட்கை, வெகுளி, இவறுதல், மயக்கம், செருக்கு, பகை என்னும் ஆறும் அழிதல் வேண்டும். புலனடக்கம் வேண்டும். சிவஞானம் புகுதலும் அதை விரும்புதலும் வேண்டும். உருக்கம் வேண்டும். ஒன்றியிருந்து நினைதல் வேண்டும். பாடவும் ஆடவும் பரவவும் வேண்டும். அவ்வளவும் உடைய அடியார்க்கே அம்முழு முதல்வன், உள்ளிருந்து, சுடர்வீசி, மகிழ்ந்து ஆடிப் பேரின்பம் விளைப்பான் என்று பயன் விரித்தருளினார்.

அடியார் சிந்தையே திருக்கோயில் என்று திருமுறைகள் விளம்புவது பலர் அறிந்த உண்மை. திருஞானசம்பந்தப் பெருமானார்,

"இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வான்" (தி.2 ப.64 பா.4)

"நினைப்பவர் மனத்துளான்" (தி.1ப.76 பா.7)

என்றருளினார்.

"நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் (தி.5 ப.2 பா.1)

என்பது அப்பர் அருள்மொழி.

அம்மனம் மூச்சுடன் வெளிச்சென்று உலகில் அலைந்து இடர்ப்படாதவாறு, அடக்கி, இறைவனது திருவடிக்கே இடமாக்குவது அடியார் இயல்பு. ஏற்றான் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்கும் இயல்புடைய அடியார் எல்லாரும் அவனுக்கே நெஞ்சத்தை இடமாக்குவர் என்பது சிறிதும் ஐயம் விளைக்காத வாய்மை. அவர்க்கு மூச்சும் பேச்சும் பிறவும் சிவமாகவே விளையும். அதனால், அவர்க்குப் புலன் வழிச் சென்று உலகின்பம் நுகரும் பொறியுணர்வு இல்லை. அதனால், அவர் உளத்திலும் உணர்விலும் சிவபெருமான் வீற்றிருந்து ஞான நடம் புரிகின்றான். அதனை,

"சினமலிஅறு பகைமிகுபொறி

சிதைதருவகை வளிநிறுவிய

மனன்உணர்வொடு மலர்மிசைஎழு

தருபொருள்நிய தமும்உணர்பவர்

தனதெழில்உரு வதுகொடுஅடை

கனமருவிய சிவபுரம்நினை

பவர்கலைமகள் தரநிகழ்வரே" (தி.1 ப.21 பா. 5)

என்று, கனிச்சீர்நந்நான்கு கொண்ட நான்கடித் திருப்பாடலால் தெளியச்செய்தருளினார் சிரபுரக்கோமகனார். இதன் முற்பகுதியில், அறுபகையும், அப்பகையறாத பொறியின் இயல்பும் அவற்றின் சிதை வும், அச்சிதைவைத் தவிர்க்கும் மூச்சடக்கமும், அம்மூச்சடக்கத்தால் எய்தும் மனவடக்கமும், அம்மன வடக்கத்தால் வளரும் ஞானமும், அந்த ஞானத்திருவுருவொடு அவ்விதய கமலத்தில் இறைவன் எழுந் தருளலும், அங்ஙனம் எழுந்தருளும் செம்பொருளையே நியதமாக உணர்கின்ற உணர்வும், அவ்வுணர்வே அடிமைத்திறம் ஆதலும், அவ்வடிமைத்திறம் உடையவரே அடியவராதலும் சுருங்கச்சொல்லி விளங்கவைத்தருளிய உண்மை உணர்வார்க்குப் புலனாகாது ஒழியாது.

பிற்பகுதியில், "அடியாரிடத்தில் ஆண்டவனும் அவ்வடியார் திருக்கோலமாகவே நின்று, அவரை வழிபடுவார்க்குக் காட்சி கொடுத்தருள்வான். அருளினும், அவ்வடியார் திருவுள்ளத்தில் இருக்கும் சிவனுருவம் அருளாகிய எழிலுருவமே ஆகும். அதுதான் அவனது எழிலுரு. அதைக்கொண்டே அவ்வுள்ளத்தை அடைவான். அத்தகைய பராபரன் எழுந்தருளி விளங்கும் தலம் சிவபுரம். அதை நினைந்து போற்றுவார் சகலகலாவல்லியின் திருவருட்செல்வம் உலகு புகழ நிகழப் பெறுவர்" என்னும் வாய்மை உணர்த்தப்பெற்றுள்ளது.

சிவபெருமானே தாயினும் நல்ல தலைவன் என்று அம்முழு முதலடியைப் போற்றிசைப்பார்கள். அப்போற்றுக்களை இசைக்கும் வாயினும் அத்திருவடியை அடியார்கள் நினைந்து மறவாமலிருக்கும் மனத்தினும் அகலாமல் மருவியிருக்கும் மாண்பு அக்கடவுளுக்கு இயல்பாக உண்டு.

"தாயினும் நல்ல தலைவர் என்று அடியார்

தம்அடி போற்றிசைப் பார்கள்

வாயினும் மனத்தும் மருவிநின்று அகலா

மாண்பினர் காண்பல வேடர்" (தி.3 ப.123 பா.5)

இதில், அடியவரடிகளைப் போற்றிசைப்பாருடைய வாயிலும் மனத்திலும் ஆண்டவன் குடிகொண்டிருந்தருள்வான் என்ற கருத்தும் கொள்ளுமாறு தொடர் அமைந்திருப்பது உணரத்தக்கது.

அடியவர்கள் போற்றல் செய்யும்பொழுது, ஆண்டவன் அதுசெய்துவரும் வாயில் விளங்குகின்றான் என்பது அநுபவம் மிக்கவர்க்கே புலனாகும். அன்பால் உருகும் அடியவர்க்கு ஆண்டவன் அன்பனாகின்றான்.

"சொல்நவிலும் மாமறையான் தோத்திரம்செய் வாயின்உளான்" (தி.1 ப.62 பா.7)

"அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்" (தி.2 ப.63 பா.5)

அடியார்க்கு இலக்கணம் பல உள்ளன. அவற்றுள் தூய வெண்ணீற்றை மெய்யெலாம் சண்ணித்தல், அத் திருநீறு ஒளி வீச, கூட்டமாகக் கலந்து, திருவுலாவுடையார் பின்னர்ச் செல்லுதல், இசை பாடிப் பரவுதல், சிவபூசை செய்தல், மாலை தொடுத்தல், மாலையாற் புனைதல், தோளும் கையும் குளிரத் தொழுதல், அக்கு மாலைகொண்டு அங்கையில் எண்ணுதல், மறையோதுதல், உள்ளுருகுதல், சீலம் உடைமை, பற்றறுத்தல், அன்புருவாதல், திருவடியே தொழுதல், திரு வடி நினைவன்றி வேறு நினைவுறாமை, சிவதலங்களை வழி படுதல், புலனடக்கம், அடியார்க்கு அடியாரை வழிபடுதல், அடியார்க்கு உணவளித்தல், திருவைந்தெழுத்தை ஓதுதல், காலை மாலைகளில் கோயிலை அடைந்து வழிபடுதல், நண்பகலிலும் மாலையிலும் கூட்டமாகச் சேர்ந்து சிவச்சார்பாகப் பொழுதுபோக்குதல், தேவாரம் (தேவாராதநம்) புரிதல் முதலிய பல, திருஞானசம்பந்தர் திருப்பாடல் களில் காணக்கிடைக்கின்றன.

பெரியபுராணத்துள் விரித்துணர்த்தப்பெறும் வரலாறுகட்கு உரியவரும் திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களுள்ளே கிளந்தோதப் பெற்றவரும் ஆகிய நாயன்மார் திருப்பெயர்களாவன:-

1. சண்டேசுர நாயனார்

2. கண்ணப்ப நாயனார்

3. குலச்சிறை நாயனார்

4. கோச்செங்கட் சோழ நாயனார்

5. சிறுத்தொண்ட நாயனார்

6. தண்டியடிகள் நாயனார்

7. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்

8. திருநீலநக்க நாயனார்

9. நம்பிநந்தியடிகள் நாயனார்

10. புகழ்த்துணை நாயனார்

11. மங்கையர்க்கரசியார்

12. முருக நாயனார்
13. அமர்நீதி நாயனார்

14. தில்லைவாழந்தணர் (கூட்டம்)

15. நின்றசீர்நெடுமாற நாயனார்

16. தண்டியடிகள் நாயனார்.

இவ்வடியவர்களை ஆங்காங்குப் பாடியுள்ள பகுதிகளையும் அவற்றின் கருத்துக்களையும் அறிதல் அடியார் அடிக்கு அன்பினை நம் உள்ளத்தில் விளைக்கும்.

1. சண்டேசுர நாயனார்

1. 1 "பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் தாதை

வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந்தான் றனக்குத்

தாரடைந்த மாலைசூட்டித் தலைமைவகுத் ததென்னே

சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர்மே யவனே". (தி.1 ப.48 பா.7)

1. 2 "வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்

சிந்தை செய்வோன்". (தி.1 ப.62 பா.4)

என்பனவற்றாலும் பிறவற்றாலும் சண்டேசுர நாயனாரைப் போற்றி யுள்ளார்.

2. கண்ணப்ப நாயனார்

2. 1 "கானலைக் கும்மவன் கண்இடந்தப்பநீள்

வானலைக் கும்தவத் தேவுவைத்தான்". (தி.3 ப.35 பா.7)
2. 2 " வாய்கலசம் ஆகவழி பாடுசெயும் வேடன்மல ராகும்நயனம்

காய்கணையி னால்இடந்தீசனடி கூடுகா ளத்திமலையே" (தி.3 ப.35 பா.4)

2. 3 "கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலையெங்கள்

அண்ணலாரூர் ஆதி ஆனைக்காவே". (தி.3 ப.109 பா.7)

2. 4 "ஈண்டுதுயிலமரப்பினனே இருங்கண் இடந்து அடி

அப்பினனே' (தி.3 ப.113 பா.2)

எனக் கண்ணப்ப நாயனாரைப் போற்றிக் குடுமித்தேவரைக் கும்பிட்ட பயன் கண்டருளினார்.

3. குலச்சிறை நாயனார்

3ஆம் திருமுறை 120ஆம் திருப்பதிகத்தில், 2, 4, 6, 8, 10, 11 ஆகும் திருப்பாடல்களில், குலச்சிறை நாயனாரைப் புகழ்ந்திருத்தல் ஓதிக் களித்தல் சைவர் கடன்.

3. 1 "வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன்

வெள்ளை நீறணியும் கொற்றவன் றனக்கு மந்திரி ஆய

குலச்சிறை குலாவிநின் றேத்தும்

ஒற்றைவெள் விடையன்"

3. 2 "கணங்களாய் வரினும் தமியராய் வரினும்

அடியவர் தங்களைக் கண்டால்

குணங்கொடு பணியும் குலச்சிறை குலாவும்

கோபுரம் சூழ்மணிக் கோயில்"

3. 3 "நலம்இலர் ஆக நலமதுண் டாக

நாடவர் நாடறி கின்ற

குலம்இலர் ஆகக் குலமதுண் டாகத்

தவம்பணி குலச்சிறை பரவும்

கலைமலி கரத்தன்"

3. 4 "நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத் தோதி

நல்லராய் நல்இயல் பாகும்

கோவணம் பூதி சாதனம் கண்டால்

தொழுதெழு குலச்சிறை போற்ற

ஆவணம் கொண்ட சடைமுடி யண்ணல்

ஆலவாய் ஆவதும் இதுவே".

3. 5 "தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறும்

தொழுதுதன் குணத்தினைக் குலாவக்

கண்டுநாள் தோறும் இன்புறு கின்ற

குலச்சிறை கருதி நின்றேத்த

அண்டநா யகன்தான் அமர்ந்துவீற் றிருந்த

ஆலவாய் ஆவதும் இதுவே".

3. 6 "பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை

எனும்இவர் பணியும்

அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன்".

4. கோச்செங்கட்சோழ நாயனார்

4. 1 "சிலந்தி செங்கட் சோழ னாகச் செய்தான் ஊர்" (தி.2 ப.63 பா.7)

4. 2 "செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே"(தி.3 ப.18 பா.4)

4. 3 "செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே" (தி.3 ப.18 பா.2)

என்பவற்றிலும் பிறவற்றிலும் வளவர் கோமகனார் திருப்பெயரைக் கூறியருளி னார்.

5. சிறுத்தொண்ட நாயனார்

தி. 3 -63ஆம் திருப்பதிகத்தின் எல்லாத் திருப்பாடல்களிலும் சிறுத்தொண்ட நாயனார் புகழ் பாடப்பெற்றுள்ளது. அவற்றால், அவர் வரலாற்றுக் குறிப்புக்கள் சிலவற்றையும் அறியலாம்.

"திருச்செங்காட்டங்குடி - கணபதீச்சரம் - சிறுத்தொண்டர் - செருவடிதோட் (பொருவன்மை) - தேனமர்தார்க் கல்நவில் தோள், சீராளன் - சிறப்பு உலவான் - வெந்தநீறணி மார்பன். சீர் உலாம் சிட்டன். பணிசெய்யப் பெருமான் விளையாடும் உரிமை. சிறுத் தொண்டன் அவன் வேண்ட, காழியடிகளையே அடிபரவும் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோர்" என்னும் தொகுப்பு, நுண்ணுணர்விற்கு விருந்து.

"சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய

பிறப்பிலிபேர் பிதற்றிநின்று இழக்கோஎம் பெருநலமே" (தி.3 ப.63 பா.9)

என்பதில், பலபதிப்புக்களில் கால்தான் போயிற்று. அதனால் ஆனது யாது? `சிறப்புலவன் என்பதன் பொருள் யாது? நாளடைவில் சிறப்புளவன் எனத் திருத்தி விடுவரே!

6. தண்டியடிகள் நாயனார்

"அண்டர்தொழு சண்டிபணிகண்டு அடிமை கொண்டஇறை"

என்று (தி.3 ப.68 பா.10) பின் வந்த பதிப்புகளில் இருக்கின்றது. அதனால், `தண்டி' என்பது தண்டியடிகள் நாயனாரைக் குறிப்பதாகக் கொண்டு உரைப்பர் அறிஞர். தண்டி என்பது சண்டேசுர நாயனாரையும் குறிக்கும்.

"அண்ணலந் தண்டிதன் அடிகள் போற்றுவாம்"

-தணிகைப்புராணம், கடவுள் வாழ்த்து

7. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்

7. 1

"தாணுஎனை ஆளுடையான் தன்அடியார்க் கன்புடைமை

பாணன்இசை பத்திமையால் பாடுதலும் பரிந்தளித்தான்" (தி.1 ப.62 பா.9)

எனத் திருக்கோளிலியிற் பாடிய திருப்பாடலில்வரும் `பாணன்' என்பது, திருநீலகண்டயாழ்ப்பாண நாயனாரைக் குறித்தது என்பர் பலர்.

7. 2

"தக்க பூமனைச் சுற்றக் கருளொடே தாரம்உய்த்தது பாணற் கருளொடே" (தி.3 ப.115 பா.6)

என்பவற்றால், தம் திருப்பாடல்களை யாழிலிசைத்து இன்புறுத்திய நாயனாரைப் பாடி, நன்றியறிந்தருளினார்.

8. திருநீலநக்க நாயனார்

8. 1

"கடிமணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை

அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே"(தி.3 ப.58 பா.6)

8. 2.

.. ... ... ... ... ... "மன்னும்

"நிறையினார் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர்

அறையும்ஊர் சாத்தமங்கை அயவந்தி"(தி.3 ப.58 பா.11)

என்று, திருநீலநக்க நாயனாரையும் அவர் வாழ்ந்தருளிய நெடு மாநகராகிய சாத்தமங்கையையும் அவ்வூர்த் திருக்கோயிலாகிய அயவந்தியையும், அதைத் தொண்டர் புகழ்வதையும் குறித்தருளிய வாறு உணர்க. "மன்னும் நிறையினார்" என்று நாயனாரைப் புகழ்ந்தது கருதற்பாலது.

9. நம்பிநந்தியடிகள் நாயனார்

நம்பிநந்தி என்பது நமிநந்தி என மருவிற்று, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருப்பாடலில், "நாரூர் நறுமலர்நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே' (தி.4 ப.102 பா.2) என்று உள்ளது, அதனால், நமி என்பது நம்பி என்பதன் மரூஉ எனல் உறுதியாயிற்று.

அவரே, "அடித் தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே' (தி.4ப.102 பா.4) என்றும், "ஊனம் இல்லா அடிகளும் ஆரூரகத்தினர் ஆயினும், அம்தவளப்பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படிலே' (தி.4 ப.102 பா.6) என்றும் அருளியவற்றால், `நந்தி' என்று வழங்கும் அதுபற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.

அதற்கு முன்மொழியான `நமி' என்பது யாவது? அதன் தொல்லுருவம் யாது? இவ்வினாக்கள் எழுமுன் இறுத்த விடையாக, அவர் திருவாயினின்றே `நம்பிநந்தி' என்று தோன்றியிருக்கின்றது. தொண்டர்க்கு ஆணியெனும்பேறு திருநாவுக்கரசு விளம்பப்பெற்ற பெருமையினார்' என்று குறித்தருளிய அருள்மொழித்தேவர், `நம்பிநந்தியடிகள்' என்னாது , `நமிநந்தி யடிகள்' என்றதன் காரணம் தொகையிலும் வகையிலும் `நமிநந்தி என்று இருப்பதற்குச் சிறிதும் வேறுபடாதவாறு பெயரைக் குறிப்பது தான், அறிவார்க்கு மயக்கம் விளைக்காது என்று திருவுளங் கொண்டதாகும்.

சேக்கிழார் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், நம்பியாண்டார் நம்பி மூவரும் `நமிநந்தி' என்று குறித்தமையால், நம்பிநந்தி திருநாவுக்கரசர் குறித்தது வழுவாய்விடுமோ? அவரது திருப்பாடலில், `நமிநந்தி' என்று இருந்ததை எவரோ `நம்பிநந்தி' என்று திருத்தியிருக்கலாம் எனில், அஃது செய்யுளியலறியார் கூறுதலும், திருத்தியவர்க்குப் பேரறிவைத் தோற்றுதலும் ஆகும். `வேலைமெனக் கெட்டு' என்பது போல `நம்பி நமிநந்தி' எனத் திருத்தொண்டத் தொகையில் அமைந்திருப்பது வியக்கத்தக்கது.

(வினைக்கெட்டு - வெனைக்கெட்டு - வெனக்கெட்டு - மெனக்கெட்டு - வேலைமெனக் கெட்டு என மருவியவாறும் மரூஉ மொழிப்பொருள் தெரிய அப்பொருளுடையதொரு சொல் முன் நின்றவாறும் உணர்க. நமக்கு நம்பி என்ற அதன் தொல்லுருவமே முன்நின்றது. அரைஞாண்கயிறு எனப் பின் நிற்றலும் அறிக. வேலைமினுக்கிட்டு என்று ஒரு வெண்பாவில் உள்ளது. அது பட்டினத்தார் பாடியதென வழங்குகின்றது).

10. புகழ்த்துணை நாயனார்

"அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர்காசு எய்திப்

புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே". (தி.2 ப.63 பா.7)

என்று, புகழ்த்துணை நாயனார் வழிபாட்டினையும் திருவருட் பயனை யும் குறித்தருளினார். இதில், அலந்த அடியான்' என்பது நன்கு நோக்கி உணரத்தக்கது.

புகழ்த்துணை நாயனார், சிவபெருமானைத் தவத்தால் தத்துவத்தின் வழிபடும் நாளில், கறுப்பால் பசித்துன்பம் பெருக லுற்றது. உலகம் வருந்தியது. தாமும் பெரிதும் வருந்தினார். என் "அப்பனை என் கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ? `விடுவேன் அல்லேன்' என்று இராப்பகலும் மலர் புனல் கொண்டு அருச்சிப்பாராய், அப்பேராடலாற்கு நீராடல் புரியுங்கால், "சாலவுறு பசிப்பிணியால் வருந்தி, நிலைதளர்வு எய்தி, குடம் தாங்கமாட்டாமை ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்து அயர்வார்' ஆனார். கொடிய நஞ்சினைத் திருக்கழுத்தில் அடக்கியதினும், பொறுமை பெரிதும் உண்டோ? அருளால் ஒரு துயில் வந்தது. அங்கணன் கனவில் அருளினான்; கறுப்பொழியும் அளவும் நாள்தோறும் ஒரு காசு வைக்கப்பெறும் என்று. சிவபீடத்தில் காசு கிடைக்கப்பெற்று, சிற்றுணர்வு ஆகிய பசியும் இன்றி, முற்றுணர்வாகிய உணவும் கொண்டு முகமலர்ந்து அகம் உவந்தார். அங்கு அவ் வண்ணம் (அங்ஙனம்) கறுப்பொழியுங் காலம் வரையிலும் பெற்று, பசியின்றி மெய்யடிமைத் தொழில் செய்து புனிதரடி நிழல் சேர்ந்தார். இவ்வரலாற்றை எண்ணி, `அலந்த அடியான்' என்றும், `அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி' என்றும், `காலையும் மாலையும் போற்றி வழிபட்டார்' என்றும் உணர்த்தி அருளினார் திருஞானசம்பந்த சுவாமிகள். அச்சிவபாதம் வந்து அணையும் மனத்துணையாராகிய புகழ்த்துணை நாயனாரை "அலந்த அடியான்" என்றாரே அன்றிக் கிளந்து உரைத்தாரல்லர். அவர் வரலாற்றை நோக்கி உணர்வது மிக எளிது.

11. மங்கையர்க்கரசியார்

"மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை

வரிவளைக் கைம்மட மானி...

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி

பணிசெய்து நாள்தொறும் பரவ" (தி.3 ப.120 பா.1)

என்பது முதலிய பாடல் சிவனைக் கூடல் விளைத்தலும் ஒல்லும்.

12. முருக நாயனார்

"தொண்டர் தண்கயம் மூழ்கித்

துணையலும் சாந்தமும் புகையும்

கொண்டு கொண்டடி பரவிக்

குறிப்பறி முருகன்செய் கோலம்

கண்டு கண்டுகண் குளிரக்

களிபரந்து ஒளிமல்கு கள்ளார்

வண்டு பண்செயும் புகலூர்

வர்த்த மானீச்சரத் தாரே". (தி.2 ப.92 பா.3)

"....................பூம்புகலூரில்

மூசு வண்டறை கொன்றை

முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்

வாச மாமலர் உடையார்

வர்த்த மானீச்சரத் தாரே". (தி.2 ப.92 பா.5)

என்றவற்றால், முருக நாயனார் திருப்புகலூர் உடையவரை ஆட்டல் சூட்டல் முதலிய வழிபாட்டினைச் செய்து முப்போதும் முடிசாய்த்துத் தொழுதுநின்ற ஆதிசைவர் என்றுணரலாம். "குறிப்பு அறி முருகன்' என்றதால், இறைவன் திருக்குறிப்பினை அறியும் ஆற்றலும் அன்பும் மிக்கவர் என்பது புலனாகும். திருநாவுக்கரசர்க்குத், தில்லைச்சிற்றம் பலத்து நட்டத்தைச் சென்று தொழுதகாலத்தில், எம்பெருமான் திருக்குறிப்பு `என்று வந்தாய்' என்று உசாவுவதாயிருந்தது. அவர், திருக்கச்சியேகம்பத்தில்.

"அரியயன் இந்திரன் சந்திரா தித்தர் அமரர்எல்லாம்

உரியநின் கொற்றக் கடைத்தலை யார்உணங் காக்கிடந்தார்

புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்

எரிதரு செஞ்சடை யேகம்ப என்னோ திருக்குறிப்பே". (தி.4 ப.99 பா. 7)

என்று, ஒருமாநிழலுடையார் திருமாண்குறிப்பினை உசாவியரு ளினார். மாணிக்கவாசகப்பிரானும், 'சிவனே, தென்தில்லைக் கோனே உடையானே உன்றன் திருக்குறிப்புக் கூடுவார்நின் கழல்கூட, ஊனார் புழுக்கூடு இதுகாத்து இங்கு இருப்பதானேன்' (திருவா.59) என்றுணர்ந்து உணர்த்தியருளினார். அவரும், `தில்லைச் சிற்றம்பலத்துச் செல்வம், கவித்த கைம் மேலிட்டு நின்று ஆடும்' திருக்குறிப்பினை அப்பருக்கு முன்பே அறிந்திருப்பார் என்று அறியக்கிடக்கின்றது. "என்போல் வினை உடையார் பிறர் ஆர்? தினையின் பாகமும் அடிநாயேனைப் பிரிவது உடையான் திருக்குறிப்பு அன்று" (திருவா.41) என்று, உடையானது திருவுள்ளக் குறிப்பினை ஓதியருளியதொடு அமையாது, அம் முழுமுதல்வனது திருக்குறிப்பினையே குறிக்கொண்டும் கடைக் கொண்டும் இருக்கும்படி அடியரை ஏவுதலையும் கருதின், அடியார் கடமைகளுள் முதன்மையும் இன்றியமையாமையும் உடையது எது என்றும் அஃது இறைவன் திருக்குறிப்பே அறிந்து கொண்டிருத்தல் என்றும் புலப்படும். அதுதான் அடியார்க்குரிய குறிக்கோள் ஆகும். ஆண்டவனது திருவுள்ளத்தது "திருக்குறிப்பு" ஆகும். அடியவரது திருவுள்ளத்தது "குறிக்கோள்" ஆகும். அது `குறி' எனவும் படும். இறைவனது குறிப்புள்ளார் அடியாராவர்.

"பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள்இ லாது கெட்டேன்

சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே". (தி.4 ப.67 பா.9)

"........பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்

கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக்

குறியிலாக் கொடியேனை அடியே னாகச்

செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்

சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே". (தி.6 ப.66 பா.8)

"செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன்

குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன்

நெறிபடு மதியொன் றில்லேன் நினையுமா நினைய மாட்டேன்

அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறை யுளானே". (தி.4 ப.57 பா.7)

"தாமே தமக்குச் சுற்றமும்

தாமே தமக்கு விதிவகையும்

என்ன மாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும்

அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கிப்

புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே". (திருவா. 607)

என்னும் திருவாசகத்துள் இரண்டும் அமைந்தவாறு அறியலாம்.

"அடியார் ஆனீர்! எல்லீரும்

அகல விடுமின் விளையாட்டைக்

கடிசேர் அடியே வந்தடைந்து

கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்

செடிசேர் உடலைச் செலநீக்கிச்

சிவலோ கத்தே நமைவைப்பான்

பொடிசேர் மேனிப் புயங்கன்றன்

பூவார் கழற்கே புகவிடுமே". (திருவா. 608)

எனப் புயங்க (பாம்பின்கால்) முனிவரால் வழிபடப்பெற்ற புயங்கன் திருவடிக்குப் புகவிடும் மணிவாசகர், அடியாரை ஏவுந்திறத்தால் ஆண்டவன் திருக்குறிப்பைப் புலப்படுத்தியது நன்கு விளங்குகின்றது.

13. அமர்நீதி நாயனார்

"கொடிறனார் யாதும் குறைவிலார் தாம்போய்க்

கோவணம் கொண்டு கூத் தாடும்

படிறனார்". (தி.3 ப.121.பா.1)

என்பதில், அமர்நீதி நாயனார் திருத்தொண்டு குறிக்கப்பெற்றுள்ளது என்பது சிலர் கருத்து.

14. தில்லைவாழந்தணர்

அந்தணர் பிரியாத சிற்றம்பலம், கற்றாங்கு எரி ஓம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம், சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம், எரி ஓம்பும் சிறப்பர். மறையோர் தில்லை நல்லவர், நீலத்தார்....சடையார்....சீலத்தார் (தி.1 ப.80; தி.3 ப.1)

15. நின்றசீர்நெடுமாற நாயனார்

தமிழ்ப்பாண்டியன், தென்னவன், பங்கம்இல் தென்னன். பஞ்சவன், பண்டிமன், பட்டிமன், பத்திமன், வெள்ளைநீறணியுங் கொற்றவன், தென்னவன் உற்ற தீப்பிணியாயின தீரச்சாற்றிய பாடல்கள் பத்தும். (தி.2 ப.66; தி.3 ப.51)

சிவபெருமானை வழிபட்டுப் பேறுஎய்திய பலர் இத்திரு முறைகளுள் குறிக்கப் பெற்றுளர்:- அநுமான், அயன், அரி, இந்திரன், இமையோர், இயக்கர், உருத்திரர், கின்னரர், சடாயு, சந்திரன், சம்பாதி, சரசுவதி, உபமன்யு, கொச்சைமுனி, கௌதமர், சண்பைமுனி, சூதமுனி, சனகாதியர், நீரின் மாமுனிவன், பராசர முனிவர், வியாக்கிரபாதர், பதஞ்சலிமுனிவர், சித்தர், சிபி, சுக்கிரீவன், சூரியன், திக்குப்பாலகர், நளன், பிருகஸ்பதி, பூரூரவா, மறவாளர், மார்க்கண்டேயர், முனிகணங்கள், யானை, இராகுகேது, இராமர், இலக்குவர், வருணன், வாலி, விஞ்சையர் முதலியோர் ஆவர். விரிவஞ்சி இவ்வளவில் நிறுத்தலாயிற்று.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறைகளின் சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 2

திருவைந்தெழுத்து

தருமை ஆதீன வித்துவான்

முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்

திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருமுறை மூன்றனுள்ளும், நாவினுக்கு அருங்கலமாகிய நமச்சிவாயத்தின் அரும்பேருண்மைகளைத் தெளித்துச் செல்லும் இடங்கள் பல உள்ளன.

அவற்றுள், இரண்டு திருப்பதிகங்கள், திருவைந்தெழுத்தின் சீர்த்தியை விளக்குவதற்கே அருளப் பெற்றிருக்கின்றன. அவை `பஞ்சாக்கரத் திருப்பதிகம்' `நமச்சிவாயத் திருப்பதிகம்' என்று குறிக்கப்பெறுவன.

அவ் இரண்டனுள் முன்னது, `துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்... அஞ்செழுத்துமே, என்னும் முதற்றிருப்பாடலைக் கொண்டது, ஐந்தெழுத்து என்று மட்டும் உணர்த்திற்று. அதனால், `பஞ்சாக்கரத் திருப்பதிகம்' என்னும் பெயர் எய்தலாயிற்று.

பின்னது, திருவைந்தெழுத்து வகையுள், தூலபஞ்சாக் கரமாகிய நமச்சிவாயத்தை வெளிப்படக் கூறியதால், `நமச்சிவாயத் திருப்பதிகம்' என்னும்

குறிகொள்ளலாயிற்று. அவற்றின் பொருள் களைத் தொகுத்து உணர்த்து முன்னர், சில உண்மைகளைக் குறிக்க விழைகின்றேன்.

1.

"நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற

பெம்மான்" (தி.2 ப.11 பா.2)

என்பதில், நம் குற்றங்களை மாற்றி என்று பொருள் கூறுவதே பொருந்தும் எனினும், அருட்பெரியார் ஒருவர் ந-ம என்னும் ஈரெழுத்தையும் மாற்றி வகாரம் (அருள்) ஆகிநின்ற பெருமான் (சிகாரம்) என்று உபதேசித்தருளியது யாவரும் அறியத்தக்கது. ந + ம + ஆன = நம்மான என்று பிரித்தார். `ப + அந்தம் = பாந்தம்' (நன்னூல் 145) என்றதைக்கொள்ளும் புலவர்க்கு இது பொருந்துவதே.

2.

"நக்கர்தம் நாமம் நமச்சிவாயவ் வென்பார் நல்லரே". (தி.3 ப.9 பா.9)

இவற்றால், தூலபஞ்சாக்கரம் உணர்த்தப்பெற்றதை அறிக.

3.

"நண்பாற் சிவாய எனா நாலூர்மயானத்தே

இன்பாயிருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே". (தி.2 ப.46 பா.10)

என்பதில், முத்திபஞ்சாக்கரம் உணர்த்தப் பெற்றுள்ளது.

4. 1

"வசிவல அவனது இடம்....கழுமல வளநகரே".(தி.1 ப.126.பா.2)

4. 2

"வசி ஆற்ற மாமதியும் ஆம்வலியாம்

மழபாடி.....நாதன் நற்பாதமே". (தி.3. ப.48 பா.2)

4. 3

"மாதர் மனைதோறும் இசைபாடி வசிபேசும்

அரனார் மகிழ்விடம்". (தி..3 ப.77 பா.2)

4. 4

"கலந்தருள் பெற்றது மாவசியே காழியரனடி மாவசியே". (தி.3 ப.113 பா.10)

என்பவற்றில், பிஞ்செழுத்தும் பேரெழுத்தும் ஆகிய திருவைந் தெழுத்து உணர்த்தப்பெற்றமை உபதேசம் உற்றார்க்கே உள்ளவாறு காணலாகும்.

இத்திருமுறைகளுள் ஆங்காங்குத் திருவைந்தெழுத்தின் சீரும் சிறப்பும் நயனும் பயனும் பலபடக் குறித்திருத்தலை, திருமுறைப் பாராயணத்தைப் பொருளுணர்ச்சியொடு புரிந்து வரும் மெய்யன்பர் பலரும் அறிவர். அவற்றைத் தொகுத்துக் காட்டும் வன்மை அடியே னுக்குச் சிறிதும் இல்லாமையால், ஒரு சிறிது, இக்கட்டுரையால் குறிப்பதற்கு அவாவி, என் சிற்றறிவின் பெற்றிமையைப் புலப்படுத்தி விட்டேன்.

உறக்கத்திலும் விழிப்பிலும் உள்ளம் உருகி நாள்தொறும் நினைந்து சிவபிரான் திருவடி மலர்களை வஞ்சமில்லாத நெஞ்சத்தால் வாழ்த்துவோரை, மாய்க்கவந்த கூற்று அஞ்சுமாறு உதைத்தன. (தி.3 ப.22 பா.1)

எமதூதர் கொல்லவேண்டிக் கொண்டுபோகும் இடத்திலும், உற்ற நற்றுணையாய் வந்து, அவ்வல்லல் அகற்றிக் காத்தருள்வன. (தி.3 ப.22 பா.4)

உடம்பில் மூச்சை ஒடுங்கச்செய்து, (உள்ளப் போக்கைத் தடுத்து) உணர்வொளிச் சுடர் விளக்கினை ஏற்றி, மெய்யறிவாகிய மற்றை வழியைத் திறந்து ஏத்துவோர்க்கு இடர்களைக் கெடுப்பன. (தி.3 ப.22 பா.3)

அழிவிற்கு அடியாகிய பிறவியை அறுத்து, அன்பு செலுத்தும் அடியவர் துயரங்களைக் கெடுப்பன. (தி.3 ப.22 பா.7)

எந்நாளும் செல்வம் கொடுப்பன. (தி.3 ப.22 பா.7)

நிலைத்த பெருங் கூத்து ஆடி உயர்வன. உவப்பன.(தி.3 ப.22 பா.7)

தம்மைக்கொண்டு துதித்துவரும் தொண்டர்க்கு அண்டம் அளித்துவருவன. (தி.3 ப.22 பா.8)

ஞான விபூதியை அணிவார்தம் வினையாகிய பகையைக் கொன்று வென்றியுறுதற்குப் பெரிய படைக்கருவியாவன. (௸ பா.10)

தும்மல், இருமல் தொடர்ந்தபோழ்திலும், கொடிய நரகம் குறுகியபோழ்திலும், இப்பிறவியில் பழவினைகள் வந்து வருத்தும் போழ்திலும், மறுபிறவியிலும் திருவைந்தெழுத்தே உயிர்த்துணை யாய் நின்று காக்கும். (தி.3 ப.22 பா.6)

நான்மறையும் மந்திரமும் ஆகி வானவர் சிந்தையுள் நிலைத்து அவரை ஆள்வன. (தி.3 ப.22 பா.2)

செந்தீயோம்பும் செய்ய வேதியர் சந்திதொறும் உருவேற்றும் திருமந்திரமாவன. (தி.3 ப.22 பா.2)

புத்தர் சமணர் முதலிய புறப்புறச்சமயத்தவர் பொய்களைப் பொருட்படுத்தாத சித்தத்தவர்கள் தெளிந்து தேறியன. (௸ பா.10)

இராவணனும் அவன் மனைவி மண்டோதரியும் பாடிப் பேணிப் பயன்பெற்று உய்யச் செய்தன. ( தி.3 ப.22 பா.8)

மாலும் நாலுமுகனும் காணவொண்ணாத சேவடிச் செவ்வி உணர்ந்து திருப்பெயர் வண்ணங்களைப் பேசியும் பிதற்றியும் திருவருட் பித்துக்கொளிகளாகிய மெய்யடியவர்களுக்கு உள்ளமும் உணர்வும் நிறையும் வண்ணம் ஆவன. (தி.3 ப.22 பா.9)

நல்லவர் தீயர் என்று பிரிவுசெய்யாமல், விரும்பி உருவேற்றி வரும் அன்பர் எல்லவர்க்கும், செல்லல் ஒழியச் சிவமுத்தியைக் காட்டுவன. (தி.3 ப.22 பா.4)

திருவைந்தெழுத்தே காமபாணம், பிருதிவியாதிபூதம், பாம்பின்படம், கைவிரல் முதலியவை ஐந்தைந்தாக அமைந்திருக்கும் (உலகத்) தோற்றத்திற்கு அடியாகும். (தி.3 ப.22 பா.5)

இத்திருவைந்தெழுத்துப் பதிகத்தை ஓதியுணர வல்லவர் உம்பர் ஆவர். (தி.3 ப.22 பா.11)

இத்தகைய சீரிய கருத்துச் செல்வங்களைப் பஞ்சாக்கரத் திருப்பதிகம் வாரி வழங்கி நிற்கின்றது. நாதன், நம்பன், நக்கன், நெற்றிநயனன், நல்லார், நந்தி, வரதன், நஞ்சுண்கண்டன் என்னும் திருப்பெயர்களையுடைய சிவபிரானது திருநாமம் நமச்சிவாய என்பது. (தி.3 ப.49) அதுவே, நான்மறை மெய்ப்பொருள் ஆவது. எல்லாவுலகிற்கும் அதுவே செம்பொற்றிலகம். `நமக்குண்டாகும் நலங்கொள் நாமம்'. அதனை ஓதும்போது உள்ளம் காதலாகிக் கசிதல் வேண்டும். கண்ணில் நீர்மல்கல் வேண்டும். நா நவிற்றல்வேண்டும். உள்ளம் நெக்குருகி நினைய ஆர்வம் மிகப் பெருகிவர, கையிற் கண்மணிமாலை கொண்டு உருவேற்றல்வேண்டும். ஓதுவதில் நயம் தானாக வரல்வேண்டும். நமச்சிவாயத் திருப்பதிகத்தையும் சிந்தை மகிழச் சிவபுராணமென்று உணர்ந்து ஏத்துதல்வேண்டும். நைந்த உளத்தொடு நாவில் ஓதும்போதெல்லாம் பூந்தேனைப் போலினிக்கும் திருவைந்தெழுத்து, தம்மை விதிப்படி ஓதுவார் எல்லாரையும் நன்னெறியிற் செலுத்தும்; தக்க வானவராகத் தகும் வகை செய்யும்; எல்லாத் தீங்கையும் நீக்கும்; வல்வினைகளையும் வாட்டும்; வாராத செல்வமும் வருவித்தளிக்கும்.

நாளும் ஓதுவோரிடம் புகுதர, இயமதூதரும் அஞ்சுவர். ஓது வார் பல நல்ல குணங்கள் இல்லாராயினும் ஆகுக; கொலை செய்வா ராயினும் ஆகுக. அவர் எல்லாத் தீங்கும் நீங்கி இன்புற்றிருப்பர்.(தி.3 ப.22 பா.5)

மந்தரகிரியை ஒக்க மிகப் பெரும் பாவங்களைச் செய்தவரும் திருவைந்தெழுத்தை ஓதுவாராயின், புண்ணிய சொரூபராய் மாறி விடுவர். ஏழு நரகமும் எட்டிப் பார்க்கும் இழிநராயினும் அவர் வாயில் ஒருமுறை திருவைந்தெழுத்து ஓத வாய்த்தால் உருத்திரகணத்துள்ளே ஒருவராக்கிவிடும். (தி.3 ப.22 பா. 6)

கயிலாயத்தைத் தூக்கிக் கலக்கமுற்ற காலத்தில் அக்கலக்கம் விலக்கி இராவணனைக் காத்தது திருவைந்தெழுத்தேயாகும்.(தி.3 ப.22 பா.8)

அயனும் அம்புயநயனனும் தேடி அலைந்தும் காணாமல் அலந்து ஓதி உய்ந்ததும் திருவைந்தெழுத்தே. அதுவே உயிர்களின் பந்த பாசம் அறுக்கவல்ல ஒப்புயர்வில்லாத திப்பியத் திருமந்திரம். (தி.3 ப.22 பா.9)

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறைகளின் சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 3

இயற்கைப் பொருளின்பம்

தருமை ஆதீனப் பல்கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்,

வித்துவான் சொ. சிங்காரவேலனார்

இயற்கை நலம்

இயற்கை நலம் மனித உள்ளத்தை ஈர்க்கும் தகையது. இயைற்கையில் உள்ளம் தோயாத மனிதர் உலகிலேயே இல்லை. அந்த அளவுக்கு இயற்கையைச் சுவைக்கும் மனப்பாங்கு மனிதரிடத்தில் செறிந்திருக்கின்றது. பரந்து விரிந்த பனிக் கடலையும், பச்சைப் பசேரென்று வனப்பொடு விளங்கும் வயலையும், விண்ணை முட்டும் வியன் மலையையும், மொய்த்து நிற்கும் முல்லைக் காட்டையும், நீலவானத்தையும், கோல வெண்மதியையும், பால்மதி பக்கத்திலே விண்மீன்களோடு வானில் உலாவரும் ஒப்பற்ற மாண்பை யும் கண்டு நெஞ்சு பறிகொடுக்காதார் யாரே உள்ளனர்?

அவை உள்ளத்தைத் தம்வயமாக்கி உலகையே மறக்கச் செய்யும் மட்டிலா ஆற்றல் படைத்தவை. இயற்கையான சமஅறிவு படைத்த மனிதர்களே இவ்வாறு இயற்கை நலத்துக்கு முன்னர் ஆயின், அறிவு முதிர்ந்து, அருள் முறுகி, அன்பு பெருகி, உலகின் தட்ப வெப்ப உணர்ச்சிகளுக்குக் கலங்காத உரம் வளர்ந்து, உண்மையொளி வீசும் ஒப்பற்றோராகிய தெய்வக் கவிஞர்களுக்கும் இயற்கைக் காட்சி களுக்கும் உள்ள தொடர்பை உரைத்தலும் ஒல்லுமோ? அந்த இயற்கை நலம் ஆண்டவன் படைப்பு. அவனருளின் செழிப்பே இயற்கையின் செழிப்பு. அவனருளின் தழைப்பே இயற்கையின் தழைப்பு. அவன் அருளின் விரிவே வானத்தின் விரிவு. நீலக்கடலின் விரிவு. அவன் அருளின் உயர்ச்சியே மலையின் உயர்ச்சி. அவனருளின் ஆழமே ஆழ் கடலின் ஆழம். எனவே இயற்கை நலம் இறைவனின் நலம். இயற்கை அழகு இறைவனின் அழகு. இயற்கையினிடத்து இதயத்தைச் செலுத்து வோன் இறைவனிடத்து நெஞ்சு கொடுப்போன். இயற்கையின் துடிப்புக்குச் செவி சாய்ப்போன் இறைவன் பேச்சுக்குச் செவி கொடுப் போன். கைபுனைந்து இயற்றாத வனப்பு இயற்கைவனப்பு. அவ் வனப்பைச் செவ்விதின் உணர்ந்தவர்கள் நம் நாட்டு மெய்ஞ் ஞானியர்.

சங்க காலமும் திருமுறைக் காலமும்

சங்ககாலம் இயற்கையின் நாப்பண் இறைவனைக் கண்டு இன்புற்ற காலம். அக்காலத்து வாழ்ந்த மெய்ப்பொருளியற் புலவர் களான வள்ளுவர், நக்கீரர், கபிலர், பரணர் போன்றார் இயற்கையை உடலாகக் கொண்ட பேராஇயற்கைப் பெரியோனாம் இறைவன் புகழை எடுத்தேத்தினர். இதனை ஆங்கு அவர்தம் வாக்குகளில் பரக்கக் காணலாம். பிற்காலத்தே திருமுறை ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்தே இறைவனைத் தனித்தும், இயற்கைக் கண்ணும் கண்டு போற்றுகின்ற பண்புகளைக் காணுகின்றோம். இது அவர்தம் திருமொழிகளை இனிது நோக்குவார்க்கு எளிதில் புலனாம். நக்கீரர் திருமுருகாற்றுப் படையில், இழுமென இழிதரும் அருவியை எழுதிக் காட்டியுள்ளார். அவரது திருவுள்ளம் அருவியை வருணிப்பது மட்டுமன்று; அதனொடு ஆண்டவனது அயராத ஆரருள் வெள்ளத்தை - அதன் வேகத்தை உரைப்பதுமாகும். கபிலர் `புலனழுக்கற்ற அந்தணாளன்' எனப் பாராட்டப்பெற்றவர். மும்மலம் என்று மொழியப்படும் ஆணவம், கன்மம், மாயை என்பவை புலனைப்பற்றும் அழுக்குகள் அன்றோ? அந்த அழுக்குகள் இன்றிச் செந்தண்மை கொண்டொழுகும் அந்தணராக அப்பெரியார் வாழ்ந்தனர். அவர் தூய வாழ்வு வாழ்ந்து தூய்மை வளர்த்துச் சிவம் பெருக்கும் தவச் செயல் தலைப்பட்டமைக்கு இதனினும் வேறென்ன சான்று வேண்டும்? கபிலரது வாக்கில் இயற்கை வருணனை எழிலுற்று விளங்குகிறது. அவர் தம் `குறிஞ்சிப் பாட்டு' ஒன்றே அவர் இயற்கையைச் சுவைத்த எழிலை இனிது விளக்கும்.

அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும் கொண்ட மலையும் சாரலும், அளந்தறிய இயலாத அளவு அரும்பொருளாகத் தோற்றக் கேடின்றி நித்தமாய்த் தன்னை ஒன்றும் கலத்தலின்மையின் தூய்தாய்த் தானெல்லாவற்றையும் கலந்து நிற்கும் முதற்பொருளை யன்றோ மனித மனத்துக்குக் காட்டுகின்றன! இதனைக் கருக்கொண்டு விரிந்து நிற்பது இக்குறிஞ்சிப் பாட்டு என்பது உற்றுணர்வார்க்குப் புலனாம். திருமுறை ஆசிரியர்கள் அவ்வத் தலங்கள் தோறும் கால்நடையாகச் சென்று பெருமானை உள்ளமுருகிப் பணிந்ததோடன்றி, ஆங்காங்குக் கண்ட இயற்கை வளங்களையும் பாராட்டிப் போந்தனர். கண்டது கண்டவாறே கவிதையில் அமைத்து வைத்துள்ள மாண்பு கருதுவார்க்குச் சுவை பயப்பதொரு விருந்தாம்.

சம்பந்தர் திருமொழி

திருமுறை ஆசிரியர்களுள் முதல்வராகத் திகழ்பவர் திரு ஞானசம்பந்தர். சம்பந்தர் திருமொழி மூன்று திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவற்றைத் தலமுறையாகவும், பண்முறை யாகவும் தமிழுலகம் அறிந்து வருகிறது. திருமுறை வெளியீட்டைத் தமிழகத்துக்கு நல்கிவரும் திருத்தருமை யாதீனத்து இருபத்தைந் தாவது குருமுதல்வர் ஷ்ரீலஷ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் தக்கதொரு நிலையான திருமுறைப் பணி ஆற்றி வருகிறார்கள். அந்தப்பணியின் முகிழ்ச்சியே இந்தச் சிற்றாராய்ச்சியும். சம்பந்தர் திருமுறையில்,இயற்கையைச் சுவைத்த பாங்கை எடுத்துக் காண்பது இக்கட்டுரையின் குறிக்கோள்.

இயற்கை வளமும் சம்பந்தரும்

சம்பந்தர் ஞானச்சிறு குழவி. திருநெறிய தமிழைப் பொழிய வந்த இளந்தமிழ் ஞாயிறு. இயற்கைக் காட்சிகளை வருணிப்பதில் இப்பெருந்தகையார் மற்றை யாவரினும் மேம்பட்டு விளங்குதல் அறிவாளர் பெரிதும் அறிந்த செய்தியாகும்.

சங்ககாலத்து, ஒரோவொரு திணையைச் சிறக்கப் பாடுவதில் ஓரொருவர் இருந்தனர். இதனைப் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற பெயராலும், மருதன் இளநாகனார் என்ற பெயராலும், இன்னும் பல புலவர்களின் அடைச் சிறப்புக்களாலும் அறியலாம். ஆனால் திருஞானசம்பந்தரோ குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணை ஒழுகலாற்றையும், திணைச்சிறப்பையும் பாடுவதில் வல்லவராகத் தோற்றுகிறார். ஒவ்வொரு திணையில் அமைந்த தலத்தையும் பாடுங்கால் அவ்வத்திணை மரபின் உச்சநிலையில் சென்று விடுகிறார் இப்பெருந்தகையார், எனவே இப்பெருந்தகை யாரின் திருமுறை காட்டும் இயற்கை வருணனையை ஆராய வேண்டு மென்றால், திணை வரிசையாக இவர்தம் திறத்தினைக் காண்டல் தக்கதாகும். குறிஞ்சி நிலத்தமைந்த தலங்களை வருணிக்கப் புகுங்கால் இவர்தம் வருணனைப் பகுதி குறிஞ்சி நிலத்தையே நம் கருத்தில் கொண்டு வந்து நிறுத்தும். மருதத்தைப் பற்றிய இவர்தம் கவிதை மருத நிலத்தையே மனத்தில் கொண்டுவந்து மகிழ்நடமாடவைக்கும். முல்லையைப் பற்றி மொழிய முற்பட்டனராயின் முல்லை நிலத்திலே நாம் உலவுதலை ஒத்த உணர்ச்சியில் ஈடுபடுவோம். நெய்தனிலத்தை நவிலலுற்றாராயின் கடற்காற்று நம்மேனியைத் தொட்டலைக்கும், அலைமுழக்கம் நம் செவிகளில் அலைமோதும். கண்ணுக்கு விருந்தளிக்கும் கருந்திரைகள், ஆம்; அத்துணை அரும்பாங்கு இவர்தம் வருணனையின் வனப்பு எனலாம். எனவே இவர்தம் வருணனைப் பகுதியை நான்கு நிலவகையாய்ப் பிரித்து ஆராய்தல் பெரிதும் பொருந்துவதாகலின் அவ்வாறே ஈண்டு ஆராயலாமென்று அமைகின்றனன்.

1. குறிஞ்சி

மழைத் துளி

உயர்ந்த மலை. விண்ணை முட்டும் சிகரங்கள். மேகங்கள் உச்சி மலையை முத்தமிட்டு நிற்கின்றன. காட்டு மரங்கள் மலைக்கு அணிசெய்வன போன்று நிமிர்ந்து, பூவும் கொத்துமாகப் பொலிவுற்று நிற்கின்றன. அதோ அந்த மரக்கிளைகளில் அந்தக் கடுவன் எவ்வளவு கடிதாக ஓடித் தாவுகிறது! அந்த மாமரத்தின்மேல் பரபர என்று ஏறுகிறது அது. உச்சிக்கிளைக்குச் சென்றுவிடுகிறது. உச்சிக்கிளை யிலிருந்து ஒரு உந்து உந்தி மற்றொரு கிளைக்குத் தாவுகிறது அந்த ஆண் குரங்கு! என்ன வேகம்! மாங்கிளையில் கனிந்திருந்த கனி ஒன்றும் அந்தக் கடுவன் கையில் சிக்கிக் கொள்கிறது. இழுத்துவிட்ட மாங்கொம்பு உச்சி மலையை நச்சி முத்தமிட்ட பச்சைமேகத்தை ஒரு அசைப்பு அசைக்கிறதாம். அதுவோ சூல்கொண்ட கருமுகில். உடன் மழைத் துளி பொல பொல வென்று பொற்றைக்கல் மேல் பொழிகிற தாம். காட்டுப் பெண் மான்கள் மழைத் துளிக்கு மனந் தடுமாறி மலைச் சோலைகளில் அங்கு மிங்கும் ஓடி அலைகின்றன. இத்துணை எழில் நலம் எங்கு காணுகிறோம்? திருவண்ணாமலை என்னும் திருத்தலத் தில்தான். காட்சி அழகாக உள்ளதன்றோ?

"தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்

தூமாமழை துறுகல்மிசை சிறுநுண்துளி சிதற

ஆமாம்பிணைஅணையும்பொழில்அண்ணாமலைஅண்ணல்." (தி.1 ப.10 பா.2)

வேழமும் பிடியும்

திருவண்ணாமலையிலேயே மற்றொரு காட்சி. இரண்டு யானைகள் இன்பமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒன்று இளம் பிடி. மற்றொன்று மாண்புடைய மாக்களிறு. ஒருநாள் காட்டு வழியில் அன்புப் பிடி காணாமற் போய்விடுகின்றது. களிற்றுக்கோ கவலை. கானகமெல்லாம் எதிரொலிக்கப் பெருங்குரலால் பிளிறிப் பிளிறி அழைத்துப் பார்க்கிறதாம். குரல் இல்லை. காட்டுவழியெல்லாம் திரிந்து திரிந்து திகைப்போடு உலாவிய அந்தக் களிறு மலைச்சாரல் ஒன்றில் நிற்கிறது. கண்கள் சுற்றுகின்றன. அப்படியே படுத்து உறங்கு கிறதாம். ஆம்; அவ்வளவு அலைச்சலும், அலைச்சலால் வந்த அயர்வுமே அதன் உறக்கத்துக்குக் காரணம் என்கின்றது பாடல். "பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமத வேழம்

அழைத்துத் திரிந்தங் குறங்கும் சாரல் அண்ணாமலையாரே." (தி.1 ப.69 பா.4)

குழலோசை

இன்னும் திருவண்ணாமலைச் சாரலிலேயே இன்னொரு காட்சியையும் எழுதிக் காட்டுகிறார்கள். ஓர் ஆயன் எருமைகளை ஓட்டிவந்து மலைச் சாரலில் மேய்க்கிறான். மாடுகள் மலைச்சாரலில் மேய்கின்றன. மாலை வருகிறது. இல்லத்துக்குத் திரும்பவேண்டிய நேரம். எண்ணுகிறான். எருமை ஒன்றைக் காணவில்லை. தன் வேய்ங் குழல்மேல் தளராத நம்பிக்கை உண்டுபோலும் அவனுக்கு. எடுத்து ஊதுகின்றான். வேய்ங்குழல் இசை மலையகமெல்லாம் பரவுகிறது. குழலோசையைக் கேட்ட அந்த எருமைகள் அனைத்தும் ஓடி வருகின்றன. ஆயன் அகமகிழ்கின்றான்.

எத்துணை அரிய அழகுள்ள செய்தி! இதனைச் சொல்வதன் வாயிலாகத் தமிழகத்துச் சிற்றூரிலும் இசை நலம் போற்றத்தக்க முறை யில் இலங்கும் மாண்பை யன்றோ சொல்கிறது ஞானசம்பந்தர் இதயம்!

"கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற் குழல்ஊத

அனைத்தும்சென்று திரளும் சாரல்". (௸ பா.6)

அளக்கும் சாரல்

இத்தகைய அண்ணாமலைச் சாரலில் வாழ்கின்ற குறவர் மாக்களின் நிலையைக் கொஞ்சம் சிந்தித்துத் தெளிவோம். மூங்கிற் காடுகள் செறிந்து உள்ளன. அவை முதிர்ந்து முத்துக்களைச் சொரி கின்றன. அவற்றை அம் மலைவாணர்திரட்டி எடுத்துச் சேகரிக் கிறார்கள். தம் இல்லங்கள் முன்பு அம்முத்துக்களைக் குவித்துவைக்கிறார்கள். ஆடியும் பாடியும் அவற்றை அளக்

கிறார்களாம். அம் மட்டுமோ? `சேரவாரும் செகத்தீரே' என்று எல்லோரொடும் கூடி நுகரவும் அழைக்கின்றார்களாம்.

என்னே அவர்களது பரந்த மனப் பாங்கு! காக்கை கரவாது கரைந்து உண்ணுதல்போல பெற்ற ஆக்கத்தைப் பிறர்க்கும் பங்கிட்டு நுகரக்கொடுக்கும் அவர்கள் பண்பு நலத்தை என்னென்பது! அது இயற்கை நலத்தோடியைந்த அன்னோர் மனநலத்தின் விளைவே அன்றோ?

"மூடிஓங்கி முதுவேய் உகுத்த முத்தம் பலகொண்டு

கூடிக் குறவர் மடவார் குவித்துக் கொள்ள வம்மினென்று

ஆடிப்பாடி அளக்கும் சாரல்" (தி.1 ப.69 பா.9)

`எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழவோயே' என்ற புறநானூற்றுப் பரந்த மனம் அந்த மலைவாணரிடத்தே குடிகொண்டி ருக்கும் மாண்பு தெய்வத் தமிழுள் இணைந்து இலங்குவது ஏற்றற் குரியது ஆகும்.

இனிநம் அருளாளரின் குறிஞ்சி வருணனையைத் தொடர வேண்டுமென்றால் திருக்குற்றால மலைக்குச் செல்லுதல் வேண்டும்.

கூதல் மாரி

"ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம், ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்" என்று குற்றாலக் காட்சியைக் குறவஞ்சி கூறும். சடசடசட எனப் பெருமுழக்கோடு சரிந்துவிழும் அருவியைக் காணலாம். விண்ணையளாவிய மலைச்சாரல். பக்கத்திலே குறும்பலா வீசர் திருக்கோயில். மரங்கள் தோறும் நடமிடும் மந்திகள். கூதிர் காலத்துக்கு முன்னால் சிறு மழைத் துளிகள் தூற அந்த அருவிக் கரையில் உலாவுவோமேயானால் நெஞ்சில் கவலை, இன்னல், பிணி, பெருகிய துன்பம் இவை ஏது? எங்கும் அமைதி! இயற்கை அன்னை யின் எழிலார்ந்த படைப்பு! குற்றாலநாதரின் குறுமுறுவலில் குவலயத் தையே மறந்துவிடுவோம். நம் பெருமான் பாடுகிறார்கள்; "கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்." ஆம்; சம்பந்தப் பெருமான் அவ்வனப் பில் சிந்தையைப் பெரிதும் செலுத்தியிருப்பார்கள் போலும்.

அன்புக் காட்சி

கிளைகள் தோறும் மந்திகள் நெருங்கிப் பாய்கின்றன. அப்பெண் குரங்குகள் பலா மரத்தின் மீது ஏறிப் பழங்களை விண்டு உண்கின்றன. உண்ணும்போது பழங்களும் சுளைகளும் தவறிக் கீழே விழுந்துவிடுகின்றன. ஆண்குரங்குகள் அவற்றை மகிழ்வோடு எடுத்து நுகர்ந்து இன்புறுகின்றன. இந்த அரிய அன்புக் காட்சியைச் சம்பந்தப் பெருமான் கண்டு, சுவைத்துக் கவியுருவம் கொடுத்திருக்கும் அழகைக் கற்றறிந்தோர் என்றும் மறக்க இயலாது.

"கீட்பலவும் கீண்டு கிளைகிளையின்

மந்திபாய்ந்து உண்டு விண்ட

கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவன்

உண்டுகளும் குறும்பலாவே." (தி.2 ப.71 பா.2)

அருவி

குற்றாலத்து அருவி! மணியும் வயிரமும் கொழித்துப் பாய் கிறது! கோயிலுக்கு அருகில் நீர் ததும்பி ஓடிவருகிறது!

"மணிகொழித்து வயிரம் உந்திக்

குன்றத்தருவி அயலே புனல் ததும்பும்". (௸ பா.7)

வேழப் பூசை

மற்றொரு காட்சி. மலையிலிருந்து இறங்கி வருகிறதாம் ஒரு மழகளிறு. பக்கத்தில் தன் அன்புப்பிடி வருகிறது, மலை உச்சியிலிருந்து குறும்பலாவீசரைப் பணியும் குறிக்கோளோடு வருகின்றனவாம் அவை. சாத்த மலர் வேண்டுமே. வருகின்ற வழியிலே உள்ள வேங்கை மரத்துப் பூங்கொத்துக்களை ஒடித்து மத்தகத்திலே சூடிக் கொண்டு வருகின்றனவாம். வந்து குறும்பலாவீசர் குரைகழல் பணிகின்றனவாம் அக்கூந்தற் பிடியும் கொடுங்களிறும். விலங்குகளே இவ்வாறு பணியுமானால் மனிதர் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?

"பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து

மத்தகத்திற் பொலியவேந்திக்

கூந்தற் பிடியும் களிறும்

உடன்வணங்கும் குறும்பலாவே." (௸ பா.8)

செவ்வழி

வண்டுகள் அந்த மலைச் சாரலிலே வாழ்பவை. பெடைகளும் சுரும்புகளுமாக அங்குமிங்கும் அலைகின்றன. அவற்றுள் இரண்டு வண்டுகள் குருந்தமரத்தின்மேல் ஏறிநின்று செவ்வழிப் பண்ணைச் செவ்வையாக இசைக்கின்றனவாம்.

"பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்

குருந்தம் மேறிச் செவ்வழி பாடும் குற்றாலம்."(தி.1 ப.99 பா.10)

சம்பந்தப் பெருமான் அஃறிணைகளெல்லாம் ஆணும் பெண்ணுமாக வந்து அடிபணியுமாறே அருளுதல் ஆழ்ந்து இன்புறத்தக்க தொன் றாகும். இன்னும் `கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம்' என்றும், `கோலமஞ்ஞை பேடையொ டாடும் குற்றாலம்' என்றும் பாடுகிறார்கள். இந்த அளவில் குற்றாலத்துக் குறிஞ்சி வளத்தை விட்டு இனி முதுகுன்றுக்குச் செல்ல முற்படுவோம்.

முதுகுன்றம்

திருமுதுகுன்று என்ற தீந்தமிழ்ப்பெயர் விருத்தாசலமாக மாறி வேதனைதரும் இக்காலத்து, அந்த முதுகுன்று என்னும் பெயரை மொழிந்தாலே மூண்டெழும் இன்ப உணர்வை என்னென்பேன்!

சில கற்பனைகள்

மணிமுத்தாறு மகிழ்ச்சி நடை போட்டுப் பாய்கின்றது. சந்தன மும் குங்குமமும் ஆற்றுவெள்ளத்திற் கலந்து மணம் வீசி வருகின்றன. சம்பந்தப் பெருமான் திருவுள்ளம் ஆற்றழகில் ஈடுபட்டுவிடுகிறது;

"கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமம் கொண்டு

முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே." (தி.1 ப.12 பா.1)

அந்த மலையில் மூங்கில் மரங்கள் தோறும் இளமைமிக்க மந்திகள் இருக்கின்றன. அவை தம் மகவினொடும் அமர்ந்துள்ளன. மழை பொழியத் தொடங்குகிறது. அவை அஞ்சி ஓடி மலைக் குகையில் ஒளிகின்றன. மலைக்குகையிலிருந்தோ மால்யானை புறப்பட்டு மலைச்சாரலில் இரைதேடி அலைந்துகொண்டிருக்கிறது. (தி.1 ப.131 பா.5) அதுமட்டுமா? அம்மந்திகள் மலைமீது ஏறுகின்றன. கூட்டம் கூட்டமாக மலர்களை பறித்துக் கொள்கின்றன. முந்திச் சென்று முதுகுன்றமர்ந்த முதல்வனைத் தொழுது பணிசெய்கின்றன. (தி.2ப.200 பா.2) அதனுடன் நின்றுவிட வில்லையாம் அந்த மந்திகள். திருகல் வேய்கள் வளையும் வண்ணம் மூங்கில் நடமும் ஆடத் தொடங்கிவிடுகின்றனவாம் அச்சிறு மந்திகள். (தி.2 ப.200 பா.10) அழகான காட்சி. நகை விளைக்கும் காட்சி. முதுகுன்றத்தில் இயற்கைச் சூழலிலும் ஓர் ஈகைக் காட்சி. காந்தள் மலர்கள் கையேந்துகின்றன. குறைவில்லாத முதிய மூங்கில்கள் அவை நிறைய முத்துக்களை உதிர்க்கின்றனவாம், `காந்தள் மலர் நிறைய' என்றும், `குறைவில்லா முதுவேய்கள்' என்றும், பெருமானார் பேசியருள்வது அறிவுக்கொரு விருந்து அல்லவா? (தி.1 ப.12 பா.8).

காளத்திக் காட்சிகள்

திருக்காளத்தியை - அதன் இயற்கை நலத்தைப் பெருமானார் சொல்லும்போது நாம் மிக்க ஈடுபாடு கொள்ள வேண்டி யிருக்கிறது. கருமந்தியின் ஆட்டமும், கன்றினொடு விளையாடும் பெண்யானை யின், விளையாடலும் நம்மைப் பெரிதும் கவர்ந்து விடுவன அன்றோ?

"கல்லதிரநின்று கருமந்தி விளையாடு காளத்திமலையே." (தி.3 ப.69 பா.3)

"கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளையாடு காளத்திமலையே. " (௸ பா.3)

என்று நெஞ்சு நிரம்பப் பாடுகிறார்கள் செஞ்சொற் குழவியார்.

மந்தியும் ஊடலும்

திருச்சிராப்பள்ளிக் குன்றுடையானை ஞானப் பிள்ளையார் பாடுங்கால் சிராப்பள்ளிச் சிகரத்திலே ஈடுபட்டு விடுகிறார்கள்.அந்த மலையில் மந்திகள் நிகழ்ச்சிதான் முந்திவருகிறது. அவர்கள் தம் சிந்தையிலே. அந்தக் காட்சி சிந்தைக்கு விருந்தாக அமையத்தக்க தாகும்,

மந்திகள் மலைமேல் ஏறுகின்றன. அவற்றின் வயிற்றோடு ஒன்றி அவற்றுடன் செல்கின்றன இளங்குட்டிகள். மூங்கில் மரங்கள் மேல் பாய்ந்து பாய்ந்து மலை உச்சிக்குச் செல்கின்றவாம் மந்திகள். இந்த இடத்துத் தமிழ் மரபு ஒன்று சிந்திக்கத் தக்கது. வரைபாய்ந்து உயிர் நீத்தல் ஒரு வழக்கு, உயிர்நீப்போர் சிலர் மலை உச்சியிலேறி அங்கிருந்து வீழ்தல். மடல் ஏறுதல் என்று ஒன்றும் உண்டு. இவை புலனெறி வழக்காகப் பண்டுபயின்றவை. இப்படி ஏறும் மந்திகள் தாம் மணம் புணர்ந்த கடுவனொடு ஊடல் கொண்டவை என்று முடிவுகட்டுகிறார்கள் முத்தமிழ் விரகனார். கணவனொடு ஊடிக் கைக்குழவியோடு தற்கொலை புரியச் செல்ல முற்படும் தையலர் போலக் கைம்மகவேந்திக்

கடுவனொடு ஊடி வரைபாய்ந்து உயிர் துறக்க வந்தன அம்மந்திகள் என்று எண்ணிப் பாடுகிறார்கள்.

"கைம்மக வேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்

செம்முகமந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி. " (தி.1 ப.98 பா.2)

காதல் களிறு

உய்யக் கொண்டான் என வழங்கும் கற்குடி மலையில் சில காட்சிகள்; அங்கே வண்டுகள் பின்னணிப்பாடல் பாடுகின்றனவாம். அதற்கேற்ப அழகு மயில்கள் ஆடுகின்றனவாம். குறமகளிர் குழந்தை களை ஏந்தி வெளியில் உலாவுகிறார்கள். அவர்கள் கையில் ஏந்தியிருக் கும் மைந்தர்கள் அம்புலியை அண்ணாந்து பற்றுகிறார்களாம். மலை யின் உயரத்தை அப்படிச் சொல்லுகிறார்கள். இன்னுமொரு அன்புக் காட்சி. ஒரு பெண் யானை. நல்ல பசி. அதனுடைய களிறு தன் துதிக்கையால் மூங்கில் முளைகளை வாரிப் பெண் யானைக்கு ஊட்டு கிறதாம்! இதுவன்றோ காதல்! "பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறென வும் உரைத்தனரே!' என்ற சங்க இலக்கியம் நினைப்புக்கு வருகின்ற தன்றோ? பல்லாற்றானும் நலம் சிறந்த அக்காதல் காட்சியைப் படம்போல எழுதிக் காட்டுகிறார்கள் பைந்தமிழ்க் காவலனார்.

"மருங்களி யார்பிடிவாயில் வாழ்வெதிர் இன்முளை வாரிக்

கருங்களி யானை கொடுக்கும் கற்குடி மாமலை யாரே." (தி.1 ப.43 பா.4)

திருக்கயிலாயத்தைப் பற்றிய வருணனைப் பகுதியோடு குறிஞ்சிப் பகுதியை முடித்து மேலே செல்வோம்.

கன்றும் பிடியும்

திருக்கயிலாயம் சைவர்க்குத் தலைநகர். திருக்கயிலாயத் திலிருந்தே சித்தாந்த சைவச் செந்நெறி பரவியது, திருக்கயிலாய பரம்பரையில் வந்த அருள் தேக்கங்களே ஆதீனங்கள். திருக்கயி லாயத்தைச் சம்பந்தப் பெருமான் கவியிசைக்கும்போது அவர்கள் உள்ளத்தில் ஞான அநுபவம் துளும்புகிறது. சிவஞான அமுதம் பொங்குகிறது. தெய்வத் தீந்தமிழாக வழிகிறது. `பொடிகொள் உருவர் புலியின் அதளர் புரிநூல் திகழ்மார்பில்' என்று தொடங்கித் திருமுறையாக முகிழ்க்கிறது அருளின் தெளிவு. கயிலாய மலையில் இடி முழங்குகிறதாம். அம்முழக்கம் கேட்டு அஞ்சி இரிகின்றதாம் சிங்கம், மலைப்பாம்புகள் ஆனையையும் விழுங்கும் சிறப்பினவாம். உழுவைப் புலி இரைதேடிச் சினம்

கொண்டு அங்குமிங்கும் அலைகிறது. இருட்டு வேளையில் களிற்றைக் காணவில்லையாம். திகைத்துத், தேடுகின்றனவாம் பிடியும் கன்றும். மலைச்சாரலில் ஓடுகின்றனவாம், ஓடிக் கயிலாயத்தின் அடிவாரம் சேர்கின்றனவாம். அவை, கன்றும் பிடியுமாகிய அஃறிணைச் சாதியே அவ்வாறானால் ஆறறிவு படைத்த மனித இனம் அடிவாரம் சேரத் தயங்குவது ஏன்? என்று கேட்பது போலப் பிறங்குகின்றது பெருமானார் திருமொழி.

"தென்றி இருளில் திகைத்த கரிதண் சாரல்நெறிஓடிக்

கன்றும் பிடியும் அடிவா ரம்சேர் கயிலை மலையாரே" (தி.1 ப.68 பா.5)

வண்டின் இசை

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்கிறது, தமிழ் வழி. நம் பெருமானார் வருணனைகளில், மருத நிலத்தைச் சார்ந்தனவாக உள்ளவை இப்பகுதியில் ஆராயப்பெறும். மருதத்தைப்பற்றிய சம்பந்தப் பெருமானார் வருணனைகளில், வண்டு பண்ணிசைத்தல் பன்முறையும், பல்காலும், பேசப் பெறும் ஒன்றாகும். எனவே அவ்வாறு வருகின்ற இடங்களை முன்னே குறித்துப் பின்னே பிறவற்றின்மேல் செல்வோம்.

"குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்

நிழலின்எழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றியூர்" (தி.1 ப.18 பா.5)

"நிழலார்சோலை நீலவண்டினம்

குழலார் பண்செய் கோலக்கா உளான்" (தி.1 ப.23 பா.7)

"கண்ணின்றெழு சோலையில் வண்டு

பண்ணின் றொலிசெய் பனையூரே" (தி.1 ப.37 பா.2)

"வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப்பெடையினொடும்

ஒண்டரங்க இசைபாடும் அளி அரசு" (தி.1 ப.60 பா.1)

"மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலும் தேனருந்திப்

பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே" (தி.1 ப.65 பா.2)

"பண்தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே" (தி.1 ப.66 பா.9)

"பண்தான் கெழும வண்டு யாழ் செய் பழனநகராரே"(தி.1 ப.67 பா.10)

"வண்டெ லாம்நசை யால்இசை பாடும் வலஞ்சுழி" (தி.2 ப.2 பா.1)

"வண்டினம் துத்தம்நின்று பண்செயும் சூழ்பொழில் துருத்தி" (தி.2 ப.98 பா.10)

"வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம்

காவிவாய்ப் பண்செயும் கானப்பே ரண்ணலை"(தி.3 ப.26 பா.3)

"வண்டுபண் முரலும்சோலைத்

திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி"(தி.3 ப.92 பா.7)

இவ்வாறு தம் திருமொழியுள் வண்டுகள் பண்ணிசையைப் பன்முறை சொல்லிச் சொல்லி இன்புறுதல் நம்பெருமானார் பண்பு நலமாகும். இனி மருதக் காட்சிகளிற்சில.

வயலில் திருமணம்

திருவீழிமிழலை நீர்வளமும் நிலவளமும் அமைந்த ஒரு அரும்பதி. பச்சைப்பசேரென்ற பைங்கழனிகள். நல்ல வளமான வயல்களல்லவா? தாமரைகள் பூத்திருக்கின்றன. சங்குகள் அங்கு மிங்கும் அலைந்து மிதக்கின்றன. வயலுக்குப் பக்கத்தில் புன்க மரமொன்று பொலிவுற்று நிற்கின்றது. புன்க மரத்தின் பூக்களோ பொரிபோன்று பூத்திருக்கின்றன. பூத்திருக்கும் தாமரையோ தீப் பிழம்பைப்போல. காற்று அசைகிறது. புன்கமரம் வளைந்து ஆடுகிறது. அதன் பூஞ்சினைகளிலிருந்து பொரிபோன்ற பூக்கள் தீயைப்போல மலர்ந்த பூந்தாமரையில் உதிர்கின்றன. பக்கத்திலே சங்குக் கூட்டங்கள். இது திருமணக் காட்சி போல அன்றோ உள்ளது! தாமரையே அக்கினி குண்டம். புன்கமலர்களே பொரிகள். சுற்றத்தார் கூட்டமே சங்குகள். இப்படித் திருமணம் செய்கிறதாம் திருவீழிமிழலை. நெஞ்சைக் கொள்ளை கொள்ளத்தக்க அழகிய இனியஉருவகம். பெருமான் பாடுகிறார்கள்.

"தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குள

வர்க்கம்திகழச் சலசத்தீயில்

மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட

மணம்செய்யும் மிழலையாமே".(தி.1 ப.132 பா.6)

சிவந்த வண்டு

மற்றொரு காட்சி. செங்கழுநீர்ப்பூக்கள் சிவந்து மலர்ந்திருக் கின்றன. ஓய்யெனப் பறந்துவந்த வண்டு அச்செங்கழு நீரைச் சூழ்ந்து, முரன்று, அணவி, வாசம் துதைந்தாடித் தாழ்ந்து மது நுகர்ந்து தாதருந்தியதாம். சிவந்த மகரந்தத்திற் படிந்த வண்டு கருநிறம் நீங்கிச் செந்நிறம் பெற்றுவிட்டதாம். அங்கிருந்து செவ்வழிப்பண்ணைச் சிறந்த முறையில் இசைக்கிறதாம். செவ்வழி ஒரு பண் வகை. அதிலும் ஒரு நயம். பாடுவது சிவந்த வண்டு. பண்ணும் செவ் (சிவந்த) வழியாம்.

"சேறாடு செங்கழுநீர்த் தாதாடி

மதுவுண்டு சிவந்தவண்டு

வேறாய உருவாகிச் செவ்வழிநற்

பண்பாடும் மிழலையாமே". (தி.1 ப.132 பா.7)

அன்னமும் அரசும்

வயலிலேயே மற்றொன்று. அன்னம் அரசுவீற்றிருக்கின்ற தாம். மன்னனுக்கு இருக்கையாம் மாணிக்கத்தவிசு தாமரை; இலைக் குடை; மருங்கிலே நெற்கதிர்கள் கவரிவீசுகின்றன. இள அன்னம் இளவரசனாக வீறுடன் வீற்றிருக்கிறது இவற்றுக்கு இடையில்:

"செறிஇதழ்த்தா மரைத்தவிசில் திகழ்ந்தோங்கும்

இலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்

வெறிகதிர்ச் சாமரையிரட்ட இளவன்னம்

வீற்றிருக்கும் மிழலையாமே". (தி.1 ப.132 பா.2)

சில காட்சிகள்

கழனிகளில் சங்குகள் ஈன்ற முத்துக்கள் பரவிக்கிடக்கின்றன. தாமரைகள் மிகுதி. கயல்கள் துள்ளுகின்றன. பவளம் வேறு கிடக்கின் றன. முத்துக்கள் பாவையர் பல்லைக் காட்டுகின்றன. தாமரைகள் தையலர்தம் முகத்தைக் காட்டுகின்றன. துள்ளிவிழுந்த கயல்கள் தோகையர்கள் விழிகளைத் தோற்றுகின்றன. பவளம் பனிமொழியார் வாயழகு காட்டுகின்றன. இவ்வாறே கழுமலத்தைப் பற்றி வருணிக்கு மிடத்தும் கவுணியர் பெருந்தகை கவின்பெறக் கவியிசைக்கின்றார்கள். (௸ பா.3) இப்படி எல்லாம் மிழலை நகரின் கழனிவளத்தை விரித்துப் பாடிக்கொண்டே போகின்றார்கள் பைந்தமிழ் விரகனார். திருவீழி மிழலைச் சோலைச் சிறப்பைச் சொல்ல முற்படுகிறார்கள். சோலைக்குப் பக்கத்திலுள்ளசாலையிலே பல கலைகளையும் கற்றுணர்ந்த பண்டி தர்கள் வேதங்களை ஓதிக் கொண்டிருப்பார்களாம். சோலைக்கிளிகள் அதனைப் பன்னாளும் கேட்டுக்கேட்டு வேதங்களுக் கும் பொருள் சொல்லுமாம். (தி.1 ப.132 பா.1) ஈதலும் ஏற்றலும் அது மட்டுமா? சோலைகளிலே தமிழ் நாட்டு மரபு பற்றிய மற்றொரு நிகழ்ச்சியை மறக்கமுடியுமா? கலைக்குத் திறமறிந்து பரிசளித்தார்கள் தமிழ் நாட்டின் முன்னைய புரவலர்கள் என்று ஏட்டில் அறிந்துள்ளோமே யன்றிக் கண்டதில்லை; அதனொடொத்த ஒரு நிகழ்ச்சியை நாம் திரு வீழிமிழலையில் காணமுடிகிறது; முகில்களின் இடிமுழக்கமே முழவு. மயில்கள் ஆடுகின்றன. வண்டுகள் பாடுகின்றன. இப்படிச் செவ்வை யாக நிகழும் ஆடல் பாடற் கலைகளுக்கும் பரிசு வழங்க நினைக் கின்றதாம் கொன்றை. கொன்றை பொன்போலப் பூக்கும் தகைய தன்றோ? கலகல என உதிர்க்கிறதாம் அழகு மலர்களை. காந்தள் கையேந்தி வாங்குகிறதாம். என்னே இயற்கைக் காட்சி! கற்பனை யொடு கலந்து இன்பம்பயக்குமாறு! பெருமானாரது அக்காட்சியைக் கருத்திற் கண்டு சுவைமின்;

"வரைசேரும் முகில்முழவம் மயில்கள்பல நடமாட வண்டுபாட

விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்

கையேற்கும் மிழலையாமே". (தி.1 ப.132 பா.4)

கடைசியாகத் திருவீழிமிழலையில் இனி நாம் காண வேண்டிய இடம் பொய்கை. அங்கே ஒரு பொற்பார் காட்சி. அதன் மாட்சி உள்ளுதொறும் உவகை பயப்பது.

அன்னம்

தாமரைகள் தளதள என மலர்ந்திருக்கின்றன. அத்தாமரைப் பொய்கையில். இள அன்னம் அத்தாமரைகளில் நடை பயில்கின்றது. அதனால் வெண்டாமரையின் பொகுட்டு செந்தாது உதிர்க்கின்றதாம். இந்தக் காட்சியை வியந்து பாடலாக்குகிறார்கள் சிவஞானப்பிள்ளை யார்.(தி.1 ப.11 பா.9)

மருதத்தில் மற்றும் சில

திருவலிதாயம் என்ற தலத்தில் மந்திகள் வந்து கடுவனொடு வணங்கித் தொழுகின்ற மாண்பார் காட்சியைச் சொல்லுகிறார்கள். (தி.1 ப.3 பா.5) திருக்காட்டுப்பள்ளியில் வாழைமரங்களின் வளத்தை வனப்புற இசைக்கிறார்கள். கையருகே கனிகளை ஈன்று தலைநிமிர்ந்து தழைத்து நிற்கின்றனவாம் வாழைகள். (தி.1 ப.5 பா.1) திரு ஆவூர்ப்பசுபதி ஈச்சரத்தைப் பாடுங்கால், வாழைத்தாறுகளில் பாய்ந்த கூழைமந்திகள் கனிகளை உண்டு மிண்டிட்டு, இனத்தையெல்லாம் அழைக்கின்ற எழிலைச் சுவைபட இயம்புகிறார்கள். (தி.1 ப.8 பா.7) வேணுபுரத்தை விளம்புமிடத்து, அதன் பொழிற் சிறப்பையும், கமலமலர்சாய இளவாளை குதிகொள்ளும் பொய்கைப் பொலிவையும் (தி.1 ப.9 பா.6) வருக்கமார்தரு வான்கடுவன்னொடு மந்திகள் தருக்கொள் சோலையில் தருக்கொடு பாய்கின்ற தாவாத எழிலையும் (தி.2 ப.1 பா.8) சொல்லிப் போகின்றார்கள். திருநின்றியூரின் மருதவளத்தைச் சிறப்பிக்க வருகிறார்கள். நிழலின் எழில் நிகழ்கின்ற நீள்மரச் சோலைகளாம் அங்கு. குழலின்னிசை வண்டின்னிசை கண்டு குயில்கள் ஓவாது கூவுகின்றனவாம். அந்தக் கூவிய குரலில் மேவிய நெஞ்சால் பாவியல் மாலை பாடிச் சிறப்பிக்கிறார்கள்.(தி.1 ப.18 பா.5)அரிசிலாற்றங்கரையில் அமைந்த திருப்பாம்புரத்தில், அரிசிலாறு பருமணி சிதறுகிறதாம். மடக் கொடியவர்கள் வருபுனலாடுகின்றனராம். (தி.1 ப.41 பா.8) பெருந்துறை பற்றிப் பேசும்போது, கமுகினின்று பாய்ந்திழி தேறல் மல்குகின்ற தென்றும், (தி.1 ப.42 பா.3) கயல் பாய்வதால் நீலமலர் கண்போல் மலர்கின்றதென்றும் (தி.1 ப.42 பா.9) கூறுகிறார்கள். திருப்பழன நகரம் மருதவளத்தில் சிறந்து விளங்குவது. படுகரில் தெங்கின் பழம், கமுகில் விழுந்து, வாழையில் வீழ்கின்ற வளம் சிறப்பாகப் பேசப்படுகிறது. (தி.1 ப.67 பா.6) திருஇடைச்சுரத்தை எண்ணுங்கால், வயலில் வளமான வாளையும், கயலும், போரிடுகின்ற காட்சியை நின்று செவி ஓர்க்கின்ற செம்முக மந்திகள் வயற்பக்கமாக ஆண் குரங்குகளோடு ஓடிவந்து வேடிக்கை பார்க்கின்ற வியத்தகு காட்சியைப் பேசாமல் இருக்க முடியுமா? (தி.1 ப.78 பா.2) திருவாரூரில் அக்காலத்தும் ஆலைகள் இருந்தன. ஆலையின் வெம்புகைபோய் முகில் தோய்ந்ததாம். (தி.1 ப.105 பா.2)

திருவையாற்றில் கண்ட சில காட்சிகளைக் கவி இசைக்கும் போது சம்பந்தப்பெருமான் நம்மையெல்லாம் நகைச்சுவை வெள்ளத் திலும் ஆழ்த்திவிடுகிறார்கள். திருக்கோயிலில் வலம் வந்த மட வார்கள் நடமாடுகின்றார்கள். முழவதிர்கின்றன. இடியின் முழக்கம் போன்றிருக்கிறது. மழை வருமென்று அஞ்சி சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கின்றனவாம். (தி.1 ப.130 பா.1) மான் பாய்கின்றனவாம். வயல் மருங்கில் மரத்தில் ஏறிய மந்திகள் மடுக்களில் பாய் கின்றனவாம். தேன் பாய்கின்றனவாம். மீன் பாய்வதால் தாமரை அரும்புகள் மலர்கின்றனவாம். (தி.1 ப.130 பா.4) தென்னை மரத்தினின்றும் தேங்காய் விழுகிறது; விழுவது கண்ட எருமை அஞ்சி இரிந்தோடுகிறது. செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படிகின்றனவாம் அவை. (தி.1 ப.130 பா.8) கிண்ணி வண்ணமாக மலரும் தாமரையின் தாது அளவிப் பின் வண்ண நுண்மணல் மேல் வைகியிருக்கிறதாம் அன்னம். இக்காட்சி திருவலஞ்சுழியில். (தி.2 ப.2 பா.3) மணிமாடங்களுக்கு எதிரே உயர்ந்து நிற்கிறதாம் பனை. அங்கு அன்றில் தன் துணையொடு இன்பவாழ்வு வாழ்கின்றது; இது ஆமாத்தூரில்.(தி.2 ப.50 பா.1) நாரை பிளந்த வாயோடு இருந்து ஆரல் மீன்களை வாரிவாரி உண்ணுகிறது; இது பாசூரில் மட்டுமன்று. ஆரூரிலும் நனிபள்ளியிலும் இதே காட்சியை அடிகள் நினைப்பூட்டுகிறார்கள். திருவாலவாயை அடுத்த திருவேடகம் சிறந்த தலம். பொதியத் தென்றல் புகுந்து வீசுதலால் பொலிவு பெறுகிறது. வைகைக்கு வடகரையில் வயங்குகிறது இப்பதி. பைங்கமுகின் செங்கனி உதிர்கிறதாம். வாளை வேறு துள்ளி விழுகிறதாம். இவற்றால் மலர்கின்றனவாம் நீர் மலர்கள். இது திருமயிலாடுதுறைக் காட்சி (தி.3 ப.70 பா.3) திருநெல்வேலியும் சிந்துபூந்துறையும் பற்றியவருணனைப் பகுதியோடு, மருதப் பகுதியை முடித்து மேலே செல்வோம்.

சிந்துபூந்துறை

திருநெல்வேலி மருதத்திணைவளம் திகழ்ந்து விளங்குறும் திருத்தலம். நெல்வேலி அப்பர் காந்திமதி அம்மையோடு திரு வோலக்கம் கொள்ளும் இத் தலத்தின் இயற்கை வளம் இயம்ப வொண்ணாது. தாமிரபரணி நதியின் தடக்கைகளால் தளராத நீர்வளம் கொண்டு உலவுவது. `தமிழ் கண்டதோர் பொருநை' யன்றோ அத்திரு நதி! இதன் வளத்தினை அழகொழுகப் பாடுகிறார்கள் அடிகளார்.

"வண்டு பண் முரலும் சோலைத்

திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி". (தி.3 ப.70 பா.3)

என்று பாடுகின்றார்கள். எல்லாத்திசையும் எடுத்தேத்துகிறதாம் நெல்லைத்திருநகரை. சோலையிலே புகுந்து போதளைந்து தென்றல் வந்து உலவுகின்ற திருநெல்வேலியுறை செல்வர் என்று ஏத்துகின் றார்கள். சிந்துபூந்துறையில் பொழிலூடு பாயும் மந்திகளைப் பற்றிப் பாடிச் சிறப்பிக்கிறார்கள்.

"கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை

சிந்துபூந்துறை கமழ் திருநெல்வேலி". (தி.3 ப.92 பா.8)

3. முல்லை

காடு சார்ந்த பகுதி முல்லை. கவுணியர் குல விளக்காகிய நம் பெருமானார் வருணனைகளில் சோலைகளைப்பற்றியும் ஒரு சார் கானகத்தைப் பற்றியும் வருவனவற்றை இப்பகுதியில் தொகுத்துச் சிந்திக்க முற்படுவோம்.

ஆணும் பெண்ணும்
இலம்பையங்கோட்டூரில் சில காட்சிகளைக் காணுகிறோம். அவ்வூர்ப் பொழில்கள் செறிந்து இலங்குகின்றன. அங்கு ஆணும் பெண்ணுமாக அனைத்துயிர்களும் வாழ்கின்றன. பெண் மான்கள் ஆண் மான்களொடும் பிணைந்து இன்புறுகின்றன. மயில்கள் பெடை யொடு மாண்புறுகின்றன. அத்தகைய சோலை சார்ந்த ஊர் என்று சொல்லுகிறார்கள்.

"கலையினார் மடப்பிணை துணையொடும் துயிலக்

கானலம் பெடைபுல்கிக் கணமயிலாலும்

இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்". (தி.1 ப.76 பா.1)

ஆணும் பெண்ணுமாக ஆண்டவனைப் பணிதலே அறம் என்று குறிப்பது போன்று விளங்குகிறது பெருமானார் திருமொழி.

பரிசு

புறவத்தைப் பற்றி நம் பெருமானார் சுவைபெறச் சொல்லும் செய்தி சிந்திக்கத்தக்கது. குருக்கத்திக் கொடிகளில் வண்டுகள் இசை பாடுகின்றனவாம். மயில்கள் ஆடுகின்றனவாம். புன்னை போதலரைச் செம்பொன்னெனக் கொடுக்கிறதாம் பரிசாக.

"மாதவி மேய வண்டிசைபாட மயிலாடப்

போதலர் செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே". (தி.1 ப.97 பா.2)

வழிபாடு

காளையார்கோயில் என வழங்கும் திருக்கானப்பேர்க் காடுகளில் ஒரு காட்சி. ஆண் யானைகளும் பெண் யானைகளும் விடியற்காலமே எழுந்துவிடுகின்றனவாம். பொய்கையில் மூழ்கி விதியினால் வழிபாடு செய்ய முந்துகின்றனவாம். எத்தகைய பக்தி மனோநிலை!

"பிடியெலாம் பின்செலப் பெருங்கைமாமலர்தழீஇ

விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்

கடியுலாம் பூம்பொழிற் கானப்பேரண்ணல் ". (தி.3 ப.26 பா.1)

திரளும் சாரல்

திருவண்ணாமலைச் சாரலில் ஆயர்கள் மாடுகளை மேய்க் கிறார்கள். காட்டு நிலத்தில் அவை மேய்கின்றன. மாலைப்பொழுது வந்தவுடன் மாடுகளை ஓட்டிக்கொண்டு ஊர் திரும்ப எண்ணுகிறான் ஆயன். எருமை மாட்டைக் காணாமல் தன் வேய்ங் குழலை எடுத்து இசை வெள்ளத்தைக் கானகமெல்லாம் பரப்புகிறான் ஆயன். `காட்டில் விலங்கறியும் கைக்குழந்தைதான் அறியும்; பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பர்' என்று பாரதி கூறுவது போல, ஆயன் குழலோசை கேட்டதும் மாடுகளெல்லாம் திரளுகின்றன. இசையின் ஆற்றலை இப்படி முல்லை நிலத்து வருணனையின் மூலம் மொழிகின்றார்கள் முத்தமிழ் விரகனார்;

"கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற் குழலூத

அனைத்தும் சென்று திரளும் சாரல்". (தி.1 ப.69 பா.6)

புறவார் பனங்காட்டூரின் காட்சி ஒன்றை இறுதியாகக் கண்டு இப் பகுதியை முடிப்போம்.

வண்டு

வண்டுகள் சோலைகளில் உள்ள நீல மலர்களில் பண் முரலு கின்றனவாம். பண்ணோ நேரிய ஒழுங்கோடு கூடிய நேரிசைப்பண்..

"நீணமார் முருகுண்டு வண்டினம் நீலமாமலர் கவ்விநேரிசைப்

பாணில்யாழ் முரலும் புறவார் பனங்காட்டூர்".(தி.2 ப.53 பா.10)

குறிஞ்சி வருணனைகளும் முல்லை வருணனைகளும் விரவி வருதலின் அவற்றின் பெருக்கம் நோக்கி இத்துடன் விடுத்துக் கடற் கரைக்குப் போவோமாக. அந்த அலை முழக்கிலே, கலை ஞானப் பிள்ளையாரின் கலை முழக்கின் பேரோசையைக் காதுகொடுத்துக் கேட்போம்;

4. நெய்தல்

நீலக்கடலின் கோலத்திரைகள் நெஞ்சை அள்ளும் தன்மை யன. பரந்து விரிந்த பனிக்கடலின் கரையில், பரமன் பதிகொண்ட திருத்தலங்கள் பலவும் உண்டு. திருமறைக்காடு, திருவெண்காடு, சண்பைநகர், திருமுல்லைவாயில் முதலியவற்றை எடுத்துக்காட்டாக நாம் கண்டு களிக்கலாம்.

முன்றிலில் முத்து

கண்ணுக்கெட்டிய தூரம் கருங்கடலின் நீர் வெள்ளம். கரு மணல் மேடிட்டுக் கிடக்கிறது. கடற்கரையில் பரதவர் வீடுகள் சாரி சாரியாக இருக்கின்றன. கடல்நீர் வெள்ளத்தில் மிதக்கும் சங்குகள் பரதவர் இல்லங்களின் முன்வாயிலில் சென்று முத்துக்களை ஈனுகின் றன. எத்துணை வளமான நீர் வெள்ளம்! எங்கே இவ்வரிய காட்சி என்கின்றீரா? கடலில் மிதந்த சீகாழியிலேதான் இந்தக் காட்சியைக் காட்டுகிறார்கள்;

"வங்கமேவு கடல்வாழ் பரதர் மனைக்கே நுனைமூக்கின்

சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே". (தி.1 ப.66 பா.1)

அவ்வந்நிலத்துக்கும் கருப்பொருள் விதிக்கப்பெற்றிருக் கிறது. தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களில் அக்கருப்பொருள் வழாதவாறு திருவருட்போக்கினின்றெழுந்த திருமுறைகள் திகழ்கின் றன. நெய்தனிலத்தை வருணிக்கும் நம்பெருமானார் பாடல்கள் அதன் கருப்பொருளைக் கொண்டே உருப்பெற்றுள்ளன. அது நம்மனோரால் உணர்ந்து போற்றற்குரியது ஆகும்.

மறைக்காடு

வேதாரணியம் என்று பிற்காலத்து மொழிக் குழப்பத்தில் பெயர் மாறிய திருமறைக்காட்டுத் தேவதேவனைத் தீந்தமிழ் இசைக்கிறார்கள். தமிழில் `மைந்து' என்ற சொல் ஆற்றலைக் குறிக்கும். `மைந்துடை ஆடவர் செய்தொழில் கூறலும்' என்ற புறப்பொருள் வெண்பாமாலையும் இதனைக் கூறும். உலகை ஆக்கி அளித்து அழித்துக் காத்து மறைக்கும் ஆற்றல் படைத்த ஆண்டவனை மைந்தன் என்று அழைத்தல் எத்துணை இயைபுடையது பார்மின்! நம் பெருமானார் வாக்கை நன்கு ஓர்மின்! ஓர்ந்து ஓர்ந்து உன்னுமின்! தமிழ்ச்சொற்கள் `மைந்து' உடையவை என்பது தெளிமின்! `மறைக்காட்டுறை மைந்தா' என்று விளிக்கிற மன்னுதமிழ்விரகர், அவ்வூர்ப் பொழிலைக் கடற்கரைச்சோலையை அருளுகிறார்கள். குரா, குருக்கத்தி, புன்னை, ஞாழல் மரங்கள் மருவும் மாண்பார் பொழில் என்று உள்ளாங்கு உரைக்கிறார்கள்.

"குரவும் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல்

மருவும் பொழில் சூழ் மறைக்காட்டுறை மைந்தா" (தி.2 ப.37 பா.3)

மயக்கம்

இயற்கையில் ஒரு மயக்கம். கடற்கரையில் தாழைகள் தழைத்து நிற்கின்றன. தாழைமலர் வெள்ளை வெளேரென்ற வெண் ணிறம் உடையது. நாரைகள் தாழையின் பக்கத்தில் இருந்து ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கின்றன. பெடை நாரையைக் காணாது பேதுற்ற ஆண் குருகுகள் பெடைகளைத் தேடி அலைகின்றன. தாழையின் வெள்ளிய மடல்களைக் கண்டதும் தம் காமமயக்கத்தில் அவையே தம் பெடையெனக் கருதி அணைகின்றனவாம்.

"ஏழைவெண்குருகயலே இளம்பெடை தனதெனக் கருதித்

தாழை வெண்மடற் புல்கும் தண்மறைக்காடமர்ந்தார்" (தி.2 ப.91 பா.4)

இவ்வியற்கை வருணனையோடொத்த ஒரு காட்சியைச் சங்க இலக்கியத்துள் ஒன்றான குறுந்தொகையில் நாம் காண முடிகிறது.

சாய்க்காடு

சாயாவனம் என்று இப்பொழுது வழங்கும் திருச்சாய்க்காடு என்ற திருத்தலம் காவிரிப்பூம்பட்டினத்துக்கருகில் இருக்கும் நெய் தனிலத்தலமாகும். சாய் என்பது ஒருவகைக் கோரை, அது காடாக மண்டிய இடமாதலின் இப்பெயர் கொண்ட தென்பர் ஆய்வாளர். அங்கே ஒரு ஊடல். புன்னை மரங்கள் தோறும் பூக்கள் மலர்ந் திருக்கின்றன. மலர்களின் மகரந்தங்களில் வாய்வைத்து ஆடிக் கருவண்டு நிறமாறிவிடுகிறது. பெண்வண்டு தன்வண்டின் `வண்ணம் வேறா னமைகண்டு ஊடிக்கொண்டு சோலைக்குள் ஓடி ஒளிகிறதாம்'.

"மாதர் வண்டுதன் காதல் வண்டாடிய புன்னைத்

தாது கண்டு பொழில் மறைந்தூடு சாய்க்காடே".(தி.2 ப.38 பா.7)

வெண்காடு

"சோமகுண்டம் சூரியகுண்டம் துறைமூழ்கிக்

காமவேள் கோட்டம்கை தொழுவார் கணவரொடும்

தாமின்புறுவர் உலகத்துத் தையலார்"--சிலப்பதிகாரம்

என்று இளங்கோவடிகளால் ஏத்தப்பெற்ற சிறப்புடைய முக்குளம் பொருந்திய முதுபெருந்தலம் திருவெண்காடு. பூம்புகாரை யடுத்த நகரம். அதனைச்சிறப்பிக்கும் அருந்தமிழ் மாலை அவ்வூரின் எழினலங்களைச் சுவைபெறச் சொல்லியிருக்கின்றது. பண்மொழி கொண்டு பரமன் திருப்புகழ் பாடப்பசிய இளங்கிளிகள் பனையின் மேலிருந்து வாழ்கின்றனவாம். என்னே அஃறிணை உயிர்களின் அயராத பேரன்பு; ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் இறுதியாக எல்லாவுயிர்களுக்கும் அருளுகின்ற பொது உடைமையாக இறைவ னருள் பொலிகின்றது. எறும்புக்கும், கரிக்குருவிக்கும், நாரைக்கும், பன்றிக்கும் இன்னருள் பொழிந்தவன் நம் இறைவன் என்பதை நம் புராண வாயிலாக உணரும்போது நம்மையறியாது பெருமிதம் அடைகின்றோம் அன்றோ? அப்பெருமிதம் சமய குரவராகிய சம்பந்தப் பிரானார்க்கும் இல்லாதொழியுமோ? அவர்கள் வாக்கிலே அப்பெருமிதம் உள்ளூற மலர்ந்து நிற்கிறது;

"பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை

வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே" (தி.2 ப.48 பா.6)

முல்லைவாயில்

திருமுல்லைவாயில் சீகாழிப்பதிக்கருகில் இருக்கும் நெய்தனிலத்தலம். முல்லைக் கொடிகளின் எல்லையில் பெருக்கால் விளைந்த திருப்பெயர் இது. சென்னைக்கருகில் இருப்பது வட திருமுல்லைவாயில் என்பர். முல்லைவனநாதர் முழங்கு கடலை நோக்கி முகமலர்ந்து முன்வணங்கும் அடியார்தம் இடையூறு நீக்கி இன்பம் ஆக்கி இன்னருள் பொழிந்து வீற்றிருக்கிறார். வீதிகள் தோறும் அங்கு முத்துக்கள் வந்து மிதக்கின்றனவாம். (முத்துக்கள் கடற்கரையினின்று ஊரின் உள்ளே, வந்து பரவுதல் பற்றிய இக்கற்பனை சண்பைநகர்ப் பதிக(தி.1 ப.66)த்தும், புனவாயிற் பதிக(தி.3 ப.11)த்தும், வேட்டக்குடிப் பதிக(தி.3 ப.66)த்தும் பெருமானரால் பேசப்பட்டிருத்தல் கண்டு களிக்கத்தக்கதாகும்).

"தெருவத்தில் வந்து செழுமுத்தலைக்கொள்

திருமுல்லை வாயில் இதுவே". (தி.2 ப.88 பா.2)

மான்கள் பாய்கின்ற சோலை. மயில்கள் அங்குமிங்கும் அலைகின்றன. குயில்கள் கூவுகின்றன. தேன் பொங்கி வழியும் மாமரத்தின் மீதேறி அம்மயில்கள் ஆடுகின்றன. அந்த அழகுக்காட்சியில் அகம் கொடாத வர் இருப்பரோ?

"மானேறு கொல்லை மயிலேறிவந்து

குயிலேறு சோலை மருவித்

தேனேறு மாவின் வளமேறியாடு

திருமுல்லை வாயில் இதுவே" (தி.2 ப.88 பா.6)

தென்னைகள்

இராமேச்சுரம் தென்னாட்டிற் சிறந்த தலமாகத் திகழும் ஒன்று. அதன் சிறப்பை அகமார்ந்த அடியார் நன்கறிவர். எங்கு நோக்கினும் தென்னைகள். அத்தென்னை மரங்களின் பன்னருஞ்சிறப்பைத் தீந்தமிழ் வடிவாக்கிக்கொண்டு திகழ்கிறது தெய்வத் திருமுறை:

"இலைவளர் தாழைகள் விம்முகானல் இராமேச்சுரம்" (தி.3 ப.10 பா.1)

முடிவுரை

இயற்கைக் காட்சிகளிலே இதயத்தைச் செலுத்தி, இதயத்து உணர்ச்சியை எழுதிவைத்த இனியவர்கள் எங்கெங்கும் உண்டு. நம் நாட்டில் வாழ்ந்த முன்னோர் இயற்கைக் காட்சிகளே இறைக்காட்சி யாகக் கண்டாலும், அவற்றை அழகுபெற உரைப்பதில் தவறவில்லை. அந்தப் பாதையிலே, தெய்வத் திருமுறைக்கு முதல்வராகத் திகழும் திருஞான சம்பந்தப் பெருமான் அருளியுள்ள இயற்கை வருணனை களை எடுத்துரைக்கப் புகுந்தது இக்கட்டுரை. இது ஒரு பெரும் பொருள். அரும்பொருள். ஏனெனில் திருமுறைபாடிய ஏனை மூவரினும் இயற்கையில் தோய்ந்து ஒவ்வொரு பாடலையும் திருவாய் மலர்ந்தருளிய பெருமை நம் பெருமானாரையே சாரும். ஆதலால். அளவற்ற இவ்வரும் பொருளை எல்லாம் எடுத்து விளக்குவது அரிதாக இருக்குமாதலின், நான்கு பகுதிகளில் ஆராய முற்பட்டேன். மலைசார்ந்த வருணனை, கடல்சார்ந்த வருணனை, வயல் சார்ந்த வருணனை, சோலை சார்ந்த வருணனைகளாகப் பிரித்து விளக்கினேன். இதுகாறும் கூறியவற்றால் திருஞானசம்பந்தப் பெருமானார் இயற்கையில் தோயும் திறம் இனிது பெறப்படும்.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறைகளின் சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 4

இன்ப உணர்ச்சியில் திளைத்தல்

தருமை ஆதீனப் பல்கலைக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர்,

வித்துவான் வி. சா. குருசாமி தேசிகர். எம். ஏ.

அழைப்பு

உயிர்கள் இன்பம் பெற விரும்புகின்றன. பெற்ற இன்பத்தை ஐம்பொறிகளாலும் நுகர்ந்து நுகர்ந்து மகிழ்கின்றன. இன்பத்திற்குத் தடையாக இருப்பனவற்றை எதிர்க்கின்றன. எதிர்ப்பில் வெற்றி கிட்டினால் இன்பம்! இன்பம்!! மிகப் பெரும் இன்பம்!!! விளைவு வேறாயின் துன்பம்! துன்பம்!! மிகப் பெரும் துன்பம்!!! இன்பமும் துன்பமும் வாழ்க்கையில் மாறி மாறி வருகின்றன. துன்பமே இல்லாத நிலையான இன்பம் எது? அதைப் பெற விழைவதே தெய்வப் பெரி யோர்களின் திருவுள்ளம். இவ்வின்பத்தை அநுபவித்த பெரியோர்கள் "இன்பமே எந்நாளும் துன்பமில்லை", "இன்பசுகத்துள்ளே இருக்க லாம் எப்போதும் துன்பவினை உன்னைத் தொடராது", பொங்கித் ததும்பிவழியும் பூரணானந்தத்தை நுகரச் செகத்தீரே சேரவாரும் என அறைகூவி அழைப்பர்.

அழைப்பை ஏற்றுக்கொள்வர் அறிவுடையோர். அறிவிலார் உண்மையோ பொய்ம்மையோ என ஐயுற்று "தான் கண்ட அனைத்து இவ்வுலகம்" எனத் தருக்கி நிற்பர். இவ்வாறு பேரின்பத்தை நுகர்ந்து ஏனையோரையும் நுகர அழைப்பன தெய்வத் தமிழ்ப் பாடல்களாகிய தேவாரத் திருமுறைகள். அழைப்பை விடுப்போர் அருட்கவிஞர்கள். உண்மை இன்பம் நுகர்ந்தோர்க்கு உலகில் காணும் இன்பங்கள் அத்தனையும் பொய்யும் போலியுமாகப் புலனாகும். பரம்பொரு ளோடு இரண்டறக் கலந்து இன்பங்காணும் இச் சிவபோகமே பெரிது எனத் தோன்றும். அதுவே உண்மையும் உறுதியும் ஆய நிலைத்த இன்பம்.

தெய்வக் காட்சி

கடவுட் காட்சி மனித உள்ளத்தின் மாசுபோக்கவல்லது. கடவுளைக் காணும் பண்பட்ட உள்ளத்திலும் பற்பல வேறுபாடுகள். கடவுளைத் தந்தை, தாய், மனைவி, மணாளன், தோழன் முதலி யோராகக் கண்டனர் நம் சமயப் பெரியோர். அவனது அருளை - அருளில் விளையும் இன்பத்தை எப்படி அநுபவித்தால் என்ன?

கடவுளைக் காதலனாக, மணாளனாகக் காணும் முறை புதிய முறை; கடவுள் வழிபாட்டிலும் சிறந்த முறை. இம் முறையில் தப்பினோர் சமயகுரவர்களில் ஒருவரும் இலர். திருநாவுக்கரசு சுவாமிகளும், மாணிக்கவாசக சுவாமிகளும் இறைவனைத் தங்கள் தலைமகனாகக் கொண்டு வழிபட்டமையைத் திருமுறைகளில் காணலாம்.

திருஞானசம்பந்த சுவாமிகள் இம் முறையைப் பெரிதும் விரும்பினார். அவரது தெய்வக்காட்சியின் தொடக்கமே, தான் ஒருதலைவி, இறைவன் தலைவன் என்ற முறையில்தான் ஆரம்பிக்கிறது. அவரது அருட்பாடல்களில் அம்முறை வரும் இடங்களைத் தொகுத்து எண்ணுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

அகப்பொருள்

பொருளியற்றமிழ் அகம் புறம் என இரு பிரிவுடையது. இன்பப் பகுதியை அகப்பொருளெனல் தமிழ் மரபு. சங்ககால இலக்கியங்களில் எஞ்சி நின்ற பெரும்பான்மை அகப்பொருள் பற்றியனவேயாகும். தமிழர் வாழ்வு வளங்கொழித்து இருந்த அக்கால நிலைமையை அவை நன்கு புலப்படுத்தும். எல்லா வளங்களும் நிரம்பிய பொழுதன்றோ இன்பம் சிறந்து மிளிரும்!

அகப்பொரு ளுக்குப் பண்டைத் தமிழர் தரும் விளக்கம் புதுமையானது; பொருத்த மானது. `நாடு நாடாயிற்று; இனி பைந்தமிழ்ப் புலவர்களை அழைப் பேன். பரிசில் பல நல்குவேன். பசி தீர்ப்பேன். அவர்களின் வளமான வாழ்வன்றோ தமிழை வளர்க்கும். சாற்றுமின் பறை! ஏற்றுமின் கொடைக் கொடி!!' எனப் பஞ்சந் தீர்ந்த தன் பாண்டி நாட்டில் பைந்தமிழ்ப் புலவர்களுக்கு அழைப்பு விடுத்தான் பாண்டிமன்னன் ஒருவன்.

பழமரம் கெழுமும் பறவைகளைப் போல் பரிசில் வாழ்க்கை வாழும் புலவர்கள் பாண்டிநாட்டைச் சூழ்ந்தனர். முத்தமிழ் கற்ற முதுபெரும் புலவர்களில், இலக்கணங் கற்றோர் எண்ணற்றோர்; இலக்கியங் கற்றவர்கள்தாம் எத்துணைபேர்கள்! புலவர்களின் புலமையை அறிந்தான் புரவலன். `பைந்தமிழ்ப் பண்ணை பாண்டி நாடு' என்ற பழம்பெருமையைப் பாதுகாக்க வேண்டுமென்று மன்னன் மனம் தவித்தது.

புலவர்களின் எண்ணற்ற எண்ணிக்கை இறையவன் மனத்தை இன்புறுத்தவில்லை. எங்குங் கூடியிருந்த ஆயிரம் ஆயிரம் புலவர்களில் அகப்பொருள் இலக்கணம் கற்றோர் அங்கொருவரும் இலர் என்ற குறை அரசனை வருத்தியது. இருந்த இலக்கண நூல் களையும் இருங்கடல் உண்டு தன் பசி தீர்த்துக்கொண்டது.

செந்தமிழ்ச் சொக்கர்

அகப்பொருள் இலக்கணங் கற்றோர் அருந்தமிழ் நாட்டில் அருகிப்போனதை எண்ணி எண்ணி அரசன் கவன்றான். அவனது தமிழுள்ளம் தவித்தது. தமிழ் வளர்ச்சி தடைப்பட்டதை எண்ணித் தடுமாறியது.

அவனது மனத்துயரைத் தீர்க்கச் சங்கம் இருந்து தமிழாராய்ந்த செந்தமிழ்ச்சொக்கர் முன் நின்றார். `சொற்றமிழ் பாடுக' என்று சுந்தரரை ஏவிச் செந்தமிழ் கேட்ட செவியன்றோ அவரது செவிகள்! மணிவாசகரைக் கோவை பாடச் செய்து இருந்து எழுதிய தமிழ்க்கரங்களன்றோ அவரது கைகள்!! தலைச்சங்கம் இருந்து தமிழாராய்ந்த தலைமைப் புலவர் வரிசையில் முன் நிற்பவரன்றோ அப்பெருமான்!!!

தமிழுக்குற்ற குறையைத் தனக்குற்ற குறையாகக் கருதுகிறார். அகப்பொருளிலக்கணம் எழுதுகிறார். இறைவனது திருக்கரம் அகப்பொருளிலக்கணம் ஒன்றையும் இலக்கியமொன்றையும் எழுதியிருக்கிறது. இது தமிழுக்குக் கிடைத்த தனிப்பெருஞ் சிறப்பல்லவா?

அந்த அகப்பொருள் இலக்கணத்துக்கு உரை எழுதும் தகுதி நக்கீரருக்குக் கிடைக்கிறது. அவர் அகப்பொருளுக்கு விளக்கங் கூறுகிறார் நூலின் தொடக்கத்தில். "ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற கூட்டத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ் இருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்ததெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருள்" என்பது அவர் தரும் அகப் பொருள் விளக்கம். அகப்பொருளுக்கும் ஆலவாய் இறைவற்கும் உள்ள தொடர்பு இம்மட்டோடு விடவில்லை. தொடர்கிறது தோணிபுரப்பெருந்தகையார் தம் தோத்திரப் பாடல்கள் மூலமாக.

அகப்பொருள் பதிகங்கள்

இறைவனோடு கலந்துணரும் இன்பத்தை அகப்பொருள் இலக்கண அமைதிகளுக்கேற்பப் பாடினார் ஆளுடைய பிள்ளையார். ஐந்திலக்கணங்களும் அவர்தம் திருமுறைகளில் அழகொழுக அமைந்துகிடக்கின்றன.

தெய்வக்குழந்தையின் திருமுறை தொடக்கத்திலேயே தெய்வீகக்காதலில் தொடங்குகிறது. முதற்றிருப்பதிகமே இத்தகைய இன்பக் காட்சியை வழங்குவதை எண்ண எண்ண இன்றமிழ்வாணர் இன்புறுவர்.

முதல் மூன்று திருமுறைகளில் சற்றொப்பப் பதினைந்து பதிகங்கள் பாங்குற இன்பப் பகுதியில் இடம்பெறுவன. வியத்தகு செயலில் விளம்பிய திருப்பதிகங்களாக `சடையாயெனுமால்', `மட்டிட்ட புன்னை' என்பனவாயவை இன்பப் பகுதியை விளக்கும் பதிகங்கள் என்பதற்கிடனுண்டு.

அகப்பொருள் இலக்கணங்களை அடியொற்றிய பதிகங்களை பொருளொற்றுமை காட்டித் தொகுத்துக் காண்போம். இவை முன்னர் எண்ணத்தகுவன. இறைவன் தலைவன். உயிர் தலைவி. சாத்திரக்

கருத்திற்கியைய மற்றும் சிலவற்றைக் கருதுதல் நல்லது. ஐவகை நிலங்களையும் தலைவி, தலைவன், தோழி, தோழன், செவிலி, நற்றாய் இவர்களையும் இவ்வாறு எண்ணல் மரபு. குறிஞ்சி - சுத்த சாக்கிரத் தானம், பாலை - சுத்த சொப்பனத் தானம், முல்லை - சுத்த சுழுத்தித் தானம், மருதம் - சுத்த துரியத் தானம், நெய்தல் - சுத்த துரியாதீதத் தானம் என ஐவகை நிலங்களை ஐந்து சுத்தாவத்தைகளாகக் கூறுவர்.

தலைவனைப் பரம்பொருளாகவும், தலைவியைப் பக்குவான்மாகவும், தோழியைத் திருவருளாகவும், தோழனை ஆன்ம போகமாகவும், செவிலியைத் திரோதாயியாகவும், நற்றாயைப் பரையாகவும் கூறல் மரபு.

திருக்கோவையாரில் இம்முறையைச் சிறிது மாற்றி பரம்பொருள் தலைவியாகவும் பக்குவான்மா தலைவனாகவும் கூறப்பெற்றுள்ளது.

இறைவனாகிய தலைவனை அடைந்து பேரின்பம் அடையும் முயற்சியில் பக்குவான்மாக்கள் அல்லும் பகலும் ஈடுபடுகின்றன. இறைவனை அடைதற்கேற்ற பெண்மையுள்ளம் உயிர்களுக்கு முதலில் வேண்டும்.

உள்ளங் கவர் கள்வன்

திருஞானசம்பந்தரின் குழந்தைப் பருவம். மழலைவாய் முத்தந்ததும்பச் சிற்றில் இழைத்துச் சிறு தேருருட்டித் தெரு வீதியில் விளையாடுகிறார். காலை நேரம். தந்தையார் நீராடச் செல்லுகிறார். "தானும் வருவேன்" என்று பிடிவாதம் பிடிக்கிறது குழந்தை. குழந்தையின் கொஞ்சுமொழி கேட்டு நெஞ்ச மிளகித் தோளில் சுமந்து செல்கிறார் தோணியப்பர் ஆலயத்திற்குள் விளங்கும் தெய்வத் திருக்குளத்திற்கு. குழந்தையைக் குளக்கரையில் இருத்தி, பெரு மானைத் தியானித்து, பிள்ளையின் நினைவின்றி மூழ்குகின்றார் தந்தை.

தெய்வக்குளக்கரையில் இருந்த திருஞானசம்பந்தருக்கு முன்னுணர்வு மூண்டது. தந்தையாரைக் காணாது செங்கனிவாய் துடிதுடிக்கக் கண் மலரைக் கைமலராற் பிசைந்து அழுதார். அழுதார். பொருமிப் பொருமி அழுதார். அவர் நின்றிருந்த சூழலில் தோணியப் பர் சிகரம் அவர் கண்களுக்குப் புலனாயிற்று. `அம்மே! அப்பா!' என அறைகூவினார். பெருமான் பெருமாட்டியுடன் எழுந்தருளிக் குழந்தை யின் கண்ணீர் முத்துக்களைக் கையால் துடைத்துச் சிவஞானப் பாலமுதைச் செவ்வாய் நெறித்தூட்டி அம்மையும் தானுமாய் மறைகின்றனர்.

பாலளித்துச் சென்ற பரம்பொருளிடம் உள்ளத்தைப் பறிகொடுக்கிறது குழந்தை. உண்மையான தலைவன் உள்ளங்கவர்ந்து சென்றதை எண்ணி எக்களிப்படைகிறது குழந்தை. இறைவனின் இன்னருள் பெறுதற்கேற்ற பக்குவம் அல்லது தகுதி அக்குழந்தைபால் இருக்கிறது. இந்நிலை தலைவனிடம் தலைவி நெஞ்சைப் பறிகொடுக் கும் நிலைக்கு ஒப்பாகும்.

பிறகு தன்னை வினவிய தந்தையார்க்கு `தோடுடைய செவியன்' என்று தொடங்கி உள்ளங்கவர்ந்த ஒருவனியல்புகளை உரைக்கிறது குழந்தை. இது திருஞானசம்பந்தர் வரலாற்றின் முற்பகுதி.

பொருள் நலன்

தாமரைபூத்த தடாகத்தினருகே தலைவன் தலைவியரைச் சந்திக்கச்செய்து இந்த இயற்கைக் கூட்டம், தெய்வத்தால் கூடிய கூட்டம் என்று விளக்குவர் அகப்பொருள் நூலார்.

"தெய்வந் தன்னின் எய்தவும் படூஉம் இயற்கைப் புணர்ச்சி". பொய்கைக் கரையிடத்து விளைந்த இந்தக்காதலால் தலைவியின் உள்ளம் மட்டுமல்ல. உடலும் வேறுபடுகின்றது. வேறுபாடுகண்டு தலைவியின் களவொழுக்கத்தைத் தோழி உணர்வாள். வேறுபாடுகளை நாற்றம் தோற்றம் முதலியவற்றால் ஆய்ந்துணர்ந்து கொள்வதிலும் மெய்யும் பொய்யும் கூறித் தலைவியின் உள்ளத்தைத் தூண்டி உண்மையை அறிவதிலும் தோழி மிக்க திறமுடையளா யிருப்பாள். இனி மறைக்கவொண்ணாது என்று தலைவியும் தன்னுயிர்ப் பாங்கியாகிய தோழியிடம் உண்மையுரைப்பாள்.

பிரமபுரப் பெருமான்தன் உள்ளங்கவர்ந்த உண்மைகளை ஒன்று விடாமல் ஒளியாமல் தோழிக்குத் தலைவி கூறும் முறை யிலமைந்தது `தோடுடைய செவியன்' என்னும் பீடுடைய பெரும் பதிகம். தன் அகமும் புறமும் தலைவன் கவர்ந்ததை இதோ அந்தத் தோணிபுரத்துத் திருஞானசம்பந்தத் தலைவி சொல்கிறாள் பாருங்கள்;

"ஏர்பரந்த இனவெள்வளை சோரஎன் உள்ளங்கவர்கள்வன்" (தி.1 ப. 1 பா. 3)

"இறைகலந்த இனவெள்வளை சோரஎன் உள்ளங்கவர்கள்வன்" (தி.1 ப. 1 பா. 6)

இந்த இருதொடர்களில்தாம் எத்துணைநயங்கள்! பாடலின் பகுதியைப் பார்ப்போம். `நீர் பரந்த நிமிர்புன்சடை மேலோர் நிலா வெண்மதி சூடி ஏர்பரந்த இனவெள்வளை சோர என் உள்ளங் கவர்கள்வன்'.

தலைவியின் கையிலணிந்துள்ள வளையல்கள் சங்கு வளையல்கள். வெண்ணிறமானவை. ஆனால் இறைவன் தலையி லுள்ள இளம் பிறையோ

வெண்மையும் தண்மையும் உள்ளது. நிலாவொளிவீசும் வெண்பிறையிருக்கவும் என் வெள்வளை கொள்ளல் விநோதமே என்ற குறிப்பை மீண்டும் வலியுறுத்துவாராய் `இறைகலந்த என் வெள்வளை சோர என் உள்ளங்கவர்கள்வன் பிறைகலந்த பெம்மான்' என்கிறாள் தலைவி.

தலைவியினது பொருள் தன்னிடமுள்ள பொருளின் தகுதி குறைந்ததாயினும் அவளது பொருளையே அழகிது அரிது என்று நினைக்கும் தலைவனது அன்புப் போக்கைப் புலப்படுத்துகிறது இது. மற்றுமொருபொருள்.

`வெண்மை யெனப்படுவது அறியாமை' எனக்கொண்டு என்னிடமுள்ள அறியாமையை நீக்கி என்னுள்ளங்கவர்ந்தான் என்று கூறல் சிறப்புப் பொருளாகக் கொள்ளலாம்.

அம்மம்ம! அவள்தம் அமுதவாய் மொழி எப்படியெல்லாம் நம்மை இழுத்துச்செல்லுகிறது.

நலங்கவர்ந்த நல்லியல்பு

நலங்கவர்ந்த தலைவனது நல்லியல்புகளைத் தலைவி தோழிக்குக் கூறுகிறாள். திருப்பாற்றுறைக்கு எழுந்தருளிய திருஞான சம்பந்தர் முன்உள்ளங்கவர்ந்து சென்ற தலைமகன் எழில்கொண்ட இயல்புகளை மீண்டும் கூறும் முறையில் திருப்பதிகம் அருளிச் செய்கின்றார். "ஒருகலைப்பிறை உறையும் திருமுடியினராய இறைவன் பிரிதலால் ஏற்படும் பெருந்துயரை அறியாமல் என் எழில் கவர்ந்து சென்றார்" என்பன முதலிய கருத்துக்களால் விளக்குவள்.

"விண்ணார் திங்கள் விளங்கும் நுதலினர்

எண்ணார் வந்தென் எழில் கொண்டார்" (தி.1 ப.56 பா.3)

"பூவுந் திங்கள் புனைந்த முடியினர்...

ஓவென் சிந்தை ஒருவரே" (தி.1 ப.56 பா.4)

"மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தெனது

ஆகம் பொன்னிற மாக்கினார்" (தி.1 ப.56 பா.5)

"போது பொன்திகழ் கொன்றை புனைமுடி

நாதர் வந்தென் நலங் கொண்டார்" (தி.1 ப.56 பா.6)

"வெவ்வ மேனியராய் வெள்ளை நீற்றினர்

எவ்வம் செய்தென் எழில்கொண்டார்" (தி.1 ப.56 பா.8)

தூது

இது தமிழில் வழங்கும் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங் களில் ஒன்று. தலைவி தலைவன் இருவர்களுக்குமுள்ள வேண வாவைப் புலப்படுத்த அன்னம், மயில், கிளி, மேகம், குயில், நெஞ்சு, தென்றல், வண்டு முதலியவைகளைத் தூது செல்லுமாறு கூறுதல் இதன் இலக்கணம்.

"எகினம் மயில் கிள்ளை எழிலியொடு பூவை

சகிகுயில்நெஞ் சம்தென்றல் வண்டு - தொகைபத்தை

வேறுவே றாய்ப்பிரித்து வித்தரித்து மாலைகொண்டன்

பூறிவா என்றல்தூ து" -பிரபந்தத்திரட்டு

என்பது தூதிற்குரிய இலக்கணம்.

"கேட்குந போலவும் கிளக்குந போலவும்

இயக்குந போலவும் இயற்றுந போலவும்

அஃறிணை மருங்கினும் அறையப் படுமே" -நன்னூல்

என்னும் நன்னூல் (சூ. 409)விதிகொண்டு அஃறிணை உயிர்களையும் பொருள்களையும் தூது விடுத்தல் பொருந்தும்.

திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் திருப்பிரமபுரத்துப் பதிகமாகிய "வண்டரங்கப் புனற் கமலம்" என்று தொடங்கும் திருப்பதிகத்தையும் திருச்செங் காட்டங்குடித் திருப்பதிகமாகிய "பைங்கோட்டு மலர்ப்புன்னை" என்ற திருப்பதிகத்தையும் தூது விடுக்கும் அகப்பொருள் பதிகங்களாக ஆக்கி அருளியிருக்கிறார்கள். வண்டு, குருகு, கோழி, நாரை, புறா, அன்னம் அன்றில், குயில், பூவை, கிளி, ஆகியவைகளைத் தூதுவிடுத்துள்ளார்கள். உள்ளங்கவர்ந்து உடலெழில் கவர்ந்து சென்ற தோணி புரத்துப் பெருமானிடம் தூது விடுக்கும் திருப்பதிகம் இது.

வண்டு

வண்டை அழைத்துத் தலைவனிடம் தன் நிலைமை உணர்த்து மாறு அனுப்புகிறாள் தலைவி. அடைமொழி கொடுத்து வண்டையும் பெருமைப்படுத்தி அனுப்பும் அருமையை இப்பாடலில் காணலாம்.

வளமான பொய்கை. சேற்றுவளத்தால் செந்தேன் நிறைந்த செந் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன. மது உண்டு மகிழ்ச்சியால் பெடை யொடு கூடித் திரிகிறது அரச வண்டு. பெடையொடு கூடிக் களிக்கும் வண்டிற்கும் பெண்ணின் பிரிவாற்றாமை நன்கு புரிந் திருக்கும் என்பது அவள் கருத்து. எனவேதான் அழைக்கிறாள் அரசவண்டை இவ்வாறு.

"வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்

ஒண்டரங்க இசைபாடும் அளியரேச" (தி.1 ப.60 பா.1)

தூது உரைக்க வேண்டியவரின் அடையாளங்கள் அடுத்துச் சொல்லப்பெறுகின்றன. தொலைவில் செல்வாரையும் தன்னிருப்பிடம் காட்டி அழைப்புத்தரும் கலங்கரைவிளக்கம் போலத் தன் சடை முடியில் ஒளிவிளங்கும் ஒரு கலைப்பிறையை அணிந்துள்ளான். எனவே அவனை அறிதல் எளிது. மாலையிலே உலக ஒடுக்கத்தின் போது அணிந்த எலும்பு மாலைகள் விளங்கும் என்கிறாள் தலைவி. அடையாளம் கூறும்போது வேறுயாருமணியாத எலும்பு மாலை களைச் சுட்டிக் கூறும் அழகு அறிதற்குரியது. இசைக்கு அவனிடம் நல்ல மதிப்புண்டு. அலைகளில் எழும்பும் ஓசையை இசையாகக் கொள்வான். எனவே ஒண்தரங்க இசைபாடும் உனக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும்' என்று கூறி அனுப்புகிறாள்.

"ஒளிமதியத் துண்டர்அங்கப் பூண்மார்பர் திருத்தோணிபுரத்துறையும்

பண்டரங்கர்க்கு என்னிலைமை

பரிந்தொருகால் பகராயே" (தி.1 ப.60 பா.1)

தன்னை விரும்புவோர் படுந்துயரம் பொறுக்காமல் உடனே எனக் கருள் புரிவன் என்பது குறிப்பு.

குருகு

கடற்கரைச் சோலைகளில் தங்கியிருந்து கழியிடத்தில் இரை தேர்ந்துண்பது இப்பறவை. கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என்று பெயர்பெறும். நெய்தலில் இரங்கல் பொருள் சிறப்புடையது. நெய்தல் கருப்பொருளாகிய குருகு தலைவியின் இரங்கத்தக்க நிலையைஎடுத்துணர்த்தற்குச் சிறப்புடையது. பிற உயிர்களின் துன்பந் தெரியாத இப்பறவை தூதுசென்றால் அது தலைமகனை இடித்துணர்த் துவது போலவும் இருக்கும்.

சுறா மீன்கள் துள்ளிக்குதிக்கும் உப்பங்கழிக்கருகே அமைந்த சோலையில் உள்ள இளங் குருகே! வேறு யாரையும் தூதனுப்பி என் துயர் கூறாதது என் நல்வினையின் பயனே. மணங்கமழும் மலர்மாலை யணிந்த தோணிபுரத்திறைவர்க்கு நானடைந்த பசலை நோயை அறிவித்து வருவாயாக.

"எறிசுறவம் கழிக்கானல் இளங்குருகே என்பயலை ......

திருத்தோணிபுரத்துறையும் வெறிநிறார் மலர்க்கண்ணி

வேதியர்க்கு விளம்பாய்" (தி.1 ப.60 பா.2)

கோழி

வயல் வளம் மிகுந்த மருத நிலங்கள் செறிந்த ஊர்களில் வாட்டமின்றி வாழும் கோழியே கொடுவினையேன் அடைந்த பசலையைச் சண்பைமரங்கள் செறிந்த பொழில் சூழ்ந்த தோணிபுரத் திறைவனிடம் சென்றுரைத்தால் அது பழியாமோ?' என்றாள் தலைவி.

"வாட்டமிலாச் செஞ்சூட்டு .... வாரணமே. தோணிபுரத்துறையும்

பண்பனுக்குஎன்பரிசுரைத்தால் பழியாமோ

மொழியாயே" (தி.1 ப.60 பா.3)

நாரை

சிவந்த கால்களையுடைய நாரையே `தலைவி பசலை என்னும் பச்சிளங் குழவியைப் பெற்றெடுத்திருக்கிறாள் என்று சென்று சொல்' என்கிறாள் தலைவி

"செங்காலொண்கழி நாராய்! பொன்பயந்தாள் என்று

ஆண்டகையார்க்கு இன்றே சென்று அடியறிய உணர்த்தாய்" (தி.1 ப.60 பா.4)

புறா

"பவளம் போன்ற பாதங்களையுடைய புறாவே! தேரோடும் திருவீதிகளையுடைய திருத்தோணிபுரத்து உறையும் கங்கை தங்கிய சடைமுடியார்க்கு என்காதல் மெலிவைக் கூறுவாய்"

"கபோதகங்காள்' திருத்தோணிபுரத்துறையும்

நீராரும் சடைமுடியார்க்கு என்நிலைமை நிகழ்த்தீர்" (தி.1 ப.60 பா.5)

சேற்றில் தோன்றிய செந்தாமரையில் செந்நெற்கதிர்கள் கவரியிரட்ட அரசு வீற்றிருக்கும் அன்னங்களே! தலைவனது கூற் றுதைத்த திருவடிகளை யான் சென்று கூடுமாறு கூறுவீராக.

"அன்னங்காள் கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே" (தி.1 ப.60 பா.6)

அன்றில்

"ஆணொடு பெண்ணுறவுக்கு அன்றிலைக்கூறுவர். பிரிவு இன்றி இரவில் கூட ஒன்றன் தலையில் மற்றொன்று அலகைச் செருகி வாழும் இயல்புடையது. அன்றில்காள்! தென்றல் வீசும் திருத்தோணி புரத்துறையும் கொன்றை சூடிய சடையார்க்கு என் பசலைநோயைச் சென்று பகர்வீராக."

"அன்றில்காள் ...... கொன்றைவார் சடையார்க்

என் கூர்பயலை கூறீரே". (தி.1 ப.60 பா.7)

vகுயில்

மாந்துளிர் கோதும் பூங்குயிலே! இனிதாகப் பேசும் குணம் உன்னிடம் இயல்பாக அமைந்துள்ளது. தேனாரும் பொழில்சூழ்ந்த திருத்தோணிபுரத்துறையும் தலைவனை என்னிடம் வரச்சொல்வாய்'

"இனிதாக மொழியு மெழில் இளங்குயிலே!

திருத்தோணிபுரத்துறையும் கோனாரை என்னிடைக்கே

வர ஒரு காற் கூவாய்" (தி.1 ப.60 பா.8)

பூவை

`அழகிய வாயினையும் அலகினையும் உடைய பூவையே, போற்றுகிறேன் உன்னை, மழலையென இனிக்கும் வண்ணம் பேசுவதில் சிறந்த பறவைநீ' தோணிபுரத்து வில்லேந்தி நிற்கும் விகிர்தனிடம் சென்று என் நிலைமை கூறு.

"பூவை நல்லாய்! விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே" (தி.1 ப.56 பா.3)

கணபதீச்சரம் பணிந்தெழுந்த காழிக்கவுணியர் பெருந்தகை "பைங்கோட்டு மலர்ப்புன்னை" என்னும் பதிகத்தை அருளிச்செய் கின்றார்கள். இத்திருப்பதிகம் முழுதும் பறவை விடு தூதாகவே அமைந்துள்ளது. நெய்தற் சார்புடைய நிலமாக்கி அந்நிலத்திற்குரிய இரங்கல் என்னும் உரிப்பொருளில் அமைத்திருப்பது தூதிற்கேற்ற மிக்க பொருத்தமுடையதாக அமைந்துள்ளது.

புன்னைப் பறவை

`பசுமையான கிளைகளையும் முத்துப்போன்ற மொட்டுக் களையும் உடைய புன்னைமரக்கிளைகளில் உள்ள பறவைகளே! செங்காட்டங்குடி மேயசிவன் என்கைச் சங்காட்டந்தவிர்த்துத் தீராத துன்பத்தைத் தந்தான்' என்று உரைக்கின்றாள் தலைவி.

புன்னை நெய்தற் கருப்பொருள். புன்னை மரக்கிளைகளில் கடற்கரைக் கழியில் கயல் மீனுண்டு கூடுகட்டி வாழ்வன சில பறவை கள். அவை குருகு நாரை முதலியன.

"பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்

சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தான்.

செங்காட்டங் குடிமேய ...... பெருமான்" (தி.3 ப.63 பா.1)

அன்னம் அன்றில்

பூக்களால் பொலிவுபெற்ற அழகிய கழிகளை உடைய கடற் கரைச் சோலையில் பெடையொடு பிரியாது வாழும் அன்னங்களே! அன்றில்களே!

கணபதீச்சரம்மேய கரும்பினு மினியானாகிய கங்கைவார் சடையானுக்கு எனதல்லலை எடுத்திசைப்பீரோ? ......

"பொன்னம்பூங் கழிக்கானல் புணர்துணையோ டுடன்வாழும்

அன்னங்காள் அன்றில்காள் ...கணபதீச்சரம்மேய

இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே" (தி.3 ப.63 பா.2)

நாரை

ஆழ்ந்து தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தின்கண்ணும், சிறு குழியிடங்களிலும் குளிர்ந்த பொய்கையிடத்தும் சோலை, வயல், கழி, கடல் இவ்விடங்களிலும் தாம் விரும்பியவாறு இரைதேடும் நாரையே! செங்காட்டங்குடிமேய வார்சடையானுக்கு என் வருத்தங் கூறு.

"குட்டத்தும் குழிக்கரையும் குளிர்பொய்கைத்

தடத்தகத்தும்

இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின்

மடநாராய் செங்காட்டங்குடிமேய

வட்டவார் சடையார்க்கு என்வருத்தம்

சென்றுரையாயே" (தி.3 ப.63 பா.3)

"கானருகும் வயலருகும் கழியருகும் கடலருகும்

மீனிரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்

வானமரும் சடையார்க்கென் வருத்தம்சென் றுரையாயே" (தி.3 ப.63 பா.4)

குருகு, நாரை

"ஆரல்மீன், சுறாமீன் இவற்றை மேய்ந்து அகன்ற கழனிகளில் சிறகுலர்த்தும் சிறுகுருகே நாரையே! என் நிலைமை சென்றுரையீர்!"

`துன்புற்றார் இடர்தீர்த்தல் பிறர் கடமையல்லவா?' குருகே! துணைபிரியாத நாரையே! செங்காட்டங்குடிப்பெருமானின் சீரருளைப் பெறலாமோ?

`வெண்குருகே! கழிநாராய்! ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒருநாளேனும் சென்று சொல்வீர்!'

`தாராவே! மடநாராய்! எனக்கு ஒரு உதவி செய்வீர்; அவன் அருள் பெறத் தூது சென்றுரையீர்!'

`குருகே! உலகெல்லாம் அறப்பலிகொள்வானுக்கு என் அலர் கோடல் அழகியதோ? அவன் பேரையே பிதற்றி என் பெருநலமனைத் தும் இழப்பதுதானா என் நிலைமை?'

"ஆரலாம் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்

பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய்

நீருலாம் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீர்" (தி.3 ப.63 பா.5)

"குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடன்அன்றே குளிர்பொய்கைத்

துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்.....

பெருமான்சீர் அருள்ஒருநாள் பெறலாமே" (தி.3 ப.63 பா.)

"கருவடிய பசுங்கால்வெண் குருகேஒண் கழிநாராய்

ஒருஅடியாள் இரந்தாளென்று ஒரு நாள் சென்று உரையீர்" (தி.3 ப.63 பா.7)

"கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழும்

தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே

பெருமான்தன் னருள்ஒருநாட் பெறலாமே"(தி.3 ப.63 பா.8)

"நறப்பொலிபூங் கழிக்கானல் நவில்குருகே

உலகெல்லாம்

அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோடல் அழகியதோ

பிறப்பிலிபேர் பிதற்றிநின்றிழக்கோ எம்பெருநலமே" (தி.3 ப.63 பா.9)

கிளி

திருப்பிரமபுரத்துத் திருப்பதிகத்து இளங்கிளியே என அழைக்கிறாள் தலைவி. இளமை, ஈன்ற அணிமையதல்ல என்பதை உணர்த்தச் `சிறையாரும்மடக்கிளியே' என அழைக்கிறாள். மீண்டும். `இங்கே வா! உனக்குத் தேனும் பாலும் மாறிமாறித் தெவிட்டாமல் உண்ணத் தருவேன். கடலருகே அமைந்து விளங்கும் காழிமாநகர் இறைவன் திருப்பெயரைக் காது இனிக்கக் கருத்தினிக்கக் கூவுவாயாக' என உண்ணத்தரும் பொருளைக்காட்டிச் செய்யும் செயலைப் பின்பு கூறிக் கிளியிடம் வேண்டுகிறாள் தலைவி.

"சிறை யாரும் மடக்கிளியே! ...... பிறையாளன்

திருநாமம் எனக்கொருகால் பேசாயே" (தி.1 ப.60 பா.10)

ஐயமேற்கச்சென்ற அழகர்

இப்பதிகம் முழுதும் தலைமகள் தலைமகனைத் தன் எதிர்ப்படுத்திப் பேசுதல்போல் அமைந்துள்ளது.

பெருமான் பெண்கள் தரும் பிச்சையேற்கத் தாருகாவனத்துட் செல்கிறார். ஐயமேற்கும் பொழுது அப்பெண்டிர்களின் ஆடை, அணி, வளையல், வாகுவலயம், உள்ளம், பெண்மை இவைகளைக் கவர்கிறார். அப்பெண்கள் பெருமானை நோக்கி இரங்கிக் கூறும் உரைகள் இவை.

"வரியார் வளையார் ஐயம் வவ்வாய் மாநலம்

வவ்வுதியே" (தி.1 ப.63 பா.1)

"கயலார் தடங்கண் அஞ்சொல் நல்லார் கண்டுயில் வவ்வுதியே" (தி.1 ப.63 பா.2)

"பகலாப் பலிதேர்ந் தையம் வவ்வாய் பாய்கலை வவ்வுதியே" (தி.1 ப.63 பா.3)
"

அங்கோல் வளையார் ஐயம் வவ்வாயால்நலம் வவ்வுதியே" (தி.1 ப.63 பா.4)

"பிணிநீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய்கலை வவ்வுதியே" (தி.1 ப.63 பா.5)

"அவர் பூம்பலியோடையம் வவ்வாயால் நலம்

வவ்வுதியே" (தி.1 ப.63 பா.6)

"நிலையாய்ப் பலிதேர்ந்தையம் வவ்வாய்நீ நலம் வவ்வுதியே" (தி.1 ப.63 பா.7)

"கருதேர்மடவார் ஐயம் வவ்வாய் கண்டுயில்

வவ்வுதியே" (தி.1 ப.63 பா.8)

"காரிகைவார் குழலார் அவர்பூம்பலியோ டையம் வவ்வாயால்நலம் வவ்வுதியே" (தி.1 ப.63 பா.9)

"குழலார் மடவார் ஐயம் வவ்வாய் கோல்வளை வவ்வுதியே" (தி.1 ப.63 பா.10)

"சிட்டார் பலிதேர்ந்தையம் வவ்வாய் செய்கலை வவ்வுதியே" (தி.1 ப.63 பா.11)

அறத்தொடு நிற்றல்

அறத்தொடு நிற்றல் என்பதற்கு முறையே வெளிப்படுத்தி நிற்றல் என்பது பொருள். தலைவன் தலைவி இருவர்க்கும் இடையே உள்ள களவொழுக்கத்தைத் தலைவி தோழிக்கும், தோழி செவிலிக் கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தை தமையர்க்கும் அறிவித்து நிற்பர். திருக்கானூர்த் திருப்பதிகமாகிய `வானார்சோதி' என்ற பதிகம் தலைமகள் தோழிக்கு அறத்தொடு நிற்கும் வகையில் அருளிச் செய்யப்பெற்றது. இதுவும் தாருகாவனத்துத் தையலார் பேசுவனவே யாகும். ஐயம் ஏற்ற அழகரிடத்தே மனத்தைப் பறிகொடுத்த அம் மங்கையர் தோழியரிடம் கூறுகின்றனர்.

"இறையார் வந்தென்னில் புகுந்துஎன் எழில் நலமும் கொண்டார்" (தி.1 ப.73 பா.3)

"எண்ணாவந்தென்னில் புகுந்தங் கெவ்வநோய் செய்தான்" (தி.1 ப.73 பா.4)

"ஊர்கள் தோறும் ஐயம் ஏற்றென் உள்வெந்நோய் செய்தார்" (தி.1 ப.73 பா.5)

"எளிவந்தார் போல் ஐயம் என்றென் இல்லேபுகுந்துள்ளத் தெளிவும் நாணும் கொண்ட கள்வர்" (தி.1 ப.73 பா.6)

"...... முறுவல் செய் திங்கே

பூவார் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசிப்

போவார் போலமால் செய்துள்ளம் புக்கபுரிநூலார்" (தி.1 ப.73 பா.7)

"குமிழின் மேனிதந்து கோல நீர்மையது கொண்டார்" (தி.1 ப.73 பா.8)

"வந்தென்னுள்ளம் புகுந்து மாலை காலை யாடுவான்" (தி.1 ப.73 பா.9)

"ஓர்கள்வர் வெள்ளர் போல உள்வெந்நோய் செய்தார்" (தி.1 ப.73 பா.10)

இரங்கல்

இரங்கல் என்பது தலைவி தனித்திருந்து நெஞ்சொடுபுலந்து கூறுவது. இது நெய்தல் திணையாகிய கடல் சார்ந்த இடத்தின் உரிப் பொருள். இதன் பயன் `மூடிவைத்த வேங்கலத்தைச் சிறிது திறப்பின் ஆவி சிறிது வெளியேறுமாறுபோல்' இரங்கிக் கூறும் இத் துறைகளால் தலைவியின் மனக்கவலை சிறிது தணியும். `மலையினார்' என்று தொடங்கும் செஞ்சொல் மாலை தலைவன்முன் நிற்பதாக எண்ணி நெஞ்சொடு பேசும் பாடல்களை உடையன. ஒவ்வொரு பாடலின் ஈற்றடியும்,

"இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணி

என் எழில் கொள்வ தியல்போ" (தி.1 ப.76)

என்று முடிவுறுகின்றது.

எழில்கவர்ந்தான் இருக்கும் இடம்

மனத்தைப் பறிகொடுத்த அம்மங்கைநல்லாள் தூதுவிடுத்தும், துன்பங்களைத் தோழிமாரிடம் கூறியும் நெஞ்சிலுள்ள ஆற்றாமையை ஒருவாறு போக்கிக்கொள்ள முயலுகிறாள். தலைவியின் உடல் வேறுபாடு கண்ட தோழி உன் உள்ளங் கவர்ந்த கள்வன் எங்குள்ளான் என வினவ அவளுக்குத் தலைவி `கரும்பு வில்லை வளைத்து மலரரும்புகளைக் கணைதொடுக்கும் காமனை எரித்தவன். ஆனாலும் காமத்தை அழிக்கவில்லை என்பதற்கு உமையை ஒரு கூற்றிலே உடையான்' எனத் தலைவனது இயல்நலம் கூறினாள் தலைவி. தோழி அவன் எப்பொழுது உன் பெண்மையைக் கவர்ந்தான்? இப்பொழுது அவன் எங்குள்ளான்? எனக் கேட்கிறாள். அதற்குத் தலைவி,

"கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற்

காரிகைமாட்டருளி

பெரும்பகலே வந்துஎன் பெண்மை கொண்டு பேர்த்தவர்சேர்ந்த

இடம் தோணிபுரந்தானே" (தி.3 ப.100 பா.1)

"சங்கியல் வெள்வளை சோர வந்தென் சாயல்கொண் டார்தமதூர்
தோணிபுரந்தானே" (தி.3 ப.100 பா.2)

"ஒத்தபடி வந்துஎன் உள்ளங் கொண்ட ஒருவர்க்கிடம் தோணிபுரம்" (தி.3 ப.100 பா.3)

"என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் தோணிபுரம்" (தி.3 ப.100 பா.8)

"எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் தோணிபுரம்" (தி.3 ப.100 பா.9)

"இண்டைபுனைந்து எருதேறி வந்து என்எழில் கவர்ந்தார் இடம் தோணிபுரம்" (தி.3 ப.100 பா.10)

என்று இத் திருப்பதிகம் முழுவதிலும் தலைவி எழில் கவர்ந்தான் இயல்புகளைக் கூறி இருக்குமிடத்தையும் தெரிவிக்கிறாள்.

அடுத்துத் தாருகாவனத்துத் தையலார் மையல்கொள்ள இறைவன் பிச்சையேற்றபொழுது மயங்கிய மங்கையர் தன்னை வினவிய தோழியர்க்கு எழில்கவர்ந்தான் இருக்கும் இடம் கூறுகின்ற னர். `விண்கொண்ட தூமதி' என்று தொடங்கும் திருப்பரிதிநியமத்துத் திருப்பதிகத்தில் இவர்கள் கூற்றுகள் வந்துள்ளன.

"பெண்கொண்ட மார்பில் வெண்ணீறுபூசிப் பேணார்பலிதேர்ந்து

கண்கொண்ட சாயலொ டேர்கவர்ந்த கள்வர்க்கிடம்" (தி.3 ப.104 பா.1)

"இரவில் புகுந்தென் எழில்கவர்ந்த இறைவர்க்கிடம்" (தி.3 ப.104 பா.2)

"நாண்முகம் காட்டி நலங்கவர்ந்த நாதர்க்கிடம்" (தி.3 ப.105 பா.3)

"அஞ்சுரும்பார் குழல்சோர உள்ளம் கவர்ந்தார்க் கிடம்" (தி.3 ப.106 பா.5)

"ஏர்புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கிடம்" (தி.3 ப.104 பா.6)

"சங்கொடு சாயல் எழில்கவர்ந்த சைவர்க்கிடம்" (தி.3 ப.104 பா.7)

"இறைவளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கிடம்" (தி.3 ப.104 பா.7)

"ஏடலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கிடம்" (தி.3 ப.104 பா.8)

"நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க்கிடம் பரிதிநியமம்" (தி.3 ப.104 பா.9)

என்று, இத்திருப்பதிகம் முழுதும் எழில் கவர்ந்தான்இருக்கும் இடம் அறிவிக்கின்றது.

மயல் செய்வதோ மாண்பு

திருப்பாச்சிலாச்சிராமத்துத் திருப்பதிகமாகிய `துணிவளர் திங்கள்' என்னும் பதிகம் செவிலிகூற்றாக அமைந்து விளங்குவது. செவிலி - வளர்ப்புத்தாய். தலைவியது நிலை கண்டு வருந்தி முறை யிடும் முறையீடு இப்பதிகம்.

"மங்கையை வாடமயல் செய்வதோ இவர் மாண்பு" (தி.1 ப.44 பா.1)

"ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடு" (தி.1 ப.44 பா.2)

"பைந்தொடி வாடச்சிதை செய்வதோ இவர் சீர்" (தி.1 ப.44 பா.3)

"தையலை வாடச் சதுர்செய்வதோ இவர் சார்வு" (தி.1 ப.44 பா.5)

"பைந்தொடி வாடப்பழி செய்வதோ இவர் பண்பு" (தி.1 ப.44 பா.9)

"பூங்கொடி வாடப்புனை செய்வதோ இவர் பொற்பு" (தி.1 ப.44 பா.10)

என்னும் கூற்றுக்கள் செவிலி கூறும் முறையீடுகளாக அமைந்து விளங்குபவை.

தலைவி கூற்று

திருவீழிமிழலைத் திருப்பதிகமாகிய `துன்று கொன்றை' என்ற திருவியமகத்து இடை மடக்காக வரும் பாடல்கள் சில தலைவி கூற்றில் அமைந்துள்ளன.

"என்னிடைப் பலியிடவமே

நின்றது மிழலையுள்ளுமே நீரெனைச் சிறிதும் உள்ளுமே" (தி.3 ப.116 பா.1)

"பாதிகொண்டதும் மாதையே பணிகின்றேன்மிகு மாதையே

காதுசேர்கனங் குழையரே காதலார் கனம் குழையரே" (தி.3 ப.116 பா.2)

"சூடுகின்றதும் மத்தமே தொழுத என்னை உன் மத்தமே

நீடுசெய்வதும் தக்கதே" (தி.3 ப.116 பா.3)

"நட்டமாடுவது சந்தியே நானுய் தற்கிரவு சந்தியே" (தி.3 ப.116 பா.4)

"ஓதிலாதிடும் கரணமே உன்னுமென்னுடைக் கரணமே

ஏவசேர்வுவி நின்னாணையே அருளினின்ன பொற்றாணையே" (தி.3 ப.116 பா.5)

"போந்த தெம்மிடை இரவிலே புகுமிடைக்கள்வம் இரவிலே" (தி.3 ப.116 பா.6)

"செப்புமின் எருது மேயுமே சேர்வுமக்கெருது மேயுமே" (தி.3 ப.116 பா.7)

"மேய இத்துயில் விலக்கணாமிழலை மேவிய இலக்கணா" (தி.3 ப.116 பா.9)

`என்னிடத்திற்குப் பலிபெற வருவீராக. நீர் விரும்பி எழுந் தருளியிருப்பது திருவீழிமிழலையுள். எனை நீர் சிறிதேனும் நினைத் தருளும்'

`திருமேனி பாதியிற் கொண்டது உமையை; பணிகிறேன் உமது மிக்க அழகை; காதில் அணிந்த கனவிய குழையை உடையவரே! காதல் செய்யும் பெண்களின் மனத்திண்மையைக் குழைவிப்பரே!'

`நீர் சூடிக்கொள்வது ஊமத்தம்பூ. உன்னை வணங்கும் என்னைப் பித்தனாக்குவது தக்கதோ!'

`நடனம் ஆடுவது சந்தி என்னும் நாடக உறுப்பின்படியே யாகும். நான் காமன் வாதையினின்று பிழைத்தற்கு இராக்காலம் சந்து செய்விப்பதற்கேற்ற காலம்'

`மகாசங்காரகாலம் வரை ஓயாமல் ஐந்தொழில் நடத்தற்குக் காரணரே! என்னுடைய மனம் முதலிய காரணங்கள் உம்மையே நினைக்கும். அதனால் மன்மதபாணம் என்மேல் தைக்கும்; அதுவும் உன் ஆணையின்படிதானோ! பொன் போன்ற திருவடிகளை அருளி னால் நைதல் எனக்கு நேருமா?'

`எங்கள் வீட்டிற்கு வந்தது பிச்சையேற்றலை முன்னிட்டு; உம்மோடு களவொழுக்கத்தால் இரவில் புணர்வோம்.'

`உமக்கென்றுள்ள என் பெண்மை நலமாகிய விளைபுலத்துள் மன்மதன் அம்பாகிய எருதுமேயலாமா? உமக்கு ஊர்தியாக எருதும் இருக்குமே'

`நான் இப்போதுற்ற பொய்த் தூக்கத்தை விலக்குவீராக! திருவீழிமிழலை மேவிய அழகியவரே'

தோழி கூற்று

உள்ளங் கவர்ந்ததால் உடல் எழில் சிதைந்து உருக்குலைந்து உரைதடுமாறிப் பிதற்றுகின்றாள் தலைவி. தலைவியின் நிலையைக் கண்ட தோழி அவளது நிலைமையைத் தலைவற்கு எடுத்துரைக்கின் றாள். `களவில் அவளது கவினெலாம் கொண்டு இன்று அவளை அருளாதிருத்தல் அழகோ' என்கிறாள் தோழி. இதனைச் செவிலி கூற்றெனலுமாம்.

"மழையார் மிடறா! ...... வெண்நாவலின் மேவியஎம்

அழகா! எனும் ஆயிழையாளவளே" (தி.2 ப.23 பா.1)

"கொலையார் கரியின் உரிமூடியனே! ......

வெண்ணாவலுளாய்

நிலையா! அருளாய் எனும் நேரிழையே"(தி.2 ப.23 பா.2)

"காலால் உயிர்காலனை வீடுசெய்தாய்! ......

ஆலார் நிழலாய் எனும் ஆயிழையே" (தி.2 ப.23 பா.3)

"விறல்மிக்க கரிக்கருள் செய்தவனே

அறமிக்கது வென்னுமென் ஆயிழையே" (தி.2 ப.23 பா.4)

"செங்கட்பெயர் ...... வெண்ணாவலுளாய்

அங்கத்தயர் வாயினள் ஆயிழையே" (தி.2 ப.23 பா.5)

"வெண்நாவலுளே

நின்றாயருளாய் எனும் நேரிழையே" (தி.2 ப.23 பா.6)

"வெண்நாவலுளாய்

அலசாமல் நல்காய் எனும் ஆயிழையே" (தி.2 ப.23 பா.7)

"வெண்நாவலுள் மேவியஎம்

அரவா எனும் ஆயிழையாளவளே" (தி.2 ப.23 பா.9)

"வெண்நாவலுளாய்

அத்தா அருளாய் எனும் ஆயிழையே" (தி.2 ப.23 பா.10)

ஏன்று கொள்ளுமோ?

தலைவி தலைவனது பெருமையினையும் தன் சிறுமையினை யும் எண்ணி ஏன்று கொள்ளுமோ என உரைக்கும் திருவாரூர்த் திருப்பதிகம் அகப்பொருட் கருத்தில் அமைந்துள்ளது. `அலங்கல் தந்தெனை அஞ்சலெனும் கொலோ' என்னும் தொடர்கொண்டு இதனை அகப்பொருட்பதிகமாகக் கருதலாம்.

"அந்த மாய் உலகாதியு மாயினான் ......

சிந்தையே புகுந்தான் திருவாரூர் எம்

எந்தை தான் எனை ஏன்று கொளுங்கொலோ" (தி.3 ப.45 பா.1)

"அருத்த! என்? எனை அஞ்சலென் னாததே"(தி.3 ப.45 பா.2)

"இறைவன்தான் எனை ஏன்று கொளுங் கொலோ" (தி.3 ப.45 பா.3)

"அல்லல் தீர்த்தெனை அஞ்சலெனுங் கொலோ"(தி.3 ப.45 பா.4)

"வருந்தும் போதெனை வாடலெனுங்கொலோ"(தி.3 ப.45 பா.5)

"ஆர்கணா எனை அஞ்சலென்னாததே" (தி.3 ப.45 பா.6)

"இளைக்கும் போதெனை ஏன்று கொளுங்கொலோ" (தி.3 ப.45 பா.7)

"அலங்கல் தந்தெனை அஞ்சலெனுங் கொலோ" (தி.3 ப.45 பா.8)

"அடிகள் தானெனை அஞ்ச லெனும் கொலோ" (தி.3 ப.45 பா.9)

"ஈசன் தானெனை ஏன்று கொளும் கொலோ" (தி.3 ப.45 பா.10)

தலைவன் செய்கையும் விளைவும்

திருமூக்கீச்சரம் பணிந்தெழுந்த திருஞானசம்பந்தப் பிள்ளை யார் அவ்வூர்த் திருப்பதிகத்து ஒரு பாடலில் அகப்பொருட் செய்தி ஒன்றை உரைத்துப் போகின்றார்.

தலைவனாகிய பெருமான் தனியே இரவில் வந்து என்னைக் கவர்ந்தான். அதனால் என் கை வளையல்கள் கழன்றன. தலைவன் செய்த இம்மாயத்தால் நான் ஏதமடைகிறேன் எனத் தலைவி புலம்புகிறாள்.

"வெந்த நீறுமெய்யிற் பூசுவர் ஆடுவர் வீங்கிருள்

வந்தெனா ரவ்வளை கொள்வதும் இங்கொரு மாயமாம்

அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய

எந்தைமூக்கிச் சரத் தடிகள் செய்கின்றதோ ரேதமே" (தி.2 ப.120 பா.6)

இடந்தலைப்பாடு

திருவலஞ்சுழி சென்று பணிந்தெழுந்த திருஞானசம்பந்தர் `என்ன புண்ணியம்' என்று தொடங்கும் திருப்பதிகத்து ஏழாவது திருப்பாடலில் தலைவி தலைவனது ஊரிற்சென்று தலைப்பட விழைவ தாகக் கூறுவர். அதாவது இது:-

"வலஞ்சுழி அரனார் பால் சென்ற ஊர்தனில்

தலைப்படலா மென்று சேயிழை தளர் வாமே" (தி.2 ப.106 பா.7)

`மட்டிட்டபுன்னை' (தி.2 ப.47) என்று தொடங்கும் மயிலாப்பூர்த் திருப்பதிகமும் `சடையாயெனுமால்' (தி.2 ப.18) என்று தொடங்கும் திருமருகல் திருப்பதிகமும் அகப்பொருளமைதிக்கேற்ப அமைந்தவை.

அகப்பொருட் பதிகங்கள்

1, 56, 60, 63, 71, 73, 76, 159, 242, 256, 303, 321, 358, 359, 362, 374.

சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 5

நால்வர் காலம்

குடந்தை என். சேதுராமன் பி.எஸ்ஸி., டி.எம்.ஐ.டி.,

இயக்குநர், இராமன்மற்றும் இராமன் வணிகக் குழுமம்.

சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். நால்வரின் காலங்களைப் பல அறிஞர்கள் பலகோணத்தில் ஆய்ந்து உள்ளனர். அவர்களின் ஆய்வுகளும் அணுகுமுறைகளும் ஆராய்ச்சி யாளர்களுக்குப் பெருவிருந்தாய் அமைகின்றன. அடியேன் இவ் ஆய் வில் இறங்குவதற்குமுன் அப்பெரியோர்களுக்கு எனது வணக்கத்தை முதற்கண் கூறி, ஆராய்ச்சியைத் துவக்குகிறேன். பலபுதிய செய்தி களை ஆங்காங்கே காணலாம்.

நால்வரின் கால ஆராய்ச்சிக்கு மூலக் கருவூலங்களாகத் துணை நிற்பவை முறையே பாண்டியர் வரலாறு, பல்லவர் வரலாறு, பழங்காலச் செப்பேடுகள், கல்வெட்டுகள், வானசாத்திரம், தேவாரம், பெரியபுராணம் ஆகியவை ஆகும். அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளும், செப்பேடுகளும் ஆய்விற்கு அடித் தளமாக அமைகின்றன. அவைகள் தக்க இடத்தில் குறிப்பிடப்படும்.

திருஞானசம்பந்தர் காலம் :

திருஞானசம்பந்தரின் காலத்தை ஆராய்ச்சி செய்வதற்கு முன்பாக, பாண்டியர் காலத்தையும், வம்சாவழியையும் அறிவது அவசியம். ஆறாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை அரசாண்ட பாண்டிய மன்னர்கள் யாவர்? அவர்களின் காலம் எது? இவ்வினாக்களுக்குரிய விடைகளைப் பாண்டியர் செப்பேடுகள் பத்தும், அம்மன்னர்களின் கல்வெட்டுகளும் நமக்கு அளிக்கின்றன. அண்மைக் காலத்தில் பாண்டியரின் வரலாறு விஞ்ஞான ரீதியாக ஆராயப்பட்டது. இவ்வாய்வின்படி ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை அரசு புரிந்த பாண்டியரின் வம்சாவழிப் பட்டியல் கீழே கொடுக்கப்பெற்றுள்ளது. (பாண்டியர் செப்பேடுகள் பத்து - தமிழ் வரலாற்றுக்கழகம் - பதிப்பு 1967.)

ஒவ்வொரு மன்னனது காலமும் எவ்வாறு நிர்ணயம் செய்யப் படுகிறது என்பதைத் தக்க இடங்களில் சான்றுகளுடன் காண்போம்.

முற்காலப் பாண்டியர்

1. பாண்டியன் கடுங்கோன் (சுமார் கி.பி. 550)

(களப்பிரரை ஒழித்து, மதுரையில் மீண்டும் பாண்டியப் பேரரசைத் தாபித்தவன்)

2. மாறவர்மன் அவனி சூளாமணி

3. சேந்தன்

4. மாறவர்மன் அரிகேசரி (630-680)

(நெல்வேலிப் போரில் சேரனை வென்றான். புலியூரில் கேரளனை வென்றவன் - அநேக இரண்ய கர்ப்பம், துலா பாரம் தானங்களைப் பலமுறை செய்தவன். பாண்டி நாட்டில் மங்கலாபுரம் என்ற ஊரை நிர்மாணித்தான்.)

5. கோச்சடையன் ரணதீரன் (680-730)

(மங்கலாபுரத்தில் சாளுக்கியரைத் தோற்கடித்தான்.)

6. ஷ்ரீ மாறன் இராஜசிம்மன் (730-768)

(பல்லவ மல்லனை வென்றவன்)

7. நெடுஞ்சடையன் பராந்தகன் - முதல் வரகுணன் (768-811) (பரம வைணவன்)

8. ஷ்ரீ மாற ஷ்ரீ வல்லவன் (811-860)

(சேரனையும், சிங்களவரையும் வென்றவன்)

12. மாறவர்மன் இராஜசிம்மன்

(911-931)

பாண்டியர் செப்பேடு பத்தில், குறிப்பாக வேள்விக்குடி செப் பேடுகள், சீவரமங்கல செப்பேடுகள், தளவாய்புரம் செப்பேடுகள், சின்னமனூர் பெரிய செப்பேடுகள் ஆகியவைகளை ஊன்றிக் கவனித்தால் ஏழாவது மன்னனாகிய நெடுஞ்சடையன் பராந்தகனே முதல் வரகுணன் என்பதை எளிதில் அறியலாம். (Epigraphica Indica XXXII page 271) சாளக்கிராமத்தில் உள்ள வரகுணஈஸ்வரமுடையர் கோயிலுக்குத் தேவதான நிலங்கள் இறையிலியாக அளிக்கப்பட்டன என்று கூறுகிறது. (E.I. XXVIII No. 7) இதனால் ஷ்ரீ வல்லபன் தன் தந்தை வரகுணன் பெயரால் ஒரு சிவன் கோயிலை எழுப்பினான் என்பதை அறியலாம்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் நெடுஞ்சடையன் பராந்தகனாகிய வரகுணனுக்கு உரியவை, கரவந்த புர ஆதிவாசி வைச்சியன், பாண்டி அமிர்தமங்கல வரையினனாகிய சாத்தன் கணபதி என்பான், சம்புவின் திருக்கோயிலையும், திருக் குளத்தையும் திருத்துவித்தான் என்றும், அவனது மனைவியாக நக்கன் கொற்றியார் துர்க்கைக்கும், சேட்டைக்கும் கோயில் எடுப்பித்தாள் என்றும் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. மன்னனின் ஆறாம் ஆட்சி ஆண்டில் கலியுக வருடம் 3874இல் தை மாதத்தில் இத்திருப் பணிகள் செய்யப்பட்டன. (E.I. XXXVI No. 5). கல்வெட்டின் காலம் கி.பி. 774 சனவரி மாதம் ஆகும்.

மதுரைக்கு அருகில் உள்ள ஆனைமலை நரசிங்கபெருமான் குடவரைக் கோயிலில் இம்மன்னனுக்கு உரிய இரு கல்வெட்டுகள் உள்ளன. மன்னனின் மந்திரியாகிய மதுரகவி என்னும் மாறன்காரி இக் குடவரைக் கோயிலை எடுப்பித்தார் என்றும், அவர் இறந்துவிடவே, அவரது தம்பியாகிய மாறன் எயினன் என்பவர் கோயிலைக் கட்டி முடித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. (South Indian Inscriptions Volumes XIV Nos. 1 and 2; E.I. VIII No. 33). இக்கல்வெட்டுகளில், மன்ன னின் மூன்றாம் ஆண்டு, கலியுக வருடம் 3871, கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை குறிக்கப்படுகின்றன. இதன் காலம் கி.பி. 770, நவம்பர் மாதம் நான்காம் தேதி ஆகும். (E.I. XXXVI page 115)

திருப்பரங்குன்றம் ஆனைமலைக் கல்வெட்டுகளின் காலங் களைப் பின்னோக்கிக் கணக்கிட்டால், கி.பி. 768 இல் சனவரியில் இருந்து நவம்பர் மாதத்திற்குள் ஏதோ ஒருநாளில் மன்னன் முடி சூடினான் என்பதை அறியலாம். நெடுஞ்சடையன் பராந்தகனாகிய முதல் வரகுணன் கி.பி. 768இல் முடிசூடியவன் என்னும் செய்தி ஆய்விற்கு ஒரு பலத்த அஸ்திவாரமாக அமைகிறது.

கி.பி. 770க்கு உரிய ஆனைமலைக் கல்வெட்டில் மன்னனின் மந்திரியாகிய மதுரகவி என்னும் மாறன்காரி குறிப்பிடப்படுகிறார். இவர் நம்மாழ்வாருடன் தொடர்பு உடையவர் என்பதை இலக்கியங் களால் அறியலாம். (E.I. VIII page 319, S.I.I. XVI Introduction)

சீவரமங்கலச் செப்பேடுகள் நெடுஞ்சடையன் பராந்தகனாகிய முதல் வரகுணனை குரு சரிதை கொண்டாடியவன் என்றும், பரம வைணவன் என்றும் கூறுகின்றன. (Archaeological Report on Epigraphy 1926 - 27 page 87;பாண்டியன் செப்பேடு பத்து பக்கம் XXIV) நம்மாழ்வார் வரகுணமங்கை என்னும் திருமால் தலத்திற்கு மங்களா சாசனம் அருளினார் என்பதும் அறியத்தக்கது. முதல் வரகுணனுக்கு சிரீவரன் என்னும் விருதுப்பெயர் இருந்ததைச் செப்பேடுகள் கூறுகின்றன. நம்மாழ்வார் சிரீவர மங்கை என்னும் தலத்திற்கு (நாங்குநேரி) மங்களாசாசனம் செய்துள்ளார். சிந்தனைக்கு உரிய இச்செய்திகளினால் முதலாம் வரகுணன் வைணவத்தில் பெரிதும் ஈடுபட்டவன் என்பதை அறியலாம்.

முதல் வரகுணனின் தந்தை மாறவர்மன் ராஜசிம்மன் ஆவான். ராஜசிம்மன் பல்லவமல்லனைத் தோற்கடித்ததாகச் செப்பேடுகள் கூறுகின்றன. இப்பல்லவ மல்லன் நந்திவர்மன் என்னும் பெயர் கொண்டவன். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவன். கி.பி. 730இல் தனது பன்னிரண்டாவது வயதில் முடிசூடி 65 ஆண்டுகள் (கி.பி. 795 வரை) அரசாண்டவன். (E.I. XXIX page 92; S.I.I. IV No. 135 section "d" - A.R.E. 666 of 1922 Nandipotavarman regnal year 65) ஆகவே வரகுணனின் தந்தையான ராஜசிம்மனின் காலத்தைச் சுமார் 730 முதல் 768 வரை என்று கொள்ளலாம். ராஜசிம்மனின் தந்தை கோச்சடையன் ரணதீரன் ஆவான். இவன் சாளுக்கியர்களை மங்கலாபுரம் என்னும் இடத்தில் தோற்கடித்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. மங்கலா புரம் என்பது பாண்டி நாட்டில் உள்ள ஊர். இவ்வூர் இவன் தந்தை மாறவர்மன் அரிகேசரியால் நிர்மாணிக்கப்பட்டது என்பதைப் பின்னால் காண்போம். இவன் காலத்தை 680இலிருந்து 730 வரை என்று கொள்ளலாம். பின் கூறப்படும் சரித்திர நிகழ்ச்சிகளும், ரண தீரனின் தந்தையின் காலமும் அக்கருத்திற்குத் துணை நிற்கும்.

கோச்சடையன் ரணதீரன் மங்கலாபுரத்தில் சாளுக்கியரைத் தோற்கடித்தது எப்போது என்ற வினாவிற்குத் திட்டவட்டமாக இப்போது விடை அளிப்பதற்கு இல்லை. சாளுக்கிய நாட்டில் முதலாம் விக்கிரமாதித்தன் கி.பி. 654 முதல் 681 வரை அரசாண்டவன். இவன் 647இல் பல்லவரை வென்று சோழமண்டலத்தில் ஊடுருவி உறையூரில் முகாமிட்டான். தொடர்ந்து பாண்டி மண்டலத்திலும் படையெடுத் திருக்கலாம். அப்போது இளவலான பாண்டியன் ரணதீரன் சாளுக்கிய விக்கிரமாதித்யனை மங்கலாபுரத்தில் தோற்கடித்து இருக்கலாம். (E.I. X No. 22; E.I. XXVII No. 20) சாளுக்கிய விக்கிரமாதித்தனின் மகன் வினயாதித்தன் 681 முதல் 696 வரை அரசாண்டவன். இவன் சோழ, கேரள, பாண்டிய, பல்லவரின் கூட்டணியை முறியடித்ததாகச் சாளுக்கியரின் செப்பேடுகள் கூறு கின்றன. ( E.I. IX page 201) எப்படி இருப்பினும் போர் நடந்த காலத்தை நிர்ணயிக்கும் வகையில் இடைவெளி இருபது ஆண்டுகளுக்கு மேல் இல்லை. தந்தையால் நிர்மாணிக்கப்பட்ட மங்கலாபுரத்தில் மகன் ரணதீரன் சாளுக்கியரைத் தோற்கடித்தான் என்னும் வரலாற்று வடிவமே நமக்குத் தேவையானது.

ரணதீரனின் தந்தை மாறவர்மன் அரிகேசரி ஆவான். அரி கேசரி, நெல்வேலிப் போரில் சேரனையும், புலியூர்ப்போரில் கேரளனையும் வென்றவன் என்றும், எண்ணற்ற துலாபாரமும், இரண்ய கர்ப்ப தானங்களும் செய்தவன் என்றும் செப்பேடுகள் கூறு கின்றன. இவனது காலம் 680க்கு முன் விழுகின்றது. இந்தக் கட்டத்தில், பெரிய புராணம், ஏனாதிக் கல்வெட்டு, மதுரை வைகைக் கல்வெட்டு ஆகியவைகளை நோக்குவோம்.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவான். (630 - 668) மேலைச் சாளுக்கியர்களுக்கும், பல்லவர்களுக்கும் தீராத பகைமை இருந்தது. கி.பி. 642இல் நரசிம்மவர்மன் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தான். (Sastri - A. History of South India - Page 151 Edition 1971) சாளுக்கியரின் தலைநகரான வாதாபியை அழித்தான். அவ்வூரே இன்று பதாமி என்று விளங்குகின்றது. அவ்வூரில் உள்ள மல்லிகார்ச் சுனர் ஆலயத்துப் பக்கத்தில் உள்ள பாறையில் நரசிம்மவர்மனது கல்வெட்டை இன்றும் காணலாம். நரசிம்மவர்மனும் வாதாபி கொண்டவன் என்று அழைக்கப்படலானான்.

சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில், சிறுத்தொண்டர் நாயனாரைப் பற்றிக் குறிப்பிடும்போது, வாதாபிப் போரைப் பற்றி விரிவாய் எடுத்துரைப்பர். சிறுத்தொண்டரின் இயற்பெயர் பரஞ்சோதி என்பது ஆகும். இவர் அவதரித்த ஊர் சோழநாட்டுத் திருச்செங் காட்டங்குடி. பரஞ்சோதி மன்னனிடத்து யானைப்படைத் தலைவராய்த் திகழ்ந்தவர். மன்னவர்க்குத் தண்டு போய் வாதாபித் தொன்னகரம் துக ளாகச் செய்து பன்மணியும், நிதிக்குவையும் பரிசுத்தொகையும் இன் னும் பலவும் மிகக் கொணர்ந்து அரசன் முன் வைத்தனர். மன்னனும் மகிழ்ந்து பரஞ்சோதியைப் போற்றினான். பரஞ்சோதியார் வாதாபிப் போரில் கலந்து கொண்டது கி.பி. 642 என்பது வெள்ளிடை மலை.

பரஞ்சோதியார் போர்த் தொழிலை வெறுத்தார். சிவபெரு மான்பால் பக்தி கொண்டு, மன்னனிடம் விடைபெற்று, தனது பதி யாகிய திருச்செங்காட்டங்குடி, வந்தமர்ந்து, திருத்தொண்டில் ஈடுபாடு கொண்டனர். சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார். திருவெண் காட்டு நங்கை என்னும் நல்லாளை மணந்தார். அவர்களுக்கு ஓர் மகன் பிறந்தான், தங்கள் மகனுக்குச் சீராளன் என்னும் பெயரை வைத்தனர். (திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் உள்ள முதல் இராஜராஜனின் 19 வது ஆட்சிக் கல்வெட்டுக்கள் இரண்டில் (கி.பி. 1004) இறைவனின் பெயர் சீராளன் என்று கூறப்பட்டு உள்ளது. "திருச்செங்காட்டங்குடி மகா தேவர் சீராள தேவர்க்குப் பணிசெய்து சிறுத்தொண்ட நம்பிக்குத் திருவிழா எடுப்பதற்கும், தேவதானம் திருச்செங்காட்டங்குடி சீராளத் தேவர் சித்திரைத் திருவாதிரைத் திருநாளில் சிறுத்தொண்டர் மாளிகையில் எழுந்தருளவும்" நிவந்தங்கள் அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இறைவனின் பெயர் சீராளன் என்பது பெரியபுராணத்திலும் தேவாரங்களிலும் காணப்படவில்லை. கல்வெட்டில் இச்செய்தி கூறப்படுவது உய்த்து உணரத்தக்கது. தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை நன்னிலம் கல்வெட்டுகள் முதல் தொகுதியில் எண்கள் 67, 68 காண்க.)தமது மகன் சீராளனைச் செழுங்கலைகள் பலப் பயிலப் பள்ளியினில் இருத்தினர். அவ்வமயம் திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டங் குடிக்கு வந்து சிறுத்தொண்டரை வாழ்த்தி, திருச்செங்காட்டங்குடி இறைவன்பால் பதிகங்கள் இயற்றி அருளினார். இந்நிகழ்ச்சிகளை நோக்குங்கால், திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டங்குடி வந்தது சுமார் கி.பி. 650 என்று கொள்ளலாம்.

பலதலங்கள் ஏகிய பின்பு திருஞானசம்பந்தர் மதுரையம்பதி வந்தடைந்தார். அப்போது மதுரையில் நெடுமாறன் என்னும் பாண்டியன் ஆட்சிபுரிந்து வந்தான். இவன் மனைவியே சோழனின் மகளாகிய மங்கையர்க்கரசியார். மன்னனின் மந்திரி குலச்சிறையார் ஆவர். பாண்டி மன்னன் சைன மதப்பற்று உடையவனாக இருந்தனன். மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, திருஞானசம்பந்தர், பாண்டி மன்னனைச் சைவ சமயத்தை ஏற்கும்படி செய்து அருளினர். மன்னனும் சைவ சமயத்தைத் தழுவி, திருத்தொன்டுகள் பலபுரிந்தனன். இம்மன்னனை நெல்வேலிப்போர் வென்ற நெடுமாறன் என்றும், நின்றசீர் நெடுமாற நாயனார் என்றும் சுந்தரமூர்த்தி நாயனாரும், நம்பியாண்டார் நம்பிகளும், சேக்கிழார் பெருமானும் குறிப்பிடுவர். நெல்வேலிப்போர் வென்ற பாண்டியன் நெடுமாறனைத் திருஞானசம்பந்தர் சந்தித்தது கி.பி. 652 இல் எனக் கொள்வதில் தவறில்லை.

பாண்டியரின் செப்பேடுகளின் கூற்றுப்படி கோச்சடையன் ரணதீரனின் தந்தையான நெல்வேலிப் போர் வென்ற மாறவர்மன் அரிகேசரியே நின்ற சீர் நெடுமாறநாயனார் என்பதை எளிதில் அறியலாம். செப்பேடுகளும் மாறவர்மன் அரிகேசரி நெல்வேலியில் சேரனை வென்றான் என்றும், புலியூரில் கேரளனை வென்றான் என்றும் கூறுகின்றன. சமீபத்தில் ஏனாதி என்னும் இடத்தில் கிடைத்த கல்வெட்டு இதனை உறுதி செய்யும். இக்கல்வெட்டு வட்டெழுத்தில் உள்ளது. எழுத்தின் அமைதி 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சுட்டுகின்றது. கல்வெட்டைப் பார்ப்போம்.

இராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை வட்டம் - ஏனாதி என்ற ஊரில் சமீபத்தில் கிடைத்த கல்வெட்டு, (நன்றி - திரு. நடன காசினாதன், இயக்குநர், தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை. நன்றி - திரு. முத்துக்கோனார், மதுரை வரலாற்றுப் பேரவை.) பின்வருமாறு :

1. ............. து அறிந்தோ

2. தர்விழுமையுந் நோம்மை .......

3. றிவாபெய் -- நேராத நேர்ப்பேரூர் க(ண்)

4. டிர்நெய்வேலிப் போரார் வென்நேர்ந்தர் பொழிகுருதி

5. நீரா நிலமகளை ஆட்டிய கோன் மாந்தார் நேரிர்கு

6. லமகள் ஆட்டினீரை கூ(ற்) றுல வொரு கால் பொலங்

7. கருசில் நூல் கலப்ப ஒரு காற் துலாபாரம்

8. புக்கான் பொரு காற்சிலை வேந்தனற்றோர் வாடத்தென்

9. புலிஊர் (சென்றிக்) குலை வேழங்கைப்படுத்த கோமா

10. ணணிருலகளவு மாபாய விரிந்து வானுரிஞ் சற்றரிதா

11. ரமாபோல குளிருந்தன்மைத் தோன்றிதாள் நடவாபோ

12. ரீ யானை உலங்குணி (மே) மா நூட்டிய கூடற் கோமாறனே கூறு

13. ஷ்ரீ சேந்தன் மாறன்

14. அரிகேஸரி

15. முள்ளி நா

16. ட்டு அரிகேசரி

17. நல்லூர் தச்ச

18. ன் சடயன் பூ

19. தன் எழுத்து

கடல் கோமாறன் - நெல்வேலிப்போர் வென்றவன் - சேந்தன் மாறன் அரிகேசரி - ஆகிய இச்செய்திகளால் - இக்கல்வெட்டு நின்றசீர் நெடுமாற நாயனாராகிய பாண்டி மன்னனுடையது என்பதை எளிதில் அறியலாம். மன்னன் துலாபாரம் செய்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. இச்செய்தி செப்பேடுகளிலும், கீழே சொல்லப்படும் வைகைக்கரைக் கல்வெட்டிலும் சொல்லப்பட்டுள்ளது. சேந்தன் மாறன் என்றால் சேந்தனின் மகன் மாறன் என்பது பொருள். முள்ளிநாட்டு அரிகேசரி நல்லூர் என்பது இக்காலத்தில் அம்பாசமுத்திரம் அருகில் கிரியம்மா புரம் என்று வழங்குகிறது. இவ்வூர் அரிகேசநாதர் கோயில் கல்வெட்டு களில் இறைவனின் பெயர் முள்ளிநாட்டு அரிகேசரி நல்லூர் அரிகேசரி ஈஸ்வரமுடைய நாயனார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (A.R.EP. 455 of 1916) இக் கோயில் மாறவர்மன் அரிகேசரியின் பெயரால் கட்டப்பட்டது என்பதை நன்கு உணரலாம்.

வைகைக்கரைக் கல்வெட்டும் இம்மன்னனுடையதே. (E.I. XXXVIII No. 4; இதில் சேந்தன் மற்று என்று தவறாகப் படித்து உள்ளனர். சேந்தன் மாறன் என்பதுதான் சரியான வாசகம் என்பதை சாசன ஆய்வு பக்கம் 32இல் உள்ள புகைப்படத்தில் காணலாம். இப்போது இக்கல்வெட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருங்காட்சி அகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.) கல் வெட்டு மன்னனை சேந்தன்மாறன் என்று குறிப்பிடுகிறது. சேந்தனின் மகனாகிய மாறன் என்பது இதன்பொருள். மன்னனின் ஆட்சி ஆண்டு 50 இல் மன்னனின் பெயரால் அரிகேசரியான் என்னும் மதகு (நீர்மடை) கட்டப்பட்டது கூறப்படுகிறது. எண்ணற்ற துலாபாரமும், கோதானமும், இரண்ய கர்ப்ப தானமும் மன்னன் செய்தனன் என்றும் கூறப்படுகிறது. அக்ரகாரங்கள் பலவும் ஏற்படுத்தப்பட்டன. மங்கலா புரம் என்ற ஊரையும் மன்னன் நிர்மாணித்தான். (இதே மங்கலா புரத்தில்தான் இவன் மகன் ரணதீரன் சாளுக்கியரை வென்றான் என்பதை முன்பு கண்டோம்.)

வைகைக்கரைக் கல்வெட்டு கிரந்தமும், வட்டெழுத்தும் கலந்து உள்ளது. எழுத்தின் அமைதி 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. சொல்லப்பட்டுள்ள செய்திகளால் இக்கல்வெட்டும் நின்றசீர் நெடுமாற னாகிய பாண்டி மன்னனது என்பதில் சிறிதும் ஐயமில்லை. மன்னன் சைன மதத்தவனாகக் காட்சி அளிக்கவில்லை. சைவ சமயத்திற்கு மாறிய பிறகு இக்கல்வெட்டு வெட்டப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எளிதில் அறியலாம். ஆட்சி ஆண்டு 50 எனக் கொடுக்கப் பட்டுள்ளது. சைவ சமயத்தைத் தழுவிய பின்பு மன்னனும் நெடுங் காலம் வாழ்ந்திருந்தான் என்று சேக்கிழார் பெருமானும் கூறுவர். தொகுத்து நோக்கினால், இம்மன்னன் கி.பி. 630 இலிருந்து 680 வரை ஆட்சி புரிந்திருக்கலாம் எனக் கொள்ளலாம்.

அரிகேசரியின் கொள்ளுப்பாட்டன் கடுங்கோன் என்னும் பாண்டியன் ஆவான். இவன் களப்பிரர்களை ஒழித்தவன். கடுங்கோன் முடிசூடிய காலத்தைச் சற்றேறக் குறைய கி.பி. 550 என்று கொள்ள லாம். இக்காலமே மதுரையில் களப்பிரர் ஒழிக்கப்பட்ட காலம்.

களப்பிரர் என்பார் கருநாடகத்திலிருந்து வந்த ஒரு சாரார். இவர்கள் மதுரையைப் பிடித்து ஆட்சி புரியலாயினர். மதுரைக்களப் பிரர் சைனர். சோழமண்டலம், தொண்டை மண்டலம் ஆகிய பகுதி களில் வாழ்ந்த களப்பிரர் பௌத்தர். இதன் விரிவான ஆய்வை திரு. மு. அருணாசலம் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரையில் காண்க. (Journal of The Madras University - Section A Humanities - Volume L I No. 1 - January 1979)

திருஞானசம்பந்தர் பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இதுவரை வந்த ஆய்வின் பயனாய் இவர் காலத்தை கி.பி. 640 முதல் 656 வரை என்று கொள்ளலாம். இவரது காலத்தில் திருநாவுக்கரசரும் வாழ்ந்தார். ஆளுடைய பிள்ளையான ஞானசம் பந்தர் வயது முதிர்ந்த நாவுக்கரசரை "அப்பரே" என்று மரியாதையாக அழைப்பர். நாவுக்கரசர் 80 வயது வரை வாழ்ந்ததாகக் கருதப்படு கிறது. எனவே திருநாவுக்கரசரின் காலம் சுமார் 580 - 560 எனக் கொள்வதில் தவறில்லை. வேறுபல சரித்திர நிகழ்ச்சிகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அவை அறிந்த செய்திகளாதலால் விரிவுக்கு அஞ்சி விடுக்கிறேன்.

சுந்தரர் காலம்:

சுந்தரரின் காலத்தை அறியப்புகுமுன் பல்லவ மன்னர்களின் காலத்தைப் பற்றியும் சிறிது குறிப்பிடவேண்டி உள்ளது. திருநாவுக் கரசர் காலத்துப் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவான். அவனுக்குபின் ஆண்ட பல்லவ மன்னர்கள் வருமாறு:

1. முதலாம் மகேந்திரவர்மன் 600-630

2. முதலாம் நரசிம்மவர்மன் 630-668

3. இரண்டாம் மகேந்திரவர்மன் 668-670

4. பரமேஸ்வரவர்மன் 670-700

5. இரண்டாம் நரசிம்மவர்மன் 700-728

மூன்றாம் மகேந்திரவர்மன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன்

720-728 728-730

ராஜசிம்மன்

பல்லவ மன்னர்களில் இரண்டாம் மகேந்திரவர்மன் (எண் - 3), ராஜசிம்மனாகிய இரண்டாம் நரசிம்மவர்மன் (எண் - 5) ஆகிய மன்னர்களின் செப்பேடுகள் இரண்டில் வானிலைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளின் துணைக் கொண்டு, பல்லவர் களின் கல்வெட்டுகள், செப்பேடுகள், சாளுக்கிய மன்னர்களின் கல் வெட்டுகள், செப்பேடுகள் இவைகளின் துணைக்கொண்டும், மேலே காட்டியுள்ள பட்டியலை ஆய்வாளர் கணக்கிட்டுத் தந்துள்ளனர். பல்லவர் சரித்திரத்திற்கு இண்டிகா தொகுதி 20 இல் கட்டுரை எண் 11இலும், எபிகிராபிகா இண்டிகா தொகுதி 32 இல் கட்டுரை எண் 9இலும் வெளிவந்துள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப் பட்ட அறிய, பலருக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் காலத்தை ஆராயப் புகுந்த பல அறிஞர்களுக்கு சில குழப்பங்கள் ஏற்பட்டன.

நிற்க, விஞ்ஞான ரீதியாக பல்லவர் காலம் கணிக்கப்பட்டுள்ள மேல்வரும் பட்டியலைக் கொண்டு சுந்தரர் காலத்தைக் காணலாம்.

சுந்தரர் திருத்தொண்டத் தொகையில், "கடல் சூழ்ந்த உலகம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கற்கு அடியேன்" என்கின்றார். காடவர் கோன் என்றால் பல்லவ மன்னன் என்று பொருள். "உலகம் காக்கின்ற பெருமான்" என்று நிகழ்காலத்தில் கூறுவதால் அப்பல்லவ மன்னனும், சுந்தரரும் சமகாலத்தவர்கள் என்பதை எளிதில் அறியலாம். கழல் என்பது மன்னனுக்கு உரிய அடைமொழி. சிங்கன் என்பது மன்னனின் இயற்பெயர். பல்லவர் களுக்கு, சிங்கன் என்ற பொதுப்பெயரைக் கூறி விட்டபடியால் மீண்டும் ஒருமுறை சிங்கன் என்ற பொதுப் பெயரைக் கூற நியாய மில்லை. எனவே இங்கு சிங்கன் என்று சுந்தரர் குறிப்பது அவர் காலத்தில் வாழ்ந்த பல்லவ மன்னனின் இயற்பெயர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

திருநாவுக்கரசருக்கும் சம்பந்தருக்கும் காலத்தால் பிற் பட்டவர் சுந்தரர். இப்பிற்பட்ட காலத்தில் சிங்கன் என்று பெயர் தரித்த பல்லவ மன்னன் ஒருவனே ஆட்சி புரிந்தவன். அவன் ராஜசிம்ம னாகிய இரண்டாம் நரசிம்மவர்மன் ஆவான். அவனது காலம் கி.பி. 700 முதல் 728 வரையிலாகும். சுந்தரர் இக்காலத்தில் வாழ்ந்தவர் ஆவர். பின்வரும் ஆய்வும் இக்கருத்துக்குத் துணைநிற்கும்.

ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் தன் பெயரால் ராஜசிம்மேஸ்வரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான். அதுவே இன்றைய கைலாச நாதர் கோயில். இக்கோயிலில் இம்மன்னனது கல்வெட்டுகள் வட மொழியில் உள்ளன. மன்னனுக்கு இறைவன் அசரீரியாக உணர்த்தி னான் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. (South Indian Inscriptions - Tamil and Sanskrit - Volume 1 Page 14 Line 7) எண்ணற்ற எதிரிகளைத் துகளாக்கிய இம்மன்னன் சைவ சித்தாந்தப் பாதையில் நின்றவன் என் றும் கூறப்பட்டுள்ளது. இவனது வீரத்தையும், சிவபக்தியையும் கூறும் இவ்வடமொழிக் கல்வெட்டுகள் மிக விரிவானவை. (Above Volume Page 8 to 22) இடமின்மையால் விரிவுக்கு அஞ்சி விடுகின்றேன்.

பெரிய புராணத்தில் கழற்சிங்க நாயனார் புராணத்தில் கூறப் படும் பல்லவனும் வடபுல மன்னர்களை வென்றவன் என்றும், சிவ பக்தி கொண்டு சிவதர்மங்களும் தொண்டுகளும் செய்தவன் என்றும் கூறப்பட்டுள்ளது. அவையாவும் ராஜசிம்மனுடைய கல்வெட்டுகளில் - வடமொழிக் கிரந்தங்களில் விரிவாய்ச் சொல்லப்பட்டுள்ளன.

சுந்தரர் பூசலார் நாயனாரையும் குறிப்பிடுகின்றார். பூசலார் நாயனாரின் வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் விரிவாக எடுத் துரைப்பார். பூசலார் அவதரித்த திருத்தலம் திருநின்றவூர். அவர் சிவபெருமானுக்குக்

கோயிலெடுக்க நினைத்தார். ஆனால் அவரிடம் பொருள் இல்லை. ஆகவே தன் மனத்திலேயே சாத்திர விதிப்படி கோயில் அமைத்தார், மனதில் கட்டியகோயிலுக்குக் கடவுள் மங்கலம் என்னும் மருந்து சாத்துதல், குடமுழுக்கு விழா ஆகியவற்றுக்கு நன்னாள் அமைத்தார்.

இஃது இவ்வாறு இருக்க, காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் கச்சிக் கற்றளி எடுத்தான். இறைவன் திருமேனியைத் தாபிக்கவும் நாள் வகுத்தான். ஆனால் அதற்கு முதல் நாள் இறைவன் மன்னனின் கனவில் தோன்றி "நின்றவூர் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த நன்றுநீடு ஆலயத்து நாளை யாம் புகுவோம். நீ உன்னுடைய நாளை மாற்றி அமைத்துக்கொள்" என்று அருளினார்.

மன்னனும் மறுநாள் பூசலாரைக் கண்டு வணங்கி இறைவன் கனவில் உரைத்ததைக் கூறினான். பூசலாரும் தாம் மனதில் கோயில் கட்டியதையும், குட முழுக்கு விழாவிற்கு அன்றுதான் நன்னாளாக நினைத்ததையும் கூறினார். மன்னனும் பூசலாரும் இறையருளில் மூழ்கிப் பேரின்பம் அடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் முதன் முதல் கச்சிக் கற்றளி எடுப்பித்தவன் இராஜசிம்மனே. அவனுக்கு அசரீரியாக இறைவன் உணர்த்தியதாகக் கல்வெட்டும் கூறுகிறது. இவை பூசலார் நாயனார் புராணத்துடன் ஒத்து இருப்பதும் கணிக்கத்தக்கது (S.I.I. XII Introduction page III - 'This is evidently an allusion to Periyapuranam wherein it is stated that the Pallava king was directed to postpone the consecration of this temple so that the Lord might be present elsewhere at a similar ceremony conducted in the mental plane by Saint Pusalar). தொகுத்து நோக்கினால், சுந்தரரும் காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டிய இராஜசிம்ம பல்லவனாகிய கழற்சிங்கனும், பூசலார் நாயனாரும் சமகாலத்தவர் என்பதை எளிதில் உணரலாம். எனவே சுந்தரர் காலத்தை கி.பி. 700 முதல் 728 வரை எனக் கொள்ளலாம்.

மாணிக்கவாசகர் காலம்:

நெடுஞ்சடையன் பராந்தகனாகிய முதல்வரகுணன் 786 இல் முடிசூடினான். இவனது கல்வெட்டுக்கள் 43 ஆம் ஆட்சி ஆண்டுவரை கிடைக்கின்றன (S.I.I. XIV No. 41 - Eruvadi Nanguneri Taluk.). எனவே இவனது ஆட்சி 11இல் முடிவடைந்தது. அவ் வாண்டிலிருந்து வரகுணனின் மகனான ஷ்ரீவல்லபனின் ஆட்சி துவங்குகிறது எனலாம். வல்லபன் தனது 18 ஆம் ஆட்சி ஆண்டில் (829) சிங்களத்தை வென்றான் (S.I.I. XIV No. 44 - Erukkangudi Sattur Taluk) செப்பேடுகளும் ஷ்ரீவல்லபனின் சிங்கள வெற்றியைக் குறிப்பிடுகின்றன.

ஷ்ரீ வல்லபனிடம் தோற்ற சிங்களவர் வாளா இருக்கவில்லை. பாண்டிநாட்டின் மீது படையெடுக்க, தக்க சமயத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். இதனைச் சிங்களவர் ஷ்ரீ வல்லபனின் கடைசி காலத்தில் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். இச்சரித்திர நிகழ்ச்சி களை இலங்கைச் சரிதமாகிய மகாவம்சம் விரிவாய் எடுத்துரைக்கிறது.

மகாவம்சத்தில் கூறப்படும் செய்தி வருமாறு: இலங்கையில் இரண்டாம் சேனன் கி.பி. 851இல் முடிசூடினான். இவன் காலத்தில் பாண்டி மன்னனின் மகன் ஒருவன் தன் தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தான். இலங்கை மன்னன் சேனாவின் உதவியை நாடினான். தக்க தருணம் இதுதான் என்று உணர்ந்த இலங்கை மன்னனும் தனது 9ஆம் ஆட்சி ஆண்டில் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடினான். மதுரை மன்னன் போர்க்களத்தில் இறந்தான். மன்னனின் மகனைச் சிங்களவர் மதுரை சிம்மாதனத்தில் ஏற்றினர். சிங்கள மன்னன் "மதுரா துனு" என்ற பட்டம் கொண்டான்.

இந்நிகழ்ச்சியின் காலம் கி.பி. 860 என்று மகாவம்சத்தால் அறியலாம். (South Indian Temple Inscription Volume III Part I Pages 37 and 102.). இப்போரில் இறந்தவன் ஷ்ரீ வல்லபனே. இவன் போரில் இறந்தவன் என்னும் செய்தியினைப் பாண்டியர் செப்பேடுகளும் உறுதி செய்கின்றன.

கி.பி. 860இல் மதுரை சிங்காதனத்தை அலங்கரித்தவன் ஷ்ரீ மாற ஷ்ரீ வல்லவனின் மகனே ஆவான். இவன் தந்தையோடு முரண் பட்டவன். சிங்களவரின் துணைக்கொண்டு அரசைக் கைப்பற்றியவன். தன் தந்தை போர்க்களத்தில் சிங்களவர்களால் கொல்லப்படுவதற்கும் காரணமானவன். இம்மகன் யார் என்பதை பின்னால் பார்ப்போம்.

பாண்டியர் செப்பேடுகளின்படி ஷ்ரீமாற ஷ்ரீவல்லபனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்ததவன் சடையவர்மனாகிய வர குணன் மகாராஜன். இவனை இரண்டாம் வரகுணன் என்று சரித்திர ஆய்வாளர் அழைப்பர். இவனது தம்பியின் பெயர் சடையவர்மன் பராந்தகன் வீரநாராயணன் என்பதாகும். அண்ணனும் தம்பியும் தங்கள் பாட்டனார் முதலாம் வரகுணனான நெடுஞ்சடையன் பராந் தகனின் பெயரைத் தரித்துள்ளனர் என்பது ஈண்டு நோக்கத்தக்கது.

இரண்டாம் வரகுணனின் நான்கு கல்வெட்டுக்கள் வானிலைக் குறிப்புக்களைக் கொடுக்கின்றன. அவைகளின் காலத்தைக் கீழே காணும் பட்டியலில் காணலாம்.

இரண்டாம் வரகுணன் காலம் (E.I. XXVIII No. 6; E.I. XXXII No. 41)

ஊர்க்கல்வெட்டு காலக்குறிப்பு சமமான கிறித்துவ எண் ஆண்டு

1. அய்யம்பாளையம் ஆட்சிஆண்டு 8 கி.பி. 870 மார்ச்705/1905 சகவருடம் 792 மாதம் 22 ஆம்தேதி முதல் 871மார்ச் மாதம் 21ஆம் தேதி வரைஇடைப்பட்டகாலம்

2. திருவெள்ளறை ஆட்சிஆண்டு 13 14 ஆம் தேதி84/1910 விருச்சிக மாதம் நவம்பர் மாதம்அச்வதி நக்ஷத்திரம் 875திங்கட்கிழமை

3. சவந்தினாதபுரம் ஆட்சி ஆண்டு 13 5 ஆம் தேதி104/1947 தனுர் மாதம் டிசம்பர் மாதம்அவிட்டம் திங்கட் 875 கிழமை

4. லால்குடி ஆட்சி ஆண்டு 13 6 ஆம் தேதி121/1929 தனுர்மாதம் சதயம் டிசம்பர் மாதம்செவ்வாய்க்கிழமை 875

திருவெள்ளறை, சவந்தினாதபுரம், லால்குடி ஆகிய ஊர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ளவை. இக்கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் வரகுண மகாராஜர் தனது அதிகாரியான அண்ட நாட்டு வேளான் என்பவனிடம் நிதி அளித்து கோயில்களில் நிசதம் விளக்கு எரிக்க நிவந்தங்கள் ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. (S.I.I. XIV; E.I. XXVIII No. 6) சவந்தினாத புரத்துக் கல்வெட்டின் நாளுக்கு மறுநாள் லால்குடி கல்வெட்டின் நாளாக அமைவதையும் நோக்கவேண்டும்.

இக்கல்வெட்டுக்களின் காலங்களைப் பின்னோக்கிக் கணித் தால் இரண்டாம் வரகுணன் கி.பி. 863இல் மார்ச் மாதத்திற்கு பிறகு, நவம்பர் மாதத்திற்கு முன் ஏதோ ஒரு நாளில் முடிசூடினான் என்பதை அறியலாம். அதாவது இரண்டாம் வரகுணன் முடிசூடியது கி.பி. 863 ஆகும். இம்மன்னனின் திருநெய்த்தானத்து கல்வெட்டு யாண்டு 4இல் செதுக்கப்பட்டது. (S.I.I. V. No. 608) இதன் காலம் 866-67. வரகுண மகாராஜன் என்னும் பெயர் கொண்ட திருவிளக்கு ஒன்று எரித்த கோன்பராந்தகன் என்பது வரகுணனின் தம்பியே. இதனால் இவ்விருவரும் ஒற்றுமையாக இருந்தனர் என்பதை நன்கு அறியலாம். கோன் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதால் தம்பியாகிய பராந்தகன் 866இல் முடிசூடியிருக்கவேண்டும் என்று கொள்ளலாம். அதாவது அண்ணனே தன் தம்பிக்கு இளவரசுப்பட்டம் கட்டி வைத்தான்.

இச்சரித்திர நிகழ்ச்சிகளைக் கோர்வையாகப் பார்த்தால் ஷ்ரீ மாற ஷ்ரீ வல்லபனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பதை நன்கு அறியலாம். சிங்களவர் உதவிகொண்டு கி.பி. 860 இல் மதுரையில் சிம்மாதனம் ஏறிய மகன் வெகுநாள் ஆளவில்லை. மூன்று ஆண்டு களில் அவனை வரகுணன் விரட்டி விட்டான். பின்பு தனது தம்பியை யும் உடன் சேர்த்துக்கொண்டு நெடுநாள்கள் அரசு புரிந்தான்.

860க்கும் 863க்கும் இடைப்பட்ட காலத்தை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். இக்காலத்தில் சிங்களவர்களால் மதுரை சிம்மாதனத்தில் வைக்கப்பட்டவன் யார்? அவனை விரட்டிவிட்டு, வர குணன் எவ்வாறுதனது ராஜ்யத்தைப் பெற்றான் இவ்வினாக்களுக்கு உரிய விடைகளைத் திண்டுக்கல் வட்டத்தில் உள்ள பெரும்புல்லி என்னும் ஊரிலிருந்து கிடைக்கும் கல்வெட்டும் (E.I. XXXII No. 31) பாண்டிய குலோதயா என்னும் வடமொழி சரித்திர வரலாற்றுக் காவியமும் அளிக்கின்றன.

சிங்களவரை விரட்டினால்தான் மதுரையை மீட்கமுடியும் என்பதை வரகுணன் உணர்ந்து செயல்பட்டான். பெரும்புல்லிக் கல்வெட்டில் பாண்டியருக்கும், சிங்களவருக்கும் நடந்த போர் நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. இப்போரில் பள்ளி வேளான் நக்கன் புல்லன் என்பவன் வரகுணனுக்கு உதவியாக இருந்து சிங்களவரை வென்று, வரகுண மகாராஜருக்குப் பணி பலவும் செய்தான் என்று கூறப்படு கிறது. வரகுணன் தனது ஆட்சியை 863 இலிருந்து கணக்கிடுவதால் அப்போர் அந்த ஆண்டிலேயே நடந்திருக்க வேண்டும்; மதுரையில் இருந்த சகோதரனும் அவ்வாண்டிலேயே விரட்டப்பட்டு இருக்க வேண்டும்.

பாண்டிய குலோதயா என்னும் வடமொழிக் காவியம் தெரிவிக்கும் அரிய செய்தி ஒன்றைக் காண்போம். (Pandya Kulodaya Edition 1981 - Page 50 Introduction - Pages 194 and 20 of English Translation - Edited by Dr. K.V. Sarma - Published by Institute of Sanskrit and Indological Studies of Punjab University Hoshiarpur. When Dr. K.V. Sarma was editing the manuscript, I had the rare opportunity of associating myself with his research in identifying the historical characters referred to in the poem. I am indebted to Dr. K.V. Sarma who has also acknowledged in the book, my humble service.) வரகுணனுடைய சகோதரன் இராஜ்யத்தைப் பிடுங்கிக்கொண்டு வரகுணனைத் துரத்தி விட்டான். மனமுடைந்த வரகுணன் காடுகளில் அலைந்து திரிந்து கடைசியில் திருவாதவூர் அடைந்தான். அங்குச் சிறந்த சிவபக்தராக விளங்கியவரும் பல கலைகள் சாத்திரங்கள் அறிந்தவருமாகிய வாதபுரி நாயகர் என்னும் அந்தணரை அடைந்தான். அவருடைய அருள் ஆசியால் வரகுணன் தன் சகோதரனை மதுரையிலிருந்து துரத்திவிட்டு, பாண்டி மண்டலத்தை ஆளத்துவங்கினான். வாதபுரி நாயகர் என்று இங்கே கூறப்படுபவர் மாணிக்கவாசகரே ஆவர். மாணிக்கவாசகர் தொடர்பான மற்ற செய்திகளையும் பாண்டிய குலோதயா நன்கு விளக்குகிறது. நரியைப் பரியாக்கியது ஆகிய செய்திகளும் சொல்லப்டுகின்றன. மாணிக்கவாசகர் வரகுணனுக்கு மந்திரியாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

எனவே கி.பி. 863இல் மாணிக்கவாசகர் சாத்திரங்கள் பல அறிந்த சிவனடியாராக இருந்தார் என்பதையும், பின்பு பல ஆண்டுகள் வரகுணனுக்கு மந்திரியாகவும் இருந்தார் என்பதையும் அறிகிறோம்.

வரகுணன் தனது தம்பி பராந்தக வீரநாராயணனுக்கு கி.பி. 866இல் முடி சூட்டி வைத்தான் என்பதை முன்பே கண்டோம். பராந் தகனின் தளவாய்புரச் செப்பேடு மன்னனின் 45ஆம் ஆட்சி ஆண்டில், கி.பி. 911 இல் அளிக்கப்பட்டது. (பாண்டியர் செப்பேடு பத்து - தளவாய்ப்புர சாசனம்.)

இதில் பராந்தக வீரநாரயணன் தன் அண்ணன் வரகுணனை எம்கோ என்றும், சிறந்த சிவபக்தன் என்றும் கூறுகிறான். வரகுணன் தவத்தை மேற்கொண்டு இனிதிருக்கும் நாளில் இச்சாசனத்தை வெளி யிட்டதாகத் தம்பி பராந்தகன் கூறுகிறான்.

"எம்கோ வரகுணன் பிள்ளை பிறைச் சடைக்கணிந்த பினாக பாணி எம்பெருமானை

உள்ளத்தில் இனிதிருவி உலகம் காக்கின்ற நாளில் ......"

என்பது செப்பேடு வாசகம். இச்செப்பேடு வழங்கிய காலத்தில் வரகுணனும் உயிருடன் இருந்தனன் என்பதை அறியலாம். இச்செப் பேட்டில் பராந்தக வீரநாராயணன் வேறு ஒன்றையும் சொல்கிறான். அதாவது, வரகுணன் அண்ணன்; அவன் சிவதர்மத்தில் ஈடுபட்டவன். அவன் உலகத்தைக் காத்து

வருகின்றனன். செப்பேட்டை வழங்கும் பராந்தக வீரநாராயணன் அக்களநிம்மிடி வயிற்றில் பிறந்தவன். பராந்தகன் தனக்குமுன் பிறந்தவனைச் செந்நிலத்தில் தோற்கடித்தான். இதனால் வரகுணனின் தாயும், பராந்தகனின் தாயும் வேறாவர் என்பதை எளிதில் உணரலாம். பராந்தகனால், தோற்கடிக்கப்பட்டவன் வரகுணனாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே அவன் வேறு ஒருவளின் மகன் என்பதையும் நன்கு அறியலாம். தொகுத்து நோக்கினால் ஷ்ரீ வல்லபனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்; மூத்தவளின் மகன் வரகுணன்; இளையவளின் மகன் ஒருவன்; மூன்றாமவளின் மகன் பராந்தக வீரநாராயணன் ஆவான் என்னும் உண்மைகள் புலப்படும்.

பட்டத்து அரசியான மூத்தவளின் மகன் வரகுணன் வயதில் சிறியவனாகவும் இளையவளின் மகன் வயதில் பெரியவனாகவும் இருந்திருக்கலாம். பட்டத்து அரசியின் மகனே முடிசூட வேண்டும் என்று தந்தை நினைத்திருக்கலாம். இதனைப் பொறாத இளையவளின் வயிற்றில் பிறந்தவன் - வயதில் பெரியவன் - சிங்களவர்களுடன் சேர்ந்து துரோகச் செயலில் ஈடுபட்டான் எனலாம். இத்துரோகச் செயலில் ஈடுபட்டவனின் பெயர் வீரபாண்டியன். இதனைக் கொடும் பாளூரில் வாழ்ந்த பூதிவிக்கிரம கேசரியின் கல்வெட்டால் அறியலாம். பூதிவிக்கிரம கேசரியும், வரகுணனும், பராந்தகனும் சமகாலத்தவர்கள். நண்பர்கள். பூதிவிக்கிரமகேசரி வீரபாண்டியனைத் தோற்கடித்ததாகக் கொடும்பாளூர் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. (S.I.I. XIX Introduction S.I.I. XXIII Introduction S.I.I. XXXIII - 129; K.V. Subramaniya Iyer - Quarterly Journal of Mythic Society Volume XLIII Nos. 3 and 4.) அந்த வீர பாண்டியன் வரகுணனின் சகோதரன் என்பதைச் சரித்திர நிகழ்ச்சிகள் துணைக்கொண்டு அறிகிறோம்.

மாணிக்கவாசகர் இரண்டாம் வரகுணன் காலத்தில் வாழ்ந் தவர் என்று வரலாறு சுட்டுகிறது. முதல் வரகுணன் (768-811) குரு சரிதம் கொண்டாடிய பரம வைணவனாவான். அவன் பேரனான இரண்டாம் வரகுணன் (863-911) சிறந்த சிவபக்தன் என்பதைப் பாண்டியர் செப்பேடுகளும், மாணிக்கவாசகரின் திருக்கோவை யாரும், பட்டினத்து அடிகளின் பாடல்களும், பாண்டிய குலோதயா வடமொழிக் காவியமும் உறுதி செய்கின்றன. மாணிக்கவாசகர் "வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்" என்றும், "சிற்றம் பலம் புகழும் மயல் ஓங்கு இருங்களியானை வரகுணன்" என்றும் நிகழ்காலத்தில் வரகுணனைப் பற்றித் திருக்கோவையாரில் கூறுவது ஆய்வுக்கு அணி கூட்டுகிறது.

திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வாழ்ந்த காலத்தில் தில்லை நடராஜப்பெருமான் ஆலத்திற்குள் திருமாலுக்கு என்று திருமேனி இல்லை. தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு இருந்ததாகக் கூறப்படவில்லை. பிற் காலத்தில் நந்திவர்மன் காலத்தில் தில்லைத் திருச்சித்திர கூடம் எடுக்கப்பட்டது.

இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனின் மூத்த மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இளமையில் இறந்தான். இரண்டாம் நரசிம்மவர்மன் 728 இல் காலமானான்.அவனது இரண்டாம் மகனான பரமேஸ்வரவர்மன் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து மறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்கு வாரிசுகள் இல்லாததால், பல்லவரின் கிளையில் வந்த நந்திவர்மன் கி.பி. 730 இல் பன்னிரண்டாவது வயதில் முடிசூட்டப்பட்டான். இவன் 65 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 795 இல் மறைந்தனன்.(See Note 9 above.) நந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்ழாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர்.

வைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவை களின் கூற்றுப்படி திருமங்கையாழ்வார் கி.பி. 776 இல் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர். (For the dates of Alwars - See Swamikannu Pillai, Indian Ephemeris Volume I Part I Page 489.)

கும்பகோணம் அருகே உள்ள நதான் கோவில் என்னும் திருமால் தலம் நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. "நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்" என்று திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து அருளினர். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.

"பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த

செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த

தில்லைத் திருச் சித்திர கூடம்"

என்று திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) என்னும் செய்தி உறுதிப்படுகிறது.

"தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த ....."

என்று குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில் திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் இச்செய்தி மிக முக்கியமானது.

திருமங்கையாழ்வாருக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் காலத் தால் பிற்பட்டவர் மாணிக்கவாசகர். தில்லையில் திருமாலின் திருக் கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். "வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே" என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.

வரகுணன் - சிவபக்தன்:

863 இல் முடிசூடிய வரகுணன் சோழநாட்டை வென்றான். வரகுணனின் கல்வெட்டுகள் திருநெய்த்தானம், திருக்கோடிக்காவல், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், ஆடுதுறை, திருவிசலூர் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. கி.பி. 885இல் நடந்த திருப்புறம்பியப் போரில் வரகுணன் தோல்வி அடைந்தான். பல்லவரும், சோழரும் வெற்றி அடைந்தனர். வரகுணன் இராச்சிய பாரத்தைத் தனது தம்பி பராந்தக வீரநாராயணனிடத்து ஒப்படைத்து விட்டுச் சிவதர்மத்தில் மூழ்கினான்.

வரகுணனுக்கு வாரிசுகள் இல்லைபோலும். பராந்தக வீர நாராயணன் 911இல் இறக்கவே அவன் மகன் ராஜசிம்மன் பாண்டி மன்னன் ஆனான். இவன் 931 வரை அரசாண்டான். பின்பு சோழர் களுக்குப் பயந்து ராஜசிம்மன் சிங்களத்துக்கு ஓடிவிட்டான்.

ராஜசிம்மனுக்கு ஆண்மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் சுந்தரபாண்டியன். மற்றவன் வீரபாண்டியன். சுந்தரன் இளமையில் இறந்தனன். அவன் பெயரில் ஒரு பள்ளிப்படைக் கோயில் கட்டப் பட்டது. (S.I.I. XIV Pallimadam inscriptions) வீரபாண்டியன் 938 முதல் 959 வரை மதுரையில் அரசு புரிந் தான். 944 இல் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடந்தது. வீரபாண்டியன் சோழமன்னன் முதல் பராந்தகனின் மகனான உத்தம சீலியைக் கொன்றதால் "சோழன் தலைகொண்ட வீரபாண்டியன்" என்று அழைக்கப்பட்டான். சோழர்களும் வாளாயிருக்கவில்லை. கி.பி. 959இல் நடந்த போரில் சுந்தர சோழனின் மகனாகிய ஆதித்ய கரிகாலன், வீரபாண்டியனைக் கொன்றான். "வீரபாண்டியன் தலை கொண்ட பரகேசரி" என்றும் அழைக்கப்பட்டான் (For these Historical accounts see N.Sethuraman's "Early Cholas" edition 1980.) கொலையும், சண்டையும், சச்சரவும் நமக்கு எதற்கு? ஆகவே இவ்வாராய்ச்சியை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

நால்வர் காலம் - ஆய்வின் சாரம் :

திருநாவுக்கரசர் - 580-660

திருஞானசம்பந்தர் - 640-656

சுந்தரர் - 700-728

மாணிக்கவாசகர் - 863 இல் பல சாத்திரங்கள் அறிந்த சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தவர். 863க்குப்பின் இரண்டாம் வரகுணனிடம் அமைச்சராகப் பணியாற்றியவர்.